புதன், 30 அக்டோபர், 2013

ராகவேந்திரர் பகுதி-3

பிராமன்ய தீர்த்தர் சொன்னபடியே அந்தத்தாய் கர்ப்பமானார். 1447, ஏப்ரல் 22 ஒரு புண்ணிய தினமாக இந்த உலகத்துக்கு அமைந்தது. ஆம்... அன்று தான் அந்த அற்புதக்குழந்தை பூமியில் அவதரித்தது. தீர்த்தர் சொன்னபடி பிறந்த அன்றே குழந்தையை ஆஸ்ரமத்தில் ஒப்படைத்து விட்டனர் பெற்றோர். குழந்தைக்கு எத்திராஜன் என்று பெயர் வைத்தார் தீர்த்தர். குழந்தையைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டார் தீர்த்தர். எத்திராஜனுக்கு ஆறு வயதானது. அவருக்கு உபநயனம் (பூணூல் அணிவிக்கும் சடங்கு) நடத்தப்பட்டது. அதன்பின் இரண்டே ஆண்டுகள். எட்டே வயதில் சன்னியாசமும் வழங்கப்பட்டு விட்டது. சன்னியாசம் பெற்ற எத்திராஜனின் பெயர் வியாசராயர் என மாற்றப்பட்டது. வியாசராயருக்கு மத்வாச்சாரியாரின் துவைத கருத்துக்கள் போதிக்கப்பட்டன. வியாசராயரும் அதை அக்கறையுடன் படித்தார். பின்னர், மேல்படிப்புக்காக மூலபஹல் என்ற ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவ்வூரில் ஸ்ரீபாதராஜர் என்ற மகான் இருந்தார். அவர் சிறந்த கல்விமான். அந்தக் கல்விமானிடம் படித்த வியாசராயரும் பெரும் கல்வியாளர் ஆனார். அது மட்டுமல்ல! துவைதக் கருத்துக்களை மிகத்துல்லியமாக மற்றவர்களுக்கும் கற்பிக்கும் ஆற்றலைப் பெற்றார்.இந்த நேரத்தில் வியாசராயரை வளர்த்து ஆளாக்கிய பிரமான்ய தீர்த்தர் முக்தி பெற்றார். அவருக்குப் பின் ஆஸ்ரமத்தை சிறந்த முறையில் நடத்த கல்விமானான வியாசராயரே தகுதியானவர் என அங்கிருந்தோர் கருதினர். மடத்தின் தலைவராக வியாசராயர் நியமிக்கப் பட்டார். பின்னர், அவர் நாடு முழுவதும் பயணம் செய்து துவைதக் கருத்துக்களை மக்களிடையே எடுத்துச் சொன்னார். அவரது கருத்துக்களை ஏற்ற பெரியவர்கள் எல்லாம் தங்கள் சொத்தையே ஆஸ்ரமத்துக்கு எழுதி வைத்தனர். அந்த மடம் வியாசராய மடம் என்று பெயர் பெற்றது.வியாசராயர் அந்தப் பணத்தைக் கொண்டு ஏராளமான ஆன்மிகப்பணிகளைச் செய்தார். நாடெங்கும் 700க்கும் மேற்பட்ட இடங்களில் ராமதூதனான ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்ய விக்ரகம் வடித்துக் கொடுத்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலிலுள்ள வழிபாட்டு முறைகளை நெறிப்படுத்திக் கொடுத்தார். 12 நூல்களை அவர் எழுதினார். வியாசராயரின் அரும்பணிகளும் ஒருநாள் முடிவுக்கு வந்தன.துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள நவபிருந்தாவனத்தில் அவர் சமாதியடைந்தார். ஆக, பிரம்மாவின் ஆணைப்படி மூன்று பிறவிகளையும் நிறைவு செய்துவிட்டான் சங்குகர்ணன். இனி அவன் பிரம்மலோகம் சென்றுவிடலாம் என்று நினைத்திருந்தான்.சங்குகர்ணன் அளவுக்கதிகமான புண்ணியம் செய்திருந்ததால், அதன் பலன் இன்னும் 700 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்து அனுபவிக்கும் அளவுக்கு மிஞ்சியிருந்தது. அதையும் இந்த பூமியில் பிறந்து மக்களுக்கு அருள் வழங்கிக் கழிக்கலாம் என முடிவெடுத்தான் சங்குகர்ணன்.மாசில்லாத வானத்தில் வரும் வட்டநிலா போல பூமிக்கு வரத்  தயாரானது அந்தச் செல்வம்.1519ல் கர்நாடக மாநிலத்தில், வேதசாஸ்திரங்களை அறிந்த கிருஷ்ணபட்டர் குடும்பத்தினர் வசித்து வந்தனர். பட்டர் சிறந்த இசைமேதையும் கூட. விஜயநகரப் பேரரசை நிறுவிய கிருஷ்ணதேவராயரே இவரிடம் தான் வீணை கற்றுக்கொண்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! அத்துடன் விஜயநகரப் பேரரசின் ஆஸ்தான கவியாகவும் விளங்கினார். கிருஷ்ணபட்டரின் மகன் கனகசாலபட்டரும், தந்தைக்கு சற்றும் குறையாத அறிஞராக விளங்கினார். கனகசால பட்டரின் வாரிசாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு திம்மண்ணா பட்டர் என்று பெயர் சூட்டினர். திம்மண்ணா துவைத சித்தாந்தத்தில் பெரும் மேதையாகத் திகழ்ந்தார். புலிக்கு பிறந்தது புலி என்பதை நிரூபிக்கும் வகையில், வீணை வாசிக்கவும் கற்றுக்கொண்டார். அது மட்டுமல்ல! வீணை இசை பெரிதா! இவர் குரலழகு பெரிதா என்று மற்றவர்கள் விவாதிக்கும் வகையில், பாடும் திறமையையும் பெற்றிருந்தார். ஆனால், என்ன துரதிர்ஷ்டமோ..தனது முன்னோரைப் போல திம்மண்ணா பட்டருக்கு அரசவைப்பதவி கிடைக்கவில்லை.

திம்மண்ணா பட்டருக்கு கோப்பம்மா என்ற பெண்மணியைத் திருமணம் செய்து வைத்தனர். இந்த சமயத்தில் விஜயநகரப் பேரரசுக்கு உட்பட்ட பகுதிகளில் மதக்கலவரம் ஏற்பட்டதால், அங்கு இந்துக்களால் வாழ முடியாத சூழல் ஏற்பட்டது. குறிப்பாக, பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருந்தது. சிறுமிகளுக்கும், வயதான பெண்களுக்கும் கூட பாதுகாப்பில்லாமல் போனது.எனவே, இந்துக்கள் அங்கிருந்து வேறு இடங்களுக்கு இடம் பெயர வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாயினர். திம்மண்ணா பட்டருக்கு குருராஜ் என்ற மகனும், வெங்கம்மா என்ற பெண் குழந்தையும் இருந்தனர். பெண்ணைப் பெற்றவர் என்பதாலும், மனைவிக்கும் பாதுகாப்பு வேண்டும் என்பதாலும் திம்மண்ணா பட்டரும் தன்இருப்பிடத்தை மாற்ற முடிவெடுத்தார். தன் பாட்டனாரும், தந்தையும் சேர்த்து வைத்த நவரத்தினங்களையும், தங்கம், விலை உயர்ந்த ஆடைகளை எடுத்துக் கொண்டு, அவர்கள் இந்துக்களின் புனித பூமியாகத் திகழ்ந்த தஞ்சாவூர் வந்து சேர்ந்தனர்.தஞ்சாவூர் அருகே புவனகிரி என்ற கிராமம் இருந்தது. அங்கே திம்மண்ணா பட்டர் குடியேறினார். அங்கே பாதுகாப்பு கிடைத்ததே தவிர, அன்றாடச் செலவுக்கு திண்டாட வேண்டியிருந்தது. விஜயநகரத்தில் இருந்து கொண்டு வந்த பொருட்களை விற்று செலவழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். செக்களவு பொன் இருந்தாலும் செதுக்கித் தின்றால் எத்தனை நாளைக்கு வரும் என்பது நம்மவர் சொல்லியிருக்கும் பொன்மொழி. திம்மண்ணா பட்டர் வீட்டில் இருந்த கஜானா காலியாகத் தொடங்கியது.
மகான் ராகவேந்திரர் பகுதி-2

பிரகலாதனின் காலத்தில் மக்கள் நிம்மதியுடன் வாழ்ந்தனர். அவன் அனுஷ்டிகம், சாத்வீகம் என்ற இருவகையான புண்ணியங்களைச் சேர்த்தான். அனுஷ்டிகம் என்பது தர்மம் செய்வதால் வரக்கூடியது. சாத்வீகம் என்பது ஹிம்சை செய்தவரிடமும் அஹிம்சையைக் காட்டுவதால் கிடைக்கக்கூடியது. முந்தைய புண்ணியத்தால் செல்வம் பெருகும். வாழ்நாள் கூடும். பிந்தைய புண்ணியம் பிறப்பற்ற நிலையை ஏற்படுத்தும் இரக்க மனம் கொண்ட பிரகலாதன் இரண்டு விதமான புண்ணியங்களையும் அளவுக்கதிகமாகச் சேர்த்து விட்டான். அவன் பிரம்மனை வணங்கி, தெய்வமே! தாங்கள் எனக்கிட்ட சாபம் தீரும் காலம் வந்து விட்டதா? என மனமுருகிக் கேட்டான். பிரம்மன் அவன் முன்பு தோன்றி,சங்குகர்ணா! நீ இப்பிறவியில் அளவுக்கதிகமாக புண்ணியத்தை சேர்த்து விட்டாய். இவ்வாறு புண்ணியம் செய்பவர்கள், அந்த புண்ணியத்திற்குரிய பலன்களை பூமியில் இருந்து அனுபவிக்க வேண்டும். உலகின் சுகமான இன்பங்களை அனுபவித்த பிறகே பிரம்மலோகம் வர முடியும்,என்றார். சங்குகர்ணன் அவரிடம்,சுவாமி! அப்படியானால் எனது புண்ணியங்களைத் தீர்க்கும் வழி யாது?என்றான்.  நீ அடுத்த பிறவியிலும் மன்னனாகவே பிறப்பாய். இப்பிறவியில் மகாவிஷ்ணுவின் பக்தனாக இருந்த நீ, அடுத்த பிறவியில் பாலிகன் என்ற பெயரில் பிறந்து, அவருக்கு எதிராக செயல்படும் மக்களுக்கு ஆதரவாக இருப்பாய். எனவே, உன் புண்ணியத்தின் பெரும்பகுதி கரையும். அதன் பிறகும் நீ சேர்த்த புண்ணியங்களின் விளைவை கலியுகத்தில் தான் தீர்ப்பாய், என்று அருள்பாலித்து மறைந்தார். பிரகலாதனாய் பிறந்த சங்குகர்ணன், இப்பிறவியில் பாலிகன் என்ற மன்னனாகப் பிறந்தான். கவுரவர்களின் நண்பனாக வேண்டிய சூழல் இவனுக்கு ஏற்பட்டது. குரு÷க்ஷத்திர யுத்தத்தில் இவன் கவுரவர்களுடன் சேர்ந்து, பகவான் கிருஷ்ணரின் நண்பர்களான பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட்டு அழிந்தான். அடுத்த யுகமான கலியுகத்தில் பாலிகனின் அவதாரம் உலகமே வியக்கக்கூடியதாக இருந்தது.
பாலிகனாகப் பிறந்த சங்குகர்ணன், கவுரவர்களுடன் இணைந்திருந்தாலும் கூட அப்போதும் சில புண்ணியங்களைச் சேர்த்துக் கொண்டான். மனிதர்கள் பாவம் செய்தாலும் சரி, புண்ணியம் செய்தாலும் சரி!  கன்மம் எனப்படும் இந்த இரு வினை களால் ஏற்படும் பலன்களை அனுபவிப்பதற்காக பூலோகத்தில் மீண்டும் பிறக்க நேரிடும். அதனால் தான்  பாவ, புண்ணியம் இரண்டும் கலந்த இந்த பிறவிச்சுழலில் இருந்து காப்பாற்றும்படி  இறைவனிடம் மகான்கள் வேண்டிக் கொள்வார்கள்.பாலிகன் செய்த புண்ணியத்தின் விளைவை அனுபவிக்க அவன் பூலோகத்தில் பிறக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பல நூறு ஆண்டுகள் கடந்தன. கலியுகம் பிறந்தும் பல ஆண்டுகள் ஓடிவிட்டன. மைசூரு மாநிலத்தில் (இப்போதைய கர்நாடகம்), அப்பூர்  என்ற கிராமத்தை ஒட்டிய குக்கிராமத்தில் ராமாச்சாரியார் என்பவர் வசித்தார். இவருக்கு குழந்தை இல்லை. ராமாச்சாரியாரும், அவரது மனைவியும் மனம் நொந்து போய் இருந்தனர்.ஒரு தம்பதிக்கு குழந்தை இல்லை என்றால் ஊரார் அவர்களைப் பற்றி வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவார்கள். குறிப்பாக, உறவுக்காரர்கள் அந்தப் பெண்ணை மலடி என ஏசுவார்கள். அந்த ஆண்மகனை குடும்ப வாழ்வுக்கு லாயக்கற்றவன் என்பர். ராமாச்சாரியரும் இதற்கு விதிவிலக்கல்ல. கணவனும், மனைவியும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானார்கள். அந்த தம்பதியர் கண்ணீர்  வடிக்காத நாளில்லை. அவர்கள், தங்கள் பிரச்னைக்கு தீர்வு வேண்டி பிரமான்ய தீர்த்தர் என்ற வைணவத்துறவியை அணுகினர். தீர்த்தர் சுவாமிகளுக்கு எங்கள் நமஸ்காரம். இவள் என் மனைவி, நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் அவதிப்படுகிறோம். ஊராரும் உற்றாரும் எங்களைப் பற்றி பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மனம் நொந்து போயிருக்கிறோம். குழந்தை இல்லாதவர்கள் வாழ்வதை விட சாவதே மேல். மேலும், குழந்தை இல்லாதவர்கள் தங்களுக்கு சிரார்த்தம் முதலியன செய்ய ஆள் இல்லாததால் நரகத்திற்கு செல்வார்கள் என்கிறது சாஸ்திரம். நாங்கள் ஏன் வாழ வேண்டுமென நினைக்கிறோம். எங்களுக்கு குழந்தை பிறக்க வழியிருக்கிறதா? நீங்கள் தான் ஒரு யோசனை சொல்ல வேண்டும், என்றார்.

தீர்த்தர் ராமாச்சாரியரிடம், அன்பனே! கவலைப்படாதே. உனக்கு குழந்தை பிறக்கும் காலம் கனிந்துவிட்டது. ஒரு ஆண்குழந்தை உனக்குப் பிறக்கும், என்றதும், தம்பதியர் உணர்ச்சிப்பிழம்பாகி விட்டனர். தீர்த்தரை சேவித்த அவர்கள், சுவாமி! இதென்ன அதிசயம்! நிஜமாகவா இது நிகழப்போகிறது! எங்களுக்கு குழந்தையா! அதிலும் ஆண் குழந்தையா! என்னே நாங்கள் செய்த பாக்கியம், என்று புன்னகையும், கண்ணீருமாகக் கேட்டவர்களுக்கு அடுத்து வார்த்தைகள் வர மறுத்தன. நா தழுதழுத்தது. மனிதர்களுக்கு மிதமிஞ்சிய மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சரி, அல்லது சோகம் நிகழ்ந்தாலும் சரி! ஏனோ, வார்த்தைகள் வர மறுக்கின்றன. பிரமான்ய தீர்த்தரே அவர்களது இந்த உணர்ச்சிவசப்படும் தன்மையைக் கண்டித்தார். ராமாச்சாரி! நீ ரொம்பவும் சந்தோஷப்படாதே. மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும் போதும், வேண்டாத நிகழ்ச்சிகள் நடக்கும் போதும் மனதை ஒரே நிலையில் வைத்திருப்பவனே சிறந்த மனிதன். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தெரியாத நிலையற்ற உலகில் நாம் வசிக்கிறோம் என்பதை மறந்துவிடாதே. நல்லது நடக்கப் போகிறது என்பதற்காக மகிழாமலும், துன்பம் வரப்போகிறது என்பதற்காக கலங்காமலும் இருக்க வேண்டும், என சொல்லி விட்டு, ராமாச்சாரி! இந்த அறிவுரையை நான் எதற்காக உன்னிடம் சொன்னேன் என்று உனக்குத் தெரியுமா? என்றதும், கேள்விக்குறியோடு, தீர்த்தரின் முகத்தை அந்த தம்பதியர் ஒரு வித பயத்தோடு நோக்கினர். அத்துடன், தீர்த்தர் சொன்னதில் இருந்த நியாயத்தை உணர்ந்து தங்கள் மகிழ்ச்சியை ஒரு குட்டையைப் போல் சுருக்கிக்கொண்டு அவர் சொல்வதைக் கேட்க தயாராயினர்.ராமாச்சாரி! உங்களுக்கு குழந்தை பிறக்கும். ஆனால், அந்தக் குழந்தை எனக்குரியது. குழந்தை பிறந்தவுடன் அவனை எனக்கு தத்துக் கொடுத்து விட வேண்டும், என்றார்.இந்த நிபந்தனையைக் கேட்டதும், தம்பதிகள் விக்கித்துப் போனார்கள். சற்றுமுன் அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி, நதியில் கரைந்த சர்க்கரை போல் ஆயிற்று. குழந்தை பிறந்தவுடன் சீராட்டி, பாலூட்டி வளர்க்க வேண்டும்.

குருகுலத்துக்கு அனுப்பி அவனுக்கு பெரிய படிப்பெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும், இளைஞன் ஆனதும், சிறந்த பெண்ணை அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும், அந்த திருமணத்தை ஊரே வியக்கும் வகையில் பெரிய அளவில் நடத்த வேண்டும், பேரன், பேத்திகளுடன் மகிழ்ந்து விளையாட வேண்டும் என்றெல்லாம் கற்பனை செய்வது எல்லாப் பெற்றோர்களுக்கும் வாடிக்கை தானே! ஆனால், தீர்த்தர் தங்களுக்கு இப்படி ஒரு நிபந்தனை விதிக்க என்ன காரணம் என்று யோசித்தனர்.சுவாமி! எங்களுக்கு குழந்தை பிறக்குமென தங்கள் திருவாக்கு மலர்ந்ததும் நாங்கள் மகிழ்ந்தோம். இப்போது, இப்படி ஒரு நிபந்தனை விதிக்க காரணமென்ன? என அவர்கள் கவலையுடன் கேட்டனர்.ராமாச்சாரி! கவலைப்படாதே! உங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தை சாதாரண குழந்தையல்ல. அவன் உலக இச்சைகளில் வாழ்வதற்காகப் பிறக்கவில்லை. மிகப்பெரிய புண்ணிய ஆத்மாவான அந்தக் குழந்தை சன்னியாச நிலை பெற்றுய்வதற்காக பிறக்கிறது. நீங்கள் அந்தக் குழந்தையை என்னிடம் ஒப்படைப்பதாக வாக்குறுதி அளித்தால் மட்டுமே உங்களுக்கு குழந்தை பாக்கியம். இல்லாவிட்டால் இதுவும் சிரமமே! என்றார். உலகம் உய்வதற்காக ஒரு மகானைப் பெற்றுத் தரப்போகிறோம். அத்துடன் மலடி என்று ஊரார் சூட்டிய கொடுமையான பட்டத்தில் இருந்து விடுதலையும் கிடைக்கும். துறவியின் நிபந்தனைக்கு சம்மதித்து விட வேண்டியது தான் என முடிவெடுத்த அந்தத்தாய், சுவாமி! எனக்கு குழந்தை பிறந்தால் போதும், பிறந்தவுடன் தங்களிடமே ஒப்படைத்து விடுகிறேன், என்று கண்ணீர் மல்க கூறினார்.
மகான் ராகவேந்திரர் பகுதி-1

பிரம்மலோகத்தில் பெரும் பிரளயமே நிகழ்ந்து கொண்டி ருந்ததுஏ சங்குகர்ணா, எனது படைப்புக்கலன்களில் இந்த மண் கலயம் உடைந்து கிடக்கிறதே, ஏன் இதை என்னிடம் சொல்ல வில்லை! நீ வேலை செய்யும் லட்சணம் இதுதானா, பிரம்மன் கத்தினார்.  சங்குகர்ணன் நடுநடுங்கிக் கொண்டிருந்தான்.மன்னிக்கவேண்டும்  பிரபோ! தாங்கள் சத்திய லோகத்தில் அன்னை சரஸ்வதி யுடன் அளவளாவிக் கொண்டி ருந்த வேளையில், தங்கள் படைப்புக்கலன்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தேன். இந்த மண் கலயத்தை மேல் தட்டில் அடுக்கி வைக்க முயன்றபோது கைதவறி விழுந்து உடைந்து விட்டது. தங்களிடம் இதை எப்படி சொல்வதென தெரியாமல் தவித்தேன். இதை உடைத்த தற்காக மன்னிப்பு கேட்கிறேன், என்றவனாய் காலில் விழுந்தான். பிரம்மனின் சீற்றம் தணிய வில்லை. ஏனடா! பணியில் இருப் பவன் எதிலும் கவனமாக இருக்க வேண்டாமா! மண் கலயத்தை தரையில் வைப்பது, மற்ற உலோகக் கலன்களை மேலடுக்கில் வைப்பது என்ற பாலபாடத்தை கூட நீ அறியவில்லையாயின், எனது ஏவலாளாக இருக்கும் தகுதியை இழந்துவிட்டாய். குறிப்பாக,பக்தி மார்க்கத்தில் இருப்பவன், தன் கடமைகளை ஒழுங்காகச் செய்யத் தெரிந்தவனாக இருக்க வேண்டும். சோதனைகளைத் தாண்டும் வல்லமையுள்ளவனாக இருக்க வேண்டும். எனவே, நீ பூலோகத்தில் கடவுள் என்றால் நான் தான் என தன்னைத் தானே பெருமை பாராட்டிக் கொண்டிருக்கும் ஒரு நாத்திகனின் மகனாகப் பிற. அவனோடு சேர்ந்திருந்து பல பாடங்களைக் கற்றுக்கொள், என்று சாபமிட்டார். பிரபோ! எனக்கு தாங்கள் தரும் தண்டனை கொடுமையானது. என்னை இங்கேயே அழித்து விடுங்கள். நான் சாம்பலாகவேனும், இந்த பிரம்மலோகத்தில் கிடக்கிறேன், எனக் கதறினான். அவனது கதறல் கேட்டு பிரம்மன் மனம் இரங்கினார்.

சங்குகர்ணா! காரணகாரியங்கள் இல்லாமல் எதுவும் நிகழ்வதில்லை. உலகவுயிர்களின் தலையெழுத்தை நிர்ணயிப்பவன் நானே! இத்தனை நாளும் எனது வேலையாளாக இருக்க வேண்டும் என்பது உன்விதி. இனி, நீ பூலோகத்தில் இருக்கவேண்டும் என்ற எழுத்தை என்னாலோ மற்ற தேவர்களாலோ மாற்ற இயலாது. தலையெழுத்தை அனுபவித்தே தீரவேண்டும். நான் சொன்னபடி, பூலோக சோதனையில் வெற்றி பெற்ற பின் என்னை மீண்டும் வந்தடைவாய்,என்று ஆசி வழங்கினார். சங்குகர்ணன் அவருக்கு நன்றி தெரிவித்து நமஸ்கரித்தான்.  இந்நிலையில், பூலோகத்தில் இரண்யகசிபு என்ற மன்னன் ஆட்சி செலுத்தி வந்தான். வைகுண்டத்தைக் காவல் காத்த இவன், விஷ்ணுவை வழிபட வந்த முனிவர்களை அவமதித்ததால், அவரது சாபம் பெற்று பூமியில் மன்னனாகப் பிறந்தவன். அவன் செய்த தவறுக்கு நூறுபிறவி நல்லது செய்தோ அல்லது மூன்று பிறவிகள் நாராயணனுக்கு எதிராக தீமை செய்தோ மீண்டும் வைகுண்டத்தை அடையலாம் என்பது சாபம். காலம் குறைவாக இருந்ததால், கெட்டதை தேர்ந்தெடுத்தான் அந்த காவலன். அதன் பலனாக, இரண்யனாக பிறந்து நாராயண னுக்கு எதிரான செயல்களைச் செய்து கொண்டிருந்தான். தானே கடவுள் என்று கூறி, ஓம் இரண்யாய நமஹ என்றே நாட்டு மக்கள் சொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தான். அவ்வாறு சொல்லாதவர்களின் சிரம் துண்டிக்கப்படும் என்று கட்டளை போட்டான். இந்த கொடுமைக்கார மன்னனின் மகனாகப் பிறந்தான் சங்குகர்ணன். இப்பிறவியில் சங்குகர்ணனுக்கு பிரகலாதன் என்று பெயர் சூட்டப்பட்டது. பிரகலாதன் பிறவியில் இருந்தே நாராயண பக்தனாகத் திகழ்ந்தான். இது இரணியனுக்குப் பிடிக்க வில்லை. பெற்ற பிள்ளையைத் தன் வழிக்கு கொண்டுவர செய்த முயற்சிகள் வீணாயின. இறுதியில், நாராயணனை நேரில் வரச்செய்ய முடியுமா எனக் கேட்டபோது, நாராயணன் நரசிம்ம அவதாரம் எடுத்து தூணிலிருந்து வெளிப்பட்டார். அவருடன் இரணியன் போரிட்டான். போரின் இறுதியில் அவன் மாய்ந்தான். பின்பு பிரகலாதனை, நாராயண மூர்த்தி அந்நாட்டின் அரசனாக்கினார்.
சாய்பாபா -பகுதி 9

சத்யா நடந்தே கமலாப்பூர் வந்து சேர்ந்து விட்டான்.எந்த வகையிலும் அவன் தன் பெற்றோரை சிரமப்படுத்த நினைத்ததில்லை. இந்தக்கால மாணவர்கள் சத்யசாய்பாபாவிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அவரது அண்ணன் சேஷமராஜூ பெண் எடுத்த ஊர் தான் கமலாப்பூர். தன் மாமனார் வீட்டில், சத்யாவை தங்கச் செய்து உயர்நிலைக் கல்விக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார். இதைப் பயன்படுத்திக் கொண்டு சாய்பாபா அந்த வீட்டாரிடம் பணஉதவி எதுவும் கேட்டதில்லை. அதுபோல் தன் நண்பர்களிடமும் பணம் கேட்டதில்லை. அவரது வாழ்நாளில் சிறு பையனாக இருந்தபோதே உழைக்கத் துவங்கி விட்டார்.சில திறமைகள் மனிதர்களிடம் இயற்கையாகவே அமைந்துள்ளன. குறிப்பாக இளமைப்பருவத்தில், எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதை செயல்படுத்துவதில் தயக்கம் காட்டுவதால் தான் நமது மாணவர்கள் முன்னேறுவதில்லை. அமெரிக்காவில் மாணவர்கள் கார் துடைத்து சம்பாதிக்கிறார்கள், ஜப்பானில் ஓய்வு நேரத்தில் வேலைக்கு போகிறார்கள், என்று புத்தகங்களில் படிக்கிறார்களே தவிர, நாமும் அப்படி செய்தால் என்ன என்று பெரும்பாலோனோர் விரும்புவதில்லை. பெற்றோர்களும் அதை கவுரவக்குறைவாக கருதுகிறார்கள்.சத்யா அப்படியில்லை...அவர் இளமையிலேயே தன் திறமையால் சிறுசிறு வேலைகளைச் செய்தார். அதில் கிடைத்த பணத்தில் படித்தார். அண்ணன் சேஷமராஜூ திடீரென அனந்தப்பூருக்கு படிக்க சென்று விட்டார். தெலுங்கில் வித்வான் பட்டம் பெறுவது அவரது நோக்கம். எனவே படிப்பு நீங்கலான மற்ற செலவுகளுக்கு சத்யாவுக்கு பணம் கிடைப்பதில்லை. சத்யாவும் அனாவசியமாக செலவழிப்பதை விரும்பவில்லை. சிறுவயதில் மனஅடக்கம் இருப்பது கடினம். குழந்தைகளுக்கு எதைப்பார்த்தாலும் வாங்க வேண்டுமென்ற எண்ணமே இருக்கும். ஆனால் சத்யா அப்படி எதையும் விரும்பவில்லை. மனக்கட்டுப்பாடு மனிதனை வாழ்க்கையில் உயர்த்துகிறது. இதை சிறு வயதிலேயே நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை, மானிடராகப் பிறந்த சாய்பாபா, தன் வாழ்க்கையின் மூலம் நமக்கு உணர்த்துகிறார்.இதரவகை செலவுகளை, சத்யாவே சம்பாதிக்க துவங்கி விட்டான். ஒருமுறை அவன், காகிதத்தில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தான். அதை பின்பக்கமாக வந்த நண்பன் ஒருவன் படித்து விட்டு சிரித்தான்.

சத்யா! நீ பாட்டெல்லாம் கூட எழுதுவியா?சத்யா அவன் வந்ததை அப்போது தான் அறிந்தவனாய், உம்! அப்பப்ப பாட்டு எழுதுவேன். இது குடைப்பாட்டு. இங்குள்ள வியாபாரி கோட்டை சுப்பண்ணா ஒரு டெக்னிக் வைத்திருக்கிறார். அதாவது தன் கடைமுன்பு குழந்தைகளை நிறுத்தி, தன் கடையிலுள்ள பொம்மை, குடை, பேன்சி பொருட்களைப் பற்றி பாட வைக்கிறார். அவர்கள் பாட நல்ல பாட்டாக நான் எழுதி கொடுக்கிறேன். இவை விளம்பரப் பாடல்கள். இதை எழுதினால், அவர் எனக்கு பணமோ, பொருளோ தருவார். இதை வைத்து நான் பிற செலவுகளை கவனித்துக் கொள்கிறேன், என்றான்.மகான்கள் சிறுவயது முதலே மானிடர்களுக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டுகிறார்கள். நமது மாணவர்களும் தங்களால் முடிந்த வேலையை செய்து, தங்கள் ஓராண்டு படிப்புச் செலவை தாங்களே சம்பாதித்துக் கொள்ள வேண்டும். இந்தக்காலத்தில் எவ்வளவோ சிறு வேலைகள் காத்துக் கிடக்கின்றன. மாணவர்கள் சத்யசாயியைப் போல வாழ்வில் முன்னேற உறுதி எடுக்க வேண்டும். இதற்கு சாயியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.சத்யா சிறுவயதில் பஜனைப் பாடல்கள் மட்டுமல்ல....தன்னை அன்போடு ஊட்டி வளர்த்த சுப்பம்மாவின் கணவர் பற்றியும் கூட ஒரு பாட்டு எழுதினான். அவர் கிராமகர்ணம் என்பதால் தோரணைக்காக பெரிய மீசை வைத்திருந்தார். அதைக் கேலி செய்து சத்யா ஒரு பாட்டுப் பாடினான். அதோடு அவர் மீசையை எடுத்து விட்டார். இப்படி சத்யா எழுதிய குறும்புப்பாடல்களும் அதிகம்.குழந்தைகள் குறும்புத்தனமாக பேசுவார்கள். ஏதாவது படம் வரைந்து கிறுக்கித் தள்ளுவார்கள். இதை நாம் தடுக்கக்கூடாது. காரணம், அவர்கள் தங்களை மேதைகள் போல மனதில் கருதி செய்பவை இவை. அவர்களைப் பொறுத்தவரை அவர்களின் இந்த கிறுக்கல் படைப்புகள் மிக உயர்ந்தது. இதை தடுக்காமல் இருந்தால் பத்தில் ஒருவர் சிறந்த படைப்பாளிகளாக வருவர் என்பது உறுதி. சத்யா சிறுவயதில் குறும்பாக எழுதிய பாடல்கள், காலப்போக்கில் அவனது கற்பனைத் திறனை விளம்பரப் பாடல்கள் எழுதும் அளவு உயர்த்தி விட்டது. அது சிறு வருமானத்தையும் தந்தது.

அன்று மாலையில் சத்யாவின் குடைப்பாட்டு ஊரில் பிரபலமானது.எடுத்து விரித்து பிரிக்கலாம், மடக்கி கையில் சுருட்டலாம், என எதுகை மோனையுடன் எழுதி இருந்ததைக் கேட்டு, மக்கள் அந்தப்பாட்டில் மனம் லயித்தனர். கோட்டை சுப்பண்ணாவுக்கு வியாபாரமும் நன்றாக இருந்தது.நாட்கள் வேகமாக நகர்ந்தன. யாருமே எதிர்பாராத பொழுதாக அன்று கமலாப்பூருக்கு விடிந்தது. தெய்வம் சில நாட்கள் புட்டபர்த்தி கிராமத்தில் இருந்தது. சில காலம் கமலாப்பூர் என்ற சிறு நகரத்தில் இருந்தது. இப்போது அண்ணன் சேஷமராஜூவுக்கு வித்வான் படிப்பு முடிந்து, உரவகொண்டா என்ற ஊரில் வேலை கிடைத்தது. அதுவும் ஆசிரியர் பணி. தான் பணியாற்றும் பள்ளியிலேயே தம்பியையும் சேர்த்துவிட அவர் முடிவு செய்து விட்டார்.சத்யாவுக்கு வேதனை. புட்டபர்த்தியிலுள்ள நண்பர்களைப் பிரிந்தாயிற்று. இன்று கமலாப்பூர் நண்பர்களையும் விட்டு பிரிய வேண்டிய சூழல் உருவாகி விட்டது. விளையாட்டு ஆசிரியர் இந்தத் தகவலைக் கேட்டு அழுதே விட்டார். ஊர் முக்கிய பிரமுகரின் மகன்கள் இருவரும், சத்யாவைக் கட்டிப்பிடித்து அழுதனர்.சத்யா...எங்க அப்பா இந்த ஊர் சிரஸ்தார். எங்ககிட்ட நெறய பணம் இருக்கு. ஆனா உன்னைப் போல நல்ல நண்பன் இல்லை. நீ இங்கேயே படி, எங்களை விட்டு போய் விடாதே, எனக்கதறினர்.சத்யா அமைதியாக அவர்களைத் தேற்றி, உங்கள் பணத்தில் படிப்பதை என் அண்ணனோ, நானோ விரும்பமாட்டோம். இங்கேயே தனியாகத் தங்கிப் படிப்பதை அம்மாவும் விரும்பமாட்டாள். தங்கிப்படிக்கும் அளவுக்கு எனக்கு வசதியும் இல்லை, என்றான். அவன் வாய் அப்படி சொன்னதே ஒழிய, அந்த நண்பர்களைப் பிரிய சத்யாவுக்கும் விருப்பமில்லை. ஆனாலும், பொங்கி வந்த கண்ணீரை இமைகளிலிருந்து கீழே விழாமல் அடக்கிக் கொண்டு புறப்பட்டு விட்டான்.உரவுகொண்டா நகரம் சத்யாவுடன் உறவு கொள்ள தயாராக இருந்தது. ஆனால் அவன் படிக்கப் போகும் பள்ளியிலோ, ஆசிரியர்களுக்குள் ஒரு பெரிய தகராறே நடந்து கொண்டிருந்தது.தலைமை ஆசிரியரின் அறையில், சார்..அந்த சத்யாங்கிற பையன் நம்ம ஸ்கூலுக்கு வந்தா...என ஆரம்பித்தார் ஒரு ஆசிரியர். அதைக் கேட்டு மற்ற ஆசிரியர்கள் கொதித்தார்கள். முடியாது, முடியாது...அதெல்லாம் முடியாது....அந்தப் பையனை.... என்று கூச்சல் தொடர்ந்தது. அங்கு என்ன தான் நடந்தது?அங்கு பாபாவை சேர்க்கக்கூடாது என்ற விவாதம் ஏதும் நடக்கவில்லை. ஒவ்வொரு ஆசிரியரும் அவர் ஒரு தெய்வப்பிறவி என்பதை உணர்ந்து தங்கள் வகுப்பிற்கே அவரை அனுப்ப வேண்டுமென தலைமை ஆசிரியரிடம் போராடிக் கொண்டிருந்தனர். தலைமை ஆசிரியர் அவர்களைச் சமாதானப்படுத்தும் வகையில், அந்தப் பையன் தெய்வம் என்பதில் சந்தேகமில்லை. அவ்வாறு இருக்கும்பட்சத்தில் தெய்வத்திடம் தானே முடிவை விட வேண்டும். அவன் விரும்பும் வகுப்புக்குச் செல்லட்டும், என்றார். ஒருவழியாக பாபா அங்கு வந்து சேர எல்லாரும் ஒற்றுமையாக அவரை வரவேற்றனர். அந்தப் பள்ளியிலேயே மிகச்சிறந்த மாணவராக அவர் விளங்கினார். அவரே அங்கு எழுதி நடத்திய நாடகம், பஜனை முதலானவை மாணவர்களையும், ஊர் மக்களையும் ஈர்த்தன. சிலகாலம் கழித்து புட்டபர்த்திக்கே திரும்பிய அவர், ஜிலேபி வரவழைத்துக் கொடுப்பது, உதிரிப்பூக்களை வீசி எறிந்து சாய்பாபா என தெ<லுங்கில் தனது பெயர் வரச்செய்வது என்று சித்து வேலைகளையும் செய்தார்.இந்த விஷயங்கள் பாபாவின் தந்தை வெங்கப்பராஜுவுக்கு தெரிய வர, அவர் தன் பெரியமகன் சேஷமராஜுவுக்கு கடிதம் எழுதி தெரியப்படுத்தினார். அவரும் பாபாவைக் கண்டித்து தன்னுடன் உரவுகொண்டாவுக்கே மீண்டும் அழைத்துச் சென்று விட்டார். ஒரு சமயம் ஹம்பி நகரிலுள்ள விருபாக்ஷர் கோயிலுக்கு அவர்கள் சென்றனர். அங்குள்ள கருவறைக்குள் பாபா சென்று விட்டார். அர்ச்சகர் அவரைக் கடுமையாகத் திட்டினார். வந்த பக்தர்களும் முகம் சுளித்தனர். ஆனால், திடீரென கருவறையில் இருந்து ஒளி வள்ளம் எழுந்தது கண்டு அவர்கள் அதிசயித்தனர். இன்னொரு சமயம் பாபாவின் தலையின் பின்பக்கம் ஒளிவெள்ளம் எழுந்தது கண்டு அவரது அண்ணியார் அதிசயப் பட்டார். ஆரம்பத்தில் அவரது அண்ணியாரும் அவர் தெய்வப்பிறவி என்பதை நம்ப மறுத்தார். இந்தக் காட்சி அவரது மனதை மாற்றிவிட்டது. காலவெள்ளத்தில் அவரது சகோதரரும் அவரது செயல்பாடுகள், முகத்தில் ஏற்பட்ட ஒளி ஆகியவற்றை நேரில் கண்டு அவரைத் தெய்வமென்று நம்பினார். போதாக்குறைக்கு அவ்வூரில் வசித்த நாராயண சாஸ்திரி என்ற பிரபல மனிதர், இளைஞர் என்றும் பாராமல் பாபாவின் கால்களில் விழுந்து நீயே தெய்வம் என்று கூறினார். இதன்பிறகு உரவுகொண்டாவிலுள்ள சுங்கத்துறை அதிகாரி ஒருவர் தோட்டத்தில் அமர்ந்திருந்த பாபா, தலையின் பின்பகுதியில் ஒளிவட்டத்துடன் அமர்ந்திருப்பதைக் கண்ட மக்களெல்லாம் அவரை வணங்கினர்.

என்னதான் தெய்வப்பிறவி போல தோன்றினாலும், சாய்பாபாவின் போக்கு சேஷமராஜுவுக்கு பிடிக்கவில்லை. அவர் உடனே தன் தாய் தந்தையை வரவழைத்தார். அவர்கள் ஊருக்குள் வந்தார்களோ இல்லையோ, தெய்வக்குழந்தையை எங்களுக்கு தந்த பெற்றோர் வாழ்க என்று அங்கு நின்றவர்கள் கோஷமிட்டனர். பாபாவும் உணர்வு நிலையிலேயே இல்லை, பெற்றோர்களைக் கவனிக்காமலே பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். பாபாவின் அண்ணன் சேஷமராஜு பெற்றோரை பாபா அருகில் அழைத்துச்சென்று,சத்யா! இவர்களை யார் தெரிகிறதா? என்றார்.பாபா அவர்களைப் பார்த்து, இவர்கள் மாயைகள் என்றார்.ஈஸ்வரம்மா கண்ணீர் வடிக்க ஆரம்பித்து விட்டார்.சத்யா! நீ நிஜத்தில் தெய்வமாகவே இருந்தாலும், எங்களை மாயை என எப்படி சொல்லலாம்? பற்றற்ற நிலைக்கு நீ வேண்டுமானால் போகலாம். பெற்ற எங்கள் வயிறு தாங்குமா? என்றார்.மேலும், மகனின் பேச்சால் அதிர்ந்து போன அவர், என்னங்க! சத்யாவை புட்டபர்த்திக்கே கூட்டிச் சென்று விடுவோம், என கணவரிடம் அழுதபடியே சொன்னார். வெங்கப்பராஜு மனைவியைத் தேற்றி,ஈஸ்வரா! நானும் அப்படித்தான் நினைத்து வந்தேன். ஆனால், இங்கு வந்து பார்த்தபின் தானே, அவனுக்கு கிடைக்கும் மாலை மரியாதை, வழிபாடு ஆகியவையெல்லாம் தெரிகிறது. இனி அவன் நம் பிள்ளையல்ல! உலகத்துக்குச் சொந்தமாகி விட்டான், என்றார்.யார் என்ன சொன்னாலும் பெற்றவளின் மனம் கேட்குமா? ஈஸ்வரம்மா மகனிடம்,சத்யா! உன்னை இந்த சந்நியாசி கோலத்தில் பார்க்க மனம் சகிக்கலையடா! வா! உன் பாசத்துக்குரிய சொந்தமான இந்த தாயைப் பார், என்றார்.ஆனால் பாபா,இந்த உலகில் யார் யாருக்கு சொந்தம்? என்றுதிருப்பிக்கேட்டார். அந்த சமயத்தில் வந்த போட்டோகிராபர் ஒருவர்,அம்மா! அவரை வற்புறுத்தாதீர்கள். நேற்று நான் அவரை ஒரு படம் எடுத்தேன். பிரின்ட் போட்டுப் பார்த்தால் ஷிர்டிபாபாவின் படம் இருக்கிறது. அவர் அவரது அவதாரம், என்றார்.பின்னர் வெங்கப்பராஜு மனைவியிடம்,ஈஸ்வரா! கலங்காதே! அவன் இங்கே தானே இருக்கிறான்! அவனைத் தெய்வமென மக்கள் கொண்டாடுவதும் நமக்குப் பெருமை தானே! என்றார். அதன்பிறகு அம்மா வருகில் வரும்போதெல்லாம்,இதோ! மாயை வந்துவிட்டது என்பார்.

பிள்ளையின் இந்தச் சொல் அம்மாவுக்கு வருத்தத்தைத் தந்தது. ஒருநாள் திடீரென, அம்மா பசிக்கிறது, என்றார். ஈஸ்வரம்மா மகிழ்ந்தார். மகன் பழையநிலைக்கு திரும்பி விட்டதாக நினைத்தார். வகைவகையாக உணவு பரிமாறினார். சாய்பாபா அவற்றை மொத்தமாகப் பிசைந்தார். மூன்று உருண்டையாக உருட்டி, அவற்றை எடுத்துத்தரும்படி கேட்டார். அம்மா எடுத்துக் கொடுக்க அதைச் சாப்பிட்டார். உடனே தாய் அவரிடம்,சத்யா! நீ உன் விருப்பப்படியே இவ்வாறே பஜனை, சத்சங்கம் என்றே இரு! அதில் நாங்கள் தலையிடமாட்டோம். ஆனால், புட்டபர்த்திக்கு வந்து இதைச் செய், என்றார். இதற்கு பாபா மறுப்பேதும் சொல்லவில்லை. அவர்களுடன் புறப்பட்டும் விட்டார்.பாபாவின் புகழைக் கேள்விப்பட்டிருந்த உள்ளூர் மக்கள் அவரை வரவேற்க காத்து நின்றனர். அவர்களில் ஒருவர் சுப்பம்மா. பாபாவை இளமையில் வளர்த்தவர். தன் வீட்டுக்கு பாபா வரமாட்டாரா என ஏங்கிக்கொண்டிருந்தார். பாபா ஊரில் வந்து இறங்கி தன் வீட்டுக்கு முதலிலும், பின்பு தனது தாய்மாமனார் வீட்டிற்கும் சென்றார். ஆனால், அங்கெல்லாம் குடும்பச்சண்டைகள் நிகழ்ந்தன. முற்றும் துறந்தால் அவரால் அதையெல்லாம் பொறுக்க முடியவில்லை. சுப்பம்மா வீட்டிற்கு சென்று நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.ஊர்மக்கள் அவரை பாபா என்று அழைத்தனர். சில பக்தர்கள் அவரிடம்,நீங்கள் தெய்வம் என்றால் மனிதவடிவில் ஏன் லீலை புரிகிறீர்கள்? என்றனர். அவர்களிடம்,நான் சங்கு சக்கரத்துடன் காட்சியளித்தால் நீங்கள் என்னை நம்பத்தயாரா? அப்படிச்செய்தால் ஏதோ நாடக வேடதாரி என்று தானே சொல்வீர்கள்! என திருப்பிக்கேட்டார்.சாயி எங்காவது இமயமலை பக்கம் போய்விடுவாரோ என பலரும் கருதினர். ஆனால், அவர் இன்று வரை புட்டபர்த்தியிலேயே தங்கி அந்த கிராமத்தை உலகப்புகழ் பெற்றதாக்கி விட்டார். பல சமுதாயப்பணிகளை மக்களுக்காக ஆற்றி வருகிறார். சாய்ராம்!
                                                              முற்றும்.
சாய்பாபா -பகுதி 8

கமலாப்பூர் மிகப்பெரிய நகரம். சத்யாவுக்கு அவ்வூர் வாழ்க்கை ஒன்றும் கடினமாகத் தோன்றவில்லை. சத்யா வந்தபிறகு அவ்வூர் வழக்கத்தை விட செழிக்க ஆரம்பித்தது. இதற்கான காரணம் அவ்வூர் மக்களுக்கு தெரியவில்லை. தெய்வமே அவ்வூரில் வசிக்க வந்ததை அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. அந்த இனம்புரியா மகிழ்ச்சிக் கடலில் மக்கள் திளைத்தனர். சத்யா உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து விட்டான். எளிமையான உடை, புத்தகங்கள் தவிர வேறு எதற்கும் அவன் ஆசைப்படவில்லை. பள்ளியில் விழாக்கள் நடந்தால் பாடுவான். பழைய மாணவர்கள் பாடிய பாடல்களெல்லாம் சத்யாவின் இனிய குரலுக்கு முன்பு எடுபடவில்லை. பாட்டுகளாலேயே அவன் பள்ளியில், பிரபலமாகி விட்டான். அவனது விளையாட்டு ஆசிரியர், கேசவன் என்ற நண்பன் ஆகியோருக்கு சத்யா நெருக்கமாகி விட்டான்.பள்ளியில் நாடகம் நடந்தால் சத்யாவுக்கு முக்கிய பாத்திரம் கொடுக்கப்படும். அதை செம்மையாக நடித்துக் காட்டுவான். கமலாப்பூரில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளில் இறைவணக்கம் பாடுவதற்கென்றே ஊர் பெரியவர்கள் சத்யாவை அனுப்பும்படி கேட்டுக் கொள்வார்கள். கமலாப்பூரின் முக்கிய பிரமுகராகி விட்டான் சத்யா. ஆனால் அந்த எளிமை மட்டும் அவனை விடவில்லை. சாரணர் இயக்கத்தில் சேரும்படி, விளையாட்டு ஆசிரியர் சத்யாவை வற்புறுத்தினார். இயக்கத்தினர் கேம்ப் போட்டால், அவரவர் சொந்த செலவில் தான் போக வேண்டும். சத்யாவிடம் அந்த அளவு பணமில்லை. பக்கத்து ஊர் ஒன்றிற்கு போய் வரக்கூட சாப்பாட்டுடன் சேர்த்து 20 ரூபாயாவது வேண்டும். இதை தான் தங்கியிருக்கும் அண்ணனின் மாமனார் வீட்டில் சத்யா கேட்கமாட்டான். கடுமையாகத் தயங்குவான். இந்தநிலையில், இயக்கத்தில் சேர சத்யா மறுத்து விட்டான். ஆனால் அவன் உள்மனதில், சாரணர் இயக்கத்தின் சேவைகள் அலை மோதின. இந்த இயக்கத்தில் சேர்வதன் மூலம் மக்களுக்கு எவ்வளவோ நல்லது செய்யலாம் என்பது மட்டும் நன்றாகத் தெரிந்தது.

சாரணர் இயக்கத்தில் சேர்வதற்குரிய யூனிபார்ம் வாங்க பணம் அதிகமாக வேண்டும். இதற்கு என்ன செய்வது என தயங்கி நின்ற வேளையில், அவனது இரண்டு நண்பர்கள் யூனிபார்ம் வாங்கிக் கொடுத்தனர். அவர்கள் உள்ளூர் பணக்காரரின் குழந்தைகள். சத்யா மீது அன்பு கொண்டவர்கள். அவன் தன்னோடு கேம்ப் வருவதை பெருமையாகக் கருதினார்கள்.சத்யாவுடன் சேர்ந்த மாணவர்கள் எல்லாம் பஸ்சுக்கு தயாரானார்கள். சத்யாவைக் காணவில்லை. முகாமுக்கு ஒரு பையன் குறைகிறானே! என்ன செய்வது? என ஆசிரியர் கையைப் பிசைந்தார். சத்யா வரவே இல்லை. வீட்டுக்கு ஆள் அனுப்பி பார்த்தால், அவன் ஏற்கனவே கிளம்பிப் போய் விட்டானே, என்ற பதில் கிடைத்தது. குழம்பிப் போன முகாம் அமைப்பாளர் வேறு வழியின்றி மற்ற மாணவர்களுடன் கிளம்பி விட்டார். புஷ்பகிரிக்கு செல்லும் வழியில், பஸ்சில் சென்ற மாணவன் ஒருவன், சத்யா ரோட்டில் நடந்து செல்வதைக் கவனித்தான். எல்லாரும் புஷ்பகிரி சென்றாயிற்று. அங்கே சத்யாங தயாராக நின்றான்.ஆசிரியரும், நண்பர்களும் சத்யாவை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். நண்பன் கேசவன் சத்யாவிடம், நாங்கள் கிளம்பும் போது உன்னைக் காணவில்லையே! ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தாயே! என்னாயிற்று உனக்கு? என வாஞ்சையோடு கேட்டான்.சத்யா நடந்ததைச் சொன்னான்.நண்பர்களுடன் பஸ்சில் வந்தால், பஸ்சுக்கு கட்டணம் கொடுக்க வேண்டும். சத்யாவிடம் காசு இல்லை. தன் பழைய புத்தகங்களை சிலரிடம் விற்றான். அவர்கள் கூடுதலாக பணம் கொடுக்க முன் வந்தாலும், ஐந்து ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டான். அதைச் சாப்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். புஷ்பகிரிக்கு நடந்தே போய் விடலாம் என முடிவு செய்து விட்டான்.கமலாப்பூரிலிருந்து, புஷ்பகிரிக்கு பத்துமைலுக்கும் அதிமான தூரம். இருந்தாலும் நடந்தே சென்று விட சத்யா எண்ணி விட்டான். வழியில் களைப்பாக இருந்தது. சத்யா மட்டுமல்ல. புஷ்பகிரி கோயில் திருவிழாவுக்கு வரும் ஏழை மக்கள் அனைவருமே நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்கள் களைப்பாற, வழியிலுள்ள ஆற்று மணலில் படுத்து உறங்கினர். சத்யாவும் களைப்பின் மிகுதியால் அவர்களுடனேயே படுத்து உறங்கினான்.இதன் உள்பொருளை நாம் உணர வேண்டும். தெய்வம் ஏழைகளுடன் துணை வருகிறது. ஏழைகள் படும் சிரமத்தை தானும் படுகிறது. ஏழைமக்கள் நடந்து வரும் போது வாகனத்தில் செல்ல தெய்வம் விரும்பாது என்பதையே குறிப்பால் உணர வேண்டும்.

சத்யா தான் கொண்டு வந்த ஐந்து ரூபாயை தன் தலைமாட்டில் ஒரு துணியில் சுற்றி வைத்துக்கொண்டு உறங்கினான். விழித்து பார்த்த போது, தலைமாட்டில் பை இல்லை. யாரோ அதை திருடி விட்டார்கள். சத்யாவுக்கு சாப்பாட்டு காசுக்கும் வழியில்லை. ஆனாலும் புஷ்பகிரியை நோக்கி நடக்க ஆரம்பித்தான். வரும் வழியில் ஒரு அணா கீழே கிடந்தது. அதை எடுத்தான். புஷ்பகிரி கோயிலின் ஒரு பக்கத்தில், இரட்டை லாட்டரி விளையாட்டு நடந்து கொண்டிருந்தது.அதாவது ஒரு ரூபாய் வைத்து ஒரு சக்கரத்தை சுழற்ற வேண்டும். சொன்ன நம்பரில் சக்கரம் நின்றால், இரட்டிப்பு பணம் தருவார்கள். இல்லாவிட்டால் பணம் கடைக்காரனைச் சேர்ந்து விடும். சத்யா தன் காசை அங்கு வைத்தான். இரட்டிப்பாக கிடைத்தது. மீண்டும் வைத்தான். அதுவும் இரட்டிப்பானது. இப்படியே 12 அணா சேர்ந்து விட்டது. கடைக்காரனுக்கு பயம் வந்து விட்டது. சிறுபையனாக இருந்தாலும், ஜெயித்துக் கொண்டே இருக்கிறானே என்ற பயத்தில், விளையாட்டு முடிந்ததாகச் சொல்லி கடையைக் கட்டி விட்டான். கிடைத்த காசுக்கு தின்பண்டங்கள் மட்டும் வாங்கிச் சாப்பிட்டு விட்டு சாரணர் இயக்கப் பணிகளிலும் கலந்து கொண்டான் சத்யா.இவ்வளவு விஷயத்தையும் நண்பர்களும், ஆசிரியரும் அறிந்து கொண்டனர். சரியாக சாப்பிடாமல், வெறும் தின்பண்டங்களுடன் சாரணர் இயக்கத்தை வெற்றிகரமாக நடத்திய சத்யாவைப் பாராட்டினர். அவன் ஒரு இடத்தில் இருந்தபடியே, திருவிழாக் கூட்டத்தில் காணாமல் போன குழந்தைகள் பற்றிய தகவல்களைச் சொன்னான். அங்கு போய் பார்த்தால், காணாமல் போன குழந்தை நிற்கும். இதுபோல பல அற்புதங்களை இருந்த இடத்தில் இருந்தே செய்தான். எங்காவது குப்பை கூளம் குவிந்திருந்தால், அதை அப்புறப்படுத்த சொல்வான். அவன் சொன்ன இடத்தில் குப்பை கிடக்கும். தண்ணீர் பானைகள் காலியாகி விட்டால், எங்கோ நின்று கொண்டு, அதில் தண்ணீர் நிரப்பச் சொல்வான். அவன் சொன்னபடி அங்கு காலியான பானை இருக்கும். அந்த ஆண்டில் திருவிழாவில் எந்த பிரச்னையும் இல்லாமல் முடிந்தது. சாரணர் இயக்க சிறுவர்களை அதிகாரிகள் பாராட்டினர். முகாம் முடிந்து எல்லாரும் ஊருக்கு புறப்பட்டனர். சத்யாவின் கையில் சல்லிக்காசு இல்லை. அவன் மீண்டும் நடக்க ஆரம்பித்தான். நண்பர்கள் கூப்பிட்டும், பஸ்சில் வர மறுத்து விட்டான்.
சாய்பாபா -பகுதி 7

பகவான் ஷிர்டி சாய்பாபா பற்றிய எண்ணம் தான் அது. இத்தனைக்கும் ஷிர்டிபாபா பற்றி சத்யாவுக்கு யாரும் சொல்லிக் கொடுத்ததில்லை. ஷிர்டிக்கு சென்றதும் கிடையாது. இருப்பினும் அவர் நினைவு வந்தது. அவரைப் பற்றிய பஜனைப் பாடல்களை சத்யா பாடினான். அவனது நண்பர்களும் அதை திரும்பப் பாடினர்.இதனால் புட்டபர்த்தியை காலரா தொட்டுப்பார்க்க கூட இல்லை. மக்களுக்கு ஒரே ஆச்சரியம். சத்யாவின் பஜனைப்பாடல்களின் மகிமையால் தான் இந்த அதிசயம் நிகழ்கிறது என்பதை மட்டும் அவர்களால் உணர முடிந்தது.இப்போது பஜனைக்கு சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் வர ஆரம்பித்தனர். அவர்கள் மற்ற கிராமங்களில் உள்ளவர்களிடம், சத்யா பாடும் ஷிர்டி பஜனைப் பாடல்கள் பற்றி கூறினர். மற்ற ஊர் மக்களும் சத்யாவை தங்கள் கிராமத்திற்கு வந்து பஜனை செய்யும்படி கேட்டனர். ஆனால் காலரா பாதித்த கிராமங்களுக்கு சத்யாவை பெற்றோர் விடுவார்களா? மறுத்து விட்டனர்.சத்யா அவர்களைச் சமாதானம் செய்து அந்த கிராமங்களுக்கு சென்றான். அவனது பஜனை கோஷ்டியும் சென்றது. எங்கும் பக்திப்பரவசம் எழுந்தது. சத்யாவின் காலடிபட்ட கிராமங்களில் காலரா காணாமல் போனது. எல்லாரும் இதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். தெய்வீகச் சிறுவன் என வாழ்த்தினர்.நாடகங்களில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த சத்யாவுக்கு சவால் ஒன்றும் வந்து சேர்ந்தது. புட்டபர்த்தியை சுற்றியுள்ள கிராமங்களில் புதிய நாடகக் கம்பெனி ஒன்று வந்தது. ருஷ்யேந்திரமணி என்ற சிறுமி தான் இந்தக் கம்பெனியின் மிகப்பெரும் சொத்து. அவள் ஆடும் நடனத்திற்காகவே கூட்டம் சேர்ந்தது. அவள் மிகப்பெரிய நடிகை என்பதில் சந்தேகமே இல்லை. ஏனெனில் சத்யாவே, அவள் நடித்த நாடகத்தை காண வந்திருந்தான். அவளது நடன அசைவுகளைக் கவனித்தான்.பாட்டில் ஒன்றை தலையில் வைத்து அது கீழே விழாமல்,குனிந்தும், நிமிர்ந்தும், சுழன்றும் ஆடினாள் அவள். இதைக்கண்டு பார்வையாளர்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.சத்யாவுக்கும் இதே ஆசை பிறந்தது.

ருஷ்யேந்திராவை விட மிகச்சிறப்பாக ஆடி பெயரைத் தட்டிச் செல்ல வேண்டும் என்பதே அந்த ஆசை. தந்தை வெங்கப்பராஜூவும், தாய் ஈஸ்வராம்பாளும் கூட இதற்கு சம்மதித்தனர். ருஷ்யேந்திரா ஒரு தீப்பெட்டியை தரையில் வைத்து, அதனை ஒரு கைக்குட்டையால் மூடி, பாட்டிலை தலையில் வைத்து வளைந்து நெளிந்து கீழே விழாமல், உதடுகளால் கவ்வி கைக்குட்டையை எடுத்தாள்.இதைவிட அரிய சாகசத்தை நிகழ்த்த சத்யா முடிவு செய்தான். . நண்பர்களிடம் அதைச் செய்து காட்டினான். நண்பர்கள் சத்யாவிடம், பக்கத்து ஊர் திருவிழாவில் இந்த நடனத்தை ஆடிக்காட்டு. நம் நாடகக்குழுவின் பெருமையை உயர்த்து, என்றனர்.சத்யாவை, அவரது சகோதரிகள் ருஷ்யேந்திரமணி போலவே அலங்கரித்தனர். சத்யா பெண் வேடத்தில் ஜொலித்தான். இறைவன் ஆணும், பெண்ணுமாக இருக்கிறான். அவனுக்கு இருபிரிவும் ஒன்றே என்பதை சத்யசாய் இங்கே குறிப்பால் உணர்த்தியிருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.சத்யா நாடக மேடையில் ஏறினான். கம்சனின் அவையில் ஒரு நடன மாது ஆடுவது போன்ற காட்சி. சத்யா இசைக்கேற்ப ஆடினான். தலையில் பாட்டில் இருந்தது. எவ்வளவு சுழன்று ஆடியும் கீழே விழவில்லை. இறைவன் ஆனந்தநடனம் புரிவது போல, பார்வையாளர்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். சத்யா கீழே குனிந்தான். ருஷ்யேந்திரமணி உதடுகளால் கைக்குட்டையைத் தானே எடுத்தாள்! ஆனால் சத்யாவோ கண் இமைகளால் ஒரு குண்டூசியையே எடுத்து சாதனை படைத்து விட்டான்.நாடகம் நடந்த திடலே கரகோஷத்தால்  அதிர்ந்தது. ஈஸ்வராம்பாவும், வெங்கப்பராஜூவும் மகனின் திறமை கண்டு, ஆனந்தக் கண்ணீர் சிந்தினர்.ஈஸ்வராம்பாவுக்கு எப்போதுமே ஒரு சந்தேகம் உண்டு. வயதுக்கு மீறிய சக்தியுடன் சத்யா பல காரியங்களைச் செய்கிறான். அவன் செய்யும் ஒவ்வொரு காரியமும் ஒரு அற்புதமாகவே தெரிகிறது. இதனால் அவனுக்கு திருஷ்டி ஏற்பட்டு, ஏதாவது ஆகி விட்டால் என்ன செய்வது, என யோசிப்பார்.தன் சந்தேகத்தை பக்கத்து வீட்டு தோழியும், சத்யாவை தன் மகன் போல பாசம் செலுத்தியவருமான சுப்பம்மாவிடம் கேட்டார்.

சத்யா! இப்படி செய்வதால் திருஷ்டி ஏற்பட்டு, அவனுக்கு ஏதும் ஆகி விடுமோ? என்றார்.சுப்பம்மா சிரித்தார்.அடி போடி! ஏன் அஞ்சுகிறாய். அவன் உன் பிள்ளை மட்டுமல்ல. என் பிள்ளையும் தான். அவன் இங்கு தான் பொழுது போக்குகிறான். இங்கு தான் சாப்பிடுகிறான். அவனை பெற்ற தாயான உன்னை விட முழுமையாக நான் அறிவேன். அவன் குழந்தைகளிடம், சினிமா, பொழுதுபோக்கு என தறிகெட்டு அலையாதீர்கள். அந்த நேரத்தை இறை வழிபாட்டுக்கு பயன்படுத்துங்கள். பண்டரிநாதன் புகழ் பரப்பும் பஜனையைப் பாடுங்கள், என்று புத்திமதி சொல்கிறான். இதிலிருந்து அவன் சாதாரண பிள்øளா? இறைவனே அவன் தான் என எனக்கு தோன்றுகிறது. இறைவனுக்கு திருஷ்டி எப்படி ஏற்படும்? நீ மனதைக் குழப்பாதே! அவனுக்கு ஏதும் ஆகாது, என்றார்.ஆனால் இந்த விஷயத்தில் ஈஸ்வராம்பாவே ஜெயித்தார். கம்சநாடகம் முடிந்த மறுநாளே ஊரார் கண்பட்டதாலோ என்னவோ? சத்யாவுக்கு கடும் ஜூரம் அடித்தது. ஈஸ்வராம்பா என்ன செய்வதென தெரியாமல் தவித்தார். அன்று இரவில் ஒரு பெரிய அதிசயம் நடந்தது. யாரோ ஒருவர் வீட்டுக்குள் வந்தது போன்ற ஒரு உணர்ச்சி...அவரது காலில் மரத்தால் ஆன காலணி. அதன் சத்தத்துடன், வந்த உருவம் சத்யா இருந்த அறைப்பக்கம் சென்றது. சற்று நேரத்தில் சத்தம் நின்றுவிட்டது. ஈஸ்வராம்பா நடுங்கியபடி சத்யாவின் அறைக்குள் சென்றார். அங்கே சத்யா அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். உடம்பில் கையை வைத்து பார்த்தார் ஈஸ்வராம்பா. காய்ச்சல் இல்லை. உடம்பே ஜில்லிட்டு இருந்தது. காய்ச்சல் குணமானதற்கும், உள்ளே வந்த உருவத்துக்கும் என்ன சம்பந்தம்? அது புரியாத புதிராகவே இருந்தது.அடுத்தநாள் சத்யா சகஜமாகி விட்டான். வீட்டுத் திண்ணையில் அவன் அமர்ந்திருந்த போது, அவ்வூர் சிறுவர்கள் சிலர் அலறி அடித்து ஓடினர். பெரியவர்கள் அவர்களை வீட்டுக்குள் இழுத்துப் போட்டு கதவுகளை அடைத்தனர். ஒரு சில பெரியவர்கள் மட்டுமே எதையும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். சத்யா அங்கே என்ன நடக்கிறது என்பதை அறிய ஆவலுடன் இருந்தான்.அப்போது ஒருவர் கடாமீசையுடன் ஊருக்குள் வந்தார். ராணுவ சீருடை, கையில் துப்பாக்கி சகிதமாக வந்த அவர், உறுமலான குரலில் தோரணையுடன், ஒரு பெரியவரிடம், அந்த மந்திரவாதி பையனை எங்கே? என்று கேட்டார்.அந்தக்காலத்தில் போலீஸ் வந்தாலே கிராம மக்கள் என்னவோ ஏதோவென்று பயந்து வீடுகளுக்குள் ஒளிந்து கொள்வார்கள். ஆனால் வந்தவரோ ராணுவ தோற்றத்தில் இருந்ததால் ஒரு சில வயோதிகர்களைத் தவிர, மற்றவர்கள் வீட்டுக்குள் புகுந்து கொண்டனர். பெரியவர்கள் விசாரித்த போது, அவர் அப்பகுதி ஆங்கிலேயக் கலெக்டரின் டிரைவர் என்பது தெரிந்தது.அவர் வீராப்பாக, அங்கு நின்ற பெரியவர்களிடம் சத்யாவைப் பற்றி தெரிந்து கொண்டார். நேராக சத்யாவிடம் வந்தார்.உம்! புறப்படு! அங்கே கலெக்டர் காரில் அமர்ந்திருக்கிறார். கார் ரிப்பேராகி விட்டது. அதை சரிசெய்து கிளம்பச் செய், உடனே வா, என்றார்.ஒரு சின்னப்பையனிடம், இந்த ஆள் இந்த விரட்டு விரட்டுகிறானே என்று பெரியவர்களுக்கு கோபம் வந்தாலும், அதைத் தட்டிக் கேட்கும் தைரியம் யாருக்கும் இல்லை. கலெக்டரின் கார் டிரைவரான இவன், நம்மைப் பற்றி ஏதாவது கலெக்டரிடம் வத்தி வைத்து விட்டால் தங்கள் கதி அதோகதி தான் என்பதை தெரிந்து, வாய்மூடி மவுனிகளாக நின்று விட்டனர்.சத்யா டிரைவரின் தோற்றம் கண்டோ, மிரட்டல் பேச்சுக்கோ பயங்கொள்ளவில்லை.நான் கார் மெக்கானிக் அல்ல. எனக்கு ரிப்பேர் பார்க்க தெரியாதே, நான் வந்து எப்படி காரை கிளப்ப முடியும்? என்றான்.உனக்கு கார் ரிப்பேர் தெரியாது என்பது எனக்கும் தெரியும். ஆனால் மந்திரம் தெரியுமே! நீ அதை தொட்டாலே ஓடி விடுமாமே, எதையாவது செய்து காரை கிளப்பு. என்னோடு வா, என்றார் டிரைவர் அதட்டலாக.சத்யா கிளம்பி விட்டான். அவனது வீட்டாருக்கும், உறவினர், நண்பர்களுக்கு பயம். இருப்பினும் அரசாங்க காரியம் என்பதால், அவனை தடுக்கவும் வழியில்லாமல் நின்றனர்.சத்யா கார் நின்ற மலைப்பாங்கான பகுதிக்கு வந்து விட்டான். துரை கடும் டென்ஷனில் இருந்தார்.உடனே காரை கிளப்ப வழி பாரு. சீக்கிரம் கிளம்பணும். எனக்கு நெறய வேலைகள் இருக்கு, என்றார் எரிச்சலாக.சத்யா காருக்குள் எட்டிப்பார்த்தான். உள்ளே ஒரு புலி படுத்திருந்தது. அது துரையால் வேட்டையாடப்பட்டு இறந்த புலி. மிஸ்டர் துரை! என்று விளித்தான் சத்யா அனாசயமாக.

துரைக்கு தூக்கி வாரிப்போட்டது.ஒரு கிராமத்து சிறுவன் கலெக்டரான தன்னை இவ்வளவு அதிகாரமாக அழைக்கிறானே,. அவர் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தார். உங்கள் வண்டியில் இறந்து கிடக்கும் புலியை சுட்டுக் கொன்று விட்டீர்கள். அதன் குட்டிகள் தாயைப் பிரிந்து காட்டில் அல்லாடுகின்றன. தாயையும், குட்டியையுயும் பிரிப்பது எங்கள் நாட்டில் பெரும் பாவச் செயலாக கருதப்படும். நீங்கள் உடனே காட்டிற்குப் போய், குட்டிகளை கண்டுபிடித்து அவற்றின் துன்பம் தீரும் வகையில் ஏதாவது மாற்று ஏற்பாடு செய்யுங்கள். அதுவரை யார் வந்து ரிப்பேர் செய்தாலும் இந்தக் கார் நகராது, என்றான் சத்யா.அதிகாரி மிரண்டு விட்டார்.காட்டில் மூன்று குட்டிகளின் தாய்ப்புலியை நான் சுட்டுக் கொன்றது இவனுக்கு எப்படி தெரிந்தது? போதாக்குறைக்கு இவன் மந்திர தந்திரம் தெரிந்தவன் என டிரைவர் சொல்லி இருக்கிறார். எப்படியிருப்பினும் இவன் ஒரு ஆபத்தான சிறுவன். இவனிடம் கவனமாக நடந்து கொள்வதே நல்லது, என சிந்தித்த கலெக்டர், மறுப்பேதும் சொல்லாமல் மீண்டும் காட்டுக்குள் சென்றார்.நீண்ட தேடுதலுக்கு பிறகு பயந்து கிடந்த புலிக்குட்டிகளைக் கண்டுபிடித்தார். அவற்றை மிருகக்காட்சி சாலையில் ஒப்படைப்பதாக உறுதி கூறினார். அவ்வளவு தான். காரை டிரைவர் ஸ்டார்ட் செய்ததும், வண்டி புறப்பட்டது.இப்பேர்ப்பட்ட மகானா இந்தச் சிறுவன் என ஆச்சரியப்பட்டார் கலெக்டர்.இந்த சம்பவம் நடந்த சிறிது நாளில் சத்யாவின் எட்டாம் வகுப்பு படிப்பு புங்கப்பட்டணம் பள்ளியில் நிறைவடைந்ததது. அவன் விடுமுறையில் இருந்தான். மேற்கொண்டு படிக்க வைக்க கிராமத்தில் வசதி இல்லை. எனவே சத்யா கவிதைகளை எழுதியே பொழுது போக்கி வந்தான். ஊரெங்கும் தினமும் பகல் வேளையிலும் பஜனை சத்தம் கேட்டது. ஈஸ்வராம்பாவுக்கு மகனை வெளியூருக்கு அனுப்பி மேல்படிப்பு படிக்க வைக்க விருப்பமில்லை. சத்யாவைப் பிரியும் மனோபாவம் அவளிடம் இல்லை. இந்த நேரத்தில் சத்யாவின் அண்ணன் சேஷமராஜூ, தாயாரிடம் ஒரு யோசனை சொன்னார்.அம்மா! சத்யா இங்கு இருந்தால் பஜனை, கச்சேரி, நாடகம், கவிதை என்று பொழுதை போக்கி விடுவான். அதனால் அவனை கமலாப்பூருக்கு அனுப்பி விடுவோம். (கமலாப்பூர் ஆந்திராவின் கடப்பை மாவட்டத்தில் உள்ளது). அங்கே இருக்கும் உயர்நிலைப் பள்ளியில் அவன் மேல்படிப்பு படிக்கட்டும், என்றார்.

ஈஸ்வராம்பா மறுத்து விட்டார்.என் மகனை பிரியும் சக்தி எனக்கில்லை. அவனுக்கு வயதும் குறைவு. வெளியூரில் தங்கிப்படிக்கும் அளவுக்கு அவனுக்கு வயது இல்லை. நான் அனுப்ப மாட்டேன், என்றதும், கணவர் வெங்கப்பராஜூவின் காதில் இது விழுந்தது.ஈஸ்வரா! உன் மகன் மீது உனக்கிருக்கும் பாசத்தை விட ஒரு மடங்கு அதிகமாகவே எனக்கும் இருக்கிறது. இங்கிருந்தால், அவன் நாடகத்தோடு வாழ்க்கையை முடித்து விட வேண்டியது தான். ஆனால் உயர்கல்வி படித்தால் அவனுக்கு சர்க்கார் உத்தியோகம் கிடைக்கும். நல்ல கவுரவமான வாழ்க்கையை சத்யா அமைத்துக் கொள்வான். என் நாடகத் தொழில் என் மகனுக்கு வேண்டாம், என்றார்.கணவரின் சொல்லில் நியாயம் இருப்பதை ஈஸ்வராம்பா புரிந்து கொண்டார். சத்யா கமலாப்பூரில் வசித்த சேஷமராஜூவின் மாமனார் வீட்டில் தங்க முடிவாயிற்று.சத்யா புறப்பட்டு விட்டான். ஊரே கண்ணீர் விட்டது. அவனை அன்போடு வளர்த்த பக்கத்து வீட்டு சுப்பம்மா வடித்த கண்ணீருக்கு அளவே கிடையாது. அது சித்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கையே ஏற்படுத்தி விடும் போல் தெரிந்தது.தெய்வப்பிறவியான சத்யாவுக்கே கூட சற்று கலக்கம் தான். கிராமத்திலுள்ள தன் அன்பு நண்பர்கள், நாடகக்கலைஞர்கள். வேளாவேளைக்கு அமுதூட்டிய அன்னை, தன்னை கண்ணின் மணிபோல் காத்த பக்கத்து வீட்டு அன்னை சுப்பம்மா, நாடகத்தில் புகழ் பெறக்காரணமான தந்தை, பள்ளி செல்லும் போதெல்லாம் அலங்கரித்து அனுப்பிய சகோதரிகள்...அனைவரையும் ஒரு பார்வை பார்த்தான் சத்யா.பிரிவுத்துயரை வெளிக்காட்டாமல் தன் அண்ணனுடன் கமலாப்பூருக்கு கிளம்பி விட்டான். எல்லாரும் அழுதனர். நண்பர்கள் அழுத அழுகை அனைவரையும் கலக்கியது. புட்டபர்த்தியே களை இழந்தது போன்ற பிரமை. ஊரை விட்டு தெய்வமே வெளியேறுவது போன்ற உணர்வு... சத்யா வண்டியேறி விட்டான்.
சாய்பாபா -பகுதி 6

ஈஸ்வராம்பாவுக்கு மனதில் ஏற்பட்ட பயம் இன்னும் தீரவில்லை. என்ன இருந்தாலும், ஒரு ஆசிரியரை சத்யா எழவிடாமல் செய்தது அவரது மனதை வெகுவும் பாதித்தது.இது என்ன பெரிய மனுஷத்தனம்...இதனால் சத்யாவின் எதிர்காலம் பாதிக்குமே, என மற்ற ஆசிரியர்களிடம் வருத்தப்பட்டு சொன்னார் ஈஸ்வராம்பா. ஆனால் ஆசிரியர்கள் யாரும் சத்யாவைக் குறை சொல்லவில்லை.அம்மா! சத்யாவால் இப்படி செய்ய முடிகிறதென்றால் ஏதோ தெய்வீக சக்தி அவனுள் அடங்கி இருக்கிறது என்றே பொருள். நீங்கள் கலங்க வேண்டாம். நாங்கள் சத்யாவை தெய்வமாகவே மதிக்கிறோம், என்றனர்.ஆசிரியர்களின் ஒட்டு மொத்த கருத்து ஈஸ்வராம்பாவை மேலும் கலங்கடித்தது. தெய்வப்பிறவி என்பதால் சத்யாவை கண்டிக்க ஆசிரியர்கள் தவறினால் அவனது எதிர்காலம் என்னாகுமோ என கலங்கினார். கஸ்தூரி என்ற ஆசிரியர் இந்தப் பிரச்னைக்கு முடிவு கட்ட முன் வந்தார்.நான் சத்யாவிடம் இதுபற்றி கேட்கிறேன், என்றவர், சத்யாவின் வகுப்பறைக்கு சென்று அவனைத் தனியாக அழைத்தார்.சத்யா! நீ தெய்வப்பிறவி என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதற்காக ஒரு ஆசிரியரை எழவிடாமல் செய்தது, அவரை அவமானப்படுத்துவது போல் ஆகாதா? என்றார்.இதற்கு சத்யசாயிபாபா, நான் தெய்வப்பிறவி அல்ல. நானே தெய்வம். தெய்வத்தை மனிதன் சோதிக்க முயலும் போது தெய்வம் மனிதனை என்ன செய்யுமோ அதைத்தான் செய்திருக்கிறேன். என்னை தெய்வம் என்று அடையாளம் காட்ட இதுபோன்ற லீலைகளைச் செய்கிறேன், என்றார்.ஆசிரியர் கஸ்தூரி இதை ஏற்றுக் கொண்டார். சாயிபாபாவின் சீடராக மாறினார். தெய்வப்புராணங்களை புரட்டினால் அரக்கர்கள் தெய்வ சக்திக்கு எதிராகவே செயல்பட்டு வந்திருக்கிறார்கள். தெய்வத்திடமே வரம் பெற்று, தெய்வத்திற்கு எதிரான நிலையை எடுப்பார்கள். சத்யா விஷயத்திலும் இது உண்மையாயிற்று.சத்யாவிற்கு எதிராக ஒரு கூட்டம் கிளம்பியது. தாத்தா கொண்டமராஜூவின் வம்சாவழியினருக்கு ஏராளமான குழந்தைகள் இருந்தனர். எல்லாருமே சத்யாவின் வீட்டில் தான் தங்கியிருந்தனர். இவர்களும் சத்யாவின் பள்ளியில் படிப்பவர்கள் தான். சத்யாவிற்கு ஏற்படும் புகழைத் தாங்கும் சக்தி இவர்களிடம் இல்லை. பொறாமையால் சத்யாவை மட்டம் தட்டுவது என முடிவெடுத்தனர்.

அன்று சத்யா பள்ளிக்கு போய்க் கொண்டிருந்தான். சித்ராவதி ஆற்றைக் கடந்து தான் சத்யா பள்ளிக்கு சென்றாக வேண்டும்.சத்யா! நீ தான் கடவுளாச்சே! எங்கே எங்களுடன் போட்டிக்கு வா! நாம் சண்டை போடுவோம். யார் வெற்றி பெறுகிறார்கள் என பார்ப்போம், வாப்பா, என்றனர்.சத்யா அவர்களைப் பார்த்து புன்முறுவல் செய்து விட்டு தன் வழியில் சென்றான். டேய்! அவன் சரியான பயந்தாங்கொள்ளிடா! அவனாவது, நம்மகிட்ட வாலாட்டுவதாவது, எனக் கேலி செய்தனர்.மனிதர்களின் கேலிக்கு தெய்வம் பணிந்தால் மனிதனுக்கும், தெய்வத்துக்கும் என்ன வித்தியாசம்...அந்த தெய்வமகன் எதையும் சட்டை செய்யாமல் நடந்து கொண்டே இருந்தான்.உடனே சத்யாவின் அனைத்து உறவு பையன்களும் ஆத்திரமடைந்தனர். அவன் கையைப்பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக சண்டைக்கு இழுத்தனர். சத்யாவை அடித்து துவைத்தனர். சத்யாவின் அழகான உடைகள் கலைந்தன. சத்யாவை ஆற்றுமணலில் போட்டு புரட்டி எடுத்தனர். கண்டு கொள்ளவே இல்லை சத்யா.அடித்தவர்களின் கைகள் வலித்தன. சத்யாவை தரதரவென இழுத்துக் கொண்டு போய், ஒரு முள்புதர் அருகே போட்டுவிட்டனர்.சத்யா அமைதியே வடிவாக எழுந்து பள்ளிக்குச் சென்றான். அவன் தலையும், உடையும் கலைந்திருப்பதைக் கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.சத்யா என்ன நடந்தது? என அவர்கள் விசாரித்தனர்.
அடி கொடுத்து விட்டு வகுப்பில் நல்ல பிள்ளைகள் போல் அமர்ந்திருந்த சத்யா ஏதும் நடக்கவில்லை என்றே சொன்னான்.அதற்குமேல் ஆசிரியர்கள் ஏதும் கேட்கவில்லை. ஆனால் மாலையில் வீடு திரும்பியதும், சத்யாவின் அழுக்கடைந்த உடையையும், கலைந்த கேசத்தையும் கண்ட அன்னை ஈஸ்வராம்பா சத்யாவைக் கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்து விட்டார். சத்யா, சொல், உடைகள் அழுக்காக காரணம் என்ன? முடி இப்படி கலைந்திருக்கிறதே! அம்மாவிடமும் ஏதும் நடக்கவில்லை என்றே சொன்னான் சத்யா. அம்மா! இன்று காலையில் பஜனை நடந்தது. எல்லாரும் பஜனை பாடினார்கள், என்றான்.

ஆம்! தெய்வத்தை போற்றினாலும், தூற்றினாலும் அது பஜனையாகவே ஆகிறது...அதனால் தான் பாபா இப்படி சொல்லி இருக்க வேண்டும்.மறுநாள் விடுமுறை. அம்மா சத்யாவைக் காணாமல் வெளியே தேடிச் சென்றார். தோப்பிலிருந்து இனிமையான சங்கீதம் கேட்டது. பண்டரிநாதனை வாழ்த்தி பஜனைப்பாடல் கேட்டது. இதுவரை கேட்காத பாட்டு அது.இவ்வளவு அழகாக புத்தம்புது பாடலை இசை அமைத்து ராகத்துடன் பாடுவது யார்? உடன் ஏராளமானோர் பாடுகிறார்களே!ஈஸ்வராம்பா தோட்டத்திற்கு சென்றார். அங்கே சத்யா நடுநாயகமாக வீற்றிருந்து இனிமையாகப் பாட, மற்றவர்கள் தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தனர்.ஈஸ்வராம்பா தன் மகனுக்கு இந்த இளம்வயதிலேயே பாடல் இயற்றி பாடும் திறமை வந்தது பற்றி பெருமை கொண்டார். அதே நேரம் தாய்மைக்கே உரிய கனிவுடன், இவனுக்கு கடும் திருஷ்டி ஏற்படுமே, எனக் கவலையும் கொண்டார்.அன்று மதியம் பெருமழைக்கான அறிகுறி தெரிந்தது. அவ்வூரில் புது வீடு கட்டிக் கொண்டிருந்த வெங்கம்மா, தன் செங்கல் சூளையை எப்படி காப்பாற்றுவது என கவலை கொண்டாள். மிகவும் சிரமப்பட்டு கடன் வாங்கி, பச்சை செங்கல்களை அடுக்கி அவற்றை சுடுவதற்குரிய ஏற்பாட்டைச் செய்யும் போது மழை கொட்டினால் என்னாவது. கவலையுடன் இருந்த அவளுக்கு ஒரு பெரியவர் உதவ முன்வந்தார்.தன் வயலில் இருக்கும் கரும்புத்தோகையைக் கொண்டு வந்து சூளை மீது போட்டு விட்டால் மழைத்தண்ணீரில் இருந்து சூளையை ஓரளவு பாதுகாக்கலாம் என யோசனை சொன்னார் பெரியவர்.எல்லாரும் வயலுக்கு புறப்பட்டனர். சத்யா இல்லாமலா...அவனும் அவர்களுடன் புறப்பட்டான். பாதி வழி சென்றதும் வானம் மேலும் இருட்டியது. சத்யா எல்லாரையும் தடுத்து நிறுத்தினான்.வேண்டாம்! யாரும் வயலுக்கு செல்ல வேண்டாம். இனிமேல் மழை பெய்யாது,என்றான்.வானம் கருத்து மேகம் புடைசூழ்ந்து நிற்கும் போது இவன் இப்படி சொல்கிறானே! இவனுக்கு என்னாச்சு, அனைவரும் திகைத்தனர்.ஊரார் சத்யா சொன்னதை ஆரம்பத்தில் நம்பவில்லை. அவர்கள் சித்ராவதி நதியைக் கடந்து, வயலில் இருக்கும் கரும்புத்தோகையை எடுத்து வர கிளம்பினார்கள். சின்னப்பையன்... அவனுக்கு என்ன விபரம் தெரியும்? நாம் புறப்படுவோம். மழை வருவதற்குள் கரும்புத்தோகையை எடுத்து வந்து வெங்கம்மாவின் செங்கல் சூளையில் வைப்போம், என்றார் ஒரு பெரியவர்.சத்யா மீண்டும் அடித்து சொன்னான். அவனை நம்பும் சிறுவர்களைத் தவிர வேறு யாரும் அவன் சொன்னதைக் கேட்கவில்லை. வானமோ இன்னும் கருத்தது. சத்யா சொன்னது இதுவரை பொய்த்ததில்லை. ஆனால் வானம் மேலும் மேலும் கறுக்கிறதே! இவன் சொன்னது போல் நடக்காதா? அப்படியானால் இவனது மகிமை என்னாவது? சத்யாவின் நண்பர்கள் கவலைப்பட்டனர்.சத்யாவின் சொல்லைக் கேட்காமல் புறப்பட்டவர்கள் ஆற்றங்கரை வரை தான் சென்றிருப்பார்கள். வானம் திடீரென வெளுத்தது. பெரும் காற்றடித்தது. மேகக்கூட்டம் போன திசை தெரியவில்லை. சத்யாவின் சொல்வாக்கை அப்போது தான் எல்லாரும் உணர்ந்தனர். புறப்பட்டு சென்ற அனைவருமே அவனிடம் ஓடி வந்தனர்.நீ தெய்வப்பிறவி என்பதில் சந்தேகமே இல்லையப்பா! பெரும் மழை பெய்யும் என எதிர்பார்த்தோம். வெங்கம்மாவின் சூளையைக் காப்பாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான் உன் சொல்லைக் கேட்காமல் போனோம். ஆனால் உன்னைப் புரியாத இந்த ஜென்மங்களுக்கு புத்தி புகட்டி விட்டாய் என அனைவரும் கூறினர். அப்போது அங்கே மழை பெய்தது. என்ன மழை...கண்ணீர் மழை...சத்யாவின் பெருமையை நினைத்து அவனது ஊரார் வடித்த ஆனந்தக் கண்ணீர் மழை! சத்யா பதிலேதும் சொல்லவில்லை. அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே புறப்பட்டான். அவனது நண்பர்களுக்கோ தங்கள் தலைவன் செய்த அற்புதத்தை நினைத்து மிகவும் பெருமை. ஒரு சிறுவன் ஈஸ்வராம்பாவிடம் ஓடிப் போனான்.

நடந்ததை வரிவிடாமல் சொன்னான். அவர் ஆச்சரியப்பட்டார். பக்கத்து வீட்டு சுப்பம்மாவிடமும் சம்பவம் பற்றி சொன்னார். சுப்பம்மா மகிழ்ச்சியுடன், ஈஸ்வராம்பா! அவன் உனக்கு மட்டுமா பிள்ளை..எனக்கும் பிள்ளை தான். என் பிள்ளை இதை மட்டுமா செய்வான்...ஒரு காலத்தில் உலகமே அவனைப் பார்க்க வரிசையில் காத்துநிற்கும்... வேண்டுமானால் பார்... என பெருமை பொங்க சொன்னார்.ஒருநாள் ஊரில் திருவிழா. கதாகாலட்சேபம் நடத்துவதென முடிவாயிற்று. என்ன தலைப்பு கொடுக்கலாம் என சிந்தித்தனர். பிரகலாதன் கதை சொல்வதென முடிவாயிற்று.காலட்சேபம் நடந்து கொண்டிருந்தது. பிரகலாதன் தன் தந்தை இரண்யனிடம், வாதாடிக் கொண்டிருந்த காட்சி வந்தது.எங்கே உன் நாராயணன்? கர்ஜிக்கிறார் இரண்யன் போல் காலட்சேபம் செய்பவர். பின்பு அவரே குரலை மாற்றி, அவர் இந்தத் தூணில் கூட இருக்கிறார், என்று பிரகலாதன் போல சொல்கிறார்.இரண்யன் கதாயுதத்தால் தூணை பிளக்கும் காட்சியை ஆவேசமாக அவர் சொல்லவும், கதை கேட்டுக் கொண்டிருந்த சத்யா, ஊய் என சத்தமிட்டபடி ஆட்டம் போட்டான்.கிருஷ்ணரின் அவதாரமான சத்யா நரசிம்மராகவே மாறிவிட்டான். அவனை அடக்க யாராலும் இயலவில்லை. பெரியவர்கள் அவன் அருள் வந்து ஆடுவதைக் கண்டு பரவசமும், பயமும் கொண்டனர். நரசிம்ம பகவானே! நீங்கள் சாந்தமடைய வேண்டும், என சில தைரியசாலிகள் கூறினர்.ஆனால் சத்யா அடங்கவில்லை. பின்பு ஊரிலுள்ள பயில்வான்கள் சிலர் வரவழைக்கப்பட்டு, சத்யாவை அடக்க வேண்டியதாயிற்று. இதன் பிறகு, சத்யாவை ஊர்மக்கள் கிருஷ்ணனாகவே பார்க்க துவங்கினர். சத்யாவின் தந்தை வெங்கப்பராஜூவும் சிறந்த நாடக நடிகர். சத்யாவை நாடகங்களில் ஈடுபடுத்தினால் என்ன என்று அவருக்கு தோன்றியது. சத்யாவுக்கு பிடித்த பக்தி நாடகங்களை நடத்துவோம் என முடிவு செய்தார். அவரே சொந்தமாக நாடகங்களை தயாரித்தார். அதில் நடிக்க சத்யாவுக்கு விருப்பமா எனக் கேட்டார்.சத்யா நீ கிருஷ்ணனாக நடிக்கிறாயா?சத்யா சிரித்தான்.

இறைவனுக்கே வந்த சோதனை என்பது இதுதானோ? கிருஷ்ணனிடமே கிருஷ்ணனாக நடிக்கிறாயா என தந்தை கேட்கிறாரே! எனினும் இப்பிறவியில் சத்யாவைப் பெற்ற தந்தை அல்லவா அவர்? தந்தையின் சொல்லுக்கு மகன் கட்டுப்பட்டான்.கிருஷ்ணனாகவே அவன் மேடைகளில் உருமாறினான். அவனது நடிப்பு எல்லாரையும் கவர்ந்தது. சத்யா மேடையில் வந்தாலே கை தட்டல் தான். பெண் வேடமிட்டும் சத்யா நடித்தான். கிருஷ்ணன் மோகினியாக அவதாரம் எடுத்தவராயிற்றே! எனவே மோகினியாகவும் வேடமிட்டு நடித்தான். கிருஷ்ணனுக்கு பிடித்த திரவுபதியாக நடித்தான். ஏழெட்டு சேலைகளை உடலில் கட்டிக் கொண்டு, துச்சோதனன் துயில் உரியும் காட்சியில் தத்ரூபமாக நடிப்பு அமைந்தது.ஒரு நாடகத்தில் சத்யாவை வெட்டப்போவது போல ஒரு காட்சி. ஈஸ்வராம்பா பயந்து போனார். மேடைக்கு தாவி ஓடி, என் மகனை வெட்டாதீர்கள், என கூக்குரல் இட்டார். சத்யா உட்பட எல்லாரும் சிரித்து விட்டனர்.அம்மா! இங்கு நாடகம் தானே நடக்கிறது? ஏன் பயப்படுகிறீர்கள்? என்றான் சத்யா.பெற்றவள் அந்த அளவு தன் பிள்ளை மீது பாசம் வைத்திருந்தாள்.ஊருக்கு அவன் தெய்வம் போல காட்சி தரலாம். ஆனால் எனக்கு அவன் பிள்ளையல்லவா? என்றே தெரிந்தவர்களிடம் எல்லாம் சொல்வார் ஈஸ்வராம்பா. இந்தநேரத்தில் தான் பக்கத்து ஊர்களில் காலரா பரவியது. பலர் இறந்து போனார்கள். புட்டபர்த்தியையும் காலரா தாக்கும் என பஞ்சாயத்தில் எச்சரித்தனர். மக்கள் கலவரம் அடைந்தனர். என்னாகுமோ ஏதாகுமோ என்ற பீதி எங்கும் ஏற்பட்டது. அன்று சத்யாவின் உள்ளத்தில் ஒரு மகானைப் பற்றிய எண்ணம் ஏற்பட்டது. மகானின் மனதில் இடம் பெற்ற அந்த மகான் யாராக இருக்கும்?
சாய்பாபா - பகுதி 5

சாப்பாட்டையே தொடாத நெய் வாசனை சத்யாவின் கைகளில் இருந்து வந்தது ஈஸ்வராம்பாவுக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. அவனை புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஆனால் அவன் தெய்வம் அல்லவா? பகவான் கிருஷ்ணனின் அவதாரம் அல்லவா அவன்? அவனது கையிலிருந்து நெய் வாசம் வர கேட்கவா வேண்டும்? கோகுலத்தில் அவன் தின்னாத வெண்ணெயா? நெய்யா? அதன் மணம் எத்தனை யுகங்கள் கடந்தாலும், அவன் உடலில் அந்த வாசனை ஒட்டியிருக்கத்தானே செய்யும்? இதை அன்னையால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. சத்யாவை ராமலீலா ஊர்வல வண்டியில் ஏற்றிய அர்ச்சகரிடம், அவனை வண்டியில் எப்படி ஏற்றினீர்கள்? எனக் கேட்டார் ஈஸ்வராம்பா. குருவை ஏற்ற என்ன தயக்கம்? என்று பதிலளித்தார் அவர். குருவா? யாருக்கு யார் குரு?. அம்மா! தங்கள் மகன் இந்த ஊரில் இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் குருவாக இருக்கிறான். அவனை தங்கள் தலைவனாக ஏற்றுக் கொண்டுள்ளனர் குழந்தைகள். அவர்கள் எல்லாருமாக சேர்ந்து அவனை வண்டியில் ஏற்றச் சொன்னார்கள். அவனை வண்டியில் ஊர்வலமாக கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் என்னை அறியாமலே உந்தியது. அவனை ஏற்றி வந்தேன், என்றார் அர்ச்சகர். ஈஸ்வராம்பாவுக்கு தன் மகன் மற்ற குழந்தைகளை விட உயர்ந்த நிலையில் இருக்கிறான் என்பதை நினைத்து பெருமையாக இருந்தது. ஆனால் பகவானாக பிறந்தவர், தன்னை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் தானாகவே அமர்ந்து வந்தார் என்ற உண்மை அவர்கள் யாருக்கும் புரியவில்லை. குழந்தைகள் சத்யாவை விரும்ப ஒரு காரணம் இருந்தது. அவ்வூரில் திண்ணைப்பள்ளிகள் மட்டும் தான் உண்டு. எழுதப்படிக்க தெரிந்தவர்கள் சிலரே. அவர்களே ஆசிரியர்களாக இருப்பார்கள். சூரிய உதயம் ஆனவுடனேயே வகுப்புகள் ஆரம்பித்து விடும். பல குழந்தைகளின் உடம்பில் துணியே இருக்காது.

சத்யாவுக்கு ஈஸ்வராம்பா சட்டை அணிவித்து அனுப்புவார். அவன் அதிகாலை குளிரில் நடுங்கும் தன் சக நண்பர்களை பார்த்துக் கொண்டே இருப்பான். சிரமத்துடன் கல்வி கற்றனர் அவர்கள். அவர்களுக்கு சட்டை கொடுத்தால் என்ன என்ற எண்ணம் சத்யாவுக்கு ஏற்பட்டது. வீட்டில் தனக்காக வைத்திருந்த சட்டைகள், துண்டுகளை எல்லாம் எடுத்து வந்தான். குழந்தைகளுக்கு அணிவித்தான். வீட்டில் எல்லாருக்கும் இது தெரியும். ஆனால், சத்யா! இப்படி செய்யலாமா? உன் சட்டைகளை மற்ற குழந்தைகளுக்கு கொடுத்து விட்டால் நீ என்ன செய்வாய்? என்று கேட்க குடும்பத்திலுள்ள அனைவருக்கும் தயக்கம். தர்மவானாக அல்லவா வளர்கிறார் நமது பாபா. அவரது செயல்களை தடுக்க வல்லவர் யார்? கீதையிலே கண்ணன் சொன்னது போல, உலகில் எப்போது அநியாயம் தலைதூக்குகிறதோ அப்போது நான் அவதாரம் எடுப்பேன், என்று சொல்லியதை நிறைவேற்ற வந்துள்ள மகான் அல்லவா அவர். அவர் இன்னும் என்னென்ன அற்புதங்களை நிகழ்த்தப் போகிறாரோ? சிறு வயதிலேயே அவர் தர்ம காரியங்களுடன் அற்புதங்களையும் செய்யத் தொடங்கி விட்டார். சத்யா திண்ணைப்பள்ளிக்கூடத்தில் அடிப்படை படிப்பை முடித்து ஆரம்பக் கல்விக்காக புக்கப்பட்டணம் செல்ல வேண்டியதாயிற்று. புட்டபர்த்தியிலிருந்து 5 கி.மீ.தொலைவில் இருந்தது புக்கப்பட்டணம். காலையில் புறப்பட்டால் இருட்டிய பிறகு தான் வீடு வருவான் சத்யா. செல்லும் வழியெல்லாம் முட்புதர்கள் அடர்ந்திருக்கும். கற்கள் குவிந்து கிடக்கும். ஒரு ஆற்றிலும் இறங்கி அதை கடக்க வேண்டும். சத்யா இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொண்டதில்லை. அவன் தினமும் நடந்தே சென்று வருவான். இந்தக் கால குழந்தைகள் ஆட்டோவிலும், பஸ்களிலும் பள்ளிக்கு செல்கிறார்கள். அவர்கள் பாபா சிறுவயதில் தினமும் 10 கி.மீ. நடந்தே சென்று படித்து வந்ததை உணர வேண்டும். அவரை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு சிரமப்பட்டு படிக்க வேண்டும்.

சத்யாவின் நினைப்பெல்லாம் தன் சக மாணவர்களை எப்படி சந்தோஷமாக வைத்துக் கொள்வது என்பது தான். அவர்கள் கேட்டதை எல்லாம் கொடுப்பான். தன் சட்டை பைக்குள் கையை விடுவான். ஏதாவது பலகாரம் வரும். நண்பர்களுக்கு கொடுப்பான். எத்தனை பேர் கேட்டாலும் கொடுப்பான். சத்யா! உன் சட்டைப் பையில் ஒன்றுமே இல்லை. இருந்தாலும் கையை விட்டால் பண்டங்கள் வருகின்றன. அது எப்படி? என்பார்கள் நண்பர்கள். சத்யா அவர்களுக்கு புன்முறுவலையே பதிலாகத் தருவான். அவனது செய்கை அவர்களுக்கு ஆச்சரியம் தந்தது. அவனை புக்கப்பட்டணம் பள்ளி மாணவர்களும் குரு என்றே அழைத்தனர். பகவானுக்கு நாம் படையல் வைக்கிறோம். பூஜை முடிந்ததும் நாமே சாப்பிட்டு விடுகிறோம். இதை பிரசாதம் என்கிறோம். பிரசாதம் என்பது பகிர்ந்தளிக்கப்படுவது. ஆண்டவனுக்கு நாம் ஆத்மார்த்தமாக கொடுக்கும் பொருளை அவன் நமக்கு பகிர்ந்தளிக்கிறான் என்பதே பிரசாதத்தின் தத்துவம். ஆனால் சத்யா தனக்கென்று எதையும் எதிர்பார்ப்பதில்லை. மதிய உணவாகக் கொண்டு வரும் பழையசாதத்தையும், ஊறுகாயையும் கூட பசிக்கும் குழந்தைகளுக்கு கொடுத்து விடுவான். பள்ளிப் பிள்ளைகள் சத்யாவை ஆராய ஆரம்பித்தார்கள். சத்யாவால் எப்படி வெறும் பையில் இருந்து தின்பண்டங்கள் தர முடிகிறது என்பதே அந்த ஆராய்ச்சி. இறைவனை மனிதன் என்றுமே ஆராய்ந்து வந்திருக்கிறான். நாத்திகன் அவன் இருக்கிறானா என ஆராய்கிறான். ஆஸ்திகன் அவன் இருக்குமிடத்தையும், அங்கு சென்று எப்படி அவனை அடைவது என்றும் ஆராய்கிறான். ஆக ஆத்திகன், நாத்திகன் இருவருமே இறைவனை ஆராய்கிறார்கள். அவனைப் பார்த்து விட துடிக்கிறார்கள். அவர்கள் அவனை அடையச் செல்லும் பாதை தான் வித்தியாசமானது. சத்யாவுடன் படித்த அந்தக் குழந்தைகளும் கூட தெய்வக்குழந்தைகளே! அவர்களை நினைத்தால் ஒரு வகையில் பெருமையாகவும், ஒரு வகையில் பொறாமையாகவும் இருக்கிறது. ஏன் நாமும் அந்தக் கூட்டத்தில் ஒருவனாக இல்லை? என்றே நமக்கு எண்ணத் தோன்றுகிறது. அவரது கடைக்கண் பார்வை படாதா என்று இப்போதும் ஏங்கும் உள்ளங்கள் எத்தனை? ஆனால் அவரோடு வாழ்ந்த குழந்தைகளை, அவரது அருட்பிரசாதம் பெற்ற குழந்தைகளை வணங்கத் தோன்றுகிறது. சத்யாவிடமே குழந்தைகள் தங்கள் சந்தேகத்தை கேட்டார்கள். சத்யா..வெறும் பையிலிருந்து எப்படி பண்டங்களை வரவழைக்கிறாய்?. சத்யாவின் பதிலுக்காக அவர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.சத்யா தன் நண்பர்களிடம் அழகாக பதில் சொன்னான்.இது ஒன்றும் அதிசயமில்லை. நம் கிராம தேவதை ஒன்று இந்த பண்டங்களை எனக்கு தந்து கொண்டிருக்கிறது. அதை உங்களுக்கு தந்து கொண்டிருக்கிறேன், என்றான்.குழந்தைகள் அவனை தெய்வமாகவே நினைக்க ஆரம்பித்தனர். ஆனால் சத்யாவின் இந்த நிலை அவனுக்கு சாதகத்தை விட பாதகத்தையே நிறைய தந்தது. அன்று பள்ளியிலிருந்து வீடு திரும்பிய சத்யாவை அம்மா ஈஸ்வராம்பா கடுமையான வார்த்தைகளால் திட்டினார்.டேய் சத்யா! நீ இப்படியெல்லாம் செய்தா மாடு மேய்க்கத்தாண்டா போவே, அம்மா இவ்வளவு கடுமையான வார்த்தையை உதிர்த்து சத்யா கேட்டதே இல்லை. அவன் அம்மாவின் முகத்தை வருத்தத்துடன் ஏறிட்டு பார்த்தான்.அம்மா! நான் எந்தத்தப்பும் செய்யலையே?டேய்! பொய் சொல்றியா? இன்றைக்கு வகுப்பிலே ஆசிரியர் கொண்டப்பாவை என்னடா பண்ணினே? என்று அம்மா கேட்டதும் தான் சத்யாவுக்கு உறைக்க ஆரம்பித்தது. ஓ! அதுதான் அம்மாவின் கோபத்திற்கு காரணமா?அன்று வகுப்பறை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. அந்தப் பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள். ஒருவர் கொண்டப்பா. இன்னொருவர் மகபூப்கான். மகபூப்கானுக்கு சத்யா மீது பிரியம் அதிகம். அவனுக்கு தான் கொண்டு வரும் இனிப்பு பண்டங்களைக் கொடுப்பார் அவர். ஆனால் சத்யா அதைச் சாப்பிட யோசிப்பான். அவர் ஒரு முஸ்லிம் என்பதால், வீட்டில் மாமிசம் சமைப்பார்கள். மாமிசம் சமைத்த பாத்திரத்தில் இந்த பண்டங்களையும் சமைத்திருப்பார்கள். எப்படி இதை சாப்பிடுவது? என்பது தான் சத்யாவின் தயக்கத்திற்கு காரணம். மகபூப்கான் இதைப் புரிந்து கொண்டார். ஒருநாள் தன் வீட்டை நன்றாக கழுவி, பெருக்கி, மெழுகி வீட்டை சுத்தமாக்கினார். புதுப்பாத்திரங்கள். புது எண்ணெய், புதிதாக மளிகைப் பொருள்கள் வாங்கி வீட்டில் பலகாரம் செய்யச் சொன்னார். அதை சத்யாவுக்கு எடுத்து வந்து கொடுத்தார்.

சத்யா! இன்று என் வீட்டை சுத்தமாக்கி, சுத்தமாக செய்து எடுத்து வந்த பலகாரம் இது. இதையாவது சாப்பிடேன், என்றார். ஆசிரியர் தன் மீது கொண்ட அன்பை எண்ணி வியந்தான் சத்யா. அது மட்டுமல்ல! சத்யா ஒரு சமயம் கடந்த தெய்வமாகவும் உருவாகி இருக்கிறான் என்பதையும் இந்த சம்பவம் எடுத்துக் காட்டியது. ஆசிரியர் கொண்டப்பா கண்டிப்பானவர். தான் பாடம் சொல்லித்தரும் போது மாணவர்கள் வேறு எங்காவது கவனத்தை செலுத்தினால் அவருக்கு பிடிக்காது. ஒருநாள் அவர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது சத்யா ஏதோ எழுதிக் கொண்டிருந்தான். கொண்டப்பா சத்யாவைக் கண்டித்தார்.சத்யா! நான் பாடம் நடத்தும் போது கவனிக்காம அங்கே என்ன செஞ்சுகிட்டிருக்கே! கொண்டப்பா சத்தம் போட்டார்.ஐயா! நான் இங்கே எழுதிகிட்டிருந்தாலும், நீங்க சொல்றதை கவனிச்சுகிட்டும் இருக்கேன். இதோ பாருங்க! பஜனை பாட்டு தான் எழுதிக்கிட்டு இருந்தேன்,.சத்யாவின் இந்த பதில் ஆசிரியரை எதிர்த்து பேசுவது போல் இருந்தது. அவருக்கு கோபம் அதிகமாகி விட்டது.சத்யா! செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்காம எதிர்த்தா பேசுறே! பெஞ்சு மேலே ஏறு! வகுப்பு முடியறவரைக்கும் நிக்கணும் புரியுதா! என்றார். சத்ய நாராயணன் அப்படியே செய்தான். அவன் தன் நண்பர்களுக்கு பஜனைப் பாடல்களை எழுதிக் கொடுப்பான். அதை வகுப்பு நேரத்திலேயே செய்வான். அதே நேரம் பாடங்களில் கோட்டை விட்டதில்லை. எல்லா பாடங்களை படிப்பதிலும் படுசுட்டி சத்யா.அடுத்த பீரியட் ஆரம்பமானது. கொண்டப்பா பக்கத்து வகுப்புக்கு கிளம்ப தயாரானார். மகபூப்கான் உள்ளே வந்தார். அவர் சத்யா பெஞ்சு மீது நிற்பதைப் பார்த்ததும் கலவரம் அடைந்தார்.தெய்வத்தை தண்டிக்கும் அதிகாரம் நமக்கேது! என பதறியபடியே சிந்தித்தவராய் நடந்த விஷயத்தை கொண்டப்பாவிடம் கேட்டார். கொண்டப்பா சொன்னதும், பரவாயில்லை, சிறுவன் தானே! தெரியாமல் செய்து விட்டான், விட்டு விடுங்கள், என கேட்டுக் கொண்டார்.

கொண்டப்பா மனம் இரங்கவில்லை. அவன் இன்று முழுவதும் நிற்கட்டும், என்றவர் நாற்காலியை விட்டு எழுந்தார். ஆனால் அவரால் எழ முடியவில்லை. வலுக்கட்டாயமாய் எழுந்த போது, நாற்காலியும் பின்பக்கமாய் ஒட்டிக் கொண்டு வந்தது.மகபூப்கான் நினைத்தது போலவே தான் நடந்தது. சத்யாவை பெஞ்சில் ஏற்றியதால், கொண்டப்பாவுக்கு ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்பதை தெரிந்து கொண்ட அவர், இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. குழந்தைகளெல்லாம் சிரித்தனர்.ஐயா! எங்கள் குருவை கீழே இறக்குங்கள். இல்லாவிட்டால் நாற்காலி உங்களை விடாது, என்றனர். மகபூப்கானும் இதையே சொன்னார்.வேறு வழியின்றி சத்யாவை இறங்கச் சொன்னார் கொண்டப்பா. சத்யா இறங்கவும், ஒட்டிய நாற்காலி கீழே விழுந்தது.காண்டப்பா ஆச்சரியப்பட்டார். இவன் மகான் தான், சந்தேகமே இல்லை, என மனதில் நினைத்து அவனை கருணை பார்வை பார்த்தபடி வெளியே சென்றார்.இந்த சம்பவம் வீட்டுக்கு தெரியாமல் இருக்குமா? சக சிறுவர்கள் சத்யாவின் அம்மாவிடம் போய் சொல்லி விட்டார்கள். அம்மாவுக்கு கடும் கோபம்.அதன் விளைவு தான், அம்மாவிடம் திட்டு வாங்கிக் கொண்டிருந்தான் சத்யா. சத்யாவை கண்டித்து விட்டு, ஈஸ்வராம்பா தற்செயலாக வெளியே சென்றார். ஆசிரியர் கொண்டப்பாவை அவர் பார்த்தார். நடந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என கெஞ்சும் தொனியில் கூறினார். ஆனால், கொண்டப்பா, அம்மா அப்படி சொல்லாதீர்கள். அவன் தெய்வம், நீங்கள் தெய்வத்தாய், என்று அக மகிழ்ந்து சொல்லவும் ஆச்சரியப்பட்டார் ஈஸ்வராம்பா.
சாய்பாபா -பகுதி 4

தொட்டிலில் படுத்திருந்த சத்யாவின் தலையில் வட்ட வடிவ ஒளி தகதகவென மின்னிக் கொண்டிருந்தது. பார்க்க கண் கூச வைத்த அந்த ஒளி அனலாய் தகிக்குமோ என ஈஸ்வராம்பா நினைத்தார். ஆனால், அந்த ஒளி குளுகுளுவென்று இருந்தது. ஈஸ்வராம்பா அதைப் பார்த்தபடியே தன்னை மறந்து அமர்ந்து விட்டார். அந்த ஒளி நீண்ட நேரமாய் அப்படியே இருந்தது. பிறகு படிப்படியாக குறைந்து ஒரு கீற்று மட்டும் தெரிந்தது. இந்த நேரத்தில் மாமியார் லட்சுமம்மா உள்ளே வந்தார். அடித்து வைத்த சிலை அசையாமல் உட்கார்ந்திருந்த மருமகளை எழுப்பி, என்னம்மா நடந்தது? ஏன் இப்படி உட்கார்ந்திருக்கிறாய்?  என்றார். நடந்த விபரத்தைச் சொன்னார் ஈஸ்வராம்பா. அதிசயப்பட்டார் லட்சுமம்மா. நான் சொல்லவில்லையா? உனக்கு பிறந்திருப்பது சாதாரண குழந்தை அல்ல. அவன் தெய்வ மகன். இந்த உலகத்தை காக்க வந்த கடவுள் அவன். இருந்தாலும் இங்கே நடந்ததை வெளியே சொல்லாதே. மற்றவர்கள் இதைக் கேட்டால் நம்பாமல் எள்ளி நகையாடுவார்கள். நமக்குள்ளேயே இதை ரகசியமாக வைத்துக் கொள்வோம், என்றார். சிறிது நேரத்தில் ஒளி மறைந்து விட்டது. அதன் பிறகே குழந்தைய தூக்கினார் ஈஸ்வராம்பா. சத்யா கிடுகிடுவென வளர்ந்தான். அவனது பொழுது பக்கத்து வீட்டு சுப்பம்மா வீட்டில் தான் கழியும். இவன் அங்கு போனால் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. ஏன் இவன் அங்கு போனால் சந்தோஷமாக இருக்கிறான். வீட்டுக்கு வந்தால் உம்மென ஆகி விடுகிறானே! ஈஸ்வராம்பாவுக்கு இதுவும் கவலையைத் தந்தது. இதற்கான காரணத்தை கண்டறிய முற்பட்டார். ஒருநாள் வீட்டில் கோழிக்கறி சமைக்க ஏற்பாடாயிற்று. பூஜை, புனஸ்காரம் என செய்தாலும், சத்யாவின் குடும்பத்தினர் அசைவமும் சாப்பிடுவர். அன்று சத்யாவைக் காணவில்லை. அவனைத் தேடிப் பார்த்தார்கள். வீட்டின் பின்புறத்தில் சத்யா கோழியை மார்போடு அணைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

இன்னும் சிறிது நேரத்தில், உன் உயிர் பறிபோய் விடுமே! உன்னைக்காப்பாற்ற என்னால் இயல்வில்லையே, என்று கண்ணீர் ததும்ப கோழியைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான் சத்யா. அவனது செய்கையை புரிந்து கொண்ட குடும்பத்தினர் கோழியை வெட்டாமல் விட்டு விட்டனர். அந்தக் குழந்தை சுப்பம்மாவை விரும்பியதற்கு காரணமே அந்த வீட்டில் இருந்த ஜீவகாருண்யம் தான். சுப்பம்மா பிராமணர் என்பதால், அங்கு மாமிசம் சமைப்பதில்லை. சத்யா சைவமாகவே இருக்க விரும்பினான். அவன் அசைவம் சமைத்த பாத்திரங்கள் அருகே கூட போக மாட்டான். சத்யாவின் செய்கைகள் எல்லாமே வித்தியாசம் தான். அவன் சக நண்பர்களுடன் ஆற்றுக்கு போவான். விளையாட்டும் ஆட்டமும் பாட்டமுமாக இருப்பான். ஆனால் வீட்டுக்கு வந்தால் மவுன ராகம் இசைத்து விடுவான். ஈஸ்வராம்பா பல பண்டங்களை அவனுக்கு செய்து கொடுப்பார். வேண்டாம் எனச் சொல்லி விடுவான். ஈஸ்வராம்பாவின் மனம் படாத பாடு படும். அவனது வீட்டுக்கு அனந்தப்பூரில் இருந்து வியாபாரிகள் துணிமணிகள் கொண்டு வருவார்கள். பார்க்க அழகாக இருக்கும் அந்தத் துணிகளை சத்யா கண்ணெடுத்தும் பார்க்க மாட்டான். உனக்கு பிடித்ததை எடு தாயே, என அம்மாவிடம் சொல்லி விடுவான். வீட்டிலுள்ள மற்ற குழந்தைகள் எல்லாம் விரும்பி எடுக்கும் விலை உயர்ந்த ஆடைகள் பற்றி சத்யா கவலைப்பட்டதில்லை. அவனுக்கு எளிய உடைகளே பிடித்திருந்தன. இதெல்லாம் ஈஸ்வராம்பாவுக்கு பெரும் வருத்தம் தந்தன. மகனை மற்ற குழந்தைகள் போல் நல்ல உடைகள் அணிவித்து, சீரும் சிறப்புமாக வளர்க்க வேண்டும் என்று எல்லாத் தாய்மார்களும் விரும்புவதைத் தான் ஈஸ்வராம்பாவும் விரும்பினார். ஆனால் சத்யா எளிமையே வடிவாக இருந்தான். பஜனைப் பாடல்களைப் பாடுவான். திருநீறை அள்ளி அள்ளி பூசுவான்.

