சனி, 12 அக்டோபர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 58 ॐ

மேலும் தகவல்கள் கொடுக்கின்றார் வெங்கட்ராம் திவாகர்!
சிம்மவர்மன், மகேந்திர பல்லவனின் தாத்தா அதாவது சிம்ம விஷ்ணுவின் தந்தை. சிம்மவர்மனுக்கு தோல் நோய் கண்டவர். இந்நோய் தீர தில்லையில் உள்ள சிவகங்கை குளத்தில் மூழ்கி பெரும் பலன் பெற்றதாக பழைய தகவல்கள் உள்ளன. இவர் ஆண்ட காலம் ஏறத்தாழ கி.பி.550 ஆகும். சைவத் திருமரபில் புகழ்பெற்ற ஐய்யடிகள் காடவர்கோன் சிம்மவர்மன் காலத்தவர். இவர்தான் சிம்மவர்மனை சிதம்பரத்திற்கு இழுத்ததாக சரித்திர ஆசிரியர் (என். சுப்பிரமணியன்-Social and Cultural History of Tamilnadu) எழுதியுள்ளார். ஐய்யடிகள் காடவர் கோனும் ஒரு பல்லவ மன்னர் தாம் என்றாலும் இவர் சிம்மவர்மனுக்கு கீழாகவோ அல்லது உறவாகவோ இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு. இவர் எழுதிய 24 பாடல்கள் மிகப் புகழ் பெற்றவை. க்ஷேத்திர திருவெண்பா எனும் பெயர் கொண்ட இப்பாடல்கள் தான் தமிழின் முதல் கோயில் பயண நூல். 24 கோயிலகளில் குடி கொண்ட சிவ பெருமானை வழிபட்டால் என்னென்ன பலன்களை இம்மையிலும் மறுமையிலும் பெறலாம் என எழுதியுள்ளார். 11 ஆவது திரு முறையில் சேர்க்கப்பட்டுள்ள இந்தப் பாடல்களைப் படித்தாலே தமிழும் தேனும் ஏன் ஒரே வகையில் சேர்க்கப்பட்டது என்பது புரியும். சுந்தரப் பெருமானும் நம்பியாண்டார் நம்பியும் மற்றும் சேக்கிழார் பெருமானும் இப்பெருமானைப் பற்றி எழுதியுள்ளார்கள். அடுத்து கோப்பெருஞ்சிங்கன் (பதிமூன்றாம் நூற்றாண்டு) பிற்காலப் பல்லவ அரசன். மீண்டும் பல்லவ சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க ஆசை கொண்டு தோற்றுப் போனவன்) இவன் முதலில் சேந்தநல்லூரை தலை இடமாகக் கொண்டு ஆண்டு வந்த சிற்றரசன் தான். ஆனால் காலம் செல்ல செல்ல இவன் சோழப் பேரரசனாக இருந்த மூன்றாம் குலோத்துங்கனையும் மீறி பலம் பெற்றவன். ஏறத்தாழ ஒரு சக்கரவர்த்தி போல ஆட்சி செய்தவன். தில்லை அம்பலத்து கீழவாசல் கோபுரம் இவனால் கட்டப்பட்டது என்பார்கள் சரித்திர ஆசிரியர்கள். இந்த அரசனைப் பற்றிக் காவியமே எழுதப்பட்டது.(காத்யகர்ணாம்ருதம்-சமுஸ்கிருத நூல்) சிதம்பரம் கோயிலைப் பற்றி ஆய்வாளர்கள் எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் (ஏறத்தாழ 2000 பக்கங்கள் கொண்டது) மற்றும் குடவாயில் பாலசுப்ரமணியம் ஆய்வுப் புத்தகங்களை எழுதியுள்ளார்கள்.

சம காலத் திருப்பணிகள் : விஜயநகர சாம்ராஜ்யத்தில் கிருஷ்ணதேவராயருக்குப் பின்னர் வந்த அச்சுத தேவ ராயர், ஸ்ரீரங்க ராயர், வெங்கட ராயர் போன்றவர்களுக்குப் பின்னர் நாயக்க வம்சத்தைச் சேர்ந்த திருமலை ராயன், வீரப்ப நாயகன் போன்றவர்களும் பெருமளவில் சிதம்பரம் கோயிலின் திருப்பணிகளில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர்கள். சேர நாட்டை ஆண்டு வந்த சேரமான் பெருமாள் நாயனாரும் சிதம்பரம் கோயிலின் திருப்பணிகளில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர். ஆனால் இவர் காலத்தில் சற்றே குழப்பம் ஏற்படுகின்றது. சேர நாட்டின் கொல்லம் ஆண்டை ஒட்டி இவர் 9ம் நூற்றாண்டு என்று சொல்லப்படுகின்றது. ஆனால் இவரும் சுந்தரரும் சமகாலத்தவர். இவர் காலத்தைப் பற்றி www.thevaaram.org என்ன சொல்கின்றது என்று பார்த்தால்:
சுந்தரரும் சேரமான் பெருமாளும் சமகாலத்தவர். சேரமான் பெருமாள் சுந்தரர் இருவரும் பாண்டிய நாடடைந்த போது பாண்டிய மன்னனும் சோழனும் வரவேற்றனர். கொல்லம் ஆண்டின் தொடக்கத்தோடு சேரமான் பெருமாளின் ஆட்சிக் காலத்தை இணைத்து கி.பி. 825க்கு முன்னும் பின்னும் எனக் கூறுதல் பொருந்தாதெனப் பலரும் மறுத்துள்ளனர். சுந்தரரை வரவேற்ற பாண்டியன் கோச்சடையன் ரணதீரன் (கி.பி. 670-710). ஆகவே இவர் காலம் 7-ம் நூற்றாண்டின் பிற்பகுதியும் 8ம் நூற்றாண்டின் முற்பகுதியுமாக இருக்கலாம். இவர் எழுதிய "திருக்கைலாய ஞான உலா" திரு கைலையிலேயே ஈசன் முன்னால் அரங்கேற்றப்பட்டுப் பின்னர் மாசாத்துவான் என்பவரால் திருப்பிடவூரில் அரங்கேற்றப்பட்டது என்று சொல்வதுண்டு. பாடல் பக்கம் திறக்க முடியவில்லை. பின்னர் கேரளத்தின் கொச்சியில் ஆண்டு வந்த மகாராஜா ராமவர்மனாலும் கட்டளை மேற்கொள்ளப்பட்டு கொண்டமநாயகன் கட்டளை என்ற பெயரால் நிறைவேற்றப் பட்டது எனவும் அறிகின்றோம். இப்போது பதினெட்டாம் நூற்றாண்டின் காலங்களில் செய்யப்பட்ட திருப்பணிகள் காஞ்சியைச் சேர்ந்த பச்சையப்ப முதலியாரால் கோயிலின் திரு விழாக்களில் முக்கியமான பிரம்மோற்சவம் முறைப்படுத்தப் பட்டதோடு அல்லாமல் திருவாதிரைத் திரு நாளைப் போன்ற முக்கியத்துவம் ஆனித் திருமஞ்சனத்துக்கும் அளிக்கப்பட்டுப் பெரிய அளவில் கொண்டாட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப் பட்டது. நடராஜரின் ரதம் இருக்கும் பீடம் உள்பட ரதங்களையும் மராமத்து செய்து கிழக்குக் கோபுரத்தின் திருப்பணியையும் ஏற்றுச் செய்ய ஆரம்பித்தார் பச்சையப்ப முதலியார். அது பூர்த்தி அடைவதற்குள் இறந்து போகவே அவரின் மனைவியும் சகோதரியும் சேர்ந்து அவர் ஆவலைப் பூர்த்தி செய்தனர். இவரின் தூண்டுதலின் பேரில் மணலியில் வாழ்ந்து வந்த சின்னையா முதலியாரும் சிதம்பரம் கோயிலுக்கு நந்தவனங்களைச் செப்பனிடுதல் மற்றும் கோயிலின் பல திருப்பணிகள் எல்லாவற்றுக்கும் மேல் சித்சபையின் படிக்கட்டுகளை வெள்ளியால் அமைத்தல் போன்றவற்றைச் செய்து கொடுத்தார். நாட்டுக் கோட்டை நகரத்தார் என அழைக்கப்படும் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்களாலும் சிதம்பரம் கோயிலின் பல திருப்பணிகள் செய்யப் பட்டிருக்கின்றன. செட்டி நாட்டு ராஜாவான சர் அண்ணாமலைச் செட்டியார் அவரின் சகோதரர் திவான் ராமசாமிச் செட்டியார் போன்றவர்களும் நாலு கோபுரங்களின் திருப்பணிகள் கனகசபையின் கூரையை மறு செப்பனிடுதல் சுற்றுச் சுவர்களைச் செப்பனிடுதல் பிரகாரங்களில் கல்லால் ஆன பாதை அமைத்தல் சிவகங்கைக் குளத்துப் படிக்கட்டுகளைக் கல்லால் செப்பனிடுதல் திரு வீதி உலாவுக்கான வாகனங்களைச் செய்து அளித்தல் விளக்குகள் பாத்திரங்கள் போன்ற முக்கியமான தேவைகளை அளித்தல் போன்றவற்றைச் செய்து கொடுத்து மிகப் பெரிய அளவில் கும்பாபிஷேகமும் செய்து வைத்ததாயும் தெரிய வருகின்றது. 1891ல் இவை நடந்ததற்குப் பின்னர் கிட்டத் தட்ட 64 வருடங்கள் சென்ற பின்னரே 1955ல் திரு ரத்னசபாபதிப் பிள்ளையும் திரு ரத்னசாமிச் செட்டியாரின் முயற்சியாலும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டதாயும் தெரிய வருகின்றது.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம்

கருத்துகள் இல்லை: