ஞாயிறு, 30 அக்டோபர், 2022

நரசிம்மர் வழிபாடும் அதன் சிறப்பும்

நரசிம்மர் வழிபாடும் சிறப்பும்!

விஷ்ணு அவதார சன்னதிகள்: அவதாரங்கள் எண்ணற்கரியன. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முக்கிய மும்மூர்த்திகளும் பல உருவில் பன்முறை அவதரித்திருந்தாலும், பொதுவாக, அவதாரம் என்றவுடன் நாம் விஷ்ணுவையே நினைக்கிறோம். அவரின் முக்கியப்பத்து அவதாரங்களிலும் சில மட்டுமே புராணங்களிலும், இதிகாசங்களிலும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, ராமனையும், கிருஷ்ணனையும் போற்றுகின்ற அளவுக்கு பிற அவதாரங்கள் பாடப்படவில்லை. மேலும் வராக அவதாரம், மத்ஸ்ய அவதாரம், கூர்ம அவதாரம், வாமனஅவதாரம் போன்றவற்றின் அவதாரப் பணி சீக்கிரமே நிறைவேறி விடுவதால். அந்த அவதார மூர்த்திகட்கு, தனிக்கோயில், தனிச்சன்னதி அதிகமில்லை. பெரிய அளவிலான பெருமாள் ஆலயங்களில் கூட, எல்லோருக்குமாக சேர்ந்தே தசாவதார சன்னதி உள்ளது. சில கோயில்களில் மட்டுமே, மூலவர் சன்னதியோடு, பிற அவதார மூர்த்திகளுக்கு தனிச் சன்னதிகள் உள்ளன. அவற்றிலும் ராமர், கிருஷ்ணருக்கே அதிகமாக உள்ளன. மேலும் சுதர்சனர் (சக்கரத்தாழ்வார்) சன்னதியுள்ள ஆலயங்களில் சக்கரத்தாழ்வாரின் பின்புறம் நரசிம்மரின் உருவம் அமைக்கப்படுவதால் திருச்சுற்றில் நரசிம்மருக்கு தனிச்சன்னதி இருப்பது குறைவே. தனி சன்னதி ஏற்படுத்தும் போது வடமேற்கு (வாயு) மூலையில் அமைப்பது வழக்கமாக உள்ளது.

நரசிம்மர் அவதார வரலாறு: மகாவிஷ்ணு இரண்யகசிபுவின் கொடுமையில் இருந்து பிரகலாதனைக் காப்பாற்றவும், இரண்யகசிபுவின் அறியாமையைப் போக்கவும் எடுத்த அவதாரமே நரசிம்ம அவதாரமாகும். பக்தனோ, பகைவனோ யாராயினும் சரி எவர் காட்டிய இடத்திலும் தான் இருப்பதை மெய்ப்பிப்பதற்காகவே நரசிம்ம மூர்த்தி தூணிலிருந்து தோன்றுகிறார்.

நரசிம்ம அவதார தத்துவம்: கோள்களும் நக்ஷத்திர மண்டலங்களும் எண்ணற்கரியவை. கணக்கிட இயலாத அளவுக்கு அவை கோடிக் கோடி  வருடங்கள் பழமையும் ஆனவை. அவற்றில் எல்லாம் நம்மால் நம்பமுடியாத அளவுக்கு பூதாகாரமான மிக மிகப் பெரிய உயிரினங்கள் பல வினோத வடிவங்களில் இருக்கின்றன. இவ்வுண்மையை பல நாட்டவரும் கலாச்சாரத்தவரும் அண்மைக் காலத்தில் தான் அகழ்வு ஆராய்ச்சிகள் மூலமாக அறியத் துவங்கியுள்ளனர். அது வரை பாரத மண்ணினர் வேதங்களிலும், புராணங்களிலும், இதிகாசங்களிலும் விவரித்த ஒட்டு (ஹைப்ரிட்) த்தாவரங்கள் போன்ற வினோதமான உருவங்களை மிருக உறுப்பும் மனித உறுப்பும் இணைந்த நரசிம்மர் போன்ற வடிவங்களை பொய் என்றே சாதிக்க முயன்றனர்.

இருந்திருக்காலம் என்று கூட ஏற்றுக் கொள்ள வில்லை. கிராமத்திலேயே வாழ்பவர்களுக்கு நகரங்களில் உள்ள சுகபோகப் பொருட்கள் தெரிவதில்லை. உயிரைப் பறிக்கும் பல ஆபத்துக்களிருப்பதும் தெரிவதில்லை. அதே போல பண்டைக் காலத்தில் வாழ்ந்தவனுக்கு எதிர்கால உலகின் போகங்களும் தெரிந்திருக்காது. மனிதனை மாய்க்கக்கூடிய பொருள்களும் நிலைகளும் பெருகி விடுவதும் தெரிந்திருக்காது. இந்த நிலையினால் தான் பல அசுரர்களும், தேவர்களும் தம் பேராசைகள் நிறைவேறுவதற்காகத் தவம் செய்து பின்னர் பெரும் நஷ்டம் அடைந்ததைக் காண்கிறோம். கற்பனை செய்யவும் அனுமானிக்கவும் முடியாத அண்ட சராசரங்களில் அவர்கள் ஆசைப்பட்டதின் பரிமாணமும், சாவு ஏற்படுத்தக் கூடியதாக நினைத்த சூழல்களும் மிகமிகக் குறைவே. பிறந்தவை மறைந்தே ஆக வேண்டும். எதுவுமே என்றுமே ஒரே உருவில் இருக்க முடியாது என்பதும் இயற்கை நியதி. இதை உணராது, பின்னால் தேவையாயிருக்கும் என்று எண்ணி நாம் தற்போதைய செலவைக் குறைத்துக் கொண்டு நீண்டகால சேமிப்புத் திட்டங்களில் பணம் கட்டுகிறோம். இன்னின்ன வகைச் செலவினமோ ஆபத்தோ வந்தால் அவற்றைச் சமாளிப்பதற்காக அலுவலகங்களிலும், வங்கிகளிலும், ஆயுள் காப்பீட்டுக் கழகங்களிலும் இன்னும் பல சேமிப்புத் திட்டங்களிலும் சேருகிறோம். இது போன்ற செயல்பாடே முன்பு பல்லோரும் தவத்தினால் போகங்கள் பெற்றதும் இறப்பை ஒத்திப்போட முயன்றதும் ஆகும். காப்பீட்டுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடியே நாம் இறக்கப் போவதில்லை.

அவ்வகையிலேயே இறந்தாலும் கூட சேமித்த பணத்தை நாம் அனுபவிக்கப் போவதில்லை. மேலும் பின் சந்ததியினரை நாம் நினைத்த படியே நம் சேமிப்பை பயன்படுத்திடச் செய்யவும் நம்மால் முடியாது. பிறப்பும், மறையும் நிரந்தர தோற்ற - அழிவு அல்ல இதை உணராது சாமர்த்தியராக நினைத்துக் கொண்டு நமக்குத் தெரிந்த அனைத்து வகைகளாலும் இறப்பு வரக் கூடாது என வரம் வேண்டுவது அசட்டுத்தனமே.

உதாரணமாக அருகிலுள்ள சிறு பள்ளத்தில் விழுந்தாலும் சாவு ஏற்படலாம் என்பதை உணராது நாம் மலையிலிருந்து உருண்டாலும் சாகக் கூடாது என்று வரம் கேட்கிறோம்; தன் காதுக்குள் அல்லது தும்பிக்கையுள் நுழைந்த மிகச் சிறு எறும்போ சிலந்தியோ கூடத் தன் உயிரைப் போக்கலாம் என்பதை அறியாத யானை, பெரிய உயிரினங்களால் ஆபத்து வரக்கூடாது என்று கேட்கிறது. இது போலவே தான் இராவணன், மனிதன் தன்னை என்ன செய்திட முடியும் என்ற இறுமாப்பில் அவனை மட்டும் குறிப்பிடாது பிற எல்லாவற்றிலிருந்தும் சாகாவரம் பெற்று வரங்களின் பயன்கள் விரயமானவுடன் மனித வடிவில் வந்த இராமனால் அழிந்துபடுகிறான்.

பல்-இன இணை-உருவங்கள் இருக்க முடியும் என்றும் அவற்றாலும் இறப்பு ஏற்படலாம் என்றும் அறியாததால் தான் இரண்யகசிபுவும் இணை உருவாக அவதரித்த நரசிம்ம மூர்த்தியால் அழிகிறான். தொன்று தொட்டு சிலர் தானே தெய்வமெனவும் தனக்கு மேலான சக்தியில்லை யாவரும் தன்னை மட்டுமே வழிபட வேண்டும் என்றும் கூறி பல்லோரை பல்வகையிலும் பயமுறுத்தி பலாத்காரப்படுத்தி வந்துள்ளனர். அவர்களில் இரண்யகசிபுவும் ஒருவன். அத்தகையவரின் போக்கைக் கண்டிப்பதற்காகவும் களைவதற்காகவும் பரம்பொருள் எடுத்த அவதாரங்களில் நரசிம்ம அவதாரமும் ஒன்று. நமக்கு ஆசைப்படவும் தெரியவில்லை; அழியக் கூடிய நிலைகளும் தெரியவில்லை. நம் சிற்றறிவுக்கு எட்டியதே முழுமை - உண்மை என்று நினைத்து செயல்பட்டு சீரழிவதை விட நம்மை உருவாக்கிய சக்தி நமக்கு நன்மையானதையே நவிலும் என்பதை உணர்த்திட நிகழ்ந்தவையே அனைத்து அவதாரங்களும் ஆகும்.

நரசிம்மர் வழிபாடு: நரசிம்மர் பாரதம் முழுதும் வணங்கப்பட்டாலும் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் தான் அவருக்குத் தனி கோவிலும் சிறப்பு வழிபாடும் அதிகம். வைகாசி மாதம் வளர்பிறை சதுர்தசியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை சந்திப்பொழுதில் நரசிம்மரை வழிபடுவதே நரசிம்ம ஜயந்தியாகும். சோமப்பிரதோஷமும், சனிப்பிரதோஷமும் சிறப்பு போல நரசிம்ம ஜெயந்தி திங்கட்கிழமையிலும் நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதியிலும் வழிபடுதல் சிறப்பு. இவ்விரதத்தை அனுஷ்டித்ததாலேயே கயவனாக இருந்த சுவேதன் மறுபிறவியில் பிரகலாதனாகப் பிறந்து பெருமாள் அருள் பெற்றதாக விஷ்ணுவே கூறியிருப்பதால் அவர் நரசிம்மராக உருவெடுத்தது பிரகலாதனுக்காக மட்டுமல்ல ஒரு முறை தான் அல்ல என்பதும் தெரிகிறது. இறைவனை வழிபட எந்நேரமும் உகந்ததே என்றாலும் நம் வசதி கருதி சில நல்-நிகழ்வுகளோடு தொடர்புடைய நாட்களில் அல்லது நேரத்திலாவது வழிபட வேண்டும் என்பதற்காகவே சதுர்த்தியில்/ சஷ்டியில்; செவ்வாய்/வெள்ளியில்; காலை அல்லது மாலையில் என்று வெவ்வேறு சமயத்தில் வெவ்வெறு தெய்வங்களை வழிபடுவது மரபாக உள்ளது. அன்றாட நரசிம்மர் வழிபாட்டில் பிரதோஷ வேளை (சூரியன்மறைவுக்கு முன் 1.30 மணியும், பின் 1.30 மணியும்) ஆக மொத்தம் (மாலை 4.30 முதல் 7 .30 வரை 3 மணி) நேரம் சிறப்பு. அதுவும், சதுர்தசி நாளில் சிறப்பு. சித்திரை மாத வளர்பிறை அக்ஷய திருதியை வழிபாடும் சிறப்பு.

நரசிம்மர் விஷ்ணுவே என்பதால் பொதுவாக விஷ்ணு வழிபாட்டில் பயன் படுத்தும் மலர்கள், வஸ்திரம், நைவேத்யம் ஆகியவற்றை உபயோகிக்கலாம். எனினும் செவ்வரளி போன்ற சிகப்பு வண்ண மலர்களும், சர்க்கரைப் பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளும் சிறப்பு. ஹோமத்திற்கு தேன் கலந்த மல்லிகை மலர்கள் உகந்தது. குளுமைப் பொருளான சந்தனத்திலும் செஞ்சந்தனமும், சந்தனாதி தைலக்காப்பும் சிறப்பு. அவரவருக்கு ஏற்றபடி 1,3,6,8,10,19,32,62 அக்ஷர நரசிம்ம மந்திரத்தை ஜபிக்கலாம்; துதிகளைக் கூறிடலாம்.

தமிழகத்துள்ள நரசிம்மர் ஆலயங்கள்

விஷ்ணு மூலவராக உள்ள ஆலயங்கள் தமிழகத்தில் சுமார் 5,200 உள்ளன. அவற்றில் பெருமாளுக்கு வழங்கும் சுமார் 6000 நாமங்களில், பரவலாக உள்ளதில் நரசிம்மரும் ஒன்று அப்பெயரோடு சுமார் 100 கோயில்கள் உள்ளன. அங்கெல்லாம், பெருமாள் வெறுமனே நரசிம்மர் என்று மட்டும் அழைக்கப் படுவதில்லை. உருவ அமைப்பு ஏந்தியுள்ள ஆயுதங்கள், பார்வை நிலை, அணிந்துள்ள ஆபரணங்கள், இருக்கும் பாங்கு, அருட்தன்மை போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு அடைமொழியோடு 30 திருப்பெயர்கள் உள்ளன. அவை

1. அகோபில நரசிம்மர்                     2. அழகிய சிங்கர்
3. அனந்த வீரவிக்ரம நரசிம்மர்    4. உக்கிர நரசிம்மர்
5. கதலி நரசிங்கர்                                6. கதலி லக்ஷ்மி நரசிம்மர்
7. கதிர் நரசிம்மர்                                 8. கருடாத்ரிலக்ஷ்மிநரசிம்மர்
9. கல்யாணநரசிம்மர்                       10. குகாந்தர நரசிம்மர்
11. குஞ்சால நரசிம்மர்                     12. கும்பி நரசிம்மர்
13. சாந்த நரசிம்மர்                            14. சிங்கப் பெருமாள்
15. தெள்ளிய சிங்கர்                         16. நரசிங்கர்
17. பானக நரசிம்மர்                          18. பாடலாத்ரி நரசிம்மர்
19. பார்க்கவ நரசிம்மர்                     20. பாவன நரசிம்மர்
21. பிரஹ்லாத நரசிம்மர்                22. பிரஹ்லாத வரதநரசிம்மர்
23. பூவராக நரசிம்மர்                       24. மாலோல நரசிம்மர்
25. யோக நரசிம்மர்                          26. லட்சுமி நரசிம்மர்
27. வரதயோக நரசிம்மர்                28. வராக நரசிம்மர்
29. வியாக்ர நரசிம்மர்                     30. ஜ்வாலா நரசிம்மர்

முக்கிய நரசிம்மத் தலங்கள்

மிகப்பிரபலமான நரசிம்மர் தலங்களும் அவற்றைப் பற்றி சில முக்கிய குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

அ) ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த தலங்கள்

ஜோதிஷ்மட்: உ.பி. மாநிலம். ஆதிசங்கரர் எழுப்பிய ஆலயத்தில் உக்ர நரசிம்மர். 246449.

அகோபிலம் (சிங்கவேள் குன்றம்) : ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் நந்தியாலின் தென்கீழ் 48 கி.மீ. நவநரசிம்ம க்ஷேத்ரம். மலையில் 9 கி.மீ. ல் அகோபில நரசிம்மர் கோயில். குடவரை நரசிம்மர் வெளியான தூண் 2கி.மீ ல் உள்ளது. அடிவாரத்து பிரகலாத வரதன் கோயிலே அகோபில மடத்தின் தலைமையகம். இம்மடத்தின் அழகிய சிங்க ஜீயர், ஸ்ரீரங்கத்தில் செய்த அபூர்வ கோபுரத் திருப்பணியை எவரும் மறக்க முடியாது. ஆதிசங்கரரை, காபாலிகர்களிடமிருந்து, நரசிம்மர் காப்பாற்றிய தலம். (மங்க-திருமங்) (பாசு - 10) 518454.

சோளிங்கபுரம் (திருக்கடிகை): தமிழ்நாடு, வேலுரின் வடகீழ் 40கி.மீ. மலையில் 500 அடி உயரத்தில் யோகநரசிம்மர் ஆலயம். அடிவராத்தில் உத்ஸவமூர்த்தி மட்டுமே உள்ளார். சிறிது நேரம் தங்கினாலே முக்தியளிப்பது (மங்க-பேயா, திருமங்) (பாசு-4) 631102.

வேளுக்கை: காஞ்சிபுரத்தில் திருத்தண்கா சமீபம். ஸ்ரீ அழகியசிங்கர் கோயில். மேற்கு திசையில் அசுரர்களை தடுத்தபின், பெருமாள், யோக நரசிம்மராக, தானே விரும்பித் தங்கிவிட்ட இடம். (மங்க-பே) (பாசு - 4) 631501

திருவாழித் திருநகரி: சீர்காழியின் தென்கீழ் 6 கி,மீ ல் திருவாழி. அங்கிருந்து வடகீழ் 4 கி.மீ திருநகரி. தேவாரத்தில் வலஞ்சுழியும், கொட்டையூரும் போல திருவாலி லக்ஷ்மி நரசிம்மரும், திருநகரி தேவராஜனும் சேர்ந்தே போற்றப்பட்டுள்ளனர். நாங்கூர் 11 திருப்பதிகளுள் ஒன்று.

சிவத்தலம். சத்திமுத்தத்தில் சிவனும், அம்பிகையும் போல பிராட்டியும் பெருமாளும் ஆலிங்கனக் கோலம். திருமங்கையாழ்வாரைத் தடுத்து ஆட்கொண்டு அஷ்டாக்ஷரம் உபதேசித்த பதி. (மங்க -குல , திருமங்) (பாசு -42) 609106.

நாகை (நாகப்பட்டினம்) : நீலமேகப்பெருமாள் கோயில் தஞ்சையின் கிழக்கே 90 கீ.மீ அபூர்வமான அஷ்டபுஜநரசிம்மர் திருமேனி உள்ளது. துருவனும் ஆதி சேடனும் பணிந்தது. (மங்க - திருமங்) (பாசு - 10) 611001.

தஞ்சைமாமணிக்கோயில் (வெண்ணாற்றங்கரை): தஞ்சைக்கு வடக்கே திருவையாறு வழியில் 6 கி.மீ. அருகருகே 3 பெரிய விஷ்ணு கோயில்கள். ஒன்றாகவே பாடப்பட்டவை. நீலமேகப் பெருமாள், மணிகுன்றப் பெருமாள் மற்றும் நரசிம்மன் கோயில்கள்.

தஞ்சகன், தண்டகன், கஜமுகன் ஆகியோரின் கெடுமையிலிருந்து மக்களைத் திருமால் காத்த பதி. திவ்யப்ரபந்தம் கூறி வணங்கிடலாகாத தினங்களில் தேசிகப்ரபந்தம் பாராயணம் செய்யுமாறு நயினாச்சாரியார் நியமித்த பதி. (மங்க-நம், பூத, திருமங்) (பாசு - 5) 613003.

திருக்கோஷ்டியூர் : (தென்) திருப்பத்தூரிலிருந்து சிவகங்கை வழி 7 கி.மீ. உரகமெல்லணையான் கோயில்.

மகாவிஷ்ணு நின்று, இருந்து, கிடந்த, நடந்து, கூத்தாடும் 5 நிலையில் தரிசனமளிக்கும் பதி. 1000 ஆண்டுகட்கு முன்பே, கீழோர் எனப்பட்டவரை, திருக்குலத்தோர் என்று கூறி, தான் நரகம் சென்றாலும், அனைவரும் உய்வதற்காக ,யாவரும் அறியுமாறு ராமானுஜர் நாராயண மந்திரத்தை உரக்கக் கூவிய தலம்.

மகாமகக்கிணறு சிறப்பு. வைணவ மறுமலர்ச்சியில் முக்கிய ஸ்தலம். சிவனும் சேர்ந்து அருளும் பதி. மயனும், விஸ்வகர்மாவும் இணைந்து எழுப்பியது. தென்புற நரசிம்மர் தெற்காழ்வார் இரண்யனைப் பிடித்த கோலம். வடபக்க நரசிம்மர் வடக்காழ்வார் இரண்யவதம் செய்த கோலம். இரண்டுமே மிகப்பெரிய திருவுருவங்கள். (மங்க - பெரி, திருமங், பூத, பேயா, திருமழிசை) (பாசு - 39) 623210.

ஆ) பிற நரசிம்மத் தலங்கள்

ஆந்திரம் மாநிலம்

1. எர்ரகுண்டா - கடப்பாவிலிருந்து 40 கி.மீ. லக்ஷ்மி நரசிம்மர், யோக நரசிம்மர் ஆலயங்கள். 523327.

2. யாதகிரி - ஐதராபாத்திலிருந்து 70 கி.மீ மலையில் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம். 375 படிகள்.

3. தர்மபுரி - கோதாவரி நதி மேற்குக் கரை (கரிம் நகரிலிருந்து 16 கி.மீ) இரு நரசிம்மர் ஆலயங்கள். 505425.

4. பாபட்லா - தெனாலியிருந்து 43 கி.மீ. ஜ்வாலா நரசிம்மர் கோயில். 422101

5. அகிரபள்ளி - விஜயவாடாவிலிருந்து செல்லலாம். வியாக்ர நரசிம்மர் ஆலயம்.

6. மங்களகிரி - பெசவாடாவிலிருந்து 13 கி.மீ. மலையில் 400 படிகள். நரசிம்மருக்கு வாயில் பானகம் விடுகிறார்கள். 522503.

7. சிம்மாசலம் - வால்டேரிலிருந்து 8 கி.மீ. மலைமேல் 1000 படிகள். வராஹ நரசிம்மர். உக்ர மூர்த்தி என்பதால் எப்போதும் சந்தனக்காப்பு. சித்திரை மாத வளர்பிறை அக்ஷய திருதியையில் மட்டும் புது சந்தனக்காப்பு - 530004.

8. பூமினிபட்டினம் : விஜய நகரத்திலிருந்து 20 கி.மீ. லக்ஷ்மி நரசிம்மர்.

9. கொருகொண்டா: ராஜமுந்திரியிலிருந்து 20 கி.மீ. மலையில் 600 படிகள். சாத்வீக நரசிம்மர். 533289.

10. லக்ஷ்மி புரம்: கரிம் நகர் மாவட்டம் மலையில் நவநரசிம்மர். இரண்டாவது அகோபிலம் என்பர். 521131.

11. திராக்ஷõராமம் : காகினநாடா சமீபம் புகழ் பெற்ற பீமேஸ்வரர் கோயிலில் ஷேத்ராபாலராயுள்ள நரசிம்மர். 533262.

12. திருப்பதி: <உலகப்புகழ் வேங்கடாசலபதி கோயிலில் உள் பிரகாரத்தில் தனி நரசிம்மர் சன்னதி. 517504.

13. கம்மம் : ஸ்தம்பம் (தூண்) என்பது கம்மம் ஆகிவிட்டது. ஸ்தம்ப நரசிம்மர் கோயில். 507001.

கர்நாடக மாநிலம்

1. நரசிப்பூர் திருமுக்கூடல் - மைசூரின் தென்கீழ் 30 கீ.மீ. காவிரி, கபில, ஸ்படிக நதிகளின் சங்கமத்தலம். குஞ்சால நரசிம்மர். ஒரு கையில் குண்டுமணியும், மறு கையில் தராசும் ஏந்திய அபூர்வத் திருமேனி. 502313.

2. அகர: மைசூர் மாவட்டம் ஏலந்தூர் தாலுக்கா. ஒரே திருமேனியில் யோக, லக்ஷ்மி, உக்கிர, ஜ்வால, பிரகலாத வரத முகங்களுடைய பஞ்சமுக நரசிம்மர். 571485.

3. பாண்டவபுரம் :ஸ்ரீ ரங்கப் பட்டிணத்திலிருந்து 32 கி.மீ. 400 படிகள். மலையில் யோக நரசிம்மர் ஆலயம். 571484.

4. சாளக்கிராம்  : மைசூர் மாவட்டம் கிருஷ்ணராஜ நகரின் வடமேற்கு 15 கி.மீ. 571604.

5. ஹோலே நரசிப்பூர் : ஹாஸனிலிருந்து தென்கீழ் மைசூர் வழி 32 கி.மீ. பிரஸன்ன நரசிம்மர். 573211.

6. சிபி: தும்கூர் மாவட்டம், சிரா தாலுக்காவில் சாளக்கிராம வடிவில் நரசிம்மர்.

7. ஹம்பி : பெல்லாரி மாவட்டம் ஹாஸ்பேட் தாலுக்கா 22 அடி <உயர நரசிம்மர். 583289.

8. கனககிரி : ராய்சூர் மாவட்டம், கங்காவதி தாலுக்கா வடமே. 20 கி.மீ. லிங்க வடிவில் லக்ஷ்மி நரசிம்மர். 584119.

9. கர்பரா: பிஜப்பூர் மாவட்டம் தாலுக்காவில் அரசமரமே நரசிம்மராக வழிபாடு.

10. ஹலசி : பெல்காம் மாவட்டத்தில் தெற்கே காநாபுர தாலுக்கா. பூவராக அனந்தவீர விக்கரம நரசிம்மர். 591142.

11. முடுதகாண ஹுப்ளி : பெல்காம் சமீபம் சம்பகாவ் வட்டம். அஸ்வத்த நரசிம்மர். 591118.

மஹாராஷ்டிரா மாநிலம்

மஹாராஷ்டிரா மாநிலத்தில் ராகேர் மற்றும் சார்தானா ஆகியவை நரசிம்மத் தலங்கள்.

ஒரிசா மாநிலம்

ஒரிசா மாநிலம் ந்ருசிங்கநாத் ஒரு நரசிம்மர் தலம்.

தமிழ்நாடு மாநிலம்

1. குறையலூர் : சீர்காழியிலிருந்து 8 கி.மீ. நரசிம்மர் கோயில். நாங்கூர்ப் பகுதி பஞ்ச நரசிம்மத்தலத்தில் ஒன்று.
பிற ஊர்கள்: மங்கைமடம் ; திருநகரி; திருவாலி. 609106.

2. நாமக்கல் : ஊரின் நடுவே உள்ள மலைமுகட்டில், மேற்புறம் நரசிம்மர் சன்னதி. 637001.

3. சிங்கப்பெருமாள் கோயில் : சென்னையிலிருந்து (தாம்பரம் வழி) 48 கி.மீ. உக்ர நரசிம்மர் கோயில். 603204.

4. திருவதிகை : பண்ருட்டி அருகே 1 கி.மீ. சரநாராயணர் கோயிலில் பள்ளி கொண்ட நரசிம்மர் சிறப்பு. 607106.

5. காஞ்சிபுரம் : சங்கராச்சாரியார் மடத்தில் நரசிங்க சாளக்கிராமம் பூஜிக்கப்படுகிறது. 631501.

6. ஸ்ரீரங்கம் : பார்புகழ் ரெங்கநாதர் கோயிலில் கம்பனின் இராமாயணத்தை அங்கீரிப்பதற்கு விமான சிற்பத்திலிருந்து வெளிவந்த நரசிம்மரை மேட்டழகிய சிங்கர் என்பர். 620006.

7. அவனியாள்புரம்: அண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகில் விஷ்ணு ஆலயத்தில் 5 நரசிம்மர்கள் வழிபாடு. 604504

பாண்டிச்சேரி மாநிலம்

பாண்டிச்சேரி மாநிலம் : சிங்கரி கோயில் என்ற ஊரில் 18 கை நரசிம்மர். 605007.

கேரள மாநிலம்

1. கடுங்கலுர் : ஆலவாயிலிருந்து 2 கி,மீ. நரசிம்மர் கோயில். 683103.

2. துறவூர் : ஆலப்புழையிலிருந்து 35 கி.மீ. இரண்டு நரசிம்மர் கோயில்கள். 688532.

3. குருவாயூர் : கிருஷ்ணன் கோயிலில் நாராயண பட்டத்ரி தன் குருவிடம் வாங்கிக் கொண்ட நோய் நீங்கிட நாராயணீயம் இயற்றும் போது விஷ்ணு நரசிம்மக்காட்சி அளித்த தலம். 680101.

மதுரை ஆனைமலை நரசிங்கம் யோக நரசிங்கப் பெருமாள் ஆலயம்

மதுரைக்கு வடகிழக்கே, மேலூர் வழியில், 4 கி.மீ. தொலைவிலுள்ள ஒத்தக்கடைக்கு அருகே, யானை படுத்திருப்பது போல், தென்மேற்கு - வடகிழக்குப் போக்கில் சுமார் 250 அடி உயரமும், 5 கி.மீ. நீளமும் உள்ள மலையே ஆனைமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆனைமலையின் வடபுறம் உள்ள நரசிங்கம் கிராமப்பகுதியில் பழமையான முருகன் குடவரைக் கோயிலுக்கு அருகில், யோக நரசிங்கப் பெருமாளுக்கும் ஒரு குடவரை ஆலயம் உள்ளது. ஆலய வாச<லுக்கே செல்லும் வகையில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து அடிக்கடி மினிபஸ் வசதியுள்ளது. இரண்யகசிபுவை அடக்கிட நரசிம்மராக வந்தவர்க்குக் கோயில் உள்ள ஊரை நரசிங்கம் என்பது பொருத்தமாக இருப்பது போல, இதன் பண்டைப் பெயர்களான நரசிங்க மங்கலமும் இரணியமுட்டமும் பொருத்தமாகவே உள்ளன. கி.பி. 8,9ம் நூற்றாண்டுகளில் மிக வளப்பமாக இருந்த இப்பகுதியில், மதுரையை ஆண்ட சடையவர்மன் பராந்தக பாண்டியனின் அமைச்சர் மாறன் காரி யோக நரசிம்மருக்குக் கோயில் எழுப்பியதாகத் தெரிகிறது. சுமார் 6 அடி அகல, நீள, உயரக் கருவறையும், யோக நரசிம்மப் பெருமாள் திருவுருவும், கருவறைக்கு முன் உடையவரும் நம்மாழ்வாரும் உள்ள அர்த்த மண்டபமும் குடைவு அமைப்புகள். பிற மண்டபங்கள் கட்டுமானமே. கருடாழ்வார் மண்டபமும், ஆலய வளாகத்தின் வடகீழ் பகுதியில் உள்ள நரசிங்கவல்லித் தாயாரின் தனிக்கோயிலும் பிற்கால அமைப்புகளாகத் தெரிகின்றன. ஆலயத்தை ஒட்டி கிழக்கு, வடகிழக்காக, மலையின் அடிவாரத்திலேயே சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் சதுரவடிவ நன்னீர்ப் பொய்கை உள்ளது. காலவசத்தால், சம்பு, தர்ப்பை மற்றும் காட்டுச் செடிகள் வளர்ந்து, நீர்ப்பரப்பே தெரியாத அளவுக்கு மறைந்திருந்த பொய்கையின் நிலை தற்போது மாறிவிட்டது. பக்தர்கள் மனதில் பெருமாள் ஏற்படுத்திய உந்துதலால், பொய்கை பழைய பொலிவை மீளப் பெற்றுள்ளது. குடவரைக் கோயிலை திருச்சுற்றிட வாய்ப்பில்லாததால் பண்டைய மரபுப்படி, திருக்குளத்தைச் சுற்றி வந்த பின் ஆலய தரிசனம் செய்தல் சிறப்பு. கங்கை நீரும், காவிரி நீரும் போற்றப்படுவது போல, மிகச் சுவையாக உள்ள இந்தப் பொய்கையின் தீர்த்தமும் பல உடல், மன அல்லல்களைப் போக்கும் தனித்தன்மையும், சிறப்பும் பெற்றிருப்பதை, முந்தைப் புராணங்களும், இன்றையோரின் விவரிப்புக்களும் தெரிவிக்கின்றன.

இத்திருக்குளத் தீர்த்தத்தைப் பெருமாள் வழிபாட்டிற்கு எடுத்து வருவதற்காக, ஆலயத்தின் கிழக்குத் திருமதிலில் உள்ள வாயில், எப்பொழுது, எதற்காக அடைபட்டது என்பதை அறிய இயலவில்லை. வசிக்கும் இல்லமாயினும், வழிபட்டுப் பயனடையும் இறைக் கோயிலாயினும் கிழக்கு அல்லது வடகிழக்கில் இருந்த வாயில்கள் அடைப்படுவது உகந்தது அல்ல. பல்லோரும் நாடி வருகின்ற நிலை குறைவதோடு, அருகி<லுள்ளோர் வருவதும் கூடக் குறைந்து விடுவதும், அனுபவ உண்மை; வாஸ்து சாஸ்திர செய்தியுமாகும். ஆலயநிர்மாண வல்லுனர்களும், ஆலய நிர்வாகிகளும் ஆருடம் சொல்லும் அருளாளர்களும் கூடி அடைக்கப்பட்ட வாயிலை திறந்துவிட்டால், யோக நரசிம்மரின் அருளைப் பெறுவோரின் எண்ணிக்கை கூடிடும். மாசிப் பவுர்ணமியில், பெருமாள் ஆலயத் திருக்குளங்களில் நடைபெறும் கஜேந்திர மோக்ஷ திருவிளையாடல் இத்திருக்குளத்தில் இன்றும் நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் கொடி மரம் இல்லாததால், நின்ற கோலத்திலுள்ள நரசிம்ம உற்சவர் திருமேனி கோயிலுக்கு வெளியே வருவதில்லை. இங்கிருந்து 4 கி.மீ.ல் உள்ள, ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த திருமோகூர் காளமேகப் பெருமான் உற்சவ மூர்த்தியே இத்திருவிழாவிற்காக நரசிங்கத்திற்கு எழுந்தருளுகிறார். ஆலயங்களில் நிறுவப்படும் கொடிமரத்தின் உயரம் கருவறைக்கு மேல் எழுப்புகின்ற விமானத்தின் நீள, அகல, உயர பரிமாணத்தின் படி அமைப்பதே பொது மரபு. யோக நரசிம்மரின் குடவரைக் கருவறைக்கு மேல் ஆனைமலை வானளாவி இருப்பதும், இங்கு கொடிமரம் வைக்கப்படாமைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். பத்துப்பாடல் ஆசிரியர் பெருங்கௌசிகனார் பிறந்த ஊர் யோக நரசிம்மர் அருளும் இந்த நரசிங்கம் கிராமமே.

ஆனைமலை கிரிவல வழிபாடு

திருவண்ணாமலை போல, தமிழகத்தில், நெடுங் காலமாக, கிரிவலம் செய்யப்படும் தலங்களுள் மதுரை மாவட்ட ஆனைமலையும் ஒன்று. இதை ஒட்டி உள்ள கொடிக்குளம், வெளவால் தோட்டம், ஒத்தக்கடை, நரசிங்கம், அரும்பனூர் புதூர் ஆகிய ஊர்களிலிருந்து பக்தர்கள் பவுர்ணமி தோறும் ஆனைமலையை கிரிவலம் வருகின்றனர். எல்லோரும் ஒரே இடத்திலிருந்து திருச்சுற்றை தொடங்கி முடிப்பதில்லை. தத்தம் ஊரிலிருந்தே புறப்பட்டு திரும்புகின்றனர். சுமார் 12 கி.மீ. திருச்சுற்றை, அதிகாலை 3 மணிக்குத் துவங்கி ஆரோக்கியமும், அமைதியும் அருளும் பெற்று விடியும் போது வீடு திரும்பி, அன்றாடப் பணியில் ஈடுபடுகின்றனர். விநாயகர், முருகன், சிவபெருமான், அம்மன், பெருமாள், கிராம தேவதைகள் உட்பட பரம்பொருளின் பல்வித அவதார ரூபங்களையும் தரிசித்த பயனை ஒருசேர அளிக்கின்ற ஆனைமலை கிரிவல வழிபாட்டை யாவரும் செய்திட இறையருள் கூடட்டும்.

ஆதி சங்கரரும், நரசிம்மரும்

இல்லற வாழ்வு பற்றியும் வாதிடும் நிலையைப் பெறுதற்காக ஆதிசங்கரர், தன் உடலை ஒரு காட்டு மரத்தில் மறைத்து விட்டு, இறந்துவிட்ட அமரசன் என்பவனின் உடலில் புகுந்து, சிலகாலம் கழித்து, அறிய வேண்டியது நிறைவானவுடன், தம் பழைய உடலைத் தேடிச் செல்கிறார். அப்போது, உடல் பாதி எரிந்து கொண்டிருந்தாலும் சங்கரர் அதனுள் புகுந்தவுடன் ஏற்பட்ட தாங்க முடியாத உஷ்ணத்தைத் தணிக்க, சுவர்ண நரசிம்மரைத் துதித்த பின்னரே முன்பிருந்த தேகப் பொலிவை மீளப் பெறுகிறார். பின்னொரு சமயம், காபாலிகர்கள் சங்கரரைக் கொல்ல முற்பட்டபோது, அவரின் சீடரான பத்மபாதரின் மூலம், சங்கரரைக் காப்பாற்றியது நரசிம்ம மூர்த்தியே. இதனால் தான், கொலை செய்யப்படுவோமோ என பயப்படுபவரும், தீக்காயத்தால் அவதிப்படுபவர்களும், ஆதிசங்கரர் இயற்றிய கராவலம்பனத் துதியையும் பஞ்சரத்தினத்தையும் நரசிம்மர் வழிபாட்டில் மிக முக்கியமாகக் கருதுகின்றனர்.

நரசிம்மர் திருவுருவ பேதங்கள்

நரசிம்மர் பற்றியுள்ள பல இலக்கியங்களில் நரசிம்மரின் உருவ எண்ணிக்கை மிக அதிகமாக 74 ஆகவும், அடுத்து 23 ஆகவும் கருதப்பட்டாலும், நவ (9) நரசிம்மர் என்ற எண்ணமே பரவலாக உள்ளது. அவை:

1. அகோபில நரசிம்மர்
2. சத்ரவட நரசிம்மர்
3. யோகாநந்த நரசிம்மர்
4. காராஞ்ச நரசிம்மர்
5. பார்க்கவ நரசிம்மர்
6. வராக நரசிம்மர்
7. ஜ்வாலா நரசிம்மர்
8. பானக நரசிம்மர்
9. மாலோல நரசிம்மர்

சிங்க முகமும், மனித உடலுமுள்ள நரசிம்மருக்குப் பொதுவாக இருப்பது ஒரு தலை, நான்கு கைகளே.

எனினும் சில தலங்களில் நரசிம்மர் 5 முகமும், 8,10,16,18,26,32,64 கரங்களும் உடையவராகவும்; லக்ஷ்மியுடன் அல்லது ஸ்ரீ தேவி பூதேவியோடு சேர்ந்திருப்பராகவும்; அமர்ந்து, நின்று நகருபவராகவும்; வராகமும் சிம்மமும் சேர்ந்த வடிவிலும் மாறுபட்ட இன்னும் பல உருவங்களோடும் பல ஆயுதங்களோடும் காணப்படுகிறார்.

நரசிம்மரைப் பற்றிய முக்கிய நூல்கள்

1. பாகவதம்                                   2. ஹரிவம்சம்
3. விஷ்ணுபுராணம்                    4. விஹகேந்திரஸம்ஹிதை
5. பத்ம ஸம்ஹிதை                  6. ஈசுவர ஸம்ஹிதை
7. பராசர ஸம்ஹிதை                8. ஸாத்வத ஸம்ஹிதை
9. சேஷ ஸம்ஹிதை                10. வைகானச ஆகமம்
11. விஷ்ணு ஸம்ஹிதை        12. ஸ்ரீ ப்ரஸன்ன ஸம்ஹிதை
13. விஷ்ணு தந்திரம்                  14. விஷ்வக்சேன ஸம்ஹிதை
15. ஹயசீர்ஷ ஸம்ஹிதை    16. பரமேசுவர ஸம்ஹிதை
17. மத்ஸ்ய புராணம்                  18. சில்ப ரத்தினம்
19. ப்ரபஞ்ச சார ஸங்கிரஹம்  20. நரசிம்ம புராணம்.

கம்பப் பெருமாள்கள்

கலைகளுக்கு அதிபதியான சரஸ்வதி (பேச்சு + அம்மன்) பேச்சியம்மன் ஆகவும்; ஓம் காளீஸ்வரி அங்காளேஸ்வரி ஆகவும்; பிரும்மன் விரும்பன் ஆகவும் மாறியது போலவே ஸ்தம்பம் (தூண்) கம்பம் ஆகி, கம்பத்திலிருந்து வெளிப்பட்ட விஷ்ணு கம்பப் பெருமாள் ஆகிவிட்டார். தென் தமிழ்நாட்டில், குறிப்பாக மதுரைக்குத் தெற்கே கம்பப்பெருமாள் கோயில்கள் அதிகமாகவுள்ளன. கர்நாடகத்தில் நரசிம்மரை கம்படய்யா என்பது குறிப்பிடத்தக்கது.

நவகிரஹமும் நரசிம்மரும்

மதுரைக் கூடலழகர் கோயில் போன்ற மிகத் தொன்மையான சில திருமால் ஆலயங்களில் கூட நவக்ரஹ சன்னதியிருந்தாலும், பொதுவாக, பெருமாள் கோயில்களில் நவக்ரஹ சன்னதி மிகக் குறைவே. சைவ மரபில், குரு கிரகத்தை வணங்கிட தக்ஷிணாமூர்த்தியை வழிபடுவது போல, வைஷ்ணவ மரபிலும், நவக்கிரகங்களில் ஒவ்வொருவரையும், வழிபட விஷ்ணுவின் ஒரு அவதார மூர்த்தியை வழிபடுவது வழக்கமாக உள்ளது. இதுவே, விஷ்ணு ஆலயங்களில் நவக்கிர சன்னதி அதிகமின்மைக்கு காரணம்.

யோக நரசிம்மரின் சிறப்பு

குழந்தையை சீர்திருத்திட சீற்றம் கொள்ளும் தாய் ஒரே நொடியில், கோபம் தணிந்து, குழந்தையைக் கொஞ்சிப் பராமரிக்கிறாள். இது போலவே தான், இரண்யனைத் திருத்த, உக்ரவடிவமாக வந்த நரசிம்மரும் சீக்கிரமே யோகத்தில், அமைதியில் ஆழ்ந்து விடுகிறார். விஷ்ணுவை போகமூர்த்தி என்றே பரவலாக கருதினாலும், அவர் தக்ஷிணமூர்த்தி போல தன்னுள்ளேயே நிறைவு காணும் ஞானமூர்த்தியாக, தரிசிப்போர் ஞானநிலை அடைய உதாரணமாக இருப்பதே யோக நரசிம்ம ரூபம் ஆகும்.

கிரகங்களை வழிபட்ட பலனை அளிப்பதாகக் கருதப்படும் முக்கிய விஷ்ணு அவதாரங்கள்.

மத்ஸ்ய அவதாரம் - கேது     கல்கி அவதாரம்      - புதன்
வராக அவதாரம்   - ராகு      நரசிம்மர் அவதாரம் - செவ்வாய்
கூர்ம  அவதாரம்   - சனி       கிருஷ்ண அவதாரம் - சந்திரன்
பரசுராம அவதாரம் - சுக்ரன்   ராம அவதாரம்       - சூரியன்
வாமன அவதாரம்  - குரு       பலராமர் அவதாரம்  - குளிகன்

நரசிம்மர், செவ்வாய் கிரக தாக்கத்தை நமக்கு நன்மை பயப்பதாக மாற்றுவதால், செவ்வாய் கிரகத்தை வழிபட வேண்டியவர்கள் நரசிம்மரை, குறிப்பாக, செவ்வாய் கிழமைகளிலும். அன்றாடம், செவ்வாய் ஹோரையிலும் வணங்குவது சிறப்பாக கருதப்படுகிறது.

தினமும் பகலில் செவ்வாய் ஹோரை நேரம்

செவ்வாய் 6 மணி முதல் 7 மணி வரை, 1 மணி முதல் 2 மணி வரை
புதன் 10 மணி முதல் 11 மணி வரை, 5 மணி முதல் 6 மணி வரை
வியாழன் 7 மணி முதல் 8 மணி வரை, 2 மணி முதல் 3 மணி வரை
வெள்ளி 11 மணி முதல் 12 மணி வரை
சனி 8 மணி முதல் 9 மணி வரை, 3 மணி முதல் 4 மணி வரை
ஞாயிறு 1 மணி முதல் 2 மணி வரை
திங்கள் 9 மணி முதல் 10 மணி வரை, 4 மணி முதல் 5 மணி வரை.

செவ்வாய், 31 மே, 2022

குழந்தை சித்தர் பகுதி இரண்டு

[ஆஜானுபாகுவாக இருந்த சுவாமிகளுக்கு குழந்தை ஒன்று மாலைபோட விரும்பியதால் தன் உருவத்தைக் குறுக்கி குழந்தை எளிதில் மாலை போடும்படியாக ஒன்றே முக்கால் அடி உயரம் உள்ளவரானார். அது முதற்கொண்டு குழந்தையானந்த சுவாமிகள் என்று அழைக்கப்படலானார்.]

குழந்தையானந்தர் சித்தர்-2
***** **** ****  **** ***  **** ***   **
(இறுதி பகுதி)

இந்த நிலையில் குழந்தையை எங்கே விடுவது? என்று அவர்கள் யோசித்தனர்.  அடுத்த நொடியில் கோயிலுக்குள்ளே இருந்து பலமான மணியோசை கேட்டது.  வாயில் கதவுகள் தானே திறந்து கொண்டன. மூவரும் கோயிலுக்குள் நுழைந்தனர்.  கர்ப்பக் கிருகத்தின் அருகில் மீனாட்சியின் காலடியில் குழந்தையை விட்டாள் திரிபுரசுந்தரி.  ‘’தாயே! நாங்கள் வேண்டிக் கொண்டபடியே இந்தக் குழந்தையை உன்னிடத்தில் ஒப்படைத்து விட்டோம்.  இதைக் காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு’’ என்று கண்ணீர் மல்க வேண்டினாள்.

அர்ச்சகர் வரும் வரையில் காத்திருந்து, குழந்தையை அவரிடம் ஒப்படைத்து விட்டு வரும்படியாக காத்தவராயனிடம் சொல்லிவிட்டு, பெற்றோர் அங்கிருந்து புறப்பட்டு வீடு திரும்பினர்.  

மாலை நேரத்தில் தினப்படி கோயில் பூஜைக்காக வந்த அர்ச்சகர், கோயில் கதவுகள் விரியத் திறந்து கிடப்பதைப் பார்த்துப் பதறிக்கொண்டே உள்ளே வந்தார்.   அம்மனின் காலடியில் குழந்தை இருப்பதையும்,  குழந்தையுடன் காத்தவராயன் இருப்பதையும் கண்டார். காத்தவராயன் நடந்தவைகளை விவரமாக எடுத்துக் கூறினார்.  கோயிலின் கதவுகளைப் பூட்டிய சாவி தன்னிடம் இருக்கும் போது,  அவைகள் தாமாகத் திறந்து கொண்ட அதிசயம், மதுரை மீனாட்சி அம்மனின் அருளைத் தவிர வேறு எதனால் இருக்க முடியும்? என்று முடிவுக்கு வந்தார் அர்ச்சகர்.  அம்பிகையைத் தொழுதார், இது அம்மனின் குழந்தை என்று சொல்லிவிட்டு,  குழந்தையை அள்ளி எடுத்து அணைத்துக் கொண்டார்.   அன்று முதல் குழந்தையானந்தர் அந்தக் கோயிலிலேயே அம்மன் குழந்தையாக, அவளது சொந்தப் பிள்ளையாகவே வளர ஆரம்பித்தார்.  

ஒவ்வொரு நாள் மாலையிலும், அர்ச்சகர் தனது கோயில் வேலைகளை முடித்துக் கொண்டு கதவுகளைப் பூட்டிக் கொண்டு கிளம்புவார். குழந்தை அங்கேயே இருக்கும்.  இரவு நேரங்களில் மீனாட்சியம்மன் மனித உருவில் வந்து குழந்தையுடன் கொஞ்சுவாள்.  அவர்கள் இருவரும் பேசும் பேச்சொலியை அர்ச்சகர் பல சமயங்களில் கேட்டிருக்கிறார்.

தெய்வத்தின் குழந்தையாக அவர் வளருகின்ற  காலத்தில், அவருக்கு உபநயனமும் செய்யப்பட்டது. ராஜகோபாலன் என்று தீக்ஷா நாமமும் சூட்டப்பட்டது.  குழந்தை ராஜகோபாலனுக்கு மனிதர்களின் கர்ம விணைகளைப் போக்கும் மகா சக்தி வந்து குவிந்தது.  அவருக்கு பறவைகளைப் போல பறக்கின்ற சக்தியும் கிடைத்தது.  அஷ்டமா சித்துகளில் ஒன்றான லகிமா எனப்படும் சித்தின் துணையினால், அவர் தனது உடலை லேசாக்கிக் கொண்டு, எடையற்ற நிலையில் ஒரு பறவையைப் போலப் பறந்தார்.  அவரது முகத்தைப் பார்த்தாலே கர்ம வினைகள் மறையும். மனதில் குதூகலம் உண்டாகும்.  அமைதி ஏற்படும்.   சிலர் அந்தக் குழந்தை சித்தரின் முகத்தைக் காண்கிற போது, பேரானந்தப் பரவச நிலையை அடைந்துவிட்டனர்.

இறைவன் அவருக்கு நந்தி வித்தையை அருளிச் செய்தான்.  அவர் தன்னிடம் வந்து தங்களது குறைகளை சொல்லி அழுது குமுறும் ஏழை எளிய மக்களின் பிரச்சனைகளை, காது கொடுத்து கருணையோடு கேட்பார்.  அவர்களது நெற்றியில் தன்னுடைய விரலை பதிப்பார்.  அடுத்த நொடியில் அவர்களுடைய பிரச்சனைகள் விலகி துயரங்கள் தீர்ந்துவிடும்.

மனஉளைச்சலாலும், உடல் நோய்களினாலும், வறுமையாலும் பீடிக்கப் பட்ட மனிதர்கள் அவரை அனுகி, தங்கள் துன்பங்களைப் போக்கிக் கொண்டனர். குழந்தையானந்த சித்தரின் ஸ்பரிசத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் நோய் நீங்கி குணமடைந்தனர்.  தோல்வி கண்டு துவண்டவர்கள் வெற்றி நடை போட்டனர்.

அவருடைய புகழ் கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து பரவ ஆரம்பித்தது. இதைக் கேள்விப்பட்ட மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள்,  என்ன காரணத்தினாலோ, அவளுக்கு குழந்தையானந்தரை பிடிக்கவில்லை.  அவரது புகழையும், மக்களிடம் அவருக்கு உள்ள செல்வாக்கையும் அவள் வெறுத்தாள்.

கர்மவினையின் காரணமாக, அவள் குழந்தையானந்தருக்கு தொல்லைகள் தர ஆரம்பித்தாள்.  பலப்பல சூழ்ச்சிகள் செய்து அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொண்டாள்.   அவளுடைய பொறாமைத்தீ காட்டுத் தீ போல பரவியதால்,  என்ன செய்கிறோம் என்பதை அறியாதவளாக, குழந்தையானந்தரின் பெற்றோருக்கு சொல்ல முடியாத துன்பங்களையும்,  வேதனைகளையும் ஏற்படுத்தினாள்.  இதன் உச்சகட்டமாக சித்தரின் தந்தையார் கொலை செய்யப்பட்டார்.

தன் கணவன் கொலையுண்டதைக் கண்ட மனைவி திரிபுர சுந்தரி,  அவருடன் உடன் கட்டை ஏறினாள்.  ஒருவழியாக ராணி மங்கம்மாவின் ஆட்சி முடிந்து, சொக்கநாத நாயக்கர் அரியணை ஏறினார்.  

அந்த சமயத்தில் தென்னகத்தில்(காசி) இருந்து, கணபதி பாபா என்கிற சித்தர் மகான் ஒருவர் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வதற்காக மதுரைக்கு வந்திருந்தார். அம்மனை தரிசித்த சித்தருக்கு, அங்கே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கண்ணில் பட்டான்.  அவனுடைய அழகும், தேஜஸும் அவரைப் பெரிதும் கவர்ந்தன.  ஒரு நிமிடம் கண்களை மூடி தியானித்தார்.  உண்மை பளிச்சென்று புரிந்தது.

‘ஒ! இங்கே இருப்பவன் என்னுடைய சீடன் ‘ என்று அம்பாள் மூலம் உணர்ந்து கொண்டார் பாபா.  சிறுவனை தன் அருகில் வரச் சொல்லி அழைத்தார்.

குழந்தையானந்தரும் அவர் அருகில் வந்தார்.  ‘ஐயா! நானும் உங்களைத் தான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.  வாங்க போகலாம்’ என்று அழைத்ததோடு,  பாபாவின் வலது கரத்தைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

பாபா அவருக்கு பல ஆன்ம விசயங்களைப் போதித்தார்.  பலவிதமான ஆன்ம சக்திகளை வழங்கினார்.  குழந்தையானந்தரும்,  பாபாவும் தமிழகத்தின் பல இடங்களுக்கும் சென்று மக்களுக்கு சேவை செய்தனர்.

வியாதியினால் வாடி வாழ்க்கையைத் தொலைத்த மக்களுக்கு, மருந்தாக இருந்து நோய் நீக்கினர்.  மனதில் ஏற்படும் குழப்பம், பயம், எண்ணற்ற குடும்பச் சிக்கல்கள், துன்பங்கள் ஆகியவற்றையும் தீர்த்து வைத்து, ஏழைகளின் குடும்பத்திலும், மனங்களிலும் மகிழ்ச்சி விதைகளைத் தூவி இறைப்பணி செய்து வந்தனர்.

தமிழகத்துக்கு மட்டும் அல்லாமல்,  அவர்கள் அங்கிருந்து விஜயநகரம் சென்றும் மக்கள் சேவை செய்தனர்.  பிறகு விதர்ப்ப நாடு சென்று, அங்கேயும் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தினர்.  அங்கிருந்து காசிக்குச் சென்றனர்.  காசியில் பல அற்புதங்களை நிகழ்த்திய குழந்தையானந்தர் அங்கேயே சமாதி அடைந்தார்.

காசியில் சமாதி நிலை அடைந்த மகா சித்தர் குழந்தையானந்தர், தமிழகத்தில் மீண்டும் அவதரித்து,  திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? ஆனால்’ அது தான் உண்மை! சிலகாலம் திருவண்ணாமலையில் தங்கி சித்தாடல்களை நிகழ்த்தினார்.  அவரது கருணையினால் மக்கள் குறைகள் நீங்கினர். வளவாழ்வு பெற்றனர்.  நோயிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.  இவ்வாறு மக்களுக்குத் தொண்டு செய்த அந்த அற்புதச் சித்தர் ஒரு நல்ல நாளில் ஜோதி வடிவத்தில் அண்ணாமலையாருடன் கலந்து விட்டார்.  இது இரண்டாவது சமாதி நிலை.

இந்த இரண்டாவது சமாதியிலும் அவர் முழுமையாக அடங்கிவிடவில்லை.  அவர் செய்ய வேண்டிய பணிகள் மீதமிருந்தன போலும்,  எனவே இரண்டாவது சமாதியில் இருந்தும் அவர் மீண்டார். உயிர்த்தெழுந்து காஞ்சிபுரம் சேர்ந்தார்.   

இரண்டு முறை சமாதியிலிருந்து உயிர்த்தெழுந்த அதிசய சித்தர் என்று கேள்விப் பட்டதும், மக்கள் பெரும் ஆர்வத்தோடு அவரை தரிசிக்க வந்தனர்.  பிறவிப்பயனை பெற்றிட அவரது கருணையை யாசித்தனர்.  வேண்டியவர்களுக்கு வேண்டியவற்றை தடையின்றி வழங்கிய வள்ளல் குழந்தையானந்த சித்தர், சில காலம் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்து,  பின் அங்கிருந்து மதுரைக்கும், தென்காசிக்கும் பயணம் செய்தார்.

தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு நன்மைகளை அளித்தார்.  மேன்மைகளை உருவாக்கினார்.  அவரை தரிசித்தவர்கள் தாங்கள் விரும்பியவற்றை அடைந்தனர். பல புதிய திருப்பங்களைப்  பெற்று வாழ்வில் உயர்ந்தனர்.  இந்த நிலையில் தென்காசியில் குழந்தை சித்தர் சமாதி அடைந்தார்.

பிறகு தென்காசி சமாதியில் இருந்து உயிர்த்தெழுந்து, மதுரையை அடுத்த சித்தாலங்குடிக்கு  வந்து பல சித்தாடல்களை நிகழ்த்தி மக்களை வியப்பில் ஆழ்த்தினார்.

ஆஜானுபாகுவாக இருந்த சுவாமிகளுக்கு, குழந்தை ஒன்று மாலைபோட விரும்பியதால், தன் உருவத்தைக் குறுக்கி குழந்தை எளிதில் மாலை போடும்படியாக ஒன்றே முக்கால் அடி உயரம் உள்ளவரானார்.

1919ம் ஆண்டு மதுரையிலிருந்து வத்தலகுண்டு சென்றார்.  அங்கு தனக்கு தன் சீடர்கள் மூலம் ஒரு கோயிலை நிர்மானித்தார். அதேபோல் மதுரை காளவாசல் அருகே உள்ள கோயிலில் சமாதி அடைந்தார். பின்னர்’ அங்கிருந்து வத்தலகுண்டில் தனக்காக எழுப்பப்பட்ட கோயிலில் எழுந்தருளினார். இப்படி ஒவ்வொரு கால கட்டத்திலும் அவதார புருஷராக அவதாரம் எடுத்து சமாதி நிலை அடைந்தாலும், சூட்சும ரீதியாக பக்தர்களுக்கு இன்றும் அருள்பாலித்து வருகிறார் குழந்தையானந்த சுவாமிகள்.



குழந்தை சித்தர் பகுதி ஒன்று

குழந்தையானந்தர் சித்தர்.
--------------------------------------

மதுரையில் அன்னை மீனாட்சியின் தீவிர பக்தர்களாக வாழ்ந்த தம்பதியர் ராமசாமி ஐயரும், அவரது தர்மபத்தினி திரிபுரசுந்தரி அம்மாளும்.  இவர்களுக்கு பல வருடங்களாக குழந்தை பாக்கியம் ஏற்படவில்லை.  அவர்கள் எல்லா விரதங்களும் அனுஷ்டித்தனர்.  கோயில் குளங்களுக்குச் சென்று வந்தனர்.  புண்ணிய தீர்த்தமாடினர். ஆனாலும் திரிபுர சுந்தரிக்கு புத்திர பாக்கியம் ஏற்படவில்லை.

இந்த நிலையில் அவர்களது பெற்றோரும், உற்றோரும் சொன்னதன் பேரில்,  அவர்கள் அன்னை மதுரை மீனாட்சியை மனமுருகி வேண்டியதோடு, உருக்கமான ஒரு வேண்டுகோளையும் தெரிவித்தனர்.  ‘’அம்மா உனது அருளால் எனக்குக் குழந்தை பாக்கியம் உண்டானால்,  அந்தக் குழந்தையை உன் கோயிலிலேயே விட்டு விடுகிறோம்’’ என்பதுதான்  அந்த விநோதமான வேண்டுதல்.

இப்படி இவர்கள் வேண்டிக் கொண்டு கோயிலில் இருந்து வீடு திரும்பிய போது, அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.  அவர்களது வீட்டில் அழகான இரண்டு ஆண் குழந்தைகள் மரப்பாச்சி பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

அந்த இரண்டு அழகான குழந்தைகளும் தம்பதியரைப் பார்த்ததும், ‘’இந்தப் பொம்மைகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள், நாங்கள் பிறகு வந்து வாங்கிக் கொள்கிறோம்’’ என்று சொல்லி விட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டனர்.

அவர்கள் இருவரும் தாங்கள் காண்பது கனவா? அல்லது நனவா? என்பதே விளங்கவில்லை.  மிக அழகான அந்த இரண்டு குழந்தைகள் யார்?  அவர்கள் யார் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்?,  சுற்றுப் பக்கத்து வீடுகளில் இதுவரையில் அந்தக் குழந்தைகளை தாங்கள் பார்த்தது இல்லையே?  என்று இது போன்ற ஏராளமான கேள்விகளை தங்களுக்குள் கேட்டுக் கொண்டனர்.

திரிபுரசுந்தரி குழந்தைகள் கொடுத்த பொம்மைகளை திருப்பிப் பார்த்தார்,  அவருக்கு ஆச்சரியமும் திகைப்பும் ஏற்பட்டது.  காரணம் அந்தப் பொம்மையின் அடிப்பாதங்களில் சங்கும் சக்கரமும் வரையப்பட்டு இருந்தது.  அதை அவர் சந்தோஷத்தோடு தனது கணவரிடம் காண்பித்தார்.

‘’ஆஹா!, அம்பாள் கண் திறந்து அனுக்கிரகம் செய்துவிட்டாள்.  நமக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கப் போகிறது.  அதில் ஒரு குழந்தையின் கால்களில் சங்கு, சக்கர ரேகைகள் இருக்கும்,  அதைத்தான் இந்தப் பொம்மை உணர்த்துகிறது.  உடனே இதை பூஜை அறையில் கொண்டு போய் வைத்துக் கொள்’’ என்றார்.

கணவரின் வார்த்தைகளினாலும், நடந்த அதிசயமான நிகழ்ச்சிகளினாலும் பிரமித்துப்போன திரிபுரசுந்தரி பரபரப்பாகிவிட்டார். உடனே லலிதா  சகஸ்ரநாம ஸ்தோத்திரத்தை முனுமுனுத்தபடி அந்த மரப்பாச்சி பொம்மைகளை எடுத்துச் சென்று பூஜையில் வைத்து,  வீட்டில் இருந்த பொரியை நைவேத்தியம் செய்தாள்.

சற்று நேரத்தில், முன்பு வந்த குழந்தைகள் இரண்டு பேரும் தன் வீட்டு வாசலில் வந்து நிற்பதைப் பார்த்து மகிழ்ச்சியோடு அவர்களை உள்ளே வரச்சொல்லி அழைத்தாள்.  அவர்கள் இரண்டு பேரும்,  ‘’அந்தப் பொம்மையைக் கொடுங்கள்,  எங்களுக்கு நேரமாகிறது. நாங்கள் போக வேண்டும்’’ என்று ஒரே தொனியில் பரபரப்போடு கேட்டனர்.

இது என்ன? இந்தக் குழந்தைகள் ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் வந்து பொம்மைகளை கொடுத்துவிட்டு, இப்போது கேட்கிறார்களே?  ஓ அதுதான் குழந்தை குணம் என்பது என்று நினைத்துக் கொண்டே,  ‘’கொஞ்சம் இருங்கள்,  பூசை அறையிலே வெச்சிருக்கேன்,  கொண்டு வந்து தரேன்’’என்று சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்த திரிபுரசுந்தரி திடுக்கிட்டுப் போனார். காரணம் சற்று நேரத்துக்கு முன்னால் அங்கே வைத்து பொரி நைவேத்தியம் செய்த போது இருந்த இரண்டு பொம்மைகளும் இப்போது காணவில்லை.  அவைகள் மாயமாக மறைந்து விட்டிருந்தன.  குழந்தைகளிடம் வந்து பொம்மை காணவில்லை என்று எப்படி சொல்லுவது? அவர்கள் தான் திருடிவிட்டதாக எண்ண மாட்டார்களா? ஐயோ ஜகதாம்பிகே, இது என்ன சோதனை என்று மனதுக்குள் உருகியபடி கண்களை மூடி உட்கார்ந்தாள்.  மதுரை மீனாட்சியை மனமுருகி வேண்டினாள்.

அடுத்த நொடியில் அவள் அருகே அந்த இரண்டு பொம்மைகளும் வந்தன.  மிகவும் மகிழ்ச்சியோடு அவைகளை கையில் எடுத்தாள்.  அந்தப் பொம்மைகளில் இருந்து தெய்வீக மணம் வீசியது.  இதுநாள் வரையில் அதுபோன்ற வாசனையை அவள் அனுபவித்ததே இல்லை.  அது இந்த உலகத்தின் வாசனையே அல்ல என்பது திரிபுரசுந்தரிக்குப் புரிந்தது.

அடுத்தடுத்து நடக்கும் ஆச்சரியத்தினால் உணர்ச்சிக் கொந்தளிப்பில்  இருந்த அவள்,  கையில் பொம்மைகளை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.  அங்கே இதுவரையில் குழந்தைகளின் பேச்சுக் குரல் கேட்டுக் கொண்டிருந்து.  இப்போது சட்டென்று அமைதி ஏற்பட்டு விட்டது.  கூடத்தில் நின்ற குழந்தைகளைக் காணவில்லை.

திரிபுரசுந்தரி தன் கணவனை அழைத்து,  குழந்தைகள் எங்கே? என்று கேட்டாள்.  அவர் அங்கு வருகின்ற நேரத்தில் அதிசயப்படும் விதமாக அவள் கையில் இருந்த பொம்மைகளும் திடீரென்று காற்றில் மறைந்துவிட்டது  ஆனால்’ அந்தத் தெய்வீக மணம் மட்டும் பொம்மைகள் இருந்தது உண்மைதான்,  நடந்த அத்தனை நிகழ்ச்சிகளும் உண்மைதான் என்று சொல்வதைப் போல சாட்சியமாக கூடத்தில் சுற்றி வந்தது.

மூச்சு வாங்க நடந்தவைகளை தன் கணவனிடம் சொல்லி முடித்தாள் திரிபுரசுந்தரி.

அதைக் கேட்ட ராமசாமி ஐயர், ‘’நம் வீட்டுக்கு வந்திருந்த குழந்தைகள் வேறு யாருமல்ல,  சாட்சாத் மீனாட்சி அம்மனும்,  சோமசுந்தரப் பெருமானும் தான்.  அவர்கள் உன் வயிற்றில் உருவாகப் போகும் ஒரு சக்தி மிக்க பேரொளியைப் பற்றிச் சொல்வதற்காக மானுட வடிவத்தில் குழந்தைகளாக வந்திருக்கிறார்கள்.  பயம் வேண்டாம்,  சந்தோஷமாக இரு’’ என்று சொல்லிவிட்டு பூஜை அறைக்குள் சென்று அம்மனின் சிலைக்கு முன்பாக அமர்ந்து மனமுருகி வேண்ட ஆரம்பித்தார்.    

இந்த அதிசய நிகழ்ச்சி நடந்த பிறகு, இறைவியின் கட்டளைப்படியே கி.பி 1607 ஆம் வருடம், புஷ்ய மாதத்தில், சித்திரை நட்சத்திரத்தில் திரிபுரசுந்தரிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.  அவர் தான் குழந்தையானந்த சித்தர்.  

அடுத்த நொடியில் அந்த இடத்தில் உலகையே மயக்கும் விதமாக மிக அற்புதமான வாசனை வீசுவதை மருத்துவப் பெண்களும்,  உறவினர்களும்,  ராமசாமி ஐயரும் உணர்ந்தனர். தெய்வக் குழந்தையான குழந்தையானந்தா சுயம்புவாக அவதாரம் செய்தார் என்று சிலர் தெரிவிக்கின்றனர்.  தெய்வீக வாசனையின் காரணமாக தன்னிலை மறந்த அனைவரும் சுயநினைவு அடைந்த போது, அந்தக் குழந்தைக்குப் பக்கத்தில் மற்றொரு குழந்தையும் இருப்பதைப் பார்த்துப் பரவசம் அடைந்தனர்.

இரண்டு மரப்பாச்சி பொம்மைகளை இரண்டு குழந்தைகள் வந்து கொடுத்தனர் அல்லவா?  அதனால் தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருப்பதை அறிந்த தம்பதியர் பெருமகிழ்ச்சி கொண்டனர்.  இரண்டு குழந்தைகளில் குழந்தையானந்த சித்தரின் பாதங்களில் மட்டும் சங்கு சக்கர ரேகைகள் இருப்பதைப் பெற்றோரும், மற்றோரும் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்து மகிழ்ந்தனர்.

குழந்தையானந்தருக்கு ராமன் என்று பெயர் வைத்தனர்.  மற்றொரு குழந்தைக்கு லட்சுமணன் என்று பெயரிட்டு அழைத்தனர்.  தெய்வீகக் குழந்தையான சித்தரின் சிரிப்பு காண்பவர் அத்தனை பேரையும் மயக்கியது.  அவருடைய சிரிப்பில் மகிழாதவர்களே இல்லை என்றே சொல்லலாம்.  மற்றவர்களுக்கே இத்தனை மகிழ்ச்சியும்,  பூரிப்பும் இருக்குமானால், பெற்றவர்களின் ஆனந்தத்தை வார்த்தைகளினால் விளக்க முடியுமா?

அவர்கள் இருவரும் அடைந்த மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் அளவேயில்லை.  ஆனாலும், அவர்களுடைய மனத்தில் துயரத்தின் ரேகைகள் மிக அழுத்தமாக விழுந்தன.  காரணம் குழந்தை பிறந்த பத்தாவது நாள் மதுரை மீனாட்சியம்மனிடம் அவனை விட்டு விடுவதாக வேண்டிக் கொண்டிருந்தனர் அல்லவா?  அந்த வேண்டுதல் நினைவுக்கு வந்தவுடன் அவர்களுடைய மகிழ்ச்சியும்,  பூரிப்பும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது.  மனத்தை சோகமயமான மேகங்கள் சூழ்ந்து கொண்டன.

குழந்தை பிறக்கும்  வரையில் பிறந்தால் போதும்,  அதைப் பார்த்துவிட்டு கோயிலுக்கே நேர்ந்து விட்டு விடலாம் என்று தோன்றியது.  ஆனால்’ இப்போது குழந்தை பிறந்ததும், அதை விட்டுப் பிரிய மனம் இல்லாமல் துடித்தாள் திரிபுரசுந்தரி.  அவளது நிலைமை இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைமையில் இருந்தது.  வேண்டுதலை நிறைவேற்றாமல் இருக்கவும் கூடாது,  குழந்தையைப் பிரியவும் கூடாது,  இது எப்படி சாத்தியம்?  பெற்ற தாயின் துயரம் யாராலும் போக்க முடியாததாக இருந்தது.  இந்த நிலையில் ராமசாமி ஐயர் ஒரு முடிவுக்கு வந்தார்.    

இரண்டு குழந்தைகள் பிறந்திருக்கின்றன.  தாங்கள் வேண்டிக் கொண்டபடி குழந்தையானந்த சித்தரை கோயிலில் விட்டு விடலாம்.  ஒரு குழந்தை தங்களிடம் வளரட்டும் என்று தீர்மானம் செய்தார்.  இதன்படிச் செய்தால் நேர்த்திக் கடனையும் நிறைவேற்றிய திருப்தி கிடைக்கும்,  ஒரு குழந்தையும் பெற்றோரிடம் வளரும் என்று அவர் எண்ணமிட்டார்.  இதைச் செயல்படுத்த அவர் காத்தவராயன் என்பவரோடு மனைவி மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்.

அப்போது’ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் கோயில் கதவு சாத்தப்பட்டு விட்டது.  பூஜைகள் முடிந்து அர்ச்சகர் கோயிலை அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டிருந்தார்.

தொடரும்,.....


புதன், 18 மே, 2022

படித்ததில் பிடித்தது

நாம் பார்த்தது பிடித்தது அவசியம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது பனையபுரம் கோவிலில் உள்ளது என பகிர்ந்துள்ளேன் !
இது எண்ணிக்கூட்டும் கூட்டுத்தொகை அல்ல...
ஒன்று பூமியின் இரு பெரும் சக்தி

இரண்டு சூரியன் சந்திரன்

மூன்று முப்பெரும் தெய்வங்கள் பிர, ஹரி, சிவன் ஆக்கல் காத்தல் அழித்தல்

நான்கு நால்திசையும் அதனுள் அடக்கம்
நாலு சொன்ன வார்த்தைகளை பின்பற்று

ஏழ்பிறப்பும் இறைவன் படைப்பு
5 பஞ்சபூதங்கள் இன்று உலகம் இயங்காது
9
நம்மை உயர்த்துவது சோதிப்பதும் அண்டங்களிலுள்ள ஒன்பது கோள்கள்
6
கலியுககாலத்தில்
கவலை மாற்றி கருணை புரிய
சக்தியும் சிவனும் வேல் கொண்ட அய்யன் ஆறுமுகன் அருளால் அனைவரும் சுபமே
8
என்திசையும் ஈசன் அருளால் கருணைக்கு
திசை எட்டு

1
சக்திகள் ஒன்றாகி சகல உலகிற்கு மூலமே ஆதி சக்தி. அவளே ஓம்சக்தி

இதன்குறிப்புதான் பெரியோர்கள் தருவது

இதை உணர்ந்தவர்களே
18
சித்தர்கள்
இது ஒரு Vedic maths என்று இன்று சொல்வார்கள் ஆனால் அந்த காலம் , அந்த சித்தர்கள் அவர்கள் படித்து உணர்ந்தது , இறைவன் அவர்களுக்கு குருவாக இருந்து கற்று கொடுத்தது !
எல்லாம் காரணமின்றி காவியங்கள் இருக்காது நல்லவர்களே

ஸ்ரீ விஷ்ணு ஷோடச நாம ஸ்தோத்திரம்

ஒளஷதே சிந்தயேத் விஷ்ணும் போஜநே ச ஜனார்தனம்  

சயனே பத்மநாபஞ்ச விவாஹே ச பிரஜாபதிம்.

யுத்தே சக்தரம்தேவம்  ப்ரவாஹே ச த்ரிவிக்ரமம்
நாராயணம் தனுத்யாகே ஸ்ரீதரம ப்ரியசங்கமே.
துஸ்வப்னே ஸ்மரகோவிந்தம் ஸங்கடே மதுஸூதனம்
காநரே நாரசிம்ஹஞ்ச பாவகே ஜலசாயினம் .

