திங்கள், 14 டிசம்பர், 2020

பவுரிதாசர்

பவுரிதாசர்

நின்றால் ஜெகந்நாதன், நடந்தால் ஜெகந்நாதன், அமர்ந்தால் ஜெகந்நாதன்.... ஜெகன்னாதனின் நாமத்தை தவிர அவரது வாய் வேறு சொற்களையே உச்சரிக்காது. கார்மேனி வண்ணனான கண்ணனை பூரி ஜெகந்நாதரை கண்ணாரக் கண்டுகளிக்க வேண்டும் என விரும்பியவர் பவுரிதாசர். இவரது பெற்றோர் நெசவுத்தொழிலை செய்துவந்தன. இந்த தொழில் மூலம் ஏதோ  அவர்களுக்கு வயிற்றுக்குப் போதுமான அளவு வருமானம் கிடைத்தது. இந்த குடும்பத்தினரின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் பூரி ஜெந்நாதர்தான். இவர்கள் குடியிருந்த வீட்டிலிருந்து 3 மைல் தொலைவில் ஜெகந்நாதர் கோயிலுக்கு வந்து ஜெகந்நாதரை  அந்த குடும்பத்தினர் வணங்கி செல்வார்கள். அதன்பிறகே அன்றாட பணிகள் தொடங்கும். ஜெகந்நாதர் கோயிலில் பெருமாளின் மகிமையை விளக்கி ஹரிகதை சொல்லப்படுவதுண்டு. இந்தக் கதையைக் கேட்க பவுரிதாசர் தவறாமல் சென்றுவிடுவார். இந்த வகையில் ஹரி கதையில் சொல்லப்படும் நல்ல கருத்துக்கள் புவுரிதாசரின் மனதில் நின்றன. குறிப்பாக, பெருமாளின் பெருமையை பாகவதர்கள் சொல்லும்போது, அதில் அப்படியே லயித்துவிடுவார் பவுரிதாசர். பெருமாளின் மீதான பக்தியை இந்தக்கதைகள் மென்மேலும் வளர்ந்தது. காலப்போக்கில் பக்தியின் வேகம் அதிகரித்தது. அவர் நிம்மதியாக சாப்பிடுவதில்லை. கண்கள் விழித்தபடியே இருக்கும். வாய் எந்நேரமும் ஜெகந்நாதன் பற்றி மந்திர உச்சாடனம் செய்து கொண்டிருக்கும்.

அந்த பக்தனை மேலும் சோதிக்க விரும்பவில்லை பெருமாள். தனக்காகவே வாழ்நாளை வீணாக்கிக் கொண்டிருக்கும் பவுரிதாசரின் முன்பு தோன்றினார். பவுரிதாசர் ! நீ என்மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக அனைத்து பெண்களையும் தாயாராகவே கருதினாய். இந்த மனப்பக்குவம் உலகில்யாருக்கும் வருவதில்லை. நீ என்ன கேட்டாலும் கொடுத்து வரவேண்டும் என்பது உன் தாயார் எனக்கு இட்ட கட்டளை. அதன்படி உனக்கு வேண்டும் வரம் தருகிறேன், கேள் என்றார். மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த பவுரிதாசர் என்ன கேட்டிருந்தாலும் இறைவன் கொடுத்திருப்பான். ஆனால், அவர் பொன்னோ, பொருளோ கேட்கவில்லை. இறைவா ! நான் எப்போது அழைத்தாலும் நீ வரவேண்டும். உன் திருக்காட்சியை எனக்கு காட்ட வேண்டும். உனது நினைவாகவே இருக்கும் நான். உன்னைத்தவிர வேறு எதையும் கேட்கமாட்டேன். நீயே என் அருகில் இருக்கும்போது, வேறென்ன எனக்கு வேண்டும் ? மற்றவை தானாகவே வந்து சேரும், என்றார். பவுரிதாசரின் பற்றற்ற நிலையை அறிந்து மகிழ்ந்த பெருமாள், அவர் கேட்ட வரத்தையே அருளினார். அன்றுமுதல் ஜெகந்நாதர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களிடம் பவுரிதாசர் ஆண்டவனுக்குரிய காணிக்கைகளை கொடுத்து அனுப்பினார். ஒருமுறை இளநீர் ஒன்றை ஒரு பக்தர் மூலம் அனுப்பிவைத்தார். கர்ப்பகிரகத்தில் இருந்து இரு கைகளையும் நீட்டி அந்த இளநீரை பெற்றுக்கொண்டார் பகவான்.

இதைக்கண்ட அங்கிருந்த அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அந்த பக்தர் ஓடோடிச்சென்று பவுரிதாசரிடம் இந்த அதிசயத்தை விவரித்தார். இதுகேட்டு பவுரிதாசர் ஆனந்தக்கூத்தாடினார். ஒரு முறை கூடை நிறைய மாங்கனிகளை கொடுத்து அனுப்பினார். கோயிலுக்குள் சென்றதும், கூடை மாயமாகிவிட்டது. சற்று நேரத்தில் கூடை கர்ப்பக்கிரகத்திற்கு வெளியே வந்து அமர்ந்தது. அனைவரும் ஆச்சரியத்துடன் அதை பார்த்தனர். கூடைக்குள் கொட்டைகள் மட்டுமே எஞ்சியிருந்தன. பக்தன் பக்தியுடன் கொடுத்த உணவை பகவான் ஏற்றுக்கொண்டார். இதைக்கண்டு பரவசமடைந்த கோயில் அர்ச்சகர், பவுரிதாசர் தங்கியிருக்கும் இடத்திற்கு ஓடினார். பகவானுக்கு அணிவித்த மாலையை அவரது கழுத்தில் அணிவிக்க முயன்றார். பவுரிதாசர் அதை ஏற்க மறுத்துவிட்டார். பகவானுக்குரிய பொருட்களை நாம் எடுக்கக்கூடாது. பகவானுக்கு நம்மால் முடிந்த பொருளை கொடுக்க வேண்டும். இதுவே உண்மையான பக்தி என்றார். நீண்ட நெடுங்காலம் பகவானுக்கு உணவளிக்கும் கைங்கர்யத்தை அவர் செய்துவந்தார். பகவான் முன்பு சென்றாலே அதைக்கொடு; இதைக்கொடு என கேட்கும் இக்காலத்தில், பவுரிதாசரின் வாழ்க்கை வரலாறு ஆசையற்ற நிலையை வெளிப்படுத்துகிறது. பவுரிதாசரின் பக்தியை பின்பற்றி அனைவரும் நடப்போம்.

கருத்துகள் இல்லை: