ஞாயிறு, 7 ஜூன், 2020

இதுவா ஆலயம் தொழும் வழிமுறை?

இன்றைக்கெல்லாம் செவ்வாய், வியாழன்,
சனிக்கிழமைகளில், சிவாலயங்களில் கூட்டம்
நிரம்பி வழிகிறது. அடடே! இத்தனை கூட்டமா
என்று, நம் மனதுக்குள் உற்சாகம்
தொற்றிக்கொள்ள ஆலயத்துக்குள் நுழைந்தால் ...

என்னடா இது? நமக்கு முன்னே இங்கே
நுழைந்தவர்கள் என்ன ஆனார்கள்? அங்கே
இறைவன் திருமுன்பில் (சந்நிதி) யாரையுமே
காணவில்லையே? வந்த கூட்டம் எங்கே? மாயமாய் மறைந்து போனார்களா? கண்கள் அங்குமிங்கும் சுழலும்போது தான் கூட்டமே தென்படுகிறது. அடடா, என்னே அதிசயம்!

இராகுகால துர்க்கை, தெற்குக் கோட்டத்து
தட்சிணாமூர்த்தி, நவக்கிரகத் திருமுன்பில்
எள்விழ இடமில்லை!

ஆகா…..நவக்கிரக திருமுன்பில் தான் எத்தனை கூட்டம்! கடலை மாலைகளென்ன? நல்லெண்ணெய் தீபமென்ன? ஒன்பது முறை பிரதட்சிணமென்ன? இத்யாதி... இத்யாதி...

நிமிடத்திற்கு ஓர் அலங்காரம், விநாடிக்கு ஓர்
அர்ச்சனை! குரு பகவான், சனி பகவான்கள்
எத்தனை அழகாகக் காட்சி அளிக்கிறார்கள், அவரவர் கிழமைகளில்!

ஆனால், இங்கே, மூலமூர்த்தி திருமுன்போ?
சுத்தம்! ஒரு ஈ, காக்கை கூட இல்லை!

என்ன தானய்யா  நடக்கிறது இங்கெல்லாம்?

நீங்கள் வழிபடும் சிவனை விட  சக்தி
வாய்ந்தவர்களா அந்த நவக்கிரகங்கள்? எதற்காக இப்படி அஞ்சி நடுங்குகிறீர்கள்?

"நாமார்க்கும் குடியல்லோம்" என்று முழங்கிய
நாவுக்கரசர் பரம்பரையில் வந்தவர்கள்;
“ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே” என்று
உரத்துச்சொன்ன சம்பந்தர் மரபில்
வந்தவர்கள் சில்லாண்டிற் சிதையும் சில சிறு தேவர்களை நாடிப்போய் வீழ்ந்து கிடப்பது நியாயந்தானா?

அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை!

நவக்கிரகங்களை ஏதோ அஞ்சத்தக்க
தெய்வங்கள் போல் காட்டி, அச்சுறுத்தி, உங்களுக்கு மிகுந்த சோதனைக்காலம் இது; தக்க தோஷபரிகாரம் செய்தேயாகவேண்டும்,
இல்லையேல், அவ்வளவு தான் என்றுகூறி அவர்களைத் தவறாக வழிநடத்தும் சில பிரபல ஆன்மீக வியாபாரப் பத்திரிகைகள், ஆன்மீக வியாபாரப் பேச்சாளர்களைத்தான் சொல்லவேண்டும்!

சோதிடம் ஒரு அருங்கலை! மறுப்பேயில்லை!

நல்லதோ, கெட்டதோ, நடக்கப்போவதை
அறிந்துகொள்ளும் ஆவலில், சோதிடர்களை
நாடுவதையோ, சுப காரியங்களுக்கு நல்ல
நாள் பார்க்க, அவர்களைத்
துணைக்கழைப்பதையோ, தவறென்று
கூறவில்லை. ஆனால், திருக்கோயில்
வழிபாடுகளிலேயே சோதிட நம்பிக்கை
மூக்கை நுழைப்பதை எந்த வகையிலும்
ஏற்றுக்கொள்ளவே முடியாது!

ஆயிரத்துமுன்னூறு வருடங்களுக்கு முன்பே
சம்பந்தர் பாடிவிட்டார் ஐயா!

இறைநம்பிக்கை கொண்ட அடியாரை, நாளும் கோளும் எதுவுமே செய்யாது என்று; பிறகேன் இத்தனை அச்சம்?

ஆழ்ந்துபார்த்தால் ஒன்று மட்டும்
தெளிவாகிறது. இப்படி தோஷ பரிகாரம்,
கிரகப்பெயர்ச்சி, என்று ஆயுளைக் கழிக்கும்
எல்லோருமே, தன்னம்பிக்கை அற்றவர்கள்!

எடுத்ததற்கெல்லாம் அஞ்சி நடுங்குபவர்கள்!

யாரையும் ஏளனம் செய்வதற்காக இதைக் கூறவில்லை!

தயவு செய்து உண்மையை உணர்ந்து
கொள்ளுங்கள்.

இறைவழிபாட்டைப் பொறுத்தவரை, நம்
சமயத்தில் முழு எழுவரல் (சுதந்திரம்)
இருப்பது உண்மை தான். அதைத் தவறாகப்
புரிந்து கொள்ளாதீர்கள்! தவறாகச் செயல் படுத்தாதீர்கள்! இது தான் இதன் உட்பொருள்.

மிகப்பழைய ஆலயங்களுக்குச்
சென்றீர்களானால், அங்கே நவக்கிரகத்
திருமுன்புகளே இராது! அப்படி இருந்தால் அது பிற்சேர்க்கையாகத்தான் இருக்கும்! 500
வருடங்கட்கு முன்பு எந்தச் சிவாலயத்திலுமே நவக்கிரக சந்நிதிகள் இருந்ததில்லை என விபரம் அறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

அந்தந்த சிவாலயத்தில் அந்தந்த  மூர்த்தியும் உடனாய அம்பிகையும்  மட்டுமே  பிரதிஷ்டை  செய்யப்படிருந்தன. கோஷ்டங்களில், ஆகம விதிப்படி அமையவேண்டிய தெய்வங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. தேவர்கள் யாராவது அந்த ஆலய இறைவனை வழிபட்டு நன்மை பெற்றதாகத் தலவரலாறு இருந்தால் அந்த மூர்த்திக்குத் தனி சந்நிதி அமைக்கப் ப்படலாம் : திருவாஞ்சியத்தில் யமன்; திட்டை,  குருபகவான்; கஞ்சனூர், சுக்ரன் இத்யாதி. இத்தனித் திருமுன்பு அந்தந்த தெய்வத்திற்கு அளிக்கப்பட்ட கௌரவம் என்று மட்டுமே கருத வேண்டுமேயன்றி, மூலவருக்கு ஈடாக அவரை ஒருபோதும் கருதலாகாது. சப்த விடங்கத் தலங்களில் ஒன்றான திருநள்ளாறு -  இன்று சிவன்கோயில் இல்லை! அது சனிபகவானின் பரிகார ஸ்தலம்! திங்களூர் சந்திரன் கோயில்! வைத்தீசுவரன் கோவில், செவ்வாய் கோயில்! இப்படித்தான் இன்று அவை பிரபலம்பெற்று விளங்குகின்றன.

நவக்கிரகங்கள் இறைவன் ஆணைக்குக்
கட்டுப்பட்டவை! இறைவனின் பரிவாரம் என்ற
வகையில், அவையும் நம் வணக்கத்திற்குரி
யவை! அவை ஒரு மானிடனின் பிறப்பு முதல்
இறப்பு வரை ஆதிக்கம் செலுத்துபவை!

உண்மைதான்!

ஆனால், ஆணை செலுத்துபவனிடமே
அடைக்கலம் புகுந்தால், அவை நம்மை என்ன
தான் செய்யமுடியும்? அதை விடுத்து,
கிரகங்களை மட்டுமே ஆராதிப்பது, நமக்கு அருளக் காத்திருக்கும் இறைவனை அவமதிக்கும் செயல் ஆகும் அல்லவா? இன்று தேனுபுரீஸ்வரம் என்னும் பட்டீஸ்வரத்திற்குச் செல்வோர் பலர் அங்குள்ள துர்க்கையை மட்டுமே வழிபட்டுவிட்டு, பட்டீஸ்வரரைக் கண்டுகொள்ளாமலே வருவது கண்கூடு. இத் தலத்தில்தான் இறைவன் ஞானசம்பந்தருக்கு முத்துச்சிவிகை அளித்தார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

கோளறு பதிகம், திருநீலகண்டப் பதிகம் போன்ற பனுவல்கள்  நமக்குற்ற எத்தகைய ஆபத்துக்களையும் நீக்கக் கூடியவை.  அவற்றைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டால் நாளென் செயும்? கோளென் செயும்? வினை தான் என்செயும்? நல்லதே நடக்கும். நால்வர்
நூல்களை நாளும் ஓதி, மூலவரான
சிவபெருமானை வழிபடுவதை விட நம் இடர்
களைவதற்கான உபாயம் வேறு ஏதுமில்லை
என்பதை நன்றாக நினைவில் வைக்கவும்.
மூலமூர்த்தியை வழிபட்ட பின் தான்
நவகிரகங்களை வழிபட வேண்டும். இதில் மாற்றம் இல்லை. சிவபெருமானை விடுத்துச் செய்யும் நவக்கிரக வழிபாட்டால் யாதொரு பலனும் இல்லை.

தோஷநிவர்த்தி, பரிகாரம், அது, இது என்று
கொட்டும் பணத்தில் ஒரு பங்கையாவது வசதிகுறைந்த சிவாலயங்களின் பராமரிப்பு நிமித்தமும், சிவனடியார் பொருட்டும் செலவழித்தால் சிவபுண்யம் பல்கிப்பெருகி,
இம்மையிலும், மறுமையிலும் நமக்குற்ற நல் இன்பம் தருமல்லவா? வரியோர்க்கு உதவுதல் எத்தனை பெரிய தர்மம்? அன்ன தானம், வஸ்திர தானம் என, அடியார்க்குச் செய்யும் தொண்டுகள் ஆண்டவனையே சென்றடைவதாக அல்லவா திருமூலர் கூறுகிறார்? "நடமாடக்கோயில் நம்பர்க்கு ஒன்றீயின் / படமாடக்கோயில் பகவற்கதாமே"
இறைவன் நம்பக்கம் இருந்தால் நம்மை எந்த சக்தியால் தான் எதிர்க்க இயலும்? சிந்திப்பீர்!

(முகநூல் நண்பர்களுக்காக : ய. விஷ்வநாத் தாஸ்)

கருத்துகள் இல்லை: