செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

ஜோதிடம் மக்களின் மனத்தில் செய்யும் பல விபரீதங்களை பார்ப்போம். 

திருச்சி ஶ்ரீரங்கம் பகவத் சந்நிதியில் தன் பெண் திருமணத்திற்கு அர்ச்சனை செய்த பின் ஒரு சேவார்த்தி ஏங்க திருப்பட்டூர் எப்படிப் போகணும் என கையில் ஒரு நோட்டை வைத்துக் கொண்டு கேட்டார். அடுத்து அங்கே போகனுமாம். பின் இன்னும் இரண்டு கோவில்கள் வரிசையாக அடுத்த அடுத்த பயணம். இன்னொருவர் ஏங்க சுக்கிர ப்ரீதி பண்ண சொல்லி சொன்னாங்க அதாவது ஶ்ரீரங்க பெருமாளுக்கு பட்டு சாத்தவும் நம்பெருமாளுக்கு பன்னிரெண்டு  அடி மாலை சாத்தவும் சொன்னாங்க என்றார்.

தற்செயலாக வந்த கோயில் அர்ச்சகர் தம்பி ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு மதுரகவி நந்தவனம் என்ற இடத்திலிருந்து சாத்தாத வைணவர்களால் தொடுக்கப்பட்ட மலர் மாலை தான் சாத்துவார்கள். மற்றபடி வெளியில் இருந்து நாம் பணம் கொடுத்து வாங்கி கொடுக்கும் மாலைகளை சாற்றுவது கிடையாது என சொன்னார். 

அதே போல் வேறு ஒரு குடும்பம் அதன் தலைவர் பெண்ணுக்கு நாகதோஷம் நம்பெருமாளுக்கு பணிவிடை செய்யற ஆதிசேஷனுக்கு பன்னிரெண்டு முட்டை வாங்கி வைக்க  சொல்றாங்க என கூறினார். நான் மிரண்டு போய் ஶ்ரீரங்கத்தில் இப்படியெல்லாம் செய்ய முடியாது. என அவருக்கு புரியவைப்பதற்குள் பட்ட பாடு பெருமாளே முடியலை.

தெருவுக்கு நாலு ஜோசியக்கரர்கள் படித்த மற்றும் பாமர ஜனங்களுக்கும் எதை தின்னா பித்தம் தெளியும் என்ற நிலையில் அதை உபயோகப்படுத்தி பல ஜோதிடர்கள் ஆளுக்கொரு விதமாக இதுவரை கேட்டேயிராத பல பரிகாரங்கள் சொல்லுகிறார்கள்.

தேங்காயில் விளக்கெண்ணெய் விளக்கு, பூசணிக்காயில் விளக்கு 
வாழைப்பழத்துல விளக்கு என சிறப்பு பரிகாரங்கள் செய்ய சொல்கிறார்கள். ஜோசியக்காரங்க எல்லாம் குடும்ப பரிகாரம் என பக்கம் பக்கமாக நோட்டு போட்டு எழுதி தர நம்ம மக்களும் கர்ம சிரத்தையா அதை செஞ்சு முடிக்க கோவில் மற்றும் ஊர் ஊராக அலையறத பார்த்தால் மிகவும் கஷ்டமாக உள்ளது. நாள் கிழமைகளில் (வியாழன், வெள்ளி சனி, என பல நாட்களிலும்) பகவான் சந்நிதியிலோ தாயார் சந்நிதியிலோ ஒரு ஈ காக்கா காணோம். மொத்த கூட்டமும் அன்றய தினத்தில் நவக்கிரக சந்நிதில் அல்லது குடும்ப ஜோதிடர் பரிகாரம் செய்ய சொன்ன சன்னதிகளில் வரிசை கட்டி நிற்பது வேதனையான ஒன்று. எள் விளக்கு, கொண்டகடலை மாலை எலுமிச்சை விளக்கு, என ஒரே பரிகார அமர்க்களம். #ஜோதிடத்தில் பரிகாரம் என்ற ஒன்று கிடுயவே கிடையாது. பகவானை மட்டுமே நம்புங்கள் வாழ்வே நல்ல விதமான மாறும் உதாரணமாக ஒன்றே ஒன்றை மட்டும் குறிப்பிட்டு விளக்குகிறேன். 

