செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

ஆலயதரிசனம்

ஆலயதரிசனம்..

மதுரகாளி திருக்கோயில் சிறுவாச்சூர்...

1. வீர பிரம்மேந்திர சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ சக்கரம் இங்குள்ளது.

2. வாரத்தின் திங்கள், வெள்ளி ஆகிய இருநாட்கள் மட்டுமே ஆலயம் திறக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது.

3. திருவிழா மற்றும் சில குறிப்பிட்ட பண்டிகைகளின் போது மட்டும் கோயில் திறக்கப்படுகிறது; மற்ற நாட்களில் கோயில் திறக்க மாட்டார்கள்.

4. .சிறுவாச்சூரின் வழிபாடு தெய்வம் செல்லியம்மன் ஆகும், மந்திரவாதி ஒருவன் தனது மந்திர வலிமையால் அம்மனைக் கட்டுப்படுத்தி தீய செயல்களுக்கு பயன்படுத்தி வந்தான்

5. மதுரை காளியம்மன் ஸ்தலத்திற்கு வெள்ளிக்கிழமை இரவு தங்க இடம் கேட்கிறாள். செல்லியம்மன் தன்னை மந்திர வலிமையால் தொல்லை தரும் மந்திரவாதி பற்றிக் கூறுகிறாள்.

6. மதுரை காளியம்மன் அதற்கு தக்க வழி செய்வதாக கூறி தங்குகிறாள். இரவு மந்திரவாதியை அழித்து, செல்லியம்மனை மந்திர வலிமையில் இருந்து விடுவிக்கிறாள்.

7. செல்லியம்மன் அன்னை திறம் கண்டு இனி அன்னையே சிறுவாச்சூர் ஆலயத்திலிருந்து அடியார்கட்கு அருள் பாவித்து வர வேண்டுகிறாள்.

8. தான் அருகிருக்கும் பெரியசாமி மலை சென்று விடுவதாகவும் ஆனால் கோயிலில் எப்பொழுதும் தனக்கு முதல் மரியாதை வேண்டுமெனவும் 
வரம் கேட்கிறாள். 

9. மதுரை காளியம்மனும் அதற்கு ஒப்புக் கொண்டு ஆலயத்தில் அமர்ந்து, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்புரிகிறாள்.

10. செல்லியம்மன் தனக்கு முதல் மரியாதை வேண்டுமென்று கேட்டதற்கு ஏற்ப பூஜையின் போது தீபாராதனை முதலில் மலை நோக்கி மேலே காட்டி விட்ட பிறகு மதுர காளியம்மனுக்கு தீபாராதனை காட்டும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. 

11. சிறுவாச்சூருக்கு வெள்ளிக் கிழமை வந்த மதுரைக் காளியம்மன் பக்தர்களுக்கு திங்கள் கிழமை காட்சி தருகிறாள். எனவே திங்கள், வெள்ளி மட்டும் ஆலயம் திறந்திருக்கும்.

12. மற்ற நாட்களில் மதுரகாளியம்மன் செல்லியம்மனுடன் பெரியசாமி மலையில் தங்குவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.

13. இத்தலத்தில் புகழ்பெற்ற நேர்த்திக்கடன் என்பது மாவிளக்கு நேர்த்திக்கடன் என்பதாகும். 

14. வயிறு, நெற்றி, நெஞ்சு, கால், கை என்று வேண்டிக் கொண்டு அந்த பாகத்தில் மாவிளக்கு வைத்து அம்மனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.

15. வெளியில் எங்கும் மாவிளக்கு மாவு தயாரிக்காமல் ஆலய வளாகத்திற்குள் அரிசி கொணர்ந்து ஊற வைத்து இடித்து இங்கேயே மாவிளக்கு தயார் செய்கிறார்கள்.

16. பின்பு அதனுடன் நெய்விளக்கு  ஏற்றித் தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இதற்காக மாவு இடிக்கத் தனியிடம் ஒதுக்கப்பட்டு உரல்களும், உலக்கைகளும் ஆலயம் மூலமாகவே வைக்கப்பட்டுள்ளன. 

17. இடிக்க முடியாத பக்தர்களுக்கு கூலிக்கு மாவிடித்துத்தர பணியாளர்களும் உள்ளனர்.

18. இவை தவிர அங்கபிரதட்ணம் செய்வதும், பாலாபிசேகம், அன்னதானம் ஆகியவற்றையும் பக்தர்கள் செய்கிறார்கள்.

19. மதுரைக் காளியம்மன் என்ற திருப்பெயரே பின்னாட்களில் மருவி மதுரகாளியம்மனாக வந்ததாகக் கூறுகிறார்கள்.

20. அம்மன் சுமார் 4 அடி உயரமாக இருக்கிறார். வடக்கு நோக்கிய சன்னதியில் அம்மன் வடக்கு நோக்கி அமர்ந்துள்ளாள்.

21. நான்கு திருக்கரங்கள் இவற்றில் உடுக்கை, பாசம், சூலம், கிண்ணம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். இடது திருவடியை மடித்த நிலையில் வைத்து வலது திருவடியை சிம்மத்தின் மீது ஊன்றி அமர்ந்த இருக்கிறாள்.

22. அம்மன் திருவடியில் அரக்கன் இல்லாததால் அழிக்கும் தொழிலில் காட்சியில்லை, பக்தர்களுக்கு அருளும் நிலையில்காட்சி தருகிறாள்.

23. தீராத நோய்கள், மற்றும் உடல் உபாதைகள், வழக்கு சிக்கல்கள், காணாமல் போன பொருட்கள், வியாபார சிக்கல் முதலியவற்றுக்கு அம்மனை வழிபட்டால் தீர்வு கிடைக்கிறது.

24. ஆண்டுதோறும் சித்திரைத் திங்களில் அம்மாவாசைக்கு பின்வரும் முதல் செவ்வாயன்று பூச்சொரிதல் தொடங்கும், பின் காப்பு கட்டி 13 நாட்கள் பெருந்திருவிழா சிறப்புடன் நடைபெறுகிறது.

25. இத்திருவிழாவில் மலை வழிபாடு, வெள்ளிகுதிரை வாகனம், திருத்தேர் முதலியன முக்கிய நாட்களாகும். இத்திருவிழா நாட்களில் ஆலயம் திறக்கப்பட்டு பூஜை நடைபெறும்.

26. குலோத்துங்க சோழனால் திருப்பணி செய்யப்பட்ட கோயில் மலைகளும் ஏரியும் குளமும் தோப்புகளும் வயல்களும் சூழ்ந்துள்ள மனதிற்கினிய சூழலில் ஊரின் எல்லையில் அன்னையில் திருக்கோயில் அமைந்துள்ளது.

27. எழிலார்ந்த ராஜ கோபுரம் அனைவரையும் வருக வருகவென அழைக்கிறது. அன்னை மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம், தலத்தின் காவல் தெய்வாமாக அய்யனார் உள்ளார்.

28. குலதெய்வமாக வழிபடுவோ பக்தர்கள் பொங்கள் வைத்து வேண்டிக் கொள்கின்றனர்.

29. திங்கள் வெள்ளி கிழமைகளில் மட்டும் காலை 8 மணிக்கு சன்னதி திறக்கப்படும். காலை 11 மணிக்கு மேல் அம்மனுக்கு அபிசேகம் நடைபெறும். இரவு 8 மணி வரை தொடர்ந்து தரிசனம் செய்யலாம்.  
     
30. ஆலய முகவரி அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில், சிறுவாச்சூர், பெரம்பலூர் மாவட்டம். 

ஸ்ரீ பராசக்தி மஹிமை

 ஶ்ரீ பராசக்தி மஹிமை:

"ஸார்!! நேக்கு ஶ்ரீவித்யோபதேசம் ஆய்டுத்து. தீக்ஷையும் குருநாதர் பண்ணி வைச்சுட்டார்!! ஆனால் நவாவரண பூஜை மாத்ரம் எடுத்து வைக்கல்லே!! பின்னாடி கத்துக்கோடான்னுட்டு போய்ட்டார். நேக்கும் வயஸாய்டுத்து!! நவாவரண பூஜை சித்த கத்துக்குடுப்பேளோ!!" சென்னை பாரிஸின் பூக்கடைத் தெருவில் வஸிக்கும் ஶ்ரீஸுந்தர தீக்ஷிதர் ஶ்ரீஶ்ரீசிதாநந்தநாதாளிடம் ப்ரார்த்தித்தார். பள்ளிக்கூடத்தில் உத்யோகத்தில் இருந்தததால் சிஷ்யர்கள் உட்பட அனைவருமே ஶ்ரீசிதாநந்தநாதாளை "ஸார்" என்றே அழைப்பது வழக்கம்.

"அதுக்கென்ன !! தாராளமாக!! வர்ற பௌர்ணமாஸ்யை நானே ஆத்துக்கு வந்து கத்துக்கொடுத்துடறேனே!!" ஶ்ரீஸார் பதிலுரைத்தார்.

பௌர்ணமாஸ்யை நெருங்கியது. ஶ்ரீஸுந்தர தீக்ஷதருக்கும் பரபரப்பு. நவாவரண பூஜை ஸாதாரண விஷயம் இல்லையே!! ஆவரண பூஜைக்கு தேவையென ஶ்ரீஸார் சொன்ன அத்தனையுமே திட்டமாக ஏற்பாடு செய்து விட்டு காத்திருந்தார் ஶ்ரீஸுந்தர தீக்ஷிதர்.

ஶ்ரீசிதாநந்தாளின் க்ருஹம் பழவந்தாங்கல். அங்கிருந்து பூக்கடைக்கு வரவே நாழியாகும். மின்சார ரயில் பிடித்து சென்ட்ரல் வந்து பின் அங்கிருந்து டவுன் பஸ் ஏறி வர வேண்டும்!!

ஶ்ரீஸார் க்ருஹத்தில் "ஶ்ரீப்ரஹ்மவித்யா விமர்சினி ஸபா" என்று ஏற்படுத்தி பற்பல ஶ்ரீவித்யா க்ரந்தங்களை உபந்யஸிப்பது வழக்கம். அனறும் சனிக்கிழமை பௌர்ணமாஸ்யை ஆனதினால் ஶ்ரீஸுந்தர தீக்ஷிதரிடம் நவாவரணம் கற்றுக்கொடுக்க வருகிறேன் என்றுரைத்ததை மறந்து ஶ்ரீஸார் அன்று க்ருஹத்திற்கு வந்திருந்தவர்களுக்கு உபந்யஸிக்கத் தொடங்கினார்.

மாலையிலிருந்து ஶ்ரீஸுந்தர தீக்ஷிதர் ஶ்ரீஸாரின் வருகையை நினைத்துக் காத்திருந்தார். வருகிறேன் என்று சொல்லி வைத்த நேரத்தை விட ஒன்றரை மணி நேரம் கடந்தே விட்டது. ஸாரைக் காணும். ஆனால் திடிரென வாயில் மணி ஒலித்தது.

சிகப்பு ஒன்பது கெஜம் அணிந்து, மெட்டியும் கொலுசும் ஸப்திக்க ஸாக்ஷாத் லலிதாம்பிகை போன்றே ஒரு ஸ்த்ரீ வெளியில் நின்றிருந்தாள்.
"ஸுந்தர தீக்ஷிதர் ஆம் தானே!!"

"ஆமாம் மாமி!! நீங்க!!"

"ஒன்னுமில்லே!! ஸார்க்கு திடீர்னு வேலை வந்துடுத்து!! சித்த நீங்க போய் ஸுந்தர தீக்ஷிதருக்கு நவாவரண பூஜை பண்ணி வையுங்கோ மாமி!! சீக்ரம் வந்துடறேன்னார்!! அதான் வந்தேன்!! ஆமா!! பூஜைக்கு எல்லாம் தயாராகிடுத்தோ!!" மாமி கேட்டாள் தீக்ஷிதரை.

"ஆஹா!! எல்லாம் ரெடி மாமி!!" தீக்ஷிதர் ஸந்தோஷமாக இயம்பினார். என்னவோ ஒரு விவரிக்க முடியாத ஆனந்தம் அவர்க்குள்.

"ஸந்தோஷம்!! சரி நவாவரணம் ஆரம்பிக்கலாம்!! எல்லாம் சரியா இருக்கோ!! ஆங்!! உளுந்து வடை இருக்கோ!!" திடீரெனக் கேட்டாள் மாமி.

"இல்லையே மாமி!! சக்கரைப் பொங்கல் தான் பண்ணிருக்கேன்!!" இழுத்தார் ஸுந்தர ஸாஸ்த்ரிகள்.

"ஓ!! நவாவரண பூஜைக்கு வடை அவச்யம் தேவையாச்சே!! சித்த இருங்கோ!! பக்கத்ல சேட்டு கடைல சூடா வடை போட்டுண்ட்ருக்கா!! வாங்கிண்டு வந்துடறேன்!!" தானே வலியச்சென்று வடையையும் வாங்கிக் கொண்டு வைத்து பூஜையைத் தொடங்கினாள் மாமி.

ஸுவாஸினி பூஜை ஸமயம். "சாஸ்த்ரிகளே!! நானே நித்ய ஸுவாஸினி தான்!! எனக்கே பூஜை பண்ணுங்கோ!!" மாமியில் குரலில் ஒரு ஆகர்ஷணம்.

ஸாக்ஷாத் லலிதா பரமேச்வரியாகவே மாமியை பாவனை செய்து நமஸ்கரித்தார் ஸுந்தர ஸாஸ்த்ரிகள்.

ஒரு மந்த்ரத்திற்கு கட்டுப்பட்டது போல் நவாவரண பூஜையை பூர்த்தி செய்தார்.

"சரி!! எல்லாம் நல்லபடியாக ஆச்சு!! இனி ஶ்ரீராஜராஜேச்வரீ ப்ரத்யக்ஷமாக ஆத்துக்கு வந்தாச்சுன்னு நினைச்சுக்கோங்கோ!!" என்று புன்னகைத்தாள் மாமி!!

"ஆஹா!! பாக்யம் மாமி!! தாம்பூலம் ஸ்வீகரிச்சுக்கனும்!!" தாம்பூலத்தையும், மங்கல த்ரவ்யங்களையும் அளித்தார் ஸாஸ்த்ரிகள்.

"ஆமா!! ஸார் கடைசி வரை வரவேயில்லையே!!" அப்போது தான் ஶ்ரீசிதாநந்தநாதாள் வராததே தோன்றுகிறது ஸாஸ்த்ரிகளுக்கு.

"ஒன்னுமில்லே!! ஏதானு கார்யமா இருந்துருப்பார்!! அவரைப் பார்க்கறச்சே சொல்லிடுங்கோ!! நீங்க அனுப்பிச்ச மாமி நல்லபடியாக நவாவரண பூஜை செய்து கொடுத்தான்னு!! நான் வறேன்!!" கூறிவிட்டு நகர்ந்தாள் மாமி.

மாமி வெளியே சென்ற சில நொடிகளில் ஶ்ரீஸார் நுழைந்தார் ஸாஸ்த்ரிகள் க்ருஹத்திற்குள்!!
"ஸாஸ்த்ரிகளே!! மன்னிச்சுக்கோங்கோ!! ஸுத்தமா நினைப்பில்லே!! ஆத்துக்கு நிறைய பேர் வந்துட்டா!! உபந்யாஸத்ல மூழ்கிட்டேன்!! அப்றம் தான் சடார்னு ஞாபகம் வந்தது!! உடனே எலட்ரிக் ட்ரெயின் பிடிச்சு சென்ட்ரல் வந்து அங்கேந்தே ரிக்க்ஷால வந்தேன்!!  தாமஸமாயிடுத்து!! இருந்தாலும் பரவாயில்லே!! ராத்ரி நவாவரணம் விஷேஷம் தான் ஆரம்பிக்கலாமா!!" மூச்சுவிடாது கூறி முடித்தார் ஶ்ரீஸார்.

"ஸார்!! என்ன சொல்றேள்!! நீங்க அனுப்பிச்சதா ஒரு மாமி வந்து அத்புதமா நவாவரண பூஜையை கத்துக்கொடுத்துட்டு சித்த மின்னாடி தான போறா!!" திகைத்தார் ஶ்ரீஸாஸ்த்ரிகள்.

"நானா!! எந்த மாமியையும் அனுப்பல்லியே!! என்ன சொல்றேள்!!" ஶ்ரீசிதாநந்தநாதாள் திகைத்தார்.

"அப்போ வந்தது!!......"

"ஆஹா!! ஸாக்ஷாத் ஶ்ரீராஜராஜேச்வரீ!! லலிதா பரமேச்வரீ!! மஹாத்ரிபுரஸுந்தரயே தான்!! காமாக்ஷி!! தாயே!! ஶ்ரீவித்யே!! காமேச்வர வல்லபே!! ஸாக்ஷாத் நீயேவா வந்து நவாவரண பூஜை சொல்லிக் கொடுத்தே!! மஹாபாக்யம்டீ தாயே!!"

இதில் எந்த மஹிமையை புரிந்து கொள்ள இயலும்!! ஶ்ரீசிதாநந்தநாதாளுக்காக ஸாக்ஷாத் லலிதாம்பாளே வந்து நவாவரணம் சொல்லிக் கொடுத்ததற்கா!! ஶ்ரீஸுந்தர ஸாஸ்த்ரிகள் ஶ்ரீலலிதாம்பாளிடமே நவாவரணம் கற்றுக்கொண்டதற்கா!!

அன்றி பஞ்சப்ரஹ்மங்களுக்கும் காக்ஷியளிக்காத பவானீ லலிதேச்வரீ தானே வந்த நவாவரணம் கற்றுக் கொடுத்த மஹிமையையா!!

இப்போ தெரியறதா!! ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி ஏன் அவ்யாஜ கருணா மூர்த்தி!! கருணாம்ருத ஸாகரான்னு!!

ஶ்ரீஶ்ரீ Arutsakthi Nagarajan மாமா அவர்கள் கூறியது இச்சரித்ரம்!!

ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம

ஶ்ரீமாத்ரே நம:
லலிதாம்பிகாயை நம:

-- ஶ்ரீராமராகவன்

மஹா அவதார் பாபாஜி

உண்மையில் மஹா

அவதார் பாபாஜி யார்?

அவர் எங்கே பிறந்தார்?
எங்கே வளர்ந்தார்?
எங்கே இருக்கிறார்?
அவரது வயது என்ன?

பாபாஜி, இந்த வார்த்தைக்குதான் எத்தனை மந்திர சக்தி! எத்தனை மகத்துவம்! புரிந்தவர்கள் இவரை தெய்வம் என்று போற்றுகிறார்கள். புரியாதவர்களுக்கு இவர் என்றுமே புரியாத புதிர்தான்!

பாபாஜி என்ற பெயரில் நைனிடால் பாபாஜி, ஹரியகான் பாபாஜி, ஹைடகன் பாபாஜி என்றெல்லாம் பலரும் இருந்தாலும் எல்லோரும் ஒருவரே என்றுதான் சொல்கிறார்கள்.உண்மையில் மகா அவதார் பாபாஜி யார்?

அவர் எங்கே பிறந்தார்? எங்கே வளர்ந்தார்? எங்கே இருக்கிறார்? அவரது வயது என்ன? இந்தக் கேள்விகள் உலகம் முழுக்க கோடானு கோடிப் பேரிடம் இருந்தாலும்,யாராலும் சரியான விடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

அருகிலேயே அவர் இருப்பது அறியாமல், அவரைத் தேடி அலைபவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். எப்படி இருப்பார் என்ற ஆராய்ச்சியில் தங்கள் வாழ்நாளையே கழித்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.

ஒரே நேரத்தில் பல வடிவங்களில் இருக்க முடியும் அவரால். வடிவமே இன்றி ஒளிரூபத்திலும் தோன்றுவார் அவர்.

தேடிக்கண்டுபிடிக்க நினைத்து அலைவதை நிறுத்திவிட்டு, ஆத்மார்த்தமாக அவரிடம் சரணடைந்து அவரையே மனதுள் இருத்தி தியானம் செய்தால், நாம் தேடிப் போகாமலேயே அவர் நம்மைத் தேடி வருவார்.

உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான பேர் மத இன, மொழி, மத வேறுபாடற்று மகா அவதார் பாபாஜியைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆவலில் இருக்கிறார்கள்.

மகாவதார் பாபாஜியை தரிசித்ததாகவும் அவருடன் இருந்ததாகவும், பலர் பலவிதமாகச் சொல்கிறார்கள்.

விடுதலைப் போராட்ட தியாகியான டாக்டர் ராம்போஸ்லே பாபாஜியுடன் கிட்டத்தட்ட ஆறு வருடம் இருந்திருக்கிறார். பாபாஜியைப் பற்றிய அதிசயமான விஷயங்களை அவர் வியந்து கூறுகிறார். பாபாஜி எந்த வடிவத்திலும் தோன்றுவாராம். வயதானவராக, விலங்காக, பறவையாக எந்த உருவத்திலும் நிமிடத்தில் மாறிவிடுவாராம்.

ஒரு சமயம் அவரது பக்தரின் வீட்டிற்கு உணவருந்த வருவதாக பாபாஜி உறுதியளித்திருந்தாராம். ஆனால் சொன்னபடி பாபாஜி வரவில்லையென்று பக்தர் வருத்தப்பட்டார்.

அதை பாபாஜியிடமே நேரில் கேட்டுவிட்டார். உடனே பாபாஜி, ‘‘நான் அங்கே வந்திருந்தேன். மீந்துபோன உணவையெல்லாம் எனக்கு நீ போட்டாயல்லவா’’ என்றதும் அந்த பக்தர் அதிர்ந்து போனார். காரணம், அவர் மீந்து போன உணவைப் போட்டது ஒரு நாய்க்கு. அதாவது நாய் உருவில் அங்கே வந்திருக்கிறார் பாபாஜி.

பிரபஞ்சத்தில் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பாபாஜி செல்வார். சில நேரத்தில் பறவைகளின் மூலமாகத் தன் சீடர்களுக்கு செய்தி சொல்லி அனுப்புவார். அந்தப் பறவைகள் மனிதனைவிட விரைவாகச் சென்று சீடர்களிடம் பாபாஜியின் செய்தியை விவரமாகத் தெரியப்படுத்திவிடும்.

பாபாஜி யார் என்பதைத் தெரிந்துகொள்ள முயன்றவர்களுள் ஒருவரான யோகிராமையா என்பவர், தனது தியானத்தில் பாபாஜியின் பிறப்பைப் பற்றிய விவரங்கள் காட்சியாகத் தெரிந்ததாகக் கூறுகிறார்.

அவதரித்த காலம் உட்பட சகலமும் உணரும்படியாக தெளிவாகப் புலப்பட்ட கனவு அது. அதாவது பாபாவால் உணர்த்தப்பட்ட விஷயம் அது. அந்த விவரங்கள்:

கடலூருக்கும் சிதம்பரத்திற்கும் நடுவே கடலோரத்தில் உள்ளது பரங்கிப்பேட்டை என்ற ஊர். அங்கே வசித்தனர் வேதாரண்ய ஐயர்-ஞானம்பாள் என்ற நம்பூதிரி பிராமணத் தம்பதியினர். இறைபக்தி மிக்க அவர்களுக்கு, கி.பி.203ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி கடவுளருளால் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு நாகராஜ் என்று பெயர் வைத்தனர்.

கார்த்திகை தீபத்தன்று பிறந்த அக்குழந்தை, மானிட வர்க்கத்திற்கு தான் ஒளி தரப்போவதை சொல்லாமல் சொல்லியது.

கேரளத்தைச் சேர்ந்த இந்த நம்பூதிரி குடும்பத்தினர் அங்கிருந்து பரங்கிப்பேட்டை வந்து அங்கிருந்த சிவன் கோவிலில் அர்ச்சகம் செய்து வந்தனர். சிவாலயமான அது காலப்போக்கில் முருகன் தலமாக பிரசித்திபெற்று, முத்துக்குமாரசாமி கோவில் என்று பெயர் பெற்றது. பழமையான அந்தக் கோயில் இன்றும் பரங்கிப்பேட்டையில் இருக்கிறது.

சிறுவன் நாகராஜுக்கு ஐந்து வயது இருக்கும்போது அந்த சிவன் கோவிலில் நடந்த திருவிழா ஒன்றின்போது கயவன் ஒருவனால் கடத்திச் செல்லப்பட்டான். கல்கத்தாவிற்கு அவனைத் தூக்கிச் சென்றபோது ராமானந்தர் என்னும் வேதவிற்பன்னர் ஒருவர், சிறுவனது முகத்தில் தெரிந்த தேஜஸைக் கண்டார். சிறிதளவு பணம் கொடுத்து அவனைக் கயவனிடமிருந்து மீட்டார்.

அதனால், சிறு வயதிலேயே சாதுக்களுடன் பழகும் பாக்கியம் கிடைத்தது நாகராஜுக்கு. காசி, பிராயாகை போன்ற தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தபோது, அங்கே பால்குடி பாபாக்களோடு வாழ்ந்தார். அவர்களுக்கும் இலங்கையில் உள்ள கதிர்காமத்திற்கும் நல்ல தொடர்பு இருந்து வந்ததால் பதினொரு வயதிலேயே கதிர்காமம் சென்று அங்கு சித்தர் போகநாதரை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

விரிந்து படர்ந்த ஓர் ஆலமரத்தின் கீழ் போகரோடு இருந்து, போகரின் ஆசியோடு பல்வேறு யோக சாதனைகளையும் தியானக் கிரியைகளையும் அவர் பழகினார்.

தமது பதினாறாவது வயதில் பொதிகை மலைப் பகுதிக்கு வந்த நாகராஜ், குற்றாலநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள பராசக்தி பீடத்தினருகில் அமர்ந்து, அகத்தியரை வேண்டி கடுமையான தவத்தை மேற்கொண்டார்.

தவத்திற்கு இரங்கி அகத்தியர் அவர் முன்னே வந்தார். கிரியாகுண்டலினியை உபதேசம் செய்து இமயத்தின் உச்சியிலுள்ள பத்ரிநாத்திற்குச் சென்று அங்கு தவமியற்றும்படி அனுப்பினார். அங்கு சென்ற நாகராஜ் கடுமையான யோகப் பயிற்சிகளாலும், தியான முறைகளாலும் உன்னத நிலையடைந்து பாபாஜியாக இவ்வுலகிற்கு வெளிப்பட ஆரம்பித்தார்.

ஒவ்வொரு மனிதனும் சித்தாஸ்ரமம் சென்று அங்கே சாதனை மேற்கொள்வதை லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்று ரிக்வேதமும், சாமவேதமும் சொல்கின்றன.

ஆனால் சித்தாஸ்ரமத்திற்கு எல்லோராலும் அவ்வளவு சுலபமாகச் சென்றுவிட முடியாது. ஆயிரம் யோகிகளில் ஓரிருவருக்கு மட்டுமே அந்த பாக்கியம் கிடைக்கும்.

சித்தாஸ்ரமம் செல்வது எந்த அளவிற்கு உயர்வானது என்பதை விளக்க வேண்டுமானால், மகாபாரத சம்பவம் ஒன்றைச் சொல்லலாம்.

குருக்ஷேத்ரப்போரில் அர்ஜுனனின் அம்புகளால் தாக்கப்பட்டு அம்புப் படுக்கையில் உத்தராயண புண்ய காலத்தில் உயிர்விடக் காத்திருந்த பீஷ்மரைப் பார்க்க வந்தார் கிருஷ்ணர். அற்புதமான விஷ்ணு சகஸ்ரநாமத்தால் அவரைத் துதித்தார் பீஷ்மர். அடுத்து, கண்களில் நீர்வழிய தன் கடைசி ஆசையாக பகவானிடம் அவர் கேட்டது என்னதெரியுமா? ‘‘இதே உடலுடன் சித்தாஸ்ரமம் செல்ல வேண்டும்!’’ என்றுதான். பாரதப் போர் முடிந்ததும் தருமர், தாமோதரனிடம் கைகூப்பி வேண்டியதும் இதையே தான்.

பூலோகவாசிகள் சொர்க்கமும், வைகுந்தமும் செல்ல விரும்புவார்கள். ஆனால், மோட்சத்திலும், விண்ணுலகிலும் இருப்பவர்கள் சித்தாஸ்ரமம் வரவே ஆசைப்படுகிறார்களம்.

ஸ்ரீசக்ர வாசினியான அன்னை லலிதாம்பிகையின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி இது. இதன் உள்ளே செல்லவோ, சென்று விட்டால் வெளியே வரவோ எல்லோராலும் முடியாது.

சில குறிப்பிட்ட குருமார்களாலும் அவர்களின் சீடர்களாக இருப்போராலும், மட்டுமே முடியும். அவர்களால் தேர்வு செய்யப்படுபவர்களை அவர்களே வழிகாட்டி அழைத்துப் போவார்கள். அங்கே பல ஆயிரம் வருடங்களுக்கு மேல் வாழும் மகான்களை தரிசிக்கலாம். பல சாதனைகளை கற்றுக் கொள்ளலாம். அவ்விதம் சித்தாஸ்ரமத்திற்குள் பிறரை அழைத்துச் செல்லும் உரிமை பெற்ற வெகு சிலரில் மகாவதார் பாபாஜி மிக மிக முக்கியமானவர்.

பாபாஜியின் அற்புதங்கள் அள்ள அள்ளக் குறையாதது. பாபாஜி, லாமா பாபா என்ற பெயரில் திபெத்தில் இருந்ததாகவும் அவரது சீடரான ஜவுக்ஷா லாமாவிற்கு நான்கு கைகள் கொண்ட சிவரூபத்தில் தரிசனம் தந்தார் என்றும் கங்கோத்ரி பாபா உறுதிப்படுத்துகிறார்.

பாபாஜியை தட்சிணாமூர்த்தி அம்சமாக 2500 வருடங்களுக்கு முன்பு கல் அக்னிநாத் என்ற பெயரில் தட்சிணாமூர்த்தியாகத் தோன்றினார் என்றும், அவரே குருகோரக்ஷாநாத் என்றும் சில புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. நாத் பரம்பரையினர் அவரை சிவகோரக்ஷா என்றும், அவர் சிவபெருமான் அம்சம் என்றும் சொல்கிறார்கள்.

மகா அவதார் பாபாஜியை தனது மகா குருவாகக் கொண்டிருப்பவர் ரஜினி. அவரது அபூர்வ தரிசனத்தை அகத்தில் கண்டவர். பாபாஜியைப் பற்றி பலரும் பலவிதமாகக் கூறியிருந்தாலும், மகா அவதார் பாபாவைப் பற்றி தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ரஜினியின் நெருங்கிய நண்பரும், பிரபல திரைப்படத் தயாரிப்பாளருமான நாகராஜன் ராஜா சொல்வதைக் கேளுங்களேன். ‘‘மகா அவதார் பாபாவைப்பற்றி எத்தனையோ பேர் எத்தனையோ அதிசயங்கள் அற்புதங்கள் என்று பலவும் சொல்லியிருக்கிறார்கள்.

அவரைப் பற்றிய புதிருக்கான விடையை அவரே சொல்வது போல், எனக்கு ஓர் அற்புதத்தை நிகழ்த்தி என்னை அதிசயத்தில் ஆழ்த்தியது என் வாழ்நாளில் மறக்க முடியாத மிகப் பரவசமான சம்பவம்.

2008ம் வருடம் ஜூலை மாதம் நானும் என் மனைவியும், எனது நண்பரும் அவரது மனைவியும் ரிஷிகேஷ் சென்றுவிட்டு அங்கிருந்து பத்ரிநாத் சென்றோம்.

இரவு தரிசனம் முடித்துவிட்டு, மறுநாள் அதிகாலை அபிஷேகம் பார்க்கச் சென்றோம். அந்த சமயத்தில் மட்டும்தான் பத்ரிநாராயணர் தியான நிலையில் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தை நாம் தரிசிக்க முடியும். அபிஷேகம் ஆரம்பித்தது. எனக்கு பீடத்தில் பத்ரிநாராயணன் உருவம் தெரியவில்லை. சாட்சாத் பாபாஜியே அங்கே அமர்ந்திருப்பதாகத் தோன்றியது. மெய்சிலிர்க்க கண்களில் நீர் வழிய தரிசித்தேன்.

பிறகு கோவிலின் தலைமை அர்ச்சகரான நம்பூதிரியைப் பார்க்கச் சென்றோம். அவரது அறைக்குள்ளே சென்றவுடன், அங்கே இருந்த ஓர் ஓவியத்தின் மீது என் பார்வை பதிந்தது. அதில், நான்கு கைகளுடன் பாபாஜி தியான நிலையில் அமர்ந்திருப்பது போல் ஓவியமாகத் தீட்டப்பட்டிருந்தது.

நம்பூதிரியைப் பார்த்து அந்த ஓவியம் பற்றிய விவரம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று என் மனம் படபடத்தது. ஆனால், அவர் உடலநலம் சரியில்லாமல் படுத்திருந்ததால் அவரைப் பார்க்காமலேயே சென்னை திரும்பினோம். என் மனமோ அந்த ஓவியத்தைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது.

சென்னை வந்தவுடன் முதல்வேலையாக என் நண்பர் ரஜினிகாந்த் அவர்களைப் பார்த்து பத்ரிநாத்தில் இருந்த அதிசய ஓவியத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்ற ஆவலில் சென்றேன்.

ரஜினிகாந்தைப் பார்த்து ‘பத்ரிநாத்திற்குப் போய் வந்தேன்’ என்ற வார்த்தையை நான் முடிக்கும் முன்பு அவர் கேட்டார்... ‘‘பாபாஜியைப் பார்த்தீர்களா?’’

ஒரு விநாடி தூக்கிவாரிப் போட்டது எனக்கு. அவருக்கு எப்படித் தெரிந்தது? அவர் எதைச் சொல்கிறார்? பத்ரிநாராயணன், பாபாஜி போல் அமர்ந்திருப்பதைச் சொல்கிறாரா? என்று புரியாமல் விழித்தேன்.

புதிராகச் சிரித்தபடி தனது அறைக்குள் சென்றவர், வெளியில் வந்தபோது கையில் ஒரு படத்தோடு வந்தார். அந்தப் படத்தை அவர் என்னிடம் காட்டியபோது மேலும் அதிர்ந்து போனேன். பத்ரிநாத்தில் நம்பூதிரியின் அறையில் நான் பார்த்த விநோதமான பாபாஜி படம் அது!

‘‘இந்தப்படத்தைப் பற்றி சொல்லத்தான் நான் உங்களைத் தேடி வந்தேன். இது எப்படி உங்களிடம் இருக்கிறது?’’ என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.

‘‘நீங்கள் ரிஷிகேஷ் போகிறீர்கள். எப்படியும் உங்களை பாபாஜி பத்ரிநாத்திற்கு அழைத்து விடுவார். அங்கு இந்தப் படத்தைப் பார்க்கும் பாக்கியம் உங்களுக்கும் கிடைக்கலாம். அதற்குப் பின்னர் இந்தப் படத்தைப் பற்றிய விபரத்தை உங்களிடம் கூறலாம் என்றிருந்தேன்’’ என்று சொன்ன ரஜினிகாந்த் பத்ரிநாத் அனுபவத்தை சொல்லத் தொடங்கினார்.

‘‘நான் பத்ரிநாத் சென்றிருந்தபொழுது, அங்குள்ள நம்பூதிரியைச் சந்திக்க அவரது அறைக்குச் சென்றேன். அவரது அறையில் இருந்த இந்தப் படத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்து அதையே மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அதை கவனித்த நம்பூதிரி, ‘‘இந்தப் படத்தைப் பற்றிய ரகசியத்தை இதுவரை யாரிடமும் சொல்லவில்லை. ஏனோ, உங்களிடம் சொல்ல வேண்டும் என்று எனது உள் மனது சொல்கிறது’’ என்று கூறிவிட்டு சொல்ல ஆரம்பித்தார்.

‘‘எனக்கு முன் இருந்த நம்பூதிரியின் கனவில் இந்த உருவம் தோன்றி, ‘இந்தக் கோவிலில் பத்ரி நாராயணனாக நான் தான் இருக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். திடுக்கிட்டு எழுந்த அவர், தனக்கு இறைவன் கனவில் காட்டிய உருவத்தை அப்படியே ஓவியமாக வரைந்து வைத்துவிட்டார்.

அன்று முதல் இந்தப் படத்திலுள்ள தெய்வத்திற்கு பூஜை செய்தபிறகே பத்ரிநாராயணனுக்கு பூஜை செய்யும் வழக்கம் தொடர்ந்து வருகிறது’’ என்று நம்பூதிரி கூறினார்.

மகா அவதார் பாபாஜியால் மக்களுக்கு கிரியா யோகத்தை அளிப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட சீடர், ஸ்ரீலாஹிரி மகாசாயர். இல்லறத்தில் இருந்து கொண்டே யோக சாதனைகள் செய்து இறைவனோடு ஒன்ற முடியும் என்பதை மக்களுக்கு எளிதாக எடுத்துச் சொன்னவர் இவர். மகா அவதாரர் பாபாவை நேரடியாக தரிசித்த அவர், கிருஷ்ண பரமாத்மாதான் பாபாஜி என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அது நிதர்சனமான உண்மை என்பதை எனக்கு உணர்த்திவிட்டார் பாபாஜி.

ரஜினிகாந்த் மூலம் தன்னைப் பற்றிய இந்த உண்மை எனக்குத் தெரிய வேண்டும். என் மூலம் வெளி உலகிற்குத் தெரிய வேண்டும் என்பது பாபாஜியின் எண்ணமாக இருந்திருக்கிறது.

பாபாஜியின் அந்த அற்புதப் படத்தின் பிரதி ஒன்றை எனக்குக் கொடுத்து, மன நிறைவையும், அருமையான, உண்மையான விளக்கத்தையும் எனக்களித்த நண்பர் ரஜினிகாந்திற்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. எல்லாம் பாபாஜியின் செயல் தவிர வேறென்ன!

கலியுகத்தின் கடவுளாய், மகா அவதார புருஷராய்த் திகழும் பாபாஜி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர். அவரது பெயரை ஒருமுறை உச்சரித்தாலே அவரது அபூர்வ ஞான சக்தி நமக்குள் பாய்வது போல் இருக்கும்.

பாபாஜி, காலத்தால் கட்டுப்படுத்த முடியாதவர். இயற்கைக்கும், விஞ்ஞானத்திற்கும் அப்பாற்பட்டவர். காரணம், காக்கும் கடவுளான பரம்பொருளே அவர்! பாபாஜியிடம் சரணடைவோம். அவர் நம்மை எங்கும் எப்போதும் காத்திடுவார்.

 (பாபாஜியின் சரிதை)

Thanks to. Neyveli Murali.

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

கணேச கவசம் பாடல் வரிகள்

கணேச கவசம் பாடல் வரிகள்

ஏஷோதி சபலோ தைத்யான் பால்யேபி னாஶயத்யஹோ
அக்ரே கிம் கர்ம கர்தேதி ன ஜானே முனிஸத்தம 1

தைத்யா னானாவிதா துஷ்டாஸ்ஸாது தேவத்ருமஃ கலாஃ
அதோஸ்ய கம்டே கிம்சித்த்யம் ரக்ஷாம் ஸம்பத்துமர்ஹஸி 2

த்யாயேத் ஸிம்ஹகதம் வினாயகமமும் திக்பாஹு மாத்யே யுகே
த்ரேதாயாம் து மயூர வாஹனமமும் ஷட்பாஹுகம் ஸித்திதம் ஈ
த்வாபரேது கஜானனம் யுகபுஜம் ரக்தாம்கராகம் விபும் துர்யே
து த்விபுஜம் ஸிதாம்கருசிரம் ஸர்வார்ததம் ஸர்வதா 3

வினாயக ஶ்ஶிகாம்பாது பரமாத்மா பராத்பரஃ
அதிஸும்தர காயஸ்து மஸ்தகம் ஸுமஹோத்கடஃ 4

லலாடம் கஶ்யபஃ பாது ப்ரூயுகம் து மஹோதரஃ
னயனே பாலசம்த்ரஸ்து கஜாஸ்யஸ்த்யோஷ்ட பல்லவௌ 5

ஜிஹ்வாம் பாது கஜக்ரீடஶ்சுபுகம் கிரிஜாஸுதஃ
வாசம் வினாயகஃ பாது தம்தான்‌ ரக்ஷது துர்முகஃ 6

ஶ்ரவணௌ பாஶபாணிஸ்து னாஸிகாம் சிம்திதார்ததஃ
கணேஶஸ்து முகம் பாது கம்டம் பாது கணாதிபஃ 7

ஸ்கம்தௌ பாது கஜஸ்கம்தஃ ஸ்தனே விக்னவினாஶனஃ
ஹ்றுதயம் கணனாதஸ்து ஹேரம்போ ஜடரம் மஹான் 8

தராதரஃ பாது பார்ஶ்வௌ ப்றுஷ்டம் விக்னஹரஶ்ஶுபஃ
லிம்கம் குஹ்யம் ஸதா பாது வக்ரதும்டோ மஹாபலஃ 9

கஜக்ரீடோ ஜானு ஜம்கோ ஊரூ மம்களகீர்திமான்
ஏகதம்தோ மஹாபுத்திஃ பாதௌ குல்பௌ ஸதாவது 10

க்ஷிப்ர ப்ரஸாதனோ பாஹு பாணீ ஆஶாப்ரபூரகஃ
அம்குளீஶ்ச னகான் பாது பத்மஹஸ்தோ ரினாஶனஃ 11

ஸர்வாம்கானி மயூரேஶோ விஶ்வவ்யாபீ ஸதாவது
அனுக்தமபி யத் ஸ்தானம் தூமகேதுஃ ஸதாவது 12

ஆமோதஸ்த்வக்ரதஃ பாது ப்ரமோதஃ ப்றுஷ்டதோவது
ப்ராச்யாம் ரக்ஷது புத்தீஶ ஆக்னேய்யாம் ஸித்திதாயகஃ 13

தக்ஷிணஸ்யாமுமாபுத்ரோ னைறுத்யாம் து கணேஶ்வரஃ
ப்ரதீச்யாம் விக்னஹர்தா வ்யாத்வாயவ்யாம் கஜகர்ணகஃ 14

கௌபேர்யாம் னிதிபஃ பாயாதீஶான்யாவிஶனம்தனஃ
திவாவ்யாதேகதம்த ஸ்து ராத்ரௌ ஸம்த்யாஸு யஃவிக்னஹ்றுத் 15

ராக்ஷஸாஸுர பேதாள க்ரஹ பூத பிஶாசதஃ
பாஶாம்கு

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

பிரதோஷ ஸ்தோத்திரம்

ஸ்ரீ பிரதோஷ ஸ்தோத்திரம்.

ஸ்ரீ கணேசாய நம:

ஜய தேவ ஜகன்னாத ஜய சங்கர சாச்வத |

ஜய ஸர்வ ஸுராத்யக்ஷ ஜய ஸர்வ ஸுரார்ச்சித ||

ஜய ஸர்வ குணாதீத ஜய ஸர்வ வரப்ரத |

ஜய நித்ய நிராதார ஜய விச்வம்பராக்ய ||

ஜய விச்வ ஏக வந்த்யேச ஜய நாகேந்த்ர பூஷண |

ஜய கெளரிபதே சம்போ ஜய சந்த்ர அர்த்த சேகர ||

ஜய கோட்யர்க ஸங்காச ஜய ஆனந்த குணாச்ரய |

ஜய பத்ர விரூபாக்ஷ ஜயாசிந்த்ய நிரஞ்சன ||

ஜய நாத க்ருபாஸிந்தோ ஜய பக்தார்த்தி பஞ்சன |

ஜய துஸ்தர ஸம்ஸார ஸாகர உத்தாரண ப்ரபோ ||

ப்ரஸீத மே மஹாதேவ ஸம்ஸாரார்தஸ்ய ஸ்வித்யத: |

ஸர்வ பாப க்ஷயம் க்ருத்வா ரக்ஷ மாம் பரமேஸ்வர ||

மஹா தாரித்ர்யமக்நஸ்ய மஹாபாப ஹதஸ்ய ச |

மஹா சோக நிவிஷ்டஸ்ய மஹா ரோகாதுரஸ்ய ச ||

ருணபாரபரிதஸ்ய தஹ்ய மாநஸ்ய கர்மபி : |

க்ரஹை: ப்ரபீஜமாநஸ்ய ப்ரஸீத மம சங்கர ||

தரித்ர: ப்ரார்த்தயேத்தவம் ப்ரதோஷே கிரிஜாபதிம் |

அர்த்தாடோ வாத ராஜா வா ப்ரார்த்தயேத்தேவம் ஈச்வரம் ||

தீர்க்கமாயு: ஸதாரோக்யம் கோசவ்ருத்திர் பலோன்னதி : |

மமாஸ்து நித்யம் ஆனந்த: ப்ரஸாதாத்தவ சங்கரம் ||

சத்ரவ: ஸம்க்ஷயம் யாந்து ப்ரஸீதந்து மம ப்ரஜாபத : |

துர்பிக்ஷமரி ஸந்தாபா: சமம் யாந்து மஹீதலே ||

ஸர்வ ஸஸ்ய ஸம்ருத்திஸ்ச பூயாத்ஸுகமயா திச: |

ஏவம் ஆராதயேத்தவம் பூஜாந்தே கிரிஜாபதிம் ||

ப்ராஹ்மணான் போஜயேத் பஸ்சாத் தக்ஷிணாபிஸ்ச பூஜயேத் |

ஸர்வ பாப க்ஷயகரி ஸர்வ ரோக நிவாரணி ||

சிவபூஜா மயாக்யாதா ஸர்வாபீஷ்ட பலப்ரதா ||

சிந்தாமணி கணபதி

சிந்தாமணி கணபதி

அபிஜித் ஓர் அரசன். அவரின் மனைவி பெயர்
குணவதி. இவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தை பேறு இல்லாமல் இருந்தது. ஒரு முறை அந்த அரசனை, வைஸம்பாயன முனிவர் சந்தித்தார். தனக்கு குழந்தை பிறக்க அருளச் சொன்னார். அவர் பிர்ம்மாவை நோக்கி தவம் இருக்க சொன்னார்.

முனிவர் சொன்னபடி அபிஜித்தும்,
குணவதியும் காட்டிற்குள் சென்று கடுமையான தவமியற்றினர். தவத்தின் பயனாக அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ‘கண’ என்று பெயரிட்டனர். அவன் வளர்ந்ததும், மக்கள் அனைவரும் ‘கண ராஜா’ என்று அழைத்தனர். கண ராஜா பலமும், புத்திசாதுர்யமும் கொண்டவனாக விளங்கினான்.

ஓர் நாள் காட்டினில் வேட்டையாடி விட்டு,
அங்கே இருந்த கபில முனிவரின் ஆசிரமம் வந்தான். கபில முனிவரும் கண ராஜாவை வரவேற்று உபசரித்தார். தன்னிடம் இருந்த சிந்தாமணி ரத்தினத்தைக் கொண்டு, அறுசுவை உணவுகளை வரவழைத்து இளவரசனுக்கு விருந்து படைத்தார். அந்த அற்புதத்தைக் கண்ட கண ராஜா தனக்கு அந்த சிந்தாமணி ரத்தினத்தை தரும்படி கேட்டான். ஆனால் அதற்கு கபில முனிவர் மறுத்துவிட்டார்.

இதனால் அவரிடம் இருந்து வலுக்கட்டாயமாக அந்த ரத்தினத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான். இதனால் மிகவும் வருத்தம் அடைந்த கபில முனிவர், துர்க்கை அம்மனை நோக்கி பிரார்த்தனை செய்தார். முனிவரின் பிரார்த்தனையை ஏற்ற துர்க்கை, விநாயகரை நோக்கி தவம் இருக்கும் படி வலியுறுத்தினாள். கபில முனிவரும் அப்படியே செய்தார்.

முனிவரின் கடும் தவத்தைக் கண்டு மகிழ்ந்த விநாயகர், அவருக்கு முன்பாகத் தோன்றினார். அவரை வணங்கிய முனிவர் கண ராஜாவிடம் இருந்து சிந்தாமணி ரத்தினத்தை மீட்டுத் தரும்படி வேண்டினார்.. இதன் காரணமாக விநாயகருக்கும் கண ராஜாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்றது. இறுதியில் கண ராஜாவை வதம் செய்து, சிந்தாமணி ரத்தினத்தை மீட்டு, கபில முனிவரிடம் ஒப்படைத்தார் விநாயகர். ஆனால் கபில முனிவர் அதை தானே வைத்துக் கொள்ளாமல், அந்த சிந்தாமணி ரத்தினத்தை மாலையாக கோர்த்து, விநாயகரின் கழுத்தில் அணிவித்து

விட்டார்.

இதனாலேயே ‘சிந்தாமணி விநாயகர்’ என்ற பெயர் வந்தது.

சிவனின் மூன்று மகள்கள் பற்றி தெரியுமா????

சிவனின் மூன்று மகள்கள் பற்றி தெரியுமா????

சிவனுக்கு விநாயகர், கார்த்திகேயன், ஐயப்பன் என 3 மகன்கள் இருப்பது தெரியும், ஆனால் அவருக்கு இருக்கும் மூன்று மகள்கள் குறித்தும், அவர்கள் எப்படி வணங்கப்படுகிறார் என்பதை இங்கு பார்போம்...

 சிவன் 

சிவ பெருமானுக்கு கணேஷன், முருகன், ஐயப்பன் என மூன்று மகன்கள் இருப்பது அனைவரும் அறிந்தது. பல இடங்களில் வழிபட்டும் வருகிறது. ஆனால் அவரின் மூன்று மகள்கள் பற்றி அந்தளவுக்குப் பெரியளவில் பேசப்படுவதில்லை. வாருங்கள் சிவ பெருமானின் மூன்று மகள்கள் குறித்து இங்கு பார்ப்போம்...


இந்து மதத்தின் மும்மூர்த்திகளாக படைக்கும் கடவுள் பிரம்மா, காக்கும் கடவுள் மகா விஷ்ணு, அழிக்கும் கடவுளாக சிவன் உள்ளார். பரம்பொருளாக இருக்கும் சிவ பெருமான் அழிக்கும் செயலை மட்டும் செய்யாமல், மக்களை காப்பாற்றுதல், அவர்கள் செய்த தவறுகளுக்கான தக்க தண்டன் கொடுத்தல் என மிக முக்கிய செயல்களை செய்கிறார்.


பரம்பொருளான அவர் குறித்து நாம் அறிந்தது மிகவும் குறைவுதான். அவருக்கு விநாயகர், முருகப்பெருமான், ஐய்யப்பன் ஆகிய மூன்று மகன்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் அவருக்கு மூன்று மகள்கள் இருப்பதும், அவர்களின் சிறப்பு குறித்து அவ்வளவாக பேசப்படுவதில்லை.

மூன்று மகள்கள்:


1. அசோக சுந்தரி
2. ஜோதி
3. வாசுகி
ஆகிய மூன்று மகள்கள் சிவ பெருமானுக்கு உள்ளனர்.

அசோக சுந்தரி : அசோக சுந்தரி குறித்து பத்ம புராணத்தில், சிவன், பார்வதி தம்பதிக்கு மகளாக அசோக சுந்தரி வருணிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அசோக சுந்தரி நகுசன் என்பவரை மணந்து கொண்டதாகவும், அவர்களுக்கு ‘யயாதி’ என்ற குழந்தையும் இருப்பதாக அதில் சொல்லப்பட்டுள்ளது. தனக்கு ஒரு பெண் குழந்தை இல்லையே என ஏங்கிய உமயவளின் சோகத்தை நீக்க பிறந்த அழகி (சுந்தரி) என்பதால் அசோக சுந்தரி என பெயர் வந்ததாகவும் கூறப்படுகின்றது.
அசோக சுந்தரியை காளி தெய்வமாகவும் சொல்லப்படுகின்றது. காளி தேவி (அசோக சுந்தரி) சிவபெருமானின் மகள் என அப்பர் சுவாமிகளும், நம்பியாண்டார் நம்பி பாடிய பாடல்களில் கூறப்பட்டுள்ளது.
அதே சமயம் கேரளாவில் சிவராத்திரியாகக் காளியை காணும் வழக்கம் இன்றும் உண்டு.

