திங்கள், 14 அக்டோபர், 2013

படலம் 97: எட்டு திசை நாயகர்களை தான செய்யும் முறை

97வது படலத்தில் 8 லோக பாலகர்களின் தான விதி கூறப்படுகிறது. துலாரோஹதான விதியில் கூறப்பட்டுள்ள இடம் காலம் இவைகளில் அவ்வாறே அந்தந்த விதியில் கூறப்பட்டுள்ளபடி நிர்மாணிக்கப்பட்ட வேதிகை, மண்டலம், குண்டம், இவைகளுடன் கூடிய மண்டபத்தில் அந்த படலத்தில் கூறியுள்ள முறைப்படியே சிவ பூஜை ஹோமம் செய்து நல்ல லக்ஷணத்துடன் கூடிய எட்டு சிவாச்சாரியர்களை கூப்பிட்டு புதிய வஸ்திரத்தின் மேல் வடக்கு முகமாக அமர்த்தி அவர்களை சந்தனம், புஷ்பம் இவைகளால் அஷ்டதிக்பாலக மந்திரங்களாலும் பூஜிக்கவும் என கூறப்படுகிறது. வேறு ஒருமுறை கூறப்படுகிறது. பிறகு அந்த சிவாச்சாரியர்களுக்கு வஸ்திரம் ஆபரணங்கள் வாசனை திரவ்யங்கள் கம்பளம் முதலியவைகளை கொடுக்கவும். ஆபரணங்களுடன் கூடி நூறு நிஷ்கத்துடன் கூடியதாக தட்சிணைகள் கொடுக்கவேண்டும் என கூறப்படுகிறது. இங்கு சொல்லப்படாத எந்த சிறிய முறை உண்டோ அதை துலாரோக விதிப்படி செய்யவும். முடிவில் திக்பாலகர்களின் தானம் எல்லா சம்பத்தையும் ஸம்ருத்தியாக கொடுக்கக் கூடியதாகவும் பிறரால் ஏவப்பட்ட சக்ரங்களை அழிக்க வல்லதாகவும் யானை குதிரை இவைகளை விருத்தி செய்வதாகவும், குழந்தையை கொடுக்கக் கூடியதும், ராஜ்யத்தை அபிவிருத்தி செய்வதாகவும், பசு பிராம்ணர்கள் இவர்களுக்கு சுகத்தை கொடுக்கக் கூடியதுமாக ஆகும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு 97வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. பிறகு எட்டு திக்பாலகர்களின் தானம் கூறுகிறேன். முன்பு கூறப்பட்ட இடம், காலத்தில் வேதிகை, மண்டலத்துடன் கூடிய இடத்தில்

2. குருவானவர் முன்பு போல் சிவபூஜையும், ஹோமமும் செய்து எல்லா அமைப்பும் உள்ள எட்டு ஆதி சைவர்களை அழைத்து

3. வடக்கு முகமாக அமர்த்தி, புதிய வஸ்திரங்களை உடுத்தியவர்களாக சந்தனம், புஷ்பம் இவைகளாலும் திக்பால மந்திரங்களாலும் பூஜிக்க வேண்டும்.

4. ஒரு குண்டம் அல்லது ஸ்தண்டிலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். ஆபரணங்களுடன் கூடியதாக பத்து நிஷ்க அளவுள்ள தட்சிணையை கொடுக்க வேண்டும்.

5. ஆஸனம், கம்பளம், வஸ்திரம், உத்தரீயங்களையும் கொடுக்கவும். இங்கு கூறப்படாதது ஏதாவதிருப்பின் துலாபார விதிப்படி செய்ய வேண்டும்.

6. எல்லா ஸமிருத்தியான ஐஸ்வர்யத்தை கொடுக்கக்கூடிய லோக பாலதானம் இவ்வாறாகும். இது பிறரால் ஏவப்பட்ட சக்கரங்களை அழிக்க வல்லதும் யானை குதிரை இவைகளை விருத்தி செய்வதும் ஆகும்.

7. புத்ரனை கொடுக்கக் கூடியதும், அபிவ்ருத்தியான ராஜ்யத்தை கொடுக்கக் கூடியதும் பசு, பிராம்மணர்களுக்கு நலத்தை கொடுக்கக் கூடியதும் ஆகும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்த்ரத்தில் லோகபாலாஷ்டக தான முறையாகிற தொன்னூற்றியேழாவது படலமாகும்.
படலம் 96: யானையை தானம் செய்யும் முறை

96வது படலத்தில் யானையை தானம் செய்யும் முறை கூறப்படுகிறது. ஆயிரம், ஐநூறு, இருநூற்றி ஐம்பது, 100, 50, 125, 108, என்ற இந்த அந்த எண்ணிக்கையில் தங்கத்தாலோ, வெள்ளியாலோ, லக்ஷண முறைப்படி யானை செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு துலாரோஹதான முறைப்படி வேதிகை குண்டம், மண்டலம் இவைகளுடன் கூடியதாக மண்டபம் அமைத்து அதன் மத்தியில், கஜேந்திரனை வைத்து சந்தனம், புஷ்பம் இவைகளால் பூஜிக்க வேண்டும். துலாரோஹதான முறைப்படி சிவனை பூஜித்து ஹோமம் செய்யவும். சிரத்தையுடன் கூடி யானையை சிவனுக்கும் சிவபக்தனுக்கும் கொடுக்க வேண்டும், அங்கு கூறப்படாத எல்லா கர்மாவையும் துலாபார விதியில் கூறியபடி அனுஷ்டிக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. இவ்வாறாக 96வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. பிறகு யானை தானத்தை பற்றி கூறுகிறேன். பிரம்மணோத்தமர்களே அந்த யானையானது தங்கத்தாலோ அல்லது வெள்ளியாலோ நிர்மாணிக்க வேண்டும்.

2. ஆயிரம் ஸ்வர்ணங்களாலோ, அல்லது ஐநூறு தங்கத்தாலோ அல்லது இருநூற்றி ஐம்பது தங்கத்தாலோ அல்லது நூற்றி இருபத்தி ஐந்து தங்கத்தாலோ அல்லது நூற்றிஎட்டு ஸுவர்ணங்களாலோ யானையை நிர்மாணிக்க வேண்டும்.

3. முன்பு போல் வேதிகை மண்டலம் நிர்மாணித்து இவற்றுடன் மண்டபத்தை நிர்மாணித்து அதன் நடுவில் யானையை பிரதிஷ்டை செய்து சந்தனம் புஷ்பம் இவைகளால் பூஜிக்க வேண்டும்.

4. முன்பு போல் சிவபூஜை செய்து விசேஷமாக ஹோமம் செய்ய வேண்டும். பிறகு சிவார்ப்பணமாக சிரத்தையுடன் சிவபக்தர்களுக்கு தானம் செய்ய வேண்டும்.

5. இதில் கூறாத எல்லாவற்றையும் துலாரோஹ விதிப்படி செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் கஜதான விதியாகிற தொண்ணூற்றி ஆறாவது படலமாகும்.
படலம் 95: தங்க விருஷபதான முறை

95வது படலத்தில் தங்க விருஷபதான முறை சுருக்கமாக கூறப்படுகிறது. இங்கு ஆயிரம், ஐநூறு, இருநூத்தி ஐம்பது, நூற்றி இருபத்தி ஐந்து, நூறு இந்த அளவுள்ள நிஷ்கம் என்ற அளவு முறையில். தங்கத்தால் விருஷபம் செய்து அதன் நெற்றியில் ஸ்படிகத்தினால் அர்த்தசந்திராகாரமான ஆபரணமும் வெள்ளியால் குளம்பும், பத்மராக கல்லால் காதும், கோமேதக கல்லால் திமிழும், கழுத்தில் ரத்தினத்தால் அலங்கரிக்கப்பட்ட கண்டாமாலையும் செய்யவும். வேறு விருப்பத்திற்கு அங்கமாக சலங்கையும் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு துலாரோஹதான முறைப்படி வேதிகை, மண்டலம், குண்டம் இவைகளுடன் கூடியதாக அமைத்து மண்டலம், அதன் மத்தியில் விருஷபரை மேற்கு முகமாக ஸ்தாபிக்கவும். விருஷப காயத்திரியால் பூஜிக்கவும் துலாரோகன விதியில் கூறப்பட்டுள்ளபடி சிவபூஜை ஹோமம் செய்யவும். பிறகு அங்கு பூஜித்த விருஷபரை சிவனுக்கும் சிவபக்தர்களுக்கும் கொடுக்கவும். பிறகு சமித்து, ஆஜ்ய, ஹவிஸ்சுடன், கூடி சாந்தி ஹோமமோ செய்யவும் என்று விசேஷமாக கூறப்படுகிறது. இங்கு கூறப்படாத கர்மாவை துலாபார முறைப்படி தேசிகன் அனுஷ்டிக்கவும் என்று தங்க விருஷப தான முறையில் செய்முறை விளக்கம் கூறப்படுகிறது. இவ்வாறாக 95வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. தங்கத்தால் செய்யப்பட்ட வ்ருஷபத்தின் தானம் இப்பொழுது சுருக்கமாக சொல்லப்படுகிறது. ஆயிரம் ஸ்வர்ணத்தாலோ ஆயிரம் நிஷ்கத்தாலோ அல்லது அதில் பாதியோ (ஐநூறு)

2. அதில் பாதி இருநூற்றி ஐம்பதோ அதில் பாதி நூற்றி இருபத்தி ஐந்தோ அல்லது நூற்றி எட்டு ஸ்வர்ணத்தாலோ லக்ஷணத்துடன் கூடிய வ்ருஷபத்தை நிர்மாணிக்க வேண்டும்.

3. நெற்றியில் ஸ்படிகத்தால் அஷ்டமீ சந்திரன் போன்ற ஒளி உள்ளதும் வெள்ளியால் ஆன குளம்பையும் பத்மராகத்தால் காதுகளிலும், தோள்பாகம் கோமேதகத்தாலும்

4. கழுத்தில் மணிகளின் மாலையையும் ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்டும் சலங்கை மாலைகளுடன் கூடியதாகவும் வ்ருஷபத்தின் அவயவங்களை நிர்மாணிக்க வேண்டும்.

5. முன்பு போல் வேதிகை, மண்டலத்துடன் மண்டபம் அமைத்து அதன் நடுவில் மேற்கு முகமாக வ்ருஷபத்தை வைக்க வேண்டும்.

6. வ்ருஷபத்தை காயத்ரி மந்திரத்தால் பூஜிக்க வேண்டும். வ்ருஷபத்தின் மேலே பரமேஸ்வரனை வைத்து முன்பு போல் சிவபூஜையையும் விசேஷமாக ஹோமத்தையும் செய்ய வேண்டும்.

7. ஆசார்யன் ஸமித்து, நெய், ஹவிஸ் இவற்றுடன் சாந்தி ஹோமத்தையோ செய்ய வேண்டும். மிகப் பெரியதான வ்ருஷபத்தை சிவனின் பொருட்டு சிவ பக்தர்களுக்கு தானம் செய்ய வேண்டும்.

8. இங்கு எது சொல்லப்படாமல் விடப்பட்டதோ அதை துலாபாரத்தில் கூறியபடி அனுஷ்டிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் தங்க வ்ருஷப தானம் செய்யும் முறையாகிய தொன்னூற்றைந்தாவது படலமாகும்.
படலம் 94: கன்னிகாதான முறை

94வது படலத்தில் கன்னிகாதான முறை கூறப்படுகிறது. பிறகு எல்லா தானத்திற்கும் மேன்மையான கன்னிகாதானம் கூறுகிறேன் என்று பிரதிக்ஞை செய்கிறார் யஜமானன். ஸர்வ லக்ஷணம் உடைய தோஷம் இல்லாத வேறு கோத்திரத்தில் உன்டான தனக்கு அனுகூலமான தினத்தில் பிறந்த கன்னிகையை அவர்களுடைய தந்தையரிடம் இருந்து சொல்லப்பட்ட முறைப்படி இவர்களின் மனதை அறிந்து தனம் முதலானவற்றை கொடுத்து ஸ்வீகரித்து அவளை தன்னுடைய புத்திரியாக ஆக்கி அவளுக்கு ஸ்னாநம் செய்வித்து, சந்தனம், புஷ்பம், ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு முறைப்படி தானம் செய்யவும் என்று கன்யாதான முறை கூறப்படுகிறது. பிறகு துலாபார முறைப்படி வேதிகை குண்டம் மண்டலத்துடன் கூடிய மண்டபம் அமைத்து அதில் முறைப்படி செய்த ஹோமத்தினால் பரமேஸ்வரனை பூஜிக்கவும். பிறகு ஜோஸ்யரால் கூறப்பட்ட சாந்தம், சிவபக்தியுடன் கூடிய, வரனை ஈஸ்வர புத்தியோடு சந்தனம், புஷ்ப மாலைகளாலும், பஞ்சாங்க பூஷணங்களாலும் பூஜித்து அந்த வரனின் பொருட்டு வஸ்திரம் பூமி தனம், இவைகளுடன் கூடியதாகவும், வீட்டிற்கு உபயோகமான பொருளோடும், தாசி, தாசனுடன் கூடிய கன்னிகையை சிரத்தையோடு சிவனை ஸ்மரித்து கொடுக்கவும் என்று கன்னியாதான விதியில் செய்முறை விளக்கம் கூறப்படுகிறது. முடிவில் இவ்வாறு யார் கன்னிகாதானம் செய்கிறானோ அவன் கன்னிகையின் மேல் எவ்வளவு ரோமம் இருக்கிறதோ அவ்வளவு எண்ணிக்கை உள்ள நூறு வருஷம் சுகமாக இருப்பான் என்று பலஸ்ருதி கூறப்படுகிறது. இவ்வாறாக 94வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. எல்லா தானத்தை காட்டிலும் சிறந்ததான கன்யகா தானத்தை கூறுகிறேன். பிராம்மணோத்தமர்களே எல்லா லக்ஷணத்துடன் கூடியவரும் குற்றமற்றவளும்

2. வேறு கோத்ரத்தில் பிறந்தவளும் நல்ல சுப தினத்தில் பிறந்தவளுமான கன்னிகையை பணம் முதலியவைகளை கொடுத்து, பெண், மாப்பிள்ளை இவர்களின் முன்னோர் பேர்களை கூறி

3. ஒருவருக்கொருவர் மனம்புரிந்து கொண்டு பெண்ணை தன் சொந்த பெண்ணாக பாவித்து மங்கள ஸ்நானம் செய்வித்து சந்தனம், பூமாலை, ஆபரணங்கள் பட்டு புடவைகளுடனும்

4. அலங்கரித்து க்ருஹஸ்தாச்ரம தர்மத்தை அனுஷ்டிப்பதற்கு அனுகூலமாய் இருப்பதற்கு கன்யகா தானம் முறைப்படி செய்ய வேண்டும். முன்பு போல் வேதிகை மண்டலம் இவற்றுடன் கூடியதாய் மண்டபம் அமைத்து

5. அங்கு பரமேஸ்வரனை ஆராதித்து முன்பு போல் ஹோமம் செய்யவும். அமைதியானவரும் கன்யா தானத்திற்காக வரிக்கப்பட்டவரும் சிவபக்தியுள்ள வரனை

6. ஐந்து அங்கத்தின் அணிகலன்களுடன் கூடிய வரும் சந்தனம் புஷ்பமாலை இவைகளால் அலங்கரிக்கபட்டவரும் வஸ்திரம் பூமி ஐஸ்வர்யம் கூடி பரமேஸ்வரனாக பூஜித்து பாவித்து

7. வீட்டுக்கு வேண்டிய உபகரணங்களுடன் மிகவும் பொறுப்பாக வேலைகாரர்களுடன் கன்னிகையை சிவனாக பாவிக்கப்பட்ட வரனுக்கு கொடுக்க வேண்டும்.

8. பிராம்மனோத்தமர்களே! இவ்வாறாக எவன் கன்னிகா தானம் செய்கிறானோ அவனுடைய அந்த கன்னிகை சுகத்தை அடைகிறான். அந்த கன்னிகையின் சரீரத்தில் எவ்வளவு ரோமங்கள் உள்ளனவோ அந்த எண்ணிக்கையில் நூறு வர்ஷகாலம் சுகமாக இருக்கிறான்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் கன்யாதானம் செய்யும் முறையாகிற தொன்னூற்றி நான்காவது படலமாகும்.
படலம் 93: தங்கக்குதிரை தானம் செய்யும் முறை

93வது படலத்தின் தங்கக்குதிரை தானம் செய்யும் முறை கூறப்படுகிறது. முதலில் இந்த ஆகமத்தில் வெற்றிக்காக சொல்லப்பட்ட தங்க குதிரை தானம், பத்தாயிரம் அஸ்வமேதயாக பலத்தைவிட உயர்ந்ததான பலத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. பிறகு ஆயிரத்தி எட்டு, ஐநூற்றி நான்கு, 52, 108 கணக்குள்ள தங்கத்தால் லக்ஷணத்துடன் கூடிய குதிரை செய்து, அதன்மேல் வெள்ளியால் பஞ்ச கல்யாணம் என்ற அங்க அழகை செய்யவும். பிறகு துலாபாரதான முறைப்படி வேதிகை, குண்டம், மண்டலம் அமைத்து அதன் மத்தியில், தங்கத்தால் செய்யப்பட்டதும் ஸர்வ அலங்காரம் உடையதுமான அந்த குதிரையில் உச்சை ஸ்ரவஸ் என்று பெயர் இட்டு பூஜிக்க, மண்டல பூஜை, ஹோமம், கலசஸ்தாபனம் முதலியவை துலாரோஹண முறைப்படி செய்து, இந்திர புத்தியுடன் சந்தனம், முதலியவைகளால் பூஜித்து பிராம்ணர்களுக்கு ஐந்து நிஷ்கம் தங்க தானம் செய்து அந்த குதிரையை தானம் செய்யவும். ஏழை, குருடு, கருமி, அனாதை இவர்களுக்கு உணவு அளித்தல் முதலியவைகளால் சந்தோஷிக்கவும் என கூறப்படுகிறது. இவ்வாறு 93வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. வெற்றிக்காக தங்க குதிரை தானம் பற்றி கூறப்படுகிறது. பத்தாயிரம் அச்வமேத யாக பலனைவிட மிகவும் உயர்ந்ததாக கூறப்படுகிறது.

