வெள்ளி, 13 செப்டம்பர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 32 ॐ

மேலே நாம் காண்பது சிவகங்கை என்று அழைக்கப்படும் கோவிலைச் சேர்ந்த கோவிலுக்குள்ளேயே இருக்கும் திருக்குளம் ஆகும். மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதியை அடுத்து நாம் காண்பது நூற்றுக்கால் மண்டபம் ஆகும். சோழர்களின் தளபதியான காளிங்கராயன் என்பவனால் கட்டிக் கோவிலுக்கு அளிக்கப் பட்டதாயும் முற்காலங்களில் நவராத்திரி சமயத்தில் அன்னை சிவகாமியை இங்கே தான் அலங்காரம் செய்து வைப்பார்கள் என்றும் குறிப்புக்கள் கூறுகின்றன. அடுத்தது நாம் மேலே காணும் சிவகங்கைக் குளம்.

{சிதம்பரத்தில் பத்து முக்கிய தீர்த்தங்கள் உள்ளன.}
அவை1. சிவகங்கை மூன்றாவது வெளிப்பிரகாரத்தில் அன்னை சிவகாமி சன்னதிக்கு நேரே உள்ளது.
2.பரமானந்த கூபம் ஏற்கெனவே நாம் பார்த்தோம் சித்சபைக்கு வெளியே கிழக்கே ஒரு கிணறாக உள்ளது.
3. குய்ய தீர்த்தம் என்று சிதம்பரம் நகருக்கு வட கிழக்கே கிள்ளை என்னும் இடத்துக்கு அருகே உள்ள பாசமறுத்தான் துறையில் உள்ளது.
4.சிதம்பரத்துக்குத் தெற்கே புலிமடு என்னும் தீர்த்தம் உள்ளது.
5. வியாக்ரபாத தீர்த்தம் மேற்கே உள்ளது.
6. அனந்த தீர்த்தமும் மேற்கே அனந்தீஸ்வரர் கோவில் அருகே உள்ளது.
7.நாகசேரி என்னும் தீர்த்தம் அனந்த தீர்த்தத்துக்கு மேற்கே உள்ளது.
8. பிரம்ம தீர்த்தம் சிதம்பரத்துக்கு வடமேற்கே திருக்களன்ச்சேரியில் உள்ளது.
9.சிவப்பிரியை சிதம்பரத்துக்கு வடக்கே தில்லைக் காளி கோவில் அருகே உள்ளது.
10.சிவப்பிரியைக்குத் தென் கிழக்கே "திருப்பாற்கடல்" என்னும் தீர்த்தமும் இருந்தன. தற்சமயம் சில குறிப்பிட்ட தீர்த்தங்கள் மட்டுமே உள்ளன. அவற்றில் சிவகங்கை முக்கியமானது.

"ஹேம புஷ்கரணி", "அம்ருதவாபி", "சந்திர புஷ்கரணி" என்றெல்லாம் தல புராணங்களில் வர்ணிக்கப்படும் இந்தக் குளம் பண்டைக் காலந்தொட்டே இருந்து வந்ததாய்க் கூறுகிறார்கள். நமக்கு நன்கு தெரிவது ராஜா ஹிரண்யவர்மனின் காலத்தில் இருந்து தான். சோழத் தளபதியான காளிங்கராயனால் குளத்துக்குள் இறங்கும் 9 படிக்கட்டுக்கள் கட்டுவிக்கப்பட்டதாய்த் தெரிகிறது. பல ரூபங்களில் உள்ள சிவலிங்கங்களும் விநாயக மூர்த்திகளும் இந்தக் குளத்தைச் சுற்றிலும் பிரதிஷ்டை பண்ணப் பட்டிருக்கிறது. தென் பகுதியில் தண்ணீருக்குள் "ஜம்புகேஸ்வரர்" லிங்க ரூபத்தில் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதாயும் தினசரி தீட்சிதர்களால் வழிபாடு செய்யப் படுவதாயும் சொல்கிறார்கள். ( இன்னும் பார்க்கவில்லை இந்த வழிபாட்டை). பல்லவ ராஜா சிம்மவர்மன் உடல் நலம் குன்றி இருந்த சமயத்தில் மகரிஷி வியாகிரபாதரின் ஆலோசனையின் பேரில் அவன் இந்தக் குளத்தில் புனித நீராடி நடராஜரை ஆனந்தத் தாண்டவக் கோலத்தில் தரிசனம் கேட்டுப் பெற்று வழிபட்டதாயும் அதன் பின்னர் அவன் உடல் நலம் அடையவே தான் பெற்ற பயன் அனைத்து மக்களும் பெறவேண்டி அவன் குளத்தை ஆழப்படுத்தியும் அகலப் படுத்தியும் பராமரிப்புப் பணிகள் செய்ததாயும் கூறுகின்றனர். இதன் பின்னரே அவன் பெயர் ஹிரண்ய வர்மன் என அழைக்கப்பட்டதாயும் கூறுகின்றனர். இந்தக் குளம் ரஜ சபை என அழைக்கப்படும். ஆயிரக்கால் மண்டபத்துக்கும் சிவகாம சுந்தரி சன்னதிக்கும் நடுவே அமைந்துள்ளது. குளத்தின் நடுவில் இருந்து நேரே அன்னை சிவகாமி குளத்தைத் தன் அருட்கண்களால் பார்த்தவண்ணம் அருள் பாலிக்கிறாள்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
சிதம்பர ரகசியம் சோகமான சிறப்பு தகவல்

முஸ்லீம் மன்னர்கள் திப்பு சுல்தான் படை எடுப்பின் போது நடராஜரைத் தூக்கிக் கொண்டுத் திருவாரூரில் சில காலமும் திருச்சூரில் ஆலப்புழாவில் சில காலமும் இருந்ததாய்த் தீட்சிதர் ( அடியேனிடம் Sambanatesan Umanatham தீட்சிதர்) என்னிடம் நேரில் கூறினார். பல தீட்சிதர்கள் சித்சபையின் மேலே உள்ள பொன்னால் வேய்ந்த கோபுரத்தின் மேல் ஏறி உயிரை விட்டதாயும் கூறுகின்றனர். வேறு சிலர் மூலவர் ஆன நடராஜரை எடுத்துக் கொண்டு கேரளாவில் மறைந்து இருந்ததாயும் அதன் பின்னர் தான் அங்கே உள்ள கோவில்கள் இவர்களின் வழிகாட்டுதலின் பேரில் சிதம்பரம் கோவில் அமைப்பில் கட்டப் பட்டதாயும் அவர் கூற்று. ஆனால் அதற்கான ஆதாரங்கள் சரிவரக் கிடைக்கவில்லை.
வாரணாசி (காசி) ன் சிறப்பு!

அலகாபாத் நகலிருந்து 123 கி.மீ. தூரத்தில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள புராண சிறப்புள்ள தொண்மையான நகர். கங்கையின் வடக்கே அருணை நதி கலக்கிறது. தெற்கே அஸி நதி கலக்கிறது. இந்த இரண்டு எல்லைகளுக்கு நடுவில் உள்ள நகரம் தான் வாரணாசி என்று அழைக்கப்படுகிறது. காசியின் நீளம் கங்கை கரையில் ஓரமாக நான்கு மைல்கள். இதில் அறுபத்து நான்கு ஸ்நான படித்துறைகள் இருக்கின்றன. அவற்றில் உயர்ந்த மாளிகைகளும், ஆலயங்களும் உள்ளன. ஐந்து ஸ்நான கட்டங்களை முக்கியமானதாக குறிப்பிடுகிறார்கள். அவை-

1. அஸி கட்டம்,
2. தசாசுவமேத கட்டம்,
3. வருணா கட்டம்,
4. பஞ்சகங்கா கட்டம்,
5. மணிகர்ணிகா கட்டம். - இந்த இடுகாட்டில் தான் உயிர்களை சொர்க்கத்திற்கு அனுப்பிவைப்பதாக சிவன், விஷ்ணுவிடம் ஒரு சத்தியம் செய்து கொடுத்தார்.

ஐந்து கட்டங்களிலும் படகில் பயணம் செய்து கங்கையில் ஸ்நானம் செய்து வரவேண்டும். மணிகர்ணிகா காட் படித்துறையில்  நீராடுவதும், பித்ரு காரியங்களை செய்வதும் மிகவும் விசேஷம். மணிகர்ணிகா காட் ஆதிசங்கரர் மணிகர்னிகாஷ்டகத்தில் மிகச் சிறப்பாக கூறியுள்ளார். ஆகையால் இங்கு சிறுதானங்கள் செய்வது மேன்மையை தரும். அவற்றின் பலன் பல மடங்கு உயரும் என்றும் கூறுவார்கள். ஆகையால் ஏராளமான யாத்திரியர்கள் இங்கே அன்னதானம் முதல் கோதானம் வரையில் செய்வதுண்டு. கங்கையில் நீராடி காரியங்களை செய்பவர்கள் பிறர்மீது படாமல் மடியாக இருப்பதில்லை. யார் மீது யாரும் படலாம். படகோட்டி, பசுமாட்டை அழைத்து வருபவர், பண்டா யார் பட்டாலும், புனிதம் குறைவதில்லை. அனைவரும் ஒன்றே என்ற தத்துவத்தை  இங்கே நிதர்சனமாக காண்கின்றோம். காசியில் இக்காரியங்களை செய்ய வருபவர்களுக்கு உதவ பல தென்னிந்திய புரோகிதர்கள் உள்ளனர். சங்கரமடம், குமரகுருபரர் மடம், திருப்பனந்தாள் மடம் போன்றவை உள்ளன. எந்தவொரு ஐந்தும் தன்னுடைய சரீரத்தை இங்கு தியாகம் செய்தால் மோட்சம் அடைந்து சிவலோகம் செல்வதாக ஐதீகம். ஆகையால் ஏராளமான மக்கள் காசியிலே இறந்துவிட தங்கள் கடைசி காலத்தை இங்கேயே கழிக்கின்றனர்.
-----------------------------------------------‐-------------------------------

ஆறு சமய வழிபாடு

ஆறு சமய வழிபாடு

ஆதிசங்கரர் ஆறு சமயங்களைத் தொகுத்து, வகுத்து சிறப்பித்தார். இது ஷண்மத வழிபாடு எனப்படும். இறைவழிபாட்டிற்குரிய மாதமான மார்கழி மாதத்தில் ஆறு சமயங்களுக்கு உரிய திருநாள்கள் வருவது சிறப்பு.

காணாபத்யம் - கணபதி வழிபாடு தினமும் காலையில் சாணப் பிள்ளையாரை நிறுத்தி கணபதியை வழிபடுகின்றனர்.
சைவம்-சிவ வழிபாடு - திருவாதிரை
வைணவம் - விஷ்ணு வழிபாடு - வைகுண்ட ஏகாதசி
கௌமாரம் - முருக வழிபாடு - படி உற்சவம்
சாக்தம் - சக்தி வழிபாடு - பாவை நோன்பு
சௌரம் - சூரிய வழிபாடு - தைப் பொங்கலன்று சூரியனை வழிபடுகின்றனர். மார்கழி இறுதி நாளன்று கொண்டாடப்படுவது போகிப் பண்டிகை. இதுவே தை பொங்கல் விழாவின் தொடக்க நாளாகும்.
-----------------------------------------------‐--------------------------------
பச்சை நிற சிவபெருமான்

பொதுவாக பச்சை நிறம் விஷ்ணுவுக்கு உரியதாகக் கூறப்படுவதுண்டு. ஆனால் (பச்சை) மரகதத்தால் ஆன சிவனின் சிலை திருஇடைச்சுரம் என்ற ஊரில் உள்ளது. இங்குள்ள ஞாலபுரீஸ்வரர் மற்றும் மரகதாலேஸ்வரர் கோயில்களில் பச்சைக்கல்லாலான சிவலிங்கங்கள் உள்ளன. இவரை தரிசித்தால் வாழ்வில் செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை. சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி சிவன் கோயிலிலும் பச்சை லிங்கம் இருக்கிறது. ஒரு பெட்டியில் வைக்கப்பட்டுள்ள இந்த லிங்கம் விசேஷ நாட்களில் மட்டும் வெளியே எடுக்கப்பட்டு, பூஜை செய்யப்படுகிறது.
-----------------------------------------------‐-------------------------------
பரிவாரத் தலங்கள் அமைந்துள்ள ஊர்கள்!

தமிழகச் சிவாலயங்களில் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலைக் கருவறையாகக் கொண்டு அதனைச் சுற்றியுள்ள கோயில்களை பரிவாரத் தலங்களாகக் கொள்ளும் மரபு நிலவுகிறது.

விநாயகர் - திருவலஞ்சுழி
முருகன் - சுவாமிமலை
நந்தி தேவர் - திருவாடுதுறை
சண்டிகேசுவரர் - திருச்சேய்ஞ்ஞலூர்
நடராஜர் - சிதம்பரம்
தியாகராஜர் - திருவாரூர்
தட்சிணாமூர்த்தி - ஆலங்குடி
பைரவர் - சீர்காழி
அம்பிகை - திருக்கடவூர்
சூரியன் - - சூரியனார் கோயில் ஆடுதுறை
சனி - திருநள்ளாறு
-----------------------------------------------‐--------------------------------
திருவேணி சங்கமம் (பிரயாகை) என்பதன் பொருள் தெரியுமா?

வேணி என்றால் நதி என்பது பொருள். மூன்று நதிகள் (கங்கை, யமுனை, சரஸ்வதி) சங்கமத்தில் சென்று நீராடுகிறோம். அதன் மூலம் நமக்கும் நமது முன்னோர்களுக்கும் புண்ணியம் கிடைக்கச் செய்கிறோம். கங்கா நதி நீர், வெண்மையாகவும், யமுனை நதி நீர், கருணையாகவும், சரஸ்வதி அந்தர்வாகினியாக கண்ணுக்குத் தெரியாமல் கீழே ஒடிக்கலப்பதாக ஐதீகம். இத்தகைய திரிவேணி சங்கமத்தில், ஸ்ரீராமர், லட்சுமணர், சீதாதேவி நீராடிய புண்ணிய பூமி. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளாகவும், 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை அர்த்கும்பமேளா திருவிழாவும், சிறப்பாக நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்களும், சாதுக்களும் இங்கே வந்து முன்னோர்களை வணங்கி நீராடுவர். பிரயாகையில் முண்டம், காசியில் தண்டம், கயையில் பிண்டம் என்ற ஒரு வழக்கு உண்டு. இவற்றின் முக்கிய நோக்கம்,பாவம் களைவது. பாவம் அண்டாமல் தடுப்பது, பாவம் நீங்கி இறையோடு ஒன்றாவது ஆகும். முண்டம் என்பது முடி எடுத்தல். உடலில் வளரும் கேசங்கள் தாமாகவே அகலக்கூடியவை. அகற்றினாலும், உபத்திரவம் தாராதவை. அவற்றைப் போல் நம் பாவங்கள் களையப்படவேண்டும் என்பதற்காக பிரயாகை ஷேத்திரத்திலே முடி எடுத்து பாவங்களை களைய வேண்டும். பிரயாகையில் முக்கியமானது அட்சயவடம் என்று அழைக்கப்படும் ஆலமரம். இதன் வேர் பகுதி பிரயாகையிலும், நடுப்பகுதி காசியிலும், நுனி கயாவிலும், இருப்பதாக கூறுகிறார்கள். அதனால் இந்த மூன்று இடங்களிலும் வரிசையாக, பித்ரு காரியங்களை செய்ய வேண்டியது தமது கடமை என்று இந்துக்கள் நம்புகிறார்கள்.
-----------------------------------------------‐---------------------------------
 நடனமாடும் நடராஜர், கண்ணன் படங்களை வீட்டில் பூஜை செய்வதின் பயன்கள்?

நடராஜர் எபவர் எல்லாம்வல்ல பரமேஸ்வரனின் மஹேச்வர மூர்த்தங்களில் முதன்மையானவர். அவரே பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவுக்கும் காரணமானவர். அவரில் பல ரகசியங்கள் அடங்கியிருக்கின்றன. நான் இவற்றை எழுதுவதும் பதிப்பகத்தார் பதிப்பிப்பதும் நீங்கள் படிப்பதும் என்ற அனைத்து காரியங்களும் அவனது அசைவுகளே! நம்முள் இயங்கிவரும் கோடிக்கணக்கான அணுக்களின் அசைவுகளும் அவனே. அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதும் இதனால் தான்! இது மட்டுமல்ல. காற்று வீசுவதும், தண்ணீர் சென்றுகொண்டிருப்பதும், பறவைகள் பறப்பதும், மீன்கள் நீந்துவதும், எறும்பு நகர்வதும் இப்படி எல்லா விதமான ஆற்றலும் அவரே. இதனாலேயே இவரை விதமான காஸ்மிடான்சர் என்கிறோம். அதாவது பிரபஞ்சகூத்தாடி எனப் போற்றுவது வழக்கம். இவரை தெற்கு நோக்கி வைத்து வழிபட்டால் நமது ஆற்றல் மேம்படும். இப்பேராற்றல் மிக்க நடராஜப் பெருமானை வழிபடுவதினால் உடலாலும் உள்ளத்தாலும் சோர்வு பெற்றிருக்கும் உயிர்கள் சோர்வு நீங்கி ஆற்றல் பெறுவார்கள் என்பது நமது முன்னோர்கள் கண்ட உண்மை.

கிருஷ்ணரை கோபாலன் என கூறுவர். கோ எனில் பசு; பாலயதி எனில் காப்பாற்றுதல். இங்கு பசு என்பது நாம் வழக்கத்தில் கொண்டுள்ள பசுக்களை மட்டும் குறிக்காது. அனைத்து ஜீவராசிகளையும் குறிக்கும். அவரின் புல்லாங்குழல் ஓசையினால் அனைத்து பசுக்களுமே அவரிடம் ஈர்க்கப்படுகிறது. இது போன்று நாமும் குழல் ஊதும் கண்ணனை வழிபடுவோமானால் தெய்வ ஆற்றல் பெற்றவர்களாக விளங்குவோம். இது மட்டுமல்லாமல் அக்காலத்தில் ஒரு மனிதனுடை செல்வத்தை அவனிடம் இருக்கும் பசுக்களை கொண்டே கணக்கிட்டார்கள். ஆதலால் இவரை நாம் வணங்குவதினால் அனைத்து செல்வங்களையும் பெற்று இன்பமாக வாழ்வோம் என்பதில் ஐயமில்லை.
சடாரியை தலையில் வைப்பதன் தத்துவம்!

ஒரு குழந்தை கருப்பையில் இருந்து வெளியேறும் போது சடம் என்ற வாயு வெளியேறுகிறது. இந்த வாயு உலகமாயை என்னும் குடும்பப் பாச பிணைப்பில் மக்களை தள்ளிவிடும் சக்தி கொண்டது. ஆனால், ஒரே ஒருவர் மட்டும் மாயை என்னும் சக்தியை வென்றவராக பிறப்பின் போதே பகவானால் பூமிக்கு தரப்பட்டார். அவரே நம்மாழ்வார். பெருமாளின் பாதங்களுக்கு சமமானவர். எனவே அவரது பாதம் பொறித்த சடாரி என்னும் கலனை தலையில் சார்த்துகிறார்கள். இதனால் பாச பந்தங்களிலிருந்து மனிதன் விலகுவான். சடம் என்ற சொல்லில் இருந்து சடாரி என்ற வார்த்தை பிறந்தது. தினமும் சடாரியை தலையில் சார்த்தி பாச பந்தங்களை அறுத்து, விரைவில் இறைவன் திருவடியை அடையலாம்.
---------------------------------------------------------------------------------
கண்திருஷ்டி விலக கணபதி வழிபாடு!

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். பார்க்கும் பார்வை இயல்பாக இருந்து விட்டால் பாதிப்பு ஏதும் கிடையாது. அதே சமயம் பார்வையில் பொறாமை கலந்திருந்தால், அது ஒரு குடும்பத்தைப் பாதிக்கும் என்பது காலம் காலமான நம்பிக்கை. இதைத்தான் கண்திருஷ்டி என்கிறார்கள். குழந்தைக்கு திருஷ்டிபடக் கூடாது என்பதற்காக தாய் கன்னத்தில் திருஷ்டி பொட்டு இடுகிறாள். அகத்திய முனிவர் கண் திருஷ்டியில் இருந்து விடுபட, சுபதிருஷ்டி கணபதி என்ற மகா சக்தியை தோற்றுவித்தார். இது கணபதியின் 33 வது மூர்த்தமாகும். இவர் விஷ்ணுவின் அம்சமாக சங்கு சக்கரம், மூன்று கண்கள் (சிவாம்சம்), சூலம் (சக்தி அம்சம்), அனைத்து தெய்வங்களின் ஆயுதங்கள், சீறும் சிங்கம், முஞ்சூறு வாகனம் ஆகியவற்றுடன், லட்சுமிக்குரிய விரிந்த செந்தாமரையில் போர்க்கோலத்துடன் உதித்தார். இவரது தலையை சுற்றி ஒன்பது நாகங்களும், அக்னி பிழம்பும் உள்ளன. 51 கண்களைக் கொண்டுள்ளார். விஸ்வரூப வடிவில் ஸ்ரீ சுபதிருஷ்டி கணபதி என்ற பெயர் கொண்டுள்ளார். இவரை வீடு, வியாபார தலங்கள், கல்வி நிறுவனங்கள், மற்றும் அலுவலகங்களில் வடக்கு திசை நோக்கி வைத்து வழிபட்டால் கண்திருஷ்டி விலகும் என்பது நம்பிக்கை. புதன்கிழமை இவருக்கு உகந்த நாளாகும்.
---------------------------------------------------------------------------------
தியானப்பாதையில் வெற்றி பெற...

தியானம் உடல் ஆரோக்கியத்திற்காகவும், மன நலனுக்காகவும் செய்யப்படும் ஒரு மன ஒருமைப்பாட்டு பயிற்சி. தியானம், உடல் நலனுக்கு நல்லது. ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மன அழுக்கை போக்குகிறது. என்பது எல்லாம் தற்போது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது சாதாரணமாக உலக மக்கள் பழகுகின்ற தியானமாகும். ஆன்மிக வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில், ஆன்ம நலனுக்காக செய்யப்படும் தியானத்திற்கு உபாசனை என்று பெயர். ஆன்மிக ஒளி அல்லது ஆன்மிக ஞானம் பெறுவதுதான் உபாசனையின் முக்கிய நோக்கமாகும். இத்தகைய ஆன்மிகத்தியானத்திற்கு உயர்ந்தது மன ஒருமைப்பாடும், மனப்பக்குவமும் இருக்க வேண்டும். இந்த வகை ஆன்மிக தியானப்பாதை மிகவும் நீண்டது. ஒவ்வொரு அடியிலும் ஏராளமான தடைகளும், சந்தேகங்களும் ஏற்படும். பொறுமை, நம்பிக்கை, விடாமுயற்சி ஆகிய இவற்றின் மூலம் தான் இந்த தியானப்பாதையில் நாம் வெற்றி பெற முடியும்.

பிறந்தது புண்ணியமே! வாழ்வது சந்தோஷமே!

முதலில் தியானத்தில் கடவுளைக் கண்டோமா இல்லையா என்பதை விட்டு, மன அமைதியைப் பெறுவது எப்படி என்பதையும், சிறந்த முறையில் தியானம் செய்வது எப்படி என்பதையும் புரிந்து கொள்வோம். ஆண்டவனை அடைய அனேக வழிகள் உண்டு. அதில் தேர்ந்து, தெளிந்த வழி எது? தியான நேரம் தவிர, மற்ற நேரங்களில் அமைதியாக இருக்க முடியாதது ஏன்? ஆன்மிக இதழில் வரும் தொடர் கட்டுரை ஆன்மிக செயல்முறை, வழிகாட்டவும் உங்களுக்கு அனைத்து வெற்றிகளையும் தரவும் தான். ஏதோ வழியால் நாம் அனைவருமே ஆன்மிக நாட்டம் கொண்டு தியானப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, யோகாவில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் பலனளித்தது எவ்வளவு? முதலில் தியானத்தில் கடவுளைக் கண்டோமா இல்லையா என்பதைவிட்டு, மன அமைதியைப் பெறுவது எப்படி என்பதையும், சிறந்த முறையில் தியானம் செய்வது எப்படி என்பதையும் புரிந்து கொள்வோம்.

தியான நேரத்திலும் கூட சொந்தப் பிரச்சனை, தொழில் பிரச்சனை, குடும்ப பிரச்சனை என்றே எண்ணங்கள் வெளிப்படுகிறது என்பதை எப்படி வெல்லலாம் என்பதை கற்றுக் கொள்வோம். உடல் சரியாக இருந்தால் பத்மாசனம் சரிதான். இடுப்பு, மூட்டுவலி இருப்பவர்கள் அடம்பிடித்து பத்மாசனம் போட முயல்வது சரியில்லை. தனி அறை இல்லையெனில் அறையின் ஒரு மூலையை தேர்ந்தெடுங்கள். சுத்தமாக வைத்திருங்கள். வெள்ளை துணியை விரிக்கவும். குருவின் படத்தை முன் வைக்கவும். நீங்கள் எவ்விதம் மூச்சு விடுகிறீர்கள் என்பதை கவனிக்கவும். முதுகு, முடிந்தவரை நிமிர்ந்து உட்காரவும். நிதானமாக மூச்சை உள்ளிழுத்து விடவும். முயற்சி, சிரமம் இன்றி சுவாசிக்கவும், தலை, கழுத்து, கை, நெஞ்சு, முதுகு என கால்விரல் வரை நினைத்து சுவாசிக்கவும். எத்தனை என்பது தேவையில்லை. சிரமமற்ற, எளிதான சுவாசமே முக்கியம். தளர்வான உடை அணியவும். இப்போது உங்களின் அனைத்து பிரச்சனைகளையும் நினைவு கூரவும். சொந்தப் பிரச்னை, குடும்பம், தொழில், வேலை என அனைத்தையும் நினைத்துப் பார்க்கவும். பின் ஒவ்வொன்றாக வெளியேற்றவும். சுவாசிக்கும் போது ஒவ்வொரு பிரச்னையையும் வெளியே தள்ளுவதாக எண்ணி சுவாசிக்கவும். இதை முறைப்படி செய்தால் 5 நிமிடத்தில் நிச்சயமான ரிலாக்ஸேஷன் கிடைப்பதை உணரலாம்.

தியானத்தின் பலன்

கண்ணை மூடிக்கொண்டு ஓம் கேசட்டைப் போட்டுக் கொண்டு தியானம் செய்கிறார்கள் என்றால் அதனால் நிறையவே பலன் இருக்கிறது. ஏனெனில், சிவபெருமான் தவத்தில் இருப்பதாகப் புராணங்களில் படிக்கிறோம். (அந்த தவத்தைக் கலைக்கப் போய், மன்மதன் மாண்ட கதை நமக்குத் தெரியும்). மகாவிஷ்ணு சயனத்தில் இருக்கும் போது கண் மூடியிருக்கிறார். அசுரர்கள் கூட தவம் செய்த பிறகு தான் பலன்களை அடைந்துள்ளனர். இவ்வாறு செய்வதன் மூலம் மனம் கட்டுப்படுகிறது. மனம் கட்டுப்பாட்டால் ஆசை குறைகிறது. ஆசை குறைந்தால் உலகில் பிரச்சனையே இல்லை. உழைப்பது மூன்று வேளை சாப்பாட்டுக்கும், கடவுளின் கங்கர்யத்திற்கும் மட்டும் போதும் என நினைத்து விட்டால் ஒருவனுக்கு ஏது கஷ்டம்?
---------------------------------------------------------------------------------