செவ்வாய், 9 ஜூலை, 2019

மூலவர் : திருமாகறலீஸ்வரர், உடும்பீசர்
உற்சவர் : சோமாஸ்கந்தர், நடராஜர்
அம்மன் : திரிபுவனநாயகி
தல விருட்சம் : எலுமிச்சை
தீர்த்தம் : அக்னி
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருமாகறல்
ஊர் : திருமாகறல்

மன்னுமறை யோர்களொடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய்
இன்னவகை யால்இனிது இறைஞ்சி இமை யோரிலெழு மாகறலுளான்
மின்னை விரி புன்சடையின் மேல்மலர்கள் கங்கையொடு திங்களெனவே
உன்னுமவர் தொல்வினைக ளொல்கவுயர் வானுலக மேறலெளிதே -திருஞானசம்பந்தர்!

இராசேந்திரசோழனுக்கு, இறைவன் பொன் உடும்பாகத் (மாகறம் - உடும்பு)தோன்றி, அவன் துரத்த, புற்றில் ஓடி ஒளிந்து பின் சிவலிங்க வடிவமாக வெளிப்பட்ட தலம். இங்கு திங்கள் கிழமை தரிசனம் விசேஷமாக சொல்லப்படுகிறது. இத்தலத்தின் அபிஷேக தீர்த்தத்தை சாப்பிட்டால் ரத்தம் சம்பந்தப்பட்டவை, எலும்பு முறிவு, கண்பார்வை குறைவு, பக்கவாதம் ஆகிய நோய்களின் தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை. பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும், கிரக தோஷம் விலகவும் பூஜை செய்யலாம். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு அங்க பிரதட்சணம் செய்கிறார்கள்.
சம்பந்தரின் இப்பதிகம் 'வினை நீக்கும் பதிகம்' என்னும் சிறப்புடையது. இக்கோயிலில் யானைமீது முருகன் அமர்ந்திருக்கும் அபூர்வ திருமேனி அழகுறக் காட்சித் தருவதைக் காணலாம்.

திருமுறைத்தலங்கள்
தொண்டை நாட்டுத் தலம்

மாகறல்.

தொண்டை நாட்டுத் தலம்.

காஞ்சிபுரத்திலிருந்து செல்லாம். காஞ்சிபுரம் - உத்திரமேரூர் (வழி) ஓரிக்கை - பேருந்துப் பாதையில் உள்ள தலம். காஞ்சிபுரத்திலிருந்து இவ்வூர் வழியாக உத்திரமேரூருக்குப் பேருந்து செல்கிறது. செய்யாற்றின் கரையில் உள்ள ஊர். சாலை ஓரத்திலியே கோயில் உள்ளது. சிறிய அழகான கோயில். நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இந்திரன் வழிபட்ட தலம். இராசேந்திரசோழனுக்கு, இறைவன் பொன் உடும்பாகத் தோன்றி, அவன் துரத்த, புற்றில் ஓடி ஒளிந்து பின் சிவலிங்க வடிவமாக வெளிப்பட்ட தலம். உள்ளது. சுயம்பு மூர்த்தி. ஆவுடையார்தான் கட்டப்பட்டது.

இறைவன் - திருமாகறலீஸ்வரர்.

இறைவி - திரிபுவன நாயகி, புவன நாயகி,

தீர்த்தம் - அக்கினி தீர்த்தம்.

தலமரம் - எலுமிச்சை.

இறைவனுக்கு வழங்கப்படும் வேறுபெயர்கள், அடைக்கலங்காத்த நாதர், மகம் வாழ்வித்தவர், உடும்பீசர், பாரத்தழும்பர்,புற்றிடங்கொண்டார், நிலையிட்ட நாதர், மங்கலங் காத்தவர், பரிந்து காத்தவர், அகத்தீஸ்வரர் முதலியன. மாகறம் - உடும்பு. 'மாகறலீஸ்வரர்' என்ற பெயரே மக்கள் வழக்கில் உள்ளது. மாகறன், மலையன் என்னும் இரு அசுரர்கள் வழிபட்ட தலம். இத்தலத்திற்குரிய பல விநாயகர், பொய்யா விநாயகர் - ஊருக்கப்பால் செய்யாற்றின் கரையில் உள்ள மண்டபத்தில் இவர் உள்ளார்.

இங்குத் திங்கட்கிழமை தரிசனம் விசேஷமாகக் சொல்லப்படுகிறது. மக்கட்பேறு வேண்டுவோர் இங்கு அங்கப்பிரதட்சணம் செய்யும் வழக்கம் முன் காலத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

சம்பந்தர் பாடல் பெற்றது. இப்பதிகம் 'வினை நீக்கும் பதிகம்' என்னும் சிறப்புடையது.

இத்தலம் தொடர்பாகக் கிடைத்த செவி வழிச்செய்தி வருமாறு, இராசேந்திர சோழ மன்னனுக்கு நாடொறும் இங்கிருந்து, கோயிலில் இருந்த பலா மரத்திலிருந்து பலாப்பழம் ஒன்று அனுப்பப்பட்டு, அது வழியில் தில்லையில் நடராசப் பெருமானுக்கு நிவேதனம் செய்யப்பட்டுப் பின்பு மன்னனுக்குப் பிரசாதமாகத் தரப்பட்டு வந்தது. காலப்போக்கில் இக்கோயிலில் பணிசெய்தோர் இம்மரத்தைத் தீயிட்டு அழித்துவிட்டனர்.

பலாப்பழம் வாராதது அறிந்த மன்னன் ஆள் அனுப்பிச் செய்தியறிந்தான், அவர்களைத் தண்டிக்க எண்ணினான். ஆனால் கோயிற் பணியாளரைத் தண்டித்தலாகாது என்றெண்ணி, அவர்கள் அனைவரையும் இரவோடு இரவாக ஊரைவிட்டு அழைத்துச் சென்று, மறுநாள் பொழுது விடியும் இடத்தில் விட்டுவிடுமாறு உத்திரவிட்டான். அவ்வாறே அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு விடப்பட்ட ஊர் (திருத்தணிக்கும் திருவள்ளுருக்கும் இடையில்) 'விடிமாகறல்' என்று வழங்கப்படுகிறது.

கோயிலுக்கு செல்லும், புதியதாகக் கட்டப்பட்டுள்ள ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கிழக்கு நோக்கியிருந்து வரவேற்கிறது. உட்புகுந்தால் விசாலமான இடம். கோயில் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. துவஜஸ்தம்பம் - அதன் முன்னால் உயர்ந்த பலிபீடம். பலிபீடத்தின் முன் விநயாகர் காட்சி தருகிறார். ஆம், எழுந்தருளும் நாற்கால் மண்டபம் உள்ளது. வெளிப்பிரகாரம் விசாலமானது. வலமாக வந்து படிக்கட்டுக்களையேறி, விநாயகரையும், கடந்து உட்புகுந்தால் நேரே மூலவர் காட்சி தருகிறார். வலமா வரத்தொடங்கும் நாம் இடப்பால் உள்ள ஆறுமுகப்பெருமானை - மயிலேறிய மாணிக்கத்தைத் தரிசிக்கலாம். பக்கத்தில் நால்வர் பெருமக்கள் தனியே புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.

இப்பிரதிஷ்டை, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன் விழா ஆண்டுப் பணிகளுள் இடம் பெற்று 1985 மார்ச்சில் நிறைவேற்றப்பட்டுக் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது .

வலமாக வரும் நாம் கருவறையிலுள்ள கோஷ்டமூர்த்தங்களை - விநாயகர், சிறிய தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை முதலிய திருமேனிகைளத் தரிசித்தவாறே வலம் வரலாம்.

இடப்பால் வரிசையாக அறுபத்துமூவர் திருமேனிகள் விநாயகர் சந்நிதி, சுப்பிரமணியர் சந்நிதிகள். தலமரம் - எலுமிச்சை, தழைத்து உள்ளது.

ஆலய விமானம் 'கஜப்பிரஷ்ட' அமைப்புடையது. நடராசர் சந்நிதியைத் தரிசித்து எதிர்ப்புறம் திரும்பினார் நவக்கிரக சந்நிதி, யானைமீது முருகன் அமர்ந்திருக்கும் ஆபூர்வ திருமேனி அழகுறக் காட்சிதருகின்றது. பள்ளியறை கடந்து, பைரவரை வணங்கி, அம்பாளை வலமாக வந்து படியேறிச் சென்றால் மூலவரைத் தரிசிக்கலாம். சதுர பீடம். உடும்பு வால் போன்ற அமைப்பில் - சிறுத்த வடிவில் சிவலிங்கம்.

உற்சவத் திருமேனிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. அம்பாள் சந்நிதி - நின்ற திருக்கோலம். திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடத்துக் கட்டளை 'சிவசிவ ஒலிமண்டபம்' உள்ளது. திரமுறைப் பாராயணக் கட்டளை நித்தம் காலை மாலை நடைபெறுகிறது. கோயில் உள்ளேயும், இக்கோயிற்பதிகம் சலவைக்கல்லில் திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்தினாரால் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளது. வெளிப் பிரகாரத்தில் திருமண மண்டபம், வாகன மண்டபம், யாகசாலை முதலியவைகள் உள்ளன.

ஆண்டுதோறும் மாசி மகத்தில் 10 நாள்களுக்குப் பெருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. இதன் பரம்பரை அறங்காவலராக இருந்துவருபவர் வேலூர் பாங்கர், திரு. எம்.டி. நடராச முதலியார் அவர்கள். சேலம் சுப்பராயப் பிள்ளை என்பவர்தம் உடலில் இடுப்பின் கீழ் செயலற்றுப் போக எல்லாவதி மருத்துவமும் செய்தும் பயனின்றிப் போக, திருமுறையில் கயிறுசார்த்திப் பார்த்து, இத்தலப்பதிகம் வர, இங்கு வந்து தங்கி, நாடொறும் இறைவனை வழிபட்டுத் தலப் பதிகத்தைப் பாராயணம் செய்து சிலகாலம் வாழ்ந்து இப்பெருமானருளால் உடல் பூரணகுணம் பெற்றுத் திரும்பினார். இந்நிகழ்ச்சி அண்மைக் காலத்தில் நடைபெற்றதாகும். இப்பகுதியில் உள்ள சமய அன்பர்கள் அனைவரும் இதை அறிவர்.

1971ல் கும்பாபிஷேகம் நடத்தப் பெற்றுள்ளது. கல்வெட்டில் இத்தலம் சயங்கொண்ட சோழமண்டலத்துப் பொற்கோட்டத்து மாகறல் நாட்டு மாகறல் என்று குறிக்கப்படுகிறது. குலோத்துங்க சோழன், சுந்தரபாண்டியன், விசயகண்ட கோபாலதேவர் காலத்திய கல்வெட்டுக்கள் உள. கோயிலுக்கு நிலங்கள் விடப்பட்ட செய்திகள் இவற்றில் குறிக்கப்பட்டுகின்றன.

"விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல் விளையாடல் அரவம்

மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி நீடு பொழில் மாகறல் உளான்

கொங்குவிரி கொன்றையடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான்

செங்கண் விடை அண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள்

தீருமுடனே."

"கடை கொள்நெடு மாடமிகு ஓங்குகமழ் வீதிமலி காழியவர்கோன்

அடையும் வகையாற் பரவிஅரனை அடிகூடு (ம்) சம்பந்தன் உரையால் மடைகொள் புனலோடு வயல் கூடுபொழில் மாகறலு ளான் அடியையே

உடையதமிழ் பத்தும் உணர்வார் அவர்கள் தொல்வினைகள் ஓல்குமுடனே."

(சம்பந்தர்)

பொய்யா விநாயகர் துதி

வெய்யாக் கதிரவன்முன் இருள்போல வினையகற்றும்

கையானே யான்தொழ முன்நின்று காத்தருள் கற்பகமே

செய்யாற்றின் வடபால் இருக்கின்ற செங்கண் மால்மருகா

பொய்யா விநாயகனே திருமாகறல் புண்ணியனே

(தனிப்பாடல்)

-"தோயுமன

யோகறலிலாத் தவத்தோருன்ன விளங்குதிரு

மாகறலில் அன்பர் அபிமானமே"

(அருட்பா)

அஞ்சல் முகவரி

அ.மி. மாகறலீஸ்வரர் திருக்கோயில்

மாகறல் கிராமம் , அஞ்சல் - 631 603. (வழி) காஞ்சிபுரம்.

உத்திரமேரூர் மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம்.
திருமுறைத்தலங்கள்

பாண்டிய நாட்டுத் தலம்

திருநெல்வேலி

திருநெல்வேலி, மாவட்டத் தலைநகரம். சென்னையிலிருந்து விரைவுப் பேருந்துகளும், புகைவண்டி வசதிகளும் உள்ளன. மதுரையிலிருந்தும், பிறவூர்களிலிருந்தும் மதுரை வழியாகவும் நெல்லைக்கு அடிக்கடி பேருந்துகள் உள்ளன.

வேதபட்டர், இறைவனுக்குத் திருவமுது ஆக்குவதற்கு உலரப்போட்டிருந்த நெல், மழையினால் நனையாதவாறு இறைவன் வேலியிட்டுக் காப்பாற்றியமையால் இறைவனுக்கு நெல்வேலிநாதர் என்று பெயர் ஏற்பட்டது. ஆகவே இத்தலம் நெல்வேலி (திருநெல்வேலி) எனப் பெயர் பெற்றது.

பாற்குடம் சுமந்து சென்ற அன்பனை (முழுதுங்கண்ட ராமக்கோன்) இறைவன் மூங்கில் வடிவமாக இருந்து இடறச் செய்து பாலைத்தன்மீது கவிழச்செய்து, அதனால் வெட்டுண்டு, காட்சி தந்தருளியதால் சுவாமிக்கு வேணுவனநாதர் என்றும் பெயர். இத்தலமும் வேணுவனம் என்று வழங்கலாயிற்று.

ஊர்ப்பெயர் - வேணுவனம், நெல்வேலி, நெல்லூர், சாலிவேலி, சாலிவாடி, சாலிநகர், பிரமவிருந்துபுரம், தாருகாவனம் என்பன. கோயில் கல்வெட்டுக்களில் இத்தலம் 'கீழ்வேம்பு நாட்டுக் குலசேகர சதுர்வேதி மங்கலம்' என்று காணப்படுகிறது.

இறைவன் - நெல்லையப்பர், வேணுவனநாதர், வேய்முத்தநாதர், நெல்வேலிநாதர், சாலிவாடீசர், வேணுவனேஸ்வரர், வேணுவன மகாலிங்கேஸ்வரர், மூலவர் சுயம்பு மூர்த்தி.

இறைவி - காந்திமதி அம்மை, வடிவுடையம்மை.

தலமரம் - மூங்கில் (வேணு, வேய்)

தீர்த்தம் - பொற்றாமரைக்குளம் (ஸ்வர்ண புஷ்கரணி) கருமாறித் தீர்த்தம்,

சிந்துபூந்துறை.

சம்பந்தர் பாடல் பெற்ற தலம்.

இக்கோயிலில் மிகப் பழமையான கல்வெட்டுக்கள் உள. இக்கோயில் 14 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. காமிக ஆகம முறைப்படி அமைந்து நாடி வருவோர்க்கு நலமருளும் இத்திருக்கோயில் திருநெல்வேலி நகரின் நடுவண் அமைந்துள்ளது.

கோயிலுள் பொற்றாமரைக் குளம் உள்ளது. நாற்புறமும் நல்ல படிகள். நடுவில் நீராழி மண்டபம் உள்ளது. இக்கோயிலில் உஞ்சல் மண்டபம், திருக்கல்யாண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், வசந்த மண்டபம், சங்கிலி மண்டபம், சோமவார மண்டபம், நவக்கிரக மண்டபம், மகா மண்டபம் போன்ற மண்டபங்கள் சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்குகின்றன.

மூன்று தெப்பக் குளங்கள் இக்கோயிலில் உள்ளன. சுவாமிக்கு நான்கு ராஜகோபுரங்களும் அம்பாளுக்கு ஒரு கோபுமும் உள்ளன. சுவாமி, அம்பாள் ஆகிய இரு சந்நிதிகளும் கிழக்கு நோக்கியவை. நந்தி பெரியது - சுதையாலானது சுவாமி. சந்நிதிக்குச் செல்லும் வழியில் இசைத்தூண்கள் உள்ளன. துவாரபாலகர்களைக் கடந்து மகா கணபதி, முருகன் சந்நிதிகளைத் தரிசித்து உட்புகுந்தால் சுவாமி மிகவும் விசாலமானது.

நெல்லையப்பர் - சிவலிங்கத் திருமேனி, மேற்புறம் வெட்டப்பட்ட அடையாளம் உள்ளது. இப்போதுள்ள 21 ஆவது ஆவுடையார் என்றும் 20 ஆவுடையார்கள் பூமியின் கீழ் உள்ளன என்றும் சொல்லப்படுகிறது. இம்மூர் ¢தி 'மிருத்யஞ்சமூர்த்தி' ஆவார்.

அன்வர்கான் என்ற இஸ்லாமியரின் மனைவிக்கு உண்டான வயிற்றுவலி நீங்காமையால் அவன் வழிபட்டுப் பேறு பெற்ற சிவலிங்கம் 'அனவரத லிங்கம்' என்று வழங்கப்படுகிறது. இதற்கு அவர் தந்துள்ள நகை முதலியவைகளும் உள்ளன.

நாள்தோறும் ஆறுகால பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன. இவற்றுள் உச்சிக்காலத்தில் மட்டும் காந்திமதி அம்பிகையே - இறைவியே நேரில் வந்து சுவாமியை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம். அகத்தியருக்கு இறைவன் கல்யாண காட்சியைக் காட்டி அருளிய தலமிதுவே. சுவாமிக்குப் பக்கத்தில் கோவிந்தராஜர் சந்நிதி உள்ளது.

இங்குள்ள உற்சவத் திருமேனி கையில் தாரை வார்த்துத் தரும் பாத்திரத்துடன் இருப்பதைக் காணலாம். திருமால் பார்வதியைத் தாரை வார்த்துத் தர இரைவன் மணந்து கொள்ளும் நிகழ்ச்சியை இது நினைவூட்டுகிறது. திருமாலின் மார்பில் சிவலிங்க அடையாளம் உள்ளது.

இன்றும் ஐப்பசியில் நடைபெறும் திருக்கல்யாண விழாவில் ஒரு நாள் வைணவர் வந்து தாரை வார்த்துத் தர, சிவாசாரியார் பெற்றுக் கொள்ளும் ஐதீகம் நடைபெறுகின்றது. சுவாமி பிராகாரத்தில் கன்னி விநாயகர், நந்தி தேவர், பாண்டியராஜா சந்நிதிகள் உள்ளன. பிட்சாடனர், ரிஷிபத்தினியர் உருவங்கள் கல்லில் வண்ணந் தீட்டப்பட்டுள்ளன.

அகத்தியர் பிரதிஷ்டை செய்த சால்வடீஸ்வரர், சிவலிங்கத் திருமேனி சற்றுத் தாழ்வில் உள்ளது. இத்தலம், பஞ்ச சபைகளுள் தாமிரச் சபையாகும். இச்சபை தனியே உள்ளது. இங்குள்ள நடராஜர் 'தாமிர சபாபதி' என்றழைக்கப்படுகிறார். சபைக்கு மேலே தாமிரத் தகடு வேயப்பட்டுள்ளது. பின்னால் உள்ள நடராஜர் - சிலாரூபம் - சந்தன சபாபதி என்றழைக்கப்படுகிறார்.

உள்ளே ருத்திர விஷ்ணு, பேதங்கள், ரிஷிகளின் உருவங்கள் உள்ளன. கீழே மரத்தாலும் மேலே தாமிரத்தாலும் ஆக்கப்பட்டு ஏழு அடுக்குகளைக் கொண்டு திகழும் இச்சபை சித்திர வேலைப்பாடுகளுடன் அருமையாகத் திகழ்கின்றது. சபைக்குப் பக்கத்தில் தலமரம் உள்ளது.

இக்கோயிலில் இரு துர்க்கைச் சந்நிதிகள் உள்ளன. மகிஷாசுரமர்த்தினி சந்நிதி தெற்கு நோக்கியும், பண்டாசுரமர்த்தினி சந்நிதி வடக்கு பார்த்தும் உள்ளன.

ஆறுமுகர் சந்நிதி இங்கு மிகவும் விசேஷமானது. வள்ளி தெய்வயானையுடன் ஆறு முகங்களும் சுற்றிலும் திகழ, ஒவ்வொரு முகத்திற்கும் நேரே இரண்டிரண்டு திருக்கரங்கள் வீதம் சுற்றிலும் திகழ, அவ்வவற்றிற்குரிய ஆயுதங்களும் கொண்டு மயில் மீது அமர்ந்துள்ள பாங்கு அற்புதமானது. அமாவாசைப் பரதேசி என்பவர் ஒருவர் 120 வயது வரை வாழ்ந்திருந்து இச்சந்நிதியை விசேஷித்துக் காவடி எடுத்து இறுதியில் ஓர் அமாவாசையில் சித்தியடைந்தார். இவராலேயே இச்சந்நிதி மிக்க சிறப்பு பெற்றது. பாம்பன் சுவாமிகள் பதிகம் சுவரில் பதிக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலில் உள்ள 'சுரதேவர்' - 'ஜ்வரதேவர்' சந்நிதி மிகவும் சிறப்புடையது. மூன்று தலைகள், மூன்று கால்கள், மூன்று கைகளுடன் இம்மூர்த்தி, கையில் தண்டம், மணி, சூலத்துடன் காட்சி தருகின்றார். எவருக்கேனும் சுரம் இருப்பின், இம்மூர்த்திக்கு மிளகு அரைத்துச் சார்த்தி வெந்நீரால் அபிஷேகம் செய்தால் தீரும் என்னும் செய்தி மக்கள் வழக்கில் சொல்லப்படுகிறது.

பொல்லாப் பிள்ளையார் சந்நிதி இங்கு மிகவும் விசேஷமானது. புத்திரப்பேறில்லாதவர்கள் நாற்பத்தொரு நாள்கள் விரதமிருந்து, கருப்பமுற்று, குழந்தையைப் பெற்றெடுத்தபின் இச்சந்நிதிக்கு எடுத்து வந்து இங்கு சன்னல் போல் உள்ள பகுதியில் உட்புறமாகத் தந்து வெளிப்புறமாக வாங்கும் பழக்கம் உள்ளது. இதனால் இவருக்குப் 'பிள்ளைத் துண்ட விநாயகர்' என்றும் பெயர்.

அறுபத்துமூவர் மூலத் திருமேனிகளைத் தொடர்ந்து மேலே கயிலாய பர்வதக் காட்சி உள்ளது. இங்குப் பெருமான் இராவணனை அழுத்திய - நொடித்த பாவனை நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது.

நடராஜர் சந்நிதி மற்றொன்று தனியே உள்ளது. இப்பெருமான் அக்கினி சபாபதி என்றழைகக்ப்படுகிறார். சிவகாமி உடன் நிற்க, காரைக்காலம்மையார் கையில் தாளமிட்டுப் பாட, சிரித்த முகத்துடன் ஆடும், அம்பலக்வத்தன் அழகைக் காணக்கண் ஆயிரம் வேண்டும்.

காந்திமதி அம்பாள் சந்நிதி தனியே உள்ளது. கிழக்கு நோக்கியது. நின்ற திருக்கோலம், வியாழன் தோறும் அம்பாளுக்குத் தங்கப் பாவாடை சார்த்தப்படுகிறது. அம்பாள் சந்நிதி முன்புள்ள மண்டபத்தில் உள்ள இரு தூண்கள் இசைத் தூண்களாக விளங்குகின்றன.

இத்தலத்திற்குத் தல புராணம் உள்ளது. 'காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ்' சிறப்புடைய நூலாகும்.

ஆனியில் 41 நாள்களுக்குப் பெருவிழா, மண்டலாபிஷேகத்துடன் சேர்ந்து நடத்தப்படுகின்றது.

ஆடிப்பூர உற்சவம் அம்பாளுக்குப் பத்து நாள்களுக்குச் சிறப்பாக நடைபெறுகின்றது. ஐப்பசியில் கல்யாண உற்சவம் 10 நாள்களுக்கு நடைபெறுகின்றது.

கார்த்திகை மாதத்தில் காலை 4 மணிக்கெல்லாம் கோயில் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும். நான்கு சோம வாரங்களும் சிறப்பானவை.

மார்கழித் திருவாதிரை உற்சவம், தைப்பூச உற்சவம், பங்குனி உத்திரத்தில் செங்கோல் உற்சவம் முதலியவை ஒவ்வொன்றும் பத்து நாள்களுக்குச் சிறப்பாக நடைபெறுகின்றன. மாசி மகத்தில் அப்பர் தெப்பம் சிறப்பு. வைகாசி விசாகத்தில் சங்காபிஷேகம் விசேஷமானது.

இத்திருக்கோயிலின் சார்பில், தேவாப் பாடசாலை நடைபெறுகின்றது. சமய நூலகம் உள்ளது. (காந்திமதி) அம்பாள் மகளிர் மேல் நிலைப்பள்ளி 2) நெல்லையப்பர் ஆதாரப் பள்ளி 3) ஞானசம்பந்தர் பாலர் பள்ளி முதலியவை நடைபெறுகின்றன.

"மருந்தவை மந்திர மறுமை நன்னெறியவை மற்றுமெல்லாம்

அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே

பொருந்து தண் புறவினிற் கொன்றை பொன் சொரிதரத்துன்றுபைம்பூ

செருந்தி செம்பொன்மலர் திருநெல்வேலியுறை செல்வர்தாமே

"வெடிதரு தலையினர் வேனல் வெள்ளேற்றினர் விரிசடையர்

பொடியணி மார்பினர் புலியதளாடையார் பொங்கரவர்"

வடிவுடை மங்கையோர் பங்கினர் மாதரைமையல் செய்வார்

செடிபடு பொழிலணி திருநெல்வேலியுறை செல்வர்தாமே". (சம்பந்தர்)

உட்டிரு விளக்கான அகரமுகரம் மகரம்

ஒளிர்விந்து நாதவடிவாய்

உயர்மந்த்ர பதவன்ன புவன தத்துவ கலைகள்

ஓராறி னுக்குமுதலா

மட்டில் குடிலைப்பொரு ணிறைமுறையுஞ் சொல்ல

மாட்டாத படியினாலே

மனத்தெழு மகந்தையா னானென்னும் வறுமைதனை

மாற்றியருள் வாழ்வு தரவே

எட்டிருங் கைக்கமல னைக்குட்டி யேபின்

இருஞ்சிறையிலிட்டு வைத்தே

இருநூ றெனுங்கணக் கோடுநா லாறா

மெனும் புவன மண்டகோடி

சிட்டியுஞ் செய்துபின் அயன்சிறை விடுத்தவா

செங்கீரை யாடியருளே

செல்வந்த தழைத்து வளர் நெல்வேலி வாழ்செட்டி

செங்கீரை யாடியருளே (க்ஷேத்திரக்கோவை பிள்ளைத் தமிழ்)

-"பொற்றாம

நல்வேலி சூழ்ந்து நலன்பெறுமொண் செஞ்சாலி

நெல்வேலி யுண்மை நிலயமே" (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. நெல்லையப்பர் திருக்கோயில்

திருநெல்வேலி 627 001.
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:பிரம்மபுரீஸ்வரர்
அம்மன்:பிரம்மநாயகி(பிரம்ம சம்பத்கவுரி)
தல விருட்சம்:மகிழமரம்
தீர்த்தம்:பிரம்ம தீர்த்தம்
ஆகமம் பூஜை:காரண ஆகமம்
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திருப்பிடவூர்,திருப்படையூர்
ஊர்:சிறுகனூர்,திருப்பட்டூர்
மாவட்டம்:திருச்சி
மாநிலம்:தமிழ்நாடு
திருவிழா:இங்கு பங்குனி மாதத்தில் பத்துநாள் விழா நடக்கும். 
     
தல சிறப்பு:பிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம்(பதினாறு பட்டை உடையது)தனி மண்டபத்தில் உள்ளது பிரம்ம சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்த தலம்.சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கு பிரம்மனுக்கு பிரம்மாண்டமான சிலையுடன் தனி சன்னதி உள்ளது.காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார்.கோயிலை வலம்வரும் போது சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு)அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர்(மகேஸ்வரர்)என வரிசையாகத் தரிசிக்கலாம்.இந்த அமைப்பு மிக விசேஷமானது. 
     
திறக்கும் நேரம்:காலை 7.30 மதியம் 12 மணி மாலை 4 இரவு 8 மணி.வியாழனன்று காலை காலை 6 மதியம் 12.30 மணி. 
   
முகவரி:அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் சிறுகனூர் திருப்பட்டூர்-621 105 திருச்சி மாவட்டம். போன்: +91 431 2909 599 (தொடர்பு நேரம்:காலை 9.30 மாலை 6 மணி)போன்:+91- 431 2909 599 
பொது தகவல்:இது தஞ்சாவூர் கோயிலுக்கும் முற்பட்டதாக தெரிய வருகிறது.இங்குள்ள நந்தியை தடவிக் கொடுத்தால் நிஜ காளையை தடவிக் கொடுத்த உணர்வு ஏற்படுகிறது பிரதோஷ நாளில் இந்த நந்தியை மக்கள் மொய்ப்பர்.

குழந்தைகளுக்காக பைரவர் வழிபாடு:சில குழந்தைகள் இரவு வேளையில் தூங்காமல் தொடர்ந்து அழுது கொண்டிருக்கும்.இவ்வாறு குழந்தைகள் அழாமல் இருக்கவும் அவர்கள் நிம்மதியாக தூங்கவும் இங்குள்ள கால பைரவரை வழிபடுகின்றனர்.அர்த்தஜாமத்தில் இவரது சன்னதியில் சாவி வைத்து பூஜை நடக்கும்.இவ்வேளையில் தரப்படும் விபூதியைப் பெற்றுச்சென்று குழந்தைக்கு கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு பைரவர் காவலாக இருப்பார் என்பது நம்பிக்கை.

ஞானஉலா அரங்கேற்றம்: சுந்தரருடன் சேரமான் கயிலாயம் சென்றபோது சிவனை பெண்ணாக உருவகப்படுத்தி சிற்றிலக்கியம் இயற்றினார்.அதை ஐயனார் இத்தலத்தில் அரங்கேற்றம் செய்தார்.இவர் இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் ஞானஉலா அரங்கேற்றிய ஐயனார் என்ற பெயரில் அருளுகிறார்.ஆடி சுவாதியில் திருக்கயிலை ஞானஉலா விழாவன்று சுந்தரருக்கும் சேரமானுக்கும் பூஜை நடக்கும்.அன்று சேரமான் கையில் ஞானஉலா சுவடி வைத்து கயிலாயத்தில் அரங்கேற்றம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும்.ஏழாம் தேதி பிறந்தவரா?ராஜகோபுரத்தில் இருந்து 7 நிலைகளைக் கடந்து 300 அடி தூரத்தில் பிரம்மபுரீஸ்வரர் இருக்கிறார்.ஆனாலும் சுவாமி சன்னதிக்குள் சூரிய வெளிச்சம் இருக்கும்படியாக கோயில் கட்டப்பட்டுள்ளது.சூரியனுக்குரிய ரதம் ஏழு குதிரைகள் பூட்டியது. இதன் மீது வரும் சூரியன் ஏழு நிலைகளையும் கடந்து தினமும் பிரம்மபுரீஸ்வரரை தரிசிப்பதாக ஐதீகம். பங்குனியில் மூன்று நாட்கள் காலையில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும்.ஏழு நிமிடங்கள் இந்த ஒளி இருக்கும்.ஜாதகத்தில் ஒருவரது ஏழாம் இடத்தைப் பொறுத்தே மனைவி நண்பர்கள் அமைவர்.இது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இங்கு வழிபடுகின்றனர்.ஏழாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தோருக்கான பரிகார தலமாகவும் இக்கோயில் உள்ளது.
 
பிரார்த்தனை:குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால் குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது.மேலும் திங்கள் கிழமை திருவாதிரை,புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும்.  குருபெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும்.திருமணத்தடை பிரிந்த தம்பதிகள் சேருதல்,தொழில்,வியாபார,பணி விருத்திக்காக பிரம்மனிடம் வேண்டலாம்.மிக முக்கியமான பிரார்த்தனை புத்திரப்பேறு வேண்டுதல் தான்.ஏனெனில் பிரம்மன் தானே படைத்தாக வேண்டும். அவ்வகையில் இது மிகச்சிறந்த புத்திரப்பேறுக்கான பிரார்த்தனை ஸ்தலம்.
 
தலபெருமை:வித்தியாசமான அமைப்பு:குருர் பிரஹ்மா;
குருர் விஷ்ணு; குருர் தேவோ மகேச்வர;
குரு ஸாட்ஷாத் பர ப்ரஹ்மை
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ''

என்ற குருமந்திரப்படி அமைந்த கோயில் இது.கோயிலை வலம்வரும் போது சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு)அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர்(மகேஸ்வரர்)என வரிசையாகத் தரிசிக்கலாம்.இந்த அமைப்பு மிக விசேஷமானது.

முருகன் வணங்கிய சிவன்:முருகப்பெருமான், அசுரர்களை அழிக்கச் செல்லும்முன் இத்தலத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வணங்கி அதன்பின் படை திரட்டிச் சென்றாராம்.இதனால் திருப்படையூர் எனப்பட்ட தலம் திருப்பட்டூர் என மருவியதாகச் சொல்வர்.முருகன் வழிபட்ட சிவன் கந்தபுரீஸ்வரர் என்ற பெயரில் இங்கிருக்கிறார்.

எல்லாமே மஞ்சள் நிறம்:பிரம்மா மங்கலம் தந்து வாழ்க்கையை சிறக்கச்செய்பவர் என்பதால் பூஜையின்போது இவருக்கு மஞ்சள் காப்பிட்டு புளியோதரை படைத்து மஞ்சள் பிரசாதம் தருகின்றனர். மற்ற சன்னதிகளிலும் மங்கல சின்னமாகிய மஞ்சள் நிற வஸ்திரங்களையே பயன்படுத்துகின்றனர். பிரம்மன் வழிபட்ட பழமலைநாதர் கந்தபுரீஸ்வரர் பாதாள ஈஸ்வரர் தாயுமானவர் மண்டூகநாதர் ஏகாம்பரேஸ்வரர் அருணாசலேஸ்வரர் கைலாசநாதர் ஜம்புகேஸ்வரர் காளத்தீஸ்வரர் சப்தரிஷீஸ்வரர் தூயமாமணீஸ்வரர் ஆகிய லிங்கங்கள் சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்தி உட்பட பெரும்பாலான பரிவார மூர்த்திகளுக்கும் மஞ்சள் வஸ்திரமே அணிவித்து பூஜிக்கின்றனர்.பிரம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் வியாழக்கிழமைகளில் காணப்படுகிறார்.குருவுக்கு அதிதேவதை பிரம்மா. எனவே வியாழன் இங்கு விசேஷம்.யாருக்கு தலையெழுத்து மாற வேண்டும் என்ற விதி உள்ளதோ அவர்களே இக்கோயிலில் பிரம்மனின் பார்வையில் படுவார்கள் என்பது ஐதீகம்.அதுபோல் தலையெழுத்து மாற தகுதியுள்ளவர்கள் குறைந்த பாவக் கணக்கில் இருப்பவர்கள் பக்திமான்களின் தலைவிதி மாற்றப்பட்டு விடுகிறது.உதாரணமாக நோய் தாக்க வேண்டும் என்ற விதி இருந்தால் அது மாறிப் போகிறது.ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற விதியுள்ள கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகும். விரயச் செலவுகள் தடுக்கப்படும்.பெயிலாகிக் கொண்டிருக்கும் மாணவன் நன்றாக படிக்க ஆரம்பித்து உயர்நிலைக்குச் செல்வான்.நியாயமற்ற கோரிக்கைகளை பிரம்மன் கவனிப்பதில்லை என்பதுடன் மேலும் நமது நிலையை மோசமாக்கி விடுவார்.நரசிம்மர் மண்டபம்: நரசிம்மரின் லீலைகளை விளக்கும் வகையில் ஒரு மண்டபத்தில் சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் துரோபாவம் என்ற வகையில் நரசிம்மர் அவதாரமானது இரண்யனுக்கு நல்லொழுக்கம் போதித்தது அவன் கேட்காததால் சம்ஹாரம் செய்தது பிரகலாதனுக்கு அருள் செய்தது ஆகிய காட்சிகள் சிற்பங்களாக எழிலுற வடிக்கப்பட்டுள்ளன.நாத மண்டபத்தில் ராவணன் அகந்தையினால் மேருமலையை சிவ பார்வதியுடன் சேர்ந்து தூக்குவது போலவும் அது முடியாமல் போகவே சாமகானம் இசைத்து சிவனை வசப்படுத்தும் முயற்சியில் இம்மண்டபத்தில் இசைத்தூண்கள் அமைந்ததாகவும் கூறப்படுகிறது.பிரம்மன் வழிபட்ட சோடசலிங்கம்(பதினாறு பட்டை உடையது)தனி மண்டபத்தில் உள்ளது.இந்த மண்டபத்தின் உச்சி மரத்தால் ஆனது.

எலும்பு நோய்க்கு பூஜை:பதஞ்சலி மகரிஷி ராமேஸ்வரம் உட்பட 10 தலங்களில் ஐக்கியமானதாக சொல்லப்படுகிறது.அதில் இத்தலமும் ஒன்று.இவர் ஐக்கியமான இடத்தில் ஒரு லிங்கமும், ஓவியமும் உள்ளது.அமாவாசையன்று இந்த லிங்கத்திற்கு தயிர் சாதம் படைத்து பூஜை நடக்கும்.வைகாசி சதயத்தன்று இவரது குருபூஜை நடக்கிறது.சித்தர்பாடலில் இத்தலம் பதஞ்சலி பிடவூர் எனக் கூறப்பட்டுள்ளது.மனஅமைதி கிடைக்க எலும்பு தொடர்பான நோய் நீங்க கல்வி கலைகளில் சிறப்பிடம் பெற, குருவருள் கிடைக்க திங்கள் வியாழக்கிழமைகளில் இவரை வழிபடுகின்றனர்.

பதஞ்சலியின் ஜீவசமாதி:ஜோதிடக்கலையின் தந்தையும் பாம்பு உடலைக் கொண்டவருமான பதஞ்சலி முனிவர் பத்து இடங்களில் ஜீவசமாதி அடைந்ததாக ஒரு தகவல் உண்டு.அதில் இத்தலமும் ஒன்று. பதஞ்சலி முனிவரின் சமாதி இக்கோயிலுக்குள் இருக்கிறது.அவர் யோகசூத்ரம் என்ற நூலை எழுதியவர். முக்தியடைந்தாலும் கூட இன்றும் உயிருடன் இருந்து அவர் அருள்பாலிக்கிறார்.
வேதங்களை ஈசன் அம்பிகையிடமும் அம்பிகை பிரம்மாவிடமும் பிரம்மா நந்தியிடமும் நந்தி தேவர் ரிஷிகளிடமும் சொன்னதாக காஞ்சிப்பெரியவர் சொல்வார்.அது இங்கு தான் நிகழ்ந்திருக்குமோ என எண்ண வேண்டியுள்ளது.ஏனெனில் இங்கு பிரம்மபுரீஸ்வரர் பிரம்மநாயகி பிரம்மா பிரம்மாண்ட நந்தி பதஞ்சலி ரிஷி ஆகியோர் உள்ளனர்.இவ்வகையில் இது மிக விசேஷமான கோயில்.
பிரம்மன் வழிபட்ட 12 லிங்கங்களும் இங்கு உள்ளன.எனவே ஜோதிர்லிங்கங்களை தரிசித்த பலன் இங்கு சென்றாலே கிடைத்து விடுகிறது.தெற்கு நோக்கி இருக்க வேண்டிய காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார்.பிரம்மனுக்கு 36 தீபம் (27 நட்சத்திரம், 9 கிரகம்)ஏற்றி 108 புளியோதரை உருண்டைகளை படைத்து வழிபடுவது சிறந்தது.ஒன்பது முறை பிரம்மனை வலம் வர வேண்டும்.
 
தல வரலாறு:பிரம்மன் இவ்வுலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றிருந்தார்.தன்னைப் போலவே பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்கு கொடுத்தார்.படைப்புத் தொழிலில் அனுபவம் பெற்ற பிரம்மன் தன்னையும் சிவனையும் ஒன்றாகக் கருதி ஆணவம் கொண்டார்.அவருக்கு பாடம் புகட்ட விரும்பிய சிவன் ஐந்து தலை இருப்பதால் தானே அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய் எனக்கூறி ஒரு தலையைக் கொய்து விட்டார்.படைப்புத்தொழிலும் பறி போனது.நான்முகனான பிரம்மா இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார்.பூலோகத்தில் திருப்பட்டூர் என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும் தன்னை 12 லிங்க வடிவில்(துவாதசலிங்கம்)வணங்கி சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்தார்.மேலும் பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி மீண்டும் படைப்புத்தொழிலை அருள்வதாகக் கூறினார். பிரம்மனும் இங்கு வந்து துவாதச லிங்க வழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றார்.என்னை மகிழ்வித்த உன்னை வழிபடுகிறவர்களின் தீய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக என வரமும் கொடுத்தார்.அன்று முதல் இந்த பிரம்மன் தன்னை வழிபடும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றி அருள் செய்கிறார்.பிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது.அம்பாள் பிரம்மநயாகி அல்லது பிரம்ம சம்பத்கவுரி எனப்படுகிறாள்.
 
சிறப்பம்சம்:பிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம்(பதினாறு பட்டை உடையது)தனி மண்டபத்தில் உள்ளது பிரம்ம சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்த தலம்.சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கு பிரம்மனுக்கு பிரம்மாண்டமான சிலையுடன் தனி சன்னதி உள்ளது.காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார்.கோயிலை வலம்வரும் போது சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு)அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர்(மகேஸ்வரர்)என வரிசையாகத் தரிசிக்கலாம்.இந்த அமைப்பு மிக விசேஷமானது.
தமிழ்த் தொகை அழகு

ஒருமை - இறையுணர்வு

மலைநாட்டு சிவாலயம் - திருவஞ்சைக்களம்

இரண்டு

அயனம் - தட்சணாயனம், உத்ராயனம்

அறம் - இல்லறம், துறவறம்

ஆன்மா - ஜீவான்மா, பரமான்மா

இடம் - செய்யுளிடம், வழக்கிடம்

இதிகாசம் - பாரதம், இராமாயணம்

முதுகுரவர் - தாய், தந்தை

இருமை - இம்மை, மருமை

உலகம் - இகலோகம், பரலோகம்

எச்சம் - பெயரெச்சம், வினையெச்சம்

எழுத்து - உயிரெழுத்து, மெய்யெழுத்து

கலை - சூரியகலை, சந்திரகலை

கந்தம் - நற்கந்தம், துர்கந்தம்

கிரகணம் - சூரிய கிரகணம், சந்திரகிரகணம்

சுடர் - சூரியன், சந்திரன்

திணை - உயர்திணை, அஃறிணை

போது - பகல், இரவு

மரபு - தாய் மரபு, தந்தை மரபு

வினை - நல்வினை, தீவினை

மூன்று

அரசர் - சேர, சோழ, பாண்டியர்

இடம் - தன்மை, முன்னிலை, படர்க்கை

உயிரிலுள்ள b - உதரத்தீ, விந்துத்தீ, சினத்தீ

உலகம் - பூலோகம், பரலோகம், பாதாளம்

கடுகம் - சுக்கு, மிளகு, திப்பிலி

காலம் - இறப்பு, நிகழ்வு, எதிர்வு

குணம் - சாத்வீகம், இராஜசகுணம், தாமச குணம்

குற்றம் - காமம், வெகுளி, மயக்கம்

சக்தி - இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி

சாத்திரம் - சாங்கியம், பதஞ்சலியம், வேதாந்தம்

சீவதேகம் - தூலம், சூக்குமம், காரணம்

சுடர் - சூரியன், சந்திரன், அக்கினி

தமிழ் - இயல், இசை, நாடகம்

b - அகவனீயம், தக்கிணாக்கிளீயம், காருகபத்யம்

தொழில் - ஆக்கல், காத்தல், அழித்தல்

நூல் - முதல், வழி, சார்பு

பொறி - மனம், வாக்கு, காயம்

மலம் - ஆணவம்மலம், கன்மமலம், மாயாமலம்

முக்கனி - மா, பலா, வாழை

பொருள் - பதி, பசு, பாசம்.

நான்கு

அரண் - மலை, காடு, மதில், கடல்

அளவு - எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல்

அழகை - இளிவு, இழவு, அசைவு, வறுமை

ஆச்சிரமம் - பிரமசரியம், இல்வாழ்க்கை, வானப்பிரத்தம், சந்நியாசம்

இழிச்சொல் - குறளை, பொள், கடுஞ்சொல், பயனில் சொல்

உண்டி - உண்டல், தின்னல், நக்கல், பருகல்

உபாயம் - சாமம், தானம், பேதம், தண்டம்

உரை - கருத்துரை, பதவுரை, பொழிப்புரை, அகலவுரை

கதி - தேவகதி, மக்கள்கதி, விலங்குகதி, நாகர்கதி

கணக்குவகை - தொகை, பிரிவு, பெருக்கு, கழிவு

கவிகள் - ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி

சதுரங்கம் - தேர், கரி, பரி, காலாள்

சொல்வகை - பெயர், வினை, இடை, உரி

தோற்றம் - பை, முட்டை, நிலம், வியர்வை

நிலம் - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்

பண் - பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி

பதவி - சாலோகம், சாமீபம், சாருபம், சாயுச்சியம்

பா - வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா

பூ - கொடிப்பூ, கோட்டுப்பூ, நீர்ப்பூ, புதர்ப்பூ

பொருள் - அறம், பொருள், இன்பம், வீடு

பொன்வகை - ஆடகம், கிளிச்சிறை, சாதகம், சாம்பூநதம்

பெண் குணம் - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு

மார்க்கம் - சரியை, கிரியை, யோகம், ஞானம்

யுகங்கள் - கிரிதம், திரேதம், துவாபரம், கலியுகம்

ஐந்து

அகிற்கூட்டு - சந்தனம், கற்பூரம், எரிகாசு, தேன், ஏலம்

அங்கம் - FF, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்

அரசர்க்குழு - மந்திரி, புரோகிதர், சேனாதிபதியர், தூதர், சாரணர்

அவத்தை - சாக்கிரம், சொப்பனம், துருத்தி, துரியம், துரியாதீதம்

இலக்கணம் - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி

ஈஸ்வரன்முகம் - ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம், சத்தியோசாதம்

உலோகம் - பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம்

ஐங்காயம் - கடுகு, ஓமம், வெந்தயம், உள்ளி, பெருங்காயம்

ஐம்புலநுகர்ச்சியில்

இறப்பன - மீன், வண்டு, யானை, அகணம், விட்டில்

கன்னிகை - அகலிகை, திரௌபதி, சீதை, தாரை, மண்டோதரி

குரவர் - அரசன், உபாத்தியாயன், தந்தை, தேசிகன், மூத்தோன்

குற்றம் - கொட்டாவி, நெட்டை, குறுகுறுப்பு, மூச்சிடல், அலமரல்

சத்தி - இச்சாசத்தி, கிரியாசத்தி, ஞானசத்தி, பராசத்தி, ஆதிசத்தி

திருமால் ஆயுதம் - சக்கரம், தனு, வாள், தண்டு, சங்கம்

தேவர் - பிரமன், விஷ்ணு, உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன்

புலன் - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்

யாகம் - பிரமம், தெய்வம், பூதம், பிதிர், மானுடம்

வண்ணம் - வெண்மை, கருமை, செம்மை, பசுமை

வாசம் - இலவங்கம், ஏலம, கருப்பூரம், சாதிக்காய், தக்கோலம்

விரை - கோட்டம், துருக்கம், தகரம், அகில், சந்தனம்

சுத்தி - ஆன்மசுத்தி, தானசுத்தி, திரவியசுத்தி, மந்திரசுத்தி, இலிங்கசுத்தி

முடிஅழகு - கொண்டை, பனிச்சை, குழல், முடி, சுருள்

ஆறு

அங்கம் - படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண்

அந்தணர் தொழில் - ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல்

ஆதாரம் - மூலம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை

உட்பகை - காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம்

சக்கரவர்த்திகள் - அரிச்சந்திரன், நளன், முசுகுந்தன், புருகுச்சன், புரூரவன், கார்த்தவீரியன்

சுவை, - இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கார்ப்பு, துவர்ப்பு, கைப்பு

தானை - தேர், பரி, கரி, ஆள், வேல், வில்

பருவகாலம் - கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்

ஏழு

அகத்தினை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை,

பெருந்திணை

இசை - குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்

இடைஏழு

வள்ளல்கள் - அக்குறன், சந்திமான், அந்திமான், சிசுபாலன்,

தந்த வக்கிரன், கர்ணன், சந்தன்

உலகம் - பூலோகம், புவலோகம், மகாலோகம், சனலோகம்,

தவலோகம், சத்தியலோகம்

கடல் - உவர்நீர், நன்னீர், பால், தயிர், நெய், கருப்பஞ்சாறு, தேன்

கடைஏழு

வள்ளல்கள் - எழினி, ஓரி, காரி, நள்ளி, பாரி, பேகன், மலையன்

உலோகம் - செம்பொன், வெண்பொன், இரும்பு, ஈயம், வெங்கலம், தரா

முதல் ஏழு

வள்ளல்கள் - குமணன், சகரன், சகாரன், செம்பியன், துந்துமாரி, நளன், நிருதி

கீழ்ஏழ் உலகம் - அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், ரசாதலம், பாதாளம்

சப்தவிடத்தலம் - திருவாரூர், நாகப்பட்டினணம், திருநள்ளாறு, திருமறைக்காடு, திருக்காறாயில் திருவாய்மூர், திருக்குவளை

சீரஞ்சீவியர் - அசுவத்தாமன், மகாபலி, வியாசன், அனுமான், வீடணன், மார்க்கண்டன், பரசுராமன்

நதி - கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, குமரி, கோதாவரி

தாதுக்கள் - இரதம், உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலம்

தாளம் - துருவம், மட்டியல், ரூபகம், சம்பை, திரிபுடை, அடதாளம்,

ஏகதாளம்

பாதகம் - ஆங்காரம், உலோபம், காமம், பகை, போஜனப்பிரியம், காய்தல், சோம்பல்

பிறப்பு - தேவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, நிற்பன

மோட்ச புரி - காஞ்சி, காசி, அவந்திகை, துவாரகை, மதுரை, அயோத்தி,மாயை

பெண்கள் பருவம் - பேதை, பெதும்மை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை,

பேரிளம்பெண்

மண்டலம் - வாயு, வருணன், சந்திரன், சூரியன், நட்சத்திரம், அக்னி, திரிசங்கு

மாதர் - அபிராபி, மகேஸ்வரி, கௌமாரி, நாராயணி, வாராகி, இந்திராணி, காளி

முனிவர் - அத்திரி, குச்சன், கௌதமன், பிருகு, காசிபன், அங்கிரா, வசிட்டன்

வித்யா தத்துவம் - காலம், நியதிகலை, வித்தை, கிராகம், புருடன், மாயை

எட்டு

அட்டவீரட்டம் - கண்டியூர், திருக்கடவூர், திருஅதிகை, வழுவூர், திருப்பறியலூர், திருக்கோவலூர், திருக்குறுக்கை, திருவிற்குடி

அளவை - காட்சி, அனுமானம், ஆகமம், அருத்தாபத்தி, உபமானம்,

அபாவம், சம்பவம், ஐதீகம்

அஷ்டபந்தனம் - சுக்கான்கல், ஜாதிலிங்கம், செம்பஞ்சு, தேன்மெழுகு, எருமைவெண்ணெய், குங்கிலியம், நற்காவி, கொம்பரக்கு

எட்டுத்தொகை - நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு

எண்சுவைத்தமிழ் - சிங்காரம், வீரியம், பெருநகை, கருணை, ரவுத்திரம், குற்சை, அற்புதம், பயம்

எண்வகைவிடை - சுட்டு, மறை, நேர், ஏவல், வினா, உற்றுதுரைத்தல், உறுவதுகூறல், இனமொழி

ஐஸ்வரியம் - தனம், தானியம், GF, பசு, புத்திரர், வாகனம், சத்தம், தைரியம்

சித்தி - அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிரார்த்தி, பிராகமியம், வசித்துவம்

மெய்ப்பாடு - நகை, அழுகை, அச்சம், இளிவரல், மருட்கை, பெருமிதம்,

வெகுளி, உவகை

ஒன்பது

நவ GF - சங்கம், பதுமம், மகாபதுமம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம்

ராட்சதகணம் - கார்த்திகை, அயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டம்,

மூலம், அவிட்டம், சதயம்

நவமணி - கோமேதகம், நீலம், பவளம், புஷ்பராகம், வைடூரியம், மரகதம், மாணிக்கம், முத்து, வைரம்,

ஒரெழுத்து ஒருமொழி

ஆ - பசு, கோ - தலைவன், ஈ - கொடு, பூ - மலர்,

நா - நாக்கு, கா - காப்பாற்று, மா - பெரிய, ஐ - சளி,

சா - மடி, சே - எருது, பா - பாடல், கை - கரம், தை - மாதம்

ஆதாரம் - அபிதான சிந்தாமணி
முத்ரைகளின் லக்ஷணம்

பரமேசுவரனைப் பூஜிக்கும்போது ஆவாஹன காலத்திலும் மற்றச் சமயங்களிலும் முத்திரைகளைக் காட்டுவார்கள். முத்திரை என்பது அடையாளம் என்ற பொருளுடையது.

முகம் கரோதி தேவாநாம் த்ராவயத்யஸீராம்ஸ்ததா |

மோதநாத் த்ராவணாச்சைவ முத்ரேயம் ஸம்ப்ரகீர்த்திதா ||

முத்திரையைக் காட்டுவதனால் தேவர்களுக்குச் சந்தோஷம் உண்டாகும். அசுரர்களை விரட்டுவதற்குரிய சக்தியை உண்டாக்குகிறது. ஆவாஹன கலத்தில் இன்ன முத்திரை கொடுக்க வேண்டும் என்றெல்லாம் ஆகமங்கள் சொல்லுகின்றன. காரணாகமம் 32 முத்திரைகளைப் பற்றிச் சொல்கிறது. அந்த 32 முத்திரைகளில் முதலில் சொல்லப்படுவது லிங்க முத்திரை. அந்த 32 முத்திரைகளின் பெயர் வருமாறு-

லிங்க முத்திரை, நமஸ்கார முத்திரை, தாளமுத்திரை, சங்க முத்திரை, ஸீரபி முத்திரை, முகுளீ முத்திரை, வாராஹீ முத்திரை, நிஷ்டுரா முத்திரை, பீஜ முத்திரை, ப‘ஜ்சவக்த்ரீ முத்திரை, திரவ்ய முத்திரை, சிவ முத்திரை, ஸம்ஹார முத்திரை, ஸாதாக்ய முத்திரை, ஆஸநீ முத்திரை, மஹேச முத்திரை, வஜ்ர முத்திரை, சக்தி முத்திரை, தண்ட முத்திரை, கட்க முத்திரை, பாச முத்திரை, அங்குச முத்திரை, கதா முத்திரை, சூல முத்திரை, பத்ம முத்திரை, சக்ர முத்திரை, டங்க முத்திரை, மகா முத்திரை, கண்டா முத்திரை, அஸ்திர முத்திரை, சர முத்திரை, தநுர் முத்திரை என்று 32 முத்திரைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

லிங்கமுத்ரா நமஸ்காரா தாளாக்யா ஸங்கமுத்ரிகா |

ஸீரபீ முகுளீ சைவ வாராஹீ சைவ நிஷ்டுரா ||

பீஜாக்யா பஞ்சவக்த்ரீ ச த்ரவ்யமுத்ரா ஸிவாக்யகா |

ஸம்ஹாரமுத்ரிகா சைவ ஸாதாக்யா சைவ முத்ரிகா ||

ஆஸநீ ச மஹேஸாக்யா வஜ்ராக்யா ஸக்திமுத்ரிகா |

தண்டமுத்ரா ததா கட்கா பாஸமுத்ராங்குஸாக்யகா ||

கதாமுத்ரா ச ஸீலாக்யா பத்மமுத்ரா ததைவ ச |

சக்ரமுத்ரா ததா டங்கா மஹாமுத்ரா ததைவ ச ||

கண்டாமுத்ராஸ்த்ரமுத்ரா ச ஸரமுத்ரா தநுஸ்ததா|

முத்ராணாமுச்யதே சைவம் த்வாத்ரிம்ஸல்லக்ஷணம் பரம் ||

இந்த 32 முத்திரைகளிலே சூரிய பூஜையில் கொடுக்க வேண்டிய முத்திரை இன்னவை, ஆவாஹன காலத்தில் செய்யவேண்டிய முத்திரைகள் இன்னவை, முடிவுக்காலத்தில் செய்ய வேண்டிய முத்திரைகள் இன்னவை என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

பரமேசுவரன் நிலைத்து இருக்கும் படியான இடத்தில் கொடுக்க வேண்டிய்து லிங்க முத்திரை. ஸ்நானகாலத்தில் கொடுக்க வேண்டியது சங்க முத்திரை. ஸ்நானத்தின் முடிவில் செய்ய வேண்டிய முத்திரை பிஸிநீ முத்திரை. ஆவாஹன காலத்தில் செய்யவேண்டிய முத்திரை வாராஹீ முத்திரை. ஆவாஹன முடிவில் செய்யவேண்டிய முத்திரை சதாசிவ முத்திரை.

லிங்கமுத்ரா து விக்யாதா ப்ரச்சந்நேதி ப்ரதர்ஸயேத் |

ஏஷா ஹி ஸங்கமுத்ரா ஸ்யாத் ஸ்நாநகாலே ப்ரதர்ஸயேத் ||

பிஸிநீ முகுளாகாரா ஸ்நாநாந்தே து ப்ரதர்ஸயேத் |

க்ருதே ச வாராஹீ க்யாதா குர்யாதாவாஹநே ததா |

முத்ரா ஸதாஸிவாக்யாதாவாஹநாந்தே ப்ரதர்ஸயேத் ||

இதேபோல, ஒவ்வொரு முத்திரையையும் எந்த எந்தக் காலத்தில் கொடுக்க வேண்டுமென்று ஆகமங்கள் சொல்கின்றன.

ஸீர்யபூஜாயாம் விசேஷேண சோடிகாமுத்ராம், அம்ருத முத்ராம் விஸ்புரமுத்ராம் பிம்பமுத்ராம் ச தத்வா.

சூரிய பூஜைக் காலத்தில் சோடிகா முத்திரையும் அம்ருத முத்திரையும் விஸ்புர முத்திரையும் பிம்ப முத்திரையும் கொடுக்கப்படுகின்றன. இந்த முத்திரைகள் எப்படிச் செய்ய வேண்டும் என்பதைக் கிரியாம்சத்தில் காட்டினால் விளங்கும்.

ஆவாஹநஸ் தாபநஸந்நிதாந-

நிரோதநாவகுண்டநஸெளதமுத்ரா : |

பாத்யம் ததா சாசமநார்க்யபுஷ்ப-

தாநம் மதாஸ் ஸம்ஸ்க்ருதயோ தஸைவ ||

ஆவாஹன காலத்தில் செய்யவேண்டிய முத்திரைகள், ஆவாஹன, ஸ்தாபன, ஸந்நிதான, ஸந்நிரோதன, அவகுண்டன, தேனு முத்திரைகள் என்பன.

ஹோமம் செய்யும் போது, ஸுகரி முத்திரையும், திரவியங்களை ஹோமம் செய்யும்போது மிருகி முத்திரையும், நெய்யை ஹோமம் செய்யும்போது ஹம்ஸ முத்திரையும் உபயோகிக்க வேண்டும்.

ஸுகரீ ச ம்ருகீ ஹம்ஸீ ஹோமமுத்ராஸ் த்ரயஸ் ஸ்ம்ருதா: |

திலாஜ்யம் ச ம்ருகீமுத்ரா ஹம்ஸா ச ஸமிதோ ஹுநேத் ||

வாராஹீ சருஹோமம் ச குர்யாத் விசக்ஷண: |

முத்ராஹீநம் து யத் ஹோமம் தத்ஹோமம் நிஷ்பலம் பவேத் ||

விதிப்ரபூரணார்த்தம் து க்ருத்வா முத்ராம் து தேசிகா: |

எந்தக் காரியத்தைச் செய்தாலும், முத்திரையோடு செய்கிற காரியங்கள் தாம் முழுப் பலனையும் அளிக்கும்.

ஈஸாநாதீநாம் ப்ரஹ்மணாம் தேநு, பத்ம, த்ரிஸுல, மகர, ஸ்ருங்காக்யா முத்ரா : |

அங்காநாம் ச நமஸ்காரமுத்ராம் தர்ஸயேத் ||

பூஜை முடிகிற காலத்தில் ஈசான மந்திரத்தினாலே தேனு முத்திரையும், தத்புருஷ மந்திரத்தினாலே பத்ம முத்திரையும், அகோர மந்திரத்தினாலே சூல முத்திரையும், வாமதேவ மந்திரத்தினாலே மகர முத்திரையும், ஸத்யோஜாத மந்திரத்தினாலே நமஸ்கார முத்திரையும் கொடுத்து நிறைவேற்ற வேண்டுமென்று சிவாகமங்கள் சொல்லுகின்றன.

சில முத்திரைகளை உபயோகிக்கும் காலங்கள் வருமாறு :

பரம் பொருளான இறைவனைக் குறிப்பிட்ட இடத்தில் எழுந்தருளச் செய்வது, ஆவாஹினீ முத்திரை.
    கருணாகரனான இறைவனை அநுக்கிரகத்தின் பொருட்டு இருக்கச் செய்தல், ஸ்தாபினீ முத்திரை.
    அநுக்ராஹ்ய அநுக்ரஹலக்ஷண சம்பந்தத்தைத் தருவது, ஸந்நிதான முத்திரை.
    சிவபெருமான் எப்பொழுதும் என்னிடத்தில் அநுக்கிரகம் செய்யவேண்டும் என்று வேண்டுவது, ஸந்நிரோதன முத்திரை.
    கைகளின் சுத்தத்தின் பொருட்டுக் கொடுப்பது, சோதனீ முத்திரை.
    ஸ்நான காலத்தில் கொடுப்பது, சங்க முத்திரை.
    திரவ்ய சுத்தியின் பொருட்டுக் கொடுப்பது, தேனு முத்திரை.
    சக்தியின் பொருட்டுக் கொடுப்பது, சக்தி முத்திரை.
    பரமேச்வரனின் பொருட்டுக் கொடுப்பது, பஞ்சமுகீ முத்திரை.
    சிவஸாயுஜ்யத்தைத் தருவது, மனோரமா முத்திரை.
    எல்லாக் கிரியைகளிலும் கொடுப்பது, நமஸ்கார முத்திரை.

இவ்விதம் முப்பத்திரண்டுக்கும் பிரயோஜனத்தைக் கூறுகிறது காரணாகமம். மேலும், ஸுப்ரபேதாகமத்தில் சுருக்கமாக இருபத்து மூண்றின் பிரயோஜனம் கூறப்படுகிறது.

                                           சுபம்
சுருதி ஸூக்தி மாலா : சுலோகம் 101

சதுர் வேத தாத்பர்ய ஸங்க்ரஹம்

சிவலிங்க பூபதியின்
ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்தைத் தழுவி
தமிழில் பதவுரையும் தாத்பர்யங்களும்

திணம் ஓரு சுலோகம்

சுலோகம் 101

ஏக : ச்ருதோஸி பரமேச்வர ! ஸத்விதீயம்
மந்த்ரா யயா வ்யபதிசந்தி புன : புனஸ்த்வாம் |
தஸ்யா : ப்ரபாவம் அதிவாங் மனஸம் சிவாயா :
கார்த்ஸ்ன்யேன வக்து மனலம் கமலாஸனோபி ||
பதவுரை

பரமேச்வர – பரமேச்வரனே! ஏக : ச்ருதோஸி – நீர் ஒருவர் ஒப்பற்றவர் (அத்லிதீய ப்ரம்மம்) என்பதாக சுருதியால் போற்றப்படுகிறீர்.

ஏக எவ ருத்ரோ ந த்விதீயாய தஸ்தே
ய ஏகோ ருத்ர உச்யதே –
என்றெல்லாம் சுருதிகள் உத்கோஷிக்கின்றன யயா யுக்தம் – எந்தப் பார்வதியோடு கூடியிருப்பதால், த்வாம் – உம்மை, மந்த்ரா:- மற்ற மந்த்ரங்கள், புன : புன :- அடிக்கடி ஸத்விதீயம் வதந்தி – ஸஹ ஸ்வஸ்ராம்பிகயா அம்பிகாபதயே – உமாபதயே என்றபடி, இரண்டாவதாகிய சக்தியுடன் கூடியவராகச் சொல்லுகின்றனவோ, தஸ்யா:- அப்பேர்ப்பட்ட, சிவாயா:- பராசக்தியின் அதிவாங்மனஸம் ப்ராபவம் – வாக்குக்கும் மனதுக்கும் எட்டாத மகிமையை கமலரஸனோபி – வேதங்களை உபதேசித்த ப்ரம்மாவும், கார்த்ஸ்ன்யேன – பூராவும், வக்து மனலம் – சொல்லச் சக்தியற்றவர் நிச்சயம்.

வாயவீய ஸம்ஹிதையில் தேவியின் மகிமை நன்கு விளக்கப்பட்டிருப்பது இங்கு கவனிக்க வேண்டும். கூர்ம புராணத்தில், பார்வதி தன் தந்தை மலையரசனான ஹிமவானுக்கு தன் விபூதியை விச்வரூபமாகச் காட்டியதாகவும், பிறகு பயமடைந்த தந்தைக்குத் தன் பழைய குழந்தை உருவத்தைக் காண்பித்து அனுக்ரஹித்ததாகவும், வரலாறு கூறப்பட்டு உமாதேவி மகிமை விளக்கப்பட்டிருக்கிறது.
மூக பஞ்ச சதியில் உள்ள... காமாட்சி அம்மனைத் துதிக்கும் மிக அற்புதமான ஸ்தோத்திரம் இது.

ச்ரியம் வித்யாம்தத்யாஜ்னனி நமதாம் கீர்த்திமமிதாம்
ஸுபுத்ரம் ப்ராதத்தே தவ ஜடிதி காமாக்ஷி! கருணா
த்ரிலோக்யாமாதிக்யம் த்ரிபுரபரிபந்திப்ரணயினி
ப்ரணாமஸ்த்வத்பாதே ஸமிததுரிதே கிம் ந குருதே

கருத்து: காமாட்சி அன்னையே! உன்னை வணங்குபவர்களுக்கு உனது கருணையானது தனம், வித்யை, அளவற்ற கீர்த்தி, நல்ல புத்திரன், மூவுலகிலும் மேன்மையாக இருக்கும் தன்மை ஆகியவற்றை வெகு விரைவிலேயே வரமாகத் தருகிறது. திரிபுர சம்ஹாரம் செய்த பரமேஸ்வரரின் பத்தினியே....! பக்தர்களது பாவத்தைப் போக்கும் தங்களின் சரணத்தில் செய்த நமஸ்காரமானது, எதைத்தான் கொடுக்காது?

பவுர்ணமி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், அம்பாளுக்கு உகந்த திருநாட்களிலும், அம்பாளுக்கு செவ்வரளி முதலான சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து, சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து, இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபட, சகல நன்மைகளும் உண்டாகும். செல்வம், வித்யை, புத்திரப்பேறு, கீர்த்தி, உத்தியோகம் ஆகியவற்றை விரும்புவோர் இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்து பலன் பெறலாம்.
விக்னேச்வர பிரதிஷ்டா முறை

45வது படலத்தில் மஹா கணபதி பிரதிஷ்டை முறை கூறப்படுகிறது. முதலில் அமைப்பு முறை முதற்கொண்டு விக்னேச ஸ்தாபனம் கூறுகிறேன் என்று பிரதிக்ஞை, பிறகு சிவாலயம் நிழல் தரும் விருக்ஷ பிரதேசங்களில், மற்ற இடங்களிலும் விக்னேஸ்வரரை ஸ்தாபனம் செய்ய உரிய இடமாக நிரூபிக்கப்படுகிறது. பிறகு விக்னேச ஆலயம் அமைக்கும் முறை அங்கு திக்தேவதை மூர்த்தி அமைக்கும் முறை பலவிதமாக கூறப்படுகிறது. பிறகு சுற்றிலும் பரிவாரம் அமைக்க வேண்டும் என கூறி விஸ்வரூபர் முதலான 8 மூர்த்தீஸ்வரர்களின் பெயர்களை கூறி அந்த மூர்த்தீஸ்வரர் களையோ இந்திராதி திக்குகளை அதிஷ்டித்த 8 பீடங்களையோ அமைக்கவும் என பரிவாரம் அமைக்கும் முறை கூறப்படுகிறது. வாயில் படியின் முன்பாக மூஷிகம், அவ்வாறே விகடன் பீமன் என்கிற துவார பாலகர்கள் ஈசான திக்கில் நிர்மால்யதாரியாகிய கும்போதரனையும் அமைக்கவும் என்று பரிவார விதி கூறப்படுகிறது. பிறகு விக்னேஸ்வரரின் மூர்த்திபர்கள் ஆமோதன் முதலான 8 மூர்த்திகளும் ஹஸ்தி வக்த்ரன் முதலான 8 மூர்த்திகளும் பெயரால் குறிப்பிடப்படுகிறார்கள். பின்பு பூதரூபமான துவார பாலகர்கள், மூஷிகம், நிர்மால்யதாரி கும்போதரன், பரிவாரதேவதைகள், இவர்களின் லக்ஷணம் நிரூபிக்கப்படுகிறது. பிறகு பலிபீடம், மஹாபீடம் இவை இரண்டும் முன்பு போல் அமைக்க வேண்டும் என கூறப்படுகிறது. இவ்வாறாக பரிவாரத்துடன் கூடிய வினாயகர் ஆலயம் அமைக்கும் முறை கூறப்பட்டுள்ளது. பிறகு சிலை, கற்சிலை முதலியவான திரவ்யங்களால் ஐந்து தாளம் என்ற அளவு முறையால் விக்னேச பிம்பம் அமைக்கும் முறை கூறப்படுகிறது. இங்கு கர்ப்பக்கிரஹ அளவால் பிம்ப அளவை நிரூபித்து, தூண் வாயிற்படி அளவாலும், லிங்க அளவாலுமோ பிம்பம் செய்யலாம் என கூறப்படுகிறது. பிறகு சிரஸ் முதல் பாதம் வரை சரீர அளவு வர்ணிக்கப்படுகிறது. பிறகு விக்னேஸ்வர மூர்த்தி அமைப்பு கூறப்படுகிறது. இங்கு விக்னேசன் நான்கு கை மூன்று கண் அல்லது இரண்டு கண், நின்ற கோலமோ அமர்ந்த கோலமாகவோ செய்யவேண்டும் என்று கூறி நான்கு கைகளிலும் ஸ்தாபிக்க வேண்டிய வஸ்து விஷயத்தில் ஆயுதம் முறை இரண்டு விதமாக கூறப்படுகிறது.

வினாயகர் மட்டுமோ அல்லது சக்தியுடன் கூடியதாகவோ இருக்கலாம் என்று கூறி இரண்டு சக்தியை உடையதும் ஒரு சக்தியை உடையதுமான விநாயகரை அமைக்கும் முறை கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டா முறை கூறப்படுகிறது. முதலில் வினாயகர் மட்டும் சக்தியோடு கூடிய வினாயகரை உடையதும் ஆன மூலமந்திரம் வர்ணிக்கப்படுகிறது. பிறகு கணேஸ்வரி முத்திரை, மூலமுத்திரை இவைகளின் லக்ஷணம் கூறப்படுகிறது. பிறகு முன்பு கூறப்பட்ட காலத்தில் அங்குரார்ப்பணம் முன்னதாக ரத்னநியாஸவிதி நயனோ மீலன விதியும் கூறப்படுகிறது. நயனோன்மீலன விதியில் தேவியுடன் கூடிய வினாயகர் இருந்தால் அந்த தேவிக்கும் நயனோனந் மீலனம் செய்ய வேண்டும். பிறகு பிம்ப சுத்தி, கிராம பிரதட்சிணம், ஜலாதிவாசம் ஜலாதி வாசத்தில் பிரதான கும்பத்தை சுற்றிலும் திக்பாலகர்களை அதிஷ்டித்த 8 கும்பங்களை வைக்கவும் என ஜலாதி வாச முறை கூறப்பட்டுள்ளது. பிறகு யாகத்திற்காக வேதிகை, குண்டம் இவைகளுடன் கூடிய மண்டபம் அமைக்கும் முறை கூறப்படுகிறது. பின்பு சில்பியை திருப்தி செய்து பிராம்மண போஜனம் புண்யாஹப்ரோக்ஷணம் செய்து வாஸ்துஹோமம், பூ, பரிக்கிரஹ கர்மாக்களை செய்து ஜலத்திலிருந்து வினாயகரை மண்டபத்திற்கு அழைத்து சென்று ஸ்நான வேதியில் வைத்து ஸ்நபநம் செய்து, ரக்ஷõபந்தனம் செய்து மண்டபத்தில் ஸ்தண்டிலத்திற்கு மேல் அண்டஜம் முதலான ஐந்து சயனங்களால் சயனம் கல்பித்து, அந்த சயனத்தில் வினாயகரை அதிவாசம் செய்யவும். இவ்வாறு சயனாதிவாசம் கூறப்படுகிறது. பிறகு சிகப்பு வஸ்திரத்தால் மூடி வினாயகரின் தலை பாகத்தில் வஸ்த்ர கூர்ச்சத்துடன் கூடியதாக கும்ப ஸ்தாபிக்கவும். கும்பத்தை சுற்றி 8 கடங்கள் ஸ்தாபிக்கவும் கும்பத்தில் மஹா கணபதியையும் அதை சுற்றிலும் இருக்கிற 8 கும்பங்களில் 8 மூர்த்திபர்களையோ பூஜிக்கவும். முன்பு கூறிய முறைப்படி தியானத்துடன் கந்தம், புஷ்பம், நைவேத்தியம் இவைகளால் பூஜிக்கவும் என்று கும்ப அதிவாசமுறை கூறப்படுகிறது. இங்கு இரண்டு அம்பாளுடன் கூடியிருந்தால் விக்னேஸ்வரனின் இரண்டு பக்கத்திலும் இரண்டு வர்த்தனி கும்பம் வைத்து ஒரு அம்பாளுடன் கூடி இருந்தால் வடக்கு பாகத்தில் ஒரு வர்தனி வைத்து பூஜிக்கவும் என்று கூறப்படுகிறது.

பிறகு தத்வதத்வேஸ்வர, மூர்த்தி, மூர்த்தீஸ்வர நியாஸ முறை அதன் பூஜை முறையையும் கூறப்படுகிறது. பிறகு ஆசார்யன் மூர்த்திபர்களுடன் கூடி ஹோமகர்மாவை செய்யவும் என்று ஹோம முறை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு காலையில் சுத்தமாக உள்ள ஆசார்யன் மூர்த்திபர்களுடன் கூடி கும்பம் அக்னி இவைகளை பூஜித்து வினாயகரை எடுத்து ஆலயத்திற்குள் நுழைந்த மானுஷ தைவிக பிம்ப விஷயத்தில் ரத்ன அவுஷதி இவைகளால் நிரம்பிய பிரம்ம சிலையை வைத்து, அந்த சிலைக்கு மேல் வினாயகரை ஸ்தாபனம் செய்யவும். முகூர்த்த லக்னத்தில் மந்திரநியாசம் செய்யவும், சலபிம்பத்தை ஸ்நாநவேதிகையில் வைத்து மந்திர நியாசம் செய்யவும். பிறகு அந்தந்த தேசத்தில் அபிஷேகம் செய்யவும், தத்வதத்வேஸ்வர மூர்த்தி மூர்த்தீஸ்வர நியாசம் செய்யவும். பிறகு ஸ்நானம் நைவேத்தியம் உத்ஸவம் ஆகியவைகளும் செய்யவும். இவ்வாறு பிரதிஷ்டாவிதி கூறப்பட்டது. பிறகு இங்கு பாரதி என்று தேவியுட கூடிய கணேச விஷயத்தில், அவ்வாறு ஏகசக்தி உள்ள கணேசஸ்தாபன விஷயத்திலும் செய்ய வேண்டி விசேஷ முறை கூறப்பட்டு விக்னேஸ்வர ஸ்தாபன பலனை கூறுகிறார். பிறகு நித்யார்ச்சனை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு நித்திய அனுஷ்டானமுடைய ஆசார்யனுக்கு துவார பூஜை துவார பாலார்சனை முன்னதாக நுழைவு முறை முதலில் கூறப்படுகிறது. பிறகு துவார பால விஷயத்தில் விகடபீமனையோ ஸ்வாமிக்கு சொல்லப்பட்ட துவாரபாலார்ச்சனையோ செய்யவும் என விசேஷ பூஜா முறை கூறப்படுகிறது. பிறகு பூதசுத்தி செய்யும் முறை வர்ணிக்கப்படுகிறது. பிற பூஜா விஷயத்தில் ஏகத்ரிம்சத்கலந்யாஸம் செய்யவும். பிறகு அந்தர்யாகம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. ஸ்தான சுத்தி, திரவ்ய சுத்தி, மந்திரசுத்தி முறை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு பிம்ப சுத்தி முறை கூறப்படுகிறது. நிர்மால்யமான பூஜா திரவ்யங்களை நிர்மால்ய தாரியான குண்பசண்டரிடம் கொடுக்கவும் அல்லது தள்ளுபடி செய்யவும். பிறகு கணேசகாயத்ரி மந்திரம் சந்தர்ப முறையாக கூறப்படுகிறது. உலோகம், சித்திரம், முதலிய பிம்ப விஷயத்தில் சுத்தி செய்யும் முறை விசேஷமாக கூறப்படுகிறது. ஆசனம் அமைப்பது மூர்த்தி பூஜை செய்யும் முறை நிரூபிக்கப்படுகிறது. பிறகு ஆவாஹனம் முதலிய மற்ற ஸம்ஸ்கார முறையையும் தூபதீப நைவேத்தியம் வரையிலான பூஜை முறையும் வர்ணிக்கப்படுகிறது.

இந்த பூஜாவிதியில் சந்தனம் முதலான திரவ்யங்களின் அளவு பஸ்ச்சிமதுவார அர்ச்சனையில் கூறப்பட்டபடி கிரஹித்து கொள்ளவும் என கூறப்படுகிறது. பிறகு ஆவரண பூஜை முறை கூறப்படுகிறது. முதலில் பிரதமாவரணத்தில் ஆக்னேயம் நைருதி வாயு ஈசானம் இந்த திக்குகளில் கிழக்கு முதலான திக்குகளிலும் ஈசானாதிகளையும் ஹ்ருதயாதி மந்திரங்களையும் அதற்கு வெளியில் நான்கு ஆவரணங்களிலும் முறையாக ஹஸ்த்திவக்திரன் முதலான 8 மூர்த்திபர்கள் ஆமோதன் முதலானவர்கள் 8 திக்பாலர்கள் அஸ்திரங்கள் இவைகளை பூஜிக்கவும் என கூறப்படுகிறது. ஒன்று இரண்டு மூன்று ஆவரணங்களாலோ பூஜிக்கலாம் என்று கூறப்படுகிறது. பிறகு மறுபடியும் பாட்டுக்களுடன் கூடியதும் நைவேத்ய பலிஹோமத்துடனும் முறைப்படி செய்யலாம் என்று கிரியைகளின் வரிசையை குறிப்பிட்டு ஹோமம விதி சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு நித்யோத்ஸபரிதி விதி கூறப்படுகிறது. ஒரு காலம், இரண்டு காலம், மூன்று காலம், நான்கு காலம், ஐந்து காலம், ஆறு காலம், ஏழுகாலம், எட்டுகாலம் என்றோ அல்லது எப்பொழுதுமோ கணேசனுக்கு நித்ய பூஜை செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு சதுர்த்தியில் இஷ்டசித்திக்காக பலவித பக்ஷ்யங்களுடன் கூடிய ஸ்நபன அபிஷேகத்துடன் பூஜை செய்யவும் என்று கூறி ஐந்து, இருபத்தி ஐந்து, ஒன்பது, நாற்பத்தி ஒன்பது ஆகிய எண்ணிக்கையுள்ள ஸ்நபன விஷயத்தில் தேவதைகளை பூஜிக்கும் முறை கூறப்படுகிறது. பிறகு 108,ஸ்நபன விஷயங்களில் தேவதையை பூஜிக்கும் முறையை கூறப்படுகிறது. ஸ்நபன விஷயத்தில் இரண்டு சக்தியுடன் கூடிய வினாயகர் விஷயத்திலும் ஒரு சக்தியுள்ள விஷயத்திலும் விசேஷம் கூறிய பிறகு உத்ஸவத்தில் தமநாரோபணம், பவித்ரோத்ஸவம், தீபாரோபனம், வசந்தோத்ஸவம் மாசோத்ஸவம் நவநைவேத்திய கர்மா இவைகளை முன்பு கூறியபடி செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு பிராயச்சித்தம் ஜீரணோத்தாரணம் முதலியவை முன்பு போல் அனுஷ்டிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு உத்ஸவத்தில் கொடியில் மூஷிகத்தையோ விருஷபத்தையோ வரையவும், சிவோத்ஸவத்திலும், வினாயகருக்காக உத்ஸவம் நித்தியம் செய்யவும் என்று விசேஷம் கூறப்பட விநாயகர் உத்ஸவ விஷயத்தில் சக்ராஸ்திரம், திரிசூலாஸ்திரம், விக்னேசாஸ்திரம் இவற்றில் ஒன்றை ஏற்றுக் கொள்ளவும் என்று கூறப்படுகிறது. உத்ஸவ பிரதிமை லக்ஷணப்படி அமைக்கவும். உத்ஸவ விஷயத்தில் சொல்லப்படாத பலி திரவ்யம், ஹோமம், திரவ்யம் மற்ற எல்லாம் சிவனுக்கு கூறப்பட்டபடி செய்யவேண்டும் என்ற விஷயங்கள் கூறப்படுகின்றன. பிறகு கணேச மந்திரத்தினால் வச்யம், உச்சாடனம், வித்வேஷனம் மாரணம் ஆகிய கர்மாக்களையும் பவுஷ்டிக சாந்தி கர்மாக்களையும் ஸ்தம்பனம் முதலிய கர்மாக்களையும் சாதிக்கலாம் என கூறப்படுகிறது. கணேசனின் பிரதிஷ்டை எல்லா இடத்தில் பாலஸ்தாபனத்துடன் கூடியதாகவோ பாலஸ்தாபனம் இன்றியோ செய்யலாம் என விசேஷ முறை கூறப்படுகின்றன. முடிவில் சைவாலயம் அமைக்கும் முறையின் முதலிலோ விக்னேஸ்வரரையோ ஸ்தாபிக்கவும். இவ்வாறு நாற்பத்தி ஐந்தாவது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. அமைப்பு முறை முதற்கொண்டதாக வினாயகரின் பிரதிஷ்டையை கூறுகிறேன். பட்டணம், எட்டு திசைகள் அதன் முடிவு, அதன் இடைவெளி முதலிய இடங்களில் வினாயகர் ஆலய இருப்பிடமாகும்.

2. சிவாலயத்திலும், எட்டு திக்கிலும், விருப்பமுள்ள இடத்திலும் மண்டபம் முதலிய இடங்களிலும் நிழல் தரும் குளிர்ச்சியான மரங்களின் கீழ்பிரதேசங்களிலோ அல்லது எல்லா ஆலயத்திலுமோ

3. கடைவீதி, தேரோடும் வீதி, வீடு இவைகளிலோ, மற்ற எந்த இடத்திலேயும் அமைக்கலாம். வினாயகர்க்கு நமக்கு விருப்பமான திசையை நோக்கி யுள்ளதான முகம் அமைக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

4. பிறகு ஒரு முழம் முதல் முப்பத்தி மூன்று முழு சுற்றளவு உள்ளதாகவும் ஒரு பாகம் முதல் ஒன்பது பாகம் பூமி உடையதாக அணுக வேண்டும்.

5. விசேஷமாக கஜப்ருஷ்டம் போலும் மற்ற உருவமுடையதாகவோ திசைகளில் (கோபுரத்தில்) வினாயகரையுடையதாகவும் ஆக்னேயாதி கோணங்களில் மூஞ்சூறையுடையதாகவும் கோபுரம் அமைக்க வேண்டும்.

6. கணங்களையுடையதாகவோ, ஸ்கந்த ரூபங்களையுடையதாகவோ அமைப்பது அதமாலயம் ஆகும். முன்பு போலவே கர்பந்யாஸமும், ஆத்யேஷ்டிகை பூஜையுடன் கூடியதாக வேண்டும்.

7. இந்திராதி மூர்த்தியுடன் கூடியதாகவோ, மத்தியில் ஸ்தூபி கும்பத்துடன் கூடியதாகவோ அல்லாமலோ, முன் சொன்ன முறைப்படி ஆலய அமைப்புடன் கூடியதாகவோ அமைக்க வேண்டும்.

8. பிரகாரம் மண்டபமிவைகளுடன் கூடியதும், மண்டபம் முதலியவைகளால் அலங்கரிக்கப்பட்ட தாகவும், மண்டப உருவமாகவோ, கொட்டகைப் பந்தலமைப்பு உள்ளதாகவோ வினாயகரின் ஆலயத்தை அமைக்க வேண்டும்.

9. சுற்றிலும் பரிவார மூர்த்தி கூறப்பட்டுள்ளது. விசேஷமாக அந்த விபரமும் கூறப்படுகிறது. விச்வரூபர், விசாலாக்ஷர், அக்ஷயர், மதவிப்ரமர்

10. உன்மத்தர், லலிதன், பீமன், தீக்ஷ்ண தம்ஷ்ட்ரன் என்ற முறையாக வினாயகரின் அஷ்ட மூர்த்தீசர்களையோ அல்லது அவர்களை பீடரூபமாகவோ இந்திராதி திக்குகளில் உள்ளவர்களாக

11. முன்பு சொன்ன பிரகாரம் அமைக்கவும். திவாரத்தின் முன்பக்கம் மூஞ்சூறையும் திவாரத்தின் இருபக்கமும் விகடன், பீமன் என்ற திவார பாலகர்களை அமைக்க வேண்டும்.

12. நிர்மால்யதாரியான கும்ப சண்டரை ஈசான திக்கில் ஸ்தாபிக்கவும். ஆமோதன், ப்ரமோதன், ஸூமுகன், துர்முகன் என்றும்

13. அவிக்ணன், விக்னராஜன், பக்ஷ்யாசீ, பஞ்சஹஸ்தன் ஆகிய இவர்கள் அஷ்டமூர்த்திபர்கள் ஆவர், அவர்களை வேறு விதமாகவும் கூறப்படுகிறது.

14. ஹஸ்திவக்த்ரன், ப்ரலம்போஷ்டன், விக்னேசர், கணாதிபர், வினாயகர், ஏகதந்தர், பக்ஷ்ய ப்ரியன், அஹிமேகலர்.

15. ஆகிய இவர்கள் வினாயகரைப் போலுள்ளவர்களாக விக்னேச்வரனின் அஷ்ட மூர்த்திபர்களாவர். வாயிற்படியின் இருபக்கமிருக்கும் திவாரபாலகர்களை பூதரூபமாகவும் இரண்டுகை உடையவர்களாகவும்

16. இடது கையில் உலக்கையும், வலது கையில் தண்டத்தையும் தரித்தவர்களாகவும், உக்ரமான தித்திப் பற்களையுடையவராகவும், சிங்கத்தின் தலைமேல் ஒரு காலை வைத்திருப்பவர்களாகவும்

17. சிவந்த ரூபமும், ரவுத்ர உருவம், விகாரமான முகத்தை உடையவர்களாகத் திவாரபாலகர்களை அமைக்கவேண்டும். மூஷீகமானது, புகைவர்ணம், சிவந்த கண், அழகான தித்திப்பல் இவைகளையும்

18. நீண்டவால், நான்கு கால்கள், சலங்கை மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதாக அமைக்கவேண்டும். கும்போதரம், (கும்பசண்டர்) நான்கு கை, உளி, சூலம், கத்தி, தண்டம் இவைகளை தரித்தவராகவும்

19. சிவந்தவர்ணராயும், நன்கு பிரகாசிப்பவராகவும், பத்ர பீடத்தில் அமர்ந்திருப்பவராக அமைக்கப்படவேண்டும். வெண்ணிறமானவர்களாகவும், பெரிய சரீரம், உக்ரமானவர்களாகவும் பலவித அழகான ஆடை தரித்தவர்களாகவும்.

20. பாசம், அங்குசம், தன்னுடைய தந்தம், துடையில் வைத்த கை இவைகளையுடைய கைகளை உடையவர்களாயும் வினாயகமூர்த்திக்கு எதிர்நோக்கி உள்ளவர்களாக பரிவார தேவதைகளை அமைக்க வேண்டும்.

21. பரிவார தேவதைகளின் நடுவில் ÷க்ஷத்ர பாலகர்கள் கூறப்பட்டுள்ளன. பலிபீடம் மஹாபீடம் முன்பு போல் அமைக்க வேண்டும்.

22. பீடத்தின் எட்டுதளங்களிலும் ஆமோதன் முதலிய எட்டு மூர்த்திகளை பூஜிக்கவேண்டும். கர்ணிகை பூதேசனையும் பீடத்தின் வெளியில் திக்பாலர்களையும், தசாயுதங்களையும் பூஜிக்க வேண்டும்.

23. ஹே பிராம்மணோத்தமர்களே, வினாயகரின் அமைப்பு முறை சுருக்கமாக கூறப்படுகிறது. கேளுங்கள், கற்சிலை முதலான திரவ்யங்களால் உத்தமமான பஞ்சதாளம் என்ற அளவால் வினாயகரை செய்ய வேண்டும்.

24. கர்பக்ருஹ அளவில் ஐம்பதாக பிரிக்கப்பட்ட இடத்தில் ஐந்தாவது அம்சத்திலிருந்து ஒருபாகம் அதிகமாக முப்பதாவது பாகம் வரையில் உள்ள அளவு கர்பக்ருஹ அளவாக உதாரணம் காட்டப்பட்டுள்ளது.

25. தூண்களின் அளவாலும், வாயிற்படி அளவாலும் கர்பக்ருஹ அளவு செயற்பாலது. லிங்கம் முதலியவைகளின் அளவுப்படியே அல்லது பிம்ப லக்ஷணப்படியோ செய்தல் வேண்டும்.

26. கேசம் முதல் கால் அடிபாகம் வரை அறுபத்தி நான்கு அம்சமாக பிரிக்க வேண்டும். தலைப்பாகை பாகம் ஓரம்ச மாத்ரம், கேசம் இரண்டு அங்குலத்தினாலும்

27. பன்னிரண்டங்குலத்தால் முகம், இரண்டங்குலத்தால் கழுத்துமாக கூறப்பட்டுள்ளது. அதிலிருந்து இதயம் வரை பதினொன்றங்குலமாகும்.

28. ஹ்ருதயத்திலிருந்து தொப்பூழ்வரை பன்னிரண்டங்குலம், குஹ்ய பிரதேசம் ஐந்து அங்குலமாகும். அவ்வாறே முழந்தாள் வரை ஐந்தங்குலம், முழந்தாளின் நீளம் மூன்றங்குலமாகும்.

29. முழந்தாளின் கீழ் பிரதேசம், துடையின் சமமான அளவாகும். பாததளத்தின் உயரம் இரண்டு மாத்ரையாகும். கேசத்திலிருந்து கண் சூத்ரம் வரை நான்கங்குலமாகும்.

30. தந்தத்தின் அடிபாகத்திலிருந்து முழந்தாள் வரையில் துதிக்கையின் நீளமாகும். தந்தத்தின் நீளத்திலிருந்து நான்கு மாத்திரையளவு அந்த நுனியின் அளவாகும்.

31. வலது அல்லது இடது பாகத்தில் ஒரு தந்தம் அமைக்கவும். தலையில் கும்ப சுற்றளவு ஒவ்வொன்றும் மூன்றங்குல சுற்றளவாகும்.

32. கண்ணானது காதின் அடிபாகம் வரையிலாக நான்கு அங்குலமாக கூறப்படுகிறது. பத்து மாத்ரையளவில் காதின் அகல பாகமும், ஒன்பது அங்குலம் காதில் நீளமாகவும் செய்ய வேண்டும்.

33. கையிடுக்கு இரண்டின் இடைவெளி பதினைந்து அங்குலமாக கூறப்பட்டுள்ளது. கையிடுக்கிலிருந்து மேல்பக்கவாட்டுக் கையின் இடைவெளி ஆறங்குலமாகும்.

34. நடுசரீரம் (தொந்தியின்) சுற்றளவு பதினான்கு அங்குலமாகும். இதயத்திலிருந்து தொப்பூழ் அடிபிரதேசம் வரை பத்து அங்குலமாக கூறப்பட்டுள்ளது.

35. நாபிக்கு கீழ் பிரதேசத்திலிருந்து குஹ்ய பிரதேசம் வரை எட்டங்குலமாகும். இரண்டு துடையும் எட்டங்குலம், முழந்தாள் மூட்டு மூன்றங்குலமாகும்.

36. இரு முழந்தாளும் காலின் அடிபாகம் வரை எட்டங்குலமாகும். கஜவக்த்ரனாகவும் கணங்களுக்கு அதிபதியாயும், பூதாகார உருவ அமைப்பும் பெரிய வயிறு படைத்தவராகவும்

37. பாம்பை பூணூலாக அணிந்தவராகவும், கனத்த உருண்டையான துடை, முழந்தாள் உடையவராகவும், கருப்பானவரும் (நீலநிற ஆம்பல் பூபோல் பிரகாசிப்பவரும்) நான்கு கைகளால் பிரகாசிப்பவருமாகவும்

38. வலப்பாக அல்லது இடப்பாகத்தில் வளைந்த துதிக்கையையுடையவராகவும் தாமரை பீடத்தில் அமர்ந்திருப்பவராகவும், தன்னுடைய வலது பக்க இரண்டு கையில் தன் தந்தத்தையும் கோடாலியையும் தரித்திருப்பவராகவும்

39. லட்டு, அக்ஷமாலையையோ, நீலோத்பவ புஷ்பத்தையோ இடது கையில் வைத்திருப்பவராகவும் சிவப்பு வஸ்திரம் அல்லது கருப்பு வஸ்திரம் அல்லது மஞ்சள் வஸ்திரம் தரித்தவராகவோ

40. மஞ்சள் சட்டையணிந்தவராகவும், கிரீட மகுடத்தால் பிரகாசிக்கிறவராயும், வெண்மையான பூணூலையணிந்தவரும், எல்லா ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவறாகவும்

41. தன் கொம்பான தந்தத்தையும் அங்குசத்தையும் வலது கரங்களிலும் இடது கைகளில் பாசம், லட்டு இவற்றை தரித்திருப்பவராகவும், நின்ற கோலத்திலோ அல்லது அமர்ந்த கோலத்திலோ வினாயகரை அமைக்க வேண்டும்.

42. மூன்று கண்களால் பிரகாசிப்பவராகவோ, இரண்டு கண்களை உடையவராகவோ, தாமரையிலமர்ந்த கோலத்திலோ, பீடத்திலமர்ந்தவாறோ, மூஞ்சூறின் மேலமர்ந்தவாறோ

43. விருப்பப்பட்ட ஆஸனத்திலமர்ந்தவாறோ, திருவாசியால் அலங்கரிக்கப்பட்டவராகவோ, சக்தியுடன் கூடியவராகவோ, தனிமையானவறாகவோ வினாயகரை வடிவமைக்க வேண்டும்.

44. வினாயகர் வலது இடதுபாகம் முறையே பாரதீ, ஸ்ரீ என்ற இரண்டு சக்திகளோடு கூடியவராகவோ அல்லது ஒரு சக்தியோடு கூடியவராகவோ அமைக்கவும், அந்த தேவியின் (லக்ஷணம்) அடையாளம் கூறப்படுகிறது.

45. ஆஸநத்தில் அமர்ந்தவளாகவும், ரத்ன கிரீடமகுடங்களால் அலங்கரிக்கப்பட்டவளாகவும் கரு நிறமுள்ளவளாகவும் உள்ள சக்தியை தரித்திருப்பராயும் திசைகளை ஆடையாக உடைவரும் ஆன

46. வினாயகரின் மடியில் அமர்ந்தவளும் எல்லா ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளும் திசைகளை வஸ்திரமாக உடையவளும், அழகான திருமுகத்துடனும் இரண்டு கைகளை உடையவரும்

47. எல்லா அவயவ ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளும், விக்னேச்வரீ என்ற பெயரையுடையவளும் இடது கையில் பாசமும் வலது கையால் (வினாயகரின்) குஹ்ய பிரதேசத்தை

48. தொட்டுக் கொண்டிருப்பவளும் வினாயகரும், அம்பாளின் குஹ்ய பிரதேசத்தை தொட்டுக் கொண்டு இருப்பவராகவும், ஆன மந்த்ர நாயக வினாயகரை தியானிக்க வேண்டும். நான்கு கை, முக்கன், பாசம், அங்குசத்தை தரித்திருப்பவரும்

49. கரும்பு தரித்த கையுடன் இடது கையால் தேவி குஹ்யத்தையும் துதிக்கையாலும் குஹ்யத்தையும் தொட்டு அல்லது கரும்பையோ தொட்டுக் கொண்டதாகவோ

50. இவ்வாறாக வினாயகரை பாவித்து அந்த மந்திரங்களால் பிரதிஷ்டை செய்ய வேண்டும். இரண்டாவது வரிசையான கவர்கத்தின் மூன்றாவது எழுத்தான ஹ வும் முதல் ஸ்வரமான (அ)வும்

51. பிந்து நாதம் சேர்ந்த ம் என்ற எழுத்தும் விநாயகரின் பீஜ மந்திரமாகும் பதிமூன்றாவது அச்செழுத்தின் முடிவான அவு என்ற உயிரெழுத்தும் சேர்ந்ததாகவும் வினாயகரின் பீஜ மந்திரத்தை உச்சரிக்கலாம்.

52. கவர்க்கத்தின் மூன்றாவது எழுத்தான க் ம் ர என்ற எழுத்துடன் ஈ என்ற உயிரெழுத்தும் சேர்ந்ததாகவும் க்ரீ என்றும் ஹ்ருதய எழுத்தான ஹகாரத்துடன் ரீ என்று சேர்த்து ஹ்ரீ என்றும்,

53. லக்ஷ்மீ பீஜம் என்கிற ஸ்ரீம் வாக்பீஜமான க்லிம் சேர்ந்ததாக உபயோகிக்கவும். பஞ்ச பிரம்ம ஷடங்க மந்திரங்களை மூலமந்திரத்தை அனுசரித்து கூற வேண்டும்.

54. வக்ரதுண்டாய ஹும் என்று ஹ்ருதய மந்திரங்களால் ஹ்ராம் என்ற எழுத்தாலான ஆறு எழுத்துக்களை கொண்ட நம: ஸ்வாஹா, வஷட், ஹூம், வவுஷட் ஆகியவை முடிவுடன் கூடியதாக ஹ்ருதயம் முதலான மந்திரங்களை

55. பட்காரத்துடன் கூடியதாகவும் கூறவும். இரண்டாவது வர்க்கத்தின் மூன்றாவது எழுத்தான க் அதனுடன் ஆறாவது வர்க்கத்தின் முடிவான ம் சேர்த்து

56. ஏழாவது எழுத்து வர்க்கத்தின் மூன்றாவது எழுத்தான ல் ம், அதே வர்க்கத்தின் நான்காவது, எழுத்தான வ் அந்த வர்க்கத்தின் இரண்டு, ஒன்றாவது எழுத்தான ர ம், ய ம் ஆகிய இந்த ஐந்து (க்,ல்,வ்,ர்,ய்) இவைகளுடன் பதினான்காவது உயிரெழுத்தான அவு என்ற எழுத்துடன்

57. பிந்து நாதமானம் சேர்ந்ததே தசாக்ஷரம் என்ற பீஜமந்திரமாகும். க காரத்துடன் பிரம்ம மந்திரம், அங்கமந்திரங்களை முறையாக கூறவும். (கவும், லவும், வவும், ரவும், யவும்)

58. விரி என்ற சப்தத்தை மூன்று முறை கூறி (விரி விரி விரி) கணபதிம் என்ற சொல்லையும் வரதம் வரத என்ற சொல்லையும் வரத, வரத என்றும் கூற வேண்டும்.

59. ஸர்வ லோக வசம் என்பதுடன் ஆநய என்ற பதத்தையும் ஸ்வாஹா என்ற பதத்தையும் கூறுவது இஷ்டமாகும். இது சக்தி கணபதியின் மூலமந்திரமாகும். (ஓ விரி விரி கணபதே வரத வரத ஸர்வ லோக வசமாநய ஸ்வாஹா)

60. ஓம்காரம் முதற்கொண்டு ஹ்ருதயபீஜ மந்திரமான காம் கா என்ற எழுத்துடன் சேர்ந்ததாக ஹ்ருதயாதி மந்திரங்களை கூற வேண்டும்.

61. கணசாதி பதத்துடன் கூடியதும் பிரதான மந்திரமாகும். (கணேசாதிப:), இக்ஷüததி ஸ்வர்ண த்வீபம், கல்பத்ருமம்

62. ஸிம்மாஸநம் இவைகள் சக்தி கணபதியின் ஆசன மந்திரங்களாகும். வலது கையின் அடிபாகத்தை மூக்கின் மேல் வைத்து

63. சிறிது நுனியை வளைப்பதுபோல் செய்வது கணேச்வரீ முத்ரையாகும். வேறான மூலமுத்ரை கூறப்படுகிறது. நடுவில் விரலை விரித்து

64. மோதிர விரலையும், ஆள்காட்டி விரலையும் சிறிது வளைத்து கட்டை விரலை கொம்பு போல் செய்து காண்பிப்பது போல் மூலமுத்ரையாகும்.

65. இந்த மூலமுத்ரையால் உத்தமமான ஆசார்யன் எல்லா கிரியைகளிலும் உபயோகிக்கவும். பிறகு அங்குரார்ப்பணத்துடன் கூடியதாக பிரதிஷ்டையை செய்ய வேண்டும்.

66. முன்பு கூறப்பட்ட பிரதிஷ்டாகாலத்தில் பீடத்தில் நவ ரத்ன ந்யாஸமோ இல்லையெனில் பஞ்ச ரத்ன ந்யாஸமோ, அல்லது தங்கமோ, தங்க ஊசியுடன் கூடியோ

67. முன்பு கூறியபடி முறையாக இந்திராதி தேவர்களை நினைத்து நியாஸம் செய்யவும். பிறகு (பத்ம) ஜலாதிவாசம் செய்து நயனோன்மீலனம் செய்ய வேண்டும்.

68. பாத்திரத்திலுள்ள நெய், தேன் இவைகளால் ஹ்ருதய மந்திரத்தினாலும் தங்க ஊசியால் நனைத்து நயோன்மீலனத்தை திரையிட்டுச் செய்து தான்யங்களை காண்பிக்க வேண்டும்.

69. வினாயகர் தேவியுடன் கூடி இருந்தால் தேவிக்கும் தனியாக நயோன்மீலனம் செய்யவும். பிறகு பிம்பசுத்தி செய்து கிராம பிரதட்சிணம் செய்ய வேண்டும்.

70. லம்ப கூர்ச்சத்துடன் கூடியதாக ஜலாதிவாசம் ஹ்ருதய மந்திரத்தினால் செய்யவும். (பிம்பத்தை) சுற்றிலும் அஷ்டதிக்பாலர்கள் அதிஷ்டிதமான எட்டு கும்பங்களை ஸ்தாபிக்க வேண்டும்.

71. யாகசாலைக்காக மண்டபம் ஆலயத்தின் முன்போ இருபக்கத்திலோ அமைக்க வேண்டும். தெற்கிலோ மேற்கிலோ, வடக்கிலோ, அழகுபடுத்தப்பட்ட மண்டபம் அமைக்க வேண்டும். பத்ம குண்டத்துடன் கூடியதாக இருக்க வேண்டும்.

72. குண்டங்கள் ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கையில் அமைக்கவேண்டும். வ்ருத்தகுண்டம் சதுரஸ்ரம், அஷ்டாஸ்ரம் முதலிய குண்டங்களையோ அமைக்க வேண்டும்.

73. எல்லா யாகத்திலும் வ்ருத்த குண்டம் பிரதானமாகும். முன்பு கூறப்பட்ட முறைப்படி மண்டபம் அமைக்க வேண்டும்.

74. சில்பியை திருப்தி செய்வித்து அனுப்பி பிராம்மண போஜனம், புண்யாஹவாசனம் செய்து பிறகு வாஸ்து ஹோமம் செய்ய வேண்டும்.

75. முன்பு கூறியமுறைப்படி பூபரிக்ரஹமும் செய்து, ஜலாதி வாசத்திலிருந்து விநாயகரை எடுத்து வந்து ஸ்நான வேதிகையில் வைக்க வேண்டும்.

76. வடக்கிலுள்ள மண்டபத்தில் முன்புகூறிய முறைப்படி ஸ்நபநம் செய்யவும். ரக்ஷõபந்தனம் செய்து முடிவில் மந்திரந்யாஸம் செய்ய வேண்டும்.

77. சயன வேதிகையில் ஸ்தண்டிலத்தின் மேல் மயிற்தோகை முதலான திரவ்யங்களால் ஐந்து வித சயனம் அமைக்கவும் அல்லது சுத்த வஸ்திரங்களால் சயனம் கல்பித்து விநாயகரை சயன அதிவாஸம் செய்யவும்.

78. சிவப்பான இரண்டு வஸ்திரங்களால் போர்த்தி கும்பந்யாஸம் செய்யவும். வினாயகருடைய தலைப்பக்கம், நூல்சுற்றி கூர்ச்சத்துடன் கூடியதாகவும்

79. கும்பத்தை நல்ல வஸ்திரம், பலா, மாவிலை, அரசிலையுடன் கூடியதாகவும், பஞ்சரத்னோதகமுமோ அல்லது ஸ்வர்ணோதம், மா÷ஷாதகமுமோ

80. மாதுளம் பழத்துடன் கூடியதான எட்டு கடங்களை சுற்றிலும் ஸ்தாபிக்கவும். வஸ்திரம் தங்கம், சந்தனம், புஷ்பம் இவைகளுடன் கூடியதாக பூஜிக்க வேண்டும்.

81. பூதசுத்தியுடன் கூடியதாக வித்யா தேஹ கல்பனமும், கணேசரை ஆவாஹித்தவராகவும் முன்பு கூறப்பட்ட தியான முறையுடன் சந்தனம், புஷ்பம் இவைகளை கொண்டு பூஜிக்க வேண்டும்.

82. பரிவார கும்பங்களில் ஹஸ்தி வக்த்ரன் முதலானவர்களையோ அல்லது ஆமோதன் முதலானவர்களையோ, நைவேத்யம் வரையிலாக உத்தமமான ஆசார்யன் பூஜிக்க வேண்டும்.

83. இரண்டு தேவியுடன் இருந்தால் இரண்டு பக்கத்திலும் வர்த்தனீ கும்பத்தை ஸ்தாபிக்கவும். ஒரே தேவியுடன் இருந்தால் வடக்கு திக்கில் மட்டும் ஒரு கும்பத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

84. ஆத்மதத்வம், வித்யாதத்வம், சிவதத்வங்களை அதன் அதிபர்களுடன் கூடியதாக பூஜிக்க வேண்டும்.

85. கணேசன் முதலான தத்வ தத்வேஸ்வரர்களை சதுர்த்தி விபக்தியை முடிவாக கொண்டு அதனுடன் நம: என்ற பதத்துடன் கூடியதாக பூஜிக்கவும். இந்த முறைப்படியே ஆத்மதத்வ, வித்யா தத்வ, சிவதத்வேஸ்வரர்களையும் பூஜிக்க வேண்டும்.

86. மூர்த்தி மூர்த்தீச்வரர்களையும் பூஜிக்க மூர்த்திகள் முன்பு கூறியபடியாகும். இந்திராதி திக்குகளில் ஹஸ்தி வக்த்ராதிகளையோ, ஆமோதாதிகளையோ மூர்த்தியதிபர்களாக பூஜிக்க வேண்டும்.

87. பஞ்சகுண்ட பக்ஷத்தில் மூர்த்தீசர்கள் எட்டு மூர்த்தீசர்களில் முதன்மையாக உள்ள ஐந்து மூர்த்தீசர்களாகும். மூர்த்தி, பஞ்சப்ரம்மம், ஷடங்கங்கள், வித்யாதேஹம், மூலமந்திரம் இவைகளையும் பூஜிக்க வேண்டும்.

88. சந்தனம், புஷ்பாதி திரவ்யங்களால் மூர்த்தி கும்பங்களை பூஜித்து ஹோமம் செய்யவேண்டும். முன்பு கூறப்பட்டுள்ள ஆபரணங்களுடன் கூடிய ஆதிசைவ குலத்தில் உதித்த (பிறந்த)

89. ஆசார்யன் மூர்த்தீபர்களுடன் கூடி ஹோம கர்மாவை செய்யவும். நான்கு திசைகளில் நான்கு வேதபாடங்களையும் ஆக்னேயாதி கோணங்களில் மூலமந்திர ஜபமும் செய்ய வேண்டும்.

90. குண்டஸம்ஸ்காரம், அக்னி ஸம்ஸ்காரம் இவைகளை அக்னிகார்ய முறைப்படி செய்யவேண்டும். கிழக்கு முதலான திசைகளில் தத்புருஷன் முதலான மூர்த்தி மந்திரங்களையும் ஆக்னேயம் முதலான கோணங்களில் ஹ்ருதயம் முதலான மந்திரங்களையும்

91. பிரதான குண்டத்தில் ஈசனான விநாயகரையும் எல்லா தேவர்களையும் மூர்த்தி மூர்த்தீச்வரர்களுடன் ஆவாஹித்து சந்தனம் முதலான திரவ்யங்களால்

92. சமித்து, நெய், அன்னம், பொறி எள், அப்பம், வெல்லம், யவை முதலிய திரவ்யங்களால் த்ருப்தி செய்விக்கவேண்டும். தத்வ தத்வேச்வரன், மூர்த்தீ மூர்த்தீ ச்வரர்களுக்கும் ஹோமம் செய்யவும்.

93. சாந்தி கும்ப பிரோக்ஷணம், அந்தந்த மந்திரங்களின் ஜபம், தர்ப்பையால் ஸ்பரிசிப்பது ஆகியவை ஒவ்வொரு பாகத்திலும் செய்ய வேண்டும்.

94. பிறகு அதிகாலையில் எழுந்து மூர்த்திபர்களுடன் கூடி ஆசார்யன் சுத்திகளை முடித்து கொண்டு சயனாதி வாசத்திலிருந்து விநாயகரை எடுத்து கும்பம், அக்னி இவைகளை பூஜிக்க வேண்டும்.

95. பிராயச்சித்த நிமித்தமாக அகோர மந்திரத்தை நூறு ஆஹுதி செய்யவும். பூர்ணாஹுதி செய்து ஆசார்யன் ஆலயத்தை அடைய வேண்டும்.

96. மானுஷ பிம்பம், தெய்விக பிம்பமாக இருப்பின் முன்புபோல் சம்ஸ்காரங்களை செய்யவேண்டும். பிரம்ம சிலையை முன்பு கூறிய மந்திரத்தினால் நவ ரத்னம், ஓஷதிகள் இவைகள் நிறைந்ததாக செய்ய வேண்டும்.

97. பிறகு விநாயகரை பிரம்ம சிலையுடன் கூடியதாக பிரதிஷ்டை செய்ய வேண்டும். முன்புபோல் விநாயகரின் மூலமந்திரத்தை உச்சரித்துக் கொண்டு விநாயகரை ஸ்தாபித்து

98. நல்ல முஹூர்த்த லக்னத்தில் மந்திர ந்யாஸம் செய்யவும். சல உற்சவ பிம்பமாக இருப்பின் ஸ்நான வேதிகையிலேயே மந்திரநியாஸம் செய்ய வேண்டும்.

99. பிம்பத்தின் முன்பாக கடங்களை வைத்து கும்பத்திலிருந்து மூல மந்திரத்தை பிம்ப ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும். மற்ற கும்பங்களில் இருந்து மந்திரங்களால் பீடத்தை சுற்றிலும் நியாஸம் செய்ய வேண்டும்.

100. அந்தந்த கும்பதீர்த்தங்களால் அந்தந்த தேசத்தில் அபிஷேகம் செய்யவும். தத்வதத்வேச மூர்த்தீ மூர்த்தீஸ்வர நியாஸம் முன்பு போல் செய்ய வேண்டும்.

101. முடிவில் ஸ்நபனாபிஷேகமும், நைவேத்யம், உற்சவம் (திருவீதிஉலா) செய்ய வேண்டும். விநாயகர், பாரதி, ஸ்ரீ என்ற இருதேவிகளுடன் கூடிஇருந்தால்

102. அதற்கு சொல்லப்பட்ட முறைப்படி உத்தமமான ஆசார்யன் பிரதிஷ்டை செய்ய வேண்டும். விக்னேச்வரீ என்ற தேவியுடன் கூடி இருந்தால் அந்த தேவியின் பெயரால் ஸ்தாபனம் செய்ய வேண்டும்.

103. கும்பத்தின் பக்கத்திலுள்ள வர்த்தினீ மந்திரத்தால் பூஜிக்கவும். அம்பாளின் ஹ்ருதயத்தில் விசேஷமாக இந்த மந்திரத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

104. இவ்வாறாக விநாயக பிரதிஷ்டையை யார் செய்கிறானோ அவன் புத்திமானாகவும் ஆகிறான், ஆயுளை விரும்புபவன் ஆயுளை அடைகிறான், தனத்தை விரும்புபவன் தனவான் ஆகிறான்.

105. கல்வியை விரும்புபவன் சுத்தமான கல்வியையும், அழகான பெண்ணை (ஸ்திரீ) விரும்புபவன் அழகான பெண்ணையும், புத்திரர்களை, சவுபாக்கியம், ஆரோக்யம், புகழ், வீர்யம், ஐஸ்வர்யம், சுபம் இவைகளை இந்த லோகத்திலும் அனுபவித்து

106. மேலுலகத்தில் மோக்ஷத்தையும் வினாயகருடைய ஸ்தாபனத்தால் அடைகிறான். விநாயகரின் பூஜை முறையை சுருக்கமாக கூறுகிறேன். ஹேமுனிபுங்கவர்களே கேளுங்கள்,

107. கட்டாயமாக காலையில் எழுந்து (சவுசம்) காலைக் கடன்களையும், ஸ்நானத்தையும் முடித்து ஸந்தியா வந்தனம், மந்திரதர்ப்பணம் இவைகளை முன்பு போல் செய்து

108. ஆலயத்தை அடைந்து நமஸ்காரம் செய்யவும், ஆசமனம் செய்து ஸகளீகரணம் ஸாமாந்யார்க்கியம் உடைய ஹஸ்தத்தினால் ஆசார்யன்

109. திவாரத்தை (வாயிற்படி) ஜலத்தால் பிரோக்ஷணம் செய்து விகடனையும், பீமனையும் பூஜித்து, தேவருக்கு கூறப்பட்ட விமலன், சுபாஹூ இவர்களையும் பூஜிக்க வேண்டும்.

110. திரையை ஹ: என்று கூறி அர்ச்சித்து வலது காலால் நுழைந்து வாஸ்த்வீசனை பூஜித்து, தன்னுடைய ஆசனத்தில் வடக்குமுகமாக அமர்ந்து

111. ஆத்மாவை சக்தியுடன் இணைத்து உறுதி நிலை தளர்ந்ததாக பாவிக்க வேண்டும். சக்தியிலிருந்து உண்டான அம்ருதத்தினால் நனைந்த சரீரமுடையவனாக (கூட)

112. அஸ்திர மந்திரத்தினால் கையை சுத்தி செய்து கொண்டு சந்தனத்தினால் அலங்காரம் செய்து கொண்டு ஈசன், தத்புருஷன், அகோரன், வாம தேவ, ஸத்யோஜாத மந்திரங்களை ஐந்து விரல்களிலும் நேத்ர மந்திரத்தையும் உள்ளங்கையிலும்

113. மூலமந்திரத்தையும் உள்ளங்கையிலும், நியஸித்து ஹ்ருதயம், சிரஸ், சிகாகவசம், என இந்த மந்திரங்களை முறையாக பெரிய விரல் முதற்கொண்டு விரல் நுனிகளில் நியாஸம் செய்து மூலமந்திரத்தையும்

114. வித்யாதேஹத்தையும் நியாஸம் செய்து அந்தந்த மந்திரங்களால் சரீரந்யாஸம் செய்து பிறகு விநாயகருக்கு செய்வது போல் ஏக திரிம்சத்கலாந்யாஸம் செய்து கொள்ளவும்.

115. அக்ஷரந்யாஸம் செய்து கொண்டோ, செய்யாமலோ இவ்வாறாக மந்திர மயமான சரீரம் ஏற்படுத்தி விநாயகரை போன்று தன்னை தியானித்து அந்தர்யாகம் செய்து கொள்ளவும்.

116. அல்லது சிவமந்திரங்களால் சிவ சரீர பாவனை செய்து கொள்ள வேண்டும். விநாயகரை ஹ்ருதயம், நாபி, த்வாதசாந்தமான பிந்து ஸ்தானம் இவைகளில் பீஜுத்து ஹோமம் செய்து தியானம் செய்து (ஹ்ருதயம் பூஜை, நாபிஹோமம், பிந்துதியானம்)

117. பிறகு ஸ்தான சுத்தி செய்து, விசேஷார்க்யம் தயார் செய்து ஸமர்பிக்க வேண்டும். முன்பு கூறப்பட்ட திரவ்யங்களுடன் கூடியதாகவோ சந்தனம், புஷ்பம், அக்ஷதை இவைகளுடன் கூடியதாகவோ

118. பாத்யம், ஆசமனத்தையும் அவ்வாறே அர்க்யத்தை மட்டுமோ தயார் செய்து கொண்டு அர்க்ய ஜலத்தினால் ஒவ்வொரு த்ரவ்ய சமூகத்தையும் பிரோக்ஷணம் செய்து

119. ஹ்ருதயம் முதலான மந்திரங்களால் அபிமந்திரிக்கப்பட்ட ஆத்மாவை எல்லா தேவர்கள் அதிஷ்டிதமாக ஸ்மரித்து, மந்திரசுத்தி, பிம்ப சுத்தியையும் செய்யவும்.

120. நிர்மால்ய பூஜையை செய்து வக்ரதுண்டாய வித்மஹே என்றும் ஹஸ்திவக்த்ராய தீமஹி என்றும் பிறகு

121. தன்னோ தந்தி என்ற பதமும் பிறகு ப்ரசோதயாத் என்ற பதத்தையும் சேர்த்து கூறி சாமான்யார்க்யத்தால் பிரோக்ஷித்து பூஜிக்கவும். (வக்ரதுண்டாய) வித்மஹே ஹஸ்திவக்த்ராய தீமஹி, தந்தோ தந்தி - ப்ரசோதயாத்

122. ஹ்ருத மந்திரத்தினால் நிர்மால்ய புஷ்பத் த்ரவ்யங்களை எடுத்து வெளியில் உள்ள நிர்மால்யதாரீ கும்பசண்டரிடம் ஸமர்ப்பிக்க அல்லது வெளியில் போட்டு விட்டு முன்பு கூறியபடி பிம்ப சுத்தி செய்யவேண்டும்.

123. உலோக பிம்பமாயிருப்பின் பர்வ காலங்களில் அபிஷேகம் செய்ய வேண்டும். சித்திரபிம்பம் முதலியவைகளுக்கு கண்ணாடியில் பூஜை செய்யும் க்ரியையால் சுத்தி ஏற்படுவதாக எண்ண வேண்டும்.

124. அஸ்த்ர மந்திரத்தினால் இளங்காற்றாலோ விசிறியாலோ, சித்திராதி பிம்பங்களை சுத்தி செய்ய வேண்டும். இவ்வாறாக ஆத்ம, பூ, த்ரவ்ய, மந்திர, பிம்ப சுத்தியாகும்.

125. மத்தியில் ஆஸனம் கல்பித்து பிரணவம், தர்மாதிகளையும், அதர்மாதிகளையும், அதச்சதனம், ஊராத்வச்சதனத்தையும் மத்தியில் பத்மத்தையும்

126. பிரணவயமான தீர்த்தத்தில் பத்ம கர்ணிகையை மஞ்சள் நிறமாக பாவித்து பூஜிக்க வேண்டும். அம்பாளுடன் கூடி இருந்தால் அதற்கு சொல்லப்பட்ட முறைப்படி ஆஸனம் அமைத்து பூஜிக்க வேண்டும்.

127. பிறகு கணாசநாய என்றும் கணமூர்த்தயே என்றும் ஆவாஹித்து கணபதி முன்புபோல் மந்திரங்களால் வித்யாதேஹம் கல்பித்து

128. பிரணவத்துடன் விக்னேச மூலமந்திரத்தினால் ஆவாஹனம் செய்து ஹ்ருதய மந்திர ஸம்புடிதமாக புஷ்பாஞ்சலி ஹஸ்தமாக பிம்பத்தில் சேர்க்க வேண்டும்.

129. ஹ்ருதய மந்திரத்தினால் நிஷ்டுரையால் முதலானவை செய்து அவகுண்டனமும் செய்யவும், ஹ்ருதயம் முதல் அஸ்திரம் வரை உள்ள மந்திரங்களால் முத்ரைகளை காண்பித்து மஹாமுத்ரையையும் காண்பிக்கவும்.

130. ஹ்ருதய மந்திரத்தினால் பாதங்களில் பாத்யமும், முகத்தில் ஆசமனமும், ஈசான வினாயகரை ஸ்மரித்து (தலையில்) அர்க்யமும் கந்த புஷ்பதூபமும் கொடுக்க வேண்டும்.

131. ஹ்ருதய மந்திரத்தினால் பஞ்சாம்ருதத்துடன் கூடியதாகவோ, அல்லாமலோ ஸ்நானம் செய்விக்க வேண்டும். வஸ்திரத்தால் பிம்பத்தை துடைத்து பிம்பத்திற்கு வஸ்திரம் ஸமர்பிக்க வேண்டும்.

132. முகத்தில் ஆசமனம் கொடுத்து சந்தனம், அகில், கோரைகிழங்கு, பச்ச கற்பூரம் இவைகளின் தூள்களுடன் சேர்ந்ததாகவோ அல்லது சந்தனம் மட்டுமோ ஸ்வாமிக்கு சாற்றி (அர்பணித்து)

133. கருமையான அகிலுடன் கூடிய தூபத்தையோ அல்லது வெட்டிவேர், சந்தனம், நிர்யாஸம் என்ற தூப திரவ்யத்தையும் அதனுடன் கற்பூரமிவைகளுடன் கூடி ஹ்ருதய மந்திரத்திற்கு தூபம் கொடுத்து

134. பலவிதமானதும், வாஸனையுள்ளதும், எல்லா ருதுக்களிலும் உண்டாவதும், (தற்போது) அப்பொழுது மலர்ந்ததுமான புஷ்பங்களை (பூ) முன்பு போல் வினாயகர்க்கு அர்ப்பணிக்க வேண்டும்.

135. நல்லெண்ணையாலோ, நெய்யாலோ பிரகாசிக்கின்ற தீபத்தை ஹ்ருதய மந்திரத்தினால் ஸமர்பித்து, வெண் பொங்கல் முதலியவைகளுடன் கூடிய நைவேத்யத்தை நிவேதனம் செய்ய வேண்டும்.

136. சந்தனம் முதலியவைகளின் அளவு மேற்குத்வார பூஜையில் கூறப்பட்டுள்ளபடி ஏற்றுக் கொள்ள வேண்டும். பிறகு தூப தீபத்தின் முடிவில் ஆவரண பூஜையை செய்ய வேண்டும்.

137. ஆக்னேயம், நைருதி, வாயு, ஈசான திக்குகளில் ஹ்ருதயம் முதலான மந்திரங்களையும் அதன் வெளியில் ஹஸ்தி வக்த்ரன், ஆமோதன் முதலானவர்களையும் பிறகு

138. அதன் வெளியில் இந்திராதிகள், தசாயுதங்களையும் நன்றாக பூஜிக்கவும். ஒன்று, இரண்டு, மூன்று என்ற எண்ணிக்கையுள்ள ஆவரணங்களாலோ விநாயகரை பூஜித்து

139. மறுபடியும் தூப, தீபம் மந்திர ஜபங்களை செய்யவும். நைவேத்யம், பலி ஹோமங்களை முன்பு கூறப்பட்டுள்ளபடி செய்ய வேண்டும்.

140. புரசமித்து நெய், அன்னம், பொறி, அவல் இவைகளை மூலமந்திரத்தினால் நூறு ஐம்பது, பத்து என்ற எண்ணிக்கைளிலோ ஆசார்யன் ஹோமம் செய்ய வேண்டும்.

141. மூல மந்திர ஆஹூதியின் பத்தில் ஒரு பங்காக அங்க மந்திரங்களால் ஹோமம் செய்யவும். பிறகு நித்யோத்ஸவம் விநாயகர் உத்ஸவ பேரத்தினால் செய்யவும்.

142. முன்பு கூறிய முறைப்படி அந்த பிம்பத்தில் வினாயகரை பூஜிக்கவும். புஷ்பம், அன்னம், அக்ஷதை ஆகிய லிங்க உருவங்களில் ஹ என்று கணாஸ்திரம் என்ற அஸ்திரத்தை பூஜிக்கவும்.

143. நித்யோத்ஸவம் சலபேர பிம்பத்துடன் கூடியதாகவோ அல்லாமலோ செய்யவும். முன்பு கூறிய முறைப்படி ஆலய (பிரகாரத்தில்) பிரதட்சிணம் செய்ய வேண்டும்.

144. அல்லது பாதுகார்ச்சனையுடன் கூடியதாகவோ ஆலய பிரவேசம் செய்யலாம். ஒருகாலம், இரண்டு காலம் அல்லது மூன்று, நான்கு, ஐந்து காலம்

145. ஆறு, ஏழு, எட்டு என்ற எண்ணிக்கையுள்ள ஸந்தியா காலத்திலோ எப்பொழுதுமாவது வினாயகரை அர்ச்சிக்கவும். இவ்வாறாக அறிந்து பூஜைக்குரிய அங்கங்களால் பிரதி தினம் வினாயகரை பூஜிக்க வேண்டும்.

146. வினாயகரின் நித்ய பூஜையானது போகத்தையும் மோக்ஷத்தையும் கொடுக்க கூடியதாகும். வினாயகரின் பூஜை இஷ்ட சித்தியின் பொருட்டு சதுர்த்தி திதியில் செய்ய வேண்டும்.

147. பலவித பக்ஷணங்கள் ஸ்நபனம் முதலியவைகளுடன் கூடியதாகவும் செய்ய வேண்டும். ஸ்நபனத்தை முன்பு போல் செய்ய வேண்டும். ஆனால் மத்யகும்பத்தில் கணேச்வரரையும்

148. ஐந்து கும்ப ஸ்நபனத்தில் ஆமோதன் முதலியவர்களை நான்கு திக்குகளிலும் நவகலச (9) ஸ்நபனத்தில் ஆமோதன் முதலிய எட்டு மூர்த்திகளையும் பூஜிக்கவும். இருபத்திஐந்து கலச ஸ்நபனத்தில்

149. லோக பாலர்களையும் விச்வரூபர் முதலிய எட்டு தேவதைகளையும் எட்டு திக்கிலும் எட்டு திக்கின் இடைவெளியிலும் பூஜிக்க வேண்டும். லோகபாலர்கள், ஆயுதங்கள் (அஷ்ட) வசுக்கள் முதலிய எட்டு பேர்களையும்

150. முன்பு ஆச்ரிதமான (சொல்லப்பட்ட) ஆமோதன், விச்வரூபன், ஹஸ்தி வக்த்ரன் என்ற மூன்று எட்டு தேவதைகளையும் வரிசையாக நாற்பத்தி ஒன்பது கலச ஸ்நபன பூஜையில் தேவதைகளாக பூஜிக்க வேண்டும்.

151. நூற்றி எட்டு கலச ஸ்நபனத்தில் வினாயகர் ஸஹஸ்ரநாமத்தில் உள்ள முதல் நூறு அர்ச்சனைகளை பூஜிக்க வேண்டும். ஆயிரத்து எட்டு (1008) கலசத்தில் (ஸஹஸ்ரநாமத்தில் உள்ளபடி) எல்லா தேவதைகளையும் பூஜிக்க வேண்டும்.

152. பிறகு ஆசார்யன் எல்லா கும்பங்களிலும் விநாயகரையோ (மட்டும்) பூஜிக்க வேண்டும். பாரதீ, ஸ்ரீ என்ற இரு தேவியுடன் வினாயகர் கூடி இருந்தால் இரண்டு வர்த்தினியையும் ஸ்தாபிக்க வேண்டும்.

153. ஒரு தேவியுடன் கூடியதாக இருந்தால் வர்த்தினியை வடக்கு பாகத்தில் ஸ்தாபிக்க வேண்டும். இந்த ஸ்நபனத்தில் கூறப்படாததை முன்பு ஸ்நபனவிதியில் சொல்லி உள்ளபடி செய்ய வேண்டும்.

154. உத்ஸவமானது, தமனாரோஹனம் என்ற மருக்கொழுந்து சாத்துதல், பவித்ரோத்ஸவம் முதலிய கிரியைகளும் தீபாவளி (கார்த்திகை) வஸந்தோத்ஸவம், மாதங்களில் கூறப்பட்ட மாஸோத்ஸவமும்

155. நவநைவேத்ய கர்மாவும் விசேஷமாக பிராயச்சித்தமும் செய்ய வேண்டும். ஜீர்ணம் முதலியவைகளால் அடையாளம் அடைந்திருந்தால் மற்ற க்ரியைகளை (அதற்கு) முன்பு போல் செய்ய வேண்டும்.

156. மேலும் கொடியில் மூஷீகத்தையோ, வ்ருஷபத்தையோ வரைய வேண்டும். சிவோத்ஸவத்திலும் பிரதி தினமும் விக்னேசோத்ஸவம் செய்யலாம்.

157. கொடி ஏற்றுதல், ஹோமம், உத்ஸவபலி, இவையின்றி வலம் வருதல் மட்டும் செய்யலாம். சக்ராஸ்திரமோ அல்லது த்ரிசூலாஸ்திரம் இவற்றை வினாயகரின் அஸ்திர தேவராக செய்யலாம்.

158. முன்பு கூறிய லக்ஷண அமைப்புடன் வினாயகர் உத்ஸவ பிம்பம் அமைக்க வேண்டும். உத்ஸவத்தில் பலித்ரவ்யம் ஹோம திரவ்யங்களான பொருட்கள் எவை

159. இங்கு கூறப்படவில்லையோ அந்த திரவ்யங்களை சிவோத்ஸவத்தில் சொல்லியபடி கிரஹிக்க வேண்டும். வச்யம், உச்சாடனம், வித்வேஷம், மாரணம், பவுஷ்டிகம்

160. சாந்திகம், ஸ்தம்பனம் முதலிய கர்மாக்களை இந்த வினாயக மந்திரத்தினால் செய்ய வேண்டும். எல்லா வியாதியும் ஏற்பட்ட பொழுது இந்த விநாயக மந்திரத்தினால் சாந்தப்படுத்த வேண்டும்.

161. இந்த வினாயக பிரதிஷ்டையானது எல்லா இடத்திலும் ஆத்ய பால ஸ்தாபனத்துடன் கூடியதாகவோ இல்லாமலோ பிரதிஷ்டை செய்யலாம். சிவாலயத்தில் முதலில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற காரணத்தால் பாலாலயமின்றி வினாயகரை ஸ்தாபனம் செய்யவும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் விக்னேச்வரப்ரதிஷ்டா முறையாகிய நாற்பத்தைந்தாவது படலமாகும்.
திரு முறைத்தலங்கள்

திருக்கச்சி ஏகம்பம்

ஏகாம்பரநாதர் திருக்கோயில்

(பெரிய) காஞ்சிபுரம்

தொண்டை நாட்டுத் தலம்

சென்னை, செங்கற்பட்டு, அரக்கோணம், வேலூர் முதலிய பல நகரங்களிலிருந்து வருவதற்குப் பேருந்து வசதிகள் உள்ளன.

சென்னையிலிருந்து காஞ்சிபுரத்திற்குப் பேருந்துகள் அடிக்கடி உள்ளன.

செங்கற்பட்டு - அரக்கோணம் இருப்புப் பாதையில், காஞ்சிபுரம் இருப்புப்பாதை நிலையம் - மத்தியில் உள்ளது.

காஞ்சிபுரம், வரலாற்றுக்கு முற்பட்ட நகரம் என்னும் சிறப்புடையது. கி.மு. 5- ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரம் சிறப்பாக இருந்த செய்தி, சீன யாத்ரிகர் யுவான்சுவாங் குறிப்பின் மூலம் தெரிய வருகின்றது. கி.மு. 2-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பதஞ்சலி, தம் பாஷ்யத்துள் காஞ்சியின் சிறப்பைக் கூறியுள்ளார்.

தொண்டை நாட்டின் தலைநகரமாக திகழும் காஞ்சிபுரம், A.H. 3ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த பல்லவர்களுக்குத் தலைநகராக விளங்கியது. சோழர்கள், விஜயநகர மன்னர்கள் ஆகியோர்களின் ஆட்சி முத்திரைகளும் இந்நகரில் பதிந்திருந்தன.

"கல்வியைக் கரையிலாத காஞ்சிமாநகர்" என்று அப்பர் தேவாரத்தில் புகழப்படும் இத்தலம் பண்டைக்காலத்தில் கல்விக்கு இருப்பிடமாக விளங்கிக் 'கடிகாஸ்தானத்தை'யும், புகழ் பெற்ற அறிஞர்களையும் பெற்றிருந்தது. ஹர்ஷர் காலத்தில் புகழுடன் விளங்கிய நாலாந்தாப் பல்கலைக் கழகத்தின் தலைவராக விளங்கிய தர்மபாலரும், பேராசிரியர் தின்னாகரும், பௌத்த சமயத் தத்துவ நூல்களை எழுதி உதவிய போதிதர்மரும் காஞ்சியைச் சேர்ந்தவர்களே.

அர்த்தசாஸ்திரம் எழுதிய சாணக்கியர், திருக்குறளக்கு உரை எழுதிய பரிமேலழகர், பொய்கையாழ்வார், வேதாந்த தேசிகர், வண்ணக் களஞ்சியம் நாகலிங்க முனிவர், சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான சியாமா சாஸ்திரிகள், இசைமேதை நயினாப் பிள்ளை முதலியவர்களைப் பெற்ற தலம் காஞ்சியே.

காஞ்சிக்குப் பக்கத்தில் உள்ள 'ஜின காஞ்சி' (ஜைன காஞ்சி) என்னும் பகுதி - தற்போது திருப்பத்திகுன்றம் என்று வழங்கும் பகுதி - பண்டை நாளில் சமணர்களுக்குக் (திகம்பரப் பிரிவினர்க்கு) கோட்டையாக விளங்கியதாகும். இங்குள்ள ஜைனக்கோயில் மிக்க சிறப்பு வாய்ந்தது. A.H. 14ஆம் நூற்றாண்டில் மல்லிசேனா, வாமனசூரி போன்ற சமணப் பெருமக்கள் காஞ்சியில் அனைவராலும் மதிக்கத்தக்கவர்களாக வாழ்ந்தனர். இவையெல்லாம் நோக்குமிடத்துக் காஞ்சிபுரம் சமயப் பொதுவிடமாகத் திகழ்ந்தது என்பதையும் அறிகின்றோம்.

வைணவத்திலும் காஞ்சி அழியாத சிறப்பைப் பெற்றுள்ளது. பொய்கையாழ்வாரும் வேதாந்த தேசிகரும் வாழ்ந்த பதி. ஸ்ரீ ராமாநுஜர் இளமைக் காலத்தைக் காஞ்சியில் கழித்து அத்திகிரி அருளாளனாகிய ஸ்ரீ வரதராஜப் பெருமாளின் பேரருளைப் பெற்றார். திருமழிசையாழ்வாரும் சில காலம் காஞ்சியில் வாழ்ந்தார் என்பதும், அவர் தொடர்பான 'சொன்ன வண்ணம் செய்த பெருமாள்' வரலாறும் அனைவரும் அறிந்ததே. வரதராஜப் பெருமாளுக்குத் தொண்டு செய்து வாழ்ந்து வந்த 'திருக்கச்சி நம்பிகள்' பெருமையை அறியாதார் யார்?

காஞ்சிபுரம் கோயில்கள் மலிந்த நகரம். எப்போதும் விழாக்கள் மலிந்து விளங்கும் நகரமாதலின் 'விழவறாக் காஞ்சி' என்று புகழப்படும் பெருமை பெற்றது,

பெரும்பாணாற்றுப்படை, தண்டியலங்காரம் முதலிய நூல்கள் இத்தலத்தின் புகழைப் பாடுகின்றன.

தற்கால உலகில் பட்டுப்புடவைகளுக்குப் புகழ் பெற்றது காஞ்சி. காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. பஞ்சபூதத் தலங்களுள் இது பிருதிவித் தலம்.

சக்தி பீடங்களுள் சிறந்ததாகிய காமகோடி பீடத்தலம் இதுவே. காமாட்சியம்பிகையின் ஆலயம் காமக்கோட்டம் எனப்படும். இறைவனிடம் இருநாழி நெல் பெற்று அம்பிகை முப்பத்திரண்டு அறங்களையும் செய்தருளிய அற்புதத்தலம். கந்தபுராணம் தோன்றிய பெருமையுடைய தலமும் இதுவே. இந்நூலாசிரியரான கச்சியப்ப சிவாச்சாரியார் தொண்டு செய்து வந்த குமரக்கோட்டமும் (முருகன் திருக்கோயில்) இங்குள்ளதே. கந்த புராணம் அரங்கேற்றப்பட்ட மண்டபம் இன்றும் இத்திருக்கோயிலில் கச்சியப்பர் பெயரில் நூலகமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

'நகரேஷ§காஞ்சி' 'முத்திதரும் நகர் ஏழில் முக்கியமாம் காஞ்சி' என்றெல்லாம் புகழ்ந்தோதப்படும் இத்தலத்திற்கு,

1. பிரளயசித்து 2. காமபீடம் 3. மும்மூர்த்திவாசம் 4. சிவபுரம் 5. விண்டுபுரம்
6. தபோமயம் 7. சகலசித்தி 8. கன்னிகாப்பு 9. துண்டீரபுரம் 10. சத்திய விரதக்ஷேத்திரம் 11. பூலோக கயிலாயம் 12. பிரமபுரம்

என்பன வேறு பெயர்கள். திருவேகம்பமும் குமரகோட்டமும் காமக் கோட்டமும் சோமாஸ்கந்த வடிவில் அமைந்திருப்பது இத்தலத்திற்குள்ள தனிச் சிறப்பாகும். தீர்த்தச் சிறப்பும் இதற்குண்டு. சர்வதீர்த்தத்தின் சிறப்பு அறியாதார் யார்? 'தரையிடங்கொளும் பதிகளிற் காஞ்சியந்தலம்' சிறந்தது என்பது கந்த புராணத் தொடராகும்.

சாக்கிய நாயனார், திருக்குறிப்புத் தொண்டர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் வாழ்ந்த தெய்வப் பதி.

கண் பார்வையிழந்த சுந்தரர் திருவெண்பாக்கத்தில் ஊன்று கோலைப் பெற்றவாறே இத்தலத்திற்கு வந்து காமக்கோட்டம் பணிந்து பின்னர்த் திருவேகம்பம் அடைந்து இறையருளால் இடக்கண்பார்வை பெற்ற அற்புதம் நிகழ்ந்த தலமிதுவே. உமை, திருமகள், வாணி ஆகிய மூவரும் முறையே வழிபட்ட ஏகம்பம், காயாரோகணம் கச்சபேசம், ஆகிய கோயில்கள் உள்ள தலம்.

இத்தலபுராணமாகிய காஞ்சிப் புராணம் - மாதவச் சிவஞான சுவாமிகளால் இயற்றப்பட்டது - தலபுராண வரலாற்றில் மிகச் சிறப்புடையதொரு இடத்தைப் பெற்றுள்ளதாகும். சிவஞான சுவாமிகள் காஞ்சியில் ஒரு பகுதியாக விளங்கும் பிள்ளையார் பாளையத்தில் மண்டபத் தெருவிற்குப் பக்கத்தில் உள்ள திருவாவடுதுறை ஆதீனக்கிளை மடாலயத்தில் தங்கிக் காஞ்சிப் புராணத்தை எழுதினர். பிரமன் வழிபட்ட தலமாகிய இக் காஞ்சி, நிலமகளின் உந்திதான் போன்றது என்று புகழப்படுகின்றது.

திசையனைத்தும் பக்தியுடன் போற்றிப் பணிந்து பரவப்படும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய சுவாமிகள் ஸ்ரீ மடம் உள்ள தலம் இதுவே. அருளழுகு தவவிழிகள் அமையப் பெற்று, அண்டி வரும் அணைவருக்கும் அருள்சொரிந்து, உலகு வாழத் தவமாற்றி, உயர்ந்தோங்கு தவந்தனில் ஒப்பில்லா மாட்சிமையுடையவர்களாகத் திகழ்ந்துவரும் காஞ்சி மாமுனிவர்களின் அருளாட்சி நனிசிறக்கும் அருமைத் தலமும் காஞ்சியே.

சைவ ஆதீனங்களுள் மிகப் பழமையான ஆதீனமாகவும் மெய்கண்டதேவர் சந்தான பீடமாகவும் பெருமையுடன் திகழ்கின்ற தொண்டை மண்டலாதீனத் திருமடாலயம் பெருமையுடன் திகழ்கின்ற தொண்டை மண்டலாதீனத் திருமடாலயம் இத்தலத்தில்தான் உள்ளது.

இத்தகு அளவற்ற சிறப்புக்கையுடைய இத்தலத்தில் கயிலாய நாதர் கோயில், வைகுந்தப் பெருமாள் கோயில், கச்சபேசம் முதலிய எண்ணற்ற கோயில்கள் இருப்பினும் பாடல்பெற்ற திருமுறைக் கோயில்கள் எனப்படுபவை ஐந்தேயாகும். அவை 1. திருவேகம்பம் 2. திருமேற்றளி 3. ஓணகாந்தன்தளி 4. கச்சிநெறிக்காரைக்காடு 5. அநகதங்காவதம் என்பன.

இவற்றுள் 'பெரிய கோயில்' என்றழைக்கப்படும் ஸ்ரீ ஏகாம்பர நாதர் திருக்கோயிலே 'கச்சித் திருவேகம்பம்' என்று போற்றப்படும் பெருமை வாய்ந்தது.

இத்திருக்கோயில் பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ளது. திருவேகம்பம், திருக்கச்சியேகம்பம், ஏகாம்பரநாதர் திருக்கோயில் எனப் பலவாறு அழைக்கப்படுவதம் இத்திருக்கோயிலே.

மாணிக்கவாசகர் இத்திருக்கோயிலைக் 'கச்சித் திருவேகம்பன் செம்பொற்கோயில்' என்று சிறப்பித்துப் பாடியுள்ளார். அருணகிரிநாதரின் திருப்புகழும் உள்ளது. முற்றத் துறந்த பட்டினத்தாரின் 'திருவேகம்பமுடையார் திருவந்தாதியும்' கந்த புராணமும் இத்தலத்தின் சிறப்பையும், மூர்த்தியின் புகழையும் பலவாறு புகழ்கின்றன. மணிமேகலை, தக்கயாகப் பரணி, மத்தவிலாசப்பிரகசனம், தண்டியலங்காரம் முதலிய நூல்களிலும், பன்னிரு திருமூறைகளில் பலவிடங்களிலும் இத்தலச் சிறப்பு பேசப்படுகின்றது.

இறைவன் - திருவேகம்பர், ஏகாம்பரநாதர், ஏகாம்பரேஸ்வரர்

இறைவி - ஏலவார்குழலி

தலமரம் - மா

தீர்த்தம் - சிவகங்கைத் தீர்த்தம்

மூவர் பாடலும் பெற்றது.

ஏகாம்பரேஸ்வரர் மூலவர் - மணல் (பிருதிவி) லிங்கம். உமாதேவியார் கம்பை நதிக்கரையில் மணலால் இலிங்கம் அமைத்து வழிபட, இறைவன் ஆற்றில் வெள்ளம் வருமாறு செய்ய, உமையம்மை இலிங்கத்தைத் தழுவிக் காத்தாள் என்பது தலவரலாறு. தழுவிய போது இறைவன் தன் திருமேனியில் அம்பிகையின் வளைத் தழும்பும் முலைச் சுவடும் ஏற்றுத் தழுவக் குழைந்தார். இதனால் தழுவக் குழைந்த பிரான்' என்றும் பெயர்.

"எள்கலின்றி இமையவர்கோனை ஈசனை வழிபாடு செய்வாள்போல்

உள்ளத்துள்கி உகந்து உமைநங்கை வழிபடச் சென்றுநின்றவாகண்டு

வெள்ளங்காட்டி வெருட்டிட வஞ்சி வெருவி ஓடித்தழுவ வெளிப்பட்ட

கள்ளக்கம்பனை எங்கள் பிரானைக் காணக்கண் அடியேன் பெற்றவாறே"

- சுந்தரர்

தற்போது 'கம்பா நதி' ஆலயத்துள் ஆயரக்கால் மண்டபத்திற்கு முன்னால் குளமாகிய நிலையில் உள்ளது.

தலமரம் மாமரம். ஆம்ரம் - மாமரம்.

ஏகம் + ஆம்ரம் = ஏகாம்ரம் - ஒற்றை மாமரம்

இம்மாவடியின்கீழ் இறைவன் எழுந்தருளியிருப்பதால் இறைவன், ஏகாம்அரநாதர் எனப் பெயர் பெற்றார். இப்பெரே ஏகாம்பரநாதர் என்று வழங்கலாயிற்று. "ஒரு மாவின்கீழ் அரையர்" என்னுந் தனிப்பாடல் தொடர் இங்கு நினைக்கத்தக்கது 'கம்பர்' என்பது தமிழில் வழங்கும் பெயர். ஊர்ப் பெயர் கச்சி, காஞ்சி என்றாலும் கோயிருக்குப் பெயர் ஏகம்பன் என்பதே.

காஞ்சிபுர மண்டலம் மூழுமைக்கும் தேவி, காமாக்ஷியே யாவாள். ஆதலின் காஞ்சியில் எச்சிவாலயத்திலும் தனியாக அம்பாள் (மூல) சந்நிதி கிடையாது. எனினும் ஒவ்வொரு கோயிலிரும் உற்சவமூர்த்தமாக ஓர் அம்பாள் சந்நிதி ஒரு பெயர் தாங்கி இருக்கும். அவ்வகையில் இத்திருக்கோயிலில் உள்ள அம்பாளுக்கு 'ஏலவார் குழலி' என்று பெயர். ஆயினும் தேவஸ்தானத்தின் பெயர் ஸ்ரீ காமாக்ஷயிம்பாள் சமேத ஸ்ரீ ஏகாம்பரநாதர் தேவஸ்தானம் என்றே வழங்கப்படுகிறது.

மிகப் பெரிய கோயில். உயர்ந்த ராஜகோபுரம் ஒன்பது நிலைகளுடன் கம்பீரமாகக் காட்சி தருகின்றது. நுழைவு வாயிலில் முன்னால் விநாயகரும் முருகப்பெருமானும் இடம் மாறிக் காட்சி தருகின்றனர். இக்கோபுரம் விஜயநகர மன்னரான கிருஷ்ணதேவராயரால் A.H. 1509ல் கட்டப்பட்டதாகும். 'ஒன்பது நிலை தமீஇ ஓங்கும் கோபுரம்' என்பது காஞ்சிப் புராணம்.

இவ்வாயிலில் நின்றால் தண்ணென்ற காற்று எப்போதும் வீசுவதை அனுபவிக்கலாம். இவ்வாறு அனுபவித்த புலவரொருவர்தம் தனிப் பாடலில் 'கம்பத்தடி காற்று' என்று புகழ்ந்துள்ளார்.

உள்ளே நுழைந்தால் நேரே தெரிவது வாகன மண்டபம். இதற்குச் சரபேச மண்டபம் என்று பெயர். திருவிழாக் காலங்களில் சுவாமி இங்கெழுந்தருளி, உபாசாரங்களை ஏற்று, வாகனங்கள் மீது ஆரோகணிந்து திருவீதியுலாவுக்குப் புறப்படுவார்.

(பெரும்பாலான தலங்களில் வாகனங்களின் அமைப்பு பக்கவாட்டிலேயே அமைந்திருக்கும். சுவாமி நேராக நோக்குவார். ஆனால் இங்குச் சுவாமியின் நோக்கும் வாகனங்களின் முகமும் ஒரே திசையில் - நேராகவே இருக்கும்) .

விசாலமான உள் இடம். இடப்பால் நந்தவனம். அடுத்து குளமாகத் தேங்கியுள்ள நிலையில் கம்பையாறு உள்ளது. நேரே தெரிவது ஆயிரக்கால் மண்டபம். சற்றுப் பழுதடைந்துள்ளது. இக்கோபுரம் பல்லவகோபுரம் எனப்படும். இக்கோபுர வாயிலில்தான், தல விநாயகராகிய 'விகடசக்கர விநாயகர்' உள்ளார்.

சலந்தரணை அழிக்கத் திருமால் இறைவனை வேண்டிப் பெற்ற சக்கராயுதத்தை, வீரபத்திரர்மேல் ஏவியபோது அவர் அணிந்திருந்த வெண்டலைமாலையில் உள்ள ஒருதலை அதை விழுங்கிவிட்டது, திருமால் பெரிதும் வருந்தினார். இதையறிந்த விஷ்வக்சேனர் வீரபத்திரரிடம் சென்று வேண்டி, அவர் சொல்லியவாறே பிரம கபாலம் சிரிக்கும் வகையில் விகடக் கூத்தாடினார். அக்கூத்தைக் கண்டு பிரமகபால சிரிக்க, சக்கரப்படை கீழே விழுந்தது. அப்போது அருகிலிருந்த விநாயகர், அதை விரைந்து எடுத்துக்கொண்டு, மறுமுறையும் விகடக்கூத்து ஆடுமாறு பணிக்க, அவரும் அவ்வாறே ஆடினார். மகிழ்ந்து விநாயகரும் சக்கரப்படையைத் தந்தருளினார். ஆதலின் விகடக் கூத்தினை விரும்பிக்கொண்டமையால் 'விகடசக்கர விநாயகர்' என்று பெயர் பெற்றார். விநாயகரை வணங்கிக் கோபுர வாயில் கடந்து வலப்பக்கமாகத் திரும்பிக் கோயிலக்கு வரவேண்டும். இதுவே முறையான வழியாகும். பிற்காலத்தில் திருப்பணிகள் நடந்த காலத்தில் அமைக்கப்பட்ட மதில் 'வளைவு' ராஜகோபுரத்திற்கு நேராக இருப்பதால் இன்று மக்கள் பெரும்பாலும் இவ்வளைவின் வழியாகவே செல்கின்றனர்.

(சுவாமி புறப்பாடு இன்றும் இம்முறையான வாயில் வழியாகவே நடைபெறுவதை நேரில் காணலாம்) கோயிலுக்கு முன்புள்ளது 'திருக்கச்சி மயானம்' 'கோயிலாகும். இது வைப்புத் தலமாகும். அப்பரால் வைத்துப் பாடப்பட்டதாகும். அப்பாடல் -

" மைப்படிச்த கண்ணாளும் தானும் கச்சி

மயானத்தான் வார்சடையன் என்னின் அல்லால்

ஒப்புடையன் அல்லன் ஒருருவனல்லன்

ஓரூரனல்லன் ஓர்உவமன் இல்லி

அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்

அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்

இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்

இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே"

எதிரில் வள்ளல் பச்சையப்பர் கட்டிய மண்டபம் உள்ளது. இம்மண்டபத் தூண் ஒன்றில் அவருடைய உருவமும் உள்ளது.

ஏகம்பத்தின் நாற்புறத்திலும் நான்கு கோயில்கள் உள்ளன. அவற்றுள் கச்சிமயானம் ஒன்று. மற்றவை வாலீசம், ரிஷபேசம், சத்தியநாதேசம் என்பன. மறுபுறம் சிவகங்கைத் தீர்த்தம் உள்ளது. அழகிய பெரிய குளம். நல்ல படித்துறைகள் உள்ளன. நாற்புறமும் கோபுரங்கள் உள்ளன, உயர்ந்துள்ள கொடி மரம் பணிந்து கோயிலுள் நுழையும்போது வாயிலில் இரு துவார பாலகர்கள் நம்மை வரவேற்கின்றனர். பக்கத்தில் உட்புறமாகக் கரிகாற்சோழனின் சிலையன்றுள்ளது.

உட்செல்லுகிறோம். வலப்பால் வாகன மண்டபம். இடப்பாலுள்ளது பவித்ர உற்சவ மண்டபம். இங்கிருந்து பார்த்தால் நேரே மூலவர் காட்சி தருகிறார். சற்று முன்னால் சென்று இடப்புறமாகத் திரும்பினால் அம்மூலையில் உள்ள தூணில் இறைவன், இறைவியைத் திருமணங்கொள்ளும் அழகான சிற்பம் உள்ளது, அதன் எதிர்த் தூணில் இறைவி, இறைவனின் கண்களைமூடும் சிற்பம் உள்ளது, இடப்பால் திரும்பிப் பிரகார வலம் வருகிறோம். வலப்பால் 'பிரளயகால சக்தி'யின் சந்நிதி உள்ளது, 'ஈறுசேர் பொழுதினும் இறுதியின்றியே காத்தூக காஞ்சியை மாறிலாது இருத்திடுகின்ற' அம்பிகை இவள். வழிபட்டுத் தொடர்கிறோம். பிரகாரம் மிக்க அழகுடையது. பக்கத்துத் தூண்களின் அமைப்பும் உச்சிப்பகுதியும் அற்புதமான அழகுடையவை, செல்லும்போதே வலப்பால் இருப்பது "சபாநாயகர்" மண்டபம். இது நாளடைவில் 'நாயகர்' மண்டபம் என்றாகி, இன்று மக்கள் வழக்கில் கொச்சையாக நாயர் மண்டபம் என்று வழங்குகிறது. இங்குத்தான் ஏகம்பரநாதரின் உற்சவத் திருமேனி உள்ளது. சந்நிதியுள் பெருமான் (இங்கு) சோமாஸ்கந்த வடிவில் காட்சி தருகிறார். இம்மூர்த்தம் இராசசிம்ம பல்லவனின் உபயமாகச் செய்துவைக்கப்பட்டது. இதற்குச் சான்றாக இதன் பின்னால் பிரபாவளி செருகுமிடத்தில் சிங்கம் உள்ளது. பின்னால் உமாமகேசுவரர், சந்திரசேகரர், ஸ்ரீ கண்டசிவாசாரியார் முதலிய உற்சவத் திருமேனிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. பெருவிழாக் காலங்களில் அபிஷேகங்களும் அலங்காரங்களும் செய்யப்படுவதும், பெருமான் உலாவுக்குப் புறப்படுகின்ற சிறப்புடையதும் இம்மண்டபத்தில்தான். இச்சந்நிதியில் இரு பக்கங்களிலும் பெரிய கண்ணாடிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் திருமேனியைப் பார்த்துத் தரிசிப்பதே தனியழகு, பிராகாரம் முழுவதிலும் இடப்பால் வரிசையாகச் சிவலிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன.

பஞ்சமுக விநாயகர் தரிசனம். இது பிற்காலப் பிரதிஷ்டை, (1-2-1979ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது) . அடுத்து வருவது மாவடி. தலத்திற்குரிய பெருமையுடையது. மாதவச் சிவஞான சுவாமிகள் "மருமலத்தனிமா" என்று இதைக் குறிப்பிடுகின்றார். மாவடியை வலம் வரும் அமைப்பில் பிரகாரமுள்ளது. துவார கணபதியையும், ஆறுமுகரையும் வணங்கி, மேலேறிச் சென்று இறைவனையும் இறைவியையும் தரிசிக்கலாம். பீடத்தின் அடியில் பஞ்சாக்கினி தவம், இலிங்கோற்பவ வரலாறு. அம்பிகை தழுவும் கோலம் முதலிய சிற்பங்கள் உள்ளன.

மாமரம் இத்தல மரம். இவ்விடம் மிகச் சிறந்த பிரார்த்தனைக்குரிய இடமாகும். திருமணங்கள் நடைபெறுமிடம். புத்திரப் பேறில்லாதவர்கள் அப்பேறு வேண்டி, தொட்டிலைக் கட்டி வேண்டிக் கொள்ளும் நிலையை இன்றும் காணலாம்.

வேதமே மாமரம்: வேதத்தின் நான்கு வகைகளே இம்மரத்தின் நான்கு கிளைகள். இதன் வயது புவியியல் வல்லுநர்களால் 3600 ஆண்டுகளுக்கு மேல் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இம்மரத்தின்மீது ஏறுவதுகூடாது. இயல்பாகவே பழுத்துக் கீழே விழும் கனிகளைச் சுவைத்தோர், நான்கு கிளைகளிலிருந்தும் கிடைக்கும் மாங்கனிகள் நான்கு விதமான சுவையுடையதாகச் சொல்கின்றனர்.

தவம் செய்த அம்பாளுக்கு, இறைவன் இம் மாவடியின் கீழ்தான் காட்சி தந்தருளினார். 'ஒருமாவின்கீழரையர்" என்பது தனிப்பாடல். இம்மாமரத்தை வலம் வரலாம். மாவடியைத் தொழுது பின் திரும்பி வந்து, பிரகாரத்தில் வலம் வரும்போது சஹஸ்ரலிங்க சந்நிதி பெரிய ஆவுடையாருடன் காட்சி தருகின்றது. அடுத்து வலப்பால் படிகளேறிச் சென்றால் 'ஏலவார் குழலி' - அம்பாளின் உற்சவச் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம். அழகான திருமேனி.

பக்கத்தில் 'மாவடிவைகும் செவ்வேள்' சந்நிதி. குமரகோட்டம் என்னும் பெயரில் தனிக்கோயில் முருகப் பெருமானுக்கு இத்தலத்தில் இருந்தாலும், அப்பெருமானின் அருள் வரலாற்றைக் கூறும் கந்தபுராணம் இத்தலத்தில் தோன்றினாலும், அதில் மூவிரு முகங்கள் போற்றி' எனும் பாடலில் வரும் "காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி" என்று புகழப்படும் தொடருக்குரிய பெருமான் இவரேயாவார்.

இச்சந்நிதியில் உற்சவத் திருமேனி (வள்ளி தெய்வயானையுடன் கூடி) முன்னால் இருக்க, பின்னால் இதே திருமேனிகள் சிலாரூபத்தில் உள்ளன. அடுத்த தரிசனம் நடராச சபை - இடப்பால் உள்ளது.

11-12-1961ல் புதியதாக நிறுவப்பட்டது. முன் மண்டபம் அழகாக உள்ளது. சபையில் அம்பலக் கூத்தருடன் சிவகாமியும் மாணிக்கவாசகரும் காட்சி தருகின்றனர். தரிசித்து வெளி வந்தால் பக்கத்தில் 'பைரவர்' சந்நிதி. அடுத்துள்ளது யாக சாலை. எதிரில் வலப்பால் நவக்கிரக சந்நிதி, கிரகங்கள் உரியவாகனங்கள் மீது அமர்ந்து உரிய திசைகளை நோக்கியிருக்கும் அமைப்பில் உள்ளன. நடுவில் சூரியன் உள்ளார்.

உள்வாயிலைத் தாண்டுகிறோம். இடப்பால் இத்தலத்து வாழ்ந்த நாயன்மார்களான திருக்குறிப்புத் தொண்டர், ஐயடிகள் காடவர்கோன், சாக்கிய நாயனார் ஆகியோர் திருமேனிகள் உள்ளன. அடுத்து நால்வர் சந்நிதி, தொடர்ந்து அறுபத்து மூவர் மூலத் திருமேனிகள், முடிவில் சந்தானாசாரியர்களும் உளர். எதிரில் வலப்பால் 'வெள்ளக் கம்பர்' சிவலிங்கத் திருமேனி உள்ளது. அடுத்துப் பிரகாரத்தில் இடப்பால் சிவலிங்க பாணங்கள் மட்டும் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, ஆறுமுகப்பெருமான் திருவுருவமும், பக்கத்தில் 'கள்ளக் கம்பர்' சிவலிங்கத் திருமேனியும், அடுத்து, 'மத்தள மாதவேசர்' சிவலிக்த் திருமேனியும் உள்ளன, சண்டேசவரர் உள்ளார். இத்திருக்கோயிலில் கருவறையில் கோஷ்ட மூர்த்தங்கள் ஏதுமில்லை. அடுத்த இடப்பால் வரிசையாக அறுபத்துமூவர் உற்சவத் திருமேனிகள் உள்ளன.

நேரே நிலாத்துண்டப் பெருமாள் சந்நிதி. இச்சந்நிதியின் பக்கத்தில் 'நல்ல கம்பர்' சிவலிங்கத் திருமேனியும், அடுத்து சற்று உள்ளடங்கிய சூரியன் திருவுருவமும் உள்ளன. நாடொறும் ஆலய பூஜை இச்சூரிய பகவான் வழிபாட்டிலேயே தொடங்குகின்றது.

(நிலாத்துண்டப் பெருமாள் சந்நிதி திருமங்கையாழ்வாரின் மங்களாசாசனம் பெற்றது. இங்கு, தீர்த்தம் தரப்பெற்றுச் சடாரியும் சிவாசாரியாரால் சார்த்தப்படுகிறது. இச்சந்நிதியில் சிலாரூபமான திருமேனி வழிபாட்டில் உள்ளது. (பக்கத்தில் உள்ள சுதைரூபம் வழிபாட்டில் இல்லை.)

மூலவரைத் தரிசிக்கச் செல்லுகிறோம். ஆலந்தானகந்த அமுத செய்த பிரான் பிருதிவி (மணல்) லிங்கமாகக் காட்சி தருகிறார். பாணம் சற்று கூசாகவுள்ளது. இதன்மீது தண்ணீர் படக்கூடாது. அபிஷேகங்கள் முதலிய அனைத்தும் ஆவுடையாருக்கே. இலிங்கபாணத்திற்குப் புனுகுச் சட்டம் மட்டும் சார்த்தப்படுகிறது. பின்னால் சுவரில் சோமாஸ்கந்தத் திருமேனி உள்ளது.

இலிங்க வகைகளுள் அம்பாள் அமைத்து வழிபட்ட இது 'தேவிக லிங்கமாகும்'. திங்கட்கிழமைதோறும் தல மகிமைத் தொடர்பான - அம்மை தழுவும் கோலமுடைய - கவசம் சார்த்தப்படுகிறது.

ஏலவார்குழலாள் என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற காலகாலனாம் கம்பன் எம்மானைக் கண்குளிரக் கண்டு மகிழ்கிறோம். தரிசனம் முடித்து பக்கவாயில் வழியாக இறங்கிச் சண்டேசவரரை வணங்க வழியுள்ளது. ராஜகோபுரம் தெற்கு நோக்கியிருப்பனம் மூலவர் கிழக்கு நோக்கியுள்ளார்.

மூலவரைத் தரிசித்து, சண்டேசவரரின் அருள் பெற்று வெளியே வந்து கொடி மரத்தின் முன்பு வீழ்ந்து வணங்கி வழிபாட்டை நிறைவு செய்கிறோம். வெளியில் பெரிய நந்தி உருவம் உள்ளது. இதற்குப் பக்கத்தில் 'வாலீசம்' தனிக் கோயிலாகவுள்ளது.

செயல் அலுவலரின் அலுவலகத்திற்குப் பக்கத்தில் குளத்தையட்டி 'ரிஷபேசம்' கோயில் உள்ளது.

கச்சிமயானத்தின் முன்புள்ள தூணில் ஆதிசங்கரர், தக்ஷிணாமூர்த்தி சிற்பங்கள் உள்ளன. சபாநாயகர் மண்டபத்தில் சந்நிதிக்கு எதிரில் உள்ள இருதூண்களில் ஒன்றில் அன்ன வாகனத்தில் ஒருபுறம் ரதியும் மறுபுறம் மன்மதனும், அவ்வாறே எதிர்த் தூணில் AO வாகனத்தில் ஒருபுறம் ரதியும் மறுபுறம் மன்மதனம் சிற்ப வடிவில் உள்ளனர்.

நவக்கிரகம் வணங்கி, உள்வாயிருக்கு அருகில் இறங்கும் படிகளில் இறங்கும்பாது ஒரு தூணில் நரசிம்மம் இரணியனைப் பிளக்கும் சிற்பமும் எதிர்த்தூணில் பிட்சாடனர் சிற்பமும் இருப்பதைக் காணலாம்.

நாடொறும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. பூஜை முறைகள் 'காமிக' ஆகம அடிப்படையில் அமைந்தவை. ரதசப்தமி நாளில் சூரிய ஒளி சுவாமி மீது படுதலைக் கண்டு தரிசிக்கலாம்.

திருப்பணிகள் 25 -10 - 76ல் தொடங்கப் பெற்று மகா கும்பாபிஷேகம் 1-2-79ல் நடைபெற்றது. இவ்விரு நிகழ்ச்சிகளுமே ஸ்ரீ காஞ்சி காமகோடி பிடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களால் நடத்தி வைக்கப்பட்டன. இக்கும்பாரிஷேகத்தை நகரத்தார்கள் செய்து தந்தது குறிப்பிடத்தக்கது.

இராசகோபுரமும் (1991ல்) திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இராசராச சோழதேவன், விசயகண்ட கோபாலதேவன், கம்பண்ண உடையார், அச்சுத உடையார், முதற்குலோத்துங்கன் மூன்றாம் குலோத்துங்கன் முதலியோர் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோயிலில் கிடைத்துள்ளன. இவற்றின் மூலம் 1. ஆராதனைக்கும் திருவமுதுக்கும் விடப்பட்ட நிபந்தங்கள். 2. கோயிலுக்குப் பசுக்களை வழங்கியது. 3. நந்தா விளக்கெரிய ஏற்பாடு செய்தது முதலிய செய்திகளை அறிகிறோம்.

இத்திருக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா மிகச் சிறப்பாக பதினான்கு நாள்களுக்கு நடைபெறுகின்றது. இவ்விழாவில் ஆறாம்நாள் விழாவாகப் பகலில் அறுபத்துமூவரும் இரவில் வெள்ளித் தேர்க்காட்சியும் நடைபெறுவதும், ஒன்பதாம் நாள் விழாவாக நடைபெறும் மாவடிச் சேவையும், பன்னிரண்டாம் நாள் விழாவாக நடைபெறும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் சிறப்பாகத் தரிசிக்கத்தக்கன. பதினான்காம் நாள் இரவில் திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்தின் சார்பில் நடைபெறும் திருமுறைப் பெருவிழா மிகச் சிறப்புடையதாகும். (சிவ சிவ ஒலி மண்டபக் கட்டளையும் ஸ்ரீ காசி மடத்தின் சார்பில் நடைபெறுகிறது) .

ஆனித்திருமஞ்சனம், ஆடிப்பூரம், நவராத்திரி, அன்னாபிஷேகம், சுந்தரர் இடக்கண் பெற்றது. பவித்ரோற்சவம், தைப்பூசம், கார்த்திகைச் சோமவாரங்கள், (கடைசி சோமவாரம் லட்சதீபம்) மாசி மகம், சிவராத்திரி, திருவாதிரை முதலியவை இத்திருக்கோயிலில் நடைபெறும் சிறப்பு விழாக்களாகும்.

யாத்ரிகர்களுக்குரிய வசதிகளாகத் தங்குமிடங்களும், உணவு விடுதிகளும் இந்நகரில் வசதியாக உள்ளன. அரசின் சுற்றுலாத்துறை பயண மாளிகையும் இங்குள்ளது.

மறையானை மாசிலாப் புன்சடை மல்குவெண்

பிறையானைப் பெண்ணொடு ஆணாகிய பெம்மானை

இறையானை ஏர்கொள் கச்சித் திருவேகம்பத் (து)

உறைவானை அல்லது உள்காது எனது உள்ளமே.

(சம்பந்தர்)

கரவாடும் வன்னெஞ்சர்க்கு அரியானைக் கரவார்பால்

விரவாடும் பெருமானை விடையேறம் வித்தகனை

அரவாடச் சடைதாழ அங்கையினில் அனல் ஏந்தி

இரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே

(அப்பர்)

பண்ணில்ஓசை பழத்தினில் இன்சுவை

பெண்ணொடு ஆண் என்று பேசற்கு அரியவன்

வண்ணமில்லி வடிவு வேறாயவன்

கண்ணிலுண்மணி கச்சியேகம்பனே.

(அப்பர்)

முந்தைகாண் மூவரினும் முதலானான்காண்

மூவிலைமேல் மூர்த்திகாண் முரகவேட்குத்

தந்தைகாண் தண்கடமா முகத்தினாற்குத்

தாதைகாண் தாழ்ந்து அடியே வணங்குவார்க்குச்

சிந்தைகாண் சிந்தாத சித்தத்தார்க்குச்

சிவன் அவன்காண் செங்கண்மால் விடையன்றேறும்

எந்தைகாண் எழிலாரும் பொழிலார் கச்சி

ஏகம்பன்காண் அவன்ª ன் எண்ணத்தானே.

(அப்பர்)

"ஆலந்தான் உகந்து அமுது செயதானை

ஆதியை அமரர் தொழுது ஏத்தும்

சீலந்தான் பெரிதும் உடையானைச்

சிந்திப்பார் அவர் சிந்தையுளானை

ஏலவார் குழலாள் உமைநங்கை

என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற

காலகாலனைக் கம்பன் எம்மானைக்

காணக்கண் அடியேன் பெற்றவாரே"

(சுந்தரர்)

காசணிமின்கள் உலக்கையெல்லாம் காம்பணிமின்கள் கறையுரலை

நேசமுடைய அடியவர்கள் நின்று நிலாவுக என்று வாழ்த்தித்

தேசமெல்லாம் புகழ்ந்தாடும் கச்சித் திருவேகம்பன் செம்பொற் கோயில்பாடிப்

பாசவினையைப் பறித்து நின்று பாடிப் பொற்சுன்னம் இடித்து நாமே

(மாணிக்கவாசகர்)

"ஏகம்பத்துறை எந்நாய் போற்றி

பாகம் பெண்ணுருவானாய் போற்றி"

(திருவாச, போற், திருவக)

"ஏகம்பத்தின் இயல்பாயிருந்து

பாகம் பெண்ணொடாயின பரிசும்"

(திருவாச, கீர்த்,திருவக)

மெய்த்தொண்டர் செல்லும் நெறி அறியேன் மிக நற்பணி செய்

கைத்தொண்டர் தம்மிலும் நற்றொண்டுவந்திலன் உண்பதற்கே

பொய்த்தொண்டு பேசிப் புறம்புறமே உன்னைப் போற்றுகின்ற

இத்தொண்டனேன் பணி கொள்ளுதியோ கச்சி ஏகம்பனே.

(திருவேகம்பர் திருவந்தாதி)

முன்னுறு பொருள்கட்கெல்லாம் முற்படு பழையாய் போற்றி

பின்னறு பொருள்கட்கெல்லாம் பிற்படு புதியாய் போற்றி

புன்மதியாளர் தேறாப் பூரண முதலே போற்றி

சின்மயத் திருவேகம்ப சிவசிவ போற்றி போற்றி

(காஞ்சிப்புராணம்)

என்நெஞ்சே உன்னை இரந்தும் உரைக்கின்றேன்

கன்னஞ் செய்வாயாகில் காலத்தால் - வன்னெஞ்சேய்

மாகம்பத்தானை யுரித்தானை வண்கச்சி

ஏகம்பத்தானை இறைஞ்சு.

(க்ஷேத்திரத் திருவெண்பா)

(ஐயடிகள் காடவர்கோன்)

பங்கயச் செங்கைத் தளிரால் பனிமலர் கொண்டருச்சித்துச்

செங்கயற் கண்மலைவல்லி பணிந்த சேவடி நினைந்து

பொங்கிய அன்பொடு பரவிப் போற்றி ஆரூரர்க்கு

மங்கை தழுவக் குழைந்தார் மறைந்த இடக்கண் கொடுத்தார்.

(பெ. புரா)

"அற்றைக் கிரைதேடி

அத்தத்திலு மாசை

பற்றித் தவியாத

பற்றைப் பெறுவேனோ

வெற்றிக் கதிர்வேலா

வெற்பைத் தொளைசீலா

கற்றுற்றுணர் போதா

கச்சிப் பெருமாளே"

(திருப்புகழ்)

"நாகம்பராந் தொண்டை நாட்டிலுயர் காஞ்சி

ஏகம்பமேவும் பேரின்பமே"

(அரும்பா, விண், கலி, வெ)

தொல்லை மறைதேர் துணைவன் பல்லாண்டு வரை

எல்லையிருநாழி நெற்கொண்டோர் - மெல்லியலாள்

ஓங்குலகில் வாழும் உயிரனைத்தும் ஊட்டுமால்

ஏங்கொலிநீர்க் காஞ்சியிடை

(தண்டியலங்கார மேற்கொள் பாடல்)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில்

காஞ்சிபுரம் - 631 502,

காஞ்சிபுரம் மாவட்டம்.