பாரதத்தில் பாண்டவரான சகாதேவன் கௌரவ மன்னன் துரியோதன் தன்னிடம் பாரத போரில் பாண்டவர்களை ஜெயிக்க பூமி பூஜை போட நல்ல நாள் குறித்து தர கேட்டப்போது அருமையான நாளை குறித்து கொடுத்தான்.
அதன் படி யுத்த நாள் பூஜை நடந்தால் கௌரவர்கள் வெற்றி உறுதி ஆயிற்று. 

அதை அறிந்த தர்மர் கேட்டாராம். ஏன் சகாதேவா அப்படி ஒரு நல்ல  நாளை குறித்து கொடுத்தாய் அவன் நம் எதிரி அல்லவா என கேட்க? சகாதேவன் சொன்னாராம். உண்மையை சொல்லுவது ஜோதிட தொழில் தர்மம் அதனால் எதிரியே கேட்டாலும் சரியானதை மட்டுமே குறித்து கொடுப்பேன் என்றாராம். ஜோதிடம் என்பது உண்மைகளை மட்டுமே சொல்லுவது தவறாக வழிகாட்டுவதல்ல. உடனே தர்மன் பகவான் கிருஷ்ணனை சரணடைய பகவான் கிருஷ்ணன் சகாதேவன் குறித்து கொடுத்த அந்த அமாவாசை நாளுக்கு முதல் நாளே அமாவாசை தர்ப்பணம் செய்ய தன் செய்கையால் குழம்பிய சூரியனையும், சந்திரனையும் ஒருவருக்கு ஒருவர் நேரே பார்க்க வைத்து கௌரவர்களை குழப்பி விட்டு அமாவாசை இல்லா நாளில் பூஜையை போட வைத்து வெற்றியை பாண்டவர்கள் பக்கம் திருப்பினாராம்.

நண்பர்களே, அன்பர்களே பகவான் நினைத்தால் யார் வாழ்விலும் எத்தகைய நிலையிலும் எப்படிப்பட்ட மாற்றமும் நடக்கும். நமக்கு தேவை பகவான் மேல் முழு நம்பிக்கையும் உண்மையான பக்தியுமே. தினமும் அவர்கள் வீட்டில் உள்ள பூஜை அறையில் காலை, மாலை என இரு வேளையிலும் நல்லெண்ணை விளக்கேற்றுங்கள்.

முக்கியமாக உங்கள் குடும்ப குல தெய்வத்தை தினமும் வணங்குங்கள்.

ப்ரபந்தம், திருப்பாவை என எது தெரியுமோ அதில் குறைந்தது நாலு பாசுரங்கள் சொல்லுங்கள். இல்லை உங்களுக்கு பிடித்த தேவாரம் திருவாசகம் என சொல்லுங்கள். குழந்தைகளை பகவத் நாமாக்களை சொல்ல சொல்லுங்கள். ஆத்மார்த்தமாக பகவானை வணங்குங்கள்.
இல்லத்தின் அருகில் உள்ள ஒரு பகவத் கோவிலுக்குச் சென்று அங்கிருக்கும் பகவானை மனமாற வேண்டுங்கள். பிறருக்கு நல்லதை நினையுங்கள், நல்லதையே பேசுங்கள். பகவானை நோக்கி நாம் ஒரு அடி வைத்தால் அவர் நம்மை நோக்கி பத்து அடி எடுத்து வைக்கிறார். எதற்க்கும்  நாம் கவலைப்பட தேவையில்லை. அரிய பிறப்பு மானிடபிறவி. பகவானை வணங்கி அனைத்தும் பெறலாம்.

ஜோசியத்தை நம்புங்கள் ஆனால் பரிகாரம் சொல்லும் எந்த ஜோதிடர்களையும் அல்ல. பகவான் இருக்கிறான் நம்மை காப்பாற்ற நாம் பகவானின் குழந்தைகள். நம்மை கஷ்டப்பட வைத்து அவர் மகிழ்வாரா எனவே யாரும் எதற்க்கும் கலங்கமடைய வேண்டாம். பகவான் கொடுக்க நினைப்பதை எந்த கிரகங்களாலும் அல்லது யாராலும் தடுக்க முடியாது. கொடுக்க நினையாததை எந்த கிரஹங்களாலும் அல்லது யாராலும்  கொடுக்க முடியாது எனவே பரிகாரங்கள் என பணத்தை நேரத்தை வீணாக்காமல் பகவானை மட்டுமே வணங்குங்கள் வெற்றி தானாக வரும்.

ஜெய் ஶ்ரீராம்!

கருத்துகள் இல்லை: