புதன், 25 செப்டம்பர், 2019

நான் யார்? ஆதி சங்கரர் அருளிய ஸ்லோகங்கள்!

நான் யார்? ஆதி சங்கரர் அருளிய ஸ்லோகங்கள்!

உலகத்தில் மக்களிடையே பேதங்கள் நிலவிய சூழ்நிலையில் காலடி க்ஷேத்திரத்தில் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர் மகான் ஆதிசங்கரர். தாயின் அனுமதியுடன் சந்நியாசம் பெற்ற ஆதிசங்கரர் அனைத்து ஜீவன்களிலும் இருக்கும் பிரம்மம் ஒன்றே என்னும் அத்வைத சித்தாந்தத்தை போதித்தவர். அவர் போதித்த அத்வைத சித்தாந்தத்துக்கு அவர் பொருத்தமானவரா என்பதை சோதிக்க விரும்புவது போல் ஒரு சம்பவம் காசி க்ஷேத்திரத்தில் நடைபெற்றது. ஒருமுறை ஆதிசங்கரர் கங்கையில் நீராடிவிட்டு சீடர்களுடன் திரும்பும் போது எதிரில் தாழ்த்தப்பட்டவராகக் கருதப்படும் ஒருவர் நான்கு நாய்களுடன் வந்தார். அப்போதுதான் கங்கையில் நீராடிவிட்டு வந்த ஆதிசங்கரர் அவரை வழியை விட்டு விலகிப் போக சொல்கிறார். எதிரில் வந்தவர் 'நீர் விலகிப் போகச் சொல்வது யாரை? இந்த உடலையா அல்லது இந்த உடலுக்குள் இருக்கும் ஆத்மாவையா? எதை விலகிப் போகச் சொல்கிறீகள்? மண் பாத்திரத்தில் இருந்தாலும் தங்கக் குடத்தில் இருந்தாலும் தண்ணீர் தண்ணீர்தானே? அது தன் இயல் பில் இருந்து மாறுவது இல்லையே. அதுபோலவே மனிதர்களோ விலங்குகளோ தாவரங்களோ அனைத்திலும் இருப்பது ஒன்றேயான அந்தப் பிரம்மம் தானே? அப்படி இருக்கும்போது என்னுடைய உடலில் இருக்கும் அதே பிரம்மம் தானே தங்களுடைய உடலிலும் இருக்கிறது. நமக்குள் எந்த வேறுபாடும் இல்லையே. என்னை ஏன் விலகிப் போகச் சொல்கிறீர்கள்? எனக் கேட்டார். ஆதிசங்கரருக்கு அப்போது தான் புரிந்தது தன்னுடைய மனப்பக்குவத்தை சோதிப்பதற்காக இறைவன் நிகழ்த்திய லீலை அது என்பது. உடனே அவரை நமஸ்கரித்து அருமையான ஸ்தோத்திரம் ஒன்றைப்பாடினார். ஐந்து ஸ்லோகங்கள்கொண்ட அது தான் மனீஷா பஞ்சகம். அந்தப் பஞ்சகத்தில் இருந்து சில பகுதிகள் இங்கே...

விழிப்பிலும், கனவிலும், உறக்கத்திலும் எந்தத் தூய உணர்வு தெளிவாக வெளிப்படுகிறதோ எது பிரம்மா முதல் எறும்பு வரை அனைத்து உடல்களிலும் பிரபஞ்சத்தின் சாட்சியாக ஊடுருவியுள்ளதோ அதுதான் நான். நான் காணப்படும் பொருள் அல்ல என்று எவருக்கு உறுதியான ஞானம் இருக்கிறதோ அவர் சமுதாயத்தால் தாழ்த்தப்பட்டவரோ அல்லது உயர்த்தப்பட்டவரோ யாராக இருந்தாலும் அவரே என் குரு என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

“ஜாக்ரத்ஸ்வப்ன ஸுஷுப்திஷு ஸ்புடதரா யா ஸம்விதுஜ்ரும்பதே!
யா ப்ரஹ்மாதிபிபீலிகாந்ததனுஷு ப்ரோதா ஜகத்ஸாக்ஷிணீ !!
ஸைவாஹம் ந ச த்ருஶ்யவஸ்த்விதி த்ருடப்ரக்ஞாபி யஸ்யாஸ்தி சேத்!
சாண்டாலோஸ்து ஸ து த்விஜோஸ்து குருரித்யேஷா மனீஷா மம !!

எவன் ஒருவனுக்கு தானே ஆத்மஸ்வருபம்தான் என்பதில் திட நம்பிக்கை உள்ளதோ விழிப்பு, கனவு, உறக்கம் ஆகிய 3 ஸ்திதிகளிலும் பரமாணுவிலிருந்து பரப்ரம்மம் வரை எல்லாவற்றிலும் எக்காலத்திலும் கண்ணுக்குத் தெரியாத ஸாக்ஷியாக உயிர்ப்பு சக்தியாக செயல்படுவதும் அதே ஆத்மாதான் என்பதையும் அவன் அறிகிறானே அவன் எந்த ஜாதியில் பிறந்திருந்தாலும் அவனே உயர்ந்த ஆசானாகக்கருதப்படுவான்.

பரம்மைவாஹமிதம் ஜகச்ச ஸகலம் சின்மாத்ரவிஸ்தாரிதம்
ஸர்வம் சைததவித்யயா த்ரிகுணயாஶேஷம் மயாகல்பிதம்!
இத்தம் யஸ்ய த்ருடாமதி: ஸுகதரே நித்யே பரே நிர்மலே
சாண்டாலோஸ்து ஸ து த்விஜோஸ்து குருரித்யேஷா மனீஷா மம!!