உப்பு சுவை : சிவ பெருமான் விநாயகரின் தலையை கொய்த போது பயத்தில் அசோக சுந்தரி உப்பு நிறைந்த சாக்கில் ஒழிந்து கொண்டதாகவும் அதனால் அசோக சுந்தரியின் தேகம் திவ்ய உப்பு சுவை கொண்டதாக மாறியதாக கூறப்படுகின்றது. இவர் குஜராத்தில் பெரிய அளவில் அறியப்பட்டு வணங்கப்படுகிறார். ஆனால் இந்தியாவின் வேறு பகுதிகளில் அவ்வளவாக அறியப்படவில்லை.

ஜோதி : ஜோதி என்றால் ஒளி. அவரின் பெயராலேயே அறியப்படுகின்றார். ஜோதியின் பிறப்பிற்குப் பின் இரண்டு கதைகள் கூறப்படுகின்றது. முதல் கதையில் ஜோதி சிவபெருமானின் ஒளி வட்டத்திலிருந்து பிறந்தார் என்றும் அவர் சிவனின் உடல் வழிபாடு எனவும் கூறப்படுகிறது. மற்றொரு கதை பார்வதி தேவியின் நெற்றியிலிருந்து வெளிப்பட்ட ஜோதியிலிருந்து பிறந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஜோதியை ஜ்வாலாமுகி என்ற பெயரில் தமிழகத்தில் பல கோயில்களில் வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது.
யாரும் அறிந்திராத சிவன் - பார்வதியின் காதல் கதை..!

வாசுகி : வாசுகி என்பவர் அனைத்து கோயில்களிலும் வணங்கப்படும் பாம்பு தெய்வமாக உள்ளார். இவர் சிவ பெருமானின் மகள், ஆனால் பார்வதி தேவியின் மகள் இல்லை.
ஏனெனில் பாம்புகளின் கடவுளாகிய கத்ரு செதுக்கிய சிலையின் மீது சிவ பெருமானின் உயிர் அணுக்கள் விழுந்ததால் வாசுகி பிறந்ததாக கூறப்படுகின்றது. சிவ பெருமான் ஆலகால விசத்தைக் குடித்த போது அவரை அந்த விஷத்திலிருந்து விடுவித்ததும் இந்த வாசுகி தான். வாசுகிக்கு மானசா என்ற பெயரும் உண்டு. இவரின் அதீத கோபத்தின் காரணத்தால் சிவ பெருமானால் நிராகரிக்கப்பட்டார். இவர் மேற்கு வங்கத்தில் பாம்பின் வடிவில் வணங்கப்பட்டு வருகின்றார். 

சித்தர்கள்

இரகசியத்தை அறிந்துக் கொண்ட "சித்தர்கள்" பரம் பொருளான இறைவனை பஞ்சப்பூத ஆராதனைகள் மூலம் வழிப்பட்டனர்.

இப்பிரபஞ்சத்தில் முதலில் தோன்றியது ஆகாயம், அதை தொடர்ந்து காற்று, பின் நெருப்பு - நீர் இறுதியில் நிலம் என்பதை உணர்த்தும் வகையில் "நமசிவய" என பஞ்சாட்சரத்தை மந்திரமாய் பிரயோகித்து "ந"-மண் "ம"- நீர் "சி"-நெருப்பு "வ" காற்று, இறுதியில் ஆன்மா ஒடுங்கும் இடமான "ய" ஆகாயமாய் இருப்பதை அறிந்து அனுதினமும் வணங்கி வந்தனர்.

அண்டத்தில் இருக்கும் இப்பூதங்களே சூட்சுமத்தில் இயங்கும் பிண்டங்களையும் ஆட்டுவிக்கின்றன. பஞ்ச பூதங்களில் ஆகாயம், நெருப்பு, நீர், நிலம் என நான்கு பூதங்களையும் இயக்கும் சக்தி காற்றாகும். 

காற்று இல்லா விட்டால் மற்ற பூதங்களால் தனித்து செயல்பட முடியாது என்பதை சித்தர்கள் உறுதி செய்தனர். எனவே சுவாசமான "காற்று" ஒடுங்கினால் "மனம்" ஒடுங்கும் ஐம்புலன்களும் அடங்கும் எனும் சூட்சுமத்தை உலகோர் அறிய தெரியப்படுத்தினர்.

சித்தர்கள் சுவாசத்தை ஒடுக்கும் முயற்சியில் பயிற்சிகளை மேற்கொண்டு வரும் வேளையில், உடலில் அதீத உஷ்ணம் உண்டானது. அதீத உஷ்ணத்தால் ஏற்பட்ட பஞ்சபூத வித்தியாசத்தால் உடலை எண்ணிலடங்கா பிணிகள் சிதைத்தது. 

இப்பிணிகளை நீக்கி உடலை பேணி உயிரை காக்க வேண்டிய காலக்கட்டாயத்தால் உடலை பலப்படுத்தும் உபாயங்களைத் தேடி உலகம் முழுவதும் அலைந்து திரிந்தனர். 

இறுதியில் சித்தர்கள் அனைவரும்  தஞ்சம் அடைந்த பூமி தான் குமரிக் கண்டமான இன்றைய தமிழகம்.

பொய்கை ஆழ்வார்

பொய்கை ஆழ்வார் 4203 BCE


பன்னிரெண்டு ஆழ்வார்களில் முதல் ஆழ்வார்.

முதல் திருவந்தாதி இயற்றியவர்.

ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் திவ்வியப்பிரபந்தம்
என்று அழைக்கப்படுகின்றன.

திவ்வியப்பிரபந்தத்திற்கு
திராவிட வேதம் என்றொரு பெயரும் உண்டு.

இறைவனின் பெருமையை நயமுற அழகாக - செவிக்கு இனிமையாகப் பாடுவதால் திவ்வியப்பிரபந்தம் எனச் சிறப்புப் பெறுகின்றது.

திருமாலிடம் தீவிர பக்தி கொண்டு தன்னையை அர்ப்பணித்தவர்கள் பன்னிரு ஆழ்வார்கள்.

அவர்களில் காலத்தால் முந்தியவர்கள் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார்.

இவர்கள் மூன்று பேரும் ‘முதலாழ்வார்கள்’ என்றும், ‘மூவர் முதலிகள்’ என்றும் போற்றப்படுகின்றனர்.

இந்த மூவரில் முதல்வர் பொய்கை ஆழ்வார்.

காஞ்சி மாநகரில் திருவெஃகா எனப்படும் யதோத்காரி திருக்கோவில் இப்போது சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோவில் அருகே உள்ள பொய்கையில் பொன்வண்ணமாக மின்னிய ஒரு தாமரை மலரில்,

சித்தார்த்தி ஆண்டு, ஐப்பசித் திங்கள் அஷ்டமித் திதி, திருவோண நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை அன்று தெய்வீக ஒளியுடன் ஒரு குழந்தை அவதரித்தது.

பொய்கையில் பொற்றாமரையில் அவதரித்ததால் இவருக்குப் பொய்கையாழ்வார் என்று பெயர் வந்தது.

திருமாலின் ஐம்படைகளின் ஒன்றாக விளங்கும் பாஞ்ச சன்யம் என்ற சங்கின் அம்சமாக பிறந்தவரே பொய்கை ஆழ்வார்.

திருமாலின் கருணையால் அனைத்தையும் கற்றார்.

இளமையிலேயே அனைத்து மறைகளையும் கற்று உணர்ந்து யோகியாய்த் திரிந்து, மகாவிஷ்ணுவிடம் மாறாத அன்பு
கொண்டு தன்னையே பெருமாளின் தொண்டிற்கு அர்ப்பணித்து கொண்டார்.

ஹரியும் சிவனும் ஒன்றுதான். ஹரியை வணங்குபவர்கள் சிவனை வெறுக்க வேண்டாம்.

சிவனை வழிபடுபவர்கள் ஹரியை பழிக்க வேண்டாம்.

இதை மக்களிடம் கூறிக்கொண்டதோடு ஹரியிடம் மாறாபக்தி கொண்டும் அவருக்கு சேவை செய்தும் வாழ்ந்து வந்தார்.

இறைவனை அடைந்து ஒன்றாக கலப்பது தான் ஆத்மாவின் தன்மை என்றும், இறைவனை பிரிந்திருப்பது தான் துன்பங்களுக்கெல்லாம் மூல காரணம் என்றும் கூறினார்.

இவர் பேயாழ்வார் மற்றும் பூதத்தாழ்வாருடன் பல திவ்ய தேசங்களுக்கு சென்று பரந்தாமனைப் பாடி பணிந்தார்.  பெருமாளின் 108 திருப்பதிகளில் பொய்கையாழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் , பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 6 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.

திருக்கோவலூரில்,

ஒரு வீட்டின் இடைகழியில்
மழை பெய்யும் ஒரு நாள் இரவில்
முதலாழ்வார்கள் மூவரையும் ஒருங்கிணைத்தான் இறைவன்.

