சனி, 4 ஜூலை, 2015

நியாயமாக நடப்போம்
♡ ஒருவருக்கு நியாயமாக இருப்பது, மற்றொருவருக்கு நியாயமாக இருக்காது.
♡ நியாயம் என்ற சொல்லுக்கு"முறை'என்று பொருள்.எந்தச் செயலையும் அதற்குரிய முறைப்படி செய்வதே நல்லது.
♡ மரத்திற்கு மரம் தாவும் குரங்கு போல மனித மனம் ஆசை வயப்பட்டு அலைந்து திரிகிறது.
♡ தான் என்னும் அகம்பாவம் இல்லாமல் செயல்பட்டால் பாவ புண்ணியம் நம்மைத் தீண்டுவதில்லை.
♡ ஒழுக்கமுடன் வாழ்பவனின் ஒவ்வொரு செயலிலும், ஒழுக்கத்தின் உயர்வான தன்மை பிரதிபலிக்கும்.
♡ காஞ்சி மஹா பெரியவா

ஸ்வயம்பிரகாச ஸ்வாமிகள்
ஆன்மிகம் தழைத்தோங்கும் நம் பாரத தேசத்தின் அருங்கொடையே மகான்கள்தான்.இவர்கள் இறைவனின் அவதாரமாகக் கருதப்படுகிறார்கள்.இன்னல்கள் தீர்க்கும் குருவாகப் போற்றப்படுகிறார்கள். காஞ்சி மகா ஸ்வாமிகளை சிவ சொரூபமாகவே கருதி அவருக்கு ருத்திராட்சம் மற்றும் வில்வ மாலைகள் சூட்டி ஈசனையே கண் குளிரக் கண்டதும்போல் தரிசித்து மகிழ்ந்த பக்தர்கள் ஏராளம்.தாங்கள் வணங்கும் தெய்வ வடிவங்களை நடமாடும் மகான்களின் வடிவில் கண்டு வணங்கினார்கள் பேரின்பம் பெற்றவர்கள்.ஷீரடி சாய்பாபாவின் பக்தர் ஒருவர் பண்டரிபுரத்தில் உறையும் ஸ்ரீபண்டரிநாதனின் மீது அளவு கடந்த பக்தி கொண்ட தன் நண்பரை அழைத்துக்கொண்டு ஷீர்டி சென்றார்.அங்கே சாய்பாபாவை வணங்கச் சென்றபோது பண்டரிநாதன் பக்தரையும் உடன் அழைத்தார.
பாபாவை நான் வணங்க மாட்டேன்.அவர் எனக்கானவர் இல்லை என்று மறுத்தார் நண்பர்.மகானான சாய்பாபா இதை எல்லாம் அறியாதவாரா?விடவில்லை.எந்த பண்டரிநாதனைக் கண்டால் கன்னத்தில் போட்டுக்கொண்டு அந்த நண்பர் உருகி தரிசிப்பாரோ.அந்த பண்டரிநாதனாகவே அவருக்குக் காட்சி தந்து அருளினார் ஷீர்டி மகான்.ஆம் இறை நெறி எங்கும் பரவ வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு ஆத்மாக்களை அனுப்பி வைத்துக்கொண்டே இருக்கின்றான் இறைவன்!கலியுக மக்கள்தான் அதை உணர்வதில்லை.தர்மம் நலிந்து அதர்மம் பரவும் போதெல்லாம் நான் அவதரித்துக் கொண்டே இருப்பேன் என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் சொல்லி இருக்கிறார்.
தெய்வ பக்தி தேசமெங்கும் பரவி ஆன்மிக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதற்கு இந்த மகான்கள் துணை நின்றார்கள்.வேதத்தின் சாராம்சத்தையும் சாஸ்ரத்தின் கருத்துகளையும் மக்கள் மத்தியில் இவர்கள் எடுத்து வைத்தார்கள்.இந்து மதத்தைப் பொறுத்தவரை ஆதிசங்கரரில் இருந்து இது ஆரம்பம்.அவரது பாதையை அடியொற்றி எத்தனையோ மகான்கள் மகரிஷிகள் துறவிகள் இந்த பூமியில் அவதரித்துள்ளார்கள்.எந்த நோக்கத்துக்காக அவர்களுடைய அவதாரம் நிகழ்ந்துள்ளது என்பதையும் இறைவன் இந்த மகான்களுக்கும் ஒரு கட்டத்தில் எடுத்துரைத்தான்.இப்படி இந்த பூமியில் அவதரித்து மகான்களுள் ஒருவரே ஸ்வயம்பிரகாச அவதூத ஸ்வாமிகள்.அவதூதர்களில் சிலர் உடலில் ஒரு பொட்டுத் துணிகூட இல்லாமல்.திகம்பரராகத் (நிர்வணமாக)திரிவர்.இதை அருவருப்பாக எண்ணக்கூடாது.இது பக்தியின் ஒர நிலை.அவதூத பரம்பரையின் ஆதி குரு தத்தாத்ரேய பகவான்.
விஸ்வரூப ஆஞ்சநேய மூர்த்தியும் நாமகிரித் தாயாருளள் நரசிம்ம மூர்த்தியும் அருள் பாலிக்கும் தலம் நாமக்கல்.இந்த நகருக்கு அருகில் உள்ள சேந்தமங்கலத்தில் தத்தகிரி எனப்படும் குன்றில் தத்தாத்ரேயர் கோயில் கொண்டுள்ளார்.கொல்லிமலைச்சாரலில் குன்றுகள் சூழ பொலிவோடு அமைந்திருக்கும் அழகிய ஊர் சேந்தமங்கலம்.நாமக்கல்லில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவு.பேருந்து வசதிகள் உண்டு.தத்தாத்ரேயர் சந்நிதியின் நேர் கீழே ஸ்வயம்பிரகாச ஸ்வாமிகள் அதிஷ்டானம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தைத் தன் குருவான தத்தாத்ரேயரின் ஆணைப்படி இங்கே கட்டி முதல் கும்பாபிஷேகத்தை 29.5.1931ல் செய்து வைத்தார் ஸ்வயம்பிரகாச ஸ்வாமிகள்.அதன்பிறகு ஸ்வயம்பிரகாசரின் சீடரான சாந்தானந்த ஸ்வாமிகள் இதே திருக்கோயிலில் ஸ்ரீமுருகப் பெருமான் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து 20.2.1983ல் மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தார்.சாந்தானந்த ஸ்வாமிகளின் பணி அதோடு நின்றுவிடவில்லை.ஸ்கந்தாஸ்ரம் பாரம்பரியத்துக்கே உரித்தான முறையில் தத்தகிரியின் அடிவாரத்தில் மேலும் பல விக்கிரங்களை பிரமாண்ட முறையில் நிறுவினார் சாந்தானந்த ஸ்வாமிகள் ஹேரம்ப மகாகணபதி ஐயப்பன் தட்சிணமூர்த்தி.பஞ்சமுக ஆஞ்சநேய மூர்த்தி சனைச்சரர் கருப்பண்ணசாமி இடும்பன் தத்தகங்கை ஆகிய சந்நிகளை அமைத்தார்.ஸ்ரீதத்தகிரி முருகன் சபா மண்டபம் என்கிற திருநாமத்துடன் பெரிய மண்டபம் ஒன்றையும் கட்டுவித்தார் சாந்தானந்த ஸ்வாமிகள்.
குன்றுதோறும் குடியிருக்கும் முருகப் பெருமான்.தத்தகிரியில் சுமார்ஆறேகால் அடி உயரத்தில் அருள் புரிகிறார்.வலது கையில் ஞானத்தின் சின்னமான வேல்.இடது கையை இடுப்பின் மீது வைத்து புன்கை தவழக் காட்சி தரும் இந்த முருகனைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.இந்த திருக்கோயிலுக்கு 14.7.08 அன்று குடமுழுக்கு விமரிசையாக நடந்துள்ளது.இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் வரும் இந்தத் திருக்கோயிலுக்குத் திருப்பணியையும் குடமுழுக்கு செய்யும் அருங்காரியத்தையும் ஏற்றுக்கொண்டு சிறப்பாகச் செய்து முடித்தார் ஸ்வாமி ஓங்காராநந்தர்.இந்தக் கும்பாபிஷேகத்துக்கு சுமார் ஐம்பது லட்ச ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.இந்தத் தொகையை சென்னையில் உள்ள ஸ்ரீசாந்தானந்த சத்சங்க டிரஸ்ட் என்கிற அமைப்பே ஏற்றுக்கொண்டது பாராட்டப்டட வேண்டியது.தன் பரமகுருவான ஸ்வயம்பிரகாசரின் அதிஷ்டானத்தை உலகளாவிய பார்வைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவும் பக்தி நெறி தழைத்தோங்கவும் ஸ்வாமி ஓங்காராநந்தரே முன்னின்று இந்தக் கும்பாபிஷேக வைபவத்தை நடத்தி முடித்தார்.பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்தச் சிறு கிராமத்தில் அன்றைய தினம் ஒட்டுமொத்தமாகத் திரண்டது.ஸ்வயம்பிரகாசரின் மகிமை என்றே சொல்ல வேண்டும்.மண்டலாபிஷேகம் பூர்த்தியாகும் வரையில் சேந்தமங்கலத்திலேயே தங்கியிருந்தார் ஸ்வாமி ஓங்காராநந்தர்.இந்தக் கோயில் இங்கு அமைவதற்குக் காரணமாக இருந்த ஸ்வயம்பிரகாசரைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்வது அவசியம்.
எதன் மேலும் பற்றில்லாத மகான்களின் தன்மையை அவதூதம் என்பர்.இவர்கள் உணவு உடை வசதியான வாழ்க்கை போன்றவற்றில் பற்றில்லாதவர்கள்.அதாவது இவர்களின் உள்ளத்தை ஆசைகள் மறைக்காது; வயிற்றைப் பசி மறைக்காது!இப்படிதான் அவதூதராக இருந்தார் ஸ்வயம்பிரகாசர். விழுப்புரத்தில் இருந்து சுமார் 16 கீ.மி. தொலைவில் உள்ள கல்பட்டு என்கிற கிராமத்தில் 28.12.1871 அன்று தோன்றினார் ஸ்வாமிகள்.இவருடைய தந்தையார் ராமசாமி சாஸ்திரிகள்.தாயார் ஜானகி குழந்தைக்கு கிருஷ்ண மூர்த்தி என்ற நாமகரணம் சூட்டினர் பெற்றோர்.குடும்பத்தில் வறுமை இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் தன் மகனை சாஸ்திரம் வேதம் முதலானவற்றைக் கற்று தேர்வதற்கு நன்றாகப் பயிற்சி கொடுத்தார் தந்தை.ஏழாவது வயதில் உபநயனம் திருவிடைமருதூரில் ஆங்கிலக்கல்வியில் தேர்வு 19வது வயதில் மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி நாராயண சாஸ்திரிகளிடம் தர்க்கம் மீமாம்சம் வியாகரணம் முதலானவற்றைக் கற்றது, தவிர தமிழில் புலமை பெற தேவாரம் திருவாசகம் நாலாயிர திவ்யபிரபந்தம் திருக்குறள் முதலானவற்றைக் கற்றல் என்று போனது ஸ்வயம்பிரகாசரது கல்விக் காலம்.
குடும்பம் என்ற பந்தத்தில் இருந்து விடுதலையாகி.வாரணாசி சென்று மன்னார்குடி ராஜு சாஸ்திரிகள். திருவண்ணாமலை தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் ஆகியோரிடம் அனுக்கிரகம் பெற்றார்.மதுரையில் ஜட்ஜ் ஸ்வாமிகளிடம் சந்நியாசம் ஏற்று உபதேசம் பெற்றார்.அப்போது ஜட்ஜ் ஸ்வாமிகள் இடுப்பில் ஒரே வஸ்திரத்துடன் உன் தாயாரிடம் செல்.அவரை மூன்று முறை வலம் வந்து பிரார்த்தித்து நமஸ்காரம் செய்.அங்கேயே சிறிது நேரம் இரு.அதன்பின் உனது விருப்பப்படி அவதூதம் நிகழும்.நீ விரும்பியபடி ஆன்மிக பலத்தைப் பெறுவாய்.இறைவன் அருள் உனக்குப் பரிபூரணமாக இருக்கிறது என்று அருளினார்.அதன்படியே ஸ்வயம்பிரகாசர் அன்னை இருந்த இடத்துக்குச் சென்று அவரை மூன்று முறை வலம் வந்து.அவருடன் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தார்.புறப்படலாம் என்று அவர் எழுந்தபோது அவரை அறியாமலேயே அவர் இடுப்பில் இருந்து ஏகவஸ்திரம் நழுவி பூமியில் விழுந்தது. ஸ்வயம்பிரகாசர் அவதூதப் பரம்பரையில் தன்னைச் சேர்த்துக்கொண்டது இப்படித்தான்.அப்போது ஸ்வாமிகளுக்கு வயது 28.
அவதூதராகிப் பல தங்களுக்கு ஸ்வாமிகள் சென்றபோதெல்லாம் அறியாமையால் பலரும் அவர் மீது கல் எறிந்தார்கள்.கிண்டல் செய்தார்கள்.அவருக்கு நெருப்பு வைத்தார்கள்.சந்நியாச வாழ்க்கையில் தன்னை இணைத்துக்கொண்ட ஸ்வாமிகள் கோபப்படவில்லை.பிறருடைய தவறான செயல்களுக்காக இறைவனிடம் மன்னிப்புக் கோரினர்.பாதயாத்திரையாகவே பல தலங்களுக்கும் சென்றார்.சுமார் 18 ஆண்டுகள் அவருடைய யாத்திரை நீடித்தது.மகானின் காலடி பட்டதால் அந்த இடங்கள் புனிதமாயின. இறுதியில் சேந்தமங்கலம் வந்து ஆன்மிகப் பணிகளைத் தொடர்ந்தார்.1948 டிசம்பர் மாதம் தனது 71 வது வயதில் மகா சமாதி அடைந்தார் ஸ்வயம்பிரகாசர் அவருடைய வாழ்வில் நடந்த சில அற்புதங்களைப் பார்ப்போம்.ஒரு முறை திருச்சி-கரூர் இடையே உள்ள லாலாபேட்டை என்ற கிராமத்தில் பெருக்கெடுத்தோடும் காவிரி நதியை ஸ்வாமிகள் கடக்க நேரிட்டது.அப்போது அவர் திகம்பரராக இருந்தால் பரிசலில் அவரை ஏற்ற மறுத்துவிட்டனர் பரிசல் ஓட்டிகள்.பரிசலில் அவர் ஏறினால் மற்ற பயணிகள் அருவருப்படைந்து இறங்கிவிடுவார்களே தங்களது வருமானம் போய்விடுமே என்று பரிசல் ஓட்டிகள் கவலை கொண்டனர்.
பார்த்தார் ஸ்வாமிகள் தன் கையில் அப்போது வைத்திருந்த பனை ஓலை விசிறியை வெள்ளத்தில் மிதக்கவிட்டார்.அதன் மீது ஏறி நின்று பயணித்து ஆற்றின் மறு கரையை அடைந்தார்.பரிசலில் இருந்தவர்களும் பரிசல் ஓட்டிகளும் அவருடைய சித்து வேலையைக் கண்டு பிரமித்து.மறு கரைக்கு வந்தவுடன் அவருடைய கால்களில் விழுந்து தங்கள் செயலுக்கு மன்னிப்புக் கேட்டனர்.சித்து வேலை என்பது அந்த நேரத்தில் கூடி வருவது!இதை செய்யப்போகிறேன் என்று எவரும் முன்னறிவிப்பு கொடுத்து செய்துகாட்ட மாட்டார்கள்.சந்நியாசிக் கரடு என்பது சேந்தமங்கலத்தில் சந்நியாசிகள் கூடும் ஒரு குன்று.இதன் முகப்புப் பகுதியில் உள்ள குகை ஒன்றுக்குள் சென்று தொடர்ந்து ஆறு மாதங்கள் நிரிவிகல்ப சமாதியில்(உள்ளுக்குள்ளும் வெளியேயும் என்ன நடக்கிறது என்று எதுவும் தெரியாது.தன் மேல் ஒரு பாம்பு ஊர்ந்தால் கூட உணர்வுகள் இருக்காது இதையே பரப்பிரம்ம நிலை என்று கூறுவார்கள்)இருக்கத் தீர்மானித்தார்.குகைக்குள் தன்னை வைத்துப் பூட்டுமாறு சிஷ்யர்களிடம் சொன்னார்.குருவின் வாக்கை மீறாத சிஷ்யர்கள் குகையைப் பூட்டிவிட்டு வாயிலியே குருவின் நாமத்தை உச்சரித்தபடி தங்கினர்.
ஸ்வாமிகள் நிர்விகல்ப சமாதியில் இருப்பதைக் கேள்விப்பட்ட அக்கம்பக்கத்து கிராமத்து மக்கள் சந்நியாசிக் கரடை அடைந்து குகை வாசலில் நின்று அவரை தரிசித்துச் சென்றனர்.அப்போது சேலத்தில் இருந்த டெபுடி கலெக்டர் ஒருவர்.இந்த விஷயத்தை அறிந்தார்.தனி மனிதனை இப்படிப் பூட்டி வைப்பது அவரை சித்ரவதை செய்வதாகும் என்பது அவரது பணிக்கு எட்டிய அறிவு.எனவே பதறியபடி ஊழியர்களுடன் ஜீப்பில் குகை வாசலுக்கு வந்து சேர்ந்தார்.சிஷ்யர்களிடம் பூட்டைத் திறக்கச் சொன்னார். குருவின் உத்தரவுக்கு முன் அதிகாரியின் அதட்டல் எம்மாத்திரம்!குருவை இந்த நிலையில் தொந்தரவு செய்யக்கூடாது.அந்த பாவச் செயலை செய்ய மாட்டோம் என்று சிஷ்யர்கள் மறுத்துவிட்டனர்.
பார்த்தார் டெபுடி கலெக்டர்.தனது சிப்பந்தியை அதிகாரமாக அழைத்து பூட்டை உடனே உடைத்தெறி என்றார்.கட்டளைக்குப் பணிந்து அவரும் அதை உடைத்தெறிந்தார்.உள்ளே கிழக்கே தலையும் மேற்கே காலுமாகத் தரையில் படுத்திருந்தார் ஸ்வயம்பிரகாசர்.அவருக்கு அப்போது உலகப் பிரக்ஞை இல்லை. உடல் இளைத்து எலும்பும் தோலுமாகக் காட்சியளித்தார்.இந்தக் காட்சியைக் கண்டதும் சீடர்கள் குருவே....என்று கண்ணீர் விட்டுப் புலம்பினர்.ஸ்வாமிகளின் உடலில் உயிர் இல்லை என்பதை சில வினாடிகளில் தீர்மானித்த டெபுடி கலெக்டர்.அதே சிப்பந்தியை அழைத்து உடலை வெளியே எடுத்துவரச் சொன்னார்.சிப்பந்தியும் அவ்வாறே செய்தார்.இது நடந்து ஒரு சில வினாடிகள்தான் ஆகி இருக்கும்.தூக்கத்தில் இருந்து எழுபவர் போல சமாதி கலைந்து சட்டென எழுந்தார் ஸ்வயம்பிரகாசர். அவரது உடலிலும் செயலிலும் எந்த ஒரு தளர்வும் இல்லை.முன்பு இருந்தைவிட மிகுந்த பிரகாசமாகக் காணப்பட்டார்.
இதைக்கண்டு பிரமிப்படைந்த டெபுடி கலெக்டர்.ஸ்வாமிகளின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டார்.அவரது உடல் பதறியது.இதே நிர்விகல்ப சமாதி காலத்தில் ஸ்வாமிகளைப் பற்றி இன்னொரு விஷயமும் சொல்வார்கள் பூட்டிய குகைக்குள் இருந்த அதே நேரத்தில் மலைக் காடுகளில் அவர் சுற்றித் திரிந்ததையும் பலர் கண்டிருக்கிறார்கள்! ஸ்வயம்பிரகாசர் சேந்தமங்கலம் வந்து சேர்ந்த புதிதில் அங்குள்ள குகையில் நிஷ்டையில் இருந்த நேரங்களில் நிர்விகல்ப சமாதி கைகூடியது.அப்போது எவரும் அவரைப் பார்க்க வரமாட்டார்கள் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஒரு பெரிய கருநாகமும் அவருடன் இருக்குமாம்.அடியார்கள் எவரேனும் அந்த நேரத்தில் ஸ்வாமிகளை தரிசிக்க வந்தால் ஸ்வாமிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி பாம்பு அகன்று விடுமாம்.மும்மூர்த்திகளின் அம்சமாக அத்ரி மகரிஷி-அனுசூயா தம்பதிக்கு அவதரித்தவர் தத்தாத்ரேயர்.வடக்கே பத்ரிகாசிரமத்தில் ஸ்வயம்பிரகாசர் கடுந்தவத்தில் இருந்தபோது தென்னாட்டில் தமக்குக் கோயில் எழுப்புமாறு அவருக்கு உத்தரவிட்டார் தத்தாத்ரேயர்.தன்னுடைய ஆதி குருவான அந்த பகவானுக்கு, பின்னாளில் குகையின் மேல் அழகான கோயில் எழுப்பி தன் திருக்கரங்களாலேயே 1931ல் குடமுழுக்கு செய்து வைத்தார் ஸ்வயம்பிரகாசர்.
அவதூதர் என்பதால் பிறர் கண்களில் அதிகம் படக்கூடாது என்பதற்காக ஸ்வயம்பிரகாசர் குகையில் வசித்து வந்தார்.அந்த குகை (குகாலயம்)இன்றும் நம் தரிசனத்துக்கு இருக்கிறது.இந்தியா முழுவதும் எங்கெங்கேயோ சுற்றித் திரிந்த அந்த மகான் இறுதிக் காலத்தில் அந்த குகையிலேயே சமாதி ஆனார். ஸ்வாமிகளின் உடல் வேண்டுமானால் இன்று நம் கண்களுக்குப் புலப்படாமல் இருக்கலாம்.ஆனால் இன்று நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.நாடி வருபவருக்கு அவருடைய ஆன்ம பலமும் சக்தியும் இன்றும் பல நன்மைகளைச் செய்துகொண்டுதான் இருக்கிறது.சேந்தமங்கலத்தில் உள்ள அவருடைய அதிஷ்டானத்துக்கு வந்து.அந்தத் திருவுருவை மனக் கண் முன் நிறுத்தி தியானித்து வணங்குவோருக்கு நிச்சியம் காட்சி தருவார் அவர்.மந்திராலய அதிஷ்டானத்தில் சில நூறு ஆண்டுகளாக ஜீவித்து வரும் ராகவேந்திர ஸ்வாமிகள் அதிகாலை நேரத்தில் ஸ்நானம் செய்வதற்காக துங்கபத்திரை நதிக்கரையில் பாதரட்சையுடன் நடந்து செல்லும் ஒலியை இப்போதும் பலர் கேட்கின்றனர்.அதுபோல் உண்மையான பக்தியுடனும் ஆத்ம ஸுத்தியுடனும் செல்பவர்களுக்கு ஸ்வயம்பிரகாசரின் தரிசினம் நிச்சயம் கிடைக்கும்.அவருடைய அருளுக்கும் ஆசிக்கும் பாத்திரமாகும் பாக்கியம் உண்டு.ஸ்வயம்பிரகாசரின் திருப்பாதம் பணிந்து, அவரது சந்நிதி இருக்கும் சேந்தமங்கலம் நோக்கி வணங்குவோம்!
முன்னோர்களின் படங்களை பூஜை அறையில் வைக்கலாமா?
நமக்கு நல்வழி காட்டியவர்களின் படங்களை பூஜை அறையில் தாராளமாக வைத்து வழிபடலாம்.தாய், தந்தை,குருநாதர் இவர்கள் நமக்க நல்வழி காட்டியவர்கள்.தெய்வத்துக்கு ஒப்பானவர்கள்.இவர்களை வைத்து வழிபடலாம்.
 பண்புடன் வாழுங்கள்
♤ பொறாமை உடையவன் எதை பெற்றாலும் மனநிறைவு அடைய மாட்டான்.
♤ தர்மம் நீதி இந்த இரண்டும் சேர்ந்தது தான் பண்பு.பண்பு இல்லாவிட்டால் மனிதன் தன் நிலையில் இருந்து தாழ்ந்து விடுகிறான்.
♤ அலட்சிய மனநிலையுடன் எதையும் அணுகுவது கூடாது.அக்கறையுடன் ஈடுபட்டால் மட்டுமே செயலில் வெற்றி கிடைக்கும்.
♤ இடைவிடாமல் எதை தீவிரமாகச் சிந்திக்கிறோமோ அதுவாகவே மாறிவிடும் தன்மை உண்டாகி விடும்.
♤ காஞ்சி மஹ பெரியவா



சூரியன் உபதேசித்த சுக்ல யஜுர் வேதம்!

இறைவனுடைய உள்ளிழுக்கும் காற்றாகவும் வெளிவிடும் காற்றாகவும் விளங்குவது வேதம். பகவானுக்கும் சுவாசம் உண்டு என்கிறது வேதம்.இந்த வேதத்தை நான்காக வகுத்தவர் வியாசர்.அவை ருக் யஜுர் சாமம் அதர்வணம் என்று எல்லாருமே அறிவார்கள்.இதைத்தவிர சுக்ல யஜுர் வேதம் என்றுமொரு வேதம் உண்டு.இந்த வேதத்தை யாக்ஞவல்கியர் என்ற மகான் சூரிய பகவானிடமிருந்து கற்று உலகிற்கு அளித்தார்.யாக்ஞவல்கியர் இந்த வேதத்தைக் கற்ற வரலாறு சுவையானது. வைசம்பாயனர் என்ற ரிஷி வியாசரிடம் கற்ற யஜுர் வேதத்தை பல சிஷ்யர்களுக்கு கற்றுக்கொடுத்தார். ஒருநாள் வைசம்பாயனர் அதிகாலையில் நீராடிவிட்டு ஏதோ சிந்தனை செய்தவாறு ஆசிரமத்தை நோக்கிவந்தார்.அப்போது நடுவழியிலே வேதத்தை பூரணமாகக் கற்றுணர்ந்த பிரம்மச்சாரி சிறுவன் ஒருவன் படுத்துக்கொண்டிருந்தான்.அதையறியாமல் அந்த சிறுவனின் வயிற்றில் காலை வைத்துவிட்டார் வைசம்பாயனர்.அந்த சிறுவன் துடிதுடித்து இறந்துபோனான்.அதனால் வைசம்பாயனருக்கு பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது.
வருத்தம் தாங்காமல் ஆசிரமத்தில் அமர்ந்திருந்தார் அவர்.சீடர்கள் வழக்கம்போல வந்து வணங்கினார்கள்.ஆச்சாரியர் முகம் வாட்டமாக இருப்பதைக் கண்டு பணிவோடு காரணம் கேட்டனர். வைசம்பாயனர் நடந்த விவரங்களைச் சொன்னார்.சீடர்கள் செய்யும் பாவம் ஆச்சார்யர்களை வந்தடையும்.இங்கே ஆச்சார்யரே பாவம் செய்துவிட்டார்.சீடர்கள் எல்லாருமாக சேர்ந்து ஏதாவது பிராயச்சித்தம் அனுஷ்டித்தால் அந்த பாவம் போகும்.வைசம்பாயனரும் அவர்கள் அவ்வாறு அனுஷ்டித்து பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து தன்னை விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டார்.சீடர்கள் எல்லாரும் அப்படியே நாங்கள் செய்கிறோம்.அதைக் காட்டிலும் ஒரு கடமை எங்களுக்கு உண்டா? ஆச்சார்யாருக்கு ஏற்பட்ட சிரமத்தைப் போக்கவில்லையென்றால் சீடர்கள் எதற்கு?என்றார்கள். அப்போது அவர்களுள் ஒருவரான யாக்ஞவல்கியர் குருவே உங்கள் தோஷத்தை நிவர்த்திசெய்ய இத்தனை பேர் எதற்கு?நான் ஒருவனே பிராயச்சித்தம் செய்து சிரமத்தைப் போக்கிவிடுவேன் என்றார்.
வைசம்பாயனருக்கு கடும் கோபம் வந்துவிட்டது. எல்லாரையும் சாமானியர்கள் என்று மதித்து நீ ஒருவனே உயர்ந்தவனென்று காட்டிக்கொள்கிறாய்.அது உன் அகங்காரத்தைக் காட்டுகிறது. இவ்வளவு அகங்காரமுடைய சீடன் எனக்குத் தேவையில்லை.நீ ஆசிரமத்தைவிட்டு வெளியே போ!என்று கோபத்தோடு சொன்னார்.யாக்ஞவல்கியருக்கு அதற்குமேல் கோபம்.ஆச்சார்யரே தங்களிடத்தில் இருக்கிற அன்பினால் மதிப்பினால் சொன்ன வார்த்தைகளே தவிர இவர்களைக் குறைத்துக் கூறுவதற்காக நான் பேசவில்லை.அப்படி நீங்கள் நினைப்பதும் ஏற்றதல்ல.என் எண்ணத்தைப் புரிந்துகொள்ளாமல் என்னை போகச் சொல்கிறீர்கள்.உங்களுடைய ஆச்சாரியத்துவம் எனக்கு வேண்டியதில்லை என்றார்.அதற்கும் மேலே வைசம்பாயனர் என்னுடைய ஆச்சார்யத்துவம் வேண்டியதில்லையானால் என்னிடம் கற்ற வேதத்தை மட்டும் எடுத்துக்கொண்டு போகமுடியுமா? அதனால் வேதத்தை முழுக்க கக்கிவிட்டுப் போ என்றார்.
யாக்ஞவல்கியரும் சளைக்கவில்லை.கற்ற வேதங்களை எல்லாம் மொத்தமாக ஒரு மாமிசக் கோளமாகக் கக்கிவிட்டு கோபத்தோடு வெளியேறிவிட்டார்.மகான்களின் தவவலிமையால் இப்படி எல்லாமே சாத்தியமாகும்.வேதவித்தை கேட்பாரில்லாமல் ஒரே மாமிசக் கோளமாகக் கிடந்தது. வைசம்பாயனர் வேதம் இப்படி இருப்பதைக் கண்டு மனம் வருந்தி மற்ற சீடர்களை அழைத்து அவர்களை தித்திரா என்ற பறவைகளாக மாற்றி கிழே கிடந்த மாமிசத்தை உண்ணும்படி சொன்னார்.அவர்களும் குரு சொன்னபடி செய்தார்கள்.இவ்வாறு வேதவித்தைகள் கக்கப்பட்டு மறுபடியும் கொள்ளப்பட்டு தரித்தது. அதனால் இதற்கு கிருஷ்ண யஜுர் வேத தைத்ரீய சம்ஹிதை என்று பெயர்.தித்திரா என்ற பறவையின் பெயரால் தைத்ரீயம் என்ற உபநிடதம் உள்ளது.வேதமிழந்த யாக்ஞவல்கியர் கங்கை நதி தீரம் சென்று நீராடி ஸ்ரீமந்நாராயணனைக் குறித்து பலவாறாக ஸ்தோத்திரம் செய்தார்.பிறகு காயத்ரி தேவியைக் குறித்து பல நாட்கள் தவமிருந்தார்.அவரது தவத்திற்கிரங்கிய காயத்ரி தேவி அப்பனே நீ வேண்டிய வரமென்ன என்று அன்புடன் கேட்டாள்.அவளை வணங்கிய யாக்ஞவல்கியர் தாயே ஸ்ரீவைசம்பாயனர் என்னிடம் கற்ற வித்தைகளைக் கொடு என்று கேட்டார்.மறுக்க வழியில்லாமல் கொடுத்துவிட்டேன். இப்பொழுது எனக்கு யஜுர் வேதம் வேண்டும்.நீங்களே குருவாக இருந்து வேதத்தை எனக்கு உபதேசிக்க வேண்டும் என்றார்.
அதைக்கேட்ட காயத்ரி தேவி முன்னொரு காலத்தில் நைமித்திக பிரளயம் ஏற்படப் போகிறதென்று அறிந்த பிரம்மதேவர் விஷ்ணு லோகம் சென்று சுவாமி வரப்போகும் பிரளயத்தில் அசுரன் ஒருவன் வேதங்களை அபகரிப்பான் என்கிற பாடம் பயம் உண்டாகிறது என்றார்.அதைக்கேட்ட விஷ்ணு, குழந்தாய் கவலை வேண்டாம்.வேதத்தின் ஒரு பகுதியாக யஜுர் வேதத்தை சூரிய பகவானிடத்தில் வைப்போம் என்று சொன்னார்.அதன்படியே இந்த வேதமானது அயாதயாமம் என்பது சூரியனிடம் வைக்கப்பட்டிருக்கிறது.நீ சூரிய பகவானைக் குறித்து தவமிருப்பாயாக.நீ வேத வியாசரிடம் வேத அத்யயனம் செய்திருக்கிறாய்.அந்த பிரகஸ்பதியே உனக்கு அட்சராப்யாசம் செய்துவைத்திருக்கிறார். எனது கடாட்சத்தால் உன் விருப்பம் நிறைவேறும் என்று அருள்புரிந்து மறைந்தாள்.அது முதல் யாக்ஞவல்கியர் சூரிய பகவானைக் குறித்துத் தவமிருந்தார்.சூரியன் ஒரு குதிரை வடிவில் அவர்முன் தோன்றினான்.(அதனால் முறைப்படி சந்தியா வந்தனம் செய்து முறைப்படி முத்திரையிட்டு, சூரியனைப் பார்த்துவிட்டு கண்களை மூடினால் குதிரை ரூபம் கண்ணுக்குள் தெரியும்.) சூரியதேவன் யாக்ஞவல்கியரிடம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டான்.யாக்ஞவல்கியர் என் ஆச்சாரியர் வைசம்பாயனர் என்னை அனுப்பிவிட்டார்.அவருக்குத் தெரியாத வேதம் முழுவதும் எனக்கு வேண்டும் என்றார்.யாக்ஞவல்கியரின் தவத்திற்கு மெச்சிய சூரியன் குருவுக்கு என்ன தெரியாதோ அந்த வேதத்தை சீடருக்கு உபதேசம் செய்துவிட்டார்.அப்படி சூரியன் உபதேசம் செய்ததுதான் சுக்லயஜுர் வேதம்.

சிறிது நன்மையாவது செய்யுங்கள்!
□ பலனை எதிர்பார்க்காமல் உங்களால் முடிந்த நல்லதைச் செய்து கொண்டிருங்கள்.பலன் கொடுக்க வேண்டியது கடவுளின் வேலை.
■ நம்முடைய துன்பத்தை மலை போல நாம் பெரிதாக எண்ணிக் கொண்டிருப்பது கூடாது.நம்மால் உலகம் சிறிது நன்மை பெறும் என்று தெரிந்தாலும் கூட அதற்காக நாம் கடுமையாகப் பாடுபட வேண்டும்.
□ கருணையில் கடவுள் கடலுக்குச் சமமானவர்.நதிகளைப் போல தன்னை நாடி வரும் பக்தர்களை ஏற்றுக் கொண்டு அவர் அருள்புரிகிறார்.
■ புத்திக்குத் தெரிந்தும் ஒரு தவறைச் செய்யும்போது அது பாவமாகிறது.புத்தி தங்கள் வசத்தில் இல்லாமல் இருப்பவர்கள் செய்யும் எந்தச் செயலும் பாவமாகாது.
□ இயற்கையில் எல்லாம் மாறிக் கொண்டே தான் இருக்கிறது.சில மாறுதல்கள் மட்டும் நம் கண்ணுக்குத் தெரிகிறது.மலையும் சமுத்திரமும் கூட காலச்சக்கரத்தில் மாறுதல் அடைகின்றன.
■ காஞ்சி மஹாபெரியவா

ராமாயண வரலாற்றின் நினைவு சின்னம் ராமர் பாதம் கோயில்!
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் என்றாலே ராமாயண வரலாற்றில் தொடர்புடைய புனித தலம் என்பது இந்துக்கள் பலருக்கும் நினைவிற்கு வரும்.அத்தகைய ராமேஸ்வரத்தில் குறிப்பிடப்படும் முக்கிய இடங்களில் ஒன்றுராமர் பாதம்.இங்கு 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இன்றைக்கும் கம்பீரமாக நிற்கிறதுராமர் பாதம் கோயில்.ராவணனால் கடத்திச் செல்லப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்ட சீதையை மீட்க தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு அனுமான் மற்றும் வானர சேனைகள் பாலம் அமைத்தன.இப்பணியை ஸ்ரீ ராமர் கெந்தமாதன பர்வதம்(உயரமான இடம்)எனும் மணல் குன்று மீது நின்று பார்வையிட்டதாக ராமாயண காவியத்தில் கூறப்பட்டுள்ளது.அதை நினைவு கூறும் விதத்தில் ராமர் நின்ற இடத்தில் அவரது பாதத்தை வைத்து பூஜித்திட அமைக்கப் பட்டது தான் ராமர் பாதம் கோயில்.ராமேஸ்வரம் கோயிலில் இருந்து வடக்கு திசையில் 3 கி.மீ. தூரத்தில் உள்ள இக்கோயிலில் இருக்கும் ஸ்ரீ ராமர் பாதம் பதித்த சுவட்டை வழிபட தினமும் ஆட்டோ கார் வேன் மூலம் ஏராளமான பக்தர்கள் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.கடல் மட்டத்தில் இருந்து 80 மீட்டர் உயரத்தில் உள்ள இக்கோயிலின் மேல் தளத்தில் நின்று ராமேஸ்வரம் தீவு பகுதி முழுவதையும் கண்டு ரசிக்க முடியும். இக்கோயிலுக்கு சென்று திரும்பினால் இழந்து விட்ட குலப்பெருமைகளை மீண்டும் பெறலாம் என காலம் காலமாக பக்தர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை நிலவுவதால் நீங்களும் ஒரு முறை ராமர் பாதம் கோயிலுக்கு சென்று வரலாமே.






பேங்களூர் முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் முருகனுக்கு தரிசனம் செய்து ஸ்வாமிக்கு தீபாராதனை செய்த காட்சி.


கடவுளிடம் சொல்வோமே!
● நீருக்குள் வாளியை இழுக்கும்போது கனம் தெரிவதில்லை.அதுபோல துன்பம் ஏற்படும் போது ஞானம் என்னும் தண்ணீருக்குள் அமுக்கிவிடுங்கள்.கனம் குறைந்து மனம் லேசாகி விடும்.
○ நாம் இந்த மண்ணில் பிறவி எடுத்து விட்டோம்.யாராக இருந்தாலும் ஒருநாள் உயிர் போகத் தான் போகிறது.வாழும் காலத்திற்குள் நம் பாவத்தைப் போக்கிக் கொள்ள முயற்சிப்போம்.
● பாவத்தைப் போக்குவதற்கு எங்கும் அலையத் தேவையில்லை.இருந்த இடத்திலேயே கடவுளின் பெயரைச் சொன்னாலே போதும்.இரண்டெழுத்தான"சிவ'என்பதை எப்போதும் சொல்லுங்கள்.
○ அன்னதானத்தால்மட்டுமே ஒருவரை முழுமையாகத் திருப்திப்படுத்த முடியும்.மற்றவை எல்லாம் எவ்வளவு கிடைத்தாலும் மனம் திருப்தி அடைவதில்லை.
● துன்பத்தை பிறரிடம் சொல்லாமல் இருக்க முடியாது.கடவுளிடம் முறையிட்டால் நிம்மதி கிடைக்கும்.
○ காஞ்சி மஹா பெரியவா




மும்மூர்த்திகள் காட்சியளிக்கும் பாலகணபதி கோயில்!
தேனி:தலவிருட்சமாக அரச மரமும் கொடிமரமாக இன்றும் வளர்ந்து கொண்டிக்கும் இழுப்பை மரமும் விழுதுகளை பூமியில் புதைத்து குடையாக விரிந்து வளர்ந்துள்ள ஆழமர நிழலில் அமைந்துள்ளது தேனி கே.ஆர்.ஆர்.நகரில் உள்ள பால கணபதி சமேத காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் சுவாமி கோயில்.இக்கோயிலில் மூலவராக பாலகணபதியும் அருகே சிவன் விசாலாட்சியும் காட்சியளிக்கின்றனர்.கோயிலை சுற்றிய பிரகாரங்களில் தெற்கே தட்சிணாமூர்த்தி வடக்கே பிரம்மா மேற்கே விஷ்ணு சிலைகளாக காட்சியளிக்கின்றனர்.இங்கு பிரம்மா விஷ்ணு சிவன் என மூவரையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் வாய்ப்பாக பக்தர்கள் உணர்கின்றனர்.இங்கு துணை தெய்வங்களாக வலம்புரி விநாயகர் ராஜமுருகன் சண்டிகேஸ்வரர் நாகலிங்கேஸ்வரர் உள்ளனர்.இங்கு சிவன் ஐந்துநாகங்களுடன் சேர்ந்து இருப்பது சிறப்பு.திருமணம் ஆகாத பெண்கள் காசி விஸ்வநாதரையும் விசாலாட்சியையும் ஒன்பது வார வெள்ளிக்கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்தால் விவாகம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.இங்கு தினமும் இருவேளை பூஜைகளும் விநாயகர்சதுர்த்தி நாளில் சுவாமி ஊர்வலம் மகா சிவராத்திரி சிறப்புபூஜை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.மேலும் சங்கடஹர சதுர்த்தி பிரதோஷம் அமாவாசை பவுர்ணமி பைரவர் அஷ்டமி நாட்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள்!
மகான்களின் அவதார நோக்கமே பலருடைய பிணிகளைத் தீர்ப்பதற்காகத்தான். இதற்காகத் தங்களின் நலம் கருதாமல், செயல்படுபவர்கள் மகான்கள். மனிதன் என்பவன் மகான் ஆவதற்கு நல்ல குரு வேண்டும். அவரது உபதேசம் சிறக்க வேண்டும். மகான் ஆவதற்குரிய குணங்கள் இவனுக்கு இருக்கிறதா என்பதை நல்ல குருவானவர் ஆய்ந்து அறிவார். அப்படித்தான் பாடகச்சேரி சுவாமிகளுக்கு நல்ல குரு வாய்த்தார். ஆந்திராவில் இருந்தபோது எரிதாதா சுவாமிகள் இவரை ஆட்கொண்டார். யோக ரகசியங்களைச் சொல்லிக் கொடுத்து, சுவாமிகளுக்குப் புடம் போட்டார். கும்பகோணம் வந்த பிறகு வடலூர் வள்ளலார் சுவாமிகள் சூட்சுமமாக இவரை ஆட்கொண்டார், அருட்பா பாடிய ராமலிங்க ஸ்வாமி அவர்களே இவ்வுருமாகி திருப்பணி செய்யும் விருப்பமுற்றாரோ என்கிறது பாடகச்சேரியாரின் துதிப் பாடல்.பாடகச்சேரி சுவாமிகள் யோகங்களைக் கற்றவர். இறைப் பணிகளை மேற்கொண்டவர், பலருடைய பிணிகளைத் துரத்தியவர். இறந்ததாக் கருதப்பட்ட சிலரை உயிர்ப்பித்துப் பிறரை ஆச்சரியப்பட வைத்தவர், இவரது ஜீவன் இன்று சென்னை திருவொற்றியூரிலே ஐக்கியம் ஆகி இருந்தாலும், கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபத்தில் இவர் உருவாக்கிய பாதாள அறையிலும் ஜீவன் இருப்பதாக சுவாமிகளே அருளி இருக்கிறார்கள் என்கிறார்கள் அவரின் பக்தர்கள். ஜீவ சமாதி என்பது ஓர் அடையாளம்தான்! மானுட ஜீவனா அது ஓர் இடத்தில் மட்டும் அடங்கிக் கிடப்பதற்கு? எங்கும் நிறைந்திருக்கிறார் பாடகச்சேரி சுவாமிகள். இன்றைக்கும் தன் பக்தர்கள் எவருக்கு ஒரு துயர் வந்தாலும், விரைந்தோடி வந்து அதைக் களைகிறார்.
எங்கே இருக்கிறது பாடகச்சேரி?
கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம், மன்னார்குடி செல்லும் சாலையில் வலங்கைமானை அடுத்து. குரு ஸ்தலமான ஆலங்குடிக்கு இரண்டு கி.மீ. முன்னால் வரும் ஊர்-பாடகச்சேரி. மெயின்ரோட்டில் இறங்கிக்கொண்டு, வலப் புறம் செல்லும் சாலையில் காலார இரண்டு கி.மீ. தொலைவு நடந்து சென்றால் பாடகச்சேரி சுவாமிகளின் திருக்கோயில் வரும்.கும்பகோணத்தில் இருந்து சுமார் 16 கி.மீ தொலைவு. வலங்கைமானில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவு.ஆலங்குடியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு. இந்த ஆலயத்தில் வள்ளலார் சுவாமிகள் பாடகச்சேரி சுவாமிகளின் குருவான எரிதாதா சுவாமிகள் மற்றும் நேபாள் மன்னரும் பைரவ உபாசகருமான ராஜாராம் சுவாமிகள் சுவாமிகளின் சம காலத்தவரான சரவணாநந்த பவ, அப்புடு சுவாமிகள் ஆகியோருக்குத் திருவுருவங்கள் உண்டு. பாடகச்சேரி சுவாமிகள் தான் வாழ்ந்த காலத்தில் பயன்படுத்திய சில பொருட்கள் இங்கே இருக்கின்றன.
பாடகச்சேரி சுவாமிகள் எங்கே பிறந்தார்? கும்பகோணத்துக்கு எப்படி வந்தார்?
பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் வீரசைவ ஜங்கமர் பிரிவில் அவதரித்தவர், சுவாமிகளின் தந்தையார் பெயர் - கந்தசாமி ஐயா. தாயாரின் பெயர் - அர்த்தநாரி அம்மை. ஆந்திர மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள உறவுகொண்டா (உருவிகொண்டா) இவர்களது சொந்த ஊர் பிற்பாடு இவர்கள் அங்கிருந்த கோவை மாவட்டத்தில் உள்ள மஞ்சம்பாளையத்துக்குக் குடிபெயர்ந்து அங்கே வசிக்கத் தொடங்கினர். கிராமத்தில் வசித்து வருபவர்கள் வீட்டில் சுப காரியங்கள் தொடங்கினர். கிராமத்தில் வசித்து வருபவர்கள் வீட்டில் சுப காரியங்கள் நடத்தி வைத்தாகவும் திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்தி, பலருக்கும் கல்வி அறிவைப் புகுத்தியதாகவும் சுவாமிகளின் குடும்பம் பற்றிச் சொல்லப்படுகிறது. சிறு வயதிலேயே சுவாமிகள். தன் தாய்-தந்தையரை இழந்துவிட்டதால். அந்தப் பருவத்திலேயே துறவை மேற்கொண்டு விட்டார்.
பெல்லாரியில் செள்ளகுரிக்கி என்கிற இடத்தில் வசித்து வந்த எரிதாதா சுவாமிகளின் சீடராக சில காலம் இருந்து அவரது உத்தரவுப் படி தென்னாடு (கும்பகோணம்) வந்தவர் பாடகச்சேரி சுவாமிகள், பாடகச்சேரியில் பல ஆண்டுகள் இருந்தமையால் பாடகச்சேரி சுவாமிகள் ஆனார். நேபாள மன்னரும் பைரவ உபாசகருமான ராஜா ராம் சுவாமிகள். இவருக்கு பைரவ உபதேசம் செய்து வைத்தார். பாடகச்சேரியில் தான் இருந்த காலத்தில் பைரவ வழிபாட்டைத் தினமும் நடத்தி மகிழ்வாராம். சுவாமிகள். பைரவ வழிபாடு என்பது ஏதோ பூஜை, புனஸ்காரம் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது தினமும் ஏராளமான நாய்களைக் கூப்பிட்டு சாப்பாடு போடுவது. சுவாமிகளின் கருத்துப்படி இவை எல்லாம் நாய்கள் அல்ல.... நாய் உருவில் இருக்கும் தேவர்கள் என்பாராம். பைரவ வழிபாட்டுக்கு முதல் நாள் மாலை பாடகச்சேரிக்கு அருகில் இருக்கும் ஆலங்குடி, செம்மங்குடி, புளியங்குடி, அம்ருதவல்லி போன்ற கிராமங்களுக்குச் சென்று அங்கு இருக்கும் நாய்களுக்குத் தகவல் சொல்லிவிட்டு வருவாராம் சுவாமிகள்.மறுநாள் மதியம் சுமார் முந்நூறு பேருக்கு ஆகும்படி சமைக்கச் சொல்வார். வடை, பாயசம் என்று சமையல் திமிலோகப்படும். இவ்வளவு பேருக்கு சாப்பாடு சொல்கிறாரே? யார் வந்து சாப்பிடப் போகிறார்? இந்தப் பகுதியே பொட்டல்காடாயிற்றே! என்று சமையல் செய்யும் அன்பர்கள் ஆரம்பத்தில் குழம்பினார்களாம். பின்னர்தான், விவரம் அறிந்து வியந்தார்கள். சமையல் முடிந்ததும். அந்த இடத்தில் வாழை இலையை விரித்து. மனிதர்களுக்குப் பரிமாறுவது போல் அனைத்து அயிட்டங்களும் வைக்கப்படும். தன் கையில் வைத்திருக்கும் ஒரு கோலால் தரையைத் திடீரென்று சுவாமிகள் தட்டிய மாத்திரத்தில், எங்கிருந்துதான் வருமோ தெரியாது.... சுமார் நூற்றுக்கணக்கில் நாய்கள் வந்து இலையின் முன்பாக சமர்த்தாக அமர்ந்து கொள்ளும். இதை வேடிக்கை பார்க்க வந்திருக்கும் கிராமவாசிகளுக்கு இவை எல்லாம் நாயாகத் தெரியுமே தவிர, சுவாமிகளுக்கு மட்டும் அனைத்தும் மனிதர்களாகவே தெரியவார்களாம்.
சுவாமிகளின் சொன்ன பேச்சுக்கு அனைத்து நாய்களும் கட்டுப்படுமாம். சுத்தமாக அனைத்து பதார்த்தங்களையும் சாப்பிட்டு முடித்த பின், சுவாமிகளிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு. நாய்கள் புறப்பட்டுவிடுமாம். இப்போதும் பல நாய்கள், பாடகச்சேரியின் இந்தத் திருக்கோயில் பக்கம் உலவி வருகின்றன. இங்கு வரும் பக்தர்களும் இந்த நாய்களை மிகவும் மதித்து, அவற்றுக்கு ஏதேனும் உணவளித்து மகிழ்கிறார்கள். தங்களது பிரச்னைகளுக்குத் தீர்வு வேண்டியும் வியாதிகள் அகல வேண்டியும் சுவாமிகளிடம் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். ஆபத்சகாயம் என்று சொல்லி அவர்களது நெற்றியில் திருநீறு பூசுவார். அவ்வளவுதான்.... அடுத்த நொடியே அவர்களை பீடித்திருந்த பிணிகள் பஞ்சாகப் பறந்துவிடும்.தனது 12 வயதில் சுவாமிகள் பாடகச்சேரிக்கு வந்தார் என்று சொல்லப்படுகிறது. எரிதாதா சுவாமிகளின் அறிவுரைப்படி இங்கே வந்ததும் பட்டம் என்கிற கிராமத்தில் மாடுகளை மேய்க்கும் வேலையில் சேர்ந்தார். பாடகச்சேரியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் இருக்கும் கிராம-பட்டம் இந்தக் கிராமத்தில் இருக்கும்போதுதான் சூட்சும ரூபமாக வடலூர் வள்ளலார் சுவாமிகள் வந்து ஞான உபதேசம் செய்து வைத்தாக பாடகச்சேரி சுவாமிகளின் பக்தர்கள் சொல்கிறார்கள். நவகண்ட யோகம் சுவாமிகளுக்கு அப்போதுதான் சித்தி ஆகி இருந்தது. அதாவது உடலை ஒன்பது பாகங்களாக - துண்டு துண்டுகளாக்கி செய்யப்படுகிற ஒரு சித்து வேலை அது. மாடு மேய்க்கும் பணி முடிந்ததும். உடனே இருப்பிடத்துக்குத் திரும்பாமல் ஒரு நாள் நவகண்ட யோகத்தில் இருந்திருக்கிறார் சுவாமிகள். மாடுகளுக்குச் சொந்தக்காரரான பண்ணையார் இருள் நெருங்கிற வேளை வந்தும் தன்னிடம் வேலை பார்க்கும் சிறுவன் (சுவாமிகள்) இன்னும் மாடுகளுடன் திரும்பவில்லையே என்று கவலைப்பட்டு வேலைக்காரர்களை அனுப்பித் தேடச் சொல்லி இருக்கிறார். அதன்படி, மாடுகளை மேய்க்கும் இடத்துக்குப் போன வேலைக்கார ஆட்கள், சுவாமிகள் கண்டம் துண்டமாக இருக்கும் நிலையை பார்த்து அலறிப் போய். சிறுவனை யாரோ வெட்டிப் போட்டுவிட்டார்கள் என்று பதைபதைத்துப் பண்ணையாரிடம் விஷயம் சொல்வதற்காக அரக்கப் பரக்கத் திரும்பி இருக்கிறார்கள்.
வேலைக்கார ஆட்கள் வீடு திரும்பி பண்ணையாரிடம் நடந்ததைச் சொல்லிக் கொண்டிருக்கும்போது மாடுகளுடன் அங்கே வந்து விட்டார் சுவாமிகள்.அதன் பிறகுதான் தன்னிடம் வேலை பார்க்கும் சிறுவன் சாதராண ஆள் இல்லை...ஒரு மகான் என்பதை பண்ணையார் உணர்ந்தார்.பெரிய கும்பிடு போட்டு தம்பி.... நீ யாரென்று தெரிந்த பிறகும் உன்னை வேலையில் வைத்துக்கொண்டால் எனக்குப் பெரிய பாவம் வந்துவிடும் என்று மரியாதை செய்து அனுப்பி வைத்து விட்டார்.அதன் பிறகு, பாடகச்சேரியிலேயே வெட்டாறுக்கு எதிர்த் திசையில் ஓரிடத்தில் வேல் நட்டு முருகன் கோயில் கட்டி வழிபட ஆரம்பித்தார்.சுவாமிகள் அப்போது அந்த ஊரில் தவறான காரியங்களில் பலரும் ஈடுபட்டு வந்தனர். அவர்களை எல்லாம் அவ்வப்போது கூப்பிட்டுக் கண்டிக்க ஆரம்பித்தார் சுவாமிகள். சுவாமிகளின் இந்த நடவடிக்கை அவர்களுக்குப் பிடிக்கவில்லை.நம்மைக் கண்டிக்க இவன் யார்?என்று வெகுண்டெழுந்த எதிரிகள் அனைவரும் ஒன்று கூடிப் பேசினர்.அவர்களில் ஒருவன், அவனை நாம் வெட்டிச் சாய்த்துவிடலாம் என்று கூற..கைக்கூலிகள் அனைவரும் இதற்கு உடன்பட்டனர். அதன்படி ஒரு நாள் சுவாமிகள் இருக்கும் இடத்துக்கு ஆயுதங்களுடன் வந்து சேர்ந்தனர்.அந்த நேரம் பார்த்து சுவாமிகள் நவகண்ட யோகத்தில் இருந்தார்.வெட்டிப் போடுவதற்காக வந்த ஆசாமிகள் இதைக்கண்டு மிரண்டனர்.டேய்...யாரோ ஒருத்தன் நம்மளையும் முந்திட்டான் போலிருக்கு.பையன் காலி ஆயிட்டான்.நம்ம பாடு இனி கொண்டாட்டம்தான் என்று சொல்லி அந்த இடத்தை விட்டுக் கிளம்பினர். சற்று தூரம் அவர்கள் போன பின் அவர்களுக்கு எதிரே வந்த சுவாமிகள் என்னடா...என்னை எவனோ வெட்டிப் போட்டுட்டதா சந்தோஷப்படறீங்களா?என்று பெரும் சிரிப்புடன் கேட்டபோது ஆடிப் போனார்கள்.
இதன் பிறகு சுவாமிகளுக்கு பாடகச்சேரியில் இருக்கப் பிடிக்கவில்லை.கும்பகோணத்துக்கு கிளம்பி வந்துவிட்டார்.அங்கே காரைக்கால் சாலையில் இருக்கும் முத்துப்பிள்ளை மண்டபம் என்னும் இடத்தில் தங்கினார்.யோகம் தலம் போன்றவற்றை மேற்கொண்டார்.அப்போது பஞ்சம் தலைவிரித்தாடியது. எனவே கூழ் சாலை ஒன்றைத் துவக்கினார்.பசியுடன் வந்தவர்களின் துயரம் தீர்த்தார் ராமநாதபுரத்தில் விஜயபுரம் பகுதியில் வசித்து வந்தவர் ஆதப்ப செட்டியார்.குன்ம (குஷ்டம்) நோயால் இவர் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார்.எவ்வளவோ சிகிச்சைகள் செய்து பார்த்தார்.பலன் இல்லை.இறுதியில் தான் வணங்கும் முருகப் பெருமானிடம் மன்றாடி வேண்டிக்கொண்டார்.அன்றைய தினம்இரவு முருகுப் பெருமான் அவரது கனவில் தோன்றி பாடகச்சேரியில் ராமலிங்கம் என்கிற சித்தன் ஒருவன் இருக்கிறான்.அவன் என் பக்தன்.அவனிடம் போய் உன் குறையைச் சொல் என்று சொல்லி மறைந்தார். கனவு கண்டு குதூகலமான ஆதப்ப செட்டியார் பாடகச்சேரி இருக்கும் இடத்தை விசாரித்து இங்கே வந்து சேர்ந்தார்.சுவாமிகள் கும்பகோணத்தில் இருக்கும் விஷயத்தை அறிந்து அங்கு வந்து சந்தித்தார்.ஒரு குளிகையை செட்டியாரிடம் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்.முருகப் பெருமானையும் சுவாமிகளையும் பிரார்த்தித்துக்கொண்டே அதை உட்கொண்டார் செட்டியார்.என்ன ஆச்சிரியம்!அவரது உடலில் குன்ம நோய் இருந்ததற்கான அடையாளங்களே இல்லை.அத்தனையும் மறைந்து போய் ஜொலிக்கும் தேகத்துடன் காட்சி தந்தார் செட்டியார்.
இதில் மனம் மகிழ்ந்த செட்டியாரின் மகன்களான ராமன் மற்றும் லட்சுமணன் ஆகிய இருவரும் சுவாமிகளிடம் வந்து.உங்களுக்கு ஏதாவது செய்யவேண்டும்.என்ன தேவை.கேளுங்கள் என்றனர். பாடகச்சேரியில் தான் பூஜித்த இடத்தில் ஒரு மடம் கட்டித் தரும்படி கேட்டுக்கொண்டார்.அதன்படி பாடகச்சேரியின் சுவாமிகள் இருந்தற்கான நினைவுகளைச் சொல்லும் முதல் கட்டடம் அப்போதுதான் எழும்பியது. அதன் பிறகு சுவாமிகளின் உத்தரவின் பேரில் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் நடராஜர் சந்நிதியைக் கட்டிக் கொடுத்தனர்.சுவாமிகளின் தன் காலத்தில் பல திருத்தலங்களுக்குக் கும்பாபிஷேகம் செய்து வைத்துள்ளார்.இதில் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் தஞ்சை கீழ வாசல் வெள்ளை விநாயகர் சென்னை கிண்டி ஸ்ரீமுனீஸ்வரர் திருச்சி உச்சிப்பிள்ளையார் புன்னநல்லூர் மாரியம்மன்.கும்பகோணம் நாகேஸ்வரன் ஆகிய திருத்தலங்களைச் சொல்லலாம்.
