வெள்ளி, 6 டிசம்பர், 2019

முருகம்மையார்

சோழநாட்டில் தற்போது சுவாமிமலை என்றழைக்கப்படும் பகுதியில் இறையன்பு மிக்க தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. முருகப்பெருமானிடம் அன்பு வைத்த அவர்கள், தமிழ் வேளே ! வள்ளி மணாளா ! கந்தப்பெருமானே ! நீ எங்கள் மீது கருணை கொள்ளமாட்டாயா ? எங்களுக்கு செல்வத்தைக் கொடுத்து பயன் என்ன ? மக்கள் செல்வமில்லாதவர் நரகம் எய்துவர் என சாஸ்திரங்கள் சொல்கிறதே ! நாங்கள் உன்னையே நினைந்தும் கூட, நரகத்திற்கு தான் செல்ல வேண்டுமா ? என மனமுருகிப் பிராத்தித்தனர்.கந்தக்கடவுள் அந்த கண்ணீர் பிரார்த்தனைக்கு செவி சாய்த்தான். அன்பு மகளை ஈன்றார் அந்தத்தாய். முருகனின் பெயரையே மகளுக்கும் சூட்டினர். ஆம்.... அவளது பெயர் முருகம்மை.இளமை முதலே பெற்றோரைப் போலவே முருக பக்தியில் திளைத்தார் முருகம்மை. நடந்தால் முருகா, படுத்தால் முருகா, அமர்ந்தால் முருகா, சாப்பிடும் போது முருகா, தந்தையையும் முருகா, தாயையும் முருகா, தோழியரையும் முருகா, விளையாடும்போதும் முருகா, என்றபடி முருகனின் திருநாமத்தை உச்சரித்தபடியே இருப்பார். இதுகண்டு பெற்றோர் அகமகிழ்ந்தனர். வயதுக்கு வந்ததும், இப்பக்தைக்கு ஏற்ற பதி வேண்டுமே என்ற கவலை பெற்றோருக்கு ஏற்பட்டது. குணத்தில் சிறந்த தனஞ்செயன் என்ற வாலிபனுக்கு இவளை மணம் முடித்து வைத்தனர். கணவனின் மனம் கோணாமல், அவன் வைத்த மீதியை பிரசாதமாய்க் கருதி அருந்தி, கற்புநிலை பேணினாள் முருகம்மை. நாத்தனாரிடமும் அன்பு பேணினான்.

மனைவி மீது கணவனும் கொள்ளைப்பிரியம் வைத்திருந்தான். இது மாமியாருக்கும், நாத்தனாருக்கும் பொறுக்கவில்லை. இந்த தனஞ்செயன் அவள் பின்னாலேயே சுற்றுகிறான். அவள் இவனை மயக்கி வைத்திருக்கிறாள். நாளைக்கு, அவள் அவனுடைய எல்லா வருமானத்தையும் சுருட்டிக் கொண்டால், நம் வயிறு காயுமேடி, என தேவையில்லாமல் பொறாமைப்பட்டனர். அவளை பழிதீர்க்கும் நாளுக்காக எதிர்பார்த்திருந்தனர். இதற்கு சில உறவினர்களும் தூபம் போட்டனர். எப்பேர்ப்பட்ட மனிதனையும் கெட்டநேரம் விதியில் சிக்க வைத்துவிடும். இவள் மட்டும் விதிவிலக்கா என்ன ! தனஞ்செயனின் வணிகம் நஷ்டத்தில் ஆழ்ந்தது. மனம் வெறுத்த அவன் வேறுவேலைக்காக வெளிநாடு சென்று விட்டான். போகும்போது முருகன் என்ற வேலைக்காரனை வீட்டுப்பணியில் அமர்ந்தினான். மணாளன் திரும்பும் வரை அவன் நினைவிலேயே இருந்தாள் முருகம்மை. முருகா, முருகா என அவள் அடிக்கடி அழைப்பதைப் பயன்படுத்தி, அவளுக்கும், வேலைக்காரன் முருகனுக்கும் தொடர்பிருப்பதாக கட்டுக்கதை எழுப்பினர். ஊர்திரும்பிய தனஞ்செயனும் அதை நம்பி அவளது கைகளை வெட்டிவிட்டான். முருகா, உன் திருநாமம் சொன்னதற்காக எனக்கு இப்பேர்ப்பட்ட சோதனையைத் தந்தாயே, என அலறித்துடித்தாள். தன் கற்புக்கு விளைந்த களங்கத்தை துடைக்க முருகனே கதியென உண்ணாமல், உறங்காமல் கிடந்தாள். சோதனையை முடித்த முருகப்பெருமான் அவள் முன் வள்ளியுடன் வந்தார். இழந்த கைகளை திரும்பக் கொடுத்து அதிசயம் நிகழ்த்தினார். கணவன், அவளிடம் மன்னிப்பு கேட்டு மன்றாடினான். விதியால் வந்ததை யார் தடுக்க முடியும் என அவள் கணவனைத் தேற்றினாள். மாமியார், நாத்தனாருக்கு எந்த தண்டனையும் தரக்கூடாது என அவள் முருகனிடம் வேண்டிக் கொண்டான். அவளது நல்ல மனதைப் பாராட்டிய முருகன், நீண்டகாலம் பூமியில் வாழச் செய்து, இறுதியில் தன்னுலகில் சேர்த்துக் கொண்டார்.

கருத்துகள் இல்லை: