வியாழன், 7 செப்டம்பர், 2023

18. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

18. ஸ்ரீ சுரேந்திரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்



பதினெட்டாவது ஆச்சார்யர் [கி.பி. 375 - 385]

ஸ்ரீ சுரேந்திரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மஹாராஷ்டிர அந்தணர். தந்தையார் பெயர் ''மதுரா நாதர்''. இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ''மாதவர்''.  

இவருடைய யோக வல்லமை காரணமாக ‘'ஸ்ரீ யோகி திலகர்'' என்று கொண்டாடப் பட்டார். இவர் காலத்தில் "நரேந்திராதித்யன்" காஷ்மீர் மன்னராக இருந்தார். இவருடைய மருமகன் "சுரேந்திரனும்" ஒரு சிற்றரசனே.

சுரேந்திரனின் சபையில் ''துர்தீதிவி'' என்ற நாஸ்திகர், ஆஸ்தான வித்வானாக புகழ் பெற்றிருந்தார். ஸ்ரீ யோகி திலகர் பலரை வாதில் வென்ற அனுபவம் இருந்ததால் இவனையும் வாதில் வென்றார்.

இதை அறிந்த நரேந்திர ஆதித்யன் பெரும் வியப்போடு இவர் காலடியில் வணங்கி “இன்று முதல் இந்த காஷ்மீர் அரசுரிமை உங்களுடையது, உங்கள் ஆணைப்படி செயல் படுவேன்" எனக் கூறினார். அப்பேற்பட்ட பெருமை வாய்ந்தவர் இவர்.

இவர் கி.பி. 385 ஆம் ஆண்டு, தாருண வருடம், மார்கழி மாதம், வளர்பிறை பிரதமை திதி அன்று உஜ்ஜயினி அருகில் சித்தி அடைந்தார்.

இவர் 10 ஆண்டுகள் காலம் தான் பீடத்தை அலங்கரித்தார்.

17. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

 ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

17. ஸ்ரீ கௌட சதாசிவேந்திர ஸரஸ்வதி
ஸ்வாமிகள் [பாலகுரு]



பதினேழாவது ஆச்சார்யர் [கி.பி. 367 - 375]

ஸ்ரீ கௌட சதாசிவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் [பாலகுரு] காஷ்மீர நாட்டு மந்திரியான ''தேவமிச்ரன்'' என்பவருக்கு மகனாக பிறந்தார். பிறந்து பேசத் தொடங்கியது முதல் அத்வைதத்தைப் பற்றியே பேசினார். இவர் பிறந்த பின் இவரின் தந்தையான தேவமிச்ரன்" ஜைன மதத்தைத் தழுவினார்".

மகனின் அத்வைத நெறியை மாற்ற சாம, தான, பேத, தண்டப் பிரயோகங்களை நடத்தினார். இரணியகசிபுவின் முயற்சிகள் எப்படி பிரகலாதனிடம் பலிக்க வில்லையோ அதே போல் "தேவமிச்ரனின்" முயற்சிகள் மகனிடம் பலிக்காமல் போயின.

இறுதியில் "தேவமிச்ரன்" கோபத்தில் தனது மகனை சிந்து நதியில் தூக்கி வீசி எறிந்தார். நீரில் தத்தளித்துத் தடுமாறிய சிறுவனை பாடலிபுரத்து அந்தணரான ''பூரிவசு'' பார்த்துக் காப்பாற்றினார். இந்த குழந்தை சிந்து நதியில் கிடைத்ததால் குழந்தைக்கு ''சிந்து தத்தன்'' எனப் பெயர் வைத்தார் ''பூரிவசு''. குழந்தைக்கு உபநயனம் செய்து முறைப்படி
வேத சாஸ்திரங்களைக் கற்பித்தார்.

அச்சமயம் காஷ்மீரத்தில் விஜய யாத்திரையாக வந்த ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதியான "ஸ்ரீ உஜ்வல சங்கரேந்திரரிடம் சரஸ்வதி ஸ்வாமிகளிடம்" அச்சிறுவனை ஒப்படைத்தார் "பூரிவசு". இதுவும் கடவுள் சித்தமே.

அவரை ''பாலகுரு'' என மக்கள் அன்போடு அழைத்தனர். இவர் தனது 17 வது வயதில் காஞ்சி ஸ்ரீ மடத்தின் பீடாதிபதியாக பதவி ஏற்றார். இவரின் காலத்தில் மடத்தின் சார்பாக தினமும் ஆயிரக்கனக்கான அந்தணர்களுக்கு அன்னதானம் செய்தது இவரின் சிறப்பு.

பாலிக, பௌத்த மதத்தினரோடு வாதிட்டு அவர்களை நாட்டை விட்டுப் போகுமாறு செய்தார். இதை கண்ட காஷ்மீர் மக்கள் இவருக்குத் "தங்கப் பல்லக்கை" பரிசளித்தனர். அதில் அமர்ந்து பாரதம் முழுவதும் விஜய யாத்திரை புரிந்தார். பல மதங்களை தனது வாதத் திறமையால் நாட்டை விட்டு விரட்டி அடித்து என்பது இவரின் சிறப்பு.

இந்த குருரத்தினம் தமது 25 ஆவது வயதில் கி.பி. 375 ஆம் ஆண்டு, பவ வருடம் ஆனி மாதம் கிருஷ்ண பட்க்ஷம் தசமி திதி அன்று ''நாசிக்'' நகருக்கு அருகிலுள்ள ‘'த்ரயம்பகத்தில்'' சித்தி அடைந்தார்.

இவர் 8 ஆண்டு காலம் தான் பீடத்தை அலங்கரித்தார்.

16. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... பதினாறாம் ஆச்ரியர்...

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... பதினாறாம் ஆச்ரியர்...

16. ஸ்ரீ உஜ்வல சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்...



பதினாறாம் ஆச்ரியர் [கி.பி 329-367]

ஸ்ரீ உஜ்வல சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மஹாராஷ்டிர அந்தணர் குலத்தவர். இவரது தந்தையார் பெயர் ''கேசவ சங்கரர்''. பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''அச்சுத கேசவர்''.

காஞ்சி காமகோடி பீடாதிபதியான பிறகு இவர் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை இவர் பல முறை விஜய யாத்திரைகளை செய்துள்ளார். அப்போது "ச்யாநந்தூர" நாட்டு மன்னரான "குலசேகரனை" தன் அருள் நோக்கால் கவிஞராக்கினார்.

ஜைன மதத்திற்க்கு மாறிய அந்தணர்களை "ஜராத்ருஷ்டி" எனப் பெயரிட்டு அவர்களை சிந்து நதிக்கு அப்பால் செல்லும் படி கட்டளை பிறப்பித்தார். பிற மதங்கள் இந்து மதத்தை ஆக்கிரமிக்காமல் இருக்க இவர் அரும் பாடுபட்டார்.

இவர் கி.பி. 367ஆம் ஆண்டு, அக்ஷய வருடம் சுகல பக்ஷம், அஷ்டமி திதி அன்று காஷ்மீரத்திலுள்ள ''கலாபூரி'' என்னுமிடத்தில் சித்தி அடைந்தார். அந்த ஸ்தலம் அது முதல் ''உஜ்வல மஹாயதிபுரம்'' என்றழைக்கப்பட்டு வருகிறது.

இவர் 38 ஆண்டுகள் வரை பீடத்தை அலங்கரிதார்.
-------------‐---------------------------------------------

15. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... பதினைந்தாவது ஆச்சார்யர்...

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... பதினைந்தாவது ஆச்சார்யர்...

15. ஸ்ரீ கீஷ்பதி கங்காதரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று



பதினைந்தாவது ஆச்சார்யர் [கி.பி. 317 - 329]

கீஷ்பதி கங்காதரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று, ஆந்திராவைச் சேர்ந்த அந்தணர். இவரது தந்தையாரின் பெயர்  “ஸ்ரீ காஞ்சி பத்ரகிரி”. இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் "சுபத்ரர்".

இவர் ஸ்ரீ அகஸ்திய முனிவரை தரிசித்து அவரிடம் “பஞ்ச தசாக்ஷரி” மந்திர உபதேசத்தை வாங்கிக் கொண்ட மஹான். இவர் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதியாகும் போது இவரது வயது பன்னிரெண்டு வயது தான். அந்த சிறிய வயதிலேயே பெரும் புலமையும், ஞானமும் பெற்றிருந்தார். இவரின் பெறும் ஆற்றலை கண்டு மக்கள் வியந்தார்கள்.

இவர் கி.பி. 329 ஆம் ஆண்டு, சர்வதாரி வருடம், சித்திரை மாதம், சுக்லப் பிரதமை அன்று அகஸ்திய மலை அருகில் சித்தி பெற்றார்.

இவர் 12 ஆண்டுகள் வரை பீடத்தில் இருந்தார்.
-------------‐-------------------------------------------

14. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... பதிநான்காவது ஆச்சார்யர்...

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... பதிநான்காவது ஆச்சார்யர்...

14. ஸ்ரீவித்யா கநேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று


பதிநான்காவது ஆச்சார்யர் [கி.பி. 272 - 317]

ஸ்ரீ வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஒன்று, ஆந்திர தேசத்து அந்தணர். இவரின் தந்தையின் பெயர் ''பாபண்ண ஸோமயாஜி" அவர்களுக்கு மகனாக பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் ''நாயனா''.

இவர் மந்திர சாஸ்திரத்தில் வல்லமை உடையவர். ஒரு முறை மலைய மலைப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இவர் தங்கியிருந்த சமயம் அப்பகுதியில் உள்ள மக்கள் அவரை வணங்கி ''பைரவ மூர்த்தி'' அப்பகுதியில் உள்ள மக்களை பலி வாங்கிக் கொண்டிருப்பதாகவும், அதன் உக்கிரத்தைத் தணிக்க வேண்டும் என்றும் வேண்டினார்கள். வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் தனக்குண்டான சக்திகளை பயன்படுத்தி மந்திரப் பிரயோகம் செய்து அந்த உக்கிரக பைரவரை சாந்தப்படுத்தினார். ஊர்  மக்களின் அச்சத்தை போக்கி அவர்களுக்கு ஆசி வழங்கினார்.

இவர் கி.பி. 317 ஆம் ஆண்டு, தாது வருடம், மார்கழி மாதம், அமாவாசை திதி அன்று மலையமலைத் தொடரில் உள்ள அகஸ்திய கிரியில் சித்தி அடைந்தார்.

இவர் 55 ஆண்டுகள் வரை பீடத்தில் இருந்தார்.
-------------‐--------------------------------------------


13. ஸ்ரீ காஞ்சி காமகோடி குருபரம்பரா.... பதிமூன்றாவது ஆச்சார்யர்...

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... பதிமூன்றாவது ஆச்சார்யர்...

13. ஸ்ரீ சத்சித் கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்



பதிமூன்றாவது ஆசார்யர் [கி.பி.235 - 272]

ஸ்ரீ சத்சித் கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் கெடில நதிக்கரையில் உள்ள ஒரு சிற்றூரில் அந்தண ரத்தினமாக பிறந்தார்.

இவரின் தந்தையின் பெயர் "ஸ்ரீதர பண்டிதர்". இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் "சேஷய்யா".

"குரு எவ்வழி சீடர் அவ்வழி" என்கிற வழியில், குருவைப் போலவே இவரும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட நிர்வாகத்தை சிஷ்யரான ஸ்ரீ வித்யா கநேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் அனைத்து நிர்வாகத்தையும் ஒப்படைத்து விட்டு மௌன விரதம் மேற்கொண்டார். இவர் ஒரு  அவதூதர் போல பிரம்ம வரிஷ்டராய் காஞ்சி நகர்ப்புறத்தில் இருந்தார்.

இவர் கி.பி. 272 ஆம் ஆண்டு, கர வருடம், சுக்லபக்ஷம், பிரதமை திதி அன்று காஞ்சியிலுள்ள ஸ்ரீ காயா ரோஹணேஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்தோடு ஐக்கியமாகி மறைந்தார். [காணாமல் போனார்]

இவர் 37 ஆண்டுகள் வரை பீடத்தில் இருந்தார்.
-------------‐---------------------------------------------------------‐------------
 

12. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... பன்னிரண்டாவது ஆச்சார்யர்...

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... பன்னிரண்டாவது ஆச்சார்யர்...

12. ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று



பன்னிரண்டாவது ஆச்சார்யர் [கி.பி. 172 - 235]

ஸ்ரீ சந்திர சேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் [ஒன்று] பாலாற்றங் கரையிலுள்ள ஒரு சிற்றூரில் பிறந்தவர். இவருக்கு வாத்ஸ்யாயன கோத்திரம். தந்தையின் பெயர் "ஸ்ரீ வத்ஸ பட்டர்". பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் "ஹரி".

இவரின் சிஷ்யரான ஸ்ரீ சத்சித்கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளிடம், சந்திர மௌலீஸ்வர பூஜையையும், ஸ்ரீ மடம், மடம் சார்ந்த நிர்வாகத்தையும் ஒப்படைத்து விட்டு "சார்வ பௌம" என்னும் சிறப்பான யோக நிஷ்டையைக் கடைப்பிடித்தார். பல ஆண்டுகளாக "சார்வ பௌம" நிஷ்டையில் இருந்த மிக பெரிய தபஸ்வி இவர். இப்படியும் ஒருவர் இருக்க முடியுமா என்று நினைத்த மக்கள் இவரை போற்றி கொண்டாடினார்கள்....

இவர் கி.பி. 235 ஆம் ஆண்டு, ஆனந்த வருடம், ஆடி மாதம், சுக்ல பக்ஷம், நவமி திதியில் முதல் குருவான ஆதிசங்கரர் எப்படி காமாக்ஷி அம்மன் கோவிலில் அம்பாளோடு ஐக்கியமானாரோ அது போலவே சேஷாசலத்திலுள்ள ஒரு குகையில் மறைந்தருளினார். அதில் அழியாப் பேரானந்தம் அடைந்தவர் என்பது இவரின் சிறப்பு...

இவர் 63 ஆண்டுகள் வரை பீடத்தில் இருந்தார்.
-------------‐---------------------------------------------

11. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... பதினொன்றாவது ஆச்சார்யர்...

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... பதினொன்றாவது ஆச்சார்யர்...

11. ஸ்ரீ சிவானந்த சித்கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்



பதினொன்றாவது ஆச்சார்யர் [கி.பி. 127 - 172]

ஸ்ரீ சிவானந்த சித்கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் கன்னட அந்தண மரபினர். இவரின் தந்தையின் பெயர் ''உஜ்வல பட்டர்''. பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''ஈச்வர வடு''. பல யாத்திரை சென்ற இவர் சந்திர மௌலீஸ்வர பூஜையை கிராமம் கிராமமாக செய்துள்ளார். சிவ அத்வைத நெறியில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். சந்திர மௌலீஸ்வர பூஜை செய்வதில் ஆளாதி பிரியம் கொண்டவர்.

இவர், கி.பி.172 ஆம் ஆண்டு, விரோதி கிருது வருடம், சித்திரை மாதம், சுக்ல பக்ஷ தசமி திதியில் விருத்தாசலத்தில் சித்தியடைந்தார்.

இவர் 45 ஆண்டுகள் வரை பீடத்தில் இருந்தார்.
-------------‐--------------------------------------------

10. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... பத்து...

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

10. ஸ்ரீ சுரேஸ்வரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்



பத்தாவது ஆச்சார்யர் [கி.பி. 69 - 127]

இரண்டாம் ஸ்ரீ சுரேஸ்வரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மஹாராஷ்டிர பிராம்மணர். கொண்காணத்து மஹாபலேஸ்வரம் என்ற ஊரில் வசித்து வந்த ''ஈஸ்வர பண்டிதர்'' என்பவருக்கு மகனாக பிறந்தார். பெற்றோர் இவருக்கு வைத்த பெயர்''மகேஸ்வர்''.

இவரும் பல ஆண்டுகள் வட இந்தியா முழுவதும் சந்திர மௌலீஸ்வர பூஜையோடு விஜய யாத்திரைகள் மேற்கொண்டு மக்களுக்கு அருள் பாலித்தார். இவர் சென்ற ஊர்களில் எல்லாம் வேத நெறியைப் பரப்ப அரும்பாடுபட்டார். இருதியில் வட இந்தியா முழுவது யாத்திரையை முடித்துக் கொண்டு காஞ்சிபுரம் வந்தடைந்தார்.

இவர் அக்ஷய வருடம், கி.பி. 127 ஆம் ஆண்டு, ஆனி மாதம், சுக்ல பக்ஷம், மூல நட்சத்திரத்தில் காஞ்சியில் சித்தி அடைந்தார்.

இவர் 58 ஆண்டுகள் வரை பீடத்தை அலங்கரித்தார்.
-------------‐---------------------------------------------

9. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... ஒன்பது...

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

9. ஸ்ரீ கிருபா சங்கரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்....



ஒன்பதாம் ஆச்சார்யர் [28 -- 69 கி.பி]

ஸ்ரீ கிருபா சங்கரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், ஆந்திர தேசத்து பிராமண குலத்தை சேர்ந்தவர். "ஆத்மன ஸோமயாஜி" என்பவரின் மகனாக பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் ''கங்கையா''. ''கர்க்கா'' என்பது குல வழிப்பட்டம்.

இவருடைய பீடாதிபத்தியத்தை ஸ்ரீ காமகோடி பீடத்தின் பொற்காலம் என்று குறிப்பிடலாம். ஸ்ரீ ஆதிசங்கரர் வகைப்படுத்திய ஆறு சமயங்களும் பரவப் பாடுபட்டவர். ''தாந்திரீய'' வழிபாட்டு முறைகளை வேரறுத்தார்.

காலத்தால் மாசு சூழ்ந்த சநாதன தர்ம நெறியை இவர் தூய்மைப்படுத்தி பெருமை சேர்த்தார். ஞான மார்க்கத்தை, பக்தி நெறியை மக்களுக்கு எடுத்துரைத்தார். பக்தி மார்க்கத்திலும் இறைவனை அடைய முடியும் என்று காட்டிய நாயன்மார்கள், ஆழ்வார்களுக்கு முன்னோடி என்ன தக்கார்.

நம் மதத்தின் புனிதத்தை  மீட்டெடுத்தவர். ஸ்ரீ ஆதி சங்கரரின் படைப்புக்களைப் புதுப்பித்ததற்க்கு இவரே காரணம்! முக்கிய இறை மூர்த்தங்களை பூஜை செய்ய  தூய்மையான வழி, நெறி முறைகளை உருவாக்கி பக்திக்கான வழி காண்பித்தார்.

இவ்வழி பாட்டு முறைகளையே பின்னாளில் வந்த சைவ, நாயன்மார்களும் பின் பற்றினார்கள்.

கோவில்கள் செழிப்பாக இருப்பதற்காக காசி, காஞ்சி, திருவொற்றியூர், திருவானைக்காவல் ஆகிய ஸ்தலங்களில் யந்திர பிரதிஷ்டை செய்து அதன் சக்திகளை அதிகப்படுத்தி சிறப்பாக நடக்க வழி முறைகளை செய்துள்ளார்.

இவர் கி.பி 69 ஆம் ஆண்டு, விபவ வருடம், கார்த்திகை மாதம், கிருஷ்ண பக்ஷம், திருதியை திதியில், மிருகசிரீர்ஷ நக்ஷத்திரத்தில் விந்திய மலைப்பகுதியில் சித்தி அடைந்தார்.

இவர் 40 ஆண்டுகள் வரை பீடத்தில் அலங்கரித்தார்.

மீண்டும் நாளை தொடர்வோம்...
-------------‐---------------------------------------------

8. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... எட்டு...

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
 
8. ஸ்ரீ கைவல்ய ஆனந்த யோகேந்திர சரஸ்வதி



எட்டாம் ஆச்சார்யார் [55 கி.மு - 28 கி.பி]

ஸ்ரீ கைவல்ய ஆனந்த யோகேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆந்திர தேசத்து அந்தண குலத்தவர். திருப்பதியில் பிறந்தார். ''த்ரைலிங்க சிவய்யா'' என்பவருக்கு மகனாகப் பிறந்தவர்! பெற்றோர் வைத்த பெயர் "மங்கண்ணா".  இவரை ''சச்சிதானந்தர்'' எனவும் ''கைவல்யயோகி'' என்றும் அழைப்பார்கள். இவரின் அடுத்த வாரிசாக ஸ்ரீ கிருபா சங்கரரை நியமித்தார்.

இவர் கி.பி. 28 சர்வதாரி ஆண்டு தை மாதப் பிறப்பன்று, சுக்ல பக்ஷம், பஞ்சமி, சஷ்டி திதியில் பூர்வ பத்ர பாதா நக்ஷத்திரத்தில் காஞ்சி ''மண்டன மிச்ரர்'' அக்ரஹாரத்தில் ''புண்ணிய ரஸா'' என்னும் பகுதியில் சித்தி அடைந்தார்.

இவர் 83 ஆண்டுகள் வரை பீடத்தில் அலங்கரித்தவர்.
-------------‐---------------------------------------------