புதன், 11 செப்டம்பர், 2019

புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு பெண் பெரியவாளிடம் அப்படியொரு பக்தி கொண்டிருந்தாள். நல்ல வஸதியான குடும்பத்தை சேர்ந்தவள். பார்க்க மிகவும் குட்டையாக இருப்பாள். பெரியவாளை தர்ஶனம் செய்ய வரும் போதெல்லாம் ஏலக்காய் மாலை க்ரீடம் என்று பார்த்து பார்த்து ஆசையாசையாய் பண்ணிக் கொண்டு வருவாள். பாவம் அந்தப் பெண்ணுக்கு தகுந்த வரன் மட்டும் கிடைக்கவில்லை. அடிக்கடி வருவதால் பாரிஷதர்கள் எல்லாருக்குமே அவளைத் தெரியும். ஒவ்வொரு முறையும் சில ஸிஷ்யர்கள் அவளுக்காக பெரியவாளிடம் பரிந்தனர். பாவம் அந்தப் பொண்ணு பெரியவா அனுக்ரஹம் பண்ணணும். நல்ல எடத்ல கல்யாணம் ஆகணும் பெரியவா புன்னகைத்தார். பிறகு அந்தப் பெண்ணிடம் "ஒனக்கு எப்டியாப்பட்ட ஆம்படையான் வேணும்?" எனக்கு பெரியவாகிட்ட பக்தியா இருக்கறவரா இருக்கணும். ஏழையா இருந்தாலும் சரிதான் குடுமி வெச்சிண்டிருந்தாலும் சரிதான். அழகா இருக்கணும்னு கூட அவஸ்யமில்லே பெரியவா"

கொஞ்ச நாள் கழித்து காமாக்ஷி கோவிலில் எல்லாருக்கும் தர்பனம் குடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண் அங்கு வந்தாள். வழக்கம் போல் அந்தப் பாரிஷதரும் தன் ஸிபாரிசு ப்ரார்த்தனையை செய்தார். பெரியவா சிரித்துக் கொண்டே அவரிடம் சரி. நா அனுக்ரஹம் பண்றேன். நீ இப்போவே எதாவுது ஒரு பையனை அழைச்சிண்டு வா. கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றேன்..."பாரிஷதர் பெரியவாளை பெரியவாளின் அளப்பறிய மஹா பக்தியை அறிந்தவர். எனவே கொஞ்சங்கூட தயங்கவில்லை எப்படி இப்போவே அழைச்சிண்டு வரமுடியும்? என்று திகைக்கவில்லை. கீழே இறங்கி அங்கே இங்கே தேடிக்கொண்டிருந்தார்.

யாரை? அந்த பெண்ணுக்கான வரனை.

மஹா ஆச்சர்யம் பெரியவாளை தரிசனம் பண்ண கும்பகோணத்தை சேர்ந்த ஒரு ஆடிட்டர் பையன் நின்று கொண்டிருந்தான். பாரிஷதர் அவனிடம் சென்று" கொஞ்சம் எங்கூட வாங்கோ. பெரியவாகிட்ட கூட்டிண்டு போறேன்" என்றதும் அவனும் வந்தான். "பெரியவா... இதோ ஒரு பையன் வந்திருக்கான் "பெரியவா சிரித்துக் கொண்டே அந்தப் பையனிடம் அந்தப் பெண்ணைக் காட்டி" இந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ" என்றார்.

அந்தப் பையனும் பெரியவாளிடம் கொண்ட பக்தியில் சளைத்தவனில்லை என்பதால் பெரியவா உத்தரவுப்படி இந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கறேன்... ஆனா கும்பகோணத்ல எங்கம்மா அப்பாகிட்ட சொல்லிட்டு அவாளோட ஸம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கறேன்" என்றான்.

"பேஷ் அம்மா, அப்பா ஆஸிர்வாதம் ரொம்ப முக்யம். நீ ஊருக்குப் போயி அவாட்ட நான் சொன்னேன்னு சொல்லு. இவளோட அம்மா அப்பாவை விட்டு மிச்ச விஷயங்களை ஏற்பாடு பண்ணச் சொல்றேன்" பாரிஷதர் மனம் குளிர்ந்தார். பையனும் பொண்ணும் ஸந்தோஷமாக நமஸ்காரம் பண்ணினார்கள் தனித்தனியாக.

"க்ஷேமமா இருங்கோ"

அடுத்த சில வாரங்களிலேயே தம்பதியாய் சேர்ந்து பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்யும்படியாக அந்தப் பெண்ணுக்கும் ஆடிட்டர் பையனுக்கும் புதுக்கோட்டையில் ஜாம்ஜாமென்று பெரியவா அனுக்ரஹத்தோடு கல்யாணம் நடந்தது.

கருத்துகள் இல்லை: