திங்கள், 14 டிசம்பர், 2020

அவுர்வர்

அவுர்வர்

அவுர்வர் என்ற சொல்லுக்கு தொடையிலிருந்து பிறந்தவர் என்று பொருள். இவரைப் பெற்ற தாய் தியாகத்தின் சின்னமாகத் திகழ்ந்தவள். எல்லாரும் வயிற்றில் பத்து மாதம் தான் கருவை சுமப்பார்கள். ஆனால், இந்த தாய் இவரை சில வருடங்கள் சுமந்தார். வயிற்றில் இருந்தால் ஆபத்து என்பதால் தனது தொடையில் வைத்து கருவை காப்பாற்றினார் என புராணங்கள் சொல்கின்றன. அவுர்வரின் தந்தை அப்நவாநர். பிருகு மகரிஷியின் வம்சத்தில் தோன்றியவர். மிகப்பெரிய ரிஷி. அப்நவாநர் பற்றிய தகவல்கள் புராணங்களில் அதிகமாக கிடைக்கவில்லை. பெரும்பாலும் இவர் தனிமையையே விரும்புவார். தவவலிமை அதிகம் உள்ளவர். ஆயினும், மிகுந்த பொறுமை உள்ளவர் என்பதால் தன் தவவலிமையை தவறான வழியில் பயன்படுத்துவதில்லை. யாரையும் சபித்ததும் இல்லை. இவர் மீது எல்லா ரிஷிகளும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். இந்த சமயத்தில் தங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருந்த பிருகு வம்சத்தாரை க்ஷத்திரியர்கள் கொன்று குவித்துக் கொண்டிருந்தனர். அப்நவாநரும் பிருகு வம்சத்தை சேர்ந்தவர் என்பதால் அவரைத் தேடி அலைந்தனர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. பிருகு வம்ச பெண்கள் கருவுற்றிருந்தால் அவர்களை கொல்லவும் க்ஷத்திரியர்கள் தயங்கவில்லை. அவுர்வரின் தாயும் கர்ப்பமானாள். அவளைக்கொல்ல க்ஷத்திரியர் படை அலைந்தது. மறைந்து வாழ்ந்த இந்த பெண்மணி தனது வயிற்றில் இருந்த கருவை தனது சக்தியாலும், பதிபக்தியாலும், குழந்தை பாசத்தாலும் தொடைக்கு கொண்டு வந்துவிட்டாள். க்ஷத்திரிய படையினரும் இவளைக் கண்டுபிடித்துவிட்டனர். ஆனால் வயிற்றில் கர்ப்பம் இருப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. உடையால் தொடையை மறைந்திருந்ததால் அங்கு கர்ப்பம் தங்கியிருப்பதை அவர்களால் அறிந்தகொள்ள முடியவில்லை. அவர்களிடம் தப்பித்த அந்த பெண் அவுர்வரை பெற்றெடுத்தாள்.

அவுர்வர் இளவயது முதலே வேத சாஸ்திரங்களில் சிறந்து விளங்கினார். தனது மூதாதையர் பலர் க்ஷத்திரியர்களால் கொல்லப்பட்டதை அறிந்து ஆவேசம் கொண்டார். அவர்களை பழிவாங்க முடிவெடுத்தார். உலகில் ஒரு மனிதன் கூட உயிர்வாழ முடியாத அளவிற்கு அவர் தவம் செய்தார். அந்த தவத்தின் வலிமையால் பிரபஞ்சமே நடுங்கியது. க்ஷத்திரியர்கள் தங்கள் கண்பார்வையை இழந்துவிட்டனர். இதைப்பார்த்த அவுர்வரின் முன்னோர்கள் மொத்தமாக வந்து சேர்ந்தனர். குழந்தை அவுர்வா ! நீ இந்த உலகத்தின் மீது கோபப்படுவதில் அர்த்தமில்லை. இந்த உலக வாழ்க்கை வேண்டாமென நாங்கள்தான் முடிவெடுத்தோம். எனவே க்ஷத்திரியர்கள் மூலமாக எங்களை நாங்களே அழித்துக் கொண்டோம். அதற்குரிய முன்னேற்பாடுகளை நாங்களே செய்து கொண்டோம். திட்டமிட்டு செய்யப்பட்ட இந்த செயலுக்காக நீ கோபமோ, வருத்தமோ அடையவேண்டாம். இதற்கு க்ஷத்திரியர்களை பொறுப்பாளிகள் ஆக்கமுடியாது. எங்கள் ஆசை எல்லாம் இந்த பூலோகத்தை துறந்து புண்ணிய லோகத்திற்கு செல்ல வேண்டும்என்பதே ஆகும். ஒருவன் தற்கொலை செய்துகொண்டால் அவன் புண்ணியலோகத்தை அடைய முடியாது. எனவே தற்கொலை முடிவுக்கு வராமல் நாங்களே அழிந்துபோகும்படியாக க்ஷத்திரியர்களின் மனதில் எங்களை அழிக்க வேண்டும் என்ற விபரீத எண்ணத்தை உருவாக்கினோம். அதன்படியே இது நடந்தது, என்றனர். இதைக்கேட்ட பிறகுதான் அவுர்வருக்கு ஓரளவு கோபம் தணிந்தது.

அவர் தனது முன்னோர்களிடம், ஒருவனுக்கு கோபம் வந்துவிட்டால் அதை நியாயமான காரணங்களால்கூட அடக்கிவிட முடியாது. தனது கோபத்தை அவன் வெளிப்படுத்தியே தீருவான். க்ஷத்திரியர்கள் மீது தவறு இல்லை என உங்கள் மூலமாக நான் தெரிந்து கொண்டாலும், அவர்கள் மீதான கோபம் முழுமையாக தீரவில்லை. எனவே என் கோபத்தை எந்த இடத்தில் சென்று தணிப்பது ? என்று கேட்டார். அதற்கு முன்னோர்கள், இங்கிருந்து சில மைல் தூரம் செல். பெரிய கடலை பார்ப்பாய். அந்த சமுத்திர வெள்ளத்தில் உனது கோபத்தை விட்டுவிடு. உனக்கு தெளிந்த மனம் கிடைக்கும் என்றனர். அதன்படியே அவுர்வர் சமுத்திரத்திற்கு சென்று தனது கோபக்கனலை அதில் செலுத்தினார். அவரது மனம் தெளிவடைந்தது. இப்போதெல்லாம் அமாவாசை காலங்களில் கடலில்சென்று நீராடுகிறோம். இதற்கு காரணம் நமது பித்ருக்களை மனம் குளிர வைக்கத் தான். அவுர்வரும் தனது பித்ருக்கள் சொன்னபடி கடல் நீராடி மனத்தெளிவு பெற்றார். அவரது கோபம் தணிந்தபிறகு பார்வை இழந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் அவர் முன்னால் வந்தனர். தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்டனர். அவர்களிடம், அவுர்வர், மனதில் கெட்ட எண்ணங்களே உருவாகக்கூடாது. எதிரியாக இருந்தாலும் அவனை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிடுங்கள். தவறு செய்பவர்களை திருத்துவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், கொல்வதற்கு தெய்வ சட்டத்தில் இடம் இல்லை என்றார். அவரது அறிவுரையை க்ஷத்திரியர்கள் ஏற்றனர். இந்த அவுர்வர்தான் ரிசீகர் என்று சொல்லப்படுகிறார். இவரது மகன்தான் ஜமதக்னி முனிவர். ஜமதக்னியின் மகன் தான் பரசுராமர். மிகப்பெரிய பாரம்பரியத்தை கொண்டவர் அவுர்வர். அவுர்வரின் வரலாற்றைப் படித்த நாம் எதிரிகளுக்கு கூட துன்பம் செய்யாமல் வாழக் கற்றுக்கொள்வோம்.


கருத்துகள் இல்லை: