புதன், 11 செப்டம்பர், 2019

*வெள்ளிக்கிழமை வைபவம் - அம்பாள் குறித்த ஸ்ரீ மஹா பெரியவா அருளமுதம்*

*குருவிந்த மணி-ச்ரேணீ-கநத்-கோடீர-மண்டிதா*

“குருவிந்த மணி-ச்ரேணீ-கநத்-கோடீர-மண்டிதா” என்று லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அம்பாளை ரத்னமயமாக ப்ரகாசிக்கிற கிரீடம் அணிந்தவள் (“பத்மராக மணிகள் வரிசையாக பதிக்கப்பெற்று ஒளி வீசும் அழகிய கிரீடம் அணிந்தவள்”) என்ற அர்த்தத்தில் சொல்லியிருக்கிறது.  ‘கோடீரம்’ என்றால்கிரீடம்.

ஸேவிக்கிறவர்களின் கிரீடங்களையெல்லாம் இடறிக்கொண்டு, ஸேவிக்காதவனை ஸேவிப்பதற்காக அம்பாள் ஓடுகிறாள் என்றுகூட ஸௌந்தர்ய லஹரியில் ஒரு ஸ்லோகம் இருக்கிறது. தேவ ச்ரேஷ்டர்களெல்லாம் அவளுடைய சரணத்திலே தங்களுடைய கிரீடங்களைச் சாய்த்து நமஸ்காரம் பண்ணிக் கொண்டிருக்கிறார்களாம். அப்போது ஈச்வரன் எங்கேயோ போய்விட்டுத் திரும்பிவருகிறாராம்.

அவர் எங்கேயோ தூரத்தில் வருகிறதைப் பார்த்தவுடனேயே அம்பாளுக்குப் பதிபக்தி, ப்ரேமை இரண்டும் பொங்கிக் கொண்டு வருகிறதாம். அவரை எதிர்கொண்டழைக்கணும் என்று தான் ஆஸனத்தைவிட்டு எழுந்து ஓடுகிறாளாம். அப்போது அவளுடைய சேடிகள், பார்த்துப் போகும்படி அவளை எச்சரிப்பதாக ச்லோகம் பண்ணியிருக்கிறார்.

“கிரீடம் வைரிஞ்சம் பரிஹர” – “ப்ரம்மாவோட கிரீடத்திலிருந்து விலகிப் போங்கோ”. [இது அம்பிகையின் காலடியில் பணியும் பிரம்மாவின் கிரீடத்தில் அவள் தடுக்கிக் கொள்ளாமலிருப்பதற்காக அவளது சேடியர் செய்யும் எச்சரிக்கை.]

அப்புறம், “கைடபபித: கடோரே கோடீரே ஸ்கலஸி” – “கைடபாஸுரனைப் பிளந்து தள்ளினவர் இருக்கிறாரே – அதுதான் விஷ்ணு – அவருடைய கெட்டியான கிரீடத்தில் தடுக்கிண்டுடப் போறேள் ! பார்த்து போங்கோ!”

கடோரமான கிரீடம் என்றால் கெட்டியான கிரீடம். ‘போல்’ (காலி/ வெற்று) இல்லை; அப்படியே ‘ஸாலி’டாக (Solid) இருக்கும் கிரீடம். ஏன் என்றால், அதற்கு விடை ஆசார்யாளின் ‘விஷ்ணு பாதாதி கேசாந்த ஸ்தோத்ர’த்தில் இருக்கிறது.

க்ருத-மகுட-மஹாதேவ-லிங்க-ப்ரதிஷ்டே என்று அங்கே சொல்கிறார்.

சிவலிங்க ரூபமாகவேயுள்ள கிரீடத்தை விஷ்ணு வைத்துக் கொண்டிருக்கிறாராம்! சிவலிங்கமென்றால் “போலா”யில்லாமல் ‘ஸாலி’டாகத்தானே  இருக்கணும்?

வேடிக்கை என்னவென்றால், அம்பாள் பக்தியிலே, அந்த லிங்கத்திற்குஅபசாரமாச்சே என்பதைக்கூட மஹாவிஷ்ணு நினைத்துப் பார்க்காமல் கிரீடத்தை அவளுடைய பாத பீடத்தில் சாய்த்திருக்கிறார்!

அம்பாளும் பதியிடம் பரமபக்தியில் ரிஸீவ் (receive) பண்ண ஓடும்போது அந்த லிங்கத்தைக் காலால் இடறப் பார்க்கிறாள்!

பக்தியும் ப்ரேமையும் ஒரேயடியாக மேலிடும் போது – கண்ணப்பர் சிவலிங்கத்தின் நேத்ர ஸ்தானத்திலேயே செருப்புக் காலை ஊன்றிக் கொண்ட மாதிரி – எந்த அபசாரமும் அபசாரமாவதில்லை!
பெரியவா சரணம்!

கருத்துகள் இல்லை: