செவ்வாய், 1 டிசம்பர், 2020

ஸ்ரீ வராகீஸ்வரர் ஆலயம்

ஸ்ரீ வராகீஸ்வரர் ஆலயம்

கல்வெட்டுக்கள் நிறைந்துள்ள  இத்திருக்கோயில் 3000 ஆண்டு பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.பெரிய ராஜ கோபுரத்துடன் விளங்கும் இக்கோயிலில்  ஸ்ரீ வராகீச்வ்வரர் மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறார். அம்பாள் திருநாமம் ஸ்ரீ கௌரீச்வரி. லிங்க திருமேனியில் சங்கு,சக்கிரம் காணப்படுகிறது.

தல புராணம்:ஸ்ரீ மகாவிஷ்ணு வராக அவதார நோக்கம் முடிந்தபின் வைகுண்டம் திரும்பாமல் இருக்க பிரம்மா  மற்றும் தேவர்கள் சிவபெருமானிடம் வேண்டிட  இறைவன் வராகத்துடன் 18 நாட்கள் யுத்தம் செய்து அதன் கோர பற்களை பிடுங்கி மாலையாக போட்டுக்கொண்டார்.ஸ்ரீ மகாவிஷ்ணுவும் தம் நிலை அறிந்து ,அருகில் தீர்த்தம் உண்டாக்கி நீலோத்பல புஷ்பங்களால் சிவனை அர்ச்சித்து வைகுண்டம் திரும்பினார்.

தல மகிமை:ரத சப்தமி முதல் மகாசிவராத்திரி வரை  சூரிய பூஜை நடைபெறுகிறது.சூரியன் செங்கதிர்கள் மாலை வேளையில் லிங்க திருமேனியில் படுகிறது.
அம்பாளுக்கு இங்கு ஐராவதம் வாகனமாக அமைந்துள்ளது விசேஷம்.அஷ்ட தட்சிணாமூர்த்தி. அஷ்ட பைரவர் இத்தலத்தில் காட்சி கொடுப்பது விசேஷம்.ராகுகால நேரத்தில்,எல்லா இடர்களையும் போக்கும்  சரபேஸ்வரர் பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது.
ராகு,கேது சர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது.மூலவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபாட்டு வந்தால் திருமண தடைகள் நீங்கும்.

ஆலயம் கட்டப்பட்ட வரலாறு; இந்த ஊரில் வாழ்ந்து வரும் திருமதி கௌரி அம்மாள் என்ற மூதாட்டியை  கோயில் கட்டும்படி காஞ்சி மடத்து ஸ்ரீ மகாஸ்வாமிகள் கூறினார்கள்.சித்தர்கள் வழிபடும் இக்கோயில்  இடிந்துபோய் முட்புதர்களாக இருந்தது.மகாபெரியவர் கூறியபடி பணம் திரட்டிட ஒரு குச்சியில் தயிர்சாதம் கட்டி ஆஞ்சநேயர் படம்  முன்பு அப்பெண்மணி வைக்க கட்டு சோற்றுடன் கிளம்பிய அனுமார் தேவையான பணத்தை கொண்டு சேர்த்தார். இந்த நிகழ்ச்சி நிதர்சனமான உண்மை.பெரும் செல்வம் படைக்காத சாதாரண குடும்பத்தில் வந்த அந்த மாது இப்பெரிய ஆலயத்தை மகாஸ்வாமிகள் சொன்னபடி அவரின் அருளாசியோடு கட்டி  முடித்துள்ளார்கள்.திரட்டிய பணம் அதிகமாகவும் இல்லை,குறைவாகவும் இல்லை. கோயில் கட்டி முடித்து கும்பாபிஷேகம் செய்து முடிக்க வேண்டிய அளவிலேயே இருந்தது.சிவகொஷ்டங்கள், பிரகாரத்தில் விநாயகர்,முருகன், நவக்கிரக சன்னதிகள்.
ஸ்ரீ மகாவிஷ்ணு அமைத்த திருக்குளம் அருகில் உள்ளது.

ஆலய அர்ச்சகர் திரு தீனேஷ் குருக்கள்-9994367390, திரு சரவண குருக்கள் -9952379986.


தொண்டை நாட்டு திவ்யதலம் திருப்புட்குழி

தொண்டை நாட்டு திவ்யதலம் திருப்புட்குழி

108 வைணவ திருத்தலங்களில், தொண்டை நாடு திருத்தலங்களில் முக்கியமானதாக கருதப்படுவது இந்த திவ்ய தலம். பெருமாள் ஸ்ரீ விஜய ராகவப்பெருமாள். வீற்றிருந்த கோலம். இத்தலத்தில் ஸ்ரீதேவி பூதேவி தாயர்கள் இடம் மாறி காட்சி கொடுக்கின்றனர். வலதுபுறம் பூதேவி தாயார். இடதுபுறம் ஸ்ரீதேவி தாயார். தனிக்கோயில் கொண்டுள்ள ஸ்ரீ மரகதவல்லி தாயார் சன்னதி இடதுபுறமும் ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி வலதுபுறமும் அமைந்து உள்ளன.

தலபுராணம்

ஸ்ரீ ராமாவதாரத்தில், ராவணன் சீதா தேவியை கவர்ந்து செல்லும்போது பட்சி ராஜனான ஜடாயு ராவணனோடு யுத்தம் செய்து காயம் பட்டு வீழ்ந்தது. அந்த இடத்திற்கு வந்த ஸ்ரீ ராமர் சீதா  தேவி ராவணனால் கவரப்பட்ட விவரம் ஜடாயு மூலம் அறிந்தார். ஜடாயு வேண்டியபடி, ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீ ராமபிரான் காட்சி கொடுத்து அருளினார். தன் வலது பக்கம் தீ மூட்டி ஜடாயுவை தகனம் செய்து, ராமபாணத்தினால் உண்டான தீர்த்தத்தில் ஜடாயுவுக்கு ஈமகிரியை செய்து முடித்தார். தீ ஜ்வாலை தாங்காமல் ஸ்ரீ ராமரின் வலதுபுறம் இருந்த ஸ்ரீதேவி தாயார் ஸ்ரீ ராமரின்  இடதுபக்கம் வந்து காட்சி அளிக்க பூதேவி தாயாரும் வலதுபுறம் வந்து காட்சி கொடுத்ததாக வாமன புராணத்தில் விவரமாக கூறப்பட்டு உள்ளது. ஸ்ரீ ராமரால் உருவாக்கப்பட்ட தீர்த்தம் இன்றும் ஜடாயு புஷ்கரணி  என்ற பெயரில் காணப்படுகிறது.

சுந்தர பாண்டிய மன்னன் இக்கோயிலை கட்டி மான்யங்கள் அளித்ததாக கல்வெட்டு செய்திகள் உள்ளன. உடையவர் ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ யாதவ பிரகாசர் என்பவரிடம் இளமைக்காலத்தில் இத்தலத்தில் கல்விகற்றதாக கல்வெட்டு செய்தி கூறுகிறது. வேண்டியதை அள்ளிக்கொடுக்கும் தாயார் வறுத்த பயிரை முளைக்க வைக்கும் மரகதவல்லி தாயார் என போற்றப்படுகிறார். திருமங்கை ஆழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட தலம். ஸ்ரீ வேதாந்ததேசிகர் இப்பெருமானை பரமார்த்த ஸ்துதி என்ற பாசுரங்களால் மங்களா சாசனம் செய்துள்ளார்கள்.

பக்தர்கள் அதிகம் வரும் இத்திருக்கோயிலில் 2 கால பூஜைகள் நடைபெறுகின்றன. பேச்சு வராத குழந்தைகளுக்கு இங்கு தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்ய, குழந்தைகளை நன்கு பேச வைக்கும் தலமாக விளங்குகிறது. ஆலய அர்ச்சகர் திரு ஸ்ரீனிவாச பட்டாச்சாரியார் 9047489295. தொடர்புக்கு திரு நாராயணன்-9445214825. காஞ்சியிலிருந்து 15 கி.மி.


திருப்பதியில் உள்ள ஏழு மலைகள்!

திருப்பதியில் உள்ள ஏழு மலைகள்!

வெங்கடாசலபதி குடிகொண்டுள்ள திருமலைக்கு கீழ்திருப்பதியிலிருந்து ஏழு மலைகளை கடந்து செல்ல வேண்டும். அவை:

1. விருஷபாத்ரி - எருதுமலை
2. நீலாத்ரி- கருமலை
3. அஞ்சனாத்ரி - மைமலை
4. சேஷாத்ரி - பாம்பு மலை
5. கருடாத்ரி - கருடமலை
6. நாராயணாத்ரி - நாராயண மலை
7. வேங்கடாத்ரி - வேங்கட மலை.


சாஸ்திரத்தை அனுசரியுங்கள்!

சாஸ்திரத்தை அனுசரியுங்கள்!

வாழ்க்கையானது, தர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது போல் அமைய வேண்டும். அப்படி அமைத்துக் கொள்வது நம் கையில் தான் உள்ளது. உலகில் பல மதங்கள் உள்ளன ஒவ்வொரு மதத்திலும் சில கோட்பாடுகள் உள்ளன. அவைகளில் கூறியுள்ளபடி ஒவ்வொரு மதத்தினரும் நடந்து கொள்ள வேண்டும். இந்து மதத்தில் ஏராளமான சாஸ்திர சம்பந்தமான விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் அனுசரிக்க முடியா விட்டாலும் ஒரு சிலவற்றையாவது அனுசரிக்க வேண்டும். பூஜா நேரத்தில் பட்டு வஸ்திரம் உடுத்திக் கொள்வது நல்லது. அதிலும் கரை போட்டதாக இருக்க வேண்டும். கரையில்லாத வஸ்திரம் எப்போதுமே உடுத்தக் கூடாது. வஸ்திரங்களில் கிழிசல் தையல் இருக்கக் கூடாது இவைகளைப் பயன்படுத்தக் கூடாது. பூஜைக்கு மடி வஸ்திரம் உபயோகிக்க வேண்டும். புது வஸ்திரம் நல்லது. பட்டு வஸ்திரம் நனைக்காததாக இருந்தால் திரும்பத் திரும்ப உபயோகிக்கலாம். பூஜை முடிந்து சாப்பிட ஆரம்பிக்கும் முன் கை கால் அலம்பி மந்திரம் உச்சரித்து சாப்பிடுமிடத்தை சுத்தம் செய்து வடக்கு, கிழக்கு முகமாக உட்கார்ந்து வாழை இலை அல்லது வெள்ளித் தட்டில் சாப்பிடலாம். தையல் இலை மற்றும் சில இலைகளில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது வீண் வம்பு பேச்சு பேசாமல் அன்னத்தை நிந்திக்காமல் பகவத் தியானத்தோடு சாப்பிட வேண்டும். அந்த சமயத்தில் வீட்டில் அவசப்தம் அழுகைக் குரல் போன்றவை கூடாது. சாப்பிடுவது நம் சரீர பலத்துக்காக மட்டுமல்ல நமக்குள் இருக்கும் பரமாத்மாவுக்கு அர்ப்பணம் செய்யப்படுவதற்காகவும் தான்.உத்தரீயம் இல்லாமல் ஒற்றை வேஷ்டியுடனோ சட்டை அணிந்தோ உடைந்த பாத்திரங்களிலோ இலையின் பின்புறத்திலோ சாப்பிடக் கூடாது. சிலர் தாமரை இலையின் பின்புறத்திலும் வாழை மட்டையை சீவி பின்புறத்திலோ சாப்பிடுவதுண்டு இது கூடாது.வெண்கலப் பாத்திரத்தில் சாப்பிடுவதோ தண்ணீர் எடுத்து கை கால் அலம்பவோ கூடாது.என்ன சார்...இவ்வளவு சாஸ்திரங்கள் சொல்கிறீர்களே... அனுசரிக்க முடியுமா... என்று கேட்டால் சாஸ்திரத்தில் அப்படியுள்ளது என்ற பதில் தான் கிடைக்கும்.முடிந்ததை அனுசரிக்கலாமே!

இறைவனோடு உறையாடிய உத்தமர்கள்!

இறைவனோடு உறையாடிய உத்தமர்கள்!

அவ்வைப் பாட்டி: வைணவத்துக்கு ஒரே ஒரு ஆண்டாள். சைவத்துக்கோ காரைக்காலம்மையார்,  மங்கையர்க்கரசியார், குலச்சிறையாரும் தான். கௌமாரத் தெய்வமான முருகனையும், காணாபத்ய கணபதியையும் அவ்வைப் பாட்டி ஒருத்தியே அதிகம் நெருங்கியுள்ளாள். சௌரத்தின் வழிக்கு திரௌபதியை சொன்னாலும் அவளை தீயிலே பூத்த ஒரு தெய்வப்பெண், வைணவக் கண்ணனை அண்ணனாகவே பெற்று விட்டவள். எனவே திரௌபதியை இந்த தெய்வப்பிறவிகளின் கணக்கில் சேர்க்கவும் நீக்கவும் நெருடுகிறது. கூட்டிக் கழித்தால் நான்கு பேர்தான் தேறி நிற்கிறார்கள். இவர்களில் ஆண்டாளும் சரி,  அவ்வையும் சரி, தங்கள் சிந்தனைகளை பாடல்களாக்கி, இந்த சமுதாயத்துக்குத் தந்து விட்டுச் சென்றுள்ளதுதான் சிறப்பு. இதில் ஆண்டாளின் வழி வேறானதாக, காதல்மிக்கதாய் உள்ளது. ஓர் எழிலார்ந்த பெண்மகளாய் அந்தத் திருமால் மேல் காதல் கொண்ட, அந்தக் காதலில் வெற்றியும் பெற்றவளாய்த் திகழ்கிறாள். அதனால் இல்வாழ்வில் ஈடுபட விரும்புவோர்க்கு இவள் பெரிய  வழிகாட்டியாகவும் விளங்குகிறாள்.

இவளது திருப்பாவைப் பாடல்கள் நம்பாவையர்களை, அவர்களின் வினைப்பாடுகளிடம் இருந்து, மீட்டுக் கரை சேர்ப்பதாக உள்ளது. இவளுக்கு நேர் எதிர்த்திசையில் நிற்கிறாள் நம் அவ்வைப் பாட்டி! ஆண்டாள் தெய்வக் காதலினால் கவர்ந்தாள். அவ்வையிடம் சமுகப் பார்வையும் அறக்கோட்பாடுகளும் மிகுந்து காணப்படுகிறது. இவளும் இறைவனை அடைய விரும்புகிறாள்... அது காதல் வழி அல்ல. தவத்தின்  வழி...! அவ்வைப் பாட்டியின்  பூர்வீகம் சோழ நாட்டு உறையூர். அந்தண குலத்திலே ஒருதாய் தகப்பனுக்கு மூத்த பெண்ணாகப் பிறந்தவர். எப்படி குழந்தைப் பருவத்திலேயே ஞானசம் பந்தர் கோபுரத்து தெய்வசிலையைப் பார்த்து தோடுடைய செவியன் என்று தொடங்கும் பாடலைப் பாடி தன் ஞானத்தை உலகறியச் செய்தாரோ அதே போலவே அவ்வையும் பிள்ளையாக இருந்தபோதே தான் ஒரு தெய்வக்குழந்தை என்பதை  உணர்ந்து விட்டாள்- இட்டமுடன் என் தலையில் இன்னபடியென்று எழுதிவிட்ட சிவனுஞ் செத்துவிட்டானோ? முட்டமுட்டப் பஞ்சமேயானாலும் பாரம் அவனுக்கன்னாய்! நெஞ்சமே அஞ்சாதே நீ என்று அவ்வை பாடியதைக் கேட்டு வியக்காதவர்கள் இல்லை. குறிப்பாக அவ்வையின் தாய் தந்தையர்கள் இவரைப் பற்றிய கவலையை விட்டொழித்தனர்.

குழந்தைப் பிராயத்திலேயே, அவ்வையின் மனம் கவர்ந்த கடவுள் பிள்ளையார்தான். யானை உம்மாச்சி என்று நம் பிள்ளைகளின் மனங்களையும் வேகமாகக் கவர்பவர் இந்த கணபதிதானே? இந்தப் பிள்ளையார் ஆகமத்துக்கு அடங்குவது போலவே வெறும் அன்புக்கும் அடங்குபவர். நல்ல நிலம் பார்த்துக் கோவில் கட்டிக் அங்கேதான் இவரை குடியமர்த்த வேண்டும் என்றில்லை. கட்டிக் களிமண்ணை எடுத்துக் கையாலே உருவம் அமைத்து ஒரு மரத்தடியில் உட்கார்த்தி வைத்து இரண்டு அருகம்புல்லைக் கிள்ளிப் போட்டாலே போதும். அகம் மகிழ்ந்து அருளை வாரி வழங்கிவிடுபவர் இவர். அவ்வை வாழ்ந்த உறையூரிலும் இவருக்குத் திரும்பிய பக்கமெல்லாம் வானம் பார்த்த கோவில்கள். ஆற்றுப்பக்கமாய் குடம் எடுத்துச் செல்லும்போதெல்லாம் அவ்வையின் பார்வையில் படும் இவர்தான் முதல் இஷ்ட தெய்வம். ஆற்று நீரை குடத்தில் கொண்டு வந்து அபிஷேகம் செய்து விட்டு அப்படியே பிரதட்சணமாய் வந்து மனமுருக வணங்கிடும்போது அவ்வைக்குள்ளே  இனிய தமிழில் பல துதிப் பாடல்கள் தோன்றின. அதில் ஒன்றுதான்-

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ
எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா...

என்னும் பாடல். அவ்வையின் காலம் மதுரையின் கடைச்சங்கம் இருந்த காலம். இந்த கால்த்தில்தான் சோழநாட்டில் கம்பரும், ஒட்டங்கூத்தரும், புகழேந்தியார் என்னும் புலவரும் வாழ்ந்து வந்தனர். இவர்களில் கம்பருக்கும், ஒட்டங்கூத்ருக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்.  புகழேந்தியார் வழியோ தனிவழி. இப்படிப் பெரும் புலவர்கள் வாழ்ந்த நாளில்தான் காலம் அவர்களோடு அவ்வையையும் கொண்டு சேர்த்தது.

முன்னதாக அவ்வைத் தன் வாழ்வில் ஓர் அதிசயத்தையும் கேட்டு நிகழ்த்திக் கொண்டதை அனைவரும் அறிந்து கொண்டாக வேண்டும். அவ்வை ஒரு பெண்ணாக இருந்தும் பெண்களுக்கேயுரிய அழகுணர்ச்சிக்கும் அலங்காரத்திற்கும் முக்கியத்துவம் தரவேயில்லை. வாலிபப் பிராயத்தை எட்டும் நிலையில் தானொரு ஆணுக்கு வாழ்க்கைப்பட்டு இல்வாழ்வு எனும் இல்லறத்தில் செல்ல விரும்பவில்லை. இல்லறத்தில் செல்ல விரும்பாத நிலையில் நல்லறமாக அவ்வை கருதியது இறையறத்தைத்தான். அதாவது தவத்தை... குழந்தைப் பிராயத்திலேயே சிவபெருமான் மேல் பாரத்தைப் போட்டு விட்டேன் என்று பாடிய மனம், இல்லறம் எனும் பெரும்பாட்டை, பிள்ளைகள் உறவுகள் என்று வழிவழி யாய்த் தொடரும் ஒரு பந்தத்தை எப்படி விரும்பும்? அதையே விரும்பாதபோது இளமைதான் எதற்கு? இந்த இளமை, பெண்கள் வரையில் சற்று போகமும் மோகமும் சார்ந்தது. நாம் அதைக் கொண்டாடாவிட்டாலும் பிறர் கண்களுக்கு அது விருந்தாகி விடும் ஆபத்தும் அதிகம். தோற்றம் என்பது ஏற்றம் தருவதாக இருக்க வேண்டும். எனவே அவ்வை தனது மனதிற்கிசைந்த கணபதியிடம் தனக் கேற்ற விதமான உடம்பைக் கேட்கிறாள். கணபதியும் அந்த இளமையான தெய்வக்குழந்தைக்கு முதிர்ந்த வைரம் பாய்ந்த ஞானம் மிக்க தேகத்தை வழங்கி அருளுகிறான். உலகிலேயே இளமையைத் துறந்து முதுமையை வேண்டிப் பெற்றவர்கள் இருவர். ஒருவர் காரைக்காலம்மையார், அடுத்து, அவ்வைப் பாட்டி மட்டுமே. இங்கேயிருந்து தொடங்குகிறது அவ்வையின் பவித்ரமான பயணம்...


ஜோதிட அடிப்படை

ஜோதிட அடிப்படை

1 நாழிகை = 24 நிமிடம்
2 1/2 நாழிகை = 1 மணி
3 3/4 நாழிகை = 1 முகூர்த்தம்
7 1/2 நாழிகை = 2 முகூர்த்தம் = 1 ஜாமம்
8 ஜாமம் = 1 நாள் (பகல் + இரவு சேர்ந்து)
7 நாள் = 1 வாரம்
15 நாள் = 1 பக்ஷம் (பட்சம்)
2 பக்ஷம் = 1 மாதம்
2 மாதம் = 1 ருது (பருவம்)
3 ருது = 1 ஆயனம்
2 ஆயனம் = 1 வருடம்

நமது வான மண்டலத்தில் குறிப்பாக நமது சூரிய மண்டலத்தில் இருபத்தியேழு நட்சத்திர மண்டலங்கள் உள்ளன அவை பன்னிரண்டு ராசி மண்டலங்களுக்குள் உள்ளன. இந்த பன்னிரண்டு ராசி மண்டலங்களும் பன்னிரண்டு மாதங்களை குறிக்கின்றன. ஒரு நட்சத்திர மண்டலம் நான்கு பாவங்களாக (முதலாம் பாதம், இரண்டாம் பாதம், மூன்றாம் பாதம், நான்காம் பாதம் ) பகுக்கப்பட்டுள்ளன. ஒரு ராசி மண்டலமானது ஒன்பது பாதங்களை கொண்டது.
அதாவது 27×4= 108. 108/12=9 அதாவது ஒன்பது நட்சத்திர பாதங்கள் கொண்டது ஒரு ராசி.
ஒரு நட்சத்திரம் 4 பாதம் என்றால் ஒரு ராசியில் 3
நட்சத்திரங்களின் பாதங்கள் இருக்கும்

#ராசிகள்            

நட்சத்திரங்கள்
மேஷம்  - அசுவினி, பரணி,
கார்த்திகை 1-ஆம் பாதம் முடிய
ரிஷபம் - கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரிஷம் 2-ஆம் பாதம் முடிய மிதுனம் - மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய கடகம்  - புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய சிம்மம்  - மகம், பூரம் உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
கன்னி - உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய துலாம் - சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய
விருச்சிகம் - விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய தனுசு - மூலம், பூராடம், உத்திரம் ஒன்றாம் பாதம் முடிய
மகரம் - உத்திராடம் இரண்டாம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் இரண்டாம் பாதம் முடிய
கும்பம்  - அவிட்டம் மூன்றாம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி மூன்றாம் பாதம் முடிய
மீனம் - பூரட்டாதி நான்காம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய....

ஞாயிறு, 29 நவம்பர், 2020

பஞ்ச பட்சி சாஸ்திரம் என்றால் என்ன?

பஞ்ச பட்சி சாஸ்திரம் என்றால் என்ன?

இறையருள் இல்லாமல் பஞ்ச பட்சி சாஸ்திரம் மட்டுமல்ல. வேறு எந்த சாஸ்திரமும் நமக்கு கைவராது. ஆகையால் இறைவனை வணங்கித் தொழுது விட்டு இந்த அபூர்வ பதிவை உலகம் அறிய நம் சித்தர்களின் குரலில் முதல் முதலாக பகிர்கிறேன்....

பட்சி தெரிந்தவனிடம் பகை கொள்ளாதே என்பது முதுமொழி. இந்த சாஸ்திரம் தெரிந்தவரை பகைத்துக் கொண்டால் தன் மீது பகை கொண்டவரை வீழ்த்தும் வல்லமை  அவர்களுக்கு இருக்கும். அவ்வளவு சக்தி வாய்ந்தது. இதைப் படிப்பவர்கள் யாரும் தீய காரியத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அதே நேரத்தில் அரைகுறையாகப் புரிந்துக் கொண்டு  சோதனை செய்து தனக்குத் தானே பிரச்சினையைத் தேடிக்கொள்ளாதீர்கள்.

மனித உடலில் இயங்க கூடிய உள் உறுப்புகளுக்கு பல்வேறு வழிகளிலிருந்து சக்தி கிடைக்கும் வகையில் மனித உடல் அமைப்பு அமைந்துள்ளது.

மனிதனின் உடல் உறுப்புகளில் இருந்து வரும் நரம்புகளின் தொடர்பு மற்றும் நரம்புகளின் முடிச்சுகள் மனிதனின் கண், காது உள்ளங்கை மற்றும் கால் பாதங்களில் வந்தடைகிறது. மனிதனின் அகத்தை வெளிப்படுத்தும் புறவழி உறுப்பே கண்கள்தான். இயற்கையின் தோற்றத்தையும், மற்றவையையும் ஊர்ஜிதப்படுத்துவதும் கண்கள்தான்.

எதையும் முதலில் அங்கரிப்பது கண்கள் மூலமாகத்தான். அழகான உறுப்பே கண்கள். மனிதனின் உடல் உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் மற்றும் நோய்களுக்கும் நாடி பார்த்து நோயை கணிப்பது போல மனிதனின் கருவிழியை வைத்தும் நோயை கணிக்கலாம்.

கருவிழித் திசுக்களில் ஏற்படும் புள்ளிகள், கோடுகள், நிற மாற்றங்கள் கருவிழித் திசுக்களின் ஒருங்கிணைப்பு மாற்றங்கள் ஆகியவற்றைக் கொண்டு உடல் உறுப்புகளின் பாதிப்புகளை துல்லியமாக கண்டு தீர்வு காணலாம். கண்களின் கருவிழிக் கொண்டு நோய் அறிந்து காது, உள்ளங்கை, கால் பாதங்களில் உள்ள வர்ம புள்ளிகள் தூண்டப்படுவதின் மூலமாக நோயினை குண்படுத்த முடியும்.

கருவிழியில் மருத்துவம் எப்படி உருவானது?

பஞ்சபட்சிகளில் ஒன்றான ஆந்தையை மையமாகவும் இதன் கண்களின் கருவிழியில் ஏற்பட்ட மாற்றத்தை கொண்டும் தான் கருவிழியில் மருத்துவம் உருவானது. கால் உடைந்த ஆந்தைக்கு காலில் கட்டு போடுவதற்கு முன் ஆந்தையை வைத்தியர் பார்த்தபோது அந்த ஆந்தையின் கண்ணின் கருவிழியில் ஒரு புள்ளி இருப்பதை கண்டறிந்தார். அதை வைத்து சிகிச்சை அளித்தார். இதில் ஆந்தையின் கால் குணமானது. உடனே அப்புள்ளி மறைந்தையும் கண்டார்.

அதே போலவே ஒரு மனிதனுக்கு ஏற்பட்ட விபத்தின் போது அவன் கருவிழியில் இதைப்போன்ற மாற்றம் ஏற்பட்டதையும் பின்பு அந்த மனிதனின் காயம் சரியானதும் அவன் கண்ணின் கருவிழி சரியானதையும் கண்டார்.

இந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டுதான் நோயை நிர்ணயம் செய்ய ஒரு புதிய யுத்தியை கண்டறிந்து கையாண்டார்கள்.

கருவிழியின் மூலம் நோய் அறியும் மருத்துவம் கி.பி. 1837-ம் ஆண்டில் இருந்து இன்று வரை நடைமுறையில் உள்ளது.

அதே போல பஞ்சபட்சி சாஸ்திரம் ஓர் மனிதனின் வாழ்க்கை முறையையும், வசதி வாய்ப்பையும் மற்றும் அவனின் நோய் தன்மையையும், உள் உறுப்புகளில் எந்த உறுப்பு பாதித்துள்ளது என்பதையும், அவன் உடலில் எந்த சக்கரம் சரியாக   இயங்கவில்லை என்பதையும் கூற முடியும். மகாபாரத்தில் சாகதேவன் சோதிட சாஸ்திரம் கையாண்டார்.

கிருஷ்ண பகவான் பஞ்சபட்சி சாஸ்திரத்தை கையாண்டார் என்று சாஸ்திரம் கூறுகிறது. அதே போல ராமயணத்தில் பலவகை கலைகளையும் அறிந்த ராவணனும் பஞ்சபட்சி சாஸ்திரம் அறிந்தவர் ஆவார்.

இவர்கள் பஞ்ச பட்சிசாஸ்திரம் அதிகம் கையாண்டுயுள்ளனர்.

இந்த அபூர்வ சாஸ்த்திரங்களை யோகிகள் "ஞானிகள்" முனிவர்கள் சித்தர்களும் பல்லாயிரம் வருடங்களாக மிகவும் இரகசியமாக பயன்படுத்தியும் பாதுகாத்தும் பயிற்சி அளித்தும் வந்துள்ளனர்.

இவைகளை பல வருடம் தம்முடனே இருந்து தொண்டுகள் செய்துகுருவின் திருப்பாதமே கதி என இருந்து வரும் விசுவாசமுள்ள சீடனுக்கு மட்டும் இக்கலைகளின் அரிய இரகசியங்களை உபதேசித்து வந்துள்ளனர்.

இதில் பஞ்சபட்சி சாஸ்திரம் எனப்படும்  மகத்துவம் வாய்ந்த இக்கலை ஆதியில் எம்பெருமான் ஈசன் அன்னை மகாசக்தி உமையவளுக்கு உபதேசித்த அபூர்வ கலையாகும்.

தமிழ்க் கடவுளாகிய சுப்பிரமணியர் சூரபத்மனுடன் போரிட்டு அவனை வெல்ல முடியாமல் போகவே அவனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு தாயாகிய மகாசக்தியால் சுப்பிரமணியருக்கு உபதேசித்த உன்னத கலையாகும் "பஞ்ச பட்சி சாஸ்திரம்" இதனையே சூரனை வதம் செய்ய  முருகனுக்கு அன்னை மகாசக்தி வேல் கொடுத்ததாக சொல்வர்.

சூரனை வதம் செய்து வெகு காலம் சென்ற பின்பு குருமுனியாகிய அகத்திய முனிவருக்கு முருகப் பெருமான் பஞ்ச பட்சி சாஸ்த்திரத்தை உபதேசம் செய்தார்.

அகத்தியரும் மற்ற சித்தர்களுக்கு  உபதேசித்தார் இக்கலையைப் பயின்ற சித்தர்களும் தம்மிடம் உள்ள உண்மையான சீடர்களுக்கு மட்டும் குருவழி உபதேசம் அளித்து வந்துள்ளனர்.  

பஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது ஜோதிடக்கலையிலும் மேலான மிகவும் துல்லியமான ஒரு காலக்கணிதம் ஆகும்.இது பஞ்ச பூத சக்திகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது ஆகும்.

நவக்கிரகங்கள், பன்னிரு இராசிகள், இருபத்தேழு நட்சத்திரங்கள் ஆக மொத்தம் - 48- இவை அனைத்தையும் ஐந்து பட்சிக்குள் (பறவைகள்)அடக்குவதே இதன் சூட்சும இரகசியமாகும்.

பஞ்சபூதம் எனப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனப்படும் ஐந்து வித மாபெரும் பிரபஞ்ச சக்திகளை பஞ்சபட்சி எனப்படும். வல்லூறு,ஆந்தை, காகம், கோழி, மயில், என ஐந்து வித பறவைகளாக மாற்றி அமைத்து இக்கலையை உருவாக்கியது இறைவனின் வல்லமையாகும்.

சரம்  தெரிந்தவனிடம்  சரசமாடாதே

பட்சி தெரிந்தவனிடம்  பகைகொள்ளாதே

பல்லி சொல்பவனிடம் பதில் பேசாதே

என்பது பெரியோர் வாக்குவாகும்.

மேற்கண்டபடி  பஞ்சபட்சி தெரிந்தவனை பகைத்துக் கொண்டால் பகைத்தவனை எளிதில் சாய்க்கும் வல்லமை அவனுக்கு உண்டு என்பதால்தான். இன்றும் தென் தமிழகத்தில் இக்கலையின் இரகசியம்  அறிந்த ஆசான்கள் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். இக்கலையினைப் பயன் படுத்தி சேவல் சண்டை, ஆட்டுகிடா சண்டை, சிலம்பம் , பிரச்சனை வழக்குகள், போன்றவற்றில் தன்னைச் சார்ந்தவர்களை மட்டும் வெற்றி பெற வைத்து வருகின்றனர்.

அதே சமயம் பஞ்சபட்சி கலையின் சூட்சும சக்தியைப் பயன்படுத்தி வாழ்வில் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவரைவாழ்வில் மிகவும் உச்ச நிலையில் உயர்த்தி பணம்,பதவி,புகழ், ஆகிய வற்றை  எளிதில் அடைய வைக்க முடியும்.மேலும் பஞ்சபட்சி நுட்பத்தினை அறிந்தவன் ஜெகத்தை ஆள்வான், அவனை எவரும் வெல்ல முடியாது என்பது உறுதியிட்ட உண்மையாகும்.

இக்கலையை பயன்படுத்தி மாந்திரீக அஷ்ட கர்மம் ஆடலாம். செய்தொழில், காரியங்கள், வாழ்க்கையில் முன்னேற்றம்,  புதுவித திட்டங்கள் போன்றவற்றை உடனே நடைமுறைக்கு கொண்டு வரவும், தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறவும் முடியும்.

மேலும், நவக்கிரகங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் வல்லமை இக்கலைக்கு உண்டு. நாள், திதி, நட்சத்திரம், யோகம், கரணம், நேரம், லக்கினம், போன்ற அனைத்து தோஷங்களும் பஞ்சபட்சியினைக் கட்டுப் படுத்த இயலாது.

பஞ்ச பட்சி சாஸ்திரம் என்றால் என்ன?
--------------------------------------------------------------------

பட்சிகள் மொத்தம் ஐந்து.
அவை முறையே
(1)வல்லூறு.
(2)ஆந்தை.
(3)காகம்.
(4)கோழி.
(5)மயில்.

முதலில் யாருக்கு என்ன பட்சி என்று பார்ப்போம். ஒருவரின் நட்சத்திரத்தின் மூலம் பட்சியை நிர்ணயிக்கலாம். இது நட்சத்திரப் பட்சி எனப்படும். அவை கீழ் கண்டவாறு வரும்....

வல்லூறு
-----------------
அஷ்வினி,
பரணி,
கார்த்திகை,
ரோகிணி,
மிருகசீரிஷம்     
         
ஆந்தை
--------------
திருவாதிரை,
புனர்பூசம்,
பூசம்,
ஆயில்யம்,
மகம்,
பூரம்    
              
காகம்
-----------
உத்தரம்,
ஹஸ்தம்,
சித்திரை,
சுவாதி,
விசாகம்    
                           
கோழி
------------
அனுஷம்,
கேட்டை,
மூலம்,
பூராடம்,
உத்ராடம்     
                        
மயில்
------------
திருவோணம்,
அவிட்டம்,
சதயம்,
பூரட்டாதி,
உத்ரட்டாதி,
ரேவதி

இதுதான் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நட்சத்திரம் தெரியாதவர்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தங்களுடைய (அல்லது பிறருடைய) பட்சிகளை முடிவு செய்யலாம். இவை அட்சரப் பட்சிகள் எனப்படும்.

வளர்பிறை
---------------------

அ, ஆ - வல்லூறு

(ராமன், கலைவாணன் இப்படி, அதாவது ராமன் என்னும் பெயரில் ரா முதல் எழுத்து. அதை ர் + ஆ என்று பிரிக்கலாம். அதே போல் கலைவாணன் என்னும் பெயரில் முதல் எழுத்து க. இதை க் + அ என்று பிரிக்கலாம். இப்படியே மற்ற எழுத்துகளுக்கும் பார்த்துக் கொள்ளலாம்.)

இ, ஈ - ஆந்தை

உ, ஊ - காகம்

எ, ஏ - கோழி

ஒ, ஓ - மயில்

தேய்பிறை
--------------------

அ, ஆ - கோழி

இ, ஈ - வல்லூறு

உ, ஊ - ஆந்தை

எ, ஏ - மயில்

ஒ, ஓ - காகம்

         ஒருவர் தொழில் நிமித்தமாகவோ வேறு எதற்காகவேனும் தங்களுடைய பட்சியின் நிலையறிந்து செயல்பட்டால் அதில் வெற்றி நிச்சயம் பெறலாம். இந்த பட்சிகளின் தொழில்கள் என்று அரசு, ஊண், நடை, துயில், சாவு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலைகளில் பட்சிகளின் பலம் கீழ் கண்டவாறு இருக்கும் என்று சொல்லலாம்

அரசு  - 100% பலம்
ஊண் - 80%      “
நடை -   50%    “
துயில் - 25%    “
சாவு     - 0%     “

         ஒவ்வொரு பட்சிக்கு பகல்/இரவு நேரம் 5 பிரிவாக பிரிக்கப் பட்டு அந்த நேரத்தில் மேற்கண்ட எந்த நிலையில் இருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறது.

       இது தவிர இந்த பட்சிகளுக்கு மிகவும் பலவீனமான நாட்கள் (செயல் இழந்து விடும் நாட்கள் - Death Days) என்று இருக்கிறது. இவை படுபட்சி நாட்கள் எனப்படும். இந்த நாட்களில் எந்த முக்கியமான வேலை,  புது முயற்சி, சுப காரியம், பிரயாணம், மிகவும் Risk ஆன  ஆப்பரேஷன், மருத்துவ சிகிச்சை இவை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. இவை பகல், இரவு இரண்டு வேளைகளுக்கும் பொருந்தும்.

வளர்பிறை - படுபட்சி நாட்கள்
-----------------------------------------------------

வல்லூறு - வியாழன், சனி

ஆந்தை - ஞாயிறு, வெள்ளி

காகம் - திங்கள்

கோழி - செவ்வாய்

மயில் - புதன்

தேய்பிறை படுபட்சி நாட்கள்
--------------------------------------------------

வல்லூறு -செவ்வாய்

ஆந்தை -திங்கள்

காகம் -ஞாயிறு

கோழி -வியாழன், சனி

மயில் -புதன், வெள்ளி

       அடுத்து இந்த பட்சிகளுக்கு ஊண் பட்சி நாட்கள் (Ruling Days) என்று இருக்கின்றன. அந்த நாட்களில் அந்த பட்சி பலமாக இருக்கும். முன்பு சொன்ன படு பட்சி நாட்களுக்கு நேர் எதிரானது. மேலே விலக்கச் சொன்ன எல்லாக் காரியங்களையும் மேற்கொள்ள ஏதுவான நாள். இவை படு பட்சி நாட்கள் போல் இல்லாமல் பகல் இரவு இரு வேளைகளுக்கும் வெவ்வேறாக இருக்கும். அவை கீழ்கண்டவாறு:-

வளர்பிறை
--------------------

பகல் - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)

வல்லூறு - ஞாயிறு, செவ்வாய்

ஆந்தை - புதன், திங்கள்

காகம் - வியாழன்

கோழி - வெள்ளி

மயில் - சனி

இரவு - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)

வல்லூறு - வெள்ளி

ஆந்தை -ஞாயிறு

காகம் -ஞாயிறு, செவ்வாய்

கோழி - திங்கள், புதன்

மயில் -வியாழன்

தேய்பிறை
--------------------

பகல் - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)

வல்லூறு -வெள்ளி

ஆந்தை - வியாழன்

காகம் -புதன்

கோழி - ஞாயிறு, செவ்வாய்

மயில் - திங், சனி

இரவு - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)

வல்லூறு -ஞாயிறு, செவ்வாய்

ஆந்தை - புதன்

காகம் - வியாழன்

கோழி - திங்கள், சனி

மயில் -வெள்ளி

      இந்த படு பட்சி நாட்களில் உங்களுடைய பட்சி குறிப்பிட்ட நேரத்தில் அரசு என்ற நிலையில் இருந்தாலும் எந்த பிரயோஜமும் இல்லை. அதே நேரத்தில் ஊண் பட்சி நாட்களில் சாவு என்ற நிலையில் இருந்தாலும் அது பலமிழந்ததாக ஆகாது.

    அடுத்து பட்சிகளின் பொதுவான பல நிர்னயங்களைப் பார்ப்போம். பட்சிகளின் பலம் இறங்குமுகமாக கீழ் கண்டவாறு:
(1) காகம்
(2) ஆந்தை
(3) வல்லூறு
(4) கோழி
(5) மயில்
அதாவது காகம் எல்லாவற்றிலும் பலமிக்கது என்றும் மயில் மிகவும் பலவீனமானது என்று இதன் மூலம் முடிவுக்கு வரலாம்.

        இது எதற்கு என்றால் உங்களது பட்சி மயில் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் பட்சியை விட பலமான ஆந்தை, காகம் இவற்றைத் தங்களது பட்சியாகக் கொண்டுள்ளவர்களுடன் நீங்கள் போட்டி போட்டு ஜெயிப்பது கடினம். ஆனால் பலவீனமான உங்கள் பட்சிக்கு ஊண் பட்சி நாட்களாக இருந்து, எதிராளியின் பட்சி படு பட்சியாக இருந்தால் உங்களுக்குதான் வெற்றி. இதை தற்காப்புக்காக பயன் படுத்தலாம் என்பதற்காகச் சொல்கிறேன். பிறருக்கு தீங்கு செய்வதற்காக அல்ல.

           அந்த கால கட்டத்தில் எதிராளிக்கு பில்லி, சூனியம், ஏவல் செய்பவர்கள்,  அல்லது ஏதாவது ஒரு வகையில் கெடுதல் செய்ய நினைப்பவர்கள், பஞ்ச பட்சி தெரிந்தவர்களிடம் கேட்டு தனக்கு ஊண் பட்சி நாளும், எதிராளிக்கு படு பட்சி வரும்படி பார்த்துக் கொள்வார்கள். அல்லது பஞ்ச பட்சி தெரிந்தவர்கள் தங்களை நாடி வருபவர்களிடம் இந்த நாட்களைத் தேர்ந்தெடுத்து சொல்வார்கள். தீமைக்கு மட்டுமல்ல. நல்ல காரியங்களுக்கும் பயன்படுத்தலாம். பயன்படுத்த வேண்டும்.

                  தனக்கு சாதகமாக காரியம் சாதித்துக் கொள்ள நினைப்பவர்கள், (வீண், வம்பு, வழக்கு என்று மாட்டிக் கொண்டவர்கள்,  அதிகாரிகளைச் சந்தித்து உதவி கேட்க நினைப்பவர்கள்) இந்த பட்சியின் நிலையறிந்து நடந்தால் நன்மை அடையலாம். ஊண் பட்சி நாட்களில் வேலைக்கு மனு செய்தால் சாதகமான பதிலை எதிர் பார்க்கலாம்.

               படு பட்சி நாட்கள் என்பது மிகவும் மோசமான பலன்களைக் கொடுக்கக் கூடியது என்று பார்த்தோம். இதனுடைய கொடிய பலன்களிலிருந்து தப்பிக்க ஒரு பரிகாரம் சொல்லியிருக்கிறார்கள். ஓம் நமசிவய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபம் செய்து விட்டு சென்றால் அதன் கடுமை குறையும் என்று. (இதை மசிவயந, சிவயநம, நசிவயம  என்று 125 வகையில் மாற்றி சொல்லலாம். பலன் ஒன்றுதான்.) ஆயினும் முழுமையாக படு பட்சி நாளின் கடுமையை கட்டுப்படுத்தி விட முடியாது என்பது என் கருத்து.

              நாளும் கோளும் சிவனடியார்களை ஒன்றும் செய்து விட முடியாது என்று கோளறு திருப்பதிகத்தைப் பாடி தன் பயணத்தைத் தொடர்ந்த  திருஞானசம்பந்தரே அதன் பிடியில் இருந்து தப்ப முடியாமல் போய் விட்டது. நாமெல்லாம் எம்மாத்திரம்.

பறவைகள் ஐந்து. அதன் தொழில்கள் ஐந்து என்று ஏற்கனவே பார்த்தோம். எந்த பறவை எந்த நாளில் எந்த நேரத்தில் என்ன தொழில் செய்யும் என்று பார்ப்போம். ஒரு நாளில் மொத்தம் 24 மணி = 60 நாளிகை. பகல் = 30 நாளிகை, இரவு = 30 நாளிகை. அது ஐந்து பறவைகளுக்கும் ஐந்து பிரிவாக பிரிக்கப்பட்டு பகல் (அல்லது இரவில்) தன் தொழிலைச் செய்ய ஒவ்வொரு பறவையும் 6 நாழிகைகள் எடுத்துக் கொள்ளும். 6 நாழிகைகள் என்பது 2 மணி 24 நிமிடங்கள். முதல் 6 நாழிகை ஊண் என்றால் அடுத்த 6 நாழிகை நடை அல்லது வேறு ஒரு தொழில் என்று வரும்.

உண்மையில் உற்றுக் கவனித்தீர்களானால் வளர் பிறை பகல் தொழில் முறையே ஊண், நடை, அரசு, துயில், சாவு என்று வரும். இரவு ஊண், அரசு, சாவு, நடை, துயில் என்று வரும். அதே போல் தேய்பிறை பகல் ஊண், சாவு, துயில், அரசு, நடை என்றும் இரவில் ஊண், துயில், நடை, சாவு, அரசு என்ற இந்த வரிசையில் வரும். எல்லா பட்சிகளுக்கும் வளர்/தேய் பிறைகளில் ஞாயிறு செவ்வாய், ஒரே மாதிரியான தொழில் இருக்கும். வளர் பிறைகளில் திங்கள், புதன் தேய்பிறைகளில் திங்கள், சனி, பட்சிகளின் தொழில் ஒரே மாதிரி இருக்கும். மற்ற கிழமைகளில் அந்தந்த கிழமைக்கு தகுந்தாற்போல் மாறி வரும்.

அதிகம் குழப்ப விரும்பவில்லை. கீழே ஒரு அட்டவணை தந்திருக்கிறேன் அதைப் பார்த்துக் கொள்ளுங்கள். சூரிய உதயம் காலை 6 மணி என்ற நிலையில் இதைத் தந்திருக்கிறேன். நீங்கள் இருக்கும் நாட்டில் சூரிய உதயம் 6.30 மணி என்றால் அந்த நேரத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

வல்லூறு - வளர்பிறை

நட்பு : மயில், ஆந்தை
பகை : காகம், கோழி

வல்லூறு - தேய் பிறை

நட்பு : மயில், காகம்
பகை : ஆந்தை, கோழி

ஆந்தை - வளர்பிறை

நட்பு : வல்லூறு, காகம்
பகை : மயில், கோழி

ஆந்தை - தேய்பிறை

நட்பு : கோழி, காகம்
பகை : வல்லூறு, மயில்

காகம் - வளர்பிறை

நட்பு : ஆந்தை,கோழி
பகை : வல்லூறு, மயில்

காகம் - தேய்பிறை

நட்பு : ஆந்தை, வல்லூறு
பகை : மயில், கோழி

கோழி - வளர்பிறை

நட்பு : மயில், ஆந்தை
பகை : காகம், வல்லூறு

கோழி - தேய்பிறை

நட்பு : மயில், ஆந்தை
பகை : காகம், வல்லூறு

மயில் - வளர்பிறை

நட்பு : வல்லூறு, கோழி
பகை : ஆந்தை, காகம்

மயில் - தேய்பிறை

நட்பு :  வல்லூறு, கோழி
பகை : ஆந்தை, காகம்

ஊண் பட்சி நாட்களை மஞ்சள் நிறத்திலும், படு பட்சி நாட்களை சிவப்பு நிறத்திலும் இரண்டும் கலந்து வந்தால் ஆரஞ்சு நிறத்திலும் highlight செய்து உள்ளேன்.

நட்பு பட்சியாக உள்ளவர்களுடன் கூட்டு சேர்வது நன்மை பயக்கும். பகை உள்ளவர்களிடம் சற்று தள்ளியே இருப்பது நல்லது.

“அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உள்ளது” என்பது சித்தர்களின் வாக்கு. பிரபஞ்சமானது பஞ்ச பூதங்களாலானது என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள். அது போல் மனித உடலானது பஞ்ச பூதங்களாலானது என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.

ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனுக்கு உடல் காரகன்,மனோக்காரகன் என்று பெயர்.மனித உடலிலும்,மனதிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு சந்திரனின் சுழற்சியே காரணம் என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள்.மனிதர்களின் உடற்கூறு அவர்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு தகுந்தாற்போல் அமைந்தூள்ளது என்பதையும் கண்டறிந்தார்கள். உடலை இயக்குவது உயிர் காந்த ஆற்றலாகும். அந்த உயிர் காந்த ஆற்றாலானது சந்திரனினின் சுழற்சிக்கு தகுந்தார்போல் சில நேரங்களில் வலிமையடைவதையும்,சில நேரங்களில் வலுவிழந்துபோவதையும் கண்டறிந்தார்கள்.

உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது, எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறுவதையும், உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமை குன்றியிருக்கும்போது, எண்ணிய எண்ணங்கள் நடைபெறாமல் தடைபடுவதையும் அனுபவத்தில் கண்டறிந்தார்கள்.

உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது, உடல் வலிமை,மனவலிமை கூடுவதையும், உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமை குன்றியிருக்கும்போது, உடல் வலிமை,மனவலிமை குறைவதையும் அனுபவத்தில் கண்டறிந்தார்கள். உடலில் ஏற்படும் இத்தகை மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட கால சுழற்சியில் இயங்குகிறது என்பதையும்,அந்த கால சுழற்சிக்குத்தகுந்தார் போல் செயல்பட்டால் வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றி  நடை போடலாம் என்பதையும் மானிடர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு அதை பஞ்ச பட்சி சாஸ்திரம் என்னும் தலைப்பில் உலகுக்கு வெளிப்படுத்தினார்கள்.
“பஞ்ச”என்றால் “ஐந்து” என்று பொருள். “பட்சி” என்றால் “பறவை” என்று பொருள். “சாஸ்திரம்” என்றால் “எழுதப்பட்டவைகளை செயல்படுத்திப்பார்த்தால் உண்மை விளங்கும்” என்று பொருள்.

பஞ்ச பட்சிகள் என்பவை வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகிய ஐந்து பறவைகளாகும்.

பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் ஜென்ம நட்சத்திரம் தெரிந்தவர்களுக்கு ஜென்ம நட்சத்திர அடிப்படையிலும், ஜென்ம நட்சத்திரம் தெரியாதவர்களுக்கு அவரவர்களுடைய பெயரின் முதல் எழுத்தில் அமைந்துள்ள உயிர் எழுத்தின் அடிப்படையிலும் பட்சி நிர்ணயம் செய்யப்படுகிறது.

தமிழ் எழுத்துக்களை சித்திர எழுத்துக்கள் என தமிழறிஞர்கள் குறிப்பிடுவர். தமிழ் உயிர் எழுத்துகளில் குறில் வடிவமுடைய “அ, இ, உ, எ, ஒ” ஆகிய ஐந்து எழுத்துக்கள் என்ன வடிவத்தில் அமைந்துள்ளனவோ,அதே வடிவத்தையொத்த பறவைகள் பஞ்ச பட்சிகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

அ - வல்லூறு
இ - ஆந்தை
உ - காகம்
எ - கோழி
ஒ - மயில்.

மனித உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. அந்த பஞ்ச பூதங்களின் செயல் பாட்டையே, பஞ்ச பட்சி சாஸ்திரம் விளக்குகிறது.

நிலம் - வல்லூறு
நீர் - ஆந்தை
நெருப்பு - காகம்
காற்று - கோழி
ஆகாயம் - மயில்.

         பஞ்ச பூதங்களைக்கட்டுப்படுத்தும் ஆற்றல் பஞ்சாக்ஷரம் என்னும் சிவ மந்திரத்திரத்திற்கு உண்டு. எனவே பஞ்சாக்ஷரம் ஜெபிப்பவனை யாராலும் வெற்றிகொள்ள முடியாது என்பதை இந்த சாஸ்திரம் ரகசியமாக வெளிப்படுத்துகிறது.

ந - வல்லூறு
ம - ஆந்தை
சி - காகம்
வ - கோழி
ய - மயில்.

பஞ்சாக்ஷர மந்திரத்திற்குரிய தேவதையான சிவபெருமானே,இந்த பஞ்ச பட்சி சாஸ்திரத்தை முதலில் தன் குமரனான முருகப்பெருமானுக்கு அசுரர்களை அழிக்கும் பொருட்டு உபதேசித்தார் எனவும்,முருகன் அதை அகத்தியருக்கு உபதேசித்தார் எனவும்,அகத்தியர் பதினென் சித்தர்களுக்கு உபதேசித்தார் எனவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் உதவியுடன் கீழ்கண்ட காரியங்களை செய்யலாம்.

(1)   உடலிலிருந்து நோய் நீக்குதல்.
(2)   பிறர் உடலில் நோயை உண்டாக்குதல்.
(3)   மனோவிகாரங்களிலிருந்துதன்னை தற்காத்துக்கொள்தல்.
(4)   பிறர் மனதை கட்டுப்படுத்துதல்.
(5)   எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்தல்.
(6)   பிறர் எண்ணங்கள் நிறைவேறாமல் தடுத்தல்.
(7)   போட்டிகளில் வெற்றியடைதல்.
(8)   எதிரிகளை வெல்லுதல்.
(9)   தாம்பத்தியஉறவில் பெண்ணை திருப்திபடுத்துதல்.
(10) ஆருட பலன் கூறுதல்.
(11) கிரக தோசங்களுக்கு பரிகாரம் செய்தல்.
(12) சுப காரியங்களுக்கு நல்ல நேரம் தேர்ந்தெடுத்தல்.
(13) வர்மம் நீக்குதல்,வர்மத்தால் எதிரிகளைதாக்குதல்.!!!.

எனக்கு தெரிந்து இன்று இத் தெய்வீகக் கலையின் அதிசூட்சும இரகசியங்கள் அறிந்த ஆசான்கள் வெகுசிலர் மட்டும் தான் உள்ளனர்.    

உண்மையான மெய்குருவிடம் சென்று பணிந்து இக்கலையை கற்கும் ஒருவனை பஞ்சபூத சக்திகள் துணை நின்று காக்கும். அவன் வாழ்வில் மேன்மை பெற்று சீரும் சிறப்புடன் வாழ வகை செய்யும். அதே சமயம் இக்கலையின் மூலமாக சத்ருக்களை துன்புறுத்தவோ, அழிக்கவோ நினைத்தால் ஏழு ஜென்ம பாவ வினைகள் வந்து சேரும்.

எனவே இந்த தெய்வீகக் கலையினை குருவின் வழியில் சென்று கற்று சித்திபெற்று தான் வாழ்வில் வளம் பெறுவதுடன், தன்னைச்சுற்றி உள்ளோரையும் வாழ்வில் வளம் பெறச் செய்யலாம்.


ராமாயணம் பகுதி ஏழு

ராமாயணம் பகுதி ஏழு

மிகச்சிறந்த முகூர்த்த நாள் ஒன்றை விசுவாமித்திரர் குறித்தார். திருமணவிழாவிற்கான ஏற்பாடுகள் மிதிலையில் மிகச்சிறப்பாக நடந்தன. தங்கள் நான்கு இளவரசிகளுக்கும் திருமணம் என்பதால் ஊரே கோலாகலமாக இருந்தது. எங்கும் மகிழ்ச்சி புயல்தான். மணநாளும் வந்தது. மணக்கோலம் பூண்ட நான்கு ராஜகுமாரர்களும் மணமேடைக்கு வந்தனர். மங்கள ஓசை முழங்கியது. எங்கு பார்த்தாலும் மங்கலச் சின்னங்கள். மணவிழாவுக்கு வந்த மக்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. அனைவரும் அதை அணிந்து கொண்டனர். அனைவரது கையிலும் மஞ்சள் அரிசி கொடுக்கப்பட்டது. ஒருபக்கம் விருந்து விசேஷம் நடந்து கொண்டிருந்தது. ராம சகோதரர்களுக்கு திருமணம் முடிக்க விஜயா என்ற முகூர்த்த நேரம் குறிக்கப்பட்டிருந்தது. இந்த நேரம் உலகம் பிறந்ததிலிருந்து அந்த ஒரே ஒருமுறைதான் வந்ததாம். இப்படி ஒரு நேரம் இனியார் வாழ்விலும் வரப்போவதும் இல்லை. அப்படிப்பட்ட சிறப்பான முகூர்த்தத்தில் சீதாபிராட்டியின் கழுத்தில் மங்கல நாண் பூட்டினார் ராமபிரான். அண்ணியின் கழுத்தில் அண்ணன் தாலி அணிவித்த அந்த இனிய காட்சியை மற்ற தம்பிகளும் அவர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகள்களும் கண்டு மகிழ்ந்தனர். ஜனக மகாராஜா ராமச்சந்திரமூர்த்தியின் கைகளைப் பிடித்து, ஸ்ரீராமா! என் மகள் சீதை இன்று முதல் உன்வாழ்வில் அறம் வளர்க்கும் துணைவியாக இருப்பாள். அவளது கரத்தை உனது கையினால் பற்றிக் கொள் என்றும், இவளோடு சிறந்து வாழ். உனக்கு மங்களம் உண்டாகட்டும். உன்னை கணவனாக பெற்றதால் அவள் பாக்கியவதியாகிறாள். உனது நிழல் போல எக்காலமும் உன்னை தொடர்ந்து வருவாள். ஒரு கணம் கூட உன்னை பிரிந்திருக்கமாட்டாள். நீயே கதி என பேரன்புடன் இருப்பாள், என்று உறுதிமொழி அளித்தார்.

பின்பு அவரே மந்திரங்களை ஓதினார். தன் கையில் இருந்த புனித தீர்த்தத்தை ராமனின் கரத்தில் தெளித்தார். அப்போது தேவலோகத்திலிருந்து முரசு சத்தம் கேட்டது. தேவர்களும், முனிவர்களும் வானுலகிலிருந்து பூமழை பொழிந்தனர். இறைவனுக்கே திருமணம் நடக்கும்போது தேவர்கள் மனதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவா வேண்டும்! அதேநேரம் இந்த உலகில் உள்ள கெட்டவர்களின் உள்ளங்களில் இனம்புரியாத நடுக்கம் ஏற்பட்டது. அது ஏன் என அவர்களால் உணரமுடியவில்லை. உலகில் உள்ள நல்லவர்களுக்கு மட்டுமே ராமனின் திருமணக் காட்சி தரிசனம் கிடைத்துக் கொண்டிருந்தது. பிறகு ஜனகர் லட்சுமணனின் அருகில் வந்தார். தன் மகள் ஊர்மிளாவை அவனுக்கு தாரை வார்த்துக் கொடுத்தார். இதையடுத்து தன் தம்பி பெண்களையும் தன் பெண்களாக பாவித்து, மாண்டவியை பரதனுக்கும், சுருதகீர்த்தியை சத்ருக்கனனுக்கும் திருமணம் செய்து கொடுத்தார். நான்கு தம்பதிகளும் அக்னியை வலம் வந்தனர். ஜனகரையும், தசரதரையும் விழாவிற்கு வந்திருந்த மற்ற முனிவர்களையும் வணங்கினர். அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றனர். சாஸ்திரவிதி சற்றும் தவறாமல் இந்த திருமணம் நடந்தேறியது. இவ்விடத்தில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். சாஸ்திரவிதிகள் தவறாமல் நடந்தாலும், மனிதனாகப் பிறந்துவிட்டால் அவன் துன்பத்திற்கு ஆட்பட்டே ஆக வேண்டும் என்பதை இந்த திருமணக்காட்சி விளக்குகிறது. தெய்வத்தின் திருமணமாக இருந்தாலும், தெய்வம் மனிதனாக அவதரித்திருப்பதால் பின்னால் படப்போகும் கஷ்டங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவில்லை. இந்த திருமணத்திற்காக பொருத்தம் பார்க்கப்பட்டது. அனைத்தும் நல்லவிதமாகவே நிறைவேறியது. இருப்பினும் கூட ராமனும், லட்சுமணனும் அவர்களது மனைவியரை பிரிய நேர்ந்தது. ஜோதிடம் பார்த்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்பவர்கள்கூட பிரிந்து போய்விடுவதன் தத்துவம் இதுதான். மனிதத் திருமணங்கள் கருத்து வேறுபாடின்றியோ, பிரிவினை இன்றியோ அமையாது.

இதன்பிறகு விசுவாமித்திரர் தசரதரிடமும், ஜனகரிடமும் விடைப்பெற்றார். தன் பணி முடிந்த மகிழ்ச்சியுடன் இமயமலைக்கு தவம் இருக்கச் சென்றார். ஜனகர் தம் புதல்விகளுக்கு தகுந்த சீர்வரிசை அளித்து அயோத்திக்கு மணமக்களை அனுப்பி வைத்தார். செல்லும் வழியிலேயே ராமபிரானுக்கு கடும் சோதனை ஏற்பட்டது. திடீரென பேய்க்காற்று வீசியது. பறவைகள் அங்குமிங்கும் பறந்து திரிந்தன. அவை பயந்துபோய் கீச்சிட்டன. பலமான்கள் அங்குமிங்கும் பாய்ந்து ஓடின. இயற்கையின் சீற்றமோ என அனைவரும் கருதினர். ஆனால் அவர்கள் நடந்து கொண்டிருந்த அந்த இரவு வேளையிலும் அதி பயங்கர இருட்டில் ஒரு முனிவர் தோன்றினார். இருளிலும் அவர் ஒளிர்ந்தார். அவர்தான் ஜமதக்னி முனிவரின் மகன் பரசுராமர். அவர் ஜடாமுடி தரித்தவர். அவரது கண்கள் கோவைப்பழம் போல சிவந்திருந்தன. அவரது நோக்கமே அரச குலத்தினரை அழிப்பதுதான். ராமனுடன் வந்த முனிவர்கள் எல்லாம் பரசுராமரை வணங்கினார்கள். ஆனால் அந்த வணக்கத்தை பரசுராமர் ஏற்றுக் கொள்ளவில்லை. பரசுராமர், ராமசகோதரர்களை வழிமறிக்க காரணமும் இருந்தது. இவரது தந்தை ஜமதக்னியை அரசன் ஒருவன் கொன்றுவிட்டான். எனவே, இந்த உலகில் அரசகுலமே இருக்கக்கூடாது என பரசுராமர் சபதமிட்டிருந்தார். ஏராளமான அரசர்களை கொன்றும் குவித்தார். இப்போது தசரதர், மற்றும் அவரது நான்கு இளவரசர்கள் கண்ணில்பட்டு விட்டதால் அவர்களையும் அழிக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது. அவர் ராமரைப் பார்த்து கோபத்துடன் பேச ஆரம்பித்தார்.


அருள் மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோவில்

அருள் மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோவில்
 



மூலவர் :  சித்திரரத வல்லபபெருமாள்

தாயார் :  ஸ்ரீதேவி, பூமிதேவி
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
ஊர் : குருவித்துறை, சோழவந்தான்
மாவட்டம் : மதுரை
மாநிலம் : தமிழ்நாடு
 
திருவிழா:வைகுண்ட ஏகாதசி, குருபெயர்ச்சி   
       
தல சிறப்பு:இங்கு குருபகவான், சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றனர். இங்கு பெருமாள் தாயார்களுடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக காட்சி தருவது விசேஷமான அம்சம். இத்தலத்தில் நவக்கிரகத்தில் வியாழன் கிரகம் யோக குருவாக அருள்பாலிக்கிறார்.   
       
திறக்கும் நேரம்:காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:அருள்மிகு சித்திர ரத வல்லபபெருமாள் கோயில், குருவித்துறை - 625 207 வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான்வழி, மதுரை மாவட்டம்.போன்:+91 94439 61948, 97902 95795   
      
பொது தகவல்:சித்திரை நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் இவர்கள், ஊர் சுற்றுவதில் மிகவும் விருப்பம் கொண்டவர்கள். கல்வி கேள்வியில் சிறந்து விளங்குவர். தைரியம் நெஞ்சில் நிறைந்திருக்கும். எதிரியையும் நேசிக்கும் பரந்த உள்ளம் கொண்டவர்கள். பிறருடைய குணம் அறிந்து செயல்பட்டு தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்வர். வியாழன் (குரு) தன் மகனுக்காக வைகை நதிக்கரையில் துறை அமைத்து நாராயணனை நோக்கி தவம் செய்ததால் இந்த இடம் குருவி(ன்)த்துறை ஆனது.குருவின் தவத்தால் மகிழ்ந்த நாராயணனும் சித்திர வேலைப்பாடுடன் அமைந்த தேரில் வியாழ பகவானுக்கு காட்சி தந்து, கசனை மீட்டு தந்தார். இதனாலேயே இங்குள்ள இறைவன் சித்திர ரத வல்லப பெருமாள் என அழைக்கப்படுகிறார்.   
       
 பிரார்த்தனை:சித்திரை நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர்.வியாழனே இங்கு வந்து தவம் செய்த தலம் என்பதால், குரு(வியாழன்) தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு பரிகாரம் செய்தால் தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.வியாழன் பார்க்க விரைந்திடும் திருமணம் என்றும், புண்ணிய குரு பார்க்க புத்திர பாக்கியம் கிட்டும் என்றும் இங்கு வந்து பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.

நேர்த்திக்கடன்:பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.  
      
தலபெருமை:நமக்கு குருபெயர்ச்சி பாதிப்பு என்றால் குரு (வியாழன்)விடம் சென்று முறையிடுவோம். அந்த குருவுக்கே பாதிப்பு என்றால் யாரிடம் போய் முறையிடுவார். குருபகவானும் தன் மகன் கசனுக்காக உலக நாயகன் நாராயணனை நோக்கி தவம் செய்த இடம் தான் குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள்கோயிலாகும்.உலகில் வியாழ பகவானே நாராயணனை நோக்கி தவம் செய்யும் இடம் இந்த திருத்தலம் என்றும் வியாழன் சுயம்புவாக தவக்கோலத்தில் வீற்றிருப்பதும் இங்குதான் என நம்பப்படுகிறது. 12 ஆழ்வார்களின் சிலைகள் ஒன்று சேர்ந்து அமைந்துள்ளது. சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.   
       
தல வரலாறு:முன்னொரு காலத்தில் நடந்த தேவாசுர போரில், ஏராளமான அசுரர்கள் மாண்டனர். அவர்களை, அசுர குரு சுக்கிராச்சாரியார் ம்ருதசஞ்சீவினி மந்திரம் மூலம் உயிர் பெறச்செய்தார். அந்த மந்திரத்தை கற்றுக்கொள்ள விரும்பிய தேவர்கள், தங்கள் குருவான பிரகஸ்பதியின் (குரு) மகன் கசனை அழைத்து, அசுர குருவிடம் சென்று மருதசஞ்சீவினி மந்திரத்தை உபதேசம் பெற்று வா, என்றார்கள். கசனும் தன் தந்தை வியாழபகவான் ஆசியுடன் அசுரலோகம் சென்றான். அவனை அசுரகுரு சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி ஒரு தலையாகக் காதலித்தாள். அவள் மூலமாக சுக்ராச்சாரியாரிடம் இருந்து கசன் மந்திரம் கற்றுக் கொண்டான். இதையறிந்த அசுரர்கள் கசன் உயிரோடு இருந்தால் அசுரர்குலத்திற்கு ஆபத்து வந்துவிடும் என நினைத்து , அவனைக் கொன்று சாம்பலாக்கினர்.
அசுரகுரு அறியாமலேயே அவர் குடிக்கும் பானத்தில் கலக்கி கொடுத்து விட்டனர். கசனைக் காணாத தேவயானி, தன் தந்தையிடம், கசனின் இருப்பிடத்தை கண்டறியும் படி வேண்டினாள். அசுரகுரு தன் ஞான திருஷ்டியால் கசன் தன் வயிற்றில் இருப்பதை அறிந்து, ம்ருதசஞ்சீவினி மந்திரம் மூலம் கசனை உயிர் பெறச் செய்தார். அவரது வயிற்றைக் கிழித்துக் கொண்டு கசன் வெளிவந்ததால், சுக்ராச்சாரியார் இறந்து விட்டார். தன்னைக் காப்பாற்றிய அசுரகுரு இறந்து கிடப்பதைக் கண்டு தான் அவரிடம் கற்ற மந்திரம் மூலம் அவரை உயிர்பெறச் செய்தான். சுக்ராச்சாரியார் தன் மகள் தேவயாணியை மணம் முடித்து செல்ல வேண்டும் என்று கூற, அதற்கு கசன், உங்கள் வயிற்றிலிருந்து மீண்டு வந்துள் ளதால் தேவயானி எனக்கு சகோதரி முறை வேண்டும், என பக்குவமாகக் கூறி தேவலோகம் கிளம்பினான். கடும்கோபம் கொண்ட தேவயானி, கசனை ஏழு மலைகளால் தடுத்து நிறுத்தி அசுரலோகத்திலேயே தங்க வைத்தாள். கசனைக் காணாத பிரகஸ்பதி, மகனை மீட்டுத்தரும்படி இத்தலத்து பெருமாளை வேண்டி தவமிருந்தார். பெருமாள், சககரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டார். பின்பு பிரகஸ்பதியின் வேண்டுதலுக்கு இணங்கி இங்கேயே எழுந்தருளினார்.

சிறப்பம்சம்: குரு பகவானாகிய பிரகஸ்பதிக்கு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று ஒரு சித்திரத் தேரில் எழுந்தருளி காட்சி தந்தார். எனவே தான் இத்தலம் சித்திரை நட்சத்திரத்திற்குரிய கோயிலாக விளங்குகிறது.இங்குள்ள சித்திர ரத வல்லபபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக காட்சி தருவது விசேஷமான அம்சம். கோயிலுக்கு எதிரே குருபகவான், சக்கரத்தாழ்வாருடன் சுயம்பு வடிவில் இருக்கிறார்.

அருள் மிகு கிருபாகூபாரேச்வரர் திருக்கோவில்

அருள் மிகு கிருபாகூபாரேச்வரர் திருக்கோவில்
 



மூலவர் : கிருபாகூபாரேச்வரர்
அம்மன் : அன்னபூரணி
தல விருட்சம் : வில்வம்
ஆகமம் பூஜை : காரண ஆகமம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : கோபுரி
ஊர் : கோமல்
மாநிலம்:தமிழ்நாடு

திருவிழா:மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, திருக்கார்த்திகை.     
            
தல சிறப்பு:இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.     
            
திறக்கும் நேரம்:காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.    
முகவரி:அருள்மிகு கிருபாகூபாரேச்வரர் திருக்கோயில் கோமல்-609 805 குத்தாலம் தாலுக்கா, நாகப்பட்டினம்.போன்:+91 95002 84866    
           
பொது தகவல்:அஸ்தம் நட்சத்திரக்காரர்களின் பொதுகுணம்: ஆடை, ஆபரணங்களில் பிரியம் கொண்டவர்கள். கல்வியில் ஆர்வம் காட்டுவர். நாட்டியம், சங்கீதம் போன்ற கலைகளில் ரசிகத்தன்மை இருக்கும். வாயடித்தனமாகவும், விகடமாகவும் பேசும் இயல்பு கொண்டவர்கள். யாரிடமும் தானாக வலியச் சென்று பழகும் இவர்கள், தாயாரின் மீது அலாதி அன்பு கொண்டிருப்பர். பார்வதி பசுவாக மாறி இங்கு வழிபாடு செய்ததால் இத்தலம் கோபுரி என்றும் கோமல் என்றும் வழங்கப்படுகிறது. கோயில் பிரகாரத்தில் விநாயகர், முருகன், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, நந்தி, சண்டிகேஸ்வரர் அருளுகின்றனர்.

பிரார்த்தனை:அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு அதிக அளவில் பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற பசு, கன்றுடன் இக்கோயிலை வலம்வந்து வணங்குகிறார்கள்.    
           
தலபெருமை:அஸ்தம் நட்சத்திர தலம்: அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது அஸ்தம் நட்சத்திர நாளிலோ இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.  கிருபா கூபாரேச்வரர் எத்தகைய தவறுக்கும் மன்னிப்பு தரக்கூடியவர். சித்தர் களும், முனிவர்களும், மகான்களும் அஸ்த நட்சத்திர நாளில் அரூப வடிவில் இத்தல இறைவனை கைகூப்பி வணங்கிய நிலையில் வலம் வருவதாக ஐதீகம். அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கொழுக்கட்டை, வடை, லட்டு நைவேத்யம் செய்து, கிருபா கூபாரேச்வரரையும், அன்னபூரணியையும் அஸ்த நட்சத்திர நாளில் கரங்கள் கூப்பியபடி வலம் வந்தால் இறைவனின் பரிபூரண அருளைப்பெறலாம். கலங்கிய மனமுள்ளவர்களும், நல்வாழ்க்கை அமைய ஏங்குபவர்களும் திங்கள், புதன் கிழமைகளில் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.     
            
தல வரலாறு:சிவபெருமான் இந்த உலகத்தை எப்படி இயக்குகிறார் என்பதை அறிய பார்வதிதேவி விரும்பினாள். இதுபற்றி அவரிடமே கேட்டாள். அப்போது, சிவன் ஒரு திருவிளையாடல் செய்தார். பார்வதி தன்னை மறந்து விளையாட்டாக தனது கண்களை பொத்தும்படி செய்தார். அந்த நொடியில் உலக இயக்கம் நின்று போனது. இதைக்கண்டு அதிர்ந்து போன பார்வதி, தன்னால் நிகழ்ந்த இந்த தவறுக்கு சிவனிடம் மன்னிப்பு கோரினாள். அதற்கு சிவன், உன் கரத்தினால் என் கண்ணைப் பொத்தி இந்த பிரபஞ்சத்தை இருளாக்கினாய்.இப்போது என் கரத்தில் இருந்து தோன்றும் ஹஸ்தாவர்ண ஜோதியில் நான் மறையப்போகிறேன். நீ பசுவாக மாறி இந்த ஜோதி இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து என்னை வந்து சேர்வாய்,என கூறி மறைந்தார். சிவனைக்காணாத பார்வதி, அவரது ஆணைப் படி பசு உருவம் கொண்டு, தன் சகோதரரான திருமாலுடன், சிவஜோதியைத் தேடி பூமியெங்கும் வலம் வந்தாள். பார்வதி மீது கிருபை கொண்டார் சிவன். ஒரு அஸ்த நட்சத்திர நாளில், ஹஸ்தாவர்ண ஜோதி தோன்றியது. இதை கோமளீய ஜோதி என்றும் சொல்வர். பார்வதி மனம் மகிழ்ந்து அந்த ஜோதியுடன் ஐக்கியமானாள். பார்வதிக்கு கிருபை செய்த, இந்த சம்பவத்தின் அடிப்படையில் கோமலில் ஒரு கோயில் எழுப்பப்பட்டது. கிருபை செய்த சிவனுக்கு, கிருபா கூபாரேச்வரர் என்ற பெயர் சூட்டப்பட்டது. அம்பாளுக்கு அன்னபூரணி என பெயர்.     

சனி, 28 நவம்பர், 2020

ராமாயணம் பகுதி ஆறு

ராமாயணம் பகுதி ஆறு

மகிழ்ச்சிக்கடலில் அவள் மூழ்கிப்போனாள். பிறகென்ன! உலகைக் காக்கும் பரம்பொருள் மானிட அவதாரம் எடுத்துள்ளார். அன்னை மகாலட்சுமி சீதையாக பூமிக்கு வந்திருக்கிறாள். மகாலட்சுமி இருக்கும் இடத்தில் செல்வவளத்துக்கு குறைவில்லை. அந்த செல்வநாயகியை அடையப் போகிறவர் மகாவிஷ்ணு. இருவரும் இணைந்து விட்டால், இந்த உலகமும் சுபிட்சம் பெறத்தானே போகிறது!விஸ்வாமித்திரர் திருமணப் பேச்சை துவக்கினார். ஜனகராஜா! பிறகென்ன! உனக்கு மருமகன் கிட்டிவிட்டான். எவராலும் அசைக்கக்கூட முடியாத சிவதனுசை என் சீடன் உடைத்தே போட்டு விட்டான் என்றால், நீ அவனது பராக்கிரமத்தை உணர்ந்திருப்பாய் என்றே கருதுகிறேன்,.அதிலென்ன சந்தேகம் முனிவரே! எனது தூதர்களை இப்போதே அயோத்திக்கு அனுப்பி தசரத மாமன்னரை அழைத்து வரச் சொல்கிறேன். மாப்பிள்ளை வீட்டார் பெண்ணைப் பார்க்க வேண்டும் என்ற சம்பிரதாயம் இருக்கிறதே! மாப்பிள்ளையின் பெற்றோர் சம்மதமும் முறைப்படி பெற வேண்டுமல்லவா? என்றார் ஜனகர். அதன்படியே தூதர்கள் அயோத்தி சென்றனர். மதிலையில் நடந்த விபரங்களை வரிவிடாமல் விபரமாக தசரதரிடம் கூறினர். தன் மகன்கள் விஸ்வாமித்திரரின் யாகத்தை வெற்றிகரமாக நடத்தியது கேட்டும், அரக்கியும், அரக்கர்களும் அழிந்து பட்டதைக் கேட்டும், இவற்றையெல்லாம் விட சிவதனுசுவை ஒடித்து, மகாலட்சுமிக்கு நிகரான சீதையை மணம் முடிக்க இருப்பது கேட்டும் தசரதரும், ராணிகளும் அடைந்த இன்பத்திற்கு அளவே இல்லை. அயோத்தி மக்களிடமும் இந்த செய்தி வேகமாக பரவ, நாடே கோலாகலத்தில் ஆழ்ந்தது. விஸ்வாமித்திரர் காரணமாகத்தான் தன் மக்களை காட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் என்பதையும் தசரதர் புரிந்து கொண்டார். உடனடியாக படை பரிவாரங்கள் மணமகளுக்குரிய நகை, சீர்வரிசையுடன் மிதிலை நோக்கி புறப்பட்டது. இதற்கிடையே மிதிலையில் மற்றொரு திருமணப் பேச்சும் எழுந்தது.

மகரிஷியே! என் மகள் சீதைக்கு தங்கமகன் ராமன் கிடைத்து விட்டார். அதே போல், என் அன்புப்புதல்வி ஊர்மிளாவுக்கும் மாப்பிள்ளை வேண்டும். ராமனுடன் வந்துள்ளாரே இளவல் லட்சுமணன். அவர் மட்டும் சாதாரணமானவரா? அண்ணனுக்கேற்ற தம்பி. அண்ணனின் நல்வாழ்வுக்காகவே தன்னை அர்ப்பணித்தவர். இப்படிப்பட்ட பாசப்பிணைப்புள்ள குடும்பத்தில், இந்த அன்புச்சகோதரிகளும் இருந்தால், இறுதிவரை குடும்ப ஒற்றுமை நிலைத்திருக்குமே! லட்சுமணனுக்கு ஊர்மிளாவைத் திருமணம் செய்து வைத்து விடுவோமே,. ஜனகர் இவ்வாறு சொல்லவும், விஸ்வாமித்திரர் மகிழ்வுடன் சம்மதித்தார். ராமனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. சம்சாரம் கூட ஒரே வீட்டிலிருந்து கிடைக்கிறது என்றால், எங்கள் ஒற்றுமையை பிரிக்க எவரால் இயலும், என இரும்பூது எய்தினார். நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் ஜரூராக நடந்து முடியவும், தசரதர் மிதிலைக்கு வரவும் சரியாக இருந்தது. தங்கள் நாட்டு இளவரசியை மணம்பேசி முடிக்க பக்கத்து நாட்டு ராஜா வருகிறார் என்றால் மிதிலைமக்கள் சும்மாவா இருப்பார்கள். எங்கும் இதே பேச்சு. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான். சம்பந்தி தசரதரை வரவேற்றார் ஜனகர். பரதன், சத்ருக்கனன், தசரதரின் தேவியர் உள்ளிட்டோர் வந்திருந்தனர். இவர்களோடு வந்திருந்த வசிஷ்டமாமுனிவர், திருமணப்பேச்சை ஆரம்பித்தார். ஜனகா! உன் புத்திரியை மணக்கப்போகும் எங்கள் ராமனின் குலப்பெருமையைக் கேள். பிரம்மாவின் மகன் மரீசி. அவருக்கு ஒரு மகன்; அவர் தான் காஷ்யப முனிவர். இவர் பெற்ற மகன் சூரியபகவான். சூரியனின் மகன் மனு.மனுவின் உத்தமபுத்திரன் இக்ஷ்வாகு.  இவரைத் தொடர்ந்து, திரிசங்கு, மாந்தாதா, திலீபன், பகீரதன், ரகு, அம்பரீஷன், யயாதி, அஜன் ஆகியோர் பிறந்தனர். இந்த வரிசையில் வந்தவர் தான் எங்கள் தசரத மகாராஜா. உலகைப் படைக்கும் பிரம்மனின் மரபில் வந்த தசரதர் நான்கு திருக்குமாரர்களைப் பெற்றெடுத்தார். அவர்களில் மூத்தகுமாரருக்கு தங்கள் மகள் சீதையையும், இரண்டாமவருக்கு இரண்டாம் மகள் ஊர்மிளாவையும் பெண் கேட்கிறோம். உன் சம்மதம் முறைப்படி தேவை,.

ஜனகர் மகிழ்ச்சியுடன் சம்மதித்து, தசரதரே! தாங்கள் உங்கள் குலப்பெருமையை வசிஷ்டர் வாயிலாகச் சொன்னீர்கள். எங்கள் குலப் பெருமையையும் தாங்கள் அறிய வேண்டும். நிகேது, சுமி, மகாவீரன் ஆகிய பெரியவர்களின் வரிசையில் அவதரித்தவர் தான் ஹரஸ்வரோமன். அவர் இரு குமாரர்களை ஈன்றெடுத்தார். மூத்தவன் இந்த ஜனகன். இரண்டாமவன் என் தம்பி குசத்வஜன். அவனுக்கும் என்னைப் போலவே இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் மாண்டவி, சுருதகீர்த்தி. இவர்களுக்கும் மணமகன்களை தேடிக் கொண்டிருக்கிறோம், என்றே நிறுத்தினார். விஸ்வாமித்திரர் இப்போது தொடர்ந்தார். ஜனகா! இதில் உனக்கோ, உன் தம்பி குசத்வஜனுக்கோ எந்தக் கவலையும் வேண்டாம். தாய்மார்கள் வேறென்றாலும் கூட தசரதரின் மகன்கள் தான் பரதனும், சத்ருக்கனனும். அண்ணன் புதல்விகள் வாழும் வீட்டிற்கே தம்பி புதல்விகளும் செல்வது தான் முறை. இந்த அன்புச்சகோதரர்களை இங்கிருக்கும் அன்புச்சகோதரிகள் ஆளட்டுமே, என்று கூறி சிரித்தார். ஜனகருக்கு புரிந்து விட்டது. ஆஹா! பாக்கியம் செய்தோம் நானும் என் தம்பியும். மாண்டவியும், சுருதகீர்த்தியும் என்னைப் பொறுத்தவரை  தம்பி மக்களல்ல. என் மக்கள் தான். சீதைக்கும், ஊர்மிளாவுக்கும் இங்கு என்ன உரிமைகள் உண்டோ அதே உரிமை அவர்களுக்கும் உண்டு. என் தம்பி புதல்விகளை பரதனுக்கும், சத்ருக்கனனுக்கும் மணம் முடிக்க சம்மதிக்கிறேன்,. ஜனகர் இவ்வாறு சொல்லவும், தசதரரும் அவரது மனைவியரும் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. ஒரு திருமணப் பேச்சுக்காக வந்தவர்கள், நான்கு திருமணப் பேச்சை முடித்து விட்டனர்.