இவற்றில் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலுக்கு சுவாமிகள் திருப்பணி செய்த விதம் மிகவும் சுவாரஸ்யமானது.கும்பகோணத்தில் இவர் தங்கி இருந்த நாட்களில் ஒரு நாள் தேவராப் பாடல் பெற்ற திருத்தலமான நாகேஸ்வரன் ஆலயத்துக்குச் சென்றார்.செடி கொடிகள் மண்டிப் போய் ஆலயப் பிரதேசமே ஒரு காடாகக் காட்சி தந்தது. மனம் வெதும்பினார் சுவாமிகள் .எப்படியாவது இந்த ஆலயத்துக்குத் திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சபதம் ஏற்றார்.திருப்பணிக்காக பக்தர்களிடம் இருந்தே பணம் வசூலிக்கத் தீர்மானித்தார்.தும்பைப்பூ மாதிரி இருக்கும் வெள்ளை வேஷ்டி ஒன்றை இடுப்பில் சுற்றிக்கொண்டு ஒரு மேல்துண்டை உடல் மேல் போர்த்திக்கொண்டும்
இடுப்பில் ஒரு பித்தளைச் சொம்பைக் கயிற்றால் கட்டிக்கொண்டும்.நமசிவாய நாமம் சொல்லி வீதி வீதியாக அலைவாராம்.சுவாமிகளைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்த ஆன்மிக அன்பர்களும் வியாபாரிகளும் சில்லறை நாணயங்களைச் சொம்பில் போடுவார்கள்.யாரிடமும் இவ்வளவு கொடுங்கள் என்று சுவாமிகளாக எதுவும் கேட்டதில்லை.
பாடகச்சேரி ஸ்ரீராமலிங்க சுவாமிகள்பக்கம்(235,236,237)வள்ளலாரின் ஆசி பெற்றவர் என்பதால் சுவாமிகளுக்குப் பல வித்தைகள் தெரியும்.இவர் நினைத்திருந்தால் ஓர் இரும்புக் கம்பியைத் தங்கமாக்கி அதை விற்று ஆலய கும்பாபிஷேகத்தைச் சிறப்பாக நடத்திருக்க முடியும்.ஆனால் இறைவனுக்குச் செய்யும் தொண்டு பக்தர்கள் கைங்கர்யமாக இருக்கவேண்டும் என்பதற்காகவும் இதில் பலரையும் ஈடுபடுத்த வேண்டும் என்பதற்காகவும் இப்படி அலைந்து திரிந்து பணம் சேர்த்துக் கும்பாபிஷேகம் செய்தார்.1928-ஆம் ஆண்டில் இந்த வைபவம் நடந்தது.இந்தக் கும்பாபிஷேகத்தின்போது ஒரு குழப்பமும் வந்தது.ஆலயப் பணிகளைச் செய்த விஸ்வகர்மா இனத்தவர் நாங்கள்தான் முதலில் கும்பாபிஷேகம் செய்வோம் என்றனர்.ஆலயத்தில் இறைப் பணிகளைச் செய்து வரும் அர்ச்சகர் பெருமக்கள் நாங்கள்தான் கும்பாபிஷேகம் செய்வோம் என்றனர்.இந்த நிலையில் கும்பகோணம் பகுதிக்கு காஞ்சி மகா ஸ்வாமிகள் வந்திருந்தார்.அவரை சந்தித்து, இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு சொல்லுமாறு கேட்டுக் கொண்டார் பாடகச்சேரி சுவாமிகள்.இரு தரப்பினரையும் கலந்து ஆலோசித்த காஞ்சி மகா ஸ்வாமிகள் விஸ்வகர்மா இனத்தவரே முதலில் கும்பாபிஷேகம் செய்யுட்டும்... அர்ச்சகர்கள் அடுத்து செய்யட்டும் என்று சொன்னார்.இதை அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள்.
இந்தக் குழப்பம் ஒரு பக்கம் இருக்க வழக்கு உயர்நீதிமன்றம் வரை சென்றதால் கும்பாபிஷேகத்துக்கு நாள் குறிக்க முடியாமல் நாகேஸ்வரன் கோயிலில் அமர்ந்து அவஸ்தைப்பட்டார் சுவாமிகள். சென்னையில் நீதிபதியிடம் இருந்து தீர்ப்பு வந்தால்தான் கும்பாபிஷேகம் நடத்த முடியும்.அப்போது ஒரு மதிய வேளையில் திடீரென சில பக்தர்களை அழைத்தார்.பெரியநாயகி அம்மன் சந்நிதிக்கு அருகில் இருக்கும் ஆடிப்பூர அம்மன் சந்நிதியில் தன்னை வைத்து பூட்டச் சொன்னாராம் சுவாமிகள்.காரணம் புரியாத பக்தர்களும் அதை மறுக்க முடியாமல் அப்படியே செய்தார்கள்.மாலை வேளையில் பூட்டைத் திறக்கச் சொன்னார் சுவாமிகள்.அப்போது சுவாமிகளின் கையில் அவருக்கு சாதகமாகக் கும்பாபிஷேக நாள் குறிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு நீதிபதியின் கையெழுத்தோடு இருந்தாம்.பக்தர்கள் அனைவரும் பிரமித்துப் போயினர்.அதாவது தான் அறைக்குள் பூட்டப்பட்டிருந்த வேளையில் அங்கிருந்து ஆகாய மார்க்கமாக சென்னைக்குச் சென்று நீதிபதியைச் சந்தித்து இந்த உத்தரவைப் பெற்று வந்தாராம் சுவாமிகள்.சுவாமிகள் கடைசி காலத்தில் தான் இருந்த கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபத்திலேயே சமாதி ஆகவேண்டும் என்று விரும்பினாராம்.ஆனால், அவரின் சென்னை பக்தர்கள் சிலர் வற்புறுத்தலாகக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 1949-ஆம் வருடம் அம்பாளுக்கு உரிய ஆடிப் பூர தினத்தில் திருவொற்றியூரில் ஜீவ சமாதி ஆனார்.
சமாதி ஆவதற்கு ஒரு வாரம் முன் சென்னையில் இருந்து கும்பகோணம் வந்தார் சுவாமிகள்.அப்போது சுவாமிகள் பக்தரும் கும்பகோணத்தின் முன்னாள் சேர்மனுமான ராமநாத ஐயரின் மனைவி இறந்துபோயிருந்தார்.அவரது வீடே சோகமாக இருந்தது.இந்த வேளையில் விஷயம் கேள்விபட்டு சுவாமிகளும் அங்கு வந்தார்.சுவாமிகளின் திருக்கரத்தைப் பிடித்துக்கொண்டு ராமநாத ஐயர் கதற ஏன் அழறே? அவ சாகலைடா...இன்னும் அவளுக்கு ஆயுள் இருக்கு என்று சுவாமிகள் சொல்ல.... ஐயர் உட்பட அனைவரும் பிரமை பிடித்தது போல் சுவாமிகளையே பார்த்தனர்.இது கயிலாய மலை விபூதிடா என்று சொல்லி பாடையில் பிணமாக இருக்கும் ஐயரின் மனைவி நெற்றியில் பூச...அடுத்த நொடியே அந்த மாது எழுந்து உட்கார்ந்தார்.சவ வீடு சந்தோஷ வீடானது.பின்னர் வந்த பல வருடங்களுக்குப் பிறகு ராமநாத ஐயர் இறந்து போக இந்த அம்மாள் 1982-ல்தான் இறந்துபோனாராம்.சுவாமிகளின் ஆசியால் அந்த அம்மாளுக்கு ஆயுள் விருத்தி ஏற்பட்டது.தனக்கு சமையல் செய்த வந்த அம்மாள் ஒருவர் இறந்துபோனபோதும் வடலூரில் ஒரு தைப்பூசத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி இறந்துபோன ஒரு பக்தரையும் தன் சித்து திறமையால் மீண்டும் அவர்களை உயிர்ப்பித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் பாடகச்சேரி சுவாமிகள்.வடலூர் வள்ளலாரின் சிஷ்ய பரம்பரை நான் என்று சொல்லிக்கொள்ளும் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் தன் பக்தர்களுக்கு அருளிய மொழி என்ன தெரியுமா?
நான் மறைந்தாலும் என்னை நம்பி இருப்பவர்களுக்கு நான் என்றும் துணையாக இருப்பேன்.என்னை நம்பாதவர்களுக்கும் நம்பிக்கை வரும் பொருட்டு உதவிகள் செய்து வருவேன்!இன்றுவரை தன் பக்தர்களுக்கு ஆசியும் அருளும் வழங்கித் கொண்டுதான் இருக்கிறார் பாடகச்சேரி சுவாமிகள்.அந்த மகானின் திருவடி தொழுவோம்! தரிசனம் பெறுவோம்!.