ஞாயிறு, 28 ஜூலை, 2019

ஸ்ரீ சிவ பஞ்சாட்சர நட்சத்திர மாலா.


​ஆதி சங்கர பகவத் பாதாள்  அனேக விஷயங்களை நமக்கு சொல்லி கொடுத்து இருக்கிறார்கள்.

கனக தாரா ஸ்தோத்திரம்,
நரசிம்ம கரா வலம்பம்
விவேக சூடாமணி  இதுபோல் நிறைய சொல்லி இருக்கிறார்கள். தனித்தனியாக பாப்போம் அன்பர்களே. முதலில்

ஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திரங்களுக்கான மந்திரக் கோர்வை ஸ்ரீ சிவ பஞ்சாட்சர நட்சத்திர மாலா.

சகல சௌபாக்கியம் பெற தினமும் அவரவர் நட்சத்திர மந்திரத்தை மனமுருக பிரார்த்திக்கவும்.

1. அஸ்வினி
ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம:சிவாய
தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய
நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய
பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய

2. பரணி

கால பீதவிப்ரபால பாலதே நம: சிவாய
சூல பின்ன துஷ்ட தக்ஷபாலதே நம: சிவாய
மூல காரணீய கால காலதே நம: சிவாய
பாலயாதுனா தயாலவாலதே நம: சிவாய

3. கிருத்திகை

இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவே நம: சிவாய
துஷ்ட, தைத்யவம்ச, தூமகேதவே நம: சிவாய
ஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்ம ஸேதவே நம: சிவாய
அஷ்ட மூர்த்தயே வ்ருஷேந்ர கேதவே நம: சிவாய

4. ரோஹிணி

ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம: சிவாய
பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாய
பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம: சிவாய
சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாய

5. ம்ருகசீர்ஷம்

வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நம: சிவாய
ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நம: சிவாய
நாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நம: சிவாய
காமிநைக தாந ஹ்ருத்துராபதே நம: சிவாய

6. திருவாதிரை

ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம: சிவாய
ஜிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நம: சிவாய
ப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நம: சிவாய
ஜிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நம: சிவாய

7. புனர்பூசம்

காமநாசனாய சுத்த கர்மணே நம: சிவாய
ஸாம கான ஜாயமான சர்மணேநம: சிவாய
ஹேம காந்தி சாக சக்ய வர்மணே நம: சிவாய
ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நம: சிவாய

8. பூசம்

ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நம: சிவாய
சின்மயை கரூப தேஹ தாரிணே நம: சிவாய
மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நம: சிவாய
மன்மனோகதாய காம வைரிணே நம: சிவாய

9. ஆயில்யம்

யக்ஷராஜ பந்தவே தயாளவே நம: சிவாய
ரக்ஷ பாணி சோபி காஞ்ச நாளவே நம: சிவாய
பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நம: சிவாய
அக்ஷி பால வேத பூத தாளவே நம: சிவாய

10. மகம்

தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜ்õத வேதஸே நம: சிவாய
அக்ஷராத்மனே நமத்பி டௌ ஜஸே நம சிவாய
தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நம: சிவாய
உக்ஷராஜ வாஹதே ஸதாம் கதே நம: சிவாய

11. பூரம்

ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நம: சிவாய
ராஜமான நித்ய மந்த ஹாஸினே நம: சிவாய
ராஜகோர காவ தம்ஸ பாஸினே நம: சிவாய
ராஜராஜ மித்ரதா ப்ரகாசினே நம: சிவாய

12. உத்திரம்

தீனமான வாளி காம தேனவே நம: சிவாய
ஸூந பாண தாஹ த்ருக் க்ருசானவே நம: சிவாய
ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நம: சிவாய
தானவாந்தகார சண்ட பானவே நம: சிவாய

13. ஹஸ்தம்

ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நம: சிவாய
ஸர்வ தேவதா கணாத் சாயினே நம: சிவாய
பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நம: சிவாய
ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நம: சிவாய

14. சித்திரை

ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே நம: சிவாய
மாகரந்த ஸாரவர்ஷ பாஸிணே நம: சிவாய
ஏகபில்வ தானதோபி தோஷிணே நம: சிவாய
நைகஜன்ம பாப ஜால சோஷிணே நம: சிவாய

15. ஸ்வாதி

ஸர்வ ஜீவரக்ஷணைக் சீலினே நம: சிவாய
பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நம: சிவாய
துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நம: சிவாய
சர்வரீச தாரிணே கபாலினே நம: சிவாய

16. விசாகம்

பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நம: சிவாய
தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நம: சிவாய
மோஹி தர்ஷி காமினீ ஸமுஹதே நம: சிவாய
ஸ்வேஹித ப்ரஸன்ன காம தோஹதே நம: சிவாய

17. அனுஷம்

மங்களப் ரதாயகோ துரங்கதே நம: சிவாய
கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நம: சிவாய
ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே நம: சிவாய
அங்கஜாரயே கரே குரங்கதே நம: சிவாய

18. கேட்டை

ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நம: சிவாய
அக்னி பால ச்வேத உக்ஷ கேதவே நம: சிவாய
தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நம: சிவாய
கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நம: சிவாய

19. மூலம்

திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நம: சிவாய
தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நம: சிவாய
ருக்ஷராஜ பானு பாவகாக்ஷதே நம: சிவாய
ரக்ஷமாம் ப்ரஸன்ன மாத்ர ரக்ஷதே நம: சிவாய

20. பூராடம்

அந்ரி பாணயே சிவம் கராயதே நம: சிவாய
ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாய
பங்க பீஷிதா பயங்கராயதே நம: சிவாய
பங்க ஜாஸனாய சங்கராயதே நம: சிவாய

21. உத்தராடம்

கர்மபாச நாச நீலகண்டதே நம: சிவாய
சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நம: சிவாய
நிர்ம மர்ஷி ஸேவி தோப கண்டதே நம: சிவாய
குர்மஹே நதீர்ந மத்விகுண்டதே நம: சிவாய

22. திருவோணம்

விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நம: சிவாய
சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நம: சிவாய
இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம: சிவாய
கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய

23. அவிட்டம்

அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நம: சிவாய
ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நம: சிவாய
ஸ்வப்ரகாச நிஸ்துலா நுபாவதே நம: சிவாய
விப்ர டிம்ப தர்சிதார்த்ர பாவதே நம: சிவாய

24. சதயம்

ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நம: சிவாய
பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நம: சிவாய
பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நம: சிவாய
தாவ காங்க்ரி பக்த தத்த மோத தேநம: சிவாய

25. பூரட்டாதி

புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம: சிவாய
சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய
பக்த ஸங்கடாபஹர யோகினே நம: சிவாய
யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நம: சிவாய

26. உத்தரட்டாதி

அந்த காந்த காய பாப ஹாரிணே நம: சிவாய
சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம: சிவாய
ஜந்து ஜாத நித்ய ஸெளக்ய காரிணே நம: சிவாய

27. ரேவதி

சூலினே நமோ நம:
கபாலினே நம: சிவாய
பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நம: சிவாய
லீலனே விசேஷ முண்ட மாலிநே நம: சிவாய
சீலினே நம ப்ரபுண்ய சாலினே நம: சிவாய
-------------------------
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு!
==================================
ஒரு பெண் தனக்குப் பெரிதாக பூஜை பக்தி செய்ய நேரமில்லை. ஏதாவது சுலபமான வழிபாடு உண்டா என்று கேட்ட போது கீழ்க்கண்ட மந்திரத்தை அருளினார். இதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லி வந்தால் விரிவான பூஜை செய்த பலன் முழுவதும் கிடைக்கும் என்றார்.

✌ஹரி நாராயண துரித நிவாரண✌
✌பரமானந்த சதாசிவ சங்கர✌
-------------------------
பன்னிரண்டு ராசி கணபதி மந்திரங்கள்.

மேஷம்
கரஸ்த கதலீசூத பனசேஷூ கபித்தகம் பாலசூர்ய ப்ரபம் வந்தே தேவம் பாலகணபதிம்

ரிஷபம்
நாளிகேராம்ர கதலீகுட பாயச தாரிணம் சரத் சந்த்ரா பவபுஷம் பஜே பக்தி கணாதிபம்

மிதுனம்
ஆலிங்க்ய தேவீம் ஹரிதாங்க்ய புஷ்டிம் பரஸ்பராக்லிஷ்ட நிவேசம் சத்யா ருணம் பாசஸ்ருணி வஹந்தம் பயாபகம் சக்தி கணேசமீடே

கடகம்
பக்வசூத பலபுஷ்பமஞ்சரீ இக்ஷூதண்ட திலமோத கைஸ்ஸஹ! உத்வஹஞ் பரசுஹஸ்த தே நம: ஸ்ரீ சம்ருத்யுத தேவ பிங்கல

சிம்மம்
நீலாப்ஜம் தாடீமீ வீணா சாலீகுஞ்ச அட்ச சூத்ரகம் ததது உச்சிஷ்ட நாமாயம் கணேச பாது மே சக:

கன்னி
தந்த கல்ப லதா பாசம் ரத்ந கும்ப அங்குசோஜ்வலம் பந்தூக கமநீயாபம், த்யாயேத் க்ஷிப்ர கணாதிபம்

துலாம்
பாசாங்குச ஸ்வதம்தாம்ர பலவான் ஆகுவாகன: விக்நம் நிஹந் துந ஸர்வம் ரக்த வர்ணோ விநாயக:

விருச்சிகம்
சிந்தூரபலம் நிபானனம் த்ரிநயனம் ஹஸ்தேச பாசாங்குஸௌ: பிப்ராணாம் மதுமத் கபாலம் அதிசம் சாது சிந்து மௌலீம் பஜே:

தனுசு
சங்கேஷூ சாபருகமேஷூ மேஷகுடாரபாச சக்ரம் விக்நேச்வரோ விஜயதே தபநீய கௌரம்

மகரம்
ஹரித்ராபம் சதுர்பாஹும் ஹரித்ரா வதனம் ப்ரபும் பாசாங்குச தரம் தேவம் மோதகம் தந்த மேவ ச பக்தா மய ப்ரதாதாரம் வந்தே விக்ந விநாசனம்

கும்பம்
லம்போதரம் ஸ்யாமநிபம் கணேசம் கடாக்ஷம் அட்ச ஸ்ரஜ ஊர்த்வகாப்யாம் ஸலட் டுகம் தந்த மரக்யாப்யாம் வாமேதராப்யஞ்ச ததானமீடே

மீனம்
பாசாங்குச ஸ்வதந்தாம்ர பலவா நாஹ வாஹந: விக்னம் நிசந்துரு: சோன ஸ்ருஷ்டி தஷோ விநாயக:
------------------------
பிரம்மஹத்தி தோக்ஷம் என்றால் என்ன ?

ப்ரம்ஹத்தை அறிந்துணர்ந்தவனை கொல்வதால் பிரம்மஹத்தி தோக்ஷம் தொற்றிக்கொள்கின்றது !

பிரம்மன் மனித உயிர்களைப் படைக்கிறார்.

அந்த உயிர்களுக்கு மண்ணுலகில் உள்ள வாழும் காலம் முடிந்த பிறகு இறைவனே எடுத்து கொள்வார். இந்த உண்மைக்கு மாறாக, போட்டி, பொறாமை காரணமாக ஆணவத்துக்கு இடம் கொடுத்து வாழ்பவர்கள் தங்களுக்குப் பிடிக்காதவர்களைப் பழிவாங்கும் போக்கைத் தொடர்கின்றனர். அப்படிப் பழிவாங்கும் போது சொத்துக்காகவும், பொன்னுக்காகவும், பெண்ணுக்காகவும் இரக்கமின்றி ஒரு உயிரைக் கொலை செய்து விடுகின்றனர். ஒரு கொலை சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட்டுவிடுமா என்ன? கொலை செய்தவர்களையும் அவர்கள் சந்ததியினரையும் இந்த பாவம் பிடித்துக்கொள்ளும். இந்த பெரும்பாவமே சம்பந்தப்பட்டவர்களை தோஷம் என்று தொத்திக்கொண்டு விடுகிறது. இதுவே ‘ பிரம்மஹத்தி தோஷம் என்பதாகும்.

ஸ்ரீராமபிரானுக்கே பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சீதா பிராட்டியாரை சிறையெடுத்த காரணத்துக்காக மட்டுமல்ல; இராவணனின் அட்டூழியத்திலிருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்றவுமே இராவணனை வதம் செய்தார் ராமபிரான். இராவணனை வதம் செய்த காரணத்தால் பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்தார். எனவே பிரம்மாவால் படைக்கப்பட்ட மனித உயிர்களை கொலை செய்தவர்கள் கொலைக்கு என்ன புனிதமான காரணம் இருந்தாலும் பிரம்மஹத்தி தோஷத்தை அடைகிறார்கள். நமது முன்னோர்கள் யாரையும் கொலை செய்திருந்தால் அந்த தோஷம் அவர்கள் சந்ததியினரைத் தொடர்ந்து வரும். ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் குருவுடன் இணைந்தாலோ குரு பகவான் சனி பகவானுடன் இணைந்தாலோ இந்த இரு கிரகங்களுக்கும் சார பரிவர்த்தனை ஏற்பட்டாலோ சப்தம பார்வை பெற்றாலோ அவர் பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்துள்ளார் என்பதை அறிந்துகொள்ளலாம். இப்படிப்பட்ட தோஷம் உள்ளவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது. காலதாமதத் திருமணம், காலதாமத புத்திர பாக்கியம், தீராத கடன் தொல்லை, கல்வித் தடை, சரியான வேலைவாய்ப்பின்மை, அலைந்து திரிந்து கடுமையாக உழைத்தாலும் போதிய சம்பளம் கிடைக்காத நிலை, கனவுத் தொல்லைகள், தாங்கள் நடத்திவரும் தொழிலுக்கு வேலைக்காரர்கள் கிடைக்காத நிலை போன்ற பல குழப்பங்கள் இருந்து வரும். இது போன்ற நிலையில் பிரம்மஹத்தி தோஷம் விலகப் பரிகாரங்கள் செய்து வாழ்வை வளமாக்கலாம்.

சிவபக்தனான ராவணனை அழித்ததால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. தோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரையில் சிவ பூஜை செய்தனர். பைரவர் – பிரம்மனின் தலையை கொய்தமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது. சப்தகன்னியர் – மகிசாசுரன் எனும் அரக்கனை கொன்றமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது. வீரசேனன், வரகுண பாண்டியன் – பிராமணனைக் கொன்றமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது. நாம் வணங்கும் பல இறைவன்கள் அசுரர்களை கொன்றதால் ‘பிரம்மஹத்தி தோஷம்’ பிடித்து பின் அதற்கு பரிகாரம் தேடியதாக பல புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த பிரம்மஹத்தி திருப்பூர் அருகிலுள்ள திருமுருகன் பூண்டி கோயிலில் கல் வடிவில் இருக்கிறது. சூரனைக் கொன்று அதனால் தோஷம் பிடித்த முருகன் இத்தலத்தில் சிவபெருமானை வணங்க பிரம்மஹத்தி அவரை விட்டு நீங்கி கல்லாக மாறி இத்தலத்தில் நிற்கிறார் என்பது ஐதீகம்.

விடைமருதூர் வாழீசா வல்வினைகள்போக்கி வாழ்வளிப்பாயே

வீழ்ந்தயெம் வாழ்வில் வன்துயர்போக்கிநீ விழிவழிகாட்டாயோ

வழிந்தோடிடும் வன்கண்ணீர் வந்துடைத்து வாதுயர்த்திடாயோ!

வாழ்வளி பிருஹத்சுந்தரகுஜாம்பிகையே மஹாலிங்கேஸ்வரா!

திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில்: காவிரிக் கரையில் அமைந்துள்ளவற்றில் ஆறு சிவ தலங்கள் காசிக்கு நிகராக கருதப்படுகின்றன. அவற்றில் ஒன்று திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில் ஆகும். சுமார் 1200 ஆண்டுகளுக்கு முந்தைய பழமைவாய்ந்த கோவில். பாண்டிய நாட்டை ஆட்சி செய்தவன் வரகுண பாண்டியன். இவன் ஒரு முறை அருகில் உள்ள காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். வேட்டையாடி முடித்து அரண்மனை திரும்புவதற்கு இரவு நேரமாகி விட்டது. அரண்மனைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் கடுமையான இருள் காரணமாக வழியில் படுத்திருந்த அந்தணன் ஒருவன் பாண்டிய மன்னன் அமர்ந்து சென்ற குதிரை மிதித்து இறந்து விட்டான். தன்னையும் அறியாமல் இந்த பிழை செய்திருந்தாலும், அந்தணனை கொன்ற பாவத்தால் வரகுண பாண்டியனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. மேலும் அந்தணனின் ஆவியும் அரசனை பற்றிக்கொண்டு ஆட்டுவித்தது. வரகுண பாண்டியன் பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்தும் அந்தணனின் ஆவியின் பிடியில் இருந்தும் விடுபட மதுரை சோமசுந்தரரை நாடினான். அப்போது சோமசுந்தரர், வரகுண பாண்டியனின் கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு மகாலிங்கேஸ்வரராக உள்ள தன்னை தரிசனம் செய்து வரும்படி உபாயம் கூறினார். ஆனால் எதிரி நாடான சோழ நாட்டில் அமைந்துள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்ற குழப்பம் வரகுண பாண்டியனை தொற்றிக்கொண்டது. இந்த நேரத்தில் சோழ மன்னன், பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வரும் தகவல் வரகுணபாண்டியனுக்கு கிடைத்தது. வரகுண பாண்டியன், சோழ மன்னனுடன் போர் புரிந்து அவரை போரில் வெற்றி கொண்டு சோழ நாடுவரை அந்த மன்னனை துரத்திச் சென்றான். சோழ நாட்டுக்குள் புகுந்ததும் திருவிடைமருதூர் சென்று அங்குள்ள மகாலிங்கேஸ்வரரை கிழக்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்து தரிசனம் செய்தான்.

கோவிலுக்குள் நுழைந்த வரகுண பாண்டியனை பின் தொடர முடியாமல் பிரம்மஹத்தி தோஷமும், அந்தணனின் ஆவியும் கோவில் உள்ளே நுழைய தைரியமின்றி வாசலிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும் போது மறுபடியும் பிடித்துக் கொள்ளலாம் என்று கிழக்கு வாசலின் வெளியே காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாசல் வழியாக வெளியேறி செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டார். அதன் படி அரசனும் மேற்கு வாசல் வழியாக வெளியேறி பிரம்மஹத்தி தோஷம் நீங்கியவனாக பாண்டியநாடு திரும்பினான். இதனை நினைவு கூறும் வகையில் இன்றளவும், திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்து மேற்கிலுள்ள அம்மன் சன்னதி வழியாக வெளியே செல்லும் முறையை கடைபிடித்து வருகின்றனர்.

மகாலிங்கேஸ்வரர் : இந்த கோவிலில் உள்ள இறைவன் சுயம்புலிங்க மூர்த்தியாக, மகாலிங்கேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள இறைவன் தன்னைத்தானே அர்ச்சித்து கொண்டு பூஜை விதிகளை சப்தரிஷிகள் மற்றும் முனிவர்களுக்கு போதித்து அருளிய தலம் இது. மார்க்கண்டேயர் விருப்பத்தின் படி இத்தல இறைவன் அர்த்த நாரீஸ்வரராக காட்சி கொடுத்துள்ளார்.

பிருஹத்சுந்தரகுஜாம்பிகை : அம்மன் பிருஹத்சுந்தரகுஜாம்பிகை நன்முலைநாயகி என்ற பெயரில் அருள் புரிந்து வருகிறார். திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில் அருகே திருவலஞ்சுழி விநாயகர் கோவில், சுவாமி மலை முருகர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், ஆலங்குடி தட்சிணாமூர்த்தி கோவில், திருசேய்ஞலூர் சண்டேச்சுரர் கோவில், சீர்காழி பைரவர் கோவில், சூரியனார் நவரக்கிரக கோவில் போன்ற பரிவார மூர்த்த தலங்கள் அமையப் பெற்றுள்ளதால் திருவிடை மருதூர் கோவில் மகாலிங்க ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது.

நாளை முதல் மூன்று நாட்கள் பரிகாரங்கள் பற்றி பார்போம்.
-------------------------
பிரம்ம முகூர்த்த நேரம் என்றால் என்ன?

பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் என்ன!!!!! சூரியன் உதித்தெழுவதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது. பிரம்ம 10 முகூர்த்தம் என்பது பிரம்ம நான்முகனைக் குறிக்கின்றது. படைத்தற் தொழிலைப் புரியும் நான்முகன் தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச் செய்து 24 கலைகளையும் படைத்தார். பிரம்ம முகூர்த்ததில் திருமணம், பிரம்ம முகூர்த்ததில் வீட்டு கிரஹப்பிரவேசம் என்று கூறுவோம். அதனால் பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் பற்றி முழுதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்குமே இருக்கும். காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே சற்றேறக்குறைய மறுபிறவிதானே! எனவே ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை சிருஷ்டி (படைத்தல்)என்று சொல்லலாம். இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா. எனவே இவரது பெயரால் விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள். பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளை தான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான் பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம் உபாசனைக்கு காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமான தொரு கடமையாகும்.

இக்காலம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும் எழச் செய்கின்றது. மந்திரங்கள் ஜெபிப்பவனுடைய மனதிலிருந்து படிப் படியாக அவனுடைய நுண் அலைகளை ஒலி அலைகளாக மேலே எழுப்பிச் செபம் செய்பவனது மந்திர ஒலியானது வெளிப்படச் செய்கிறது. இவ்வாறு பிரம்மமுகூர்த்தத்தில் அவன் செய்யும் ஜெபம் அவன் செல்லும் இடமெங்கும் அவனை அறியாமலே நன்மைகளை விளைவிக்கின்றது. அதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறுவார்கள். இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்துக்கள் அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி, நீர் தெளித்து கோலமிடுவார்கள் எமது புராண இதிகாசங்களில் முனிவர்கள் அதிகாலையில் நீராடித், தியானத்தில் இருந்ததை அறிகின்றோம். அவர்களது அமான்ய சக்தியையும் அவற்றைக் கொண்டு அவர்கள் செய்த விந்தைகளையும் படித்திருக்கின்றோம். அவற்றை நாம் முழுமையாக நம்பாவிடினும் பிரம்ம முகூர்த்தத்திற்கு அபாரசக்தி ஒன்றுள்ளது என்பதை உணர்வு பூர்வமாக அனுபவித்து அறியலாம். இன்று விஞ்ஞானம் கூறும் இவ்வுண்மையை அன்று அஞ்ஞானம் அனுபவபூர்வமாக வெற்றிக் கண்டுள்ளது. பொழுது புலராத முன்பு பூமியில் சப்தங்கள் குறைவாக இருக்கும். நிசப்தம் எங்கும் பரந்து இருக்கும் இவ்வேளையே தியானம் செய்ய மிகவும் அருமையான நேரம். அதிகம் சலனமில்லாது இருக்கும் நம் மனமும் எளிதில் வசப்படும். ஆனால் பகலில் சப்தங்களிடையே மனதை நிலை நிறுத்துவது இயலாத காரியம். விடியற்காலை நேரம் கடவுளை நினைத்து மனமொன்றி இருக்க ஏற்றது. இந்த வேளையில் படித்தால் மனதில் நன்கு பதியும். அதிக முயற்சி இல்லாமல் நினைவு வைத்துக் கொள்ளலாம்!

பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்றால் முந்திய இரவு ஆகாரம் மிதமாக இருக்க வேண்டும். சரியான வேளையில் சாப்பிட வேண்டும். அலாரம் மணி அடித்து எழுந்த பிறகு மேலும் சுழலும் தூக்கத்தோடு இருக்கக் கூடாது. அதிகாலையில் எழும் மனம் உடையவர்களுக்கு சோம்பல் கிட்டே நெருங்காது. நாள் முழுவதுமே சுறுசுறுப்பாக இருப்பர். காலையில் பல் தேய்த்த பின் ஒரு தம்ளர் தண்ணீர் அருந்துவது நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும். ஆயுளை விருத்தி செய்யும். கிழத்தன்மையை நீக்கும். கடவுள் பெயரை நினைத்துக் கொண்டே காரியங்களை தொடர்ந்தால் அந்தக் காரியம் பலிதமடைவது நிச்சயம்.

*காலையில் எழுந்ததும் இன்றைய தினம் எல்லாம் நல்லபடியாக அமையவேண்டும் என்று மனதில் சொல்லிக் கொள்ள வேண்டும்.

* அமைந்ததாக எண்ண வேண்டும். நாம் தியானம் செய்ய இந்தப் பயிற்சியே முதல் படியாக உதவும்.
காலையில் கடமைகள் ஒவ்வொன்றாக ஆற்றிவரும் போதே, கடவுளை மனதில் நினைத்தப்படி செய்வதால் அச்செயல்கள் சிறப்பாக நடக்கும்.

*இந்த சிந்தனையால் நமது பல சங்கடங்களும் தீரத்துவங்கும். நமது கவலைகளின் கூர்மையான முட்கள் கட்டாயம் அகற்றப்படும்.

பிரம்ம முகூர்த்த நேரத்தில் கோபம், வெறுப்பு, எரிச்சல், எதுவுமே நம்மை அண்ட விடக்கூடாது. ஏனெனில் அது அதிகாலைப் பயனைக் கெடுத்து விடக்கூடும். எனவே மனதை லேசாக வைத்துக்கொண்டு சந்தோஷமாக இருப்பதாக மனதிற்குள் உணர வேண்டும். சுத்தமான காற்று இருக்கும் அதிகாலைப் பொழுதில் வெளியே நடந்து செல்வதால், காலைக்குளிர் மென்மையாக நமது உடலைத் துவட்டிவிட்டு, சுறுசுறுப்பை உண்டாக்கி நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும். நிம்மதியின் அறிகுறியான புன்னகை நமக்கு பல நன்மைகள் தரும். அதனால் பிரம்ம முகூர்த்த வேளையில் நம் செயல்களைத் துவக்கினால், வாழ்க்கையில் நாம் அனைவருமே வெற்றியாளர்கள்தான்…..
-------------------------

சனி, 27 ஜூலை, 2019

சீதா(சீதை)

காலம் காலமாக தலைமுறை தலைமுறையாகக் கேட்கப்பட்டும் படிக்கப்பட்டும் பழக்கப்பட்ட இதிகாசம் ராமாயணம். மூல ராமாயணமான வால்மீகி ராமாயணத்தைத் தழுவி 12க்கும் மேற்பட்ட ராமாயணங்கள் பல்வேறு மொழிகளில் ஸ்ரீராமனின் புகழ்பாடும் காவியங்களாகத் திகழ்கின்றன. இது பலருக்கும் தெரியும் ஆனால் சீதாயணம் என்ற காவியம் பற்றி தெரியுமா? அயணம் என்பது வழிநடந்த பாதையைக் குறிக்கும். ஸ்ரீராமன் நடந்து சென்ற பாதையும் அவன் காட்டிய தர்மநெறிகளும் ராமாயணமாகத் திகழ்கின்றன என்றால் ராமாயணத்தின் தெய்வீகக் கதாநாயகி சீதை வாழ்ந்து காட்டிய வரலாறு சீதாயணம் எனப்படுகிறது. இதை ராமாயணத்தின் ஒரு பகுதியாக நாம் எடுத்துக்கொள்ளலாம். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்ட ஸ்ரீமகாவிஷ்ணு எடுத்த 10 அவதாரங்களில் ராமாவதாரமும் ஒன்று. இந்த அவதாரத்தில் ஸ்ரீராமனுக்கு உறுதுணையாக நின்று அவன் அவதாரப் பணி நிறை வேற விஷ்ணு பத்தினி மகாலட்சுமி எடுத்த அவதாரமே சீதாதேவி. தசரதனுக்கும் கோசலைக்கும் மகனாகப் பிறந்த ஸ்ரீராமனின் பிறப்பு பற்றியோ அவதார ரகசியம் பற்றியோ பல்வேறு பரிமாணங்களில் ராமாயணத்தில் பேசப்படவில்லை. ஆனால் சீதாதேவியின் பிறப்பு தோற்றம் பற்றிய விவரங்கள் வித்தியாசமான பரிமாணத்தில் காணப்படுகின்றன. சீதையின் ஒரு அவதாரத்துக்குள் மூன்று நான்கு அவதாரப் பரிமாணங்கள் காணப்படுகின்றன.

சரி யார் இந்த சீதை?

வால்மீகி ராமாயணத்தின் படி மிதிலை நகர் மன்னர் ஜனகர் ஒரு யாகத்தைச் செய்து முடித்து தங்கத்தால் ஆன உழுகருவியை ஏர்கொண்டு பூட்டி நிலத்தை உழுதார் அப்போது பூமியில் புதைந்து கிடந்த ஒரு வண்ணப்பெட்டகம் தட்டுப்பட்டு அதனுள் இருந்து ஓர் அழகான பெண் குழந்தை அவருக்குக் கிடைத்தது பூமித்தாய் தந்த புத்திரியாக ஏற்று அவளுக்கு ஜானகி என்று பெயரிட்டார் ஜனகர். சீராட்டி வளர்த்த அந்த மகள் பெரியவள் ஆனதும் அவளுக்காக சுயம்வரம் நடத்தினார். யாராலும் தூக்க முடியாத சிவ தனுஸை தசரதன் மைந்தன் ஸ்ரீராமன் வளைத்து முறித்து ஜானகியின் கரம் பற்றினான். இந்த சீதாராம கல்யாணக் கதை அனைவருக்கும் தெரிந்ததே! அதே நேரம் சீதையின் பிறப்பு ரகசியம் பற்றி அத்புத ராமாயணம் என்ற காவியத்திலும் ராவணனால் எழுதப்பட்ட இராவணீயம் என்ற நூலிலும் வித்தியாசமாகக் குறிப்பிட்பட்டுள்ளது.

ராவணனுக்கும் மண்டோதரிக்கும் பிறந்த முதல் பெண் குழந்தைதான் சீதை. தான் அன்றாடம் வணங்கும் சிவபெருமானின் இடப்பாகமாகத் திகழும் அன்னை பார்வதியே தனக்கு மகளாகப் பிறந்திருப்பதாக எண்ணி பெரும் மகிழ்ச்சி அடைந்தான் ராவணன். ஆனால் குழந்தையின் ஜாதகத்தைக் கணித்த ஜோதிடர்கள் அந்தக் குழந்தை விஷ்ணுவின் அம்சமுடையது என்றும்  ராவணனை அழிக்கும் பொருட்டு விஷ்ணுவுக்கு உதவவே அந்தக் குழந்தை பிறந்திருக்கிறது என்றும் கூற அதிர்ச்சியானான் ராவணன் அந்தக் குழந்தையைக் கொன்று விட உத்தரவிட்டான் ஆனால் அவன் மனைவி மண்டோதரி சிசுஹத்தி பெரும் பாவம் என்றும் அதனால் தங்களுக்குச் சந்ததியே இல்லாமல் போய்விடும் என்றும் எடுத்துக் கூறி மன்றாடினாள். இதில் கொஞ்சம் மனம் இரங்கிய ராவணன் அந்தக் குழந்தையை சிவபெருமான் வீற்றிருக்கும் இமயத்திலேயே விட்டுவிடத் தீர்மானித்து கங்கையின் உற்பத்தி ஸ்தானத்தில் பனிபடர்ந்த ஒரு பகுதியில் பனிப்பாறைகளுக்கு நடுவில் பேழை ஒன்றில் வைத்து விட்டு விடுகிறான் . இப்படிச் செய்தால் பனியில் உறைந்து அந்தக் குழந்தை மடிந்து விடும் என நம்பினான்.

ஆனால் அதற்கு மாறாக பனி உருகி கங்கையின் பிரவாகத்தில் இழுத்துச் செல்லப்பட்டது அந்தப் பேழை. அது மிதிலை நகரை அடைந்து பூமிக்கடியில் புதைந்தது. அந்தக் தருணத்தில் தான் மன்னர் ஜனகர் ஏர் பூட்டி உழுதார். குழந்தையும் கிடைத்தது. பூமியை உழும் போது கிடைத்த குழந்தை என்பதால் ஏரின் கூரான பகுதிக்கு வழங்கப்பட்ட சீதா என்பதையே குழந்தைக்குப் பெயராகச் சூட்டினான். ஜனகர் மகள் என்பதால் ஜானகி என்றும் மிதிலை நகரில் கண்டெடுக்கப்பட்டதால் மைதிலி என்றும் அழைக்கப்பட்டாள் சீதை. அவளுக்கு வைதேஹி என்றும் ஒரு பெயர் உண்டு. தேவி மஹாத்மிய புராணத்திலோ சீதையின் அவதாரம் பற்றி முற்றிலும் வேறு விதமாகச் சொல்லப்பட்டுள்ளது. அதில் நாரதரிடம் பகவான் விஷ்ணுவே மகாலட்சுமி துளசி தேவியாகவும் வேதவதியாகவும் சீதையாகவும் அவதரிப்பாள் என்று கூறுவதாக வருகிறது. இந்தக் கதையை இன்னும் விளக்கமாகப் பார்ப்போம்.

த்ரேதா யுகத்தில் தர்மத்வஜன் குஜத்வஜன் என்னும் இரண்டு பேர் விஷ்ணுவை நோக்கிக் கடும் தவமிருந்து மகாலட்சுமியே தங்களுக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என வரம் கேட்டுப் பெற்றனர். அதன் படி தர்மத்வஜனுக்கு மகாலட்சுமியே பெண்ணாகப் பிறந்து பிருந்தா எனப் புகழ் பெற்றாள். தன் பதிவிரதா தர்மத்தால் பிருந்தாவே துளசி எனும் செடியாகி விஷ்ணு சேவை செய்து நம்மால் வழிபடப்பட்டு வருகிறாள். இதே போல் குஜத்வஜனுக்கும் மகாலட்சுமி பெண் குழந்தையாகப் பிறந்தாள். பிறந்த சில மணி நேரங்களிலேயே அந்தக் குழந்தையின் வாயிலிருந்து வேதங்கள் ஒலிக்க ஆரம்பித்தன. அதனால் அவள் வேதவதி என்று பெயர் பெற்றாள். ஒரு கானகத்தில் தபஸ்வினி போல தனிமையில் வாழ்ந்துகொண்டிருந்த அவள் விஷ்ணுவையே பதியாக அடைய வேண்டும் என்று கடும் தவம் புரிந்தாள். தர்மத்தைக் காக்க ஸ்ரீராமனாக அவதாரம் செய்யும் விஷ்ணுவுக்குப் பத்தினியாகி சேவை செய்ய வேண்டும் என்பது அவளின் ஆசை.

ஒரு நாள் வேதாவதி வாழ்ந்து வந்த கானகத்தின் வழியே ஆகாய மார்க்கமாகச் சென்று கொண்டிருந்தான் ராவணன். யதார்த்தமாக வேதவல்லியை அவன்  கவனித்துவிட அக்கணமே அவள் அழகில்மயங்கினான். அவள் அருகில் சென்று அவள் கரத்தைப் பற்றினான். அதிர்ச்சியும் கோபமும் அடைந்த வேதவதி எந்த ஒரு பெண்ணையும் அவளுக்கு விருப்பமில்லாத நிலையில் ராவணன் தொட்டால் அக்கணமே அவனது தலை வெடித்துச் சிதறிவிடும் என்று சாபம் கொடுத்து விட்டு அங்கே எரிந்து கொண்டிருந்த காட்டுத் தீயில் அக்னிப் பிரவேசம் செய்தாள். அப்போது நான் மீண்டும் பிறந்து வந்து உன்னை அழிப்பேன்  என்று சபதமிட்டு அக்னியில் பஸ்பமாகி விடுகிறாள் அவள். அக்னிதேவனேச வேதவதியாகத் தோன்றிய மகாலட்சுமியைப் பாதுகாத்து வைத்துக்கொள்கிறான். பஞ்சவடியில் சீதா, லட்சுமணனுடன் ஸ்ரீராமன் வனவாசம் கழித்துக் கொண்டிருந்த நாளில் ஒரு நாள் மாலையில் சந்தியாவந்தனம் செய்யும் வேளையில் அக்னி பகவான் ஸ்ரீராமன் முன் தோன்றினான்.

ராமா! உன்னிடம் ஒரு பரமரகசியம் சொல்லவே வந்தேன். சில நாட்களில் ராவணன் தன் மாயா சக்தியால் உன் மனைவி சீதாதேவியை சிறையெடுத்துச் செல்வான். அப்போது நான் உன் மனைவி சீதைக்குப் பதில் என்னுள் மறைந்திருக்கும் வேதவதியை மாயா சீதையாக்கி ராவணனுடன் அனுப்பிவிடுவேன் நிஜ சீதாதேவியை நான் பவித்ரமாகப் பாதுகாத்து வைத்திருப்பேன். ராவண சம்ஹாரம் முடிந்த பிறகு மாயா சீதை உன்னை அடைவாள். அது வரை இந்த ரகசியத்தை நீ யாரிடமும் வெளியிடக் கூடாது ! என்றான் அக்னிதேவன். ஸ்ரீராமனும் அந்த ரகசியத்தைக் காப்பாற்றுவதாக சத்தியம் செய்து கொடுத்தான். இதன் படி ராவணன் பர்ணசாலையில் இருந்து சீதையைத் தூக்கிச் செல்லத் திட்டமிட்ட போது நிஜ சீதைக்கு பதில் மாயா சீதையே (வேதவதி) ராவணனுடன் செல்கிறாள். அசோகவனத்தில் இருந்து கொண்டு சீதையின் கடமைகளையே அவள் செய்கிறாள் சாபத்தின் காரணமாக ராவணனால் அவளை நெருங்க முடிய வில்லை. அதே நேரம் நிஜ சீதை அக்னிதேவன் பாதுகாப்பில் பத்திரமாக இருந்தாள்.

ராவண வதம் முடிந்ததும் ஸ்ரீராமன் சீதைக்கு அக்னிப் பரீட்சை நடத்தினான். லட்சுமணன், ஹனுமன், விபீஷணன், சுக்ரீவன் போன்றவர்கள் சீதைக்கா அக்னிப் பரீட்சை என்று கலங்கிக் கண்ணீர் வடித்தனர். ஆனால் அதற்கான காரணம் ஸ்ரீராமனுக்கும் அக்னிதேவனுக்கும் மட்டுமே தெரிந்திருந்தது. தீக்குளித்த மாயா சீதை (வேதவதி) அக்னி தேவனை அடைகிறாள். தன்னிடம் அடைக்கலத்தில் இருந்த நிஜ சீதையை ஸ்ரீராமனிடம் சேர்க்கிறான்  அக்னிதேவன். ஏகபத்தினி விரதனான ஸ்ரீராமன் ராமாவதாரத்தில் வேதவதியை மனைவியாக ஏற்க முடிய வில்லை. ஆனால் கலியுகத்தில் அவளை ஏற்பதாக வாக்களிக்கிறான் திருமலையில் ஸ்ரீநிவாசப் பெருமாளாக அருள் பாளிக்கும் வேங்கடாசலபதியின் தேவியாகத் திகழும் பத்மாவதி வேதவதியின் அவதாரமே! தேவி மஹாத்மியம் மட்டுமின்றி வெங்கடேஸ்வர மஹாத்மியம் எனும் திருமலை ஸ்தல புராணத்திலும் வேதவதி என்கிற வேதவல்லியின் வரலாறு காணப்படுகிறது. இன்னொரு கதையில் பூமித்தாயின் புத்ரிதான் சீதை என்கிற தகவல் நமக்கக் கிடைக்கிறது. இந்தக் கதையையும் பார்த்துவிடுவோமே! இந்தத் தகவலைச் சொல்வது உத்தர ராமாயணம் இதில் சீதாதேவி இரண்டாவது வனவாசம் ஏற்றுக்கொள்வது பற்றி விரிவாக விளக்கப்படுகிறது.

கர்ப்பிணியான சீதை வால்மீகி மஹரிஷி ஆஸ்ரமத்தில் வாழ்ந்து லவ குசர்களைப் பெற்றெடுத்தாள். உலக அபவாதத்துக்கு கூட நியாயம் வழங்க நினைத்து மனைவி சீதையைக் காட்டுக்கு அனுப்பி இருந்தான் ஸ்ரீராமன். ராஜாராமனாக வாழ்வதா சீதாராமனாக வாழ்வதா என்ற பிரச்சனையில் ராஜாராமனாகவே வாழ முடிவு செய்து சீதையைத் தியாகம் செய்தான் ஸ்ரீராமன். நிந்தித்தவர்களே தவறுகளை நினைத்துத் திருந்தி மன்னிப்புக் கோரியபோதும் சீதை அயோத்திக்கு திரும்ப விரும்பவில்லை. ராமாவதாரம் முடியப் போகிறது என்பதை முன் கூட்டியே அறிந்து ஸ்ரீராமன் பாற்கடல் விஷ்ணுவோடு ஐக்கியமாகும் முன்பே சீதாதேவி தன் தாயான பூமா தேவியை வேண்டி வரவழைத்து அவள் மடியில் சரணடைந்து விடுகிறாள். ஆக அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பகவான் விஷ்ணு எடுத்த ராமாவதாரத்தில் அவருக்குச் சரிசமமாகத் தன் பணியைச் செய்து துன்பங்களை ஏற்று தியாகங்களை விரும்பிச் செய்து சூரியவம்சத்தின் புகழ் மறையாதிருக்க லவ குசர்கள் எனும் இரு வாரிசுகளையும் தந்து ராமாயணத்தை ஒரு தொடர் கதையாக்கிய தெய்வீக வடிவம் தான் மகாலட்சுமியின் அம்சமான சீதை!
------------------------------------------------------------------------------------------------------------
2ம் நூற்றாண்டு சிவலிங்கம்!

கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சிவலிங்கத்தை ஆந்திரா மாநிலத்திலுள்ள ரேணிகுண்டாவிற்கு அருகிலுள்ள குடிமல்லம் தலத்தில் தரிசிக்கலாம். 5 அடி உயரம் கொண்ட இச் சிவலிங்கத்திற்கு ஆவுடையார் கிடையாது. பாணத்திலேயே சிவபெருமானின் உருவம் உள்ளது. அதில் கைகளும், காலடியில் ஒரு அரக்கன் மிதிபட்டுக் கிடக்கும் காட்சியையும் காணலாம்.
------------------------------------------------------------------------------------------------------------
அனுமன் பூஜித்த ஆதி ராமர்!

மந்திராலயம் திருத்தலத்தில் ஆதிராமர் விக்ரகம் உள்ளது. இந்த விக்ரகத்தை முதலில் அனுமன் பூஜித்தாராம். பின்னர் பீமன் மற்றும் பலரால் பூஜிக்கப்பட்டு மத்வாச்சாரியாரிடம் வந்தது. அதன்பின் ஸ்ரீராகவேந்திரரால் பூஜிக்கப்பட்டது. அது முதல் இந்த விக்ரகம் மந்திராலயத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
------------------------------------------------------------------------------------------------------------
பூரியில் மெத்தைக்கு பூஜை!

பூரியில் ஆதி சங்கரர் நிறுவியது,  கோவர்த்தன பீடம். சொர்க்கத்தின் நுழைவாயில் என்று பொருள்படும் ஸ்வர்க்கதுவார் என்ற கடற்கரைப்பகுதியில் இப்பீடம் உள்ளது. இங்குள்ள உமாதேவி கோயிலிற்கு எதிரில் உள்ள கோயிலில் மிகவும் நைந்துபோன ஒரு பழைய மெத்தையை பட்டாடை போர்த்தி மலர்களைத் தூவி வைத்திருக்கின்றனர். இந்த மெத்தை மிகவும் புனிதம் வாய்ந்தது. காரணம், ஆதிசங்கரர் கோவர்த்தன பீடத்தை நிறுவியபோது இதில் அமர்ந்துதான் பக்தர்களுக்கு ஆசி வழங்கி, உபதேசமும் செய்தாராம். எனவே இப்படுக்கைக்கு இப்போதும் தினசரி பூஜையும் தீபாராதனையும் நடைபெற்று வருகிறது.
------------------------------------------------------------------------------------------------------------
கல்யாணம் நடக்க மாங்கல்ய காணிக்கை!

உத்திரமேரூரில் உள்ள அனந்தவல்லித் தாயாரை வழிபட்டால் கல்யாணம் விரைவில் நடக்கும் என்பதுநம்பிக்கை.இக்கோயிலில் அதிக அளவில் பக்தர்கள் திருமாங்கல்யம் காணிக்கையாக செலுத்துகின்றனர்.
------------------------------------------------------------------------------------------------------------
பெரிய சப்தமாதர்கள் சிலை

ஒடிஸா,ஜாஜ்பூர் நகரில் வைதரணி நதிக்கரையில் பல கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் ஓர் கோயிலில் பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, நாராயணி, வாராஹி, இந்திராணி, காளி எனப்படும் சப்த மாதர்களின் கரங்களில் தவழும் அழகிய குழந்தைகளுடன் சுமார் ஆறடி உயரத்தில் உருவச்சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு பெரிய சப்தமாதர் சிலைகள் வேறெங்கும் இல்லை.
------------------------------------------------------------------------------------------------------------
பஞ்ச கங்கைகள் எவை?

காவேரி,துங்க பத்ரா,கிருஷ்ணவேணி,கோதாவரி,கங்கை ஆகிய ஐந்தையும் பஞ்ச கங்கைகள் என்று தர்மசாஸ்திர நூல்கள்
கூறுகின்றன.
------------------------------------------------------------------------------------------------------------
கம்பத்தடியான் வழிபாடு!

திருநெல்வேலி சந்திப்பிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மேலத் திருவேங்கட புரம் திருவேங்கடநாதன் கோயிலின் வெளியே கொடி மரம் இருப்பது விசேஷம். இதில் கம்பத்தடியன் என்ற தெய்வம் இருக்கிறது. உயரமான கட்டடங்களில் வேலை செய்பவர்கள் இந்த கம்பத் தடியனை வழிபட்டால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்பது நம்பிக்கை.
------------------------------------------------------------------------------------------------------------
புரி ஜகந்நாதருக்கு அலங்காரம்!

புரி ஜகந்நாதருக்கு ஒரே நாளில் பலமுறை உடைகள் மாற்றப்படுகின்றன. மங்கள ஆரத்தி வேஷம் என்பது காலை உடை. அவகாச வேஷம் என்பது ஓய்வின் போது உடுத்தப்படும் உடை. பிரப வேஷம் என்பது பகல் உடை, படாசிருங்கார் வேஷம் என்பது, தர்பார் உடை. தாமோதர் வேஷம் என்பது, குழந்தை உடை. வாமன வேஷம் என்பது சிறிய உடை- - இப்படி நாள் முழுவதும் அவருக்குப் பலவித அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.
------------------------------------------------------------------------------------------------------------
வடசாவித்ரி விரதம்

இங்கு காரடையான் நோன்பினை வடசாவித்ரி விரதம் என்ற பெயரில் வடநாட்டுப் பெண்கள் கடைப்பிடிக்கின்றனர். அன்றைய தினம் அரச மரத்தினை சுற்றி வந்து நூல்  சுற்றி வணங்குகின்றனர். காட்டில் மரம்வெட்டும்போது சத்தியவானின் உயிர் காப்பாற்றப்பட்டதால் அந்த மரத்தையே புனிதமாகக்கருதி வழிபடுகிறார்கள்.
------------------------------------------------------------------------------------------------------------
ஆனைக்கல்லுப்பாறை!

ராஜபாளையம் அருகே சஞ்சீவி மலையடிவாரம் உள்ளது. இங்குள்ள பாறை மிகப் பெரிய உருண்டை வடிவில், விரிசல் ஏற்பட்டு தனியாக உள்ளது. இதனை ஆனைக்கல்லு என்றழைப்பர். பல ஆண்டுகளுக்கு முன்பு இப்பாறையை உடைக்க ஆங்கிலேய அதிகாரி உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது; இந்தப் பாறையை உடைக்கும்போது அதிலிருந்து ரத்தம், பால் வந்ததாகவும்;  இதனால் இதனை உடைக்கும் முயற்சியை கைவிட்டதாகவும் செவி வழிச் செய்தியாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தற்போது ஆனைக்கல்லுப் பாறையை மக்கள் வழிபாட்டுத் தலமாகக் கொண்டு, திருவிழா நடத்தி வருகின்றனர். சாதி, மத, இன வேறுபாடின்றி, இப்பாறையை மக்கள் இன்னமும் வழிபட்டு வருகின்றனர்.
------------------------------------------------------------------------------------------------------------
நவநந்தி தரிசனம்!

பத்ம நந்தி, நாக நந்தி, விநாயக நந்தி, கருட நந்தி, சிவநந்தி, விஷ்ணு நந்தி, சோம நந்தி, மகா நந்தி, சூரியநந்தி இவற்றையே நவநந்திகள் என்று அழைக்கிறோம். இந்த நவநந்திகள் ஆந்திர மாநிலம் நந்தியால் எனும் ஊருக்கு பத்து கி.மீ தூரத்தில் உள்ளன.
------------------------------------------------------------------------------------------------------------
உண்மையின் கதவுகள் திறக்கட்டும்!

* சில இடங்களில் கடல் அமைதியாய் ஆர்ப்பரிக்காமல் இருக்கிறது. அதற்காக அலை இல்லாமலா போய்விட்டது? அதுபோலஉழைத்துக் கொண்டும், இயங்கிக் கொண்டும்
இருங்கள்.

* காலைப் பொழுதில் தளிர்களும், இலைகளும் சூரியனின் ஒளியில் தலையசைப்பதுபோல, புத்துணர்ச்சியுடன் செயல்படத் தொடங்குங்கள்.

* அழகுணர்வும்,ஒழுக்கத்தின் மேன்மையும் நிறைந்த வாழ்வில் துயரம் என்பதற்கு சிறிதும் இடமில்லை. அமைதியும், மகிழ்ச்சியும் அப்போது ஆனந்தம் நர்த்தனமாடத் துவங்கிவிடும்.

* உண்மையை அடைய அன்பு ஒன்றே சிறந்த வழி. ஆனால், அவ்வழி அதிக விலை உடையதாய் இருக்கிறது. தவறுகளை நாம் எப்போதும் மறைத்துவிட முயலக்கூடாது. அதனால், உண்மையின் கதவுகள் அடைபட்டுப் போய்விடும்.

* நாம் உண்மையாய்உழைக்கத் தொடங்கினால் இறைவன் வாழ்வளிப்பான். நாம் உள்ளம் கசிந்து பாடித் துதித்தால் இறைவன் நம்மை விரும்பத் தொடங்குவான்.

* அன்பு நம் அறிவை செம்மைப்படுத்தி விடுதலை அளிக்கும் ஆற்றல் கொண்டது. நாம் அனைவரும் அன்பினால் மட்டும் ஒற்றுமையுடன் வாழ முடியும்.

* உண்மைக்கு அப்பாற்பட்டு எவன் ஒருவனுடைய புகழ் பளிச்சிடுகிறதோ, அவனே பெருமைக்குரிய மனிதனாவான்.

* அடக்கத்தோடு இருக்கும் மனிதர்கள் வாழ்வில் உயர்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்ற உண்மையை பலரும் புரிந்து
கொள்வதில்லை.
* இந்த உலகம் அழகுமயமாகவும், மகிழ்ச்சிமிக்கதாகவும் விளங்குவதற்கான முயற்சிகள் அனைத்தையும் செயல்படுத்துதல் அவசியமானதாகும்.

* நேர்மை உள்ள மனிதன் தோல்வியைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமை பெற்றிருப்பான். ஆனால், நேர்மையில்லாமல் வாழ்வில் தவறு செய்வது மட்டுமே வாழ்க்கை என்று இருப்பவர்கள்தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவிப்பார்கள்.வேண்டுகோள் விடுக்கிறார் தாகூர்.
------------------------------------------------------------------------------------------------------------
இரவு முழுவது திறந்திருக்கும் கோயில்!

மதுரை, சிலார்பட்டி கிராமத்தில் உள்ள காலதேவியம்மன் கோயில் கோபுரத்தில் நேரமே உலகம் என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இந்த காலதேவியம்மனால் கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்ற முடியுமாம். 51 அடி உயரத்தில் முறம் போன்ற அமைப்பில் பிரமாண்டமாகக் காட்சியளிக்கிறது கோயில் கோபுரம். அரிசியைப் புடைக்கும் போது, எப்படி தேவையில்லாத கல், குப்பை எல்லாம் வெளியே போகுதோ, அதேபோல் நம் கெட்ட நேரமும் வெளியே போகத்தான் இந்த வடிவமாம். மாலை 6 மணி முதல் விடியற்காலை 6 மணி வரை (இரவு நேரம் முழுவதும்) நடை திறந்தே உள்ள அபூர்வமாகக் கோயில் இது!
------------------------------------------------------------------------------------------------------------
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி!

கண்ணனுக்கு பல மனைவியர். இருந்தாலும், அவர் தன்னை பிரம்மச்சாரி என்கிறார். எப்படி? யமுனைக்கரையில் இருந்த ஒரு மாளிகையில் கண்ணனும், ருக்மிணியும் தங்கியிருந்தனர். நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மறுகரையில், கண்ணனின் பக்தரான துர்வாச முனிவர் நல்ல பசியுடன் காத்திருந்தார். பக்தனின் பசி பொறுக்காத கண்ணன், ருக்மிணி! என் பக்தர் துர்வாசர் கடும்பசியுடன் அக்கரையில் காத்திருக்கிறார். நீ போய் உணவு பரிமாறி விட்டுவா, என்று உத்தரவிட்டார்.சுவாமி! ஆற்றில் வெள்ளம் அதிகமாக இருக்கிறதே! எப்படி கடந்து செல்வது? என்றாள் அவள். நீ யமுனையின் அருகில் போய், நித்ய பிரம்மச்சாரியான கிருஷ்ணர், துர்வாச முனிவருக்கு உணவளிக்க என்னை அனுப்பியுள்ளார். எனவே நீ வழிவிடு என்று சொல். ஆறு இரண்டாகப் பிரிந்து வழிவிடும், என்று பதிலளித்தார் கண்ணன். என்ன சொல்கிறார் இவர்! பல மனைவியருடன் வாழும் இவரா பிரம்மச்சாரி! எதற்காக இப்படி சொல்கிறார்? அவள் குழம்பியபடியே, கிருஷ்ணர் சொன்னதைச் செய்தாள்.  யமுனையும் வழிவிட்டது. அவள் போய் வந்ததும், அவளது முகக்குறிப்பைக் கொண்டே அவளது சந்தேகத்தைப் புரிந்து கொண்ட கண்ணன்,யார் ஒருவன் உலகமக்களைப் பக்தி வழியில் திருப்ப முயற்சிக் கிறானோ அவன் பிரம்மச்சாரியாவான். அந்தப் பணியை நானும் செய்கிறேன். எனவே, நானும் பிரம்மச்சாரி தான். இதை யமுனை புரிந்து கொண்டு வழிவிட்டது, என்றார். பக்தி நெறியில் உங்கள் மனதைச் செலுத்துவதுடன், பிறருக்கும் வழிகாட்டுங்கள். புரிகிறதா!
------------------------------------------------------------------------------------------------------------
மாணவர்களுக்கு ஞாபகசக்தி தேவை!

* பகுத்தறிவு இல்லாத விலங்குகள் கூட தங்கள் வாழ்க்கை முறைகளை இஷ்டம் போல மாற்றிக் கொள்வதில்லை. ஆனால், மனிதன் மனம் போன போக்கில் நடந்து அமைதியை இழந்து வாழ்கிறான்.

* நவீன வாழ்க்கை முறை மனிதனை நாகரிகம் என்றபெயரில் கட்டுப்பாடில்லாமல் வாழ வகுத்துவிட்டது. பண்பாடு என்பது காலத்திற்கு காலம் மாறுவதில்லை.

* வாழ்க்கையில் வெற்றி பெற நினைவாற்றல் மிகவும் அவசியம். ஞாபகமறதி குணம் கொண்டவர்கள் நிறைய தவறுகளைச் செய்வார்கள். ஞாபகத்திறனை வளர்த்துக் கொண்டால் ஆன்மிக வாழ்விலும் சாதிக்க முடியும்.

* நம்முடைய உள்மனம் தான் ஞாபகசக்திக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறது. பள்ளியில் படிக்கும்போதே மாணவர்களின் ஞாபகசக்தியை வளர்த்துக் கொள்ள
வேண்டும்.

* புலனடக்கத்தையும், உணவில் கட்டுப்பாட்டையும் பின் பற்றினால் நினைவாற்றல் பெருகும். ஆற்றலை வீணாக்கும் வேண்டாத பொழுதுபோக்குகளைத் தவிர்ப்பது அவசியம்.

* நாம் செய்யும் செயல் எதுவாக இருந்தாலும் ஆர்வமுடன் பணியாற்றவேண்டும். தியானப்பயிற்சி, மவுனவிரதம் ஆகியவை ஞாபகத்திறனை மேம்படுத்தும்.

* நல்லவிஷயங்கள் எங்கிருந்தாலும் நாடிச் செல்லுங்கள். அவற்றை மனதில் நிலைநிறுத்துங்கள். இறையுணர்வில் ஈடுபாடு கொண்டு வாழ்வை அர்த்தமுள்ளதாக்குங்கள்.
------------------------------------------------------------------------------------------------------------
காயசித்தி என்றால் என்ன?

காயம் என்பது உடலையும், சித்தி என்பது வெற்றியையும் குறிக்கும். காயம் எனும் உடலைப் பேணி உயிரைப் பாதுகாத்து அறிவை வளர்த்து வாழ்க்கையில் வெற்றி பெறுவதையே காயசித்தி என்பர்.உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன் உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்று கூறும் திருமந்திர ஆசிரியர் திருமூலர், இம்மண்ணில் காயசித்தி மூலமே மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருந்தார்.
------------------------------------------------------------------------------------------------------------
உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும். என்ன? புரிஞ்சுதா?

பெரியவாளுடைய இந்த அறிவுரை நம் எல்லோருக்கும் ஒரு சம்மட்டி அடி !
சிமிழி பிரஹ்மஸ்ரீ வெங்கட்ராம சாஸ்த்ரிகள் பெரியவாளுடைய அன்புக்கும் அபிமானத்துக்கும் ரொம்ப அருகதை உடையவர். அப்படியொரு அனுஷ்டானம் ! பெரியவாளிடம் பக்தி!அவர் மறைந்ததும் அவருடைய பிள்ளைக்கு பால்யத்திலேயே ரெண்டு சன்யாசிகள் மூலமாக தேவி உபாசனை உபதேசிக்கப்பட்டது. பல ஆண்டுகள் உபாசித்தும் உபாசனையில் வாக்கு சரீரம் ரெண்டும் ஈடுபடர அளவு மனஸ் ஈடுபட மாட்டேங்கறது. அதனால மனசுக்கு சாந்தி கெடைக்கவேயில்லை என்ற இந்த உண்மையான எண்ணம் ரொம்ப வலுத்துக் கொண்டே போனது. பல வழிகளை கையாண்டும் ஒன்றும் பிரயோஜனமில்லை. பெரியவா மட்டுமே இதற்கு வழி காட்டமுடியும் என்ற நம்பிக்கையில் பெரியவாளிடம் வந்தார்.கார்வேட் நகரில் ஒரு குளக்கரையில் அழகாக வேய்ந்திருந்த ஒரு சிறு கொட்டகையின் வாசலில் அமர்ந்திருந்தார். எத்தனைதான் அறிமுகம் இருந்தாலும் பூர்வர்கள் யார் யார் என்பதெல்லாம் தெரியாதது மாதிரி கேட்டுக் கொள்வார். நாம் இன்னாரது வம்சத்தில் வந்திருக்கிறோம் என்று சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்வதை அவர் மிகவும் விரும்புவதாக இருக்கும். இந்த உபாசகரும் தான் சிமிழி சாஸ்த்ரிகள் பிள்ளை என்று சொல்லிவிட்டு தன் மனஸ் படும் கஷ்டத்தை சொல்லி வழிகாட்ட வேண்டும் என்று வேண்டினார். அப்போது நடந்த சம்பாஷணை…தேவி உபாசனை பல வர்ஷங்களா பண்ணிண்டு இருக்கேன். ஆனா மனஸ் துளிகூட ஈடுபடலை. ரொம்ப உறுத்தறது. எனக்கு ஒரு வழி காட்டணும் பெரியவா

என்ன சொல்றே? அதனால என்ன தப்பு?மனஸ் தனி வஸ்துவா இருக்கறதால பூஜை முழுமையாகாத மாதிரி இருக்கு அதுக்கு நா என்ன பண்ணறது?மனஸ் ஈடுபட ஒரு வழி காட்டணும் என்ன படிச்சிருக்கே?…சொன்னார்.இத்தனை படிச்சும் ஒனக்கு விவேகமில்லே! ஒன் மனஸை நா திருத்த முடியாது

என்னாலேயே என்னை திருத்திக்க முடியலை. அதான் பெரியவாட்ட வந்தேன் என்னை என்ன செய்ய சொல்றே?மனஸ் சாந்தி அடையணும்
நீ என்ன பூஜை பண்றே?
அம்பாளை படத்துலேயும் விக்ரஹத்துலேயும் யந்த்ரத்துலேயும் பூஜை பண்ணறேன்

ரொம்ப சரி. படத்ல அம்பாள் இருக்கறதா நெனச்சுதான பூஜை பண்றே?ஆமாம் அப்போ...இந்த கொறையைக் கூட அவகிட்டயே சொல்லியிருக்கலாமே? நெறைய படிச்சிருக்கே. படம் விக்ரஹம் யந்த்ரம்….ன்னு எல்லா எடத்துலேயும் அவ இருக்கறதா பூஜையும் பண்றே. ஆனா ஒண்ணுலயும் ஒனக்கு பிடிப்போ நம்பிக்கையோ இல்லை. அம்பாள் ஓங்காத்துலேயே ஒன் பக்கத்துலேயே இருக்கறச்சே ஒன் கொறையை அவட்ட சொல்லி அழத் தெரியலையே! இனிமே அவகிட்டயே சொல்லி அழு! இங்க வராதே. நான் என்ன பண்ண முடியும்?மிகவும் சூடாக பதில் வந்ததும் உபாசகர் விக்கித்து நின்றார். மனஸ் இந்த பேரிடியை தாங்கமாட்டாமல், கண்களில் ஜலம் முட்டி நின்றது. நமஸ்காரம் பண்ணிவிட்டு உத்தரவு வாங்கிக் கொள்ள யத்தனித்தார். அம்பாள் மனஸ் இறங்கினாள்………..

ரொம்ப கோவிச்சுண்டுட்டேன.! நீயே ரொம்ப ஆசையா அம்பாளை உபாசனை பண்றே! மனஸ் ஈடுபடலை..ன்னு ஒனக்கே தெரியறது. உபாசனை…ன்னா சமீபத்ல இருக்கறதுன்னு அர்த்தம். ஒனக்கு எப்பவுமே பக்கத்ல இருக்கறவள் கிட்டே ஒன்னோட கொறையை சொல்லாம நீட்டி மொழக்கிண்டு எங்கிட்ட வந்தியே!…ங்கறதாலதா கொஞ்சம் அப்பிடி ஒரைக்கறா மாதிரி சொன்னேன்.

இனிமே… என்ன கொறையானாலும் எதுக்கும் அவளைத் தவிர வேற யார்கிட்டயும் சொல்லக் கூடாது ! நீ பூஜை பண்ற தெய்வத்துகிட்ட அது அம்பாளோ சிவனோ விஷ்ணுவோ பிள்ளையாரோ….யாரா இருந்தாலும் சரி அவா கிட்டேயே கேட்டாத்தான் ஒன்னோட நம்பிக்கைக்கு ஏத்தா மாதிரி அனுக்ரகமும் கெடைக்கும். உன் உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும். என்ன? புரிஞ்சுதா?...நம்பிக்கை தான் எல்லாம். அவளோட அனுக்கிரகம் ஒனக்கு நிச்சயமா உண்டு! கவலைப்படாதே…க்ஷேமமா இரு! என்று அபயஹஸ்தம் கொடுத்தாள். இனி ?……எனக்கென்ன மனக்கவலை? என் தாய்க்கன்றோ தினம் தினம் என் கவலை.
------------------------------------------------------------------------------------------------------------
சுந்தர ஸ்வாமிகள், கோடகநல்லூர்

1831 ஆம் வருடம் டிசம்பர் 3 ஆம் தேதி சனிக்கிழமை அன்று அனுஷ நட்சத்திரம், ரிஷப லக்னத்தில் அமாவாசை நாளில் திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் அவதரித்தார். ஸ்ரீ சுந்தர சுவாமிகள். ஸ்ரீவத்ஸ கோத்ரத்தைச் சேர்ந்த யக்ஞேஸ்வர சாஸ்திரிகள் காமாட்சி அம்மாள் தம்பதியின் 2வது மகனாகப் பிறந்தார். மூத்தவன் குப்பாணி சிவம்.

அப்பய்ய தீட்சிதரின் பரம்பரையில் அவதரித்தவர் சுந்தர ஸ்வாமிகள். இவர் பிறந்த ஒண்ணரை ஆண்டிலேயே இவரின் பெற்றோர் இறந்தனர். எனவே தாய்மாமனான வேங்கடசுப்பய்யர்தான் சுந்தரத்தை வளர்த்து வந்தார். சிறுவர்களான குப்பாணி சிவம் மற்றும் சுந்தரம் இருவரும் கல்வி பயிலுவதற்காக கங்கை கொண்டானில் இருந்து பக்தமடைக்கு இடம் பெயர்ந்தனர். சுந்தரத்துக்கு 5 வயதில் அட்ச அப்பியாசமும் ஏழு வயதில் உபநயனமும் நடைபெற்றது. பத்தடையைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ண கனபாடிகளிடம் வேத அத்யயனம் பயின்ற சுந்தரம். கல்விகேள்விகளில் சிறந்து விளங்கினான். இவனது திறனைக் கண்டு வியந்த ஊர்க்காரர்கள் தெய்வீகப் பிறவியப்பா சுந்தரம். இப்படியொரு புள்ள நம்ம ஊர்ல வளர்றதுக்கு நாமெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும் என்று பெருமிதம் கொண்டனர்.

சிவபூஜை செய்வதில் ஈடுபாடு கொண்ட சுந்தரம் தினமும் ஒரு லட்சம் முறை பஞ்சாட்ர மந்திரத்தை ஜபித்து வந்தான். மேலும் யாகம், தவம் ஆகியவற்றிலும் கரை கண்டிருந்தான் சுந்தரம். நெல்லை மாவட்டம் அடைச்சாணி எனும் கிராமத்தைச் சேர்ந்த ராமசுப்பய்யரின் மகள் ஜானிக்கும் சுந்தரத்துக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது சுந்தரத்துக்கு வயது பதினாறு. தன்னுடைய மாப்பிள்ளையின் சிவபக்தியைக் கண்டு வியந்த ராமசுப்பய்யர். சிவ பூஜைக்கான நியமங்கள் சிலவற்றை அவருக்கு போதித்தார். அத்துடன் நெடுநாளாக தான் பூஜித்து வந்த பாணலிங்கம், ஸ்ரீநடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் ஆகிய விக்கிரகங்களையும் வழங்கினார்.



இந்த நிலையில் அடைச்சாணியில் உள்ள விஸ்வேஸ்வர சாஸ்திரிகள் என்பவரிடம் மந்திர உபதேசம் பெற்ற சுந்தரம். இவரை தமது குருவாகவும் ஏற்றார். இதையடுத்து பத்தமடைக்கு திரும்பிய சுந்தரம் ஸ்வாமிகள் தன் வாழ்க்கை முறையை மாற்றலானார். கணவரின் எண்ணத்துக்கு தக்கபடி சுவாமிகளின் துணைவியார் ஜானகியும் தியாகங்கள் சிலவற்றைச் செய்தார். பின்னர் தனது குருவின் ஆணைப்படி துணைவியார் ஜானகிக்கு மந்திரங்கள் உபதேசித்து அவரை தனது முதல் சீடராக ஏற்றார். துணைவியாரின் விருப்பமும் இதுவே, இதையெடுத்து சில ஆண்டுகளில் சுவாமிகளை அறிந்த அன்பர்கள் பலர் இவருக்கு சீடர்களானார்கள்.

ஒருமுறை தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள கோயில்கள் தரிசிக்க யாத்திரை மேற்கொண்டார் சுவாமிகள். பயணத்தின்போது சூத சமஹிதை குறித்து உரை நிகழ்த்தினார். (சிவபக்தி, சிவபூஜை, ஆசனங்கள் அஷ்டமாஸித்தி அஷ்டமாயோகம் ஆகியவை குறித்து சூத புவராணிகர் அருளியதே சூத சம்ஹிதை) சிவபூஜை செய்தார்.

புனித பூமியாம் காசிக்குச் சென்று கங்கையில் நீராடி காசி விஸ்வநாதர் விசாலாட்சி மற்றும் அன்னபூரணியை தரிசிக்க விரும்பிய சுவாமிகள் யாத்திரை புறப்பட்டார். மதுரை, திருச்சி, திருவையாறு, மாயவரம், சீர்காழி, சிதம்பரம், வேதாரண்யம், விருத்தாசலம் முதலான தலங்களை தரிசித்து அங்கு உள்ள பக்தர்களுக்கு ஆசி வழங்கி பின்னர் காசியை அடைந்தார். கங்கையில் நீராடினார். கோயில்கள் பலவற்றையும் தரிசித்தார். காசியில் உள்ள யோகிகள் பலரிடமும் உரையாடினார். அப்போது இறை பலமும் எண்ணற்ற கலைகளும் கைவரப்பெற்ற மகா கணபதி சுவாமிகளை சந்திக்க நேர்ந்தது. அதுவும் எப்படி?

தொடர்ந்து ஆறு மாத காலம் நீருக்கு அடியிலேயே வசிக்கும் யோகப் பயிற்சியை அறிந்த மகா கணபதி சுவாமிகளை அவர் கங்கை நதிக்குள் தவம் இருப்பதை அறிந்து தானும் அங்கு சென்று சந்தித்தார் சுந்தர ஸ்வாமிகளை இருவரும் பல அரிய தகவல்களை பரிமாறிக் கொண்டனர். மணிகர்ணிகா கட்ட படித்துறையில் இந்த இரண்டு துறவிகளது கல் விக்கிரகங்களை இன்றைக்கும் தரிசிக்கலாம்.

காசியிலிருந்து நெல்லைச் சீமைக்கு திரும்பிய சுந்தர ஸ்வாமிகள் பத்தமடை, கோடகநல்லூர் சுத்தமல்லி, கடையம் முதலான தலங்களுக்குச் சென்றார். (தனது குரு திருச்சமாதி அடைந்த அடைச்சாணிக்கும் சென்று தரிசித்தார்) கடையத்தில் சேஷாசல தீட்சிதர் என்பவரை சந்தித்த பின் சன்னியாசத்தைப் பெற்றார். அப்போது சுவாமிகளுக்கு வயது 21.

சுவாமிகள் ஒருமுறை சுத்தமல்லியில் தங்கி இருந்தபடி தினமும் சொற்பொழிவாற்றி செய்து வந்தார். திரளென குவிந்திருந்த பக்தர்கள் இடையே வடமொழியில் ஸ்லோகங்கள் சொல்லி அதற்கு தமிழில் விளக்கமும் அளித்தார். கட்டுக்குடுமியும் பூணூலையும் சுவாமிகள் உபந்யாசித்து வந்தபோது ஒருவர் திடீரென எழுந்து உள்ளே சென்றார். சில நிமிடங்களில் மீண்டும் திரும்பி வந்தார்.

அவரைக் கண்டு பலரும் அதிசயித்தனர். காரணம் சுவாமிகளது தலையில் கட்டுக்குடுமி இல்லை. திருமேனியில் பூணூலும் இல்லை. சட்டென அனைத்தையும் துறந்துவிட்டு தன் உபந்யாசத்தை தொடர்ந்தார். இதன், பின்னர் சுவாமிகளின் துறவு வாழ்க்கை முழுமை அடைந்ததாகக் கருதினர் அவரது சீடர்கள்.

தனது 23 ஆம் வயதில் நெல்லை சங்கர மடத்தில் சில காலம் வசித்த சுவாமிகள் அங்கு எதிர்பார்த்த அமைதி நிலை கிடைக்கப் பெறாததால் நெல்லையை அடுத்த கோடக நல்லூரை அடைந்தார். இவர் தாமிரபரணிக் கரையோரத்தில் நெடுநெடுவென வளர்ந்திருக்கும் நாணல் மற்றும் மூங்கில் புதர்களுக்குள் சென்று எவரும் தன்னை அணுக முடியாத நிஷ்டையில் ஆழ்ந்திருப்பார். சில தருணங்களில் அப்படியே சமாதி நிலையை எய்தி விடுவார் சுவாமிகள். அப்போது சுவாமிகளுக்கு உணவு எடுத்து வரும் சீடர்கள் சுவாமிகளை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க இயலாமல் உணவுடன் திரும்பிச் செல்வார்கள். ஆனால் பக்தனின் பசியை பரமன் பொறுப்பாரா? அன்ன ஆகாரம் எதுவுமின்றி சுவாமிகள் நிஷ்டையில் இருக்கும்போது ஆதிசிவனே அந்தணர் வடிவில் அன்னப் பாத்திரத்துடன் தோன்றியதுடன் சுந்தர ஸ்வாமிகளுக்கு தரிசனமும் அருளியுள்ளாராம்.

கோடகநல்லூரில் உள்ள சங்கர மடத்தில் தங்கி சொற்பொழிவு ஆற்றி இருக்கிறார் யோகிகளுக்கே உரித்தான பரிபக்குவ நிலையை அடைவதற்கு கோடகநல்லூர் வாசம் உதவியதால் பின்னாளில் ஸ்ரீ கோடகநல்லூர் சுந்தர ஸ்வாமிகள் ஆனார்.

ஒரு தீபாவளி தினம். காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் உபந்யாசம் செய்தார் சுந்தர ஸ்வாமிகள். ராமச்சந்திர மேத்தா உள்ளிட்ட அடியார்கள் பலரும் திரளான பக்தர்களும் அங்கு இருந்தனர். இரவு, சாஸ்திரம் குறித்த விளக்கங்களை தெளிவுற அறிந்த சுவாமிகள் பரிசுத்தமான ஒவ்வொருவரது உள்ளங்கையிலும் அக்னி பகவான் ஆட்சி செலுத்துகிறார். எனவே நெருப்பின் தாக்கம் உள்ளங்கையில் எப்போதும் குடிகொண்டிருக்கும். ஆகவே உள்ளங்கையில் படாமல் உணவைச் சாப்பிடுவதே உத்தமம் என்றார். இதை ராமச்சந்திர மேத்தா கூர்ந்து கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் காமாட்சி அம்மன் கோயில் அர்ச்சகரான சுப்ரமண்ய பட்டர் தெய்வ அலங்காரம் மற்றும் நைவேத்திய தயாரிப்புக்காக புஷ்பங்கள், அரிசி மற்றும் ஒரு  கொட்டாங்கச்சியில் நெருப்புத் துண்டுகள் ஆகியவற்றுடன் அங்கு வந்தார். திடீரென மழை பெய்யவே கொட்டாங்கச்சியில் இருந்த நெருப்புத் துண்டங்கள் மழையில் நனைந்து அணைந்தது. இது சுவாமிகளது திருவிளையாடல் என்பதை அப்போது எவரும் உணரவில்லை.

சுவாமிகளை வணங்கிய சுப்ரமண்ய பட்டர் பக்தர் எவரையேனும் அனுப்பி நெருப்புத் துண்டங்கள் கிடைக்க உதவும்படி வேண்டினார். உடனே சுவாமிகளும் அங்கு இருந்த ஆவுடையப்ப பிள்ளை என்பவரை அழைத்து அடுக்களைக்குச் சென்று நெருப்புத் துண்டங்களை எடுத்து வரும்படி உத்தரவிட்டார். அப்போது ராமச்சந்திர மேத்தாவுக்கு வந்தது ஒரு யோசனை. மெள்ள சுவாமிகளை நெருங்கி பூஜைக்கு தேவையான நெருப்பை தங்களது உள்ளங்கையில் இருந்து எடுத்துத் தர முடியாதா சுவாமி? என்று பவ்யமாகக் கேட்டார். அங்கு இருந்தவர்கள் அதிர்ந்தனர். சுவாமிகளையா சோதிப்பது? என்று முணுமுணுத்தனர்.

ராமச்சந்திர மேத்தாவைப் பார்த்துப் புன்னகைத்த சுவாமிகள் தாங்கள் மேலே அணிந்திருக்கும் வஸ்திரத்தைத் தாருங்கள் என்று வாங்கிக் கொண்டார். வஸ்திரத்தைத் தனது உள்ளங்கையில் பரபரவென தேய்த்தார். அவ்வளவுதான் தகித்து எழுந்தது நெருப்பு இதைக்கொண்டுபூஜைக்கு தேவையான அக்னி தயார் செய்யப்பட்டது. இதைக் கண்டு விதிர்த்துப் போன மேத்தா சுவாமிகளின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அவரை ஆசிர்வதித்த சுவாமிகள் இது இறைவனின் விளையாடலப்பா! கலங்க வேண்டாம் என்றார்.

சிருங்கேரி ஜகத்குரு மகாசன்னிதானம் ஒருமுறை திருநெல்வேலிக்கு விஜயம் செய்திருந்தார். சுந்தர ஸ்வாமிகளைப் பற்றி அறிந்திருந்ததால் அவரை தான் தங்கியிருந்த இடத்துக்கு அழைத்து அவருடன் பேசி மகிழ்ந்தார் சிருங்கேரி சன்னிதானம். அத்துடன் தன்னைச் சந்திக்கக்கூடி இருந்த மக்கள் இடையே சுந்தர சுவாமிகள் ஓர் அவதார புருஷர் என்று கூறி அவரது பெருமைகளை விவரித்தார்.

சுந்தர ஸ்வாமிகளது காலத்துக்குப் பிறகு வந்தவர்தான் எனினும் காஞ்சி மகா ஸ்வாமிகள் சுந்தர சுவாமிகள் குறித்து தன் பக்தர்களிடம் விவரித்துள்ளனார். அப்போது கோயில் திருப்பணிகளுக்கு அள்ளிக் கொடுத்து இறைப் பணியில் தங்களை பெரிதும் ஈடுபடுத்திக் கொண்டவர்கள் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள். இந்த கைங்கர்யத்தைத் தொன்று தொட்டு செய்து வந்தாலும் சமீப காலத்தில் இவர்களை அதிக அளவில் இறைப்பணியில் ஈடுபடச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் சுந்தர சுவாமிகள். இவரது காலத்தில் திருமேனியில் திருநீறும் கழுத்தில் ருத்ராட்சமும் அணியாத நாட்டுக் கோட்டை செட்டியாரைப் பார்ப்பதே அரிது. அந்த அளவுக்கு இவர்களுக்கு சிவபக்தியை புகட்டியவர் சுந்தர சுவாமிகள். இவரது உத்தரவை ஏற்று சிவன்கோயில்கள் பலவற்றுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளனார் என்று கூறி உள்ளார் காஞ்சி மகா சுவாமிகள். இந்தத் தகவல் சுந்தர சுவாமிகளது வரலாற்றுத் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.

செட்டி நாட்டுப் பகுதிகளுக்குச் சென்று உபந்யாசம் செய்யும்போது ஏகமூக ருத்ராட்சத்தின் மகிமையை எடுத்துரைப்பார் சுந்தர சுவாமிகள். இதைக்கேட்ட நாட்டுக்கோட்டை செட்டிமார்கள் பலரும் ஏகமுக ருத்ராட்சத்தை அணியத் துவங்கினர். சுவாமிகளை குருவாக ஏற்று வணங்கி வரும் எண்ணற்ற அன்பர்கள் ஏகமுக ருத்ராட்சத்தை அணிந்திருப்பதைக் காணலாம்.

திருவையாறு பகுதியில் உள்ள ஸப்த கோயில்களுக்கு (திருவையாறு, திருச்சோற்றுத்துறை திருநெய்த்தானம், திருவேதிக்குடி, திருக்கணிகை, திருப்பழனம், திருப்பூந்துருத்தி) 1872ல் கும்பாபிஷேகம் செய்துவைத்தார் சுவாமிகள்.

வைகாசி மாதத்தில் ஒரே நாளில் நேரத்தில் ஏழு கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆச்சரியம் என்னவெனில் எல்லா கோயில்களிலும் ஒரே நேரத்தில் அங்கு இருந்தார் சுவாமிகள். இதை அறிந்த அவரின் சீடர்களும் எண்ணற்ற பக்தர்களும் மெய்சிலிர்த்தனர்.

இந்தக் கும்பாபிஷேகத்தில் பங்கெடுத்த அந்தணர்கள் மதிய உணவுக்காக அமர்ந்திருந்தனர். அப்போது சயைலில் ஈடுபட்டிருந்த அன்பர் ஒருவர் ஓடிவந்து உணவில் சேர்ப்பதற்கும் அந்தணர்களுக்கு பரிமாறுவதற்கும் நெய் இன்னும் வந்தபாடில்லை என்ன செய்வது? என தவித்தபடி கேட்டார். உடனே சுவாமிகள் அவ்வளவுதானே கோயில் குளத்தில் நான்கு குடங்கள் தண்ணீர் எடுத்து வாருங்கள் என்றார்.

நெய் கேட்டதற்கு நீரை எடுத்து வரச் சொல்கிறாரே என்று அந்த அந்தணர் குழம்பியபடி அடி சீக்கிரமா எடுத்துட்டு வாங்க. அந்தணர்கள் பசியுடன் இருக்காங்க அவரை விரட்டினார் சுவாமிகள். உடனே அவர்கள் நான்கு குடங்களிலும் குளத்து நீரை எடுத்துவந்து சுவாமிகள் முன்னே வைத்தார்.

அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று அறியும் ஆவலுடன் அனைவரும் காத்திருந்தனர். கையில் கொஞ்சமாக திருநீரை எடுத்த சுவாமிகள் ஸ்ரீஐயாரப்பரை பிரார்த்தித்து திருநீறை நான்கு குடங்களிலும் மெள்ள தூவினார். மறுகணம் குடங்கள் அனைத்திலும் கமகமவென நெய் வாசனை அனைவரும் அதிசயித்துப் போனார்கள். இந்த நெய்தான் அன்னதானத்துக்குப் பயன்படுத்தப்பட்டது.

இதையடுத்து சில நிமிடங்களில் நெய் எடுத்து வந்து இறங்கினார் வியாபாரி. உடனே அன்பர் ஒருவரை அழைத்த சுவாமிகள் ஒரு குடநெய்யை மட்டும் கோயில் குளத்தில் விட்டுவிடுங்கள். இறைவன் கொடுத்ததை அவனுக்குத் திருப்பித் தருவதுதான் மரியாதை என்றார். அதன்படியே குட நெய் குளத்தில் விடப்பட்டது.

இந்த திருவையாறு கும்பாபிஷேகத்தில் இன்னொரு சம்பவமும் நடந்தது. சுந்தர ஸ்வாமிகளை எப்படியேனும் அவமானப்படுத்த வேண்டும் எனும் நோக்கத்துடன் அந்நிய மதத்தைச் சேர்ந்த ஒருவர் அங்கு வந்தார். சுவாமிகளுக்கு என் அன்பு காணிக்கை என்று சொல்லி பொட்டலம் ஒன்றை சுவாமிகளுக்கு முன்பு வைத்தார்.

மெள்ள புன்னகைத்த சுவாமிகள் தனது திருக்கரத்தால் அந்தப் பொட்டலத்தைத் தொட்டார். பிறகு அந்த ஆசாமியிடம் பொட்டலத்தைப் பிரிக்கும்படி கூறினார். சுவாமிகளுக்கு அவமானம் நேரப் போவதாக மகிழ்ந்த அந்த ஆசாமி பொட்டலத்தைத் திறந்தார். அதில் சுவையான பழங்கள் இருந்தது கண்டு அதிர்ந்தார். ஏனெனில் பொட்டலத்தில் வைத்திருந்தது மாமிசமாயிற்றே. தை அமாவாசையின் போது 1884 ஆம் ஆண்டு நெல்லை காந்திமதி அம்மன் கோயிலில் லட்சதீபம் ஏற்றுதல், பொதிகை மலை தரிசனம், குறுக்குத்துறை முருகப் பெருமானின் கோயில் விஜயம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டார் சுவாமிகள். இதையடுத்து புதுக்கோட்டை ஓட்டுத் திண்ணை பரதேசி சுவாமிகளது விருப்பத்துக்கு இணங்க புதுகைக்குச் சென்றார் சுவாமிகள்.

அப்போதுதான் அந்தணர் அல்லாதோருக்கும் பெண்களுக்கும் முறைப்படி தீட்சை வழங்கினார். இங்கு தங்கியிருந்த வேளையில் அரிமளம் சிவராமன் செட்டியார் மற்றும் புதுவயல் அழகப்பா செட்டியார் ஆகிய பக்தர்கள் இருவரும் சுவாமிகளைப் பெரிதும் கவர்ந்தனர்.

இதையடுத்து பல தலங்களுக்கும் சென்றவர் மீண்டும் புதுக்கோட்டைக்கு வந்தார். அங்கிருந்து ராமேஸ்வரத்துக்கு சென்றபோது அரிமளம் சிவராமன் செட்டியார் உட்பட பக்தர்கள் பலரும் உடன் சென்றனர். ரெட்டை மாட்டு வண்டிகளில் பயணம் செய்தவர்கள் திருமயத்தை அடைந்தபோது அந்த அற்புதம் நிகழ்ந்தது.

எதிரே சாலையில் நின்றபடி வண்டியை புதுக்கோட்டைக்குத் திருப்பு என்று சொல்லி மறைந்தார் சுந்தர ஸ்வாமிகள். வண்டிக்காரனுக்கோ குழப்பம், என்னடா இது? வண்டியில் அசந்து தூங்கிக்கிட்டிருந்த சாமீ திடீர்னு கீழே இறங்கி புதுக்கோட்டைக்குத் திருப்பச் சொல்றாரு என்று. பிறகு வண்டியைத் திருப்பி மீண்டும் புதுக்கோட்டை நோக்கிச் செலுத்தினான். சிறிது நேரத்தில் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட சுவாமிகள் இப்ப நாம எங்கேப்பா இருக்கோம் என்று கேட்க, புதுக்கோட்டையை நெருங்கிவிட்டு இருக்கோம். சாமீ என்று பதில் சொன்னான் வண்டிக்காரன். சுவாமிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. என்னது புதுக்கோட்டைக்கா? ராமேஸ்வரம் போகலையா? என்று கேட்டார். உடனே வண்டிக்காரன் என்ன சாமீ. நீங்கதானே வண்டிக்கு எதிரில் நின்னு புதுக்கோட்டைக்கே போடானு சொன்னீங்க? என்றான். ஆச்சரியப்பட்ட சுவாமிகள் வண்டியிலேருந்து நான் இறங்கவே இல்லியேப்பா என்று உறுதிபட தெரிவித்தார்.

பின்னர் திருமயத்தில் வண்டி எந்த இடத்தில் புதுகைக்குத் திரும்பியதோ அந்த இடத்துக்கு வெகு அருகில் பெரும் புயல் வீசியது. மரங்கள் விழுந்து வீடுகள் சரிந்து சாலையில் சென்ற வண்டிகள் அனைத்தும் நிலை தடுமாறி கவிழ்ந்துவிட்டன. ஆடுமாடுகள் கூட நாசமாகி விட்டன. மறுநாள் விடிந்ததும் இந்த தகவல் தெரிந்தது. அப்போதுதான் சுவாமிகளது உருவத்தில் வந்து இறைவனே தங்களை காப்பாற்றி உள்ளான் எனும் உண்மையை அறிந்து அனைவரும் சிலிர்த்தனர். பின்னர் சுவாமிகளை அரிமளத்துக்கு அழைத்துச் சென்ற சிவராமன் செட்டியார் சிவன்கோயிலுக்கு கும்பாபிஷேகம் மற்றும் அன்னதான சத்திரம் முதலான பணிகளை செய்து முடித்தார். மதுரையில் உள்ள விபூதி மடத்தில் பக்தர்கள் மற்றும் சிஷ்யர்களுடன் சில நாட்கள் தங்கினார் சுவாமிகள். இவரின் சீடரான நாராயணசிவம் என்பவர் தண்ணீரில் அமர்நது யோக நிஷ்டை இருப்பதில் தேர்ந்தவர். எனவே மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ள பொற்றாமரைக் குளத்துக்கு வந்து நீரின் மேல் யோகநிஷ்டையில் இருந்தார். நாராயணசிவம். இதைக்கண்ட அன்பர்கள் பலரும் அவரது யோக முறையை வியந்து அதிசயித்தனர். அதுவரை குளத்து நீரில் அமர்ந்தபடி யோகத்தில் இருந்த நாராயணசிவம் திடீரென மெள்ள மெள்ள நீருக்குள் மூழ்கினார். கரையில் நின்றவர்களுக்கு இவரது உடல் தெரியவே இல்லை. அங்கு இருந்த சுவாமிகளின் பக்தரான சுப்ரமண்ய குருக்கள் என்பவர் உடனே காவல்நிலையத்துக்கு ஓடோடிச் சென்று பொற்றாமரைக் குளத்துக்குள் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். காவல்துறையினர். இரண்டு நாளாகியும் உடல் கிடைக்கவே இல்லை.

மூன்றாம் நாள், அங்கு வந்தார் சுந்தர சுவாமிகள். நாராயண சிவத்தின் உடலை எப்படியேனும் தென்கரையிலுள்ள விபூதி விநாயகர் சிலைக்கு அருகே கொண்டு வந்து வைத்துவிடுங்கள் என்று காவல்துறையினரிடம் தெரிவித்தார் சுவாமிகள்.

இறந்த நாராயண சிவத்தை உயிர்ப்பிக்கும் எண்ணத்தில் இருக்கிறார் சுவாமிகள் என்பதை அறிந்து கொண்ட போலீசாரும் கோயில் ஊழியர்களும் சுவாமிகளை கேலி செய்தனர். தண்ணீரில் இறந்து மூணு நாளாச்சு. உடலையே இன்னும் கண்டுபிடிக்க முடியலை. இவர் உயிர்ப்பிக்க போறாராமா! என்று கிண்டல் செய்தனர். இருப்பினும் நடப்பதைத்தான் பார்ப்போம் என்று குளத்தில் இறங்கி தேட எத்தனித்தர். அப்போது திடீரென நீரில் உடல் மிதந்தது. அனைவரும் அதிர்ந்து போனார்கள். பின்னர் நாராயண சிவத்தின் உடலை விபூதி விநாயகர் சன்னிதிக்கு அருகே கொண்டு வந்து கிடந்தனர்.

சுவாமிகளை இறைவனை பிரார்த்தித்து நாராயண சிவத்தின் உடல் முழுவதும் திருநீறை அள்ளி பூசினார். சடலத்தின் வலது காதில் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதினார். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மெள்ள தடவி கொடுத்தார். அவ்வளவுதான், மூன்று நாட்கள் சடலமாகக் கிடந்த நாராயண சிவம் உயரித்தெழுந்தார். பின்னர் சுவாமிகளின் திருவடிகளில் விழுந்து வணங்கினார். சுவாமிகளின் அற்புதத்தை அறிந்து அங்கு இருந்தவர்கள் அவரை வணங்கினார்கள்.

இதையடுத்து மதுரையில் இருந்து திருச்சி, திருவையாறு, தஞ்சை, சென்னை முதலிய தலங்களுக்குச் சென்று இறைவனை தரிசித்த சுவாமிகள் பின்னர் கங்கைகொண்டான் ஆனந்தவல்லி சமேத கயிலாசநாதர் கோயிலின் கும்பாபிஷேகத்தை 1873 ஆம் ஆண்டு நடத்திக் கொடுத்தார்.

தம் வாழ்நாளில் 22 கும்பாபிஷேகங்களை நடத்தி வைத்திருக்கிறார் சுவாமிகள். அவர் நடத்திய முதல் கும்பாபிஷேகம் தான் ஸித்தி அடைந்த அரிமளத்தில் உள்ள கோயில். இறுதியில் நடத்திய கும்பாபிஷேகம் இவர் அவதரித்த கங்கைகொண்டானில் உள்ள கோயில்.

தான் சமாதி அடையும் நாள் நெருங்கி விட்டதை தமது சீடர்களிடம் தெரிவித்தார். சுந்தர ஸ்வாமிகள் அதன்படி 1878 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (ஐப்பசி 6) கிருஷ்ண பட்ச தசமி அன்று ஸித்தி அடைந்தார். அரிமளம் சிவராமன் செட்டியாரும் மற்ற சீடர்களும் சுவாமிகளது இறுதி காரியங்களை செய்து முடித்து சுவாமிகளது சமாதியின் மேல் அவர் பூஜித்து வழிபட்ட பாணலிங்கத்தை பிரதிஷ்டை செய்தனர்.

*அரிமளத்தில் உள்ள ஸ்ரீ சுந்தர சுவாமிகளின் அதிஷ்டானம்

இந்து சமய அறநிலையை ஆட்சித் துறைக்கு உட்பட்ட பொன்னமராவதி கொன்னையூர் முத்துமாரி அம்மன் கோயில் நிர்வாகத்தின் கீழ் வருகிறது. இந்த அதிஷ்டானம்.

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து தேனிப்பட்டி மற்றும் ஏம்பல் செல்லும் பேருந்துகள் அரிமளம் வழியாகச் செல்லும். தவிர அரிமளத்துக்கு நகரப் பேருந்து வசதியும் உள்ளது. அரிமளம் மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சற்றுத் தொலைவு நடந்தால் சுவாமிகளின் அதிஷ்டானத்தை அடையலாம். முகப்பில் ஒரு இரும்பு கேட். உள்ளே நுழைந்தால் நந்தவனம். கருவறை, உள்பிராகாரம், அர்த்தமண்டபம், வெளிப்பிரகாரம் என முழுவதும் கருங்கல் திருப்பணியாய் அமைந்து விஸ்தாராமாகவும் உள்ளது. கருவறையில் சுவாமிகளின் அதிஷ்டானம். சிலா வடிவில் உள்ள ஆவுடையாரின் மேல் சுவாமிகள் வழிபட்ட பாணலிங்கத்தை தரிசிக்கிறோம். இங்கு விபூதி அபிஷேகம் அடிக்கடி நடைபெறும். அதிஷ்டானத்தில் விநாயகர், பின்பக்க கோஷ்டத்தில் லிங்கோத்பவர், வெளியே நாகர் ஆகிய சன்னிதிகளும் உண்டு.

தினமும் காலையில் சுமார் எட்டரை மணியளவில் அபிஷேகம் நடைபெறும். தவிர பவுர்ணமி அன்று மாலை 4 மணிக்கும் ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு மற்றும் தேய்பிறை தசமி ஆகிய நாட்களில் பகல் 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். ஐப்பசி மாதம் தேய்பிறை தசமி அன்று (பூச நட்சத்திரம்) குருபூஜை சிறப்பாக நடைபெறுகிறது. அன்று மாலை சுவாமிகளின் உற்ஸவர் விக்கிரகம் வீதியுலா வரும். சுந்தர ஸ்வாமிகள் இங்கு இருந்தபடி உலகமெங்கும் உள்ள பக்தர்களை இன்றைக்கும் காத்து வருகிறார் என்பது நாட்டுக்கோட்டை செட்டியார் இனத்தவர் மட்டுமின்றி ஏனைய பக்தர்களது நம்பிக்கை.

தகவல் பலகை

ஸ்தலம்  : அரிமளம்

சிறப்பு  : ஸ்ரீ சுந்தர சுவாமிகள் அதிஷ்டானம்.

எப்படி செல்ல வேண்டும்?: புதுக்கோட்டையில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது அரிமளம். அறந்தாங்கி மற்றும் திருமயத்தில் இருந்தும் சுமார் 22 கி.மீ. தொலைவு.

எப்படிப் போவது?: புதுக்கோட்டையில் இருந்து 22, 27, 27ஏ மற்றும் ஜான்ஸி ஆகிய பேருந்துகளும் அறந்தாங்கியிலிருந்து 6, லதா, எஸ்.எம்.ஆர். ரங்கநாதன், பி.எல்.ஏ ஆகிய பேருந்துகளும் திருமயத்தில் இருந்து 9டி மற்றும் ராஜா ஆகிய பேருந்துகளும் அரிமளம் செல்கின்றன.

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7.30 12.00 மாலை 4.00-7.30
சம்பாத்தியத்தில் எத்தனை பங்கை கடவுளுக்காக செலவழிக்க வேண்டும்?

சம்பாத்தியத்தை மூன்று பங்காகப் பிரிக்க வேண்டும். ஒரு பங்கை அன்றாடச் செலவுக்கும், இரண்டாவது பங்கை கடவுள் வழிபாடு, தானதர்மம் ஆகியவற்றுக்கும், மூன்றாவது பங்கை எதிர்கால சேமிப்புக்காகவும் சேர்த்து வைப்பதே முறையானதாகும்.
------------------------------------------------------------------------------------------------------------
பவுர்ணமி நாளில் மட்டும் கிரிவலம் வந்தால் கடவுள் அருள்  கிடைக்குமா?

திதியில் பவுர்ணமியும், கிழமையில் திங்களும் (சோமவாரம்) நட்சத்திரத்தில் கார்த்திகையும் கிரிவலம் வருவது சிறப்பு. பவுர்ணமி நாளில் மனோகாரகனாகிய சந்திரன், பூரணக் கலைகளுடன் இருக்கிறார். அதன் கிரணங்கள்(ஒளிக் கதிர்கள்) நம் மேனி மீது படரும் விதத்தில் மாலைப் பொழுதில் வலம் வருவது நல்லது. பவுர்ணமி மட்டுமில்லாமல் எந்த நாளில் வேண்டுமானாலும் கிரிவலம் வந்தாலும் கடவுளின் அருள் நிச்சயமாக கிடைக்கும்.
------------------------------------------------------------------------------------------------------------
தீர்த்தத்தில் நீராடுபவர்கள் அணிந்திருக்கும் துணிகளை அங்கேயே விட்டு வருவது ஏன்?

அஷ்டமத்துச்சனி, ஏழரைச்சனி போன்றவற்றால் சிரமப்படுபவர்கள் சிலரது வழிகாட்டுதலால் இந்த தவறைச் செய்கிறார்கள். உடுத்தியிருக்கும் துணிமணியில் சனிபகவான் இருப்பது போல தவறாக நினைக்கிறார்கள். நளதீர்த்தத்தில் நீராடி சனீஸ்வரர் சந்நிதியில் எள்தீபம் ஏற்றி வைத்து ""நீலாஞ்சன ஸமா பாஸம் ரவிபுத்ரம் யமாக் ரஜம் சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம் என்ற ஸ்லோகத்தை 16 முறை சொன்னாலே போதும். வியாசர் அருளிய இந்த ஸ்லோகத்தை, சனி தோஷம் உள்ளவர்கள் தினமும் சொல்லி வரலாம். துணிகளைக் கழற்றிப்போட்டு நீர் நிலைகளை நாசமாக்குவதே ஒருவகையில் பாவம் தான்!
------------------------------------------------------------------------------------------------------------
சக்கரத்தாழ்வாருக்கு பின் நரசிம்மர் இருப்பது ஏன்?

பெருமாளின் கையில் இருக்கும் சக்கரத்தையே "சுதர்சன ஆழ்வார் என்று வழிபடுகிறோம். விஷ்ணுவின் கையிலுள்ள சக்கராயுதம் விரைந்து வந்து அடியவர் துன்பம் போக்கும் என்பது ஐதீகம். அதிலும், பிரகலாதனுக்காக ஓடோடி வந்த விஷ்ணுவின் அவசரத்திருக்கோலம் நரசிம்மர். "நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை என்பார்கள். அதனால், உடனடியாக அருள் வேண்டி நிற்போர் சுதர்சன மூர்த்தியையும், நரசிம்மரையும் ஒரு சேர வழிபடுகின்றனர்.

முதுமையில் வாடுபவர்களுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கிறதா?

முறையான மருத்துவம், இறைவனிடம் பிரார்த்தனை இவற்றைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாது.
------------------------------------------------------------------------------------------------------------
உயிர் கொடுத்த நன்னாள்!

சென்னை மயிலாப்பூரில் சிவநேசர் என்னும் சிவபக்தர் வசித்தார். இவர் தன் மகள் பூம்பாவையை, பார்வதியிடம் ஞானப்பால் அருந்திய திருஞானசம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க எண்ணியிருந்தார். ஒருநாள் தோட்டத்தில் மலர் பறிக்கச் சென்ற பூம்பாவை, பாம்பு தீண்டி உயிரிழந்தாள். அவளுக்கு இறுதி காரியங்களைச் செய்து முடித்த சிவநேசர் சாம்பலை ஒரு கலசத்தில் வைத்திருந்தார். இந்த சம்பவம் அறிந்த சம்பந்தர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வந்தார். அப்போது சிவனுக்கு திருமண உற்ஸவம் நடந்து கொண்டிருந்தது. சாம்பல் கலசத்தை கோயில்முன் கொண்டு வரச் செய்தார் சம்பந்தர். அப்போது, அவர் பாவைப்பதிகம் பாடினார். சிவனின் திருக்கல்யாணத்தை காணாமலே போகிறாயே என்ற பொருளில் பாடல் ஒன்று அமைந்தது. பலிவிழாப் பாடல் செய் பங்குனி யுத்திரநாள், ஒலிவிழா காணாதே போதியோ பூம்பாவாய், என்ற வரிகள் அதில் அமைந்தன. இதுபோல், கபாலீஸ்வரர் கோயிலில் நடக்கும் பலவிழாக்கள் இந்தப்பாடலில் குறிப்பிடப்பட்டன. இதையடுத்து பூம்பாவை உயிர் பெற்றாள்.
------------------------------------------------------------------------------------------------------------
பங்குனி உத்திரத்தன்று என்னென்ன நடந்தது?

பங்குனி உத்திரத்தன்று மகாலட்சுமி பாற்கடலில் இருந்து அவதரித்தாள். அதேநாளில், மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம்பிடித்தாள். சிவபார்வதி திருமணம் கயிலாயத்தில் இந்த நாளில் தான் நிகழ்ந்தது. ராமபிரான் சீதையையும், அவரது சகோதரர்களான லட்சுமணன், பரதன், சத்ருகனன் ஆகியோர் தங்கள் வாழ்க்கைத் துணைவியராக ஊர்மிளா, மாண்டவி, சுருதகீர்த்தி ஆகியோரை அடைந்தததும் இந்த நாளில் தான். முருகப்பெருமானின் துணைவியான தெய்வானை, இந்திரனுக்கு வளர்ப்பு மகளான நாள் இன்று தான். இதேநாளில் தான் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நிகழ்ந்தது. பிரம்மா தன் மனைவி சரஸ்வதியை நாக்கில் வைத்துக் கொள்ளும் படியான வரத்தை இந்த நாளில் பெற்றார். தன் மனைவி இந்திராணியைப் பிரிந்திருந்த இந்திரன், மீண்டும் அவளுடன் சேர்ந்தது இதே நாளில் தான். இதன் காரணமாக, இந்த நாளை தம்பதியர் தினம் என்று கூட சொல்லலாம். இந்த நாளில் தான் சிவனுக்கும் திருமாலின் அவதாரமான மோகினிக்கும் சாஸ்தா (ஐயப்பன்) அவதரித்தார்.
------------------------------------------------------------------------------------------------------------
பங்குனி உத்திரம் கொண்டாட காரணம்!

குழந்தைகளுக்குச் சோறூட்டக் கூட சந்திரனைத் தான் தாய்மார்கள் துணைக்கு அழைப்பர். அந்த சந்திரன், பவுர்ணமிநாளில் கூட சிறு களங்கத்துடன் தான் ஒளி தருவான். ஆனால், பங்குனி மாத பவுர்ணமியன்று, மீனராசியில் பூமியிருப்பதால் உத்திர நட்சத்திரத்துடன் சேர்ந்து ஏழாம் இடமான கன்னியில் நின்று முழுகலையையும் பெற்று பூமிக்கு ஒளி வழங்குவான். இத்தகைய களங்கம் இல்லாத ஒளி உடலுக்கும் மனதிற்கும் சுகத்தையும், நிம்மதியையும் தரும். பல நற்பலன்களைக் கொடுக்கும். இதன் காரணமாகத்தான், சாஸ்தா கோயில்களில் விடிய விடிய பக்தர்கள் வெட்டவெளியில் காத்திருந்து தரிசனம் செய்வார்கள்.  சந்திரன் இந்த நாளில் மட்டும் ஏன் களங்கமற்று ஒளிர்கிறான் என்ற ரகசியத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். தெய்வத் திருமணங்கள் இந்த நாளில் தான் நிகழ்ந்தது. அது மட்டுமின்றி சந்திரன் 27 மனைவியரை இந்த நாளில் அடைந்தான். அந்த மகிழ்ச்சியில் அவன் களங்கமற்று ஒளிர்வதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
------------------------------------------------------------------------------------------------------------
சாப்பிடும் போது எந்த திசை நோக்கி சாப்பிடுவது நன்மை தரும்?

வடக்கு தவிர்த்த மற்ற திசைகளில் சாப்பிடலாம் என்கிறார் வாரியார். அதற்குரிய பலன்களாக, கிழக்கு- ஆயுள், மேற்கு- செல்வம், தெற்கு- புகழ், வடக்கு- நோய் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------
சரணாகதி, சமர்ப்பணம்... இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

என் செயலால் ஆவது ஒன்றுமில்லை. எல்லாம் உன் செயலே என்று அடைக்கலமாவது சரணாகதி.  செய்யும் செயலின் பலன் அனைத்தையும் உன்னிடமே ஒப்படைத்து விட்டேன் என்று கடவுளிடம் ஒப்புவிப்பது சமர்ப்பணம். இந்த இரண்டும் கடவுளை முழுமையாகச் சார்ந்திருப்பதையே குறிக்கிறது. வார்த்தை வேறானாலும், நிலை என்னவோ ஒன்று தான்.
------------------------------------------------------------------------------------------------------------
கோயிலில் வெளியே தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்யலாமா?

கதவு சாத்தியிருக்கும் போது வழிபாடு செய்வது கூடாது. கோயில் திறந்திருந்தாலும் திரை போட்டிருக்கும் நேரத்திலும் வழிபடக் கூடாது.
------------------------------------------------------------------------------------------------------------
சுவாமி பவனி வரும் போது, மாடியில் இருந்து தரிசனம் செய்யலாமா?

பக்திக்கு அடிப்படை பணிவு. சுவாமியை விட உயரமானஇடத்தில் இருந்து தரிசனம் செய்யக் கூடாது.
------------------------------------------------------------------------------------------------------------
நமது தர்மம் நான்கு வித புருஷார்த்தத்தில்(சதுர் விதபுருஷாரத்தம்) ஊன்றியது.

தர்மம் அதாவது அறம், அர்த்தம் அதாவது பொருள், காமம் அதாவது இன்பம், மோக்ஷம் என நான்கு வித புருஷார்த்தத்தை அறிந்து கொள்ளுதல் ஆகும். அறத்து வழியில் பொருள் ஈட்டி, மற்றவரிடம் (பொருள் இல்லாதவர்கள்) பகிரந்து இன்பம் அடைவது, கடைசியில் ஆசையை துறப்பது மோக்‌ஷத்திற்கு வழி என்கிற உண்மையை உணரந்தவர்களே நாலும் தெரிந்தவர்கள்.

சிலர் நான்கு வேதங்களையும் கற்றவர்களை நான்கும் தெரிந்தவர்கள் என்று கூறுவர். ஆனால் எல்லோராலும் எல்லா வேதங்களையும் பயில முடியாது. அது ஒரு சில சாராருக்கே சாத்தியமாகும். பெரும்பாலோருக்கு சாத்தியமாகாது. ஒருவன் வேதம் பயிலாவிட்டாலும் மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றினாலும் நான்கும் தெரிந்தவன் என்று கொள்ளவேண்டும் என்பது என் அபிப்பிராயம்.
--------------------------------------------------------------------------------------------------------------
அஷ்ட வசுக்கள்

இந்திரனின் எட்டு ஏவலர்களே அஷ்ட வசுக்கள் எனப்படுகின்றனர். வசு என்ற சொல்லுக்கு வெளி என்று பொருள். இயற்கையையும் இயற்கைக் கோட்பாடுகளையும் உருவகிப்பவர்கள் இவர்கள். இவர்களில் தரா புவியையும்; அனலன் நெருப்பையும்; ஆப் நீரையும்; அனிலன் காற்றையும்; துருவன் துருவ நட்சத்திரத்தையும்; சோமன் சந்திரனையும்; பிரபாசன் வைகறையையும்; பிரத்யூஷன் ஒளியையும் குறிப்பவர்கள் ஆவர்.
--------------------------------------------------------------------------------------------------------------
குரு & சிஷ்ய உறவின் பெருமை

அன்னை-தந்தை, கணவன்-மனைவி, அண்ணன்-தங்கை, மாமன்-மாமி, போன்ற மனித உறவுகள் யாவும் ஒரு பிறவியோடு முடிந்து போகிறவை. மாறாக குரு, சிஷ்யனுக்கு இடையேயான உறவு பிறவிகள் தோறும் தொடரும் களங்கமில்லாத உறவாகும். குருவானவர் சிஷ்யனுக்கு அனைத்துமாகி, இறுதியில் பிரம்மமாகவும் ஆகிறார். எத்தனை பிறவிகள் எடுத்தாலும் குரு-சிஷ்ய உறவு மட்டும் மாறுவதேயில்லை.
--------------------------------------------------------------------------------------------------------------
மூன்றாம் பிறை

முக்கூர் லக்ஷ்மி நரஸிம்மாச்சாரியார்

மூன்றாம் பிறையைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என்றும் நான்காம் பிறையைப் பார்க்கக் கூடாது என்றும் சாஸ்திரம் சொல்கிறது. எதைப் பார்க்கக் கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறதோ அது கட்டாயம் கண்ணுக்குத் தெரியும்! அதைப் பார்த்து விட்டு ‘பஞ்சாங்கத்தை எடுத்துக் கொண்டு வா’ என்று கேட்க வேண்டிய அவசியமே இல்லை! கண்ணுக்குத் தெரிந்து விட்டால் அது நாலாம் பிறை தான்!

மூன்றாம் பிறை என்பது மிக மெல்லிய கோடு போட்டது மாதிரி இருக்கும். சிரமப்பட்டுத்தான் பார்க்க வேண்டும் அதை. சாஸ்திரம் சொல்கிறதையெல்லாம் சுலபமாகச் செய்து விட முடியுமா? அதனால் மூன்றாம் பிறைச் சந்திரன் அவ்வளவு சுலபமாகக் காணக் கிடைக்காது.

ஆகையினாலேதான் சீதாபிராட்டியை வால்மீகி வர்ணிக்கிற போது ரொம்ப மெலிந்திருக்கிறாள் அவள் ராமனைப் பிரிந்த பிரிவாற்றாமையினாலே துவண்டிருக்கிறாள் மூன்றாம் பிறைச் சந்திரனைப் போல் அவ்வளவு மெல்லிய திருமேனியை உடையவளாக இருக்கிறாள்’ என்கிறார்.

நான்காம் பிறை நன்கு தெரியும். ஆனால் அதைப் பார்த்தால் அபவாதம் வந்து சேரும். பண்ணாத குற்றம் வந்து சேரும்! பகவான் வாசுதேவன்  கிருஷ்ணன் நான்காம் பிறையைப் பார்த்து விட்டான். அதனால் ஸ்யமந்தக மணியை வாசுதேவன் திருடியதாக அபக்யாதி வந்து விட்டது. அதைப் போக்கிக் கொள்ள காட்டுக்குப் போய் ஜாம்பவனோடு போராடி அதைக் கொண்டு வந்தான். ஸ்யமந்தக மணியை பகவான் மீட்டு வந்தான்.
ஒருவேளை நாம் நான்காம் பிறையைப் பார்த்து விட்டோமேயானால் அப்போது அவனை தியானம் பண்ணிக் கொள்ளலாம். பண்ணினால் அந்த தோஷம் போய் விடும். அந்த சரித்திரத்தை விருத்தாந்தத்தை நினைத்தால் அந்த தோஷம் போய் விடும். இந்த மாதிரி மூன்றாம் பிறையைப் பார்த்தால் நல்லது என்று சின்ன வயதிலே ஒரு பெண் கேட்டாள். இப்போது அந்தப் பெண்ணுக்கு 90 வயது! அப்படியும் அந்த தர்மத்தை அவள் விடவில்லை.
இப்போது வயதான பிறகு ஆகாசத்தில் பார்த்தால் சந்திரன் தெரிய வில்லை. சின்ன வயதில் பளிச்சென்று தெரிந்த மூன்றாம் பிறைச் சந்திரன் வயதான பிறகு பார்த்தால் தெரியவில்லை.

பேர குழந்தை கோவிந்தன் என்பவனைக் கூப்பிட்டுக் பாட்டி கேட்கிறாள்.

“சந்திரன் தெரியலைடா! நீ கொஞ்சம் காட்டேன்” என்கிறாள்.

“அதோ தெரிகிறதே பாரேன்..”

“தெரியலையேடா”

பேரன் ரொம்ப கெட்டிக்காரன். பாட்டிக்குப் பேரனல்லவா!

“கோடி வீட்டு பாதாம் மரம் உனக்குத் தெரிகிறதா பாட்டி? என்று கேட்கிறான்.

‘நன்றாகத் தெரிகிறதே!” என்கிறாள் பாட்டி.

“அந்தக் கிளை நுனியிலே ஒட்டிக் கொண்டிருக்கிறதே சந்திரன்!”

இப்படிச் சொன்னதும் பாட்டி சந்திரனைப் பார்த்து விட்டாள். பரம சந்தோஷம் அவளுக்கு. பேரனைக் கட்டிக் கொண்டு முத்தம் கொடுத்தாள்.

குழந்தை என்ன சொல்கிறது..?

‘கிளை நுனியிலே சந்திரன்!’

கேட்டுக் கொண்டிருக்கிற நாமெல்லாம் கொஞ்சம் கவனிக்க வேண்டும். கோடி வீட்டு பாதாம் மரக்கிளையிலே ஒட்டிக் கொண்டிருக்கிற சந்திரனுக்கும் சந்திரலோகத்திலே பிரகாசிக்கிற சந்திரனுக்கும் என்ன சம்பந்தம்? ஒரு சம்பந்தமும் இல்லை! அப்படியிருந்தும் இந்தக் குழந்தை காட்டினான்; அதை அவளும் பார்த்தாள். இது எப்படி சம்பவித்தது என்றால் இங்கேயிருந்து பார்க்கிற பொழுது அந்தக் கிளை நுனியிலே ஒட்டிக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது. அதைப் பார்த்து அதோ இருக்கிறதே’ என்று காட்டப்படுகிறதேயொழிய இதை வைத்து அது இல்லை என்பதை நாம் நன்கு உணர வேண்டும். அதைப் போன்று பகவான் சர்வ வியாபியாக இருந்தாலும் எதனுடனும் சம்பந்தமில்லாமல் அவன் இருக்கிறான் என்பதை நாம் உணரவேண்டும். அவனுக்குக் கிலேசாதிகள், கஷ்டங்கள், ஆனந்தாதிகள் எதுவும் கிடையாது. தனித்து நிற்கக் கூடியவன்.
--------------------------------------------------------------------------------------------------------------
அனுமன் மகிமை!

அனுமன் சன்னதிக்கு மேல் கூரை கிடையாது. இங்கே என்றில்லை... பெரும்பாலான இடங்களில்  அனுமன் சிரத்துக்குமேல் கோபுரக்கூரைக்கு இடமில்லை. அதற்கு அவன் அனுமதி அளிக்கவில்லை என்று கூறுவார்கள். என்ன காரணம் என்று சிந்தித்துப்பார்த்தால், அங்கெல்லாம் அவன் விண்ணுக்கும் மண்ணுக்குமாய் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறான் என்பது ஐதீகம்.
--------------------------------------------------------------------------------------------------------------
யக்ஞரின் தோற்றம்!

யக்ஞரின் தோற்றம் குறித்து ஒன்றுக்கு மேற்பட்ட ஐதீகங்கள் நிலவுகின்றன. ருசி-ஆகுதி ஆகியோருக்குப் பிறந்தவரே யக்ஞேசுவரர் என்றும்; வராக அவதாரமெடுத்துவந்த நாராயணனே யக்ஞவராகமூர்த்தி என்றும் நம்பப்படுகிறது. வேத காலத்து வேள்வியே யக்ஞனாக உருவெடுத்து வந்ததாகவும் கூறுவர். இயற்கை நிகழ்ச்சிகள் யாவுமே யாகமாகவும், யக்ஞேசுவரர் அதன் அதிபதியாகவும் கூறப்படுகிறார். இரண்டு முகங்கள், ஏழு கைகள், மூன்று கால்கள், தலையில் நான்கு கொம்புகள் கொண்டவர். கைகளில் வேள்விக்கு வேண்டிய யக்ஞ பாத்திரங்கள், நெய் ஊற்றுவதற்கான சிறிய கரண்டி, சங்கு, சக்கரம் ஆகியவற்றுடன் காட்சி தருபவர்.
--------------------------------------------------------------------------------------------------------------
 கருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்

இந்து புராணங்களில் முக்கிய ஒன்றாக கருதப்படும் கருட புராணத்தில் மரணத்திற்கு பின்னான வாழ்வு, மறு ஜென்மம், சொர்க்கம் நரகம் போன்றவற்றை பற்றி பல்வேறு விளக்கங்கள் இருக்கிறது.

பதினெட்டு இந்து சமய புராணங்களில் ஒன்றான இதில் வாழ்வின் மேன்மைகளை பற்றி பத்தொன்பதாயிரம் ஸ்லோகங்களும் மனித வாழ்வில் செய்யும் தவறுகளுக்கு இருபத்திஎட்டு விதமான கொடூர தண்டணைகளை பற்றி விஷ்ணு கருடனுக்கு (பறவைகளின் அரசன்) விவரிப்பது போல எழுதப்பட்டிருக்கும்.

வாழும் போது மனிதர்கள் செய்யும் அவசெயல்களுக்காக மிருகத்தனமான தண்டணைகளை அவர்கள் அடைவார்கள். கருட புராணத்தை படிப்பவர்கள் தவறு செய்ய அஞ்சும் படியாக இருக்கும். விஷ்ணு இதனை ‘எமனின் சித்திரவதைகள்’ என்பார்.

இனி உங்கள் தண்டணைகளை அறிய துவங்குவோம்.

1. பன்றி முகம்: குற்றமற்றவரைத் தண்டிப்பது கொடுமையாகும். நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத் துணைபோவதும் அதர்மமாகும். இந்த நரகத்தில், பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு வகை மிருகம் காணப்படும். அதன் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் அவதிப்படுவார்கள்.

2. அந்தகூபம்: உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் புரிந்த பாவிகள் அடையும் நரகம் இது. கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும். விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.

3. அக்னிகுண்டம்: பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து வாழ்ந்த பாவிகள், பலாத்காரமாக தனது காரியங்களை நிறைவேற்றிக்கொள்பவர்கள் இந்த நரகத்தை அடைவார்கள். இங்கு பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.

4. வஜ்ரகண்டகம்: சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடையும் நரகம் வஜ்ர கண்டகம். நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

5. தாமிஸிர நரகம்:பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல் பிறரது குழந்தையை அபகரிப்பது மகாபாவமாகும். பிறரது பொருளை ஏமாற்றி அபகரிப்பது, நமக்கு தீராத துன்பத்தைத் தரும். இதற்குத் தண்டனையாக, நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும் கதைகளாலும் நையப் புடைப்பார்கள்.

6. அநித்தாமிஸ்ர  நரகம்: கணவனும் மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல் தவறாகும். கணவன் மனைவியை வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்செயலாகும். இத்தகையவர்கள் இந்த நரகத்தில் உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிக்க வேண்டியது வரும்.

7. ரௌரவ  நரகம்: பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுப்பது, பிரிப்பது, அழிப்பது, அவர்களின் பொருள்களைப் பறிப்பது என்பது குற்றமாகும். இதற்குத் தண்டனையாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித் துன்புறுத்துவார்கள்.

8. மகா ரெளரவ  நரகம்: மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவமாகும். இங்கு குரு என்ற சொல்லக்கூடிய, பார்ப்பதற்குக் கோரமான மிருகம் காணப்படும். இவை பாவிகளைச் சூழ்ந்து,முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.

9. கும்பிபாகம்: சுவையான உணவுக்காக, வாயில்லா உயிர்களை வதைத்தும் கொன்றும் பலவிதங்களில் கொடுமைப்படுத்தும் பாவிகள் அடையும் நரகம் இது. எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க்கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளைத் துன்புறுத்துவார்கள்.

10. காலகுத்திரம்: பெரியோர்களையும் பெற்றோர்களையும் அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும் பட்டினி போட்டும் வதைத்த பாவிகள் செல்லும் நரகம் இதுவாகும். இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கபடுவது உறுதி.

11. அசிபத்திரம்: தெய்வ நிந்தனை செய்தவர்களும் தர்மநெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும் அடையும் நரகம் இது. இங்கு பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு அவதிப்படுவார்கள். இனம் புரியாத ஒரு பயம் உண்டாகும்.
பெரியவாளின் நகைச்சுவை.

ஒரு நாள் மடத்தில் உள்ளவர்களிடம் "மஹா விஷ்ணுவும்
கொசுவும் ஒண்ணு உனக்குத் தெரியுமா?" என்றார் பெரியவா.
வழக்கம் போல் தானே அந்தப் புதிரையும் விடுவிக்கிறார்.

"விஷ்ணுவின் கையில் சக்கரம் சுற்றிக்கொண்டிருக்கு கொசுவும் சக்கரமாய் சுற்றிக்கொண்டு தான் இருக்கு. கெட்டவர்கள்
விஷ்ணுவைப் பார்க்க முடியாமல் ஒதுங்கிக் கொள்வார்கள்.
கண் வலிக்காரர்கள் கொசுவைப் பார்க்க முடியாமல் ஒதுங்கி
விடுவார்கள். ச்ருதியிடம் விளையாடுபவர் விஷ்ணு.
[ச்ருதி=வேதம்] ச்ருதி முனையில் ஙொய் என்று கத்திக்கொண்டு
விளையாடும் கொசு [ச்ருதி=காது]!"
இந்த சிலேடை சொன்னதுக்குக் காரணம் மடத்தோடு
அவர்கள் இருந்த முகாமில் கொசுத்தொல்லை தாங்க முடியாது.
"அனந்தசயனம் பண்ணும் பெருமாள் தான் கொசுன்னு
நினைச்சுண்டேன்னா பகவத் ஸ்மரணையோடு தூங்கலாம்!"
என்று எல்லோரையும் சமாதானம் செய்வாராம். இப்படி
எந்தக் கஷ்டத்தையும் நகைச்சுவை ததும்ப சரி செய்து விடும்
அழகையும் பெரியவாளிடம் அனுபவிக்க முடியும்.
ஒரு நீண்ட உபன்யாசம் நடந்து கொண்டிருந்தது. பெரியவாளும்
கேட்டார். ஒரு வழியாக உபன்யாசம் முடிந்தது. உடனே பெரியவா
"சாக்கு கிடைச்சுதுன்னு நன்னா ரொம்ப நேரம் சொன்னயா?"
என்றார்? "நீ ஒக்காந்துண்டிருந்தது ஒரு சாக்குமேலே...
அந்த சாக்கைச் சொன்னேன்!" என்று தமாஷ் பண்ணினாராம்.