திங்கள், 7 அக்டோபர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 55 ॐ

ஆனித் திருமஞ்சனம்!

ஆதிரையைத் தவிர நடராஜர் வீதி உலா தேரில் வரும் இன்னொரு நிகழ்ச்சி "ஆனித் திருமஞ்சனம்" ஆகும். இது ஒவ்வொரு வருஷத்திலும் தமிழ் மாதம் ஆன ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தில் நடை பெறுகிறது. உத்தர பால்குனி என்றே தீட்சிதர்கள் இதைக் குறிப்பிடுகின்றனர். நடராஜருக்கு அப்போது அபிஷேகம் நடைபெறுகிறது. ஆங்கில மாதம் ஆன ஜூன் நடுவில் இருந்து ஜூலை நடுவரை உள்ள ஒரு நாளில் உத்திர நட்சத்திரம் வரும்போது இந்தத் திருவிழா நடைபெறும். கோடைக் காலத்தின் நடுவே நடைபெறும் இந்த உற்சவமும், வானமும், நட்சத்திரங்களும் சார்ந்தே இருக்கிறது. ஆகாயத் தலம் ஆன சிதம்பரத்தின் அனைத்து நிகழ்வுகளுமே ஆகாயம் சார்ந்து இருப்பதில் வியப்பு என்ன?

இந்த உத்திர நட்சத்திரம் "துருவ" நட்சத்திரம் என்று இந்தியர்களாலும், "pole star" என மற்றவர்களாலும் குறிப்பிடப்படும் நட்சத்திரத்துக்குச் சமானம் என்று சிலப் பழைய நூல்கள் தெரிவிப்பதாய்ச் சொல்கின்றார்கள். ஆனிமாதம் உத்திர நட்சத்திர நன்னாளில், ஆகாயத்தின் வடதிசையில், இந்தத் துருவ நட்சத்திரம் என்றழைக்கப் படும் நட்சத்திரம், தன் நட்சத்திரக் குடும்பத்து மற்ற நட்சத்திரங்களுடன், "ராஜ சபை" என அழைக்கப் படும், ஆயிரங்கால் மண்டபத்திற்கு மேல் தெரிவதாயும் சொல்லுகிறார்கள். இதைத் தவிர, மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரத்திலும், தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்திலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இதில் தை மாதப் பூச நட்சத்திரத்தில் வரும் உற்சவம் மிக முக்கியமாய்க் கருதப் படுகிறது. ஆடல்வல்லான் தன் ஆனந்தத் தாண்டவத்தைச் சித் சபையில் இந்த குரு பூசத்தில் நடத்தியதாய்ச் சொல்லப் படுகிறது. இந்த குரு பூசம் என்பது 5 வருஷங் (அல்லது அதற்கு மேலும் சில சமயம் ஆகிறது,)களுக்கு ஒருமுறை,மட்டுமே வரும் இந்தத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக, பதஞ்சலி, வியாக்ரபாதர் இருவருக்கும் இறைவன் தன் நாட்டியத்தைக் காட்டி முக்தி கொடுத்ததாய்க் கூறப்படுகிறது. முதன் முதல் தில்லைப் பதியில் "கனகசபை" அமைத்து இறைவன் ஆனந்தத் தாண்டவம் ஆடியதும் தைப்பூச நன்னாளில் தான் என்று சொல்லப் படுகிறது. சிவனுக்கே உரிய "சூல விரதம்" அன்று சிறப்பித்துச் சொல்லப் பட்டாலும், அது தற்சமயம் அவர்தம் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய சிவனின் அம்சம் ஆன சுப்ரமணியருக்கு உரிய நாளாக மாறி இருக்கிறது. அன்று இறைஅவனுக்கு அன்னப் பாவாடை சார்த்திப் பின்னர் அது பக்தர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப் படும். இனி வரும் நாட்களில், சில சரித்திரச் சான்றுகளைப் பார்க்கலாம்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 54 ॐ
உமாபதி சிவாசாரியாரின் கொடிக்கவி!

தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவரில் ஒருவர் ஆன உமாபதி சிவாசாரியார் அவர்கள் நாயன்மார்களுக்குப் பின்னர் வந்த சைவ சித்தாந்தத்தைப் பரப்பியவர்களுள் முக்கியமானவராய்க் கருதப் படுகின்றார். 13-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 14-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த இவர் தில்லை வாழ் அந்தணர் அல்லாத ஒருவரைத் தம் குருவாக கொண்டார். மறைஞான சம்மந்தர் என்னும் இவரின் குருவிடம் சைவ நூல்களைப் பயின்ற இவர் இயற்றிய பல நூல்களுள் "உண்மை நெறி விளக்கம் வினா-வெண்பா கொடிக்கவி" ஆகியன மிக மிக முக்கியமானவை. "கோயிற்புராணம்" என்ற பெயரில் சிதம்பரத்தின் தல வரலாற்றையும் எழுதி இருக்கின்றார் இவர். சேக்கிழாரின் வரலாற்றையும் "சேக்கிழார் புராணம்" என்ற பெயரில் இவர் எழுதி இருக்கின்றார். தமிழைப் போலவே வடமொழியிலும் புலமை பெற்றிருந்த இவர் "பெளஷ்கர ஆகமம்" என்னும் நூலுக்கு பாஷ்யமும் எழுதி இருக்கின்றார்.
தில்லை வாழ் அந்தணர்களில் ஒருவரைக் குருவாய்க் கொள்ளாத காரணத்தால் மற்ற தீட்சிதர்கள் இவரைக் கோயிலில் பூஜை வழிபாட்டுக்கு அனுமதிக்கவில்லை. ஆகவே இவர் சிதம்பரத்துக்கு வெளியே வாழ்ந்து வந்தார். ஒரு முறை கோயிலின் உற்சவத்தில் கொடியேற்றும் உரிமை இவருடையதாய் இருந்த போதிலும் இவரை விடுத்து இன்னொரு தீட்சிதருக்கு அந்த உரிமை அளிக்கப்பட்டது. ஆனால் கொடி மேலே ஏறவே இல்லை. பின்னர் உமாபதி சிவாசாரியாரின் பக்தியின் பெருமையை உணர்ந்த மற்ற சில தீட்சிதர்களால் அவர் வரவழைக்கப்பட்டார். உமாபதி சிவாசாரியார் ஒவ்வொரு பாடலாகப் பாடப் பாடக் கொடியும் மேலே ஏறி ஐந்தாவது பாடலில் முழுதும் மேலே ஏறியதாம். இவ்வாறு இறைவன் தன் அடியார்க்குச் செய்த அருளையும் இங்கு நினைவு கூருவோம்.

கீழே அந்தக் கொடிக்கவிப் பாடல்களைக் கொடுத்துள்ளேன்.

கொடிக்கவி
1. ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடிலொன்
றொளிக்கு மெனினு மிருளட ராதுள் ளுயிர்க் குயிராய்த்
தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே
குளிக்கு முயிரருள் கூடும் படிக் கொடி கட்டினனே.

2. பொருளாம் பொருளேது போதேது கண்ணே
திருளாம் வெளியே திரவே - தருளாளா
நீபுரவா வையமெலா நீயறியக் கட்டினேன்
கோபுர வாசற் கொடி.

3. வாக்காலு மிக்க மனத்தாலு மெக்காலுந்
தாக்கா துணர்வரிய தன்மையனை - நோக்கிப்
பிறித்தறிவு தம்மிற் பிறியாமை தானே
குறிக்குமரு ணல்கக் கொடி.

4. அஞ்செழுத்து மெட்டெழுத்து மாறெழுத்து நாலெழுத்தும்
பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்தும் நெஞ்சழுத்திப்
பேசு மெழுத்துடனே பேசா வெழுத்தினையுங்
கூசாமற் காட்டாக் கொடி.

5. அந்த மலமறுத்திங் கான்மாவைக் காட்டியதற்
கந்த அறிவை அறிவித்தங் - கிந்தறிவை
மாறாமல் மாற்றி மருவு சிவப் பேறென்றுங்
கூறாமல் கூறக் கொடி.

கொடிக்கவி முற்றும்  சிதம்பர ரகசியம் இன்னும் முடியவில்லை!!!

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ

ஞாயிறு, 6 அக்டோபர், 2019

19:நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!!

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள இரண்டு ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

                19:ஸ்ரீ வித்யா கேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்-II
                                 (கி.பி. 385 -கி.பி.398 வரை)
ஸ்ரீ வித்யா கேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்-II.இவரும் மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்தவரே.தந்தையின் பெயர் உமேசசங்கரர்.பெற்றோர்கள் இவருக்கு இட்ட நாம தேயம் ஸ்ரீகண்டர்.சிறு வயதில் இவர் தேகத்தை வெண் மேக நோய் பற்றிக் கொண்டது.அதனால் இவரைத் தினமும் சூரிய நமஸ்காரம் செய்யச் சொன்னார் ஒரு பெரியவர்.இவரும் தினமும் 1008 சூரிய நமஸ்காரம் செய்தார்.நோய் பறந்து போயிற்று.ஆனாலும் இவர் சூரிய நமஸ்காரம் செய்வதை நிறுத்தவில்லை.எனவே இவர் சூரியதாசர் எனவும் மார்த்தாண்ட வித்யாகனர் என்றும் அழைக்கப்பட்டார்.பதினெட்டாவது வயதில் இவர் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதியாய் பொறுப்பேற்று பல திக்விஜய யாத்திரைகள் மேற்கொண்டார்.பன்னிரண்டு ஆண்டுகள் மட்டுமே பீடத்தை அலங்கரித்தார்.கி.பி. 398-ஆம் ஆண்டு,ஹே விளம்பி வருஷம்,புரட்டாசி மாதம்,தேய்பிறை நவமியில்,கோதாவரி நதி தீரத்தில் சித்தியுற்றார்.
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 53 ॐ

அருளே வடிவான ஆனந்தக் கூத்தனே!

ஏன் இந்தக் கூத்து? நான் உன்னைக் காண எப்போது சபையேறி வந்தாலும் பாடுவது திருவாசகமும் தேவாரமும்தானே! உன் ஒளிமிகுந்த முகம் பார்த்து நான் மெல்லமாய் உதடசைத்து பாடும்போதெல்லாம் எனக்குள் இனம் புரியாத மகிழ்ச்சி.. அதை நீ கேட்கும்போது உன் கருணை முகத்தில் எனக்கு மட்டுமே தெரியும் உற்சாகம் 'வாதவூரான் சொல்ல சிற்றம்பலத்தான் எழுதியது' என்று உன்னால் அம்பல மேடையிலேயே ஆசிர்வதிக்கப்பட்ட தமிழ்ச் செல்வங்களை மனதுக்கினிய பக்தர்களால் பாடப்படும் போது உனக்கு ஏற்படும் உற்சாகத்தை அந்த பக்தர்களுக்கு எப்படியோ உணர்த்திவிடுவாய்..ஒவ்வொரு கால பூஜைக்கும் தேவாரத்தைக் கணீரெனப் பாடும் போது ஏற்படும் பக்தி பரவசம் அனவரையும் அள்ளிக்கொள்ளும்படி செய்வதிலும் நீ வல்லவன்தான்! நிற்க! (நீதான் எப்போதுமே கால்கடுக்க அதுவும் ஒரு காலில் முயலகன் மீது நிற்கிறாயே.. நான் 'நிற்க' என்று எழுதியது பழைமையான கடிதம் எழுதும் வழக்குமுறையில்...) பழைமை என்றதும் நினைவுக்கு வருகிறது. வேதம் பழைமையானதுதானே.. வேத மொழி எனக்கு வேறுபட்டாலும் பழைமையான வேதத்தில் உள்ள பெருமையும், அதன் பொருளும் அதன் உள்ளார்ந்த கருத்துகளும் மிக உயர்ந்தவை என்றே எடுத்துக்கொள்கிறேன். அப்படித்தான் எங்கள் முன்னோர்களான அப்பர், சுந்தரர், சம்பந்தர், மணிவாசகர், நம்மாழ்வார், மற்றும் பெரியோர்கள் பலரும் சொல்லிச் சென்றார்கள். தேவாரம் முழுதுமே வேதத்தின் சாரம் என்று சைவர்களும் நம்மாழ்வாரின் திருவாய்மொழி தமிழ் வேதம் என்றும் பலர் எழுதியுள்ளார்கள். எழுதியும் வருகிறார்கள். ஆகையினால் பழைமை போற்றப்படவேண்டும் என்பது கூட அவர்கள் வாய்மூலம் நீ சொல்வது போலத்தான். ஏற்றுக்கொள்ள வேண்டியது தான். அம்பலத்துள்ளே நின்று உலகையே ஆட்டிப் படைப்பவனே! ஒரு கேள்வி! என்னைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு வேத பாஷை புரிவதில்லை என்று தானே முனிவர்கள் மூலம் தெய்வத் தமிழையும் எங்களுக்குப் பரிசாக அளித்தாய்... முத்தமிழின் முதல் சங்கத்தின் முதல் வனாய் இருந்து 'இறையனார்' என்று பெயர் கொண்டு முதற்கவிதை படித்தவனும் நீதானே..தமிழுக்கு சொல் கொடுத்தவனே.. ஏன் இந்தக் கூத்து? இன்றைய கூத்து? யோசிக்க வைக்கிறாய்.. புரிகின்றது கொஞ்சம். 'தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்' என நம்பிகளை வைத்து பாடவைத்தது நீதான்!. உமாபதி சிவம் தன் ஆச்சாரியனைப் பின் பற்றி நட்ட நடுப் பகலில் கோயிலை விட்டு ஓடியபோது அவருக்குப் பக்கபலம் போல அவர்கூடவே ஓடிப்போய் அதே தில்லைவாழ் அந்தணர்தம் பூசையையும் மறுத்தவன்தான் நீ! உமாபதி சிவனார் பூசித்த சின்ன ஆனந்த நடராசனுக்குத்தான் முதல் மரியாதை என்று கோயில் கொடிக்கம்பம் மூலம் அந்தணர்களுக்குப் புரியவைத்தவனும் நீதான்!. ராசராசசோழன் மூவர் பதிகங்களைக் கேட்ட போது அந்த மூவர் வந்தால் மட்டுமே பெறக்கூடியது அவை என்ற அந்தணர்களுக்குப் புரியும் விதத்தில் அந்த அரசன் மூலம் மூவர் விக்கிரகங்களை செய்வித்து பிராணாதிஷ்டையும் செய்வித்து அவர்களையும் தெய்வமாக்கியதோடு தமிழ்ச் செல்வங்களையும் கொடுத்து அருளினாய்! பின்னால் அச்சுதராயன் காலத்தில் சில அந்தணர்கள் கோயில் கோபுரம் ஏறி உயிர்த்தியாகம் செய்த போது காக்க வேண்டிய நீயோ அலட்சியம் செய்தாய்.. பிடிவாதம் பிடிப்போர்க்கு தெய்வம் துணை போகாது என்று நீ சொல்வது போலத்தான் பட்டது. ஆனால் அதே சமயத்தில் அந்த பழைமை மாறாத அந்தணர் குடும்பங்களை இது நாள் வரை (ஏன், இனியும்!) ஆதரித்து அரவணைத்து அவர்களின் ஒழுங்கான இதுவரை தவறாத ஆறுகால பூசையையும் ஏற்று வருகின்றாய். அவர்களின் அன்புக்கு என்றென்றும் கட்டுப்படுவது போல நடந்து வருகின்றாய்.. மேலும் யோசித்தேன்! அந்தணர்கள் உன் மீது கொண்ட அன்பு அலாதியானது. தன் வீட்டுச் செல்லக் குழந்தையாக வாராது வந்த மாமணி போல அவர்கள் உன்னை பாவிக்கிறார்கள். தன் அன்புக் குழந்தையை ஊட்டி வளர்ப்பது போல உன்னைப் பேணி பாதுகாக்கிறார்கள். பழைமையும் தொன்மையுமான வடமொழியில் பூசிப்பது உனக்கு பிடிக்கிறதா என்பதை விட அன்பாக அவர்கள் உன்னை ஆராதிப்பது உனக்கு மிகவும் பிடிக்கிறதாக எனக்குப் படுகிறது. கண்ணனுக்கு கோபியர்கள் போல உனக்கு தில்லைவாழ் அந்தணர்கள் போலும்.. அவர்கள் உரிமை எடுப்பது நியாயம் எனக் கூட உணர்த்தத் தயங்கமாட்டாயோ என்னவோ.. அவர்கள் பூசிக்கும் வேத மொழி கூட நீ தந்ததுதானே..'தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறைவன் என்று வாதவூரார் சொல்ல நீ எழுத அவர் கையாலேயே தமிழும் வடமொழியுமானாய் என்று கூட எழுத வைத்தவனும் நீதான். சரி.. போகட்டும்! எதற்காக இதையெல்லாம் நினைவுபடுத்துகிறாய்? நீ எதைக் கேட்க வேண்டுமோ அதைக் கேட்டு விட்டுப் போயேன்.. என்று நீ சொல்வது போல படுவதால் என் சிந்தையில் உன் மூலம் வந்த கோரிக்கையை உன்னிடமே கேட்டுவிடுகிறேன். எனக்கு எனக்கென்றில்லை எல்லோருக்கும் உன் அருள் வேண்டும்..
உன் புகழை உனக்கும் எனக்கும் புரியும் விதத்தில் உன் எதிரே பாடும் அருள் வேண்டும் உன் திருக்கோயிலின் பழைமையான புனிதம் என்றுமே காக்கப்பட வேண்டும். உன் பக்தர்களிடத்தே அவர்கள் அந்தணர்களாக இருந்தாலும் சரி அவர்களின் போக்கினை எதிர்ப்பவர்களாக இருந்தாலும் சரி ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் வேண்டும் பழமை பாதுகாக்கப்படவேண்டும்
செந்தமிழ் சிறந்து ஓங்க வேண்டும் உனக்குப் பிடித்த 'சிவபோகசாகரம்' பாடலிலிருந்து ஒரு வெண்பா பாடல்

'ஈசன் பலகீனன் என்றக்கால் ஆலயத்தில்
மோசம் வந்ததென்று மொழியலாம் - ஈசனே
ஆக்குவதும் ஆக்கி அழிப்பதுவும் தானானால்
நோக்குவெதென் யாம்பிறரை நொந்து

ஆக்கி அழித்து அருளும் ஆண்டவனே.. இப்போது அரங்கேறும் கூத்துக்கும் விடை வேண்டும் அதுவும் அனைவருக்கும் பயனுற வேண்டும்!!!

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ

வெள்ளி, 4 அக்டோபர், 2019

விழிப்புணர்வு...

சமையலறையில் எப்போதும் ஒரு பை கோதுமை மாவு வைத்திருங்கள். அது எங்குள்ளது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.

#தயவு செய்து படிக்காமல் இருக்க வேண்டாம். நான் சோளம் கொதிக்கவைத்தேன். சோளம் தயாரா என்று பார்க்க சிறிது குளிர்ந்த நீரை கொதிக்கும் நீரில் ஊற்றினேன். தவறுதலாக நான் கையை கொதிக்கும் நீரில் பட்டுவிட்டது... வியட்நாமிய கால் நடை மருத்துவராக இருந்த எனது நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். நான் வேதனையுடன் அலறும் போது, ​​என்னிடம் வீட்டில் கோதுமை மாவு இருக்கிறதா என்று கேட்டார். நான் கொஞ்சம் கொடுத்தேன். அவர் என் கையை மாவில் வைத்து சுமார் பத்து நிமிடங்கள் காத்திருக்கச் சொன்னார்.

வியட்நாமில் ஒரு பையன் ஒரு முறை தீயில் ஒரு விபத்தில் எரிந்ததாக அவர் என்னிடம் கூறினார். அவர் மீது நெருப்பு மற்றும் பீதியுடன் யாரோ ஒருவர் தனது உடலெங்கும் ஒரு சாக்கு கோதுமை மாவு ஊற்றி தீயை அணைக்க முயன்றார். தீ அணைக்கப்பட்டது மட்டுமல்ல, சிறுவன் மீது தீக்காயங்கள் எதுவும் இல்லை !!!!

என் சொந்த விஷயத்தில், நான் பத்து நிமிடங்கள் மாவுப் பையில் என் கையை வைத்தேன். பின்னர் அதை அகற்றி விட்டேன். அதன் பிறகு எரிந்த எந்த சிவப்பு அடையாளத்தையும் நான் பார்க்க முடிய வில்லை. இன்று நான் ஒரு பை கோதுமை மாவு குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கிறேன். நான் தீ படும் ஒவ்வொரு முறையும் மாவைப் பயன் படுத்துகிறேன். உண்மையில் குளிர்ந்த மாவு அறை வெப்பநிலையில் இருப்பது மிகவும் சிறந்தது. ஒரு முறை என் நாக்கை சுட்டு கொண்டேன். அதன் மீது சுமார் பத்து நிமிடங்கள் மாவு வைத்தேன். வலி நின்று விட்டது. எனவே எப்போதும் உங்கள் குளிர்சாதன பெட்டியில் குறைந்த பட்சம் ஒரு கோதுமை மாவு பாக்கெட் வைத்திருங்கள். மாவு வெப்பத்தை உறிஞ்சும் திறனைக் கொண்டுள்ளது. இது வலுவான ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இதனால் எரிந்த நோயாளிக்கு பதினைந்து நிமிடங்களுக்குள் பயன் படுத்தினால் அது உதவுகிறது.

உங்களுக்கு நன்மை பயக்கும் மதிப்பை யாராவது பகிர்ந்து கொள்ளும் போது ​​அதை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள உங்களுக்கு தார்மீகக் கடமை இருக்கிறது. எனவே இதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
பித்ருக்கள் பூஜை
{நம் மன்னர்களுக்கு செய்ய வேண்டிய பூஜை}

1:ஒவ்வொரு மனிதனும் இயற்ற வேண்டிய மிக முக்கியமான கடமை பித்ருக்கள் பூஜை ஆகும்.

2:பித்ருக்களைப் பூஜிப்பதற்குத் தினமும் சில நேரங்கள் மற்றும் திதி, காலம்,ஆகியவை நிர்ணயிக்கப்பட்டிருந்தாலூம் ஒவ்வொரு தினமும் அவர்களை நன்றியுடன் நினைத்து வணங்கி வரவேண்டியது அவசியமாகும்.

3:பித்ருக்கள் கருனையே வடிவானவர்கள் முக்கியமாக நமது பெற்றோர்கள்  மறைந்த தினம்,அமாவாசை, மாதப்பிறப்பு, சூரிய,சந்திர கிரகண காலங்கள் ஆகியவற்றின் போது பூஜை செய்ய வேண்டியது அவசியம்.

4:சுவரின் மேல் எறியும் பந்து மீண்டும் நம்மையே வந்து அடைவது போல் நாம் பக்தியுடன் செய்யும் பித்ரு பூஜையின் பலன்கள் நம்மையே மீண்டும் வந்து அடையும் பித்ருக்களின் ஆசியாக இந்த ஆதியின் சக்தி அளவிடற்கரியது.

5:குடும்பத்தில் தொடர்ந்து வரும் கடன் பிரச்சனைகளும், நோய்களும்,நிம்மதிகுறைவும், விவாஹங்கள் தடைபடுவதும் பித்ருக்களை உள்ளன்புடன் பூஜிப்பதனால் உடனடியாக நீங்கும்.

6:பித்ரு பூஜையை அதிகபணம் செலவு செய்து தான் செய்ய வேண்டும் என்பதில்லை. அவரவர்கள் சக்திக்கு ஏற்ப செய்தாலே பித்ருக்கள் திருப்தி அடைந்து உள்ளம் பூரித்து மகிழ்வார்கள்.

7:கையில் மருந்து இருக்க அதனை உண்ணாமல் உடல் உபாதைகளுடன் போராடும் நோயாளியைப் போல் பித்ரு பூஜை என்ற அளவற்ற சக்தி நம் கையில் இருக்க அதனை விடுத்து வேறு பரிகாரங்களை தேடி ஓடுவது கண் இருந்தும் குருடனைப் போல நடந்தது கொள்வதற்குச் சமமாகும்.

8:பித்ருக்களை பூஜிப்பதும் புண்ணிய காலங்களில் திதி, தர்பணம்,ஆகியவை செய்வதும் வாழ்வின் இருதி  காலம் வரை அனைத்து நன்மைகளையும் அளிக்கும். பித்ருக்களை மறப்பவன் மஹாபாபி ஆகிறான்.

9:குடும்பத்தில் விவாஹம் போன்ற காரியங்கள் நிகழும் போது முதலில் பபித்ருக்களை வழிபடுவது அவசியமாகும். அவர்களை பூஜித்து அவர்களது ஆசியையும் அனுமதியையும் பெற்ற பின்னரே விவாஹத்தை நடத்த வேண்டும்.

10:இந்த ஆசீர்வாதம் கிரக தங்களையும் செய்வினை போன்ற கொடிய அனுபவங்களையும் உடனடியாக நீக்கக் கூடிய சக்தி வாய்ந்தது ஆகும்.

11:திதியின் போது பசு,நெய், தயிர், பால், தேன்,முப்பழங்கள் {மாம்பழம்,பலாப்பழம், வாழைப்பழம்}ஆகியவற்றினால் பித்ருக்கள் அளவற்ற திருப்தியும் மகிழ்சியும் அடைகிறார்கள்.

12:சிராத்த தினத்தன்று அதற்கு முன் தினமும் ஸ்தீரி சேர்க்கை பிறர் விடுகளில் புசிப்பது க்ஷவரம் செய்து கொள்வது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். முடிந்தமட்டில் நல்ல ஒழுக்கம் உள்ளவர்களையே பித்ரு பூஜைக்கு அழைக்க வேண்டும்.
ॐ சிதம்பர ரகசியம் பகுதி :52 ॐ
           ஆதிரைச் சிறப்பு

இருபத்து ஏழு நட்சத்திரங்களிலே இரண்டே இரண்டு நட்சத்திரத்துக்கு மட்டுமே "திரு" என்ற அடை மொழி உண்டு. அது சிவனுக்கே உரிய "திரு"வாதிரை நட்சத்திரமும், விஷ்ணுவுக்கு உரிய "திரு"வோண நட்சத்திரமும் ஆகும். அதிலும் சிவபெருமானை "ஆதிரையான்" என்றே அழைப்பார்கள். ஆதிரை நட்சத்திரம் ஆனது வான சாஸ்திரத்திலும் சோதிடத்திலும் பேசப் படும் 6 வது நட்சத்திரம் ஆகும். தற்கால வான இயல் அறிவின்படி இதை ஓரியன் குழுவில் சொல்லப்படுகின்றது. இந்த ஓரியன் குழுவில் 5 நட்சத்திரங்கள் முக்கியமாய்ச் சொல்லப்படுகின்றது. அவற்றில் மிகுந்த ஒளியுள்ள நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரமே ஆகும். வடகிழக்குத் திசையில் காணப்படும் இந்த நட்சத்திரம் எப்போதும் மற்ற நான்கு நட்சத்திரங்களுடனேயே காணப்படும். இத்துணைச் சிறப்பு வாய்ந்த இந்தத் திருவாதிரை நட்சத்திரம் மாதா மாதம் வந்தாலும் மார்கழியில் வரும் திருவாதிரைக்குத் தனிச் சிறப்பு. ஆட வல்லான் தன் பிரபஞ்ச நாட்டியத்தை அன்றே ஆடியதாய்க் கூறுவார்கள். அதிலும் சிதம்பரத்தில் இதற்குத் தனியான மகிமை. சிதம்பரத்தில் முக்கியமான திருவிழா மார்கழித் திருவாதிரைத் திருவிழா என்றே சொல்லலாம். மற்ற நாட்களில் கோயிலுக்கு உள்ளே இருக்கும் நடராஜர் அன்று வீதியில் உலா வருவார். அதோடு அல்லாமல் நடராஜருக்குச் சிறப்பு அபிஷேகங்களும் நடக்கும். இந்த ஆதிரைச் சிறப்பு நாள் விழாவாய்க் கொண்டாடப்பட்டதைப் பரிபாடல் என்னும் சங்கப் பாடலில் இருந்தும் தெரிந்து கொள்ள முடிகின்றது.

ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா ஆருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என 80

அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், 85

ஆதிரை நன்னாள் மட்டுமின்றி அம்பா ஆடல் என்னும் பாவை நோன்பினையும் சிறப்பித்துக் கூறுகின்றது மேற்கண்ட பாடல். ஆதிரை நாளில் நடராஜர் சிவகாமி பிள்ளையார் சுப்ரமணியர் சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து பேரும் தான் வீதி உலாச் செல்வார்கள். வானில் தென்படும் அந்த ஐந்து நட்சத்திரக் கூட்டமும் மேற்கண்டவாறே சொல்லப்படுகின்றது. மிக ஒளியுடன் திகழும் திருவாதிரை நட்சத்திரத்தை "ஆடவல்லான்" என்றே சொல்கின்றனர் ஆன்மீகப் பெருமக்கள். மார்கழி மாதம் 11 நாட்கள் நடக்கும் இந்தத் திருவிழாவில் 9-ம் நாள் அன்று காலையில் நடைபெறும் தேர் ஓட்டத்துக்குப் பின் மாலையில் ஆயிரக் கால் மண்டபத்தில் எழுந்தருளும் நடராஜருக்கு நள்ளிரவிலிருந்து அதிகாலை வரையில் இந்தத் திருவாதிரை அபிஷேகம் நடக்கின்றது. அதன் பின்னர் ஆடலரசன் தரும் காட்சியே "ஆருத்ரா தரிசனம்" என்று சொல்லப்படுகின்றது. இந்தச் சமயம் ஈசானமூலையில் ஆருத்ரா நட்சத்திரம் எப்போதும் இல்லா வகையில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் என்றும் சொல்லப் படுகின்றது. ஆங்கிலக் கணக்கின்படி டிசம்பர் 15-தேதிக்குப் பின்னர் ஜனவரி 15 தேதிக்குள் வரும் ஒரு நாள் தான் திருவாதிரை நாள் ஆகின்றது. முழு நிலவு ஒளி ஊட்டும் பெளர்ணமி தினத்தன்று சந்திரன் திருவாதிரை நட்சத்திரத்தில் இருக்கும்போது இந்த உற்சவம் அதிகாலையில் நடைபெறுகிறது. அந்த நேரம் வானில் தென்படும் திருவாதிரை நட்சத்திரத்தின் அதீத பிரகாசத்தை உணர்ந்தவர்கள் ஈசனின் திருக்கூத்து அப்போது நடைபெறுவதாயே உணர்கின்றனர். இந்தத் திருவாதிரைத் திருநாள் பற்றியும் சேந்தனார் அளித்த களிக்காகவே அன்று களி நைவேத்தியம் செய்யப்படுவது பற்றியும் அடுத்துப் பார்ப்போம். கிழே காணப்படும் ககன கந்தர்வ கனக விமானம். மேலும் இந்தத் திருவாதிரைத் திருநாள் பற்றியும் இது உலகளவிலும் எப்படி முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றியும் இங்கே காணலாம்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 51 ॐ
சித்தம் போக்கு சிவன் போக்கு!

திருவாரூரில் திருச்சிற்றம்பலம் என்று சொல்லுவது இல்லை. அதற்குப் பதிலாக ஆரூரா தியாகராஜா என்றே சொல்லப்படுகிறது. மேலும் வன்மீகம் என்னும் புற்றில் இருந்து ஈசன் சுயம்பு மூர்த்தியாகத் தோன்றியமையால் இது ப்ருத்வித் தலம் என அழைக்கப்படுவதாயும் அறிகிறோம். திருமாலால் பாற்கடலில் வழிபடப்பட்டு பின்னர் அவரிடமிருந்து இந்திரன் பெற்று இந்திரனிடமிருந்து முசுகுந்தச் சக்கரவர்த்தியை வந்து அடைந்து ஆரூரில் கோயில் கொண்ட தியாகராஜருக்கே இங்கே முதல் மரியாதை! தில்லையில் ஆனந்தத் தாண்டவம் ஆடும் நடராஜரின் அழகை இப்போது சற்று பார்ப்போம். குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும் இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே! என்றார் நாவுக்கு அரசர். இறைவனின் திரு அழகில் மயங்கிய அவர் இம்மாதிரி வர்ணிப்பது மிகை அன்று என்றாலும் அவர் தம் வர்ணனையில் மறைந்திருக்கும் பொருள் என்ன வென்றால் குனித்த புருவமும் = பரத நாட்டியத்தில் புருவங்கள் ஏறி இறங்குவதின் மூலம் பாவங்களை வெளிப்படுத்தும் கலை உண்டு அல்லவா? இங்கே இறைவன் தன் புருவங்களைக் குனிப்பதின் மூலம் அடியார்களின் குறைகளைக் கூர்ந்து கேட்டு அறிந்து தன்னையே சரண் என வந்தவர்களின் குறைகளைக்களையும் விதமாய்ப் புருவம் குனித்துக் கொள்வதாயும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் = தன்னை அடைக்கலம் என நம்பி வந்தோரை வருக என வரவேற்று அவர்களின் பிழைபொறுக்கும் விதமாய் கருணையுடன் கூடிய சிரிப்பையும் பனித்த சடையும் = சிவ நெறியாளர்க்கு உரிய ஒழுக்கத்தைக் காட்டும் விதமாய் அமைந்ததாம் அந்தச் சடை பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும் = நெருப்பை ஒத்த வண்ணத்தை ஒத்த இறைவன் தன்னிடம் நெருங்கும் பொருட்களை நெருப்பானது எவ்விதம் எரித்துத் தன்னில் ஐக்கியம் செய்து கொள்ளுகிறதோ அவ்வாறே இறைவனும் தன்னிடம் நெருங்கும் அடியார்களை தன்னில் ஐக்கியம் செய்து கொள்ளுகிறான் என்னும் விதமாய் இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் = இறைவன் தன் தூக்கிய திருவடியால் அனைத்து உயிர்களையும் பிறவிக்கடலில் இருந்து விடுவிக்கிறான். ஊன்றிய திருவடியால் இப்பிறவியின் அனைத்துக் கருமங்களான ஆணவம், கன்மம், மாயையை அழுந்தித் தேய்த்து அவற்றை அகற்றுகிறான். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடல் வல்லானின் ஆடல் திருக்கோலத்தைக் காணப் பெறுவோருக்கு வேறு என்ன வேண்டும் இந்த உலகில்? இதைவிடப் பேரானந்தம் வேறே உண்டோ? என்கிறார் அப்பர்.

இறையவன் ஆடல் தெற்கு நோக்கியே இருக்கிறது. தென் திசை யமதர்மனின் திசை என்பர். அந்த யமபயத்தை நீக்கி நம்மைப் பேரருட்கடலில் ஆழ்த்தி நம்மை உய்விக்கவும் தெற்கே இருந்து வீசும் தென்றல் காற்று சுமந்து வரும் தென் தமிழின் மகத்துவத்துக்கும் மணத்துக்காகவும் கூட இருக்கலாம். சித்தம் போக்கு சிவன் போக்கு என்பர். இவன் போக்கை யாரோ கண்டார்? தன் கையில் உள்ள உடுக்கையைக் கொட்டிக் கொண்டு இவ்வுலக ஆன்மாக்களின் மாயையை உதறுகிறான். ஏந்திய நெருப்பால் கன்ம மலத்தைச் சுட்டுப் பொசுக்குகிறான். ஊன்றிய திருவடியால் ஆணவத்தை அகற்றுகிறான். தூக்கிய திருவடியால் பிறவிப் பெருங்கடலில் இருந்து விடுவிக்கிறான். அபய ஹஸ்தம் காட்டி உயிர்களுக்கு "அஞ்சேல்" என அபயம் அளிக்கின்றான். தண்ணொளி வீசும் திருமுகத்தினால் அனைவருக்கும் அனைத்துக்கும் நானே தலைவன் எனத் தெரியப் படுத்துகிறான். திருமுடியில் சுமந்திருக்கும் கங்கையின் மூலம் அவன் பேராற்றலையும் உயிர்களைத் தடுத்தாட்கொள்ளும் வேகத்தையும் வெளிக்காட்டுகின்றான். பித்தனாகிய அவன் பிறையைத் தன் தலையில் சூடியதின் மூலம் தன்னைச் சரண் என வந்தடைந்தவர்களைக் கைவிடாமல் காப்பான் எனவும் தெரிவிக்கின்றான். ஆடலரசனே
சரணம் அவன் திருவடிகளே போற்றி போற்றி

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம்  ॐ

வியாழன், 3 அக்டோபர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 50 ॐ
    தியாகராஜரும் நடராஜரும்

தில்லையில் நடராஜர் எப்படி முக்கியத்துவமோ மூலவரோ அப்படியே திருவாரூரில் தியாகராஜர் முக்கியத்துவம் வாய்ந்தவரும் மூலவரும் ஆவார். தில்லை நடராஜ சபை பொன்னம்பலம் என்றால் திருவாரூர் தியாகராஜ சபையைப் பூ அம்பலம் என்று குறிப்பிடுவார்கள். இங்கே தான் சுந்தரரைத் தியாகராஜர் தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று துவங்கச் செய்யும் முதலடியை வைத்துத் திருத்தொண்டத் தொகையை எழுதச் செய்து அருளினார். பஞ்சபூதத் தலங்களில் உலகைக் குறிப்பிடும் திருவாரூரை மனதில் இருத்தியே சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தை ஆரம்பிக்கும் போது நடராஜர் உலகெலாம் என்று எடுத்துக் கொடுத்திருக்கிறார். பொன்னம்பலத்தில் ஆனந்தக் கூத்து ஆடும் அம்பலவாணன் முதலில் ஆடியது என்னமோ அறைக்குள்ளே தான். உமையவள் மட்டுமே காணுமாறு அறைக்குள் அவன் ஆடிய ஆட்டம் திரு உத்தரகோச மங்கை என்னும் ஊரில் என்று சொல்லுவார்கள். அன்னையானவள் பரத குலத்தில் பிறந்து ஐயனை மணந்து பின்னர் இங்கே ஐயன் அன்னைக்கு வேதப் பொருளை உபதேசித்து பின்னர் தன் நாட்டியத்தையும் காட்டி அருளியதாய்ச் சொல்லுவார்கள். தேவிக்கு உபதேசத்தை ரகசியமாய்க் கொடுத்து அருளியதால் உத்தர கோச மங்கை எனப் பெயர் பெற்றதாயும் சொல்லுவார்கள். உத்தரம்=உபதேசம், கோசம்=ரகசியம், மங்கை=இங்கே பார்வதியைக் குறிக்கும். இந்த நாட்டிய நடராஜரை ஆதி சிதம்பரேசர் என அழைக்கப் படுவதோடு இங்கே உள்ள மரகத நடராஜர் இருக்கும் இடத்தை ரத்தின சபை என்றும் அழைக்கப்படுகிறது. அக்கினியின் மத்தியில் அன்னை காண மகேசன் இங்கே அறையில் ஆடிய ஆட்டமே சிதம்பரத்தில் பொன்னம்பலத்தில் ஆடப்பட்டதாயும் சொல்லப்படுகிறது. இதைத் தான் அறையில் இருந்தாலும் அம்பலத்துக்கு வரத்தானே வேண்டும் என்ற சொல் வழக்கும் சொல்லுவதாய்க் கூறுவார்கள். ஐந்தரை அடி உயர நடராஜரை உள்ளே வைத்தே சன்னதி எழுப்பப்பட்டிருப்பதாய்ச் சொல்லுகிறார்கள். இந்த ஆதி சிதம்பரம் என அழைக்கப்படும் சன்னதி தனிக்கோயிலாக கோயிலுக்கு உள்ளேயே குளத்துக்கு எதிரில் இருப்பதாயும் சொல்கின்றனர். இவர் வெளியே வருவதில்லை. ஆண்டுக்கு ஒரு முறை இவரின் சந்தனக் காப்பு களையப்பட்டு அபிஷேகங்கள் நடந்து திரும்பச் சந்தனக் காப்புக்குள் நுழைந்து விடுவார். அந்த நாள் மார்கழித் திருவாதிரை நன்னாள்.

ஆனால் திருவாரூரிலோ என்றால் அவன் ஆடிய ஆட்டத்தை அஜபா நடனம் என்று சொல்கிறார்கள். வாயால் சொல்லாமல் சூட்சுமமாய் ஒலிப்பதால் இதற்கு அஜபா=ஜபிக்கப்படாதது என்று பொருள். இதை விளக்குவதே தியாகராஜரின் அஜபா, ஹம்ஸ நடனத் தத்துவம். இவர் திருமேனியே இங்கே திருவாரூர் ரகசியம். இதைச் சோமகுல ரகசியம் என்று சொல்வார்கள். இவர் திருமேனியில் ஸ்ரீ சக்ரம் அலங்கரிப்பதால் திருமேனி காணக் கிடைக்காத ஒன்று. தியாகராஜரும் உற்சவ காலங்களில் வெளியே வந்து தன் நடனத்தை ஆடுகிறார். அது போல் நடராஜரும் உற்சவ காலங்களில் மட்டுமே வெளியே வருவார். ஒரு வருஷத்தில் ஆறு முறைகளில் மகா அபிஷேகம் நடராஜருக்கு நடைபெறுகிறது. அவை நம் மானிடக் கணக்கில் கொள்ளாமல் தேவர்களின் கணக்கிலே கணக்கிடப்படுகிறது. தேவர்களின் காலம் நமக்கு மார்கழி மாதம் அவர்களுக்கு உஷத் காலம் என்று கணக்கிடப்படுவதால் மார்கழித் திருவாதிரையின் அபிஷேகம் உஷத் காலப் பூஜையாகக் கணக்கிடப்படுகிறது. மாசி பங்குனியில் செய்யப்படுவது காலசந்தி அல்லது பகலின் ஆரம்பம் எனக் கொண்டால் சித்திரையில் செய்யப்படுவது உச்சிக்காலம் அல்லது நடுப்பகல் என்றும் ஆனி மாதம் நடப்பது பிரதோஷ காலம் அல்லது மாலைப் பூஜை எனவும் ஆவணி மாதம் நடப்பது இரண்டாம் காலம் அல்லது முன் இரவு பூஜையாகவும் புரட்டாசி மாதம் நடப்பது அர்த்தஜாமம் அல்லது நடு இரவு எனவும் அழைக்கப்படுகிறது.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம்  ॐ

புதன், 2 அக்டோபர், 2019

18:நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!!

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள இரண்டு ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

                18:ஸ்ரீ சுரேந்திரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
                              (கி.பி.375-கி.பி.385 வரை)

ஸ்ரீ சுரேந்திரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மஹாராஷ்டிர அந்தணர்.தந்தை பெயர் மதுரா நாதர்.பெற்றோர் இவருக்கு இட்ட நாமதேயம் மாதவர்.இவருடைய யோக வல்லமை காரணமாக'ஸ்ரீயோகி திலகர்'என்று மக்களாள் கொண்டாடப்பட்டவர்.இவர் காலத்தில் நரேந்திராதித்யன் காஷ்மீர் மன்னனாக இருந்தான்.இவருடைய மருமகன் சுரேந்திரனும் ஒரு சிற்றரசனே.சுரேந்திரனின் சபையில்'துர்தீதிவி'என்ற நாஸ்திகன்,ஆஸ்தான வித்வானாக புகழ் பெற்றிருந்தான்.ஸ்ரீ யோகி திலகர் பலரை வாதில் வென்ற அனுபவம் இருந்ததால் இவனையும் வாதில் வென்றார்.இதை அறிந்த நரேந்திர ஆதித்யன் பெரும் வியப்போடு இவர் காலடியில் விழுந்து வணங்கி"இன்று முதல் இந்தகாஷ்மீர் அரசுரிமை உங்களுடையது.உங்கள் ஆணைப்படி செயல்படுவேன்"எனக் கூறினான்.அப்பேற்பட்ட பெருமை வாய்ந்த இந்த குருரத்தினம் பத்தாண்டு காலமே குருபீடத்தை அலங்கரித்தார்.கி.பி.385-ஆம் ஆண்டு,தாருண வருடம்,மார்கழி மாதம்,வளர்பிறை பிரதமை அன்று உஜ்ஜயனி அருகில் சித்தியடைந்தார்.

செவ்வாய், 1 அக்டோபர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 49 ॐ
   ஆகமம் ஒரு முற்றுப் புள்ளி!

தில்லைக் கூத்தன் ஆனந்த நடனம் ஆடிய இடம் தில்லையம் பதி என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆகாசத்திலே பரந்து விரிந்த வெளியிலே அவர் நடனம் தான் நித்தம் நித்தம் நடைபெற்று வருகிறது. இத்தகைய நடனத்தைத் தில்லையிலே ஆடும் போது இறைவன் அப்படியே தன் அம்சத்தோடும் தன் இறைசக்தியோடும் உறைந்த இடம் தான் தில்லைச் சிற்றம்பலம். தானே அங்கு தன் முழு சக்தியோடு உறைந்த இடத்திலே கோயில் கொள்ள நினைத்த இறைவன் தனக்குத் தானே அங்கே கோயில் கட்டிக் கொண்டதாயும் சொல்லுவார்கள். இப்படி முதலில் இறை சக்தி இருந்து. அதன் பின்னர் மூலஸ்தான விமானம் கட்டிய பின்னர் பிராகாரங்கள், பரிவார தேவதை சன்னதிகள், வெளிப்பிரகாரம், சுற்று மண்டபங்கள், ராஜ கோபுரம் என்று கோயில் கட்டுவது ஒரு மரபு. இம்முறையில் அமைக்கப்பட்ட கோயில்கள் மகுடாகமம் என்னும் முறையில் வந்ததாய்ச் சொல்கின்றனர். முதலில் கோயிலுக்குத் தேவையான அனைத்து அமைப்புக்களையும் கட்டுமானங்களையும் கட்டி முடித்து விட்டுப் பின்னர் விக்ரஹப் பிரதிஷ்டை செய்து அதில் இறை சக்தியை ஆவாஹனம் செய்து வழிபடுவது இன்னொரு மரபு. இவை பின்னர் வந்த கோயில்கள் என்று சொல்லப்படுகிறது. முதலில் சொன்ன முறைப்படியான கோயில்கள் மிகவும் குறைவு. இவற்றில் முதலில் சொல்லப் பட்ட இறைவன் தானாகவே உறைந்து சக்தியுடன் இருக்கும் இடங்கள் மிக மிகச் சக்தி வாய்ந்த ஸ்தலங்களாய்ச் சொல்லப்படுகிறது. சிதம்பரம் அத்தகைய ஸ்தலங்களில் முதன்மையானது. இறை சக்தியின் அற்புதம் பூரண வீரியத்துடன் வெளிப்படும் இடம் அது. ஆகவே இம்முறையில் குடி கொண்ட கோயில்களில் வழிபடும் முறையை மகுடாகமம் என்று சொல்லி இருக்க வேண்டும். இங்கு வழிபடும் முறையும் மகுடாகம முறை என்று சொல்லி வந்திருக்கலாம். அப்போது தில்லையம்பதியிலே வழிபட்டு வந்த இறையாளர்கள் மேற்கொண்ட வழிமுறையைப் பின்னால் வந்த தில்லை வாழ் அந்தணர்கள் பின்பற்றவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
திருக்கைலையிலே இறைவனைக் காணாமல் அவரைத் தேடிவந்த அவர்தம் சிவகணங்கள் காசியிலேயும் இறைவன் இல்லாமல் அவர் தம் ஆனந்தத் தாண்டவத்தையும் காண முடியாமல் பரிதவித்த வேளையிலே இறைவனே அவர்களைத் தில்லைச் சிற்றம்பலம் நாடி வரச் சொன்னதாயும் இந்தச் சிவகணங்கள் வந்ததும் பூஜை வழிபாட்டு உரிமைகளை இவர்களிடமே இறைவன் ஒப்படைத்ததாயும் அது முதல் தில்லை வாழ் அந்தணர்களே வைதீக முறைப்படி பூஜை வழிபாடுகளைப் பதஞ்சலி தொகுத்துக் கொடுத்த பதஞ்சலி பத்ததியில் மாற்றியதாயும் ஒரு கூற்று இருக்கிறது. முன்னர் செய்து வந்த மகுடாகம முறை வழிபாடு தமிழா வடமொழியா என்பது குறித்து எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை. இருப்பவர்கள் சொன்னால் தெரிந்து கொள்கிறேன். இனி இந்த ஆகமம் பற்றிய கட்டுரைகளை இத்தோடு முடித்துக் கொண்டு சிதம்பரம் கோயிலுக்குத் திரும்பவும் செல்லலாம்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