சனி, 4 ஜூலை, 2015

கடவுளிடம் சொல்வோமே!
● நீருக்குள் வாளியை இழுக்கும்போது கனம் தெரிவதில்லை.அதுபோல துன்பம் ஏற்படும் போது ஞானம் என்னும் தண்ணீருக்குள் அமுக்கிவிடுங்கள்.கனம் குறைந்து மனம் லேசாகி விடும்.
○ நாம் இந்த மண்ணில் பிறவி எடுத்து விட்டோம்.யாராக இருந்தாலும் ஒருநாள் உயிர் போகத் தான் போகிறது.வாழும் காலத்திற்குள் நம் பாவத்தைப் போக்கிக் கொள்ள முயற்சிப்போம்.
● பாவத்தைப் போக்குவதற்கு எங்கும் அலையத் தேவையில்லை.இருந்த இடத்திலேயே கடவுளின் பெயரைச் சொன்னாலே போதும்.இரண்டெழுத்தான"சிவ'என்பதை எப்போதும் சொல்லுங்கள்.
○ அன்னதானத்தால்மட்டுமே ஒருவரை முழுமையாகத் திருப்திப்படுத்த முடியும்.மற்றவை எல்லாம் எவ்வளவு கிடைத்தாலும் மனம் திருப்தி அடைவதில்லை.
● துன்பத்தை பிறரிடம் சொல்லாமல் இருக்க முடியாது.கடவுளிடம் முறையிட்டால் நிம்மதி கிடைக்கும்.
○ காஞ்சி மஹா பெரியவா




மும்மூர்த்திகள் காட்சியளிக்கும் பாலகணபதி கோயில்!
தேனி:தலவிருட்சமாக அரச மரமும் கொடிமரமாக இன்றும் வளர்ந்து கொண்டிக்கும் இழுப்பை மரமும் விழுதுகளை பூமியில் புதைத்து குடையாக விரிந்து வளர்ந்துள்ள ஆழமர நிழலில் அமைந்துள்ளது தேனி கே.ஆர்.ஆர்.நகரில் உள்ள பால கணபதி சமேத காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் சுவாமி கோயில்.இக்கோயிலில் மூலவராக பாலகணபதியும் அருகே சிவன் விசாலாட்சியும் காட்சியளிக்கின்றனர்.கோயிலை சுற்றிய பிரகாரங்களில் தெற்கே தட்சிணாமூர்த்தி வடக்கே பிரம்மா மேற்கே விஷ்ணு சிலைகளாக காட்சியளிக்கின்றனர்.இங்கு பிரம்மா விஷ்ணு சிவன் என மூவரையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் வாய்ப்பாக பக்தர்கள் உணர்கின்றனர்.இங்கு துணை தெய்வங்களாக வலம்புரி விநாயகர் ராஜமுருகன் சண்டிகேஸ்வரர் நாகலிங்கேஸ்வரர் உள்ளனர்.இங்கு சிவன் ஐந்துநாகங்களுடன் சேர்ந்து இருப்பது சிறப்பு.திருமணம் ஆகாத பெண்கள் காசி விஸ்வநாதரையும் விசாலாட்சியையும் ஒன்பது வார வெள்ளிக்கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்தால் விவாகம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.இங்கு தினமும் இருவேளை பூஜைகளும் விநாயகர்சதுர்த்தி நாளில் சுவாமி ஊர்வலம் மகா சிவராத்திரி சிறப்புபூஜை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.மேலும் சங்கடஹர சதுர்த்தி பிரதோஷம் அமாவாசை பவுர்ணமி பைரவர் அஷ்டமி நாட்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள்!
மகான்களின் அவதார நோக்கமே பலருடைய பிணிகளைத் தீர்ப்பதற்காகத்தான். இதற்காகத் தங்களின் நலம் கருதாமல், செயல்படுபவர்கள் மகான்கள். மனிதன் என்பவன் மகான் ஆவதற்கு நல்ல குரு வேண்டும். அவரது உபதேசம் சிறக்க வேண்டும். மகான் ஆவதற்குரிய குணங்கள் இவனுக்கு இருக்கிறதா என்பதை நல்ல குருவானவர் ஆய்ந்து அறிவார். அப்படித்தான் பாடகச்சேரி சுவாமிகளுக்கு நல்ல குரு வாய்த்தார். ஆந்திராவில் இருந்தபோது எரிதாதா சுவாமிகள் இவரை ஆட்கொண்டார். யோக ரகசியங்களைச் சொல்லிக் கொடுத்து, சுவாமிகளுக்குப் புடம் போட்டார். கும்பகோணம் வந்த பிறகு வடலூர் வள்ளலார் சுவாமிகள் சூட்சுமமாக இவரை ஆட்கொண்டார், அருட்பா பாடிய ராமலிங்க ஸ்வாமி அவர்களே இவ்வுருமாகி திருப்பணி செய்யும் விருப்பமுற்றாரோ என்கிறது பாடகச்சேரியாரின் துதிப் பாடல்.பாடகச்சேரி சுவாமிகள் யோகங்களைக் கற்றவர். இறைப் பணிகளை மேற்கொண்டவர், பலருடைய பிணிகளைத் துரத்தியவர். இறந்ததாக் கருதப்பட்ட சிலரை உயிர்ப்பித்துப் பிறரை ஆச்சரியப்பட வைத்தவர், இவரது ஜீவன் இன்று சென்னை திருவொற்றியூரிலே ஐக்கியம் ஆகி இருந்தாலும், கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபத்தில் இவர் உருவாக்கிய பாதாள அறையிலும் ஜீவன் இருப்பதாக சுவாமிகளே அருளி இருக்கிறார்கள் என்கிறார்கள் அவரின் பக்தர்கள். ஜீவ சமாதி என்பது ஓர் அடையாளம்தான்! மானுட ஜீவனா அது ஓர் இடத்தில் மட்டும் அடங்கிக் கிடப்பதற்கு? எங்கும் நிறைந்திருக்கிறார் பாடகச்சேரி சுவாமிகள். இன்றைக்கும் தன் பக்தர்கள் எவருக்கு ஒரு துயர் வந்தாலும், விரைந்தோடி வந்து அதைக் களைகிறார்.
எங்கே இருக்கிறது பாடகச்சேரி?
கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம், மன்னார்குடி செல்லும் சாலையில் வலங்கைமானை அடுத்து. குரு ஸ்தலமான ஆலங்குடிக்கு இரண்டு கி.மீ. முன்னால் வரும் ஊர்-பாடகச்சேரி. மெயின்ரோட்டில் இறங்கிக்கொண்டு, வலப் புறம் செல்லும் சாலையில் காலார இரண்டு கி.மீ. தொலைவு நடந்து சென்றால் பாடகச்சேரி சுவாமிகளின் திருக்கோயில் வரும்.கும்பகோணத்தில் இருந்து சுமார் 16 கி.மீ தொலைவு. வலங்கைமானில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவு.ஆலங்குடியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு. இந்த ஆலயத்தில் வள்ளலார் சுவாமிகள் பாடகச்சேரி சுவாமிகளின் குருவான எரிதாதா சுவாமிகள் மற்றும் நேபாள் மன்னரும் பைரவ உபாசகருமான ராஜாராம் சுவாமிகள் சுவாமிகளின் சம காலத்தவரான சரவணாநந்த பவ, அப்புடு சுவாமிகள் ஆகியோருக்குத் திருவுருவங்கள் உண்டு. பாடகச்சேரி சுவாமிகள் தான் வாழ்ந்த காலத்தில் பயன்படுத்திய சில பொருட்கள் இங்கே இருக்கின்றன.
பாடகச்சேரி சுவாமிகள் எங்கே பிறந்தார்? கும்பகோணத்துக்கு எப்படி வந்தார்?
பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் வீரசைவ ஜங்கமர் பிரிவில் அவதரித்தவர், சுவாமிகளின் தந்தையார் பெயர் - கந்தசாமி ஐயா. தாயாரின் பெயர் - அர்த்தநாரி அம்மை. ஆந்திர மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள உறவுகொண்டா (உருவிகொண்டா) இவர்களது சொந்த ஊர் பிற்பாடு இவர்கள் அங்கிருந்த கோவை மாவட்டத்தில் உள்ள மஞ்சம்பாளையத்துக்குக் குடிபெயர்ந்து அங்கே வசிக்கத் தொடங்கினர். கிராமத்தில் வசித்து வருபவர்கள் வீட்டில் சுப காரியங்கள் தொடங்கினர். கிராமத்தில் வசித்து வருபவர்கள் வீட்டில் சுப காரியங்கள் நடத்தி வைத்தாகவும் திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்தி, பலருக்கும் கல்வி அறிவைப் புகுத்தியதாகவும் சுவாமிகளின் குடும்பம் பற்றிச் சொல்லப்படுகிறது. சிறு வயதிலேயே சுவாமிகள். தன் தாய்-தந்தையரை இழந்துவிட்டதால். அந்தப் பருவத்திலேயே துறவை மேற்கொண்டு விட்டார்.
பெல்லாரியில் செள்ளகுரிக்கி என்கிற இடத்தில் வசித்து வந்த எரிதாதா சுவாமிகளின் சீடராக சில காலம் இருந்து அவரது உத்தரவுப் படி தென்னாடு (கும்பகோணம்) வந்தவர் பாடகச்சேரி சுவாமிகள், பாடகச்சேரியில் பல ஆண்டுகள் இருந்தமையால் பாடகச்சேரி சுவாமிகள் ஆனார். நேபாள மன்னரும் பைரவ உபாசகருமான ராஜா ராம் சுவாமிகள். இவருக்கு பைரவ உபதேசம் செய்து வைத்தார். பாடகச்சேரியில் தான் இருந்த காலத்தில் பைரவ வழிபாட்டைத் தினமும் நடத்தி மகிழ்வாராம். சுவாமிகள். பைரவ வழிபாடு என்பது ஏதோ பூஜை, புனஸ்காரம் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது தினமும் ஏராளமான நாய்களைக் கூப்பிட்டு சாப்பாடு போடுவது. சுவாமிகளின் கருத்துப்படி இவை எல்லாம் நாய்கள் அல்ல.... நாய் உருவில் இருக்கும் தேவர்கள் என்பாராம். பைரவ வழிபாட்டுக்கு முதல் நாள் மாலை பாடகச்சேரிக்கு அருகில் இருக்கும் ஆலங்குடி, செம்மங்குடி, புளியங்குடி, அம்ருதவல்லி போன்ற கிராமங்களுக்குச் சென்று அங்கு இருக்கும் நாய்களுக்குத் தகவல் சொல்லிவிட்டு வருவாராம் சுவாமிகள்.மறுநாள் மதியம் சுமார் முந்நூறு பேருக்கு ஆகும்படி சமைக்கச் சொல்வார். வடை, பாயசம் என்று சமையல் திமிலோகப்படும். இவ்வளவு பேருக்கு சாப்பாடு சொல்கிறாரே? யார் வந்து சாப்பிடப் போகிறார்? இந்தப் பகுதியே பொட்டல்காடாயிற்றே! என்று சமையல் செய்யும் அன்பர்கள் ஆரம்பத்தில் குழம்பினார்களாம். பின்னர்தான், விவரம் அறிந்து வியந்தார்கள். சமையல் முடிந்ததும். அந்த இடத்தில் வாழை இலையை விரித்து. மனிதர்களுக்குப் பரிமாறுவது போல் அனைத்து அயிட்டங்களும் வைக்கப்படும். தன் கையில் வைத்திருக்கும் ஒரு கோலால் தரையைத் திடீரென்று சுவாமிகள் தட்டிய மாத்திரத்தில், எங்கிருந்துதான் வருமோ தெரியாது.... சுமார் நூற்றுக்கணக்கில் நாய்கள் வந்து இலையின் முன்பாக சமர்த்தாக அமர்ந்து கொள்ளும். இதை வேடிக்கை பார்க்க வந்திருக்கும் கிராமவாசிகளுக்கு இவை எல்லாம் நாயாகத் தெரியுமே தவிர, சுவாமிகளுக்கு மட்டும் அனைத்தும் மனிதர்களாகவே தெரியவார்களாம்.
சுவாமிகளின் சொன்ன பேச்சுக்கு அனைத்து நாய்களும் கட்டுப்படுமாம். சுத்தமாக அனைத்து பதார்த்தங்களையும் சாப்பிட்டு முடித்த பின், சுவாமிகளிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு. நாய்கள் புறப்பட்டுவிடுமாம். இப்போதும் பல நாய்கள், பாடகச்சேரியின் இந்தத் திருக்கோயில் பக்கம் உலவி வருகின்றன. இங்கு வரும் பக்தர்களும் இந்த நாய்களை மிகவும் மதித்து, அவற்றுக்கு ஏதேனும் உணவளித்து மகிழ்கிறார்கள். தங்களது பிரச்னைகளுக்குத் தீர்வு வேண்டியும் வியாதிகள் அகல வேண்டியும் சுவாமிகளிடம் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். ஆபத்சகாயம் என்று சொல்லி அவர்களது நெற்றியில் திருநீறு பூசுவார். அவ்வளவுதான்.... அடுத்த நொடியே அவர்களை பீடித்திருந்த பிணிகள் பஞ்சாகப் பறந்துவிடும்.தனது 12 வயதில் சுவாமிகள் பாடகச்சேரிக்கு வந்தார் என்று சொல்லப்படுகிறது. எரிதாதா சுவாமிகளின் அறிவுரைப்படி இங்கே வந்ததும் பட்டம் என்கிற கிராமத்தில் மாடுகளை மேய்க்கும் வேலையில் சேர்ந்தார். பாடகச்சேரியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் இருக்கும் கிராம-பட்டம் இந்தக் கிராமத்தில் இருக்கும்போதுதான் சூட்சும ரூபமாக வடலூர் வள்ளலார் சுவாமிகள் வந்து ஞான உபதேசம் செய்து வைத்தாக பாடகச்சேரி சுவாமிகளின் பக்தர்கள் சொல்கிறார்கள். நவகண்ட யோகம் சுவாமிகளுக்கு அப்போதுதான் சித்தி ஆகி இருந்தது. அதாவது உடலை ஒன்பது பாகங்களாக - துண்டு துண்டுகளாக்கி செய்யப்படுகிற ஒரு சித்து வேலை அது. மாடு மேய்க்கும் பணி முடிந்ததும். உடனே இருப்பிடத்துக்குத் திரும்பாமல் ஒரு நாள் நவகண்ட யோகத்தில் இருந்திருக்கிறார் சுவாமிகள். மாடுகளுக்குச் சொந்தக்காரரான பண்ணையார் இருள் நெருங்கிற வேளை வந்தும் தன்னிடம் வேலை பார்க்கும் சிறுவன் (சுவாமிகள்) இன்னும் மாடுகளுடன் திரும்பவில்லையே என்று கவலைப்பட்டு வேலைக்காரர்களை அனுப்பித் தேடச் சொல்லி இருக்கிறார். அதன்படி, மாடுகளை மேய்க்கும் இடத்துக்குப் போன வேலைக்கார ஆட்கள், சுவாமிகள் கண்டம் துண்டமாக இருக்கும் நிலையை பார்த்து அலறிப் போய். சிறுவனை யாரோ வெட்டிப் போட்டுவிட்டார்கள் என்று பதைபதைத்துப் பண்ணையாரிடம் விஷயம் சொல்வதற்காக அரக்கப் பரக்கத் திரும்பி இருக்கிறார்கள்.
வேலைக்கார ஆட்கள் வீடு திரும்பி பண்ணையாரிடம் நடந்ததைச் சொல்லிக் கொண்டிருக்கும்போது மாடுகளுடன் அங்கே வந்து விட்டார் சுவாமிகள்.அதன் பிறகுதான் தன்னிடம் வேலை பார்க்கும் சிறுவன் சாதராண ஆள் இல்லை...ஒரு மகான் என்பதை பண்ணையார் உணர்ந்தார்.பெரிய கும்பிடு போட்டு தம்பி.... நீ யாரென்று தெரிந்த பிறகும் உன்னை வேலையில் வைத்துக்கொண்டால் எனக்குப் பெரிய பாவம் வந்துவிடும் என்று மரியாதை செய்து அனுப்பி வைத்து விட்டார்.அதன் பிறகு, பாடகச்சேரியிலேயே வெட்டாறுக்கு எதிர்த் திசையில் ஓரிடத்தில் வேல் நட்டு முருகன் கோயில் கட்டி வழிபட ஆரம்பித்தார்.சுவாமிகள் அப்போது அந்த ஊரில் தவறான காரியங்களில் பலரும் ஈடுபட்டு வந்தனர். அவர்களை எல்லாம் அவ்வப்போது கூப்பிட்டுக் கண்டிக்க ஆரம்பித்தார் சுவாமிகள். சுவாமிகளின் இந்த நடவடிக்கை அவர்களுக்குப் பிடிக்கவில்லை.நம்மைக் கண்டிக்க இவன் யார்?என்று வெகுண்டெழுந்த எதிரிகள் அனைவரும் ஒன்று கூடிப் பேசினர்.அவர்களில் ஒருவன், அவனை நாம் வெட்டிச் சாய்த்துவிடலாம் என்று கூற..கைக்கூலிகள் அனைவரும் இதற்கு உடன்பட்டனர். அதன்படி ஒரு நாள் சுவாமிகள் இருக்கும் இடத்துக்கு ஆயுதங்களுடன் வந்து சேர்ந்தனர்.அந்த நேரம் பார்த்து சுவாமிகள் நவகண்ட யோகத்தில் இருந்தார்.வெட்டிப் போடுவதற்காக வந்த ஆசாமிகள் இதைக்கண்டு மிரண்டனர்.டேய்...யாரோ ஒருத்தன் நம்மளையும் முந்திட்டான் போலிருக்கு.பையன் காலி ஆயிட்டான்.நம்ம பாடு இனி கொண்டாட்டம்தான் என்று சொல்லி அந்த இடத்தை விட்டுக் கிளம்பினர். சற்று தூரம் அவர்கள் போன பின் அவர்களுக்கு எதிரே வந்த சுவாமிகள் என்னடா...என்னை எவனோ வெட்டிப் போட்டுட்டதா சந்தோஷப்படறீங்களா?என்று பெரும் சிரிப்புடன் கேட்டபோது ஆடிப் போனார்கள்.
இதன் பிறகு சுவாமிகளுக்கு பாடகச்சேரியில் இருக்கப் பிடிக்கவில்லை.கும்பகோணத்துக்கு கிளம்பி வந்துவிட்டார்.அங்கே காரைக்கால் சாலையில் இருக்கும் முத்துப்பிள்ளை மண்டபம் என்னும் இடத்தில் தங்கினார்.யோகம் தலம் போன்றவற்றை மேற்கொண்டார்.அப்போது பஞ்சம் தலைவிரித்தாடியது. எனவே கூழ் சாலை ஒன்றைத் துவக்கினார்.பசியுடன் வந்தவர்களின் துயரம் தீர்த்தார் ராமநாதபுரத்தில் விஜயபுரம் பகுதியில் வசித்து வந்தவர் ஆதப்ப செட்டியார்.குன்ம (குஷ்டம்) நோயால் இவர் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார்.எவ்வளவோ சிகிச்சைகள் செய்து பார்த்தார்.பலன் இல்லை.இறுதியில் தான் வணங்கும் முருகப் பெருமானிடம் மன்றாடி வேண்டிக்கொண்டார்.அன்றைய தினம்இரவு முருகுப் பெருமான் அவரது கனவில் தோன்றி பாடகச்சேரியில் ராமலிங்கம் என்கிற சித்தன் ஒருவன் இருக்கிறான்.அவன் என் பக்தன்.அவனிடம் போய் உன் குறையைச் சொல் என்று சொல்லி மறைந்தார். கனவு கண்டு குதூகலமான ஆதப்ப செட்டியார் பாடகச்சேரி இருக்கும் இடத்தை விசாரித்து இங்கே வந்து சேர்ந்தார்.சுவாமிகள் கும்பகோணத்தில் இருக்கும் விஷயத்தை அறிந்து அங்கு வந்து சந்தித்தார்.ஒரு குளிகையை செட்டியாரிடம் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்.முருகப் பெருமானையும் சுவாமிகளையும் பிரார்த்தித்துக்கொண்டே அதை உட்கொண்டார் செட்டியார்.என்ன ஆச்சிரியம்!அவரது உடலில் குன்ம நோய் இருந்ததற்கான அடையாளங்களே இல்லை.அத்தனையும் மறைந்து போய் ஜொலிக்கும் தேகத்துடன் காட்சி தந்தார் செட்டியார்.
இதில் மனம் மகிழ்ந்த செட்டியாரின் மகன்களான ராமன் மற்றும் லட்சுமணன் ஆகிய இருவரும் சுவாமிகளிடம் வந்து.உங்களுக்கு ஏதாவது செய்யவேண்டும்.என்ன தேவை.கேளுங்கள் என்றனர். பாடகச்சேரியில் தான் பூஜித்த இடத்தில் ஒரு மடம் கட்டித் தரும்படி கேட்டுக்கொண்டார்.அதன்படி பாடகச்சேரியின் சுவாமிகள் இருந்தற்கான நினைவுகளைச் சொல்லும் முதல் கட்டடம் அப்போதுதான் எழும்பியது. அதன் பிறகு சுவாமிகளின் உத்தரவின் பேரில் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் நடராஜர் சந்நிதியைக் கட்டிக் கொடுத்தனர்.சுவாமிகளின் தன் காலத்தில் பல திருத்தலங்களுக்குக் கும்பாபிஷேகம் செய்து வைத்துள்ளார்.இதில் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் தஞ்சை கீழ வாசல் வெள்ளை விநாயகர் சென்னை கிண்டி ஸ்ரீமுனீஸ்வரர் திருச்சி உச்சிப்பிள்ளையார் புன்னநல்லூர் மாரியம்மன்.கும்பகோணம் நாகேஸ்வரன் ஆகிய திருத்தலங்களைச் சொல்லலாம்.
இவற்றில் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலுக்கு சுவாமிகள் திருப்பணி செய்த விதம் மிகவும் சுவாரஸ்யமானது.கும்பகோணத்தில் இவர் தங்கி இருந்த நாட்களில் ஒரு நாள் தேவராப் பாடல் பெற்ற திருத்தலமான நாகேஸ்வரன் ஆலயத்துக்குச் சென்றார்.செடி கொடிகள் மண்டிப் போய் ஆலயப் பிரதேசமே ஒரு காடாகக் காட்சி தந்தது. மனம் வெதும்பினார் சுவாமிகள் .எப்படியாவது இந்த ஆலயத்துக்குத் திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சபதம் ஏற்றார்.திருப்பணிக்காக பக்தர்களிடம் இருந்தே பணம் வசூலிக்கத் தீர்மானித்தார்.தும்பைப்பூ மாதிரி இருக்கும் வெள்ளை வேஷ்டி ஒன்றை இடுப்பில் சுற்றிக்கொண்டு ஒரு மேல்துண்டை உடல் மேல் போர்த்திக்கொண்டும்
இடுப்பில் ஒரு பித்தளைச் சொம்பைக் கயிற்றால் கட்டிக்கொண்டும்.நமசிவாய நாமம் சொல்லி வீதி வீதியாக அலைவாராம்.சுவாமிகளைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்த ஆன்மிக அன்பர்களும் வியாபாரிகளும் சில்லறை நாணயங்களைச் சொம்பில் போடுவார்கள்.யாரிடமும் இவ்வளவு கொடுங்கள் என்று சுவாமிகளாக எதுவும் கேட்டதில்லை.
பாடகச்சேரி ஸ்ரீராமலிங்க சுவாமிகள்பக்கம்(235,236,237)வள்ளலாரின் ஆசி பெற்றவர் என்பதால் சுவாமிகளுக்குப் பல வித்தைகள் தெரியும்.இவர் நினைத்திருந்தால் ஓர் இரும்புக் கம்பியைத் தங்கமாக்கி அதை விற்று ஆலய கும்பாபிஷேகத்தைச் சிறப்பாக நடத்திருக்க முடியும்.ஆனால் இறைவனுக்குச் செய்யும் தொண்டு பக்தர்கள் கைங்கர்யமாக இருக்கவேண்டும் என்பதற்காகவும் இதில் பலரையும் ஈடுபடுத்த வேண்டும் என்பதற்காகவும் இப்படி அலைந்து திரிந்து பணம் சேர்த்துக் கும்பாபிஷேகம் செய்தார்.1928-ஆம் ஆண்டில் இந்த வைபவம் நடந்தது.இந்தக் கும்பாபிஷேகத்தின்போது ஒரு குழப்பமும் வந்தது.ஆலயப் பணிகளைச் செய்த விஸ்வகர்மா இனத்தவர் நாங்கள்தான் முதலில் கும்பாபிஷேகம் செய்வோம் என்றனர்.ஆலயத்தில் இறைப் பணிகளைச் செய்து வரும் அர்ச்சகர் பெருமக்கள் நாங்கள்தான் கும்பாபிஷேகம் செய்வோம் என்றனர்.இந்த நிலையில் கும்பகோணம் பகுதிக்கு காஞ்சி மகா ஸ்வாமிகள் வந்திருந்தார்.அவரை சந்தித்து, இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு சொல்லுமாறு கேட்டுக் கொண்டார் பாடகச்சேரி சுவாமிகள்.இரு தரப்பினரையும் கலந்து ஆலோசித்த காஞ்சி மகா ஸ்வாமிகள் விஸ்வகர்மா இனத்தவரே முதலில் கும்பாபிஷேகம் செய்யுட்டும்... அர்ச்சகர்கள் அடுத்து செய்யட்டும் என்று சொன்னார்.இதை அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள்.
இந்தக் குழப்பம் ஒரு பக்கம் இருக்க வழக்கு உயர்நீதிமன்றம் வரை சென்றதால் கும்பாபிஷேகத்துக்கு நாள் குறிக்க முடியாமல் நாகேஸ்வரன் கோயிலில் அமர்ந்து அவஸ்தைப்பட்டார் சுவாமிகள். சென்னையில் நீதிபதியிடம் இருந்து தீர்ப்பு வந்தால்தான் கும்பாபிஷேகம் நடத்த முடியும்.அப்போது ஒரு மதிய வேளையில் திடீரென சில பக்தர்களை அழைத்தார்.பெரியநாயகி அம்மன் சந்நிதிக்கு அருகில் இருக்கும் ஆடிப்பூர அம்மன் சந்நிதியில் தன்னை வைத்து பூட்டச் சொன்னாராம் சுவாமிகள்.காரணம் புரியாத பக்தர்களும் அதை மறுக்க முடியாமல் அப்படியே செய்தார்கள்.மாலை வேளையில் பூட்டைத் திறக்கச் சொன்னார் சுவாமிகள்.அப்போது சுவாமிகளின் கையில் அவருக்கு சாதகமாகக் கும்பாபிஷேக நாள் குறிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு நீதிபதியின் கையெழுத்தோடு இருந்தாம்.பக்தர்கள் அனைவரும் பிரமித்துப் போயினர்.அதாவது தான் அறைக்குள் பூட்டப்பட்டிருந்த வேளையில் அங்கிருந்து ஆகாய மார்க்கமாக சென்னைக்குச் சென்று நீதிபதியைச் சந்தித்து இந்த உத்தரவைப் பெற்று வந்தாராம் சுவாமிகள்.சுவாமிகள் கடைசி காலத்தில் தான் இருந்த கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபத்திலேயே சமாதி ஆகவேண்டும் என்று விரும்பினாராம்.ஆனால், அவரின் சென்னை பக்தர்கள் சிலர் வற்புறுத்தலாகக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 1949-ஆம் வருடம் அம்பாளுக்கு உரிய ஆடிப் பூர தினத்தில் திருவொற்றியூரில் ஜீவ சமாதி ஆனார்.
சமாதி ஆவதற்கு ஒரு வாரம் முன் சென்னையில் இருந்து கும்பகோணம் வந்தார் சுவாமிகள்.அப்போது சுவாமிகள் பக்தரும் கும்பகோணத்தின் முன்னாள் சேர்மனுமான ராமநாத ஐயரின் மனைவி இறந்துபோயிருந்தார்.அவரது வீடே சோகமாக இருந்தது.இந்த வேளையில் விஷயம் கேள்விபட்டு சுவாமிகளும் அங்கு வந்தார்.சுவாமிகளின் திருக்கரத்தைப் பிடித்துக்கொண்டு ராமநாத ஐயர் கதற ஏன் அழறே? அவ சாகலைடா...இன்னும் அவளுக்கு ஆயுள் இருக்கு என்று சுவாமிகள் சொல்ல.... ஐயர் உட்பட அனைவரும் பிரமை பிடித்தது போல் சுவாமிகளையே பார்த்தனர்.இது கயிலாய மலை விபூதிடா என்று சொல்லி பாடையில் பிணமாக இருக்கும் ஐயரின் மனைவி நெற்றியில் பூச...அடுத்த நொடியே அந்த மாது எழுந்து உட்கார்ந்தார்.சவ வீடு சந்தோஷ வீடானது.பின்னர் வந்த பல வருடங்களுக்குப் பிறகு ராமநாத ஐயர் இறந்து போக இந்த அம்மாள் 1982-ல்தான் இறந்துபோனாராம்.சுவாமிகளின் ஆசியால் அந்த அம்மாளுக்கு ஆயுள் விருத்தி ஏற்பட்டது.தனக்கு சமையல் செய்த வந்த அம்மாள் ஒருவர் இறந்துபோனபோதும் வடலூரில் ஒரு தைப்பூசத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி இறந்துபோன ஒரு பக்தரையும் தன் சித்து திறமையால் மீண்டும் அவர்களை உயிர்ப்பித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் பாடகச்சேரி சுவாமிகள்.வடலூர் வள்ளலாரின் சிஷ்ய பரம்பரை நான் என்று சொல்லிக்கொள்ளும் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் தன் பக்தர்களுக்கு அருளிய மொழி என்ன தெரியுமா?
நான் மறைந்தாலும் என்னை நம்பி இருப்பவர்களுக்கு நான் என்றும் துணையாக இருப்பேன்.என்னை நம்பாதவர்களுக்கும் நம்பிக்கை வரும் பொருட்டு உதவிகள் செய்து வருவேன்!இன்றுவரை தன் பக்தர்களுக்கு ஆசியும் அருளும் வழங்கித் கொண்டுதான் இருக்கிறார் பாடகச்சேரி சுவாமிகள்.அந்த மகானின் திருவடி தொழுவோம்! தரிசனம் பெறுவோம்!.
மனதால் உயர்வோம்
♡ வெளியுலக அறிவுக்கு துணை நிற்பது விஞ்ஞானம்.உள் உலகமாகிய உண்மைக்கு வழிகாட்டுவது மெய்ஞானம்.
♤ திருமந்திரத்தில் அன்பே சிவம் என்கிறார் திருமூலர்.அறிவான தெய்வமே என்று இறைவனைக் குறிப்பிடுகிறார் தாயுமானவர்.அன்பையும் அறிவையும் நாம் ஒவ்வொருவரும் பெற முயற்சிக்க வேண்டும்.
♡ இந்த உலகை விட்டுச் செல்லும் முன்"என்னிடம் பாவமே இல்லை'என்று சொல்லும் நிலையை அடைய வேண்டும்.
♤ மனிதன் மனதால் உயர்நிலையை அடைய வேண்டும்.அப்போது மனிதன் வாழ்க்கையை நடத்திச் செல்வது சிரமமாகவே இருக்காது.
♡ மனதை கீழ்நிலைக்குச் செலுத்தாமல் மேல்நிலைக்கு உயர்த்தினால் தெய்வநிலையை அடையலாம். கடவுளின் திருவடியை கெட்டியாக பிடித்துக் கொண்டால் தான் உயர்ந்த நிலையை அடைய முடியும்.
♤ காஞ்சி மஹா பெரியவா

ஒட்டன்சத்திரம் ராமசாமி சித்தர்

{இச் செய்தி கொஞ்சம் பெரியது தான் இருந்தாலும் முழுமையாக படிக்கவும் நண்பர்களே
}
ஆன்மிக உலகில் விடை தெரியாத புதிர்கள் ஏராளம் இருக்கத்தான் செய்கின்றன.செந்தனலைக் கக்கி வானத்தில் வலம் வரும் நம்மால் தினமும் வணங்கப்படும் நவகோள்களுள் ஒன்றான சூரியனின் வெப்பத்தையே தாங்க முடியவில்லை.கோடைக்காலத்தில் குமுறிப் போகிறோம்.ஆனால் மெய்ஞானமும் விஞ்ஞானமும் என்ன சொல்கிறது தெரியுமா?சூரியனையும் தாண்டிய பரவெளியில் சூரியனை விடவும் அதிக சக்தி வாய்ந்த நட்சத்திரங்கள் ஏராளமாக இருக்கின்றனவாம்.
ஆன்மிகத்தை அறிவதே ஆனந்தம்.ஆராய்ச்சியில் இறங்கினால் ஆண்டுகள் போதாது.பரவெளியில் புதைந்து கிடக்கும் பிரமாண்ட ரகசியங்களைப் போன்றது தான் சித்தர்கள் வாழ்க்கையும்.மந்த்ராலய மகான் ஸ்ரீராகவேந்திரரும் ஷீரடி அவதார புருஷர் ஸ்ரீசாய்பாபாவும் பல ஆண்டுகளுக்கு முன்னேயே சமாதி கொண்டிருந்தாலும் அவர்களை நம்பித் தொழும் பக்தர்களுக்கு இன்றைக்கும் தரிசனம் தந்து கொண்டிருக்கிறார்கள்.இது போன்ற சித்த புருஷர்களுள் ஒருவர்தான் ஒட்டன்சத்திரம் ராமசாமி சித்தர்.1980-களின் துவக்கத்தில் இவர் சமாதி கொண்டார்.ஒட்டன்சத்திரத்தில் நாகனம்பட்டி ரோட்டில் இவரது ஜீவ சமாதி இருக்கிறது.சுமார் 550 வருடங்கள் இவர் வாழ்ந்ததாகச் சொல்கிறார்கள்.இவர் சமாதி ஆகி சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி இருந்தாலும்.இன்றைக்கும் கேராளவில் ஒரு குக்கிராமத்தில் ராமசாமி சித்தரைத் தரிசித்த பழநிவாசிகள் இருக்கிறார்கள்.ஒட்டன்சத்திரத்துல எல்லா பயலுகளும் நல்லா இருக்கானுங்களா?என்கிற விசாரிப்பைக் கேட்ட பக்தர்களுக்கும் உண்டு.திண்டுக்கல் பழநி மெயின் ரோட்டில் வரும் நட்ட நடுவில் வரும் ஊர் ஒட்டன்சத்திரம்.அதாவது திண்டுக்கலில் இருந்தும் பழநியில் இருந்தும் ஒட்டன்சத்திரம் 30 கி.மீ. தொலைவில் மையமாக இருக்கிறது.தமிழ்நாட்டில் பல ஊர்களுக்குக் காய்கறிகளை சப்ளை செய்து கொண்டிருக்கும் ஊர் இது. வர்த்தகர்கள் அதிகம்.எல்லாம் இருந்தும் ஒரே ஒரு குறை...ஒட்டன்சத்திரத்தில் உள்ள ராமசாமி சித்தரின் சமாதி கவனிப்பார் இல்லாமல் முறையான வழிபாடு இல்லாமல் காணப்படுவது பல பக்தர்களின் மனதைப் பிசைகிறது.இவரைப் பற்றிக் கேள்விப்பட்ட பக்தர்கள் எப்போதாவது இங்கே வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.மற்றபடி இங்கே எந்த நடமாட்டமும் இருக்காது.எண்ணற்ற அற்புதங்களையும் ஸித்து விளையாட்டுகளையும் நிகழ்த்திய ஒரு மகான் ஒட்டன்சத்திரத்தில் குடி கொண்டிருக்கிறார் என்பது உள்ளூர்க்காரர்கள் பலருக்குக்கூடத் தெரியவில்லை.போகட்டும்...வேளை வரும்போது எல்லாமே வெளிப்படும் என்று நம்புவோம்.
ராமசாமி சித்தர் எங்கே பிறந்தார் பெற்றோர் யார்.எப்படி ஒட்டன்சத்திரத்தைத் தேர்ந்தெடுத்து இங்கே குடி கொண்டார் என்பது போன்ற தகவல்கள் தெரியவில்லை.தான் ஒட்டன் சத்திரத்தில் வாழ்ந்த காலத்தில் மெயின் ரோட்டில் உள்ள சகுந்தலா பாத்திரக் கடை வாசலில் வசித்து வந்திருக்கிறார்.இதற்கு அருகில் உள்ள ஒரு அசைவ உணவகத்தில் இருந்து அவ்வப்போது டீயும் பிரியாணி பொட்டலமும் வந்துவிடும்.சித்தர்கள் பிரியாணி சாப்பிடுவாரா என்று தோன்றலாம் அவர்கள் அசைவம் சாப்பிடுவது என்பது அதை ரசித்து உண்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.தன்னை நாடிவரும் பக்தர்களின் பிணியைத் தீர்ப்பதற்கு.வருபவர்களிடமே பிரியாணி பொட்டலம் வாங்கி வா என்று அனுப்பி அதை சாப்பிடுவது போல் செய்து பிணியை அறுத்திருக்கிறார்கள்.அசைவம் சாப்படுவது என்பது ஒரு பாவனைதான் பசி அல்ல.
ஒரு முறை கோழி பிரியாணியை சாப்பிட்டு முடித்த பின் எந்தக் கோழி வயிற்றுக்குள் சென்றதோ அதே கோழியை உயிருடன் தட்டில் வரவழைத்துத் துரத்தி அனுப்பினார் ராமசாமி சித்தர்.ஆக ராமசாமி சித்தர் பிரியாணி சாப்பிட்டார் என்று சொல்ல முடியுமா?இனி ராமசாமி சித்திரைப் பற்றி பார்ப்போம்.இவரது பெயர் ராமசாமி என்பது.ஒரு முறை ரிஷிகேஷத்தில் இருந்து அறியப்பட்டது.அதுவரை உள்ளூர்க்காரர்களால் பெரியவர்.சாமீ சித்தர் என்றெல்லாம் அழைக்கப்பட்டு வந்தார்.ராமசாமி என்று இவர் அழைக்கக் காரணமான அந்த நிகழ்வைப் பார்ப்போம்.ஒட்டன் சத்திரத்தில் வசித்து வரும் சுமார் அறுபது பேர் வட இந்தியயாத்திரை புறப்பட்டார்கள்.உள்ளூர் வர்த்தக பிரமுகரான சோமசுந்தரம் பிள்ளை என்பவர் தலைமையில் இந்தக் குழு புறப்பட்டது.காசி ரிஷிகேஷ் ஹரித்வார் பத்ரிநாத் என்று அவர்களது பயணப் பட்டியல் இருந்தது.விடிகாலை மூன்று மணிக்கு ஒட்டன்சத்திரத்தில் இருந்து ஒரு தனியார் பேருந்தில் பயணத்தைத் துவக்கினர்.புறப்படும்போது வழியில் இருந்த ராமசாமி சித்திரை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.போங்கடா...போயிட்டு என்கிட்டதானே எல்லாரும் வருவீஙக...என்று தனக்குள் சொல்லி மானசீகமாக வாழ்த்தி அனுப்பினார்.
ரிஷிகேஷை அடைந்த ஒட்டன்சத்திரத்து பிரமுகர்கள் சாலையில் நடந்து கொண்டிருக்கும்போது திடீரென வந்த ஒரு குரல் இவர்கள் அனைவரையும் ஈர்த்தது.ஒட்டன்சத்திரத்தில் இருந்து வந்தவன்லாம் இங்க வாங்கடா என்று அதிகாராமாகக் கூப்பிட்டது அந்தக் குரல்.ஒட்டன்சத்திரத்துக்காரர்கள் திடுக்கிட்டார்கள்.பாஷையே புரியாத இந்த ஊரில் யார் நம்மை அதிகாரமாகக் கூப்பிடுவது என்று அவர்கள் திரும்பிப் பார்த்தால் ஒற்றைக் காலில் நின்றபடி தவக் கோலத்தில் சாது ஒருவர் இருந்தார்.வாங்கடா ஒட்டன் சத்திரத்து ஆளுங்களா...உங்களை எல்லாம் நான்தான் கூப்பிட்டேன்...ராமசாமி சித்தர் எப்படி இருக்கான் ஊர்ல?என்றார்(அதுவரை சித்தர் பெரியவர் என்றே அழைக்கப்பட்ட வந்த ராமசாமி சித்தரின் பெயர் அதன் பிறகுதான் பலருக்கும் தெரிய வந்ததாம்)யார் சாமீ...நீங்க சொல்ற பேர்ல யாரும் எங்க ஊர்ல இல்லியே?என்றனர் ஊர்க்காரர்கள். அடேய்...பாத்திரக் கடை வாசல்ல எந்நேரமும் உக்காந்திருப்பானே...அவன்தான் ராமசாமி சித்தர்.அவனுக்கு வயசு என்ன தெரியுமா?ஐந்நூத்தி ஐம்பது.சரி ஊருக்குப் போனதும்.அவன்கிட்ட போய் ரிஷிகேஷ்ல நடராஜ சாமீ ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லுங்க என்றார்.தொடர்ந்து தவத்தில் இறங்கி விட்டார்.
ராமசாமி சித்தரின் வயதைக் கேட்டு ஒட்டன் சத்திரத்துக்காரர்கள் ஆடிப் போனார்கள்.தென்னிந்தியாவில் இருந்து வடக்கே வந்த நம்மை அடையாளம் கண்டுகொண்டு.நம்மூர் சித்தரை இவர் விசாரிக்கிறாரே என்று வியந்து பேசிக் கொண்டார்கள்.அங்கிருந்து அகன்றார்கள்.ஒரு வழியாக ஒட்டன் சத்திரத்துக்காரர்கள் தங்களது பயணத்தை முடித்துக் கொண்டு இருபது நாட்களுக்குப் பிறகு ஊர் திரும்பினார்கள்.தாங்கள் புறப்பட்ட இடத்தில் யாத்திரையை முடித்தவர்கள்.மெள்ளக் கலையை முற்படும்போது ரிஷிகேஷ் போனவன்லாம் இங்க வாங்கடா என்று பாத்திரக்கடை வாசலில் இருந்த ராமசாமி சித்தார் ஓங்கிக் குரல் கொடுத்தார்.அப்போதுதான் சோமசுந்தரம் பிள்ளைக்கு நினைவு வந்தது ரிஷிகேஷில் நடராஜ சாமீ சொன்ன விஷயம்.அனைவரும் சித்தருக்கு முன்னால் பவ்யமாக நின்றனர். ஒட்டன்சத்திரத்தில் சாதாரணமாக அதுவரை அவர்களுக்குத் தெரிந்த ராமசாமி சித்தரின் மகிமை இப்போதுதான் அவர்களுக்குப் புரிந்தது.ஏண்டா...அங்கே ஒத்தக்கால்ல தவம் செய்யுற நடராஜ சாமீ என்னை விசாரிச்சான்ல...ஏண்டா என்கிட்ட சொல்லாம போறீங்க?என்று ராமசாமி சித்தர் கோபமாகக் கேட்கவும் சற்று முன்னால் வந்தார் சோமசுந்தரம் பிள்ளை.சாமி எங்களை எல்லாம் மன்னிக்கணும்.அவசரத்தல மறந்துட்டோம் என்று சொல்ல...சிரித்தார் சித்தர்.போங்கடா.எல்லாரும் நல்லா இருப்பீங்க என்று ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார்.பழநியைச் சேர்ந்தவர் ராஜம்மாள் சங்கரன்.மிகவும் ஆசாரமான அந்தணர் குடும்பம்.பூஜை புனஸ்கரம் என்று எந்நேரமும் இறைவழிபாட்டிலும்.மகான்கள் தரிசனத்திலும் திளைப்பவர்.மகான்களின் அதிஷ்டானங்களைத் தேடித் தேடித் தரிசிப்பார்.பழநியைச் சுற்றி உள்ள பகுதிகளில் எங்காவது மகான்கள் வாழ்ந்து வருவதாகத் தெரிந்தால் அடுத்த கணமே அங்கு பயணப்பட்டு விடுவார்.இப்படித்தான் ஒரு முறை ஒட்டன் சத்திரம் ராமசாமி சித்தர் பற்றிக் கேள்விப்பட்டார்.
பழநியில் இருந்து புறப்பட்டு சித்தர் எப்போதும் காணப்படும் பாத்திரக் கடைக்கு வந்தார்.அங்கே படிக்கட்டில் சித்தர் அமர்ந்திருந்தார்.ராஜம்மாள் அங்கு வந்ததுமே வாம்மா...உன்னைத்தான் தேடுகிறேன் வா என்றார் சித்தர்.மனம் நெகிழ்ந்தபடியே அவரைப் பணிந்து வணங்கினார் ராஜம்மாள்.பிறகு பக்கத்துல ஒட்டல் இருக்கு.அங்கே போய் ஒரு பிரியாணி பொட்டலம் வாங்கிட்டு வா என்றார்.அந்தணர் வீட்டுப் பெண்மணி திகைத்தார்.பிரியாணி என்கிற வார்த்தையைக் கேட்ட மாத்திரத்திலேயே அவருக்கு வாந்தி வரும் போல் இருந்தது.தயங்கியவாறே நின்றிருந்தார்.என்னம்மா...பிரியாணி வாங்கிட்டு வானு சொன்னேன்...அப்படியே நிக்கறே...பொறப்படு என்றார் சித்தர்.பிறகு நான் வேணா காசு தர்றேன் யாரையாவது அனுச்சு வாங்கிட்டு வரச் சொல்லலாமா?என்று குரல் கம்மக் கேட்டார் ராஜம்மாள்.அதெல்லாம் வேலைக்கு ஆகாதும்மா.நீயே கடைக்குப் போய் வாங்கிட்டு வா.சீக்கிரம் என்று அவசரப்படுத்தினார் சித்தர்.ஒட்டல் வாசலில் தயக்கத்துடன் நின்றார் ராஜம்மாள்.இவரைப் பார்த்தவுடனேயே புரிந்து கொண்ட ஒட்டல் உரிமையாளர்.என்னமா...ராமசாமி சித்தர் பிரியாணிப் பொட்டலம் வாங்கிட்டு வரச் சொன்னாரா?யாகக்காரப் பொம்பளைம்மா நீ...உனக்கு இன்னிக்கு என்னென்ன அதிசயங்கள் காத்திருக்கோ என்று சொல்லி உள்ளே பிரியாணி பொட்டலத்தை பார்சல் செய்யச் சொன்னார்.காசைக் கொடுத்து விட்டு அந்தப் பொட்டலத்தை வாங்கிய ராஜம்மாள் ரொம்பவும் கூசிப் போனார்.ஐயர் வீட்டுப் பெண்மணியை அசைவப் பொட்டலத்தை சுமக்க வைத்து விட்டாரே என்று சித்திரைப் பற்றி சிந்தித்துக் கொண்டே அவர் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்தார்.பொட்டலத்தை அவர் அருகே வைத்து விட்டு அதன் நெடி உடலுக்கு ஒவ்வாததால் சற்றே நகர்ந்து நின்றார்.
பொட்டலத்தை இப்படி வெச்சிட்டா எப்படி?நீயே பிரி என்று சித்தர் சொன்னதும் அடுத்த இடி இறங்கியது ஐயர் வீட்டு அம்மணிக்கு.சித்தரின் குணத்தைப் பற்றி அறிந்தால்.இவரால் மறுக்கவும் முடியவில்லை. அழுகை உள்ளுக்குள் பொங்க...கண்களை மூடியபடி பழநி ஆண்டவரை மனதுக்குள் பிரார்த்தித்தபடி. பொட்டலம் சுற்றப்பட்டிருந்த நூலை மெள்ளப் பிரித்தார்.பிரியாணியின் சுவாசம் உள்ளுக்குள் போய் குமைச்சல் ஏற்படும் என்பதால்.அந்த வேளையில் சுவாசிக்கவும் மறந்தார்.பொட்டலம் முற்றிலுமாகப் பிரிக்கப்பட்டு விட்டது.இந்தாங்க சாமீ...என்று கண்களை மூடிய நிலையிலேயே குத்துமதிப்பாக சித்தர் இருக்கும் திசை நோக்கிப் பொட்டலத்தை நீட்டினார்.நீயே கண்ணைத் திறந்து பாரம்மா உன் கையில் இருக்கிற பொட்டலம் எந்த அளவுக்கு மணம் வீசுகிறதுன்னு.அதன் பிறகு என்னிடம் கொடு என்றார் சித்தர்.மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு கண்களைத் திறந்து தன் கையில் இருந்த பொட்டலத்தைப் பார்த்த ராஜம்மாளுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சிரியம்.காரணம் பொட்டலத்தில் இப்போது இருப்பது பிரியாணி அல்ல...நெய் வடியும் சர்க்கரைப் பொங்கல்.சித்தரின் அருள் திறனை எண்ணி விம்மினார் ராஜம்மாள். முந்திரியும் திராட்சைகளும் ஏலமும் கலந்து சர்க்கரைப் பொங்கலின் மணம் ராஜம்மாளின் மூக்கைத் துளைத்தது.தன் கையில் இருந்த சர்க்கரைப் பொங்கலை கோயில் பிரசாதம் போல் மணக்கும் பொங்கலை நம்பவே முடியாமல் மீண்டும் மீண்டும் பார்த்தார் ராஜம்மாள்.சாப்பிடும்மா...எடுத்துச் சாப்பிடு.ஐயர் வீட்டுப் பொம்பளைக்கு அசைவம் தருவேனாம்மா என்ற சித்தர் தானும் ராஜம்மாளின் கையால் ஒரு கவளம் வாங்கிச் சாப்பிட்டார்.
திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சிக்கு அந்த லாரி ஒட்டன் சத்திரம் வழியாகப் போய்க் கொண்டிருந்தது.அந்த லாரி முழுக்கக் கருவாடு லோடு செய்யப்பட்டிருந்தது.அப்போது ராமசாமி சித்தர் பாத்திரைக் கடை வாசலில் படிக்கட்டில் அமர்ந்திருந்தார்.இவரது இடத்தைக் கடக்கும்போது அந்த லாரியில் இருந்து ஒரிரண்டு துண்டு கருவாடு சாலையில் விழுந்தது.ஜீவகாருண்யத்தை(அசைவம் சாப்பிடாதவர்கள்)எப்போதும் கடைபி டித்து வரும் உள்ளூர் அன்பர் ஒருவர் யதேச்சையாக அந்தப் பகுதியைக் கடந்தார்.சாலையில் சிதறிக் கிடக்கும் ஓரிரு கருவாட்டுத் தூண்டுகளைப் பார்த்து முகம் சுளித்தார்.ஓரமாக நடந்தார்.படிக்கட்டில் அமர்ந்திருந்த ராமசாமி சித்தர் இதைப் பார்த்தார்.டேய் இங்கே வாடா என்று அவரை அழைத்தார்.யாரோ ஒரு சாது போலும் என்கிற நினைப்பில் சித்திரை நெருங்கிய அன்பர் என்ன சாமீ?என்று கேட்டார்.கிழே விழுந்து கிடக்கிற கருவாட்டுத் துண்டை எடுத்துச் சாப்பிடுடா என்று அதிகாரமாகச் சொன்னார் அவ்வளவுதான்!முகம் கொதித்துப் போனார் அன்பர்.இத்தனை ஆண்டுகளாக ஜீவகாருண்யத்தைக் கடைப்பிடித்து என்னைப் பார்த்தா கருவாடு சாப்பிட்டுச் சொல்கிறீர்?நான் செத்தாலும் சாவேனே தவிர கருவாடு சாப்பிடவே மாட்டேன் என்று சொல்லிப்போயே விட்டார்.
சித்தர் மெதுவாகச் சொன்னார்:ஆமாடா...இன்னிக்கு சாயங்காலம் நீ சாகத்தான் போறே...உன்னைக் காப்பாத்தலாம்னு நினைச்சேன்...விதிதான்டா இன்னிக்கு ஜெயிச்சிருக்கு போடா...போய்ச் சேரு.ஆம்! அன்று மாலை சுமார் நாலேமுக்கால் மணிக்கு அந்த அன்பருக்குத் திடீர் மாரடைப்பு வந்து இறந்து போனார்.ஒருவேளை சித்தர் சொல்லி இருந்தபடி கருவாட்டுத் துண்டுகளை அவர் எடுத்துச் சாப்பிட்டிருந்தால் பிரியாணியை சர்க்கரைப் பொங்கலாக மாற்றியது மாதிரி இதையும் ஒரு சைவ பொருளாக சித்தர் மாற்றி இருக்கக் கூடும்.இதை உண்ட பலனால் அவரது ஆயுள் பலம் கூடி இருக்கலாம்.விதி ஜெயித்து விட்டது போலும்!பழநி கல்லுரியில் பேராசிரியராகப் பணி புரிந்த கண்ணன் என்பவர் சித்தர்கள் தரிசனத்தில் நெகிழ்பவர் பழநியில் இருந்து பல ஸித்துக்களைப் புரிந்த தங்கவேல் சுவாமிகளை அடிக்கடி சந்தித்து ஆன்ம ஞானம் பெற்றவர்.ராமசாமி சித்தர் சமாதி ஆனபோது அப்போது அவருடன் இருந்தவர் இவர்.
{இனி கண்ணன் சொல்லும் அனுபவத்தைப் பார்ப்போம்.}
ராமசாமி சித்தர் மாபெரும் மகான் என்பதை ஒட்டன்சத்திரத்துக்காரர்கள் பல காலம் வரை உணரவில்லை.அவ்வப் போது செட்டிநாட்டில் இருந்து ப்ளைமவுத் காரில் இவருக்கு சாப்பாடு கொண்டுவருவார்கள் சிலர்.யார் என்பது தெரியாது.பக்தர்கள் சிலர் கொடுக்கும் உணவுப் பொருட்களை விரும்பி ஏற்றுக் கொள்வார் சித்தர்.வேண்டாம் என்றால் தட்டி விட்டு விடுவார்.சில சமயங்களில் சிலரை கல் வீசி எறிந்து துரத்துவார்.1977-ஆம் வருடம் என்று நினைக்கிறேன்.நான் என் மனைவி இரு குழந்தைகள் ஆகியோர் முதல் முறையாக சித்தரைப் பார்க்கப் பழநியில் இருந்து ஒட்டன்சத்திரம் சென்றோம்.சித்தர் எங்கள் குடும்பத்தை ஊடுருவிப் பார்த்தார்.பிறகு நாலு டீ வாங்கி வருமாறு எனக்கு உத்தரவிட்டார்.உடனே பக்கத்தில் உள்ள டீக்கடைக்கு ஓடிச் சென்று வாங்கி வந்து சித்தரிடம் கொடுத்தேன்.எங்கள் நான்கு பேரையும் குடிக்கச் சொன்னார்.பிறகு ஒரு பீடிக்கட்டு மூன்று சிகரெட் ஒரு தீப்பெட்டி இவற்றைக் கொடுத்து பத்திரமா உன் வீட்டுல வெச்சுக்கோனு சொன்னார்.ரொம்ப காலம் பாதுகாத்து வந்தேன்.ஒரு முறை வீடு மாறும்போது அது எங்கோ தவறுதலாக மிஸ் ஆகி விட்டது என்று வருத்தத்துடன் சொன்ன கண்ணன் சித்தரின் சமாதி பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
அது ஒரு சனிக்கிழமை...சித்தரை தரிசிப்பதற்காகப் போனேன்.சோமசுந்தரம் பிள்ளை வீட்டில் இருந்து ரசம் வாங்கி வரச் சொன்னார்.வாங்கி வந்து கொடுத்தேன்.குடித்தார்.பிறகு அவரைத் தரிசித்துக் கொண்டிருக்கும்போது.பாதையை மறைக்காதடா...குழிக்குள் இறங்குடா என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.இதன் காரணம் என்னவென்று எனக்குப் புரியவில்லை.பழநிக்குச் சென்று தங்கவேல் சுவாமிகளிடம் இதைச் சொன்னேன்.வேறொன்னுமில்லை.அவர் கூடிய சீக்கிரமே சமாதி ஆகப் போகிறார்.அதைத்தான் இப்படிக் குறிப்பால் சொல்லி இருக்கிறார் என்றார் அவர்.அதன்படி அடுத்த சனிக்கிழமையே ராமசாமி சித்தர் சமாதி ஆகிவிட்டார்.தகவல் கேள்விப்பட்டதும்.சித்தரின் பக்தர்கள் ஒட்டன்சத்திரத்தில் குவிந்தனர்.சிங்கம்புணரி புலவர் பாண்டியன் என்கிற அன்பர் மலர் அலங்காரத்துடன் கூடிய பெரிய தேர் ஒன்றைத் தயாரித்தார்.சித்தர் அடக்கம் ஆவதற்கு காங்கிரஸ் பிரமுகரான பழநியப்பா நாகனம்பட்டி ரோட்டில் இடம் தந்தார்(இங்குதான் ராமசாமி சித்தரின் ஜீவ சமாதி இ ருக்கிறது)பெரிய குழி வெட்டி அதற்குள் நான் இறங்கினேன்.அப்போதுதான் குழிக்குள் இறங்குடா என்று சித்தர் போன சனிக்கிழமைஅன்று சொன்னதன் பொருள் எனக்குப் புரிந்தது.விபூதி உப்பு வில்வம் புஷ்பங்கள் போன்றவற்றை நிரப்பி சித்திரை அடக்கம் செய்தோம்.நான் கொண்டு சென்ற ஒரு சிவப்புத் துண்டை அவரது மேலுடம்பில் போர்த்தினேன்.மாபெரும் சித்த புருஷரை அடக்கம் செய்த பேறு எனக்கு அன்று கிடைத்தது அவரது அருள்தான்.
எல்லா காரியங்களும் முடிந்து இரவு சுமார் 11 மணி வாக்கில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழநிக்குப் பேருந்தில் புறப்பட்டேன்.ஒட்டன்சத்திரத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் விருபாட்சிமேடு என்கிற ஓர் இடம் வரும்.அந்த இடம் சற்று கரடுமுரடாக இருப்பதால் அதன் வழியாகப் பயணிக்கும் எந்த ஒரு பேருந்தும் நின்று நிதானித்துதான் செல்லும்.அதுபோல் நான் சென்ற பேருந்தும் விருபாட்சிமேட்டைக் கடக்கும்போது நிதானமாகச் சென்று கொண்டிருந்தது.அப்போது யதேச்சையாக சாலையின் இடப் பக்கம் கவனித்த நான் துணுக்குற்றுப் போனேன்.அங்கே ராமசாமி சித்தர் நடந்து போய்க் கொண்டிருந்தார்.அவரது மேலுடம்பில் நான் எப்படிப் போர்த்தினேனோ அதே நிலையில் அந்த சிவப்புத் துண்டு இருந்தது. சாமீ....சாமீ என்று குரல் எடுத்துக் கதறினேன்.பேருந்தில் இருந்தவர்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.இதற்குள் பருந்தும் வேகம் எடுத்து விட்டது.மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.சற்று முன் குழிக்குள் அடக்கமான சித்தர்.எப்படி விருபாட்சிமேடு அரு கே நடந்து போனார் என்கிற கேள்வி என் மண்டைக்குள் குடைந்து கொண்டே இருந்தது எனவே பழநி பேருந்து நிலையத்தில் இறங்கிய கையோடு முதல் காரியமாக நள்ளிரவு வேளையில் தங்கவேல் சுவாமிகளின் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினேன்.சுவாமிகளே வந்து கதவைத் திறந்து என்னப்பா... இந்த வேளைல?என்றார். எல்லா விஷயத்தையும் அவரிடம் சொன்னேன்.நாளைக்கு விடிகாலைல அவரை அடக்கம் பண்ண இடத்தைப் பார்த்துட்டு வந்து என்னிடம் சொல் அப்படின்னு படுக்கப் போய்விட்டார்.
இரவு முழுக்கத் தூக்கமே வரவில்லை.விடிந்தும் விடியாத பொழுதில் வீட்டை விட்டுக் கிளம்பினேன். தங்கவேல் சுவாமிகள் சொன்னபடி அந்த சமாதியை நோட்டமிட்டேன்.அவரது சமாதியில் தலைப் பகுதிக்கு நேராக தலையில் அரை அடி நீளத்துக்கு ஒரு வெடிப்பு காணப்பட்டது.உடனே பழநிக்குச் சென்று தங்கவேல் சுவாமிகளிடம் சொன்னேன்.ராமசாமி சித்தர் தன்னோட அருள் ஆற்றலை மட்டும் அங்கே வைத்து விட்டு சரீரத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டாரப்பா.அவர் இப்போது வேறு பிரதேசத்தில் உலவிக் கொண்டிருப்பார்.அவர் போன ஊர் புண்ணியம் பெறும் என்றார்.அதாவது, சித்தர்களுக்கு சமாதி என்பது ஒரு ஒரு சம்பிரதாயத்துக்குத் தான்.அவர்கள் என்றென்றும் நம்முடனே இருந்து ஆசிர்வதித்துக் கொண்டிருப்பார்கள்.ராமசாமி சித்தரும் அப்படித்தான்.சுமார் இரண்டு மாதங்கள் கழித்து.கேரளாவில் ஏதோ ஒரு குக்கிராமத்தில் ராமசாமி சித்தரைப் பார்த்ததாக ஒரு நண்பர் சொன்னார் என்று முடித்தார்.கண்ணன்.ராமசாமி சித்தர் பெரும்பாலும் ஒரு குல்லா அணிந்திருப்பார்.முஸ்லிம் பக்தர் ஒருவர்.ஆசையுடன் கொடுத்ததாம் இது.சித்தரை சமாதி வைத்த இடத்தின் அருகே பிரமாண்டமான ஆலமரம் இருக்கிறது.இதன் அருகே ஒரு லிங்கம்.சமாதி ஆன இடத்தில் சில செங்கற்களின் மேலே வேங்கடாசலபதி ஸ்ரீசரஸ்வதிதேவி முருகப் பெருமான் ஆகியோரது திரு வுருவப் படங்கள் இருக்கின்றன.உள்ளே ஒரு நந்தி விக்கிரமும் உண்டு.மற்றபடி சமாதி ஆன இடத்தில் சிறப்பாக எதுவும் இல்லை.பள்ளிக்குச் செல்லும் சில மாணவர்கள் அவ்வப்போது இங்கே வந்து வணங்கிச் செல்கிறார்கள்.
அங்கோர் வாட்
இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில்.
இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!!
இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!!
இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது!.
பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு "António da Madalena" என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் "is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.
பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged என்று குறிப்பிட்டுள்ளார்!! பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!
இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக"ஆட்சிப் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது!.
இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த 2012வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே!!

கஷ்டத்தையும் ரசிக்கப் பழகு
○ உனக்கு ஒரு காயம் பட்டாலோ நோய் வந்தாலோ அதை கடவுளே அனுப்பி வைத்திருப்பதாக நினைத்து ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைப் பெற வேண்டும்.அவற்றால் ஏற்படும் வலியை சமாளிப்பதை ஒரு தவம் போல கருத வேண்டும்.பழகப்பழக இந்த மனோபாவம் உறுதியாகி விடும்.நோய்நொடியை தாங்குகிற சக்தி உண்டாகும்.
□ நமக்கு எந்த கஷ்டம் வந்தாலும் வறுமையினால் சிரமப்பட்டாலும் அவை எல்லாம் நமக்கு வைராக்கியத்தை கொடுப்பதற்காக சுவாமியினால் அனுப்பப்பட்டவை என நினைத்துக்கொள்.
○ சாந்தமாக வாழ சாத்வீக உணவை உண்ண வேண்டும்.
□ அரை வயிற்றுக்குத்தான் சாப்பிட வேண்டும்.கால் வயிற்றுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். கால் வயிறை வாயுவுக்கு விட்டுவிட வேண்டும்.பசி தீர்க்கத்தான் ஆகாரமே தவிர ருசிக்காக அல்ல.
○ காஞ்சி மஹா பெரியவா

கண்ணாடி மனசு வேணும்!
 எதற்கெடுத்தாலும் எரிந்து விழுந்துகொண்டோ அழுதுகொண்டோ இல்லாமல்"ஆஹா!என்று எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
■ நாம் ஒரு இடத்திற்கு போனால் அங்கே இருப்பவர்கள்"குற்றம் கண்டுபிடிக்க வந்து விட்டான்'என்று முகத்தை சுளிக்கும்படியாக இருக்கக்கூடாது.எங்கே நாம் போனாலும் அங்கே நல்ல தினுசான சந்தோஷத்தை விருத்தி பண்ண வேண்டும்.
 தனக்கு என்று எதுவுமே இல்லாவிட்டால் மனதின் அழுக்குகள் நீங்கி அது கண்ணாடி மாதிரி சுத்தமாக இருக்கும்.அப்போது நிறைந்த ஆனந்தமாக இருக்கலாம்.
■ மேலும் மேலும் பணம் தருகிற தொழில் மேலும் மேலும் வியாதி தருகின்ற காரியங்கள் இவற்றை விட்டுவிட்டு நிம்மதியாக நிறைவோடு அடங்கி வாழ்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
 காஞ்சி மஹா பெரியவா

ஆவுடையார் கோவில் பற்றிய சிறப்பு தகவல்கள்
1. ஆவுடையார் கோவில் என்பது புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி அருகில் உள்ளது. சிற்பக்கலைக்கும், கட்டிடக்கலைக்கும் புகழ்பெற்ற சிவஸ்தலமாகும்.
2. இந்த ஊரில் உள்ள, ஆத்மநாத சுவாமி கோவிலில் மூலவர் சிவலிங்கத்தின் ஆவுடையார் எனப்படும் பீடம் மட்டும் இடம் பெற்றிருப்பதால், இந்த கோவிலும், கோவில் அமைந்துள்ள ஊரும், ஆவுடையார் கோவில் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது.
3. இந்த ஊரின், பழம்பெயர் திருப்பெருந்துறை என்பது. சைவ, சமய குரவர் நால்வருள் நான்காமவரான மாணிக்கவாசக பெருமானின் வாழ்வில், பல அற்புதங்களை நிகழ்த்தியவர், இந்த 'திருப்பெருந்துறை உறை சிவபெருமான்' தான்.
4. அம்பாள் ஸ்ரீ யோகாம்பாளும் விக்கிரகத் திருமேனியாக இல்லை. அவளது திருவடிகளை மட்டுமே தரிசிக்க முடியும். தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறும்
5. முதல் கால பூஜையில் சுத்த அன்னம் (வெறும் சாதம்), 2-ம் கால பூஜையின் போது, சர்க்கரைப் பொங்கல், 3-ம் கால பூஜையில் தேன்குழல் பாயசம், அதிரசம், பிட்டு, தோசை, 4-ம் கால பூஜையில் சுத்த அன்னம், வடை, கீரை, 5-ம் கால பூஜையின் போது, சுத்தம் அன்னம் மட்டுமே, 6-ம் கால அர்த்தசாம பூஜையின் போது, புழுங்கல் அரிசி சாதம் வடிக்காமல், புளியோதரை, பாகற்காய் என நைவேத்தியம், சூடு பறக்கும் உணவின் ஆவி சுவாமிக்கு பிரசாதமாகும். இந்த பிரசாதங்களை சாப்பிட, பித்ருக்கள் எனப்படும் முன்னோரின் சாபங்கள் நீங்கப் பெறுவதுடன், அவர்களின் ஆசிர்வாதமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
6. ஆனித் திருமஞ்சனம் விழா 10 நாட்கள் நடக்கும் 50 ஆயிரத்துக்கும் மேல் பக்தர்கள் கூடுவர்.
7. மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட மிகச் சிறப்புவாய்ந்த சிவதலம் இது.இக்கோயிலின் மண்டபங்களில் முறுக்கு கம்பிகளால் வேயப்பட்டது போல கொடுங்கைகள் (தாழ்வாரம்) அமைக்கப்பட்டுள்ளது
8. புதிதாக ஒரு கோபுரமோ, மண்டபமோ அமைப்பது என்றால், தங்கள் திறமைக்கு சவாலாக இருக்கிற பணிகளை, செய்வதற்கு ஸ்தபதிகள் ஆயத்தமாகவே இருப்பர். ஆனால், கட்டட கலையின் உச்சக்கட்ட சாதனையாக அமைந்த படைப்புகள் என்று, சிலவற்றைக் குறிப்பிட்டு, அவற்றுக்கு இணையாக மட்டும், தங்களால் சாதனை படைக்க இயலாது என்று, எழுதிக் கொடுத்து விடுவர். ஆவுடையார் கோவிலின் 'கொடுங்கை!' இக்கோவிலில் சிறப்பு பெற்று இருப்பதால் ஆவுடையார் கோவில் கொடுங்கை நீங்கலாக, பிற பணிகளை செய்ய ஆயத்தமாக இருக்கிறோம்' என, புதிய பணிகளை துவங்குவதற்கு முன், இங்கு வேலைக்கு வரும் ஸ்தபதிகள் ஒப்பந்தம் போட்டுக் கொள்வர்.
9. பஞ்சாட்சர மண்டபத்தின் உத்தர கல்லில், சுற்றிலும், நான்கு திசைகளிலும், தொடர்ச்சியாக கட்டளை கலித்துறைப் பாக்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. அவற்றில், 'இந்த அற்புதமான மண்டப திருப்பணி, மனித முயற்சியால் கைகூடவில்லை. யோகநாயகி (ஆவுடையார் கோவில் இறைவி), கோபுரவேலவன் (பழைய கோபுரத்தில் இடம் பெற்றுள்ள முருகக் கடவுள்), விநாயகர், மாணிக்கவாசகர் ஆகியோரே செய்வித்தனர்' என, பொருள்படும் கவித்துவமான வரிகள் உள்ளன. தென்காசி காசிவிசுவநாதர் கோவிலை கட்டுவித்த, பராக்கிரம பாண்டியன், அந்த பணி தன் செயல் அல்ல என, ஒரு பாடலில் கூறுவதை இதனோடு ஒப்பிடலாம்.
10. பஞ்சாட்சர மண்டபத்தில் பொறிக்கப்பட்டு உள்ள, மற்றொரு பாடலில், விசைய (விஜய) ஆண்டு, துலா மாதத்தில், இந்த மண்டப திருப்பணியை துவங்கி, பிலவ ஆண்டு பங்குனி மாதத்தில், யோகநாயகி காரிகை இந்த பணியை முடித்தாள் என்று, கூறப்பட்டு உள்ளது. மேலும், 'சுவரோவியங்களை வரைந்து, பாக்கல் (பாவுகல்) எல்லாம் அமைத்தவன் விநாயகனே' என்று, மற்றொரு பாடலில் கூறப்பட்டு உள்ளது.
11. ஆத்மநாதர் கோயில் சிற்பக்கலைக்கு சான்றாக சிறப்புற கட்டப்பட்டுள்ளது. இங்கு இரண்டாம் பிரகாரத்தில் உள்ள தில்லை மண்டபத்தில் அர்ஜுனனுக்கு பாசுபதம் கொடுத்த சிவன், அம்பாள் சிற்பமும், புலையன், புலத்தி வேடத்தில் வந்த சிற்பமும் உள்ளது.
12. இந்த சிவதலத்தில் வழிபடுவோர்க்கு குருபலன் கூடும். மாணிக்கவாசகருக்கு ஈசனே குருவாய் வந்து உபதேசித்த தலம் என்பதால் இந்த தலத்தில் வழிபடுவோர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதோடு சிறந்த ஞானம் பெற்றவராகத் திகழ்வர்.
13. ரூபம் (வடிவம்), அரூபம் (வடிவம் இல்லாமை), அருவுருவம் (லிங்க வடிவம்) ஆகிய மூன்று வடிவங்களில் அருளும் சிவன் இத்தலத்தில் மூலஸ்தானத்தில் அரூபமாகவும், அருவுருவமாக குருந்தமர (ஸ்தல விருட்சம்) வடிவிலும், உருவமாக மாணிக்கவாசகராகவும் அருளுகிறார்.
14. இங்கு ஒரு விசேஷம் என்னவென்றால் குருந்தமரத்தையும் சிவனாகக் கருதுவதால், கார்த்திகை சோமவாரத்தில் இந்த மரத்தின் முன்பாகவே, 108 சங்காபிஷேகம் நடக்கிறது
15. மூலஸ்தானத்தில் சதுர வடிவ ஆவுடையார் மட்டுமே இருக்கிறது. அதன்மீது ஒரு குவளை சாத்தப்பட்டுள்ளது. குவளை உடலாகவும், அதனுள் இருப்பது ஆத்மாவாகவும் கருதப்படுகிறது. இதன் காரணமாகவும், ஆத்மாக்களை காத்தருள்பவர் என்பதாலும் சுவாமிக்கு "ஆத்மநாதர்' என்று பெயர் ஏற்பட்டது
16. ஆறு கால பூஜையின் போதும், இவருக்கு 108 மூலிகைகள் கலந்த தைல அபிஷேகம் நடப்பது விசேஷம்.
17. கோயில்களில் தீபாராதனை செய்யும் போது, பக்தர்கள் அதை கண்ணில் ஒற்றிக் கொள்வார்கள். ஆனால், ஆவுடையார் கோயில் மூலவருக்கு, தீபாராதனை செய்யும் தட்டை வெளியில் கொண்டு வருவதில்லை.
18. இங்கு சிவனே ஜோதி வடிவமாக இருக்கிறார். அவரை வணங்குவதே தீபத்தை வணங்கியதற்கு ஒப்பானது தான். எனவே, தீபாராதனையை கண்ணில் ஒற்றிக் கொள்ள வெளியில் கொண்டு வருவதில்லை.
19. ஆவுடையார்கோயில் மூலஸ்தானத்தில் சிவனுக்கு பின்புறத்தில் வெள்ளை, சிவப்பு, பச்சை ஆகிய நிறங்களில் மூன்று தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளன. வெள்ளை நிறம் சூரியன், சிவப்பு அக்னி, பச்சை நிறம் சந்திரனாக கருதப்படுகின்றன.
20. சுவாமிக்கு இங்கு சிலை இல்லை என்பதால், அவரது மூன்று கண்களை குறிக்கும் விதமாக இந்த தீபங்களை ஏற்றியுள்ளனர்.
21. பஞ்சாட்சர மண்டபத்தில் உள்ள சிவனை குதிரைச்சாமி என்று அழைக்கிறார்கள்.
22. மாணிக்கவாசகருக்காக, சிவன், குதிரைகளுடன் மதுரைக்கு சென்று அரிமர்த்தன பாண்டிய மன்னனிடம் ஒப்படைத்தார். குதிரை மீது சென்ற சிவன், இக்கோயிலில் பஞ்சாட்சர மண்டபத்தில் இருக்கிறார். இவரை, "குதிரைச்சாமி' என்று அழைக்கிறார்கள்.
23. குதிரைக்குகீழே நரிகளும் உள்ளன. இவருக்கு "அசுவநாதர்' என்றும் பெயர் உண்டு.
24. ஆத்மநாதர் கோயிலில் உள்ள ஒவ்வொரு வாசலிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தீபங்கள் ஏற்றப்படுகிறது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவத்தை குறிக்கின்றன. சிவனை சுற்றி திருவாசியில் உள்ள 27 தீபங்கள் நட்சத்திரங்களையும், அருகிலுள்ள 2 தீபங்கள் ஜீவாத்மா, பரமாத்மாவையும் குறிக்கின்றன
25. சன்னதியிலிருந்து வெளியே வரும் அடுத்தடுத்த வாசல் நிலைகளில் பஞ்சகலைகளை குறிக்க 5 தீபம், 36 தத்துவங்கள், 51 அட்சரங்கள், 11 மந்திரங்கள், 224 உலகங்கள் இவற்றை குறிக்கும் விதமாக அந்தந்த எண்ணிக்கையில் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.
26. இத்தலத்தில் குருவாக இருந்து மாணவர்களுக்கு உபதேசம் செய்தபோது, சீடர்கள் அவருக்கு படைத்த உணவை ஏற்றுக்கொண்டார். அவரிடம் பயின்றவர்கள் வீட்டிலிருந்து புழுங்கல் அரிசி சாதம், கீரை, பாகற்காய் என எளிய பொருட்களை அவருக்கு கொடுத்தனர். அதனை சிவனும் விரும்பி வாங்கி சாப்பிட்டார். இதன் அடிப்படையில், ஆத்மநாதருக்கு புழுங்கல் அரிசி சாதம்தான் நைவேத்யம் செய்யப்படுகிறது.
27. அடுப்பில் இருந்து இறக்கப்பட்ட சாதத்தை அப்படியே சுவாமி சன்னதிக்கு கொண்டு சென்று, படைக்கல்லில் ஆவி பறக்க கொட்டி விடுகின்றனர். அப்போது சன்னதி கதவுகள் சாத்தப்பட்டு, சிறிதுநேரம் கழித்து திறக்கப்படும். சுவாமி அரூப வடிவானவர் என்பதால், அரூபமாகி விடும் ஆவியுடன் நைவேத்யம் படைக்கப்படுகிறது.
28. தட்சனின் யாகத்திற்கு சிவனை மீறிச் சென்றதற்கு மன்னிப்பு பெறுவதற்காக, அம்பாள் இத் தலத்தில் அரூப வடிவில் தவம் செய்தாள். எனவே, இங்கு அம்பாளுக்கும் விக்ரகம் இல்லை. அவள் தவம் செய்த போது, பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை நடக்கிறது.
29. இந்த பாதத்தை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக, கண்ணாடியில் பாதம் பிரதிபலிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவளது சன்னதி எப்போதும் அடைத்தே இருக்கும் என்பதால், சன்னதி முன்புள்ள ஜன்னல் துவாரம் வழியாகத்தான் பாதத்தை தரிசிக்க முடியும்.
30. சூரிய, சந்திர கிரகணங்களின்போது கோயில்களின் பூஜை செய்யமாட்டர். ஆனால், ஆவுடையார் கோயிலில் கிரகணநாளிலும் ஆறு கால பூஜை நடக்கிறது. ஆதியந்தம் அல்லாத அருவ வடிவ சிவனுக்கு சிவபூஜை எந்த காரணத்தாலும், தடைபடக்கூடாது என்பதற்காக பூஜை நடக்கிறது.
31. குரு இருக்குமிடத்தில் சிஷ்யர்கள், மரியாதை கொடுப்பதற்காக அவர்முன்பு அமராமல் நின்று கொண்டிருப்பார்கள். இக்கோயிலில் ஆத்மநாதருக்கு மரியாதை செய்யும் விதத்தில், மாணிக்கவாசகர், சொக்க விநாயகர், முருகன், வீரபத்திரர் ஆகியோர் நின்ற கோலத்திலேயே இருக்கின்றனர்.
32. ஆவுடையார் கோயிலில் நவக்கிரக சன்னதி இல்லை. ஆனால், நவக்கிரக தூண்கள் வைக்கப் பட்டுள்ளன. முதல் தூணில் ராகு, கேது, 2வது தூணில் சனி, வியாழன், சுக்கிரன், செவ்வாய், மூன்றாவது தூணில் உஷா, பிரத்யூஷா, சூரியன், புதன், நான்காம் தூணில் சந்திரனும் இருக்கின்றனர். அருகிலுள்ள 2 தூண்களில் காளத்தீஸ்வரர், கங்காதேவி உள்ளனர்.
33. முக்தியை அடைவதற்கான பிரதான மூன்று நிலைகளான சச்சிதானந்த நிலை அமைப்பில் இக்கோயில் உள்ளது. "சத்' அம்சமாக கோயில் மகா மண்டபமும், "சித்' அம்சமாக அர்த்தமண்டபமும், "ஆனந்த' மயமாக கருவறையும் இருப்பது விசேஷம்.




நன்மை தரும் மவுனம்

 தினமும் அரை மணி நேரமாவது மவுனமாக தியானம் செய்யுங்கள்.
 மவுனத்தை அனுஷ்டித்தால் அந்த நேரத்திலாவது சண்டை சச்சரவு இராது.இதுவும் ஒரு வகையான சமூக சேவைதான்.
 நல்லதை உண்டாக்கிக் கொடுக்கிற சக்தி மவுனத்துக்கு உண்டு.நன்மைகளை பெற்றுத்தர மவுனமே உபாயமாக இருக்கிறது என்பதை"மவுனம் ஸர்வார்த்த ஸாதகம்'என்று சொல்வார்கள்.
 ஒன்றைச் சுருக்கமாக சொன்னால் அது மனதில் பதியாமல் போய்விடலாம்.அதையே சுவாரஸ்யமான கதையாக சொன்னால் நன்றாக மனதில் பதியும்.
 வரவு, செலவு என்பது பணம் ஒன்றில் மட்டும் இல்லை.நாம் வார்த்தையை அதிகம் விட்டால் அது செலவு. எதிராளியிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது வரவு.
 காஞ்சி மஹா பெரியவா

கஜபூஜை, கோபூஜை நடத்துவதன் நோக்கம் என்ன?
ஆண் யானையாக இருந்தால் விநாயகராகவும் பெண் யானையாக இருந்தால் கஜ லட்சுமியாகவும் பூஜிப்பர்.சிற்ப சாஸ்திரப்படி கோவிலில் கோசாலை என்னும் மாட்டுத் தொழுவமும் யானைக் கொட்டகையும் குறிப்பிட்ட இடத்தில் அமைக்கப்பட வேண்டும்.பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வசிப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.எனவே கோபூஜை செய்தால் அக்கோவிலுக்கு எல்லா தேவர்களும் வந்து அருள்புரிவதாக ஐதீகம்.இந்த பூஜைகளால் பக்தர்களின் விருப்பம் தடையில்லாமல் நிறைவேறும். செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.