வியாழன், 28 மே, 2020

*லிங்க புராணம் ~ பகுதி — 02*

        அஷ்டாங்க யோகம்
=======================

ஈசன் திருவருளால் தெளிந்த ஞானத்தைப் பெற்று., அதனால் யோகத்தைக் கடைப்பிடித்தால் பிறவாப் பேரின்பமாகிய முக்தி கிட்டும். ஈசன் சனகாதி முனிவர்களுக்கு கூறிய யோக சாரம் ஜனகர்., அத்திரி., வியாசர்., முதலியோரால் உலகில் பிரசித்தமாயிற்று.

01. *பிரம்மச்சரியம்* : பற்றின்றி இருத்தல் இயமம். இது உண்மை பேசுவதாலும் ஒழுக்கம் வழுவாமையாலும் பற்றற்ற தன்மையாலும் ஏற்படும். மனம்., வாக்கு., காயம் (உடம்பு) இந்த மூன்றாலும் பெண்களைத் தீண்டாது இருப்பது பிரம்மச்சரிய நெறி. தூய்மையாக இல்லறத்தை நடத்துவதும் பிரம்மச்சரிய நெறியைச் சேர்ந்ததே. வானப்பிரஸ்த ஆசிரமம் கடைபிடிப்போர் முற்றும் துறந்த சந்நியாசிகள்., மனைவியருடன் காட்டில் உறைவர்.

02. *நியமம்* :  பற்றற்று இருக்குமாறு உள்ளத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது நியமம். இதன் மூலம் மகிழ்ச்சி., சவுசம்., தவம்., ஜபம்., சிவ பிரணிதானம் ஆகியவற்றை அடையலாம். ஆசையின்மை என்ற மண்ணால்., ஞான நீரில் உள்ளத்தை நீராட்டித் தூய்மை செய்தல் அகச்சவுசம் எனப்படும். புனித நீராடி., திருநீறு அணிதல் புறச்சவுசமாகும். தவம் என்பது சாந்திராயண விரதம் அனுஷ்டிப்பதாகும். அதாவது., அமாவாஸை அன்று உபவாசம் இருந்து மறுநாள் முதல் நாள் ஒரு கவளம்., இரண்டாம் நாள் இரண்டு கவளம்., என்று கூட்டிக் கொண்டே சென்று பௌா்ணமி அன்று மறுபடியும் உபவாசம் இருக்க வேண்டும். பின்னர் பௌா்ணமிக்கு பிறகு பிரதமை அன்று 14 கவளம் உண்டு பின்பு நாளொன்றுக்கு ஒரு கவளமாக குறைத்துக் கொண்டே வந்து அமாவாஸை தினம் திரும்பவும் உபவாசம் இருக்க வேண்டும். மறை நெறிகளில் நின்று ஆசிரம நிலைகளுக்கு ஏற்ப இருப்பது மகிழ்ச்சியாகும். ஈசனைத் தியானித்தல் சிவப்பிரணிதானம் ஆகும்.

03. ஆசனம் : யோக நிலைக்கான அங்கங்களில் ஆசனமும் ஒன்று. அது பத்மாசனம் போன்ற பல..... அவற்றில் ஒன்றைக் கடைபிடிக்க வேண்டும்.

04. *பிராணாயாமம்* : ஏதேனும் ஒரு பொருத்தமான ஆசனத்தில் அமர்ந்து பிராணாயாமம் செய்ய வேண்டும். அது மூன்று வகை. பிராணாயாமம் செய்யும் போது வியர்வை தோன்றினால் அதமம்., மனதில் சஞ்சலம் இருந்தால் மத்திமம்., சிந்தையில் மகிழ்ச்சி ஏற்படின் உத்தமம். ரேதஸ் மேல் நோக்கி எழும் மந்திரம் ஜபித்துப் பிராணாயாமம் செய்வது சகற்பம் என்றும்., இன்றி செய்வது விகற்பம் என்றும் பெயர் பெறும். நம் உடலில் பத்து வித வாயுக்கள் உள்ளன....
அவை.....

04.a) உயிருக்கு அத்தியாவசியமானதால் இதயத்தில் தங்குவது *பிராண வாயு.*

04.b) கீழ்நோக்கிப் பிரிவது *அபான வாயு.*

04.c) உடலெங்கும் நிறைந்து இரத்த ஒட்டம்., சீரணமான உணவு உடலில் பரவ உதவுவது *வியான வாயு.*

04.d) உறுப்புகளின் சந்திகளில் தங்குவது *உதான வாயு.*

04.e) உடலைச் சமனப்படுத்தவது *சமன வாயு.*

04.f) விக்கல்., கக்கல் ஏற்படக் காரணமானது *கூர்ம வாயு.*

04.g) தும்மலை உண்டாக்குவது *கிரிகா வாயு.*

04.h) கொட்டாவிக்கு உதவுவது *தேவதத்த வாயு.*

04.i) உடலை வீங்கச் செய்வது *தனஞ்செய வாயு.*

04.j.) பாடுதல்., கண் சிமிட்டல்., மயிர்க் கூச்சலுக்கு உதவுவது *நாகன் வாயு.*

இந்தப் பத்து வித வாயுக்களையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளல் மிகவும் அவசியம்.

05. *பிரத்தியாகாரம்* : இச்சைகளினால் பாதிக்கப்படும் ஐம்புலன்களைத் தடுத்து நிறுத்துவது இது.

06. *தாரணை* : புலன்களை அடக்கி மனதில் தெளிவை ஏற்படுத்தி ஒரு நிலையில் நிறுத்துவது.

7. *தியானம்* : ஆதியந்தமில்லாப் பரம்பொருளை மனக்கண்முன் நிறுத்தி நிலைப்பது தியானம் ஆகும்.

08. *சமாதி* : ஈசனைத் தியானித்து மனம் உருகி மெய்மறந்த நிலையில் இருப்பது சமாதி ஆகும்.

இந்த எட்டும் யோகமும் அங்கங்கள் ஆகும்.

யோகம் கடைப்பிடிக்கும் போது பல இடையூறுகள் ஏற்படும். அவை... *நோய்., ஐயுறல்., சிரத்தையின்மை., பிரமாதம்., விஷயங்களில் இச்சை., துன்பம்., அப்பிரதிஷ்டை., பிராநிதி தரினம்* என்று கூறப்படும்., ஆதிதெய்வீகம்., ஆதிபௌதிகம்., ஆத்யாத்மிக துக்கங்கள் என்பன. இவையன்றி குறிப்பாக உணரக்கூடிய உபசருக்கம் ஆறு உள்ளன. அவை முறையே பிரதிபை., தேவதரிசனம்., சிரவணம்., வார்த்தை., சுவாதம்., ரசனை ஆகும். மேலும் பஞ்சபூதத்தின் குணங்கள்., பிரம்மத்தின் குணங்கள் என்று பல குணங்களும் விளக்கப்பட்டன. யோகியானவ(ள்)ன் தன் முயற்சிக்கு ஏற்படும் இடையூறுகளை நன்குணர்ந்து அவற்றை விலக்கி., எம்பெருமான் திருவடிகளை சேவித்தால் அவர் அருளைப் பெற்று முக்தி அடைவா(ள்)ன்.

யோகத்தைக் கடைப்பிடித்து ஈசன் அருள் பெறலாம். அதுமட்டுமின்றி நல்லறத்தைக் கடைபிடித்து அவ்வழி நின்றோர்க்கும் ஈசன் அருள் கிட்டும். ஒரு சமயம் பார்வதி தேவி சிவபெருமானிடம்., எந்த வழியில் வழிபட்டால் அவரது அருள் கிடைக்கும் என்று கேட்டார். ஒரு சமயம் பிரம்மனிடம் தான் கூறியதைப் பார்வதிக்கு எடுத்துரைத்தார். மஹாமேரு முதல் மாந்தர்கள் வரை எவராக இருந்தாலும் உள்ளம் கனிந்து மனமுருகி என்னிடம் செலுத்தும் பக்திக்கு நான் அருள் செய்வேன் என்றார்.

தொடரும்.....

🕉️ *ஓம் நமச்சிவாய* 🕉️

*தேவமுனி ப்ரவரார்சித லிங்கம்.,*
*காமதஹன கருணாகர லிங்கம் |*
*ராவண தர்ப வினாஸன லிங்கம்.,*
*தத்-ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் ||*
*"பசுவும் மாற்றுக் கன்றும்"*

ஒரு பசுமாட்டையும் கன்றையும் ஓட்டிக்கொண்டு வந்து ஸ்ரீமடத்துக்கு சமர்ப்பித்தார் ஒரு பக்தர்.

பெரியவாள் வெளியே வந்து மாடு-கன்றைப் பார்வையிட்டார்கள். பக்தரைப் பார்த்து, "இந்தப் பசு மடத்துக்கு வேண்டாம்" என்று சொன்னார்கள்.

அன்று வெள்ளிக்கிழமை. அந்த நல்ல நாளில் வந்திருக்கும் கோமாதாவை "வேண்டாம் என்கிறார்களே பெரியவாள் என்று மனசுக்குச் சஞ்சலம்.

பெரியவாளிடம் மெல்ல வினயமாகச் சொன்னார் மானேஜர், "இன்னிக்கு வெள்ளிக்கிழமை. பசுமாடு கொண்டு வந்திருப்பவர், ரொம்ப நாளா மடத்து பக்தர், திருப்பி அனுப்பறது நியாயமில்லையோன்னு."

"நீங்க சொல்றது சரிதான் வெள்ளிக்கிழமை அன்னிக்கு ஒரு பக்தர் மனப்பூர்வமாகக் கொடுக்கிற பசுமாடு-கன்றை ஏற்றுக்கொள்வதுதான் நியாயம்.."

மானேஜருக்கு கொஞ்சம் தெம்பு வந்தது.

"ஆனால், இந்தக் கன்றுக்கு, இந்த மாடு தாய் இல்லை"

எப்படி? எப்படி?

"பாருங்கோ.. கன்னுக்குட்டி, பசுமாடுகிட்டே போய் ஒட்டிக்க மாட்டேங்கிறது. பசுமாடு கன்னுக்குட்டியை நக்கிக் கொடுக்கல்லே... தங்கிட்ட சேர்த்துக் கொள்ளல்லே...."

"ஆமாம்...ஆமாம் கன்றுக்குட்டி, நாலு அடி தள்ளி சிவனே'என்று நிற்கிறது.

பக்தர் மாடு வாங்கிய இடத்திற்குப் போய் விசாரித்தார். மாட்டு வியாபாரி உண்மையை ஒப்புக்கொண்டார். ஒரு கன்றின் தாய் இறந்து விட்டது; ஒரு மாட்டின் கன்று இறந்து விட்டது. இந்தக் கன்றையும் அந்தத் தாயையும் சேர்த்துவிட்டார் மாட்டு வியாபாரி.

குறைகளில்லாத வேறொரு பசு-கன்றை ஓட்டிக் கொண்டு வந்தார் பக்தர்.

பெரியவாள் மாட்டைச் சொறிந்து கொடுத்து, பசு, கன்றை வலம் வந்து ஏற்றுக்கொண்டார்கள்.

மனித இயல்புகள் பெரியவாளுக்குத் தெரியும் என்றால் ஆச்சரியமில்லை. மாட்டு இயல்புகளை எந்த கால்நடைக் கல்லூரியில் கற்றுத் தேறினார்கள்.?

ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர.
எது தானம்? எது தர்மம்?

மகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனுடன் பரம்பொருள் ஈசனை வணங்கி மகிழ்ந்து சுவர்க்க பேறு பெற்றது. சூரிய தேவனுக்கோ மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை. எவரிடம் கேட்பது.? எவர் தெளிவாகக் கூறுவார்கள் ? குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது.

இதை உணர்ந்த ஈசன், அவர் முன் எழுந்தருளினார். சூரியனே, என்ன தடுமாற்றம் உன் மனதில் ? என ஈசன் கேட்க,
பரம்பொருளே! இல்லை என கூறாமல் சகல விதமான தான தருமங்களையும் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணனை போரில் கொன்றது விதி என்று ஏற்றுக் கொண்டேன். ஆனால், எல்லா புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே. பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது? இது அநீதி அல்லவா? என கேட்டார் சூரியத் தேவன்.

சிரித்துக்கொண்டே ஈசன், சூரியனே, நிறைய மனிதர்களுக்குள் ஏற்படும் சலனமே உன்னை இந்தக் கேள்வியை எழுப்ப வைத்ததுள்ளது, சொல்கிறேன் கேள். தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ, அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம். புண்ணியக் கணக்கில் சேராது. ஏனெனில், இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட.

ஆனால், தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.

கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை. எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான். அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. புரிந்ததா ?

இதைக்கேட்ட சூரிய தேவன் " இறைவா! நன்கு புரிந்தது! தானமும் , தர்மமும் , பாவமும் , புண்ணியமும் எல்லாமும் நீயே என்பதை உணர்ந்தேன்!"

ஈசன் சொன்ன விளக்கம் சூரிய தேவனுக்கு மட்டுமல்ல நமக்கும் நன்றாக புரிந்திருக்கும்!

கேட்டு கொடுப்பது தானம்! கேட்காமல் கொடுப்பது தான் தர்மம்!

புதன், 27 மே, 2020

மரப்பாச்சி பொம்மை மகிமை

அந்தக்காலத்தில் வீட்டில் மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமணம் ஆகவில்லை திருமணதடை உள்ளது என்றால் இந்த மரப்பாச்சி பொம்மையை வைத்து பொம்மை கல்யாணம் என்றுசெய்து தெரிந்தவர்களை அழைத்து சாப்பாடு போடுவார்கள் அன்னதானத்தை விட சிறந்த தானம் இல்லை.ஆகையால் பொம்மைக்கல்யாணம் மூலம் அன்னதானம் செய்வதன் பலன் உடனே திருமணம் கை கூடும். அதை அடியேன் பார்த்திருக்கிறேன். சரி திருமணம் ஆகிவிட்டது.பெண்னுக்கு சீர் கொடுக்கும்போது  மரப்பாச்சி பொம்மைகள் வைப்பார்கள். காரணம்
அந்தப்பெண் அந்த பொம்மைகளையே தன் தாய் தந்தையாக நினைத்து அவர்கள் கூட இருப்பதாக உணர்வாள் காரணம் அந்தக்காலத்தில் போட்டோக்கள் கிடையாது. சரி குழந்தை பிறந்துவிட்டது அந்த குழந்தைக்கு ஜலதோஷம் பிடித்தால் மரப்பாச்சி பொம்மையை சந்தணக்கல்லில் வைத்து தேய்த்து அதை தாய்ப்பாலில் குழைத்து விளக்கில் சூடு காட்டி அதை நெற்றியில் பத்து போட்டால் ஜலதோஷம் நீங்கி குழந்தை அயர்ந்து தூங்கும்.பெரியவர்களுக்கு கட்டி வந்தால் கூட இது போல் தேய்த்து கட்டி மேல் தடவுவார்கள். சரி குழந்தை வளர்ந்து பல்லால் கடிக்கும்நிலை வரும் போது பல மருத்துவ குணங்கள் உள்ள பல்வேறு மரங்களால் ஆன மரப்பாச்சியை குழந்தையிடம் விளையாடக்கொடுப்பார்கள்.அதை குழந்தை கடிக்கும் போது அதன் மருத்துவகுணம் உள்ளே சென்று நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.
சரி அடுத்தது இனிமரப்பாச்சி பொம்மையை மற்றவர்களுக்கு பரிசாக
வாங்கிக்கொடுங்கள்.வீட்டில் அலங்காரப்பொருளாக அலமாரியில் வாங்கி வையுங்கள்.


லலிதா ஸகஸ்ரநாமத்தில் கூறும் அம்பிகைக்கு பிடித்த நைவேத்தியங்கள்....

சக்திதேவிக்கு ஆயிரம் திருநாமங்கள் உண்டு. அந்தப் பெயர்களால் அவளை அர்ச்சிக்கும் மந்திரங்கள் அடங்கிய நூலே லலிதா சகஸ்ரநாமம். இந்த நூலிலேயே தேவிக்கு பிடித்த நைவேத்ய வகைகள் சொல்லப்பட்டுள்ளன.

இந்த நூல் தோன்றியதன் பின்னணியில் ஒரு சுவையான வரலாறு இருக்கிறது.

பெருமாளின் அவதாரமாகக் கருதப்படுபவர் ஹயக்கிரீவர். இவர் குதிரை முகம் கொண்டவர். கல்விக்கு அதிபதி. இவரது தரிசனம் ஒருமுறை அகத்திய முனிவருக்கு கிடைத்தது. கல்விக்கதிபதியான அவரை தன் குருவாகவே பார்த்தார் அகத்தியர். அதன் காரணமாக சக்தியின் வரலாற்றை அறிந்தார். சக்திக்கு "லலிதா' என்ற திருநாமம் சூட்டி, அவளது கதையைக் கூறினார் ஹயக்கீரிவர்.

அதைக் கருத்துடன் கேட்டு மகிழ்ந்த அகத்தியர், "குருவே! தாங்கள் எனக்கு லலிதா தேவியின் சரித்திரத்தை மட்டும் கூறினீர்கள். அவளுக்கு ஆயிரம் திருநாமங்கள் இருப்பதாகச் சொல்கிறார்களே! அதையும் சொல்லுங்கள்!' என்றார்.

"அது மிக, மிக ரகசியம். தேவியின் அனுமதியின்றி யாருக்கும் சொல்லக் கூடாது. இருந்தாலும் தேவியின் அதிதீவிர இறைபக்தர்களுக்கு இதைச் சொல்வதில் தவறில்லை!' என்று கூறிய ஹயக்கிரீவர், ஆயிரம் நாமங்களையும் கற்றுக் கொடுத்தார். அதில் வரும் 480வது ஸ்லோகமான, "பாயஸான்ன ப்ரியாயை' என்பதற்கு, "பால் பாயசத்தை விரும்புபவள்' எனப் பொருள்.

501வது ஸ்லோகமான, "குடான்ன ப்ரீத மானஸாயை' என்பதற்கு, "அம்பிகை சர்க்கரைப் பொங்கலை விரும்புபவள்' என்று அர்த்தம்.

526வது ஸ்லோகமான, "ஹரித் ரான்னைக ரஸியை' என்ற ஸ்லோகத்திற்கு, "மஞ்சள் பொடி கலந்த எலுமிச்சை சாதத்தை ரசித்து உண்பவள்' என பொருள் வருகிறது.

அம்பிகை குறித்த இன்னொரு ஸ்லோகமான, "தத்யான்ன ஸக்த ஹ்ருதயாயை' என்ற ஸ்லோகத்திற்கு, "இவள் தயிர் சாதம் என்றால் இதயத்தையே கொடுப்பவள்!' என்று பொருள்.

"முத் கௌத நாஸக்த...' என்ற ஸ்லோகத்திற்கு, "பாசிப்பருப்பு, அரிசியில் சமைத்த வெண்பொங்கலை விரும்புபவள்!' என்று அர்த்தம்.

"ஸர்வெளதன ப்ரீதசித்தா' என்ற ஸ்லோகத்திற்கு, "அம்பிகை கதம்ப சாதம், தேங்காய் சாதம், புளியோதரை ஆகியவற்றை உண்ணும் மனதைக் கொண்டவள்!' எனப் பொருள்.

இதையெல்லாம் முடித்த பிறகு 559வது ஸ்லோகத்தில், "தாம்பூல பூரிதமுகிச்யை' என்ற ஸ்லோகம் வருகிறது. இதற்கு, "தாம்பூலம் தரித்ததால் லட்சணமாக இருக்கும் முகத்தைக் கொண்டவள்!' எனப் பொருள்.

"தாம்பூலம்' என்பது வெற்றிலை, பாக்கைக் குறிக்கும். எனவே தான் கடவுளுக்கு நாம் நிவேதனம் படைத்து வழிபடுகிறோம்.

இதைத்தவிர அவரவருக்கு என்ன நைவேத்யமாக வைத்து பூஜிக்க முடியோமோ அதை வைத்து வணங்கலாம். அம்பாள் நம்மிடம் எதிர்பார்ப்பது உண்மையான, ஆத்மார்த்தமான பக்தியே!

நாமும் நமக்கு தெரிந்த முறையில் அம்பாளை மனதார நினைத்து, துதித்து, தாயின்  அருளை  பெறுவோம்....
#படித்ததில்_நெகிழ்ந்தது

நான் சந்தித்த வித்தியாசமான மனிதர்கள், சம்பவங்கள் ..........

ஒரு நாள், பார்த்த சாரதி கோவிலுக்கு போனேன்.

பக்தி ரசத்தில் அல்ல; ரசம் வைக்க ஈயச்சொம்பும், வத்தக் குழம்புக்கு கல் சட்டியும் வாங்க

கோவிலை ஒட்டிய ஒரு சிறிய சந்தில், வரிசையான, ஸ்ட்ரீட் ஹவுசஸ். எல்லாம் பழைய வீடுகள்.

அந்த தெருவில் ஒரே ஒரு வீட்டில் தான் கல் சட்டி வியாபாரம்.

அந்த தெருவிற்கு போனதும், என்னை முதலில் கவர்ந்தது, ஒரு திண்ணை வைத்த வீடு.

அந்த திண்ணையில் ஒரு மிக வயதான பாட்டி -

உட்கார்ந்த வாக்கில் கை பம்ப் அடிக்கிறார்.

அவர்களை விட சற்றே சிறிய மாமி, குடத்தில் அதை பிடித்து, நாலு படி ஏறி உள்ளே கொண்டு நிரப்புகிறார்.

கல் சட்டி வியாபாரத்தை சட்டென்று முடித்து, சுவாதீன மாக அந்த திண்ணையில் போய் உக்கார்ந்தேன்.

பேச்சுக் கொடுத்தேன்.

இனி எங்கள் உரையாடல் :-

நான்... "பாட்டி, இந்த வயதில், நடமாட்டம் கூட இல்லாத நீங்கள், தண்ணீர் அடிக்கிறீர்கள்?"

பாட்டி : "அதனால் என்னம்மா? நம் வீட்டு வேலை தானே. இதோ எதிர்த்தார்ப் போல் நாராயணன்.. அவன் பார்த்துப்பான். நானா அடிக்கிறேன்; அவன் ன்னா என் கையில் புகுந்து அடிக்கிறான்"

நான் - "பாட்டி, தண்ணீர் பிடித்து நடையாய் நடந்து ரொப்புவது யார்?"

பாட்டி - "அவள் என் சின்ன ஒர்ப்பிடி. அவள் மூலமாகத்தான் நாராயணன் எனக்கு பிடி சாதம் தினமும் தருகிறான்"

நான் - "வேறு யார் யார் இருக்கிறார்கள்?"

பாட்டி - எனக்கு ரொம்ப சின்ன வயதில் கல்யாணமாகி, இந்தாத்துக்கு வந்தேன்.

என் ஆத்துக்காரர், பெருமாளுக்கு சேவை செய்த குருக்கள். இந்த வீடு அப்போ, வாடகை இல்லாமல் கொடுத்தார்கள்.

எனக்கு குழந்தை பிறக்க வில்லை. அதைப் பற்றி எனக்கு வருத்தம் இல்லை.

இவருக்கு கீழ் கடையில் மூன்று தம்பி, மூன்று தங்கைகள்.

எல்லாரும் என் குழந்தைகளாக வளர்த்தேன்.

நிறைய கஷ்டம் தான். ஆனால், அந்த பெருமாள் கோவில் கோபுரத்தை பார்த்தால் எதுவுமே கஷ்டமாக தெரியாது.

எல்லாரும் கல்யாணம் பண்ணி, விட்டுச் சென்றார்கள்.

என் கணவரும் சீக்கிரமே இறக்க, நான் தனித்து விடப்பட்டேன்...

இல்லை இல்லை... நாராயணன் துணை என்னிக்கும் உண்டு.

"எனக்கு இப்போது 87 வயது.

ஒருவருமே என்னை வைத்துக்கொள்ளத பொது, என் கடைசி ஓர்ப்படி, என்னை பார்த்துக் கொள்கிறாள்.

அவளுக்கு ஒரே பெண். காலில் ஊனம். கஷ்டப்பட்டு வேலைக்குப் போய் சம்பாதித்து வருகிறாள்;

கல்யாணம் வேண்டாம் என்று தீர்மானமாக இருக்கிறாள்.

என் ஒர்ப்படிக்கு (சுமார் 20 குடம் உள்ளே கொண்டு கொட்டியவருக்கு) 77 வயது.

நான் திண்ணையிலே தான் வாசம்.

என்னால் முடிந்தது, பகவான் தெம்பு கொடுத்திருக்கும் கையால் தண்ணி அடிப்பது.

சமையல் எல்லாம் ஒர்ப்படிதான்.

எனக்கு ஒரே வேளை, 12 மணிக்கு கொஞ்சம் மோர் சாதம். அவ்வளவு தான் என்னால் சாப்பிட முடியும்.

ராத்திரி ஒண்ணும் சாப்பிட மாட்டேன்"

"எனக்கு என்ன குடுப்பினை பாரும்மா...

நாள் முழுதும், கோவில் தரிசனம். அவன் வந்து அழைத்துப் போவான். அது வரை இப்படியே என் காலம் ஓடும்"

நான் ... "பாட்டி, உங்களுக்கு ஒருத்தரும் செய்ய வில்லை என்ற வருத்தம் இல்லையா ?"

பாட்டி... "கண்ணம்மா.. யார் செய்தா, யார் செய்யாட்டா என்ன.

பெருமாள் என்னை இங்கு அனுப்பிய காரணம் , இந்த வீட்டை சேர்ந்தவர்களுக்கு செய்ய வேண்டும் என்பது.

எல்லாம் செய்து விட்டேன்.

திருப்தி தான்; குறை இல்லை.

அதே பெருமாள், என்னை பாத்துக்க ஒரு ஒர்ப்படியையும், ஒரு பெண்ணையும் கொடுத்திருக்கான்.

நீயும், வாழ்க்கையில் எந்த நேரத்திலும் குறை, கவலை படாதே.

எல்லாம் பெருமாள் பாத்துப்பான்.

நீ செய்யும் செயல் அத்தனையும் நீ செய்ய வில்லை. கோவிந்தன் செய்ய வைக்கிறான்.

இதில் பிற மனுஷாளை எப்படி குத்தம் சொல்ல முடியும்?" நிம்மதியாக இரு.

பாட்டி இன்னும் ஏதேதோ... பாசிடிவாக பேசினாள் -

இத்தனைக்கும் பள்ளிக்குப் போய் படித்தவள் இல்லை. அனுபவப்பாடம்;

புரிந்து கொண்ட வாழ்க்கை தத்துவம்.

கடைசியாக நான், "பாட்டி பணம் தரேன்; வாங்கிக்கறேளா" என்றேன்...

பாட்டி சிரித்தாள். அர்த்தம் பொதிந்த சிரிப்பு.

"பணமா, எனக்கா, எதுக்கு; நான் என்ன பண்ணப் போறேன்"

"பாட்டி, உங்களுக்கு வேண்டியது ஏதாவது, அல்லது சாப்பிட... " என்று இழுத்தேன். அதற்கும் சிரிப்பு.

"கோவிந்தன் என் பெண் மூலமாக என்னை பார்த்துப்பான். இதே திண்ணையில், அவனை பார்த்துக்கொண்டே ஒரு நாள் போய் சேருவேன்.

அந்த நாளைக்காக நான் நொந்து போய் காத்திருக்க வில்லை.

அதுவும் பெருமாளுக்கு தெரியும் என்னும் போது, நான் எதுவுமே யோசனை செய்ய அவசியம் என்ன.

எனக்கு பணமெல்லாம் வேண்டாம்"

என் புத்தி...உள்ளே போய், (ரொம்ப சிறிய போர்ஷன்) ... ஒரே ரூம்; கொஞ்சம் தடுத்து சமையல் அறை.

"மாமி, உங்க கிட்ட பழைய நாள் பாத்திரம் எல்லாம் இருக்கா ? எனக்கு ஆசை " என்றேன்.

மாமி சிரித்துக் கொண்டே, "நானே பாத்திரம் தேய்ப்பதால், அதெல்லாம் கட்டி ஆளமுடியாமல் எல்லா வற்றையும் போட்டு விட்டேன். தேவைக்கு வேண்டியது மட்டும் இருக்கு"

பாட்டியிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டேன்; கிளம்ப மனமே வரல்ல;

"பாட்டி, உங்க கிட்ட பேசினா, மனது லேசாகிறது !!"

"முடிந்தால் வாயேன்; எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசு" என்று வழி அனுப்பினாள்.

ஒரு சலிப்பு, அலுப்பு கிடையாது;

ஆசைகள் கிடையாது;

அந்த திண்ணையில் ஒரு தவம் மாதிரி இருக்கிறாள்.🙏🙏🙏
யார் சொன்னது ரிஷிகள் காட்டில் தான் வாழ்கிறார்கள் என்று. 🙏🙏
கும்பகோணம் திருநாகேஸ்வரம் திருவிண்ணகரம் ஸ்ரீ ஒப்பிலியப்பன் பெருமாள் திருவடிகளே சரணம் ... !!!

பெருமாளுக்கு பக்தர்களை சோதித்து தடுத்தாட் கொள்வதில் அலாதி விருப்பம்.
துளசிவனத்தில் தோன்றிய குழந்தையை பூதேவி என்ற திருநாமமிட்டு வளர்த்துவந்தார் மார்க்கண்டேய முனிவர்.
பெண் சற்று வளர்ந்ததும் பெருமாள் கிழவர் வேடத்தில் வந்தார்.
மார்கண்டேயரிடம் " உங்கள் பெண் அழகாக இருக்கிறாள் . அவளை எனக்கு மனம் முடித்து வையுங்கள் " என்கிறார்.

என்னடா இது கிழவர் வந்து பெண் கேட்கிறாரே என்று திடுக்கிட்டார். சமாளித்து கொண்டு " பெரியவரே ! என் பொண்ணுக்கு உப்பு போட்டுக்கூட சமைக்க தெரியாது ... அவளை எப்படி திருமணம் செய்வீர்கள் ? " என்கிறார் .

" பரவாயில்லை ... நான் உப்பில்லாமல் சாப்பிடுகிறேன் சீக்கிரம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் " என்கிறார் கிழவர் ஆகிய பெருமாள்..

இவரை எப்படி சமாளிப்பது என்று மார்கண்டேயே முழித்தபோது ஸ்ரீ நிவாஸர் தம் திரு உருவத்தை காண்பித்து தான் சாட்ஷாத் மகாவிஷ்ணுவே என்று அருளி முன்பு வாக்கு கொடுத்தபடி திருமகளை திருமணம் செய்யவே எழுந்தருளியதாக கூறினார்.

மகா சந்தோஷத்துடன் மார்க்கண்டேயர் சம்மதித்தார். பெருமாளுக்கு வலது புறம் கீழே மண்டியிட்டு வணங்கும் திருக்கல்யாண கோலத்துடன் அருளும் (தனி சன்னதி கிடையாது) தாயார் பூமா தேவி பூமி நாச்சியார் என்றும் அழைக்கப்படுகிறார்.
இவர்களுக்கு இடது புறம் பெருமாளுக்கு கன்னிகாதானம் செய்து வைத்த மார்க்கண்டேய மகரிஷி அமர்ந்த நிலையில் வணங்கும் நிலையில் உள்ளார்.

இத்தலத்தில் இன்றும் பிரசாதங்களில் உப்பு சேர்ப்பதில்லை. எனவே உப்பு சுவையை நீக்கிய பெருமாள் என்ப தால் " லவண வர்ஜித வேங்கடேசன்" (உப்பினை விலக்கிய பெருமாள் ) என்கிறது புராணம். உப்பு இல்லாத பெருமாள் - உப்பில்லா அப்பன் - உப்பிலியப்பன் என்று அழைக்கப்படுகிறார்.
108 திவ்ய தேசங்களில் இந்த திவ்ய தேசத்தில் மட்டும் தான் உப்பில்லாத பிரசாதம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#கைகேயி கொடியவளா?

ராமாயணம், நம் எல்லோருக்கும் தெரிந்த பக்தி கதை. அதில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரும் நமக்கு மிகப் பரிச்சயமானவர்கள்தான். ஆனால், அந்தக் கதையில் இடம்பெறும் சம்பவங்கள், அவற்றில் பொதிந்து கிடக்கும் அர்த்தங்கள், கதாபாத்திரங்களின் உண்மைப் பரிமாணம் ஆகியவை பல்வேறு காலங்களில், பல்வேறு காவிய கர்த்தாக்களாலும் உபன்யாசகர்களாலும் நமக்குப் பலவிதமான முறைகளில் விவரித்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. அப்படி ஒரு புதிய கோணத்தில் சொல்லப்பட்ட கைகேயியின் கதையைப் பார்ப்போமா?

தசரதனின் மூன்று மனைவியரில் இளையவள், கைகேயி. #அழகே உருவானவள். வீரமும் #விவேகமும் கொண்டவள். தன் அன்பாலும் பாசத்தாலும் தசரதன் உள்ளத்தில் மட்டும் அல்லாமல், அனைவரின் உள்ளத்திலும் இடம்பெற்றவள். எல்லாவற்றுக்கும் மேலாக, தன் மகன் பரதனிடத்தில் காட்டும் அன்பையும், பரிவையும்விட, #ஸ்ரீராமனிடம் அவள் அதிக அளவு அன்பும் #பாசமும் கொண்டிருப்பதை நினைத்துப் பெரிதும் மகிழ்ந்தான் தசரதன். ஆகவே, அவளிடம் அதிக மதிப்பு வைத்திருந்தான் தசரதன்.

இத்தனை உண்மைகளுக்கு நடுவில், ஒரே இரவில் அவள் மனம் மாறி, 'ராமனுக்குப் பதிலாக என் மகன் பரதனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும்’ என்றும், '14 வருடங்கள் ஸ்ரீராமன் காட்டுக்குச் செல்ல வேண்டும்’ என்றும் தசரதனிடம் இரண்டு வரங்களைக் கேட்டுப் பெற்றாள் கைகேயி. ராமனுக்கு மட்டுமின்றி, தன் மகன் பரதனுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு கொடிய செயலை கைகேயி செய்திருப்பாளா என நினைத்துப் பார்த்தால், அதனை அப்படியே ஏற்க மனம் வரவில்லை.

மந்தரை என்றொரு #கூனி. கைகேயியின் தாதியாக இருந்தவள். அவளிடம் அரை மணி நேரம் பேசியதன் விளைவு... விவேகம் மிக்க கைகேயி மனம் மாறி, ஸ்ரீராமனைக் காட்டுக்கு அனுப்ப விரும்பினாள் என்பது உண்மையானால், அவளது தாய்மையின் உயர்வே அழிந்துவிடுகிறதே!

ஏதோ பேராசையின் காரணமாகத் தன் மகனுக்கு அரசு பதவி தேடித் தரவேண்டும் என்று விரும்பி, அதன் பொருட்டு, கைகேயி தசரதனிடம் வரம் கேட்டிருக்கலாம்; வாதாடி, பரதனுக்கு முடிசூட்ட நினைத்திருக்கலாம் என்பதையாவது ஓரளவுக்கு ஒப்புக் கொள்ளலாம். ஆனால், பிரியத்துக்குகந்த ராமனைக் காட்டுக்கு அனுப்பும்படி சொல்ல, அந்தத் தாய்க்கு எப்படி மனம் வந்திருக்கும்? சற்றே சிந்தித்துப் பார்க்க, கைகேயி எத்தகையவள் என்பதை விளக்கும் சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.

சம்பராசுரன் என்ற அசுரனுடன் தசரதன் ஒருமுறை போர் புரிந்தான். அப்போது, அவனுடைய தேருக்குச் சாரதியாக இருந்தாள் வீராங்கனை கைகேயி. தேரின் அச்சு முறிந்த நிலையில், தன் விரலையே அச்சாணியாகக் கொடுத்து, தன்னுயிரைப் பணயம் வைத்து, தசரதன் உயிரைக் காத்தாள். அவளின் #பதிபக்தி மற்றும் தியாகத்தில் சிலிர்த்த தசரதன், இரண்டு வரங்களை அவளுக்கு அளித்தான். பேராசைக்காரியாக அவள் இருந்திருந்தால்... 'தானே பட்ட மகிஷியாக வேண்டும்’ என்றும், 'தனக்குப் பிறக்கும் குழந்தைக்கே முடிசூட்ட வேண்டும்’ என்றும் அப்போதே வரம் கேட்டிருக்கலாம். ஆனால், அவள் அப்படிச் செய்யவில்லை. கணவனுக்குச் செய்த சேவை, தன் #கடமைதானே என்று உணர்ந்து, 'வரங்கள் இப்போது வேண்டாம். தேவைப்பட்டால் பின்பு எப்போதாவது கேட்டுப் பெற்றுக்கொள்கிறேன்’ என்று பெருந்தன்மையாகக் கூறிவிட்டாள். அப்படிப்பட்டவளா இந்தக் கொடிய வரங்களைக் கேட்டிருப்பாள்?