சங்கரர் மேலும் உணர்கிறார். எனக்குத் தெரியும் யார் உயர்நத குரு என்று ப்ராம்மணனோ, சூத்ரனோ, யார் அந்த சுத்த ஸத்வமான ப்ரம்மத்திலேயே லயித்து தானே அதுவாக உணர்கிறார்களோ அவர்தான் எல்லாம் உணர்ந்த ஆசாரியராக முடியும். ஸத்வ, ரஜஸ், தமஸ், ஆகிற முக்குணங்களின் பாதிப்பினாலும் அறியாமையினாலும் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாம் வெவ்வேறாகத் தெரிந்தாலும் ஒரே பரமாத்மா பரப்ரஹ்மத்திலிருந்து உண்டானவையே அனைத்தும் என்பதைப் புரிந்து கொண்டவனே ஸத்குரு என்கிறார் அவர்.

ஶஶ்வன்னஶ்வரமேவ விஶ்வமகிலம் நிஶ்சித்ய வாசா குரோ:
நித்யம் ப்ரஹ்ம நிரந்தரம் விம்ருஶதாம் நிர்வியாஜ ஶாந்தாத்மனாம்!
பூதம் பாவி ச துஷ்க்ருதம் ப்ரதஹதாம் ஸம்வின்மயே பாவகே
ப்ராரப்தாய ஸமர்ப்பிதம் ஸ்வவபுரித்யேஷா மனீஷா மம!!

குருவின் வார்த்தைகளில் எனக்குப் பரிபூரண நம்பிக்கை இருப்பதால் இந்தப்பிரபஞ்சம் முற்றும் நிலையற்ற உருவெளித்தோற்றம் என்பதும் பரமாத்மாவைக் குறித்து ஆழ்ந்த தியானத்தைச் செய்து நிஸ்சலனமான மனதுடன் பாவத்தீயையெல்லாம் அந்த ஸாதனையாகிற தீயில் எரிக்க வேண்டும் என்பதும் தெரிகிறது.

யா திர்யங்நரதேவதாபிரஹமித்யந்த: ஸ்புடா க்ருஹ்யதே
யத்பாஸா ஹ்ருதயாக்ஷதேஹவிஷயா பாந்தி ஸ்வதோ சேதனா:!
தாம் பாஸ்யை: பிஹிதார்க்கமண்டலநிபாம் ஸ்பூர்த்திம் ஸதா பாவயந்
யோகீ நிர்வ்ருதமானஸ: ஸ குருரித்யேஷா மனீஷா மம!!

சங்கரர் மேலும் கூறுவதாவது : என் அபிப்ராயப்படி உயர்ந்த யோகி யார் என்றால் பரமாத்மாவின் உண்மை ஸ்வரூபத்தையும் தன்மைகளையும் உணர்ந்தவர்தான். அதாவது அனைத்துச் செயல்களும் யாரால் நடத்தப்படுகிறது என்பதும் அப்பேர்ப்பட்ட கடவுளின் ஒளி அறியாமையினால் மறைக்கப்பட்டிருக்கிறது (மேகங்கள் எப்படி சூரியனின் ஒளியை மறைக்கிறதோ அப்படி) என்பதும் தான்!

யத்ஸௌக்யாம்புதிலேஶலேஶத இமே ஶக்ராதயோ நிர்வ்ருதா:
யச்சித்தே நிதராம் ப்ரஶாந்தகலனே லப்த்வா முனிர்நிர்வ்ருத:!
யஸ்மிந்நித்ய ஸுகாம்புதௌ கலிதர்தீ ப்ரஹ்மைவ ந ப்ரஹ்மவித்
ய: கஶ்சித் ஸ ஸுரேந்த்ரவந்திதபதோ நூநம் மனீஷா மம!!

இந்திரனாலும் மற்ற தேவர்களாலும் துதிக்கப்படும் அந்தப்பரமாத்மாவிடம் எப்போதும் மனதைச் செலுத்திப் பரிபூரண அமைதியுடன் எவர் இருக்கிறாரோ அவர் அந்த பரப்ரம்ஹ்மத்தை அறிந்து கொண்டவர் மட்டுமல்ல அந்த ப்ரஹ்மமாகிவிடுகிறார் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது.

தாஸஸ்தேஹம் தேஹத்ருஷ்ட்யாஸ்மி சம்போ ஜாதஸ் தேம்சோ ஜீவத்ருஷ்ட்யா த்ரீத்ருஷ்டே!
ஸர்வஸ்யாஸ்மந்நாத்மத்ருஷ்ட்யா த்வமேவேத் யேவம் மே தீர்நிஸ்சிதா ஸர்வ சாஸ்த்ரை:!!

பகவானே! நான் இந்த உடலில் இருக்கும்போது உன் சேவகன் முக்கண்ணனே! இந்த உயிராக இருக்கையில் உன்னில் ஒரு பாகமாகிறேன். ஆத்மாவாக இருந்தால் நீ என்னுள்ளும் இன்னும் மற்றெல்லா ஆத்மாக்களுக்குள்ளேயும் இருக்கிறாய். என் புத்தி பூர்வமாகவும் பல நூல்களைப்படித்தும் நான் வந்த முடிவு இதுதான்.

கருத்துகள் இல்லை: