வியாழன், 21 மே, 2020

தெளிவு

பிரம்மம், புருஷா, ஈஸ்வரா - மாயா, பிரகிருதி, சக்தி

எது உண்மை,  பிரம்மம் எது -  நாமே பிரம்மம் என்பதை அறிவோமா நண்பர்களே !!!!

என்னுடைய கட உபநிஷத் தொடர் பதிவின் சார்ந்ததாக  இந்த தனி பதிவு இடுகின்றேன்..எது நிலை ஆனது , எதுவுமே நிலை ஆனது அல்ல. எது பெரியது , எதுவும் பெரியது அல்ல.நிலை இல்லாதை தேடி , நினைத்து , நினைத்து நாம் ஓடி கொண்டு இருகின்றோம் என்பதே உண்மை..வரும் போது தனியாக வந்தாய் எதையும் எடுத்து வரவில்லை , போகும் போது தனியாக தான் போக போகிறாய், எதையும் கொண்டு போக போவதில்லை .சிறிய கவிதை, பெரிய விஷயம் என்று கூறுவார்கள் . என்ன என்பதை அடுத்த பதிவினில் பார்ப்போம் நண்பர்களே.

பண்டைய இந்தியாவில் அனைத்து நூல்களையும் பெரும்பாலும் கவிதை வடிவில் எழுதும் வழக்கம் இருந்தது. உதாரணத்திற்கு மனுதர்ம சாஸ்திரம், பரதரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவற்றை எடுத்துக்காட்டலாம். மேலும் கணித சாஸ்திரம், வான சாஸ்திரம் மற்றும் கட்டடக் கலையை வர்ணிக்கும் ஆகம சாஸ்திர நூல்களும் கவிதை வடிவில் எழுதப்பட்டிருக்கின்றன.

தத்துவ விஷயங்களை எடுத்துரைக்கும் பல நூல்களும் அவ்வாறே கவிதை வடிவில் எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.

கட உபநிஷத், ஸ்வேதாஸ்வதர உபநிஷத் போன்ற நூல்களும் அப்படியே செய்யுள் வடிவில் அமைந்திருக்கின்றன.

ஸ்ரீசங்கராசாரியாள் விவேக சூடாமணி போன்ற பல நூல்களை கவிதை வடிவில் எழுதியுள்ளார். இம்மாதிரியான நூல்களில் சிறிய உவமைகள், திருஷ்டாந்தம் போன்ற கவிதை நயங்களைக் கொண்டு அவற்றின் மூலம் மிகப்பெரிய தத்துவங்களை விளக்கும் முறை கையாளப்பட்டது. அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.

புதன், 20 மே, 2020

தசாவதாரம் ஏழு ராம அவதாரம்
********************************
பெருமாளின் அவதாரங்களில் இது ஏழாவது அவதாரமாகும்....

ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாக திருமால் எடுத்த அவதாரம் ராமன். ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும்.

வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும் இரண்யகசிபுவை சிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.
இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவ து பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். சூரிய குலவம்சவழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடை ய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீமந்நாராயணன் கோசலைக்கு ராமன் என்ற மகனாக அவதரித்தார். பூமியில் அரக்கர்கள் அட்டகாசம் அதிகமாயிற்று. தேவர்களிடமும் தங்கள் அட்டூழியங்களைச் செய்து பயமுறுத்தி வந்தார்கள். அவர்களைத் துன்பத்திற்கு ஆளாக்கினார்கள். ஆகவே ஸ்ரீமந் நாராயணன் அவர்களிடமிருந்து உலகத்தையும், தேவர்களையும் காப்பாற்றவே ராமராக அவதாரம் எடுத்தார்.
விசுவாமித்திரர் தாம் இயற்ற இருக்கும் வேள்விக்குப் பங்கம் ஏற்படாமல் பாதுகாக்கும் பொருட்டு ஸ்ரீராமன், லட்சுமணன் ஆகிய இருவரையும் தம்மோடு அனுப்பி வைக்கும்படி தசரதனிடம் கேட்டார். முதலில் மறுத்த தசரதன் பின்பு அனுமதி வழங்கினான்.

அவர்களை வேள்வி செய்ய இருக்கும் காட்டிற்கு  அழைத்து செல்லும் வழியில் தாடகை என்ற ஓர் அரக்கி குறுக்கிட்டாள். அவனை ஸ்ரீராமன் வதம் செய்தார். யாகம் தொடங்கியதும் அரக்கர்கள் மாரீசன் என்பவன் தலைமையில் அதை நடக்க விடாதபடி இடையூறு செய்தார்கள். ராமன் அரக்கர்களை அழித்தார்.
மாரீசனைத் தம் இராம பாணத்தால் சமுத்திரத்திலே கொண்டு போய் தள்ளுமாறு செய்தார். அதனால் மகிழ்ச்சியுற்ற விசுவாமித்திரர் அநேக அஸ்திரங்களை அவர்களுக்கு உபதேசித்து அயோத்திக்கு அழைத்து வந்தார். அப்படி வரும் போது கல்லாக சபிக்கப்பட்டுக் கிடந்த அகலிகை ஸ்ரீராமனின் பாத ஸ்பரிசத் தால் சாப விமோசனம் பெற்றுத் திரும்பவும் மானிட வடிவம் பெற்றாள்.
பின்பு அவர்களை விசுவாமித்திரர் ஜனகர் ஆட்சி புரியும் மிதிலைக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஜனக புத்திரியான சீதைக்கு உரிய கணவனைத் தேர்ந்தெடுக்கும் சுயம்வரம் நடந்தது. அந்த சுயம்வர மண்டபத்தில் ஒரு சிவதனுசு இருந்தது. அது யாராலும் தூக்கி நிறுத்தி வளைத்து நாணேற்ற முடியாத ஒன்று. அந்த வில்லை எந்தப் பராக்கிரமசாலி வளைத்து நாணேற்றுகிறானோ அவனுக்குத் தன் பெண்ணைத் தருவதாக அறிவித்திருந்தான் ஜனகன்.

பலநாட்டு மன்னர்கள் வந்து முயன்றும் சிவதனுசு முறிய வில்லை. ஸ்ரீராமர் அதை வளைத்து நாணேற்றிக் காட்டவே அவருக்கு ஜனகன் சீதையைத் திருமணம் செய்து கொடுத்தான். திருமணம் முடிந்துதம் சுற்றம் சூழ அயோத்தி திரும்புகையில் ராமனைப் பரசுராமர் எதிர்த்தார். அவரிடம் இருந்த வில்லை ராமன் வளைத்து, பரசுராமரின் அகந்தையை அடக்கினார். நாடு திரும்பிய ஒரு சில நாள்கள் கழித்து தசரதன் தன் மகன் ஸ்ரீராமனுக்குப் பட்டம் சூட்ட நினைத்தான். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அதனால் ராமரின் சிற்றன்னை கைகேயி மிகவும் சந்தோஷமுற்றிருந்தாள். அப்படி அவள் மகிழ்ச்சியாக இருந்த சமயம் மந்தரை என்ற வேலைக்காரி, கைகேயியிடம் துவேஷத்தை ஏற்படுத்தினாள். ராமன் பட்டத்தரசன் ஆகிவிட்டால் கோசலைக்கு பெருமையே ஒழிய கைகேயி உனக்கு ஏது பெருமை? மேலும் ஜனகர் புத்திரியான சீதை பட்டத்தரசி ஆவாள். ஏற்கனவே உன் தந்தையார் நாடாகிய கேகய நாட்டிற்கு ஜனகர் பகைவர். இந்நிலையில் உன் பிறந்த இடம் தாக்கப்படலாம் என்று மந்தரை சொல்ல கைகேயி மனம் மாறினாள். எனவே தசரதர் கைகேயிக்கு ஏற்கனவே தருவதாக வாக்களித்த இரண்டு வரங்களைப் பயன்படுத்தி ஒரு வரத்தால் பரதன் ஆட்சிக் கட்டில் ஏறவும், மற்றொரு வரத்தால் ராமன் பதினான்கு ஆண்டுகள் வனம் புகுதல் வேண்டும் எனவும் தசரதனை கேட்குமாறு மந்தரை சொல்லிக் கொடுத்தாள்.

மந்தரையின் தூண்டுதலால் தசரதனிடம் அவ்வாறே வரங்களைத் தற்போதே தரவேண்டும் எனக் கைகேயி கேட்டாள். மன்னன் ராமன் மீது கொண்ட பிள்ளை பாசத்தை அளவிட முடியாது. கைகேயி கூட அப்படித்தான் இருந்தாள். ஆனால் தற்போது இவ்வாறு மாறி விட்டாளே என வருந்தினார். தசரதன் எவ்வளவு கெஞ்சியும் அவளுடைய பிடிவாதத்தை மாற்ற மறத்து விட்டாள். தந்தையின் நிலை கண்டு அவர் வாக்கை நிறைவேற்றச் சித்தமானார் ராமன். பரதனுக்கு ஆட்சியை அளித்து விட்டு ராமன் காட்டிற்குப் போனார். அவரோடு லட்சுமணனும் சீதையும் உடன் சென்றார்கள். தன் பிரியமான மகன் கானகம் சென்றான் என கேள்விப்பட்ட தசரதன் அத்துயரம் தாளாமல் உயிர் துறந்தான். அயோத்தி நகரமே சோகத்தில் மூழ்கியது. காட்டுக்குச் சென்ற ராமனுடன் கங்கைக் கரையில் குகன் என்ற வேடன் நட்புக் கொண்டான். அவன் உதவியால் கங்கையைக் கடந்து பரத் வாஜ முனிவர் ஆசிரமத்திற்கு ராமன் வந்தார். அங்கு அவரது உபசாரத்தை ஏற்றுக் கொண்ட பின்னர் சித்திரகூடம் சென்று அங்கு பர்ண சாலையை அமைத்துக் கொண்டான். அங்கு ராமன், சீதை, லட்சுமணன் மூவரும் தங்கினார்கள்.

இந்நிகழ்ச்சிகள் நடக்கும் போது பரதன் தன் தாய் வழிப்பாட்டன் நாடாகிய கேகய நாட்டிற்கு போயிருந்தான். அயோத்திக்கு அவன் மீண்ட சமயம் தன்னைப் பெற்ற அன்னையின் பேராசையால் ஏற்பட்ட சம்பவங்களை தெரிந்து மிகவும் வருந்தினான். மூத்தவன் இருக்க நான் எப்படி முடி சூடுவது என்று பட்டத்தை ஏற்க மறுத்து விட்டான். அத்துடன் வனத்திற்குச் சென்று சகோதரர்களை அழைத்து வரப்போனான். சித்திரகூடம் சென்றான். தந்தையின் மரணச் செய்தியைச் சொன்னான். சொல்லி விட்டு அயோத்தி நாட்டை வந்து ராமன் தான் ஆள வேண்டும் என்று வற்புறுத்தினான். ஆனால் ராமன் மறுத்து விட்டார். பின்பு அங்கேயே மிகவும் துயருற்ற ராமனும், சகோதரரும் தந்தைக்குச் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்தனர். பரதனிடம் ராமன், பரதா! உன் விருப்பப்படி நான் அயோத்திக்கு வருவது சரியல்ல. தந்தையின் வாக்கு பொய்யாகி விடும். நானும் என் வாக்குறுதியை நிறைவேற்றத்தானே வனம் வந்திருக்கிறேன். அவருக்கு நீயும் மகன் என்ற முறையில் அயோத்தி சென்று மக்களுடைய நலத்தைப் பேணுவதில் அக்கறை செலுத்து என்றான். "அண்ணா!  அயோத்தி அரசுக்கு உரியவர் தாங்கள். நீங்கள் அங்கு வராமல் நான் அயோத்தி திரும்பமாட்டேன் என்ற சபதம் எடுத்து இங்கு வந்திருக்கிறேன். ஆக தயவு செய்து தாங்கள் பட்டத்தை ஏற்று கொள்ள வேண்டும்." என்று பரதன் பணிந்து உரைத்தான். "தம்பி! அரசன் இல்லாத மக்கள் தவிப்பார்கள். உடனே நீ அயோத்திக்குப் போக வேண்டும்.." என்றார் ராமர். " அண்ணா அப்படியானால் நான் உங்கள் ராஜ்யத்தை உங்கள் பிரதிநிதியாகவே ஆட்சி செய்வேன். அதற்காகத் தாங்கள் தங்களது பாதுகைகளை எனக்குத் தந்தருள வேண்டும்."  என்று பிரார்த்தினான். ராமன் பாதுகைகளைக் கொடுத்தார். அவற்றைத் தலை மேல் தாங்கிக் கொண்ட பரதன், அயோத்திக்குப் போகவில்லை. ராமனின்றி தலைநகர் போவதில்லை என்ற உறுதி பூண்டிருப்பதால் நந்திக்கிராமம் என்ற இடத்திற்கு சென்றான். ராமனுடைய பாதுகைகளைச் சிம்மாசனத்தில் வைத்து பூஜித்து அவருடைய பிரதிநிதியாகவே இருந்து அரசு காரியங்களை மேற்கொண்டான்.

பகுதி இரண்டு....

ஸ்ரீராமன், சீதை லட்சுமணுடன் அத்திரி முனிவர் ஆசிரமம் போனார். அங்கு தங்கி அவருடைய உபகாரங்களை ஏற்றுக்கொண்டு மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தான். அவர்கள் செல்லும் வழியில் விராதன் என்ற அரக்கன் குறுக்கிட்டான். அவனை அழித்து விட்டு அகஸ்தியர் ஆசிரமம் சென்றார். அவர் வில்லுப், அஸ்திரங்களும் கொடுத்து உதவினார். அங்கிருந்து கோதாவரி நதி தீரத்திற்குப் போகும் வழியில் பறவைகளின் அரசனான ஜடாயுவை சந்தித்தார். அவரோடு அளவளாவிய பின்னர் பஞ்சவடி வந்தார். பர்ணசாலை அமைத்து அவர்கள் மூவரும் அங்கு தங்கினர். அந்தக் காட்டின் பெயர் தண்டகாருண்யம் என்பதாகும். ராமர் அங்கு வந்து சேர்ந்ததால் அங்குள்ள முனிவர்கள் அரக்கர் பயமின்றி வாழ முடிந்தது. அங்கே ஒருநாள் இராவணன் என்ற இலங்கேஸ்வர னுடைய தங்கை சூர்ப்பனகை என்பவளைக் காண நேர்ந்தது. அவர் ராமருடைய அழகைக் கண்டு மயங்கினாள். அவரை அடைய ஆசைப்பட்டாள். ஆயினும் தன்னிலும் அழகு மிகுந்த சீதை அவன் கூட இருக்கும் வரை தன் ஆசை நிறைவேறாது என்ற முடிவுக்கு வந்தாள் சூர்ப்பனகை. பேரழகியாக வடிவம் தாங்கிப் பஞ்சவடிக்குள் நுழைந்தாள் சூர்ப்பனகை. லட்சுமணனுக்கு அவளுடைய தீய எண்ணம் தெரிய வந்தது.

அதனால் அவன் அவளுடைய மூக்கையும், காதுகளையும் அறுத்து அவளை அவமானப்படுத்தி விரட்டி அடித்தான். இதை அவளுக்குப் பக்கத்தில் இருந்த கரன், தூஷணன் என்ற இரு சகோதரர்களுக்கும் தெரிவித்தாள். அவர்கள் தம் சகோதரிக்கு ஏற்பட்ட அவமானத்தைப் பொறாதவராக ராம, லட்சுமணர்களைக் கொன்று விடுவதாகக் கூறி அவர்களுடன் போரிட வந்தார்கள். ராமர் தனியாகவே இருந்து மிகவும் குறுகிய காலத்தில் அவர்கள் இருவரையும் சம்ஹரித்தான். சூர்ப்பனகை உடனே இலங்கைக்கு ஓடினாள். ராவணனாகிய தன் சகோதரனிடம் கர, தூஷணாதியர் இராமனால் வதம் செய்யப்பட்டதும் தான் காது, மூக்கு அறுபட்டதையும் உள்ளம் உருக எடுத்துச் சொன்னாள். அதோடு அவள் நிறுத்தினாளா? இல்லை. ராமன் மனைவி சீதை பேரழகி. அந்த அழகு பிம்பத்தை அவன் அடைய வேண்டும் என்ற ஆசைக்கனல் அவன் உள்ளத்தில் தோன்றும் படி சொன்னாள். இதை கேட்டதும் சீதையை அபகரித்துக் கொண்டு வந்து தன் அந்தப்புரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என ராவணன் தீர்மானித்தான். மாயவேலை செய்வதில் அதிசாதுர்யமான மாரீசன் என்ற அரக்கனைப் பொன்மான் உருக்கொண்டு பஞ்சவடியில் திரிய சொன்னான். அப்படி மானாக திரிந்து ராம லட்சுமணர்களை அங்கிருந்து சிறிது தூரம் தள்ளி அழைத்துச் செல்லுமாறு ஏற்பாடு செய்திருந்தான். அவ்வாறே மாரீசன் பொன் மானாக மாறி பஞ்சவடிக்குச் சென்று ராமர் சீதை உள்ள பர்ணசாலைப் பக்கம் நடமாடினான். தகத்தகாயமாக மின்னும் பொன்மானைக் கண்டாள் சீதை. அதைத் தனக்குப் பிடித்து தருமாறு ராமனை வேண்டினாள்.

லட்சுமணன், தேவி அது உண்மையான மான் அல்ல. உங்களையும் மற்றோரையும் ஏமாற்ற வந்த மாயமான் என்றான். சீதை அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஸ்ரீராமர் பர்ணசாலையில் லட்சுமணனைக் காவலாக இருக்கும் படிச் சொல்லி விட்டு மானைத் துரத்தினார். கையில் வில்லோடு தன்னை தொடர்ந்து வரும் ஸ்ரீராமனிடம் அகப்படாத மாயமான் அவனை வெகு தூரம் இழுத்துச் சென்றது. அலைச்சலில் சினந்த ராமன் ஒர் அம்பு விட்டு அழகிய மானைக் கொன்றார். மாரீசன் உயிர் விடும் போது ராமனுடைய குரலைப் போன்று மாற்றிக் கொண்டு ஹே லட்சுமணா! ஹே சீதா என்று அலறியபடியே உயிரை விட்டான். சீதை பர்ணசாலையில் இருந்தாலும் அவளுக்கு அந்தக் குரல் கேட்டது. அவள் அதனால் வேர்த்து வெலவெலத்துப் போய் லட்சுமணா! உன் அண்ணாவுக்கு ஏதோ ஆபத்து என நினைக்கிறேன். நீ சீக்கிரம் போய் பார் என்று லட்சுமணனை அங்கிருந்து போய்ப் பார்த்து வரும்படி வேண்டினாள்.

தேவி! இது அந்த மாயமானுடைய குரல். என் சகோதரனை வெல்பவர் இந்த பூமியில் எங்கும் யாரும் கிடையாது. ஆகவே கவலை வேண்டாம் என்றான் லட்சுமணன். இப்படி சொன்னதும் அவளுக்கு கோபமும், ஆத்திரமும் வந்தது. லட்சுமணா, நான் சொல்வதைக் கேள், உடனே ஓடிச்சென்று உன் அண்ணனுக்கு என்ன நேர்ந்தது என்று பார்! என ஆவேசமாகக் கூறினாள். சீதையைப் பர்ணசாலையில் தனியே விட்டு விட்டுத் தன் அண்ணனைத் தேடிச் சென்றான் லட்சுமணன். அந்த சமயம் பஞ்சவடியில் ராவணன் ஏற்கனவே வந்து பதுங்கி இருந்தான். ஓர் சந்நியாசியாய் பர்ணசாலைக்கு வந்து பிச்சை கேட்டான் சீதை பிச்சை போட வந்தாள். அப்படியே  அவளை கவர்ந்து கொண்டு விமானத்தில் ஏறி பறந்து போனான் ராவணன். பறக்கும் ஆகாய வீதியில் பறவைகளின் அரசனான ஜடாயு வந்து எதிர்த்தான். அடாத செயலுக்கு அழிவுகாலம் வந்து சேரும் என்று சொல்லி விட்டு அவன் ராவணனைத் தாக்கினான்.

ராவணனோ ஜடாயுவை அடித்துப் பலமான காயங்களை ஏற்படுத்தி விட்டு அவனைக் கீழே தள்ளி விட்டு நேரே இலங்கைக்குப் போனாள். மாரீசனைக் கொன்ற ராமன் பர்ணசாலைக்கு திரும்பினான். அங்கு வரும் வழியில் லட்சுமணன் தங்களுக்கு ஏதோ ஆபத்து என பார்த்து வரும் படி சீதாதேவி என்னை அனுப்பினார் என ராமனிடம் சொன்னான். இருவரும் பெருத்த கலக்கமுற்று பர்ணசாலைக்கு திரும்பினார்கள். அங்கு சீதை இல்லாததைக் கண்டு கலக்க முற்றனர். இருவரும் சீதையை வனாந்தரம் முழுவதும் தேடிக் கொண்டிருந்தனர். அப்போது பலத்த காயங்களுடன் ஜடாயு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டனர். ஜடாயுவை தன் மடியில் கிடத்தினார் ராமன். ராவணன் சீதையை கடத்திச் சென்றதை அறிவித்து விட்டு உயிர் நீத்தான் ஜடாயு. ஜடாயுக்கு ஈமச்சடங்குகளை எல்லாம் செய்து விட்டு ராமனும், லட்சுமணனும் அங்கிருந்து கிளம்பினார்கள். கபந்தன் என்ற ஓர் அரக்கன் அவர்களை இடைமறித்தான். அவனோ பிறப்பால் அரக்கன் கிடையாது. சாபத்தின் காரணமாக அவன் அரக்கனாகத் திரிந்தான். அவனை அவர்கள் வதம் செய்ய சாபவிமோ சனம் பெற்றான். சாபவிமோசனம் ஆனதும் அவன் உடல் தேஜோமயமாகத் திகழ்ந்தது. அந்த ஒளிமிகுந்த உடலுடன் அவர்களை வலம் வந்து வணங்கி அவர்களைச் சபரியிடம் போகுமாறு வேண்டினான். அவர்கள் சபரியிடம் போனார்கள். அவள் மிகவும் பக்தி சிரத்தையோடும், அன்போடும் உபசரித்தாள். அவள் ராமருக்குப் பழவகைகளைக் கொடுக்கும் முன்பு தான் கடித்துச் சுவை பார்த்து விட்டே அவருக்கு கொடுத்தாள். அதை  கண்டு பூரிப்பும், ஆனந்தமும் அடைந்தான் ராமன். அவள் கடித்துக் கொடுத்தப் பழங்களை விரும்பி சாப்பிட்டான். அவள் ராமரையும், லட்சுமணரையும் மதங்கமலைக்குப் போகும் படி அறிவுறுத்தினாள். மேலும் அங்கு சென்றால் அந்த மலையைச் சேர்ந்த சுக்ரீவன், அனுமன் முதலியோர் சீதையை மீட்க பெரிதும் உதவுவார்கள் என்றும் சொன்னாள். பகவான் அவளுக்கு மோட்சத்தைக் கொடுத்து விட்டு அங்கிருந்து மதங்கமலைக்குப் புறப்பட்டார்.

பகுதி மூன்று

சுக்ரீவன் மதங்கமலையில் அனுமனோடு தங்கியிருந்தான். கிஷ்கிந்தை மன்னனான வாலியின் சகோதரன் சுக்ரீவன். அவனை அவன் அண்ணன் நாட்டை விட்டுத் துரத்திவிட்டதால் அவனுக்குப் பயந்து மதங்கமலையில் ஒளிந்திருந்தான். ராம, லட்சுமணர்களை அந்த மலைச்சாரலில் பார்த்தவுடன் அவர்கள் தன் அண்ணா வாலியால் அனுப்பப்பட்டுத் தனக்கு துன்பம் விளைவிக்க வருகிறார்களோ என்று பயந்தான். எனவே அவர்களை யார் என்று தெரிந்து வரும் படி அனுமனை அனுப்பினார். அவர்களைப் பற்றி அறிந்து கொண்ட அனுமன் ஸ்ரீராமனிடம் மிகுந்த மதிப்பு கொண்டான். பிறகு சுக்ரீவனிடம் ராம, லட்சுமணர்களை அழைத்துச் சென்றான். சுக்ரீவனைச் சந்தித்து விவரம் அறிந்ததும் அவனைத் தன் சகோதரர்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டு அவனுடைய துயரத்தைத் துடைப்பதாக வாக்குறுதி கொடுத்தான். எனினும் சுக்ரீவனுக்கு அவனிடம் முழு நம்பிக்கை ஏற்படவில்லை. காரணம் வாலியை ராமன் ஒருவனாகக் கொல்ல முடியாது என்று அவன் நினைத்தான். காரணம் வாலியும் வரம் பெற்றவன், அவனை எதிர்ப்போர் பலத்தில் பாதி அவனிடம் போய் விடும். அப்படிப்பட்டவனை ஒரு தெய்வம் தான் வெல்ல முடியுமே தவிர ஒரு மனிதன் நிச்சயம் ஜெயிக்க முடியாது என்ற நம்பிக்கை அவனிடம் வலுத்து இருந்ததே காரணம். பின்னர் வாலியை யுத்தத்திற்கு அழைக்கும் படி சுக்ரீவனை அனுப்பினார். வாலி வந்தான். சுக்ரீவனுடன் போரிட்டான். அப்படி அவர்கள் இருவரும் போரிடும் போது ராமன் வாலியை மறைந்து நின்று அம்பு எய்து கொன்றான். சுக்ரீவனைக் கிஷ்கிந்தை மன்னன் ஆக்கினான்.

அதற்குப்பின் சீதையை தேட பல பாகங்களுக்கும் வானரப் படைகளை அனுப்புவதாகச் சொன்னான் சுக்ரீவன். அப்போது மழைக்கால மாக இருந்ததால் சிறிது காலம் கழித்து அனுப்புவதாக வாக்குறுதி அளித்தான். பின் தான் கூறிய வாக்குறுதியை மறந்தே போனான் சுக்ரீவன். அவன் சிற்றின்பத்தில் கட்டுண்டு கிடக்கிறான் என்பதைக் கேள்விப்பட்ட ராமர், லட்சுமணனை அவனிடம் அனுப்பி வைத்தான். அங்கே மதிமயங்கிக் கிடந்த சுக்ரீவனை பார்த்து, வாலியை  கொன்ற அஸ்திரத்தைப் போல ஆயிரக்கணக்காண அஸ்திரங்கள் இருக்கின்றன அதை மறக்க வேண்டாம் என்று தெரிவித்தார். அதை கேட்டதும் தான் செய்த தவறை உணர்ந்தான் சுக்ரீவன். ராமனின் பாதங்களில் விழுந்து வணங்கி தன்னை மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டான். அதன் பின் சீதையைத் தேட நாலாப்புறமும் வானரப் படைகளை அனுப்பினான். அப்படி சென்ற படைகளில் தெற்கே சென்ற படைகளை அனுமன், அங்கதன், ஜாம்பவான் தலைமை தாங்கி நடத்தி சென்றனர். அவர்கள் எங்கெல்லாமோ தேடியும் கிடைக்காமல் மகேந்திர மலைக்கு வந்தார்கள்.

முயற்சியில் தோற்றாலும் உடனே அவர்கள் கிஷ்கிந்தை திரும்பவில்லை. சீதாபிராட்டியை பார்க்கும் பாக்கியம் ஜடாயுவுக்குக் கிடைத்தது மாதிரி தங்களுக்குக் கிடைக்கவில்லையே என அவர்கள் ஏங்கினர். அந்த சமயத்தில் அருகாமையில் தான் ஜடாயுவின் தம்பி சம்பாதி இருந்த விவரம் தெரிய வந்தது. ராம, லட்சுமணர்களுடைய துன்பத்தை அறிந்த சம்பாதி சீதையை ராவணன் சிறை வைத்திருக்கிற சேதியை சொன்னான். அனுமனை அனுப்பி கடல் தாண்டி ராவணன் அவளை எங்கே சிறை வைத்திருக்கிறான் என்று அறிந்து வரும் படியும் ஆவேசமாகக் கூறினார். அதே போல எல்லோரும் அனுமனை அவ்வாறு வேண்டிக்கொண்டார்கள். பகவானிடம் அவன் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தியால் அவன் விஸ்வரூபம் எடுத்தான். கடலைத் தாண்டி இலங்கையை அடைந்து அங்கு சீதையை நெடுகத் தேடினான். கடைசியாக அசோக வனத்திற்குள் அவன் போனதும் அங்கே சீதா, ஸ்ரீராமரை நினைத்து வருந்தி அழுது கொண்டிருந்தாள். இதைக் கண்ட அனுமன் மிகவும் வருந்தினார். அவளை சுற்றி காவலில் இருந்த பெண்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பொழுது சீதாதேவியை நேரில் பணிந்து தொழுதான். தான் யார் என்பதை அவளிடம் எடுத்து கூறினான். தங்களைத் தான் நான் தேடி வந்துள்ளேன். அதற்கு அடையாளமாக ஸ்ரீராமர் கொடுத்து அனுப்பிய கணையாழியைக் கொடுத்து வணங்கினான். அதைத் தன் கைகளில் வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டாள் சீதா. எம்பெருமானுடைய கணையாழியைப் பெற்று மகிழ்ந்த சீதா தன்னிடமிருந்த சூடாமணியை அனுமனிடம் கொடுத்தாள். பின்பு இலங்கையில் தான் இருக்கும் நிலைமையை எடுத்துக் கூறி பிரபுவை தயவு செய்து சீக்கிரமே வந்து என்னை சிறை மீட்கச் சொல்வாயாக என்று வேண்டிக் கொண்டாள்.

அவளைப் பார்த்து விட்டோம் என்ற களிப்பில் உடனே அனுமன் திரும்பவில்லை. ராவணன் கோட்டைக்குள் இருக்கிற நிலைமையையும் தெரிந்து கொண்டு போக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இதனால் ராவணனுடைய அசோகவனத்தை அழிக்கும் வேலையில் இறங்கினான். இந்த சேதி ராவணன் காதுக்கு எட்டியது. உடனே அந்த வானரத்தை பிடித்து வருமாறு தன் பேரனும், தன் மகன் இந்திரஜி த்தின் பிள்ளையான அட்சயன் தலைமையில் ஒரு சேனையை அனுப்பினான். அனுமன் அவர்களை ஒரு சிலகண பொழுதில் மாய்த்து விட்டான். அதனால் சீற்றம் கொண்ட ராவணன் மகன் இந்திரஜித்தே நேரில் புறப்பட்டு அசோகவனத்திற்கு வந்தான். அவன் தன்னுடைய பிரம்மாஸ்திரத்தினால் அனுமனைக் கட்டி இழுத்து வந்து ராவணன் அவையில் நிறுத்தினான். அப்போது அவனை பார்த்து ராவணன், அத்துமீறி அட்டகாசம் செய்யும் வானரமே நீ யார்? என்று வினவினான். என் பெயர் அனுமன். நான் கோசலை நாட்டு மன்னன் ஸ்ரீராமனுடைய தூதன். அதோடு கிஷ்கிந்தை அரசன் சுக்ரீவனுடைய தாசன் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு மேலும் ராவணனிடம் ராவணா நீ புத்தி கெட்டு போய் தேவி சீதாவை அசோகவனத்தில் சிறை வைத்திருக்கிறாய். இனியும் நீ தாமதியாமல் ஸ்ரீதேவியை எம்பெருமானிடம் ஒப்படைத்து விடு. அவர் உன்னை மன்னித்து உனக்குத் திருவருள் தருவார் என்று எடுத்துச் சொன்னார். அப்போது ராவணன் அவனைக் கொன்று விடுங்கள் என்று கூறினான். தூதனாக வந்த அனுமனை நாம் கொல்வது தர்மம் அல்ல என்றான் ராவணன் தம்பி விபீஷணன்.

உடனே இலங்கேஸ்வரன் தன் ஆட்களை அழைத்து ஏதாவது அவமானம் செய்து அனுமனை அனுப்பலாம் என்று சொல்லி அனுமன் வாலில் தீ வைத்து அவனை விரட்டி விடுங்கள் என்று கட்டளை இட்டான். அனுமன் தன்  வாலில் எரிந்த நெருப்பைக் கொண்டு இலங்கையை எரித்து விட்டு மகேந்திரமலைக்கு திரும்பினார். அங்கிருந்து எல்லாருமாக ஸ்ரீராமரை அடைந்தனர். கண்டேன் தேவியை என்று அனுமன் ஸ்ரீராமரிடம் சொல்லி விட்டு அவள் அடையாளமாகக் கொடுத்து அனுப்பிய சூடா மணியைக் கொடுத்தார். தேவியின் சூடாமணியைக் கண்டதும் ராமர் கண்ணீர் விட்டார். சீதாதேவியின் நிராதரவான நிலையை நினைத்துப் பெரிதும் வருந்தினார். சுக்ரீவனை அழைத்து யுத்தத்திற்குத் தயாரா கும்படி கேட்டுக் கொண்டார். வானர சேனைகளுடன் அனைவரும் புறப்பட்டு சமுத்திரக் கரைக்கு வந்து சேர்ந்தார்கள். ராமனிடம் கொண்டிருந்த அன்பு காரணமாக சமுத்திரத்தில் மலைகளையும், பாறைகளையும் போட்டு இலங்கைக்குப் போய்ச்சேர பாலம் அமைத்தார்கள். அதன் வழியே அனைவரும் இலங்கைத் தீவுக்குப் போய்ச் சேர்ந்தனர். ராவணனுடைய தம்பி விபீஷணன் அசுர குலத்தில் பிறந்தாலும் தன் சகோதரன் தர்மத்திற்கு விரோதமாகப் பிறர் மனைவியை சிறை எடுத்து வந்திருப்பதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆகவே அவன் தன் அண்ணனிடம் தர்மங்கள் எடுத்துச் சொன்னான். அண்ணா! நீ இன்று சீரும் சிறப்புமாக இருக்க காரணம் பரமேஸ்வரனாகிய சிவபெருமானிடம் பெற்ற வரம். அவரும் உனது ஈன செயலை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார். பிறர் மனைவியை விரும்புவது தகாது என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றனவே. ஆகவே இத்தகைய பாதக செயலை விட்டு விடு. சீதா தேவியை ராமரிடம் ஒப்படைத்து சரணடைந்து விடுவோம். அவர் நம்மை மன்னித்தருள்வார் என்றான்.

ராவணன் கோபமாக விபீஷணனைப் பார்த்து அசுரகுலத்துக்கே நீ இழுக்கு! நீ கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றான். இனியும் இவனுடன் இருப்பது பாதகம் என்றெண்ணிய விபீஷணன் ராமரிடம் சரண் புகுந்தான். அப்போதே ராமன் இலங்கையை அவனுக்குக் கொடுத்து முடிசூட்டி வைத்தார். யுத்தம் தொடங்கும் முன் அரக்கர்கள் குணம் மாறலாம் என்று நினைத்து ராமன் ராவணனிடம் அங்கதனைத் தூது அனுப்பினான். ராவணனோ சீதையை விடுவிக்க முடியாது எனப் பிடிவாதமாக மறுத்து விட்டான். யுத்தம் மூண்டது. வானர சேனைகள் அரக்கர் கூட்டத்தை துவம்சம் செய்தனர். ராவணன் தன் படைகளுடன் ராமனை எதிர்த்தான். அவனுடைய சேனைகள் அனைத்தையும் வீழ்த்தி வில்லை முறித்து யுத்த களத்தில் ராவணனை தலை குனியச் செய்தார் ராமன். நிராயுதபாணியாக இலங்கேஸ்வரன் நின்ற போது இன்று போய் நாளை படை திரட்டி மீண்டும் வா! என்று மேலும் அவகாசம் கொடுத்தார் ராமர்.

பகுதி நான்கு

அவமானம் தாங்க முடியாத ராவணன் அரக்கர் சேனையை ஒன்று திரட்டி தன் தம்பி கும்பகர்ணனைப் போர்க்களத்திற்கு அனுப்பினான். அவன் வதம் செய்யப்பட்டதும் தன் குமரன் அதிகாயனை அனுப்பினான். அவனும் கொல்லப்பட்டதும் இந்திரஜித் யுத்தகளத்தில் குதித்தான். இந்திரஜித், லட்சுமணனையும் பிற வீரர்களையும் நாக பாசத்தால் கட்டினான். கருடன் பிரத்தியட்சமாக அந்த பாசத்தை அறுத்து அத்தனை பேரையும் விடுவித்தான். மறுபடியும் இந்திரஜித் அவர்களை பிரம்மாஸ் திரத்தால் கட்டினான். அனுமன், ஜாம்பவானை தவிர அத்தனை பேரும் மயங்கி விழுந்தன. அனுமன் விரைந்து போய் சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து எல்லோரையும் பிழைக்கச் செய்தான். இந்திரஜித் தன் நாக, பிரம்ம பாசங்கள் தோல்வியடைந்ததால் #நிகும்பலை என்ற யாகத்தைச் செய்யத் தொடங்கினான். அதற்காக ஓர் இரகசிய இடத்தைத் தேர்ந்து எடுத்து இந்த வேள்வியை ஆரம்பித்தான். அதனால் யாராலும் தன்னைக் கொல்ல முடியாத வரம் பெற்றுப் போர் முனைக்கு வர ஆயத்தமானான். அதை அறிந்த விபீஷணன் ராம, லட்சுமணர்களிடம் விபரம் சொல்லி அந்த ரகசிய இடத்திற்கு அவர்களை அழைத்து சென்று யாகத்தை தடுத்து இந்திரஜித்தை வதம் செய்ய வைத்தான். தன் மகன் இந்திரஜித் இறந்து விட்டான் என்ற சேதி கேட்டு ராவணன் ஆடிப் போனான். எனினும் ஸ்ரீராமனிடம் அவன் பணிய விரும்ப வில்லை. தன் மூல பலத்தைத் திரட்டிக் கொண்டு போருக்கு வந்தான். தமது பாணத்தால் ராவணனை சம்காரம் செய்தார் ராமர். அப்போது தேவர்கள் அவர் மீது மலர் மாரி பொழிந்தனர்.

கற்பகாலம் ஜீவித்திருக்க விபீஷணனுக்கு அனுக்கிரகம் செய்து இலங்கை மன்னனாக முடிசூட்டி வைத்தார் ராமர். பின்னர் அனைவரும் அயோத்திக்கு ராமர் சீதையுடன் புஷ்பக விமானத்தில் செல்லும் போது வழியில் கிஷ்கிந்தையிலும் பரத்வாஜர் ஆசிரமத்தில் தங்கிச் சென்றார்கள். அயோத்தியே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தது. பரதன் ஸ்ரீராமரை சிங்காசனத்தின் அமர்த்தினான். வசிஷ்டர் முதலான ரிஷிகள் ராமனுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்து மகுடாபிஷேகம் செய்தனர். ஸ்ரீராமர் சீதையுடன் தரும நெறி வழுவாது பல ஆண்டுகள் ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தார். கோசலை நாடு சீரும் சிறப்பும் பெற்றுத் திகழ்ந்தது. ஒரு நாள் ராமர் நகர் வலம் வந்தார். அங்கே ஒரு வீட்டில் உள்ளவர்கள் தம்மைப் பற்றி பேசுவதைக் கேட்டார். அங்கே சீதாதேவியைப் பற்றி தவறான விவாதம் நடந்து கொண்டிருப்பதைக் கேட்டார். அந்த வார்த்தைகள் ராமனுடைய நெஞ்சில் முள் போல் குத்தியது. தர்மத்திற்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்து வந்த நாம் இப்படி ஒரு விஷயத்தை எண்ணிப் பார்க்கவில்லையே என துயருற்றார். இதன் காரணமாக உலக நிந்தனைக்குப் பயந்து கர்ப்பிணியான தன் சீதையைக் காட்டில் கொண்டு போய் விட்டு வர லட்சுமணரைப் பணித்தார்.

தாங்க முடியாத துயரத்துடன் வந்த ஜானகியை வால்மீகி தன் ஆசிரமத்தில் தங்க செய்து அவளை நன்கு கவனித்துக் கொண்டார். அவளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். அந்த குழந்தைகளுக்கு லவன், குசன் என்று பெயரிட்டார் வால்மீகி. அதே சமயம் அயோத்தியில் லட்சுமணனுக்கு, புதன், சந்திரகேது, பரதனுக்கு தட்சன், புஷ்கரன், சத்ருகனுக்கு சுதாகு, சுருதசேனன் என பிள்ளைகள் பிறந்தனர். பரதன் திக் விஜயம் செய்து கந்தர்வர்களை வென்று ஏராளமான செல்வங்களைக் கொண்டு வந்து ராமனிடம் சமர்ப்பித்தான். சத்ருக்கன் லவணன் என்ற ஓர் அரக்கனை வதம் செய்தான். அவன் மதுவனத்தில் மதுரை என்ற ஒரு பட்டணத்தை உண்டாக்கினான். வால்மீகி மகரிஷி ராமனுடைய சரித்திரத்தை ராமாயணம் என்ற பெயரில் இயற்றி அதை லவகுசர்களுக்கு சொல்லி வைத்தார். இருவரும் ஒருநாள் இதை ராமனுடைய அரசவையில் அரங்கேற்றினார்கள். அவர்களை தம் குமாரர்கள் என்று அறிந்த ராமர் மேலும் வால்மீகி ஆசிரமத்தில் சீதை இருக்கிறாள் என்பதையும் அறிந்து அவளை அடைய எண்ணினார்.

ஸ்ரீராமனுடைய உள்ளக்கிடக்கையை அறிந்த வால்மீகி அவளைப் புனிதவதி என்று ஏற்றுக் கொள்ளும் படி கூறினார். சீதையோ தான் கற்புத்தன்மையில் இருந்து கொஞ்சமும் வழுவாது இருக்கிறேன் என்பது உண்மையானால் தன்னை பூமாதேவி அழைத்துக் கொள்ளட்டும் என்று தெரிவித்தாள். அவள் இப்படிச் சொன்னதும், பூமி இரண்டாகப் பிளந்தது அதனுள்ளிருந்து பூமாதேவி வெளிப் பட்டு சீதையை தன் இரு கைகளில் ஏந்தியவளாக அழைத்துக் கொண்டு மறைந்தாள். தன் விருப்பத்திற்கு மாறாக பூமாதேவி தன் தர்மபத்தினியை பிரித்து சென்று விட்டாள் என ராமர் கோபமடைந்தார். அப்போது பிரம்ம தேவன் தோன்றி ராமனை சமாதானப்படுத்தி சீதா தேவியின் பூலோக வாசம் முற்றுப் பெற்றது. அவள் வைகுண்டத்தில் உங்கள் வருகைக்காக காத்திருப்பாள் என்று பிரம்மா சொன்னார். அதன் பிறகே ராமர் சாந்தமடைந்தார். ராமர் தன் புதல்வர்கள் லவ, குசனை ஏற்றுக் கொண்டார்.

பதின்மூன்றாயிரம் ஆண்டுகள் ஸ்ரீராமர் ஆட்சி செய்து விட்டு ராஜ்யத்தை தன் புத்திரர்களுக்கும், தமது சகோதரர்களின் பிள்ளைகளுக்கும் பகிர்ந்து அளித்தார் அதன் பிறகு சரயு நதியில் இறங்கி வைகுண்டம் சேர்ந்தார். அவரை பின் தொடர்ந்து சங்கு சக்ர அம்சங்களாகப் பிறந்த சத்ருகன், பரதனும் ஆதிசேஷனான லட்சுமணனும் பூலோகத்தை விட்டு வைகுந்தம் சேர்ந்தனர்..

தசாவதாரம் எட்டு.... பலராமன் அவதாரம்... நாளை தொடர்வோம்...
  ....

செவ்வாய், 19 மே, 2020

*சாளக்கிராம  நித்ய பூஜா !*

              *கண்டகி  நதியில்  கிடைக்கும்  சாளக்கிராம  கற்கள்  மிகுந்த  புனிதம் வாய்ந்தவை.* இவைகளையே  தெய்வ  ஆராதனைக்கு  பயன்படுத்துகிறோம். சிவ, விஷ்ணு , நரசிம்ம .......என  பலவாறாக  சாளக்கிராம  கற்கள்  கிடைக்கின்றன.  உங்களின்  ஆராதனை  தெய்வத்திற்கு  ஏற்றாற்போல  தேர்ந்தெடுத்து   நித்ய  பூஜை   செய்வது  சாலச்சிறந்தது.

             சாளக்கிராமக்   கற்களில்   இயற்கையாகவே  நம்முடைய   ஆராதன மூர்த்தி   இருப்பதால்,  அதற்கு   சங்கல்பம்,  ஆவாஹனம் , விசர்ஜனம் .....போன்றவைகள்   செய்வதில்லை.  அவைகள்  சுயம்பு  மூர்த்திகளே ................

விஷ்ணுவின் பிரதி, சாலக்கிராமம் ஆகும். அது ஒருவகைக் கல்லால் ஆனது. கண்டகி ஆற்றங்கரையில் விஷ்ணு கல்லாகுமாறு சபிக்கப்பட்டார் என்று பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது. பலவகை சாலக்கிராமங்கள் பற்றி கருட புராணம் கூறுகிறது. எல்லா சாலக் கிராம கற்களும் புனிதமானவையே. ஒரு சாலக்கிராமத்தைத் தொட்டால் முற்பிறப்பில் செய்யப்பட்ட பாவங்களும் தீரும்.
1. கேசவ சாலக்கிராமம் என்பது சங்கு, சக்கர, கதை, தாமரைக் குறிகள் காணப்படுவது. இவை கூறப்பட்ட வரிசையில் இருக்க வேண்டும்.
2. மாதவ சாலக்கிராமத்தில் சங்கு, சக்கரம், பத்ம, கதை வரிசையில் இருக்கும்.
3. நாராயண சாலக்கிராமத்தில் பத்மம், கதை, சக்கரம், சங்கு என்ற வரிசை இருக்கும்.
4. கோவிந்த சாலக்கிராமத்தில் கதை, பத்மம், சங்கு, சக்கரம் என்ற வரிசை இருக்கும்.
5. விஷ்ணு சாலக்கிராமத்தில் பத்மம், சங்கு, சக்கரம், கதை என்ற வரிசை இருக்கும்.
6. மதுசூதன சாலக்கிராமத்தில் சங்கு, பத்மம், கதை, சக்கரம் என்ற வரிசை இருக்கும்.
7. திரிவிக்கிரம சாலக்கிராமத்தில் கதை, சக்கரம், சங்கு, பத்மம் என்று வரிசை இருக்கும்.
8. வாமன வடிவில் சக்கரம், கதை, பத்மம், சங்கம் என்ற வரிசையிலும்
9. ஸ்ரீதரன் வடிவில் சக்கரம், பத்மம், சங்கம், கதை என்ற வரிசையிலும்
10. ஹ்ருஷிகேசன் அமைப்பில் பத்மம், கதை, சங்கு, சக்கரம் என்ற வரிசையிலும்
11. பத்மநாபன் அமைப்பில் பத்மம், சக்கரம், கதை, சங்கு என்ற வரிசையிலும்
12. தாமோதரன் வடிவில் சங்கு, சக்கர, கதை, பத்மம் என்ற வரிசையிலும்
13. வாசுதேவன் வடிவில் சக்கரம், சங்கு, கதை, பத்மம் என்ற வரிசையிலும்
14. சங்கர்ஷனில் சங்கு, பத்மம், சக்கரம், கதை என்ற வரிசையிலும்
15. பிரத்யும்னனில் சங்கு, கதை, பத்மம், சக்கரம் என்ற வரிசையிலும்
16. அநிருத்தன் அமைப்பில் கதை, சங்கு, பத்மம், சக்கரம் என்ற வரிசையிலும்
17. புருஷோத்தமன் அமைப்பில் பத்மம், சங்கு, கதை, சக்கரம் என்ற வரிசையிலும்
18. அதோக்ஷஜ வடிவில் கதை, சங்கு, சக்கரம், பத்மம் என்ற வரிசையிலும்
19. நரசிம்மன் உருவில் பத்மம், கதை, சங்கு, சக்கரம் என்ற வரிசையிலும்
20. அச்சுதன் அமைப்பில் பத்மம், சக்கரம், சங்கு, கதை என்ற வரிசையிலும்
21. ஜனார்த்தனன் வடிவில் சங்கு, சக்கரம், பத்மம், கதை என்ற வரிசையிலும்
22. உபேந்திரனில் கதை, சக்கரம், பத்மம், சங்கு என்ற வரிசையிலும்
23. ஹரி அமைப்பில் சக்கரம், பத்மம், கதை, சங்கு என்ற வரிசையிலும்
24. ஸ்ரீ கிருஷ்ணனில் கதை, பத்மம், சக்கரம், சங்கு என்ற வரிசையிலும் அமைந்திருக்கும்.

  *மிகவும்   எளிமையாக  அவற்றுக்கு  பூஜை  செய்யும்  முறையைக்   காண்போம் :*

          1. பன்னீராலும் ,
          2. பச்சைக்கற்பூரம்   கலந்த   நீராலும்,
          3. பாலாலும்,
          4. சந்தனத்தால்,
          5. அபிஷேக மஞ்சள் , 
          6.  கரும்புச்சாறு  (இருந்தால்) ,
          7. அபிஷேக  திரவியப்பொடி  கலந்த   நீர்,...........
          8.  நெய் , தேன் மற்றும்   தயிராலும்,
          9.  விபூதி  கலந்த   நீராலும்,
        10.  கங்கை  நீராலும் ..................

      அபிஷேகம்   செய்யலாம்.  அவ்வாறு  செய்யும் பொழுது,  ஸ்ரீ ருத்ரம்  மற்றும் பஞ்ச சூக்தம் ( புருஷ சூக்தம் , ஸ்ரீ சூக்தம் , விஷ்ணு  சூக்தம், நாராயண  சூக்தம் , துர்கா  சூக்தம் ) பாராயணம்   செய்யலாம்.

          இவற்றுடன்  அந்ததந்த  உபாசனை   மூர்த்திகளின்  ஸஹஸ்ரநாமங்களோ,  அல்லது  அஷ்டோத்ரங்களோ  பாராயணம்  செய்யலாம்.  மேலும்  விருப்பமான  ஸ்துதிகள்,  ஸ்தோத்ரங்கள்   பாராயணம்  செய்வது   சாலச்சிறந்தது.

         அபிஷேகம்  முடிந்தவுடன்  மடி  வஸ்திரத்தால் (தூய்மையான  துணியால் )  துடைத்து  சந்தனம், குங்குமம் ....விபூதி  இட்டு ,.......ஆசனம், பாத்யம்,  அர்க்யம் , ஆசமனம்   செய்து ......... துளசி , வில்வம் , மலர்களால்  அர்ச்சித்து ,  தூப , தீப ,நைவேத்யம்   செய்து.........

       ஸ்நானம்,  கந்தம் , புஷ்பம் ............கற்பூர நீராஞ்சனம்   என  பூஜா  புத்தங்களில் விவரித்துள்ளதை  போல  அர்ச்சனைகள்  செய்து ஆனந்திக்கலாம்.

      சாளக்கிராமம்   உள்ள  வீடு  பாடல் பெற்ற   தலத்தின்  சிறப்பினைக்  கொண்ட புண்ய  க்ஷேத்ரம். 12  சாளக்கிராமம்  கொண்ட  வீடு  ஒரு  திவ்ய தேசம்
ஆகும்.  அங்கு  லக்ஷ்மி  நித்ய வாசம்  செய்கிறாள். மேலும்   பாவங்கள்  குறைந்து  அழிந்துவிடும்.     

