செவ்வாய், 18 ஜனவரி, 2022

மந்த்ர மாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் ...

ஆதி சங்கர பகவத்பாதாள் அருளிய மந்த்ர மாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் ...

இந்த ஸ்தவத்தின் ஒவ்வொரு பாவின் முதல் வரியின் முதல் எழுத்தும் காதி வித்யையான பஞ்சதஸி மந்திரமான “க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்” என்பதிலிருந்தே ஆரம்பிக்கிறது. இப்பா, இறைவியை மானஸ பூஜை முறையில், ஆராதிக்க உபயோகிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

சங்கரர் புஷ்ப மாலையாக அன்றோ அருளினார். அதன் பின் அதற்க்கும் மேல் ஒருபடி சென்று, த்ரிபுரசுந்தரி சன்னதி ஸ்தவத்தில், மனித குலம் உய்ய, அம்பிகையின் சான்னித்யத்தில் என்றும் குளிர்ந்திருக்க “ஷோடஸி வித்யா”யையுமன்றோ அருளினார்.


‘மந்த்ர மாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம்’ ..... मन्त्र मातृका पुष्पमालास्तवः


‘ஸ்ரீ வித்யா’ எனப்படும் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பிகையின் ஆராதனையில் மந்திரம், முத்திரை, அனுஷ்டானம் போன்ற எல்லாமே மிகவுமே விஷேஷமானது, கடினமானது. இந்த முறையில் சித்தி பெற்ற ஒருவரே, இன்னொருவருக்கு தீக்ஷை அளிக்கமுடியும். உதாரணத்திற்கு, அம்பிகையின் கட்கமாலா சித்தி அருளப்பட்டாலே, ஸ்ரீ வித்யாவின் ‘பாலா மந்திரம்’ எனும் த்ரியக்ஷரி உபதேசம் நடக்கும். த்ரியக்ஷரி சித்தியானாலே ‘பாலா திரிபுரசுந்தரி ஷடாக்ஷரி’ கிட்டும், பாலா திரிபுரசுந்தரி ஷடாக்ஷரி பாராயணம் செய்பவரே பாலாம்பிகா த்ரியக்ஷரி உபதேசம் செய்ய முடியும். பாலா திரிபுரசுந்தரி ஷடாக்ஷரி சித்தியானால் மட்டுமே அம்பிகையின் ‘சம்புடீக்ருத’ நவாக்ஷரி கிட்டும். இவற்றின் பின்னரே குருவானவர் பன்சதஸியை உபதேசிப்பதை ஆலோசிப்பர். ஸாதகர் நன்கு தேர்ச்சி பெற்றார் என குருவானவர் பல பரீக்ஷைகள் மூலம் அறிந்துகொண்ட பின்னரே, அம்பிகையின் ஷோடஸாக்ஷரி உபதேஸம் நடக்கும்.

இதில் விஷேஷம் என்னவெனில், அம்பிகையின் ஷோடஸாக்ஷரி சித்தியாயின், அந்த ஸாதகர் ஒருவிதத்தில் அம்பிகையின் மறு உருவே ஆகியிருப்பர். வரும் காலங்களில் இப்படிப்பட்ட ஸாதகர் கிடைப்பதரிது என்று, தீர்கதரிஸி ஆதி சங்கரர் நன்றாக தெரிந்துவைத்திருந்தார் என்றே சொல்லவேண்டும். இல்லையெனில், 51 அக்ஷரங்கள் கோர்த்து அமைக்க வேண்டிய அக்ஷர புஷ்பமாலாவை, (அம்பிகையின் கழுத்தை அலங்கரிக்கும் முத்துமாலை 51 முத்துக்களால் – அக்ஷரங்களாலேயே ஆனது) வெரும் 17 பத்திகளில் அடைத்து, அத்துடன் பன்சதஸியையும், ஷோடஸியையும் அதில் மறைத்து அந்த ஸ்தொத்திரத்தை, ஸ்தவமாக அதாவது அம்பிகையின் மானஸீக பூஜையாக அமைத்தது அம்பிகையின் பேரருளால் அன்றோ! அம்பிகைக்கு உகந்த 64 உபசாரங்களையும் இந்த ஸ்தவத்தினூடே இணைத்து ஒரு பரிபூரண மானஸ பூஜா முறையையன்றோ ஆதிசங்கரர் இந்த ஸ்தவத்தில் அமைத்துக்கொடுத்துள்ளார்,

அதன் சக்தியை அவர் இப்படி உரைக்கிறார். “எவரொருவர் இந்த ஸ்தவத்தை நித்யமும் முவ்வேளை பக்தியுடனும், ஸ்ரத்தையுடனும் பாராயணம் செய்கிறார்களோ அவர்கள் சிந்தையில் அம்பிகையும், நாவில் ஸ்வாதத்தின் சாரமான சரஸ்வதியும், இல்லத்தில் ஸ்ரீ எனும் பதத்திற்கே உரியவளான ஸ்ரீ லக்ஷ்மி தேவியும் நடனமாடுவார்” என்று கீலகமாய் ஆசீர்வதித்திருக்கிறார்.

சிந்தையில் சிவமும், முகத்தில் ப்ரம்ம தேஜஸும வாக் சித்தியும், இல்லத்தில் அளவிடதற்கரிய செல்வமும்..

1 : कल्लोलोल्लसिततामृताब्धिलहरीमध्ये विराजन्मणिद्वीपे
कल्पकवाटिकापरिवृते कादम्बवाट्युज्ज्वले।
रत्नस्तंभसहस्रनिर्मितसभामध्ये विमानोतमे
िन्तारत्नविनिर्मितं जननि ते सिंहासनं भावये॥

கல்லோலோல்லஸிதாம்ருதாப்திலஹரீமத்யேவிராஜன்மணி
த்வீபேகல்பகவாடிகாபரிவ்ருதேகாதம்பவாட்யுஜ்வலேமி |
ரத்னஸ்தம்பஸஹஸ்ரநிர்மிதஸபாமத்யேவிமாநோத்தமே
சிந்தாரத்னவிநிர்மிதம்ஜநதிதேஸிம்ஹாஸநம்பாவயேமிமி ||

இந்த முதல் நான்கு வரிகளிலேயே ஸ்ரீ ஆதிசங்கரர், ஒரு தீவிரமான ஸாதகனை உருவாக்குவதற்கென்றே படைத்தாரோ! ஸாதகன் அம்பிகையிடம் கூறுவதாவது “தாயே சிந்தா ரத்தினத்தினால் வடிவமைக்கப்பட்ட ஸிம்ஹாஸனத்தை உனக்கு (அ) உனக்காக சமைத்துள்ளேன்”. இங்கு அம்பிகையை “ஜனனீ – ஈன்ற தாயே” என்றழைக்கும்போது, நம்மையும் அறியாமல் அம்பாளிடத்தில் ஒரு தனி ஈடுபாடு உண்டாகிறதே! லலிதா ரஹஸ்ய சஹஸ்ரத்திலும் இத்தகைய பதம் முதலிலேயே உள்ளது – “ஸ்ரீ மாதா” என்று.

சிந்தாரத்னம் என்பது ஒரு விலை மதிப்பிட முடியாத, நாம் எதை நினைத்தாலும் உடனே கொடுக்கும் குணமுள்ள ஒரு ரத்தினக்கல் ஆகும். அப்படிப்பட்ட பல ரத்தினங்களைக் கொண்டு இழைக்கப்பட்ட விஷேஷ சிம்ஹாசனம், விமானத்தின் (கோபுரத்தின்) நடுவே இருத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த விமானமோ உத்தமமானது, ஏனெனில், உத்தமமான கோபுரம் என்று கூறப்படுவது ஏழு நிலைகள் கொண்ட ஒரு கோபுரமாகும். அவையும் விலை மதிப்பில்லா ரத்தினங்களை தங்கத்தினூடே இணைத்து செய்யப்பட்டது. இந்த விமானம் இருக்கும் இடமோ, ஓராயிரம் மறுபடியும் விலைமதிப்பிட இயலா நவரத்தின கற்களால் செய்யப்பட்ட தூண்களுள்ள மண்டபத்தில் இருத்தப்பட்டிருக்கிறது. இந்த மண்டபமோ, மஞ்சள் நிறத்திலான மூலிகைகள் வனமும், தென்றல் தவழும் கதம்ப வனத்தின் நடுவே. இது மணித்வீபமெனும் ரத்தின தீவின் நடுவே உள்ளது. இந்த தீவானது, பேரலை புரளும் அமிர்தக்கடலின் நடுவே உள்ளது.

இப்படியாக இந்த முதல் நான்கு வரியிலேயே ஸ்ரீ ஆதி சங்கரர், அலைபொங்கும் அமிர்தக்கடல், மணித்தீவு, அடர்ந்த கதம்ப வனம், தங்க வண்ண மூலிகைகள் நிறைந்த சமவெளி, ஸஹஸ்ர ஸ்தம்ப மண்டபம் கொண்ட பவனம், கோபுரம் மற்றும் விஷேஷ சிம்ஹாஸனம் கல்பித்து அம்பிகையை ஆவாஹிக்கவன்றோ தயாராகிவிட்டார்!

2 : एणाङ्कानलभानुमण्डललसच्छ्रीचक्रमध्ये सिथतां
बालार्कद्युतिभासुरां करतलैः पशांकुशौ बिभ्रतीम्।
चापं बाणमपि प्रसन्नवदनां कौसुम्भवस्त्रान्वितां
तां त्वां चन्द्रकलावतंसमकुटां चारुस्मितां भावये॥

ஏணாங்காநலபர்னுமண்டலலஸத்ஸ்ரீசக்ரமத்யேஸ்திதாம்
பாலோர்கத்யுதிபாஸுராமகரதலை:பாசாங்குசௌபிப்ரதீம் |
சாபம்பாணுமபிப்ரஸந்நவதநாம்கௌஸும்பவஸ்த்ரான்விதாம்
தாம்த்வாம்சந்த்ரகலாவதம்ஸமகுடாம்சாருஸ்மிதாம்பாவயே ||

அம்பிகையின் எந்த ஸ்தூல வடிவை ஸாதகன் த்யானம் செய்யவேண்டும் என்பதை இங்கு குறிப்பிடுகின்றார் சங்கரர். அம்பிகையானவள், அக்னி, சூர்யன் மற்றும் சந்திரன் முதலானவர்களுடைய ப்ரகாசத்திற்கும் அதிகமான ப்ரகாசத்துடன் ஸ்ரீ-சக்ர மத்தியில் கேந்த்ர பிந்துவில் ப்ரசன்ன முகத்துடனும், தனது நான்கு கைகளிலும் பாசம் அங்குஷம், சாபம் மற்றும் பாணம் போன்ற திவ்ய அஸ்த்திரங்களுடனும், சிவப்பு பட்டு உடை உடுத்தியும், செவ்வானக்கதிரோன் பொன்ற ஒளியுடன் கூடியும், ப்ரகாசமானவளாயும், மகுடத்தில் சந்திரக்கீற்று எனும் பிறையுடனும் அமர்ந்திருப்பதாக த்யானிக்க கூறுகிறார். இந்த வடிவு சௌந்தர்யலஹரியின் 7-பாடலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த வடிவில் அம்பிகை காமராஜ பீஜமான “க்லீம்”கார ரூபிணியாக, காமகோடியான காமாட்சியாக சித்தரிக்கப்பட்டுள்ளாள். இவ்வடிவையே ஸர்வாபீஷ்ட ப்ரதாயினி ரூபம் என்றும் சர்வாஷா பரிபூரண சக்ரஸ்வாமினி என்றும் அழைப்பார்கள்

3 : ईशानादिपदं शिवैकफलकं रत्नासनं ते शुबं
पाद्यं कुङ्कुमचन्दनादिभरितैरर्घ्यं सरत्नाक्षतैः।
शुद्धैराचमनियकं तव जलैर्भक्त्या मया कल्पितं
कारुण्यामृतवारिधे तदखिलं संतुष्टये कल्पताम्॥

ஈசாநாதிபதம்சிவைகபலகம்ரத்னாஸனம்தேசுபம்
பாத்யம்குங்குமசந்தனாதிபரிதைரர்க்யம்ஸரத்னாக்ஷதை: |
சுத்தைராசமநீயகம்தவஜலைர்பக்த்யாமயாகல்பிதம்
காருண்யாம்ருதவாரிதேததகிலம்ஸந்துஷ்டயேகல்பதாம் ||

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் வாக்பவகூடத்தின் மூன்றாம் எழுத்து – ஈ

அம்பிகையின் ஆராதனை க்ரமங்களில், ஷோடசோபசார பூஜை எனும் க்ரமத்தில் முதல் நான்கு உபசாரங்கள் இங்கு விளக்கப்பட்டுள்ளது. ஆதிபரையாம் அம்பிகையின் இருப்பிடமும், அம்பாளின் திரு உருவ ஸ்மரணையும், மனதில் நிலை நிருத்தலும் முதல் இரு பாக்களில் இருந்தவையாகும். ஸாதகன், கேந்த்ர பிந்துவில் அம்பிகையை ஆசனத்தில் அமர்த்தியபின், அம்பிகையை மேலும் மனதில் ஆராதிக்கிறான்.

சங்கரர் அம்பிகையை “காருண்யாம்ருதவரிதே” காருண்யக்கடலே என பொருள் கொள்ளலாமோ! இதை இருவிதமாக அணுகலாம். ஒன்று பகுதி 1ல் கண்டது போல், அமிர்தக்கடல், மற்றொன்று, “அ-ம்ருத” என்றால் அழிவில்லாத, அல்லது இறப்பற்ற, பேரழகுடைய, மற்றும், ஸாஸ்வத:, இந்த இரு வகை பொருளும், அம்பிகைக்கு பொருத்தமானதே. வரிதே எனில், கடலே. பக்தர்பால், அம்பிகையின் அளவற்ற காருண்யத்தை இது காட்டுகிறது. தவறல்லவே, அம்பிகையே “ஸ்ரீ மாதா” வாயிற்றே!.

“ஈஸானாதிபதம் சிவைகபலகம்” என்று அம்பிகையின் இருக்கையை வர்ணிக்கிறார் சங்கரர். அம்பாளுடைய ஆஸனத்தின் கால்களாக பிரமன், விஷ்ணு, ருத்திரன் மற்றும் மஹாதேவனிருக்க, இருக்கைப் பலகையாக சதாசிவனுமிருப்பர். இதை விரிவாக லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரம் நாமம் 249-ல் “பஞ்சப்ரேதாஸனாஸீனா” ல் தெரிவிக்கிறது. ஐந்து ப்ரேதங்களாவன, முறையே பிரமன், விஷ்ணு, ருத்திரன், மஹாதேவன் மற்றும் சதாசிவன். பிரமன் உருவாக்குகிறான், விஷ்ணு காக்கிறான், ருத்ரன் அழிக்கிறான், மஹாதேவன் அழிந்ததை மறைக்கிறான் (திரோதானம்) சதாசிவனோ மறுபடியும் உயிர்ப்பிக்கிறான் (அனுக்ரஹம்). இவ்வைவரும், தத்தமது ஸக்திகளாலேயே, தத்தம் பணிகளை குறைவின்றி பணிக்கின்றனர். அவர் தம் ஸக்தியை (அ) லலிதாம்பிகையின் பலவேறு பரிணாமங்களை இழந்தாரெனில், சர-த்தன்மையிலிருந்து ஸ்திர-த்தன்மைக்கு உட்பட்டாரெனில், அவர்கள் சவ்மேயன்றோ! வாக்தேவிகள், வேறு எந்த பொருள் படவும் இயற்றவில்லை என்று எண்ணுகிறேன். “சௌந்தர்யலஹரி”யும் இதைக் குறிப்பிடுகிறது. “ஸ்லொகம் ஒன்றில்” சக்தியுடனிருக்கும் சிவனாலேயே சராசரங்களை படைக்க இயலுகிறது, சக்தியிழந்த சிவன் சவமே, ஏனெனில் அவனது அசைவுகள் அனைத்தும் நீயே, நின்னை ஸ்மரிக்கும் புண்யத்தை மறந்தால், சக்தியை இழந்து சவமாகிறான் என்கிறது, மற்றும், பிரமன், விஷ்ணு, சிவன் மற்றும் மற்றெல்லா தேவர்களாலும் நீயே போற்றப்படுபவளாகிராய், என்கிறது.

இப்படியாக அம்பிகைக்கு “சுபம்” எனும் ரத்தினங்களால் ஆக்கப்பட்ட ஆஸனம் அளிக்கப்படுகிறது. ஆஸனம் மட்டுமா “சுபம்”, அம்பிகையின் அடுத்துள்ள அத்தனையுமே சுபமேயன்றோ!

இப்படியாக ஸாதகன் அம்பிகைக்கு அளிக்கப்பட்ட ஆஸனத்தில், அம்பிகை எழில் கொஞ்ச, கம்பீரமாக வீற்றிருக்க, அம்பிகைக்கு இரண்டாவது உபசாரமாக அம்பிகையின் திருக்கமலங்களுக்கு “பாத்யம்” சமர்ப்பிக்கப்படுகிறது, பாத்யம் என்பது கால் அலம்புவதற்கன்று, ஸாதகன் மரியாதை நிமித்தமாக ரத்தினங்கள், சுப லக்ஷணமாக அக்ஷதை கலந்த நீரை அம்பிகையின் பாத அரவிந்தத்திற்கு அர்ப்பணிக்கிறான். அடுத்தது “அர்க்யம்” அம்பிகையின் திருக்கரங்களுக்கு, மஞ்சள், சந்தனத்துடன் நறுமணம் கமிழும் நீர் அளிக்கிறான். பின்னர், அம்பிகைக்கு சுத்த நீர் அருந்த கொடுக்கிறான். இவை அனைத்தும் பரம பக்தியுடனும் ஸ்ரத்தையுடனும், பணிவுடனும், பரிவுடனும், பாசத்துடனும், அம்பிகை திருப்திப்படுகிற வகையில் (ஸம்ஸ்துத) அமைகிறது. இக்காரியங்களை செய்வதினால், ஸாதகன் தன் சித்தத்தை தூயதாக்கிக்கொள்கிறான். முழு ஈடுபாடுடன் எண்ணத்தில் செயல் படுகிறவனுக்கு, இந்த வரிகளில் குறிப்பிட்ட சுவாசனைகளை வரிகளை உச்சரிக்கும்போதே அனுபவிக்க வைக்கும்.

4 : लक्ष्ये योगिजनस्यरक्षितजगज्जाले विशालेक्षणे
प्रालेयाम्बुपटीर कुङ्कुमलसत्कर्पूरमिश्रोदकैः।
गोक्षीरैरपि नारिकेलसलिलैः शुद्धोदकैर्मन्त्रितैः
स्नानं देवि धिया मयैतदखिलं कल्पताम्॥

லக்ஷ்யேயோகிஜநஸ்யரக்ஷிதஜகத்ஜாலேவிசாலேக்ஷணே
ப்ராலேயாம்புபடீரகுங்குமலஸத்கர்பூரமிச்ரோதகை: |
கோக்ஷீரைரபிநாலிகேரஸலிலை:சுத்தோதகைர்மந்த்ரிதை:
ஸ்நானம்தேவிதியாமயை ததகிலம்ஸந்துஷ்டயேகல்பதாம் ||

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் வாக்பவகூடத்தின் நான்காம் எழுத்து – ல

அம்பிகையே, அகில லோக ரக்ஷாகரீ, யோகிகள் அடைய விழயும் பரமானந்தியே, ஜெகஜ்ஜாலே, இந்த எழியோன், உனது ஸ்னானத்திற்காக மனதால் அர்ப்பணிக்கும் சுகந்த் பன்னீர், சந்தணம், மஞ்சள், சுத்தமான கற்பூரம் கலந்த நீர், மற்றும் கோவின் அமிர்தமாம் சுத்தமான பால், இளநீர் மற்றும் வேதமந்திரங்களால் புனிதப்படுத்தப்பட்ட சுத்த ஜலம் ஆகியவற்றை அங்கீகரித்து ஏற்றருள்வாயாக! இவைகளினால் உனது மனம் குளிரட்டும்.

அம்பிகையின் இருப்பிடமான மணித்வீபத்தையும், ஆஸனத்தின் இருப்பிடமாக கூறப்பட்டுள்ள ஏழு நிலை கோபுர முள்ள ஆயிரங்கால் பவனமும், (இந்த ஏழு நிலை என்பதை மூலாதார சக்ரம் முதல் ஸஹஸ்ரார சக்ரம் வரையில் என்றும் பொருள் கொள்ளலாம்). சிம்ஹ ஆஸனமும், பாத்யம் முதல் ஆசமனம் வரை அளித்த பின் இப்பொழுது அம்பிகைக்கு, ஸ்னானம் அர்ப்பணிக்கப்படுகிறது. சங்கரர், ஆதிபரையான அம்பிகையே, யோகிகள் அடையத்துடிக்கும் பதகமலம் என்கிறார் ஏனென்றால், அம்பிகையால் மட்டுமே ஸாதகனை சிவனிடம் சேர்க்கமுடியும், லலிதா ரஹஸ்ய சஸஹஸ்ரத்தில் 727-வது நாமம் “சிவ ஞானப்ரதாயினி” என்பதாகும். ஆகையால் அம்பிகையால் மட்டுமே சிவ ஞானத்தை அருளமுடியும். அம்பிகையின் பரிபூரண அருட்கடாட்சம் கிட்டிய பின்னரே, சிவனின் கடாட்சம் பெறமுடியும். சிவனால் மட்டுமே ஜீவனை ஜீவன் முக்தனாக்கமுடியும், அல்லாது சிவனுடன் இணைய முடியும். ஆகையாலே சங்கரர், அம்பாளை “யோகிஜன லக்ஷ்யே” என்கிறார்

இந்த சுவாசனை திரவியங்களானது மனதால் கல்பிக்கப்படுவதால், அவை மிகுந்த, உயர்ந்த, தரத்தோடு கூடியவைகளாகின்றன. பாலும், இளநீரும், குளிர்ச்சி உண்டு செய்பவை, சந்தணமும், பன்னீரும் கூட. இதன் காரணம் யாதெனில், சிவெயெனப்படும் சிவ பத்னியானவள், எப்பொழுதும் பல கோடி சூரியனுக்கு இணையான ப்ரகாசத்தோடு சிவனோடு இணைந்திருக்கிறாள், (காலாக்னி ருத்ராய எனும் ஸ்ரீ ருத்ரத்தை கவனிக்க) அப்பிரகாசத்திற்கு உண்டான சூடும் இருக்குமல்லவா!, ஸாதகனால் அவ்வளவு வெப்பமான அம்பிகையை நெருங்க முடியுமா? ஆகையினாலேயே அம்பிகையை குளிர்விக்கிறான். முடிவாக அம்பிகைக்கு வேத மந்திரங்களால் புனிதப்படுத்தப்பட்ட சுத்த ஜலத்தால் அபிஷேகிக்கிறான். வேத மந்திரங்களால் ஏன் நீர் புனிதப்படுத்தல் வேண்டும்? வேதமே அம்பிகையிடமிருந்தே வந்தவை தானே! (லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரம் 338) என்றால், இங்கு அளிக்கப்படும் உபசாரங்கள், ஆலயங்களில், கோவில்களில் நடப்பதைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது, அதுபோலவே ஸாதகனும் அம்பிகையை ஆராதிக்க விழைகிறான். இது ஸாதகனின் மன மாற்றத்தையே குறிக்கிறது. ஸாதகன், சிந்தையில் அம்பிகையை இருத்தி சிந்தையாலே வழிபடத் துவங்கிவிட்டான் அன்றோ! முக்திக்கு மார்கம் கண்டு கொண்டான் அன்றோ!

5 : ह्रींकाराङ्कितमन्त्रलक्षिततनो हेमाचलात्संचितैः
रत्नौरुज्ज्वलमुत्तरीयसहितं कौसुम्भवर्णांशुकम्।
मुक्तासंततियज्ञसूत्रममलं सौवर्णतन्तूद्भवं
दत्तं देवि धिया मयैतदखिलं संतुष्टये कल्पताम्॥

ஹ்ரீங்காராங்கிதமந்த்ரலக்ஷிததநோஹேமாசலாத்ஸஞ்சிதை:
ரத்னைருஜ்வலமுத்தரீயஸஹிதம்கௌஸும்பவர்ணாம்சுகம் |
முக்தாஸந்ததியஜ்ஞஸ¨த்ரமமலம்ஸெளவர்ணதந்தூத்பவம்
தத்தம்தேவிதியாமயைத்தகிலம்ஸந்துஷ்டயேகல்பதாம் ||

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் வாக்பவகூடத்தின் ஐந்தாம் எழுத்து – ஹ்ரீம்

ஹ்ரீங்கார மந்திரத்தையே உடலாகக் கொண்டவளே! பார்வதியே! மணிக்கற்களால் பிரகாசிக்கும் உத்தரீயத்துடன் செந்நிற ஆடையும் பொற்தந்தியில் கோக்கப்பட்ட முத்துக்களால் ஆகிய பூணூலையும் உனக்கு சமர்ப்பிப்பதாகக் கல்பிக்கிறேன்.

ஸாதகன், தனக்காக இங்கு எதையும் யாசிப்பதில்லை, முக்தியைக்கூட, எல்லாவற்றையும் அம்பிகையை சந்தோஷப்படுத்தவே அர்ப்பணிக்கிறான். அம்பிகையின் மேல் அளவில்லா பற்றினாலே இந்த உபசாரங்களை செய்கிறான். அதுவும் அந்த ஸாதகன் இருந்த இடத்திலேயே, மானசீகமாக மேரு பர்வதம் சென்று, விலைமதிப்பற்ற முத்து ரத்தினங்களையும், வேறு வேறு இடங்களில் சென்று பல பூஜைப்பொருட்களை சேகரிக்காமல், மனதிலேயே அவற்றையெல்லாம் உருவாக்கி அம்பிகைக்கு அர்ப்பணிக்கிறான். இதனால் அந்த ஸாதகனுக்கு, அம்பிகையிடத்தில் மனம் ஒன்றிட / சிலவிட அதிக நேரம் கிடைக்கிறது அல்லவா?

ஒருவழியாக அம்பிகைக்கு ரத்தினங்களால் இழையப்பட்ட உத்தமமான செம்பட்டு ஆடையை ஸ்ரீ ஆதிசங்கரிரின் துணையோடு உடுத்திவிட்டோம்.

சுத்தமான மனதும், உண்மையான பக்தியும் மனதிலிருந்தால், அன்னை அங்கிருப்பாள் அன்றோ!

 6 : हम्सैरप्यतिलोभनीयगमने हारावलीमुज्ज्वलां
हिन्दोलद्युतिहीरपुरिततरे हेमाङ्गदे कङ्कणे।
मञ्चीरौ मणिकुण्डले मकुटमप्यर्धेन्दुचूडामणिं
नासामोक्तिकमङ्गुलीयकटकौ काञ्चीमपि स्वीकुरु॥

ஹம்ஸைரப்யதிலோபநீயகமநேஹாராவலீமுஜ்வலாம்
ஹிந்தோலத்யுதிஹீரபூரிததரேஹேமாங்கதேகங்கணே ||
மஞ்ஜீரௌமணிகுண்டலேமகுடமப்யர்தேந்துசூடாமணிம்
நாஸாமெனக்திகம்அங்குலீயகடகௌகாஞ்சீமபிஸ்வீகுரு ||

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் மத்யகூடத்தின் முதல் எழுத்து – ஹ

இந்தப் பாடலில் வெவ்வேறு விதமான ஆபரணங்களை அம்பிகைக்கு அணிவித்தலைக் குறிப்பிடுகின்றது. கடகம், வாகுவளையம், கங்கணம், பாதகிங்கிணி, மணிகுண்டலம், மகுடம், முத்து மூக்குத்தி – பில்லாக்கு, பொன் மோதிரம், சூடாமணி, இடையணி முதலியவற்றை நான் உனக்கு (மானசீகமாக) அணிவிப்பதை நீ ஏற்றுக்கொள்வாயாக.

இந்த பாடலில் ஸாதகன், அழகு மிளிரப் பட்டுடுத்தி அன்னம் நாண நடைபயின்று ஆஸனத்தில் அமர்ந்த அன்னைக்கு, ஆபரணங்கள் சேர்த்து அழகு பார்க்கிறான். பலவிதமான ஹாரங்கள், முத்து, ஸ்வர்ணம், ரத்தினம் சேர்த்திழைத்து தயாரித்ததை அம்பிகைக்கு அணிவித்து அழகு பார்க்கிறான். இது ஸாதகனுக்கு மகிழ்வை தரவில்லை, ஆகையால் அம்பிகையின் கைகளுக்கு கங்கணம் அணிவித்து மகிழ்கிறான். நவ ரத்தினங்களாலும், தங்கத்தாலும் செய்த வளையல்களை அம்பிகைக்கு அணிவித்து அழகு பார்க்கிறான். காதிற்க்கு மணிகுண்டலங்களும், சிரசில் கிரீடமும், சினந்தாமணி ரத்தினத்தினாலும், அட்டமி யன்று தோன்றும் பிறை போன்ற நெற்றிச்சூடியையும் அணிவிக்கிறான். சம்பக புஷ்பத்தைப்போன்று பேரழகுடைய பெருமாட்டிக்கு, மூக்குத்தியும் பில்லாக்கும் எழில் கொஞ்சும் ரத்தினத்தில் செய்திட்டு சூடி மகிழ்கிறான்.

இந்த உபசாரங்களை அம்பிகைக்கு மனதளவில் ஈடுபாடோடு, பக்தியோடு செய்யும் ஸாதகன், அம்பிகையை நேரில் கண்ட அனுபவத்துடன் ஆனந்த கண்ணீர் மல்க அம்பிகையை துதிப்பதை யாம் உணர முடிகிறது.

7 : सर्वाङ्गे घनसारकुङ्कुमघनश्रीगन्धपङ्काङ्कितं
कस्तूर्रितिलकं च फालफलके गोरोचनापत्रकम्।
गण्डादर्शनमण्डले नयनयोः दिव्याञ्चनं तेऽञ्चितं
कण्ठाब्जे मृगनाभिपङ्कममलं त्वत्प्रीतये कल्पताम्॥

ஸர்வாங்கேகனஸாரகுங்குமகனஸ்ரீகந்தபங்காங்கதிதம்
கஸ்தூரீதிலகம்சபாலபலகேகோரோசநாபத்ரகம்மி |
கண்டாகர்சனமண்டலேநயநயோர்த்வ்யாஞ்ஜநம்தேsரஞ்சிதம்
கண்டாப்ஜேம்ருகநாபிபங்கம்அமலம்த்வத்ப்ரீதயேகல்பதாம் ||

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் காமராஜ கூடம் (எ) மத்யகூடத்தின் இரண்டாம் எழுத்து – ஸ

அம்பிகே! குங்குமப்பூ, நல்வாசனைப் பொருள்கள் சந்தனம் முதலியவற்றுடன் உன் உடலுக்குப் பூச்சாக அணிவிக்கிறேன். கஸ்தூரி, கோரோசனை ஆகியவற்றால் உனது நெற்றியில் திலகம் இடுகிறேன். முகம் பார்க்கும் கண்ணாடியுடன் உனது கண்களில் திவ்வியமான அஞ்சன மையிடுகிறேன். உனது கழுத்துக்குக் கஸ்தூரி அணிவிப்பதாகக் கல்பிக்கிறேன்.

அம்பிகையின் ஸ்னான உபசாரமும், உடையுடுத்தும் வைபவமும், நகை பூணும் வைபவமுமானபின், அம்பிகையை மேலும் அழகு செய்ய, குங்குமப்பூ கலந்த சுத்த சந்தணத்தால் தயாரிக்கப்பட்ட லேபம், உடல் பூச்சாக அணிவிக்கிறேன் அம்மா!, கஸ்தூரி, கோரோஜனம் இழைத்து தாயே உனது அகலமான நெற்றியில் திலகமிடுகிறேன், உன் கண்களுக்கு திவ்யமான அஞ்சன மை தீட்டி மகிழ்கிறேன் தாயே. உனது முளரிபோன்ற திருக்கழுத்திற்கு, கஸ்தூரி லேபமிட்டு அழகுக்கு அழகு சேர்க்கிறேன் அம்மா!

இதில் ஒரு விஷேஷம் என்னவெனில், இவ்வகை அலங்காரங்களை செய்யும்பொழுது, இறைவியும், சாதகனும் மட்டுமே தனித்துள்ளனர், சாதகன் தன் மனதிற்கு பிடித்தவாரு இறைவியை அழகூட்டி ஆராதிக்கிறான். இங்கு சங்கரர் அம்பிகையின் நெற்றியை ஒரு பலகைபோல என்றே குறிப்பிடுவதாக உள்ளது, ஆயின் சங்கரரின் சௌந்தர்யலஹரி(46)யில், அட்டமி சந்திர வடிவிலுள்ளது என்றும், அதேபோல் ரஹஸ்ய ஸஹஸ்ரம்(15)லும் குறிப்பிட்டிருப்பதை கவனித்தால், சந்தத்திற்காக சிறு பிழை சேர்த்தாரோ அல்லது குறிப்பு எடுத்தவர் பிழை சேர்த்தாரோ என என்ற கேள்வி எழுகிறது.

இதனோடு இன்னொரு விஷயமும் கூட, ஏதோ, பக்தனாகிய நாம், அம்பிகையை இப்படி ஒவ்வொரு விதமாக அழகு பார்த்து மகிழ, இறைவி அம்பிகையின் இறைவனான காமேஷ்வரன், தானும் குறுஞ்சிரிப்புடன் இதையெல்லாம் அம்பிகையுடன் சேர்ந்தே அனுபவிக்கிறான் அன்றோ! ஏனெனில், அம்பிகையின் வல பாதி காமேஸ்வரன் அன்றோ! இப்படியாக காமேஷ்வரியை அழகு பார்த்து, ஆராதித்து, அறியாமலே காமேஷ்வரனையும் ஒருசேர ஆராதிக்கிறோம்! இதை விட, பெரும் பாக்கியம் மற்றொன்று ஒன்று உண்டோ? இப்படியாக நம் எல்லோருக்கும் அய்யனையும், அம்பிகையும் ஒரே சமயத்தில் ஆராதிக்க ஆதி சங்கரர் வழி வகுத்திட்டாரே, அவருடன் இணைந்து அம்பிகையை ஆராதிப்பதின் மூலம், சங்கரருக்கு நன்றி சொல்வோமா?

8 : कल्हारोत्पलमल्लिकामरुवकैः सौवर्णपङ्केरुहैः
जातीचम्पकमालतीवकुलकैर्मन्दारकुन्दादिभिः।
केतक्या करवीरकैर्बहुविधैः कऌप्ताः स्रजो मालिकाः
संकल्पेन समर्पयामि वरदे संतुष्टये गृह्यताम्॥

கல்ஹாரோத்பலமல்லிகாமருவகை:ஸெளவர்ணபங்கேருனஹ:
ஜாதீசம்பகமாலதீவகுலகைர்மந்தாரகுந்தாதிபி: |
கேதக்யாதரவீரகை:பகுவிதா:க்லுப்தா:ஸ்ரஜேமாலிகா:
ஸங்கல்பேநஸமர்பயாமிவரதேஸந்துஷ்டயேக்ருஹ்யதாம்மிமி ||

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் காமராஜ கூடம் (எ) மத்யகூடத்தின் மூன்றாம் எழுத்து – க

பலவிதமான மலர்களை சூட்டி அம்பிகையை மகிழ்விப்பதை இப்பாடல் குறிப்பிடுகிறது. செங்கழுநீர், நீலம், மல்லிகை, மருக்கொழுந்து, பொற்றாமரை, ஜாதி மல்லிகை, முல்லை, மகிழம்பூ, மந்தாரை போன்ற மலர்களை சங்கல்பித்து அம்பிகே, உனக்கு மாலைகளாகவும், சரமாகவும், உதிரியாகவும் சமர்ப்பிக்கிறேன். மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வாயாக.

ஸாதகர், அம்பிகைக்கு, மாலைகள் மட்டும் அர்ப்பணிக்கவில்லை, அதோடு கூட சரமாக கோர்த்து முடியில் சூடவும் அளிக்கிறார். முடியில் சூடும் புஷ்பமானது, சிரசின் பின்புறமும், முதுகுத்தண்டின் மேலுமாக அமைந்துள்ள சக்கரத்தை பாதுகாக்கிறது. இந்த சக்கரம் அமைந்துள்ள இடத்தை ஆங்கிலத்தில் MEDULLA OBLANGETA என அழைக்கின்றனர். இதோடு அம்பிகையின் அலங்காரம் முடிகிறது.

பூவுலக மலர்களல்லாது, தேவலோகத்திற்கே உரிய தெய்வீக மலர்களால் அம்மையை, ஆதி பரையை அலங்கரிக்கும் சாதகன், பொருள்களால் ஆன மாயையை விட்டு, அருள்களால் ஆன அம்பிகையின் சாக்ஷாத்காரத்திற்கு தன்னை தயார் செய்து கொள்கிறான். அது காண், அம்பிகையின் தர்ஸன பாக்யமும், மோக்ஷமும் அடைய விழைகிறான்.

9 : हन्तारं मदनस्य नन्दयसि यैरङ्गैरनङ्गोज्ज्वलैः
यैर्भृङ्गावलिनीलकुन्तलभरैर्बध्नासि तस्यशयम्।
तानीमानि तवाम्ब कोमलतराण्यामोदलीलागृहाण्यामोदाय
दशाङ्गगुग्गुलुघृतैर्धूपैरहं धूपये॥

ஹந்தாரம்மதநஸ்யநந்தயஸியைரங்கைரநங்கோஜ்வலை:
பைர்ப்ருங்காவலிநீலகுந்தலபரை:பத்நாஸிதஸ்யாசம் |
தாநீமாநிதவாம்பகோமலதராண்யாமோதலீலாக்ருஹா-
ண்யாமோதாயதசாங்ககுக்குலுக்ருதைர்துபைரஹம்தூபயேமிமி ||

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் காமராஜ கூடம் (எ) மத்யகூடத்தின் மூன்றாம் எழுத்து – ஹ

“அம்பிகே! பலவகையான வாசனைப்பொருள்கள், மருத்துவ மூலிகைப் பொருள்கள், தசாங்கம், குங்கிலியம் போன்றவற்றைக் கலந்து, மன்மதனை எரித்த சிவனும் மோகிக்கும் உன் அங்கங்களுக்கும் அவனைக் கவரும் கூந்தலுக்கும் தூபம் காட்டுகிறேன்.”

ஒரு சமயம், காமதேவன் எனப்படும் மன்மதன், பரசிவனார், பார்வதியை மோஹிக்க சிவன்மேல் மலர்க்கணை தொடுக்க, சிவன் சினக்க, பஸ்மமான காமதேவனை, உயிர்ப்பிக்க காமதேவனின் மனைவி ரதிதேவி அம்பிகையை சரணடைய, அம்பிகையின் அருளால் உயிர்ப்பெற, தேகமில்லாமல், காமன் உருப்பெற, காரணமாயிருந்ததாலோ என்னமோ, காமதேவன் அம்பிகைக்கு யாரும் அளவிடமுடியாத அழகை வாரி வழங்கினான் என்றால் மிகையாகாது, இயற்கையிலேயே அம்பாளுக்கு, ப்ரக்ருதி (இயற்கை) என்ற நாமமும் உண்டல்லவா!, இயற்கையோடு அழகு சேரும்பொழுது, அழகு பேரழகாகவன்றோ பரிமணிக்கிறது!.

ஸாதகன் சிவனையும், சிவனோடிணைந்த பார்வதியையும் சிந்தையில் நிருத்துகின்றான். இப்பொழுது அந்த ஸாதகனுக்கு, ‘அம்பிகையும், ஐய்யனும் ஒன்றே’ என்று புரிய ஆரம்பிக்கிறது. ‘ஒன்றை விட்டு இன்னொன்று தனியாக இயங்குவதில்லை’ என்பதும் நன்கு விளங்குகிறது. இந்த உயரிய நிலையில், அதாவது ஸஹஸ்ரார சக்கிர பிந்துவில் சிவ-சங்கரி மைதுனம் நடக்கிறது. ‘படைக்கும் தொழில்’ துவங்குகிறது.

அம்பிகையின் ஆராதனையில் தூபமிடல் ஒரு முக்கியமான சடங்காகும். தஸாங்கம் என்பது பத்து விதமான இயற்கை பொருள்கள் கொண்டு தயாரிக்கப்படும் சுவாஸனை திரவ்யமாகும். இந்த பத்து விதமான மூலிகை மற்றும் மரப்பட்டைகள் நன்கு பொடிக்கப்பட்டு, தணலிலிடும்போது, நறுமணமுள்ள புகை வெளிப்படும். இந்த நறுமணப்புகையால், சுற்றுப்புறம் சுத்தியாகும், அதோடு நமது சிந்தையில் உள்ள கெட்ட சிந்தனைகள் நெருப்பு தணலில் எரிந்துபோய் நற்ச்சிந்தனையே மிஞ்சும். பகவத்கீதையில் கிருஷ்ணர் சொன்னதாக ஒரு ஸ்லோகம் (|||.37), ‘ரஜோகுணம் எனும், வேட்கை மற்றும், கோபம் இதனுடயே எரிந்து சாம்பலாகட்டும்’ என்று.

ஸாதகன் இப்படியாக தனது மனதையும் தூய்மைப்படுத்திக்கொள்கிறான். தூய்மையுள்ள மனதில் அம்பிகை எப்பொழுதும் இருப்பாளன்றோ!

அற்புதமான, அழகுடன், ஆதிசங்கரர், அம்பிகையின் உடலுக்கும், நீளமான, பரசிவன் மோஹிக்கும் கூந்தலுக்கும் தூபமிட்டதை அவருடனிருந்து கண்டு களிப்புற்றோம்.

10 : लक्ष्मीमुज्ज्वलयामि रत्ननिवहोद्भास्वत्तरे मन्दिरे
मालरूपविलम्बितैर्मणिमयस्तम्भेषु संभावितैः।
चित्रैर्हाटकपुत्रिकाकरधृतैर्गव्यैर्घृतैर्वधितै-
-र्दिव्यैर्दीपगणैर्धिया गिरिसुते संतुष्टये कल्पताम्॥

லக்ஷ்மீமுஜ்வலயாமிரத்னநிவஹோத்பாஸ்வந்தரேமந்திரே
மாலாரூபவிலம்பிதைர்மணிமயஸ்தம்பேஷ§ ஸம்பாவிதை: |
சித்ரைர்ஹாடகபுத்ரிகாகரத்ருதைர்கவ்யைர்க்ருதை: மிவர்திதை:
திவ்யைர்தீபகணைர்தியாகிரிஸுதேஸந்துஷ்டயேகல்பதாம் ||

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் காமராஜ கூடம் (எ) மத்யகூடத்தின் ஐந்தாம் எழுத்து – ல

அம்பிகையே! நானாவித ரத்தினங்களால் ஆக்கப்பட்ட திவ்ய பவனத்தில், நானாவித ரத்தினங்களால் இழைக்கப்பட்ட தூண்களில் மாலைகளைப்போல், தீபங்கள் எரிந்துகொண்டிருக்கின்றன. தங்கத்தினாலான பெண் பதுமைகள், தீபத்தை இரு கைகளாலும் ஏந்தி உன் பவனத்தை ப்ரகாசிக்க செய்துகொண்டிருக்கின்றனர். இந்த தீபங்களனைத்தையும் பசு நெய் ஊற்றி, தீபமேற்றுகிறேன் தாயே பர்வத புத்ரீ. இவையெல்லாம் உனக்கு சந்துஷ்டியை நல்குவதாக, ஏற்றுக்கொள் அம்பிகையே.

ஸாதகன், தனது மல்ங்களான கேட்கை (LUST), கோபம் போன்ற “ரஜோகுணத்தை” நெருப்பிலிட்டு பொசுக்கி, சுத்தமான, நறுமணமுள்ள ஆத்மனை அம்பிகைக்கு தூட்பமாக அர்ப்பித்ததை அனுபவித்தோமல்லவா! இங்கு ஸாதகன், அம்பிகைக்கு, பசுவின் நெய்யால் ஆன தீபங்களை அற்ப்பிக்கிறான். பசுவின் (கோ) கிடைக்கும் எல்லாப்பொருளுமே பவித்ரமாக கருதப்படுகிறது, மந்திர உச்சாடனத்தோடு, பசுவின் பால், தயிர், நெய், சாணம், மூத்திரம் கலந்தது பன்சகவ்யமாகும். இது, சேவித்தவிரின் பாவத்தையெல்லாம் பருகியவுடன் நிவர்த்திக்கிறது என்கின்றன வேதங்கள்.

அம்பிகை ஸ்ரீ மஹா திரிபுரசுந்தரியின் இருப்பிடத்தைப் பற்றி “பாகம் 1”ல் கண்டிருந்தோம். அந்த மஹா மண்டபத்தில் எவ்வளவு தீபமேற்றினாலும் ஒரு குறிப்பிட்ட தூர அளவே வெளிச்சம் இருக்கும், ஆயின், அம்பிகையின் பவனமோ ரத்தினங்களால் ஆனதன்றோ!, ஆகையால், ஒளிரும் விளக்குகளின் ஒளியை ரத்தினங்களும் பிரதிபலிக்கின்றன. ஆதலால், மண்டபமே ஒளிமயமாக இருக்கிறது.

முன்னமே பார்த்தபடி மண்டபம், தீப தோரணங்களாலும், தீபமேந்திய தங்க பதுமைகளாலும் ஒளியூட்டப்படுகிறது. அவ்வொளியாலும், அவ்வொளியின் பிரதிபலிப்பாலும் அம்பிகையையும், அம்பிகையின் மண்டபத்தையும் ஒளி வெள்ளத்தில் ஆழ்த்துகிறது. ஆயினும், ஸாதகன், ஒன்றை தெரிந்துகொள்கிறான். அது என்னவென்றால், ஒளியேயான அம்பிகை இல்லேல் ஒளியேது? என்று. இதையே நாம், “ப்ரகாஸ விமர்ஷ மஹாமாயா ஸ்வரூபிணி” என்கிறோம்.

இது கதா உபனிஷத்தில் விரிவாக உறைக்கப்பட்டுள்ளது. இதில் (II.ii.15) ப்ரம்மத்தின் முன் சூரிய, சந்திர, நக்ஷத்திர, மின்னல் உள்பட எவரும் ஜ்வலிப்பதில்லை, ப்ரகாசிப்பதில்லை, எல்லாம் ப்ரம்மத்தின், ப்ரம்ம தேஜஸான ஒளியின் பிரதிபலிப்பே என்று.

இந்த வெளிச்சமாவது, ஸாதகனின், அகக்கண்ணை திறக்கிறது. இங்கு, ஸாதகனுக்கு, அம்பிகையை, அம்பிகையின் ரூபத்தை, மனதில் ஸ்மரித்தாலே போதுமானது, அம்பிகையை தவமிருந்து அடைய வேண்டியதில்லை என்று. ஆம், ஸ்மரணையிலே சித்திக்கும் தாயிடம் தவமிருத்தல் வேண்டுமோ! இத்தருணம், அம்பிகை, ஸாதகனின் உள்ளத்தில் ஒளிர்ந்து, ஸாதகனை அளவிலா பேரின்பத்தில் ஆழ்த்துகிறாள்.

11 : ह्रींकारेश्वरि तप्तहाटककृतैः स्थालीसहस्रैर्भृतं
दिव्यान्नं घृतसूपशाकभरितं चित्रान्नभेदं तथा।
दुग्धान्नं मधुशर्करादधियुतं माणिक्यपात्रे स्थितं
माषापूपसहस्रं अम्ब सफलं नैवेध्यमावेदये॥

ஹ்ரீங்காரேச்வரிதப்தஹாடகக்ருதை:ஸ்தாலீஸஹஸ்ரைர்ப்ருதம்,
திவ்யான்னம்க்ருதஸ¨பசாகபரிதம்சித்ரான்னபேதம்ததா |
துக்தான்னம்மதுசர்கராததியுதம்மாணிக்யயாத்ரேஸ்திதம்
மாஷாபூபஸஹஸ்ரமம்பஸகலம்நைவேத்யமாவேதயே ||

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் காமராஜ கூடம் (எ) மத்யகூடத்தின் கடைசி எழுத்து – ஹ்ரீம்

ஹ்ரீங்காரேஸ்வரியே, தாயே பல பொற்பாத்திரங்களில் பசுவின் நெய், பருப்பு, கறிவகைகள் கலந்த திவ்யான்னம், சித்ரான்னங்கள், தேன், பாற்சோறு, பலவிதமான பழங்கள், வடைகள் முதலியவற்றை மாணிக்கப்பாத்திரங்களில் நைவேத்தியமாக சமர்ப்பிக்கின்றேன்.

‘ஓம்’ என்ற ப்ரணவம் எப்படி சக்திவாய்ந்ததோ, அதேபோல் சக்தி ப்ரணவம் எனும் ‘ஹ்ரீம்’ அற்புத சக்திவாய்ந்த பீஜ மந்திரமாகும். இதை புவனேஸ்வரி பீஜம் என்றும், மாயா பீஜம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரத்தில் 301வது நாமம் ஹ்ரீங்காரீ என்பதாகும். ஆகையினாலேயே, பன்சதஸியின் ஒவ்வொரு கூடத்தின் முடிவிலும் ‘ஹ்ரீம்’ என்ற சக்தி ப்ரணவம் உள்ளது. ஹ்ரீம் என்பது ஹ + ர + ஈ + ம மற்றும் பிந்து எனப்படும் புள்ளியால் ஆனது ஆகும். மந்திரங்களில் பிந்து எனும் புள்ளியானது மிகவும் சக்திவாய்ந்தது ஆகும். உதாரணத்திற்கு, ‘ஹ’ (ह) என்பது எழுத்தாகவும், ‘ஹம்’ (हं) என்பது மந்திரமாகிறது. இந்த ‘ஹம்’ என்பது ஹ் என்பது ஷ்ருஷ்டியையும் அ என்பது ஸ்திதியாகவும், ம் என்பது லயத்தை குறிப்பதாகவும் அமைகிறது. இந்த மந்திரம் பற்றி விரிவாக இன்னொரு பதிவில் பார்ப்போமாக. சில ஏடுகளில் இதையே சிவ-சக்தி பீஜம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

ஸாதகன், பொற்கிண்ணங்களில் நிவேதன பொருட்கள் அர்ப்பணிக்கப்படுகிறது. ஏன் என்றால் அவளே பொன்னிர மேனியள் அன்றோ, (ரஹஸ்ய ஸஹஸ்ர நாம த்யான ஸ்லோகம் அம்பிகையை ‘ஹேமாபாம்’ எனில் பொன்னிறமேனியள் என்றே குறிக்கிறது) பொதுவாகவே இறைவன் – இறைவியருக்கு அர்ப்பணிக்கப்படும் பொருள்கள் அனைத்துமே பொன்னால் ஆன பாத்திரங்களிலேயே அர்ப்பணிக்கப்படுகின்றன. இதன் காரணம் இரண்டு எனலாம், ஒன்று தங்கமானது மிக சுத்தமானது, எந்த பொருளும் சுலபமாக பொன்னோடு ரஸாயனக்கூட்டு ஏற்ப்படுத்திக்கொள்வதில்லை, ஆதலின், களிப்படிக்காது. இரண்டாவது அது ஒரு உயர் ரக தாதுவாகும்.

அம்பிகை, பாயஸ அன்னத்தை விரும்புபவள், அதுகாண், அரிசி, பால், சர்க்கரை கலந்து, குங்கமப்பூ, ஏலம், கற்பூரம் சேர்த்து பாயஸம் செய்து அம்பிகைக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இதை அர்ப்பணிக்கும்போது சங்கரர், மாணிக்கத்திலான பாத்திரத்தில் அர்ப்பணிப்பாதக கூறுகிறார். (ரஹஸ்ய ஸஹஸ்ர நாம த்யான ஸ்லோகம் அம்பிகையை ‘மாணிக்ய மௌளி ஸ்புரத்’ எனில் மாணிக்கத்திலான மகுடம் சூடியவள் என்றே குறிக்கிறது)

12 : सच्छायैः वरकेतकीदलरुचाताम्बूलवल्लीदलैः
पूगैः भूरिगुणैः सुगन्धिमधुरैः कर्पूरखण्डोज्ज्वलैः।
मुक्ताचूर्न्णविराजितैः बहुविधैर्वक्त्रांबुजामोदनैः
पूर्णा रत्नकलाचिका तव मुदे न्यस्ता पुरस्तादुमे॥

ஸச்சாயைர்வரகேதகீதலருசாதாம்பூலவல்லீதலை:
பூகைர்பூரிகுணை:ஸுகந்திமதுரை:கர்பூரகண்டோஜ்வலை: |
முக்தாசூர்ணவிராஜிதைர்பகுவிதைர்வக்த்ராம்புஜாமோதனை:
பூரணாரத்னகலாசிகாதவமுதேந்யஸ்தாபுரஸ்தாதுமே ||

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் சக்தி கூடம் (எ) கடைசி வரியின் முதல் எழுத்து – ஸ

அம்பிகே! வெற்றிலை, வாசனைப் பாக்குத்தூள், பச்சைக்கற்பூரம், முத்திலிருந்து தயாரிக்கப்பட்ட சுண்ணம் முதலியவை கொண்ட ரத்தினத்தால் ஆன வெற்றிலைப் பெட்டியை நின் மனம் மகிழச் சமர்ப்பிக்கின்றேன்.

“பந்தன் இலை” அல்லது “கேதகீ” ஒரு சிரிய வகை இலையாகும், அது அன்னாசிப்பழச் செடி அளவே உயரம் வளரும். தாழம்பூ போல் உள்ளே இலைகளும், வெளியிலுள்ள இலையானது கடும் பச்சை நிறத்திலுமிருக்கும். நறுமணம் கோண்ட இச்செடியின் நறுமணம் அம்பிகைக்கு மிக பிரியமானதாகும். இந்த செடியின் நறுமணத்தால் சிவ பூஷணமாம் நாகங்கள் (ரஜ நாகம் கூட) கவர்ந்திழுக்கப்பட்டு இச்செடியின் அடியில் தங்கும். அதனாலோ என்னவோ அம்பிகைக்கும் இந்த நறுமணம் மிகவும் பிரியமானதாகும். உமையும், உடயானுக்கு ஆபூஷணமன்றோ, இடபாகத்தை அலங்கரிப்பவள் ஆயிற்றே! இந்த இலையின் வர்ணத்திலுள்ள வெற்றிலையும், கர்பூரவீடிகா எனும் சுவாசனை சூரணம் (பொடி) சேர்த்த, தாம்பூலத்தை அம்பிகைக்கு சங்கரர் அளிக்கிறார். கர்பூரவீடிகா சூரணமானது குங்குமப்பூ, ஏலம், லவங்கம், பச்சைகற்பூரம், கஸ்தூரி, ஜாதிக்காய், ஜாதிபத்திரி முதலியவைகளை பொடித்து சர்க்கரை சேர்த்து செய்யப்படும் ஒரு நறுமணப்பொடியாகும். அம்பிகை இதை மெல்லும்போது, அதன் நறுமணம் அகிலமெல்லாம் பரவும். இந்த வர்ணனை லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரத்தின் 26-வது நாமம் எடுத்துறைக்கிறது. அம்பிகையின் வாய் லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரத்தின் நாமம் 559-ல் ‘தாம்பூல-பூரித-முஃகி’ என்கிறது.

லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரத்தின் 24-வது நாமம் அம்பிகையின் உதடுகள் கோவைப்பழம் போல் சிவந்து அழகாக காணப்படுகின்றன என்று. இயற்கையிலேயே அம்பிகைக்கு அழகு மிகுந்த செவ்விதழ்கள், அதோடு சங்கரர் அளித்த தாம்பூலமான வெற்றிலையுடன், கர்பூரவீடிகா சூரணத்தோடு, முத்துச்சுண்ணமும் கலந்து மெல்வதாலேயோ என்னமோ அம்பிகையின் மந்தஹாசமான புன்முறுவல், பரசிவனையே வளைத்து விட்டது. நமது ஆச்சார்யரும் அம்பிகையின் உதடுகளின் அழகில் அடிமையாகி, பல இடங்களில் இதை குறிப்பிடுகிறார் (உ) பவானி புஜங்கம் 7-ல் ‘பிம்பாதரஸ்மேர’ என்கிறார். பிம்ப என்றால் கோவைப்பழம் என்று அர்த்தம்

அம்பிகைக்கு, அழகும், பூரிப்பும் சேர்க்க, விஷேஷ நிவேதனத்தின் பின் தாம்பூலமும், ஆதிசங்கரரின் பேரருளால் அர்ப்பணிக்கும் பாக்யம் கிட்டியதன்றோ!

13 : कन्याभिः कमनीयकान्तिभिरलङ्गारामलारार्तिका
पात्रे मौक्तिकचित्रपङ्क्तिविलसत्कर्पूरदीपालिभिः।
तत्तत्तालमृदङ्गगीतसहितं नृत्यत्पदाम्भोरुहं
मन्त्राराधनपूर्वकं सुविहितं नीराजनं गृह्यताम्॥

கன்யாபி:கமநீயகாந்திபிரலங்காராமலாரார்திகா
பாத்ரேமௌக்திகசித்ரபங்க்திவிலஸத்கர்பூரதீபாலிபி: |
தத்தத்தாலம்ருதங்ககீதஸஹிதம்ந்ருத்யத்பதாம்போருஹம்
மந்த்ராராதனபூர்வகம்ஸுவிஹிதம்நீராஜநம்க்ருஹ்யதாம்மிமி ||

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் சக்தி கூடம் (எ) கடைசி வரியின் இரண்டாம் எழுத்து – க

அழகு மிகு கன்னியர்களால் பல விதமாக முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட தட்டில் கற்பூரம் ஏற்றி அம்பிகே, பாட்டும், நாட்டிய நடனமும், மேளதாளமும் முழங்க, வேதகோஷத்துடன் கூடிய மந்திரங்களுடனும் தாயே உன் திருப்பாதங்களுக்கு கற்பூர நீராஜனம் காட்டுகிறேன் அம்மா! ஏற்றுக்கொள்வீராக

இந்த நீராஜனம் எனும் பதத்தை அழகு குறையாமல் இன்னொரு பாஷையில் எடுத்துச்சொல்ல மிக கடினமாக உள்ளது. ஆரத்தி என்றால் அது சுமாரான அர்த்தத்தையே கொடுக்கும், ஆயினும் அதையே உபயோகிக்கிறேன்.

நீராஜனம் / ஆரத்தி செய்யும்போது, சங்கு, மேளதாளம், வேதகோஷம், ந்ருத்யம், மணியடித்தல் முதலானவையோடு செய்வதே முறை. இது மனதை இறைவியிடத்தில் அல்லது இறைவனிடத்தில் நிலைக்கச்செய்யும், அல்லாமல் மனதில் ஒருவகை கிளர்ச்சியை உண்டாக்கும், சில நேரம் உடம்பு புல்லரிக்க கூடும். அம்பிகைக்கு நீராஜனம் / ஆரத்தி செய்யும்போது, நாம் நீராஜன / ஆரத்தி ஒளியில் அம்பிகையின் சுய ஒளியைக்காணலாம்.

நீரஜன சமயத்தில் ‘கதோபனிஷத்’தின் ||.ii.15 –ல் காணப்படும் ஸ்லோகம் இசைக்கப்படும், அதன் அர்த்தம். ப்ரம்மம் ஒன்றே தன்னொளி கொண்டது, மற்ற சூரியன், சந்திரன், நக்ஷத்திரங்கள், அக்னி யாவும் ப்ரம்மத்தின் ஒளியையே ப்ரதிபலிக்கின்றன என்று. இங்கு ப்ரம்மமாக கூறுவதை அம்பிகை என்று கொள்க.

ஸ்ரீ லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரம் நாமம் 806-ல் அம்பிகையை ‘பரஞ்ஜோதி’ என்றே குறிப்பிடுகிறது.

14 : लक्ष्मीः मौक्तिकलक्षकल्पितसितच्छत्रं तु धत्ते रसात्
इन्द्राणी च रतिश्च चामरवेर धत्ते स्वयं भारती।
वीणामेणविलोचनाः सुमनस्सां नृत्यन्ति तद्रागवद्भावैः
आङ्गिकसात्विकैः स्फुटरसं मातस्तदाकण्यर्ताम्॥

லக்ஷ்மீர்மௌக்திகலக்ஷகல்பிதஸிதச்சத்ரம்துதத்தேரஸாத்
இந்த்ராணீசரதிஸ்சசாமரவரேதத்தேஸ்வயம்பாரதீ |
வீணாம், ஏணவிலோசநா:ஸுமநஸாம்ந்ருத்யந்திதத்ராகவத்
பாவை:ஆங்கிகஸாத்விகை:ஸ்புடதரம்மாதஸ்தாகர்ண்யதாம்மிமி ||

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் சக்தி கூடம் (எ) கடைசி வரியின் மூன்றாம் எழுத்து – ல

எண்ணிலடங்கா லக்ஷோபலக்ஷ நன்முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட வெண்குடையை நின் அருகிலிருந்து ஸ்ரீலக்ஷ்மி அழகுடனும், கர்வத்துடனும் பிடிக்க, இந்திராணியும் ரதியும் நின் இருபுரமும் நின்று சுவாஸனையுடய மூலிகைகளால் செய்யப்பட்ட சாமரம்வீச, சரஸ்வதி தேவி நின் எதிரில் அமர்ந்து ‘கச்சபி’ எனும் தேவ வீணை வாசிக்க, அந்த தேவ வீணையின் இசைக்கு ஏற்ப தேவமகளிர் நாட்டியம் ஆட, இசையுடன் கூடியபாட்டும், நடனமும் உன்னால் ஏற்க்கப்படட்டும் அம்பிகே.

அம்பிகை, பாகம்-1ல் அளிக்கப்பட்ட ரத்தின ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்திருக்க, ஸ்ரீ லக்ஷ்மி அன்னை, அம்பிகைக்கு வெகு அருகில் நின்று பல, பல லக்ஷோபலக்ஷ வெண் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட குடையை அன்னைக்கு வெகு அருகில் தாம் இருக்கிறோம் என்ற பூரிப்பிலும், கர்வத்திலும், தனக்கே உரிய நளினத்துடனும் குடை பிடிக்க, தேவகுல அரசனான இந்திரனின் ஸஹதர்மணியான இந்த்ராணி, தேவர் தேவிகள் எல்லோருடைய ப்ரதினிதி யாக ஒருபுரம் வெண் சாமரம் வீச, மறுபுரம் காமதேவனின் பத்தினியான ரதி தேவி இன்னொரு வெண் சாமரம் வீச, ரதிதேவிக்கு ஏன் இந்த சிறப்பு என்றால், அம்பிகைக்கு, மன்மதன் எனும் காமதேவன் ப்ரியமானவன். அம்பிகைக்கு காமதேவனுடைய செயல்களும், காமதேவனும் மிக விருப்பமானவைகள். இறைவியை இறைவனிடம் சேர்க்க தன்னையே விலையாக கொடுத்தவனன்றோ. அதுவுமல்லாமல், அம்பிகையை ஆராதிப்பவனும் கூட, லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரத்தில் நாமம் 375 “காமபூஜிதா” என்றும் நாமம் 586 ல் “காமஸேவிதா” என்கிறது. அதுவுமல்லாமல், அம்பிகையே காருண்யமூர்த்தியன்றோ! நாமம் 376-ல் ஸ்ருங்கார ரஸ ஸம்பூர்ணா என்றும், நாமம் 863 “காமகேளீதரங்கிதா” என்றல்லவா பகர்கிறது.

ஸ்ரீ சரஸ்வதி, தேவ வீணையாம் கச்சபியை இசைத்து, தன் வீணையை விட மதுரமான த்வனியால் கீர்த்தனமிசைக்க (நாமம் – 27), இதையே தான் ஸ்லோகம் 66 சௌந்தர்யலஹரியும் எடுத்துறைக்கிறது.

இவையெல்லாம் அம்பிகைக்கு மிகவும் பிரியமான 64 உபசாரங்களில் ஒன்றாகும். இதைப்பற்றி மேல் விபர்ங்கள் மிக விரிவாக தந்த்ர ஸாஸ்திரங்களில் விவரிக்கப்படுகிறது. லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரமும் நாமம் 235 இந்த 64 வித உபசாரங்களையே எடுத்துறைக்கிறது.

15 : ह्रींकारात्रयसंपुटेन मनुनोपास्ये त्रयीमौलिभिः
वाक्यैर्लक्ष्यतनो तव स्तुतिविधौ को वा क्षमेताम्बिके।
सल्लापाः स्तुतयः प्रदक्षिणशतं संचार एवास्तु ते
संवेशो नमसः सहस्रमखिलं त्वत्प्रीतये कल्पताम्॥

ஹ்ரீங்காரத்ரயஸம்புடேநமனுநோபாஸ்யேத்ரியீமௌலிபி:
வாக்யைர்லக்ஷ்யதநோதவஸ்துதிவிதௌகோவாக்ஷமேதாம்பிகே |
ஸல்லாபா:ஸ்துதய:ப்ரக்ஷிணசதம்ஸஞ்சாரஏவாஸ்துதே
ஸம்வேசோநமஸ:ஸஹஸ்ரமகிலம்த்வத்ப்ரீதயேகல்பதாம் ||

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் சக்தி கூடம் (எ) கடைசி வரியின் நான்காம் எழுத்து – ஹ்ரீம்

மூன்று ஹ்ரீங்காரங்கள் கூடிய மந்திரத்தால் உபாசிக்கப் படுபவளே! வேதாந்த வாக்கியங்களின் லட்சியமானவளே! என்னுடைய பேச்செல்லாம் உனக்கு தோத்திரங்களாகவும், என் சஞ்சாரங்களெல்லாம் உனக்குப் பிரதட்சிணமாகவும், நான் படுப்பதெல்லாம் உனக்கு நமஸ்காரங்களாகவும் இருக்கட்டும்.

உபனிஷத்களின் சூக்ஷம திருவே, உமையே, ஹ்ரீங்காரங்கள் மூன்றுடைய மந்திரத்தால் வழிபடப்படுபவளே, உன்னைப்போற்றி பாட்டெழுத யாரால் இயலும்? தாயே, என்னால் பேசப்படுபவை யாவும் நின் புகழே ஆகட்டும். எனது அங்க அசைவுகள் எல்லாம், நின் ப்ரதக்ஷிணங்களாகட்டும். கிடந்துறங்குவது, தாயே நின் பதகமலங்களுக்கு, என் ஸஹஸ்ர ஷாஷ்டாங்க நமஸ்காரங்களாக உன் அருளால் ஏற்றுக்கொள்ளப்படட்டும், என்று சங்கரர் இந்த 15வது ஸ்லொகம் செய்கிறார் என்றால், அவர் அம்பிகையின் ப்ராபவத்தை நன்கு புரிந்துகொண்டுள்ளார்.

எவராலும் விவரிக்க முடியாத ஒரு ஒளி ப்ரவாளத்தை எதோடு ஒப்பிட்டு வர்ணிப்பது? பரிணாமமே இல்லாத பொருளை எந்த பரிமாணத்தோடு ஒப்பிட்டு வர்ணிப்பது? அளவற்ற அழகை எந்த அளவை வைத்து எடை போடுவது? எல்லையில்லா கருணையுடையவளை கருணைக்கடலே என்று வர்ணிப்பது தகுமோ? கடலுக்குத்தான் எல்லையுண்டே!

இங்கு அம்பிகைக்கு நாம் சமர்ப்பித்ததெல்லாம் நாம் அவளிடமிருந்து பெற்றவைகளே. இடம், நிழல், நீர், உடை, உணவு, உணவளிக்கும் பாத்திரங்கள் என எல்லாமே அவளிடமிருந்தே வந்தவை அன்றோ?

எல்லவற்றையும் அவளாலேயே அருளப்பட்டபின், யாம் அவளுக்கு அளிப்பதுதான் ஏது? என்றம் எண்ணம் தோன்றும்போது, யாம் செய்யும் தவறுகள் நமக்கு புரிய ஆரம்பிக்கிறது. பீடங்கள் எதற்கு? அம்மை அமர்வதற்கா? அவள் அமர்ந்த பின்னேயல்லவோ அது நமக்கு மரமாக கண்டது. ரத்தினங்களே அவளேயன்றோ, பின்னர் எப்படி அவற்றை அவளுக்கு அளிப்பது? நமது, நாம் அளிக்கின்றோம் என்று. அம்பிகையை சகுண ப்ரம்மமாக வணங்கப் போய், நிர்குண ப்ரம்மமாக அல்லவோ அவளை காணவேண்டியதாயிற்று! இங்கு த்வைதம் மறைந்து அத்வைதம் உதிக்கிறது!

இனி நான் என்பது ஏது? எல்லாமே அவளேயன்றோ! என்ற எண்ணம் உதிக்கிறது.

16 : श्रीमन्त्राक्षरमालया गिरिसुतां यः पूजयेच्चेतसा
संध्यासु प्रतिवासरं सुनियतस्तस्यामलं स्यान्मनः।
चित्ताम्भोरुहमण्टपे गिरिसुता नृत्तं विधत्ते रसाद्वाणी
वक्त्रसरोरुहे जलधिजा गेहे जगन्मङ्गला॥

ஸ்ரீமந்த்ராக்ஷரமாலயாகிரிஸுதாம்ய:பூஜயேத்சேதஸா
ஸந்த்யாஸுப்ரதிவாஸரம்ஸுநியதஸ்தஸ்யாமலம்ஸ்யான்மந: |
சித்தாம்போருஹமண்டபேகிரிஸுதாந்ருத்தம்விதத்தேரஸாத்
வாணீவக்த்ரஸரோருஹேஜலதிஜாகேஹேஜகன்மங்களா ||

இந்த மந்திர அட்சர மாலையினால் அம்பிகையை காலை, மதியம் மாலையில் நிஷ்டையுடனும் பக்தியுடனும் யார் துதிக்கிறார்களோ, அவர்கள் சித்த சுத்தி அடைவார்கள்; அவர்கள் மனதில் தேவி நர்த்தனம் புரிவாள்; வாக்கில் சரஸ்வதியும் அவர்களின் இல்லங்களில் லக்ஷ்மியும் வாசம் செய்வார்கள்.

இந்த பகுதி ஸ்ரீம் என்று ஆரம்பிக்கிறது, இதை முன்பு பார்த்த பஞ்சதஸியுடன் சேர்த்தால் அது ஷோடஸாக்ஷரி மஹா மந்திரமாகிரது.

இந்த மந்திரமாத்ருகா ஸ்தவமானது, 15 பீஜங்களால் (க ஏ ஈ ல ஹ்ரீம் – ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் – ஸ க ல ஹ்ரீம்) ஆரம்ப எழுத்துக்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. மத்ருகா பொதுவாக ஸமஸ்க்ருத உயிர் எழுத்துக்களை குறிக்கும், சில சமயம் எல்லா எழுத்துக்களையும் குறிக்கவும் பயன்படுத்துவது உண்டு. மந்த்ர மாத்ருகா – அம்பிகைக்கே உறிய மந்திர எழுத்துக்களால் கோர்க்கப்பட்ட பூ மாலையாக, அம்பிகை அணியும் பொருட்டு அமைந்துள்ளது. லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரத்தில் நாமம் 577 ல், “மாத்ருகா வர்ண ரூபிணி” அதாவது 51 எழுத்துக்களால் அலங்கரிக்கப்பட்டவள் என்றும், நாமம் 489 ல் “அக்ஷமாலாதி தரா” என்றும் அம்பிகையை போற்றுகின்றது. ஆதி சங்கரர், தீர்கதரிஸியன்றோ, ஆகையினாலேயே இந்த ஸ்தவத்தை பஞ்சதஸி மஹா மந்திரத்தின் எழுத்துக்களால் துவக்கி எல்லோரும் இன்புற்றிருக்க, அம்பிகையின் பேரருள் கிடைக்க வழி செய்துள்ளார்

இனி ஒரு விஷேஷம் கூட, அம்பிகையின் பூஜா முறைகளையும் இதில் தெளிவாக விளக்கியுள்ளார். ஆசனம், ஆயுதம், கிரீடம், அர்க்யம், பாத்யம், ஆசமனீயம், ஸ்நபநம், வஸ்த்ரம், ஆபரணங்கள், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம், பழவகைகள், கற்பூரவீடிகா கலந்த தாம்பூலம், நீராஜனம், மற்றும் உபசாரங்கள் போன்றவற்றை முதல் 14 ஸ்லோகங்களில் முடித்து 15 ஆம் ஸ்லோகத்தில் ஆத்ம நிவேதனத்தையும் செய்து காட்டிவிட்டாரே!

இந்த 16 ஆம் ஸ்லோகத்தில் இப்படி உபாஸிப்பதினால் உண்டாகும் பயனையும் உரைக்கிறார்.

17 :

इति गिरिवरपुत्रीपादराजीवभूषा
भुवनममलयन्ती सूक्तिसौरभ्यसारैः।
शिवपदमकरन्दस्यन्दिनीयं निबद्धा
मदयतु कविभृङ्गान्मातृकापुष्पमाला॥

இதிகிரிவரபுத்ரீபாதராஜீவபூஷா
புவனமமலயந்தீஸ¨க்திஸெளரப்யஸாரை: |
சிவபதமகரந்தஸ்யந்திநீயம்நிபந்தா
மதயதுகவிப்ருங்கான்மாத்ருகாபுஷ்பமாலைமிமி ||

அம்பிகையே, இந்த மாத்ருகா புஷ்பமாலை எனும் காதிவித்யா பஞ்சதஸி அடங்கிய மானஸ பூஜையை நின் திருப்பாதத்தில் ஸமர்ப்பித்து, நின் திருக்கால்களுக்கு கொலுசாக அணிவிக்கிறேன் அம்மா. நின் பாதம் பட்டு, இம்மந்திர மாலை நறுமணம் வீசட்டும், அந்த நறுமணம் உலகெலாம் உன் அருளால் வ்யாபிக்கட்டும். ஏற்றுக்கொள் தாயே.

இந்த மாத்ருகா புஷ்பமாலை மகிழ்ச்சியை தரட்டும். இதெல்லாம் மானசபூஜை. அதுவும் பஞ்சதாசாட்சரி மந்திரம் அடங்கியது.

மந்த்ர மாத்ருகா புஷ்ப மாலா ஸ்தவம் முற்றிற்று.

இப்படியாக சங்கர பகவத்பாதாள் அம்பிகைக்கு அர்ப்பித்த சகல உபசாரங்களையும் அருகிலுருந்து அவருக்கு உதவி நாமும் பங்கு கொண்டோம் அல்லவா! எப்பிறவியில் என்ன புண்யம் செய்திருந்தோமோ, இப்பிறவியில், அம்பிகையை மானஸீகமாக, ஆதி சங்கராச்சாரியாருடன் ஆராதிக்க ஒரு அவகாசம் கிட்டி நம்மை பாவனனாக்கியது!

மேற்கண்ட ஸ்தோத்திர பாராயண பலன் இங்கே, இது இந்த ஸ்லோகத்திலேயே 16-ஆம் பத்தியில் “பல ஸ்ருதியாக” உள்ளது.

“எவரொருவர், தினந்தோரும் காலையிலும் மாலையிலும் மந்த்ரபீஜாக்ஷரம் பொதிந்த இந்த ஸ்தோரத்தை மனம் வைத்து பாராயணம் செய்து தேவியை பூஜிக்கிறாரோ, அவர் மனம் அமைதி கொள்வது மட்டுமின்றி, அவர் ஹ்ருதயதாமரையில் ஸ்ரீ தேவி மகிழ்ச்சியுடன் களிநடனம் புரிவாள், நாவில், பேச்சில் ஸரஸ்வதீ நடனம் புரிவாள், வீட்டில் உலகுக்கெல்லாம் மங்கல நாயகியான லக்ஷ்மீ வாஸம் செய்வாள்.” எந்த பக்தனும், இதைவிட வேறொன்றும் இறைவனிடம் யாசிக்கப் போவதில்லையே!

குண்டலினி யோகத்தில் கிட்டும் அனைத்தும், பக்திமார்கத்தில் கிட்டிடும் போது, அல்லது, சாதாரணமான முறையில், உடலையும், உள்ளத்தையும் வருத்தாமல் எல்லாவற்றையும் அடைய வழிமுறைகள் இருக்கும்போது, ஏன் கடினமான வழிகளை தேர்வு செய்யவேண்டும்?

எளிய பக்தி மார்கம், மந்திர மார்கம், மற்றும் யந்திர தந்திர மார்கத்திற்கே, தேர்ச்சி பெற்ற குருவானவர், மிக மிக அவசியம். ஆரம்பத்தில், சாதாரண நிலையில், அனுஷ்டானங்களில் தேர்ச்சி பெற்றவர் குருவாக இருந்தால் போதும், இரண்டாவது நிலையிலேயே, தேர்ச்சி பெற்ற உபாஸகர், அதுவும் நீங்கள் தேர்வு செய்த தேவதா மூர்த்தியின் உபாஸகர் கண்டிப்பாகத் தேவை. இனி மூன்றாம் நிலையைப் பற்றியும், கடினமான நான்காம் நிலை பற்றியும் விளக்கவேண்டாம் என்று எண்ணுகிறேன்.

இனியும் ஒரு விஷயம். சிரம் தேயும், ராஜ்யம் தேயும், ந தேயா ஷோடஸாக்ஷரி என்று சொல்லப்பட்டிருக்கிறது. யான் அறிந்தவரை அதன் அர்த்தமாவது, ஷொடஸாக்ஷரியை உபாஸனை முறையை உபதேஸிக்க, அம்பிகையை அகல வேரு யாருக்கும் அதிகாரமில்லை. ஆயின், இது தான் ஷோடஸி, அம்பாளின் மிக ரஹஸ்ய மந்திரம், இதன் உபாஸனை முறைகளை அம்பிகையேதான் உபதேஸிப்பாள், அதற்கு தகுதியாக வேண்டுமென்றால், பஞ்சதஸியை உபாஸித்து அதில் சித்திபெற்று, ஷோடஸியை அம்பாளின் அனுக்ரஹத்தால் அடைவாயாக என்றல்லாவா பொருள் கொள்ள வேண்டும் அப்படி பொருள் கொண்டதால் தான், ஆதி சங்கரரிலிருந்து தீக்ஷிதர் வரை அந்த அத்புதமான மந்திரத்தை வெளியிட்டார்கள் –

உபதேசிக்கவில்லையே? முறையாக உபாஸனை செய், உன்னத நிலையடைவாய் என்றனரே தவிர.

புதன், 15 டிசம்பர், 2021

தில்லை தீட்சிதர்கள் வரலாறு

தில்லை தீட்சிதர்கள் வரலாறு

கோயில் என்ற சொல்லுக்கு இறைவன் வாழும் இல்லம் என்று பொருள். வைஷ்ணவர்களுக்கு கோயில் என்றாலே அது திருவரங்கம் தான்! எனில், சைவர்களுக்கு? ஆனந்தக் கூத்தன் ஸ்ரீநடராஜ பெருமான் கோலோச்சும் சிதம்பரம் ஆலயத்தை தான் அவர்கள் ‘கோயில்’ என்று சொல்வார்கள்.

இங்கே நடராஜ பெருமான் மட்டுமல்ல, அவரை அனுதினமும் பூஜித்து வரும் தீட்சிதர்களும் கவனிக்கத்தக்கவர்கள். சிதம்பரத்துக்குத் தில்லை, தில்லையம்பதி என்றெல்லாம் பல பெயர்கள் உண்டு. இங்கே உள்ள தீட்சிதர்களை, தில்லைவாழ் அந்தணர்கள் என்று குறிப்பிடாத புராணங்களோ, சரித்திரங்களோ, இலக்கியங்களோ இல்லை எனலாம்.

‘தில்லை மூவாயிரம்’ என்றொரு வாசகம் மிகப் புராதனமானது. அதாவது, தில்லைவாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சிதர்கள் மூவாயிரம் பேரைக் குறிப்பிடும் வாசகம் அது.

பாற்கடலில் ஆதிசேஷன்மீது பள்ளிகொண்டிருக்கும் திருமாலின் எடை திடீரெனக் கூடியது. சதாசர்வ காலமும் அவரைத் தாங்கிக்கொண்டிருக்கும் ஆதிசேஷனுக்கு, ‘அட… என்ன இப்படி எடை கூடியிருக்கிறது!’ என ஆச்சரியம். திருமாலிடமே கேட்டார். ‘சிவனாரின் திருநடனத்தில் களிப்புற்றேன். அந்தப் பூரிப்பில், உடல் எடை கூடிப்போயிருக்கும்’ என்றார் மாலவன். அதைக் கேட்டு ஏதோ முணுமுணுத்தார் ஆதிசேஷன். அந்த முணுமுணுப்பைத் திருமால் அறியாமல் இருப்பாரா? ‘என்ன முணுமுணுக்கிறாய் ஆதிசேஷா? தயங்காமல் சொல்!’ என்றார். ‘ஈசனின் திருநடனத்தைத் தரிசிக்கும் ஆசை பரந்தாமனான உங்களுக்கே இருக்கும்போது, நானெல்லாம் எம்மாத்திரம்? எனக்கு மட்டும் விருப்பம் இருக்காதா?’ என்று கேட்டார் ஆதிசேஷன்.

‘அவ்வளவுதானே… இப்போதே பூலோகத்தில் பிறப்பெடுத்து, சிவபெருமானின் நடனத்தைத் தரிசிப்பாயாக!’ என்று அருளினார் திருமால். அதையடுத்து, சிவனாரே ஆதிசேஷனிடம், ‘தில்லை வனத்தில் தவத்திலும் பூஜையிலும் ஈடுபட்டிருக்கும் வியாக்ரபாதர் எனும் முனிவருடன் சேர்ந்து செயல்படுவாயாக!’ என அசரீரியாகச் சொல்ல… பூலோகத்தில் பிறப்பெடுத்து, பதஞ்சலி முனிவர் என எல்லோராலும் வணங்கப்பட்ட அந்த முனிவர், தில்லை வனம் வந்தார். வியாக்ரபாத முனிவருடன் நட்பானார். சிவபூஜையில் ஈடுபட்டார்.

தை மாதத்தில், வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் கூடிய நன்னாளில், ஆனந்த நடனக் காட்சியை வியாக்ரபாதருக்கும், பதஞ்சலி முனிவருக்கும், தேவர்பெருமக்களுக்கும் காட்டி அருளினார் ஆனந்தக் கூத்தன். அந்த வேளையில், திருக்கயிலாயத்தில் இருந்து சிவனாருடன் மூவாயிரம் வேத விற்பன்னர் களும் வந்தார்கள். அவர்களுக்கு குருவாக இருந்து நடராஜ பெருமானே வேதங்களைத் தந்தருளினாராம். ஈசனிடமே தீட்சை பெற்றவர்கள் எனும் பெருமைக்கு உரியவர்கள் ஆனதால், அந்த மூவாயிரம் பேரும் தீட்சிதர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

”திருக்கயிலாயத்தில் இருந்து சிவபெருமா னோடு மொத்தம் எழுபத்து எட்டாயிரம் முனிவர்கள் வந்தார்களாம். அதுல சிவபெருமானை குருவாகக் கொண்டு உபதேசம் பெற்ற மூவாயிரம் அந்தணர்களை தீட்சிதர்கள்னு சொல்லுவாங்க. தீட்சை பெற்றவர்கள், தீட்சிதர்கள்!

#தில்லைப் பெண் எல்லை தாண்டாள்’னு ஒரு சொல்வழக்கு உண்டு. அதாவது, தீட்சிதர் கள் குடும்பங்களுக்குள்ளேயே திருமணம் செய்துகொள்வார்கள்; வெளியே பெண் எடுப்பதில்லை. வெளியூருக்கும் செல்வதில்லை. ஸ்ரீவத்ஸ கோத்திரம், கௌண்டின்ய கோத்திரம், ரிஷிக்யான்யர் கோத்திரம், விஸ்வாமித்திர கோத்திரம்னு நாலு கோத்திரங்கள் தீட்சிதர்களுள் உண்டு. இந்த நான்கு கோத்திரங்களுக்குள்தான் பெண் எடுத்து, பெண் கொடுத்து (அவரவர் கோத்திரத்தைத் தவிர, மற்ற கோத்திரங்களில்) கொள்வோம்” என்கிறார் சிவசங்கர தீட்சிதர்.

#தீட்சிதர் குடும்பத்தில் பிறந்த ஆண் குழந்தை, பிறந்த உடனேயோ அல்லது வளர்ந்ததுமோ, தீட்சிதர் எனும் பட்டத்துக்கு, கௌரவத்துக்கு வந்துவிடமுடியாது. உபநயனம் எனப்படும் பூணூல் வைபவம் முடிந்த பின்னரும் தீட்சிதர் ஆகிவிட முடியாது.திருமணமாகி, மாங்கல்யதாரணம் எனப்படும் தாலி கட்டுகிற வைபவம் நடந்து முடிந்த அந்த நிமிடத்திலிருந்துதான் அவர் தீட்சிதர் எனும் அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார்” என்கிறார் சிவசங்கர தீட்சிதர். தன் 18 வயதில் இருந்து பூஜையில் ஈடுபட்டு வரும் இவர், திருமணமான ஐந்தாம் நாளிலிருந்து கோயிலில் பூஜை செய்து வருவதாகச் சொல்கிறார். இவரின் வயது 75.

”கிழக்கு வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதினு கோயில் மதிலைச் சுற்றி உள்ள நான்கு வீதிகள்தான் தீட்சிதர்களின் உலகம். இந்தத் தெருக்களையும் ஆடல்வல்லானையும் தவிர, எங்களுக்கு வேறு ஒன்றும் தெரியாது” என நா தழுதழுக்கச் சொல்கிறார் இவர்.

#திருஞானசம்பந்தர், ஸ்ரீநடராஜ பெருமானைத் தரிசிக்கும் ஆவலில் தில்லையம்பதிக்கு வந்தார். அங்கே தீட்சிதர்களையும், அவர்கள் செய்து வரும் பூஜைகளையும் அறிந்து, ”நான் இங்கு தங்கமாட்டேன். கடவுளுக்குத் தொண்டு செய்யும் அடியவர்களை, கடவுளே விரும்பி அமர வைத்துள்ள பூமி இது. இங்கே படுத்து உறங்குவதும், மல ஜலம் கழிப்பதும் தகாத செயல்” என்று சொல்லிவிட்டு, அருகில் உள்ள #கொற்றவன்குடி எனும் கிராமத்துக்குச் சென்று தங்கினார்.

#கற்றாங்கு எரியோம்பி கலியை வாராமே
செற்றார் வாழ்த்தில்லை சிற்றம்பலமேய
உற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே!’

 என்று ஞானசம்பந்தர் பெருமான்,

 மனமுருகிப் பாடுகிறார். அதுமட்டுமா? ‘தில்லைவாழ் அந்தணர்களைப் பார்த்தபோது, அந்த சிவகணங்களே சிவனாருக்கு அரணாக வந்து கொண்டிருப்பதுபோல் எனக்குக் காட்சி கிடைத்தது’ என்று சொல்லிச் சிலிர்க்கிறார்.

மிகப் பிரமாண்டமான யாகம் ஒன்றை நடத்த முடிவு செய்தார் பிரம்மா. தில்லை மூவாயிரத்தாரை அழைத்து, ‘யாகத்தில் கலந்துகொண்டு, அதற்கு இன்னும் வலுவும் பெருமையும் சேருங்கள்’ என்றார். ‘தினமும் நடராஜருக்கு பூஜை செய்யவேண்டுமே! அது தடைப்படுமே..!’ எனத் தயங்கினார்கள் அவர்கள். உடனே பதஞ்சலி முனிவர், ‘நீங்கள் வரும்வரை நான் பூஜை செய்கிறேன். போய் வாருங்கள்’ என்றார்.

அதன்படி,  பிரம்ம லோகத்துக்குச் சென்ற தில்லை அந்தணர்கள், யாகத்தில் கலந்து கொண்டார்கள். யாகம் முடிந்தபின்பு,  சிதம்பரம் வந்தார்கள். வந்தவர்கள், ஒருவரைக் காணாது திடுக்கிட்டார்கள். ‘மூவாயிரம் பேர் இருக்க வேண்டுமே… 2,999 பேர்தானே இருக்கிறோம்’ என்று பதறினார்கள். அப்போது, ‘மூவாயிரத்தில் நானும் ஒருவன். உங்களில் ஒருவன் நான். மறந்துவிட்டீர்களா?’ என்று சிவனாரே கேட்க, பொன்னம்பலத்தானின் பெருங்கருணையை வியந்து, ஆனந்தக்கண்ணீர் வடித்தார்கள் தீட்சிதர்கள். அதனால்தான் சிவனாருக்கு ‘சபாநாயகர்’ எனும் பெருமையும் பேரும் கிடைத்தது என்பார்கள்.

#எத்தனையோ சிவாச்சார்யர்களுக்கும், பட்டாச்சார்யர்களுக்கும், குருக்கள்மார்களுக் கும் கிடைக்காத ஒரு தனிப் பெருமை, தில்லை வாழ் தீட்சிதர்களுக்குக் கிடைத்திருக்கிறது. தஞ்சைப் பெரியகோயிலில், கோபுரத்தின் உட்பகுதிகளில் நிறைய ஓவியங்கள் உள்ளன. அதில், பொன்னம்பலத்தானை ராஜராஜசோழன் வணங்குவது போலவும், அருகில் தில்லைவாழ் அந்தணர்கள் நிற்பது போலவும் ஓர் ஓவியம் உள்ளது. சுமார் ஆயிரம் வருடங்களைக் கடந்த தஞ்சை பெரிய கோயிலில் தீட்சிதர்களின் ஓவியங்களும் இருக்கின்றன என்றால், அவர்களின் பாரம்பரியத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்” என்கிறார் கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன்.

#கும்பகோணம் தாராசுரம் ஸ்ரீஐராவதீஸ்வரர் கோயிலில் ஏராளமான சிற்பங்கள் உள்ளன.அதில் ஒன்றில், அம்பலவாணனான நடராஜ பெருமான், அழகு கொஞ்சக் காட்சி தருகிறார். அருகில், தில்லை மூவாயிரத்தாரின் இருப்பை உணர்த்தும்விதமாக, ஆயிரத்துக்கு ஒருவர் வீதம், மூன்று பேர் நிற்கிறார்கள். ஒருவர் ஸ்ரீநடராஜருக்குக் குடை பிடிக்க, இன்னொருவர் இறைவனுக்கு சாமரம் வீச, மூன்றாமவர் நைவேத்தியத் தட்டினை ஏந்தியபடி நிற்கிறார். ஆக, தஞ்சையில் ஓவியமாகவும், தாராசுரத்தில் சிற்பமாகவும் இருக்கிறார்கள் தீட்சிதர்கள். ஏழாம்- எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானசம்பந்தர், அப்பர் பெருமான் முதலானோர் தரிசித்த சிதம்பரம் கோயிலில், தீட்சிதர்களும் அப்போதிருந்தே இருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது” என்று விவரிக்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியன்.

முற்காலப் பல்லவர்கள் காலத்துக் கோயில் என்றும் இதைச் சொல்கிறார்கள். ஹிரண்யவர்மன் எனும் வங்க தேசத்து அரசன்,  சிற்சபைக்கு பொன்வேய்ந்ததாகச் சொல்லும் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன. அதேபோல், பராந்தக சோழன், கொங்கு தேசத்தைக் கைப்பற்றிய வெற்றிக் களிப்பின் அடையாளமாக, அங்கிருந்து கொண்டு வந்த பொன் பொருளைக் கொண்டு, சிதம்பரம் சபைக்குப் பொன் வேய்ந்ததாகக் கல்வெட்டு தெரிவிக்கிறது.  தவிர, ஒவ்வொரு மன்னரும்  இந்த தீட்சிதர்களுக்கு நிலங்களும் வீடுகளும் தானம் அளித்துள்ளனர்.

#தீட்சிதர்கள், நடராஜப் பெருமானுக்கு பூஜை செய்வதையே தொண்டாகக் கருதி வாழ்ந்துவருபவர்கள். எப்போதும் மனத்தில் ஈசனையும், மடியில் விபூதிப் பையையும் வைத்திருப்பவர்கள். அர்ப்பணிப்பு மனோபாவத்தில், சிவனாரிடம் முழுவதுமாகச் சரணடைந்தவர்கள் என்று பெரியபுராணத்தில், தில்லைவாழ் அந்தணர் சருக்கம் எனும் பகுதியில், தீட்சிதர்களைப் போற்றி விவரித்துள்ளார் சேக்கிழார் பெருமான்” என்கிறார் சம்பந்த தீட்சிதர்.

”வேதமே முக்கியம் எனக் கொண்டு பதஞ்சலி முனிவர் அருளிச் சென்ற பூஜா சூத்திரத்தின்படிதான் இந்தக் கோயிலில் பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன. இங்குள்ள தீட்சிதர்களில் தலைவர், தொண்டர் என்றெல்லாம் இல்லை. ஒன்பது பேர் கொண்ட குழுவை வருடந்தோறும் அமைப்போம். அந்தக் குழுவினரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை பிரித்து வழங்கப்படும்.

யஜன, யாஜன, அத்யயன, அத்யாபக, தான, ப்ரதிக்ரக… என ஆறு கர்மாக்கள் தீட்சிதர்களுக்கு உண்டு.

யஜனம்- யாகம் செய்தல்; யாஜன- யாகம் செய்வதற்கு உதவி செய்தல்; அத்யயன- வேதம் கற்றல், ஓதுதல்; அத்யாபன- கற்றுக்கொண்ட வேதத்தைப் பிறருக்குச் சொல்லிக் கொடுத்தல்; தானம்- பிறருக்கு வழங்குதல்; ப்ரதிக்ரக- பிறர் தருவதை மறுக்காமல் வாங்கிக்கொள்ளுதல்.

இந்த ஆறு கர்மாக்களையும், அதாவது ஆறு கடமைகளையும் செவ்வனே செய்பவனே தில்லை வாழ் அந்தணன்; தீட்சிதன்” என்று விவரிக்கிறார் உமாநாத் தீட்சிதர்.

ஒவ்வொரு கோபுரமும் ஏழு நிலைகள் கொண்டதான நான்கு கோபுரங்கள், ஐந்து பிராகாரங்கள் என, சுமார் 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரமாண்டமான ஆலயத்தில், ஸ்ரீமூலநாதர்தான் மூலவர். ஆதிமூலவர். அம்பாள்- ஸ்ரீஉமைய பார்வதி. கோயிலுக்குள் ‘நால்வர் கோயில்’ என்று ஒன்று உள்ளது. தேவார மூவர் தங்கள் பதிகங்களின் ஓலைச் சுவடிகளை, தில்லைவாழ் அந்தணர்களிடம் கொடுத்துச் சென்றார்கள். ராஜராஜசோழன், நம்பியாண்டார்நம்பியின் உதவியுடன் இங்கே உள்ள அறைக் கதவைத் திறந்து தேவாரப் பதிகங்களை, திருமுறைகளை உலகுக்குக் கொண்டு வந்தார் என்கிறது சரித்திரம்.

நாயன்மார்கள், சமயக்குரவர்கள், சந்தானச்சார்யர்கள், அருணகிரிநாதர் எனப் பலரும் தரிசித்துப் போற்றி வணங்கிய தலம் இது. காஞ்சி மகா பெரியவா இங்கு வந்து, ஸ்ரீநடராஜ பெருமானைத் தரிசித்து, வைர குஞ்சிதபாதம், வைர அபய ஹஸ்தம், வைரத் திருமுடி என வழங்கியுள்ளார்.

சோழ மன்னர்கள் காலத்தில், அவர்களுக்குத் தில்லைவாழ் அந்தணர்களே முடிசூட்டுவது மரபு. அப்படி ஒரு பெருமையை சோழ மன்னர்கள், தீட்சிதர்களுக்குத் தந்திருந்தார்கள். சோழர்களின் பின்னடைவுக்குப் பிறகு, களப் பிரர்கள் இங்கே ஆட்சி செய்தார்கள். அச்சுதக் களப்பிர மன்னன் என்பவன், தில்லையம்பதிக்கு வந்தான். கோயிலுக்கு வந்தவன், ‘எனக்கும் முடிசூட்டுங்கள்’ என்றான். ஆனால், தீட்சிதர் கள் மறுத்துவிட்டார்கள். ‘சிவமே கதியென்று இருந்த சோழ மன்னர்களைத் தவிர, வேறு எவருக்கும் முடிசூட்டி மரியாதை செய்ய மாட்டோம்’ என்று உறுதியாக இருந்தார்கள். ‘உயிரை விடத் தயாரா?’ என்று அவர்களை அச்சுறுத்தினான். அதில் ஏராளமான தீட்சி தர்கள் சேர தேசமான கேரளத்தை நோக்கி ஓடி, அங்கே சிவபூஜையில் ஈடுபட்டார்கள்.

பிறகு, மன்னனின் கனவில் வந்த சிவனார், அவன் சிரசில் தனது திருவடியை வைத்தார். அகம் குளிர்ந்த மன்னன், தன் தவற்றை உணர்ந்தான். தீட்சிதர்களை மீண்டும் சிதம்பரத் துக்கு அழைத்து வந்து, மன்னிப்புக் கேட்டான்.

”அதையடுத்து, மராட்டியர்களின் காலம் வந்தது. அந்நியர்களின் படைகள் உள்ளே நுழைந்து, பல கோயில்களை இடித்தன. இறை விக்கிரகங்களைச் சிதைத்தன. அப்போது தில்லை நடராஜப் பெருமானின் விக்கிரகத்தைக் காப்பாற்றுவதற்காக அதைத் திருவாரூர், குடுமியான்மலை, மதுரை எனப் பல ஊர்களுக்கு மறைவாக, பத்திரமாக எடுத்துச் சென்றார்கள் தீட்சிதர்கள். இப்படிக் கட்டிக் காபந்து செய்ததில், குலகுரு முத்தைய தீட்சிதர் என்பவருக்குப் பெரும் பங்கு உண்டு. இந்தத் தகவல்களை திருவாரூர் கோயிலில் உள்ள மராட்டியர்களின் செப்பேட்டில் பார்க்கலாம்” என்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியன்.

அதேபோல், கோயிலைப் புனர் நிர்மாணம் செய்யும் பணியையும் எடுத்துச் செய்திருக்கிறார்கள் தீட்சிதர்கள். கோயில் திருப்பணிக்குக் கேரளாவில் இருந்து சிற்பிகளை வரச் செய்திருக்கிறார்கள். இதைத் தெரிவிக்கும் செப்பேடுகளும் திருவாரூரில் உள்ளன.

#திருநீலகண்டர் கதை தெரியும் தானே! இளமையில் தவறு செய்ய, அதை அறிந்த மனைவி, #என்னைத் தீண்டாதே’ என்று ஆவேசமாகச் சொல்ல, சிவனார் சிவனடியாராக வந்து, திருநீலகண்டரிடம் திருவோடு தந்து, ‘இதைப் பத்திரமாக வைத்திரு. நீராடிவிட்டு வருகிறேன்’ என்று சொல்லிவிட்டுச் செல்ல, அந்தத் திருவோடு மறைந்துவிட, ‘நீதான் திருடிவிட்டாய்’ என்று சிவனடியாராக வந்த சிவனார் சண்டை இழுக்க, விஷயம் நீதிபதிகளிடம் வருகிறது. ‘நீலகண்டன் அப்படிச் செய்யமாட்டானே’ என்கிறார்கள் நீதிபதிகள். பிறகு, கணவன், மனைவி இருவரும் திருக்குளத்தில் முங்கி எழ, இளமையுடன் வெளிவந்தார்கள் (சிதம்பரத்தில் இளமையாக்கினார் திருக்குளமும் கோயிலும் இன்றைக்கும் இருக்கிறது); சிவனருள் பெற் றார்கள் என்பதெல்லாம் தெரியும்தானே! அந்த நீதிபதிகள் வேறு யாருமல்ல… தில்லைவாழ் அந்தணர்கள்தான்.

‘அளித்தான் உலகெங்கும் தானான உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள்
அளித்தான் பேரின்பத்து அருள்வெளிதானே!

என்று சிலாகித்துப் பாடுகிறார் திருமூலர்.

#சிதம்பரத்தில் ஆடல்வல்லான் சிவனார் இருக்கிற கோயிலில், ஸ்ரீதிருமாலுக்கும் சந்நிதி உண்டு. குலசேகர ஆழ்வார், நாலாயிர திவ்விய பிரபந்தத்தில், பெருமாள்திருமொழியில், 742-வது பாசுரத்தில்,

வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தைக் கீறி
வரு குருதி பொழிதரவன் கணையொன் றேவி
மந்திரங்கொள் மறைமுனிவன் வேள்விகாத்து
வல்லரக்கர் உயிருண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத்
தில்லைநகர் திருச்சித்திரக் கூடம் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவரேத்த
அணிமணியா சனத்திருந்த வம்மான்றானே!  – என மங்களாசாசனம் செய்தருள்கிறார்” என்கிறார் சுப்பராயலு. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் துணைப் பதிவாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவருக்கு வயது 71. ‘தில்லைவாழ் அந்தணர்’ என்பது உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.

#தில்லையில், நடராஜர் கோயிலில் உள்ள திருமால் ஸ்ரீகோவிந்தராஜ பெருமாளுக்கு தில்லை மூவாயிரத்தார் எனப்படும் தீட்சிதர்கள் பூஜை செய்து, வழிபட்டிருக்கிறார்கள் என்பதை திருமங்கை ஆழ்வாரும் தன் பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘மாவாயின் அங்கம் மதியாது கீறி
மழைமா முதுகுன் றெடுத்து ஆயர் தங்கள்
கோவாய் நிரை மேய்த்து உலகுண்ட மாயன்
குரைமா கழல் கூடும் குறிப்புடையீர்
மூவாயிர நான் மறையாளர் நாளும்
முறையால் வணங்க அணங்காய சோதி
தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத்
திருச்சித்திரக் கூடம் சென்று சேர் மின்களே!’

– என்று நான்கு வேதங்களும் தெரிந்த, தில்லை மூவாயிரத்தார் நாள்தோறும் பெருமாளுக்குப் பூஜை செய்ததைச் சொல்லி, மங்களாசாசனம் செய்துள்ளார்.

தினமும் ஆறு கால பூஜைகள் இங்கே நடைபெறுகின்றன. ஆனாலும் முன்னதாக, தினமும் காலையில் பால் நைவேத்தியத்துடன் சிறப்பு பூஜை ஒன்று நடைபெறுகிறது. இரவு சாப்பிட்ட சிவனார் பசியுடன் இருப்பார் என்பதால், பால், வாழைப்பழம், பொரி, வெல்லச் சர்க்கரை, வெற்றிலைப் பாக்கு என வைத்து பூஜை செய்வது வேறெங்கும் காணப்படாத ஒன்று.

அதேபோல், தமிழக ஆலயங்களில் 8 மணியில் இருந்து 9 மணிக்குள் அர்த்த ஜாம பூஜை நடைபெற்றுவிடும். பிறகு, நடை சாத்திவிடுவார்கள். ஆனால், சிதம்பரம் கோயிலில் தினமும் இரவு 10 மணிக்குதான் அர்த்த ஜாம பூஜை நடைபெறுகிறது. அதாவது, சிவனாரின் ஆனந்த நடனத்தைத் தரிசிக்க, எல்லாக் கோயில்களில் இருந்தும் கடவுளர்கள் இங்கு வந்துவிடுவதாக ஐதீகம்!

பஞ்ச பூத தலங்களில் இந்த சிதம்பரம் கோயில், ஆகாசத் தலம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்! ஆகாசம் என்பது வெளி; வெற்றிடம். அதாவது, ஒன்றுமில்லாதது! இங்கே, ஆகாச ரூபமாக, அதாவது அரூபமாக இருந்தபடி அருள்பாலிக்கிறார் சிவனார்.

”ஸ்ரீநடராஜரின் வலது பக்கத்தில் திரை ஒன்று இருக்கும். அந்தத் திரைக்குப் பின்னே உள்ள கற்சுவரில், தங்கத்தாலான வில்வ மாலை சார்த்தப்பட்டிருக்கும். ஸ்ரீ, சிவா என்கிற இரண்டு சம்மேளனச் சக்கரங்கள் அங்கே அமைந்திருப்பதைத் தரிசிக்கலாம் (ஸ்ரீ- அம்பாள்; அதாவது சக்தி. சிவா என்பது இறைவன்). அதன் மேலே புனுகு, ஜவ்வாது ஆகியவை எப்போதோ சார்த்தப்பட்ட நிலையில், இன்றைக்கும் அப்படியே இருப்பதைப் பார்க்கலாம்” என்கிறார் வெங்கடேச தீட்சிதர்.

ஞானம் எனும் சக்தியை மாயை எனும் திரை மூடியிருக்கிறது. மனம் ஒருமுகப்பட்டு, மாயையை விலக்கிப் பார்த்தால், ஞானம் எனும் தெளிவைப் பெறலாம் என்பதே இதன் தத்துவம். இதுவே சிதம்பர ரகசியம்!

”மனிதரின் உடல் அமைப்பில் இந்தச் சிதம்பரம் கோயில் கட்டப் பட்டிருக்கிறது. மனித உடலில் அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என ஐந்து நிலைகள் உள்ளன. இந்த ஐந்தும் சேர்ந்ததுதான் சரீரம் இயங்கும் நிலை. இந்த உலகின் மையப்புள்ளியாக அமைந்திருப்பதுதான் ஆடல்வல்லான் தில்லை அம்பலத்தானின் திருச்சந்நிதி. ஐந்து கோசங்களும் ஐந்து பிராகாரங்களாக இங்கே அமைந்துள்ளன.

சித்சபை, அதன் எதிரில் கனகசபை, அதையடுத்து நேரெதிர் வரிசையில் நடன சபை, அடுத்து உத்ஸவ மூர்த்தங்கள் காட்சி தரும் தேவ சபை, ஆயிரங்கால் மண்டபத்தில் ராஜசபை என ஐந்து சபைகள் உள்ளன.

இந்தக் கோயில் மட்டுமல்லாது, மற்ற தலங்களையும் கணக்கிட்டுப் பார்த்தாலும் ஐந்து சபை உண்டு. அதாவது திருவாலங்காடு – ரத்னசபை, சிதம்பரம் – கனகசபை, மதுரை – ரஜத (வெள்ளி) சபை, திருநெல்வேலி – தாமிர சபை, திருக்குற்றாலம் – சித்திர சபை.

இங்கே, தில்லையில் உள்ள கனக சபையில், 21 ஆயிரத்து 600 தங்க ஓடுகள் வேயப்பட்டுள்ளன. அதென்ன கணக்கு என்கிறீர்களா? நாம் ஒருநாளில், 21 ஆயிரத்து 600 முறை மூச்சை இழுத்து வெளியேவிடுகிறோம். அதைக் குறிக்கவே இத்தனை தங்க ஓடுகள்!

நம் உடலில், மொத்தம் #72 ஆயிரம் நாடிகள் (நரம்புகள்) உள்ளன. இவைதான் இணைந்தும் பிணைந்தும் நம்மை இயக்குகின்றன. நம் உடலில் பித்தம், வாதம், சிலேத்துமம் (கபம்) சீராக இருப்பதற்கு, தலைமுடியில் இருந்து குதிகால் வரை சீராக இயங்குவதற்கு நாடி நரம்புகள் அவசியம். அதைக் குறிக்கும்வகையில் இங்கே, பொன்னம்பலத்தானின் சபையில் 72 ஆயிரம் தங்க ஆணிகளைக் கொண்டு இணைக்கப்பட்டுள்ளன.

நம் உடம்பில் நடுநாயகமாக இருப்பது இதயம். அதாவது சபாநாயகம்; இறை சக்தி. நான்கு வேதங்களும், ஆறு சாஸ்திரங்களும் இதயத்தைச் சுற்றியிருக்கும் உபகரணங்கள் போல, ஸ்வாமி சந்நிதியைச் சுற்றிலும் பத்து தூண்களாகத் திகழ்கின்றன.

அதன்பிறகு உள்ள ஐந்து தூண்கள் பஞ்ச பூதங்களைக் குறிக்கின்றன. 18 புராணங்கள் 18 தூண்களாகவும், 28 ஆகமங்கள் மேலே உள்ள உத்தரங்களாகவும், 36 தத்துவங்கள் மேலே நடுநடுவே வருகிற சட்டங்களாகவும், 64 கலைகள் மேலே அனைத்தையும் தாங்கு கிற மரங்களாகவும், 96 தாத்வீகங்கள் ஜன்னல்களில் உள்ள 96 துளைகளாகவும் அமைக்கப்பட்டுள்ளன.

சதா சர்வ காலமும் ஆனந்த நடனம் புரிந்து கொண்டிருக்கிறார் சிவனார். ஒவ்வொரு முறையும் பஞ்சாட்சர நாமத்தைச் (நமசிவாய) சொல்லிக்கொண்டே, மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுகிற தியானம் அல்லது தவத்தில் ஈடுபட ஈடுபட… அந்த ஆனந்த நடனத்தைத் தரிசிக்கும் பாக்கியம் நமக்குக் கிடைக்கும். பதஞ்சலி முனிவர் அருளிய யோகா சூத்திரம், இந்த ஆனந்த நடனத்தைத்தான் வலியுறுத்துகிறது!”

#வெங்கடேச தீட்சிதர் சொல்லச் சொல்ல, கோயிலும் அதன் பிரமாண்டமும் மனத்துள் விரிகிறது. அந்த பிரமாண்டத்தின் உள்ளே அணுவெனப் பொதிந்திருக்கும் விஷயங்களும் முக்கியமாக, சிதம்பர ரகசியமும் ஒன்றே ஒன்றைத்தான் வலியுறுத்துகின்றன.

‘இங்கே எதுவுமில்லை! கர்வம், காமம், அலட்டல், அகங்காரம் என எதற்கும் இங்கே இடம் கிடையாது. ஒன்றுமில்லை. அமைதியாக, ஆனந்தமாக வாழ… இதுவே சிறந்த வழி!’

தில்லை மூவாயிரம்பேர் என்று பெருங் கூட்டமாக இருந்த நிலை இப்போது இல்லை. தற்போதைய நிலவரப்படி, சுமார் 299 தீட்சிதக் குடும்பங்களே உள்ளன.

நமக்கு போன்கால் வந்தால் எடுத்து ‘ஹலோ’ என்போம். ‘வணக்கம்’ என்று சிலர் சொல்வார் கள். தில்லைவாழ் அந்தணர்களும் தில்லைவாழ் பெருமக்களும் போனை எடுக்கும்போதும், பேச்சை முடிக்கும்போதும் ‘திருச்சிற்றம்பலம்’ என்கிறார்கள். ‘

சிவசிதம்பரம்… சிவசிதம்பரம்’ என்கிறார்கள்.

தில்லைவாழ் அந்தணர்களோ ‘நடராஜர் இஷ்டம்… நடராஜர் இஷ்டம்’ என்று சகலத்தையும் அவன் பாதத்தில் சேர்த்து விடுகிறார்கள்.

சனி, 4 டிசம்பர், 2021

ஸ்ரீதர ஐய்யாவாள்

'அய்யாவாள் வீட்டின் திதியில் உண்டதால், இரவு நைவேத்தியம் வேண்டாம்’ என்று அந்தத் துண்டுச் சீட்டில் எழுதியிருந்தது. படிப்பதற்கு அதிசயமாக இருக்கிறதா…. ஆம்




எப்பேர்ப்பட்ட மகான்கள் பிறந்து, வளர்ந்து அதிசயங்கள் நடத்திய மாநிலம் தான் நம் தமிழகம்.

இன்றளவும் சில சிவ திவ்ய நாமங்கள், சிவ தோடயமங்கலம், சிவ நாம ஸங்கீர்த்தனம் பஜனை ஸம்ப்ரதாயத்தில் உயிர்ப்புடன் இன்றும் விளங்குவதற்கு ஶ்ரீதர ஐயாவாளே காரணம்!!

ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வருகின்ற அமாவாசையன்று (4/12/2021) திருவிசநல்லூர் ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள் இல்லக் கிணற்றில் இன்றும் கங்கை பொங்கி வருவதைக் காணலாம்; நீராடலாம்.

கர்நாடக சமஸ்தானத்தில் திவானாகப் பணிபுரிந்தவர் ஸ்ரீதர ஐயாவாள். இவர் தன் பதவி சொத்துக்களைத் துறந்து விட்டு தமிழக காவிரிக் கரையிலுள்ள திருவிசநல்லூரில் குடியமர்ந்து விட்டார். தினமும் அருகேயுள்ள மத்யார்ஜூனமான திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரரை தரிசிப்பார். அர்த்தஜாம பூஜையும் காண்பார். சிவன் மேல் அபார பக்தி கொண்டவர். இவரது தந்தையார் மறைந்த திதி கார்த்திகை மாதத்தில் வரும். அத்தகைய ஒரு நாளில் இவர் பிராமணர்களுக்கு சிரார்த்த சமையல் தயார் செய்ய ஏற்பாடு செய்து விட்டு காவிரியில் நீராட சென்றார். நீராடி இல்லம் திரும்பும் போது எதிரேவந்த வயதான ஏழை ஐயாவாளிடம் சுவாமி ரொம்ப பசிக்கிறது. ஏதாவது கொடுங்களேன் என கேட்கவும், அவர் மீது இரக்கம்கொண்ட ஐயாவாள் அவரை இல்லத்திற்கு அழைத்து வந்த போது சிரார்த்த சமையல் மட்டுமே தயாராக இருந்தது. பசி மயக்கத்தில் இருந்த ஏழைக்கு சிரார்த்த சமையல் உணவைக்கொடுத்து பசியாற்றினார்.

சிரார்த்த சமையலை திதி கொடுக்கும் அந்தணர்கள் மட்டுமே உண்ண வேண்டும். மீதம் உள்ளதை பசுவுக்குத்தான் தருவார்கள். அந்த நியதியை மீறினார் ஐயாவாள். அவரது செயலைக் கண்ட அந்தணர்கள், ‘இது சாஸ்திர விரோதம். இதற்கு பரிகாரமாக ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர் காசி சென்று கங்கையில் நீராட வேண்டும். இல்லாவிட்டால் ஊர் விலக்கு செய்து, அவரை குடும்பத்துடன் நீக்கி வைக்க வேண்டும்’ என்று கூறியதுடன், சிரார்த்தம் செய்யவும் மறுத்து விட்டனர்

‘வடநாட்டில் இருக்கும் கங்கையில் ஒரே நாளில் நீராடித் திரும்ப முடியுமா? கும்பகோணத்தில் இருந்து காசியில் இருக்கும் கங்கைக்கு சென்று வருவதற்குள், அடுத்த திதி வந்து விடுமே!’ என்று மகான் வருந்தினார்.

இறைவனை நினைத்து மனமுருகி ‘கங்காஷ்டகம்' என்னும் துதிபாடினார். அவர் பாடி முடித்ததும்,

அவர் வீட்டுக் கிணற்றில் இருந்து கங்கைபொங்கி வழிந்தது.

கிணற்றிலிருந்து நீர் மேலெழுந்து வழிந்து பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்து வெள்ளக்காடானது.

இதைக் கண்டு அதிசயித்த மக்கள், ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதரிடம் மன்னிப்புக் கேட்டு, அந்த கங்கை நீரில் நீராடினர்கள். சிரார்த்தம் செய்ய வந்த அந்தணர்கள் தங்கள் தவறை உணர்ந்து மகானிடம் மன்னிப்பு கேட்க, மகானும் கங்கையிடம் தணியுமாறு பிரார்த்திக்க கங்கையும் அடங்கி அக்கிணற்றிலேயே நிலைத்தது என்பது ஐதீகம். அதைத் தொடர்ந்து திதி கொடுக்கப்பட்டது.

காலையில் நடந்த இந்த நிகழ்வுகளின் காரணமான, மகானால் திருவிசநல்லூர் ஆலயத்திற்குச் சென்று இறைவனை தரிசிக்க முடியவில்லை. அன்று மாலை திருவிசநல்லூர் ஈசன் கருவறையில் மூர்த்தங்களிடம், ஒரு துண்டுச் சீட்டு இருந்தது. அதில், ‘இன்று மதியம்
ஸ்ரீதர அய்யாவாள் வீட்டின் திதியில் உண்டதால், இரவு நைவேத்தியம் வேண்டாம்’ எழுதியிருந்தது.

இந்த அற்புத நிகழ்வே ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று திருவிசநல்லூர்
ஸ்ரீதர வெங்கடேச மடத்தில் நிகழ்கிறது.

மகான் தன்னுடைய கங்காஷ்டகத்தில், ‘கங்கையே நீ இங்கேயே ஸ்திரமாக இரு’
என்று வேண்டுகிறார். அதனால் இந்தக் கிணற்றிலுள்ள தீர்த்தம் எல்லா நாளிலும் கங்கை தீர்த்தமே!.

இன்றைக்கும் கார்த்திகை அமாவாசையில் இந்தக் கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம். மகான் வசித்த இல்லம் மடமாக மாற்றப்பட்டுள்ளது.

இங்கு கங்கை பொங்கும் விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழா நாட்களில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. பத்தாம் நாளன்று கார்த்திகை அமாவாசை அன்று தான் கங்கை கிணற்றில் பொங்குகிறது. அன்றைய இரவு முழுவதும் திவ்ய நாம சங்கீர்த்தனம் நடக்கும். கார்த்திகை அமாவாசையன்று அதிகாலை காவிரி நதிக்குச் சென்று, சங்கல்ப ஸ்நானம் செய்து விட்டு, அங்கிருந்து தீர்த்தம் கொணர்ந்து கிணற்றில் விடுவார்கள். பிறகு கிணற்றுக்கு கங்கா பூஜை நடத்திவிட்டு காலை ஐந்து மணியில் இருந்து எல்லோரும் நீராடுவார்கள். அப்போது அங்கு நடக்கும் கங்கா பூஜையின்போது அந்த கிணற்றில் கங்கை பொங்கி வருவதன் அடையாளமாக நுரை மிகுந்துகொண்டு நீர் மட்டம் உயர்ந்து வருமாம். அன்று ஆயிரக்கணக்கான மக்கள் நீராடினாலும் சிறிதும் நீர் மட்டம் குறையாது. இந்த ஞானம் வழியும் கிணறான திருவிசநல்லூர் தலத்திற்குச் சென்று கார்த்திகை அமாவாசையன்று நீராடுவது பெறுவதற்கு அரிய பெரும் பாக்கியமாகும்.

பின்னர் ஈசன் அருளால் அற்புதங்கள் பல புரிந்த ஸ்ரீதர வெங்கடேசர் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க சுவாமியிடம் ஜோதி வடிவில் ஐக்கியமானார். கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று திரு விடைமருதூர் திருக்கோவில் மகாலிங்க சுவாமிக்கு, ஸ்ரீதர வெங்கடேசர் மடத்திலிருந்து வழங்கப் பெறும் வஸ்திரம் சாத்தப்படுகிறது.

அதுபோல அன்று உச்சிகாலப் பூஜையின் நைவேத்தியம், திருநீறு முதலிய பிரசாதங்கள் திருக்கோவில் சிவாச்சாரியார் மூலம் மகானின் மடத்துக்கு தந்தருளும் ஐதீக நிகழ்வும் இன்றளவும் நடக்கிறது.

கும்பகோணம்- மயிலாடுதுறை செல்லும் வழியில் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருவிடைமருதூர். அங்கிருந்து வடமேற்கில் 3 கிலோமீட்டர் தூரத்தில் திருவிசநல்லூர் திருத்தலம் இருக்கிறது.

இன்று அந்த ஸ்ரீ வேங்கடேச ஸ்ரீதர அய்யாவாள் வீடு மடமாக மாற்றப்பட்டுள்ளது. அந்தக் கிணறு இன்றும் உள்ளது. கார்த்திகை அமாவாசியன்று பலரும் இங்குவந்து நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்துவிட்டுச் செல்கிறார்கள்.
நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் இவரது சமகாலத்தவர் . திருவிசைநல்லூரில்
அய்யாவாள் வீட்டில் கங்கை பொங்கிய அற்புதம் நிகழ்ந்த போது சதாசிவர் உடனிருந்ததாகவும் “ஜய துங்க தரங்கே கங்கே” என்ற கீர்த்தனை அப்போது தான் இயற்றப் பட்டது என்றும் ஒரு ஐதிகம் உள்ளது.

ஐயாவாள் பாடித் துதித்த கங்காஷ்டகம் படியுங்கள் பாராயணம் செய்யுங்கள் பரம பாகவதோத்தமரின் அருளைப் பெற்று ஆனந்தமாக வாழுங்கள்….

கங்காஷ்டகம்

சம்போ பவன்னாம நிரந்தரானு
ஸந்தான பாக்யேன பவந்தமேவ
யத்யேஷ ஸர்வத்ர தமாந்த்யஜேsத்ய
பச்யத்யஹோ கோத்ர க்ருதோsபரதா:||

சம்புவே உமது திருநாமத்தை இடைவிடாமல் உள்ளத்தில் நினைப்பதால் பெற்ற பாக்யத்தால் உம்மையே எல்லாவற்றிலும் - இன்று இந்த கடைப்பிறப்போனிடமும் இவன் காண்கிறான். இதில் ஏது தவறு? (1)

அஸ்த்வேஷ மந்து: பித்ருயஞநிஷ்டே
கங்காப்லவோ யோ விஹிதோsபசித்யை
தூரத்து தந்நாமஜபேன சுத்தி:
ந ஸ்யாத் கதம் மே ஸ்மிருதிரர்தவாத:||

பித்ருக்களுக்கான வேள்வியில் முனைந்திருந்தவனுக்கு இது குற்றமாகலாம். இதற்கு கழுவாயாக கங்கையில் நீராடல் விதிக்கப்பட்டுள்ளது. அது வெகு தூரத்தில் உள்ளது. கங்கையின் நாம ஜபத்தால் சுத்தி கிடைக்காதா? "கங்கா கங்கேதி யோ ப்ரூயாத் யேஜநாநாம் சதைரபி, முச்யதே சர்வபாபேப்ய:" கங்கை கங்கை என்று நாம ஜபம் செய்பவன் நூற்றுக்கணக்கான யோஜனை தூரத்திற்கு அப்பால் இருந்தாலும் எல்லா பாபங்களிலிருந்தும் விடுபடுகிறான் என்ற ஸ்மிருதிவாக்கியம் என்னளவில் விளம்பரச் செய்தி தானா? (2)

த்வந்நாமநிஷ்டா ந ஹி தவதீ மே
ச்ரத்தா யத: கர்மஸு ப்ரதக்தா:
த்ரைசங்கவம் மே பசுபாந்தராய:
முச்யேய தஸ்மாத் கதம் ஆர்தபந்தோ||

எளியவரின் உற்றாரே! பசுபதியே! உன் நாமத்தை மட்டும் நம்பியிருக்கிற நிலை எனக்கில்லை. கருமங்கள் செய்வதில் உள்ள சரத்தை சிறிதும் குறையவில்லை. இந்த இரண்டும் கெட்டான் திரிசங்கு நிலை எனக்கு இடையூறு விளைவிக்கிறது. இதிலிருந்து நான் எப்படி விடுபடுவேன்? (நாமம் கூறினால் பாபம் நீங்கும் என்ற சிரத்தை ஒரு புறம், சாம்பானுக்கு உணவிட்டது பெரும்பாவம், கங்கை நீரால்தான் அது அகலும் என்பதால், கங்கையில் நீராடாமல் சிரார்த்தம் செய்வது வீண் என்ற எண்ணம் ஒரு புறம், எது சரி? இந்த இருதலைக்கொள்ளி நிலை என்று அகலும்?) (3)

யத்யத்ய தே ச்ரார்த்தவினஷ்டிரிஷ்டா
கோஹம் ததோsன்யச்சரிதும் ஸமர்த: |
ச்ராரத்தே வ்ருதா: பூர்வதினோபவாஸா
நான் யத்ர புஞ்ஜியுரிதம் து கித்யே||

இன்று சிரார்த்தம்  செய்வது வீண் எனில் வேறு என்ன செய்வேன்? சிரார்த்தம் தில் பங்கு பெற வரிக்கப்பெற்றவர்கள் நேற்று முதல் உபவாஸத்தில் உள்ளனர், வேறு இடத்தில் சாப்பிட மாட்டார்கள், இதனால் வேதனைப்படுகிறேன். (4)

சரத்தால்வ: ச்ராத்தவிகாதபீத்யா
ஸ்வாத்மோபரோதம் விகணய்ய தீரா:||
யத்பரேசுரத்ராபசிதிம் மஹாந்த:
தத்ரோசிதம் யத்தயயா விதேஹி ||

(சிரார்த்திற்கு வரிக்கப்பட்ட) பெரியோர்கள் தனக்கு நேர்கின்ற கஷ்டத்தைப் பெரிதாகக் கருதாமல், சிரார்த்தம் தடைபெறுமே என்று பயந்து சிரத்தையுடன் அதற்கான கழுவாயைக் கூறியுள்ளனர். இங்கு உசிதமானதைத் தயையுடையுடன் செய்வீர். (5)

கங்காதர த்வத்பஜனாந்தராய
பீத்யா க்ருஹே கூபக்ருதாவகாஹ:
ஜானே நா தீர்தாந்தரம் அத்ய கங்காம்
ஆஸாதயேயம் கதமார்தபந்தோ:

கங்கையைத் தரிப்பவரே, உமது வழிபாட்டுக்கு இடையூறு என்று பயத்தால் இதுவரை கிணற்று நீரில் நீராடுகிறேன். இதுவரை வேறு தீர்த்தங்கள் அறியேன். எளியவர்க்கு உறவினரே, இன்று கங்கையை எவ்வாறு சென்றடைவேன்:|| (6)

 தபஸ்வி ஸகரான்வவாய
ஜானே ந ஜஹ்னு சரதி க்வவேதி
சம்போ ஜடாஜூடமபாவ்ருனுஷ்
வேத்யப்யர்தனே நாலமயம் வராக :

நான் ஸகரவம்சத்தில் பிறந்தவனுமல்ல, தவம் செய்பவனுமல்ல, ஜந்ஹு முனிவர் எங்கு உலாவுகிறார் என்பதும் தெரியாது. "சம்புவே! உமது சடை முடிப்பைப் பிரித்து விடுவீர் (கங்கை வெளியேறட்டும்) என்று வேண்ட எனக்குத் தகுதியில்லை (7)

ஹந்த ப்ரவாஹ: சுதமத்ர கூபே
விஸ்பூரஜதீச:கலு மே ப்ரஸன்ன:||
கங்கே கங்கேதி ஹரேதி க்ருஹ்ணன்
ஆப்லாவிதோஹம் தயயா புராரே:||

கங்காதரன் என்ற பெயரே இன்று கதி வேறில்லை, சங்கடத்திலிருந்து விடுபெற அந்தப் பெயரை புகலடைகிறேன். ஆஹா.... கிணற்றில் பிரவாஹம் காண்கிறதே! அது எப்படி! எனக்கு அருள் புரிகிற ஈசன் கிணற்றில் துடிப்புடன் வெளிப்படுகிறார் (8)

கங்கேதி கங்கேதி ஹரேதி க்ருஹ்ணன்
ஆப்லாவிதோஹம் தயயா புராரே
கூபோத்திதோsயம் கருணாப்ரவாஹ:
கங்காச்சிராயாத்ர ஜனான் புனாது ||

கங்கே! கங்கே! ஹர! என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே இதோ புரஹரனின் கருணையால் நீராட்டப் பெற்றேன். சிவனது க்ருபையால் தோன்றிய இந்த கங்கைப் பெருக்கு பல்லாண்டுகளுக்கு இங்கு மக்களுக்கு தூய்மை அளிக்கட்டும்.....

ஹரே ராம ஹரே ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே…💐

வெள்ளி, 12 நவம்பர், 2021

பிறப்பு, இறப்பு தீட்டு

பிறப்பு, இறப்பு தீட்டு சம்பந்தமாக பலருக்கும் ஸந்தேகங்கள் உண்டு.

ஸ்ரீமதாநந்த குருப்யோ நமஹ || கருட புராணம் கூறும் தீட்டு ||

தீட்டுள்ளவன் வீட்டில் தீட்டற்றவன் தெரிந்து சாப்பிட்டால் அன்றைய பொழுது அவனுக்குத் தீட்டு.

தீட்டுப்போகும் தினத்தில் சுமார் காலை எட்டரை மணிக்கு [ஸங்கவ காலம்] மேல்தான் தீர்த்தமாடி தீட்டை முடிக்க வேண்டும்.

பிறப்பு, இறப்பு, மாதவிடாய் [தூரம்] இவை சூர்ய உதயத்திற்கு பதினொன்றேகால் நாழிகை [270 நிமிடங்களுக்கு] முன் ஏற்பட்டால் முதல் நாள் கணக்கு. அதன் பிறகானால் மறுநாள் கணக்கு.

ப்ரேதத்தின் பின் போனாலும் க்ஷவரம் செய்து கொண்டாலும் இரு முறை ஸ்நானம் செய்ய வேண்டும்.

ஸந்யாசிகளுக்கு [முன் ஆச்ரம] மாதா, பிதாக்களின் மரணத்தில் மட்டும் ஸ்நானம்.

88 அடிகளுக்குள் பிணம் [சவம்] இருந்தால் எடுக்கும் வரை சமைப்பது, சாப்பிடுவது கூடாது.

ஸந்யாசியின் சவமானால் அந்தப் பகுதிக்கே தீட்டுக் கிடையாது.

நகரங்களுக்கு மேற்படி தோஷங்கள் எதுவுமில்லை.

ஸ்நானம் பண்ண முடியாத அளவிற்கு நோயுள்ள தீட்டுகாரனின் தீட்டுப்போக வேண்டுமானால், தீட்டற்ற ஒருவன் தீட்டுள்ளவனைத் தொட்டு விட்டு தீர்த்தமாடி பின் தொட்டு தீர்த்தமாடி என பத்து முறை தீர்த்மாடவேண்டும்.

அது போல் நோயுள்ள தூர ஸ்த்ரீயை மற்றொருத்தி 12 முறை தொட்டு தீர்த்தமாடி வேறு உடை உடுத்தச் செய்தால் சுத்தி. இரண்டிலும் புண்யாஹவாசனம் முக்கியம்.

ச்ராத்தத்தின் நடுவில் [ஸ்ராத்த சங்கல்பம் ஆன பின்] தீட்டுத் தெரிந்தால் ஸ்ராத்தம் முடியும் வரை கர்த்தாவுக்குத் தீட்டில்லை. வரித்த பின் போக்தா [ஸ்ராத்த ஸ்வாமிக்கு] தீட்டுத் தெரிந்தால் சாப்பிட்டு முடியும் வரை தீட்டில்லை.

விவாஹத்தில் உத்வாஹ சங்கல்பத்தின் பின் தீட்டுத் தெரிந்தால் சேஷ ஹோமம் வரை தீட்டில்லை.

ஸந்யாசிகளின் மரணத்தினால் அவரின் பங்காளிகளக்குத் தீட்டில்லை, அவப்ருத ஸ்நாநம் மட்டும். ராஜாங்கத்தால் கொலை தண்டனை விதிக்கப்பட்டவனுக்கு உடனே கர்மா செய்யலாம்.

துர் மரணம் செய்து கொண்டவனுக்கு ஆறு மாதம் கழித்து கர்மா செய்ய வேண்டும் என்பது விதி ஆயினும் இருபத்தி நான்கு நாட்கள் கழித்து செய்வது என்றும் ஒரு விதி உள்ளது.

தற்செயலாய் துர்மரணம் அடைவோருக்கு தீட்டு, தர்பணம் முதலியவை உண்டு.

தற்கொலை செய்து கொண்டவனுக்கு தீட்டு, தர்பணம் இவை இல்லை.

கர்மா செய்பவனுக்கு பதினோராம் நாள் கர்மாவிற்குப் பின் தீட்டுப் போகும்.

கல்யாணமான பெண் இறந்தால் அவள் பிறந்த வீட்டுப் பங்காளிகளுக்கு தீட்டில்லை.

பிறப்புத் தீட்டுள்ளவனை நான்கு நாளைக்கு மேல் தீண்டினால் அதிகம் தோஷமில்லை.

ஒரு தீட்டுக் காரன் மற்றொரு தீட்டுக்காரனைத் தொடக் கூடாது.

தீட்டுள்ளவன் வீட்டுக்கும் அவன் சாமான்களுக்கும் தீட்டுண்டு.

பிரம்மச்சாரிகள் கர்மா செய்தால் அதனுடன் தர்பணம் [உதகதானம்] தனியாக இல்லை.

மனைவி கர்பமாக இருக்கும் போது தானம் வாங்குதல், தூரதேச யாத்திரை போதல் கூடாது.

சவத்துக்கு முன்னாலும், பக்கவாட்டிலும் போகக் கூடாது.

சஞ்சயனம் ஆனபின் துக்கம் விசாரித்தால் ஆசமனம் மட்டும் போதும்.

ஸ்ராத்த தினத்தன்று துக்கம் விசாரிக்கச் செல்லக் கூடாது.

தன் மனைவி கர்பமாய் இருக்கும் போது தாய், தந்தை தவிர மற்றவர்களின் சவத்தை சுமக்கலாகாது.

ப்ரம்மச்சாரிகள் தாய் தந்தை சவத்தைத் தவிர மற்வர்கள் சவத்தைச் சுமக்கக்கூடாது.

தீட்டுக் காரர்கள் ஆலயத்திற்குள் செல்லக் கூடாது.

தீட்டுக்காரர்களை தீட்டில்லாதவர்கள் நமஸ்கரிக்கக் கூடாது. தீட்டுக்காரரும் அப்படியே.

ஜனன, மரண தீட்டிலும் ஏகாதசி, துவாதசி விரதம் விடக் கூடாது. உபவாஸம் மட்டும், பூஜை கிடையாது.

சாவு தீட்டுக்காரர் மெத்தை போன்றவற்றில் படுக்கக் கூடாது. தினமும் தீர்த்தமாட வேண்டும்.

சிசுக்கள் இறந்தால் புதைத்த தினம் முதல் தான் தீட்டு. தீட்டில் வேறு தீட்டு சோ்ந்தால்?” பங்காளிகளைப் பொறுத்தவரையில் ஒரு தீட்டு காத்துக் கொண்டிருக்கும் போது மற்றொரு தீட்டு வந்தால் முன் வந்த தீட்டு முடியும் போது பின் வந்த தீட்டும் முடிந்து விடும்.

உதாரணமாக பத்து நாள் தீட்டில் நாளாம் நாள் மற்றொரு பத்து நாள் தீட்டு வந்தால் முன் வந்த தீட்டின் பத்தாம் நாளுடன் பின் வந்த தீட்டும் முடிந்து விடும். ஆனால் முன் வந்த மூன்று நாள் தீட்டுடன் பின் வந்த பத்து நாள் தீட்டு முடியாது.

பத்து நாள் தீட்டின் இடையில் வந்த மூன்றாம் நாள் தீட்டுடன் பத்தாம் நாள் தீட்டு முடியாது. பத்தாம் நாள் தான் சுத்தி.

பத்தாம் நாள் இரவில் வந்த புதிய பத்து நாள் தீட்டிற்கு அதிகப்படியாக மூன்று நாள் மட்டும் காத்தால் போதும். ஆனால் பிறப்புத் தீட்டின் இறுதியில் வரும் பிறப்புத் தீட்டிற்காக மேலும் மூன்றாம் நாள் காக்கத் தேவையில்லை.

மரணத் தீட்டு ஜனனத் தீட்டைக் காட்டிலும் பலம். மரணத் தீட்டின் போது வந்த பிறப்புத் தீட்டு மரணத் தீட்டுடன் முடியும்.

பெற்ற குழந்தை பத்து நாள் பிறப்புத் தீட்டிற்குள் இறந்தால் அதற்காகத் தனியாகத் தீட்டில்லை. பிறந்ததிலிருந்து பத்து நாள் விலகும். ஒரு வேளை பத்தாம் நாள் மரணமானால் மேலும் இரண்டாம் நாள் அதிகரிக்கும். பத்தாம் நாள் இரவு ஆனால் மூன்று நாள்.

பங்காளிகளுக்கு மேற்படி மூன்று நாள் தீட்டில்லை.

அதிக்ராந்தாசெளசம் என்பது தீட்டு காலம் முடிந்த பின் தீட்டுப்பற்றி அறிந்தவருக்கு விதிக்கப்படுவது.

பிறப்புத் தீட்டில் அதிக்ராந்தாசெளசம் இல்லை.

பத்து நாள் தீட்டை பத்தாம் நாளுக்கு மேல் மூன்று மாதங்களுக்குள் கேட்டால் மூன்று நாள் தீட்டு.

மூன்று மாதத்திற்கு மேல் ஆறு மாதத்திற்குள் கேட்டால் ஒன்றரை நாள். ஆறு மாதத்திற்கு மேல் ஒரு வருடத்திற்குள் ஒரு நாள். அதன் பிறகு ஸ்னானம் மாத்திரம்.

மூன்று நாள் தீட்டை பத்து நாட்களுக்குள் கேட்டால் மூன்று நாள் தீட்டு. பத்து நாட்களுக்குப் பிறகு ஸ்னானம் மாத்திரம்.
 
ஒரு நாள் தீட்டுக்கு அதிக்ராந்த ஆசெளசம் கிடையாது.

மாதா, பிதாக்களின் மரணத்தில் புத்திரர்களுக்கும், கணவனனின் மரணத்தில் பத்தினிக்கும் எப்போது கேட்டாலும் அதிலிருந்து பத்து நாள் தீட்டு உண்டு. ”தீட்டு முடிவில் யார் யாருக்கு க்ஷவரம் உண்டு?” சில தீட்டின் முடிவில் புருஷர் [ஆண்களுக்கு] ஸர்வாங்க க்ஷவரம் [வபனம்] செய்து கொண்டால் தான் தீட்டுப் போகும் என்பது சாஸ்திரம்.

ஸர்வாங்கம் என்பது : தலையில் சிகை [குடுமி] தவிர்த மற்ற இடம்

முகம், கழுத்து, இரு கைகளிலும் மணிக்கட்டிலிருந்து முழங்கைக்குக் கீழ் உள்ள ஒரு சாண் இடம் தவிர்த்து மற்ற இடம். கழுத்துக்கு கீழே பாதங்கள் வரை, பிறப்புறுப்பு உட்பட பின் முதுகு தவிர்த்த மற்ற அனைத்து இடங்களிலும் உள்ள ரோமங்களை அறவே அகற்றுவது ஸர்வாங்க க்ஷவரம் ஆகும்.

கீழ்கண்ட மரண தீட்டுகளின் முடிவில் [முடிகின்ற நாள் அன்று – அதாவது பத்து நாள் தீட்டில் பத்தாம் நாள் காலை] ஸர்வாங்கம் அவசியம்.

இறந்த பங்காளி தன்னை விட வயதில் பெரியவரானால். வயதில் சிறியவர்களுக்கு வபனம் தேவையில்லை ஆனால் தர்பணம் உண்டு.

மாதாமஹன், மாதாமஹீ, மாமன், மாமி, மாமனார், மாமியார் இவர்கள் மரணணத்தில் வபனம் உண்டு.

இறந்தவர் பெரியவரா, இல்லையா என ஸந்தேஹம் இருந்தால் வபனம் செய்து கொள்வதே சிறந்தது.

தீட்டு முடியும் தினம் வெள்ளிக் கிழமையானால் முதல் நாளான வியாழக்கிழமையிலேயே வபனம் செய்து கொள்ள வேண்டும். எக்காரணத்தாலும் வெள்ளிக்கிழமை க்ஷவரம் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ”ஜனனத்தால் [பிறப்பால்] ஏற்படும் தீட்டுகள்” கல்யாணமாகாத ஆண், பெண் இருபாலருக்கும் எந்தத் தீட்டும் இல்லை.

பிரசவத்தினால் ஏற்படும் தீட்டு பிரசவித்த பத்து நாளுக்குப் பிறகு எவரும் காக்கத் தேவையில்லை.

பெண் குழந்தையைப் பெற்றவளுக்கு நாற்பது நாட்கள் தீட்டு

ஆண் குழந்தையைப் பெற்றவளுக்கு முப்பது நாட்கள் தீட்டு

பிறந்தது பெண் குழந்தையானால் கீழ்கண்டவர்களுக்கு பத்து நாட்கள் தீட்டு: குழுந்தையின் உடன் பிறந்தோர். மறு மனைவி(களு)க்குப் பிறந்த ஸஹோதரர்கள், அது போல குழந்தையின் தகப்பனாரின் ஸஹோதரர்கள், குழந்தையின் தகப்பனாரின் தகப்பனார்
[பிதாமஹர்] அவரின் ஸஹோதரர்கள். மேற்கண்டோர் திருமணமான ஆண்களானால் அவர்களது மனைவிகளுக்கும் அதே அளவு தீட்டு.
குழந்தை ஈன்றவளின் பெற்றோருக்கு மூன்று நாள் தீட்டு குழந்தை பெற்றவளின் ஸஹோதரன், மாமா, பெரியப்பா, சித்தப்பா போன்றவர்களுக்கு தீட்டில்லை ஆயினும் அவர்களில் யாருடைய பொருட் செலவிலாவது ப்ரஸவம் ஆனால் ப்ரஸவம் எங்கு நடந்தாலும் செலவு செய்தவர்களுக்கு ஒரு நாள் தீட்டுண்டு. ”பெண்களுக்கும் மட்டும் ஏற்படும் தீட்டுகள்” ஜனனத்தில் குழந்தை பெற்றவளுக்கு மட்டும் சட்டி தொடுதல் அதாவது சமையலறைக்கு வந்து சமையல் செய்ய வீட்டுக் காரியங்களில் அனைவருக்கும் உள்ள பத்து நாள் தீட்டு முடிந்தவுடன் ஈடுபட முடியாது. ஆண் குழந்தையானால் முப்பது நாளும், பெண் குழந்தையானால் நாற்பது நாளுக்கு பிறகே வீட்டுக் காரியங்களில் ஈடுபட முடியும்.

இனி மரணத்தினால் பெண்களுக்கு மட்டில் [கணவர் மற்றும் கணவர் குடும்பத்தாருக்குக் கிடையாது] ஏற்படும் தீட்டுகள் விபரம் கீழ்வறுமாறு..

பெண்களுக்கு திருமணத்தின் மூலம் கோத்திரம் வேறு படுகிறது. கணவனின் கோத்திரத்தை [சந்ததியைச்] சேர்ந்தவர்களின் பிறப்பு இறப்பே அவளுக்கும் உரியதாகும். ஆயினும் பிறந்தகத்தைச் சேர்ந்த சிலரது மரணத்தினால் பெண்களுக்கு மட்டும் மூன்று நாள் வரை தீட்டு சம்பவிக்கும் இந்த தீட்டு அவர்களுடைய கணவருக்குக் கிடையாது. தூரமான ஸ்த்ரீ தனித்திருந்து தீட்டுக் காப்பது போல இதை அவள் மட்டும் காக்க வேண்டியது.

பெண்களின் கீழ்க்கண்ட உறவினரின் மரணத்தில் அவளுக்கு மட்டும் மூன்று நாள் தீட்டு: உபநயனமான உடன் பிறந்த ஸஹோதரன்

உபநயனமான மருமான் [ஸஹோரதன் பிள்ளை]

உபநயனமான ஸஹோதரியின் பிள்ளை

இளைய அல்லது மூத்த தாயார் [தந்தையின் வேறு மனைவிகள்]

பக்ஷிணீ என்பது இரண்டு பகலும் ஓர் இரவும் அல்லது இரண்டு இரவும் ஒரு பகலும் கொண்ட நேரம். பகலின் அல்லது இரவின் கடைசி பகுதியில் அறியப்பட்டாலும் அந்த பொழுது தீட்டில் கழிந்து விட்டதாகவே பொருள்.

கீழ்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் மரணத்தினால் பெண்களுக்கு பக்ஷிணீ தீட்டு. [ஒன்றரை நாள்] தந்தையுடன் பிறந்த பெரியப்பா, சித்தப்பா.

தாயுடன் பிறந்த சித்தி, பெரியம்மா.

தாயின் ஸஹோதரர்கள் [மாதுலன்]

தந்தையின் ஸஹோதரிகள் [அத்தை]

மேல் நான்கு வகையினரின் பெண்கள், பிள்ளைகள்

தந்தையின் தந்தை – பிதாமஹன்

தந்தையின் தாய் – பிதாமஹி

தாயின் தந்தை – மாதாமஹன்

தாயின் தாய் – மாதாமஹி

உடன் பிறந்த ஸஹோதரி

ஸஹோதரியின் பெண்கள்

மருமாள் [ஸஹோதரனின் பெண்]

கீழ்கண்டவர்கள் உபநயனமான ஆண், விவாஹமான பெண் மரணத்தால் பெண்களுக்கு மட்டும் ஒரு நாள் தீட்டு. தாயின் மூத்தாள் அல்லது இளையாள் [ஸபத்னீ மாதா] குமாரன்

ஸபத்னீ மாதா புத்ரீ [குமாரத்தி]

ஸபத்னீமாதா ஸஹோதர, ஸஹோதரிகள்

ஸபத்னீமாதா பிள்ளையின் பிள்ளை, பெண்

ஸபத்னீ மாதா பெண்ணின் பிள்ளை, பெண்

ஸபத்னீமாதா ஸஹோதரியின் பிள்ளை, பெண் ”மரணத்தினால் ஏற்படும் தீட்டுகள்” மரணத்தினால் ஏற்படும் தீட்டுகள் ஒருநாள், ஒன்றரை நாள், மூன்று நாள், பத்து நாட்கள் என நான்கு வகைப்படும். அவை தனித்தனியாக பிரித்து கீழே வகைப்படுத்தி வழங்கப்பட்டுள்ளன. முதலில் பத்துநாளில் ஆரம்பித்து, பின் மூன்று நாள், ஒன்றரை நாள், ஒரு நாள் என எந்தப் பகுதியில் தங்களுடைய உறவு முறை வழங்கப்பட்டுள்ளது என தீர்மானித்துக்கொள்ளவும். சில சமயம் இருவிதமான உறவு முறைகள் இருக்கலாம். அப்படி இருக்கும் போது அதிகப்படியான தீட்டு எந்த உறவினால் ஏற்படுகிறதோ அந்தத் தீட்டையே அநுஷ்டிக்க வேண்டும். பத்து நாள் தீட்டு பங்காளிகளில் யார் ஒருவர் இறந்தாலும் ஏழு தலை முறைகளுக்கு உட்பட்ட அனைத்து ஆண்கள் மற்றும் அவர்கள் மனைவிகளுக்கும் பத்து நாள் தீட்டு உண்டு.

பிறந்து பத்து நாட்களே ஆன புருஷ [ஆண்] குழந்தை இறந்தால் கீழ்க்கண்டவர்களுக்கு பத்து நாள் தீட்டு. இறந்தவர் [குழந்தையின் தந்தை] தாய், மற்றும் மணமான ஸஹோதரார்கள்.

மேற்படி இறந்தது மணமாகாத ஒரு பெண் குழந்தை ஆனாலும் மேற்கண்ட அனைவருக்கும் பதுது நாள் தீட்டு.

ஏழு வயதுடைய உபநயனம் ஆன பையன் இறந்தால் பங்காளிகள் அனைவருக்கும் பத்து நாள் தீட்டு. ஏழு வயதுக்கு மேல் இறந்தது ஆண் ஆனால் உபநயனம் ஆகியிருந்தாலும் இல்லா விட்டாலும் பங்காளிகள் அனைவருக்கும் பத்து நாள் தீட்டு. மூன்று நாள் தீட்டு கீழ்க்கண்ட உறவினர்களின் மரணத்தில் ஆண்களுக்கும் அவர்களுடைய மனைவிகளுகு்கும் மூன்று நாள் தீட்டு. தாயின் தந்தை [மாதாமஹர்]
தாயின் தாய் [மாதாமஹி], தாயின் ஸஹோதரன் [மாதுலன்], மாமன் மனைவி [மாதுலானி], மாமனார், மாமியார், தாயின் உடன் பிறந்த ஸஹோதரி [சித்தி, பெரியம்மா], தந்தையின் ஸஹோதரிகள் [அத்தைகள்], ஸஹோதரியின் மகன் [உபநயனமானவன்] மருமான்
உபநயனமான பெண்வயிற்றுப் பேரன் [தெளஹித்ரன்] ஏழு தலைமுறைக்கு மேற்பட்ட பங்காளிகள் [ஸமானோதகர்கள்], கல்யாணமான பெண், கல்யாணமான ஸஹோதரி, ஸ்வீகாரம் போனவனைப் பெற்றவள் [ஜனனீ], ஸ்வீகாரம் போனவனை ஈன்ற தந்தை [ஜனக பிதா], ஸ்வீகாரம் போன மகன் [தத்புத்ரன்], ஏழு வயதுக்கு மேற்பட்ட கல்யாணமாகாத பங்காளிகளின் பெண், இரண்டு வயதுக்கு மேற்பட்ட ஆனால் உபயநயனமாகாத பங்காளிகளின் ஆண் பிள்ளைகள், ஏழு தலைமுறைக்கு மேற்பட்ட பங்காளிகள், பக்ஷிணீ பக்ஷிணீ என்பது இரண்டு பகலும் ஓர் இரவும் அல்லது இரண்டு இரவும் ஒரு பகலும் கொண்ட நேரம். பகலின் அல்லது இரவின் கடைசி பகுதியில் அறியப்பட்டாலும் அந்த பொழுது தீட்டில் கழிந்து விட்டதாகவே பொருள். பகலில் அறியப்பட்டு பகல், இரவு, மறுநாள் பகலில் தீட்டு முடிந்து விட்டாலும் மறு நாள் காலையிலேயே ஸ்னானத்திற்குப் பிறகு தீட்டுப் போகும்.

கீழ்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் மரணத்தினால் ஆண்களுக்கு பக்ஷிணீ தீட்டு. [ஒன்றரை நாள்]. அத்தையின் பிள்ளை அல்லது பெண்,
மாமனின் பிள்ளை அல்லது பெண், தாயின் ஸஹோதரியின் பெண்கள், பிள்ளைகள், தன்னுடைய ஸஹோதரியின் பெண், தன் ஸஹோதரனின் மணமான பெண், சிற்றப்பன், பெரியப்பன், பெண்கள், தன் பிள்ளை வயிற்றுப் பேத்தி [பெளத்ரீ] பெண் வயிற்றுப் பேத்தி [தெளஹித்ரி], உபநயனமாகாத பெண் வயிற்றுப் பிள்ளை [தெளஹித்ரன்], உபநயனமாகாத மருமான் [ஸஹோதரி புத்ரன்] 

கீழ்க்கண்டோர் மரணத்தில் புருஷர்களுக்கு ஒரு நாள் தீட்டு. [இளைய, மூத்தாள் தாயார்களுக்கு ஸபத்னீ மாதா என்று பெயர்]. ஸபத்னீ மாதாவின் ஸஹோதரன், ஸஹோதரி, ஸபத்னீ மாதாவின் பெண், மற்றும் மேற் சொன்ன மூன்று வகை உறவினரின் பெண்கள் பிள்ளைகள், ஸபத்னீ மாதாவின் தாய், தந்தை, ஸபத்னீ மாதாவின் பெரியப்பா, சித்தப்பா, கல்யாணமாகாத ஆறு வயதுக்குட்பட்ட இரண்டு வயதுக்கு மேற்பட்ட பங்காளிகளின் பெண், ஸ்வீகாரம் சென்ற ஆணின் பிறந்தகத்தில் உடன் பிறந்த முன் கோத்ர ஸஹோதரர்கள், ஆறு மாதத்திற்கு மேற்பட்ட இரண்டு வயதிற்குட்பட்ட பங்காளிகளின் ஆண் குழந்தை.

மஹாளய பக்ஷம்

மஹாளய பக்ஷம் - செப்டம்பர் 21 ஆரம்பம்.   

மஹான்களான பித்ருக்கள் அனைவரும் இரண்டு மாஸங்கள் வரை இந்த பூலோகத்தில் தங்கி தத்தம் ஸந்ததியினர் மஹாளய ச்ராத்தம் அல்லது தர்ப்பணம் செய்வார்கள் என்று ஆசைப்பட்டு இங்கு வந்து தங்குவதால் அந்த காலத்தில் இந்த பூலோகமே மஹான்களுக்கு ஆலய(இருப்பிட) மாக ஆவதால் இது பெருமை பொருந்திய ஆலயமாக மஹாள(ல), யமாகக கூறப்படுகிறது.  இதனால் இந்த பூலோகத்தை மஹாள(ல) யமாக்கும் காலத்திற்க்கும் மஹாள(ல) யம் என்று பெயர் உண்டாயிற்று என்று பெரியோர்கள் கருதுகின்றனர்.   இந்த மஹாளய ச்ராத்தம் பக்ஷ மஹாளயம் ஸக்ருந் மஹாளாய ச்ராத்தம் என்று இரு வகைப்படும்.    பக்ஷ மஹாளய ச்ராத்தம் -  இந்த பாத்ரபத க்ருஷ்ண பக்ஷம் 15 நாட்களுடன் அடுத்த சுக்லபக்ஷ ப்ரதமையும் சேர்த்து 16 நாட்களிலும் அனுஸ்டிக்கப்படுவதாகும்.  இதை அன்ன தானமாகவோ — தரப்பணமாகவோ செய்யலாம்.  இப்பொழுதும் ஆஸ்திகர்கள் சிலர் அநுஷ்ட்டித்து வருகிறார்கள்.  இப்படி பக்ஷம் முழுவதும் செய்யப்படுவதால் இது பக்ஷ மஹாளயமாகும்.  இதில் திதிவார தோஷம் எதையும் பார்க்க வேண்டாம்.    *ஸக்ருந்மஹாளயம்*   இந்த மஹாளயபக்ஷத்தில் என்றேனும் ஒரு திதியில் ஒரு தடவை அநுஷ்ட்டிக்கப்படும் ச்ராத்தம் அல்லது தர்ப்பணம் ஸக்ருந்மஹாளயம் எனப்படும்.   இந்த ஸக்ருந்மஹாளய ச்ராத்தத்தை பஞ்சமீ முதற்க்கொண்டு செய்வது உசிதம்.  ஆனால் பஞ்சமிக்கு முன்னாள் மஹாபரணி வந்தால் அப்பொழுது மஹாளய ச்ராத்தத்தை செய்யலாம்.   இந்த ஸக்ருந்மஹாளய ச்ராத்தத்தை சதுர்த்தசி,  ப்ரதமை ஷஷ்டி,  ஏகாதசி ஆகிய திதிகளிலும்,  வெள்ளிக்கிழமையிலும்,  ரேவதி,  மகம்,  தன்னுடையதும்,  தன் பத்னீ- புத்ரன் இவர்களுடையவும் நக்ஷ்த்திரங்கள்,  ரோஹிணீ இவற்றிலும்,  பார்யை ரஜஸ்வலையாயிருக்கும் போதும்  செய்யக்கூடாது.   மாதாபிதாக்களின் ச்ராத்தம் வருகிற மாஸத்தில் ச்ராத்தத்திற்க்கு முன் மஹாளய தரப்பணம் பண்ணக்கூடாது.   இந்த மஹாளய தர்ப்பணத்தை அநுஷ்ட்டிக்கப்பவர் முதல் நாள் இரவு பலாஹாரம் செய்யவேண்டும்.   மஹாளயபக்ஷ தர்ப்பணத்தை (அமாவாஸ்யை தர்ப்பணத்தைப் போல்) இரண்டு வர்க்கங்களுக்கும் புக்நங்களுக்கிடையே மேலும் இரண்டு புக்நங்கள் காருண்ய பித்ருக்களுக்காக சேர்த்து ஆவாஹநாதிகளைப் பண்ணித் தர்ப்பிக்கவேண்டும்.  *Understanding Mahalaya paksham.*   21st September, 2021 Mahalaya Paksham begins  During the Mahalaya Paksham, our Pitrus are said to descend on earth to receive the Pindam and Tilodakam being given by their descendents.   When our Pitrus are here on the earth, our earth becomes a Maha Aalayam, a Great Temple for us. Hence the name Mahalayam.   Our Pitrus are said to arrive here with great expectations that their children would perform the Shradhas and they could receive Tilodakas.   So, it is very necessary for every son whose parents are not alive, to perform the Mahalaya Shradham without fail.  There are two types of mahalayam being observed .:  1. Paksha mahalayam 2. Sakrun mahalayam  *Paksha mahalayam*  for observing everyday of the entire mahalayam paksham (16 sraddhams - Krishna  Prathamai to Shukla Prathamai);  *Sakrun mahalayam*-  one day  sraddham or tarpanam. This is in addition to Mahalaya Amavasyai sraddham or tarpaNam.   *Restrictions*:1.  1. Sakrun Mahalaya sradham should be observed from Krishna Panchami thithi.   2. If a pitru sraddham falls within mahalayam, then mahalayam (sraddham)  can be observed only after performing the pitru sraddham. Mahalayam can be performed on the next day after the pitru sraddham.  3. For sakrun mahalayam (one day),  on Fridays, prathamai, sashti, chaturdasi, ekadasi tithis, Revati, makam nakshatrams, self -janma nakshatram, patni-janma nakshatram or son's-janma nakshatram days should not be observed.   4. For some reason, if mahalayam can not be observed in bhadrapada krishna paksham, there is time up to thula (aiyppasi) masam.  *Exceptions*: 1. For paksha mahalayam, the above days of tithi, vara and nakshatra dosha restrictions do not apply.  2. For sakrun mahalayam, Certain days in this period are considered important:   For example the day with bharani is called *Mahabharani*;   Krishna paksha ashtami called *Madhyashtami*; navami called *Vyatipadam*; Thrayodasi called *Gajachaayai*.  In these days (mahabharani, madhyashtami, vyatipadam or gajachayai), one should not be concerned about restricted vara, nakshatram or tithis dosham as above (under restrictions)  for sakrun mahalayam.  sakrun mahalaya sraddham can be observed from Panchami days, on Panchami, saptami, ashtami, navami, dasami,dwadasi, thrayodasi and also pita tithi (excluding pitru sraddham day within mahalayam).  Just like Amavasyai Tharpanam keep buknam for both vargam i.e Pithru as well as Mathru vargam. In between these two, keep extra buknam for Karunya Pithru and do Aavahanam and tharpanam accordingly.

ஏழுமலையான் பகுதி - ஆறு

ஏழுமலையான் பகுதி - ஆறு




தன் கணவருக்கு ஏற்பட்ட கஷ்டத்தை போக்குவதற்காக லக்ஷ்மி மகேஸ்வரனிடம் சென்றாள். தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடை அவரிடம் சொல்லி தனது அவசரம் காரணமாக திருமால் பூலோகம் சென்று ஒரு புளியமரத்தின் கீழ் அன்ன பானமின்றி தவமிருப்பது பற்றி எடுத்துச் சொன்னாள். மகேஸ்வரன் அவளது கஷ்டத்தை போக்குவதற்கு வாக்களித்தார். பிரம்மாவை வர வழைத்தார். பிரம்மனே! நாம் இருவரும் பசு, கன்றுவாக மாறி நாராயணனின் இருப்பிடத்திற்கு செல்ல வேண்டும். நம்மை லக்ஷ்மி சந்திரகிரி நாட்டின் அரசன் சோளராஜனுக்கு விற்று விடுவாள். நாம் அந்த நாட்டில் தவம் செய்து கொண்டிருக்கும் நாராயணனை தேடிச் சென்று அவரது பசி போக்க பாலூட்டுவோம் என்றார். லக்ஷ்மி மகிழ்ச்சி அடைந்தாள். இதன் பிறகு பிரம்மா பசுவின் வடிவையும், மகேஸ்வரன் கன்றுக் குட்டியின் வடிவையும் அடைந்தனர். லக்ஷ்மிதேவி அவற்றை மேய்ப்பவள் போல வேடமணிந்தாள். பசு, கன்றுகளை ஓட்டிக்கொண்டு சந்திரகிரிக்கு வந்து சேர்ந்தாள். அந்த பசுவும் கன்றும் அந்நாட்டு மக்களை கவர்ந்தன. இதுபோன்ற உயர்ந்த ஜாதி பசுவை நாங்கள் இதுவரை கண்டதில்லை. இதன் மடு மிகவும் பெரிதாக இருக்கிறது. ஒரு முறை பால் கறந்தால் உலகத்திற்கே போதும் என்கிற அளவிற்கு பெரிதாக மடு கொண்ட பசுவை அதிசயப்பிறவி என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. இது எங்கள் தேசத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் என்றே கருதுகிறோம். இந்த மாட்டுக்கு சொந்தக்காரி பேரழகு பொருந்தியவளாக இருக்கிறாள். லக்ஷ்மி கடாக்ஷம் இவள் முகத்தில் தாண்டவமாடுகிறது என்று புகழ்ந்து பேசினர். தங்கள் நாட்டிற்கு வந்திருக்கும் அதிசய பசு, கன்று பற்றிய தகவல் அரண்மனைக்கு சென்றது.

மன்னன் சோளராஜன் அவற்றை பார்க்க விரும்பினான். இதை எதிர்பார்த்து காத்திருந்த லக்ஷ்மி பிராட்டியார், பசுக்களை ஓட்டிக்கொண்டு அரண்மனைக்கு சென்றாள். மன்னன் அந்த பசுக்களை பற்றி விசாரித்தான். பெண்மணியே! உனது நாடு எது? எந்த நாட்டில் இது போன்ற உயர் ஜாதி பசுக்கள் இருக்கின்றன? இதன் சிறப்பம்சம் என்ன? தெளிவாகச் சொல் என கேட்டான். லக்ஷ்மி பிராட்டி அவனிடம் மன்னனே! இந்த பசுக்களுக்கு உணவிட சாதாரண மனிதர்களால் முடியாது. இவை மிக அதிகமாக சாப்பிடும். ஆனால் உணவிற்கேற்ற பாலை இந்த ஊருக்கே தரும். நீ அரண்மனைவாசி. உன்னால் இதை வளர்க்க முடியும். இந்த பசுக்களுக்கு தேவையான உணவை கொடுத்து வா. உன் நாடே வளமாகும், என தெரிவித்தாள். சோளராஜனுக்கும், அவனது மனைவிக்கும் அந்த பசுக்களை மிகவும் பிடித்து விட்டது. உலகத்திற்கே படியளக்கும் லக்ஷ்மி பிராட்டிக்கு பணம் கொடுத்து அந்த பசுக்களை வாங்கிக் கொண்டனர். அரண்மனை கொட்டிலில் அந்த பசுக்கள் அமைதியாக நின்றன. அவற்றை கட்டிப்போட வேண்டும் என்ற அவசியம் வரவில்லை. எந்தப் பிரச்னையும் செய்யாமல் சாப்பிட்டன. அதுவரை அப்படிப் பட்ட பசுக்களை பார்க்காத பராமரிப்பு ஊழியர்கள் ஆச்சர்யமும் ஆனந்தமும் கொண்டனர். சோளராஜன் தலைமை பசு பராமரிப்பாளரை அழைத்து சேவகனே! இந்த பசு கரக்கும் பாலை மட்டும் அரண்மனையில் ஒப்படைத்து விட வேண்டும். இதன் பால் தெய்வாம்சம் மிக்கது என இதை என்னிடம் விற்ற பெண்மணி சொல்லியிருக்கிறாள். இவற்றை வேங்கடாசல மலைக்கு அழைத்து சென்று மேயவிடு. மிகவும் கவனமாக பார்த்துக்கொள் என சொல்லி அனுப்பினான்.

பராமரிப்பாளர்கள் அந்த பசுக்களை வேங்கடாசல மலைக்கு ஓட்டிச் சென்றனர். சேவகர்கள் மதியவேளையில் ஓய்வெடுக்கும் நேரத்தில் அந்த பசுக்கள் மந்தையை விட்டு பிரிந்து மலையிலிருந்த புளியமரத்தின் அருகில் சென்றன. புற்றுக்குள் ஸ்ரீமந் நாராயணன் தவத்தில் இருந்தார். அவர் மீது அந்த பசு பாலை சொரிந்தது. திடுக்கிட்டு விழித்த நாராயணன் மேல் நோக்கி பார்த்தார். பால் வழிந்து கொண்டிருந்தது. வாய் திறந்து அந்த பாலை பருகினார். இப்படியாக தினமும் அந்த பசுக்கள் புற்றுக்கு சென்று அதனுள் அமர்ந்திருந்த ஹரிக்கு பாலை சொரிந்துவிட்டு வந்தன. மிகுந்த எதிர்பார்ப்புடன் வாங்கப்பட்ட பசு, பால் கொடுக்காததால் அரண்மனையில் பிரச்னை ஏற்பட்டது. இவற்றை விற்கவந்த பெண்மணி அரசனையே ஏமாற்றிவிட்டாளோ என்று பேசிக் கொண்டனர். மகாராணி பராமரிப்பாளனை அழைத்து இந்த மாடு பால் கொடுக்கிறதா? இல்லையா? ஒரு வேளை நீயே இந்த பாலை குடித்து விடுகிறாயா? உண்மையை சொல்லா விட்டால் உன் தலையை எடுத்து விடுவேன் என எச்சரித்தாள். அவன் பதறிப்போனான். மகாராணி! எல்லா பசுக்களையும் போல இதையும் திருவேங்கடமலைக்கு ஓட்டிச் செல்கிறேன். எங்கள் பார்வையில் தான் இந்த பசுக்கள் மேய்கின்றன. மடு மிகவும் பெரிதாக இருக்கிறது. ஆனால் கறந்தால் பால் வருவதில்லை. இது என்ன அதிசயம் என்று எங்களுக்கு புரியவில்லை. மாயப்பசுக்களாக இவை உள்ளன என்று சொல்லி அவளது காலில் விழுந்தான். மகாராணிக்கு அவனது பேச்சில் நம்பிக்கை வரவில்லை. பொய்யனே! உன் பேச்சை நான் நம்பமாட்டேன். மிகச்சிறிய கன்றை ஈன்றுள்ள இந்த பசுவிற்கு எப்படி பால் இல்லாமல் போகும்? இன்று ஒரு நாள் அவகாசம் தருகிறேன். நாளை முதல் எப்படியும் இந்த பசுவின் பால் அரண்மனைக்கு வந்தாக வேண்டும். இல்லா விட்டால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டி அனுப்பினாள்.

என்ன செய்வதென அறியாத பராமரிப்பாளன் மறுநாள் அந்த பசுவின் மீது ஒரு கண் வைக்க ஆரம்பித்தான். மதிய வேளையில் அவன் ஓய்வெடுக்கவில்லை. பசுக்கள் புற்றை நோக்கி சென்றன. பராமரிப்பாளன் பின்தொடர்ந்தான். புற்றின் அருகே சென்ற பசு, பால் சொரிய ஆரம்பித்தது. அவன் அதிர்ச்சியடைந்தான். கடும் கோபம் ஏற்பட்டது. தனது கையில் இருந்த தடியுடன் பசுவை அடிக்க பாய்ந்தான்.

தொடரும்....

வியாழன், 11 நவம்பர், 2021

ஏழுமலையான் பகுதி - ஐந்து

ஏழுமலையான் பகுதி - ஐந்து




லக்ஷ்மி ஒரு இடத்தில் இருக்கும் வரை தான் யாருக்குமே மதிப்பு... நம் வீட்டிலேயே எடுத்துக் கொள்வோமே! வேலைக்கு போகும் வரை மனைவி கணவனை கொண்டாடுவாள், பிள்ளைகள் ஒன்றாம் தேதியானால் சுற்றி சுற்றி வருவார்கள். வேலையில் இருந்து நின்ற பிறகு பென்ஷன் வாங்கினால் ஏதோ கொஞ்சம் மதிப்பிருக்கும். ஒன்று இல்லா விட்டால்... கண்டு கொள்வார் யார்?

லட்சுமி பிராட்டியார் பூலோகம் சென்று கொல்லாபுரத்தில் தங்கி விட்டதால் வைகுண்டத்தின் செல்வச்செழிப்பு அகன்றது. ஸ்ரீதேவி சென்று விட்டதால் தரித்திர தேவி உள்ளே புகுந்தாள். தேவர்களெல்லாம் கலங்கினார்கள். அவர்கள் திருமாலிடம், பெருமாளே! தாங்கள் லக்ஷ்மி தாயார் எங்கிருந்தாலும் கண்டு பிடித்து அவர்களைச் சமாதானம் செய்து மீண்டும் வைகுண்டம் அழைத்து வர வேண்டும். தேவலோகமே வறுமைக்கு ஆட்பட்டால் செல்வம் வேண்டி வணங்கும் நம் பக்தர்களுக்கு எப்படி வாரி வழங்குவது! உலக உயிர்களுக்கு படியளக்காவிட்டால் நமக்கு எப்படி மதிப்பிருக்கும்? என்றனர். திருமாலும், அவர்கள் முன்னால் நாடகமாட ஆரம்பித்து விட்டார்.

ஆமாம்... ஆமாம்... லக்ஷ்மி இங்கிருந்து செல்வதைத் தடுத்திருக்க வேண்டும். பிருகுவைக் கண்டித்திருந்தால் அவள் இங்கிருந்து சென்றிருப்பாளா? பின் விளைவுகளைப் பற்றி சிந்தியாமல் இருந்து விட்டேனே என வருத்தப்படுவது போல நடித்தவர் பூலோக சஞ்சாரத்துக்கு தயாராகி விட்டார். லக்ஷ்மி அங்கேயே இருந்திருந்தால் பூலோகத்தில் முனிவர்களின் கோரிக்கையை எப்படி நிறைவேற்ற முடியும்? கலியுகத்தில் நடக்கும் பாவங்களை எப்படி தடுக்க முடியும்? இந்தக் காரணத்தால் லக்ஷ்மிக்கு கோபம் வரச் செய்த திருமால் அவளுக்கு பூலோகம் செல்லும் மனநிலையை உண்டாக்கி விட்டு தானும் அங்கே செல்ல தயாரானார். தேவர்களே! லக்ஷ்மி எங்கிருந் தாலும் நான் அழைத்து வருகிறேன். அதுவரை பொறுமை காக்க வேண்டும் என்றவர் அவள் மறைந்திருக்கும் இடத்தை தேடியலைவது போல் பல இடங்களிலும் சுற்றினார்.

சீதையைப் பிரிந்த ஸ்ரீராமன் காட்டில் எப்படியெல்லாம் தேடியலைந்தாரோ! செடி, கொடிகளிடம் எல்லாம் என் சீதையைப் பார்த்தீர்களா! என்று கேட்டு புலம்பினாரோ அது போல திருமால் என் லக்ஷ்மியைப் பார்த்தீர்களா! என்று செடி, கொடிகளிடமெல்லாம் கேட்டுக் கொண்டே நடந்தார். எங்கு தேடியும் லக்ஷ்மி கிடைக்காமல் ஏழு மலைகளை உள்ளடக்கிய திருமலை என்னும் மலைக்கு வந்தார். அப்பகுதியில் ஆதிவராஹர் குடியிருந்தார். திருமால் எடுத்த அவதாரங்களில் பன்றி முகம் கொண்ட வராஹ அவதாரமும் ஒன்று. வராஹமாக அவதாரமெடுத்து பூமியைத் தோண்டி வேதங்களைக் கண்டெடுத்து பிரம்மாவிடம் ஒப்படைத்த பிறகு அதே வடிவில் திருமலையில் அவர் குடியிருந்தார். ஆதியில் தோன்றியவர் என்பதால், அவர் ஆதிவராஹர் எனப்பட்டார். இதனால், திருமலையில் அவர் தங்கியிருந்த இடமும் ஆதிவராஹ க்ஷேத்ரம் எனப்பட்டது. இந்த தலத்தை ஆதிவராஹ நரசிம்ம க்ஷேத்ரம் என்றும் அழைப்பர்.

நரசிம்மரும் இதே மலையை ஒட்டிய அஹோபிலத்தில் தன்அவதார காலத்தை முடித்து விட்டு தங்கியிருந்தார். திருப்பதி வெங்கடாசலபதியின் செல்வச்செழிப்புக்கு காரணமே இந்த நரசிம்மர் தான் என்ற கருத்தும் உண்டு. இங்கு வந்த திருமால் ஒரு புளியமரத்தில் இருந்த புற்றில் அமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்து விட்டார். திருமால் ஒருபுறம் லக்ஷ்மி ஒருபுறம் இருந்தால் உலக இயக்கம் என்னாகும்? இதை சரிசெய்ய எண்ணினார் கலக முனிவர் நாரதர். அவர் தன் தந்தையான பிரம்மாவிடம் சென்றார். தந்தையே! பிருகு முனிவர் செய்த சோதனையால் கோபமடைந்த லக்ஷ்மி தாயார் இப்போது கொல்லாபுரத்தில் இருக்கிறாள். திருமாலோ ஆதிவராஹ க்ஷேத்ரத்தில் தவத்தில் ஆழ்ந்து விட்டார். அவர் லக்ஷ்மியைக் காணாமல் அன்னம் கூட புசிப்பதில்லை. இப்படியே போனால் என்ன செய்வது? முதலில் திருமாலுக்கு அன்னம் புகட்ட வேண்டும். அதற்கு தாங்கள் தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். பிரம்மா உடனடியாக சிவபெருமானிடம் சென்றார். நடந்த விஷயத்தைச் சொன்னார். மேலும் பெருமானே! நாம் இருவரும் பசு, கன்று வேடத்தில் செல்வோம். அவருக்கு பால் புகட்டி வருவோம் என்று வேண்டுகோள் விடுத்தார். மைத்துனருக்கு ஒரு பிரச்னை என்றால் சிவனுக்கு பொறுக்குமா? இப்போதும் கூட கிராமங்களில் மைத்துனன் இருந்தால் மலையேறி பிழைக்கலாம் என்பார்கள். இதன் பொருள் தெரியுமா?மைத்துனரான திருமால் திருமலையில் இருக்கிறார். அவரது பசி போக்க கைலாயமலையில் இருக்கும் சிவன், திருமலையில் ஏறப்போகிறார்.

இதனிடையே நாரதர் பூலோகம் சென்று கொல்லாபுரத்தில் தவத்தில் இருந்த லக்ஷ்மி தாயாரைச் சந்தித்தார். நாராயணா என்ற திருநாமம் முழங்க வந்த அவரை லக்ஷ்மி வரவேற்றாள். தாயே! தாங்கள் சிறு பிரச்னைக்காக கோபித்துக் கொண்டு வந்து விட்டீர்கள். நீங்கள் இல்லாமல் திருமாலால் ஒரு கணமாவது வைகுண்டத்தில் இருக்க முடியுமா? அவர் உங்கள் மீது கொண்டுள்ள அன்பைக் குறைத்து மதிப்பிட்டு விட்டீர்களே! தாங்கள் அவரைப் பிரிந்த ஏக்கத்தால் அவர் மனம் பட்ட பாடு தெரியுமா? அவர் உங்களைத் தேடி காடுகள், மலைகள், குகைகளில் எல்லாம் அலைந்தார். எங்கும் கிடைக்காமல் இப்போது திருமலையிலுள்ள ஆதிவராஹ க்ஷேத்ரத்தில் தங்கியுள்ளார். தங்களை எண்ணி புலம்பி அலைந்த அவர் சாப்பாடு, உறக்கம் ஆகியவற்றை மறந்து தாங்கள் கிடைக்க வேண்டுமென்பதற்காக ஒரு புளியமர பொந்தில் தவத்தில் ஆழ்ந்து விட்டார். தாங்கள் அவரைக் காப்பாற்ற உடனடியாக கிளம்ப வேண்டும் என்றார். லட்சுமிக்கு பகீரென்றது. அவசரப்பட்டு விட்டோமே என வருந்திய அவள் திருமாலைக் காப்பாற்ற முயற்சி எடுத்தாள்.

தொடரும்...


நவபுலியூர் தரிசனம் ஏன் ?

நவபுலியூர் தரிசனம் ஏன் ?

1. பெரும்பற்றப்புலியூர்
2. திருப்பாதிரிப்புலியூர்
3. எருக்கத்தம்புலியூர்
4. ஓமாம்புலியூர்
5. சிறுபுலியூர்
6. அத்திப்புலியூர்
7. தப்பளாம்புலியூர்
8. பெரும்புலியூர்
9. கானாட்டம்புலியூர்
நவபுலியூர.:சில உண்மைகள்

தற்காலத்தி உள்ள பலருக்கும் ஆலய தரிசனம், ஆன்மீக வழிபாட்டு முறைகள் என்பதோ, அவற்றின் முக்கியத்துவம் என்ன, அல்லது அது எப்படி துவங்கியது என்ற விவரங்களோ தெரிந்திருக்க முடியாது. அதில் நவபுலியூர் யாத்திரையும் அடங்கும். பூர்வ ஜென்மங்களில் மற்றும் இந்த ஜென்மத்திலும் அறிந்தோ, அறியாமலோ செய்த பிழைகளினால் ஏற்பட்ட கர்மாக்களை தொலைத்துக் கொள்ள முன் ஒரு காலத்தில் இந்த யாத்திரையை பலரும் மேற்கொண்டு இருந்திருக்கின்றார்கள். முக்கியமாக வாழ்நாளின் இறுதி கட்ட நிலையில் வாழ்ந்திருந்த முதியோர்கள் தமக்கு பிறப்பு இறப்பில் இருந்து விடுதலை தரும் மோட்ஷ கதியை அடைய வேண்டும் என்பதற்காக இந்த யாத்திரையில் கலந்து கொண்டுள்ளார்கள்.

இப்படிப்பட்ட புனித யாத்திரையை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக *மஹரிஷி வியாக்ரபாதர்* மற்றும் *மஹரிஷி பதஞ்சலி* யும் மேற்கொண்டு உள்ளார்கள். மோட்ஷத்துக்கு செல்ல தடையாக இருக்கும் தமது பூர்வஜென்ம வினைப் பயன்களினால் ஏற்பட்ட கர்மாக்கள் விலக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் சிவபெருமானை துதித்தபடி பயணம் மேற்கொண்டார்கள். அப்படி பயணம் மேற்கொண்ட அந்த இரு மஹரிஷிகளுக்கு தரிசனமும் தந்து இந்த யாத்திரையின் மகத்துவத்தையும் சிவபெருமானே அவர்களுக்கு போதித்ததாகவும், அதன் மூலமே இந்த யாத்திரையின் மகத்துவம் வெளி உலகிற்கு தெரிய வந்தது என்பதாகவும் கூறுகின்றார்கள்.

வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி எனும் மஹரிஷிகள் சிவபெருமானின் முடிவற்ற பேரானந்தம் தரும் அற்புத நடனத்தைக் கண்டு களித்த பின் தமக்கு மோட்ஷமும் கிடைக்க அவர் அருள் புரிய வேண்டும் என்ற ஆவலில் சிதம்பரத்துக்கு சென்றபோது, நடன முடிவில் அவர்களுக்கு காட்சி தந்த சிவபெருமான் தான் ஸ்வயம்புவாக எழுந்துள்ள ஒன்பது தலங்களைக் குறித்து அவர்களுக்கு விளக்கிக் கூறிய பின் அந்த தலங்களுக்கு சென்று தம்மை வழிபட்ட பிறகு அவர்கள் *திருப்பட்டூரில் உள்ள பிரும்மதேவரை* வழிபட்ட பின் முடிவாக ஸ்ரீரங்கத்தில் *ஸ்ரீ ரங்கநாத பகவானாக எழுந்துள்ள விஷ்ணு பகவானையும்* தரிசனம் செய்ய வேண்டும் என்றும் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ ரங்கநாத பெருமானை தரிசனம் செய்த உடனேயே மோட்ஷத்துக்கு தடையாக இருக்கும் கர்ம வினைகளை தான் அகற்றுவேன் என்றும், அதன் பின், மும்மூர்த்திகளில் மோட்ஷத்திற்கு செல்ல அருள் தரும் சக்தியை கொண்டுள்ள ஸ்ரீ ரங்கநாத பெருமான் அவர்களுக்கு மோட்ஷம் கிடைக்க அருள் புரிவார் என்பதாகவும் கூறினாராம்.

நவபுலியூர் யாத்திரையில் முதலில் ஒன்பது சிவாலயங்களில் தரிசனம் செய்த பின்னரே பிரும்மதேவர் மற்றும் விஷ்ணுவை தரிசனம் செய்ய வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படைக் காரணம் என்ன? நவ என்றால் ஒன்பது என அர்த்தம். ஆகவே ஒன்பது என்பது சிவபெருமானின் ஒன்பது ஆலயங்களையும் அந்த ஒன்பது ஆலயங்களில் உள்ள ஒன்பது கிரகங்களின் நாயகர்களையும் (நவகிரகங்கள்) குறிக்கின்றதாகும். ஒவ்வொருவருடைய வாழ்க்கையின் சுக துக்கங்களை நிர்ணயிப்பது மூல தெய்வங்களின் சார்பாக செயல்படும் நவக்கிரகங்களின் தாக்கம்தான். ஆகவே இந்த ஒன்பது சிவாலயங்களில் அவருக்கு பணிவிடை செய்தபடி அமர்ந்துள்ள நவக்கிரகங்களுக்கு தம்மை தேடி வந்து பிரார்த்தனை செய்யும் மக்களின் கர்ம வினைகளை களையும் விசேஷ சக்திகளை சிவபெருமான் தந்துள்ளாராம்.

பூர்வ ஜென்மங்களிலும், வாழும் ஜென்மத்திலும் அவரவர் செய்த பாவ புண்ணிய பலன்களுக்கு ஏற்பவே கர்மவினைகள் ஒருவரை தாக்குகின்றன. அந்த கர்மாக்களின் அளவுக்கேற்ப தண்டனை தரும் சக்தி ஒவ்வொரு நவக்கிரக நாயகர்களுக்கும் தனித்தனியே தரப்பட்டு உள்ளது. ஒவ்வொருவருடைய வாழ்நாளிலும் குறிப்பிட்ட காலங்கள் நவக்கிரக நாயகர்களின் ஆட்சியில் இருக்கின்றன. என்னென்ன வினைப் பலன்களை அவர்களால் அழிக்க முடியும் என்ற விதிப்படி இயங்கும் வகையில் நவகிரகங்களின் சக்திகள் வரையுறுத்தப்பட்டு உள்ளன. ஆகவே ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அனுபவிக்க வேண்டிய கர்மவினைப் பலன்களை, தம்முடைய ஆட்சி காலத்தில் அவர்கள் இருக்கும்போது நவகிரக நாயகர்கள் நிறைவேற்றுகிறார்கள். இதனால்தான் கர்மவினைப் பலங்களினால் கஷ்ட நஷ்டங்களை அனுபவிப்பவர்கள் நவகிரக ஆலயங்களுக்கு சென்று நவகிரகங்களை வழிபட்டு அவர்களுடைய அருளை வேண்டி நிற்கிறார்கள்.

