செவ்வாய், 18 செப்டம்பர், 2018

மகாபாரதத்தில் சிவராத்திரி

மகாபாரதத்தில் சிவராத்திரி விரதம் பற்றி கூறப்படுகிறது. பீஷ்மர் அம்புபடுக்கையில் படுத்தபடி தர்மத்தைப்பற்றி எடுத்துக்கூறும்போது சித்ரபானு என்ற மன்னன் அவரிடம் மகா சிவராத்திரி விரதம் பற்றி கூறுகிறான். இந்த மன்னனுக்கு பூர்வ ஜென்ம வரலாறுகளை நினைவுகூறும் சக்தி உண்டு. அதன் அடிப்படையில் கடந்த பிறவி ஒன்றில் அவன் இவ்விரதத்தை அனுஷ்டித்ததாக சொல்கிறான். அந்தபிறவியில் அவன் சுச்வரன் என்ற பெயரில் வேடனாக இருந்தான். இந்த பெயருக்கு இனியகுரல் என்று பொருள். ஒருமுறை வேட்டைக்கு சென்றபோது  ஒரு மரத்தில் ஏறி அமர்ந்திருந்தான். அது ஒரு வில்வ மரம். இரவு முழுக்க காத்திருந்தும் எந்த மிருகமும் அகப்படவில்லை. குடும்பத்தாரின் நினைவு அவனுக்கு வந்தது.  பசியும் தாகமும்அவனைவாட்டி எடுத்தது. குடும்பத்தினரை நினைத்து கண்ணீர்விட்டான். பொழுதுபோகவில்லையே என்பதற்காக மரத்தில் இருந்த வில்வ இலைகளை பறித்து தரையில் போட்டுக் கொண்டிருந்தான். மறுநாள் ஒரு மான் சிக்கியது. அப்போது ஒருவன் வேடன் எதிரே வந்தான். அவன் அந்த மானை தனக்கு தரும்படி கேட்டான். பசியால் அவன் முகம் வாடி உள்ளது என்பதை அறிந்த வேடன், அவனுக்கும் தன்னிடம் இருந்த மான் இறைச்சியின் ஒரு பகுதியை கொடுத்தான். பிறகு வீட்டிற்கு சென்று சாப்பிட்டான். அந்த வேடனின் இறுதிக்காலம் வந்தது. அவன் இறந்ததும் சிவலோகத்திற்கு சென்றான். வேடன் ஆனாலும் காட்டில் மரத்தின் மீது அமர்ந்திருந்த நாள் சிவராத்திரி என்பதால், சிவபதம் கிடைத்துவிட்டது. அன்று இரவில் வில்வ இலைகளை கீழே போடும்போது மரத்தின் அடியில்  இருந்த லிங்கத்தை  கவனிக்கவில்லை. இடுப்பில் கட்டியிருந்த குடுவையிலிருந்து மிச்சம் மீதி இருந்த தண்ணீர் லிங்கத்தின் மீது பட்டது. அபிஷேமாகவும், அர்ச்சனையா கவும்  ஏற்றுக்கொண்டார். விரதத்தின் முடிவில் தானமும் செய்துவிட்டான். இதன் காரணமாக அவனுக்கு சொர்க்கம் கிடைத்தது.
லிங்கோத்பவரின் அடியும் முடியும் புதைந்த ரகசியம்

சிவாலயங்களில் கோஷ்டத்தின் பின்புற சுவரில் லிங்கோத்பவரைக் காணலாம். இவரது பாதங்கள் பூமியில் புதைந்திருக்கும். தலை வானில் புதைந்திருக்கும். மேலே ஒரு அன்னமும், கீழே ஒரு பன்றியும் செதுக்கியிருப்பார்கள். அன்னம் பிரம்மாவாகவும், வராகம் (பன்றி) விஷ்ணுவாகவும் கருதப்படுகிறது. இவர்கள் சிவனின் அடிமுடியைக் காண போட்டியிட்டதாக ஒரு புராணக்கதை உண்டு. உண்மையில் இதன் தத்துவம் என்ன தெரியுமா? சிவன் லிங்க வடிவமாக உள்ளார். லிங்கம் என்பது நீள் வட்ட வடிவமுடையது. சதுரம், செவ்வகம், முக்கோணம் எதுவாக இருந்தாலும் அதற்கு ஆரம்ப இடமும், முடியும் இடமும் உண்டு. ஆனால், வட்டத்துக்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை. சிவனும் ஆதிஅந்தம் இல்லாதவர் என்பதை இந்த வடிவம் காட்டுகிறது. ஆனால், இந்த வடிவம் மனதில் நிற்காது என்பதற்காக ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. ஊரில் இருக்கும் மகனிடமோ மகளிடமோ போனில் பேசினால் திருப்தி இருக்காது. நேரில் பார்த்தால் தான் மனம் திருப்தியடையும். அதுபோல, சிவனை நேரில் பார்த்த திருப்தி பெற, அவரது உருவத்தை நீள்வட்ட லிங்கத்துக்குள் நிறுத்தி, தலையும், திருவடியும் புதைந்திருப்பது போல் காட்டி, அவர் ஆதிஅந்தமில்லாதவர் என்ற தத்துவம் மாறாமல் உருவம் கொடுத்தனர்.
ஜோதிர்லிங்கம் என்றால் என்ன?

ராமேஸ்வரத்துக்கு போய் ஜோதிர்லிங்கத்தைப் பார்த்திருப்பீர்கள். அதன் தத்துவம் என்ன? யோகிகள், தங்கள் சிரசிலுள்ள சகஸ்ரார கமலத்தில் (ஆயிரம் இதழ் தாமரை போன்றது) உள்ள சந்திரமண்டலத்தில், சிவனை ஜோதி வடிவாக தியானம் செய்வார்கள். அப்போது, சந்திரமண்டலத்தில் இருந்து அமிர்தம் கொட்டும். அவர்கள் பரமானந்த நிலையில் திளைப்பார்கள். இதன் காரணமாக, உலக வடிவான ஜோதிர்லிங்கம் குளிரும். அது குளிர்ந்தால் உலகமே குளிரும்.அதாவது, மக்கள் சுபிட்சமாக வாழ்வார்கள். நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு இது போன்ற யோகம் சாத்தியமல்ல. நாம் செய்யும் யோகா எல்லாம் உடல்நலத்துக்காக மட்டுமே. லிங்கம் குளிர்ச்சியாக இருக்க வேண்டுமே என்பதற்காகத்தான் வடக்கேயுள்ள ஜோதிர்லிங்கத் தலங்களில் பக்தர்களே அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
சிவம் என்பதன் பொருள்

சிவம் என்ற சொல்லுக்கு சுகம் என்று பொருள். சிவராத்திரி விரதம் அனுஷ்டித்தால் குடும்பத்தில் நன்மை பெருகும் என்பது நம்பிக்கை. இந்த விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்க வேண்டும். சிவராத்திரி விரதம் இருப்பதற்கு பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. ஒருகாலத்தில் உலகம் அழிந்தபோது மீண்டும் உலகை சிருஷ்டிக்க உமாதேவி சிவனைபூஜித்து ஒரு இரவு முழுவதும் இருந்த விரதமே சிவராத்திரி விரதம். மற்றொரு கதையின்படி, சிவனின் கண்களை பார்வதிதேவி மூடியதாகவும், இதனால் உலகம் இருண்ட நேரத்தை சிவராத்திரியாக அனுஷ்டிப்பதாகவும் கூறுகிறார்கள்.
சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?

சிவராத்திரியன்று சிவாலயத்திற்கு வில்வ இலையுடன் செல்ல வேண்டும். இரவு கடைசி ஜாம பூஜை வரை அங்கே இருக்க வேண்டும். சிவாய நம என உச்சரிக்க வேண்டும். அன்று சாப்பிடக்கூடாது. நோயாளிகள் எளிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். முதல் ஜாம பூஜைக்கு பால், அடுத்த பூஜைக்கு தயிர், மூன்றாம் ஜாமத்திற்கு வெண்ணெய், நான்காவது ஜாமத்திற்கு தேன் ஆகியவற்றை அபிஷேகம் செய்வதற்காக கோயிலில் ஒப்படைக்க வேண்டும். மறுநாள் காலையில் அன்னதானம் செய்ய வேண்டும். அன்னதானத்துக்கே பிறகே சாப்பிட்டு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
மாலை நேரத்தில் வழிபட வேண்டிய கோயில்

மொதேரா என்னும் திருத்தலம் குஜராத் மாநிலத்தில், அகமாதபாத் நகரத்திலிருந்து சுமார் 100 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்குள்ள சூரிய ஆலயம் அஸ்தமன காலத்தைக் குறிக்கும் கோயில் எனப்படுகிறது.பாழடைந்த நிலையில் உள்ள இந்த சூரியக் கோயில், பதினாறாம் நூற்றாண்டில் சோலங்கி வம்சத்தினரால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கருவறையில், கிழக்கு நோக்கி அருள் புரியும் சூரியபகவான் விக்கிரகம் இருந்த இடத்தின்மீது காலை வேளையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் விழும் அமைப்பில் இக்கோயில் திகழ்ந்திருக்கிறது. இங்குள்ள சூரிய விக்கிரகம் வெகுகாலத்திற்கு முன்பே அகற்றப்பட்டிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த மூன்று கோயில்களுமே காலத்தால் சீர்குலைந்திருந்தாலும், ஒரு காலத்தில் சௌர மார்க்கம் எனும் சூரிய வழிபாடு மிக உயர்ந்த நிலையில் இருந்தது என்பதற்கான நினைவுச்சின்னமாக சூரியனின் புகழைப் பரப்பிக் கொண்டிருக்கிறது.
உச்சி காலத்தில் வழிபட வேண்டிய கோயில்

மூல்தான்  பாகிஸ்தானில் உள்ள இத்திருத்தலத்தை மூல ஸ்தானம் என்றும் கூறுவர். பாகிஸ்தானில் சீனாப்(செனாப் என்றும் கூறுவர்) நதிக்கரையில் உள்ள இந்த சூரியன் கோயில், உச்சி காலத்தைக் குறிக்க எழுப்பப்பட்ட ஆலயம் என்று ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இங்கு குறிக்கப்பட்டடுள்ள சீனாப் நதியே, முற்காலத்தில் சந்திரபாகா எனும் நதியாக விளங்கி வந்ததால், இத்திருத்தலம் சாம்பபுரம் என்றும் கருதப்படுகிறது. பவிஷ்ய புராணமும் இத்திருத்தலத்தை சாம்பபுரம் என்று கூறுகிறது. முந்நூறு அடி உயரமுள்ள இந்த சூரியன் கோயிலில், சூரியபகவான் மனித உருவில் தமது தொடையில் கைவைத்து அமர்ந்த நிலையில் எழுந்தருளியுள்ளார். இங்கு தங்கத்தால் ஆன சூரிய விக்கிரகம் ஒன்று இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இக்கோயிலும் பகவான் கிருஷ்ணரின் மகன் சாம்பனால், தன் தொழுநோயை சூரியபகவான் நீக்கியதற்காக எழுப்பப்பட்டதாகப் புராணம் கூறுகிறது.
உதய காலத்தில் வழிபட வேண்டிய கோயில்...

ஒரிஸ்ஸாவிலுள்ள புவனேஸ்வரத்தில் இருந்து சுமார் 65 கி.மீ. தூரத்தில் உள்ள திருத்தலம் கோனார்க். கடற்கரைக்கு அருகில் உள்ள இந்த சூரியன் கோயில், ஸ்ரீகிருஷ்ணரின் மகன் சாம்பானால் வழிபடுவதற்காக நிர்மாணித்ததாகப் புராணம் கூறுகிறது. இருந்தாலும், கங்க வம்சத்தைச் சேர்ந்த முதலாம் நரசிம்மனால் பதிமூன்றாம் ஆண்டில் கட்டப்பட்டதாகவும் சரித்திரம் சொல்கிறது. இது உதய காலத்தில் வழிபட வேண்டிய நிர்மாணிக்கப்பட்ட ஆலயம் என்பர். புராணகாலத் தொடர்புடைய இந்த ஆலயத்தில் தாமரை மலரில் சூரியபகவான் நின்ற நிலையில் அருள்புரிகிறார். அவரது இரு பக்கங்களிலும் நான்கு தேவியர்கள் உள்ளார்கள். ஒருபுறம் த்யௌ, ப்ருத்வி எனும் தேவியர்களும் மற்றொருபுறம் உஷை, சந்தியா எனும் தேவியர்களும் காட்சி தருகிறார்கள். இங்கு சங்கு, சக்கரம், வரதமுத்திரை, அபயஹஸ்தத்துடன் நான்கு கரங்கள் கொண்டு சூரிய பகவான் எழுந்தருளி உள்ளார். கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இக்கோயில் மாபெரும் தேர் வடிவில் அமைந்திருப்பது தனிச் சிறப்பு எனப்படுகிறது. இத்தேரின் ஒவ்வொரு பக்கத்திலும் பன்னிரண்டு சக்கரங்கள் உள்ளன. இத்தேரினை ஏழு குதிரைகள் இழுத்துச் செல்லும் தோற்றத்தில் அதி அற்புதமாகக் கலைநுட்பத்துடன் வடிவமைத்திருப்பது மிகச் சிறப்பாகப் போற்றப்படுகிறது.கோனார்க்  சிற்பக் கலைக்கு உலகப் புகழ் பெற்ற கோயில்.
சூரியன் கோயில்களில் எப்போது வழிபட வேண்டும்?

தை மாதத்தில் சூரியன் தன் பயணப் பாதையைத் தென் திசையிலிருந்து வடக்கு திசைக்கு மாற்றிக் கொள்வதால், இதனை உத்தராயண புண்ணிய காலம் என்று போற்றுவர்.சூரியனுக்கு ஆயிரம் திருப்பெயர்கள் உண்டு என்று புராணங்கள் கூறுகின்றன. அதில் இருபத்தோரு பெயர்கள் மிகவும் சிறப்பானவை என்று சூரிய புராணம் கூறுகிறது. விகர்தனன், விவஸ்வான், மார்த் தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகப் பிரகாசன், ஸ்ரீமான், கிரிகேஸ்வரன், லோகரட்சகன், திரிலோகன், கர்த்தா, அர்த்தா, தமிஸரகன், தாபனஸ், சசி, சப்தஸ்வர வாகனன், தாபனஸ், கபஸ்தி ஹஸ்தன், பிரம்மா, சர்வ தேவன், லோக சாட்சிகன் என்பவையாகும். பல சிறப்புப் பெயர்களைப் பெற்ற சூரியனுக்கு, இந்தியாவில் பல திருத்தலங்களில் கோயில்கள் உள்ளன. அதே போல், சூரியன் வழிபட்ட கோயில்களும் உள்ளன. இருந்தாலும், உதயம், மதியம், அஸ்தமனம் ஆகிய மூன்று காலங்களிலும் வழிபடக்கூடிய கோயில்கள் வட இந்தியாவில் உள்ளன.
செவ்வாய் வருவாய் நலம் பல தருவாய்!

செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்: தமிழகத்தில் செவ்வாய் கிழமையில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதில்லை, பொருட்கள் வாங்குவதில்லை என்று வழக்கம் இருக்கிறது. உண்மையில் இந்தக் கிழமை மங்களகரமானது, சிறப்புக்குரியது. செவ்வாய்க்கு மங்களன் பூமிகாரகன் என்று பெயர் உண்டு. பெயரிலேயே மங்களம் இருப்பதால், அந்நாளில் தொடங்கும் செயல் சுபமாக நிறைவேறும். செவ்வாய்கிழமையை மங்கள்வார் என்று குறிப்பிடுவர். அந்நாளில், வடமாநிலங்களில் மங்கல நிகழ்ச்சி நடத்த தயங்குவதில்லை. தமிழ்க்கடவுளான முருகப்பெருமான் செவ்வாய்க்குரியவர். இவரை வணங்கி துவங்கும் செயல்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. கேரள மக்கள் செவ்வாய்க்கிழமையில் திருமணம் நடத்துகின்றனர். கல்வியறிவு மிக்க இந்த மாநிலத்தில் செவ்வாய் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆடியை சூன்ய மாதம் என்பர். ஆனால், தள்ளுபடி விற்பனையோ அமோகமாக நடக்கிறது.

நிலம் வழங்கும் கிரகம்: பெருமாளின் மனைவியான பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவர் செவ்வாய். எனவே, செவ்வாயை ஒதுக்குவது பூமித்தாயைப் புறக்கணிப்பதாகும். இந்நாளில் மங்கலப்பொருட்களை வாங்குவதும், சுபநிகழ்ச்சி நடத்துவதும் நம்மைச் சுமக்கும் பூமித்தாய்க்கு செலுத்தும் நன்றிக்கடனாகும். பொறுமையின் இலக்கணமான பூமாதேவியின் ஆசியைப் பெற்றால் வாழ்வு சிறக்கும். சொந்தவீடு அமையவும், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சேரவும் செவ்வாயை வழிபடுவது நன்மை தரும். பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவனும், மின்னலைப் போன்ற ஒளி கொண்டவனும், குமரனும், சக்தி ஆயுதம் தாங்கியவனும், பெருமை மிக்க மங்கலனுமாகிய செவ்வாயைப் போற்றுகிறேன் என்று பெரியவர்கள் போற்றி வழிபடுகின்றனர்.சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் அங்காரகன் ஆச்ரயாமி என்று செவ்வாயைப் போற்றுகிறார். நலத்தைத் தருபவனே! பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவனே! எளியவர்களைக் காப்பவனே! என்று பாடுகிறார். செவ்வாயையும், முருகப்பெருமானையும், பூமாதேவியையும் வழிபட்டு செவ்வாயில் மங்கலப்பொருள் வாங்கினால் பன்மடங்கு பெருகுவதோடு, எல்லாச் சிறப்புகளும் நம்மைத் தேடி வரும்.ஜாதகத்தில், செவ்வாயின் பலத்தை பொறுத்தே  நீதிபதிகள், ராணுவ தளபதிகள், காவல்துறையினர், பொறியியல் வல்லுனர்கள், அரசியல் தலைவர்களுக்குரிய செல்வாக்கு அமையும். ரத்தத்திற்கும் செவ்வாயே அதிகாரி. ரத்த ஓட்டம் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக உள்ளது. செவ்வாயை வழிபட்டால் ரத்தஅழுத்தம், உஷ்ணம், கோபத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

கிழமை ஒரு தடையல்ல:அட்சயதிரிதியை, ஆடிப்பெருக்கு நாட்களில் மக்கள் பொன், பொருளை வாங்குவதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். 1988 ஏப்ரல்19, 1992 மே5, 1995 மே2ல், அட்சயதிரிதியை செவ்வாயன்று வந்தது. 2010 ஆகஸ்ட்3ல் ஆடிப்பெருக்கு செவ்வாயில்அமைந்தது. இந்த நாட்களில் பொன், பொருள் வாங்கியவர்கள், கிழமையை மனதில் கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால், செவ்வாயன்று பொருள் வாங்கும் சிலர் வழக்கத்தை விட அதிக பலனே பெறுகின்றனர்.
அன்னதானத்தின் அவசியம் தெரியுமா?

அனைவருக்கும் கேட்டவரம் அனைத்தையும் அளித்த கொடையாளி கர்ணன். தன் வாழ்நாளின் ஒருவரை அமர்வித்து உணவளித்து அன்னதானம் செய்ததில்லை. இறந்தபின் சொர்க்கம் அடைந்தான். அங்கு அனைவரும் பசி, தாகம் இன்றி சுகமாக இருந்தனர். ஆனால் கர்ணனுக்கு மட்டும் கடும் பசி எங்கு தேடியும், யாரை கேட்டும் உணவு கிடைக்கவில்லை. நாரதரை கண்டு, எனக்கு மட்டும் சொர்க்கத்தில் ஏன் இந்த அவல நிலை? எனக் கேட்டான். நாரதர், கர்ணா! உனது ஆள்காட்டி விரலை வாயில் இட்டு சுவை என்றார். கர்ணனும் அப்படியே செய்ய பசியும் தீர்ந்தது. ஆனால் வாயிலிருந்து விரலை எடுத்தாலோ மீண்டும் பசித்தது. காரணம் கேட்ட கர்ணனிடம் நாரதர் நீ உனது வாழ்நாளில் ஒருவருக்காவது அன்னதானம் செய்ததில்லை. ஒரு சமயம் துரியோதனன் வீட்டில் அன்னதானம் நடைபெற்றது. பசியால் வாடிய ஒருவன் உன்னிடம் வந்து விசாரித்த போது, அன்னதானம் நடக்கும் இடத்தை நீ உனது ஆள்காட்டி விரலால் சுட்டிக்காட்டினாய். அந்த பெரும் புண்ணியம் உனது ஆள் காட்டி விரலில் தொற்றியுள்ளது. அந்த விரலைச் சுவைத்தவுடன் பசி நீங்குகிறது. எனவே தான் தானத்தின் சிறந்தது அன்னதானம் என்றார். எனவே தான் கர்ணன், அன்னதானம் செய்வதற்காகவே மறுபிறவி எடுக்க விரும்பி, சிவனிடம் வரம் கேட்டுப் பெற்றான். கர்ணனின் மறுபிறவியே சிறுத்தொண்ட நாயனார். பக்தரின் அன்னதான அவசியத்தை உலகுக் உணர்த்தவே சிவன் வீர சைவ அடியாராக வந்து பிள்ளைக்கறி கேட்டு அருள் புரிந்தார். இக்கதையையே சீராளன் கதை என கிராமங்கள் தோறும் பல நூற்றாண்டுகளாக சிவபக்தர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.