தனித்தனியாக தலயாத்திரை மேற்கொண்ட மூன்று ஆழ்வார்களும் திருக்கோவலூரில் ஒரே சமயத்தில் நுழைய பெருமழை உண்டானது. மழைக்கு ஒதுங்கும் பொருட்டு ஒரு குடிசையை நெருங்க அவ்விடம் ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம் எனும் அளவில் இருக்க இம்மூவரும் அங்கு சிறிது நின்றுகொண்டிருக்க நான்காமவராக இருந்து இருளில் நெருக்கத்தை உண்டுபண்ணினான் இறைவன்.

நெருக்கத்தின் காரணத்தை அறிய வேறு விளக்கின்மையால்,
அவர்கள் பாசுரங்கள் மூலம் விளக்கேற்றினர்.

பொய்கையார் பூமியாகிற தகழியில்(அகல்) கடல்நீரை நெய்யாகக் கொண்டு சூரியனை விளக்காக ஏற்றினார்.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சுட்டினேன் சொல் மாலை
இடராழி நிங்குகவே என்று முதல் திருவந்தாதி -1 ஆக பாடினார்.

கடலினால் சூழ்ந்த இவ்வுலகை அகழியாக கொண்டு, கடலை நெய்யாகக் கொண்டு,கதிரவனை திரியாகக் கொண்டு விளக்கை ஏற்றி திருமாலின் திருவடிக்கு பாசுரங்களை மாலையாகச் சூட்டினேன்.

பூதத்தார் அன்பாகிய தகழியில்(அகல்) ஆர்வத்தை நெய்யாகக் கொண்டு சிந்தையாகிய திரியில் ஞானவிளக்கை ஏற்றினார்.

அன்பே தகளிய ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானச் தமிழ் புரிந்த நான் இரண்டாம் திருவந்தாதி -1 ஆக பாடினார்.

அன்பை அகழியாகக் கொண்டு, ஆர்வத்தை நெய்யாகக் கொண்டு, அறிவை திரியாகக் கொண்டு திருமாலுக்கு விளக்கேற்றினேன்

இவ்விரண்டின் ஒளியால் இருள் அகல, நெருக்கத்திற்குக் காரணமான இறைப்பொருளைக் கண்டார் பேயாழ்வார்.

திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கனணி நிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று மூன்றாம் திருவந்தத்தி -1
என்றுப் பாடினார் பேயாழ்வார்.

பின் மூவரும் அப்பொருளின் சொரூபத்தை அறிந்து அனுபவித்து ஆனந்தம் எய்தினர்.

பொய்கையாரின் செயல் புற இருள் நீக்கியது, பூதத்தார் செயல் அக இருளை நீக்கியது.

அக இருள், புற இருள் இவ்விரண்டும் நீங்கினால் பரமனைக் காணலாம்.

ஆக முதல் இரண்டு ஆழ்வார்கள் செயல்கள் அக, புற இருள் நீக்க பேயாழ்வார் இறைவனின் வடிவழகை அன்பெனும் வெளிச்சத்தில் கண்டார் .

நெருக்கத்தின் காரணம், திருமாலே என்று உணர்தனர்.

நாலாயிர திவ்ய பந்தத்தில் நூறு பாடல்களை பாடியுள்ளார் பொய்கையாழ்வார்.

பிரதோஷம் ஸ்பெஷல்!நந்திதேவர்

பிரதோஷம் ஸ்பெஷல்!நந்திதேவர்

நந்தீஸ்வரரின் கதையைப் படித்தோருக்கு பூமியில் வாழும் காலம் வரை செல்வச்செழிப்பும், வாழ்வுக்கு பிறகு மறுபிறப்பில்லை என்பதும் ஐதீகம்.

அடிலகன் என்ற சிவபக்தன், பூலோக வாழ்வை முடித்து கயிலாயம் சென்றான்.

அந்தப்புரத்தில் பார்வதிதேவி சிவனை தியானித்துக் கொண்டிருந்தாள். வெளியே நந்திதேவர் காவல் காத்துக் கொண்டிருந்தார்.

சிவபார்வதியின் தரிசனம் பெற வேண்டுமென விரும்பிய பக்தன், நந்திதேவரையும் மீறி அம்பிகையின் இருப்பிடம் சென்றான்.

அவளைக் கண்ட மகிழ்ச்சியில் சத்தம் போட்டு வணங்கினான்.

பக்தனின் குரல் கேட்ட அம்பிகை, தியானம் கலைந்து எழுந்தாள். நந்தியின் காவலையும் மீறி, தன் இருப்பிடத்திற்கு பக்தன் வந்ததைக் கண்டவள், "ஏ நந்தீசா! யாரைக் கேட்டு இவனை உள்ளே அனுமதித்தாய்?'' என்று சத்தமிட்டாள்.

அவளிடம் வந்த நந்தி,""தாயே! தங்கள் பக்தன் என்பதால் தான் அனுமதித்தேன். நீங்கள் பூஜை முடித்த பிறகுதான் அவனை அனுப்பியிருக்க வேண்டும். தவறாக நடந்து விட்டேன், மன்னியுங்கள்,'' என்றார்.

அங்கு வந்த சிவன், பணியில் தவறிய நந்தியை பூலோகத்தில் மானிடராகப் பிறக்கும்படி செய்து விட்டார்.

இவ்வேளையில் சிலாதர் என்ற முனிவரின் ஆஸ்ரமத்திற்கு சப்தரிஷிகள் வந்தனர்.

அவர்களுக்கு சிலாதரின் மனைவி அன்னம் பரிமாறச் சென்ற போது "குழந்தையில்லாத வீட்டில் துறவிகள் உண்ணக்கூடாது' என்ற விதிப்படி, அங்கு தங்களால் உண்ண இயலாது எனச் சொல்லி சென்று விட்டனர்.

இதனால் வருந்திய முனிவரும், அவரது மனைவியும் சிவனை உருக்கமாக வேண்டினர். இந்த வேளையில்தான் சிவன், நந்திக்கு சாபம் கொடுத்திருந்தார்.

நந்தீசரை ஒரு பெட்டியில் வைத்து பூலோகத்தில், சிலாதர் தங்கியிருந்த ஆஸ்ரமத்தின் அருகே வைத்தார்.

சிலாதர் கண்களில் அந்த பெட்டி பட்டது. அதற்குள் காளையின் முகம், மனித உடலுடன் ஒரு குழந்தை இருந்ததைக் கண்டார்.

தனக்கு குழந்தை கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தவர், ""இறைவா! பிள்ளையில்லாத எனக்கு ஒரு நற்குழந்தையை தந்திருக்கக் கூடாதா? காளை முகம் கொண்ட குழந்தையை ஊரார் எப்படி ஏற்பார்கள்?'' என மன்றாடினார்.

அந்த நேரத்தில்,""சிலாதா! வந்திருப்பவன் யாரோ அல்ல. என் காவலன் நந்தீசன்.

அவனுக்கு அழகான முகம் தருகிறேன். ஆனால், அவனது ஆயுள் பூலோகத்தில் 12 ஆண்டுகள் மட்டுமே.

அவன் ஒரு சாபத்தால் உன்னிடம் வந்துள்ளான். அவனை வளர்க்க வேண்டியது உன் பொறுப்பு,'' என அசரீரி ஒலித்தது.

12 ஆண்டு தன்னோடு வாழ வந்தவன் என்றாலும், தங்களை கயிலாயம் அழைத்துப் போகிற பிள்ளை என்பதால், சிலாதர் மகிழ்ந்தார்.

தன் மனைவியிடம் குழந்தையை ஒப்படைத்தார். அந்தக் குழந்தை சிவலோகப் பிள்ளை என்பதால், அவனைப் பார்த்தவுடனே பலருக்கு நோய் நீங்கியது.

சிலர் அவனைக் கடவுளாகவே பாவித்து வணங்கி, தங்களுக்கு முக்திநிலை வேண்டும் என்றனர்.

அவன் பிரதோஷ வேளையில் (மாலை4.30-6.00) சிவ தியானத்தில் ஈடுபடுவான்.

அப்போது பக்தர்கள் பலரும் அவனுடன் இணைந்து சிவ தியானம் செய்வர். அவன் கண்மூடி தியானிக்கும் போது, நெற்றியின் நடுவில் சிவதரிசனம் காட்டினான்.

இதனால், தங்களுக்கு பிறப்பற்ற நிலை கிடைத்ததாக மக்கள் எண்ணினர்.

பல அற்புதங்கள் நிகழ்த்திய நந்தீசர், 12 வயதில் தன் பெற்றோருடன் கயிலாயம் சேர்ந்து, இழந்த பதவியை மீண்டும் பெற்றார்.

தன் தவறுக்கு வருந்தி, முழங்காலிட்டு இன்றும் சிவபார்வதி முன்னால் பணிவுடன் அமர்ந்துள்ளார்.

பிரதோஷ நாளன்று, நந்தீஸ்வரரின் கதையைப் படித்தோருக்கு பூமியில் வாழும் காலம் வரை செல்வச்செழிப்பும், வாழ்வுக்கு பிறகு மறுபிறப்பில்லை என்பதும் ஐதீகம்.

திருச்சிற்றம்பலம் !