வியாழன், 4 ஜூன், 2020

*லிங்க புராணம் ~ பகுதி — 08*

       சுதரிசனன் வரலாறு
=======================

உத்தம குலத்தில் பிறந்த அந்தணன் சுதரிசனனும்., கற்பிற் சிறந்த மனைவியும்., அன்றாடம் தன் இல்லத்திற்கு வரும் அதிதிகள் மனம் கோணாமல் அவர்களுக்கு உணவிட்டு., மகிழ்வித்து அனுப்பி வந்தனர். ஒருநாள் ஓர் அதிதி வந்தார். அவரையும் எல்லா வகையிலும் உபசரித்து உணவூட்டினர். இடையில் சுதரிசனன் ஓர் அவசர வேலையாக வெளியே செல்ல வேண்டியிருந்ததால் மனைவியிடம் அதிதி மனம் கோணாமல் அவரை உபசரிக்குமாறு கூறிவிட்டுச் சென்றான். உணவருந்திய அதிதி அவளிடம் தனக்கு உடல் சுகமும் அளிக்கும்படி கேட்டான். அவள் பதைபதைத்து விட்டாள். கற்புக்குப் பங்கம் வரும்., அல்லது அதிதிக்கு உபசாரக் குறைவு ஏற்படும் என்று எண்ணி செய்வதறியாமல் தவித்துக் கொண்டிருந்தபோது சுதரிசனன் வீடு திரும்பினான். அதிதிக்கு எல்லாச் சௌகரியமும் கிடைத்ததா..? பூரண திருப்தியா..? என்று கேட்க மனைவி பதை பதைத்திருக்க., அதிதி அந்தணர் மனைவி அறுசுவை உண்டியுடன்., உடலுக்குச் சுகம் அளித்து திருப்தி கொடுத்தாள் என்று கூறினார். அப்போது அந்தணன் சினமோ., வெறுப்போ கொள்ளாமல்., தன் மனைவியை அவர் அனுபவித்து விட்டதால் அவள் அதிதியின் சொத்து என்று கூறி., அவளையும் உடன் அழைத்துச் செல்லுமாறு வேண்டினான். அப்போது அந்த அதிதி மறைந்து விட்டார். அங்கே அவர்களுக்குச் சிவபெருமான் காட்சி தந்து., தான் அவர் மனைவியைத் தீண்டவும் இல்லை. அவள் கற்புக்கரசி. புனிதமானவள். பிறவிப் பெரும் துயரினின்று நீங்கள் இருவரும் விடுபட்டு என்னிடம் வந்து சேர்வீராக என்று அருள்பாலித்தார். இவ்வாறு அதிதி பூஜையின் மேன்மையைப் பிரம்மன் தாருகாவனத்து முனிவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும்., அம்முனிவர்கள் இறைவன் திருவடிகளிலேயே சரண் புக., அவரை வழிபடின் அவர் அருளால் முனிவர்களின் துன்பங்கள் நீங்கும் என்று அறிவுறுத்தினார். அடுத்து., பிரம்மன் அவர்களுக்குத் துறவின் தன்மையை எடுத்துக் கூறியதுடன் துறவிகள் மட்டுமின்றி மற்றோரும் ஈசன் பேரருளுக்குப் பாத்திரமானவர்களே. தாம் செய்யும் கர்மாக்களை அந்தப் பெருமானுக்கே அர்ப்பணித்து., அனைத்திலும் ஈசனைக் காண்பவர் முக்தி அடைவர் என்றார்.

தொடரும்.....

*ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்*
*ஸுரவன புஷ்ப ஸதார்சித லிங்கம் |*
*பராத்பரம் பரமாத்மக லிங்கம்*
*தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் ||*

*லிங்காஷ்டகமிதம் புண்யம் யஃ படேஸஸிவ ஸன்னிதௌ |*
*சிவலோகமவாப்னோதி சிவேன ஸஹ மோததே ||*

கருத்துகள் இல்லை: