வியாழன், 19 செப்டம்பர், 2019

ஸ்வாமினாத இந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் {பாலு அண்ணா }

ஸ்ரீ பெரியவாளுக்கு அடிக்கடி மார் வலி வரும். அதற்காக நான் ஐயப்ப ஸ்வாமியிடம் வேண்டிக்கொண்டேன். ஐயப்பன் என்ற ஸ்வாமியை பற்றி ஒன்றுமே தெரியாது எனக்கு. ஆனால் மயிலை கபாலி கோவிலில் நிறைய பக்தர்கள் கறுப்பு வேஷ்டி கட்டிக் கொண்டு ஸ்ரீ ஐயப்பனை தரிசனம் செய்வதைப் பார்த்திருக்கிறேன். ஐயப்ப தரிசனத்தால் உடல் உபாதை நீங்கும் என்ற படியால் சபரி மலை செல்ல நினைத்து பெரியவாளிடம்  அனுமதி பெற்று புறப்பட்டேன். முதலில் பெரியவா சத்தம் போட்டார் உனக்கு என்ன தெரியும்?அப்பா,தாத்தா யராவது போயிருக்காளா என்று கோபமாக கேட்டார். இல்லை உங்களுக்கு உடம்பு தேவலையாவதற்காக என்றதும் சரி என அனுமதி அளித்தார். தன் கழுத்தில் இருந்த மாலை ஒன்றை கழற்றிக் கொடுத்தார். ஒரு துண்டு ஒன்றையும் கொடுத்தா பெரியவா. நீ ப்ரம்மச்சாரி இந்த வெள்ளை வேஷ்டியோடேயே போகலாம் என்றும் அருளினார். மலையில் சத்தம் போடுவார்கள். மலை ஏறியதும் இந்த சிகப்புத் துண்டை கட்டிக் கொள் என்று ஒரு துண்டையும் கொடுத்தா. வெறுங்கையுடன் போகக் கூடாது தேங்காயும் நெய்யும் எடுத்துக்கொண்டு போ என அருளினார். நாகராஜ ஐயர் காரில் நான் ஏறும் சமயம் ஏய் பாலு என்ன சாப்பிட எடுத்துண்டாய்? என ஒரு தாய் அன்புடன் கேட்டார். பெரியவா என்ன சொல்றேளோ எடுத்துக்கறேன் என்றேன்.
நூறு எலுமிச்சம் பழம் பையில் போட்டு எடுத்துண்டு அதையே  அப்பபோ சாப்பிடு. ஸ்வாமி தரிசனம் முடியும் வரை இது தான் உன் ஆகாரம். முதலில் இரண்டு நாள் பல் கூசும் அப்பறம் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லி அனுப்பினார்.
நானும் அவர் சொன்ன மாதிரியே செய்து அங்கு தேங்காய் உடைத்து தரிசனம் செய்தேன். அங்கு மேல்சாந்தி என்ற தலைமை பூசாரிக்கு எல்லாரும் ஐந்து, பத்து தக்ஷிணை போட்டு நமஸ்கரித்தார்கள். நான் மட்டும் நூறு ரூபாய் போட்டதால் என்னை அவர் ஸ்வாமி எந்த ஊர் என்று கேட்டார். நான் காஞ்சீபுரம் என்றதும் பெரிய திருமேனி எப்படி இருக்கார். எனக் கேட்டார். கேட்டது பெரியவாளை பத்தி..நான் சௌக்யமாக  இருப்பதாகக் கூறவும் அவரால் தான் நாம் இப்போ வெள்ளமோ, பூகம்பமோ இல்லாமல் சுபிட்க்ஷமாக இருக்கோம் என்றார். பெரியவாளுக்கு ப்ரசாதம் கேட்டேன். அவர்பெரிய பாட்டிலில் இருந்த இரண்டு கிலோ நெய்யை அபிஷேகம் செய்து கூடவே விபூதியையும் வைத்து பெரியவாளுக்குக் கொடுத்தார். என் நமஸ்காரத்தை அவருக்கு சொல் என்றார். நீ அந்த பெரியவா திரு மேனியை விடாதே அவர் ஈச்வர அவதாரம் அவர் சன்னிதியிலே இரு நகராதே அவருடன் இருப்பதாக சத்யம் செய்து கொடு என்று என்னிடம் சத்யம் வாங்கிக் கொண்டார்.

திரும்பி வருகையில் எர்ணாகுளம் வந்து ஒரு வக்கீல் வீட்டில் தங்கி சாப்பிட்டு விட்டு நாங்கள் அவருடைய அம்மா வீட்டுக்குப் சென்றோம். பெரியவாளிடமிருந்து வந்திருப்பதால் என்னைப்  பார்க்க விரும்பியதால் அங்கும் சென்றேன். அந்த அம்மா என்னிடம் பெரியவா பற்றி நிறைய பேசி ஏய் நீ ராம ஐய்யர் மாமாவைப் பார்க்காமல் போகக் கூடாது என்று சொன்னதால் அங்கும் சென்றேன். அவருக்கு தொண்ணூறு வயசிருக்கும். அங்கு போனதும் யாரு பாலுவா? யார் அவன்? என்று கேட்டார். நான் பெரியவா கிட்டேருந்து வந்திருக்கேன் என்று சொன்னதும் ஆஹா! பெரியவாகிட்டேர்ந்தா? என்று துள்ளி என் காலில் விழுந்து நமஸ்காரம் செய்தார். நான் எனக்குப் போய் நமஸ்காரம் செய்கிறீர்களே என பதைப்புடன் கேட்டவுடன் டேய் இது உனக்கு இல்லை...அந்த பகவானுக்குச் செய்தேன் என்றார். பெரியவா நம்மை போல்  சாப்பிட்டுத் தூங்கிர ஒரு மனுஷன்னு நினைக்காதே. அவர் சாக்ஷாத் பரமேச்வரன்...டா என்றார். அவர் கையில் சங்கு,சக்கரம், பாதத்தில் சக்கரம், சிரஸில் சந்திரன் எல்லாம் இருக்கு... பாத்தியா? ஸ்ரீ சக்கரவர்த்திரேகை
பார்த்திருக்கியா? என்றார். இல்லை பார்த்ததில்லை நீ தஞ்சாவூர் காரனாச்சே...பார்த்ததில்லையா? நான் பார்த்திருக்கேன்... இது வரை யாரிடமும் சொல்லாத விஷயம் சொல்றேன்...கேட்டுக்கோ...பெரியவா இங்கு நாற்பது நாள்கள் தங்கியிருந்தார். தினசரி விடியற்காலை மூன்று மணிக்கு எழுந்திருந்து அனுஷ்டான ஜபம் முடித்து ஸ்னானம் செய்து பூஜை செய்து...பிக்ஷை முடிந்து சாயரக்ஷை கோவில்  சென்று உபன்யாஸம் நிகழ்த்தி இரவு 12 மணிக்குத்தான்
படுக்கப் போவார். இப்படி 40 நாட்கள். எனக்கு தாள் வில்லை. ஒரு நாள் கைகூப்பி அவர் முன் நின்றேன். நான் ஒன்று சொல்லணும் ஆனால் சொல்ல தயக்கமாக இருக்கு என்றேன். நான் சிங்கம் புலி இல்லை சொல் தைரியமாக என்றார். பெரியவா தினம் மூணு மணிக்கு எழுந்து படுக்க இரவு பன்னெண்டு மணி ஆகிவிடுகிறது. உங்களுக்கு ஒரு நாள் மங்கள ஸ்னானம்  செய்து வைக்க ஆசை எனக்கு... நீங்கள் குருவாயூரப்பன் அவதாரம்... உங்களுக்கு அபிஷேகம் பண்ண எனக்கு ஆசை என்றேன். ஒஹோ உனக்கு அப்படி ஒரு ஆசையா... சரி
சனிக்கிழமை எண்ணை கொண்டு வா என்றார். அதன் படி சென்றேன். மிளகு துளசி போட்டுக் காய்ச்சிய எண்ணையை தலையில் வைத்த போது தான் தெரிந்தது சிரஸில் சக்கர ரேகை. கையில் காலில் சக்கரவர்த்தி ரேகை... பார்த்து விட்டு அப்படியே நமஸ்காரம் செய்தேன். அவர் ஈச்வரன்தான் என்பதில் சந்தேகம் இல்லை... நீ அவருடனேயே இரு... இதை எல்லாம் நான் ஊர் திரும்பியதும் பெரியவாளிடம் சொன்னேன். உடனே பெரியவா தண்டத்தை எடுத்துக் கையில் பிடித்துக் கொண்டுஎழுந்து நின்ற கோலம் சாக்ஷாத் பரமேச்வரன் சூலம் தாங்கி நின்றது போல் இருந்தது! இன்னும் என்ன சொன்னார்? என்றார் பெரியவா?
பெரியவா நடக்க வேண்டாம் காலில் இருக்கும் ரேகைகள் அழிந்து விடும் என்றும் சொன்னார். உங்களுக்கு எண்ணை தேய்த்து விடுபவர்களுக்கு நீங்கள் ரேகைகள், சக்கரங்களைக் காண்பிக்கிறீர்கள் எங்களுக்கும் அருளக்கூடாதா? (சதா தாங்களே கதி  என்றிருக்கும் எங்களுக்கு )என்று நான் கேட்டதும் எனக்கும் அந்த பாக்யம் கிட்டியது! தலையை நன்றாகப் பார்த்துக்கொள் மூன்று சுழி சிரஸின் மேல் ! சரி நீங்கள் இனி நடக்கக் கூடாது என்றதும் சின்னக் குழந்தை போல் சரி என்று கலவையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். நடக்க வேண்டாம்  என்றால் 30 கிலோ மீட்டர் நடந்து வருகிறீர்களே? என் குரு நாதர் பிறந்த நாள் அதனால் வந்தேன்... இனி நீ சொல்லும் வரை இங்கேயே இருப்பேன் என்று அதன் படி மூன்று வருஷம் அங்கேயே தங்கினார்.

ஸ்வாமினாத இந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் {பாலு அண்ணா }
சொன்னது தாயுமானவன் மூன்றாம் பகுதியில்...

ஜய ஜய சங்கரா....

கருத்துகள் இல்லை: