சனி, 23 மே, 2020

சந்தேகக் கோடு; அது சந்தோஷக் கேடு...

🌍மஹாபாரதத்தில் அதிகம் அறியப்படாக கதை;🌍

அஸ்வத்தாமனை சரியாக புரிந்து கொள்ளாத துரியோதனன்…

சந்தேகம் என்பது மிகவும் கொடிய நோய். சந்தேகம், சந்தோஷத்தின் எதிரி.

இதற்கு மஹாபாரதத்திலேயே உதாரணம் உள்ளது.

கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் யுத்தம் நடக்கப் போவது உறுதியாகிவிட்டது. இதை நன்கு அறிந்த கிருஷ்ண பரமாத்மா, துரியோதனிடம் சமாதான துாது சென்றான். யுத்தம் வந்தால், கவுரவர்கள் பக்கம், பீஷ்மர், துரோணர், அவர் மகன் அஸ்வத்தாமன், கர்ணன் என பல மாபெரும் வீரர்கள் சண்டையிடுவார்கள் என, பரமாத்மாவுக்கு தெரியும்.

அதிலும், அஸ்வத்தாமன் சாகா வரம் பெற்றவன். சீரஞ்சீவியான அவன், துரியோதனன் பக்கம் சேனாதிபதியாக களம் இறங்கினால், பாண்டவர்களால் எப்படி வெற்றி பெற முடியும் என, பரமாத்மா ஆலோசித்தான்.

அஸ்தினாபுரத்துக்கு சென்ற பரமாத்மா, திருதராஷ்டிரன், துரியோதனன், கர்ணன், பீஷ்மர், எனப் பலரையும் சந்தித்து வணக்கம் தெரிவித்தான்.

அஸ்வத்தாமனை பார்த்த கண்ணன், அவனை தனியாக அழைத்தான், இதை துரியோதனன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அஸ்வத்தாமனிடம் நலம் விசாரித்த கிருஷ்ணன், தன் விரலில் இருந்த மோதிரத்தை நழுவ விட்டான். அது பூமியில் விழுந்தது. அதை குனிந்து எடுத்தான் அஸ்வத்தாமன். கிருஷ்ணனிடம் மோதிரத்தை தர போன அஸ்வத்தாமனிடம், வானத்தை காட்டி கிருஷ்ணன் ஏதோ பேசினான்,

அஸ்வத்தமானும் வானத்தை பார்த்தான் கிருஷ்ணன் சொன்னதை ஆமோதித்தது போல ஆம் என்று தலையை ஆட்டினான். பின், கிருஷ்ணனின் விரலில், மோதிரத்தை அணிவித்தான் அஸ்வத்தாமன்.

இதைப் பார்த்த துரியோதனன், ‘"நான் கவுரவர்கள் பக்கம் இருந்நதாலும், பாண்டவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுவேன். இது இந்த பூமி மற்றும் வானத்தின் மீது சத்தியம்’ என, கிருஷ்ணனிடம், அஸ்வத்தாமன் கூறியதாக, துரியோதனன் கருதினான்".

இந்த சந்தேகத்தால், அவனை, கடைசி வரை சேனாதிபதியாக, துரியோதனன் நியமிக்கவில்லை.

17ம் நாள் யுத்தத்தில், துரியோதனன் பீமனால் தாக்கப்பட்டு, கால்கள் தொடைகள் உடைந்து, யுத்த களத்தில் இருந்தான், அப்போது, அவனை அஸ்வத்தாமன் சந்தித்தான்,

‘நான் சிரஞ்சீவி வரம் பெற்றவன்; என்னை  சேனாதிபதியாக நியமித்திருந்தால், யுத்தத்தின் முடிவு மாறியிருக்கும்’ என்றான் அஸ்வத்தாமன்.

அதற்கு துரியோதனன், "நீதான், பாண்டவர்களுக்கு ஆதரவாக இருப்பேன் என கிருஷ்ணனிடம் சத்தியம் செய்து கொடுத்தாயே’ என, கேட்டான்.

‘யார் எப்போது எங்கே சத்தியம் செய்தது ?’ என, கேட்ட அஸ்வத்தாமனிடம், கிருஷ்ணன் துாது வந்த போது நடந்த சம்பவத்தை தெரிவித்தான் துரியோதனன்.

இதைக் கேட்ட அஸ்வத்தமான் விரக்தியில் சிரித்தான்.

‘கிருஷ்ணனின் விரலில் இருந்த மோதிரம் கீழே விழுந்தது. அதைத் தான் எடுத்து கொடுத்தேன். இன்று வெய்யில் அதிகமா என்று என்னிடம் வானத்தைச் சுட்டிக் கட்டி கேட்டான். நான் "ஆமாம்" என்று தலையசைத்தேன். பின்னர் மரியாதை நிமித்தம் கிருஷ்ணனின் விரலில் மோதிரத்தை மாட்டி விட்டேனே தவிர  சத்தியம் எதுவும் செய்யவில்லை.

தேவையின்றி  என் மீது சந்தேகப்பட்டு, நீயே உன் தோல்வியை தேடி கொண்டாய். அப்போதே இது பற்றி என்னிடம் கேட்டிருந்தால், நடந்தது என்ன என்று உனக்குத் தெரிந்திருக்கும்.

இதுவும், அந்த கிருஷ்ணனின் விளையாட்டுதான்’ என்றான் அஸ்வத்தாமன்.

உண்மைதான்; சந்தேகம் ஏற்பட்டால், அது பற்றி சம்பந்தப்பட்டவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிடில் துரியோதனன் போல், தோல்வியை தழுவ வேண்டியது தான்.

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !
தானம் வேறு. தர்மம் வேறு

எது தானம்?  எது தர்மம்?

மகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனுடன் பரம்பொருள் ஈசனை வணங்கி மகிழ்ந்து சுவர்க்க பேறு பெற்றது. சூரிய தேவனுக்கோ மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை. எவரிடம் கேட்பது.? எவர் தெளிவாகக் கூறுவார்கள் ? குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது.

இதை உணர்ந்த ஈசன், அவர் முன் எழுந்தருளினார். சூரியனே, என்ன தடுமாற்றம் உன் மனதில் ? என ஈசன் கேட்க, பரம்பொருளே!  இல்லை என கூறாமல் சகல விதமான தான தருமங்களையும் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணனை போரில் கொன்றது விதி என்று ஏற்றுக் கொண்டேன். ஆனால், எல்லா புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே. பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது? இது அநீதி அல்லவா? என கேட்டார் சூரியத் தேவன்.

சிரித்துக்கொண்டே ஈசன், சூரியனே, நிறைய மனிதர்களுக்குள் ஏற்படும் சலனமே உன்னை இந்தக் கேள்வியை எழுப்ப வைத்ததுள்ளது, சொல்கிறேன் கேள். தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ, அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம். புண்ணியக் கணக்கில் சேராது. ஏனெனில், இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட.

ஆனால், தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.

கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை. எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான். அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. புரிந்ததா ?

இதைக்கேட்ட சூரிய தேவன் " இறைவா! நன்கு புரிந்தது! தானமும் , தர்மமும் , பாவமும் , புண்ணியமும் எல்லாமும் நீயே என்பதை உணர்ந்தேன்! ஈசன் சொன்ன விளக்கம் சூரிய தேவனுக்கு மட்டுமல்ல நமக்கும் நன்றாக புரிந்திருக்கும்!

கேட்டு கொடுப்பது தானம்! கேட்காமல் கொடுப்பது தான் தர்மம்!
#அலமேலு_பாட்டி

நான் நாகப்பட்டினம் ஐஓபியில் பணியாற்றிய போது நாகூர் ப்ரசித்தி பெற்ற பெருமாள் கோவிலின் பின்புறம் உள்ள தெருவில் அலமேலு பாட்டி என்ற மூதாட்டி வசித்து வந்தார். நான் அங்கிருக்கும் போது அடிக்கடி சென்று அந்த பாட்டியை தரிசனம் செய்வதுண்டு. (2002 - 2004) அந்த பாட்டியின் ஒரு மகன் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியாக இருந்தார்.
அந்த பாட்டியை பற்றிய சுவையான பல தகவல்கள் பாட்டியின் வாயால் கேட்டறிந்தது.

தினமும் பால் சாப்பிட்டுக் கொண்டிருந்த பெருமாள், (சுமார் 80 ஆண்டுகள்) பழம் கேட்டு வாங்கி சாப்பிட்ட அற்புதம்.

1915 இல் பிறந்த அலமேலு ஏழுவயது சிறுபெண். சிறுவர்களுடன் அந்த நாகூர் பெருமாள் கோயில் நந்தவனத்தில் ஓடிப்பிடித்து விளையாடி ஓர் ஓரமாய் போய் சாய்ந்து கிடந்த தூண் மீது உட்கார்ந்தாள். திடீரென யாரோ அவளைக் கூப்பிட்ட மாதிரி இருந்தது. கண்ணெதிரில் எவரும் இல்லை. "பசிக்குது பால் கொடு''ன்னு குரல் கேட்டது. மெல்ல தலைதூக்கிய அச்சத்துடன் குரல் வந்த இடத்திற்குப் போய்ப்பார்க்க சுமார் 4 அடி உயரத்தில் பெருமாள் சிலையாய் மல்லாந்து வானத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். மெல்ல அசைத்துப் பார்த்தாள். நகரக்கூட இல்லை. தன் வீட்டில் இருந்தவர்களிடம் அந்த பெருமாள் பற்றிய விவரம் கேட்டாள்.

”நந்தவனம் தோண்டும் போது கிடைச்ச பழைய பெருமாள், "வெளிதேசத்திலிருந்து படையெடுத்து வந்த போது கர்ப்பகிரகத்திலிருந்து எடுத்து வந்து பாதுகாப்பா புதைச்சு வைச்சாங்க. பின்னாடி தோண்டி நிமிர்த்தும்போது கை சின்னதா பின்னமாப்போச்சு. வேற சிலை செய்து மூலஸ்தானத்தில் வைச்சுட்டாங்க' என்ற விவரம் சொல்லப்பட்டது. இனம் புரியாத பற்றும் பாசமும் அவளுக்கு அந்த பெருமாளின்மீது ஏற்பட்டது.

மறுநாள் நந்தவனம் பக்கம் போனபோது மீண்டும் " பசிக்குது பால் வேணும்''ன்னு குரல் கேட்டது. வீட்டுக்கு ஓடினாள் அலமேலு. அவளுக்கென வைத்திருந்த பாலை எடுத்துக்கொண்டு போய் கீழேயிருந்த சிலையின் வாயருகில் வைக்க மெல்ல பால் எங்கே போகிறது எனத்தெரியாமல் கீழேயும் சிந்தாமல் குறைந்து போனது.

அதுமுதல் இப்படியே தினமும் தொடர ஊராரின் நக்கல் நையாண்டிப்பேச்சும் அதிகரித்தது. அந்தப் பெண் கல்யாணம் ஆகியும் அங்கேயே வாழ்க்கைப்பட்டு இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண்குழந்தைகளையும் வளர்த்துக் கொண்டு பெருமாள் பணியையும் தொடர்ந்து செய்து வந்தாள்.

பெருமாள் மழையிலும் வெய்யிலிலும் இவ்வாறு கிடப்பது மனதை உறுத்தவே பின்னப் பட்ட விக்ரகத்தை தனி சந்நிதியில் வைத்து பூஜை செய்ய அனுமதி கேட்க, காஞ்சி கலவைக்குச் சென்று மஹாபெரியவாளை சந்தித்தார் அலமேலு . வரிசையில் நின்ற அந்தப்பெண்ணை அலமேலு என்ற பெயர் சொல்லி அழைத்தார் மஹாபெரியவா.

ஆச்சரியத்தோடு வணங்கி பெருமாளை என்னசெய்வது எனக்கேட்டாள். பரமாச்சாரியாரோ "உன்னோட பிள்ளைக்குக் கை உடைந்தால் தூக்கி தோட்டத்துல கடாசிடுவியா ? உன்னிடம் பால் வாங்கிக் குடிச்ச பெருமாள் உன் பிள்ளை மாதிரி. தனியா சந்நிதியில் வை. ஸ்தபதி மூலமா கையை சரி செய்''ன்னு உத்தரவு கொடுத்தார். நாகூருக்குத் திரும்பிய அவளிடம் பெரும் பணம் எதுவும் இல்லை. யாரோ செய்த உதவியில் தனி சந்நிதி கட்டப்பட்டு ஸ்தபதியால் கை சரிபார்க்கப்பட்டு நிறுவப்பட்டது.

அன்று இரவு பெருமாள் மறுபடியும் பேசினார். "தினம் பாலே தர்றியே. வளந்துட்டேனே, எனக்கு பழம் தரக்கூடாதா?''ன்னு கேட்டார். மறுநாள் பழம் வாங்கிக் கொண்டு பெருமாள் வாய்கிட்டே கொண்டு போனவுடனே கொஞ்சம் கொஞ்சமாக பழம் குறைந்து போனது. தினமுமிது தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. ஊரார் மரியாதையோடு ஆச்சரியப்படத் தொடங்கினர். பெருமாள் சாப்பிட்ட மீதி பழத்தை எதிரில் நிற்கும் யாருக்காவது அலமேலு அம்மாள் கொடுப்பார்கள். பெருமாள் சாப்பிட்ட மீதிப்பழத்தைச் சாப்பிட அவர்களின் பலவிதக்குறைகள் நீங்கி விரும்பிய பலன் பெறுவது பழக்கமாகிப் போனது. அதற்காக வெளியூரில் இருந்தெல்லாம் மக்கள் வரத்தொடங்கினர். அவர்களின் கவலைகள் குறைகள் அனைத்தையும் பெருமாளின் வாழைப்பழப் பிரசாதத்தை அலமேலு கொடுப்பதனால் நீக்கியது தொடர்ந்து கொண்டிருந்தது.

1977- ஆம் ஆண்டு நல்ல மழை பெய்த போது கோயிலின் ராஜகோபுர நாசித்தலை இடிந்து சிதிலமானது. அதனை முன்னின்று எடுத்துச் செய்ய யாரும் இல்லை. பெருமாளிடம் உத்தரவு கேட்டார் அலமேலு. பெருமாள் காட்டிய ஆட்கள் மூலம் அந்த திருப்பணியை அவர்களே செய்ய ஏற்பாடு செய்து அந்தப் பணியையும் முடித்தாள்.

1995-ஆம் வருடம் கோயில் கும்பாபிஷேகம் செய்யவேண்டுமென்று அலமேலு அம்மாள் சொன்னவுடன் யார் யாரோ எங்கிருந்தோ வந்தார்கள். அவர்களே முன்னின்று அவர்களின் கைப்பட அலமேலு வழிகாட்ட செய்தார்கள். கும்பாபிஷேகம் நன்றாக நடந்தது, 2004 ஆம் ஆண்டு ஒருநாள் காலை அலமேலு பெருமாள் திருவடி சேர்ந்தாள்.

ஒரு பெண் ஊட்டிய பாலும் பழமும் சாப்பிட்ட பெருமாள் இன்றைக்கும் வாழைப்பழப் பெருமாள் என அழைக்கப்பட்டு வணங்கப்படுகிறார். தங்கள் கோரிக்கை நிறைவேற பெருமாளை வேண்டிக்கொண்டு மீண்டும் வந்து வாழைப்பழமாலை சாற்றி எல்லோருக்கும் கொடுத்த பிறகு மீதியை வீட்டுக்கு பிரசாதமாக எடுத்துச் சென்று பலன் பெறுகிறார்கள்.

நாகூர் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் என அழைக்கப்படும் தலத்தில் ஐந்து நிலை ராஜகோபுரம், கொடிமரம், கருடாழ்வார் சந்நிதிக்கு வலப்புறம் சந்நிதியில் மஹாலட்சுமி உருவத்துடன் நின்று பெரும்பாலும் பக்தர்கள் சார்த்திய வாழைப்பழமாலையுடன் காட்சி தருகிறார். அந்த சந்நிதியின் மேலே அலமேலு அம்மாளின் சுதை உருவம் எப்போதும் வணங்கிக் கொண்டிருக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.

மூலவர் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம் . பிரகாரத்தில் ஸ்ரீ சுதர்சனரும் தனி சந்நிதியில் அலர்மேல்மங்கைத் தாயார் அமைந்துள்ளார். ஆண்டாள் ஆஞ்சநேயர் சந்நிதிகளும் உள்ளன. திருக்கோயிலின் திருக்குளம் கோயிலின் வலப்புறம் அமைந்துள்ளது. அதன் கரையில் தேங்காய் கட்டி ஆஞ்சநேயர் என்னும் பெயரில் வீர ஆஞ்சநேயர் உள்ளார். இவர் சந்நிதியில் பிரார்த்தனைத் தேங்காய் கட்டினால் ஒரு மண்டலத்துக்குள் காரியம் சித்தியாகும்.

எல்லா நாள்களிலும் வாழைப்பழப் பெருமாளையும்; ஒவ்வொரு சனிக்கிழமை பெருமாளுக்கும்; அமாவாசை ஆஞ்சநேயருக்கும்; தினமும் மாலை பிரதோஷ நேரங்களில் சுதர்சன யோக நரசிம்மருக்கும்; சுதர்சனருக்கும் புதன்கிழமைகளிலும்; பெளர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அலமேலுமங்கை தாயாரையும் வழிபடுவதால் பலன் உண்டு.

வாழைப்பழப் பெருமாளுக்கு அஸ்தம், பெருமாளுக்கு திருவோணம். அனுமாருக்கு மூலம், தாயாருக்கு உத்திரம் ஆகிய நாள்களில் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. இக்கோயிலில் தரிசனம் செய்ய புரட்டாசி மாதம் சிறப்பானது என்றாலும் சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்கி பலன் பெறுவதற்கென பலர் வந்து பலன்பெற்றுச் செல்லும் தலமாகும்.

கலியுகத்தில் உலகத்தைக் காத்து ரக்ஷிக்க இவ்வூரில் வந்து பெருமாள் பிரசன்னமானதால் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் எனவும் தென்திருப்பதி அல்லது சின்னத் திருப்பதி எனவும் அழைக்கப்படுகிறது. திருப்பதி செல்ல முடியாதவர்கள் இயலாதவர்கள் நாகூர் அலர்மேல்மங்கைத் தாயார் உடனாய பிரசன்ன வெங்கடாஜலபதியை வணங்கினால் போதும் என்று சொல்லப்படுவதால் இத்திருக்கோயிலைப் பொறுத்தவரை புரட்டாசி மாதம் முழுவதும் மிகவும் சிறப்பானதாக பக்தர்கள் வருகையுடன் இருக்கும்.

இன்றும்கருடாழ்வார் சன்னதிக்கு அருகில் மேலே அலமேலு பாட்டி பெருமாளுக்கு வாழைபழம்  கொடுப்பது போன்ற சன்னதி உள்ளது.

நாகூரில் பரிகார ஸ்தலமான நாகநாத ஸ்வாமி திருக்கோவிலும் உண்டு. மஹாசிவராத்ரி அன்று நான்காவது கால பூஜை இங்கு விசேஷம்.

ஒன்று முதல் நான்காம் கால பூஜைகளை முறையே

1. கும்பகோணம் நாகநாத ஸ்வாமி
2. திருநாகேச்வரம்
3. திருப்பாம்பரம்
4. நாகூர் நாகநாத ஸ்வாமி

முதலிய க்ஷேத்ரங்களில் தரிசிப்பது விசேஷம்.
"ரயிலைக் கோட்டை விட்ட ஒரு இண்டர்வியூ போன பெரியவா பக்தர்"

கம்பெனியின் உரிமையாளரே காரில் அழைத்துப்போய் வேலையும் கொடுத்த அதிசயம்

இது காஞ்சிமகானின் அருட்பார்வையல்லாமல் வேறென்ன?


ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் லட்சுமணன். வைதீக முறைப்படி தன் வாழ்க்கையை, அமைத்துக் கொண்டவர் அவருக்கு வேலை தேட வேண்டிய கட்டாயம்.

அவருக்கு திருப்பத்தூரில் வேலைக்கு ஒரு இண்டர்வியூவிற்காக அழைப்பு வந்தது. ஜோலார்பேட்டையில் டிரெயினைப் பிடித்துப் போக வேண்டும். ஸ்டேஷனுக்கு வந்தவர் டிக்கெட்டும் வாங்கிவிட்டார். ரயிலில் போனால்  குறித்த நேரத்தில் போய்ச் சேர முடியும்.

ஸ்டேஷனுக்குள் நுழையும் முன், அவர் கண் எதிரே ஒரு வயதான மனிதர், மயங்கிச் சுருண்டு விழுந்தார் லட்சுமணன் அருகில் போய், அவரைத் தாங்கிப் பிடித்து, வேண்டிய முதலுதவிகளைச் செய்து அவரை ஒரு வழியாக உட்கார வைத்தார். அதற்குள் ரயில் போய்விட்டது. அடுத்த ரயிலில் போவதற்குள் இண்டர்வியூ நேரம் முடிந்துவிடும். அதனால் இனி அங்கே போய் பலன் இல்லை என்கிற காரணத்தினால், ஊர்த் திரும்ப முடிவு செய்து, ஸ்டேஷனுக்கு வெளியே வந்து நின்றார்.எப்போதுமே காஞ்சி மகான் மீது அளவற்ற பக்தியுடைய லட்சுமணன், இதுவும் மகானின் திருவுள்ளந்தான் என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டார். இது இல்லாவிட்டால் இன்னொரு வேலையை அவர் தராமலா போய்விடுவார் என்கிற நம்பிக்கை  அவர் மனதில்.

ரஸ்தாவில் எந்தவிதமான வாகனமும் வரவில்லை.ஒரு கார் அப்போது அங்கு வர, தைரியமாக அவர் கையைக் காட்டி நிறுத்தினார். கார் டிரைவரும் வண்டியை நிறுத்தினார். லட்சுமணன் நடந்ததைச் சொல்லி தான் ஊர் போய் சேர 'லிஃப்ட்' தரமுடியுமா என்று கேட்டார்.

"மயங்கிக் கிடந்தவருக்கு உதவி செய்யப்போக, நீங்கள் ரயிலைக் கோட்டை விட்டு விட்டீர்கள் இல்லையா?"

"ஆம்"

"சரி, எனக்கு திருப்பத்தூரில் வேலை இருக்கிறது. அதை முடித்துவிட்டு,'உங்களை உங்கள் இண்டர்வியூ இடத்தில் இறக்கிவிடுகிறேன். போதுமா?"

பழம் நழுவி பாலில் விழுந்தது போலாயிற்று லட்சுமணனுக்கு. காரை ஓட்டி வந்தவர் பெரிய இடத்து மனிதர் போல் தோற்றமளித்தார்.காரில் போகும்போதே லட்சுமணனின் வரலாற்றைக் கேட்டுக் கொண்டே வந்தார். திருப்பத்தூரில் அவரது காரியாலயத்தில் இறங்கிவிட்டு, சற்றுப் பொறுத்து வருவதாகவும், அதுவரை, அவரை (லட்சுமணன்) ரெஸ்ட் எடுத்துக் கொள்ளச் சொன்னார்.

லட்சுமணன் உள்ளே நுழையும் போதே காரியாலயத்தில், காஞ்சி மகானின் பெரிய உருவப்படம், அவரை வரவேற்றது. வணங்கியபின் ஒரு பக்கமாக அமர்ந்தார். அங்கிருந்த ஒரு சிப்பந்தியிடம், அந்தக் கம்பெனியின் பெயர் என்ன, தன்னை அழைத்துக் கொண்டு வந்தவர் யார் என்றெல்லாம் கேட்டார்.

கம்பெனியின் பெயரைக் கேட்டவுடன் வியந்து போனார். தான் இண்டர்வியூவிற்கு வரவேண்டிய கம்பெனி தான் அது. வண்டியை ஓட்டி வந்தவர் கம்பெனியின் உரிமையாளர். அவர் வந்தவுடன் லட்சுமணனை விசாரித்து சொல்கிறார்;

"எப்போ பிறருக்கு உதவவேண்டும் என்கிற எண்ணம்,ஒருவன் மனதில் இருக்கிறதோ, இதனால் தனக்கு வரும் துன்பங்களையும் அவன்  பொறுத்துக் கொள்கிறானோ....அவன் பக்திமான்களை விட மிகச் சிறந்தவன் என்று காஞ்சி மாமுனிவர் சொல்லியிருந்ததை, நீங்கள் நடந்த சம்பவத்தை விவரிக்கும்போதே புரிந்து கொண்டேன்..."

என்று சொன்ன அந்த நிர்வாகி,இண்டர்வியூவுக்கு வந்த லட்சுமணனுக்கு, வேலை போட்டுக் கொடுத்து விட்டார்.

இது காஞ்சி மகானின் அருட்பார்வையல்லாமல் வேறென்ன?.
அம்மா என்று அழைத்தால் ஓடி வருவாள்.  நம் துயர் துடைத்திட, நம்மை காத்திட பல பல வடிவங்களில் அவதாரம்  தரித்தாள் அன்னை பராசக்தி. 

அவள் நாமங்கள் பல பல கோடி. அவைகளை பதிவிட என் இந்த ஆயுட்காலம் போறாது. ஆனாலும் நான் படித்து மகிழ்ந்த சிலவற்றை இங்கு பதிவு செய்கின்றேன்.

சத்-சித்-ஆனந்தம்

‘ஸத் சித் ஆனந்த ரூபிணீ’ சச்சிதானந்த வடிவினள். அதாவது, உண்மை, அறிவு, மகிழ்ச்சி ஆகிய மூன்றின் வடிவினள்.

இறைவன் என்றும் அழியாத சத்தாக-உண்மையாக-மெய்ப்பொருளாக விளங்குகிறான். தேவி எப்போதும் பேரறிவு வடிவாகத் திகழ்பவள்.
*தெளிவு பதிவு*

நாம்தான் பிரம்மம் என்று கூறுகிறது அத்வைதம். நாமே பிரம்மம் என்றால் அதனை நம்மால் ஏன் அறியமுடிவதில்லை. பிரம்மம் என்பது அறியக்கூடிய வஸ்து அல்ல.

அது அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஒன்று. அது எப்படி அறியப்படும் பொருளாக முடியும்? மற்ற பொருள்களுக்கு இனிப்பு சேர்க்க சர்க்கரை சேர்க்கிறோம்.

சர்க்கரைக்கே இனிப்பு ஊட்ட வேறு எதையாவது சேர்க்க வேண்டுமா என்ன? மெழுகுவர்த்தியை ஏற்றி சூரியனைப் பார்க்க வேண்டுமா என்ன? எல்லாவற்றையும் ஒளி ஊட்டக்கூடியது சூரியன்.

நமக்கு இரவு, பகல் உண்டு. சூரியனுக்கு இரவு உண்டா என்ன? அது எப்பொழுதும் ஒளி மயமானது. அது போல பிரம்மம் அறிந்தது அறியாதது என்ற நிலைகளுக்கு அப்பாற்பட்டது.

இப்படி பிரம்மத்தின் தத்துவத்தை கவிதை நயத்துடன் விளக்குகிறார் ஸ்ரீசங்கரர் தன் உபதேசஸாஹஸ்ரி என்ற நூலில்.

நாஹோராத்ரே யதாஸூர்யே ப்ரபாரூபாவிசேஷத: |
போதரூபாத் விசேஷாத் ந போதாபோதௌ ததாத்மனீ ||
இதே கருத்தைத்தான் கடோபநிஷத் இவ்வாறு கூறுகிறது.

அசப்தமஸ்பர்சமரூபமவ்யயம் ததாரஸந்தித்ய மகந்தவச்சயத் |
அநாத்யநந்தம் மஹத: பரந்த்ருவம் நிசாப்ய தந்ம்ருத்யுமுகான்முச்யதே ||

பரப்பிரம்மமானது சப்தம் ஸ்பர்சம், உருவம், சுவை, வாசனை ஆகியவற்றிற்கெல்லாம் அப்பாற்ப்பட்டது. அது மாறுதலற்றது. அதற்கு ஆரம்பமும் கிடையாது; முடிவும் கிடையாது.

எல்லா உற்பத்திக்கும் காரணமான ‘மஹத்’ தத்துவத்திலிருந்தும் அப்பாற்பட்டது பிரம்மம். இதனை அறிந்தவன் மரணத்தை வென்றவனாகிறான்.
சந்தேகக்  குறி

பாகவதமோ, பகவத் கீதையோ, கிருஷ்ணனை பற்றியவையே.   பாகவதம் அவனை, அவன் லீலையை அடையாளம் காட்டுகிறது. பகவத் கீதை அவன் சொல்லை செவி வழியாக சிந்திக்க செய்கிறது.  கீதை அவன் வாக்கை நம் வாழ்க்கையாக்குகிறது.

கீதையை  ஏதேனும் அரை அத்தியாயம் ஒரு நாள்  படித்தாலே போதும்,   துயரம்,  துன்பம், தீமைகள்  விலகும்.  ஒரு சின்ன கதையோடு  இன்றைய கட்டுரை முடியட்டும்.

ஒரு ஏழை பிராமணன் கங்கைக்கரையில் மனைவியோடு வசித்து வருபவன் தினமும்  கீதை பாராயணம் செய்து விட்டு உஞ்சவிருத்தி செல்வான். கிடைத்ததை மனைவியிடம்   கொடுத்து, அன்றைய உணவை கிருஷ்ணனுக்கு நைவேத்யம் பண்ணி விட்டு இருவரும் சாப்பிடுவது வழக்கம். 

வழக்கம் போல் அன்று  கீதையைப்  பாராயணம் பண்ணும் போது ஒன்பதாம் அத்தியாயத்தில் ''யோக க்ஷேமம் வஹாம்யஹம்'' என்ற இடம் வந்தது.   திடீரென்று   இன்று அவனுக்கு ஒரு சந்தேகம்.

இந்த உலகத்தில் கோடானு கோடி பேர் இருக்கிறார்கள்.  அவ்வளவு பேரையும்  கிருஷ்ணன் எப்படி நான்  ரக்ஷிக்கிறேன் என்று சொல்கிறான். தானே  ஒவ்வொருவரின் கஷ்டத்தையும் அறிந்து  நேரில்  சென்று போக்குவது என்பது முடிகிற காரியமா?

எல்லோரின் கஷ்டத்தையும் கிருஷ்ணன் தனி ஒருவனாக எப்படி சுமப்பான்?. அவர்களை  சோகத்திலிருந்து, துன்பத்திலிருந்து எவ்விதம்  விடுவிப்பான்?  உலகில் எங்கும் அங்கங்கே அவன் நியமிக்கும் வேறு யார் மூலமாகவோ ஒரு வேளை நிவர்த்திப்பானோ? நான் பாதுகாக்கிறேன் என்றால் அது தான் அர்த்தமா? 

திரும்பி திரும்பி படித்தும்  அவனுக்கு  இது  விளங்கவில்லை. இதை விடக்கூடாது எப்படி என்று புரிந்து கொள்ளவேண்டும்  என்று தீர்மானித்து  சிகப்பு வர்ணத்தில் ஒரு   x  அந்த  அந்த அத்தியாயத்தில் ஸ்லோகத்தின் மேல் குறி வைத்தான். புத்தகத்தை மூடினான்.  சொம்பை ஜால்ராவை எடுத்துக் கொண்டு வழக்கம் போல  உஞ்ச விருத்திக்கு சென்றுவிட்டான்.

அந்த ஏழை பிராமணனின் போறாத காலமோ, துரதிர்ஷ்டமோ   அன்றைக்கு பார்த்து ஒருவீட்டிலும் யாரும்  அவனுக்கு தானியங்கள் பிக்ஷை  அளிக்கவில்லை. ஏதோ ஒரு காரணம் ஒவ்வொருவரும் சொன்னார்கள்.

பிராமணன் வழக்கமான தெருக்களில் அலைந்துகொண்டிருந்த சமயம் யாரோ ஒரு சிறு பையன் பிராமணன் வீட்டு கதவைத்  தட்டினான்.  பிராமணன் மனைவி வாசல் கதவை திறந்த போது. அழகான  அந்த சிறுவன்  தலையிலிருந்து ஒரு பெரிய மூட்டையை இறக்கி வீட்டில் வைத்தான்.

யார் அப்பா நீ ? என்ன இதெல்லாம்?  அட்ரஸ் தப்பா  இங்கே வந்து விட்டாய் போல இருக்கிறது?

''இல்லேம்மா, நான் இங்கே  இருக்கிறவன்  தான். இது என் குருநாதர் வீடு.  அவர் எனக்கு கட்டளை இட்டதால் அவருக்கு  தேவைப்பட்ட  சாமான்கள் இதெல்லாம் கொண்டு வந்திருக்கிறேன்.''

மூட்டை நிறைய , பருப்பு, மாவுகள், அரிசி, சமையல் சாமான்கள், எண்ணெய்கள், நெய்  எல்லாமே இருந்தது.  தாராளமாக  மூன்று மாதத்திற்கு அவர்கள்  ரெண்டு பேருக்கு சமையலுக்கு தேவையானவை.

''நான் இங்கே உன்னை பார்த்ததில்லையே அப்பா.  எங்களுக்கு இதெல்லாம் வேண்டாமப்பா. அவருக்கு தெரியாமல் இதை நான் ஏற்க மாட்டேன். என்னை கோபிப்பார்''

அம்மா ஒருவேளை உங்களுக்கு   நான் இங்கே வருவதும் தெரியாது போவதும் தெரியாது.  குருநாதருக்கு தெரியும். இதோ பாருங்கள் நான் மூட்டையை சுமந்து  மெதுவாக நகர்கிறேன் என்று  என் மேல் இடது பக்கமும் வலது பக்கமும்  பலமாக  முதுகில் அடித்திருக்கிறார்.

என் முதுகில் பாருங்கள் தெரியும்.  குரு பத்னி அவன் அழகிய முதுகில் பார்த்தாள் .   X  என்று  சிவப்பாக  அவள் கணவன்   அடித்ததின்   அடையாளம்.   அவள் திகைத்தாள்.  ஏன்  என் கணவர் இவ்வாறு இந்த சிறுவனிடம்  அவ்வளவு கொடுமையாக நடந்து கொண்டார். இப்படிப்பட்டவரா என் கணவர்?  பார்ப்பதற்கு சாது மாதிரி இருக்கிறாரே!  . 

''என் குழந்தை நீ இங்கே வாடா என்று அந்த சிறுவனை உள்ளே அழைத்து  முதுகைத் தடவி, தேங்காய் எண்ணெய் தடவி, அவனுக்கு  உணவளித்தாள்.   அவர் வரும் வரை ஓய்வெடு என்றதும் அவன் பூஜை அறையில் போய்  படுப்பதாக  சொல்லி உள்ளே சென்றான்.

ரொம்ப நேரம் கழித்து களைப்பாக  எங்கும்  அன்று உணவு பதார்த்தங்கள், தானியங்கள் பிக்ஷை எதுவும் கிடைக்காமல் பிராமணர்  விசனத்தோடும் வெறும் கையோடும்  வீடு திரும்பினார். 

அவர்  தலையைக் கண்டவுடன் முதல் கேள்வியாக அவரை  எதுவும் பேச விடாமல்  சரமாரியாக  அவள்  அந்த அழகிய சிறுவன்,  சிஷ்யனா,  அவர் எப்போது அவனிடம்   சாமான்கள் கேட்டு கொண்டு வர சொன்னார் . அவன்  சாமான்களை தூக்க முடியாமல்  தூக்கி வந்தது. அவன் மெதுவாக நடந்ததால் முதுகில் பிரம்பால்  குறுக்கும் நெடுக்குமாக   அவர்  அடித்த சிவந்த அடையாளம்  எல்லாம் சொல்லி ஏன் அவனை அடித்தீர்கள் என்று காரணம் கேட்டாள் .

பிராமணருக்கு தலை சுற்றியது.

''எனக்கு சிஷ்யனா?  நான் சாமான் கேட்டேனா?  அவன் மெதுவாக நடந்ததால் முதுகில் அடித்தேனா?  என்னம்மா உளறுகிறாய். நீ சொல்வது எதுவுமே நடக்கவில்லையே. எனக்கு யாரும் சிஷ்யனே கிடையாதே. நான் சாமான் கேட்கவில்லையே, அடிக்கவில்லையே''.

''நீங்கள் அடித்தீர்கள் என்று முதுகை காட்டினானே   X  என்று சிவப்பாக அடையாளம் இருந்ததே. சின்ன குழந்தை அவன் பொய் சொல்லவில்லை. நான் முதுகில் தேங்காய் எண்ணெய் தடவினேன். என்  கண்களில் நீர் பெருகியதே. ''

 ''இல்லை என்  கிருஷ்ணன்  சாட்சியாக எனக்கு அவனைத் தெரியவே தெரியாது, நான் அடிக்கவில்லை'' என்கிறார்.

''இதோ பூஜை அறையில் தான் இருக்கிறான் போய் பாருங்கள் '.  ஓடினார்.  வீடு முழுதும் தேடினார்.  அவனைக் காணோம்.

பிராமணருக்கு   புரிந்துவிட்டது. வந்தது  கிருஷ்ணன் தான்.  வீட்டில் நிறைய  சாமான்கள் வசதியாக நிறைந்திருந்ததே. அவர் வறுமை நீங்கியதே.  இது கிருஷ்ணன் லீலை. அவன் மீது நன்றியோடு கீதை புத்தகத்தை எடுத்து  மறுபடியும்  பாராயணம் செய்ய பக்கத்தை புரட்டினார்.  காலையில்  அவர் சந்தேகத்தோடு  போட்ட X  குறியைக் காணோம். யார் அழித்தது? 

''கிருஷ்ணா,   கோடானு கோடி மக்களின் துயர், சோகம் தீர நான் அருகிலே  இருப்பேன் என்று சொல்கிறாயே. உன்னால் அது எப்படி சாத்தியம் என்று சந்தேகப்பட்டேனே.  என் வறுமைத் துயர் தீர்க்க நீ என் வீட்டிற்குள்  வந்தாய், வறுமையை போக்க  உணவளிக்க  மளிகை சாமான்களை நிரப்பினாய். உன் காருண்யம் புரிந்தது. உன்னால் முடியும் என்று புரிய   வைத்தாய்.

அதற்கு  அடையாளமாக நான் போட்ட சந்தேக குறியை முதுகில் தாங்கி  என் மனைவிக்கு தரிசனம் தந்தாய். அவள் செய்த  புண்யம், அதிர்ஷ்டம் கூட  செய்யாத பாவி நான் உன்னை சந்தேகப்பட்டேன்''. 

ஆம்  கீதையும் கண்ணனும் ஒன்றே.  கீதையை இது எப்படி என்று சந்தேகக்கப்பட்டு  அழுத்தி X  கோடு போட்டேன்,  கீதை நீ என்று அறியாத மூடன், அதை உன் மேல் சந்தேகப்பட்டதாக காட்டி முதுகில் வடுவோடு , காயத்தோடு என் மனைவிக்கு காட்டி எனக்கு கண் திறந்தாய். கிருஷ்ணா  என்னை மன்னித்துவிடு''.

எவன் அவனவனுக்கு நியமிக்கப்பட்ட தர்மங்களை, சாஸ்திரங்களை பின்பற்றாமல்  மிருக வாழ்க்கை நடத்துகிறானோ, அவன் எதிர்பார்த்தது எதுவும் நடக்காது.

இன்று முழுதும் உஞ்சவிருத்தியில் ஒரு மணி அரிசி கூட எனக்கு  கிடைக்கவில்லையே. இது நிதர்சனமான உண்மை இல்லையா?

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம்  !
காசியில் வாழ்ந்த ஒருவர் மிகப் பெரும் செல்வந்தர்.. அவருக்கு மனைவி குழந்தைகள் என்று யாரும் இல்லை. பரோபகாரி._

_ஒரு தீபாவளிக்கு முன் ஒருநாள், தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மிக சிறந்த விருந்து ஏற்பாடு செய்து அவரே முன்னின்று அனைவரையும் உபசரிக்கிறார்.._

_விருந்து முடிந்தவுடன், ஒவ்வொருவருடைய இருக்கைக்கு முன் இரண்டு பெரிய வண்ண கவர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒன்றில் பணம் என்றும் மற்றொன்றில் புனித கீதை என்றும் எழுதி வைக்கபட்டுள்ளது.._

_நண்பர்களே, நீங்கள் எனக்காக உண்மையாக உழைக்கிறீர்கள். உங்கள் வேலைக்கேற்ற அல்லது அதற்கும் அதிகமாகவே உங்களுக்கு சம்பளமும் கொடுத்து வந்துள்ளேன்.. என்னுடைய இந்த செல்வம் இறைவனால் அருளப்பட்டது.. என்னுடைய செல்வத்தை எவ்வாறு செலவழித்தேன் என்று இறைவனுக்கு பதில் சொல்ல கடமைபட்டுள்ளேன்..._

_உங்கள் முன் இரண்டு கவர்கள் உள்ளன. ஒன்றில் பணம், மற்றொன்றில் புனித கீதை. இதில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்..._

_முதலாமவர் தயங்கியவாறே  முதலாளியிடம் சொன்னார்... முதலாளி, புனித புனித கீதையை. மதிக்கிறேன். ஆனால் இப்போதைக்கு, நோய்வாய்பட்டிருக்கும் என் தாய்க்கு நல்ல சிகிட்சை அளிக்க வேண்டும். அதற்கு பணம் வேண்டும்.. பணம் என்று எழுதப்பட்ட கவரை எடுத்து கொண்டார்..._

_அடுத்தவர், என் ஓலை குடிசைக்கு பதில், சின்னதாக ஒரு கல் வீடு கட்ட வேண்டும்.. இந்த பணம் இருந்தால் என் கனவு வீடு கட்ட முடியும்... பணத்தை எடுத்து கொண்டு முதலாளிக்கு நன்றி சொல்லி நகன்றார்..._

_இப்படியே அடுத்தடுத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களோடு பணத்தை எடுத்து கொண்டனர்..._

_கடைசியாக, முதலாளியின் தோட்டத்தில் உள்ள கால்நடைகளை பராமரிக்கும் வாலிபனுடைய முறை..._

_அவன் பரம ஏழை. வயதான தாய். மனைவி மற்றும் பிள்ளைகள்..._

_அவன்  பணத்தின் தேவை அறிந்தவன்.. அவனும் பணம் உள்ள கவர் அருகில் சென்று, அதை எடுத்து கையில் வைத்து கொண்டு முதலாளியிடம்...... என்னுடைய தேவைக்கு நான் எப்போது கேட்டாலும் நீங்கள் தரத்தான் போகிறீர்கள்.. மேலும் என் அம்மா அடிக்கடி சொல்வார்கள்,  ...... ஏழ்மை என்பதும் இறைவனால் அருளப்பட்டதே...  நம் தேவைகளை நிறைவேற்றுபவனாக எல்லாம் வல்ல இறைவன் இருக்கின்றான்... மேலும், எங்கள் வீட்டில் ஒரு பழக்கம்..._

_தினசரி, அதிகாலை  வழிபாட்டிற்கு பிறகும், மாலையில் அந்தி சாயும் நேரத்து பூஜைக்கு பிறகும்,என் அம்மா *புனித கீதை* படித்து . அதன் அர்த்தம் சொல்லுவார்கள். நாங்கள் சுற்றி அமர்ந்து அதை செவிமடுப்போம்... என்று சொன்ன அந்த வாலிபன், எடுத்த பண கவரை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு.....  நான் இந்த புனித கீதையையே தேர்ந்தெடுக்கிறேன் என்று அதை எடுத்தான்...._

        _சம்பவம் இதோடு முடியவில்லை நண்பர்களே,_

_.....புனித கீதை.  இருந்த பெரும் கவரை எடுத்தவன், முதலாளியிடம் நன்றி சொன்னவன்.. அதை திறந்து பார்க்கிறான்......... ஆச்சர்யம் புனித கீதை இருந்த கவருக்குள் மேலும் இரண்டு கவர்கள்.... ஒன்றில், பணமும் மற்றொன்றில்  செல்வந்தரின் சொத்துக்களின் ஒரு பகுதியை  தானமாக எழுதி கையெழுத்திட்ட பத்திரம்... யாருக்கு என்ற பெயர் மட்டும் எழுதப்படாமல் இருந்தது...._

_அந்த வாலிபன் மட்டும் இல்லை,, ஏனைய தொழிலாளர்களும் அதிர்ந்து போயினர்..._

_*செல்வம்* நிலையானது அல்ல... இன்றைய நிலை அப்படியே தலைகீழாக மாறும், இறைவன் நினைத்தால்..._

_இறைவன் கொடுக்க நினைத்தால் எப்படியும் கொடுப்பான். வாலிபன்  *தாய் சொன்னதை* நம்பினான்... ஆம், அவள் சொல்லிக் கொடுத்திருந்த.... இறைவனையே நம்பு.. அவனிடமே உன் தேவைகளை கேள்.. அள்ள அள்ள குறையாத செல்வத்தை அவன் வழங்குவான்..... அசைக்க முடியாத *"இறை நம்பிக்கையே, பெரிய செல்வம்"* மற்ற செல்வங்களிலெல்லாம் சிறந்த செல்வம் அல்லவா...._
*தேன்கூடு தினம் ஒரு கதை (22.05.2020)*

*பலி கடா..*
ஒரு விவசாயி குதிரையையும், ஆட்டையும் வளர்த்து வந்தான்.. குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்கள்.. ஒரு நாள் அந்த குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது.. அதனால் அந்த விவசாயி குதிரைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து வந்தான்.. மருத்துவர் அந்த குதிரையின் நிலையை பார்த்து, *நான் மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன்.. அந்த மருந்தை சாப்பிட்டு குதிரை எழுந்து நடந்தால் சரி, இல்லையெனில் அதனை கொன்றுவிட வேண்டியது தான்* என்று சொல்லி, அன்றைய மருந்தை கொடுத்துச் சென்றார்.. இவர்களது உரையாடலை அந்த ஆடு கேட்டுக் கொண்டிருந்தது.. மறுநாள், அந்த மருத்துவர் வந்து அன்றைய மருந்தைக் கொடுத்து சென்றார்.. பின் அங்கிருந்த ஆடு, அந்த குதிரையிடம் வந்து, *"எழுந்து நட நண்பா, இல்லாவிட்டால் அவர்கள் உன்னை கொன்று விடுவார்கள்"* என்று அந்த குதிரையை ஊக்குவித்தது.. மூன்றாம் நாளும் வந்துவிட்டது, மருத்துவரும் வந்து குதிரைக்கு மருந்து கொடுத்துவிட்டு, அந்த விவசாயிடம் *"நாளை குதிரை நடக்கவில்லையெனில், அதனை கொன்றுவிட வேண்டும்.. இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி, மற்றவர்களுக்கு பரவிவிடும்.."* என்று சொல்லிச் சென்றார். அந்த மருத்துவர் போனதும், ஆடு குதிரையிடம் வந்து, *நண்பா ! எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய்.. உன்னால் முடியும், எழுந்திரு! எழுந்திரு!* என்று சொல்லியது.. அந்த குதிரையும் முயற்சி செய்து எழுந்து நடந்துவிட்டது.. எதிர்பாராதவிதமாக அந்த குதிரையை விவசாயி பார்க்க வரும் போது, குதிரை ஓடியதைப் பார்த்து சந்தோஷமடைந்து, மருத்துவரை அழைத்து அவரிடம் *"என்ன ஒரு ஆச்சரியம்.. என் குதிரை குணமடைந்துவிட்டது.. இதற்கு நிச்சயம் உங்களுக்கு ஒரு விருந்து வைக்க வேண்டும்.. சரி, இந்த ஆட்டை வெட்டுவோமா.."* என்று சொன்னார்..
🐝
 _பார்த்தீர்களா! இந்த கதையில் உண்மையில் குதிரை குணமடைந்ததற்கு அந்த ஆடு தான் காரணம்._ *_ஆனால் மருத்துவரின் மருந்தால் தான் குதிரை குணமடைந்தது என்று எண்ணி, கடைசியில் அந்த ஆட்டையே பலி கொடுக்க நினைக்கிறார்கள்._*_இந்த உலகில் யாரால் நன்மை கிடைத்ததோ, அவர்களை விட, அந்த நன்மைக்கு அருகில் இருப்பவர்களுக்குத்தான் அதிக மரியாதை கிடைக்கும்.._
🐝
🌹💫 *”சர்வம் கிருஷ்ணார்பணம்” இந்த வாக்கியத்தை முதலில் கூறியது யார்?*💫🌹
சர்வம் கிருஷ்ணார்பணம் என்று சொன்னவன் கர்ணன்.

பரசுராம் என்ற பிரமணரின் சாபத்தால் பாரத போரில் தோற்ற கர்ணன்:

முன்னொருநாளில் அந்தணரால் கொடுக்கப்பட்ட சாபத்தால் போர் தருவாயில் கர்ணனின் தேர் சகதியில் சிக்கிக் கொள்கிறது.

பரசுராமரின் சாபத்தால் முக்கியமான தருணத்தில் அஸ்திரத்திற்கான மந்திரம் கர்ணனுக்கு மறந்து போகிறது.

கர்ணன் உடல் மீது அர்ஜுனனின் அம்புகள் தைத்தது. ஆனாலும் உயிர் பிரியவில்லை.

அந்தனராக வந்த கிருஷ்ண பகவான்:

பின்பு கிருஷ்ணபகவான் அந்தணர் வேடத்தில் கர்ணன் முன் தோன்றி தான் மலைகளில் தவம் பூண்டிருப்பதாகவும் கர்ணனின் கொடை குறித்து அறிந்ததால் கர்ணனிடன் யாசகம் பெற வேண்டி வந்ததாக உரைக்கிறார்.

இந்த இடத்தில் கிருஷ்ண பரமாத்மா பொய் உரைப்பதாக தோன்றும். ஆனால் அவ்வாறு அல்ல.

பகவான் அனைவர் மனதிலும் நித்தம் நித்தம் தவம் செய்து கொண்டுதான் இருக்கிறார்.

அதை நாம்தான் உணர மறுக்கிறோம்

சர்வம் கிருஷ்ணார்பணம்:

யாசகம் கேட்டு வந்திருப்பது அந்தணர் அல்ல கிருஷ்ணர்தான் என்றுணர்ந்த கர்ணன். என்னிடம் இல்லாததை கேட்டு என்னை இல்லை என்று சொல்ல வைத்துவிடாதே என்று அந்தணர் வேடம் பூண்ட கிருஷ்ண பரமாத்மாவை பணிகிறான்.

கிருஷ்ணரும் “நீர் செய்த புண்ணியத்தை கொடுப்பாயா” என்று வினவிகிறார்.

அதற்கு கர்ணன் “நான் செய்த, செய்யும், செய்யப் போகும் புண்ணியம் அனைத்தையும் உனக்கு தருகிறேன்” என்று இதயத்தில் தைத்த அம்பை எடுத்து தனது குருதியின் வாயிலாக தர்மம் செய்கிறான்.

அந்த சமயத்தில் கிருஷ்ணரை பார்த்து சர்வம் கிருஷ்ணார்பணம் என்று கூறுகிறான்.

யாசகத்தை பெற்றுக் கொண்டு தனது விஸ்வரூபத்தை கர்ணனுக்கு காட்டுகிறார்.

கர்ணன் பரவச நிலை அடைந்து “எனக்கு முக்தி வேண்டும் அப்படி முக்தி இல்லை என்றால் வரும் பிறப்புகளிலும் இல்லை என்று சொல்லா இதயம் வேண்டும் என்று வரம் கேட்கிறான்.

கிருஷ்ணரும் அருள்கிறார்.

இங்கே யாசகம் கொடுக்கும் போது கிருஷ்ணரின் கை தாழ்கிறது. கர்ணனின் கை உயருகிறது.

கர்ணனுக்கு ஒரு ஆசை உண்டு. அது யாதெனில் எல்லாருக்கு யாசகம் செய்தாயிற்று, கிருஷ்ண பகவானுக்கு மட்டும் யாசகம் செய்யவில்லை என்பதுதான்.

பகவான் கிருஷ்ணன் தன் பக்தனுக்காக இங்கே தன்னை தாழ்த்திக் கொள்கிறார்.

!! ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து !!
பகவான் ஜெகந்நாதருடைய மஹாபிரசாதத்தின் மஹிமை

,🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஒரு முறை நாரத முனிவர், வைகுந்தம் சென்று லட்சுமி தேவிக்கு பணிவுடன் சேவை செய்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த லட்சுமி தேவி, நாரதருக்கு வேண்டிய வரத்தை தர விழைந்தார். நாரத முனிவர் லட்சுமி தேவியிடம், தான் வேண்டும் வரத்தை கண்டிப்பாக தர வேண்டும் என்று வாக்குறுதி பெற்றுக்கொண்டார். அவ்வாறே நாரதருக்கு லட்சுமி தேவி வாக்களித்த பிறகு, நாரதர், தனக்கு பகவான் நாராயணருடைய மஹா பிரசாதம் வேண்டுமென்று கேட்டார்.

இதை சற்றும் எதிர்பாராத லட்சுமி தேவி, வருத்தத்துடன் நாரதரிடம், "என் கணவர் என்னிடம் அவருடைய மகா பிரசாதத்தை யாருக்கும் கொடுக்க கூடாது என்று கூறியுள்ளார். நான் எவ்வாறு என் கணவரின் ஆணையை மீற முடியும்? என்னால் முடியாது" என்று பதிலளித்தார். லட்சுமி தேவியின் வாக்கை நினைவுபடுத்திய நாரதர் தனக்கு எவ்வாறாவது பகவானுடைய மகா பிரசாதம் வேண்டும் என்று பிடிவாதமாய் இருந்தார். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட லட்சுமி தேவி, செய்வதறியாது தவித்தார். அன்று மதியம் பகவானுக்கு அன்போடும் கவனத்தோடும்  உணவு பரிமாறினார் லட்சுமி தேவி. இருப்பினும் பகவான் நாராயணர், தன் மனைவியின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை என்று அறிந்து அதற்கான காரணத்தை கேட்டார். பகவானின் பாதகமலங்களில் சரணடைந்த படியே, வேதனையுடன் தன்னுடைய சூழ்நிலையை எடுத்துரைத்தார் லட்சுமி தேவி. மிகவும் பரிவோடு பகவான், தன் மனைவியிடம், "இன்றொருநாள் என்னுடைய ஆணையை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். நான் சாப்பிட்ட தட்டை நீ நாரதருக்கு வழங்கலாம். ஆனால் நான் என் முகத்தை எதிர்திசையில் திருப்பியவுடன், எனக்கு தெரியாமல் நீ தட்டை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினார். மிகவும் மகிழ்ச்சி அடைந்த லட்சுமி தேவி, அவ்வாறே செய்தார். நாரத முனிவரிடம் மகா பிரசாதத்தை வழங்கினார்.

அதை பெற்ற நாரதர் மிகவும் மரியாதையுடன் அதனை உண்டு மகிழ்ந்தார். மகா பிரசாதத்தை உண்டவுடன் நாரதர், மெய் மறந்த நிலையில் பகவானின் நாமங்களை பாடியபடி இடைவிடாது ஆடவும் செய்தார். அவருடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல்ஒரு பைத்தியக்காரனை போல் அண்டம் முழுவதும் ஒவ்வொரு கிரகமாக ஓடி கொண்டிருந்தார். இறுதியாக சிவ பெருமானின் இருப்பிடமான கையிலாயத்திற்கு வந்தடைந்தார்.

சிவபெருமான் நாரதருடைய நிலை கண்டு ஆச்சரியமடைந்தார். பகவான் விஷ்ணுவின் பக்திக்கடலில் மூழ்கியிருந்த நாரதர், தன்னை கவனிக்கவில்லை என்பதை உணர்ந்த சிவபெருமான், நாரதரை சமாதானப்படுத்தி அவரிடம் அதற்கான காரணத்தை வினவினார். நாரத முனிவர், பகவானின் மகா பிரசாதம் கிடைத்த கதையை கூறினார். சிவபெருமான் மிகவும் ஆச்சர்யத்துடன் நாரத முனிவரிடம், "நாரத முனிவரே! பகவான் நாராயணருடைய மகா பிரசாதத்தை உண்ணக்கூடிய பெரும் பாக்கியம் பெற்றவர் நீங்கள். எனக்கு சிறிது மகா பிரசாதத்தை கொண்டு வந்துள்ளீர்களா?" என்று வினவினார். நாரதர், தான் மகா பிரசாதம் ஏதும் எடுத்து வரவில்லை என்று கை கூப்பிய படி தன் வருத்தத்தை சிவபெருமானிடம் தெரிவித்தார். அப்போது தன் கைவிரலின் நகக்கண்ணில் ஒரு சிறுதுளி மகா பிரசாதம் இருந்ததை பார்த்த நாரதர், மகிழ்ச்சியில் துள்ளியபடி, சிவபெருமானிடம் காண்பித்தார். அதை தன் வாயில் வைத்தவுடன், சிவபெருமான் மிகவும் பக்திக்கடலில் மூழ்கியபடி, பிரளயம் ஏற்படும்போது மட்டும் ஆடும் சிவதாண்டவத்தை ஆடினார். இதனால் அண்டம் முழுவதும் அதிர்ந்தது. தேவர்கள் அனைவரும் அஞ்சி நடுங்கினர். இது பிரளயத்திற்கான சமயம் இல்லை. பிறகு ஏன் சிவபெருமான் தாண்டவம் ஆடுகின்றார்? என்று குழம்பினர். இருப்பினும் சிவபெருமானை நெருங்க பயந்து, அனைவரும்  பார்வதி தேவியை தஞ்சம் அடைந்தனர். சிவபெருமானை  சமாதானப்படுத்தாவிடில், பிரளயம் ஏற்படும் என்று கூறினர்.

பார்வதி தேவியும் இதற்கு சம்மதித்தார். மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆடிக்கொண்டிருந்த சிவபெருமானை நெருங்கிய பொது, அவர் சுய நினைவிற்கு வந்தார். பார்வதி தேவி, சிவபெருமானிடம், "ஐயனே! தங்களுக்கு என்னவாயிற்று? எதற்காக தாண்டவம் ஆடினீர்கள்?" என்று வினவினார். சிவபெருமான் நடந்ததை விவரித்தார். பார்வதி தேவி மிகவும் ஆச்சரியமடைந்தார். அதோடு சிவபெருமானிடம், "எனக்கு மகா பிரசாதம் வைத்துள்ளீர்களா?", என்று வினவினார். சிவபெருமான், "எனக்கே நாரதருடைய நகக்கண்ணில் இருந்த ஒரு துளி மகா பிரசாதம் மட்டும் தான் கிடைத்தது. அதில் நான் எப்படி மீதம் வைக்கமுடியும்?" என்று பதிலளித்தார்.

இதை கேட்ட பார்வதி தேவி மிகவும் கோபம் கொண்டார். அவருடைய கோபத்தினால் எழுந்த அக்னி, அண்டம் முழுவதும் வெட்பத்தை உண்டாக்கியது. பாதாள லோகங்கள் முதல் பிரம்மலோகம் வரை இருக்கும் அனைவராலும் அந்த வெட்பத்தை உணர முடிந்தது. ஏதோ விபரீதம் நடக்கவிருக்கிறது என்பதை அனைவரும் உணர்ந்தனர். உடனடியாக பிரம்மதேவரின் தலைமையில் அணைத்து தேவர்களும் பகவான் விஷ்ணுவிடம் இதை தெரிவிப்பதற்காக வைகுந்தம் விரைந்தனர். பகவான் விஷ்ணு, உடனடியாக கருட வாகனத்தில், கயிலாயம் நோக்கி புறப்பட்டார்.

பகவான் விஷ்ணுவை கண்டவுடன், பார்வதி தேவி, தனது வணக்கங்களை தெரிவித்தார். பகவான் விஷ்ணு, பார்வதி தேவியை ஆசீர்வதித்து, "உனக்கு எவ்வளவு மகா பிரசாதம் வேண்டுமென்றாலும் நான் தருகிறேன். தயவு செய்து உன்னுடைய கோபத்தை கைவிடுவாயாக. இல்லையென்றால் அகிலம் முழுவதும் அழிந்து விடும்" என்று கேட்டுக்கொண்டார். ஆனால் பார்வதி தேவி இதற்கு சம்மதிக்கவில்லை. "எனக்கு மட்டும் நீங்கள் மகா பிரசாதம் கொடுத்தால் போதாது. என்னுடைய பிள்ளைகளான அகிலத்து வாசிகள் அனைவருக்கும் உங்களுடைய மகா பிரசாதம் கொடுக்க வேண்டும். உங்களுடைய மஹாபிரசாதம் கிடைக்காமல் நான் தவித்ததுபோல் என்னுடைய பிள்ளைகளும் தவிக்க நான் விரும்பவில்லை" என்று கூறினார். இதை கேட்ட பகவான் விஷ்ணு, "ததாஸ்து (அப்படியே ஆகட்டும்)" என்று கூறினார். மேலும், பார்வதி தேவியிடம், "உன்னுடைய ஆசையை நிறைவேற்றுவதற்காக நான் நீலாசால தாமம் என்ற இடத்தில அவதரிப்பேன். என்னுடைய இந்த கோவிலானது பிரசாத விநியோகத்திற்கென்றே பிரசித்தி பெறும். இங்கு வந்து யார் பிரசாதம் உண்டாலும் அவர்கள் முக்தி அடைவார்கள்.  என்னுடைய பிரசாதம் அனைத்தும் உனக்கு முதலில் நெய்வேத்தியம் செய்யப்படும். அதன் பிறகே அது மகா பிரசாதம் என்று ஏற்கப்படும். இந்த மகா பிரசாதம் அனைவருக்கும் விநியோகிக்கப்படும். இதற்காக நீ என்னுடனேயே இருக்க வேண்டும். என்னுடைய கோவிலின் சந்நிதானத்திலேயே உன்னுடைய ஆலயமும் இருக்கும். உன்னுடைய கணவர் உனக்கு மகா பிரசாதம் கொடுக்க தவறியதால் அவருடைய ஆலயம் என்னுடைய சந்நிதானத்திற்கு வெளியே இருக்கும்" என்று கூறினார்.

பகவான் விஷ்ணு, பூரியில். ஜெகந்நாதராக அவதரித்தார். பார்வதி தேவி அங்கு விமலா தேவியாக அவதரித்தார். பகவான் ஜெகந்நாதருக்கு நெய்வேத்தியம் செய்யப்படும் அனைத்தும் விமலா தேவிக்கும் நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. அதன் பின்னரே அது மஹாபிரசாதமாக ஏற்கப்படுகிறது. இந்த மகா பிரசாதத்தை அனைத்து மக்களும் பாகுபாடின்றி பெற்றுக்கொள்ளலாம். சாஸ்திரங்கள் கூறுவது யாதெனில், "ஒரு நாயின் வாயிலிருந்து கூட ஒரு பிராமணர் மஹாபிரசாதத்தை எடுத்து உண்ணலாம். எந்த வித தீட்டும் கிடையாது. இதுவே பகவான் ஜெகந்நாதருடைய மஹாபிரசாதத்தின் மஹிமை".