ஆராய்ந்து பார்த்தால், இதற்கு ஏதோவொரு மூல காரணம் இருந்திருக்க வேண்டும், அதற்குப் பின்னே எவரும் அறியாத சம்பவங்கள் சில புதைந்து கிடக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

ஒரு முறை தசரதன் வேட்டையாடச் சென்றபோது, தடாகம் ஒன்றில் தண்ணீர் முகந்து செல்ல வந்திருந்த சிறுவன் சிரவணகுமாரன் என்பவன் மீது, தெரியாமல் அம்பு எய்திவிட்டான். கமண்டலத்தில் தண்ணீர் முகந்த சப்தம், யானை தண்ணீர் குடிப்பது போலக் கேட்டது. அதனால் தூரத்திலிருந்து தசரதன் எய்த 'சப்தவேதி’ என்ற பாணம், ஒலி வந்த திக்கை நோக்கிச் சென்று, சிறுவன் உயிரைப் போக்கிவிட்டது. உயிர் துறக்குமுன் அந்தச் சிறுவன் வேண்டிக்கொண்டது போல, அவன் சடலத்தை எடுத்துக்கொண்டு, கண்ணில்லாத அவனுடைய வயோதிகத் தாய்- தந்தையிடம் சென்று, நடந்ததைக் கூறினான் தசரதன். மகனை இழந்த துயரத்தில் அந்தப் பெற்றோர் தசரதனுக்குக் கடும் #சாபமிட்டுவிட்டு, உயிர் துறந்தனர். 'எங்களைப் போலவே புத்திரனைப் #பிரிந்து, அந்தச் சோகத்தில் நீ உயிர் துறப்பாய்’ என்பதே அந்தச் சாபம். தசரதன் உள்ளத்தைக் கரையான் போல் அரித்துக் கொண்டிருந்த சம்பவம் இது.

வேட்டைக்குச் சென்று திரும்பிய தசரதன், சொல்லவும் மெல்லவும் முடியாமல், கலங்கித் தவித்ததை தனது விவேகத்தால் ஊகித்த கைகேயி, தசரதனின் தேர்ப் பாகன், அந்தரங்கக் காவலன் ஆகியோரைக் கூப்பிட்டு, சாமர்த்தியமாக விசாரித்து, நடந்த உண்மைகளை ஓரளவு தெரிந்து கொண்டாள்; சாபம் பற்றிய உண்மை தெரிந்து, கைகேயி பதறினாள்; #துடித்தாள்.

புத்திரன் எனப் பொதுப்படையாகவே குறிப்பிட்டதால், அது தசரதன் பெற்ற புதல்வர்களில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், அல்லவா? இதன் உண்மைகளை இன்னும் ஆராய்ந்து அறிய விரும்பினாள் கைகேயி. அந்தரங்கமாக, ஆஸ்தான ஜோதிடர்களை அழைத்தாள். தசரதனின் ஜாதகத்தையும், குழந்தைகளின் ஜாதகத்தையும் கொடுத்து ஆராயச் சொன்னாள். பொதுவாக, விண்ணில் உள்ள கிரகங்களது அமைப்பின்படி, நாட்டின் நிலை குறித்தும் விளக்கப் பணித்தாள். அந்தக் கால கட்டத்தின்படி, கிரக நிலைப்படி, அயோத்தி சிம்மாசனத்தில் எவர் அமர்ந்தாலும், அவர்கள் சில நாட்களில் மரணம் அடைய நேரும் என ஜோதிடர்கள் கூறினார்கள்.

'புத்திரனைப் பிரிந்து’ என்கிற சாபம் 'புத்திரன் இறந்து’ என்கிற அர்த்தத்தில் இடப்பட்டாலும், இது குறித்து சாஸ்திர விற்பன்னர்கள் மற்றொரு விளக்கமும் பரிகாரமும் சொன்னார்கள். ஒருவேளை, புத்திரன் தந்தையை விட்டு வெகுதூரம் பிரிந்து சென்றுவிட்டால், அதனால் புத்திரன் உயிர் பிழைத்துவிடுவான்; தந்தை மட்டும் அந்தப் பிரிவால் உயிர் துறக்க நேரிடும் எனும் விளக்கம், ஜோதிட பண்டிதர்களால் தரப்பட்டது. ஆக, தசரதன் உயிர் துறப்பது சாபத்தால் ஏற்பட்ட, தவிர்க்க முடியாத நியதி எனும் உண்மையை உணர்ந்தாள் கைகேயி. அதே நேரம், மைந்தன் ஸ்ரீராமனையாவது #காப்பாற்றியாக வேண்டும் என நினைத்தாள்.

மனைவியின் கடமையைவிட, #தாய்மையின் அன்புதான் அங்கே தலை தூக்கி நின்றது. ஸ்ரீராமனை மட்டும் தசரதனிடமிருந்து பிரிக்க நினைத்தால், அதற்குச் சரியான காரணம் காட்ட வேண்டுமே? அதற்காகத் தியாகமும் அன்பும் உருவான அந்தத் தாய், தன்னை இந்த உலகம் 'பேராசைப் பேய்’ என்று நிந்தித்தாலும் பரவாயில்லை என மனத்தை திடப்படுத்திக் கொண்டு, ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தாள். பரதனுக்கு முடிசூட்ட வேண்டினாள்; அதற்குத் தடையில்லாதபடி, ஸ்ரீராமனை காட்டுக்கு அனுப்பச் சொல்வது போல் இருக்கட்டும் என முடிவு செய்தாள். அப்படியே வரமும் கேட்டாள். அது மட்டுமா? ஒருவேளை, சக்கரவர்த்தியாக தசரதனே தொடர்ந்து நீடித்தால், ஜோதிடப்படி சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் மன்னன் உயிர் துறக்க நேரிடுமே?! அதையும் எப்படியாவது தடுத்துவிட முடியாதா என ஏங்கினாள். எனவே, கணவனையும் ஸ்ரீராமனையும் காப்பதற்குத் தன் மகனைத் தியாகம் செய்யத் துணிந்தாள். ஆகவே, பரதனுக்கு பட்டாபிஷேகம் செய்ய வலியுறுத்தினாள்.

'பரதனுக்கு முடிசூட்டிவிடுகிறேன். ஆனால், ஸ்ரீராமனை #காட்டுக்கு அனுப்ப வேண்டாமே’ எனக் கெஞ்சினான் தசரதன். ஆனால், கைகேயியோ பிடிவாதமாக இருந்தாள். ஸ்ரீராமன், அவளுக்கு மட்டும் குழந்தை அல்ல; அயோத்தியின் குழந்தை. அவன் அவதாரப் பணி நிறைவேற வேண்டும். ராவணனைப் போன்ற அரக்கர்களை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட அவதரித்தவன் அல்லவா ஸ்ரீராமன்! ஆகவே, அவன் காக்கப்பட வேண்டும். எனவே, #விதிப்படி தனக்கு இடப்பட்ட பணியைச் செய்தாள் கைகேயி.

'பாவி கைகேயி சதி செய்து விட்டாளே!’ என்று எல்லோரும் அவளை நிந்தித்தனர். சீதையும் லட்சுமணனும் பின் தொடர, மரவுரி தரித்து, அயோத்தியை விட்டு ஸ்ரீராமன் தவக் கோலத்தில் கானகம் புறப்பட்டான். அவனைக் காட்டில் விட்டுவர, ஒரு ரதம் புறப்பட்டது. அந்த ரதம், வீதியில் நகர முடியாதபடி மக்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டு, அழுது புலம்பியது. ஊரே அழுது கொண்டிருந்தது. ஒருத்தியின் மனதில் மட்டும் ஸ்ரீராமனைக் #காப்பாற்றிவிட்ட பெருமிதம் நிலைத்திருந்தது. அவள் கண்களிலிருந்தும் #கண்ணீர் சிந்தியது. அது ராமனுக்காக அல்ல; புத்திர சோகத்தால் உயிர் நீத்து, தன்னை நிரந்தரமாகப் பிரியப் போகும் கணவன் தசரதனுக்காக!

ஸ்ரீராமன், அவதாரப் பணியைத் தொடங்கி விட்டான்; ராவணன் #அழிவான்; துயர் தீரும் நேரம் வந்துவிட்டது என தேவர்களெல்லாம் பூமாரிப் பொழிந்தனர். அரக்கர்கள் அழிந்து, ராமனால் நல்லோர் காக்கப்படுவர் என்பதால், அவனைக் காட்டுக்கு அனுப்பிய கைகேயியை அவர்கள் மனதார, மானசிகமாக #வாழ்த்தினர்.

ஊரார் பழித்தனர்; உலகோர் நிந்தித்தனர்; பெற்ற மகன் பரதனோ, தாயின் தியாகம் தெரியாமல், அவளை வெறுத்தான். ஏசினான். ஆனால், ஸ்ரீராமனுக்கு மட்டும் தன் அன்புத் தாய் கைகேயி செய்த தியாகம் #தெரியும். ஆரண்ய முனிவர்களுக்கெல்லாம் அவள் பெருமை தெரியும். தேவர்களுக்கெல்லாம் அவள் செய்த உதவி புரியும்!

இப்போது சிந்தியுங்கள்... கைகேயி #கொடியவளா..?
*அரிச்சந்திரன்* *முற்பிறவி ...*

உண்மையின் உறைவிடமாக இருந்தவன் அரிச்சந்திரன் ஆனால் அவனை விஸ்வாமித்திர மகரிஷி எண்ணிலடங்கா தொல்லைகளுக்கு உட்படுத்தினார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஏன் அப்படி செய்தார் என்பதை இங்கு காண்போம் .

காசி நகரை காசிராஜன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான் காசிவிஸ்வநாதரிடத்தில் மிகுந்த பக்திகொண்டவன் . அவனுடைய மகள்  மதிவானி அழகும் , அறிவும் ஒருங்கே பெற்றவள் . பருவ வயதை அடைந்த மகளுக்கு  சுயம்வரம்  செய்ய முடிவு செய்து மன்னர்களுக்கு சுயம்வர ஓலை அனுப்பினான் . அதனை ஏற்று வந்த மன்னர்களில் மகத நாட்டு மன்னன் திரிலோசனனும் ஒருவன் மிகுந்த அழகும் கம்பீரமும் உடையவன் .

சுயம்வரநாளும் வந்தது வந்திருந்த அனைவரையும் வரவேற்று தன்னுடைய நிபந்தனையை கூறினான் , கூண்டினுள் அடைக்கப்பட்ட சிங்கத்தைக் காட்டி இதை யார் வெற்றி கொள்வாரோ அவருக்கு என் மகள் மாலையிடுவாள் என்று கூறினான் . அந்த சிங்கத்தின் தோற்றம் பார்ப்பவரை அச்சப்பட வைத்தது யாவரும் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் திரிலோசனன் சிறுத்தும் அச்சமின்றி கூண்டுக்குள் சென்றான் காண்பவரையும் திகைக்க செய்யும் அளவுக்கு பலமான சண்டை சிங்கத்துக்கும் அவனுக்கும் நடந்தது முடிவில் சிங்கத்தை வென்றான் திரிலோசனன் .

 அறிவித்தபடி மதிவானி , மங்கள வாத்தியங்கள் ஒலிக்க வேதங்கள் முழங்க ஆன்றோர் ஆசிகளுடன் திரிலோசனனை மணம் புரிந்தாள் . அனைவரும் ஆனந்தத்துடன் இருந்த அதே நாளில் திரிலோசனன் மாலை வேளையில் கங்கையில் நீராடி விசுவநாதரை வழிபட்டு கொண்டிருக்கும் வேளையில் அவன் மீது பொறாமை கொண்ட மன்னன் ஒருவன் பின்புறமாக வந்து வாளால் அவனை வெட்டிக் கொன்று விட்டான் . இந்த துயரத்தைக் கேள்விப்பட்ட மன்னனும் மக்களும் மிகுந்த துக்கத்தில் ஆழ்ந்தனர் , மதிவானி மயக்கம் அடைந்தாள் , மயக்கம் தெளிந்த பின் எழுந்தவள் துக்கம் தாளாது இனியும் நாம் உயிரோடு இருத்தல் ஆகாது என முடிவெடுத்து தன்னை மாய்த்துக் கொள்ள கங்கையில் குதித்தாள்  .

 அப்போது அங்கு நீராட வந்த கௌதம முனிவர் நீரில் தத்தளிக்கும் மதிவானியை காப்பாற்றி கரை சேர்த்தார் . மதிவானி முனிவரின் காலில் விழுந்து வணங்கினாள் . கௌதம முனிவர் தீர்க்க சுமங்கலியாக இருப்பாய் என ஆசிர்வதித்தார் . இதைக் கேட்ட மதிவானி முனிவரிடம் நடந்ததைக் கூற அவரும் என் வாக்கு பொய்க்காது மகளே , நடந்ததை மறந்து தவத்தில் ஈடுபடு உன் இந்த பிறவி முடிந்து அடுத்த பிறவியில் இதே மாங்கல்யத்துடன் நீ பிறப்பெடுப்பாய் இந்த மாங்கல்யம் யார் கண்களுக்கும் புலப்படாது . உன் கணவன் திரிலோசனன் அடுத்த பிறவியில் சூரிய குளத்தில் பிறப்பான் , உன் சுயம்வர நேரத்தில் அவன் கட்டிய மாங்கல்யம் அவனுக்கு புலப்படும் . நீங்கள் திருமணம் புரிந்து பல்லாண்டு காலம் வாழ்வீர்கள் என்று அருளாசி செய்தார் .
                 
கௌதம முனிவரின் ஆலோசனையின் படி அவரின் ஆசியோடு அவரின் ஆசிரமத்திலேயே தன தவத்தை மேற்கொண்டாள் . சில காலத்தில் அவளுடைய இந்த பிறவிக்கு முடிவுக்கு வந்தது . அடுத்த பிறவியில் மதிவானி , சந்திரமதியாகவும் , திரிலோசனன் அரிச்சந்திரனாகவும் பிறந்தனர் . சந்திரமதி சுயம்வர நாளில் யார் கண்ணுக்கும் புலப்படாத மாங்கல்யம் அரிச்சந்திரனுக்கு தெரிய அரிச்சந்திரன் சந்திரமதியை மனம் புரிந்தான் . இனிதான இல்லறத்தின் பொருட்டு ஒரு ஆன் மகவை ஈன்றெடுத்தாள் சந்திரமதி அக்குழந்தைக்கு லோகிதாசன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள் .

 இப்படி இருக்கும் பொழுது ஒரு நாள் தேவலோகத்தில் இந்திரன் தன்னுடைய சபையினால் பூமியில் உள்ள மன்னர்களில் யார் சிறந்தவன் என்று கேட்க அங்கு இருந்த வசிஷ்ட முனிவர் , சந்தேகமென்ன என் சிஷ்யன் அரிச்சந்திரன் சிறந்தவன் தன தலையே போனாலும் சத்தியத்தை விடாதவன் அவனே சிறந்தவன் என்றார் . அதை மறுத்த விஸ்வாமித்திரர் , சந்தர்ப்பங்கள் வந்தால் அரிச்சந்திரன் சத்தியத்தை மீறுவான் அதை நான் நடத்திக் காட்டுகிறேன் என்று கூறினார் .

 கூறியதைப்போல அரிச்சந்திரன் வாழ்க்கையில் பெரும் புயலென துன்பங்களைத் தந்தார்.  அவனுடைய ஆட்சி இழந்து மனைவி , மகனை பிரிந்து மயானத்தில் பிணம் எரிக்கும் நிலைக்கும் சென்றான் அப்படி இருந்த போதிலும் தன்னுடைய சத்தியத்தை அவன் காத்து நின்றான் . மகிழ்ந்த விசுவாமித்திர மகரிஷி அவனுக்கு அருள் செய்து இழந்த அனைத்தையும் அவனுக்கு வழங்கி ஆசி புரிந்தார் . அவனும் நல்லாட்சி புரிந்து நற்கதியை அடைந்தான் . அது சரி எதற்காக தவத்தில் சிறந்த விஸ்வாமித்திரர் அரிச்சந்திரனை இவ்வளவு துன்பத்திற்கு ஆளாக்க வேண்டும் .

முற்பிறவியில் திரிலோசனனான அரிச்சந்திரன் , விசுவாமித்திர மகரிஷியிடம் தனக்கு பிறவா நிலையை அருள வேண்டும் சுவாமி என்று பணிந்து நின்றான் . அதற்கு அவர் , திரிலோசனா ! உன் ஊழ்வினையின்கண் நீ பல பிறப்பெடுக்க வேண்டி உள்ளது அவை அனைத்தையும் ஒரே பிறவியில் நீ அனுபவித்து சத்தியம் தவறாமல் வாழ வேண்டும் முடியுமா ? என்று கேட்டார் சம்மதித்த திரிலோசனன் , அரிச்சந்திரனாக பிறப்பெடுத்து தன்னுடைய வினைகளையெல்லாம் ஒரே பிறவியில் அனுபவித்து பிறவாத பெரும் பேரை அடைந்தான் . அவனை துன்புறுத்த அவனுக்கு சோதனைகள் இல்லை அவன் வினைகளை கழிக்கவே சோதனைகளை தந்தார் விசுவாமித்திர மகரிஷி .

 அரிச்சந்திரன் அளவுக்கு துன்பபட்டவர் யாரும் இல்லை , அவனும் தன்னுடைய வினையை கழிக்க துன்பத்தை மகிழ்சசியாய் ஏற்று கொண்டதைப்போல நாமும் நம் துன்பங்களை எல்லாம் வினைகளை ஒழிக்க ஈசன் தந்தது என்று மகிழ்வுடன் ஏற்று அவன் பாதமே தஞ்சம் என்று இருந்தால் எந்த துன்பமும் , தீவினையும் நம்பால் அணுகாது சத்தியம் .
*அருகம்புல் விநாயகருக்கு உரியது*

மழை இல்லா விட்டாலும் கடுமையான கோடையைக் கூட தாங்கி நிற்கும். வெயிலில் காய்ந்து போகுமே தவிர அழிந்து போகாது. சின்னதாக மழை பெய்தால்கூட போதும் பசுமையாக துளிர்விடும்.  சாலையோரங்களில் கூட எளிதாக முளைக்கும். எல்லா காலங்களிலும் காணப்படும்.

சரி இப்போது எதற்கு அருகம்புல் புராணம் என்கிறீர்களா?

எத்தனை துன்பங்கள் வந்தாலும் நல்லவர்கள் சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு இருப்பார்கள். அவர்களை இறைவனின் கருணை என்னும் மழை வந்து காப்பாற்றி விடும் என்று ஆன்றோர்கள். அருகம்புல்லை வைத்து நம்மை தேற்றுவார்கள். காட்சிக்கு எளிமையாகவும், மருத்துவ குணங்கள் அதிகமும் கொண்ட அருகம்புல் குளிர்ந்த தன்மை கொண்டது. உடல் சூட்டை  அகற்றும், சிறுநீர் கடுத்தால் பெருக்கி குணமாக்கும், நாள்பட்ட குடல் புண்களைக்கூட ஆற்றிவிடும், ரத்தத்தை தூய்மையாக்கும், கண்பார்வையை தெளிவாக்கி குளுமை தரும். ஆற்றல்கள் பல கொண்ட இந்த அருகம்புல்லைத்தான் கணபதி தனக்கு விருப்பமான மாலையாக ஏற்றுக்கொண்டார். எங்கும் எப்போதும் கிடைக்கும் அருகம்புல்லை  அர்ப்பணித்தால் போதும் கணபதி மகிழ்ந்து கேட்கும் வரங்களை கொடுத்துவிடுவார் என்கிறது புராணம். அது சரி எத்தனையோ மலர்களும், இலைகளும் இருக்க கணபதி ஏன் அருகம்புல்லை சூட்டிக்கொண்டார். அதற்கும் ஒரு புராண வரலாறு உண்டு அதை காண்போம்.. வாருங்கள்..

அனலாசுரன் என்பவன் யமனுடைய மகன். வேண்டாத சேர்க்கையினால் தீயவனாகி சாபம் பெற்றான். இதனால் மூர்க்கனாக மாறி தேவர்களை இம்சித்து வந்தான். வரங்கள் பல பெற்றதாலும், பிறப்பிலேயே அவனது உடல் பெரும் அனலைக் கக்கியதாதால் அவனுக்கு அருகில் கூட யாரும் செல்ல முடியவில்லை.  செல்பவர்களை எல்லாம்  சாம்பலாக்கினான் அனலாசுரன். என்ன செய்வது என்று புரியாத  தேவர்கள் பிள்ளையாரை வேண்டி அவரது உதவியை நாடினர். கணநாதரும் அவனை ஒழித்து தேவர்களை காக்க அவனிருக்கும் இடம்  சென்றார். அங்கு கணபதியின் கணங்கள் எல்லாம் வெம்மை தாங்காமல் ஓலமிட்டன.  இதனால் கணபதியின் கோபம் எல்லை கடந்தது.

அனலாசுரனை பெரும் அனல் வடிவம் கொண்டு கணபதி தாக்கினார். அந்த அசுரன் ஓய்ந்துபோன தருணத்தில் அவனைப் பிடித்து விழுங்கி விட்டார் கணபதி. காரணம் அவனது பூத உடல் கூட பெரும் வெப்பம் கொடுத்தது உயிர்களை வாட்டும் என்பதுதான். அனலோடு அவன் விழுங்கப்பட்டதால், கணபதியின் வயிறு எரிந்துகொண்டிருந்தது. உஷ்ணம் தாங்காத கணநாதர் சக்தியை எண்ணி வணங்கினார். தேவர்கள் யாவரும் கணநாதரை குளிர்விக்கும் வகையில் என்ன என்னவோ செய்துபார்த்தார்கள். கங்கை நீரை ஊற்றினார்கள். பனிப்பாறையைப் பெயர்த்தெடுத்து கணபதியின் தலையில் வைத்தார்கள். எதிலுமே தீ தணியவில்லை. இதனிடையே, சப்த ரிஷிகள் எனப்படும் அத்திரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கவுதமர், காஸ்யபர், ஆங்கிரஸர் ஆகிய எழுவரும் சேர்ந்து ஒரு சாண் அளவுள்ள இருபத்தொரு அருகம்புற்களைக் கொண்டு வந்து கணபதியின் தலையில் வைத்தனர். இதனால் கணபதியின் உடல் குளிர்ந்து,  வயிற்றில் இருந்த அனல் தணிந்தது. இதனால் விநாயகர் மகிழ்ந்தார். தனக்கான பூஜைப்பொருள் அருகம்புல்லே என்று மனம் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டார். 'இனி தன்னை பூஜிக்க இருப்பவர், வரத்தைப் பெற விரும்புவோர் அனைவரும்  அருகம்புல் கொண்டு வணங்கினால் மகிழ்வேன்' என்று வரமளித்தார் பிள்ளையார். அன்று முதல் கணபதியின் பூஜைக்கு உரியதானது அருகம்புல். தூர்வை, மேகாரி, பதம், மூதண்டம் என பல பெயர்களால் சிறப்பிக்கப்படும் அருகம்புல் கணநாதருக்கு மட்டும் அல்ல, மூலிகையாக எடுத்துக்கொண்டால் நமக்கும் நலம் பயப்பவை தான்.
*நமசிவாய.*
இராத் தங்கார்

மதுரையில் பிறந்த பெண்களும், மதுரைப் பெண்ணைக் கட்டிக்கொண்ட மாப்பிள்ளைகளும் மதுரையிலிருந்து வேறு ஊர்களுக்குச் சென்றால், இரவில் அந்த ஊர்களில் தங்கமாட்டார்கள்.  எவ்வளவு நேரம் ஆனாலும் சரி, இரவு தூங்குவதற்கு மதுரைக்கு வந்து சேர்ந்துவிடுவர்.  இந்தப் பழக்கம் மதுரையில் தொண்டுதொட்டு இருந்து வருகிறது.  இதற்குக் காரணம் என்னவென்று கேட்டால், எங்களது அன்னை அருள்மிகு மீனாட்சியம்மனும், அப்பன் சொக்கநாதனும் எந்த ஊருக்குச் சென்றாலும், அந்த ஊரில் இராத் தங்கமாட்டார்கள்.  இரவுவோடு இரவாகப் புறப்பட்டு மதுரை வந்து சேர்ந்துவிடுவர்.  எனவே நாங்களும் எந்த ஊருக்குப் பயணமானாலும் அந்த ஊரில் இரவு தங்காமல் மதுரைக்குத் திரும்பிவிடுவோம் என்று விளக்கம் கூறுகின்றனர். மதுரை அருள்மிகு மீனாட்சியம்மையும், அப்பன் சொக்கனாதனும் எந்த ஊருக்குச் சென்றனர்?  ஏன் இரவோடு இரவாக மதுரைக்குத் திரும்பினர்?  என்ற வரலாற்றை அறிவோம்.மதுரைக்குத் தென்கிழக்கே 18கி.மீ. தூரத்தில் மதுரை-இராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது ‘திருப்பூவணம்‘ என்னும் ஊர்.  இவ்வூர் இப்போது ‘திருப்புவனம்‘ என்று தவறாக அழைக்கப்படுகிறது.  மதுரையை மன்னர்கள் ஆட்சிசெய்த காலத்தில் திருப்பூவணமானது மதுரைமாநகரின் கிழக்கு எல்லையாக விளங்கியது.  இந்த ஊரில் பொன்னனையாள் என்ற நடனமாது வசித்து வந்தாள்.  திருப்பூவணம் கோயிலில் நாட்டிய இலக்கணப்படி சிவனது சந்நிதியின் முன்பு தினமும் நடனமாடுவாள்.  சிவனடியார்க்கு எல்லாம் நித்தமும் அன்னதானம் செய்து வந்தாள்.  அடியார் உணவருந்தி எஞ்சியதைத் தான் உண்டு வாழ்ந்து வந்தாள்.  இவ்வாறு வாழ்ந்து வரும் அவளது தூய பக்தியை உலகத்தோருக்கு எடுத்துக் காட்டவேண்டும் என விரும்பம் கொண்டான் அருள்மிகு திருப்பூவணன்.  “தேரில் எழுந்தருளுவதற்காகத் தங்கத்தினால் ஆன திருமேனியைச் செய்திட வேண்டும்“ என்ற எண்ணத்தை பொன்னனையாளின் உள்ளத்திலே விதைத்தான்.

“திருப்பூவணம் உற்சவமூர்த்தியைத் தங்கத்தில் செய்து கொடுக்க வேண்டும்“ என்ற எண்ணம் பொன்னனையாளின் உள்ளத்திலே ஊன்றி வளரத் துவங்கியது.  அவள், உற்சவமூர்த்தியின் வடிவத்தை மெழுகில் செய்து, அதன் வடிவத்தைத் தங்கத்தில் வார்த்து எடுக்கும் வகையில் “கரு“ செய்து வைத்திருந்தாள்.  ஆனால், நாள்தோறும் அவள் கையில் வரும் பொருள் எல்லாம் அடியார்க்கு அன்னதானம் செய்வதிலேயே செலவாகிக்கொண்டிருந்தது.  தங்கம் வாங்கும் அளவிற்கு அவளிடம் பணம் சேரவில்லை.

மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரர், குலபூடண பாண்டிய மன்னனுக்கு பொற்கிழி வழங்கிய கதையைப் பொன்னனையாள் படித்திருந்தாள்.  எனவே அவள் மதுரை சென்று அன்னை மீனாட்சியையும் சோமசுந்தரேசுவரரையும் வணங்கித் தனக்குத் தேவையான தங்கத்தைத் தந்து அருளுமாறு வேண்டிக் கொண்டாள்.  “எல்லாமே எனக்கு வேண்டும்“ என்று எல்லோரும் வேண்டிக் கொள்ளும் இக்கலிகாலத்தில், இவளோ, திருப்பூவணம் உற்சவமூர்த்திக்காக வேண்டிக்கொள்கிறாளே!, இவளுக்கு அருள வேண்டும் என்று அம்மையும் அப்பனும் திருவுள்ளம் கொண்டனர்.

பங்குனிமாதம் உத்திர நட்சத்திரம் முழுமதி (பௌர்ணமி) நாளன்று, திருப்பூவணத்தில் பொன்னனையாள் நடத்தும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அடியார் எல்லாம் திருவமுது செய்து கொண்டிருந்தனர்.  அங்கே சித்தர் வடிவில் சிவபெருமான் எழுந்தருளினார்.  ஓர் அடியார் வந்து அமர்ந்திருப்பதை அறிந்து கொண்ட பொன்னனையாள் அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கி அன்னம் உண்ண வருமாறு அழைத்தாள்.  அவளது அழைப்பினை ஏற்றுக் கொண்ட சித்தரும், “நீ ஏன் மெலிந்து உள்ளாய்?“ என்று அன்போடு கேட்டார்.  “சாமி, நாள்தோறும் வரும் பொருள் எல்லாம் அன்னதானத்திற்கே செலவாகிவிடுகிறது.  உற்சவமூர்த்தியைத் தங்கத்தில் செய்ய வேண்டும் என்ற எனது ஆவல் ஒன்றே எனது உள்ளத்தின் உள்ளே இருந்து எனது உடலினை உருக்கிவருகிறது. வேறு எந்தவிதமான கவலையும் இல்லை, சாமி“ என்றாள். 

“தானத்துள் சிறந்த அன்னதானத்தைச் செய்து வருகிறாய்,  எனவே உன் பெயருக்கு ஏற்றபடி பொன்னால் ஆன உற்சவமூர்த்தியை நீ செய்திடுவாய்“ என ஆசி வழங்கினார்.   சித்தர் பெருமான் பொன்னனையாளை நோக்கி, “நீ உனது வீட்டில் உள்ள உலோகப் பாத்திரங்களை எல்லாம் இங்கே எடுத்துவா“ என்று கூறினார். சித்தரது  அணைப்படியே, பொன்னனையாளும் அவளது வீட்டிலிருந்து அனைத்து உலோகப் பாத்திரங்களையும் எடுத்துச் சென்று சித்தர் முன் வைத்தாள்.  சித்தரும் அப்பாத்திரங்களின் மேல் திருநீற்றைத் தூவி, “இத்தை  நீ இரா  எரியில் இட்டு எடுக்கின்  பொன்னாம்“ என்று அருளிச் செய்தார்.  அதாவது, இவற்றை நீ இன்று இரவு எரியும் உலையிலே இட்டால் பொன் கிடைக்கும் என்று கூறினார்.

சித்தரது வார்த்தைகளைக் கேட்ட பொன்னனையாளும், வந்திருப்பது மதுரையம்பதி முதல்வனே என்பதை உணராதவளாய்,  “சாமி தாங்களே இன்று இரவு இங்கே தங்கி, இவற்றையெல்லாம் உருக்கிப் பொன்னாக மாற்றித் தரவேண்டும்“ என விண்ணப்பித்தாள்.  அர்த்தசாம பூசைக்கு மதுரை சென்று விடவேண்டும் என்று விருப்பம் கொண்ட சிவபெருமான், பொன்னனையாளின் கோரிக்கைக்கு இசையவில்லை. அர்த்தசாம பூசைக்கு மதுரைக்கு சென்றுவிட வேண்டும் என்றே விருப்பம் கொண்டு, நான் சொன்னதுபடிச் செய்வாய் எனக்கூறி மறைந்துவிட்டார்.  சித்தர் வடிவில் வந்தவர் அருளிச்செய்த விதத்தைக்கொண்டு வந்தவர் மதுரையம்பதி முதல்வனே என அறிந்து கொண்டாள்.  சித்தர் சொன்னபடிய எல்லா உலோகங்களையும் தீயிலிட்டு உருக்கத் தங்கம் உருகி வந்தது.  உருகி வந்த தங்கத்தைக் கொண்டு தான் ஏற்கனவே கருக்கட்டி வைத்திருந்த வார்ப்பில் ஊற்றி எடுத்தாள்.  வார்ப்பினை உடைத்து எடுக்கும்போது உற்சவமூர்த்தியின் அழகைக்கண்டு வியந்து “அச்சோ, அழகியபிரானோ“ என்று அன்பினால் அழைத்து கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டாள்.  இதனால் உற்சவமூர்த்தியின் கன்னத்தில் வடு உண்டானது.  இதனை இன்றும்  நேரில் தரிசித்து வணங்கலாம். 

பங்குனிமாதம் உத்திரநட்சத்திர நாளன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சி 36ஆவது திருவிளையாடலாகும்.  இத் திருவிளையாடலின்போது ஒவ்வொரு வருடமும் மதுரையிலிருந்து அருள்மிகு சோமசுந்தரேசுவரரையும் அன்னை மீனாட்சியையும் திருப்பூவணத்திற்கு எழுந்தருளச் செய்து, இராத் தங்காமல் அர்த்தசாம பூசைக்கு மதுரைக்குத் திருப்பித் தூக்கி வந்து விடுவர். 

மதுரையைத் திருமலைநாயக்க மன்னன் ஆண்ட போது, இவ்விழா சிறப்பாக நடைபெற்றது.  ஒருவருடம், பங்குனி உத்திரநாளன்று இவ்வாறு அன்னை மீனாட்சியையும் அப்பன் சொக்கநாதனையும் திருப்பூவணத்திலிருந்து மதுரைக்குத் திரும்பித் தூக்கி வரும்போது வைகையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருந்தது.  இதனால் சிலைமான் என்ற ஊரின் அருகே பெரும் வெள்ளம் பாதையைக் கடந்து ஓடியது.  எனவே சுவாமியையும் அம்மனையும் வெள்ளத்தைக் கடந்து தூக்கிச் செல்ல முடியவில்லை.  சிலைமானுக்கு அருகில் உள்ள கீழடி என்ற ஊரின் வழியாகத் தூக்கிச் செல்ல முயன்றனர்.  கால்வாயிலும் வைகையாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், மனித முயற்சிகள் பயனளிக்க வில்லை.  நிலைமையை உணர்ந்து கொண்ட திருமலைநாயக்க மன்னன் அருகில் உள்ள ஊர்களில் எல்லாம் பறையறிவிக்கச் செய்தார்.  அர்த்த சாமத்தில் ‘மதுரையம்பதியின் முதல்வன்‘ ஆற்று வெள்ளத்தைக் கடக்க முடியாமல் இருப்பதை அறிந்து ஓடிவந்த உதவினர். தோன்றாத்துணையாய் ஈசனும் வந்து திருவருள் புரிந்தான்.  அன்னை மீனாட்சியும் அப்பன் சொக்கனும் நல்லபடியாக மதுரைக்குத் திரும்பிச் சென்று அர்த்தசாம பூசையில் கலந்துகொண்டனர்.  மன்னன் திருமலை நாயக்கனும் நிம்மதியாக உறங்கி எழுந்தான்.  எழுந்தவுடன் அமைச்சரை அழைத்து, தங்களது உயிரையும் பொருட்டாக மதியாமல் அர்த்த சாமத்தில் வந்து உதவியி அனைவரையும் அழைத்து வருமாறு ஆணையிட்டான்.  உதவியோர் அவனைவருக்கும் ஒரு கிராமத்தையே தானமாக வழங்கினான்.  சாமத்தில் வந்து உதவியோருக்குச் சன்மானமாக வழங்கப்பட்டதால், அந்தக் கிராமத்திற்குப் பெயர் ‘சாம நத்தம்‘ என்ற பெயர் உண்டானது. 

இத்திருவிளையாடல் நடைபெற்ற காலந் தொட்டு, அருள்மிக மீனாட்சியம்மைக்கும் அப்பன் சொக்கநாதனுக்கும் “இராத் தங்கார்“ என்ற காரணப் பெயர் உண்டானது.  அன்றைய நாளிலிருந்து அன்னை மீனாட்சி பிறந்த மதுரையம்பதியில் பிறந்த பெண்கள் யாரும் இராத் தங்கார்.  அதுபோல், மதுரையில் திருமணம் செய்து கொண்ட மாப்பிள்ளைகள் யாரும் இராத்தங்கார்.  எப்பாடு பட்டேனும் இரவுக்குள் மதுரை வந்து சேர்ந்துவிடுவர். 

மன்னன் திருமலை நாயக்கருக்குப் பின்னர் பல்வேறு ஆட்சிமாற்றங்கள் உண்டாகி, ஆங்கிலேயேர் ஆட்சி செய்த காலத்தில் இந்த விழாவானது திருப்பூவணத்தில் நடைபெறுவது நின்றுபோய், மதுரையின் வடகரையில் உள்ள திருவாப்புடையார் கோயிலில் நடைபெறலானது.

Thanks sri Krishnamurthy Krishnamurthy