சனி, 4 ஜூலை, 2015

தர்மம் செய்யுங்கள்
♧ நல்ல செயல் எல்லாமே தர்மம் என்றாலும் பிறருக்கு விரும்பிச் செய்யும் ஈகையே மேலான தர்மம்.
♧ பலனை எதிர்பார்க்காமல் தர்மம் செய்தால் நம்மிடமுள்ள மன அழுக்கு நீங்கி பேரின்பம் கிடைக்கும்.
♧ தர்மத்தை தமிழில் "அறம்' என்பார்கள்.அவ்வையாரும் அறம் செய்ய விரும்பு என்று உபதேசித்து உள்ளார்.
♧ பிறர் பொருளைத் திருடினால் தான் திருட்டு என்பதில்லை.மற்றவருக்கு உரியவற்றை அபகரிக்கும் எண்ணம் கூட மனதில் எழக் கூடாது.
♧ காஞ்சி மஹா பெரியவா

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்
1. முதல் விதி
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)
2. இரண்டாவது விதி
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
3. மூன்றாவது விதி
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.
4. நான்காவது விதி
புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.
…ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்
5. ஐந்தாவது விதி
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது
6. ஆறாவது விதி
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.
7. ஏழாவது விதி
அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.
8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.
9. ஒன்பதாவது விதி
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.
10. பத்தாம் விதி.
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.
11. பதினொன்றாம் விதி
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.
இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக் குறியுங்கள்.

கண்கண்ட தெய்வம்
♢ சூரியனை முழுமுதற் கடவுளாக வழிபடும் வழக்கம் இருந்தது.ஷண்மதம் என்னும் ஆறுபிரிவுகளில் சூரிய வழிபாட்டுக்கு சவுரம் என பெயர்.
♢ சூரிய நமஸ்காரம் செய்து வழிபடும்போது ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம் சொல்வது சிறப்பு.
♢ கோனார்க்கில் சூரியனுக்கு புகழ்மிக்க கோயில் இருந்தது.கோனார்க் என்பதற்கு சூரியனின் பகுதி என்பது பொருள்.
♢ கண்கண்ட தெய்வமான சூரியனை வழிபடுவதால் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் உண்டாகும்.
♢காஞ்சி மஹா பெரியவா

நியாயமாக நடப்போம்
♡ ஒருவருக்கு நியாயமாக இருப்பது, மற்றொருவருக்கு நியாயமாக இருக்காது.
♡ நியாயம் என்ற சொல்லுக்கு"முறை'என்று பொருள்.எந்தச் செயலையும் அதற்குரிய முறைப்படி செய்வதே நல்லது.
♡ மரத்திற்கு மரம் தாவும் குரங்கு போல மனித மனம் ஆசை வயப்பட்டு அலைந்து திரிகிறது.
♡ தான் என்னும் அகம்பாவம் இல்லாமல் செயல்பட்டால் பாவ புண்ணியம் நம்மைத் தீண்டுவதில்லை.
♡ ஒழுக்கமுடன் வாழ்பவனின் ஒவ்வொரு செயலிலும், ஒழுக்கத்தின் உயர்வான தன்மை பிரதிபலிக்கும்.
♡ காஞ்சி மஹா பெரியவா

ஸ்வயம்பிரகாச ஸ்வாமிகள்
ஆன்மிகம் தழைத்தோங்கும் நம் பாரத தேசத்தின் அருங்கொடையே மகான்கள்தான்.இவர்கள் இறைவனின் அவதாரமாகக் கருதப்படுகிறார்கள்.இன்னல்கள் தீர்க்கும் குருவாகப் போற்றப்படுகிறார்கள். காஞ்சி மகா ஸ்வாமிகளை சிவ சொரூபமாகவே கருதி அவருக்கு ருத்திராட்சம் மற்றும் வில்வ மாலைகள் சூட்டி ஈசனையே கண் குளிரக் கண்டதும்போல் தரிசித்து மகிழ்ந்த பக்தர்கள் ஏராளம்.தாங்கள் வணங்கும் தெய்வ வடிவங்களை நடமாடும் மகான்களின் வடிவில் கண்டு வணங்கினார்கள் பேரின்பம் பெற்றவர்கள்.ஷீரடி சாய்பாபாவின் பக்தர் ஒருவர் பண்டரிபுரத்தில் உறையும் ஸ்ரீபண்டரிநாதனின் மீது அளவு கடந்த பக்தி கொண்ட தன் நண்பரை அழைத்துக்கொண்டு ஷீர்டி சென்றார்.அங்கே சாய்பாபாவை வணங்கச் சென்றபோது பண்டரிநாதன் பக்தரையும் உடன் அழைத்தார.
பாபாவை நான் வணங்க மாட்டேன்.அவர் எனக்கானவர் இல்லை என்று மறுத்தார் நண்பர்.மகானான சாய்பாபா இதை எல்லாம் அறியாதவாரா?விடவில்லை.எந்த பண்டரிநாதனைக் கண்டால் கன்னத்தில் போட்டுக்கொண்டு அந்த நண்பர் உருகி தரிசிப்பாரோ.அந்த பண்டரிநாதனாகவே அவருக்குக் காட்சி தந்து அருளினார் ஷீர்டி மகான்.ஆம் இறை நெறி எங்கும் பரவ வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு ஆத்மாக்களை அனுப்பி வைத்துக்கொண்டே இருக்கின்றான் இறைவன்!கலியுக மக்கள்தான் அதை உணர்வதில்லை.தர்மம் நலிந்து அதர்மம் பரவும் போதெல்லாம் நான் அவதரித்துக் கொண்டே இருப்பேன் என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் சொல்லி இருக்கிறார்.
தெய்வ பக்தி தேசமெங்கும் பரவி ஆன்மிக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதற்கு இந்த மகான்கள் துணை நின்றார்கள்.வேதத்தின் சாராம்சத்தையும் சாஸ்ரத்தின் கருத்துகளையும் மக்கள் மத்தியில் இவர்கள் எடுத்து வைத்தார்கள்.இந்து மதத்தைப் பொறுத்தவரை ஆதிசங்கரரில் இருந்து இது ஆரம்பம்.அவரது பாதையை அடியொற்றி எத்தனையோ மகான்கள் மகரிஷிகள் துறவிகள் இந்த பூமியில் அவதரித்துள்ளார்கள்.எந்த நோக்கத்துக்காக அவர்களுடைய அவதாரம் நிகழ்ந்துள்ளது என்பதையும் இறைவன் இந்த மகான்களுக்கும் ஒரு கட்டத்தில் எடுத்துரைத்தான்.இப்படி இந்த பூமியில் அவதரித்து மகான்களுள் ஒருவரே ஸ்வயம்பிரகாச அவதூத ஸ்வாமிகள்.அவதூதர்களில் சிலர் உடலில் ஒரு பொட்டுத் துணிகூட இல்லாமல்.திகம்பரராகத் (நிர்வணமாக)திரிவர்.இதை அருவருப்பாக எண்ணக்கூடாது.இது பக்தியின் ஒர நிலை.அவதூத பரம்பரையின் ஆதி குரு தத்தாத்ரேய பகவான்.
விஸ்வரூப ஆஞ்சநேய மூர்த்தியும் நாமகிரித் தாயாருளள் நரசிம்ம மூர்த்தியும் அருள் பாலிக்கும் தலம் நாமக்கல்.இந்த நகருக்கு அருகில் உள்ள சேந்தமங்கலத்தில் தத்தகிரி எனப்படும் குன்றில் தத்தாத்ரேயர் கோயில் கொண்டுள்ளார்.கொல்லிமலைச்சாரலில் குன்றுகள் சூழ பொலிவோடு அமைந்திருக்கும் அழகிய ஊர் சேந்தமங்கலம்.நாமக்கல்லில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவு.பேருந்து வசதிகள் உண்டு.தத்தாத்ரேயர் சந்நிதியின் நேர் கீழே ஸ்வயம்பிரகாச ஸ்வாமிகள் அதிஷ்டானம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தைத் தன் குருவான தத்தாத்ரேயரின் ஆணைப்படி இங்கே கட்டி முதல் கும்பாபிஷேகத்தை 29.5.1931ல் செய்து வைத்தார் ஸ்வயம்பிரகாச ஸ்வாமிகள்.அதன்பிறகு ஸ்வயம்பிரகாசரின் சீடரான சாந்தானந்த ஸ்வாமிகள் இதே திருக்கோயிலில் ஸ்ரீமுருகப் பெருமான் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து 20.2.1983ல் மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தார்.சாந்தானந்த ஸ்வாமிகளின் பணி அதோடு நின்றுவிடவில்லை.ஸ்கந்தாஸ்ரம் பாரம்பரியத்துக்கே உரித்தான முறையில் தத்தகிரியின் அடிவாரத்தில் மேலும் பல விக்கிரங்களை பிரமாண்ட முறையில் நிறுவினார் சாந்தானந்த ஸ்வாமிகள் ஹேரம்ப மகாகணபதி ஐயப்பன் தட்சிணமூர்த்தி.பஞ்சமுக ஆஞ்சநேய மூர்த்தி சனைச்சரர் கருப்பண்ணசாமி இடும்பன் தத்தகங்கை ஆகிய சந்நிகளை அமைத்தார்.ஸ்ரீதத்தகிரி முருகன் சபா மண்டபம் என்கிற திருநாமத்துடன் பெரிய மண்டபம் ஒன்றையும் கட்டுவித்தார் சாந்தானந்த ஸ்வாமிகள்.
குன்றுதோறும் குடியிருக்கும் முருகப் பெருமான்.தத்தகிரியில் சுமார்ஆறேகால் அடி உயரத்தில் அருள் புரிகிறார்.வலது கையில் ஞானத்தின் சின்னமான வேல்.இடது கையை இடுப்பின் மீது வைத்து புன்கை தவழக் காட்சி தரும் இந்த முருகனைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.இந்த திருக்கோயிலுக்கு 14.7.08 அன்று குடமுழுக்கு விமரிசையாக நடந்துள்ளது.இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் வரும் இந்தத் திருக்கோயிலுக்குத் திருப்பணியையும் குடமுழுக்கு செய்யும் அருங்காரியத்தையும் ஏற்றுக்கொண்டு சிறப்பாகச் செய்து முடித்தார் ஸ்வாமி ஓங்காராநந்தர்.இந்தக் கும்பாபிஷேகத்துக்கு சுமார் ஐம்பது லட்ச ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.இந்தத் தொகையை சென்னையில் உள்ள ஸ்ரீசாந்தானந்த சத்சங்க டிரஸ்ட் என்கிற அமைப்பே ஏற்றுக்கொண்டது பாராட்டப்டட வேண்டியது.தன் பரமகுருவான ஸ்வயம்பிரகாசரின் அதிஷ்டானத்தை உலகளாவிய பார்வைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவும் பக்தி நெறி தழைத்தோங்கவும் ஸ்வாமி ஓங்காராநந்தரே முன்னின்று இந்தக் கும்பாபிஷேக வைபவத்தை நடத்தி முடித்தார்.பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்தச் சிறு கிராமத்தில் அன்றைய தினம் ஒட்டுமொத்தமாகத் திரண்டது.ஸ்வயம்பிரகாசரின் மகிமை என்றே சொல்ல வேண்டும்.மண்டலாபிஷேகம் பூர்த்தியாகும் வரையில் சேந்தமங்கலத்திலேயே தங்கியிருந்தார் ஸ்வாமி ஓங்காராநந்தர்.இந்தக் கோயில் இங்கு அமைவதற்குக் காரணமாக இருந்த ஸ்வயம்பிரகாசரைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்வது அவசியம்.
எதன் மேலும் பற்றில்லாத மகான்களின் தன்மையை அவதூதம் என்பர்.இவர்கள் உணவு உடை வசதியான வாழ்க்கை போன்றவற்றில் பற்றில்லாதவர்கள்.அதாவது இவர்களின் உள்ளத்தை ஆசைகள் மறைக்காது; வயிற்றைப் பசி மறைக்காது!இப்படிதான் அவதூதராக இருந்தார் ஸ்வயம்பிரகாசர். விழுப்புரத்தில் இருந்து சுமார் 16 கீ.மி. தொலைவில் உள்ள கல்பட்டு என்கிற கிராமத்தில் 28.12.1871 அன்று தோன்றினார் ஸ்வாமிகள்.இவருடைய தந்தையார் ராமசாமி சாஸ்திரிகள்.தாயார் ஜானகி குழந்தைக்கு கிருஷ்ண மூர்த்தி என்ற நாமகரணம் சூட்டினர் பெற்றோர்.குடும்பத்தில் வறுமை இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் தன் மகனை சாஸ்திரம் வேதம் முதலானவற்றைக் கற்று தேர்வதற்கு நன்றாகப் பயிற்சி கொடுத்தார் தந்தை.ஏழாவது வயதில் உபநயனம் திருவிடைமருதூரில் ஆங்கிலக்கல்வியில் தேர்வு 19வது வயதில் மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி நாராயண சாஸ்திரிகளிடம் தர்க்கம் மீமாம்சம் வியாகரணம் முதலானவற்றைக் கற்றது, தவிர தமிழில் புலமை பெற தேவாரம் திருவாசகம் நாலாயிர திவ்யபிரபந்தம் திருக்குறள் முதலானவற்றைக் கற்றல் என்று போனது ஸ்வயம்பிரகாசரது கல்விக் காலம்.
குடும்பம் என்ற பந்தத்தில் இருந்து விடுதலையாகி.வாரணாசி சென்று மன்னார்குடி ராஜு சாஸ்திரிகள். திருவண்ணாமலை தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் ஆகியோரிடம் அனுக்கிரகம் பெற்றார்.மதுரையில் ஜட்ஜ் ஸ்வாமிகளிடம் சந்நியாசம் ஏற்று உபதேசம் பெற்றார்.அப்போது ஜட்ஜ் ஸ்வாமிகள் இடுப்பில் ஒரே வஸ்திரத்துடன் உன் தாயாரிடம் செல்.அவரை மூன்று முறை வலம் வந்து பிரார்த்தித்து நமஸ்காரம் செய்.அங்கேயே சிறிது நேரம் இரு.அதன்பின் உனது விருப்பப்படி அவதூதம் நிகழும்.நீ விரும்பியபடி ஆன்மிக பலத்தைப் பெறுவாய்.இறைவன் அருள் உனக்குப் பரிபூரணமாக இருக்கிறது என்று அருளினார்.அதன்படியே ஸ்வயம்பிரகாசர் அன்னை இருந்த இடத்துக்குச் சென்று அவரை மூன்று முறை வலம் வந்து.அவருடன் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தார்.புறப்படலாம் என்று அவர் எழுந்தபோது அவரை அறியாமலேயே அவர் இடுப்பில் இருந்து ஏகவஸ்திரம் நழுவி பூமியில் விழுந்தது. ஸ்வயம்பிரகாசர் அவதூதப் பரம்பரையில் தன்னைச் சேர்த்துக்கொண்டது இப்படித்தான்.அப்போது ஸ்வாமிகளுக்கு வயது 28.
அவதூதராகிப் பல தங்களுக்கு ஸ்வாமிகள் சென்றபோதெல்லாம் அறியாமையால் பலரும் அவர் மீது கல் எறிந்தார்கள்.கிண்டல் செய்தார்கள்.அவருக்கு நெருப்பு வைத்தார்கள்.சந்நியாச வாழ்க்கையில் தன்னை இணைத்துக்கொண்ட ஸ்வாமிகள் கோபப்படவில்லை.பிறருடைய தவறான செயல்களுக்காக இறைவனிடம் மன்னிப்புக் கோரினர்.பாதயாத்திரையாகவே பல தலங்களுக்கும் சென்றார்.சுமார் 18 ஆண்டுகள் அவருடைய யாத்திரை நீடித்தது.மகானின் காலடி பட்டதால் அந்த இடங்கள் புனிதமாயின. இறுதியில் சேந்தமங்கலம் வந்து ஆன்மிகப் பணிகளைத் தொடர்ந்தார்.1948 டிசம்பர் மாதம் தனது 71 வது வயதில் மகா சமாதி அடைந்தார் ஸ்வயம்பிரகாசர் அவருடைய வாழ்வில் நடந்த சில அற்புதங்களைப் பார்ப்போம்.ஒரு முறை திருச்சி-கரூர் இடையே உள்ள லாலாபேட்டை என்ற கிராமத்தில் பெருக்கெடுத்தோடும் காவிரி நதியை ஸ்வாமிகள் கடக்க நேரிட்டது.அப்போது அவர் திகம்பரராக இருந்தால் பரிசலில் அவரை ஏற்ற மறுத்துவிட்டனர் பரிசல் ஓட்டிகள்.பரிசலில் அவர் ஏறினால் மற்ற பயணிகள் அருவருப்படைந்து இறங்கிவிடுவார்களே தங்களது வருமானம் போய்விடுமே என்று பரிசல் ஓட்டிகள் கவலை கொண்டனர்.
பார்த்தார் ஸ்வாமிகள் தன் கையில் அப்போது வைத்திருந்த பனை ஓலை விசிறியை வெள்ளத்தில் மிதக்கவிட்டார்.அதன் மீது ஏறி நின்று பயணித்து ஆற்றின் மறு கரையை அடைந்தார்.பரிசலில் இருந்தவர்களும் பரிசல் ஓட்டிகளும் அவருடைய சித்து வேலையைக் கண்டு பிரமித்து.மறு கரைக்கு வந்தவுடன் அவருடைய கால்களில் விழுந்து தங்கள் செயலுக்கு மன்னிப்புக் கேட்டனர்.சித்து வேலை என்பது அந்த நேரத்தில் கூடி வருவது!இதை செய்யப்போகிறேன் என்று எவரும் முன்னறிவிப்பு கொடுத்து செய்துகாட்ட மாட்டார்கள்.சந்நியாசிக் கரடு என்பது சேந்தமங்கலத்தில் சந்நியாசிகள் கூடும் ஒரு குன்று.இதன் முகப்புப் பகுதியில் உள்ள குகை ஒன்றுக்குள் சென்று தொடர்ந்து ஆறு மாதங்கள் நிரிவிகல்ப சமாதியில்(உள்ளுக்குள்ளும் வெளியேயும் என்ன நடக்கிறது என்று எதுவும் தெரியாது.தன் மேல் ஒரு பாம்பு ஊர்ந்தால் கூட உணர்வுகள் இருக்காது இதையே பரப்பிரம்ம நிலை என்று கூறுவார்கள்)இருக்கத் தீர்மானித்தார்.குகைக்குள் தன்னை வைத்துப் பூட்டுமாறு சிஷ்யர்களிடம் சொன்னார்.குருவின் வாக்கை மீறாத சிஷ்யர்கள் குகையைப் பூட்டிவிட்டு வாயிலியே குருவின் நாமத்தை உச்சரித்தபடி தங்கினர்.
ஸ்வாமிகள் நிர்விகல்ப சமாதியில் இருப்பதைக் கேள்விப்பட்ட அக்கம்பக்கத்து கிராமத்து மக்கள் சந்நியாசிக் கரடை அடைந்து குகை வாசலில் நின்று அவரை தரிசித்துச் சென்றனர்.அப்போது சேலத்தில் இருந்த டெபுடி கலெக்டர் ஒருவர்.இந்த விஷயத்தை அறிந்தார்.தனி மனிதனை இப்படிப் பூட்டி வைப்பது அவரை சித்ரவதை செய்வதாகும் என்பது அவரது பணிக்கு எட்டிய அறிவு.எனவே பதறியபடி ஊழியர்களுடன் ஜீப்பில் குகை வாசலுக்கு வந்து சேர்ந்தார்.சிஷ்யர்களிடம் பூட்டைத் திறக்கச் சொன்னார். குருவின் உத்தரவுக்கு முன் அதிகாரியின் அதட்டல் எம்மாத்திரம்!குருவை இந்த நிலையில் தொந்தரவு செய்யக்கூடாது.அந்த பாவச் செயலை செய்ய மாட்டோம் என்று சிஷ்யர்கள் மறுத்துவிட்டனர்.
பார்த்தார் டெபுடி கலெக்டர்.தனது சிப்பந்தியை அதிகாரமாக அழைத்து பூட்டை உடனே உடைத்தெறி என்றார்.கட்டளைக்குப் பணிந்து அவரும் அதை உடைத்தெறிந்தார்.உள்ளே கிழக்கே தலையும் மேற்கே காலுமாகத் தரையில் படுத்திருந்தார் ஸ்வயம்பிரகாசர்.அவருக்கு அப்போது உலகப் பிரக்ஞை இல்லை. உடல் இளைத்து எலும்பும் தோலுமாகக் காட்சியளித்தார்.இந்தக் காட்சியைக் கண்டதும் சீடர்கள் குருவே....என்று கண்ணீர் விட்டுப் புலம்பினர்.ஸ்வாமிகளின் உடலில் உயிர் இல்லை என்பதை சில வினாடிகளில் தீர்மானித்த டெபுடி கலெக்டர்.அதே சிப்பந்தியை அழைத்து உடலை வெளியே எடுத்துவரச் சொன்னார்.சிப்பந்தியும் அவ்வாறே செய்தார்.இது நடந்து ஒரு சில வினாடிகள்தான் ஆகி இருக்கும்.தூக்கத்தில் இருந்து எழுபவர் போல சமாதி கலைந்து சட்டென எழுந்தார் ஸ்வயம்பிரகாசர். அவரது உடலிலும் செயலிலும் எந்த ஒரு தளர்வும் இல்லை.முன்பு இருந்தைவிட மிகுந்த பிரகாசமாகக் காணப்பட்டார்.
இதைக்கண்டு பிரமிப்படைந்த டெபுடி கலெக்டர்.ஸ்வாமிகளின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டார்.அவரது உடல் பதறியது.இதே நிர்விகல்ப சமாதி காலத்தில் ஸ்வாமிகளைப் பற்றி இன்னொரு விஷயமும் சொல்வார்கள் பூட்டிய குகைக்குள் இருந்த அதே நேரத்தில் மலைக் காடுகளில் அவர் சுற்றித் திரிந்ததையும் பலர் கண்டிருக்கிறார்கள்! ஸ்வயம்பிரகாசர் சேந்தமங்கலம் வந்து சேர்ந்த புதிதில் அங்குள்ள குகையில் நிஷ்டையில் இருந்த நேரங்களில் நிர்விகல்ப சமாதி கைகூடியது.அப்போது எவரும் அவரைப் பார்க்க வரமாட்டார்கள் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஒரு பெரிய கருநாகமும் அவருடன் இருக்குமாம்.அடியார்கள் எவரேனும் அந்த நேரத்தில் ஸ்வாமிகளை தரிசிக்க வந்தால் ஸ்வாமிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி பாம்பு அகன்று விடுமாம்.மும்மூர்த்திகளின் அம்சமாக அத்ரி மகரிஷி-அனுசூயா தம்பதிக்கு அவதரித்தவர் தத்தாத்ரேயர்.வடக்கே பத்ரிகாசிரமத்தில் ஸ்வயம்பிரகாசர் கடுந்தவத்தில் இருந்தபோது தென்னாட்டில் தமக்குக் கோயில் எழுப்புமாறு அவருக்கு உத்தரவிட்டார் தத்தாத்ரேயர்.தன்னுடைய ஆதி குருவான அந்த பகவானுக்கு, பின்னாளில் குகையின் மேல் அழகான கோயில் எழுப்பி தன் திருக்கரங்களாலேயே 1931ல் குடமுழுக்கு செய்து வைத்தார் ஸ்வயம்பிரகாசர்.
அவதூதர் என்பதால் பிறர் கண்களில் அதிகம் படக்கூடாது என்பதற்காக ஸ்வயம்பிரகாசர் குகையில் வசித்து வந்தார்.அந்த குகை (குகாலயம்)இன்றும் நம் தரிசனத்துக்கு இருக்கிறது.இந்தியா முழுவதும் எங்கெங்கேயோ சுற்றித் திரிந்த அந்த மகான் இறுதிக் காலத்தில் அந்த குகையிலேயே சமாதி ஆனார். ஸ்வாமிகளின் உடல் வேண்டுமானால் இன்று நம் கண்களுக்குப் புலப்படாமல் இருக்கலாம்.ஆனால் இன்று நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.நாடி வருபவருக்கு அவருடைய ஆன்ம பலமும் சக்தியும் இன்றும் பல நன்மைகளைச் செய்துகொண்டுதான் இருக்கிறது.சேந்தமங்கலத்தில் உள்ள அவருடைய அதிஷ்டானத்துக்கு வந்து.அந்தத் திருவுருவை மனக் கண் முன் நிறுத்தி தியானித்து வணங்குவோருக்கு நிச்சியம் காட்சி தருவார் அவர்.மந்திராலய அதிஷ்டானத்தில் சில நூறு ஆண்டுகளாக ஜீவித்து வரும் ராகவேந்திர ஸ்வாமிகள் அதிகாலை நேரத்தில் ஸ்நானம் செய்வதற்காக துங்கபத்திரை நதிக்கரையில் பாதரட்சையுடன் நடந்து செல்லும் ஒலியை இப்போதும் பலர் கேட்கின்றனர்.அதுபோல் உண்மையான பக்தியுடனும் ஆத்ம ஸுத்தியுடனும் செல்பவர்களுக்கு ஸ்வயம்பிரகாசரின் தரிசினம் நிச்சயம் கிடைக்கும்.அவருடைய அருளுக்கும் ஆசிக்கும் பாத்திரமாகும் பாக்கியம் உண்டு.ஸ்வயம்பிரகாசரின் திருப்பாதம் பணிந்து, அவரது சந்நிதி இருக்கும் சேந்தமங்கலம் நோக்கி வணங்குவோம்!
முன்னோர்களின் படங்களை பூஜை அறையில் வைக்கலாமா?
நமக்கு நல்வழி காட்டியவர்களின் படங்களை பூஜை அறையில் தாராளமாக வைத்து வழிபடலாம்.தாய், தந்தை,குருநாதர் இவர்கள் நமக்க நல்வழி காட்டியவர்கள்.தெய்வத்துக்கு ஒப்பானவர்கள்.இவர்களை வைத்து வழிபடலாம்.
 பண்புடன் வாழுங்கள்
♤ பொறாமை உடையவன் எதை பெற்றாலும் மனநிறைவு அடைய மாட்டான்.
♤ தர்மம் நீதி இந்த இரண்டும் சேர்ந்தது தான் பண்பு.பண்பு இல்லாவிட்டால் மனிதன் தன் நிலையில் இருந்து தாழ்ந்து விடுகிறான்.
♤ அலட்சிய மனநிலையுடன் எதையும் அணுகுவது கூடாது.அக்கறையுடன் ஈடுபட்டால் மட்டுமே செயலில் வெற்றி கிடைக்கும்.
♤ இடைவிடாமல் எதை தீவிரமாகச் சிந்திக்கிறோமோ அதுவாகவே மாறிவிடும் தன்மை உண்டாகி விடும்.
♤ காஞ்சி மஹ பெரியவா



சூரியன் உபதேசித்த சுக்ல யஜுர் வேதம்!

இறைவனுடைய உள்ளிழுக்கும் காற்றாகவும் வெளிவிடும் காற்றாகவும் விளங்குவது வேதம். பகவானுக்கும் சுவாசம் உண்டு என்கிறது வேதம்.இந்த வேதத்தை நான்காக வகுத்தவர் வியாசர்.அவை ருக் யஜுர் சாமம் அதர்வணம் என்று எல்லாருமே அறிவார்கள்.இதைத்தவிர சுக்ல யஜுர் வேதம் என்றுமொரு வேதம் உண்டு.இந்த வேதத்தை யாக்ஞவல்கியர் என்ற மகான் சூரிய பகவானிடமிருந்து கற்று உலகிற்கு அளித்தார்.யாக்ஞவல்கியர் இந்த வேதத்தைக் கற்ற வரலாறு சுவையானது. வைசம்பாயனர் என்ற ரிஷி வியாசரிடம் கற்ற யஜுர் வேதத்தை பல சிஷ்யர்களுக்கு கற்றுக்கொடுத்தார். ஒருநாள் வைசம்பாயனர் அதிகாலையில் நீராடிவிட்டு ஏதோ சிந்தனை செய்தவாறு ஆசிரமத்தை நோக்கிவந்தார்.அப்போது நடுவழியிலே வேதத்தை பூரணமாகக் கற்றுணர்ந்த பிரம்மச்சாரி சிறுவன் ஒருவன் படுத்துக்கொண்டிருந்தான்.அதையறியாமல் அந்த சிறுவனின் வயிற்றில் காலை வைத்துவிட்டார் வைசம்பாயனர்.அந்த சிறுவன் துடிதுடித்து இறந்துபோனான்.அதனால் வைசம்பாயனருக்கு பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது.
வருத்தம் தாங்காமல் ஆசிரமத்தில் அமர்ந்திருந்தார் அவர்.சீடர்கள் வழக்கம்போல வந்து வணங்கினார்கள்.ஆச்சாரியர் முகம் வாட்டமாக இருப்பதைக் கண்டு பணிவோடு காரணம் கேட்டனர். வைசம்பாயனர் நடந்த விவரங்களைச் சொன்னார்.சீடர்கள் செய்யும் பாவம் ஆச்சார்யர்களை வந்தடையும்.இங்கே ஆச்சார்யரே பாவம் செய்துவிட்டார்.சீடர்கள் எல்லாருமாக சேர்ந்து ஏதாவது பிராயச்சித்தம் அனுஷ்டித்தால் அந்த பாவம் போகும்.வைசம்பாயனரும் அவர்கள் அவ்வாறு அனுஷ்டித்து பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து தன்னை விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டார்.சீடர்கள் எல்லாரும் அப்படியே நாங்கள் செய்கிறோம்.அதைக் காட்டிலும் ஒரு கடமை எங்களுக்கு உண்டா? ஆச்சார்யாருக்கு ஏற்பட்ட சிரமத்தைப் போக்கவில்லையென்றால் சீடர்கள் எதற்கு?என்றார்கள். அப்போது அவர்களுள் ஒருவரான யாக்ஞவல்கியர் குருவே உங்கள் தோஷத்தை நிவர்த்திசெய்ய இத்தனை பேர் எதற்கு?நான் ஒருவனே பிராயச்சித்தம் செய்து சிரமத்தைப் போக்கிவிடுவேன் என்றார்.
வைசம்பாயனருக்கு கடும் கோபம் வந்துவிட்டது. எல்லாரையும் சாமானியர்கள் என்று மதித்து நீ ஒருவனே உயர்ந்தவனென்று காட்டிக்கொள்கிறாய்.அது உன் அகங்காரத்தைக் காட்டுகிறது. இவ்வளவு அகங்காரமுடைய சீடன் எனக்குத் தேவையில்லை.நீ ஆசிரமத்தைவிட்டு வெளியே போ!என்று கோபத்தோடு சொன்னார்.யாக்ஞவல்கியருக்கு அதற்குமேல் கோபம்.ஆச்சார்யரே தங்களிடத்தில் இருக்கிற அன்பினால் மதிப்பினால் சொன்ன வார்த்தைகளே தவிர இவர்களைக் குறைத்துக் கூறுவதற்காக நான் பேசவில்லை.அப்படி நீங்கள் நினைப்பதும் ஏற்றதல்ல.என் எண்ணத்தைப் புரிந்துகொள்ளாமல் என்னை போகச் சொல்கிறீர்கள்.உங்களுடைய ஆச்சாரியத்துவம் எனக்கு வேண்டியதில்லை என்றார்.அதற்கும் மேலே வைசம்பாயனர் என்னுடைய ஆச்சார்யத்துவம் வேண்டியதில்லையானால் என்னிடம் கற்ற வேதத்தை மட்டும் எடுத்துக்கொண்டு போகமுடியுமா? அதனால் வேதத்தை முழுக்க கக்கிவிட்டுப் போ என்றார்.
யாக்ஞவல்கியரும் சளைக்கவில்லை.கற்ற வேதங்களை எல்லாம் மொத்தமாக ஒரு மாமிசக் கோளமாகக் கக்கிவிட்டு கோபத்தோடு வெளியேறிவிட்டார்.மகான்களின் தவவலிமையால் இப்படி எல்லாமே சாத்தியமாகும்.வேதவித்தை கேட்பாரில்லாமல் ஒரே மாமிசக் கோளமாகக் கிடந்தது. வைசம்பாயனர் வேதம் இப்படி இருப்பதைக் கண்டு மனம் வருந்தி மற்ற சீடர்களை அழைத்து அவர்களை தித்திரா என்ற பறவைகளாக மாற்றி கிழே கிடந்த மாமிசத்தை உண்ணும்படி சொன்னார்.அவர்களும் குரு சொன்னபடி செய்தார்கள்.இவ்வாறு வேதவித்தைகள் கக்கப்பட்டு மறுபடியும் கொள்ளப்பட்டு தரித்தது. அதனால் இதற்கு கிருஷ்ண யஜுர் வேத தைத்ரீய சம்ஹிதை என்று பெயர்.தித்திரா என்ற பறவையின் பெயரால் தைத்ரீயம் என்ற உபநிடதம் உள்ளது.வேதமிழந்த யாக்ஞவல்கியர் கங்கை நதி தீரம் சென்று நீராடி ஸ்ரீமந்நாராயணனைக் குறித்து பலவாறாக ஸ்தோத்திரம் செய்தார்.பிறகு காயத்ரி தேவியைக் குறித்து பல நாட்கள் தவமிருந்தார்.அவரது தவத்திற்கிரங்கிய காயத்ரி தேவி அப்பனே நீ வேண்டிய வரமென்ன என்று அன்புடன் கேட்டாள்.அவளை வணங்கிய யாக்ஞவல்கியர் தாயே ஸ்ரீவைசம்பாயனர் என்னிடம் கற்ற வித்தைகளைக் கொடு என்று கேட்டார்.மறுக்க வழியில்லாமல் கொடுத்துவிட்டேன். இப்பொழுது எனக்கு யஜுர் வேதம் வேண்டும்.நீங்களே குருவாக இருந்து வேதத்தை எனக்கு உபதேசிக்க வேண்டும் என்றார்.
அதைக்கேட்ட காயத்ரி தேவி முன்னொரு காலத்தில் நைமித்திக பிரளயம் ஏற்படப் போகிறதென்று அறிந்த பிரம்மதேவர் விஷ்ணு லோகம் சென்று சுவாமி வரப்போகும் பிரளயத்தில் அசுரன் ஒருவன் வேதங்களை அபகரிப்பான் என்கிற பாடம் பயம் உண்டாகிறது என்றார்.அதைக்கேட்ட விஷ்ணு, குழந்தாய் கவலை வேண்டாம்.வேதத்தின் ஒரு பகுதியாக யஜுர் வேதத்தை சூரிய பகவானிடத்தில் வைப்போம் என்று சொன்னார்.அதன்படியே இந்த வேதமானது அயாதயாமம் என்பது சூரியனிடம் வைக்கப்பட்டிருக்கிறது.நீ சூரிய பகவானைக் குறித்து தவமிருப்பாயாக.நீ வேத வியாசரிடம் வேத அத்யயனம் செய்திருக்கிறாய்.அந்த பிரகஸ்பதியே உனக்கு அட்சராப்யாசம் செய்துவைத்திருக்கிறார். எனது கடாட்சத்தால் உன் விருப்பம் நிறைவேறும் என்று அருள்புரிந்து மறைந்தாள்.அது முதல் யாக்ஞவல்கியர் சூரிய பகவானைக் குறித்துத் தவமிருந்தார்.சூரியன் ஒரு குதிரை வடிவில் அவர்முன் தோன்றினான்.(அதனால் முறைப்படி சந்தியா வந்தனம் செய்து முறைப்படி முத்திரையிட்டு, சூரியனைப் பார்த்துவிட்டு கண்களை மூடினால் குதிரை ரூபம் கண்ணுக்குள் தெரியும்.) சூரியதேவன் யாக்ஞவல்கியரிடம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டான்.யாக்ஞவல்கியர் என் ஆச்சாரியர் வைசம்பாயனர் என்னை அனுப்பிவிட்டார்.அவருக்குத் தெரியாத வேதம் முழுவதும் எனக்கு வேண்டும் என்றார்.யாக்ஞவல்கியரின் தவத்திற்கு மெச்சிய சூரியன் குருவுக்கு என்ன தெரியாதோ அந்த வேதத்தை சீடருக்கு உபதேசம் செய்துவிட்டார்.அப்படி சூரியன் உபதேசம் செய்ததுதான் சுக்லயஜுர் வேதம்.

