புதன், 16 அக்டோபர், 2013

புதுவீடுகளில் திருஷ்டி பூசணிக்காய் தொங்கவிடுவதன் நோக்கம் தெரியுமா?

கண்ணேறு கழித்தல் என்பது பண்டைய காலந்தொட்டே கடைபிடிக்கப்படும் மரபு. ஒருவர் நம்மைப் பொறாமையோடு பார்த்தால் நமது மனநிலையும், உடல் நிலையும் பாதிக்கப்படுகிறது என்பதை இன்றைய விஞ்ஞான உலகமும் ஒப்புக் கொண்டிருக்கின்றது. இதனை நம் முன்னோர்கள் திருஷ்டி தோஷம் எனக் குறிப்பிட்டார்கள். இவ்வளவு அழகாக வீடுகட்டி விட்டார்களே என்று பொறாமையுடன் யாராவது பார்த்தால், இந்த திருஷ்டி தோஷம் ஏற்படும். இதனால் நமக்கும் பாதிப்புகள் வராமல் இருக்க பூசணிக்காய் தொங்கவிடுவர். புதுவீட்டை பார்ப்பவர் கண்களில் பூசணிக்காயும் அதில் வரைந்துள்ள வடிவமும் சிறிது நேரம் படும். புதுவீட்டை முழுமையாகப் பார்ப்பதில் இருந்து அவரது கவனம் சிதறும். இதன் காரணமாக திருஷ்டிதோஷம் குறையும் என்றனர்.
உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்!

ஒரு மனிதனுக்கு கடவுளைக் காண வேண்டும் என்று ஆசை அவரை எப்படி சந்திப்பது ? கோவிலுக்குப் போ ! என்றார்கள். உடனே புறப்பட்டான். போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான். அவர் கேட்டார். எங்கே போகிறாய் ? கடவுளைக் காண போகிறேன் ! எங்கே ? கோவிலில் ! அங்கே போய்... ? அவரை வழிபடப் போகிறேன் ! அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ? தெரியாது ! எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி நீ அவரை வழிபட முடியும் ? அப்படியென்றால் ... ? உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காகத்தான் இருக்க முடியும் ! மனிதன் குழம்பிப் போனான். ஞானி தெளிவுபடுத்தினார். ஏ, மனிதனே... நீ செய்யப் போவது உண்மையான வழிபாடு அல்ல. இன்றைக்கு மனிதர்கள் வழிபாடு என்கிற பெயரில் ஆண்டவனிடம் தங்கள் ஆசைகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களது கோரிக்கைகளைக் குரல் மூலம் பட்டியலிட்டுச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தங்களது புகார்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன். நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ? அப்படியானால்... ஆண்டவனை சந்திக்க என்னதான் வழி ? அவரை நீ சந்திக்க முடியாது. உணர முடியும் ! அதற்கு வழி ?

தியானம்.  தியானத்துக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா ? இல்லை ! மனிதன் வியப்போடு நிமிர்ந்தான். அவர் சொன்னார் : தியானம் உன் மனத்தோடு சம்பந்தப்பட்டது. அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும், அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில், கடவுள் இருப்பதை நீ உணரத் தொடங்குவாய். உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும். தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும். அந்த மனிதனும் ஞானியும் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே, வெளிநாட்டுக்காரர் ஒருவர் அங்கே வந்தார். ஞானியின் முன்னால் வந்து பணிபோடு நின்றார். தன்னுடைய தேவையைச் சொன்னார். நான் விரும்புவது அமைதி ஞானி சொன்னார். முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு. மூன்றாவது வார்த்தையை நெருங்கலாம் எனக் கூற வந்தவர் யோசித்தார். நான் என்கிற அகங்காரத்தை விலக்குங்கள். நான், என்னுடையது என்கிற ஆசைகளை விலக்குங்கள். அமைதி என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள். வெளிநாட்டுக்காரருக்கு விளக்கம் கிடைத்தது. மனநிறைவோடு திரும்பிச் சென்றார். கொஞ்ச அந்த அளவுக்கு வேறே யாருக்கும் கிடைச்சிருக்காது!

ஸ்பெஷல் தரிசனம் ! 50 ரூபாய் டிக்கெட் ! சுவாமிக்கு நெருக்கமா போய் சந்நிதியிலே கொஞ்சநேரம் உட்கார முடிஞ்சிது ! அவன் முகத்திலே கடவுளை நெருங்கிவிட்ட பெருமிதம் ! ஞானி கேட்டார் : அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் ? ஒரு பத்தடி தூரம் இருக்கும் அவ்வளவுதான் ! உன் அளவுக்கு வேற யாரும் நெருங்கலையா ? இல்லை ! அந்த வகையில் பார்த்தால் உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமானவர் வேறொருவர் உண்டு ! யார் அவர் ? அங்கே இருக்கிற அர்ச்சகர் ! வந்தவன் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம். சரி சுவாமி, நான் வர்றேன் ! சோர்வோடு நடந்து போனான். அதன் பிறகும் விவாதம் தொடர்ந்தது. இறுதியில் மனிதன் எழுந்தான். திரும்பி நடந்தான். ஞானி கேட்டார். எங்கே போகிறாய் ? வீட்டுக்கு ! கோவிலுக்குப் போகவில்லையா ? இல்லை ! அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ? ஆண்டவனை உணர்ந்தபிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதைப் புரிந்து கொண்டேன். நான், என்னிடம் இருந்து விலகினால் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையை தெரிந்து கொண்டேன். ஞானி கைகளை உயர்த்தினார். ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல, விலகுவது ! எவ்வளவு தூரம் நம்மிடமிருந்து விலகியிருக்கிறீர்களோ, அவ்வளவு தூரம் கடவுளை நெருங்கியிருக்கிறீர்கள் என்பது பொருள் !
புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்!

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்

இந்தப் பழமொழியின் உண்மையான விளக்கத்தை வாரியார் அவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்தர் சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் என்று கூறுகிறார்.

பெண் புத்தி பின் புத்தி

நெற்றிக்கண் எனும் ஞானக்கண், முதன்முதலில் பார்வதிதேவிக்குத்தான் இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. பார்வதிதேவி சிவபெருமானுடன் சேர்ந்தபோது, தன் ஞானம் எனும் மூன்றாம் கண்ணை சிவபெருமானுக்குக் கொடுத்துவிட்டார் என்றும், சிவபெருமான் பார்வதிதேவியின் நெற்றிக் கண்ணை நினைவுகூரும் வகையில் செந்நிறத் திலகமிட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாகவே இன்றும் திருமணங்களில் மணப்பெண்ணுக்கு நெற்றியில் திலகம் இடப்படுகின்றது. அப்படி திலகம் பார்வதிதேவியின் நெற்றியில் இடப்படுவதற்கு முன், சிவபெருமான் தன்னை முழுமையாக பார்வதிதேவியின் கையில் கொடுத்துவிட்டார். இதை நினைவுகூறும் வகையில் இன்றும் திருமணங்களில் பெண்ணின் கையில் முக்கண்ணுடைய தேங்காய் கொடுக்கப்பட்டு திலகம் இடப்படுகின்றது. ஞானத்தை புத்தி என்றும் கூறுவர். ஞானமாகிய புத்தியை சிவபெருமானுக்கு  பார்வதிதேவி தன் மூன்றாம் கண்ணாக அன்பின் வழியாகக் கொடுத்து, அவரின் பின்னால் சக்தியாகத் தாங்கி நிற்கின்றாள். அக்னி எனும் ஞானத்தை சிவபெருமானுக்குக் கொடுத்து அவரின் பின்னால் இருந்து புத்தியாக - சக்தியாக இருந்து செயல்படுகின்றார். இதுவே பெண்புத்தி பின்புத்தி என்று சொல்லப்படுகின்றது, பெண் சகோதரியாக இருந்தாலும் மனைவியாக இருந்தாலும், சக்தியைக் கொடுத்துப் பாதுகாக்கின்றாள்.  பெண் எனும் சகோதரி, முருகன் கை வேல் போன்று காப்பவள், மனைவி எனும் பெண் ஆனந்தம், கருணை, அன்பு எனும் நித்யானந்த நிலைக்கு நம்மை வழி நடத்துபவள்.

ஆதாயம் இல்லாத செட்டி ஆற்றோடு போவானா?

பொதுவாக நகரத்தார் சிக்கனவாதிகள் என்று சொல்லப்படுவதுண்டு. பெரும்பாலும் வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் இவர்கள் தான் தான தர்மத்திலும் சிறந்து விளங்குகிறார்கள். இன்றைக்கு இருக்கும் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளைகளில் கணிசமானவை நகரத்தார்களின் நன்கொடையில் விளைந்தது. அந்தக் காலத்திலிருந்தே பல வகையான தான, தர்மங்கள் செய்து வந்தனர் நகரத்தார்கள். தானங்களில் சிறந்தது பசு தானம். எந்த ஒரு மங்கல நிகழ்ச்சி நடந்தாலும், பசுவைத் தானம் கொடுப்பது தலையாய தானமாய்க் கருதப்படுகிறது. அதற்குக் காரணம் எந்தவித பலனும் எதிர்பாராமல் தன் பாலை மக்களுக்குக் கொடையாக வழங்குவது பசு. அத்தகைய கொடை தரும் பசுவைக் கொடையாகத் தருவது புண்ணியம்தானே!.

ஆ-தானம் அதாவது பசு தானம் செய்வது வழக்கம். நகரத்தார்(செட்டியார்) எவரும் ஆ தானம் செய்யாது போனால், தன் வாழ்வில் செய்யத் தவறினால், அவன் தன் கடமையை ஆற்றாது போகிறான் என்பதாக வந்தது. ஆ தானம் செய்யாத செட்டி ஆற்றாது போகிறான் என்ற நகரத்தாரின் குணத்தைப் போற்றிய உண்மையான பழமொழி நாளடைவில் திரிந்து ஆதாயம் இல்லாத செட்டி ஆற்றோடு போவானா என்று தவறுதலாக பேச்சுவழக்கில் கூறப்பட்டு வருகிறது.

பந்திக்கு முந்து படைக்கு பிந்து

வீரம் விளைந்த பூமி என்று போற்றப்படும் நமது பூமியில் வீரர்களை படைக்கு பிந்து என்று கூறியிருக்க மாட்டார்கள். பந்தி (விருந்தினர்கள்) என்று வந்தால், அவர்களுக்கு முந்திக் கொண்டு உணவு பரிமாற வேண்டும். விருந்து படைக்கிறவர்கள், விருந்தினர்கள் சாப்பிட்ட பின்பே (பிந்து) சாப்பிட வேண்டும் என்பதே இதன் உண்மையான அர்த்தம். இதுவே பேச்சுவழக்கில் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்று மாறிவிட்டது.

குருவிக்குத் தக்கன ராமேஸ்வரம்

நம்முடைய தகுதிக்கும், வசதிக்கும் தகுந்தது தான் கிடைக்கும் என்ற அர்த்தத்தில் இந்த பழமொழி உபயோகப்படுத்தப்படுகிறது. அதென்ன குருவிக்கு தக்கன ராமேஸ்வரம், குருவிக்கும் ராமேஸ்வரத்துக்கும் என்ன சம்பந்தம். குறி வைக்கத் தப்பாது ராமசரம் என்பதே உண்மையான பழமொழி. ராமனின் அம்பு (ராமசரம்) குறி வைத்துவிட்டால் தப்பாது இலக்கை அடையும் என்பதே இதன் அர்த்தம். இதுவே நாளடைவில் பேச்சுவழக்கில் குருவிக்கு தக்கன ராமேஸ்வரம் என்று கூறப்படுகிறது.

சோழியன் குடுமி சும்மா ஆடாது!

சோழியன் என்பது பிராமண குலத்தில் ஒரு பிரிவு. பொதுவாக பிராமணர்கள் தலைக்குப் பின்பக்கம் அடர்த்தியாக குடுமி வைத்திருப்பர். ஆனால் சோழியன் பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டும் மலையாள நம்பூதிரிகளைப் போல தலையின் முன்பக்கத்தில் முடியும் வண்ணம் முன் குடுமி வைத்திருப்பார்கள். சோழியர்களின் குடுமி தலையின் முன்பக்கத்திலேயே அடர்த்தியாக முடியப்பட்டாலும் அது சும்மாட்டுக்கு இணையாக ஆக முடியாது. அதாவது சும்மாடு என்பது சுமை தூக்குபவர்கள் தலையில் துணியைச் சுருட்டி வசதிக்காக வைத்துக் கொள்வது. முன்குடுமி எவ்வளவு கட்டையாக இருந்தாலும் சும்மாடாகாது. அவர்களும் சுமை தூக்கும் போது சும்மாடு வைக்கத்தான் வேண்டும். சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்பது தான் உண்மையான பழமொழி. இதுவே தற்போது சோழியன் குடுமி சும்மா ஆடாது என உச்சரிக்கப்படுகிறது.

பசி வந்திட பத்தும் பறந்து போகும்

அறிவுடைமை, இன்சொல், ஈகை, தவம், காதல், தானம், தொழில், கல்வி, குலப்பெருமை, மானம் ஆகிய பத்து குணங்களும் பசி என்று வந்து விட்டால் பறந்து போகும் என்பது உண்மை. இந்தப் பத்தும் இளகியிருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்பது மற்றொரு பழமொழி. அதை சித்த வைத்தியர்கள் பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என மிளகின் பெருமைகளை விளக்கும் சொல்லாக மாற்றி விட்டனர்.

கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயைக் கண்டால் கல்லைக் காணோம்

பைரவரின் வாகனமாக நாயைப் பார்க்கும் போது, அதை இறைவனின் அம்சமாக நினைத்து வணங்க வேண்டும். நாயின் வடிவத்தில் இருக்கும் கற்சிலையை பார்க்கும் போது அதை நாய் என்று நினைத்தால் நாயாகவும், வெறும் கல் என்று நினைத்தால் கல்லாகவே தெரியும். ஒரு பொருளின் அல்லது ஒரு விஷயத்தின் அழகும் பெருமையும் காண்பவர்களின் பார்வையைப் பொருத்தே உள்ளது என்பதே இதன் உண்மையான அர்த்தம். ஆனால் இப்போது நாயைக் கண்டால் கல்லைக் கொண்டு எறிய வேண்டும் என்பது போல் இந்தப் பழமொழி அமைந்து விட்டது.

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்!

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் தென்னைக்குத் தானே நெறி கட்ட வேண்டும்? பனைமரத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என யோசிக்கிறீர்களா. இந்தப் பழமொழியை அப்படியே படித்தால் அர்த்தம் சரியாக இருக்காது. எங்கோ ஒரு செயல் நடந்தால், அதன் விளைவு வேறு எங்கோ தெரியும் என்றுதான் நமக்குப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இதன் உள்ளர்த்தம் வேறு. தென்னை மரத்தில் ஏறுபவர்கள் பூச்சிக்கடிகளால் பாதிப்பு வராமலிருக்க ஒருவிதமான எண்ணெய் அல்லது சாந்தை உடலில் பூசிக்கொண்டு மரமேறுவார்கள். அப்படி ஏறும்போது மரத்தில் இருக்கும் தேள் கொட்டினால், அவர்களுக்கு அந்த எண்ணெயின் மருத்துவ குணத்தால் வலி தெரியாது! ஆனால் தேளின் விஷம் தோலினுள் ஊடுருவி இருந்தால், சிறிது நேரத்துக்குப் பிறகு கொட்டிய இடத்தில் நெறிகட்டிக் கொள்ளும். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மற்றொரு மரத்தில் ஏறும்போது தான் அதன் உண்மையான வலி தெரியும். அதன் பின் மருத்துவ சிகிச்சை எடுப்பர். தென்னை மரத்தில் ஏறும் போது தேள் கொட்டினால் பனை மரத்தில் ஏறும் போது நெறிகட்டும் என்ற உண்மையான பழமொழியே இப்போது தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டும் என்று கூறப்படுகிறது.

ஆறிலும் சாவு; நூறிலும் சாவு

மகாபாரதத்தில் கர்ணன் ஐந்து பாண்டவர்களோடு ஆறாவதாகப் பிறந்திருந்தாலும் அவனுக்கு சாவு தான்; நூறு கௌரவர்களோடு இருந்திருந்தாலும் கர்ணனுக்கு சாவு தான்; எனவே சாவு என்பது நாம் நிச்சயிக்க முடியாத ஒன்று. விதிப்படியே நடக்கும். இதைத் தான் ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்று முன்னோர்கள் கூறுகிறார்கள்.

கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்

இந்தப் பழமொழியைப் படிக்கும் போது ஒரு பெண் தன் கணவனை கல்லுக்கும், புல்லுக்கும் ஒப்பிடுவது போல் உள்ளது. ஆனால் கள்வன் ஆனாலும் கணவன்; புலையன் (தீயவன்) ஆனாலும் புருஷன் என்பதுதான் உண்மையான பழமொழி. தனக்கு வாய்த்த கணவன், தீயபழக்கங்கள் மற்றும் தீயசேர்க்கையினால் கள்வனாகவும், தீயவனாகவும் இருந்தாலும் அவனை ஒதுக்கிவிடாமல் தன் அன்பினால் அவனைத் திருத்த வேண்டும் என்று அறிவுரை கூறுவதே இந்தப் பழமொழி. பெண்ணுக்கு பெருமை சேர்ப்பது போல் உள்ள இந்தப் பழமொழியே நாளடைவில் இப்படி மாறிவிட்டது.

மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்

ஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால், அதை மாமியார் பெரிதுபடுத்திவிடுகிறார் என்பது தான் இதன் அர்த்தம். ஆனால் மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம்-மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம் என்பது தான் உண்மையான பழமொழி. விவசாயிகள் வீட்டில் ஆண், பெண், குழந்தைகள் என அத்தனை பேரும் தங்கள் விளைநிலத்தில் உழைக்கின்றனர். இதில் ஆணுக்கு இணையாக பெண்கள் ஈடுபடும் போது வெளிமனிதர்களுக்குக் கொடுக்கும் கூலி மிச்சமாகிறது. அதோடு ஒற்றுமையின் விளைவாக உழைப்பினவ பலன் பெருகுகிறது. மாமியார் தங்கள் குடும்ப நிலத்தில் உழைத்தால், அது மண்ணுக்கு உரம். அதாவது அந்த வீட்டுத் தலைவனின் கரங்களைப் பலப்படுத்துவதின் மூலம் அவர்கள் சொந்த மண்ணுக்கு உரமாகும். வீட்டுக்கு வந்த மருமகளும் சேர்ந்து உழைத்தால் மண் பொன்னாகும். பொன்னுக்கே உரம் என்றார்கள். இவ்வளவு அருமையான கருத்துடைய பழமொழியே நாளடைவில் மாமியார்களைப் பற்றி ஒரு தவறான கருத்தைக் கூறுவது போல் அமைந்து விட்டது.

அடி உதவுகிறார் போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்

இங்கு அடி என்பது நிலத்தடியைக் குறிக்கிறது. அந்தக் காலத்தில் பொதுவாக மாதம் மும்மாரி பொழிந்த காலம். ஆறு, குளம், ஏரி என்று எப்போதும் நிறைந்திருக்கும். உறவுகள் உன்னைக் காப்பாற்றுவார்கள் என்று நம்பி சோம்பலாக இருக்காதே! நிலத்தை நம்பு, உன் உழைப்பை நம்பு என்பதை விளக்கும் இந்தப் பழமொழியே இப்போது தலைகீழாக மாறி விட்டது.
பரதனுக்கு இராமர் சொன்ன அழியா உண்மைகள்!

அயோத்திக்குத் திரும்பி ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று ராமரை பரதன் மீண்டும் மீண்டும் வற்புறுத்துகிறான். அவனுக்கு ராமர் சில அழகான கருத்துக்களைக் கூறுகிறார். ராமகீதை என்று அழைக்கப்படும் இக் கருத்துகள் வருமாறு:

ஈஸ்வரனுக்கு உள்ள சுதந்திரம் இந்த ஜீவனுக்குக் கிடையாது. ஆகவே இங்கு யாரும் அவர்கள் இஷ்டப்படி நடக்க முடியாது. காலம் மனிதனை அங்கும் இங்கும் இழுத்துச் செல்லுகிறது. சேர்த்து வைக்கப்படும் பொருளுக்கு முடிவு அழிவுதான். லௌகிக உன்னதத்தின் முடிவு வீழ்ச்சிதான். கூடுவதின் முடிவு பிரிவு தான். எப்படி பழுத்த பழம் கீழே விழுந்துதான் ஆக வேண்டுமோ, அதேமாதிரி, பிறந்த மனிதன் இறந்துதான் ஆகவேண்டும். மூப்பு, மரணம் இவற்றுக்கு உட்பட்டு அழிந்துதான் ஆக வேண்டும். கழிந்த இரவு திரும்ப வராது. யமுனை நீர் கடலை நோக்கிச் செல்லும், ஆனால் திரும்பாது. பகலும், இரவும் மாறி மாறி கழிகின்றன. கூடவே மனிதனுடைய ஆயுள் வேகமாக அழிந்து கொண்டிருக்கிறது. மரணம் எப்பொழுதும் மனிதன் கூடவே இருக்கிறது. மனிதன் கூடவே செல்கிறது. சூரியோதயத்தைக் கண்டு மனிதன் மகிழ்கிறான். ஆனால் ஒவ்வொரு சூரியோதயத்தோடும் தன் ஆயுள் கழிந்து கொண்டிருக்கிறது என்பதை மறக்கிறான்.  கடலில் மிதக்கும் இரண்டு கட்டைகள் ஒன்றோடொன்று சிறிது காலம் சேர்ந்து இருக்கின்றன. பிறகு பிரிந்து ஒவ்வொன்றும் ஒரு பக்கம் செல்கிறது. அதே மாதிரி மனிதனோடு, மனைவி, மக்கள், குடும்பம், பணம் எல்லாம் சேர்கின்றன. பிறகு பிரிந்து விடுகின்றன. அதனால் நாமெல்லோரும் நம் ஆத்மாவின் நன்மையைக் கோர வேண்டும். அதற்கு எப்பொழுதும் தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
பூஜையின் போது என்ன உடை அணிய வேண்டும்?

நாம் நம்முடைய பல்வேறு ஆசைகள் ஈடேறுவதற்கு இறைவனைத் தொழுகிறோம். இதை நாம் தூய மனமும், சுத்தமான உடலும், உண்மையான வாக்கும் கொண்டு செய்யவேண்டும். உடம்பைப் பொறுத்தவரை, தூய்மையை அடைய நன்கு அழுக்கு நீங்கத் தேய்த்துக் குளித்தால் போதும். சாதாரணமாக நீரில் மூழ்கிக் குளித்தாலோ, எண்ணெய் தேய்த்துக் குளித்தாலோ, இந்தத் தூய்மையை உடல் பெற்றுவிடும். இந்த நீராடுதல் நைமித்திக ஸ்நானம், காம்ய ஸ்நானம், நித்ய ஸ்நானம் என்று மூன்று விதமாக அமையலாம். நதியில் மூழ்கி நீராடும் போது, நமது மனத்தில் வேண்டிக் கொண்டது நிறைவேற, இத்தனை தடவைகள் மூழ்கி எழுந்திருக்க வேண்டும் என்ற நியதி உண்டு. இதை வேண்டிக்கொண்டபடி உரிய அளவில் செய்து முடிக்க வேண்டும். இது காம்ய ஸ்நானம். நைமித்திக ஸ்நானம் என்பது குடும்பத்தில் நெருங்கிய உறவினர் இறந்துவிடும்போது செய்யும் ஸ்நானம். இது வீட்டிலும், உடம்பிலும் உள்ள கிருமிகளின் பாதிப்பு, நீங்க செய்யப்படுவதாகும். சூரிய அல்லது சந்திர கிரகண காலங்களிலும் பீடை நீங்க இவ்வாறு செய்வதுண்டு. நித்ய ஸ்நானம் என்பது அன்றாடம் நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ள நீரில் மூழ்கிச் செய்வதாகும். இதைக் குளம் குட்டைகளிலும் பீடை நீங்க இவ்வாறு செய்வதுண்டு.

நித்ய ஸ்நானம் என்பது தூய்மைப்படுத்திக் கொள்ள நீரில் மூழ்கிச் செய்வதாகும். இதைக் குளம் குட்டைகளிலோ, கிணற்றிலோ, நீரைப் பயன்படுத்திச் செய்து முடிக்கலாம். இதில் ஓடும் நதியில் நீரில் ஸ்நானம் செய்வது சிலாக்கியமானது. குட்டையில் நீராடுவது அடுத்த ரகம். கடைசி ரகத்தைச் சேர்ந்தது கிணற்றில் நீராடுவது. சில சமயம் உடம்பு முழுவதும் விபூதி பூசிக்கொண்டு ஸ்நானம் செய்த உணர்வை பெறுவது உண்டு. இதற்கு விபூதி ஸ்நானம், பஸ்ம ஸ்நானம் என்ற பெயர்களும் உண்டு. உடல் நலம் சரியாக இல்லாத நிலையில் இதைச் செய்யலாம். தூய்மை பெற, ஆண்கள் தலைமுடி நனைய மூழ்கி ஸ்நானம் செய்வதுதான் உத்தமம். பெண்கள் கழுத்துக்குக் கீழே ஸ்நானம் செய்தால் போதுமானது.  ஸ்நானம் செய்யும் போது கடவுளை நினைத்துக் கொண்டு கங்கை, யமுனா, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி ஆகிய புண்ணிய நதிகளை நினைவு கூர்ந்து நீராட வேண்டும். இதனால் உடலும் புனிதம் அடையும் புண்ணியமும் கிடைக்கும். இவ்வாறு ஸ்நானம் செய்தபிறகு கடவுளை வணங்கிப் பிரார்த்தனை செய்ய,  தூய்மையான உள்ளம் தேவை. அத்துடன் உடல்மீது அணிந்த உடையும், தூய்மையாக இருக்க வேண்டும். பூஜை செய்யும்போது ஈரத்துணியை உடுத்தி இருப்பது தவறானதாகும். உடுத்த உடை காய்ந்து உலர்ந்து இருக்க வேண்டும். பூஜை செய்யும் நேரத்தில், அன்று நனைத்து உலர்த்தி, காயவைத்த உடையை அறிவதே சிறப்பு. முந்தைய நாள் இவ்வாறு உலர்த்திக் காயவைத்த உடைகள் இரண்டாம் பட்சமானதுதான். மழையினால் காற்றில் சிலசமயம் துணிகள் உலருவது சிரமமாக இருக்கும். அப்போது துணியை ஏழு தடவைகள் நன்கு உதறிவிட்டால் காயவைத்ததற்குச் சமானம் ஆகும்.

முதல்நாள் உலர்த்திக் காயவைத்த உடைகளைக் கையில் எடுத்துக் கொண்டுபோய் குளியல் அறையில் வைத்துக்கொண்டு, பின் ஸ்நானம் செய்தபின் உடுத்திக் கொள்கிறார்கள். இவற்றைத் தூய்மையான மடி வஸ்திரத்துக்கு ஒப்பிட முடியாது. வர்ண உடைகளை பூஜை செய்யும் போது அணியக் கூடாது. வேஷ்டியின் இரண்டு முனைகளையும் சேர்த்துத் தைத்த கைலி போன்றவற்றையும் வஸ்திரமாக அணியக் கூடாது. புண்ணியதினங்களிலும் பண்டிகை நாட்களிலும் பட்டு வஸ்திரம் அணியலாம். பூஜாவஸ்திரம் அணிவதும் ஒன்றல்ல. பூஜைக்கேற்ப உரிய முறையில் அது பாங்காக அமைவது தான் உத்தமம். நாம் பூஜை செய்யும்போதும், கோயிலுக்குச் செல்லும்போதும் முறையான உடைகளை அறிந்து செல்ல வேண்டும். அது நம்முடைய பண்பாட்டை எடுத்துக் காட்டுவதாக இருக்க வேண்டும். இது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும். பூஜை அல்லது பிரார்த்தனையில் ஈடுபடும்போது கடவுளைப் பற்றிய சிந்தனையின்றி வேறு எதுவுமே மனத்தில் இருக்கக் கூடாது. இதற்கு மனத்தூய்மை மிகவும் முக்கியம். எந்த காரியத்தை எடுத்துக் கொண்டாலும் வெற்றி அடைவதற்கு உள்ளத் தூய்மை மிகவும் அவசியமானது, கோபம், வெறுப்பு, கர்வம், பொறாமை ஆகிய உணர்வுகளுடன் பூஜையை மேற்கொண்டால், நாம் செய்வது பயனற்றதாக ஆகிவிடும். மனம் அமைதியாகவும், கட்டுப்பாடுடனும், நல்ல எண்ணங்களுடன் அமைவது மிக முக்கியம் எந்தக் காரியத்தை மேற்கொண்டாலும், அதில் வெற்றி கிடைக்க இவை முக்கியம். பூஜையைப் பொறுத்தவரை இது மிகவும் அவசியம். பூஜைக்கு அமரும்போது உள்ளம் அமைதியாக இருக்க வேண்டும். மற்ற விஷயங்கள் அப்போது நினைவில் வரவே கூடாது. பூஜை முடியும்வரையில் இவ்வாறு நிச்சலனமான மனத்துடன் ஆழ்ந்து ஈடுபடவேண்டும். பூஜையின் போதோ, பிரார்த்தனையின் போதோ கடிகாரத்தைப் பார்த்து நேரத்தைக் கணக்கிடவே கூடாது. இது அபசாரம் ஆகும். வீட்டில் பூஜையில் ஈடுபடும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மட்டுமன்றி, ஆலயங்களில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கும் இது மிகமுக்கியம். பகவானின் அருகில் இருக்கும்போது அதற்கு அருகதை உள்ளவர்களாக நம்மை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
அகத்தியரின் வரலாறு கூறும் அறிவியல் உண்மை!

படித்தவர், பாமரர் அனைவரும் அகத்தியரை அறிவார்கள். ஆறுவகைச் சமயத்தினரும் அகத்தியரைப் போற்றுகின்றனர். குடுவையில் பிறந்தது, தென்புலம் தாழ்ந்த பொழுது பூமியைச் சமன் செய்தது, பார்வதி திருமணத்தைப் பொதிகையில் கண்டது, காவிரி கொணர்ந்தது போன்ற அகத்தியர் தொடர்பான வரலாறுகள் அனைத்திலும் அறிவியல் கூறுகள் பொதிந்துள்ளன.

சோதனைக்குழாய் குழந்தை

உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை அகத்தியர்தான் ! குடுவையில் கருத்தரித்து, வளர்ந்து வெளிப்பட்டதால் அவரை, கலயத்தில் பிறந்தோன் (கும்பசம்பவர்) என்றும், குடமுனி என்றும் கூறுவர். உயிர்கள் தாயின் கருப்பைக்கு வெளியே கருத்தரித்து வளர இயலும் என்ற அறிவியல் உண்மை, அகத்தியரின் பிறப்பிலேயே பொதிந்துள்ளது. அவ்வாறு, செயற்கை முறையில் உருவாக்கப்படும் உயிரினங்கள், தொடக்க நிலையில் இயல்புக்கு மாறான உருவத்தைப் பெற்றிருக்கும் என்பதும், இயல்பான வளர்ச்சி, மேம்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகே சாத்தியமாகும் என்பதும் அறிவியல் உண்மை. முதல் சோதனைக் குழாய் குழந்தையாகிய அகத்தியர் இயல்புக்குக் குறைவானே உயரமே பெற்றிருந்தார் என்பது இந்த உண்மையை நிரூபிக்கிறது.

தொலைக்காட்சி பார்த்தவர்

முதன்முதலில் தொலைக்காட்சி பார்த்தவரும் அகத்தியரே ! பார்வதி - பரமசிவன் திருமணத்தைக் காண அனைவரும் இமயத்தில் கூடியதால் வடபுலம் தாழ்ந்தது. அதனைச் சமன்செய்ய, சிவபெருமான், அகத்தியரை தென்னாட்டிற்கு அனுப்பினார். அனைவரும் காணப்போகும் தங்கள் திருமண நிகழ்ச்சிகளை அடியேன் மட்டும் பார்க்க முடியாமல் போகுமே ? என்று வினவினார். அகத்தியர், இமயத்தில் நடைபெறும் எமது திருமண நிகழ்வுகளை உமக்குப் பொதிகையில் காட்டியருள்வோம் என்றார் ஈசன். அவ்வாறே, அகத்தியர் பார்வதி - பரமசிவன் திருமணக் காட்சியைப் பொதிகையில் கண்டு களித்தார். ஓரிடத்தில் நிகழும் நிகழ்ச்சியைப் பிறிதோர் இடத்தில் காணக்கூடிய சிந்திக்கத் தூண்டும் அறிவியல் கூறு இதில் அமைந்துள்ளது. அகத்தியர் கண்டது நேரடி ஒளிபரப்பு ! (லைவ் டெலிகாஸ்ட்). ஈசன் திருமணம் நடந்து பலநாட்கள் கழித்து அதனை மீண்டும் காண விரும்பினார். திருமால் ! சீர்காழியை அடுத்த ஒரு தலத்தில் சிவ பெருமான், திருமாலுக்குத் தனது திருமணக் கோலத்தை மீண்டும் காட்டியருளினான் ! திருமணத் திருக்கோலம் காட்டிய அந்தத் தலமே, திருக்கோலக்கா என்று பெயர் பெற்றது. இது பதிவு செய்த மறுஒளிபரப்பு!.

அணுவுருவில் நதிகள்

அகத்தியர் தென்னாட்டிற்குப் புறப்பட்டபொழுது, காவிரியை, அணுவுருவாக்கிக் கமண்டலத்தில் அடைத்து எடுத்து வந்தார் என்பது வரலாறு. மனிதன் தண்ணீர் இல்லாத வேறு கோள்களில் குடியேறும் காலத்தில், தண்ணீரை அணுவுருவாக்கி எடுத்துச் சென்று அங்கு, மீண்டும் தண்ணீரை உற்பத்தி செய்துகொள்ள வேண்டியிருக்கும் என்பது நவீன அறிவியல். நானோ - டெக்னாலஜி என்னும் தற்போதைய மூலக்கூறு தொழில் நுட்பத்திற்கு, இந்த சம்பவம் புராண ஆதாரம்.

எதையெடுத்தாலும் தடங்கலா? இதற்கும் இருக்கு பரிகாரம்!

சிலருக்கு வாழ்வில் எதைச் செய்ய முயன்றாலும் ஏதாவது ஒருவிதத்தில் தடங்கல் உண்டாகும். அப்படி செய்து முடித்தாலும் அதை அனுபவிக்கும் பாக்கியம் கிடைப்பது இல்லை. இவ்வாறு காரியத்தடங்கல் ஏற்படுவதற்கு முற்பிறவியில் செய்த பாவங்களே காரணம். இவர்களை யோகக்கட்டைகள் என்று கேலி செய்வார்கள். முற்பிறவியில் நல்வினைப்பயன் இருக்குமானால், இப்பிறவியில் செய்யும் எல்லாச் செயல்களும் வெற்றியைத் தரும். அதுவே எதிர் மறையான செயல்களை சம்பந்தப் பட்டவர்களோ அல்லது அவர்களின் முன்னோரோ செய்திருந்தால், தடங்கல் ஏற்பட்டு விடும். இதை ஒரு எளிய ஸ்லோகத்தின் மூலம் சரி செய்யலாம். ராமாயணத்தை இந்தியில் ராமசரிதமானஸ் துளசிதாசர் எழுதியுள்ளார். அதில் பாலகாண்டத்தில் வரும்,

பந்தௌ நாம ராம் ரகுபர் கோ!
ஹேது க்ருஸானு பானு ஹிமகர் கோ!!
பிதி ஹரி ஹர்மய பேத் ப்ரான் ஸோ!
அகுண அனூபம் குண நிதான் ஸோ!!
என்ற ஸ்லோகம் இந்த தடங்கலை சீர்செய்யும். இதைச் சொல்ல முடியாதவர்கள் பொருளைச் சொல்லலாம். ரகுநாதா! உன் நாமத்தை வணங்குகிறேன். அக்னி, சூரியன், சந்திரன் எல்லாமே அந்நாமத்தில் அடங்கி உள்ளன. ராமநாமத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்தியின் அம்சங்களும் உள்ளன. வேதத்தின் உயிர்நாடியும், நிர்குணமானவனும், நற்குணங்களின் இருப்பிடமாகவும் இருக்கும் ராமநாமத்தை போற்றுகின்றேன்  இந்த ஸ்லோகத்தைச் சொல்ல எவ்வித விரதமும் இருக்க வேண்டியதில்லை. நேரம் காலமும் இல்லை. தினம் 3 முறை தொடர்ந்து ஜெபித்து வருவோருக்கு முன்வினைப் பாவம் நீங்கி அனுகூலம் உண்டாகும்.
ஏழையாய் பிறக்க காரணம் என்ன?

சிலர் பணக்காரர்களாகவும் பலர் வறுமையில் வாடுவதுமே உலகில் நாம் காணும் உண்மை. இந்த நிலை ஏன் ஏற்படுகிறது என்பதற்கு சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று பதில் சொல்கிறது. அக்ஷர-த்வய-மப்யஸ்தம் நாஸ்தி நாஸ்தி யத் புரா! ததவே தேஹி தேஹீதி விபரீத-முபஸ்திதம்!! என்ற ஸ்லோகத்தில் நாஸ்தி நாஸ்தி என்றால் இல்லை இல்லை என்று பொருள். தேஹி தேஹி என்றால் கொடு கொடு என்று பொருள். யாரொருவன் முற்பிறவியில் இல்லை இல்லை என்று தன்னிடம் பிச்சை கேட்டவனை விரட்டினானோ, அவன்  இப்பிறவியில் கொடு கொடு என்று பிச்சை கேட்பவனாக பிறக்கிறான். அதற்காக, கையை நீட்டும் சோம்பேறிக்கெல்லாம் பிச்சை போடக்கூடாது. உண்மையிலேயே முடியாதவர்களுக்கு, ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு, ஏழைக்குழந்தைகளின் படிப்புக்கு உதவுவதே நிஜமான பிச்சை. திருமால் கூட பிச்சையெடுக்கப் போகிறோமே என எண்ணி மகாபலி முன் உடலை குறுக்கிக்கொண்டு வந்தார். ஏனெனில், பிச்சை எடுப்பதைக் கேவலம் என்றும் சாஸ்திரம் கூறுகிறது. எனவே நிஜமான ஏழைகளுக்கு தானம் கொடுத்து அடுத்த பிறவியிலாவது பணத்தை வாரிக் குவிப்பவராகப் பிறக்க வழி செய்து கொள்ளலாம்.
கோயில்களில் பாக்கெட் பாலால் அபிஷேகம் செய்வது சரியா?

ஆயிரம் வருஷங்களுக்கு முன், ஐந்நூறு வருஷங்களுக்கு முன், நூறு வருஷங்களுக்கு முன், ஐம்பது வருஷங்களுக்கு முன் என்று காலப்போக்கில் நமது வாழ்க்கை முறையில் எத்தனையோ மாறுபாடுகளைச் சந்தித்துக் கொண்டே வந்திருக்கிறோம். அவற்றை எல்லாம் தேவையோ, இல்லையா என்று சிந்திக்காமலேயே ஏற்றுக் கொண்டிருக்கிறோம். பொட்டணப் (பாக்கெட்) பால் என்பது கிராமங்களில் வராது. நகரங்களில்தான் வரும். நகரங்களில் பொட்டணப் பாலை அன்றாட வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டு விட்டோம் என்பதால், தப்பி எதுவும் வராது. இதுவே கிராமம் என்றால், வீட்டில் மாட்டையும் வைத்துக் கொண்டு எங்கோ போய் பால் பொட்டணத்தை வாங்கிக் கொண்டு வந்து அபிஷேகம் செய்தால்தான் தப்பு!
ஸ்படிகமாலை எப்போது அணிய கூடாது?

அழகை எடுத்துக் காட்டுவதற்காகவே நகைகள் அணிகின்றோம். உடலில் பதிநான்கு இடங்களில் அணியும் நகைகளுக்கு ஆறு முக்கிய நன்மைகள் உண்டு. அழகு, தெய்வப்பிரியம்,ஆத்தும தரிசனம்,ஆரோக்கிய இரட்சை,ஸதானக் குறிப்பு,தோஷ  நிவாரணம் என்ற நன்மைகளுக்காகவே நகைகள் அணிகின்றோம். பதிநான்கு உலோகங்களின் சின்னமாக தலையிலும், நெற்றியிலும்,காதிலும், மூக்கிலும் உதட்டிலும் கழுத்திலும், தோளிலும், புஜத்திலும்,  கையிலும், மார்ப்பிலும், இடுப்பிலும், பாதங்களிலும், கால்விரலிலும், கைவிரலிலும், நகைகள் அணிவதுண்டு. தங்கமும் வெள்ளியும் அணியும் போது கைக் கொள்ளும் நம்பிக்கைகள் போலவே ஸ்படிக மாலை அணிவதன் பின்னும் சில நம்பிக்கைகள் உண்டு. இதை அணிய உத்தமமான நட்சத்திரம் கார்த்திகையாம். ஒரு நாள் பசுவின் சாணத்தில் மூழ்கவைத்து ஸ்படிக மாலையை தண்ணீர் பாலில் கழுவி குருவின் உதவியால் அணிய வேண்டும் என்பது ஆசாரவிதி. எந்த காலமானாலும் வெப்பத்தை தடையும் சக்தி இம்மாலைக்குண்டு. கிரகங்கள் மனிதரில் செலுத்தும் செல்வாக்கைக் கட்டுபடுத்த இம் மாலைக்கு இயலும். இரவு வேளை இம்மாலையை தண்ணீரில் இட்டுவைத்து மறுநாள் அத்தண்ணீரைக் குடித்தால் ஆண்மை விருத்தியடையும் என்று நம்புகின்றனர். பௌர்ணமி நாள் ஸ்படிகமாலை அணிந்தால் உடல் சக்தி கூடும் என்றும் தம்பதிகள் இம்மாலை அணிந்து தூங்கக் கூடாதென்றும் விதிக்கப்பட்டுள்ளன. ஸ்படிக மாலையை ஒருவர் அணிந்த பின் மற்ற வர்கள் மாற்றி அணியும் போது தண்ணீருக்குள் குறைந்தது 3 1/2 மணி நேரமாவது ஊறவிட வேண்டும். மற்ற ரத்தின உபயோகத்திற்கும் ஸ்படிக மாலை உபயோகத்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. ஸ்படிகத்தைத் தவிர மற்ற அனைத்து ரத் தினங்களையும் இரவில் அணியலாம். ஆனால் ஸ்படிகத்தைக் கண்டிப்பாக இரவில் அணியக்கூடாது. காரணம், அது உப ரத்தின வகையைச் சார்ந்தது மட்டுமல்ல. தானாகத் தன் அதிர்வுகளை வெளியேற்றும் சக்தி ஸ்படிகத்திற்குக் கிடையாது என்பதும் தான்.
பூஜையறையை மூடும் போது தீபங்களை அணைத்துவிட வேண்டுமா? அணையா தீபம் ஏற்றி வழிபடலாமா?

பூஜையறையை மூடும்போது தீபங்களை அணைத்துவிட வேண்டும். அணைத்தால் தான் மறு நாள் காலையில் தீபம் ஏற்ற இயலும், இல்லையெனில், தினம் தினம் காலையில் தீபம் ஏற்றும் சம்பிரதாயம் அற்றுப்போகும். அனுதினமும் காலையிலும் மாலையிலும் தீபம் ஏற்றவேண்டும் என்று இருக்கும்போது, நிரந்தர தீபவொளிக்கு இடமில்லாமல் போவதைத் தெரிந்துகொள்ள வேண்டும். பக்தி மேலீட்டால்... நந்தா தீபம் அணையா விளக்கு ஏற்றுகிறேன் என்ற தனிப்பட்டவரின் சிந்தனையை விதியாக மாற்றக்கூடாது. விளக்கைச் சுத்தம் செய்து புதுத் திரி போட்டு விளக்கேற்றுவது சிறப்பு. அணையா விளக்கு வீட்டுக்கு நல்லது என்பது தங்கள் கணிப்பு. எல்லோரது சிந்தனையும் அப்படித்தான் இருக்கவேண்டும் என்றில்லை. சாஸ்திரத்தை மீறி நமது சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுப்பது சரியில்லை. கோயில்களில்கூட கர்ப்பகிருஹத்தின் கதவைத் திறக்க ஒரு மந்திரம், தீபம் ஏற்ற ஒரு மந்திரம், நிர்மால்யத்தை விலக்க ஒரு மந்திரம், அபிஷேகத்துக்கு ஒரு மந்திரம் என்ற நடைமுறை உண்டு. கர்ப்பகிருஹத்திலும் அணையா விளக்கு இருந்தால் கோயிலுக்கு நல்லதுதானே... என்று சொல்லலாமா! ஸ்வயம்ப்ரகாசனுக்கு விளக்கு எதற்கு? நாம் அவனை தரிசிக்க விளக்கு வேண்டும். மேலும் அணையாவிளக்கு எதிர்பாராமல் அணைந்துவிட்டால், வீணாக மனநெருடலைச் சந்திக்கவேண்டி வரும். எதிர்பாராமல் விளக்கு தீபம் பற்றிக்கொண்டு பூஜையறையும் பாதிப்புக்குள்ளானால், அதுவும் அபசகுனம். ஆகையால், நமது ஆசையை நிறைவேற்ற எண்ணும்போது, ஆராய்ந்து செயல்பட வேண்டும். சாஸ்திரத்தைக் கடைப் பிடித்தால் அபசாரம் இருக்காது.