திங்கள், 1 ஜூன், 2020

*துளசிதாசருக்கு உதவிய ஆஞ்சநேயர் பற்றிய பகிர்வுகள் :*

ஒரு சமயம் துளசிதாசர் காசியில், கங்கையில் நீராடி விட்டு விஸ்வநாதரை தரிசித்தார். விஸ்வநாதர் கருணை காட்டுவார் என்று காத்திருந்தார். ஓயாமல் ராமநாம ஜெபம் செய்தார். இரவில் அசுவமேத கட்டத்தின் படிக் கட்டில் உட்கார்ந்து ராமாயணம் கதாகா லட்சேபம் சொல்வார்.

ஒவ்வொரு நாளும் அவர் படகில் ஏறி அக்கரைக்கு சென்று கங்கையில் நீர் எடுத்துக் கொண்டு வெகுதூரம் சென்று ஒரு காட்டில் காலைக் கடன்களை கழிப்பார். பின் உடம்பை சுத்தம் செய்து கொண்டு மீதியுள்ள தண்ணீரை ஒரு ஆலமரத்தில் கொட்டி விடுவார்.

அந்த ஆலமரத்தில் துர்மரணம் அடைந்த ஆவி ஒன்று வசித்து வந்தது. அது அந்த நீரை குடித்ததும் தாகம் அடங்கி ஒருவாறு அமைதி கிடைத்தது. இதன் பயனாக விவேகம் வந்தது. இவர் ஒரு பெரிய மகான் என்று தெரிந்து கொண்டது.

அந்த ஆவி ஒரு நாள் துளசிதாசர் திரும்பிப் போகும் வழியில் மறைத்து நின்றது. துளசிதாசரின் நடை தடைப் பட்டது. உரக்க ராமா, ராமா என்று சத்தமிட்டு கூவினார்.

அப்போது அந்த ஆவி கூறியது, பெரியவரே, பயப்பட வேண்டாம். நான் ஒரு பாவியின் ஆவி. நீங்கள் வார்த்த நீரைக் குடித்து புனிதமானேன். உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய விரும்புகிறேன். சொல்லுங்கள் என கேட்டது.

துளசிதாசருக்கு மனதில் ஒரே எண்ணம் தானே. ராம தரிசனம் தான் அது. அதற்கு இந்த ஆவியா உதவப் போகிறது என்றெல்லாம் யோசிக்காமல் கேட்டு விட்டார்.

ராமாயணம் கேட்க வரும் ஆஞ்சநேயர்

எனக்கு ராம தரிசனம் கிடைக்க வேண்டும் என்று. அதற்கு ஆவி பதில் கூறியது. ‘இது உங்களுக்கு வெகு சுலபமாயிற்றே’ என்றது. எப்படி? என கேட்டார் துளசிதாசர். உங்களிடம் தான் ராமாயணம் கேட்க தினமும் அனுமன் வருகிறாரே என்றது. எனக்கு தெரியாதே என்றார் தாசர்.

ஆம். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நேரே உட்கார்ந்திருக்கும் ஜனங்களுக்கு அப்பால் ஒருவர் உட்கார்ந்திருப்பார். நீங்கள் வருவதற்கு முன்பே வந்து விடுவார். பிரசங்கம் முடிந்து ஜனங்கள் திரும்பும்போது ஒவ்வொரு வரையும் விழுந்து வணங்கி விட்டு கடைசியில் தான் போவார்.

அவர் எப்படி இருப்பார்? என்று துளசிதாசர் கேட்டார். உடம்பெல்லாம் வெண் குஷ்டம். அசிங்கமாக இருப்பார். யாரும் தன்னை தொந்தரவு செய்யக் கூடாது. ஒதுக்க வேண்டும் என்பதற் காகவே அப்படி வருவார். அவர் கால் களை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.

ராமன் எப்போ வருவாரோ?
அன்று இரவு சொற்பொழிவின் ஆரம்பத்திலேயே தாசர் கவனித்து விட்டார். தன் கண்ணெதிரே ஆனால் சற்று தள்ளி தலையில் முக்காடிட்டுக் கொண்டிருப்பவரை பார்த்து விட்டார். அன்று பிரசங்கத்தில் சபரியின் கதை. சபரி, ராமன் எப்போது வருவாரோ? என்று வழிமேல் வழி வைத்து காத்திருக்கிறார். வழியிலே போவோர் வருவோரை எல்லாம் வினவுகிறாள். புலம்புகிறாள். ஏமாற்றி விடாதே ராமா!

சபரி புலம்பல்
ராமா! என்னை ஏமாற்றி விடாதே. எனக்கு நீ தான் கதி. எனக்கு வேறு எதிலும் நாட்டமில்லை. எங்கே சுற்றுகிறாயோ? உனக்கு யாராவது வழிகாட்ட மாட்டார்களா? நீ இங்கு வரமாட்டாயா?

உன்னைத் தேடி நான் அலைய வேண்டும். ஆனால் என்னைத் தேடி நீ வர வேண்டும் என நினைக்கிறேனே? என்ன அபச்சாரம். நான் உன்னை தேடி வர முடியாதே! யாராவது அழைத்து வர மாட்டார்களா? ராமனை நான் தரிசனம் செய்வேனா? எனக்கு அந்த பாக்கியம் உண்டா? என்று சபரியின் கதையை கூறி விட்டு மயக்கம் அடைந்து விட்டார் தாசர். சபை முழுவதும் கண்ணீர் விட்டு கதறியது. எங்கும் ராம நாம கோஷம்.

காலை பிடித்துக் கொண்ட தாசர்

பின் வெகு நேரம் ஆயிற்று. துளசி தாசருக்கு மயக்கம் தெளியவில்லை. சிலர் நெருங்கி வந்து மயக்கம் தெளிய உதவி செய்தனர். அத்துடன் சபை கலைந்து விட்டது. பின் வெகுநேரம் கழித்து கண் திறந்து பார்த்தார் துளசி தாசர்.

எதிரே குஷ்டரோகி வடிவில் அனுமர் நின்று கொண்டிருந்தார். பிரபோ! அஞ்சன புத்ரா! என்று கதறி அழுது அவருடைய கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அனுமன் கால்களை விடுவித்துக் கொண்டார். பின் தாசரை தோளில் சுமந்து கொண்டு விடுவிடுவென்று நடந்தார். பொழுது விடிந்து விட்டது. தாசரை கீழே கிடத்தினார் அனுமன். துளசி தாசரும் ‘கண் விழித்து நான் எங்கிருக்கிறேன்’ என்று வினவினார்.

சித்ர கூடத்தில் ராம ஜெபம்

இதுதான் சித்ர கூடம் இந்த இடத்திற்கு ராமகிரி என்று பெயர். ராமன் முதன் முதலில் வனவாசம் செய்த இடம். அங்கே பாரும் மந்தாகினி. இங்கே உட்கார்ந்து ராமஜெபம் செய்யும். ராம தரிசனம் கிட்டும் என்று கூறினார் அனுமன். அதற்கு துளசி தாசர் நீங்கள் கூட இருக்க வேண்டும் என்றார். நீர் ராம நாமம் சொன்னால் உமது கூடவே நான் இருப்பேன். எனக்கு என்ன வேறு வேலை என்று கூறினார் அனுமன். பின் மறைந்து விட்டார். தாசரும் ராமஜபம் செய்தார்.
எப்படி இருப்பார் ராமர்?

ராமன் வருவாரா? எப்படி வருவார்? லட்சுமணன் கண்டிப்பாக வருவாரா? எப்படி இருப்பார்? தலையில் ஜடா முடியுடன் வருவாரா? அல்லது வைரக் கிரீடம் அணிந்து வருவாரா? மரவுரி தரித்து வருவாரா? பட்டு பீதாம்பரம் அணிந்து வருவாரா? ரதத்தில் வருவாரா? நடந்து வருவாரா? என்றவாரு இடுப்பில் இருந்த துணியை வரிந்து கட்டிக் கொண்டார். கண் கொட்டாமல் இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டிருந்தார்.

மலைப்பாதை. ஒற்றையடிப் பாதை. இருபுறமும் புதர். அப்பால் ஒரு பாறாங்கல். அதன்மேல் நின்ற கொண்டு ராம ராம என்று நர்த்தனமாடினார். மலை உச்சியிலிருந்து வேகமாக இரண்டு குதிரைகள் ஓடி வந்தன. அவற்றின் மீது இரண்டு ராஜாக்கள். தாசர் எத்தனையோ ராஜாக்களை பார்த்திருக்கிறார். தலையில் தலைப்பாகை. அதைச் சுற்றி முத்துச் சரங்கள். கொண்டை மீது வெண் புறா இறகுகள். வேகமாக குதிரை மீது வந்தவர்கள் தாசரைப் பார்த்து சிரித்துக் கொண்டே போய் விட்டனர்.

ராமனுக்கு ஈடாவாரா?

ஆமாம். பெரிய வீரர்கள் இவர்கள்! என் ராம, லட்சுமணனுக்கு ஈடாவார் களா? தலையில் ரத்ன கிரீடமும், மார்பில் தங்க கவசமும், தங்க ஹாரமும் கையில் வில்லும் இடுப்பில் அம்புராத் தூளியும் கையில் ஒரு அம்பைச் சுற்றிக் கொண்டே என்ன அழகாக இருப்பார் கள் என்று ராமனை தியானித்தவாறே ராம நாமம் சொன்னார்.

சிறிது நேரம் கழித்து அனுமன் வந்தார். தாசரைப் பார்த்து ‘ராம லட்சுமணர்களை பார்த்தீர்களா? என்று கேட்டார். இல்லையே என்றார் தாசர். என்ன இது உமது பக்கமாகத்தானே குதிரையில் சவாரி செய்து கொண்டு வந்தார்கள் என்றார்.
ஐய்யோ! ராம, லட்சுமணர்களா? ஏமாந்து போனேனே என்று அலறினார் துளசி தாசர். அதற்கு அனுமன் ‘ராமன் உமது இஷ்டப்படி தான் வர வேண்டுமா? அவர் இஷ்டப்படி வர கூடாதா? என்று கேட்டார். உடனே தாசர், சுவாமி மன்னிக்க வேண்டும். ஒன்றும் அறியாத பேதை நான். ஏதோ கற்பனை செய்து கொண்டு வந்தவர்களை அலட்சியம் செய்து விட்டேன். வாயு குமாரா? இன்னும் ஒருமுறை தயவு செய்யும். அவர்கள் எந்த வடிவில் வந்தாலும் பார்த்து விடுகிறேன்.

எல்லாம் சரி. நீர் போய் மந்தா கினியில் இறங்கி நீராடி ஜபம் செய்யும். ராமாயண பாராயணம் செய்யும் ராமன் வருவாரா? பார்க்கலாம் என்றார். துளசிதாசரும் மந்தாகினிக்கு ஓடினார். நீராடினார். ஜபம் செய்தார். வால்மீகியின் ராமாயணத்தை ஒப்புவித்தார்.

நதியில் நீராடுதல்

இதனிடையே இரண்டு நாட்கள் ஆகி விட்டது. ராமாயணத்தில் பரதன் சித்ர கூடத்திற்கு வரும் முன்னால் ராம லட்சுமணர்கள் சித்ர கூடத்தில் வசித்துக் கொண்டு காலையில் மந்தாகினியில் நீராடுகிறார்கள் என்கிற கட்டத்தை படித்துக் கொண்டிருந்தார்.

எதிரே மந்தாகினியில் குளித்து விட்டு இரண்டு இளைஞர்கள் கரை ஏறி தாசரிடம் வந்தனர். ஒருவன் நல்ல கருப்பு நிறம். மற்றவன் தங்க நிறம். முகத்தில் பத்து பதினைந்து நாள் வளர்ந்த தாடி. சுவாமி கோபி சந்தனம் உள்ளதா? என்று அவர்கள் கேட்டனர். இருக்கிறது. தருகிறேன் என்றார் அவர்.

சந்தனம் கேட்ட ராம, லட்சுமணன்

சுவாமி, எங்களிடம் கண்ணாடி இல்லை. நீங்களே எங்கள் நெற்றியில் இட்டு விடுங்கள். (வடதேசத்தில் கங்கை முதலிய நதி தீர்த்தக் கரையில் பண்டாக்கள் (சாதுக்கள்) உட்கார்ந்து கொண்டு நதியில் நீராடி வருபவர் களுக்கு நெற்றியில் திலகம் இட்டு தட்சணை வாங்கிக் கொள்ளும் பழக்கம் இன்றும் உள்ளது). அதற்கென்ன! நாமம் போட்டு விடுகிறேனே என்றார் தாசர். இடது கையில் நீர் விட்டுக் கொண்டே கோபி சந்தனத்தை குழைக்கிறார். அந்த கருப்புப் பையன் எதிரே உட்கார்ந்து முகத்தை நீட்டுகிறான். இவர் அவன் மோவாயைப் பிடித்துக் கொண்டு முகத்தைப் பார்க்கிறார். அவனது கண்கள் குருகுருவென்று இவரைப் பார்க்கின்றன. பார்த்தவுடன் மெய் மறந்து விட்டார்.

அந்தப் பையன் இவருடைய கையில் இருந்த கோபி சந்தனத்தை தன் கட்டை விரலில் எடுத்து தன் நெற்றியில் தீட்டிக் கொண்டு அவருடைய நெற்றியிலும் தீட்டினான். தன்னுடன் வந்த வனுக்கும் தீட்டினான். அவர்கள் உட்கார்ந் திருந்திருந்த படித் துறைக்கு அருகே ஒரு மாமரம். அதன் மீது ஒரு கிளி. அது கூவியது.

‘சித்ர கூடகே காடபரே பகி ஸந்தந கீ பீர
துளசிதாஸகே சந்தந கிஸே திலக தேத ரகுபீர”

பொருள்: (சித்ரக் கூடத்துக் கரையில் சாதுக்கள் கூட்டம். துளசிதாசர் சந்தனம் குழைக்கிறார். ராமன் திலகமிடுகிறார்.)

இதைக் கேட்டு துளசிதாசர் திடுக்கிட்டு சுயநினைவுக்கு வந்தார். சாது அவர்களே! என் நெற்றியில் நாமம் சரியாக இருக்கிறதா? என்று கேட்டான் அந்த கருப்பு இளைஞன். ராமா உனக்கு இதை விட பொருத்தமான நாமம் ஏது என்று கதறிக் கொண்டே அந்த இரண்டு இளைஞர்களையும் கட்டி அணைத்துக் கொண்டார் துளசி தாசர்.

ஞாயிறு, 31 மே, 2020

🙏 ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏

சபரிமலை மேல்சாந்தி A K சுதீர் நம்பூதிரி அவர்களின் பதிவு ......

கலியுகவரதன் கண்கண்ட தெய்வம் சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் பக்தர்களுக்கு,  சன்னிதானத்தில் எனது பூஜை நேரத்தில் உதித்த சில எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனோ நோய் தொற்றில் இருந்து மக்களை காக்க நமது கலியுகவரதனாம் ஐயப்பசாமியின் சன்னிதியில் தினமும் ஆராதித்து வேண்டி வருகிறேன்.

இந்த கலியுகத்தை கொரோனா பேரிடரில் இருந்து காப்பாற்ற "#ஸ்வாமியே #சரணம் #ஐயப்பா " எனும் நாம ஜெபமே ஒரே சிறந்த வழி....

ஜூன் 01ம் நாளானது, நமது சபரிமலை சன்னிதியில் கலியுகவரதன் அய்யப்பன் பிரதிஷ்டை தினமாகும். ஆகையால் வருகின்ற 01 ஜூன் 2020 முதல், உலகெங்கிலும் உள்ள அய்யப்ப பக்தர்களாகிய நாம் அனைவரும் தொடர்ந்து #41நாட்கள் , சந்தியா வேலை எனப்படும் மாலை 6:30 முதல் 07:00 மணி வரை உங்களது இல்லங்களிலோ, ஆலயங்களிலோ நிலை விளக்கின் முன் நின்று, நமது மணிகண்டனின் திருநாமங்களான சரண மந்திரங்களை உச்சரித்து, மனமுருகி வேண்டிக்கொள்ள வேண்டும்.

இவ்வாறாக 9 லட்சம் முதல் 90 லட்சங்களான சரண மந்திரங்களை ஒரே நேரத்தில் உச்சரிக்கும் பொழுது, நமது அனைவரின் மனதின் உள்ள கொடிய நோயின் பயத்தையும், அதன் ஆற்றலையும் அறவே ஒழிக்கும் சக்தி இப்புவியினில் உருவாகிறது.

இக்கொடிய நோயிடம் இருந்து நம்மை காக்க போராடும் அனைவருக்காகவும் இதை கனிவுடன் செய்வோமாக......

தயவு கூர்ந்து இதை உலகெங்கிலும் உள்ள அனைத்து அய்யப்ப பக்தர்களுக்கும் தெரிவித்து, ஐயனின் அன்பிற்கும் அருளிற்கும் பாத்திரமாகும்படி கனிவுடன் கேட்டு கொள்கிறேன்....

இங்ஙனம் :
பிரம்மஸ்ரீ A K சுதீர் நம்பூதிரி,
சபரிமலை மேல்சாந்தி
பெரியவா சரணம்.

வருடத்திற்கு ஒரு முறையேனும் குலதெய்வத்தின் சன்னதிக்குச் சென்று ப்ரார்த்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள நாம் தவறாமல் இயன்றபோதெல்லாம் நம் மாதா-பிதா-குரு-தெய்வமான ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளின் அதிஷ்டானத்துச் சென்று வருவதும் அவசியமானதாயிற்றே!

நம்மில் பல பேர்களுக்கு அதிஷ்டானம் எங்கு அமைந்திருக்கின்றது என்பது தெரியாமற்கூட இருக்க வாய்ப்புண்டு என்பதாலே இன்றைய குருவருட்பாவினைப் பகிர்கையில் காஞ்சி ஸ்ரீமஹாஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீபுதுபெரியவா அதிஷ்டான தரிசனங்களையும் பகிர்கின்றேன்.  அதோடு கூட நம்பாத்து ஸ்ரீஉம்மாச்சீயின் விக்ரஹ தரிசனமும் கூட.

காஞ்சிபுரத்தில், சாலை தெருவில் உள்ள ஸ்ரீஆதிசங்கர பகவத்பாத பரம்பரகத  மூலாம்னாய ஸர்வக்ஞ பீடம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் ஸ்ரீமட ஸமஸ்தானத்திலே சாக்ஷாத் நம் பரமேஸ்வர ஸ்வரூபியான ஸ்ரீமஹாஸ்வாமிகளின் அதிஷ்டானம் அமைந்துள்ளது. அங்கேயே அடுத்ததாக வீற்றிருக்கின்றார் ஸ்ரீபுதுபெரியவாளும். அந்த தரிசனமே இங்கே பகிரப்பட்டும் உள்ளது.

சங்கரம் போற்றி!

ஹர ஹர சங்கர... ஜய ஜய சங்கர...

#குருவருட்பா

அஞ்சுகத் தன்னருள் அம்பிகை அருகென
        அம்புலி தீர்த்தமும் சிகைநிரப்பி
செஞ்சடை வாகீசன் திருவருள் உருவென
        செகத்குரு எனவேகி வந்தோனை
மஞ்சுள வரதனை ஞானியர் தலைவனை
        மனதினுள் தொழுதிட நினைந்தேங்கி
காஞ்சிநல் பொக்கிஷம் மேவுநற் சன்னதி
        அண்டியே தரிசித்தும் மகிழ்வோமே!

ஆம்! இயன்றபோதெல்லாம் ஐயன் ஆனந்த வரதன் அவ்யாஜ கருணாமுர்த்தி அண்டினோர்க்கெல்லாம் வரந்தரும் அய்ஹ்புத திருப்பதியாம் கச்சிநகர் காமகோடித் திருப்பீடத்திலே அமைந்துள்ள அன்னவனின் அதிஷ்டானத்திற்குச் சென்று, குருநாதர்களின் சன்னதிகளை  பன்னிரு (12) பிரதட்சிணமும் (வலமும் செய்து நான்கு (4) நமஸ்காரங்களும் செய்வோமே!

நம்பி வந்தோர்க்கெல்லாம் நலம்பயக்கும் அம்மையப்பனின் அருளாலே நல்வாழ்விலே விளங்கச் செய்வோமே! குருவருள் குலத்தினை மட்டுமல்லாமல் குவலயத்தையே காக்குமன்றோ!

செய்வோமா, உறவுகளே!

கோவிட் 19 கொராணா கிருமியானது துன்புறுத்துகின்ற காலம் இது. நம்மால் இயன்றளவு கஷ்டப்படுபவர்களுக்கு உதவிகளைச் செய்வோம். அதுவே நம் ஆசார்யர்கலின் அருளோடு ஜகன்மாதா - ஜகத்பிதாவின் அருளையும் கூட பெற்றுத் தரும். உலக மக்கள் எல்லோருக்காகவுமாக ப்ரார்த்தனைகள் செய்வோம்! ஜகத்குரு நம்மை ரக்ஷிப்பார் என்பது சத்தியம்.

குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை.

பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம்.
"ஈஸ்வரன் ஞாபகம் எப்போதும் இருக்கமாட்டேங்கிறதே…"”

முதிய தம்பதிகள், தாத்தாவும், பாட்டியும்,
தரிசனத்துக்கு வந்தபோது காலை ஏழு மணி.
பெரியவாள் ஒரு வாதாமரத்தின் கீழே, சாக்கில் அமர்ந்திருந்தார்கள்.

கைகூப்பிக்கொண்டு நின்றார்கள் தம்பதிகள்.
பெரியவாள் கேட்டார்கள்:

“இந்த மாதிரி ஒரு வாதாமரம் உங்கள் வீட்டு வாசலிலே இருந்ததே….இன்னும் இருக்கோ?”

“ஆமாம் இன்னும் இருக்கு. பெரியவா பார்த்து இருபது வருஷத்துக்கு மேலே ஆகியிருக்கும். இப்போ பெரிசா வளர்ந்திருக்கு; நிறைய காய்க்கிறது; தெருப்பசங்கள் கல்லை வீசியெறிந்து வாதாம் பழத்தைப் பொறுக்கித் தின்கிறதுகள்.”

“கூடத்திலே ஒரு பத்தாயம் இருந்ததே…அதிலே கறையான் அரிச்சு, ரிப்பேர் பண்றமாதிரி ஆயிருந்ததே…”

“அதை அப்பவே ரிப்பேர் பண்ணியாச்சு. அதில்தான் சாப்பாட்டு நெல்லைக் கொட்டி வைக்கிறோம்…”

“ஒரு சிவப்புப் பசுமாடு கன்று போடாமல் இருந்ததே…”

“ அது ஆறு கன்று போட்டுது. சமீபத்தில்தான் தவறிப்போச்சு. கன்றுக் குட்டிகள் எல்லாம் நன்றாய் இருக்கு. நல்ல வம்சம்…”

“அய்யங்கார் கணக்குப்பிள்ளை இருந்தாரே? திருநக்ஷத்திரம் எண்பதுக்கு மேல் இருக்குமோ?”

“சதாபிஷேகத்துக்கு ரெண்டு வருஷம் முன்னாடி வைகுண்டம் போயிட்டார்…”

“எட்டுக்குடி முருகனுக்கு, தைப்பூசம் காவடி எடுக்கிற வழக்கமாச்சே…உங்க புத்ராள் யாராவதுவந்து காவடி எடுக்கிறாளா?”

“ பெரியவா கிருபையாலே எட்டுக்குடி முருகன் கைங்கர்யம் நடந்திண்டிருக்கு..”

“வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை.மு.கோதைனாயகி அம்மாள், பம்மல் சம்பந்த முதலியார் நாவல்கள், மதன காமராஜன், விக்கிரமாதித்தன் புஸ்தகங்கள் எல்லாம் அலமாரி நிறைய இருந்ததே, இருக்கா…யாராவது படிக்கிறாளா?”

“புஸ்தகங்கள் இருக்கு, யாரும் படிக்கிறதில்லே..”

“ராமாயணம் பாராயணம் செய்துகொண்டிருந்தையே…நடக்கிறதா?”

“கண் சரியாகத் தெரியல்லே, ஒரு சர்க்கம் மட்டும் படிக்கிறேன்…”

கேட்டுக்கொண்டிருந்த பாட்டிக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை!

கிராமத்துக்கு எத்தனையோ வருஷத்துக்கு முன்னால், பெரியவாள் விஜயம் செய்தபோது, இவர்கள் வீட்டுக்கும் விஜயம் செய்து, ஒரு மணி நேரம் போல் தங்கியிருந்தார்கள். அப்போது பார்த்தது, கேட்டது எல்லாம் பதிவாயிருக்குமோ?

பாட்டி சொன்னாள், “பெரியவாளுக்கு இவ்வளவு ஞாபக சக்தி இருக்கே…..நான் அந்த அகத்திலேயே ரொம்ப நாள் இருந்திருக்கேன். பெரியவா கேட்டதில் பாதி விஷயம் நினைவேயில்லை….”

பெரியவா அப்போது அந்த எண்ணச்சூழலை அப்படியே மாற்றிவிடுமாப்போலே, ஒரு உயர்ந்த தத்துவத்தைச் சொல்லி, கேட்டுக்கொண்டிருந்தவர்களையெல்லாம் வானத்தில் பறக்க வைத்துவிட்டார்கள்!

“ஆமா…இதெல்லாம் என்ன ஞாபகசக்தி…?
ஈஸ்வரன் ஞாபகம் எப்போதும் இருக்கமாட்டேங்கிறதே…”

மஹாபெரியவாளின் ஆதங்கம்
இப்படி இருக்குமானால், நாமெல்லாம் எந்த மூலை?

கற்கண்டுக்கு இனிப்பை ஊட்டவேண்டுமா என்ன?

பெரியவாளுக்கு ஈஸ்வரத்வத்தைக்
கூட்ட வேண்டுமா என்ன?
  
பெரியவாள் தன் ஞாபக சக்தியை விளம்பரப்படுத்திக் கொள்ள

இந்த சம்பவம் நிகழப்படவில்லை.

முத்தாய்ப்பு ஒன்று வைத்தாரே!-

'ஈஸ்வரன் ஞாபகம் எப்போதும்  இருக்கமாட்டேங்கிறதே'

அதுதான் ஹைலைட். அது நமக்காக....

                                                                                                                 
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
*பாபஹர தஶமீ (கங்கா தஶஹரா) 01-06-20*

*பத்து வித பாபங்களின் விவரம்*

ज्येष्ठे मासि सिते पक्षे दशमी हस्तसंयुता ।
हरते दश पापानि तस्माद्दशहरा स्मृता ।।

ஜ்யேஷ்டே மாஸி ஸிதே பக்ஷே தஶம்யா ஹஸ்தஸம்யுதா ।
ஹரதே தஶபாபாநி தஸ்மாத்தஶஹரா ஸ்ம்ருதா  ।।

சாந்த்ரமான படி ஜ்யேஷ்ட மாஸத்தில் ஶுக்லபக்ஷ தஶமி திதியும் ஹஸ்த நக்ஷத்ரமும் சேரும் நாளே  பாபஹர தஶமீ இன்று முறைப்படி கங்கை காவேரி போன்ற புண்ய நதிகளிலோ குளம் கிணறு வீடு முதலானவற்றிலோ முறைப்படி ஸ்னானம் செய்ய வேண்டும் இப்படிச் செய்வதால் உடல் மனது வாக்கு ஆகியவையால் செய்த பத்துவிதமான பாவங்கள் விலகி இஹபர ஸௌக்யங்களை பெற்று பரமஶ்ரேயஸ்ஸை அடைவோம்.


*பத்து வித பாபங்களின் விவரம்*

*ஶரீரத்தால் செய்வது மூன்று*

1) நமக்குக் சம்பந்தம் இல்லா பொருள்களை நாம் எடுத்துக் கொள்வது ,
2) பிறரைத் துன்புறுத்துவது ,
3) பிறர் மனைவி மீது ஆசைப்படுவது

*மனதால் இழைக்கப்படும் பாபங்கள் மூன்று*

4)  மற்றவர்கள் பொருளை அடைய திட்டமிடுவது ,
5) மனதில் கெட்ட எண்ணங்களை நினைப்பது ,
6) மனிதர்களிடமும் பொய்யான ஆசை கொள்வது.

*வாக்கினால் செய்வது நான்கு*

7) கடுஞ்சொல் ,
8) உண்மையில்லாத பேச்சு ,
9) அவதூறாகப் பேசுவது ,
10) அறிவுக்குப் பொருந்தாமல் ஏடாகூடமாகப் பேசுவது.

*वर्षकृत्यदीपिकः*
*வர்ஷ க்ருத்ய தீபிகா*

ஸ்ரீக்ருஷ்ண ஶர்மா வேலூர் 9566649716
நைஷ்டிக பிரம்மச்சாரி = ஆசையற்ற பிரம்மச்சாரி

மகாபாரதப் பெரும்போர் நடந்து முடிந்தது. துரியோதனன் தொடை பிளக்கப்பட்டு, உயிர் நீங்கும் நிலையில் இருந்தான்.

அசுவத்தாமா, போரில் தன்னுடைய தந்தை துரோணரையும் நண்பன் துரியோதனனையும் கொன்ற பாண்டவர்களின் வம்சத்தையே வேரறுக்க எண்ணினான். .

அதுவே துரியோதனின் ஆசையாகவும் இருந்தது.

உப பாண்டவர்கள் என்னும் பாண்டவ குமாரர்கள் ஐவரும் போர்க்களத்தில் இருந்த பாசறையில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது பாண்டவர்கள் வெளியில் இருந்தனர்.

அசுவத்தாமன் பாசறைக்குத் தீவைத்தான். உப பாண்டவர்களை, வாளால் வெட்டிக் கொன்றான். ஐவரும் இறந்த செய்தியை உயிர்விடும் நிலையிலிருந்த தன்னுடைய நண்பன் துரியோதனனிடம் சொன்னான்.

துரியோதனும் அசுவத்தாமனும் உப பாண்டவர்கள் அழிந்து விட்டதாக எண்ணினர்.

அந்த நேரத்தில் அபிமன்யுவின் மனைவி உத்திரை கருவுற்றிருந்தாள். அவளுடைய கர்ப்பத்தைக் கலைத்துப் பாண்டவர் வம்சம் குலநாசம் செய்ய எண்ணிய அசுவத்தாமன், பிரம்மாஸ்திரத்தை ஏவினான். அது உத்தரையின் வயிற்றைத் தாக்கியது. உத்தரை தாங்கமுடியாத வலியால் துடித்தாள்.

உத்தரையின் வயிற்றை, பெண்ணாசை இல்லாத ஒரு சுத்தப் பிரம்மச்சாரி தடவினால் மட்டுமே பிரம்மாஸ்திரக் கட்டு விலகும்.

உத்தரையின் வயிற்றைத் தடவ, பிரபலமான பிரம்மச்சாரிகள் எவரும் முன்வரவில்லை.

ஆனால், ஆயிரக்கணக்கான கோபியருடன் குலாவிய கண்ணன் உத்தரையின் வயிற்றைத் தடவினான்.

பிரம்மாஸ்திரக் கட்டு விலகியது. உத்தரையின் கர்ப்பமும், பாண்டவர்களின் வாரிசும் காக்கப்பட்டது.

கிருஷ்ணன் எப்படி சுத்த பிரம்மச்சாரி

பெண்களே இல்லாத இடத்தில் இருந்து கொண்டு, அல்லது பெண்கள் தன்னை அணுகுவதைத் தவிர்த்துக் கொண்டு, வாழ்பவன் நைஷ்டிக பிரம்மசாரி அல்ல. பெண்கள் மத்தியிலே வாழ்ந்துகொண்டு அவர்களிடம் எந்தவித ஈடுபாடும் கொள்ளாமல் இருக்கிறவனே உண்மையில் வைராக்கிய பிரம்மசாரி.

பதினாயிரம் கோபியருடன் ஆடிப்பாடி ராஸலீலை புரியும் ஸ்ரீகண்ணன், அவர்கள் ஒருவரிடமும் ஈடுபாடு கொள்ளாமல், பற்றற்ற நிலையில் பரப்பிரம்மமாகவே இருக்கிறார்.

அவர் அன்பும் அருளும் அனைவருக்குமே சொந்தம். பிருந்தாவனத்துப் பசுக்களும், கோபிகையரும் அவர் கண்களுக்கு ஒன்றுதான்.

அவர் அன்புக்கும் அருளுக்கும் ஆண்-பெண் என்ற பேதமில்லை.

அவரை மற்றவர்கள் பிள்ளையாய், தந்தையாய், தாயாய், நண்பனாய், காதலனாய், குருவாய், தெய்வமாய் பாவிப்பது அவரவர்கள் மகிழ்ச்சிக்காகவே!

அவர் தண்ணீரில் உள்ள தாமரை இலை. அது தண்ணீரில் இருந்தாலும், தண்ணீர் அதில் ஒட்டுவதில்லை. அதுபோலவே, அவன் பற்றற்ற பரம்பொருள்.

பதினாயிரம் பெண்கள் நடுவே நெருக்கமாக வாழ்ந்து, அவர்கள் பாசத்துக்கும் நேசத்துக்கும் ஆளான போதும், மனதாலும் வாக்காலும், காயத்தாலும் (உடல்) இச்சையின்றி வாழும் அவரே “நைஷ்டிக பிரம்மசாரி”

இராமயண காலத்தில்
தண்டகாரண்யத்தில் இருந்த முனிவர்கள் பலர் ராமனின் அழகில் மயங்கினர்.

தாங்கள் பெண்களாகி, ராமனின் தோள்களைத் தழுவ விரும்பினர். ‘‘ஆடவர் பெண்மையும் அவாவும் தோளினாய்’’ என்று விசுவாமித்திரர் ராமனை அழைத்ததாகக் கம்பராமாயணம் கூறுகிறது.

ராமாவதாரத்தின் போது தண்டகாரண்யத்தில் முனிவர்களாக இருந்தவர்களே, கிருஷ்ணாவதாரத்தில் கோபிகைகளாகப் பிறந்தனர்.

தாங்கள் விரும்பியபடி, கண்ணனைத் தழுவி மகிழ்ந்தனர்.

ஆனால் பரமாத்மாவான கிருஷ்ணன் எவரிடத்திலும் ஆசை கொள்ளவில்லை! அதனால்தான் அவனை ‘நைஷ்டிக பிரம்மச்சாரி (ஆசையற்ற பிரம்மச்சாரி) என்று போற்றினர்.
வேதம் ஒரு புனிதமான சொல். இந்த சொல்லை உச்சரிக்க்கூட நமக்கு தகுதி இருக்கிறதா? என்பதை நாம் ஒவ்வொருவரும் அவரவர் மனதை தொட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

முதலில் வேதம் என்றால் என்ன என்று கூட தெரியாமல் "அ" னாவிலே இருக்கிறோம்.

வேதம் என்றால் மந்திரமா?   வேத ஹோமங்களா? பாடல்களா? செய்யுளா, வாய்ப்பாடா உரைநடையா?  என்னவென்றே தெரியாமல் பீடு நடை போடுகிறோம்.

வேதம் என்றால் " அறிவு" என்று மட்டும் யாரோ சொல்ல கேட்டுள்ளோம்.

சாதாரண அறிவா அது. ஞானம் என்னும் களஞ்ஜியம் அப்பா அது.

அந்த ஞானத்தை நாம் எளிதில் எட்டிப் பிடித்திடலாம் பிடித்துவிட்டோம் என்பது மிகவும் எள்ளி நகையாடும் செயலாகும்.

அப்பேர்ப்பட்ட வேத ரிஷியான பாரத்வாஜரே ஒரு சிறு கல் அளவுதான் வேதத்தை ஏற்றிருக்கிறார் என வேதம் கூறுகிறது.

மந்திரங்கள் சரியானபடி சரியான ஏற்ற இறக்கங்களோடு சரியான நேரத்தில் சரியான நோக்கத்திற்காக சரியானபடி சொல்லப்பட்டால் அந்த மந்த்ரங்கள் அனைவருக்கும் பலித்தமாகும்.

உண்மை பேசுதல் பொறாமை இல்லாதிருத்தல் பிறர் சொத்துக்கு ஆசை படாமல் இருத்தல் எல்லோரையும் சமமாக பாவித்தல் திருடாமை பிறருக்கு உதவி செய்தல் பொரறுமை போன்ற  குணங்கள் இருந்தால்தான் ஒருவர் சொல்லும் மந்த்ரங்கள் பலித்தமாகும்.

வேத ரிஷிகள் தங்களின் பாடல்களை தங்களின் ஞானத்தால் மந்திரங்களாக  மாற்றி  நமக்கு நல்ல ஒளி என்னும் பாதையை காட்டி சென்றார்கள்.

ஆனால் நாம் அவர்களுடைய மந்த்ரங்ஙளை பாடல்களாக மாற்றி நமது பார்வையினை இழந்துவிட்டிருக்கிறோம்.

இது அவர்களின் தவறல்ல. நாம் நமது வேதத்தைப் பற்றி ஒன்றும் தெரிந்து கொள்ளாதே அடிப்படை காரணமாகும்.

ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி நமது செயலுக்கு விளக்கம் சொல்லி சமாதானம் செய்து கொள்கிறோம்.
பாலசுப்ரமணிய கவிராயர்.

இவர் ஒரு சேய்த் தொண்டர் ஆவார்.

முருகப்பெருமானின் திருப்பணிகளிலும், அவனது புகழைப் பரப்புவதிலுமே தங்களது வாழ்வை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட அடியவர்கள் ‘சேய்த் தொண்டர்கள்’
ஆவார்கள்.

பழனியில் பெரியான் கவிராயர்'
என்னும் முருக பக்தர் வாழ்ந்து வந்தார்.

அவருக்கு திருமணம் ஆகி நீண்ட நாட்கள் குழந்தை இல்லாமல்
தவித்தார்.

தினமும் மலர் மாலை வாங்கி
பழனிப்பதிவாழ் முருகனை
வணங்கி
சஷ்டி விரதங்கள் கார்த்திகை விரதங்கள் இருந்து
முருகன் அருளால் ஆண் குழந்தையைப் பெற்றனர் கவிராயர் தம்பதியர்.

அக்குழந்தைக்கு பாலசுப்பிரமணியன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

பிறந்த குழந்தையின் கண்களும்
காதுகளும் செயல்படாமல்
இருக்க,
பெற்றோர்கள் வேதனையுடன்
குழந்தையை வளர்த்தனர்.

குழந்தைக்கு ஐந்து வயதாகும்போது, பழநிமலை ஆண்டவர் சந்நிதியில் தம் மகனைப் படுக்க வைத்து தவமிருந்தார் பெரியான் கவிராயர்.

அவரது வேண்டுதலுக்கு
செவி சாய்த இறைவன்
கந்தப் பெருமானே ஒரு சிவனடியார் போல வேடம் தரித்து
ஒரு கடப்ப மலரைக் கொண்டு
சிறுவனின் உடலை வருடி, பின்
கண்களிலும் செவிகளிலும் கடப்ப மலரால் மெல்ல ஒத்தி எடுத்தார்.

சிறுவன் பாலசுப்பிரமணியனின் கண்கள் ஒளிபெற்றன; செவிகள் கேட்கும் திறனைப் பெற்றன.

பிறகுதான், `சிவனடியார் வேடத்தில் வந்தவர் முருகப் பெருமானே' என்பதை உணர்ந்து வியந்தார் கவிராயர்.

தம் மகனுக்கு தக்க ஆசிரியரிடம் தமிழ் மொழி வடமொழி
ஆகியவற்றை பயிற்றுவிக்க ஏற்பாடு செய்தார்.

அதன்படி, துறைசை ஆதீனத்து சுப்பிரமணியத் தம்பிரானிடம் சைவ சித்தாந்தமும் கௌமார தத்துவமும் பயின்றான், பாலசுப்ரமணியன்.

பின்னர் பல தலங்களை தரிசித்தார் பாலசுப்ரமணியன்.

அவர் இயற்றிய நூல்கள்

சைவ சித்தாந்த தரிசனம், பாஞ்சராத்ர மதச பேடிகை, வேதாந்த சித்தாந்த சமரச தீபம், கூவின நீப மான்மியம், அக்கதீபிகை

பாலசுப்ரமணியன்
தஞ்சை சமஸ்தானத்தில் ‘கவிராயர்’ பட்டமும் பாராட்டும் பெற்றார்.

பழநியின் பெருமைகளையும் அற்புதங் களையும் விவரிக்கும் ‘பழநிப்புராணம்’ என்னும் மிக உயர்ந்த நூலை இயற்றி முருகன் சந்நிதியில் அரங்கேற்றினார்.
*🚩ராமரின் வெற்றிக்கு வழிகாட்டிய* *திருப்புல்லாணி கோவில்!*

*🔯ஸ்ரீராமாயண காலத்துக்கு முற்பட்ட தலமாக விளங்குவதால், புராதனக் கோவில்களின் வரிசையில் முன்னிலை வகிக்கிறது,*

 ‘திருப்புல்லாணி’ திருத்தலம். 108 திவ்யதேசங்களில் ஒன்றாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது.

இந்த ஆலயத்தின் மூலவரான ஆதிஜெகன்னாதப் பெருமாள் திருமகளும், நிலமகளும் இருபுறமும் நிற்க, அமர்ந்த நிலையில் அருட்காட்சி நல்குகிறார். புனித பாரதத்தில் எத்தனை ஜெகன்னாதர் கோவில் இருப்பினும், இவர் மிகவும் பழமையானவர் என்பதால் ஆதி ஜெகன்னாதர் எனப்படுகிறார். இறைவனுக்கு ‘புல்லாணித் தென்னன் தமிழன்’ என்பது திருமங்கை ஆழ்வார் செல்லமாக வைத்த பெயர். உற்சவர் கல்யாண ஜெகன்னாதர்.

‘சக்கர தீர்த்தம்’ என்னும் தாது கலந்த தெள்ளிய திருக்குளத்தின் முன்பு, வண்ணங்கள் அள்ளித் தெளித்த ஐந்து நிலை ராஜகோபுரம் உயர்ந்து நிற்கிறது. அதனைக் கடந்து உள்ளே நுழையும் போதே வேத மந்திரங்கள் காற்றில் தவழ்ந்து நம் செவிகளைப் புனிதமாக்குகிறது. பலிபீடம், கொடிமரம், பெரிய மண்டபத்தில் சேவிக்கும் கருடாழ்வார், அவர் முன்பாக கல்யாண விமானத்தின் கீழ் கடல்நிறப் பெருமாள் காட்சி தருகிறார்.

ராமபிரான் சேது கடலில் பாலம் கட்டி இலங்கைக்குச் சென்று ராவணனை வெல்ல இத்தலப் பெருமாளைச் சேவித்து கோதண்டம் பெற்றதாகத் தலபுராணம் விளக்குகிறது.

தென்பிரகாரச் சுற்றில் விமானத்தில் சற்று உயர்ந்த பகுதியில் லட்சுமிநரசிம்மர் எழுந்தருளியிருக்கிறார். மண்டபங்களில் சிற்பங்கள் சிந்தையைக் கவர, நாம் இரண்டாம் சுற்றினைத் தாண்டியதும் தென் பிரகாரத்தில் பத்மாசனித் தாயார் மூலவராகவும், உற்சவராகவும் புன்னகைத்தபடி தனிச் சன்னிதியில் அமர்ந்திருக்கிறார். வடமேற்குத் திசையில் கோதை நாச்சியார் கொலு விற்றிருக்கிறார்.

வடக்குப் பிரகாரத்தில் மூலவர் சன்னிதிக்கு வடகிழக்கே தர்ப்ப சயனப் பெருமாள் சன்னிதி விளங்குகிறது. வழக்கமாகப் பள்ளி கொண்ட பெருமாளாக அரங்கநாதரும், பத்மநாபரும், ஆதிகேசவரும் மற்ற கோவில்களில் இருக்கும் போது, இங்கே ராமபிரான் இடுப்பில் உடைவாளோடு தர்ப்பைப் புல்லின் மீது படுத்து துயில் கொள்வது காணக் கிடைக்காத திருக்காட்சி.

இந்த சன்னிதியின் இருபுறமும் நிற்கும் துவாரபாலகர்கள் பகை வருக்குப் பயமூட்டும் தோற்றத்துடன் இருப்பது சிறப்பு. ராவணன் தூதர்கள் முன்னே வந்தால் ‘என்னை மானுடனாக மட்டும் எண்ணி விடாதே’ என்பது போல தோற்றத்துடன் வீர ராமன் காட்சித் தருகிறார். நாபியிலிருந்து மூன்று தண்டுகள் எழுந்து, ஒரு தண்டில் உள்ள தாமரையில் பிரம்மனும், மற்ற இரு தண்டுகளில் சூரிய - சந்திரர்களும் இருக்கிறார்கள். மேலே முப்பத்து முக்கோடி தேவர்களும் ஆலோசனையில் ஈடுபட்டதாக நுண்ணிய சிற்பங்கள் மின்னுகின்றன.

#கருவறையைச் சுற்றிலும் இக்கதை வண்ணப்படங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் சிறப்பாக மிளிரும் சிற்பக்கலை போல, சித்திரக் கலைக்கும் சான்றாக விளங்குகிறது.

இந்தச் சன்னிதிக்கு முன்னதாக சந்தான கோபாலன் தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். எட்டு யானை களுடனும், எட்டு நாகங்களுடனும், ஆமையை ஆசனமாகக் கொண்டுள்ள ஆதிசேஷன் மீது கண்ணன் காட்சி தருகிறார். இவரைப் பிரார்த்தித்துக் கொண்டு நாகப் பிரதிஷ்டை செய்தால், நாகதோஷமும் புத்திரதோஷமும் விலகும் என்பது நம்பிக்கை.

அதன் எதிரே கொடிமரத்துடன் கூடிய பட்டாபிராமர் சன்னிதி உள்ளது. ராவண வதம் முடித்து புஷ்பக விமானத்தில் சீதையுடன் திரும்பும் போது, பக்தர்களின் வேண்டுகோளுக்கு இசைந்து இங்கே பட்டாபிஷேக காட்சியை ராமன் கொடுத்தாராம். இந்தச் சன்னிதியில் நின்ற நிலையில் ராமனும், அருகே தம்பி லட்சுமணனும், சீதை உடனிருக்க தோற்றம் தர அனுமன் குவித்த கரங் களோடு நிற்கிறார்.

இந்த திவ்விய தேசத்தில், பின்புறம் தல விருட்சமாக ஆண்டுகள் பல கடந்த அரசமரம் உள்ளது. இலையிலிருந்து வேர்வரை மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த அரச மரத்தைச் சுற்றினால் குழந்தைப் பேறு வாய்க்கும் என்பது பொதுவான கருத்து. ‘மரங்களில் நான் அரசாக இருக்கிறேன்’ என்பது கீதையில் கண்ணன் வாக்கல்லவா! இம்மரத்தடியில் தான் பக்தர்கள் நாகப்பிரதிஷ்டை செய்கிறார்கள்.

திருப்புல்லாணி வந்து, கல்யாண ஜெகன்னாதரை சேவிக்க திருமணத் தடைகள் நீங்கும் எனவும், சந்தான கோபாலரை வணங்கி அரசமரம் சுற்றினால் மழலைப் பேறு கிடைக்கும் எனவும், ராம பிரானை வழிபட்டால் வெற்றிகள் குவியும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.

அமைவிடம்

ராமநாதபுரத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் ராமநாதபுர சமஸ்தான கோவில்களில் ஒன்றாகத் திகழும் திருப்புல்லாணி ஆலயம், தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும். இங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் தான் கடலரசன் ஆட்சி செய்யும் சேதுக்கரை நீல நிறத்தில் காட்சி தருகிறது.
அதிகாலை நேரம்.

யமுனை நதிக்கரையில் காலவ முனிவர் சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்தார்.

அர்த்தியம் விடுவதற்காக புனித நீரை இரண்டு கைகளிலும் அள்ளி எடுத்தார்.

கண்ணனை நினைத்து கேசவம் தர்ப்பயாமி! நாராயணம் தர்ப்பயாமி என்று கண்களை மூடி பக்தியோடு அர்க்கிய மந்திரங்களை ஜபித்தார்.

கைகளில் இருந்த நீரில் ஏதோ ஒன்று வந்து விழுந்தது. கண் திறந்து பார்த்தார். எச்சில் தாம்பூலம் மிதந்தது. வெற்றிலையை மென்று இருந்த நீரில் துப்பியவர் யார் என்று ஆகாயத்தைப் பார்த்தார்.

புஷ்பக விமானத்தில் கர்ந்தர்வன் தன் மனைவியோடு உல்லாசமாக பறந்து கொண்டிருந்தான். காலவருக்கு கோபம் பொங்கியது.

கடவுளுக்காக
கையிலெடுத்த புனித நீரை அசுத்தப்படுத்திவிட்ட கந்தர்வன் இன்று மாலை சூரிய அஸ்தமனத்துக்குள் தலை அறுபட்டு சாகட்டும் என்று சபித்தவர் மீண்டும் கைகளைச் சுத்தம் செய்து கிருஷ்ணா கிருஷ்ணா என்று அழைத்தப்படி அர்த்தியத்தை முடித்து நீரிலிருந்து வெளிப்பட்டார்.

நாரதர், இதற்காகவே காத்திருந்தது போல் காலவ முனிவரை நெருங்கினார்.

காலவ முனிவரே...கந்தர்வன் தெரிந்து தவறு செய்யவில்லை. ஆனால் நீங்கள் சட்டென்று சபித்து விட்டீர்களே.

கந்தர்வர்கள் இப்போதுதான் மேல் நோக்கி எழுகிறார்கள்.

தாங்கள் இப்படி செய்யலாமா? என்று கேட்டார். அவன் அர்த்தியம் செய்த போது எச்சிலை உமிழ்ந்தானே அது சரியா என்று கேட்டார் காலவ முனிவர்.

அது தவறு தான் முனிவரே ஆனால் அவன் அறிந்து செய்யவில்லை. அவன் உமிழ்ந்தது காற்றின் வேகத்தில் சரியாக உமது கரத்தில் விழுந்து விட்டது.

அதற்கு சிறிய தண்டனை கொடுத்திருக்கலாம்.

ஆனால் அறியாமல் செய்த தவறுக்கு நீங்கள் அளித்த தண்டனையால் கந்தர்வர்களின் கோபங்கள் உங்கள் மீது திரும்பும்.

நீங்கள் கண்ணனிடம் சென்று கந்தர்வனை கொல்ல சொல்லுங்கள்.

அப்போதுதான் யாரும் உம் மீது கோபப்பட மாட்டார்கள் என்றார்.

காலவ முனிவர் துவாரகை சென்று கண்ணனை சந்தித்து நடந்ததைக் கூறி நான் உன் பக்தன் ஆயிற்றே. எனது வேண்டுதலுக்கு செவி சாய்க்க வேண்டும் என்றார். கண்ணனும் கந்தர்வனை கொல்ல ஒப்புக்கொண்டார்.

இடையில் நாரதர்,

கந்தர்வனை காணச்சென்றார். கண்ணன் கொல்கிறாரா என்று பதறிய கந்தர்வன் அழத்தொடங்கினான்.

அவனது மனைவியிடம் நாரதர் அர்ஜூனனது மனைவி சுபத்திரை உனக்கு தோழிதானே அவளிடம் சென்று உன் கணவனை காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் வை.

ஆனால் கண்ணன் தான் கொல்லப்போகிறான் என்று முதலிலேயே சொல்லாதே என்றார்.

கந்தர்வனின் மனைவியும் சுபத்திரையின் காலில் விழுந்து தன் கணவனை காப்பாற்ற வேண்டும் என்று மன்றாடினாள்.

சுபத்திரை அர்ஜூனனிடம் அழைத்து சென்று நடந்ததைக் கூற அர்ஜூனனும் கொல்ல வருபவனிடமிருந்து உன் கணவரை மீட்கிறேன். யார் அது உன் கணவரைக் கொல்வேன் என்று சொல்வது என்று கேட்டான்.

கந்தர்வன் மனைவி அப்போதுதான் கண்ணன் என்ற பெயரைக் கூறினாள்.

இருவரும் விக்கித்து போனார்கள். ஆனால் கொடுத்த வாக்கை காப் பாற்ற வேண்டுமே என்று அர்ஜூனன் கந்தர்வனுக்காக கண்ணனை எதிர்த்து நின்றான்.

ஒருவர் மீது ஒருவர் விட்ட அம்புகள் மலர்மாலையாக மாறியது.

நாரதர் திகைத்தார்.

விடுவிடுவென கண்ணனிடம் சென்றார். அர்ஜூனன் மீது எதற்கு வில் அம்பு. நேராக கந்தர்வன் மீது செலுத்து கண்ணா என்றார்.

கண்ணனும் நாரதர் கூறியபடி அம்பை கந்தர்வன் கழுத்தில் எய்தார்

தலை தனியாக வந்து விழுந்தது.

கந்தர்வனின் மனைவி அர்ஜூனனின் காலில் வீழ்ந்து கதறினாள்.

என்னவாயிற்று என் கணவரின் உயிரை காப்பேன் என்றீர்களே என்று அழுதாள்.

சிறிது நேரம் கழித்து நாரதர் கண்ணா காலவ முனிவர் உன் பக்தர் என்பதால் கந்தர்வனை கொன்றுவிட்டாய். ஆனால் அர்ஜூனனும் உனது பக்தன் தான் என்பதால் கந்தர்வனைக் காப்பதும் உன் கடமை தான் என்றார்.

சற்றே யோசித்த கண்ணன் அதுவும் சரிதான் என்றபடி கந்தர்வனுக்கு உயிர் கொடுத்தார்.

கந்தர்வனும் அவன் மனைவியும் கண்ணனிடமும், காலவ முனிவரிடமும், நாரதரிடமும், அர்ஜூனனிடமும் நன்றி தெரிவித்து வணங்கினார்கள்.

பக்தர்களைக் காப்பதில் வேறுபாடு பார்க்காத கண்ணனுக்கு பூமழை தூவி வாழ்த்தினார்கள்.
*லிங்க புராணம் ~ பகுதி — 05*

      *பகவான் உந்தியில்*
       *தோன்றிய பரமன்*
  ======================

மாதவன் உந்தித் தோன்றல் மலரோன் பிரம்மனாவான். மாதவனுக்கும்., மலரோனுக்கும் ஏற்பட்ட போட்டி பற்றி ஏற்கனவே கண்டோம். அப்போது திருமால் பிரம்மனிடம்., உலகைப் படைப்பவர் அவர் என்றால்., ஈரேழு உலகங்களையும் அவர் உதிரத்தில் காட்ட முடியுமா என்று கேட்டு., பிரம்மன் வாய்வழிச் சென்று அவர் வயிற்றில் சகல புவனங்களையும் கண்டு திருப்தி பெற்றவனாய் வெளிவந்தார். அப்போது பிரம்மன் திருமாலிடம் ஐயம் தீர்ந்ததா என்று கேட்டு., அவர் வயிற்றிலும் அனைத்து லோகங்களையும் காட்ட முடியுமா என்று கேட்க., திருமால் அதற்கு ஒப்பி அவர் வாய் வழியாகச் செல்ல அனுமதித்தார். நான்முகன் நாராயணன் வயிற்றை அடைந்து அங்கே சகல புவனங்களையும் கண்டான். பின்னர் திரும்ப எண்ணி மேல் நோக்கிப் புறப்பட, அஃதறிந்த மாதவன் அவர் வெளிப்படாதிருக்க வழியில்லாது செய்து விட்டார். வெளியில் செல்லும் வழியை அடைய முடியாமல் சுற்றிச் சுற்றிக் களைந்து விட்டார் பிரம்மன். அப்போது மாதவன் தொப்புள் குழியிலிருந்து தாமரை மலரின் தண்டைக் கண்டார். தன் உடலை அணுவாக்கிக் கொண்டு தண்டின் வழியே மேலே ஏறி வந்தார். மேலே வந்ததும் மொட்டின் மீது வெளிப்பட்டு மலர் மேல் அமர்ந்தார். அப்போது அங்கே சூலம் ஏந்தி சிவபெருமான் தோன்றினார். ஆனால் அவரை அடையாளம் தெரியாமல் பிரம்மன்., நான் வெளிவர முடியாமல் வழிகளை மறைத்தது மட்டுமின்றி புதிய தோற்றத்துடன் நிற்கிறாயா நீ என்று திருமாலை கேட்பதாக எண்ணி ஈசனிடம் கேட்டார். அது கேட்டுத் திருமால் பிரம்மனிடம் "அவன்" பெருமையை அறிய., தானே வழிகளை அடைத்ததாகவும்., உன்னை தன் மகனாகக் கமலத்தில் இருத்திக் கொள்ளவே அவ்வாறு செய்ததாகவும் மாலவன்., மலரவனிடம் கூறினான். அப்பொழுது தன் எதிரில் இருக்கும் அப்புருஷன் யார்..? என்று பிரம்மன் கேட்க., நாராயணன் இவருக்கு நிகர் இவரே..! இவரைத் தவிர வேறு தலைவன் இல்லை. சகல ஜீவராசிகளுக்கும் இவரே உயிராக விளங்குகிறார் என்றார். மாயையால் சூழப்பட்ட பிரம்மனால் ஈசனை உணர முடியவில்லை. ஒவ்வொரு கற்பத்திலும்., பிரம்மன் மாயையால் மயங்கி அலைய., ஈசன் அவர் மயக்கம் தீர அழற் சுடராகத் தோன்றி அருளுகிறார். இனியாவது ஈசனை உணர்ந்து அவரைத் தொழுது அருள் பெறுவாய் என்று மாதவன் பிரம்மனுக்கு அறிவுரை வழங்கினார். இருவரும் பக்தியோடு ஈசனைத் துதித்துப் போற்றினர்.

தொடரும்.....

*குங்கும சம்தன லேபித லிங்கம்*
*பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம் |*
*ஸஞ்சித பாப வினாஸன லிங்கம்*
*தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் ||*