2. ஆயிரத்தெட்டு அதில்பாதி ஐநூறு, அதில் பாதி இருநூற்றி ஐம்பது, அல்லது நூற்றி எட்டு அளவுள்ள தங்கத்தினால் லக்ஷணத்துடன் கூடியதாக குதிரையை அமைக்க வேண்டும்.

3. வெள்ளியால் பஞ்ச கல்யாணி அடையாளத்தை செய்யவும், கலைகளால் எல்லா அலங்காரத்துடன் கூடியதாகவும்,

4. வேதிகை மண்டலத்துடன் முன்புபோல் மண்டபம் தீர்மானித்து அதன் நடுவில் உச்சை ச்ரவஸ் என்று பெயருள்ள குதிரையை செய்து வைக்க வேண்டும்.

5. சந்தனம் புஷ்பம் முதலியவைகளால் பூஜித்து பிராம்மணர்களுக்கு குதிரையை கொடுக்கவும். பிராம்மணர்களை தேவேந்திரனாக பாவித்து ஐந்து நிஷ்கம் தங்கத்தை கொடுக்க வேண்டும்.

6. ஏழை குருடானவன், கருமி, அனாதை இவர்களை உணவு முதலியவைகளால் திருப்தி செய்து, மண்டலார்ச்சனை, கலசஸ்தாபனம் ஹோமம் முதலியவற்றை செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் ஹிரண்யாச்வப்ரதான முறையாகிய தொன்னூற்றி மூன்றாவது படலமாகும்.
படலம் 92: ஆயிரம் பசுக்கள் தானம் செய்யும் முறை

92வது படலத்தில் ஆயிரம் பசு தானம் செய்யும் முறை கூறப்படுகிறது. முதலில் ஸித்தியின் பொருட்டு ஆயிரம் எண்ணிக்கை உள்ள பசுக்களின் தானம் கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. கன்றுக் குட்டியுடன் கூடியதும் நல்ல குணங்களை உடையதுமான பசுக்களை தானம் செய்ய ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். அவைகளில் நல்ல குணமுடைய எட்டு பசுக்களை பூஜிக்கவும் அவைகளின் கொம்புகளில் நிஷ்க அளவுடைய தங்கமும் வெள்ளிக் குளம்பும் கழுத்தில் தங்கத்தால் நிஷ்க அளவுள்ள பட்டையும் கட்டி அவைகளுக்கு புல் கொடுக்கவும் என கூறப்படுகிறது. துலாரோஹண விதிப்படி வேதிகை, மண்டலம், குண்டம் இவைகளுடன் கூடிய மண்டபம் அமைக்கவும். துலாபார முறைப்படி சிவ ஆராதனமும் ஹோமமும் செய்யவும். பரமேஸ்வரனுக்கு ஸஹஸ்ர கலச அபிஷேகம் செய்து பெரிய பூஜை செய்யவும். பிறகு சிவனுக்கும், சிவ பிராம்ணர்களுக்கும் தட்சிணைகளுடன் கூடிய பசுக்களை கொடுக்க வேண்டும் என கூறி தட்சிணை கூறப்படுகிறது. பிறகு தான காலத்தில் கர்த்தா சொல்ல வேண்டிய ஸ்லோகம் சொல்லப்படுகிறது. முடிவில் இங்கு சொல்லப்படாத எந்த கர்மா உண்டோ அதை துலாரோஹண முறைப்படி செய்யவும் என கூறப்படுகிறது. இவ்வாறாக 92வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. விருப்பத்தையடையும் பொருட்டு ஆயிரம் எண்ணிக்கையுள்ள பசுக்களை தானம் செய்யும் முறைப்பற்றி கூறுகிறேன். அவைகள் கன்று குட்டியுடனும் நல்ல குணத்துடனும் உள்ளதாகவே ஏற்கப்பட வேண்டும்.

2. எட்டு பசுக்களை கீழ்கண்டவாறு பூஜிக்கவும். ஒவ்வொரு கொம்பிலும் நிஷ்க அளவு ஸ்வர்ணத்தால் கொம்பும் வெள்ளியால் குளம்புமோ கட்டப்படவேண்டும்.

3. கழுத்தில் நிஷ்க அளவால் தங்கப்பட்டம் கட்டி பயிர்களை கொடுக்கவும். வேதிகை மண்டலத்துடன் கூடியதாக மண்டபம் அமைத்து

4. முன்பு போல் சிவபூஜையையும் ஹோமத்தையும் செய்ய வேண்டும். பிறகு சிவனுக்கு ஆயிரத்தி எட்டு கலசங்களால் ஸ்நபனம் செய்ய வேண்டும்.

5. சிவனின் பொருட்டு (சிவனுக்காக) ஆதி சைவர்களுக்கு தட்சிணையுடன் கூடியதாக பசுவை தானம் செய்யவும். தட்சிணையானது பத்து நிஷ்கமோ அதில் பாதி 5, அதில் பாதியோ (இரண்டரை), ஒரு நிஷ்கமோ கொடுக்க வேண்டும்.

6. கர்த்தாவானவன் தானம் செய்யும் காலத்தில் இந்த ஸ்தோத்ரத்தை சொல்ல வேண்டுமென கூறப்படுகிறது. காவோ மமாக்ரத நித்யம், காவ ப்ருஷ்டத ஏவ மே (பசுக்கள் நித்யம் என் முன்னாலும் பின்னாலும் நிற்கட்டும்)

7. (பசுக்கள் ஹ்ருதயத்தில் நித்யமிருக்கட்டும், பசுக்களின் மத்தியில் நான் வசிக்கிறேன்) காவோ மே ஹ்ருதயம் நித்யம் கவாம் மத்யே வஸாம்யகம் என்று கூறவும். இங்கு சொல்லப்படாத க்ரியையை துலாபார விதியில் சொல்லப்பட்டுள்ளபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் ஸஹஸ்ர கோதானம் செய்யும் முறையாகிற தொன்னூற்றி இரண்டாவது படலமாகும்.
படலம் 91: திலதேனுதான விதி

91வது படலத்தில் திலதேனுதான விதி கூறப்படுகிறது. பிறகு எல்லா விருப்பத்தையும் கொடுக்கக்கூடிய திலதேனு தான விதி கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. துலாரோஹண முறைப்படி வேதிகை, குண்டம், மண்டலம் இவைகளுடன் கூடிய மண்டபம் அமைக்கவும். மண்டபத்திற்கு முன்பாக, 8 மரக்காலாமோ 8 படியாலோ எள்ளினால் எள்ளு ரூபமான தாமரை அமைக்கவும். அந்த எள் தாமரையை வஸ்திரத்தால் மூடி அதற்கு மத்தியில் மூன்று, பத்து நிஷ்கம், பதினைந்து நிஷ்கம் ஏழரை நிஷ்கம் இந்த அளவினாலோ அல்லது ஐந்து நிஷ்கத்தினாலோ தங்கத்தினால் கர்ணிகை என்கிற பாகம் தண்டு இவைகளால் அலங்கரிக்கப்பட்ட தங்க தாமரை செய்து வைக்கவும். அதற்கு வடக்கு பாகத்தில் 11 பிராம்ணர்களை 11 ருத்திரர்களாக ஸ்மரித்து ஆவாஹணம் செய்து பூஜிக்கவும். கிழக்கு பாகத்தில் 12 பிராம்ணர்களை 12 சூரியன் மந்திரங்களால் பூஜிக்கவும். தெற்கு பாகத்தில் 8 பிராம்ணர்களை வித்யேஸ்வரர்களாக நினைத்து பூஜிக்கவும். பிறகு 16 நபர் என்று கூறி நினைக்க வேண்டும் என்பதாக தேவதைகளின் பெயரை கூறாமல் 16 பிராம்ணர்களை வித்யேஸ்வரர்களுடன் கூட தெற்கு பாகத்தில் பூஜிக்க வேண்டும் என கூறப்படுகிறது. இந்த படலத்தில் 12வது ஸ்லோகத்தில் மூர்த்தி வித்யேச தானந்து என்று கூறப்படுவதால் இங்கு மூர்த்திகளையும் பூஜிக்க வேண்டும் என தெரிகிறது. ஆனால் அந்த மூர்த்திகள் யார் யார் என்று விளக்கப்படவில்லை. பிறகு முன்பு குறிப்பிட்டுள்ளபடி அந்தந்த மந்திரங்களால் பூஜை செய்து அந்த பிராம்ணர்களுக்கு வஸ்திரம், பஞ்சாங்க பூஷணம் முதலியவைகள் கொடுக்க வேண்டும், பிறகு ஒவ்வொருவர்களுக்கும் புதிய வஸ்திரத்தில் 1 படி அளவு எள்ளை வைத்து அந்த எள்ளுடன் கூடிய வஸ்த்திரத்தை வெங்கல பாத்திரத்தில் வைத்து அந்த பாத்திரத்தை, கரும்பு புதிய பழங்கள் இவைகளுடன் தங்க கொம்பு, வெள்ளிக்கொம்பு, இவை உடைய ஆரோக்யமான் பசுவை அந்த பிராம்ணர்களுக்கு கொடுக்க வேண்டும். துலாரோஹன விதியில் கூறப்பட்டுள்ளபடி சாதாரண பூஜை, ஹோமம், பரமேஸ்வரர் விஷயத்தில், ஸஹஸ்ர கலசங்களால் ஸ்நபனம் மஹாபூஜை செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. இங்கு ருத்திரன், சூரியன், வித்யேஸ்வரன் மூர்த்தி ஆகியவர்களின் தானங்களில் ஒரு வர்கத்தின் தானத்தையே செய்யவும் என்று வேறுமுறை கூறப்படுகிறது. இங்கு சொல்லப்படாததை துலாபார முறைப்படி செய்யவும் என கூறப்படுகிறது. இவ்வாறாக 91வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. எள்ளையும் பசுவையும் தானம் செய்யும் முறையை கூறுகிறேன். அது எல்லா விருப்பத்தையும் பூர்த்தி செய்யும். வேதிகை மண்டலத்துடன் முன்பு போல் நிர்மாணிக்க வேண்டும்.

2. அந்த மண்டபத்தின் முனையில் எள்மயமான தாமரையை நிர்மாணிக்கவும். எள்ளின் அளவு எட்டு மரக்கால் அல்லது பாரம் என்ற ஓர் அளவை உடையதாகும்.

3. வஸ்திரங்களால் அதை மறைத்து அதன் நடுவில் முப்பது நிஷ்க அளவோ அதில் பாதி அளவோ தங்கத்தாலோ

4. ஐந்து நிஷ்க அளவு தங்கத்தாலோ கர்ணிகை, காம்பு இவைகளுடன் கூடியதான தங்க தாமரையை வைக்க வேண்டும். அதன் வடக்கு திசையில் ருத்ர ஸங்க்யையாகிற பதினோரு பிராம்மணர்களை

5. பதினோரு ருத்ரர்களாக பாவித்து ஆவாஹனம் செய்து பூஜிக்க வேண்டும். கிழக்கு திசையில் பன்னிரெண்டு பிராம்மணர்களையும் அதன் மந்திரங்களால் பூஜிக்க வேண்டும்.

6. தெற்கில் எட்டு வித்யேச்வர ரூபமான வித்வான்களான எட்டு நபர்களை பிராம்மணர்களை பூஜிக்க வேண்டும். நான்கு திசைகளிலும் பதினாறு பிராம்மணர்களை சந்தனம் முதலியவைகளால் பூஜிக்க வேண்டும்.

7. அந்தந்த மந்திரங்களால் வஸ்திரத்தையும், ஆவரணதேவதைகளையும் பூஜித்து கண்டம், கைகள், காதுகளில் ஆபரணங்களுடன் கூடிய பிராம்மணர்களுக்கு

8. புது வஸ்த்ரம் ஸமர்ப்பித்து வெண்கல பாத்திரத்தில் மரக்கால் அளவு எள்ளை வைத்து ஒன்பது விதமான பழங்களுடன்

9. கரும்பையும் பசுவையும் தானம் செய்ய வேண்டும். தானம் செய்யப்படும் பசுவானது தங்க கொம்புகளுடன் கூடியதாகவும் வ்யாதி இல்லாததாகவும் வெள்ளி மயமான குளம்புகளை உடையதாகவும்

10. ஒவ்வொரு கொம்பிலும் ஒரு நிஷ்க பிரமாணம் தங்கமும் இரண்டு நிஷ்க பிரமாண தங்கத்துடன் குளம்பும் இருக்க வேண்டும். முன்பு போல் வேதிகை, மண்டலத்துடன் கூடின மண்டபத்தை நிர்மாணிக்க வேண்டும்.