            *மஹாபெரியவா   ஒருமுறை,  " எங்கு   சாளக்கிராம  பூஜை  நடைபெறுகிறதோ,  அங்கு   ஒரு  குறையும்  வருவதில்லை.*  அதைச்சுற்றி  சுமார்  2km  தூரத்திற்குள்  உயிர் விடும்  எந்த   உயிரினமும், அதன்  கடைசி   நேரத்தில்  அந்த  புண்ணிய  பூஜையின்  அதிர்வுகளை  பெற்று.........வாசனைகளும்  வினைகளும்   குறைந்து   சாந்தியாக,  அமைதியடைந்து   அதனால்   அதன்  மறுபிறவி  மிக  சிறந்ததாக  அமையப்  பெறுகின்றன " என்று   கூறியதாக  கேள்விப்பட்டோம். மேலும்  அந்த   வீட்டிலுள்ளோர்கள்  கொடிய  மரணம் , மோசமான  விபத்துகள் ,  துர்மரணம்   போன்றவை   சாளக்கிராம  பூஜை  நடைபெறும்   வீட்டில்  நிகழ்வதில்லை.

       தமிழ்   திருமுறைகள் , திவ்யப்  பிரபந்தங்கள்  முதலியன   பாடி , அபராத  சமரோபணம்  செய்து,  நமஸ்கரித்து,...........
அபிஷேக தீர்த்தம் , நைவேத்ய  பிரசாதம் வீட்டில்  எல்லோருக்கும்  கொடுத்து, நாமும்   தீர்த்தம்  பருகி , பிரசாதம்  உண்டு .....  பூஜையை   முடித்துக்  கொள்ளலாம்.

*ஓம் நமோ நாராயணாய  !*
*மதுரை மீனாக்ஷி அம்மன் பற்றிய தனிசிறப்புகள்.*

மதுரையின் அரசி மீனாக்ஷி ..!

மீனாக்ஷி அம்மன் விஹ்ரகம் மரகத கல்லால் ஆனது. ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம்.

அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும்., ஏனென்றால் பக்தர்கள் அழைத்தால் உடனே ஓடி வருவதற்காக.

அன்னை கையில் ஏந்திய கிளி அன்னையின் காதில் பேசுவது போல் இருக்கும் ஏனென்றால் கிளி பேசுவதை திருப்பி பேசும் அதைப்போல் பக்தர்களின் வேண்டுதலை திரும்ப திரும்ப அன்னையிடம் சொல்லும் இதனால் நமது வேண்டுதல் விரைவாக நிறைவேறும்.

அன்னையின் விக்ரஹம் சுயம்பு ஆகும் சில ஆலயத்தில் லிங்கம் சுயம்புவாக இருக்கும் ஆனால் மதுரையில் மீனாக்ஷி உக்ரபாண்டியனுக்கு முடிசூட்டிய பின் சொக்கநாதர் பெருமான் அருகில் விக்ரஹமாக நின்றுவிட்டாள் அதனால் சுயம்பு அன்னை. அன்னை மதுரையில் யாகசாலையில் அக்னியில் அவதரித்தாள். இவளின் இயர்பெயர் தடாதகை அங்கயற்கண்ணிஆகும்.

பாண்டிய மஹாராஜாவுக்கும் மஹாராணி காஞ்சனமாலைக்கும் ஒரே மகள். அதனால் பாண்டிய நாட்டின் பேரரசி ஆவாள்.

இங்கு கற்பகிரகத்தில் அன்னையின் விக்ரஹம் உயிருடன் இருக்கும் ஒரு பெண்ணை பார்ப்பது போல் இருக்கும்.

அன்னையே சிலையாக இருப்பதால் மிகவும் அழகாக இருக்கும் இவளை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கும்.

அன்னையின் சிலை மிகவும் நளினமாக இருக்கும் அன்னையின் சன்னதியில் தாழம்பூ குங்குமம் பிரசாதமாக தரப்படும்.

மதுரையில் அன்னைக்கே முதல் மரியாதை. இங்கு மீனாக்ஷி அம்மனை (அம்பிகையை) முதலில் வணக்க வேண்டும் பின்னர்தான் சுவாமியை தரிசிக்க வேண்டும்.

மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் மதுரையை அன்றும் இன்றும் என்றும் ஆட்சி செய்வார்கள் என்பது சிவவாக்கு. இங்கு எம்பெருமான் 64 திருவிளையாடல் புரிந்து உள்ளார். வேறு எந்த ஆலயத்திலும் இத்தனை திருவிளையாடல் புரிந்தது இல்லை.

அனைத்து சிவ ஆலயமும் முக்தியை தரும் ஆனால் சிவ ஆலயத்தில் சகல செல்வமும் தரும் கோவில்.

மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் வாழ்ந்ததால் மதுரைக்கு வந்தாலே முக்தி

இந்த கோவில் அம்மன் பெயரில் அழைக்கப்படுகிறது. உலகின் பெரிய அம்மன் கோவில். சக்தி பீடமும் ஆகும்.

வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய ஆலயம். சித்திரை திருவிழா அன்னைக்கும் ஆவணி மூல பெருவிழா சுவாமிக்கும் நடக்கும். மிகவும் அழகான கோபுரங்கள் கொண்ட கோவில்.

தமிழகத்தில் மிகப்பெரிய விழா நடக்கும் முதல் ஆலயம். சைவமும் வைணவ சமயமும் ஒன்றாக கொண்டாடும் விழா.

உலக அதிசியங்களுள் ஒன்று மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்றே கூறலாம் இவளை சரண் அடைந்தால் நம்மை காப்பாள் அன்னை மீனாக்ஷி. நவராத்திரி நான்காம் நாள் அன்று நமது சிவகங்கை விஸ்வநாதர் ஆலயத்தில் விசாலாக்ஷி மீனாக்ஷி அம்மன் அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார்.

மதுரையில் மீனாக்ஷி தினமும் எட்டு (ஏழு) விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். இது மற்ற கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பு.
இந்த எட்டு (ஏழு) வித ஆராதனை.

*திருவனந்தல் ~ பள்ளியறையில்* – மஹா ஷோடசிப்ராத சந்தியில் – *பாலா*

6 முதல் ~ 8 நாழிகை வரையில் – *புவனேஸ்வரி*

காலையில் (பூஜை நேரத்தில்) – *மீனாக்ஷி*

12 முதல் ~ 15 நாழிகை வரையில் – *கெளரி*

மத்தியானத்தில் (உச்சி காலத்தில்) – *சியாமளா*

சாயரக்ஷையில் (சாயம் சந்தியா காலத்தில் – *மாதங்கி*

அர்த்த ஜாமத்தில் (இரவு பூஜை நேரத்தில்) – *பஞ்சதசி*

பள்ளியறைக்குப் போகையில் – *ஷோடசி*

அன்னைக்கு 5 கால பூஜைகள் நடக்கும் போது., அவளுக்கு செய்யும் அலங்காரங்களும் மேலே சொன்ன ரூபங்களுக்கு ஏற்ப இருக்கிறது.
மாலை நேரத்தில் தங்க கவசம்., வைரக்கிரீடம் போன்ற அலங்காரங்கள்.

அதிகாலையில் சின்ன பெண் போன்ற அலங்காரம்., காலை வேளையில் குமரியாக., உச்சி காலத்தில் மடிசார் புடவையுடன்., இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டாலான புடவை என்ற அலங்காரங்களுடன் அன்னையைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும் என்பது சத்தியம்.

எல்லா கோவில்களும் போல இங்கும் பள்ளியறை அம்மன் சன்னதியில் இருக்கிறது. இரவு சுந்தரேஸ்வரரது வெள்ளிப் பாதுகைகள் ஸ்வாமி சன்னதியில் இருந்து பள்ளியறை வரும். பாதுகைகள் வந்த பின் அன்னைக்கு விசேஷ ஹாரதி (மூக்குத்தி தீபாராதனை ) நடக்கிறது.

அதன் பின்னர் அம்பிகையின் சன்னதி மூடப்பட்டு பள்ளியறையில் பூஜை., பால்., பழங்கள்., பாடல்கள்., வாத்ய இசை என்று சகல உபசாரங்களுடன் இரவு கோவில் நடை சார்த்தப்படுகிறது.

மதுரையில் பள்ளியறை பூஜை பார்க்கப் பார்க்கத் திகட்டா காட்சி. பள்ளியறை பூஜை சிவ – சக்தி ஐக்யத்தை உணர்த்துவதால் இந்த தரிசனத்திற்கு சிறப்பு அதிகம்.

மேலும் கணவன் மனைவி ஒற்றுமைக்கு மதுரை மீனாட்சி கோவிலில் தினமும் நடை பெறும் பள்ளியறை பூஜையை தரித்தல் நல்ல பயனைக் கொடுக்கும்.

பிள்ளை இல்லாதவர்கள்
காலையில் மீனாட்சியின் சிறுபிள்ளை அலங்காரத்துடன் நடக்கும் ஆராதனையை தரிசித்து மனமுருகி வேண்டினால் கட்டாயம் பலன் தருவாள் அன்னை என்கின்றனர்.

வியாபார நஷ்டம் தொழில் மற்றும் வேளையில் பிரச்சனை உள்ளவர்கள் அன்னையின் வைர கிரீட அலங்காரம் கண்டு முன்னேற்றம் பெறலாம்.
இதையெல்லாம் விட தாயை இந்த எல்லா அலங்காரத்திலும் நாம் காண என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்..!

முடிந்தவர்கள் ஒருமுறையாவது மதுரை சென்று மீனாட்சியை நேரில் தரிசனம் செய்யுங்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் சிலை பச்சை மரகத கல்லிலால் ஆனது.

கருவறை பக்கம் நாதஸ்வரம்., மேளம் போன்ற இசை கருவிகளை இசைக்க மாட்டார்கள். கல் என்றாலே கடினமானது என்று சொல்வார்கள். ஆனால் மரகத கல் மிக மென்மையானது. நாதஸ்வரம்., மேளம் போன்ற இசை கருவிகளை இசைக்கும் போது வரும்/எற்படும் ஒலி அதிர்வுகளை கூட தாங்கி கொள்ள முடியாதது. அப்படிப்பட்ட ஒரு கல்லை (ஒலி அதிர்வுகளை கூட தாங்க முடியாத) உளியால் செதுக்கி மீனாட்சி அம்மன் சிலை செய்து இருக்கிறார்கள் என்றால்., நம் சிற்பிகள் எவ்வளவு திறமையானவர்கள் அதுவும் எந்த தொழில் நுட்ப கருவியும் வசதியைம் இல்லாத காலத்திலேயே…

நம் தமிழர்களின் கலையை போற்றுவோம்…

என்ன வளம் இல்லை இத்திரு நாட்டில்….
தாயே த்ரிபுர சந்தரி. பால த்ரிபுர சுந்தரி தாயே...லலிதையே..

உன் அழகினை நான் கண்டேன் காண மனம் ஆனந்த கூத்தாடுகிறதே பாலா த்ரிபுர சுந்தரி தாயே.

நன்னா அழகா வகிடு எடுத்த கூந்தல்,

சந்திரன் மாதிரியான வெண்மையான நெற்றி,

அழகான கருப்புவானவில் மாதிரியான புருவங்கள்,

புருவமத்தில அழகான ஒரு குங்கும பொட்டு,

குட்டி வெள்ளை ரோஜாபூ உள்ளே ஆடும் கருவண்டுகள் மாதிரி ரெண்டு கண்விழி,

அதுக்கு வரப்பு கட்டி விட்ட மாதிரி மை,

அழகான குழி விழும் ரெண்டு குட்டி கன்னம்,

பண்ணி வெச்ச மாதிரி அழகான குட்டி மூக்கும் ரெண்டு காதும்,

அந்த காதுல குட்டி குட்டியா ரெண்டு தங்க ஜிமிக்கி,

குறு நகை செய்யும் குட்டி வாய்.....

இந்த மாதிரி ரூபத்துல அம்பாளை மனசுல நினைச்சு பாருங்கோ

அதுக்கு அப்புறம் நாம வேற யாரையும் சுந்தரியாவே நினைக்க மாட்டோம் !!

சின்ன சின்ன நடை நடந்து சிங்காரமாய் ஆடிவந்து செல்ல மகளாக வந்து நிற்கும் அம்பிகே ... உன்பேர் சொல்ல சொல்ல இனிக்குதடி அம்பிகே ... ஜகதம்பிகே... தாயே..தயாபரி.
#நிர்வாண_ஷட்கம்

வீட்டைத் துறந்து தன் குருவைத் தேடிப் பயணித்த இளம் சங்கரன், இமாலயத்தின் அடியில் பத்ரிநாத்தை அடைந்தபோது எட்டே வயது பாலகன்.

ஆச்சார்யர் கோவிந்தபாதரைச் சந்தித்த சங்கரன் அவர் பாதாரவிந்தங்களில் வீழ்ந்து தன் பணிவைச் சமர்ப்பித்தபோது “நீ யாரப்பா?” என்று கேட்ட ஒரு கேள்விக்கு, அந்தச் சீடனே ஒரு குருவோ என்ற தோற்ற மயக்கத்தை உண்டாக்கிய அந்த ஆறு ச்லோகங்களும் “நிர்வாண அஷ்டகம்” என்று பெயர் பெற்றன.

ஆறு ச்லோகங்களும் ஒரு துள்ளும் இளங்கன்றின் வேகத்துடனும், முதிர் ஞானம் பெற்ற ஒரு துறவியின் ஆழத்தோடும், ஓடும் நதியாய்ப் பெருக்கெடுத்துச் செல்கிறது.  

நிர்வாண ஷட்கத்தை இதற்கு முந்தைய தலைமுறையினர் கோயில்களில் பாடக் கேட்டிருக்கலாம். வீடுகளில் பாடப்பட்டன. பிறகு இசைக் கருவிகள் பாடின. இப்போதோ நிர்வாண ஷட்கம் இயற்றப்படுவதற்கு முந்தைய பெருத்த நிசப்தம் நம் ஆலயங்களை,வீடுகளைப் பீடித்திருக்கின்றன.

பற்றையும், பற்றின்மையையும் போதனையாய் ஒருங்கே நினைவுறுத்தும் இந்தப் பொக்கிஷத்தை நம் வீடுகளில் ஒலிக்கச் செய்வோம். குழந்தைகளின் காதுகளில் இவை ஒலிக்கட்டும். இவற்றின் பரிச்சயம் அவர்களின் செவிகளுக்கு உண்டானால், அதன் பொருளை எதிர்காலத்தில் தெரிந்து கொள்வார்கள்.

இனி #நிர்வாண_ஷட்கம்:

1.
மனோ புத்யஹங்கார சித்தா நினாஹம்,
ந ச ச்ரோத்ர ஜிஹ்வே, ந ச க்ராண நேத்ரே,
ந ச வ்யோம பூமிர், ந தேஜோ நவாயு:
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

மனம் புத்தி ஆணவச் சித்தங்கள் இல்லை; இரு
கண்ணில்லை; செவி, நாக்கு நாசியும் இல்லை;
வானில்லை மண்ணில்லை; வளி ஒளியும் இல்லை;
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

2.
ந ச ப்ராண சங்க்யோ, ந வை பஞ்சவாயு:
ந வாக் சப்த தாதுர், ந வா பஞ்சகோச:
ந வாக் பாணி பாதம், ந சோப ஸ்தபாயு:
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

உயிர் மூச்சு மில்லை; ஐங் காற்றும் இல்லை;
எழு தாதும் இல்லை; ஐம் போர்வை இல்லை;
கை கால்கள் இல்லை; சினை வினையும் இல்லை;
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்! 

3. 
ந மே த்வேஷ ராகௌ, ந மே லோப மோஹௌ,
மதோ நைவ, மே நைவ மாத்ஸர்ய பாவ: 
ந தர்மோ ந சார்த்தோ, ந காமோ ந மோக்ஷ: 
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்! 

வெறுப்பில்லை விருப்பில்லை; மையல் பற்றில்லை; 
சிறு கர்வம் இல்லை; அழுக்காறும் இல்லை; 
அறம் பொருள் நல்லின்ப, வீடு பேறில்லை; 
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்! 

4. 
ந புண்யம் ந பாபம், ந சௌக்யம் ந துக்கம்! 
ந மந்த்ரோ ந தீர்த்தம், ந வேதா ந யக்ஞ: 
அஹம் போஜனம் நைவ, போஜ்யம் ந போக்தா, 
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்! 

வினை வேட்கை இன்பங்கள், துன்பங்கள் இல்லை; 
மறை வேத தீர்த்தங்கள், வேள்விகள் இல்லை; 
உணவில்லை, உணவாக்கி உண்பவரும் இல்லை!  
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்! 

5. 
ந ம்ருத்யுர் ந சங்கா, ந மே ஜாதி பேத: 
பிதா நைவ, மே நைவ மாதா, ந ஜன்மா 
ந பந்துர் ந மித்ரம், குருர் நைவ சிஷ்யா: 
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்! 

மரணங்கள் ஐயங்கள், உயர்வு தாழ்வில்லை; 
தந்தை தாயில்லை; தரும் பிறப்பில்லை;
உற்றார்கள் சுற்றார்கள், குரு சீடர் இல்லை; 
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்! 

6. 
அஹம் நிர்விகல்போ, நிராகார ரூபோ, 
விபுத் வாச்ஸ, சர்வத்ர, சர்வேந்த்ரி யானாம் 
நச சங்கடம் நைவ, முக்திர் ந மேயா 
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்! 

மாற்றங்கள் இல்லை; பல தோற்றங்கள் இல்லை; 
எங்கெங்கும் எல்லாமும், எதனுள்ளும் இவனே; 
தளையில்லை; தடையில்லை; வீடுபேறில்லை; 
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!
அவள் தான் அழகுக்கும் அழகு ஆனால் உதாரணம் சொல்லாமல் அவளுடைய அழகை உணர்ந்து ரசிக்க முடியாதே. இதோ உதாரணத்துடன்.

வதனஸ்மர மாங்கல்ய க்ருஹ தோரண சில்லிகா

அங்கதன் மன்மதன் இருக்கிறானே அவனுக்கு உருவம் கிடையாது. மனதில் மட்டும்தான் இருக்கிறான். அவன் மேல் உள்ள கருணையினால் அவனுக்கு ஒரு விலாஸம் அட்ரஸ் வேண்டுமே அதற்காக தன்னுடைய முகத்தையே அவனுக்கு வீடாக அளித்தாளாம்.வீடு என்றால் வாயில் இருக்க வேண்டும் தோரணம் இருக்க வேண்டும் அல்லவா? அம்பாளுடைய இரு புருவங்களும் தான் அந்த வீட்டின் வாயில் தோரணங்கள்.அம்பாளின் முகம் மன்மதனைப் போல அழகு படைத்தது புருவங்கள் இரண்டும் வாயில் தோரணம் போன்று இருக்கிறதாம்.

இதுதான் அர்த்தம் என்பதற்கு இந்த உவமைகள் எல்லாம் என் கற்பனையே ஏதாவது தவறு இருப்பின் சுட்டிக்காட்டுங்கள் திருத்திகொள்கிறேன்.
#காமாக்ஷி_கடாக்ஷி 2

தேவியின் பல வடிவங்களுள், நாற்கரம் கொண்டு, அவற்றில் கரும்புவில், மலரம்பு, பாச-அங்குசம் தாங்கி அமர்ந்த கோலத்தில் இருப்பவளே காமாக்ஷி மற்றும் ஸ்ரீலலிதா பரமேஸ்வரி, ராஜராஜேஸ்வரி. பஞ்ச தசாக்ஷரி, ஷோடசீ ஆகிய மந்த்ரங்களில் தலையானதாக உள்ள ஸ்ரீவித்யா மந்த்ரங்களில் விவரிக்கப்பட்ட லக்ஷணப்படி அமைந்த விக்ரஹமே காஞ்சீ காமாக்ஷி விக்ரஹம். ஆக மொத்தமாக மந்த்ரங்களில் சிறந்த ஸ்ரீவித்யாவால் காட்டப்பட்ட ஸ்ரீ மாதாவின் ரூபம் காமாக்ஷீ.

இந்த தேவி எங்கு வாசம் செய்கிறாள்?.

பிரளய காலத்தில் எல்லாம் அழிந்தாலும், அழிவில்லாத 'அக்ஷரம்' எனப்படும் ஓங்கார ஒலியின் அலைகளான இருபத்து-நான்கு சப்த சலனங்களிடையே அவள் வாசம் செய்கிறாள்.

ஆம்! அந்த இருபத்து-நான்கு சப்தங்களை, இருபத்து-நான்கு ஸ்தம்பங்களாகக் கொண்ட மண்டபத்தில் அவள் வாசம் செய்கிறாள் என்றே காமாக்ஷி விலாஸத்தில் சொல்லப்படுகிறது.

அதென்ன 24 சப்தங்கள்?. 16 கால், 1000 கால் மண்டபங்கள் எல்லாம் இருக்கும் போது, ஏன் 24 சப்த ஸ்தம்பங்களாலான மண்டபம்?.

காயத்ரீ மஹாமந்திரம் இருபத்தி-நான்கு அக்ஷரம் கொண்டது, அந்த மந்த்ரத்தின் மஹிமையை நமக்கு விளக்கும் விதமாக காயத்ரி மண்டபத்தில் வசிக்கிறாள் ஸ்ரீமாதா. காஞ்சி காமாக்ஷி கோவிலில் அன்னையின் வாசஸ்தலம் காயத்ரி மண்டபம் என்றே கூறப்படுகிறது.

சரி, அதென்ன காமாக்ஷி என்ற பெயர்?. இதன் விளக்கம் என்ன?.

'க' என்ற பதம் பிரம்மனைக் குறிக்கும்; 'கஸ்மை தேவாய' என்று வேதத்தில் பல இடங்களில் பிரம்மனை குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல,

'அ' என்பது சிவனின் பெயர். அ'காரத்திலேயே ஆண்பால் நாமங்கள் பெரும்பாலும் முடிகிறது உ.ம்: சிவ, ராம, க்ருஷ்ண என்பதாக. பிரகிருதிக்கு அப்பாற்பட்ட புருஷ ரூபம் சிவம்.

வேதத்தில் 'ம' என்ற சப்தம் நாராயணனைக் குறிப்பதாம். இதனாலேயே 'மா' என்ற சப்தம் மஹாலக்ஷ்மியைக் குறிப்பதாகக் கூறுகிறார்கள். அதாவது கணவன் 'ம' என்பதாலேயே, இவள் 'மா' ஆகிறாள்.

ஆக, 'க' என்ற ப்ரம்மன், 'அ' என்ற சிவன், 'ம' என்ற விஷ்ணு ஆகிய மூவரும் எவளது 'அக்ஷி'யிலிருந்து தோன்றினார்களோ, அவள் காமாக்ஷி. ('அக்ஷி' என்றால் கண்).

பரஞ்சோதி முனிவர் தமது திருவிளையாடற்பாடலில், "திருமகள் வலக்கண், வாக்கின் சேயிழை இடக்கண், ஞானப்பெருமகள் நுதற்க்கண்ணாகப் பெற்று வான் செல்வம் கல்வி அருமைவீடளிப்பாள்" என்பதாக கூறுகிறார். பரஞ்சோதி முனிவர் மீனாக்ஷியை அப்படிக் கூறினாலும், அது காமாக்ஷியை மனதிலிருத்தியே என்பது தெரிகிறது. இன்னும் சொல்லப் போனால், ஸ்ரீ லலிதாவின் சேனை நாயகி (அ) தண்டினி எனப்படுபவள் வாராஹி ரூபம். அதே போல மந்த்ரிணியாக இருப்பது ராஜ மாதங்கீ. அதனால் தான் அகிலாண்டேஸ்வரியை தண்டினியாகவும், ராஜமாதங்கீ ரூபத்தில் கிளியுடன் இருப்பதாலும், மீனாக்ஷி கையில் கிளியைக் கொண்டதாலும் அவளை மந்திரிணியாக ஆதி சங்கர பகவத்பாதர் சொல்கிறார்.

மனிதனுடைய குணத்தை அவனுடைய கண்களிலிருந்தே அறியலாம் என்பார்கள். திருடனின் கண்களில் இருக்கும் தடுமாற்றம் அவனைக் காட்டிக் கொடுத்துவிடும். காதலுடைய கண்களில் எத்தனையோ விதம், கெஞ்சும் கண்கள், கொஞ்சும் கண்கள்,மிஞ்சும் கண்கள் என்பதாக பலவற்றையும் கவிஞர்கள் சொல்லக் காண்கிறோம்.

கடைக்கண்ணால் பார்க்கும் பார்வையை தயாளத்தின் உருவமாகவும், அன்பின் தோற்றமாக அருள் நிறைந்த தேஜசுடனும் சொல்வது வழக்கம். காதலியின் கடைக்கண் பார்வைக்கு காதலனும், பரமேஸ்வரியின் கடைக்கண் பார்வைக்காக பக்தனும் காத்திருப்பதாகச் சொல்வர். 

வளரும்

இது மதுரையம்பதி இணையதள பதிவு 2011.
#காமாக்ஷி 
#என்ற_நாமாவின்_அர்த்தம்.

1. #காமனுக்கு கண்களாலே உயிர்பிக்ஷை அளித்து ரதியின் மாங்கலயத்தை ரக்ஷித்ததால்
#இவள் "#காமாக்ஷி".

2. #நமஸ்கரிப்போரின் காமங்களை ( விருப்பம்) தனது பார்வையாலேயே பூரணம் செய்விப்பதால் #இவள் "#காமாக்ஷி"

3. #கா -- காலம், மா -- மாயை காலத்தையும் மாயையையும் க்ஷீணமடையச் (அழியச்) செய்வதால் இவள் "காமாக்ஷி". காலத்தையும் மாயையையும் கடந்த #மஹாத்ரிபுரஸுந்தரி என்பது பொருள்.

4. #கா -- ஸரஸ்வதி, மா -- லக்ஷ்மீ லக்ஷ்மியையும் ஸரஸ்வதியையும் #நேத்ரங்களாய்_உடையதால் இவள் "காமாக்ஷி"

5. காமன் -- காமேச்வரனான ஏகாம்ரநாதன் #ஏகாம்ரநாதனின் நேத்ரமாக விளங்குவதால் !
#இவள் "#காமாக்ஷி"

6. காம என்பதற்கு கடபயாதி ஸங்க்யா ரீதியாக அர்த்தம் ஐம்பத்து ஒன்று. ஐம்பத்தியோரு #அக்ஷரங்களையும் #கண்களாககொண்டதால் இவள் "காமாக்ஷி"

7. கா -- ஸரஸ்வதீ, மா -- மலைமகள், க்ஷீ -- க்ஷீரஸாகரகன்யையான லக்ஷ்மீ. தான் ஒருவளே லக்ஷ்மீ, ஸரஸ்வதீ, #பார்வதியாக #விளங்குவதால் இவள் "காமாக்ஷீ"

8. கா -- ஒன்று, மா -- பதினைந்து, ஷோடஷீ #மஹாமந்த்ரத்தை தனது #கண்களாய் தரிப்பதால் இவள் "காமாக்ஷி"

9. கா -- ஒன்று, மா -- ஐந்து, க்ஷீ -- ஆறு, ஓரே வஸ்துவான #லலிதாம்பாளே 
தனது பஞ்ச ரூபங்களான "#த்ரிபுரா", "#ராஜராஜேச்வரீ", #மஹாகாமேசவல்லபா", "காமாக்ஷீ", "காமகோடி" என ஐந்து வடிவங்களிலும்( ஒவ்வொரு வடிவத்திற்கும் தனித்தனி ஆவரண மந்த்ரங்கள் உண்டு), மூன்று சக்தி பேதங்கள், இரண்டு சிவ பேதங்கள், ஒரு விஷ்ணு பேதம் என ஆறு வடிவங்களிலும் உறைவதால்
#இவள் "#காமாக்ஷி".

10. தான் ஒருவளே பஞ்சகோசாதீதையாகவும், #ஷட்பாவரஹிதையாகவும் ஜ்வலிப்பதால்
#இவள் "#காமாக்ஷீ".

11. தான் ஒருவளே "பஞ்சபஞ்சிகா" வடிவினளாகவும், #ஷடாம்ணாய தேவதா ரூபமாகவும் ஜ்வலிப்பதால் இவள் "காமாக்ஷி".

12. தான் ஒருவளே பஞ்சபூத மயமான இந்த சரீரத்தில் ஷட்சக்ர யோகினி வடிவாக ஜ்வலிப்பதால் இவள் "காமாக்ஷீ"

13. தான் ஒருவளே பஞ்சப்ரஹ்ம மஹாமஞ்சத்தில் ஷடன்வயீ சாம்பவீ வித்யையாக ஜ்வலிப்பதால் இவள் "காமாக்ஷி".

14. தான் ஒருவளே பஞ்சமுக மஹாசம்புவால் அர்ச்சிக்கப்பட்ட "துரீய வித்யையாகவும்" ஆறுமுக ஸுப்ரமண்யனால் பூஜிக்கப்பட்ட ஸ்கந்தவித்யாவாகவும் இருப்பதால் இவள் "காமாக்ஷி".

15. தான் ஒருவளே பஞ்சாயதன கணபதி, அம்பிகா,சூர்ய, விஷ்ணு,சிவ வடிவான பஞ்சாயதன ரூபிணியாகவும், சைவ, வைஷ்ணவ, சாக்த, கௌமார, காணாபத்ய, ஸௌர ஷ்டதர்சணங்களுக்கும் ஆதார மஹாவித்யையாக இருப்பதாலும் இவள் "காமாக்ஷி".

16. தான் ஒருவளே பஞ்சஞானேந்த்ரியங்களுக்கும் புலனாகாது, ஆறு ஆதாரங்களைக் கடந்து ஸஹஸ்ரகமலத்தில் பரப்ரும்ஹ மயமாக ப்ரகாசிப்பதாலும் இவளே "காமாக்ஷி".

"காமாக்ஷி" எனும் அக்ஷரம் பரமசிவனுக்கும் கிடைக்காதது. மங்கலமே வடிவானது. இக்காமாக்ஷி எனும் விலைமதிக்க முடியா ரத்னம் பேரொளி வீசிக் கொண்டிருக்கின்றது.

#காமாக்ஷி_கடாக்ஷி.!
சிந்தூர  அருண விக்ரஹாம்..

இந்த நாமம் லலிதா சஹஸ்ரநாமம் தியானஸ்லோகத்தில் வருகிறது.சிகப்பான ஒளிபொருந்திய உருவம் கொண்டவள் என்ற அர்த்தம்.இந்த உலகம் சூரியனின் ஒரு பகுதியாக வெடித்துச் சிதறியாதால் உண்டானது. அதனால் உலகம் தோன்றியபோது முதலில் உண்டான நிறம் சூரியனின் கிரணமான சிகப்பு நிறம்தான்.அப்பொழுதே அமபாள் செம்மைத்திருமேனி உடைய உருவமாகத் தோன்றினாள்.ஏன் உருவத்தோடு தோன்றினாள்.அகிலமெங்கும் வியாபித்திருக்கும் அம்பிகைக்கு உருவம் என்ன என்றால் சொல்லுவது அரிதாகும்.

அம்பிகை என்ற சொன்னவுடனே அவள் ஒரு பெண்ணாகத்தான் இருக்கக்கூடும் என்று நினைப்பது இயல்பு.ஆனால் முப்பெரும் தெய்வத்தையும் உள்ளடக்கிய அந்த பெரிய தெய்வத்துக்கு எந்த வர்ணம் எந்த உருவும் தர முடியும் ? அவள் எப்படியிருப்பாள் ? ""தாம் அக்னி வர்ணாம் தபஸா ஜ்வலந்தீம் "" என்கிறது துர்கா ஸூக்தம்.அக்னி சிகப்பாகத்தான் இருக்கும்.

அவள்தான் பெரிய தெய்வம் என்று எப்படிச் சொல்லமுடியும். மீசைகவி சொல்லுகிறான் ஒரு இடத்தில்"பெண் விடுதலை வேண்டும் பெரிய தெய்வம் காக்க வேண்டும்"அவனுக்கு பராசக்திதானே பெரிய தெய்வம் நல்ல சிகப்பு இல்லாமல் சிந்துர வண்ணம் போல உள்ள இளம் சிகப்பு நிறத்தில் தோன்றினாள்.அபிராமி பட்டரும் '" சிந்தூர வர்ணத்தினாள் என்று கூறுகிறார். லலிதா ஸ்கஸ்ர நாமம் முழுவதிலும் அவள் சிகப்பு வர்ணத்தில் ."ரக்தவர்ணா,சிதக்னிகுண்டத்திலிருந்து உருவானவள்"" தோற்றதிற்கான நிறம் கொண்டாள்.ஆதி சங்கரரும் சௌந்தர்யலகிரியில்"" ஜகத்தாத்ரிம் கருணாசித் அருணா".இந்த உலகத்தின் மீது கொண்ட கருணையினால் சிகப்பு வடிவம் கொண்டாள்.

அபிராமபட்டர் நீலி என்று கூறி விட்டு கடைசியில் சிந்தூர வர்ணத்தினாள் என்று முடிக்கிறார். இதன் அர்த்தம் என்ன. நிறங்களை வரிசைப் படுத்தும் போது ஊதாவில் V(நீலீ) ஆரம்பித்து சிகப்பில் R முடிக்கிறோம் பட்டரும் எல்லா நிறங்களும் முடிவது சிகப்பில்தான் அதுதான் நீ என்கிற சிந்து அருண விக்ரஹம்.

தாம் அக்னி வர்ணாம் தபஸா ஜ்வலந்தீம் "" என்கிறது துர்கா ஸூக்தம்.

இதே ஸ்ரீசூக்தத்தில் ஹிரண்ய வர்ணாம் அப்படின்னே ஆரம்பிக்கறது.

இதே போல இன்னும் சில சூக்தங்களில் வேறு நிறம்.

எப்படியெல்லாம் நினைக்கிறோமோ வணங்குகிறோமோ அப்படியெல்லாம் தோன்றுகிறாள் பராசக்தி, இல்லையா.

மேலும் அவள் அருள்  கிட்டிட...... அவள் நாமம் உரைப்போம்.

லலிதா ஸ்ஹஸ்ரநாமத்தின் முதல் அடி

ஸ்ரீ மாதா ஸ்ரீ மஹாராஜ்ஞீ ஸ்ரீ மத்ஸிம்ஹாஸனேச்வரீ 1 "

சிதக்னி குண்ட ஸ்ம்பூதா தேவகார்ய சமுத்யதா !'

அம்மா! மகாராணி! உயர்ந்த ஸிம்ஹாசனத்தில் அமர்ந்திருப்பவளே ! சித்தமான அக்னிகுண்டத்திலிருந்து தோன்றியவளே! தேவர்களின் கார்யசித்திக்காக எழுந்து அருளியவளே. உனக்கு நமஸ்காரம். இதில் ஒரு விசேஷம் பார்த்தீர்களா ! உலகத்தின் ஐந்தறிவு அல்லது ஆறறிவு பெற்ற எந்த உயிராக இருந்தாலும் எந்த மொழியில் பேசினாலும் அதனுடைய முதல் வார்த்தை""அம்மா"தான்.

ஆங்கிலத்தில்வரும் மதர் என்ற வார்த்தையே வடமொழியில் உள்ள மாதா என்ற வார்த்தையிலிருந்து வந்ததாக கூறுவர்.லலிதா ஸ்கசரநாமத்தில் வரும் முதல் வார்த்தையே மாதா தான்.நம் எல்லோருக்கும் ஆதி மாதா அவள், நாம் எல்லோரும் அவள் குழந்தைகள். அம்மாவுக்கும் குழந்தைக்கும் எப்போதும் ஒரு பிரிக்க முடியாத பிணப்பு உண்டு.பிறந்த சிறு குழந்தை 6 மாதம் வரையில் தனக்கு எல்லாமே அம்மாதான் என்று நினைத்துக்கொள்ளும் மற்ற உறவுகள் தந்தை உள்பட பின்னால்தான்.இன்னும் சொல்லப்போனால் அம்மாவின் குரலை கர்ப்பகாலத்திலேயே கேட்க ஆரம்பித்துவிடுமாம். அதனால்தான் ஸ்ரீமாதா என்ற முதல் வார்த்தையோடு ஆரம்பிக்கிறது
ஸ்ரீ மஹாராஜ்ஞீ ஸ்ரீ மத்ஸிம்ஹாஸனேச்வரீ

எனக்கு தாயாராக இருந்தாலும் அவள் மஹாராணி, அதுமட்டுமல்ல அவள் இருப்பதோ சிம்ஹாசனத்தில். இந்த எளியவனுக்கு தாயாராக இருப்பதால் அவளை எளியவளாக எண்ணி விடாதீர்கள்.அவள் அகில உலகுக்கும் மஹாராணி.

முத்து ஸ்வாமி தீக்க்ஷதர் ஸ்ரீ மாதா ஷிவவாமாங்கே என்ற பேகட கீர்த்தனையில் இவ்வாறு பாடுகிறார். " ஸ்ரீ மாதா சிவவாம மாங்கே ஸ்ரீ சக்ரரூப தாடங்கே மாமவ1ஸ்ரீ மஹாராஜ்ஞீ வதநஸ்-ஸசாங்கே சித்ப்ரதி பிம்பே மாமவ"என்று லலிதாஸ்ஹஸ்ரநாமத்தின் முதல் அடியை வைத்தே திருச்சி அகிலாண்டேஸ்வரியைப் பாடினார்.

சிதக்கினி குண்ட ஸ்ம்பூதா சித் என்பது  உள் மனதுக்குள் இருப்பது யோகிகளின் கடைசி நிலை சித் என்ற அந்த நிலை வந்து விட்டால் நாம் வேறு கடவுள் வேறு என்ற நிலை போய்விடும்.கடவுளை நம் சித்தத்திலேயே பார்க்கலாம்."சித்தத்துனுள்ளே சிவலிங்கம் காட்டி"என்ற நிலை. மனசு, புத்தி, அஹங்காரம், அந்தகரணம் அடுத்தநிலை சித்தம்.இவையெல்லாம் சித்தத்தில் ஒடுங்கும். இதைத்தான் பாரதி "அந்த கரணமெல்லாம் சிந்தையிலே ஒடுங்கி"என்கிறார்.அப்பேற்பட்ட சித்தமாகிய அக்னி குண்டத்திலிருந்து தோன்றியவள்தான் ஸ்ரீ மாதா.

தேவ கார்ய சமுத்பவா
தேவர்களின் கார்யமான அசுரர்களை வதம் செய்யவேண்டும் என்பதற்காக சித் அக்னி குண்டத்திலிருந்து வேகமாக மிகுந்த ஆற்றலுடன் தோன்றினாள்.

நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா!
தராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா !!

கண்ணை விவரித்து விட்டு மூக்கை விட முடியுமா? நாஸாதண்டம் என்பது மூக்கினுடைய நடு தண்டு பாகமும் மூக்கும் சேர்ந்தது. அது எப்படி இருக்கிறது என்றால் அப்பொழுதுதான் பாதி மலர்ந்தும் பாதி மலராத செண்கப்பூப் போல இருக்கிறதாம். அதுவும் இளம் சிவப்பு நிறம்தான். அப்படிப் பட்ட மூக்கில் அம்பாள் மூக்குத்தி அணிந்திருக்கிறாள்.  அதை வர்ணிக்க என்னால் முடியாது. இருந்தாலும் முயன்று பார்க்கிறேன்.வானத்தில் இருக்கும் எல்லா நக்ஷ்த்திரங்களின் ஒளியையும் அப்படியே திரட்டிஒரு சிறு மூக்குத்தியாக அணிந்திருக்கிறாளாம். மூக்குத்தியின் மகிமை தெரியவேண்டுமானால் கன்யா குமாரிக்குப் போய் அவளுடைய மூக்குத்தி எவ்வாறு ஜ்வளிக்கிறது என்று பார்த்தால் புரியும். கலங்கரை விளக்கம் போன்று ஒரு காலத்தில் கப்பல்களை ஆகர்ஷிக்குமாம்.

முத்துமூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும் மோகன தங்கத்தினால் முடிந்திட்ட தாலியழகும் அடியானாற் சொல்ல திறமோ அழகான காஞ்சியில் புகழாக விளக்க விளங்கிடும் அம்மை காமாக்ஷி உமையே ஞாபகம்தான் வருகிறது.

மறுமுறை படியுங்கள்

நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா!

தராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா !!

தேவியின் முகம் தெரியும்.

அவள் உங்களுக்கு அருள் புரிய சிரிப்பாள்.

4 வது வரியிலிருந்து 20ஆவது வரி வரைக்கும் லலிதா ஸகஸ்ரநாமத்தில் அம்பாளின் அழகான கேசாதி பாத வர்ணனைதான். அதிலிருந்து ஒரு வரியைப் பார்க்கலாமா !

அஷ்டமீ சந்த்ர விப்ராஜ அளிகஸ்தல சோபிதா

அம்பாளின் நெற்றியை வர்ணிக்கும் பகுதி.அளகம் என்பது நெற்றியின் இரு பக்கங்களின் இருக்கும் பகுதி.அங்குதான் அம்பாளுடைய சுருண்ட கூந்தல் காற்றில் அழகாக முன்னுச்சியில் இரு புறமும் ஆடிக்கொண்டு இருக்கும். சரி அம்பாளுடைய நெற்றி எப்படி இருக்கிறது.அதுதான் அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா மாதிரி இருக்கிறது. என்ன சரியாகப் புரிய வில்லையா? கொஞ்சம் விளக்கமாகப் பார்க்கலாமா. அவளுடைய நெற்றி எட்டாநாள் சந்திரன் போல் இருக்கிறது. எல்லோரும் நெற்றியை பிறைச் சந்திரனுக்குத்தான் ஒப்பிடுவார்கள் ஆனால் இங்கு வேறுமாதிரி.ஆதி சங்கரர் செளந்தர்ய லகிரியில் அம்மா உன் தலையில் ஒரு பாதி அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா சந்திரன் மாதிரி இருக்கிறது. நெற்றியில்மறு பாதி சந்திரன் இருக்கிறது. இரண்டையும் அப்படியே சேர்த்து வைத்துப் பார்த்தால் முழுநிலவாகி விடும். அப்படி பௌர்ணமி பூர்ண சந்திரன் போல இருப்பதுதான் உன்முகம் என்கிறார்.இப்போது புரிகிறதா ஏன் அபிராமி பட்டர் அமாவாசையன்று பௌர்ணமி என்று கூறினார்.அவர் அம்பாளின் முகதரிசனம் செய்து கொண்டு இருந்தபோது கேட்ட கேள்விக்கு வந்த பதில்.பிறைச் சந்திரன் என்று சொன்னால் அது நெற்றியோடு பொருந்தாது. இரண்டு பக்கமும் தூக்கிக்கொண்டு இருக்கும் அழகாக இருக்காது.ஆனால் பாதி பிறை எட்டம்நாள் சந்திரன் சமமாக இருக்கும். அதை அப்படியே அம்பாளின் நெற்றியாக பாவனை செய்து இருபுறமும் சுருண்ட கூந்தல் காற்றில் அலைபாயும்படி கற்பனை செய்து பார்த்தால் அஷ்டமீ சந்த்ர விப்ராஜ அளிகஸ்தல சோபிதா என்ற வரிக்கு அர்த்தம் புரியும்.

குமார் ராமநாதன்.
ஆதிபராசக்தி அகிலம் தழைக்கவும் அகிலத்தில் வாழும் மக்களைக் காப்பதற்கும் ஆயிரமாயிரம் வடிவங்களோடும் ஆயிரமாயிரம் நாமங்களோடும் மண்ணுலகில் அவதாரம் எடுத்தார்கள்.

மண்ணுலகில் தோன்றியபோது, தமக்கு உறுதுணையாகவும் உதவி செய்வதற்கும் தம் சக்தியில் இருந்து ஏழு சக்திகளை தோற்றுவித்தார்கள். அவர்களையே சப்த மாதாக்கள் என்றும் சப்த கன்னியர்கள் என்றும் சப்த தேவிமார்கள் என்றும் அழைக்கிறோம்.

சப்தம் என்றால் ஏழு, மாதாக்கள் என்றால் தாய்க்கு சமமான தேவியர்கள், தம் சக்தியால் எழு அம்சங்களாக, ஏழு தேவியர்களை தோற்றுவித்தார்கள்.

மகேசனின் அம்சமான மகேஸ்வரி; விஷ்ணுவின் அம்சமான வைஷ்ணவி; பிரம்மனின் அம்சமான பிராமி; இந்திரனின் அம்சமான இந்திராணி; முருகனின் அம்சமான கௌமாரி; வராக வடிவான வராகி; காளி வடிவான சாமுண்டி ஆகியோர் சப்த மாதாக்களாக திகழ்கிறார்கள் என்று தேவி பாகவதமும் சக்தி புராணமும் கூறுகிறது.

சப்த மாதாக்கள் எழுவருள், இம்மை, மறுமை ஆகிய பயன்களை அருள்பவள்  மகேஸ்வரி, சுமங்கலி வரத்தையும் செல்வத்தையும் தருபவள் வைஷ்ணவி. கல்வி ஞானத்தை அளிப்பவள் பிராமி. வீரத்தையும் ஞானத்தையும் அளிப்பவள் கௌமாரி. பெரும் பதவி, புகழ், திருமணப்பேறு அருள்பவள் இந்திராணி. வீரத்தை அளித்து பகைவரை அழிப்பவள் வராகி. நீதியை காப்பாற்றி வழக்குகளில் நியாயமான வெற்றிகளை வழங்குபவள் சாமுண்டி. இப்படி, ஒவ்வொரு விதமான செயல்பாட்டையும் ஏற்று அனைவருக்கும் அருள்பாலித்திடுவாள் ஆதிபராசக்தி.

தமிழகத்தின் கிராமங்களில் கிராமங்கள்தோறும் கிராம தேவதை, கிராம காவல் தெய்வம், கிராம எல்லையம்மன், கிராம குலதெய்வம் என்று அம்மனை வழிபடுகிறார்கள். அம்மனோடு சப்த மாதாக்களும் இருப்பார்கள் அல்லது தனி சந்நிதியிலும் இருப்பார்கள். சப்த மாதாக்கள் இல்லாத கோயில்களில் ஏழு கற்களை நட்டு அலங்காரம் ஆராதனை செய்து வழிபடுகிறார்கள்.

சப்த மாதாக்களை ஏழு கற்களை நாட்டி வழிபடுவதோடு மேலும் ஏழு கற்களை நட்டு பூஜைகள் செய்து அண்ணன்மார்களாக வழிபடுகிறார்கள். சப்த மாதாக்களின் துணைவர்களே அண்ணன்மார்களாகச் சொல்லப்படுகிறது. இந்த தேவியரை வழிபடுவதால் உலகமும் மக்களும் சுபிட்சமாக வாழலாம்.

சப்த மாதாக்கள் வழிபாடு என்பது மிகவும் தொன்மையானது. பல்லவர் காலத்திற்கு முன்னதாகவே சக்தி வழிபாட்டில் சப்தமாதர் வழிபாடு மிக சிறப்பாக இடம் பெற்று இருந்ததை "சக்தி வழிபாடு' என்னும் அரிய நூல் சிறப்பாக தெரிவிக்கிறது. அந்த வகையில் பல்லவ பேரரசனான
நந்திவர்மனால் கட்டப்பெற்ற பாடலாத்திரி சீயாத்தம்மன் ஆலயம் அற்புதமானது.

கருவறையில் அம்மனோடு சப்த மாதாக்களும் அமர்ந்து அருள்புரிகின்றனர். அம்மன் கோயிலுக்குள்ளே சிறிய சந்நிதியில் சப்த மாதாக்கள் துணைவர்களான சப்த அண்ணன்மார்கள் எழுவரும் காட்சி அளிக்கின்றனர். அண்ணன்மார்கள் எழுவரும் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பாகும்.

தேவாரத் தலமான கருவூர் குளித்தலை கடம்பவனேஸ்வரர் ஆலயத்தில் சிவபெருமானோடு கருவறையில் சப்த கன்னியர்கள் சிவலிங்கத்திற்கு பின்புறத்தில் அமர்ந்து காட்சி அளிக்கின்றனர்.

அற்புதமான கடம்பவனேஸ்வரரை வணங்கி வழிபட்டால் கடலளவு துன்பத்தையும் போக்கி சுபிட்சத்தை தந்து அருளுகிறார். இதுபோன்ற அமைப்புள்ள கோயில் தமிழகத்தில் வேறெங்கும் இல்லை. மேலும் அம்மன் கோயிலான பாடலாத்திரி சீயாத்தம்மன் ஆலயத்தில் இந்த அமைப்பைக் காணலாம்.

ஆயிரம் ஆண்டு காலமாக வரலாற்று தடையங்களைச் சுமந்து நிற்கும் பாடலாத்திரி சீயாத்தம்மன் ஆலயம் கொரட்டூர் அக்ரகாரம் ஏரிக்கரை ஓரத்தில் இயற்கை எழியோடும் அமைதியான சூழலில் ஏகாந்த நிலையில் அமைந்துள்ளது.

கோயில் செல்ல: சென்னை- திருவள்ளூர் ரயில் மார்க்கம் கொரட்டூர் ரயிலடியில் இருந்தும் கொரட்டூர் பேருந்து நிலையத்தில் இருந்தும் 11/2 கி.மீ. தொலைவில் உள்ளது. கோயம்பேட்டில் இருந்து செங்குன்றம் செல்லும் 100 அடி சாலையில் கொரட்டூர் அக்ரகாரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 11/2 கி.மீ. தொலைவில் கோயிலைச் சென்றடையலாம்.

ஆலயம் திறந்திருக்கும் நேரம்: காலை 6.00 மணி முதல் 10.30 மணி வரை. மீண்டும் 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

சப்த மாதாக்கள் காயத்ரி.

1) வாராஹி காயத்ரி

ஒம்சியாமளாயை வித்மஹே

ஹலஹஸ்தாயை தீமஹி

தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

2) இந்த்ராணி காயத்ரி

ஒம்ச்யாம வர்ணாயை வித்மஹே

வஜ்ர ஹஸ்தாயை தீமஹி

தன்னோ ஐந்த்ரி ப்ரசோதயாத்

3) சாமுண்டா காயத்ரி

ஒம் க்ருஷ்ண வர்ணாயை வித்மஹே

சூல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ சாமுண்டா ப்ரசோதயாத்

4) பிரம்மீ காயத்ரி (நம் வாக்கில் வாசம் செய்பவள்)

ஒம் ப்ரம்ஹ சக்த்யை வித்மஹே

பீத வர்ணாயை தீமஹி

தன்னோ: ப்ராஹ்மீ ப்ரசோத்யாத்

5) மஹேஸ்வரி காயத்ரி (மங்களம் பெருகும்)

ஒம் ஸ்வேத வர்ணாயை வித்மஹே

சூல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ மாஹேஸ்வரி ப்ரசோதயாத்

6) கெளமாரி ( ரத்தத்திற்கு தலைவி )

ஒம் சிகி வாஹனாயை வித்மஹே

சக்தி ஹஸ்தாயை தீமஹி

தன்னோ கெளமாரி ப்ரசோதயாத்

7) வைஷ்ணவி காயத்ரி ( ஈம் பீஜமந்திரம் )

ஒம் ச்யாம வர்ணாயை வித்மஹே

சக்ர ஹஸ்தாயை தீமஹி

த்ன்னோ வைஷ்ணவீ ப்ரசோத்யாத் !!