சிறிது நன்மையாவது செய்யுங்கள்!
□ பலனை எதிர்பார்க்காமல் உங்களால் முடிந்த நல்லதைச் செய்து கொண்டிருங்கள்.பலன் கொடுக்க வேண்டியது கடவுளின் வேலை.
■ நம்முடைய துன்பத்தை மலை போல நாம் பெரிதாக எண்ணிக் கொண்டிருப்பது கூடாது.நம்மால் உலகம் சிறிது நன்மை பெறும் என்று தெரிந்தாலும் கூட அதற்காக நாம் கடுமையாகப் பாடுபட வேண்டும்.
□ கருணையில் கடவுள் கடலுக்குச் சமமானவர்.நதிகளைப் போல தன்னை நாடி வரும் பக்தர்களை ஏற்றுக் கொண்டு அவர் அருள்புரிகிறார்.
■ புத்திக்குத் தெரிந்தும் ஒரு தவறைச் செய்யும்போது அது பாவமாகிறது.புத்தி தங்கள் வசத்தில் இல்லாமல் இருப்பவர்கள் செய்யும் எந்தச் செயலும் பாவமாகாது.
□ இயற்கையில் எல்லாம் மாறிக் கொண்டே தான் இருக்கிறது.சில மாறுதல்கள் மட்டும் நம் கண்ணுக்குத் தெரிகிறது.மலையும் சமுத்திரமும் கூட காலச்சக்கரத்தில் மாறுதல் அடைகின்றன.
■ காஞ்சி மஹாபெரியவா

ராமாயண வரலாற்றின் நினைவு சின்னம் ராமர் பாதம் கோயில்!
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் என்றாலே ராமாயண வரலாற்றில் தொடர்புடைய புனித தலம் என்பது இந்துக்கள் பலருக்கும் நினைவிற்கு வரும்.அத்தகைய ராமேஸ்வரத்தில் குறிப்பிடப்படும் முக்கிய இடங்களில் ஒன்றுராமர் பாதம்.இங்கு 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இன்றைக்கும் கம்பீரமாக நிற்கிறதுராமர் பாதம் கோயில்.ராவணனால் கடத்திச் செல்லப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்ட சீதையை மீட்க தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு அனுமான் மற்றும் வானர சேனைகள் பாலம் அமைத்தன.இப்பணியை ஸ்ரீ ராமர் கெந்தமாதன பர்வதம்(உயரமான இடம்)எனும் மணல் குன்று மீது நின்று பார்வையிட்டதாக ராமாயண காவியத்தில் கூறப்பட்டுள்ளது.அதை நினைவு கூறும் விதத்தில் ராமர் நின்ற இடத்தில் அவரது பாதத்தை வைத்து பூஜித்திட அமைக்கப் பட்டது தான் ராமர் பாதம் கோயில்.ராமேஸ்வரம் கோயிலில் இருந்து வடக்கு திசையில் 3 கி.மீ. தூரத்தில் உள்ள இக்கோயிலில் இருக்கும் ஸ்ரீ ராமர் பாதம் பதித்த சுவட்டை வழிபட தினமும் ஆட்டோ கார் வேன் மூலம் ஏராளமான பக்தர்கள் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.கடல் மட்டத்தில் இருந்து 80 மீட்டர் உயரத்தில் உள்ள இக்கோயிலின் மேல் தளத்தில் நின்று ராமேஸ்வரம் தீவு பகுதி முழுவதையும் கண்டு ரசிக்க முடியும். இக்கோயிலுக்கு சென்று திரும்பினால் இழந்து விட்ட குலப்பெருமைகளை மீண்டும் பெறலாம் என காலம் காலமாக பக்தர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை நிலவுவதால் நீங்களும் ஒரு முறை ராமர் பாதம் கோயிலுக்கு சென்று வரலாமே.






பேங்களூர் முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் முருகனுக்கு தரிசனம் செய்து ஸ்வாமிக்கு தீபாராதனை செய்த காட்சி.