11. முன்பு போல் பூஜை, ஹோமமும் அபிஷேகம் முதலியவைகளும் செய்ய வேண்டும். பதினோரு ருத்ரதானமும் பனிரெண்டு சூர்யதானமும்

12. அஷ்ட வித்யேசதானமும் அதன் அதிகரிப்பால் செய்ய வேண்டும். கழுத்து காதுகள் கைகள் முதலிய பஞ்ச அங்கங்களிலும் ஐந்து நிஷ்க அளவு தங்கத்தால் ஆபரணம் செய்ய வேண்டும்.

13. முன்பு போல் ஆசார்யனுக்கு கூறியபடி தட்சிணையை கொடுக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் திலதேனு தானம் செய்யும் முறையாகிற தொன்னூற்றொன்றாவது படலமாகும்.
படலம் 90: லட்சுமி தான முறை

90வது படலத்தில் லட்சுமிதான முறை கூறப்படுகிறது. முதலில் அதிகமான ஐஸ்வர்ய ஸித்திக்காக. லட்சுமிதானம் பற்றி கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. முதலில் ஆயிரம், ஐநூறு, இருநூற்றி ஐம்பது நூற்றி இருபத்தி ஐந்து, நூற்றி எட்டு, இந்த கணக்குள்ள நிஷ்கம் என்ற அளவுள்ள தங்கத்தினால் லக்ஷண முறைப்படி லட்சுமிதேவி அமைக்கவும். பிறகு அந்த லக்ஷ்மியை துலாரோஹன முறைப்படி வேதிகை, மண்டலம், குண்டம் இவைகளுடன் கூடியதான மண்டபம் அமைத்து அந்த மண்டபத்தில் விஷ்ணுவின் இடது பாகத்தில் எவ்வாறு உள்ளதோ அவ்வாறு அமைக்கவும் லட்சுமியை ஸ்ரீமந்திரம் அல்லது ஸ்ரீசூக்தத்தினாலோ அவ்வாறே மகாவிஷ்ணுவை விஷ்ணு காயத்திரியால் சந்தனம், புஷ்பம் இவைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். துலாரோஹதான முறைப்படி சிவபூஜை ஹோமம் பரமேஸ்வரனுக்கு ஆயிரம் கலசம் இவைகளால் ஸ்நபனம் மஹாபூஜை செய்யவும் என கூறப்படுகிறது. அங்கு அக்னியில் ஹோமமோ செய்யலாம் என வேறு விதமாக கூறப்படுகிறது. இங்கு சொல்லப்படாத கிரியையை துலாபார முறைப்படி செய்யவும் என கிரியையின் விஷயம் கூறப்படுகிறது. இவ்வாறு 90வது படல கருத்து சுருக்கமாகும்.

1. விசேஷமான ஐஸ்வர்யத்தை உடைய லக்ஷ்மி தேவியின் தானத்தைக் கூறுகிறேன். ஆயிரம் ஸ்வர்ணத்தாலோ அல்லது அதில் பாதியான ஐநூறு தங்கத்தாலோ அல்லது அதிலும் பாதியான இருநூற்றி ஐம்பது சுவர்ணத்தாலோ

2. அல்லது அதிலும் பாதியான நூற்றி இருபத்தி ஐந்து சுவர்ணத்தாலோ லக்ஷணத்துடன் கூடிய மஹாலக்ஷ்மியை நிர்மாணிக்க வேண்டும். நூற்றி எட்டு நிஷ்கங்களாலும் இந்த மஹா லக்ஷ்மியை நிர்மாணம் செய்யலாம்.

3. முன்பு கூறியதைப்போல் வேதிகையுடன் மண்டலத்துடன் மண்டபத்தை நிர்மாணித்து அதில் மஹாவிஷ்ணுவையும் விஷ்ணுவின் இடது பாகத்தில் மஹாலக்ஷ்மியையும் ஸ்தாபிக்க வேண்டும்.

4. மஹாலக்ஷ்மியின் மந்திரத்தாலோ அல்லது ஸ்ரீ ஸூக்தத்தினாலோ அர்ச்சித்து, பூஜிக்க வேண்டும். மஹா விஷ்ணுவை, விஷ்ணு காயத்ரீ மந்திரத்தால் சந்தனம் புஷ்பம் இவைகளால் அர்ச்சிக்க வேண்டும்.

5. சிவபூஜை செய்து விசேஷமாக ஹோமத்தை செய்ய வேண்டும். ஆசார்யன் முன்பு கூறிய வண்ணம் ஒரே ஹோமமாக விஷ்ணு, மஹாலக்ஷ்மி இவர்களுக்குச் செய்ய வேண்டும்.

6. ஸ்வாமிக்கு ஆயிரம் கலசங்களால் ஸ்நபனம் செய்து பூஜித்து அபிஷேகம் செய்ய வேண்டும். ஏதாவது கூறப்படாமல் இருந்தால் முன்பு கூறியதைப் போல் செய்யவேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் லட்சுமி தான விதியாகிற தொண்ணூறாவது படலமாகும்.
படலம் 89: ஹேமதேனு தான முறை