ஜலமத்யே வராஹஞ்ச பர்வதே ரகுநந்தனம்
கமனே வாமனஞ்சைவ ஸர்வகாலேஷு மாதவம்.

ஷோடசை தானி நாமானி ப்ராத ருத்தாய யஹ் படேத்
ஸர்வாபாப விநிர்முக்தோ விஷ்ணுலோகே மஹீயதே... !!!

பஞ்சாரணியத் தலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்

ஒன்று : பஞ்ச பூத தலங்கள்

1. திருஆரூா் - பிருதிவி {நிலம்}

2. திருஆனைக்கா - அப்பு {நீா்}

3. திருஅண்ணாமலை - தேயு {தீ}

4. திருக்காளத்தி - வாயு {வளி}

5. சிதம்பரம் - ஆகாயம் {விண்}
 ----------‐---------------------------------------------------------

இரணடு : பஞ்ச சபைகள்

1. திருவாலங்காடு - இரத்தினசபை

2. சிதம்பரம் - கனகசபை {பொன்னம்பலம்}

3. மதுரை - ரஜத சபை {வெள்ளியல்பலம்}

4. திருநெல்வேலி - தாமிரசபை

5.திருக்குற்றாலம் - சித்திரசபை
 ----------‐---------------------------------------------------------

மூன்று : சோழநாட்டுப் பஞ்சாரணியத் தலங்கள் ஒரே நாளில் தாிசிக்க வேண்டியவை

1. முல்லைவனம் - திருக்கருகாவூா் - {உஷக்காலதாிசனம்}


2. பாதிாிவனம் - திருஅவளிவநல்லூா் - {காலசந்தி தாிசனம்}


3. வன்னிவனம் - திருஅரதைபெரும்பாழி அாித்துவாரமங்கலம்.
{உச்சிகால தாிசனம்}

4. பூளைவனம் - திருஇரும்பூளை ஆலங்குடி {சாயரட்சை தாிசனம்}

5. வில்வவனம் - திருக்கொள்ளம்பூதூா் {அா்த்தசாம தாிசனம்}
 ----------‐---------------------------------------------------------

நான்கு : தொண்டை நாட்டுப் பஞ்சாரணியத் தலங்கள்

1. பதாி காரணியம் {இலந்தைக்காடு} - திருவெண்பாக்கம்

2. வம்சாரணியம் {மூங்கிற்காடு} -
திருப்பாசூா்

3. வடவாரணியம் {ஆலங்காடு}
திருவாலங்காடு

4. வீகஷாரணியம் {ஈக்காடு} திருவெவ்வுளூா்.

5. நைமிசாரணியம் {தருப்பை} கூவம் திருவிற்கோலம்.
 ----------‐---------------------------------------------------------

ஐந்த : புலியூா் என அழைக்கப்படும் தலங்கள் ஐந்து {வியாக்கிரபாதாிஷி பூஜித்த தலங்கள்}

1. பெரும்பற்றப்புலியூா் - சிதம்பரம்

2. திருப்பாதிாிப்புலியூா் - கடலூா்

3. ஓமாம் புலியூா்

4. எருக்கத்தம் புலியூா் (ராஜேந்திரபட்டினம்)

5. பெரும்புலியூா்

----------‐---------------------------------------------------------

தீபத்தின் மகிமை



நெய் விளக்கில் ஏன் தீபம் ஏற்ற வேண்டும்? கலைமகள், திருமகள், மலைமகள்... தீபத்தின் மகிமை!

🔥 நாம் இறைவனை வழிபடும் வேளைகளில் தீப வழிபாடு என்பது ஒரு முக்கிய பங்காக உள்ளது. வீட்டு பூஜை அறைகள் மற்றும் கோவில்களில் தீபம் ஏற்றி வழிபடும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

🔥 நோய் தொற்றுகளை பரவ விடாமல் தடுக்கும் சக்தி, சில எண்ணெய் வகைகளுக்கும், தீபத்திற்கும் உண்டு. அதனால்தான் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுங்கள் என நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.

🔥 அதுமட்டுமல்லாமல் தீப ஒளியில் கலைமகள் சரஸ்வதிதேவி வந்து அமர்கிறாள். தீபத்தின் சுடரில் திருமகளான லட்சுமியும், தீபத்தின் வெப்பத்தில் மலைமகளான பார்வதிதேவியும் வந்து குடியிருப்பதாக ஐதீகம்.

🔥 ஆகவே வீட்டில் காலையும், மாலையும் ஏற்றி வைக்கும் தீபத்தில், முப்பெருந்தேவியரும் எழுந்தருளி கடாட்சம் தருவதாக நம்பிக்கை.

🔥 இல்லங்களில், தினமும் பிரம்மமுகூர்த்தம் என்று சொல்லப்படும் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் விளக்கேற்றுவது விசேஷம்.

🔥 அதேபோல், மாலையில் 4.30 முதல் 6 மணிக்குள் விளக்கேற்ற வேண்டும். இந்த நேரமே பிரதோஷ வேளை ஆகும்.

🔥 நெய் அல்லது எண்ணெயை விளக்கில் பயன்படுத்தும்போது பூரணமாக, அதாவது வழிய வழிய ஊற்றி, பிறகு திரியை வைத்து ஏற்ற வேண்டும்.

🔥 குறிப்பாக, இரண்டு திரிகளை ஒன்றாக்கி விளக்கேற்றுவது மிகவும் விசேஷம். கணவன் ஒரு திரி, மனைவி மற்றொரு திரி. இப்படி இரண்டு திரிகளை இணைத்து விளக்கேற்றினால், தம்பதி ஒற்றுமை மேலோங்கும் என்பது உறுதி.

நெய்விளக்கு ஏற்றுதலும்... அதன் பலன்களும்...

🔥 நாம் கோவிலுக்கு சென்று இறைவனிடம் நம் வேண்டுதல்களை வைப்பதோடு விளக்கேற்றியும் வழிபடுகிறோம்.

🔥 அம்மன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றுவதால் பலவிதமான நன்மைகள் கிடைக்கும். இதனால் நாம் வைக்கும் கோரிக்கைகள் நிறைவேறும்.

*எண்ணிக்கையின் பலன்கள் :*

🔥 5 நெய் விளக்கு ஏற்றினால் சிறந்த கல்வியும், ஞானமும் பெறலாம்.

🔥 9 நெய் விளக்கு ஏற்றினால் நவகிரக தோஷம் நீங்கும்.

🔥 12 நெய் விளக்கு ஏற்றினால் வேலையில் ஏற்பட்ட தடைகள் நீங்கும், வேலைவாய்ப்பு கிடைக்கும்.

🔥 18 நெய் விளக்கு ஏற்றினால் காலசர்ப்ப தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் நீங்கும்.

🔥 27 நெய் விளக்கு ஏற்றினால் திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

🔥 36 நெய் விளக்கு ஏற்றினால் சகல தோஷமும் நீங்கும்.

🔥 48 நெய் விளக்கு ஏற்றினால் தொழில் அபிவிருத்தி மற்றும் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்.

🔥 108 நெய் விளக்கு ஏற்றினால் அம்மன் அருள் கடாட்சத்தை முழுமையாக பெறலாம்.


பஞ்சநத கல்லில் செய்த நடராஜர்

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியை அடுத்து பாடாலூரில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள திருஊற்றத்தூர் (ஊட்டத்தூர்) என்ற ஸ்லத்தில் ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞ்சநத கல்லில் செய்யப்பட்ட அபூர்வ நடராஜ பெருமான் திருமேனி உள்ளது.
 


பஞ்சநத கற்கள் சூரியனில் இருந்து வெளிவரும் ஆரோக்கிய கதிர்வீச்சினை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையன. இந்த வகை கற்சிலை தற்போது எங்குமே கிடையாது என்கிற தகவல் கோயில் குருக்கள் மூலம் தெரியவந்தது. ஆலிங்க நதனம், பஞ்சநதனம், சிங்க நதனம், யானை நதனம், யாழி நதனம் என்று 5 வகையான சிலாக்கற்கள் உள்ளன. இதில் பஞ்சநதனம் என்ற பாறை தெய்வீக ஒளி வீசும் என்பது சிற்பக்கலை வல்லுநரால் கூறப்பட்டுள்ளது. சூரிய பிரகாசத்தை தருகின்ற இந்த பஞ்சநதன பாறைகளால் இவ்வூர் நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. இறைவி சிவகாம சுந்தரியின் உருவ அமைப்பு வணங்குவதற்கு மட்டுமில்லாமல் ரசனைக்குரியதாகவும் இருப்பது தனிச்சிறப்பாகும். அன்னை தன் முகத்தை சாய்த்து பஞ்சநதன நடராஜரை பார்ப்பதுபோல் காட்சியளிப்பது அழகு! சிறுநீரகம், மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார். சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சித்து பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில்... இரவு ஊற வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள நோய் தீர்வது இன்றும் நடைபெறும் அதிசயமாக உள்ளது!

அவ்வை பாடிய விநாயகர் அகவல்

 


சமயக்குரவர்கள் எனப்படும் நால்வரின் முக்கியமானவர், சுந்தரமூர்த்தி சுவாமிகள். இவர் சிவபெருமானின் உற்ற தோழனாகவும் இருந்தவர். இவருக்காக சிவபெருமானே வீதியில் இறங்கி நடந்து தூது சென்ற சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன. சுந்தரமூர்த்தி சுவாமிகள், தான் இந்த பூவுலகிற்கு வந்த நோக்கம் நிறைவேறியதை அடுத்து, கயிலாயம் செல்ல இறைவனால் பணிக்கப்பட்டார். அவரை ஏற்றிச் செல்வதற்காக, கயிலாயத்தில் இருந்து வெள்ளை யானை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதில் ஏறிய சுந்தரமூர்த்தி சுவாமிகள், கயிலாயம் புறப்பட்டார்.


அப்போது அங்கு இருந்த நாயன்மார்களில் ஒருவரான சேரமான் பெருமான், தானும் கயிலாயம் செல்ல வேண்டும் என்று மனம் உந்தினார். இதனால் தன்னுடைய குதிரை மீது ஏறி, அதன் காதில் பஞ்சாட்சர (நமசிவாய) மந்திரத்தை உச்சரித்தார். உடனே, அந்தக் குதிரை விண்ணில் பறக்கத் தொடங்கியது. இதையடுத்து தனது நண்பரான சுந்தரமூர்த்தி சுவாமிகளுடன் இணைந்து சேரமான் பெருமானும், திருக்கயிலாயம் நோக்கிச் சென்றார்.

அதனை அறிந்துகொண்ட அவ்வையார், தானும் சுந்தரமூர்த்தி சுவாமிகளோடு சேர்ந்து கயிலாயம் செல்ல நினைத்தார். இதற்காக அவர் அப்போது செய்து கொண்டிருந்த விநாயர் பூஜையை அவசரம் அவசரமாக செய்தார். அப்போது அங்கு தோன்றிய விநாயகர், “அவ்வையே.. நீ என்னுடைய பூஜையை எந்த அவசரமும் இன்றி செய். சுந்தரருக்கு முன்பாகவே உன்னைக் கொண்டு போய் கயிலாயத்தில் சேர்ப்பது என் பொறுப்பு” என்றார்.

இதையடுத்து அவ்வையார், ‘சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப்..’ என்று தொடங்கும் விநாயகர் அகவலைப் பாடினார். 72 அடிகள் கொண்ட இந்தப் பாடலை பாடி முடித்து, விநாயகருக்கு உண்டான அனைத்து பூஜைகளையும் அவ்வையார் செய்து முடித்தார்.

அதன்பின்பு, தான் கொடுத்த வாக்குப்படி, விநாயகர் அவ்வையாரை தன்னுடைய துதிக்கையால் தூக்கி, கயிலாயத்தில் சேர்ப்பித்தார். அவர் சென்றடைந்த பிறகே, சுந்தரரும், சேரமான் பெருமானும் கயிலாயம் வந்து சேர்ந்தனர்.

அவ்வையார் பாடிய விநாயகர் அகவல், விநாயகரை வழிபடும் துதிப்பாடல்களில் முக்கியமானதாக விளங்குகிறது. இந்தப் பாடலில் விநாயகரின் பெருமையும், அழகும் அற்புதமாக விளக்கப்பட்டுள்ளது. இந்த அகவலைப் பாடி, விநாயகரை வழிபாடு செய்பவர்களுக்கு, வாழ்வில் சலக வளங்களும் கிடைக்கப்பெறும்.

பலன்களை அள்ளித்தரும் சுதர்சன கவசம்

கனக ரஹித சக்கரம் பாசூரா ரம்ய சக்கரம்


கிரிவர குரு சக்கரம் கேசவ ஸ்வாமி சக்கரம்

அசுர நிதன சக்கரம் கால தண்டாகினி சக்கரம்

பவது பவது சக்கரம் பந்தாவோ விஷ்ணு சக்கரம்

இப்படி பெருமாள் கையில் இருக்கக் கூடிய சக்கரத்திற்கு பல விதமான மந்திரங்கள் உள்ளன.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கையில் உள்ள சக்கரமே ‘சுதர்சன சக்கரம்’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கான மந்திரத்தை ஒருவர் ஜெபித்தால் எண்ணற்ற பலன்களை பெறுவதோடு எத்தகைய தீய சக்தியாக இருந்தாலும் அதில் இருந்து தன்னை காத்துக்கொள்ளும் ஆற்றல் பெறுவார். இப்படி பல அற்புதங்கள் நிறைந்த சுதர்சன கவசம் ஆன்மீக பலன் வாசகர்களுக்காக கீழே கொடுத்துள்ளோம்.மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படும் இந்த மந்திரத்தை சூரிய கிரகணத்தன்றோ அல்லது சந்திர கிரகணத்தன்றோ விளக்கேற்றிவைத்து 1008 முறை ஜபித்தால் சித்தியாகும்.

நாள் தோறும் இந்த கவசத்தை படித்து வந்தால் நமக்கு எத்தகைய இடையூறுகள் வந்தாலும் தீங்கை விளைவிக்காது. அதோடு எந்த வித தீய சக்தியும் நெருங்க விடாமல் இது கவசம் நம்மை காக்கும் என்று நம்பப்படுகிறது இந்த கவசத்தை சொல்பவர்கள் அன்றைய தினம் கட்டாயம் அசைவ உணவை உண்ணக்கூடாது. அதோடு இல்லத்தையும், மனத்தையும் சுத்தமாக வைத்து இந்த கவசத்தை படிக்க வேண்டும். இதை எல்லாம் மீறி, இது ஒரு சாதாரண கவசம் தானே என்று நினைத்து சுத்தமில்லாமல் இந்த மந்திரத்தை ஜெபித்தால் நமக்கு தீய செயல்கள் ஏற்படும்.

ஸ்ரீசுதர்சன கவசம்

ப்ரஸீத பகவந் ப்ரஹ்மந் ஸர்வமந்த்ரஜ்ஞ நாரத |

ஸௌதர்ஸநம் து கவசம் பவித்ரம் ப்ரூஹி தத்வத்: ||

நாரத:-

ஸ்ருணுஷ்வேஹ த்விஜஸ்ரேஷ்ட பவித்ரம் பரமாத்புதம் |

ஸௌதர்ஸநம் து கவசம் த்ருஷ்டாத்ருஷ்டார்த்த ஸாதகம் ||

கவசஸ்யாஸ்ய ருஷிர் ப்ரஹ்மா சந்தோநுஷ்டுப் ததா ஸ்ம்ருதம் |

ஸுதர்ஸந மஹாவிஷ்ணுர் தேவதா ஸம்ப்ரசஷதே ||

ஹ்ராம் பீஜம் ஸக்தி ரத்ரோக்தா ஹ்ரீம் க்ரோம் கீலகமிஷ்யதே |

ஸிர: ஸுதர்ஸந: பாது லலாடம் சக்ரநாயக: ||

க்ராணம் பாது மஹாதைத்ய ரிபுரவ்யாத் த்ருஸௌ மம |

ஸஹஸ்ரார: ஸ்ருதிம் பாது கபோலம் தேவவல்லப: ||

விஸ்வாத்மா பாது மே வக்த்ரம் ஜிஹ்வாம் வித்யாமயோ ஹரி: |

கண்ட்டம் பாது மஹாஜ்வால: ஸ்கந்தௌ திவ்யாயுதேஸ்வர: ||

புஜௌ மே பாது விஜயீ கரௌ கைடபநாஸந: |

ஷட்கோண ஸம்ஸ்த்தித: பாது ஹ்ருதயம் தாம மாமகம் ||

மத்யம் பாது மஹாவீர்ய: த்ரிணேத்ரோ நாபிமண்டலம் |

ஸர்வாயுதமய: பாது கடிம் ஸ்ரோணிம் மஹாத்யுதி: ||

ஸோமஸூர்யாக்நி நயந: ஊரு பாது ச மாமகௌ |

குஹ்யம் பாது மஹாமாய: ஜாநுநீ து ஜகத்பதி: ||

ஜங்கே பாது மமாஜஸ்ரம் அஹிர்புத்ந்ய: ஸுபூஜித: |

குல்பௌ பாது விஸுத்தாத்மா பாதௌ பரபுரஞ்ஜய: ||

ஸகலாயுத ஸம்பூர்ம: நிகிலாங்கம் ஸுதர்ஸந |

ய இதம் கவசம் திவ்யம் பரமாநந்த தாயிநம் ||

ஸௌதர்ஸந மிதம் யோ வை ஸதா ஸுத்த: படேந் நர: |

தஸ்ர்த்த ஸித்திர் விபுலா கரஸ்தா பவதி த்ருவம் ||

கூஸ்மாண்ட சண்ட பூதாத்யா: யேச துஷ்டா: க்ரஹா ஸ்ம்ருதா: |

பலாயந்தேsநிஸம் பீதா: வர்மணோஸ்ய ப்ரபாவத: ||

குஷ்டாபஸ்மார குல்மாத்யா: வ்யாதய: கர்மஹேதுகா: |

நஸ்யந்த்யேதந் மந்த்ரிதாம்பு பாநாத் ஸப்த திநாவதி ||

அநே ந மந்த்ரிதாம் ம்ருத்ஸ்நாம் துலஸீமூல ஸம்ஸ்த்திதாம் |

லலாடே திலகம் க்ருத்வா மோஹயேத் த்ரிஜகந் நர: ||

இதி ஸ்ரீப்ருகுஸம்ஹிதோக்த ஸ்ரீஸுதர்ஸந

கவசம் ஸம்பூர்ணம் ||

அனுஷா🙏🌹


விலங்குகள் வழிபட்ட சிவ தலங்கள்

மனிதர்களைப் போலவே, விலங்குகளும் தங்கள் பிறவியின் பலனை அடைவதற்காக இறைவனை வழிபட்டு வந்ததாக புராணங்களும், பல கோவில் வரலாறுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன.


சிவபெருமானை, புலி வழிபட்ட தலம், திருப்புலிவனம். காஞ்சிபுரம், உத்திரமேரூர் சாலையில் உள்ள இந்த திருத்தலத்தில் திருப்புலிவன முடையார் என்ற பெயரில் இறைவன் அருள்கிறார். சாபத்தால் புலியாக மாறிய முனிவர் இங்கு இறைவனை வழிபட்டிருக்கிறார்.

சிவபெருமானை, பசு வழிபட்ட தலங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் ஒன்று சங்கரன்கோவில். திருநெல்வேலி அருகில் உள்ள இந்த திருத்தலத்தில் தேவர்கள் சூழ, இறைவனை அம்பாள் வழிபாடு செய்திருக்கிறாள். ‘கோ’ என்பதற்கு ‘பசு’ என்று பொருள். எனவே பசு வழிபட்ட இந்த ஆலயத்தில் உள்ள இறைவி ‘கோமதி’ என்று பெயர் பெற்றிருக்கிறாள்.

சிலந்தி மற்றும் யானை சிவபெருமானை வழிபட்ட தலம், திருவானைக்காவல். திருச்சியில் காவிரி ஆற்றுக்கும் - கொள்ளிடத்திற்கும் இடையில் அமைந்துள்ள தலம் இது. இங்கு சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில், மழையில் இருந்தது. சிவலிங்கத்தின் மேல் வலை பின்னிய சிலந்தி, அதன் மூலம் வெயில், மழை, மரத்தின் சருகுகள் சிவலிங்கத்தில் விழாமல் தடுத்தது. யானை தன் துதிக்கை மூலம் காவிரி ஆற்றில் நீரும், பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை, சிலந்தி பின்னிய வலையை அழித்துவிட்டு செல்லும். சிலந்தி மீண்டும் வலை பின்னி வழிபாட்டை தொடரும். யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி, அதன் துதிக்கையில் நுழைய இரண்டும் மடிந்தன. இவைகளின் பக்திக்கு மெச்சிய சிவன், யானையை சிவகணங்களுக்கு தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறுபிறவியில் கோட்செங்கட் சோழன் என்ற அரசனாக பிறந்தார்.

எறும்புகள் சிவபெருமானை வழிபட்ட தலம், திருவெறும்பூர். அசுரனிடம் இருந்து தங்களை காப்பாற்ற தேவர்கள் எறும்பு வடிவம் எடுத்து சிவபெருமானை வழிபட்ட தலம். திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள எறும்பீஸ்வரர் கோவிலில் உள்ள பிரசாதத்தை எறும்புகள் எடுத்துக்கொள்வதை இன்றும் காணலாம்.

ஈ - வடிவில் அகத்திய முனிவர், சிவனை வழிபட்ட தலம் , திருஈங்கோய்மலை. திருச்சி மாவட்டம், தொட்டியம்- முசிறி செல்லும் வழியில் இந்த திருத்தலம் இருக்கிறது.

பாம்புகள், சிவபெருமானை வழிபட்ட தலம் திருப்பாம்புரம். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இத்தலத்து சிவனை ஆதிசேஷன் என்ற பாம்பு வழிபட்டுள்ளது.

அணில், குரங்கு, காகம் ஆகிய மூன்று ஈசனை வழிபட்ட தலம் ‘குரங்கணில்மூட்டம்.’ சாபத்தால் காகமாக மாறிய எமனும், அணிலாக மாறிய இந்திரனும், குரங்காக மாறிய வாலியும், இங்குள்ள சிவனை வழிபட்டிருக்கிறார்கள். இத்தலம் காஞ்சிபுரம் அடுத்த மாமண்டூர் என்னும் இடத்தில் உள்ளது.

மயில், சிவபெருமானை வழிபட்ட தலம் மயிலாடுதுறை. சாபத்தால் மயிலாக மாறிய அம்பிகை, சிவனை வழிபட்டதாக தல வரலாறு சொல்கிறது.

கழுகு, சிவபெருமானை வழிபட்ட தலம் திருக்கழுக்குன்றம். நான்கு யுகங்களிலும் நான்கு பெயர்களில் கழுகுகள் சிவபெருமானை பூஜித்து வருவதாக சொல்லப்படுகிறது.

வண்டு, சிவபெருமானை பூஜித்த தலம் திருவண்டுதுறை. திருவாரூர் மாவட்டம், திருவண்டுதுறையில் பிருங்கி முனிவர் வண்டு வடிவில் சிவனை பூஜித்தார். இன்றும் இந்த கோவிலின் கருவறையில் வண்டுகளின் ரீங்கார ஒலியை கேட்க முடியும்.

நண்டு, சிவபெருமானை வழிபட்ட தலம், திருந்துதேவன்குடி. சாபத்தால் நண்டாக மாறிய இந்திரன், இத்தல சிவனை பூஜித்து பேறு பெற்றான். இத்தலம் கும்பகோணம் அருகே உள்ளது.

சக்கரவாகப் பறவை, சிவபெருமானை பூஜித்த தலம் திருச்சக்கராப்பள்ளி. தஞ்சாவூர் மாவட்டம், திருச்சக்கராப்பள்ளி எனும் ஊரில் அமைந்துள்ள கோவில் இது.

யானை, சிவனை பூஜித்த தலம், திருக்கொட்டாரம். துர்வாச முனிவரால் சாபம் பெற்ற ஐராவதம் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றது.

ஆமை, சிவபெருமானை பூஜித்த தலம் திருக்கச்சூர். இங்குள்ள சிவனை வழிபட்டுதான், மந்தார மலையை தாங்கும் சக்தியை திருமால் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது.

கிளி வழிபட்ட தலம், சேலத்தில் உள்ள சுகவனேஸ்வரர் கோவில். கிளியாக மாறிய சுக முனிவர் வழிபட்ட சிவ பெருமான் இங்கு வீற்றிருந்து அருள்கிறார்.

சிட்டுக்குருவி சிவனை பூஜித்த தலம், வட குரங்காடுதுறை. தன்னை வழிபட்ட சிட்டுக்குருவிக்கு மோட்சம் அளித்துள்ளார் இத்தல ஈசன். அதனால் சிட்டிலிங்கேஸ்வரர் என்றும் இறைவன் அழைக்கப்படுகிறார்.