ஒருமுறை ராமலீலா திருவிழா அன்று வீட்டில் சத்யா காணாமல் போனான். வீட்டில் உள்ளவர்கள் அவனை தேடி அலைந்தனர். அப்போது சிலர் ஒரு வண்டியில் ராமனின் படத்தை அலங்கரித்து எடுத்து வந்தனர். சத்யா அந்த படத்தின் கீழே அமர்ந்திருந்தான். இதைப் பார்த்த ஈஸ்வராம்பா, இவனை சப்பரத்தில் ஏற எப்படி பூஜாரி அனுமதித்தார், என ஆச்சரியப்பட்டார். இளமையிலேயே அவனுக்கு இரக்க சுபாவம் அதிகமாக இருந்தது. ஊரில் இருக்கும் பிச்சைக்காரர்கள் எல்லாம் இவனது இரக்க சுபாவத்தை பயன்படுத்தி, வீட்டிற்கே வர ஆரம்பித்தார்கள். சில சமயங்களில் சத்யாவும் இவர்களைத் தேடிப்போய் வீட்டுக்கு கூட்டி வந்து விடுவான். ஒருநாள் இவனது சாப்பாட்டையே ஒரு பிச்சைக்காரனுக்கு கொடுத்து விட்டான். அம்மா கண்டித்தார். நீ சாப்பிட்டாயா? என்றார். ஆமாம் அம்மா! பொய் சொல்லாதே சத்யா! நீ பிச்சைக்காரனுக்கு கொடுப்பதை நான் பார்த்தேனே. அம்மா! நானும் சாப்பிட்டேனே! தாத்தா எனக்கு சாப்பாடு தந்தாரே அம்மாவுக்கு சந்தேகம். தாத்தாவிடம் கேட்டார். நான் சாப்பாடு எதுவும் கொடுக்கவில்லையே, என்றார் தாத்தா. அம்மாவுக்கு கோபமே வந்து விட்டது. சத்யா திரும்பத்திரும்ப பொய் சொல்லாதே, என்று கோபமாக கேட்டதும், தன் கையை அம்மா முகத்தில் வைத்து, பாருங்கள்! நெய் வாசம் அடிக்கிறது, என்றான் சத்யா. அம்மாவுக்கு ஆச்சரியமாகி விட்டது.  இவனுக்கு நெய்ச்சோறு கொடுத்தது யார்?. வயிறு நிறைய சாப்பிட்டது போன்ற உணர்வுடன் இருக்கிறானே, என ஆச்சரியப்பட்டார்.
சாய்பாபா -பகுதி 3

இனிமையான அந்த இசை எங்கிருந்து வந்தது என கொண்டமராஜூவுக்கு புரியவில்லை. அதே நேரம் ஈஸ்வரம்மாவின் கணவர் வெங்கப்பராஜூவின் கனவிலும் அதே இசை கேட்டது. அவர் கலக்கமடைந்தவராய் மறுநாள் ஜோதிடர் இல்லத்திற்கு சென்றார். என் வீட்டில் கேட்கும் அந்த இசை எங்கிருந்து வருகிறது? என்றார். உங்கள் வீட்டில் யாராவது கர்ப்பமாக உள்ளார்களா? என்றார் ஜோதிடர். இதெப்படி அவருக்கு தெரிந்தது. நம் மனைவி அல்லவா கர்ப்பமாக இருக்கிறாள்? கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கும், இசைக்கும் என்ன சம்பந்தம்?. சிந்தித்த வெங்கப்பராஜூவின் முகத்தில் ஓடிய சலனங்களை வைத்தே புரிந்து கொண்ட ஜோசியர், சொல்லுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் அந்த கர்ப்ப ஸ்தீரி யார்? என்றார். என் மனைவி தான்,. நீங்கள் கொடுத்து வைத்தவர். உங்கள் மனைவியின் வயிற்றில் இருக்கும் அந்த குழந்தையை தூங்க வைக்கவே அந்த தேவகானம் எழுகிறது. அது ஒரு தெய்வக்குழந்தை, என்றார் ஜோதிடர். ஆச்சரியம், மகிழ்ச்சி, ஆர்வம் தொற்றிக் கொள்ள வீட்டிற்கு வந்தார் வெங்கப்பர். மனைவியை கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொண்டார். 1926 நவம்பர் 22ம் தேதி இரவில் ஈஸ்வராம்பாவுக்கு பிரசவ வேதனை ஏற்பட்டது. மாமியார் லட்சுமம்மா அருகிலிருந்த அர்ச்சகர் வீட்டில் நடந்த சத்யநாராயண பூஜைக்கு சென்றிருந்தார். மருமகளுக்கு பிரசவ வேதனை ஏற்பட்ட செய்தியை வேலைக்காரனிடம் சொல்லி அனுப்பினர். அவர் பிரசாதம் பெற்றுக் கொண்டு வருவதாக சொல்லி விட்டார். சற்று நேரத்தில் பிரசாதத்துடன் வீட்டுக்கு வந்தார். மருமகளுக்கு கொடுத்தார்.

கவலைப்படாதே! நிச்சயமாய் ஆண்மகன் பிறப்பான். அவன் உலகத்திற்கே சொந்தமானவனாக விளங்குவான், என்றார். நவம்பர் 23ம் தேதி காலை 5.06 மணிக்கு பிரசவம் நிகழ்ந்தது. பூவுலகம் மகிழ அவதரித்தார் தெய்வமகன் பாபா. அந்த வீட்டில் உள்ளவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அன்று கார்த்திகை மாதம் திங்கள்கிழமை திருவாதிரை நட்சத்திரம். பொதுவாக குழந்தை பிறந்ததும் என்ன செய்யும்? வீறிட்டு அழும். இந்தக்குழந்தையும் அழுதது. ஆனால் மெல்லிய குரலில் சிறிது நேரம் அழுது விட்டு ஓய்ந்து விட்டது. குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் பக்கத்து வீட்டில் உள்ளவர்களெல்லாம் பார்க்க வந்தனர். அதிலும் அவர்களுக்கு அடுத்து, இரண்டாவது வீட்டில் வசித்த சுப்பம்மாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஜாதி வித்தியாசம் பாராத பெண்மணி அவர். அவரது கணவர் தான் அவ்வூர் கர்ணம். இந்த தம்பதியருக்கு குழந்தை இல்லை. அதனால் குழந்தையைக் கண்டதும் அள்ளி, அணைத்து கொஞ்ச ஆசைப்பட்டு ஓடோடி வந்தார். அங்கே ஒரு அதிசயம் நிகழ்ந்து கொண்டிருந்தது. பிரசவம் பார்த்த பெண் ஈஸ்வரம்மாவின் அருகில் கிடந்த குழந்தையைக் கவனித்தாள். குழந்தை படுத்திருந்த துணி மேலும் கீழும் அசைந்தது. ஏதோ மன பிரமை என நினைத்தவளின் கண்களில் திரும்பவும் துணி ஆடுவது தெரிந்தது. என்ன இது! துணி மேலும் கீழும் ஆடுகிறதே! குழந்தையும் மேல் நோக்கி எழுந்து தாழ்கிறதே! என சந்தேகப்பட்டவளாய், குழந்தையை தூக்கினாள். துணியின் அடியில் ஒரு பாம்பு சுருண்டு படுத்துக் கிடந்தது. துணியை தூக்கியவுடன் அது சென்று விட்டது. பயமும், வியப்பும் மேலிட பாம்பை பார்த்தாள் பிரசவம் பார்த்த பெண். ஆனால் அந்தப் பாம்பு நாராயணனை சுமக்க வந்த ஆதிசேஷன் போன்றது என்பதை அவளால் அறிய முடியவில்லை. இவ்வூருக்குள் பாம்பு வருவது சகஜம் என்ற அளவிலேயே எடுத்துக் கொண்டாள். சத்ய நாராயண பூஜை நேரத்தில் பிறந்ததால் குழந்தைக்கு, சத்யநாராயணன் என பெயர் வைத்தனர்.

சத்யா என்பது அவனது செல்லப்பெயர். சத்யாவின் அழகை கண்டு விரும்பி அவனைப் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாரும் தூக்கி சென்று கொஞ்சுவார்கள். இருப்பினும் கர்ணம் மனைவி சுப்பம்மாள் வீட்டில் தான் சத்யா நீண்ட நேரம் இருப்பான். வீட்டிற்கு வந்தால் தாத்தா கொண்டமராஜூவிடம் இருப்பான். அவர் தனியாக ஒரு கூரை அமைத்து அங்கு தங்கியிருந்தார். அங்கு தான் பூஜைகளைச் செய்வார். நம் வீட்டில் பூஜை நடக்கும் போது நம் குழந்தைகள் விளக்கை இழுக்கும். குங்குமத்தை கொட்டி விடும். தீப்பெட்டியை எடுத்து விளையாடும். இப்படி குழந்தைகள் செய்யும் எந்த சேஷ்டையையும் செய்வதில்லை சத்யா. அமைதியே வடிவாக இருப்பான். தாத்தா செய்யும் பூஜைகளை அந்த சின்ன வயதிலும் கூர்ந்து கவனிப்பான். அவன் அறைக்குள் இருந்தால், தாத்தாவுக்கும் பூஜை செய்யும் போது தனி பலமே வந்தது போல இருக்கும். விறுவிறுவென ஏற்பாடுகளைச் செய்து பூஜையைக் கவனிப்பார். சத்யா பிறந்து 9 மாதம் ஓடி விட்டது. அமைதியே வடிவாய் இருக்கும் தன் குழந்தையை பார்த்து தாய் ஈஸ்வராம்பாவுக்கு சற்று கலக்கமும் ஏற்படுவதுண்டு. அழக்கூட செய்வதில்லையே இந்தக் குழந்தை. இவன் ஏன் இப்படியே இருக்கிறான்?. மற்ற குழந்தைகளைப் போல துறுதுறுவென இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? என்று எண்ணியபடியே சமையலறையில் பால் காய்ச்சி கொண்டிருந்தார். சற்று நேரத்தில் வழக்கத்திற்கு மாறாக தொட்டிலில் கிடந்த குழந்தை அழுதது. அழுகை நிற்கவில்லை; அதிகரித்தது. ஈஸ்வராம்பாவுக்கு சந்தேகம். அழாத குழந்தை வீறிட்டு அழுகிறது. பூச்சி எதுவும் கடித்து விட்டதா? குழந்தைக்கு வயிறு வலிக்கிறதா? பெற்ற தாயின் மனம் பரபரத்தது. அவர் கலங்கிப் போய், சத்யா ஏண்டா அழுகிறாய்? என்றவராய், சமையல்கட்டிலிருந்து வெளியே வந்து தொட்டிலைப் பார்த்தார். அப்படியே அதிர்ச்சியில் உறைந்து விட்டார். அங்கே....?
சாய்பாபா - பகுதி 2

ஈஸ்வராம்பாவுக்கு சற்று நடுக்கம். என்ன இது! இப்படி ஒரு தேஜஸான ஒளி...! இது ஏன் என்னை நோக்கி பாய்ந்து வருகிறது? கலவரப்பட்ட அந்தத் தாய் அந்த ஒளியின் சக்தியை தாங்க முடியாமல் மயங்கி விட்டார். முதல் மூன்று குழந்தைகளுக்கு பிறகு நான்காவதாக ஒரு ஆண் மகன் பிறக்க வேண்டும் என்பது ஈஸ்வராம்பாவின் விருப்பம். ஆனால் அடுத்தடுத்து நான்கு முறை கருவுற்றாலும் கர்ப்பம் கலைந்து விட்டது. ஈஸ்வராம்பா மிகவும் மன வருத்தமடைந்தார். அவரது மாமியார் லட்சுமம்மா தன் மருமகள் மீது உயிரையே வைத்திருந்தார். உலகத்தில் உள்ள மாமியார்களெல்லாம் தன் மருமகளை நடத்தும் முறை பற்றி லட்சுமம்மாவிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு மருமகள் மெச்சும் மாமியார் அவர்.தெய்வக் குழந்தை பிறக்கப்போகும் அந்த வீட்டில் இருந்தவர்களின் குணமும் தெய்வீகமானதாகவே இருந்தது. லட்சுமம்மா தன் மருமகள் கருவுற பகவானை பிரார்த்தித்தபடியே இருந்தார். ஒருமுறை ஒரு வீட்டிற்கு சென்றிருந்த போது, அங்கு சத்தியநாராயண பூஜை நடந்தது. அந்த பூஜை மிகவும் விசேஷமானதாகும். பக்தி சிரத்தையுடன் அதை நடத்தினால் நல்லதை தவிர வேறெதுவும் நடக்காது. அந்த பூஜையில் கலந்து கொண்ட லட்சுமம்மா, இருக்கும் விரதங்களுடன் இந்த விரதத்தையும் தன் வீட்டில் மேற்கொண்டார்.

அர்ச்சகர் ஒருவர் இதை மிகவும் சிறப்பாக நடத்தி தந்தார். ஒருமுறை லட்சுமம்மாவின் கனவில் தோன்றிய சத்தியநாராயணர், உன் வீட்டில் ஒரு அற்புதம் நிகழப் போகிறது,என கூறி இருந்தார். இந்த நேரத்தில் தான் இந்த நீல ஒளி அற்புதம் நிகழ்ந்தது. அந்த ஒளி ஈஸ்வராம்பாவின் வயிற்றில் அணுஅணுவாய் இறங்கியது. கிணற்றடியில் மயங்கிஇருந்த ஈஸ்வராம்பா சற்று நேரத்தில் எழுந்தார். அவரது மாமியார் அவரை ஏற்கனவே எச்சரித்திருந்தார். இதுபோல ஏதாவது அற்புதம் நடந்தால் நீ அஞ்ச வேண்டாம் மருமகளே, என சொல்லி இருந்ததால், ஈஸ்வராம்பா இதுபற்றி முதலில் பயந்தாலும் பின்பு சுதாரித்துக் கொண்டார். சிறிது காலத்தில் கர்ப்பமாகவும் ஆனார். மருமகள் கர்ப்பமானதை அறிந்து லட்சுமம்மா பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவர் பூஜை, புனஸ்காரங்களில் இன்னும் தீவிரமாக ஈடுபட்டார். ஈஸ்வராம்பாவை அனைவரும் அன்புடன் கவனித்துக் கொண்டனர். அப்போது தான் அந்த கிராமத்திற்கு வந்தார் வெங்காவ தூதர். ஏற்கனவே வெங்காவதூதர் என்ற பக்திமானின் வம்சத்தவரேகொண்டம ராஜூவின் குடும்பத்தினர். அவரைப் போலவே பெயர் கொண்ட ஒருவர் வந்ததும், கொண்டமராஜூ மகிழ்ச்சி கொண்டார்.

மகாராஷ்டிராவில் இருந்து வந்த அவரது பிரசங்கம் நகைச்சுவையாக இருக்கும். இதற்காகவே மக்கள் அவரைச் சுற்றி சுற்றி வருவார்கள். கடவுள் மனிதனுக்கு கொடுத்தமிகப் பெரிய வரப்பிரசாதம் நகைச்சுவை. இதை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் கூட்டம் என்றுமே அதிகமாக இருந்திருக்கிறது. இப்போதும் இருக்கிறது. ஒருநகைச்சுவை பட்டிமன்றம் என்றால் கூட எவ்வளவு கூட்டம் கூடுகிறது என்பது நாம் அறிந்தது தான். கொண்டமராஜூ அவரது பிரசங்கத்தை தவறாமல் கேட்கச் செல்வார். ஒருமுறை வெங்காவ தூதர், கொண்டமராஜூவை ஒரு தனியிடத்தில் சந்தித்தார். அவரது கையைப் பிடித்தார். பேச வாய் வரவில்லை. இருப்பினும் நா தழுதழுக்க, ராஜூ!  நாராயணன் இங்கு அவதரிக்க போகிறார். அதற்காக காத்திரு, என காதோரமாக சொன்னார். கொண்டமராஜூவும் தலை அசைத்தார். ஆனால் எங்கே எப்படி நாராயணன்அவதாரம் எடுக்கப் போகிறார் என்பது அவருக்கு புரியவில்லை. அந்த நேரத்தில் கொண்டமராஜூவின் வீட்டில் விசித்திரமான சம்பவங்கள் நிகழ்ந்தன. அவர் வீட்டில் இரவு நேரத்தில் இனிய இசை ஒலித்தது. வெங்கப்பராஜூ நாடகங்கள் மீது அபிமானம் கொண்டவர். அவரது வீட்டில் நாடக ஒத்திகைகள் நடந்து கொண்டிருக்கும். நாடகத்துக்காக யாரோ இசைக்கருவிகளை மீட்டுகிறார்களோ என அந்த அறையைப் போய் பார்த்தால் அங்கு யாருமே இல்லை. கொண்டமராஜூ அதிர்ச்சி அடைந்தார். அப்படியானால் அந்த தெய்வீக இசை எங்கிருந்து வந்தது? அதை மீட்டியவர் யார்?