89வது படலத்தில் ஸ்வர்ண தேனு தானமுறை கூறப்படுகிறது. முதலில் எல்லா பயத்தையும் துர்பிக்ஷத்தையும் போக்கக்கூடிய ஸ்வர்ண தேனு தானம் கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. பிறகு ஆயிரம், ஐநூறு, இரு நூற்றி ஐம்பது, நூறு, இந்த எண்ணிக்கை உள்ள நிஷ்க்கம் என்ற அளவுள்ள தங்கத்தினால் ஸர்வலக்ஷணத்துடன் கூடிய பசுவை அமைக்கவும். பசுவின் கொம்பு முதலான அங்கங்களில் நவரத்தினங்களால் அலங்காரம் செய்யவும். பசுவின் பத்தில் ஒரு பாகத்தில் கன்று குட்டி உருவம் அமைக்கவும் என்று கன்றுகுட்டியுடன் கூடிய பசுவின் உருவ அமைப்பு முறை கூறப்படுகிறது. பிறகு ஆசார்யன் துலாரோஹ முறைப்படி வேதிகை மண்டலத்துடன் கூடிய மண்டபம் அமைத்து அதன் நடுவில் கன்றுடன் கூடிய பசுவை வைத்து இரு வஸ்த்திரங்களால் போர்த்தவும் தேனு காயத்திரியால் சந்தனம், புஷ்பம் இவைகளால் தேனுவை பூஜிக்கவும். துலாபார முறைப்படி சாமான்ய பூஜை ஹோமம் செய்யவும். பிறகு பரமேஸ்வரனை ஆயிரம் கலசம் முதலான கலசங்களால் கலசாபிஷேகம் செய்து மஹாபூஜை செய்யவும் என கூறப்படுகிறது. இங்கு ஹோம விஷயத்தில் சமித்து, நெய், ஹவிஸ், இவைகளால் ஒரு அக்னி ஹோமம் செய்யவும் என்று ஒரு அக்னி ஹோமம் செய்யும் விஷயத்தில் குருவிற்கு தட்சிணை கொடுக்கும் விஷயம் பற்றி கூறப்படுகிறது. முடிவில் இங்கு சொல்லப்படாத கர்மா எது உண்டோ அதை துலாபார முறைப்படி செய்யவும். இவ்வாறு 89வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. தங்க பசு தானத்தை கிரமமாக சுருக்கமாக கூறுகிறேன். எல்லாவித பாபங்கள், எல்லாவித பயங்கள் துர்பிக்ஷம் (பஞ்சம்) இவற்றை நாசம் செய்ய வேண்டும்.

2. ஆயிரம் தங்கத்தாலோ அல்லது அதில் பாதியான ஐநூறு தங்கத்திலோ அதில் பாதியான இரு நூற்று ஐம்பது தங்கத்திலோ அல்லது நூறு தங்கத்தாலோ

3. எல்லா லக்ஷணங்களோடு பசுவின் ரூபத்தை வித்வான் செய்ய வேண்டும். பத்மராகத்தை கொம்பின் நுனியிலும் வஜ்ரத்தை குளம்பின் நுனியிலும் வைக்க கூறப்படுகிறது.

4. முத்துவை நெற்றியின் நடுவிலும் வைடூர்யத்தை வால் இருக்குமிடத்திலும் புஷ்பராகத்தை பல்லுக்காகவும் அறிந்தவன் செய்ய வேண்டும்.

5. பசுமாடு இந்த விதமாக செய்து அதில் 10ல் ஓர் பாகம் கன்றுகுட்டி அதைபோல் செய்து முன்புபோல் மண்டபத்தை அடைவிக்க வேண்டும்.

6. மண்டலத்தோடு கூடின வேதிகை அதன் நடுவில் பசுமாட்டை வைக்கவும். தேசிகோத்தமர் கன்று குட்டியோடு கூடிய பசுவை இரண்டு வஸ்திரங்களினால் சுத்த வேண்டும்.

7. அதன் காயத்ரியினால் சந்தன புஷ்பங்களினால் பூஜிக்க வேண்டும். கும்பம், குண்டம் இவற்றிற்கு விசேஷமாக (அர்ச்சனை) பூஜையை செய்ய வேண்டும்.

8. பிறகு ஓர் அக்னி முறையில் ஸமித், நெய் ஹவிஸ்ஸோடு பால் முதலியவைகளினால் 1000 ஆயிரம் கலசங்களினால் தேவனை பூஜிக்க வேண்டும்.

9. ஓர் குண்ட முறையில் குருவுக்கு முப்பது நிஷ்கம் என அறியவும், இதில் கூறப்படாதவைகளை துலா ரோஹ விதியில் கூறப்பட்டுள்ளபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் ஹேமதேனு தான விதியாகிற எண்பத்தி ஒன்பதாவது படலமாகும்.
படலம் 88: கணேச தான முறை

88வது படலத்தில் கணேச தான முறை கூறப்படுகிறது. முதலில் எல்லா பாபங்களையும் போக்கக்கூடிய கணேச தான முறை கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. ஆசார்யன் துலாரோஹ முறைப்படி வேதிகை, மண்டலம், குண்டம் இவைகளுடன் கூடிய மண்டலம் அமைக்கவும். அதன் நடுவில் லோக பாலகர்களுடன் கூடியதாக பரமேஸ்வரனை பூஜிக்கவும். அதற்கு வெளியில் 8 திக்கிலும் ஸ்வர்ணத்தால் செய்யப்பட்ட வினாயகர்களை ஸ்தாபிக்கவும். பிறகு ஆசார்யன் சந்தனம், புஷ்பம் இவைகளால் மூன்றாவது ஆவரணத்தில் உள்ள வினாயகர்களுடன் கூடியதான அந்த மூர்த்திகளை பூஜிக்கவும். பிரதான குண்டத்தில் ஸ்வாமியை பூஜிக்கவும். மற்ற 8 குண்டங்களில் வினாயகரை பூஜித்து ஹோமம் செய்யவும் என ஹோம விதி நிரூபிக்கப்படுகிறது. பிறகு ஈசான முதலான ஏழுதிக்குகளில் ஏழு பிராம்ணர்களையும் வடக்கு திக்கில் ஒரு கன்னிகையும் ஸ்தாபித்து சந்தன, புஷ்பங்களால் ஆசார்யன் பூஜிக்க வேண்டும். பூஜிக்கப்பட்ட அவர்களுடன் அந்தந்த மந்திரங்களால் வரிசையாக விக்னேஸ்வரர்களை கொடுக்க வேண்டும். இங்கு எந்த கர்மா கூறப்படாததாக உள்ளதோ அதை துலாரோஹ முறைப்படி செய்யப்பட வேண்டும் என செயல்முறை விளக்கம் கூறப்படுகிறது. இவ்வாறு 88வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. எல்லா பாபங்களையும் போக்கக்கூடிய கணேச தானத்தை கூறுகிறேன். முன்புபோல் வேதிகை, மண்டலத்துடன் கூடிய மண்டபம் அமைக்க வேண்டும்.

