திங்கள், 29 ஜூலை, 2019

ஆண்டாளுக்கு வயது 5023

ஆடிதோறும் பூரநட்சத்திரம் வந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் ஆண்டாள் அவதரித்த பின் தான் அந்நாளுக்கு தனிச்சிறப்பு உண்டானது. அவள் பூமிப்பிராட்டியின் அம்சம். கிணற்றில் விழுந்த குழந்தையைக் காக்க எண்ணிய தாய் தானே கிணற்றுக்குள் குதிப்பதைப் போல பாசம் ஆசை  என்னும் கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருக்கும் உயிர்களை  காப்பாற்றி பரந்தாமனிடம் சேர்க்க பூவுலகில் அவதரித்தாள்.

பிறந்த வருடம் : ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள நந்தவனத்தில் ஒரு துளசிச் செடியின் அடியில் கலியுகம் பிறந்து 98வதாக நிகழ்ந்த நளவருடத்தில் ஆண்டாள் அவதரித்தாள். ஆடிமாதம் வளர்பிறை பஞ்சமி திதியும் பூரநட்சத்திரமும் செவ்வாய்க்கிழமையும் கூடிய நன்னாளில் பெரியாழ்வார்  அவளைக் கண்டெடுத்தார். தற்போது கலியுகம் 5117 நடக்கிறது. இவ்வகையில் ஆண்டாளுக்கு இவ்வாண்டு 5020 வது பிறந்த நாள். தான் பூஜித்து  வந்த வடபத்ரசாயி (ஸ்ரீவில்லிபுத்தூர் மூலவர்) குழந்தையை எடுத்துச் சென்றார். அவளுக்கு கோதை என்னும் பெயரிட்டு வளர்த்து வரும்படி அவர்  அருள்புரிந்தார். கோதை என்றால் நல்வாக்கு அருள்பவள் எனப்பொருள். ஆண்டாள் பெருமாளிடம் கொண்ட பக்தி காதலாக மாறியது. அவரையே தன் கணவனாக நினைத்து வாழத் தொடங்கினாள். கண்ணனோடு வாழ்ந்த கோபியர்களில் ஒருத்தியாக தன்னைக் கருதிக் கொண்டாள். ஸ்ரீவில்லி புத்தூரை கண்ணன் வசித்த ஆயர்பாடியாக கற்பனை செய்து அங்குள்ள பெண்களை கோபியராகச் சித்தரித்து அனைவருமாக இணைந்து பாவை நான்பு நோற்பதாக முப்பது பாடல்கள் எழுதினாள். அதுவே திருப்பாவை என்னும் இனிய நூல் ஆயிற்று.

கருத்துகள் இல்லை: