சனி, 23 மே, 2020

அஷ்டமீ சந்த்ர விப்ராஜ அளிகஸ்தல சோபிதா!!

இது லலிதா சகஸ்ரநாம நாமம் அம்பாளின் நெற்றியை வர்ணிக்கும் பகுதி.

அரைவட்ட வடிவமான அஷ்டமிச் சந்திரன் போல் விளங்கும் நெற்றியைக் கொண்டவளுக்கு நமஸ்காரம்.

அளகம் என்பது நெற்றியின் இரு பக்கங்களின் இருக்கும் பகுதி.அங்குதான் அம்பாளுடைய சுருண்ட கூந்தல் காற்றில் அழகாக முன்னுச்சியில் இரு புறமும் ஆடிக்கொண்டு இருக்குமாம்.

அம்பாளுடைய நெற்றி எப்படி அழகாக இருக்குமாம் தெரியமா!!

திரும்பி சகஸ்ரநாம வரிகளை படிப்போம்

அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா

அப்படி என்றால்

மாதிரி இருக்கிறது. என்ன சரியாகப் புரிய வில்லையா? கொஞ்சம் விளக்கமாகப் பார்க்கலாமா. அவளுடைய நெற்றி எட்டாநாள் சந்திரன் போல் இருக்கிறது. எல்லோரும் நெற்றியை பிறைச் சந்திரனுக்குத்தான் ஒப்பிடுவார்கள் ஆனால் இங்கு வேறுமாதிரி.ஆதி சங்கரர் செளந்தர்ய லகிரியில் அம்மா உன் தலையில் ஒரு பாதி அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா சந்திரன் மாதிரி இருக்கிறது. நெற்றியில்மறு பாதி சந்திரன் இருக்கிறது. இரண்டையும் அப்படியே சேர்த்து வைத்துப் பார்த்தால் முழுநிலவாகி விடும். அப்படி பௌர்ணமி பூர்ண சந்திரன் போல இருப்பதுதான் உன்முகம் என்கிறார்.இப்போது புரிகிறதா ஏன் அபிராமி பட்டர் அமாவாசையன்று பௌர்ணமி என்று கூறினார்.அவர் அம்பாளின் முகதரிசனம் செய்து கொண்டு இருந்தபோது கேட்ட கேள்விக்கு வந்த பதில்.பிறைச் சந்திரன் என்று சொன்னால் அது நெற்றியோடு பொருந்தாது. இரண்டு பக்கமும் தூக்கிக்கொண்டு இருக்கும் அழகாக இருக்காது.ஆனால் பாதி பிறை எட்டம்நாள் சந்திரன் சமமாக இருக்கும். அதை அப்படியே அம்பாளின் நெற்றியாக பாவனை செய்து இருபுறமும் சுருண்ட கூந்தல் காற்றில் அலைபாயும்படி கற்பனை செய்து பார்த்தால் அஷ்டமீ சந்த்ர விப்ராஜ அளிகஸ்தல சோபிதா என்ற வரிக்கு அர்த்தம் புரியும்.

ஸெளதர்யலகரியில் 46 வது ஸ்லோகத்தில் ஆதி சங்கரர் அவள் நெற்றி அழகை எப்படி வர்ணிக்கிறார் என்று பார்ப்போமா. !!

லலாடம் லாவண்ய த்யுதி விமல மாபாதி தவ யத்

த்வதீயம் தன்மன்யே மகுட கடிதம் சந்த்ரசகலம்

விபர்யாஸ ந்யாஸா துபயமபி ஸம்பூய ச மித:

ஸுதாலேபஸ்யூதி: பரிணமதி ராகா ஹிமகர:                                         

வெண்ணிலவு போன்ற அழகுடன் உன்னுடைய எந்த நெற்றியானது பிரகாசிக்கிறதோ அதை கிரீடத்தில் சூடிக்கொண்டிருப்பதன் இரண்டாவது பாகமாகிய சந்திரகலையோ என்று எண்ணுகிறேன். இரண்டும் திருப்பிப் பொருத்தப் பட்டால் ஒன்றுக்கொன்று நன்றாகச் சேர்ந்து அமிருதம் ஒழுகும் பூர்ணிமைச் சந்திரனாக பரிணமிக்கும்.

அம்பாளுடைய நெற்றிக் கிரீடத்தில் இருக்கும் பாதிச் சந்திரனைப் பூர்ணமாக்கும் மற்றொரு பாதிபோல் வலைந்தும் அழகாகவும் உள்ளது என்று நெற்றி வர்ணிக்கப் படுகிறது.
நாமெல்லாம் நானாவிதமான வஸ்துக்களைப் பார்த்து, எல்லாம் தனித்தனியாக உண்மையாக இருப்பதை நினைக்கின்றோம். அவற்றிடம் ஆசை, துவேஷம் முதலியவற்றை உண்டாக்கிக் கொண்டு பல விதங்களில் கர்மம் செய்கின்றோம்.

இந்தக் கர்மத்தை அனுபவிக்க மறுபடியும் மறுபடியும் செத்து செத்துப் பிறக்கின்றோம். அம்பாளை உபாசித்து ஞானம் வந்து விட்டாலும் நானாவிதமான இத்தனையையும் ஒரே பேரறிவான அவளுடைய வேறுவேறு தோற்றங்கள் தான் என்று அபூர்மாகத் தெரியும். நாமும் அப்படி ஒன்றே. தோற்றங்கள் இத்தனை இருந்தாலும், இவ்வளவும் உள்ளே ஒன்றுதான் என்று தெரியும். உள்ளே ஒன்றாக இருப்பதைத் தெரிந்து கொண்ட பின் வெளியே மாற்றிக் கொண்டும் அழித்துக் கொண்டும் இருக்கும் இந்தத் தோற்றங்களில் ஆசை, துவேஷம் எதுவும் ஏற்படாது. இதற்கெல்லாம் ஆதாரமாக எப்போதும் மாறாமலே இருக்கின்ற பேரறிவோடு அறிவாக நம் மனதைக் கரைத்து விடுவோம். அப்போது பிரபஞ்சமே நம் பார்வைக்கு இல்லாமல் போகும். அந்த ஞான தசையில் எது இல்லாமல் போகிறதோ அது- அதாவது மாயைதான். அதுவரை நம்மை ஆட்டி வைத்தது.

மாயைக்கு காரணமாக பிரம்ம சக்தியான அம்பாள் தான் ஞானமும் தருகிறாள். அவளுடைய கருணையே இதற்குக் காரணம்.  இத்தனை     மாயையைச் செய்தாலும், அதிலிருந்து விடுவிக்கின்ற   கருணையும், அவளுக்கே  பூரணமாக இருக்கின்றது.  மாயாலோகத்தில்   நாம்  உண்டாக்கிக் கொள்ளும்  கஷ்டங்களும், துக்கங்களும் காரணம் நம்முடைய இந்திரியங்களும், மனசும் தான். இந்திரிய சுகங்களின்  வழியிலேயே மனதை செலுத்தி நம்முடைய சுவபாவமான ஆத்ம சுகத்தை மறந்திருக்கின்றோம்.

ஐம்புலன்களும் மனசும் நம்மை ஆட்டி படைக்கின்றன. இவற்றைச் செய்தவள் மாயை அவளே இவற்றைச் சுத்தப்படுத்தி,  இந்திரிய விவகாரங்களிலிருந்தும், மனசின் ஓயாத சஞ்சலங்களிலிருந்தும்  ஜீவனை விடுவிப்பதற்காக  சாஷத் காமாக்ஷி யாகவே வருகிறாள். காமாக்ஷியின்  நாலு கைகளில் ஒன்றில் ஒரு வில்லும், இன்னொன்றில் ஐந்து அம்புகளும் இருக்கும். அந்த வில் கரும்பினால் ஆனது. அம்புகள் புஷ்பங்களால்  ஆனவை   சாதாரணமாக கெட்டியான   இரும்பினால்  வில் அமைந்திருக்கும்.

இங்கோ மதுரமான கரும்பு அம்பாளுக்கு வில்லாக இருக்கிறது. கூரான அம்புகளுக்கு பதில் மிகவும் மிருதுவான மலர்களைப் பாணங்களாக வைத்திருக்கின்றார்கள். அந்தக் கரும்பு வில் மனஸ் என்ற தத்துவத்தைக் குறிக்கும். மதுரமான மனம் படைத்த அம்பாள் நம்மனங்களையெல்லாம் இந்த வில்லைக்காட்டி வசப்படுத்திக் கொண்டு வருகின்றாள்.அவளுடைய ஐந்து புஷ்ப பாணங்களும், நம் ஐம்புலன்களை ஆகாஷித்துச் செயலற்றுப் போகும்படி செய்வதற்காக ஏற்பட்டவை.

மனோ ரூபேஷ கோதண்டா – பஞ்சதன்மாத்ர ஸாயகா என்று,  இதையே லலிதா ஸஹஸ்ர நாமம் கூறுகிறது.

நம்முடைய மனோ விருத்தியும், இந்திரிய விவகாரங்களும் அடங்குவதற்கே பராசக்தியானவள் காமாக்ஷி யாகி கரும்பு வில்லும் மலர்ப்பாணமும் தாங்கி வந்திருக்கின்றாள். இரண்டு கைகளில் பாசமும் அங்குசமும் வைத்திருக்கின்றாள். பாசமானது நம் பாசங்களை, ஆசையை நீக்கி அவளோடு நம்மைக் கட்டிப்போடுகிற கயிறு. அங்குசம், நாம் துவேஷத்தில் கோபிக்கிறபோது, நம்மைக்குத்தி அடக்குவதற்காக, பௌதீக பிரபஞ்ச இயக்கங்களின் அடிப்படைத் தத்துவங்களைச் சொல்கிற கவர்ச்சி, விலக்கல் என்பன தான், மனித வாழ்வில் முறையே ஆசையும் துவேஷமும் ஆகின்றன. அவற்றை    அடக்கி    சம்சாரத்திலிருந்து மீட்கவே, அம்பாள் காமாக்ஷியாக பாசாங்குசங்களைத் தரித்திருக்கின்றாள். 

ராக ஸ்வரூப பாசட்யா க்ரோதாகாராங்குசோஜ்வலா என்பதாக லலிதா ஸகஸ்ரநாமத்தில், பாசத்தை ஆசையாகவும்,(ராகம்)    அங்குசத்தை துவேஷமாகவும்     (குரோதம்) சொன்னபோது இவற்றை அவை அடக்கி அழிக்கின்றன என்று
அர்த்தம் பண்ணிக்கொள்ள வேண்டும்.           

இப்படியாக, நாலு கைகளில் கரும்புவில் , புஷ்பபாணம்,  பாசம், அங்குசம் இவற்றை தரித்துக் கொண்டு நிறமே இல்லாத பிரம்மத்திலிருந்து செக்கச் செவேல் என்ற பரம கருணையின் நிறத்தோடு, உதய சூரியன் மாதிரி, மாதுளம்பூ மாதிரி, குங்குமப்பூ மாதிரி, செம்பருத்தி மாதிரி, காமேசுவரியான காமாக்ஷி அநுக்கிரக  நிமித்தம் தோன்றியிருக்கின்றாள்.
ஸ்ரீ.லலிதா !! ஸ்ரீ.மாத்ரே.நம:

எத்தனை தெய்வங்களின் வழிபாட்டு முறைகள் இருந்தாலும் அம்பிகையினை குறிப்பிடும் பொழுது ‘லோக மாதா’ என்றே குறிப்பிடுவர்.

அம்பாளுக்கு இந்த வளையல் அணிவிப்பது அவரவர் சந்ததியினரை நன்கு காக்கும். தீமைகளை விலக்கி விடும் என்பது ஐதீகம்.

லலிதா என்றால் ‘விளையாடுபவள்’ என்று பொருள்படும். ஆம் இந்த உலகில் அன்னை லோக மாதா நம் அம்மாதானே. அவ்வன்னையின் குழந்தைகள் நாம். நாம் ஏன் வாழ்க்கையை சுமையாகவும், கடினமாகவும் கொண்டு வாழவேண்டும். மகிழ்வாக, சகல நன்மைகளையும் நம் அன்னையிடம் பெற்று வாழ்ந்து பின் அன்னையையே சேர்ந்து விடலாம்.

லலிதா சகஸ்ரநாமம் பிரம்மாண்ட புராணத்தில் 36 வது பிரிவாக லலிதோபகன்யா என்று வருகின்றது. அகத்திய மாமுனிவருக்கும் ஹயக்கிரீவருக்கும் இடையே நடைபெறும் சம்பாஷனையாக இடம் பெற்றுள்ளது. ஹயக்கிரீவர் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் மறு உருவமே. ஹயக்கிரீவர் அகத்தியரிடம் லலிதமகா திரிபுர சுந்தரியின் மகிமைகளையும் விளையாடல்களையும் கூறுகின்றனர். ஸ்ரீபுரம் எனும் அம்பிகையின் இருப்பிடமான ஊரினைப்பற்றி விவரிக்கின்றார். அம்பிகையினை உச்சரிக்கும் மந்திரங்களின் மகிமையைப்பற்றிக் கூறுகின்றார்.

பஞ்சசடாஷ்சரி என ஒன்று படும் ஸ்ரீயந்த்ரம், ஸ்ரீவித்யா, லலிதாம்பிகா, ஸ்ரீகுரு மற்றும் தேவியை உபசரிக்கும், தேவியின் பணிகளைச் செய்யும் மற்ற தெய்வங்கள் தேவதைகளைப்பற்றி கூறுகின்றார். இத்தனையும் கூறினாலும் ஹயக்கிரீவர் அகத்தியரிடம் லலிதா சகஸ்ரநாமத்தினைப் பற்றி கூறவில்லை. அகத்திய மாமுனி பலமுறை ஹயக்கிரீவரிடம் கேட்ட பிறகே ஹயக்கிரீவர் அம்பிகையின் ஆயிரம் நாமங்களைப் பற்றிச் சொல்கின்றார். இதிலிருந்தே இந்த ஆயிரம் நாமங்களின் புனிதத்தினை நாம் உணரலாம் அல்லவா.

ஒரு சமயம் லலிதாம்பிகை வாசினி மற்றும் வாக்கு  தேவதைகளை நோக்கி ‘நான் உங்களுக்குக் கட்டளையிடுகின்றேன். யார் யார் ஸ்ரீ சக்ரம், ஸ்ரீ வித்யா மற்றும் பிற மந்திரங்களை அறிந்தவர்களோ அவர்கள் என்னைப் பற்றிக் கூறும் ஆயிரம் நாமங்கள் கொண்ட சுலோகங்களை உருவாக்குங்கள். என் பக்தர்கள் இதனைச் சொல்லி என்னை வந்து அடையும் பாதையாக அமையட்டும் எனக் கூறினார்.

அதன்படி வாசினி உட்பட எட்டு வாக்கு தேவதைகள் மிக ரகசியமான மந்த்ரமாக ‘லலிதா சகஸ்ரநாமம்’ ஸ்லோகத்தினை உருவாக்கினர். ஒரு நாள் தன்னுடைய சிம்மாசனத்தில் அமர்ந்து இருந்தாள். இது கணக்கற்ற பரம்மாக்களும், கணக்கற்ற விஷ்ணுக்களும், கணக்கற்ற ருத்ரர்களும் மந்த்ரினி, டந்தினி போன்ற தேவதைகளும் அம்பிகையை கண்டு வணங்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. அதன் பின்னர் லலிதாம்பிகை வாசினி உட்பட எட்டு தேவதைகளையும் லலிதா சகஸ்ரநாமத்தினை உச்சரிக்க கண்களால் ஆணையிட்டாள்.

கைகளையும் கூப்பி அவர்கள் லலிதா சகஸ்ரநாமத்தினைக் கூற அனைவரும் தெய்வ அருளில் நனைந்தனர். லோக மாத மனம் குளிர்ந்து கூறினாள். ‘ குழந்தைகளே, வாசினி உட்பட எட்டு வாக்கு தேவதைகளால் கூறப்பட்ட இந்த சகஸ்ரநாமம் உலக நன்மைக்காக என் இசைவால் கூறப்பட்டது. இதனை படிப்பவர்கள் என்னை அடைந்து அனைத்து நன்மைகளையும் பெறுவர் என்றார். இன்று வரை லலிதா சகஸ்ரநாமம் மிக சக்திவாய்ந்த ஸ்லோகமாக பல தீமைகளை நீக்க, நன்மைகளைப்பெற வேண்டும் வழிபாட்டு முறையாக பின் பற்றப்படுகின்றது.

பக்தியோடு இதனைச் சொல்ல நோய் நீங்கும். லலிதா என்றால் அழகு என்றும் பொருள்படும். ஞான மார்க்கமாக வழிபடும் பொழுது ‘ஸ்ரீ வித்யா’ எனப்படும். ஞான அறிவு கிட்டும்.  அனைத்து ஆத்மாவினுள்ளும் இருக்கும் அம்பிகையினை உணர முடியும். அளவிடமுடியாத அம்பிகையின் அருளினை உணர முடியும்.

உள்ளுணர்வு கூடும். அந்த உள்ளுணர்வே அம்பிகைதான் என்று புரியும். சக்தி வழிபாட்டினை ‘ஸ்ரீ’ என்ற எழுத்தின் மூலம் வழிபடுவது ஸ்ரீவித்யா. பிரபஞ்சமே ஸ்ரீசக்கரம் தான். மந்த்ர, யந்த்ர, தந்தர என்ற மூன்றும் இணைந்ததே ஸ்ரீ வித்யா வழிபாடு. பிரம்ம வித்தையும், ஸ்ரீ வித்தையும் ஒன்றே.

லலிதாம்பிகையின் வழிபாட்டினை பக்தியோகம், கர்மயோகம், ராஜயோகம், ஞானயோகம் என எந்த முறையிலும் வழிபடலாம். இல்லற வழியில் இருப்பவர்களும் வழிபடலாம். துறவற வழியில் இருப்பவர்களும் வழிபடலாம். எல்லா வழியும் அம்பிகையின் வழிதான். அம்பிகையும் எவ்வழியிலும் செய்யும் வழிபாட்டினை ஏற்றுக் கொள்கின்றன. மனித உடலில் குண்டலினி சக்திதான் மிகவும் உயர்ந்தது. லலிதா சகஸ்ரநாமம் உடலில் உள்ள ஆறு சக்கரங்களையும் குண்டலினி சக்தியினையும் கூறுகின்றது.

லலிதாம்பிகை சிவ சக்தி ஒன்றாய் இணைந்தவள்’லலிதா சகஸ்ர நாமத்தினையும்,ஸ்ரீவித்யாவினையும் படிக்க அரிய ஜாதி, மத, இன வேறுபாடு கிடையாது உயர் பண்புகளை தன்னுள் வளர்த்துக் கொள்வோர் அனைவரும் படிக்கலாம். லலிதா சகஸ்ரநாமத்தின் முக்கியத்துவத்தின் மேலும் கூறும் பொழுது

* லலிதாசகஸ்ரநாமம் சொல்வது லலிதாம்பிகைக்கு மிகவும் பிடித்தமானது. வேதத்திலும், தந்திரத்திலும் இதற்கு நிகரானது இல்லை.

* இதனை தினமும் சொல்வது புனித நீரில் நீராடிய புண்ணியத்தினை தரும்.

* உணவுப்பொருள், நிலம், பசு தானம் செய்த புண்ணியம் கிடைக்கும்

* குழந்தைவரம் வேண்டுவோர் குழந்தை பாக்கியம் பெறுவர்.

* அன்றாடம் சொல்வதில் தீமைகள் விலகும்.

* பூஜை செய்யும் முறைகளில் செய்யும் தவறுகளால் ஏற்படும் பாவம் நீங்கும்.

* அன்றாட நித்திய பூஜை முறைகளையும், அவரவர் குடும்ப வழி பூஜைகளையும் செய்யாது இருப்போருக்கு ஏற்படும் பாவம் நீங்கும்.

* கிரக தோஷங்களால் ஏற்படும் தீமைகள் நீங்கும்.

* எதிரிகள் நீங்குவர்.

* வெற்றி கிட்டும்.

* பொன், பொருள், புகழ் சேரும்.

* லலிதா சகஸ்ரநாமம் அன்றாடம் சொல்வது ஒரு தவம்.

* இறைவனுக்கு வேறு எதனையும் அளிக்க வழி இல்லை. எனினும் இந்த நாமத்தினைச் சொல்வதே போதும்.

* தன்னம்பிக்கை கூடும்.

* லலிதாம்பிகையே ஸ்ரீகாளிமாதா, துர்காதேவி, பராசக்தி, பகவதி, பிரபஞ்சத்தின் தாய்.

* ஒவ்வொரு நாமமும் மிகவும் சக்தி வாய்ந்தது.

படிக்க ஆரம்பித்தால் 1000 நாமத்தினையும் முழுமையாக சொல்லி முடிக்க வேண்டும். பகுதி பகுதியாக இடைவெளி விட்டு சொல்ல வேண்டாம். காலை மாலை இருவேளையும் உகந்த நேரம். ஒரு குரு மூலம் ஆரம்பித்துக் கொள்வது மிகவும் நல்லது. நமோ தேவ்யை.
வேத வியாசர் வேதங்களை முறைப்படுத்தியவர், 18 புராணங்களையும் எழுதி நமக்கருளியவர் என்று நாமறிவோம், ஆனால் இவர் மதுரை பற்றியும், மீனாக்ஷி பற்றியும் எழுதியிருக்கார் என்று தெரியுமா?. இவர் செய்த ஸ்கந்த புராணத்தில் ஹாலாஸ்ய மகாத்மியம் என்று ஒரு பகுதி, அதில் அன்னை மீனாக்ஷியை பின்வருமாறு போற்றுகிறார்.

வந்தே ஹாலாஸ்ய நகரீம் வந்தே ஹேமாப்ஜினீமயீ
வந்தே ஸுமின நடனாம் வந்தே சுந்தர நாயிகாம்.

மந்த்ர சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருப்பதன்படியாகப் பார்த்தால் அன்னை மீனாம்பிகையே மந்திரிணி, சியாமளா, மாதங்கி என்றெல்லாம் கூறப்படுபவள், அதனால்தான் மதுரை மந்திரிணி பீடம், மாதங்கி பீடம் என்றெல்லாம் கூறப்படுகிறது. அன்னை ஆதிபராசக்தியின் கைகளில் இருக்கும் ஒவ்வொரு ஆயுதங்களும் ஒரு சக்தி ஸ்வரூபம் என்கிறது சாக்த சித்தாந்தம். இவ்வாறாக ஒவ்வொரு ஆயுதத்திற்கான சக்திகளைச் சொல்கையில் அன்னை பராசக்தியின் கையில் இருக்கும் கரும்பு வில்லே "சியாமளா" என்று கூறுகிறது சக்தி மஹிம்ன ஸ்துதி. ருத்ர யாமளத்தில் இவளைப் பற்றி 16 நாமங்கள் சொல்லப்படுகிறது. இந்த நாமங்களைப் பார்த்தாலே அவை மீனாக்ஷிக்கும் இருப்பது புலனாகிறது. அவையாவன: சங்கீத-யோகினி, வீணாவதி, சியாமா, வைணிகீ, சியாமளா, முத்ரிணி, மந்திர-நாயிகா, பிரியகப்ரியா,மந்திரிணி , நீபப்ரியா, சசிவேசானி, கதம்பேசீ, ப்ரதானேசீ, கதம்பவன-வாஸினி, சுகப்பிரியா, ஸ்தாமதா

இந்த நாமங்களை முத்துஸ்வாமி தீக்ஷதர் தமது க்ருதிகளில் மிக அருமையாகக் கையாண்டிருக்கிறார். இவர் முக்தியடையும் நேரத்தில் பாடிய பாடல் "மீனாக்ஷி மேமுதம்" என்னும் கமகக்ரியா என்னும் ராகத்தில் உள்ள பாடல் இன்றும் இவரது ஆராதனையில் பாடப்படுகிறது. இதே போல "மாமவ மீனாக்ஷி" என்னும் வராளி ராகத்தில் அமைந்த க்ருதி, மற்றும் "மாதங்கீ" என்று ஆரம்பிக்கும் ராம-மனோகரியில் அமைந்த க்ருதிகள் மதுரையில் தரிசனம் செய்கையில் திக்ஷிதர் செய்ததாகச் சொல்வர்.

இதேபோல, அகஸ்தியர் மீனாக்ஷியைப் பணிந்து "யோக மீனாக்ஷி ஸ்தோத்ரம்" என்ற பெயரில் ஸ்லோகம் ஒன்று செய்திருக்கிறார். மிக அபூர்வமான மந்திரப் பிரயோகங்கள் நிறைந்த 16 ஸ்லோங்கள் கொண்டது இது. அந்த ஸ்லோகத்திலும் இந்த நாமங்கள் பற்றிய குறிப்புக்களை உணர்ந்து கொள்ள முடிகிறது. பின்னர் ஒருமுறை இந்த ஸ்தோத்ரத்தை தனி இடுகையாக எழுதுகிறேன்.

ஆதிசங்கரர் மீனாட்சி தேவியை துதித்து மீனாட்சி பஞ்சரத்தினமும், மீனாட்சி அஷ்டகமும் அருளியிருக்கிறார்கள். பல சங்கர மடங்களாலும், ஆதினங்களாலும் சிறப்பிக்கப்பட்ட தேதியூர் சுப்ரமணிய சாஸ்திரிகள் தனது கண்பார்வை பாதிக்கப்பட்ட சமயத்தில், அன்னை மீனாட்சியின் மேல் 15 ஸ்லோகங்கள் செய்து தனது கண்பார்வை பெற்றதாக வரலாறு. இன்றும் அந்த ஸ்லோகங்கள் பலரது கண் பார்வைக் கோளாறுகளுக்கு பிரார்த்தனை மந்திரமாக இருக்கிறது.

கடந்த 100-150 வருடங்களுக்கு முன்னர் சிருங்கேரி ஆசார்ய பரம்பரை குரு ஒருவர் க்ஷேத்திராடனம் வருகையில் மதுரையில் முகாமிடுகிறார். அப்போது அவர் மீனாக்ஷி தரிசனம் செய்து, கர்பகிரஹத்தி தமது கைகளால் பூஜிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார். தரிசனம் செய்வது சரியென்றும் ஆனால் யதிகள் கர்பகிரகத்துள் சென்று பூஜை செய்வது மதுரைக் கோவிலில் வழக்கமன்று என்று கூறி அனுமதி மறுக்கின்றனர். அப்போது அந்த ஆசார்யார் தமது தபோ பலத்தால் அன்னையை ஓர் கலசத்தில் ஆவிர்பகிக்கச் செய்து பூஜா முறைகளை வழுவறச் செய்கிறார். இதன் காரணமாக கோவில் சோபையிழந்து, துர்-சகுனங்கள் ஏற்படுகிறது. பட்டர்கள் கனவில் வந்த மீனாக்ஷியம்மன் ஸ்ரீ ஸ்வாமிகளை கர்பகிரஹத்தில் அனுமதிக்காததால் தாமே அவ்விடத்தை விட்டு அகன்றுவிட்டதாகவும், ஸ்ரீ ஸ்வாமிகளிடத்து மன்னிப்புக்கோரிட வேண்டும் என்று கூறுகிறாள். அதன்படியே பட்டர்கள் செய்ய, ஸ்ரீ ஸ்வாமிகள் கோவிலுக்கு வந்து தமது கலசத்தில் ஆவிர்பகித்திருந்த அன்னையை கர்பகிரகத்தில் உள்ள சிலா ரூபத்திற்கு எழுந்தருளச் செய்கிறார். இதன் பிறகே இக்கோவிலில் ஸ்ரீ ஆசார்யர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகச் செவிவழிச் செய்தி கேள்விப்பட்டிருக்கிறேன்.

குழந்தையானந்த ஸ்வாமிகள் ஒரு அவதூதர். இவர் சிறுவயதில் தாய்-தந்தையரை இழந்து அம்மன் சன்னதியில் வளர்ந்ததாகவும், அம்மனே அவரை வளர்த்ததாகவும் சொல்வார்கள். சிறுவயதில் இவர் கோவிலிலேயே தங்கியிருப்பாராம். கோவில் பிரசாதங்களை உண்டு வளர்ந்தார் என்றும், கோவிலைப் பூட்டும் போதும் இவர் அம்மன் சன்னதி அருகில் பூக்கட்டும் மண்டபத்திலேயே (மடப்பள்ளி அருகில்) இருப்பாராம். இவரது ஜீவ சமாதி இன்றும் காளவாசல் அருகில் இருக்கிறது. இவரது ஜீவ சமாதியின் மேல் மேரு பிரதிஷ்ட்டை ஆகியிருக்கிறது. இங்கு நடக்கும் ஆவரண பூஜைகள் மிக அருமை, மிகுந்த சான்னித்யம் உள்ள இடம்.

தாய்-தந்தை இழந்த ராகவேந்திர ஸ்வாமிகள் தனது இளமைக்காலத்தில் தனது சகோதரியுடன் மதுரையில் வசித்துள்ளார். அப்போது அவர் தமது சகோதரியுடன் காலை-மாலை இருவேளைகளும் அன்னையை தரிசிக்க வருவாராம். இவர் வசித்த அந்த வீடு இன்றும் தளவாய் அக்ரகாரத்தில் இருக்கிறது. ஸ்ரீ ராகவேந்திரர் பூஜித்த சாளக்கிராமங்களும், அவர் பயன்படுத்திய பூஜா பாத்திரங்களும் இன்றும் இவ்வில்லத்தில் காணலாம்.

ரமணர் தமது இளமைக் காலத்தில் மதுரையில் இருந்திருக்கிறார், அப்போது அன்னை மீனாக்ஷியை தரிசித்துள்ளார். இன்றும் தெற்கு கோபுரவாசலில் இருந்து நேராகச் செல்லும் தெருவில் அவர் வசித்த இல்லம் ரமண மந்திரமாக இருக்கிறது. அங்கே தியானம் போன்றவை செய்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ரமணர் திருவண்ணாமலை செல்லுவதற்கான உத்தரவு மதுரையில், இந்த இல்லத்தில் இருக்கும் போதே கிடைத்ததாகச் சொல்வர்.

காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையில் வாழ்ந்தால் முக்தி என்று சொல்வது போல, மதுரை வீதிகளில் நடந்தாலேயே முக்தி என்பர். மதுரையின் அமைப்பே பாலா திரிபுரசுந்தரியின் சக்ர ரூபம் என்பதாகச் சொல்வர். அப்படியுள்ள சக்ர ரூப நகரின் மத்தியில் வாசம் செய்து நம்மையெல்லாம் கடாஷிக்கும் அன்னை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் பாதம் பணிவோம்.
#மூன்று_கர்ப்பூராரத்திகள்

#தெய்வத்தின்குரல் பாகம் 1

இங்கே முகுந்த ப்ரஹ்மேந்திரர்களின் கிரீடப் பிரகாசம் [அம்பாள் பாதத்திற்கு] நீராஜனம் செய்கிறதாகச் சொல்பவர் ஏழெட்டு ச்லோகம் தள்ளி1இன்னோரிடத்திலும் ஜீவாத்மா பராசக்தியோடு ஐக்யமாகிறதைச் சொல்லி, அந்த அபேத மோக்ஷ ஸ்தானத்தை அடைந்தவனுக்கு மஹாப்ரளய காலாக்னி என்ற ஸர்வ ஸம்ஹார ஊழித் தீயே நீராஜனம் செய்வதாகச் சொல்கிறார்:

மஹா ஸம்வர்தாக்நிர்-விரசயதி நீராஜன விதிம்

ஸ்ருஷ்டி, காலம் முதலான எல்லாவற்றையும் கடந்து ஸத்யா தத்வமான ‘அம்பாளாகவே ஆகிறான் என்று அர்த்தம் அங்கே சொல்லப்படும் அந்த ஆஸாமி எவனோ ஒருத்தனான “ய:” இல்லை. பக்தியுடன் பாண்டித்யமும் சேர்ந்த லெவலில் இருக்கிறவனுங்கூட இல்லை. அதற்கும் உசந்த லெவலில் அம்பாளை அத்வைதமாக உபாஸித்துப் பார்ப்பவனாக அவனைச் சொல்லியிருக்கிறார்.

இங்கே [“பவாநி த்வம்” ச்லோகத்தில்] நான்-நீ-ஆகிற-விஷயம் தற்செயலாக அது பாட்டுக்குக் கவியின் பார்வையில் வந்ததுதான்; அந்த ஆஸாமி உத்தேசித்ததில்லை.

அங்கே அப்படியில்லை. அவனை “ய:” என்கிறபோது, அதோடு விட்டுவிடாமல், எப்படிப்பட்ட “ய:” என்கிறார். நன்றாக அறிந்து, “நீதான் நான்” என்று ஸதாவும் பாவித்துக் கொண்டிருப்பவனவன் – “த்வாம் அஹம் இதி ஸதா பாவயதி ய:” என்று சொல்லியிருக்கிறார்.

தாஸோஹம் என்றில்லாமல் ஸோஹம் என்றே உபாஸிகிற அவனுக்கு ப்ரளய காலாக்னியும் வெறும் கர்ப்பூராரத்தி ஆகிவிடுகிறது என்கிறார். மற்ற ஸகலமான பேரையும் பஸ்மம் பண்ணுகிற அது இவனுக்குப் பூஜோபசாரமாக தீபாராதனை காட்டி பக்தி பண்ணுகிறதாம்.

சௌந்தர்ய லஹரியில் மூன்று நீராஜனம் வருகிறது. பிரம்ம-விஷ்ணு-இந்திரர்களின் கிரீடம் அம்பாள். பாதத்தில் பண்ணும் நீராஜனம் ஒன்று. அம்பாளுடன் அத்வைதமாக ஆசைப்பட்டு அப்படியே ஆக்கிக் கொண்டவனுக்கு – இப்படிச் சொன்னால் அம்பாளுக்கு என்றேதான் அர்த்தம்- அவளுக்கு, மஹா ப்ரளயத்திலும் அழியாத பரப்ரஹ்ம சக்தியாக இருக்கப்பட்டவளுக்கு அந்த ப்ரளயாக்னி சக்தியாக இருக்கப்பட்டவளுக்கு அந்த ப்ரளயாக்னி பண்ணும் நீராஜனம் இரண்டாவது ஸ்தோத்ரத்தைப் பூர்த்தி பண்ணுமிடத்தில் [நூறாவது ச்லோகத்தில்] மூன்றாவது நீராஜனம் வருகிறது.

வாக்சக்தியிலே ஸுர்ய ப்ரகாசமாக ஜ்வலிக்கிற அம்பாளுக்கு ஆசார்யாள் இந்த சௌந்தர்ய லஹரி என்ற வாக்லஹரியையே கர்ப்பூரமாக்கி அங்கே நீராஜனம் காட்டுகிறார்.

இந்த மூன்றும் ஸ்ருஷ்டிக்கொன்று, ஸ்திதிக்கொன்று, ஸம்ஹாரத்திற்கொன்று என்று இருக்கின்றன. ஆனால் க்ரமம் மாறி முதலில் ஸ்திதி, அப்புறம் ஸம்ஹாரம், கடைசியில் ஸ்ருஷ்டி என்று வருகிறது.

ஸ்திதி – கருணையோடு கட்டிக் காத்துப் பரிபாலிப்பது – தான் அம்பாளுக்கு முக்யம். அதனால்தான் ப்ரணவத்திலே முறையாக ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களைக் குறிக்கும் அ, உ, ம என்ற அக்ஷரங்கள் வந்தாலும், தேவீப்ரணவம் என்கிற ‘உமா’ நாமத்திலே ஸ்திதி அக்ஷரமான ‘உ’ முதலில், அப்புறம் ஸம்ஹாராக்ஷரமான ‘ம’, கடைசியில் தாயாக முடிக்கிற விதத்தில் ஸ்ருஷ்ட்யக்ஷரமான ‘அ’ என்று இருக்கிறது. இங்கேயும் மூன்று நீராஜனங்கள் இந்தப்படியே வருகின்றன.

முகுந்த ப்ரஹ்மேந்திரர்கள் தங்கள் கிரீடத்தில் பண்ணும் நீராஜனம் ஸ்திதி. அவர்கள் இருக்கிறார்கள், லோகத்தைப் பரிபாலித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதாலேயே இது ஸ்திதி காலம் என்று தெரிகிறது.

ஸ்வாரஸ்யமாக இன்னொரு internal evidence – உட்சான்று கூட – ச்லோகத்தில் தெரிகிறது: ‘ப்ரஹ்ம, விஷ்ணு’ என்றுதான் சொல்வது வழக்கமானாலும் இங்கே ஸ்திதிக்கு ஸ்வாமியான விஷ்ணுவை முதலில் முகுந்தன் என்று சொல்லிவிட்டு அப்புறந்தான் ப்ரஹ்மாவைச் சொல்லியிருக்கிறது! ஸம்ஹார கர்த்தாவான ருத்ரனைச் சொல்லவேயில்லை; இந்திரனைத்தான் சொல்லியிருக்கிறது.

மஹா ப்ரளயாக்னி செய்கிற நீராஜனம் என்பது ஸம்ஹாரத்தைச் சொல்வது. இது யாருக்குமே ஸ்பஷ்டமாகப் புரியும்.

கடைசி ச்லோக நீராஜனம் ஸ்ருஷ்டி. எப்படியென்றால்: ஆசார்யாள் இந்த ஸ்தோத்ர ஸ்ருஷ்டிக்கு அம்பாளே காரணம் என்று சொல்லித்தான் அதைக் கொண்டே அவளுக்கு அங்கே நீராஜனம் காட்டுகிறார்.

அம்பாள் தான் கற்பனையாக ப்ரபஞ்சத்தை ஸ்ருஷ்டித்திருக்கிறாற்போலத்தான் ஒரு கவியும் தான் கற்பனையால் காவ்யம், ஸ்தோத்ரம் என்று ஸ்ருஷ்டிக்கிறேன். இப்படித் தம் ஸ்ருஷ்டியாகத்தெரியும்
இந்த ஸ்தோத்ரத்திற்கும் மூலச் சரக்கு அம்பாள்தான்; ஸுர்ய மண்டலமாக இருக்கும் அந்த மூலச் சரக்கிலிருந்து ஒரு கர்ப்பூர வில்லையில் ஏற்றிய சுடரின் அளவுதான் இந்த ஸ்தோத்ரம் என்று அங்கே ஆசார்யாள் சொல்லியிருக்கிறார்.

இப்படி மூன்று நீராஜனம் கொடுக்கும் பரம மங்களமான வழிபாடாக ஸௌந்டர்ய லஹரி இருக்கிறது.

இங்கே நாம் பார்க்கிற முதல் நீராஜனம் பிரம்ம, விஷ்ணு, இந்திரர்களின் கிரீடப் பிரகாசமாக இருக்கிறது.

1 ச்லோ. 3௦
பகவான் ஜெகந்நாதருடைய மஹாபிரசாதத்தின் மஹிமை

,🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஒரு முறை நாரத முனிவர், வைகுந்தம் சென்று லட்சுமி தேவிக்கு பணிவுடன் சேவை செய்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த லட்சுமி தேவி, நாரதருக்கு வேண்டிய வரத்தை தர விழைந்தார். நாரத முனிவர் லட்சுமி தேவியிடம், தான் வேண்டும் வரத்தை கண்டிப்பாக தர வேண்டும் என்று வாக்குறுதி பெற்றுக்கொண்டார். அவ்வாறே நாரதருக்கு லட்சுமி தேவி வாக்களித்த பிறகு, நாரதர், தனக்கு பகவான் நாராயணருடைய மஹா பிரசாதம் வேண்டுமென்று கேட்டார்.

இதை சற்றும் எதிர்பாராத லட்சுமி தேவி, வருத்தத்துடன் நாரதரிடம், "என் கணவர் என்னிடம் அவருடைய மகா பிரசாதத்தை யாருக்கும் கொடுக்க கூடாது என்று கூறியுள்ளார். நான் எவ்வாறு என் கணவரின் ஆணையை மீற முடியும்? என்னால் முடியாது" என்று பதிலளித்தார். லட்சுமி தேவியின் வாக்கை நினைவுபடுத்திய நாரதர் தனக்கு எவ்வாறாவது பகவானுடைய மகா பிரசாதம் வேண்டும் என்று பிடிவாதமாய் இருந்தார். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட லட்சுமி தேவி, செய்வதறியாது தவித்தார். அன்று மதியம் பகவானுக்கு அன்போடும் கவனத்தோடும்  உணவு பரிமாறினார் லட்சுமி தேவி. இருப்பினும் பகவான் நாராயணர், தன் மனைவியின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை என்று அறிந்து அதற்கான காரணத்தை கேட்டார். பகவானின் பாதகமலங்களில் சரணடைந்த படியே, வேதனையுடன் தன்னுடைய சூழ்நிலையை எடுத்துரைத்தார் லட்சுமி தேவி. மிகவும் பரிவோடு பகவான், தன் மனைவியிடம், "இன்றொருநாள் என்னுடைய ஆணையை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். நான் சாப்பிட்ட தட்டை நீ நாரதருக்கு வழங்கலாம். ஆனால் நான் என் முகத்தை எதிர்திசையில் திருப்பியவுடன், எனக்கு தெரியாமல் நீ தட்டை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினார். மிகவும் மகிழ்ச்சி அடைந்த லட்சுமி தேவி, அவ்வாறே செய்தார். நாரத முனிவரிடம் மகா பிரசாதத்தை வழங்கினார்.

அதை பெற்ற நாரதர் மிகவும் மரியாதையுடன் அதனை உண்டு மகிழ்ந்தார். மகா பிரசாதத்தை உண்டவுடன் நாரதர், மெய் மறந்த நிலையில் பகவானின் நாமங்களை பாடியபடி இடைவிடாது ஆடவும் செய்தார். அவருடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல்ஒரு பைத்தியக்காரனை போல் அண்டம் முழுவதும் ஒவ்வொரு கிரகமாக ஓடி கொண்டிருந்தார். இறுதியாக சிவ பெருமானின் இருப்பிடமான கையிலாயத்திற்கு வந்தடைந்தார்.

சிவபெருமான் நாரதருடைய நிலை கண்டு ஆச்சரியமடைந்தார். பகவான் விஷ்ணுவின் பக்திக்கடலில் மூழ்கியிருந்த நாரதர், தன்னை கவனிக்கவில்லை என்பதை உணர்ந்த சிவபெருமான், நாரதரை சமாதானப்படுத்தி அவரிடம் அதற்கான காரணத்தை வினவினார். நாரத முனிவர், பகவானின் மகா பிரசாதம் கிடைத்த கதையை கூறினார். சிவபெருமான் மிகவும் ஆச்சர்யத்துடன் நாரத முனிவரிடம், "நாரத முனிவரே! பகவான் நாராயணருடைய மகா பிரசாதத்தை உண்ணக்கூடிய பெரும் பாக்கியம் பெற்றவர் நீங்கள். எனக்கு சிறிது மகா பிரசாதத்தை கொண்டு வந்துள்ளீர்களா?" என்று வினவினார். நாரதர், தான் மகா பிரசாதம் ஏதும் எடுத்து வரவில்லை என்று கை கூப்பிய படி தன் வருத்தத்தை சிவபெருமானிடம் தெரிவித்தார். அப்போது தன் கைவிரலின் நகக்கண்ணில் ஒரு சிறுதுளி மகா பிரசாதம் இருந்ததை பார்த்த நாரதர், மகிழ்ச்சியில் துள்ளியபடி, சிவபெருமானிடம் காண்பித்தார். அதை தன் வாயில் வைத்தவுடன், சிவபெருமான் மிகவும் பக்திக்கடலில் மூழ்கியபடி, பிரளயம் ஏற்படும்போது மட்டும் ஆடும் சிவதாண்டவத்தை ஆடினார். இதனால் அண்டம் முழுவதும் அதிர்ந்தது. தேவர்கள் அனைவரும் அஞ்சி நடுங்கினர். இது பிரளயத்திற்கான சமயம் இல்லை. பிறகு ஏன் சிவபெருமான் தாண்டவம் ஆடுகின்றார்? என்று குழம்பினர். இருப்பினும் சிவபெருமானை நெருங்க பயந்து, அனைவரும்  பார்வதி தேவியை தஞ்சம் அடைந்தனர். சிவபெருமானை  சமாதானப்படுத்தாவிடில், பிரளயம் ஏற்படும் என்று கூறினர்.

பார்வதி தேவியும் இதற்கு சம்மதித்தார். மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆடிக்கொண்டிருந்த சிவபெருமானை நெருங்கிய பொது, அவர் சுய நினைவிற்கு வந்தார். பார்வதி தேவி, சிவபெருமானிடம், "ஐயனே! தங்களுக்கு என்னவாயிற்று? எதற்காக தாண்டவம் ஆடினீர்கள்?" என்று வினவினார். சிவபெருமான் நடந்ததை விவரித்தார். பார்வதி தேவி மிகவும் ஆச்சரியமடைந்தார். அதோடு சிவபெருமானிடம், "எனக்கு மகா பிரசாதம் வைத்துள்ளீர்களா?", என்று வினவினார். சிவபெருமான், "எனக்கே நாரதருடைய நகக்கண்ணில் இருந்த ஒரு துளி மகா பிரசாதம் மட்டும் தான் கிடைத்தது. அதில் நான் எப்படி மீதம் வைக்கமுடியும்?" என்று பதிலளித்தார்.

இதை கேட்ட பார்வதி தேவி மிகவும் கோபம் கொண்டார். அவருடைய கோபத்தினால் எழுந்த அக்னி, அண்டம் முழுவதும் வெட்பத்தை உண்டாக்கியது. பாதாள லோகங்கள் முதல் பிரம்மலோகம் வரை இருக்கும் அனைவராலும் அந்த வெட்பத்தை உணர முடிந்தது. ஏதோ விபரீதம் நடக்கவிருக்கிறது என்பதை அனைவரும் உணர்ந்தனர். உடனடியாக பிரம்மதேவரின் தலைமையில் அணைத்து தேவர்களும் பகவான் விஷ்ணுவிடம் இதை தெரிவிப்பதற்காக வைகுந்தம் விரைந்தனர். பகவான் விஷ்ணு, உடனடியாக கருட வாகனத்தில், கயிலாயம் நோக்கி புறப்பட்டார்.

பகவான் விஷ்ணுவை கண்டவுடன், பார்வதி தேவி, தனது வணக்கங்களை தெரிவித்தார். பகவான் விஷ்ணு, பார்வதி தேவியை ஆசீர்வதித்து, "உனக்கு எவ்வளவு மகா பிரசாதம் வேண்டுமென்றாலும் நான் தருகிறேன். தயவு செய்து உன்னுடைய கோபத்தை கைவிடுவாயாக. இல்லையென்றால் அகிலம் முழுவதும் அழிந்து விடும்" என்று கேட்டுக்கொண்டார். ஆனால் பார்வதி தேவி இதற்கு சம்மதிக்கவில்லை. "எனக்கு மட்டும் நீங்கள் மகா பிரசாதம் கொடுத்தால் போதாது. என்னுடைய பிள்ளைகளான அகிலத்து வாசிகள் அனைவருக்கும் உங்களுடைய மகா பிரசாதம் கொடுக்க வேண்டும். உங்களுடைய மஹாபிரசாதம் கிடைக்காமல் நான் தவித்ததுபோல் என்னுடைய பிள்ளைகளும் தவிக்க நான் விரும்பவில்லை" என்று கூறினார். இதை கேட்ட பகவான் விஷ்ணு, "ததாஸ்து (அப்படியே ஆகட்டும்)" என்று கூறினார். மேலும், பார்வதி தேவியிடம், "உன்னுடைய ஆசையை நிறைவேற்றுவதற்காக நான் நீலாசால தாமம் என்ற இடத்தில அவதரிப்பேன். என்னுடைய இந்த கோவிலானது பிரசாத விநியோகத்திற்கென்றே பிரசித்தி பெறும். இங்கு வந்து யார் பிரசாதம் உண்டாலும் அவர்கள் முக்தி அடைவார்கள்.  என்னுடைய பிரசாதம் அனைத்தும் உனக்கு முதலில் நெய்வேத்தியம் செய்யப்படும். அதன் பிறகே அது மகா பிரசாதம் என்று ஏற்கப்படும். இந்த மகா பிரசாதம் அனைவருக்கும் விநியோகிக்கப்படும். இதற்காக நீ என்னுடனேயே இருக்க வேண்டும். என்னுடைய கோவிலின் சந்நிதானத்திலேயே உன்னுடைய ஆலயமும் இருக்கும். உன்னுடைய கணவர் உனக்கு மகா பிரசாதம் கொடுக்க தவறியதால் அவருடைய ஆலயம் என்னுடைய சந்நிதானத்திற்கு வெளியே இருக்கும்" என்று கூறினார்.

பகவான் விஷ்ணு, பூரியில். ஜெகந்நாதராக அவதரித்தார். பார்வதி தேவி அங்கு விமலா தேவியாக அவதரித்தார். பகவான் ஜெகந்நாதருக்கு நெய்வேத்தியம் செய்யப்படும் அனைத்தும் விமலா தேவிக்கும் நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. அதன் பின்னரே அது மஹாபிரசாதமாக ஏற்கப்படுகிறது. இந்த மகா பிரசாதத்தை அனைத்து மக்களும் பாகுபாடின்றி பெற்றுக்கொள்ளலாம். சாஸ்திரங்கள் கூறுவது யாதெனில், "ஒரு நாயின் வாயிலிருந்து கூட ஒரு பிராமணர் மஹாபிரசாதத்தை எடுத்து உண்ணலாம். எந்த வித தீட்டும் கிடையாது. இதுவே பகவான் ஜெகந்நாதருடைய மஹாபிரசாதத்தின் மஹிமை".
கிருஷ்ணர் முதன்முதலாக வெண்ணெய் திருடிய கதை

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

கிருஷ்ணர் முதன்முதலாக வெண்ணெய் திருட ஆரம்பித்த கதை மிகவுமே சுவாரசியமானது. கிருஷ்ணர் குழந்தையாக இருக்கும்போது தாய் யசோதை கிருஷ்ணருக்கு அவ்வப்போது சிறிது வெண்ணெய் தருவாள். இதன் சுவை கிருஷ்ணருக்கு மிகவுமே பிடிக்கின்றது. வெண்ணெய் எங்கிருந்தோ வருவதால்தான் அம்மா நமக்கு சிறிதளவே வழங்குகின்றாள் என்று கிருஷ்ணர் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் ஒருமுறை கிருஷ்ணரும் பலராமரும் தவழ்ந்தவாறு விளையாடிக் கொண்டே ஒரு அறையின் பக்கமாக சென்றனர். அந்த அறை இருட்டாக இருப்பினும் உள்ளே சென்ற அவர்கள் பானைகள் அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதில் என்ன இருக்கின்றது என்ற ஆவலில் அதனைப்பிடித்துக் கொண்டு எழுந்துநின்று, பானைக்குள் கைவிட, அது வெண்ணெயால் நிறைந்திருப்பதைக் கண்டு வியப்புற்று அள்ளி அள்ளி உண்டார்கள். இவ்வளவு வெண்ணெயை வைத்துக் கொண்டு அம்மா நமக்கு சிறிது சிறிதாகத்தானே தருகின்றாள் என்று எண்ணியாறு விளையாட்டையும் மறந்து வெண்ணெயை உண்டு கொண்டிருந்தார். அச்சமயத்தில் குழந்தையை தேடிக்கொண்டு அங்கே வந்த யசோதை கிருஷ்ணர் அணிந்திருந்த ஆபரணங்களின் ஒளியில் வெண்ணெய் மயமாக இருப்பதைக் கண்டார். என்ன கிருஷ்ண வெண்ணெய் திருடி உண்கின்றாயா என்றாள். உடனே கிருஷ்ணர் என்ன சொல்வதென்று தெரியாமல் இல்லையம்மா நீங்கள் என்னை உடல் முழுவதும் ஆபரணங்களால் நிரப்பியுள்ளீர்கள், இந்த ஆபரணங்கள் எனது உடலை மிகவுமே சூடுபடுத்துவதால் அதனை தணிக்கவே வெண்ணெய் பானைக்குள் கைவிட்டு குளிர்ச்சி செய்துகொண்டேன் என்றாள். உடனே அவள் உனது கன்னம் மற்றும் வாயில் வெண்ணெய் நிரம்பியுள்ளதே அது எப்படி என்றாள். மாட்டிக்கொண்டோமே என்று நினைத்த கிருஷ்ணர் இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று நினைத்தவர், இந்த அறையின் இருட்டில் எறும்புகள் என்மேல் ஏறியதே தெரியவில்லை, எறும்புகள் எனது கன்னத்தை கடித்தபோது, எனது வெண்ணெய் கையுடன் அதனை தள்ளிவிட்டேன், அதனால்தான் கன்னம் முழுவதும் வெண்ணெயாக இருக்கின்றது அம்மா என்றார். அடடா எனது கண்ணனை நானே தவறாக நினைத்துவிட்டேனே என்றவாறு அன்புடன் தூக்கியணைத்து கொண்டாள். அப்போதுதான் கிருஷ்ணர் ஆஹா விருந்தாவனத்தின் புத்திசாலி பெண்மணியான எனது அன்னையையே நான் ஏமாற்றிவிட்டேன் என்கின்றபோது இனி யார் வீட்டில் வேண்டுமானாலும் எளிதாக வெண்ணெய் திருடலாம் என்று முடிவு செய்தார். இவ்வாறாக கிருஷ்ணர் முதன்முதலாக தனது நவநீத சோரத்தை அதாவது வெண்ணெய் திருடிய லீலையை மிக அழகாக அரங்கேற்றினார்.
*தேவி மஹாத்மயம்*

2) *வைக்ருதிக ரஹஸ்யம்.-*

ரிஷி சொன்னார்- ஓம். சத்வ, ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களுடையவள் தேவி. அவளே சர்வா, சண்டிகா, துர்கா, பத்ரா, பகவதி, ஆவாள்.

ஹரியின் யோக நித்ராவாக இருக்கும் பொழுது, தமோ குணம் நிறைந்த மஹா காளியாவாள். இவளை மது கைடப அசுரர்களை வதம்  செய்யும் பொருட்டு, ப்ரும்மா

எழுப்பினார். அவளும் மாயையாக வந்தாள். பத்து வாய், பத்து புஜங்கள், பத்து கால், கைகள், முப்பது விசாலமான கண்கள், பற்கள் என்று பயங்கரமாக இருந்தாலும், மஹாலக்ஷ்மியால் உருவாக்கப் பட்டவளாதலால் தனித் தன்மையுடையவளாக கவர்ச்சியாகவே இருந்தாள். கைகளில், வாள், பாணம், கதை, சூலம், சக்கரம், சங்கம், புசுண்டி என்ற ஆயுதம், இவைகளையும், பரிகம், கார்முகம், சிர்ஷம் என்பவைகளையும்  வைத்திருந்தாள். இவளே வைஷ்ணவி மாயா. மஹாகாளியே இவள். எளிதில் இவளை நெருங்க முடியாது. வணங்கி ஆராதனை செய்யும் பக்தர்களுக்கு வசப்படுவாள்.

அனைத்து தேவ சரீரங்களிலும் இருந்து, தோன்றிய மஹாலக்ஷ்மி, மஹிஷமர்தினி என்ற பெயர் பெற்றவள். வெண்ணிறமும், அதை விட வெண்மையான ஸ்தனங்களும், கருமையான புஜங்களும், சிவந்த மத்ய பாகமும், பாதங்களும், கருமையான முழங்கால்களும், அழகிய பின் பாகமும், சித்ர விசித்ர ஆபரணங்களுமாக, வாசனைப் பொருட்கள் நிறைந்த அங்க ராகங்களுமாக, காந்தி, உடலமைப்பு, இவைகளால் மங்களகரமாக , விளங்குபவளுமாக, பதினெட்டு புஜங்களும், சில சமயம், ஆயிரம் கைகளுடையவளுமாக, சதியான இவளை பூஜிப்பவர் சொல்வர். இவள் கைகளிலுள்ள ஆயுதங்கள் – அக்ஷ மாலா, கமலம், பாணம், அசி என்ற வாள், குலிசம், கதை, சக்கிரம், த்ரிசூலம், பரசு, சங்கம், கண்டா- மணி, பாசக்கயிறு, சக்தி, தண்டம், சர்ம, சாபம், பான பாத்ரம், கமண்டலு, இந்த ஆயுதங்களுடன் கமலத்தில் அமர்ந்தவளான மஹா லக்ஷ்மி, அனைத்து தேவர்களும் ஒன்றாக விளங்கும் மகா சக்தி ஆவாள். இந்த விதமாக பூஜிப்பவர்கள், இவ்வுலகிலும், பரலோகத்திலும் ப்ரபுவாக, அரசனாக ஆள்வான்.

அதே போல, சத்வ குணம் நிறைந்த கௌரியின் உடலில் இருந்து வெளிப்பட்டவளே சாக்ஷாத் சரஸ்வதி என்பவளாவாள். அவளே சும்பாசுரனை அழித்தவள். அதன் பொருட்டு எட்டு புஜங்களையும், பாண முஸலங்களையும், சூல, சக்கரங்களையும், சங்கையும், கண்டா என்ற மணி இவை தவிர லாங்கலம், கார்முகம் என்பவைகளையும் தரித்தவள். பக்தியுடன் இவளை நன்றாக பூஜை செய்பவர்களுக்கு சர்வஞத்வம் – அனைத்தையும் அறியும் சக்தி என்பதைத் தருவாள். இவளே நிசும்ப மதினி- நிசும்பனை சம்ஹாரம் செய்தவள். அரசனே, இவைகள் தான் அம்பிகையின் ரூபங்கள். இவர்களை உபாசிக்கும் விவரங்களையும் சொல்கிறேன் கேள்.  பூமியை ஆளும் அரசனே. ஜகன்மாதாவின் பல விதமான உபாசனை முறைகளையும் தெரிந்து கொள்,

மஹாலக்ஷ்மியை பூஜை செய்யும் பொழுது, மஹா காளி, மஹா சர/ஸ்வதி – இவர்களை முறையே, தெற்கு, வடக்கு திசைகளில் பூஜிக்க வேண்டும். பின் பாகத்தில் இரட்டையர்களான மூவரும் இருக்க வேண்டும். ப்ரும்மா, ஸ்வரா என்பவளுடன் மத்தியிலும், ருத்ரன் கௌரியுடன் தென் பாகத்திலும், இடப் பக்கத்தில், லக்ஷ்மி தேவியுடன் ஹ்ருஷீகேசனையும், முன் பாகத்தில் மூன்று தேவதைகளையும், பதினெட்டு கைகளையுடைய ரூபம் மத்தியிலும், அவளது இடப்பக்கத்தில் பத்து முகங்களையுடையவள் என்ற பொருளில் தசானனா என்பவளையும், தென் பாகத்தில் எட்டு கைகளையுடைய லக்ஷ்மியை மஹதி என்றும் பூஜிக்க வேண்டும்.

பதினெட்டு கைகளையுடைய தேவியாக பூஜிக்க நினைத்தால் , நராதிபனே, இந்த தசானனா, தென் பாகத்திலும் எட்டு கைகளையுடையவளாக வடக்கிலும் வைக்க வேண்டும்.

இடர்கள் தீர, கால ம்ருத்யு இவர்களையும் பூஜை செய்ய வேண்டும். எட்டு கைகளையுடையவளாக, சும்பாசுரனை வதைத்தவள், அவளுடைய ஒன்பது சக்திகளையும் பூஜிக்க வேண்டும். அத்துடன் ருத்ர, மற்றும் வினாயகரையும் பூஜிக்க வேண்டும். நமோ தேவ்யா என்ற மந்திரத்தால் மஹா லக்ஷ்மியை அர்ச்சிக்க வேண்டும். மூன்று அவதாரங்களை அர்ச்சிக்கும் மந்திரங்கள், துதிகளைச் சொல்ல வேண்டும். மஹிஷ மர்தினி – எட்டு கைகளுடையவள். மஹா லக்ஷ்மியே, மஹா காளி, மஹா சரஸ்வதி என்றும் அழைக்கப் படுவர். சர்வ லோக மஹேஸ்வரி, புண்ய பாபங்களை நிர்வஹிப்பவள்.  மஹிஷனை வதைத்தவள் என்று, ஜகத்ப்ரபுவே பூஜித்தார். சண்டிகா பகவதீ என்ற இவளே, பக்த வத்ஸலா. அர்க்யம் முதலானவைகளும், அலங்காரங்களும், கந்த புஷ்பங்கள், அக்ஷதைகள், தூப தீபங்கள், பல விதமான நைவேத்யங்கள், ப்ரணாம, ஆசமனியங்கள், சுகந்தமான சந்தனம், கர்பூரம் சேர்த்த தாம்பூலங்கள், இவைகளை பக்தி பாவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். இடது பாகத்தில், தேவியின் எதிரில் மகா அசுரனின் சிதைந்த தலையை வைக்க வேண்டும், இவனும் தேவியின் கரத்தால் வெட்டுண்டதால் சாயுஜ்யம் என்ற பதத்தை அதைந்தான் அன்றோ. தென் பாகத்தில் தேவியின் முன் தர்மமே உருவான சிங்கம் விளங்கும். இது தேவியின் வாகனம்.

இதன் பின் மனம் ஒன்றி தேவியை துதிக்க வேண்டும். கைகூப்பி வணங்கியபடி, இந்த சரிதங்களை சொல்லி துதிக்க வேண்டும். மத்யம சரிதம் என்ற ஒரு அத்யாயம் மட்டுமாக துதிக்கலாம். மற்ற பகுதிகளை தனியாக சொல்வதில்லை. பாதி சரித்திரத்தில் நிறுத்தக் கூடாது. அது பாதி ஜபம் – என்பதால். பிரதக்ஷிண நமஸ்காரங்கள், தலியில் அஞ்சலி செய்பவனாக ஜகன் மாதாவிடம் அபராத க்ஷமா என்பதை செய்ய வேண்டும். முடிந்தால் பிரதி ஸ்லோகத்திற்கும் பாயசம் வைவேத்யம் செய்யலாம்.

எள், நெய், சுத்தமா ஹவிஷ் முதலியவையும் நைவேத்யம் செய்யலாம். ஸ்தோத்ர மந்திரங்களால் அர்ச்சிக்க வேண்டும்.  பின் நாம பஜனைகள், ஆத்ம நிவேதனம் என்ற பாவனையுடன் தன்னையே சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு மனம் ஒன்றி தேவியை பூஜிப்பவன், சகல விதமான போக்யங்களை இக லோகத்தில் அனுபவித்து பின் தேவியின் சாயுஜ்யம் என்ற பதவியை அடைந்து விடுகிறான். பக்த வத்ஸலாவான இந்த தேவியை பூஜிக்கத் தெரியாதவன், தெரிந்தும் செய்யாதவன், புண்யங்கள் அழிய, தேவியினாலேயே வதைக்கப் படுவான். பூபால, அதனால், பூஜை செய். சர்வ லோக மஹேஸ்வரி இவள். உசிதமான விதத்தில் பூஜை செய். சுகத்தை அடைவாய்.
பாலா? பாதுகையா?
ஆனந்த தாண்டவபுரம் என்ற சின்ன ஊரில் பெரியவா முகாம். பெரியவாளுக்கு கைங்கர்யம் பண்ணும் பாக்யம் பெற்ற ஒரு சிறுவனுக்கு சந்த்ரமௌலீஶ்வரர் அபிஷேகத்துக்காக பக்தர்கள் கொண்டு வரும் பாலை ஸேகரித்து பூஜைக் கட்டில் கொண்டு வந்து வைக்கும் பொறுப்பு குடுக்கப்பட்டது!
ஒருநாள் காலை குளத்தின் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு தன் திருவடிகளை தண்ணீரில் நனைத்து "விளையாடி" கொண்டிருந்தா பெரியவா. பக்கத்தில் கைங்கர்யம் பண்ணும் சின்னப் பையன்கள் இருந்தனர். அந்த ஸமயம், ஒரு பக்தர் பாலை ஒரு பாத்ரத்தில் கொண்டு வந்து பெரியவா முன் பணிவோடு நின்றார்.
"என்னது?"
"அபிஷேகத்துக்கு பால்........"
"செரி...செரி...வை"
அந்த பக்தர் கொஞ்சம் தள்ளி அந்த பால் பாத்ரத்தை வைத்தார்.
கொஞ்சநேரத்தில் பெரியவா எழுந்து நடக்க ஆரம்பித்ததும், வேறொரு பையன் அந்த பால் பாத்ரத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு பெரியவா பின்னால் நடக்க ஆரம்பித்தான். இதைப் பார்த்ததும், பால் கைங்கர்யம்" பண்ணும் பையனுக்கோ ஒரே ஆத்திரம்! ஏனென்றால், அது அவனுக்கு குடுக்கப்பட்ட கைங்கர்யம். அவனுடைய உரிமை! இவன் எப்படி அதை தட்டிப் பறிக்கலாம்?
பெரியவாளோடேயே நடந்து கொண்டிருந்தாலும், மெல்ல முணுமுணுவென்று " டேய்! பாலை மரியாதையா எங்கிட்ட குடுத்துடு....இல்லே....தொலைச்சுப்புடுவேன்! குடுடா......." என்றான்.
அந்தப் பையனோ காதில் விழாதமாதிரி பெரியவாளோடு போய்க் கொண்டிருந்தான்.
ஆனால் பெரியவா சட்டென்று நின்று, தன் பாதுகைகளைக் கழற்றி "பால் கைங்கர்யம்" பையனிடம் குடுத்து "இந்தாடா....இதை தூக்கிண்டு வா. அதுல ஏதோ குத்தறது" என்றார்.
மஹா மஹா பாக்யசாலியான அந்தப் பையன் ஸ்ரீராமனின் பாதுகையைத் தாங்கிய பரதாழ்வார் போல் புளகாங்கிதமடையவில்லை, மேனி சிலிர்க்கவில்லை, ஆனந்தத்தின் உச்சியை அடையவில்லை. பாவம்! சின்னப்பையன்தானே! மனஸ் முழுக்க "பால் கைமாறிப் போச்சே!" என்ற கோபம்.
எனவே அந்த இன்னொரு பையனைப் பார்த்து "மடத்துக்கு வா.......ஒதைப்பேன்..செருப்பாலேயே அடிப்பேன்" என்றெல்லாம் அவனுக்கு மட்டும் கேட்கும்படி பொருமிக்கொண்டே வந்தான். மனம் முழுக்க த்வேஷம்! ஆனால் அவனுடைய பாக்யம் செய்த கைகளிலோ,பெரியவாளுடைய பாதுகைகள்!
முகாமுக்கு வந்ததும் ஸ்ரீ பாதுகையை பூமியில் வைத்தான். பெரியவா பாதங்களில் அது மறுபடியும் தஞ்சம் அடைந்தது. பொருமி பொருமி சூளுரைத்தபடி, அந்தப் பையனை நன்றாக வெளுத்துக் கட்டிவிட்டான்!
அன்று ஸாயங்காலம் ஒரு வீட்டுத் திண்ணையில் பெரியவா வந்து உட்கார்ந்து கொண்டார். சுற்றி கீழே தரையில் எல்லாரும் அமர்ந்து கொண்டனர். பெரியவா டக்கென்று பேச ஆரம்பித்தார்.....
"இன்னிக்கு....பாலா? பாதுகையா?...ங்கற தலைப்புல பேசப் போறேன்"
பெரியவா பண்ணின உபன்யாஸங்களுக்கு கணக்கே கிடையாது...ஆனால், " இன்னிக்கி, இன்ன topic பத்தி பேசப்போறேன்" என்று, தலைப்புக் குடுத்து எதுவும் பண்ணியதில்லை என்பதால், எல்லாருக்கும் ஆச்சர்யம்!
பெரியவாளின் மதுரமான குரல் ஒலித்தது.....
"நந்திக்ராமத்ல எதுக்கு பாலாபிஷேகம் ஆச்சு தெரியுமோ?.........பாதுகைக்கு! ஸாதாரணமா கால்ல போட்டுக்கறதை செருப்புன்னு சொல்லுவா.......ஆனா, அதையே ஸன்யாஸிகள் போட்டுண்டா...அதுதான் பாதுகை...ன்னு சொல்லுவா. பரதன் ஸ்ரீ ராமனோட பாதுகையை ஸிம்ஹாஸனத்ல வெச்சு அபிஷேகங்கள்...அதுவும், பாலாபிஷேகம்! பண்ணினான்........அதுனால, பால் ஒஸத்தியா? இல்ல.... பாதுகை ஒஸத்தியா?" என்று கேட்டுவிட்டு அதற்கு மேல் எதுவும் சொல்லாமல், "கோவிந்த நாம ஸங்கீர்த்தனம்" என்று புண்டரீகம் போட்டுவிட்டு உபன்யாஸத்தை முடித்துவிட்டார்.
"பால் கைங்கர்ய"த்துக்கோ, பொட்டில், ஸம்மட்டியால் அடித்த மாதிரி உறைத்தது!
"எவ்ளோவ் பெரிய பாவி நான்! ரொம்ப ரொம்ப ஒஸந்த பாதுகையை எங்கிட்ட குடுத்து எடுத்துண்டு வரச் சொல்லியிருக்கா பெரியவா! பாதுகைல ஏதும் குத்தவேயில்லே....எனக்கு அந்த பாக்யத்தை குடுக்கணும்...ங்கறதுக்காக, மஹாப்ரபு, தான்... வெறும் பாதத்ல நடந்துண்டு அப்டி ஒரு நாடகம் நடத்தியிருக்கா! நான் பைத்தியக்காரத்தனமா அதை புரிஞ்சுக்காம, அதோட அந்த பையனையும் போட்டு தலைகால் புரியாம அடிச்சேனே! எனக்கு கெடச்ச பாக்யத்தை என்னால புரிஞ்சுக்க முடியாதபடி, ஸ்வாமி என் கண்ணை மறைச்சுட்டாரே!" என்று இன்றும் அந்த பக்தர் கண்களில் நீர் தளும்ப புலம்புகிறார்.
ஸ்ரீவிட்டோபா ஸ்வாமிகள்

உடல் முழுதும் புழுதி, சேறு; இடுப்பில் ஒரு கோவணம் மற்றும் அரைகுறையான மேலாடை என்னும் கோலத்தோடு, ஊர் முழுதும் சுற்றிக் கொண்டிருந்தார் துறவி ஒருவர். சாப்பாடு கிடையாது; ஒருவேளை பசித்தால், ஏதாவது ஒரு வீட்டின் முன் நின்று, இருமுறை கைகளைத் தட்டுவார். ஓசை கேட்டு, யாராவது வந்து உணவு இட்டால் சரி... இல்லையேல், பட்டினி தான். நல்லவர்கள் என்றும் எங்கும் இருப்பர் அல்லவா! அதன்படி, அந்த ஊரில் இருந்த பெண்மணி ஒருவர், இந்த உத்தம துறவியின் நிலை உணர்ந்து இரங்கி, தினந்தோறும் அத்துறவி வரும்போது, அவரை வணங்கி உபசரித்து, உணவு அளிப்பார். துறவியும் அன்போடு இடப்படும் அந்த அன்னத்தை ஒரு கவளம் வாங்கி கொள்வார். இந்த உத்தமருக்கு உணவளிக்காமல், நான் உண்பதில்லை என்ற நியதியைக் கடைப்பிடித்து வந்தார் அந்தப் பெண்மணி.

ஒருநாள்... அந்த வீட்டுக்கு, உணவிற்காக துறவி சென்றபோது, பெண்மணி வீட்டில் இல்லை; ஏதோ வேலையாக வெளியே சென்றிருந்தார். பெண்மணியின் கணவர் மட்டும் வீட்டில் இருந்தார். துறவியைப் பார்த்தார்; துறவியின் கோலமும், தோற்றமும் அந்த மனிதருக்கு, அலட்சியத்தையும், சினத்தையும் உண்டாக்கின. ஆதலால், அவர் தன் கையில் இருந்த பிரம்பை ஓங்கி, ’போ, போ... இங்க நிக்காதே... போ...’ என்று திட்டி, விரட்டி விட்டார். துறவியும் வாய் திறவாமல், நகர்ந்து விட்டார். இது நடந்து நீண்டநேரம் கடந்து, பெண்மணி வீடு திரும்பினார். துறவி வந்ததோ, அவரைத் தன் கணவர் அவமானப்படுத்தித் துரத்தியதோ, பெண்மணிக்குத் தெரியாது. அவர், ’என்ன ஆச்சு இன்னிக்கி... அந்த மகான் உணவுக்கு இன்னும் வரலியே...’ என்று கவலையில் ஆழ்ந்தார். அலுவலகம் சென்ற, அந்தப் பெண்மணியின் கணவர் எழுதத் துவங்கினார்; ஊஹூம், எழுத முடியவில்லை. சில வினாடிகளில் கை முழுதுமாக உணர்ச்சியற்று, செயலற்றுப் போய் விட்டது. மருத்துவரிடம் ஓடினர்; பலனில்லை. அதனால், அவரை வீட்டிற்கு கொண்டு வந்து படுக்கையில் கிடத்தினர் நண்பர்கள்.

பதறித் துடித்தார் மனைவி, ’ஏன் இப்படி நடந்தது...’ எனக் குழம்பினார். அந்த நேரத்தில் அவர் கணவர், ’இன்று, ஒரு பரதேசி வீட்டிற்கு வந்தார். பிரம்பை ஓங்கி, கண்டபடி திட்டி, அவரை விரட்டினேன். ஒருவேளை, அதனால், இப்படி ஆகியிருக்குமோ...’ என்றார், மனைவியிடம். பெண்மணிக்கு உண்மை புரிந்தது. ’ஆகா! வந்தது, நம் மரியாதைக்கு உரிய துறவி தான். நம் கணவர் அவமானப்படுத்தியது அவரைத்தான்...’ என்பதை உணர்ந்தார். உடனே, கணவரை ஒரு வண்டியில் அழைத்துக் கொண்டு, துறவியைத் தேடிப் போனார். துறவி, ஒரு இடத்தில், உட்கார்ந்து, கைகளால் தாளம் போட்டபடி, பாடிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும், பெண்மணி, வண்டியிலிருந்து இறங்கி, துறவியின் திருவடிகளில் விழுந்தார்; துறவியின் முன், கணவரை நிறுத்தி, மன்னிக்கும்படி வேண்டி அழுதார். அவர் கணவரின் பாதிக்கப்பட்ட கையை, கருணையோடு பார்த்த துறவி, ’ஜா ஜா...’ என்று சொல்லி, பழையபடி பாடலை முணுமுணுத்து தாளம் போடத் துவங்கினார்.

அதே வினாடியில், செயலற்று இருந்த கை செயல்படத் துவங்கியது. கணவரின் கை செயல்படத் துவங்கியதைக் கண்ட பெண்மணி, ஆனந்தக்கண்ணீர் சிந்த, கணவரோடு சேர்ந்து, துறவியின் திருவடிகளில் மீண்டும் விழுந்து வணங்கினார். அந்தத் துறவி, விட்டோபா சுவாமிகள். இந்நிகழ்ச்சி நடந்த இடம், திருவண்ணாமலையில் இருந்து வேலுார் செல்லும் வழியில் உள்ள போளூர் என்னும் ஊர். ஸ்ரீவிட்டோபா சுவாமிகளின் சமாதி, இன்றும் அங்கே உள்ளது. யாரையும் இழிவாகப் பேசி, அவமானப் படுத்தாமல் இருந்தால், தெய்வத் திருவருள் தானே வந்து பொருந்தும் என்பதை விளக்கும் வரலாறு இது.இவர் சித்தியான போது ஸ்ரீசேஷாத்திரி ஸ்வாமிகள் வானத்தை நோக்கி அதோ விட்டோபா போறான் என்று பல முறை கூறினாராம்
மதுரகாளிதாசன்
தெரிந்த புராணம் தெரியாத கதை.

சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் , தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள். அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா! இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை
 இனி நீ எடுத்துக் கொள்!” என்றான்*.

*ஆனால் கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான்*.

*“நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்*.

*அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை!” என்று சொன்னான் கர்ணன்*.

*“ஆஹா ! நீ அல்லவோ சுத்த வீரன்!
அர்ஜுனன் காண்டீவத்தை நம்புகிறான்*.

*நீ உன் திறமையை நம்புகிறாய் !” என்று கர்ணனைத் துரியோதனன் பாராட்டினான்*.

*அர்ஜுனன் இந்தச் சம்பவத்தை வனவாசத்தில் வியாசரிடம் சொல்லி மிகவும் வருந்தினான். இதைக் கேட்டுச் சிரித்த வியாசர், “கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்ததற்கு வேறு காரணம் உள்ளது! அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை !” என்றார்.

அது என்ன ?! ” என்று கேட்டான் அர்ஜுனன்

*“நேரம் வரும் போது சொல்கிறேன் !” என்றார் வியாசர்*.

*பல ஆண்டுகள் கழிந்தன*.

*மகாபாரத யுத்தம் முடிந்து, தர்மபுத்திரர் முடிசூடிய பின், கண்ணனைச் சந்திக்க அர்ஜுனன் துவாரகைக்குச் சென்றான்*.

*“அர்ஜுனா ! நான் எனது அவதாரத்தை முடித்துக் கொண்டு வைகுண்டம் செல்லவுள்ளேன்*.

*அதனால் எனது அரண்மனையிலுள்ள பெண்களை எல்லாம் நீ பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு இந்திரப்ரஸ்தத்துக்குசென்று விடு!” என்று  கண்ணன் பகர்ந்தான்.

*கனத்த மனத்துடன் கண்ணனிடமிருந்து விடைபெற்ற அர்ஜுனன் , தனது தேரில் பெண்களை அழைத்துக் கொண்டு சென்றான். வழியில் சில கொள்ளையர்கள் தேரை நிறுத்தி அர்ஜுனனைத் தாக்கினார்கள்*.

*அவர்களைப் பதிலுக்குத் தாக்குவதற்காகக் காண்டீவத்தை எடுக்க முற்பட்டான் அர்ஜுனன். ஆனால் அவனால் காண்டீவத்தைத் தூக்க முடியவில்லை. பற்பல பேரரசர்களை வீழ்த்தியவனும், யாராலும் வீழ்த்த முடியாதவன் என்று போற்றப்படுபவனும், வில் விஜயன் எனப் பெயர் பெற்றவனுமாகிய அர்ஜுனனை அந்தச் சாதாரணத் திருடர்கள் வீழ்த்திவிட்டார்கள். தன் வாழ்வில் முதன் முறையாகத் தோல்வியைச் சந்தித்தான் அர்ஜுனன்*.

*அதுவும் வெறும்  சாதாரணத் திருடர்களிடம்*

*வெட்கத்தால் தலைகுனிந்த நிலையில், இந்திரப்ரஸ்தத்துக்கு நடந்தான் அர்ஜுனன். அப்போது அவன் எதிரில் வந்தார் வேத வியாசர்*.

*“அர்ஜுனா ! நீயும் உன் சகோதரர்களும் பூமியில் இருந்து புறப்படுவதற்கான காலம் வந்து விட்டது. இப்போது நடந்த சம்பவம் அதை நினைவூட்டவே ஏற்பட்டது !” என்று கூறினார் வியாசர்*.

*"கண்ணனே புறப்பட்ட பின், நாங்கள் பூமியில் இருந்து என்ன செய்யப் போகிறோம். நாங்களும் புறப்படத் தாயார். ஆனால், என் மனதில் பெரும் ஐயம் எழுந்துள்ளது*.

*இது வரை நான் காண்டீவத்தைப் பொம்மை போலக் கருதி அனாயாசமாகக் கையில் ஏந்தினேன். ஆனால் இப்போது அது மலை போல் கனமாக உள்ளது. என்னால் அதைத் தூக்க முடியவில்லையே ! என்ன காரணம்?” என்று கேட்டான் அர்ஜுனன்*.

*அதற்கு வியாசர் , “உன்னால் இந்தக் காண்டீவத்தை நிச்சயமாகத் தூக்க முடியாது. கண்ணன் உன்னுடன் இருந்தவரை இந்தக் காண்டீவத்தை ஏந்துவதற்கான பலத்தை அவன் உனக்கு அளித்தான். அவனது அருளால் தான் நீ காண்டீவத்தைப் பொம்மை போலத் தாங்கினாய். இப்போது அவன் பூமியை விட்டுச் சென்று விட்டதால், இதை உன்னால் தூக்க முடியவில்லை!” என்றார்*.

*மேலும் , “ சூதாட்டத்தில் நீ காண்டீவத்தை இழந்த போது, அதைக் கர்ணன் வாங்க மறுத்தானே, ஏன் தெரியுமா? கண்ணனின்
அருள் பெற்ற நீ காண்டீவத்தைத் தூக்கிவிட்டாய்*.

*ஆனால் கண்ணனின் அருள் பெறாத
கர்ணனால் இந்தக் காண்டீவத்தை அசைக்கக் கூட இயலாது. இது கர்ணனுக்கும் நன்றாகத் தெரியும்*.

*அந்தக் காரணத்தை வெளியே சொல்ல விரும்பாத கர்ணன், கௌரவமாகத் தான் சுத்த வீரன் என்றும் இந்த வில்லை நம்பித் தான் இல்லை என்றும் கூறிச் சமாளித்து , காண்டீவம் தனக்கு வேண்டாம் என்று கூறினான் !” என்றார் வியாசர்*.

*இதிலிருந்து பலசாலிகள் என்று போற்றப்படுபவர்களுக்கும் கூட , அந்த பலத்தைத் திருமால் தான் வழங்குகிறார் என்பதை நாம் உணர முடிகிறது*.

*இக்கருத்தை “ஸத்வம் ஸத்வவதாம் அஹம்”*
                   
*( பலசாலிகளின் பலமாக நானே இருக்கிறேன்) என்று கண்ணன் கீதையில் கூறுகிறான்*.

*இத்தகைய மகா பலத்தோடு கூடியவராகத் திருமால் விளங்குவதால் ‘மஹாபல :’ என்று அழைக்கப்படுகிறார்*.

ஓம் நமோ நாராயணாய

சர்வம் ஶ்ரீகிருஷ்ணார்ப்பணம்