2. அதன் நடுவில் திக்பாலர்களுடன் கூடிய கணேசரை ஆராதிக்க வேண்டும். அதன் வெளியில் கணேசரின் அஷ்ட வித்யேசர்களை பூஜிக்க வேண்டும்.

3. அவர்கள் அனைவரையும் தங்கத்தால் நிர்மாணிக்க வேண்டும். மூன்றாவது ஆவரணத்துடன் கூடிய கணேசர்களை சந்தனம் புஷ்பமிவைகளால் அலங்கரித்து

4. பிரதானத்தில் கணபதியை உத்தேசித்து ஹோமமும், எட்டு திசைகளிலும் வித்யேசர்களை பூஜித்து ஈசானம் முதலான எட்டு திக்குகளிலும் ஏழு பிராம்மணர்களை பூஜிக்க வேண்டும்.

5. வடக்கு திக்கில் ஆசார்யன் கன்னிகையை சந்தனம் புஷ்பம் முதலியவைகளால் பூஜித்து பிறகு ப்ராம்மணர்களுக்கு அந்தந்த மந்திரங்களைச் சொல்லி மஹாகணபதியை தானம் செய்ய வேண்டும்.

6. இதில் கூறப்படாதது ஏதாவது இருந்தால் துலாரோஹண விதியில் கூறிய முறைப்படி செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் கணேச தான விதியாகிற எண்பத்தி எட்டாவது படலமாகும்.
படலம் 87: கற்பக விருக்ஷ தான விதி

87வது படலத்தில் கற்பக விருக்ஷ தான விதி கூறப்படுகிறது. முதலில் நூறு நிஷ்க ஸ்வர்ணத்தினால் கற்பக விருக்ஷம் அமைக்கும் முறை நிரூபிக்கப்படுகிறது. முதலில் கற்பக விருக்ஷம் பல கிளைகளை உடையதாகவும் பத்திர புஷ்ப ஸமன்விதமாகவும் பல பழங்களை உடையதாகவும் அமைக்கப்பட வேண்டும். இங்கு கல்பக விருக்ஷத்தின் அங்கங்களான குச்சி, கிளை, பக்க கிளைகள் இலை, துளிர், முதலியவைகள் எல்லாம் நவரத்தினங்களால் செய்யப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. கலபக விருக்ஷத்தின் மேடை ஸ்படிகத்தினால் செய்ய வேண்டும். விருக்ஷத்திற்கு ஒரு முழ அளவே உயரமாக செய்யவேண்டும் என கூறப்படுகிறது. துலாரோஹ விதியில் கூறிப்பட்டுள்ளபடி வேதிகை, மண்டலம், குண்டம் இவைகளுடன் கூடிய மண்டபம் அமைக்கவும். அதன் மத்தியில் கற்பக விருக்ஷத்தை ஸ்தாபித்து கற்பக விருக்ஷத்தின் அடியில் லோக பாலகர்களுடன் கூடியதாகிய லிங்கம் அமைக்கவும். லோக பாலகர்களுடன் கூடிய ஈஸ்வரனை ஆசார்யன் முறைப்படி பூஜிக்கவும். பிறகு ஈஸ்வரனின் பொருட்டும், சிவபக்தர்களுக்கும் கல்பக விருக்ஷம் தானம் செய்யப்பட வேண்டும். இங்கு சொல்லப்படாத கர்மாவை துலாரோக விதிப்படி செய்யவும். இவ்வாறு 87வது படலகருத்து சுருக்கமாகும்.

1. கல்பக மர தானத்தைக் கூற இருக்கிறேன், நூறு நிஷ்க தங்கத்தால் மரத்தை

2. பல கிளைகளுடன் கூடியதும் இலை, புஷ்பங்களுடன் கூடியதும், பல விதமான பழங்களுடன் கூடியதும், நல்ல அழகுடன் கூடியதுமான

3. கற்பக வ்ருக்ஷத்தை நிர்மாணிக்க வேண்டும். அதன் கிளைகளில் முத்துக்களால் செய்யப்பட்ட மாலையும் தொங்கவிட்டு மரகதத்தால் பட்டைகளை விசித்ரமாக நிர்மாணிக்க வேண்டும்.

4. பவழங்களால் தளிர்களை தயாரிக்க வேண்டும். பத்மராகத்தால் விதவிதமான பழங்களை நிர்மாணிக்க வேண்டும்.

5. கல்ப விருக்ஷத்தின் அடிபாகத்தை, நீலக் கற்களால், நிர்மாணிக்கவும். அடிக்கிளையை வைரத்தால் தயாரிக்கவும், மரத்தின் நுனியை வைடூரியத்தாலும், புஷ்யராகத்தாலும்

6. மரத்தின் உச்சியை, கோமேகத்தால் செய்யவும். மரத்தின் மேல் கிளையை சூர்ய காந்த கற்களாலோ

7. கல்பக விருக்ஷத்தின் வேதியை சந்திர காந்தக் கற்களாலோ அல்லது ஸ்படிகத்தாலோ நிர்மாணிக்கவும். கல்பக விருக்ஷத்தின் உயரம் (சுற்றளவு) சாண் (குறிப்பு விதஸ்தி பெருவிரலுடன் பரப்பப்பட்ட விரல்கள் உள்ள இடம்)

8. எட்டு கிளைகளின் அளவும், விஸ்தரிப்பும் மேல் நோக்கி இருக்க வேண்டும். கல்பக வ்ருக்ஷத்தின் அடியில் திக்பாலர்களுடன் கூடிய சிவலிங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

9. வேதிகையும், மண்டபத்தை நிர்மானித்து மண்டலத்துடன் கூடியதாகவோ அல்லது மண்டலம் இல்லாமலோ அதன் நடுவில் கல்பக விருக்ஷத்தை ஸ்தாபித்து

10. திக்பாலர்களின் ஆவரணங்களுடன் கூடிய பரமேஸ்வரனை பூஜிக்க வேண்டும். சிவார்ப்பணம் செய்து கல்பக விருக்ஷத்தை சிவாம்சமான சிவபக்தர்களுக்கு தானம் செய்ய வேண்டும்.

11. இங்கு சொல்லப்படாததை துலாபாரத்தில் கூறியது போல் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் கல்பதான விதியாகிற எண்பத்தி ஏழாவது படலமாகும்.