ஆலயங்களில் பொதுவாக நவகிரகங்கள் அனைத்தும், வெவ்வேறு திசைகளை நோக்கியபடி ஒரே பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும். அதே போல நவக்கிரகங்கள் அவற்றுக்கென நிர்மாணம் செய்யப்பட்டு உள்ள தனித்தனி ஆலயத்திலும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வொருவரின் வாழ்க்கையில் ஏற்படும் கர்மவினைகளின் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ள கிரகங்களுக்கு உரிய குறிப்பிட்ட தினங்களில் ஆலயங்களுக்கு சென்று நவகிரகங்களை பூஜித்து ஆராதிக்கின்றார்கள். ஆனால் அதே நவக்கிரங்களும் தம் பெற்று இருந்திருந்த சில சாபங்களை களைந்து கொள்ள சில பிரதான தெய்வங்களை ஆராதித்து சாப விமோசனம் பெற்றார்கள். அதனால் எந்த ஆலயத்தில் அவை சாப விமோசனம் பெற்றனவோ அங்குள்ள மூலவருக்கு பணிவிடை செய்தபடி அங்கும் அந்த நவகிரகங்கள் தங்கி உள்ளார்கள். அதனால் அந்த ஆலயங்களில் உள்ள மூலவர் தனக்கு பணி புரியும் அந்த நவகிரகங்களுக்கு கர்மவினைப் பலன்களை நீக்கும் மேலும் சில விசேஷ சக்திகளை தம்மிடம் உள்ள சக்தியில் இருந்து கொடுத்து அவற்றை தம்முடைய சார்ப்பில் நிறைவேற்றுமாறு கட்டளை இட்டு உள்ளார்கள். அதனால் அங்குள்ள நவக்கிரகங்களுக்கு கர்மாக்களை அகற்றும் விசேஷ சக்தி மற்ற ஆலயங்களில் அவை கொண்டுள்ள சக்திகளை விட அதிக அளவில் இருக்கும். நவபுலியூர் ஆலயங்களில் உள்ள நவகிரகங்களை குறிப்பிட்ட தினங்களில் மட்டுமே சென்று ஆராதித்து பூஜிக்க வேண்டியது இல்லை. தனி ஆராதனை முறைகளும் கிடையாது. அந்த ஆலயங்களில் சென்று மூலவரை வழிபட்ட பின் அங்குள்ள நவகிரகங்களை வழிபடும்போது அதுவரை அவர்களுக்கு சேர்ந்துள்ள அனைத்து கர்மாக்களையும் அங்கேயே அவை விலக்கி விடுகின்றன. இதனால்தான் நவபுலியூர் யாத்திரை மோட்ஷம் பெறுவதற்காக மட்டும் அமைந்து இருக்காமல் கர்ம வினைப் பலன்களை அகற்றும் தலங்களாகவும் உள்ளன என்பது தெளிவாகும்.

பண்டிதர்களின் கூற்றின்படி இந்த தத்துவ உண்மைகளை வெளிப்படுத்தவே ஒரு நாடகமாடி சிவபெருமான் வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி மகரிஷிகளை பூமியிலே பிறப்பு எடுக்க வைத்து, தான் ஸ்வயம்புவாக எழுந்து பல அவதார தோற்றங்களில் உள்ள அந்த ஒன்பது ஆலயங்களுக்கு சென்று தரிசிக்கும் வகையில் இந்த நவபுலியூர் யாத்திரையை மேற்கொள்ள வைத்து இருக்கின்றார் என்கின்றார்கள்.

இந்த நவபுலியூர் யாத்திரை 12 ஆம் நூற்றாண்டுவரை மிகப் பிரபலமான யாத்திரையாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் சைவ மற்றும் வைஷ்ணவ வழிபாடு என்ற பிரிவினை பேதத்தினால் இந்த யாத்திரை பெரும் அளவில் தடைப்படலாயிற்று என்றாலும், உண்மையை உணர்ந்திருந்த சிறு அளவிலான சைவ மற்றும் வைஷ்ணவ பக்தர்களால் தொடர்ந்து அந்த யாத்திரை கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது என்பதும் உண்மையே.

இந்த யாத்திரைக்கு செல்பவர்கள் பதஞ்சலி முனிவர் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். பாற்கடலில் பகவான் மஹாவிஷ்ணுவின் படுக்கையாக இருந்த தெய்வீக நாகமான ஆதிசேஷன் ஒருமுறை சிவபெருமானுடைய நாட்டியத்தைக் காண ஆசைப்பட்டு மகாவிஷ்ணுவிடம் தனது ஆசையை வெளிப்படுத்த மகாவிஷ்ணு அவரிடம் கூறினார் ‘ஆதிசேஷா நானே சிவபெருமானின் நடனக் காட்சியைக் கண்டு சொக்கிப் போய், அந்த ஆனந்தத்தை அடக்க முடியாமல் உம்மிடம் சிவபெருமானின் நடனத்தின் அற்புதத் தன்மையைக் குறித்துக் கூறினேன். அந்த மனநிறைவை, மன மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தையே இல்லை எனும்போது அதைக் கேட்கும் அனைவரும் அந்த நடனத்தைக் காண ஆசைப்படுவார்கள் என்பதிலும் ஐயம் இல்லை. ஆகவே என் மகிழ்ச்சியைக் கேட்ட பின் அதைப் பார்க்க உமக்கு ஆவல் ஏற்படுவதில் வியப்பில்லைதான். அதற்கு நான் தடையாக இருப்பது தவறு. ஆகவே நீயும் பூலோகம் சென்று தக்க நேரத்தில் பாதி மனிதன், பாதி நாகம் எனும் உருவத்தில் பதஞ்சலி எனும் உருவம் கொண்டு பிறந்து அந்த உருவில் யோகக் காலையில் வல்லுவனாக இருக்கும் வகையில் யோகக் கலையின் அனைத்து நுணுக்கங்களையும் பெற்றுக் கொண்ட பின் சிவபெருமானின் அற்புத நடனத்தையும் கண்டு களிப்பாய்” என ஆசிகளை வழங்கினார்.

விஷ்ணு பகவான் தொடர்ந்து கூறினார் “இப்போது நீ அதே பதஞ்சலி எனும் உருவம் கொண்டு நாகலோகத்துக்குப் போ. அதற்குள் ஒரு மலையும் அந்த மலைக்குள் ஒரு துவாரமும் உள்ளது. அந்த துவாரத்தின் வழியே நீ சென்றால் சிதம்பரத்தை (தில்லைவானம்) அடையலாம். அங்கு வியாக்ரபாத முனிவர் என்பவர் பேரந்தம் தரும் சிவபெருமானின் நடனக் காட்சியை காண வேண்டும் என்று சிவபெருமான் ஸ்வயம்புவாக எழுந்துள்ள சிவலிங்கத்துக்கு பூஜை செய்து கொண்டு உள்ளார். நீயும் அங்கு சென்று அவரோடு சேர்ந்து பூஜை செய்தால் சிவ தரிசனத்தை பெற்று அவரது நடனத்தையும் கண்டு களிக்க முடியும்”

அடுத்து விஷ்ணு பகவான் ஆதிசேஷனுக்கு ஆசிகளை அளித்து அவரை பூமியிலே பதஞ்சலியாக பிறப்பு எடுக்க அனுப்பி வைக்க அவரும் பதஞ்சலி மாமுனிவராக பிறப்பு எடுத்து வியாக்ரபாத மகரிஷியை சந்தித்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து சிவபெருமானை துதித்து தவம் இருந்து சிவபெருமானின் தரிசனத்தை பெற்று, அவரது ஆனந்த நடனத்தையும் கண்டு களித்த பின் முடிவில் சிவபெருமானிடம் இருந்து போதனைகளையும் பெற்றார்கள். அதன் முடிவில் அவர்கள் இருவரும் வாழ்வின் இறுதிக்கு கட்ட நிலையை அடைந்திருந்தார்கள். சிவபெருமான் அவர்களுக்கு கொடுத்து இருந்த போதனையின்படி அவர்கள் சிவபெருமான் ஸ்வயம்புவாக தோன்றி இருந்த அனைத்து ஆலயங்களுக்கும் சென்று தரிசனம் செய்த பின் முடிவாக மோட்ஷத்தையும் அடைந்தார்கள்.

அடுத்து வியாக்கியபாதர் யார் என்பதை தெரிந்து கொள்வோம். முன் ஒரு காலத்தில் மத்தியனதின முனிவர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் மனதில் சிவபெருமானைத் தவிர வேறு எந்த சிந்தனையே இல்லாமல் இருந்தவர் என்றாலும் விஷ்ணு பகவான் மீது ஆழ்ந்த பற்றுதலும் கொண்டிருந்தவர். ஒருநாள் அவரிடம் அவரது மகன் வியாக்ரபாத மகரிஷி வினைப்பயன்களில் இருந்து விடுதலை பெற்று மோட்ஷம் அடையும் வழிமுறையைக் கூறுமாறு வேண்டிக் கேட்டதும், மத்தியனதின முனிவர் அவரை தில்லைவனத்துக்கு சென்று தவம் இருந்து அங்கு சிவபெருமானை வணங்கி துதித்து வந்தால் அவர் அவருக்கு மோட்ஷம் கிடைக்க அருள் புரிவார் என்றும், அப்படி அவர் தோற்றம் தந்தால் பேரானந்தம் தரும் சிவபெருமானின் நடனத்தையும் காண அவருடைய அருளைக் கேட்டுப் பெறுமாறு அறிவுரை கொடுத்தார்.

அதுவரை பால முனிவர் என்ற பெயரில் இருந்த மகரிஷி வியாக்ரபாதரும் தந்தை கூறியபடி பல ஊர்கள் வழியே சென்று சிதம்பரத்தை அடைந்தார். தில்லைவனத்தை அடைந்தவர் சிவகங்கை எனும் குளத்தின் அருகே இருந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு அங்கு தானாகவே எழுந்திருந்த சிவலிங்கத்தை வணங்கி வரலானார். தில்லை எனும் பெயர் கொண்ட மரங்கள் சூழ்ந்த அடர்ந்த காடாக அது இருந்ததினால் அந்த ஊரின் பெயரும் தில்லைவனம் என்று ஆயிற்று.

அங்கிருந்த வனப் பகுதிக்குச் சென்று மரங்களிலும் ஏறி தினமும் பல பூக்களை பறித்து வந்து அந்த லிங்கங்களுக்கு பூஜை செய்து வந்தபோது, நாளடைவில் பூக்கள் கிடைப்பதும் அரிதாயிற்று. மரங்களில் ஏறினால் மரத்தின் முட்கள் அவ்ருடைய உடலில் குத்தி வேதனை செய்தன. அவர் மன உறுதி பெற்றிருந்தது போல இயற்கையை எதிர்த்து நிற்க அவருடைய உடல் உறுதி படவில்லை. மனதில் வேதனை அடைந்தார். சிவபக்தனின் மனக் குமுறலைக் கேட்ட சிவபெருமான் மனம் மகிழ்ந்து மரத்தின் மீது சிரமம் இன்றி ஏறி பூக்களைப் பறிக்க புலிக்கு உள்ளதை போன்ற கால் மற்றும் கண்களைக் கொடுத்து அருள் புரிந்தார். அதனால் வியாக்கிய என்றால் புலி என்றும் பாதர் என்றால் பாதத்தைக் கொண்டவர் என்றும் பொருள் தரும் வகையில் புலியைப் போன்ற உடல் அமைப்பைக் கொண்ட அவர் வியாக்ரபாதர் என்ற பெயரைப் பெற்றார்.

இப்படியாக வியாக்ரபாதர் தன்னுடன் பதஞ்சலி மஹரிஷியையும் அழைத்துக் கொண்டு சிவபெருமான் கூறியபடியே சிதம்பரத்தில் துவங்கி ஒன்பது சிவாலயங்களில் அவரை தரிசனம் செய்த பின் இறுதியாக திருப்பட்டூர் மற்றும் ஸ்ரீரங்கம் ஆலயங்களில் தரிசனம் செய்த பின் ஆத்ம சமாதி அடைந்து மோட்ஷத்தை அடைந்தார்கள். இதனால்தான் புலிக்கால் கொண்ட வியாக்ரபாதர் துதித்த ஒன்பது தலங்கள் நவபுலியூர் தலங்கள் என்ற பெயரை பெற்றன.
திருப்பட்டூர் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வியாக்ரபாதரின் சமாதி உள்ளது. அதை போல மகரிஷி பதஞ்சலியின் சமாதி பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் உள்ளது. திருப்பட்டூரில் பகவான் பிரும்மாவை வணங்கித் துதித்தப் பின் மகரிஷி பதஞ்சலியின் சமாதியில் வணங்கித் துதிக்க வேண்டும். அதன் பின் அங்கிருந்து கிளம்பி அருகிலேயே உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு சென்று அங்குள்ள மகரிஷி வியாக்ரபாதர் சமாதியிலும் வணங்கித் துதிக்க வேண்டும். கடைசியாக ஸ்ரீரங்கம் ஆலயத்துக்கு சென்று ஸ்ரீரங்கநாதரை வணங்கித் துதித்து மோட்ஷம் அளிக்குமாறு வேண்டிக் கொண்டு நேராக தம் வீட்டிற்கு சென்று விட வேண்டும். பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் சிவபெருமானிடம் இருந்து சாப விமோசனம் பெற்றார் பிரும்மதேவர். ஒருகாலத்தில் படைப்புத் தொழிலில் இருந்த பிரும்மா ஆணவத்துடன் நடந்து கொண்டபோது சிவபெருமான் அவருடைய படைப்புத் தொழிலை தடை செய்யும் வகையில் சாபம் தந்து விட்டார். இந்த ஆலயத்தில் சிவபெருமானை வணங்கித் துதித்து அந்த சாபத்தில் இருந்து விடுதலை பெற்ற பிரும்மாவுக்கு மீண்டும் படைக்கும் தொழில் கிடைத்தது என்பதினால் இந்த ஆலயத்தில் தமது ஜாதக புத்தகத்துடன் வந்து, அதை பிரும்மா மற்றும் சிவபெருமான் சன்னதியில் வைத்து பூஜை செய்தபின் எடுத்துச் சென்றால், அனைத்து பாபங்களும் விலகி மீண்டும் மகிழ்ச்சி நிறைந்த மறுவாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த யாத்திரையை மேற்கொள்ளும் பக்தர்கள் யாத்திரை காலத்தில் முடிந்த அளவு சைவ உணவருந்தி, முழு நம்பிக்கையுடன் பக்தியோடு யாத்திரையை மேற்கொண்டால் அனைத்து கர்மாக்களை விலகி மோட்ஷம் பெற வழி கிடைக்கும் என்பதாக நம்பிக்கை. நவபுலியூர் யாத்திரையை செய்து முடித்ததுமே வாழ்வில் புதிய பொலிவு ஏற்படுவதையும், குழந்தை செல்வம் இல்லாதவர்களுக்கு குழந்தை செல்வம் கிடைப்பதையும், நடைபெறாமல் தடைபட்டுக் கொண்டே உள்ள திருமணங்கள் எதிர்பாராத விதத்தில் நடப்பதையும், பணத் தட்டுப்பாடுகள் விலகுவதையும் பலரும் கண்கூடாக அனுபவித்து இருக்கின்றார்கள் என்பதில் இருந்தே இந்த யாத்திரையின் மகத்துவம் புரியும். நாம் இந்த யாத்திரையை மேற்கொள்ளும்போது நம்மை அறியாமலேயே நம்முடன் மகரிஷி வியாக்ரபாதர் மற்றும் மகரிஷி பதஞ்சலி எனும் இருவரும் நமக்கு வழிகாட்டும் விதத்தில் நம்முடன் பயணிக்கின்றார்களாம்.

துலா ஸ்நான ஸங்கல்பம்


துலா ஸ்நான ஸங்கல்பம்  அச்ச - ஸ்வச்ச - லஸத் - துகூலவஸனாம் பத்மாஸனாத்யாயினீம் ஹஸ்த - ந்யஸ்த - வராபயாப்ஜ - கலஸாம் ராகேந்து - கோடி - ப்ரபாம் பாஸ்வத் - பூஷண - கந்த - மால்ய - ருசிராம் சாரு - ப்ரஸன்னானனாம் ஸ்ரீகங்காதி - ஸமஸ்த - தீர்த்த - நிலயாம் த்யாயாமி காவேரிகாம்   காவேரீ ஸ்நான ஸங்கல்ப:  ஆசமனம்: அச்சுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:   கேசவா + தாமோதரா   ஶூக்லாம் + ஸாந்தயே, ஓம் பூ: + பூர்புவஸ்ஸுவரோம்   ததேவ லக்னம்  + அங்க்ரியுகம் ஸ்மராமி அபவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா, யஸ்மரேத் புண்டரீகாக்ஷம், ஸபாஹ்ய, அப்யந்தர: ஶூசி: மானஸம் வாசிகம், பாபம், கர்மணா, ஸமுபார்ஜிதம், ஶ்ரீராம, ஸ்மரணேனைவ, வ்யபோஹதி நஸம்ஸய: ஶ்ரீராம ராமராம திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம், விஷ்ணுரேவச யோகஶ்ச கரணஞ்சைவ ஸர்வம் விஷ்ணுமயம், ஜகத், ஶ்ரீகோவிந்த கோவிந்த, கோவிந்த அத்யஶ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய, அத்யப்ரும்மண: த்விதீய பரார்த்தே ஸ்வேத, வராஹகல்பே, வைவஸ்வத, மன்வந்தரே, அஷ்டாவிம்ஶதி, தமே, கலியுகே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரதவருஷே பரதகண்டேமேரோ: தக்ஷிணே பார்ஶ்வே ஶகாப்தே, அஸ்மின்வர்த்தமாணே, வ்யாபஹாரிகே, ப்ரபவாதி, ஷஷ்டி, ஸம்வத்ஸராணாம், மத்யே   ப்லவ நாம ஸம்வத்ஸரே த³க்ஷிணாயனே ஶரத்³ ருʼதௌ துலா மாஸே ஶுக்ல பக்ஷே அத்³ய அஷ்டம்யாம்ʼ ஶுப⁴திதௌ² ப்⁴ருʼகு³ வாஸர யுக்தாயாம்ʼ ஶ்ரவிஷ்டா நக்ஷத்ர யுக்தாயாம்ʼ வ்ருʼத்³தி⁴ நாம யோக³ யுக்தாயாம்ʼ ப⁴வ நாம கரண யுக்தாயாம்ʼ ஏவங்கு³ண விஶேஷண விஶிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமாணாயாம் அஷ்டம்யாம்ʼ ஶுப⁴திதௌ²  மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வார ஸ்ரீ பரமேஶ்வர ப்ரீத்யர்த்தம் பகவத: நாராயணஸ்ய பரமேஶ்வரஸ்ய அஶிந்த்யயா அபரிமிதயா ஶக்த்யா ப்ரியமானஸ்ய மஹாஜலௌகஸ்ய மத்யே பரிப்ரமதாம் அநேக கோடி ப்ருஹ்மாண்டானாம் ஏகதமே ஶதுர்தஶ புவனாந்தர்கதே பூமண்டலே ஸப்தத்வீபமத்யே ஜம்பூத்வீபே நவவர்ஷமத்யே பாரதவர்ஷே நவகண்டமத்யே பரதகண்டே ஹிமாசல - கைலாஸ - விந்த்யாசலாதி - அநேகபுண்யஶைல - ஶிகரிதே தண்டகாரண்ய - விந்த்யாரண்ய - வேதாரண்யாதி - அநேகபுண்யாரண்ய - வனஸ்ரீ - பாஸ்வரே அஸ்மின் பாரததேஶே   த்ரிராத்ரம் ஜாஹ்னவீதீரே பஞ்சராத்ரம் து யாமுனே  ஸத்ய: புனாதி காவேரீ பாபம் ஆ- மரணாந்திகம்   இதி ப்ரஸ்தாயாம் ஸ்ரீவைகுண்ட - ரூபாந்தர - ஸ்ரீரங்க - க்ஷேத்ர - மண்டிதாயாம்.  ஏவமாதிபஹுகுணவிசேஷணவிசிஷ்டாயாம் அஸ்யாம் காவேரீ மஹாநத்யாம் ஸமஸ்த ஹரிஹர தேவதா குருசரண ஶ்ரோத்ரிய ஸந்நிதௌ ப்ரஹ்மண த்விதீயபரார்தே பஞ்சாசத் அப்ததௌ ப்ரதமே வர்ஷே ப்ரதமே மாஸே ப்ரதமே பக்ஷே ப்ரதமே திவஸே அக்னி த்விதீயே யாமே த்ருதீயே முஹுர்த்தே ஸப்தமே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதிதமே கலியுகே ப்ரதமே பாதே அஸ்மின் வர்த்தமாணே வ்யாபஹாரிகாணாம் ப்ரபவாதீனாம் ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே நாமஸம்வத்ஸரே அயனே ருதௌ மாஸே பக்ஷே ஶுபதிதௌ வாஸர யுக்தாயாம் நக்ஷத்ர யுக்தாயாம் யோக கரண யுக்தாயாம் அஸ்யாம் ஶுபதிதௌ துலாகதே தேவகுரௌ புஷ்கர புண்யகாலே அஸ்மாகம் ஸர்வேஷாம் க்ஷேம - ஸ்தைர்ய - வீர்ய - விஜய - ஆயு: - ஆரோக்ய - ஐஸ்வர்யாணாம் அபிவ்ருத்த்யர்த்தம் தர்ம அர்த காம மோக்ஷ ரூப சதுர்வித பல புருஷார்த்த ஸித்யர்த்தம் இஷ்ட காம்யார்த ஸித்யர்த்தம் பகவதோ ப்ருஹஸ்பதே: புண்யகால ப்ரயோஜக சங்கரமண கர்த்து: தேவானாம் ச ருஷீணாம் ச குரும் காஞ்சன ஸந்நிபம் புத்திபூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்  இதி ப்ரணுதஸ்ய பூஜாம் ததனு யதாசக்தி விஹிதானி தானானி அன்யானி ச தர்மகார்யாணி யதாஸம்பவம் கரிஷ்யே

புதன், 10 நவம்பர், 2021

ஏழுமலையான் பகுதி - நான்கு

ஏழுமலையான் பகுதி - நான்கு

பகவானின் மார்பில் எட்டி உதைத்தார் பிருகு. மஹா லட்சுமி எங்கிருக்கிறாள்? பெருமாளின் மார்பிலே இருக்கிறாள். தந்தையை மிதித்தது கூட மன்னிக்கத் தகுந்த குற்றம், இங்கே தாயார் மிதி பட்டிருக்கிறாள். அவளை மிதித்தது கொடிய பாவம். தாயை அவமதிப்பவனுக்கு நிச்சயம் தண்டனை உண்டு. இங்கோ அவளை மிதிக்கவே செய்திருக்கிறார் பிருகு. அவருக்கு கண் போய் விட்டது.

ஐயையோ! அப்படியானால் எல்லாருமே கோபக்கார தெய்வங்கள் தானே! கண்ணைப் பறித்துக் கொண்டாரே பெருமாள் என எண்ணி விடாதீர்கள். பெருமாள் முகத்திலுள்ள கண்ணைப் பறிக்கவில்லை. பிருகுவுக்கு கால்களில் கண்கள் உண்டு. அது ஞானக்கண். அதன் மூலம், எதிர்காலத்தில் பிறருக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை அவர் கணித்துச் சொல்லி விடுவார். இதனால் எல்லார் ஜாதகமும் தன் கையில் என்ற மமதை தான் பிருகுவின் இந்த ஆர்ப்பாட்டங்களுக் கெல்லாம் காரணம். ஆனால் எல்லார் எதிர்காலத்தையும் தெரிந்து வைத்திருந்த அவர் தன்னைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் விட்டது தான் இப்போது இந்த அவலத்துக்கு காரணம்.

ஞானக்கண் இருப்பதால் தானே பிருகு ஆட்டம் போடுகிறான். பெற்ற தாய்க்கு சமமான, உலகத்துக்கே படியளக்கிற லட்சுமி தாயாரை எட்டி உதைத்தானே! இவனுக்கு எதற்கு ஞானக்கண்! மற்றவர்கள் சொன்னார்களே என்பதற்காக தெய்வங்களை இவன் சோதித்ததற்குப் பதிலாக அவர்களில் எல்லாரையும் இறைஞ்சி யார் முதலில் வருகிறாரோ அவருக்கு யாகபலனைக் கொடுப்போம் என்று முடிவெடுத்திருந்தால் இவன் ஞானி! பதிலுக்கு ஆணவத்தால் அறிவிழந்த இவனுக்கு இதுவே தக்க தண்டனை எனக்கருதி  பெருமாள் பிருகுவின் காலிலுள்ள கண்ணை அவர் அறியாமலேயே பறித்து விட்டார். ஆனால் ஏதும் அறியாதவர் போல் சயனத்தில் இருந்படியே முனிவரே! மன்னிக்க வேண்டும். தாங்கள் இங்கு வந்ததை நான் கவனிக்கவில்லை. ஐயோ! தங்கள் திருப்பாதங்கள் என்னை மிதித்த போது என் மீதுள்ள ஆபரணங்களால் தங்கள் கால்களில் காயம் ஏதும் ஏற்பட்டதா? அமருங்கள், அமருங்கள் எனது மஞ்சத்தில் அமரும் தகுதி தங்களுக்குண்டு. தாங்கள் வந்த விபரம் பற்றி தெளிவாகச் சொல்லுங்கள். ஆவன செய்கிறேன் என்று ஆறுதல் மொழி சொன்னார்.

பிருகுவுக்கே என்னவோ போல் ஆகிவிட்டது. ஆஹா... இவரல்லவோ பொறுமையின் திலகம். இவரை எட்டி உதைத்து விட்டோமே! பதிலுக்கு இவரை யாகபலனை வாங்க வரும்படி யாசித்திருக்கலாமே! என நினைத்த போது கண்ணைப் பிடுங்கிய இடத்தில் வலிக்க ஆரம்பித்தது. அவர் அம்மா... அப்பா... எனக் கதறினார். அதே நேரம்  இறைவனை மிதித்ததற்காக தனக்கு இந்த தண்டனையும் தேவை தான் என்றபடியே லட்சுமி நரசிம்மரை துதிக்க ஆரம்பித்தார். மனிதனுக்கு ஒரு கஷ்டம் வந்து விட்டால் உடனே லட்சுமி நரசிம்மரை பிடித்துக் கொள்ள வேண்டும். அவரை நினைத்து லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே எனச் சொன்னால் கஷ்டம் பறந்தோடி விடும். தன் பக்தன் பிரகலாதானுக்கு ஒரு கஷ்டம் என்றவுடன் எங்கும் பரவிநின்ற அவர், அவன் குறிப்பிட்ட தூணில் இருந்து வெளிப்பட்டு பாதுகாத்தவர்.

அப்படிப்பட்ட கருணாமூர்த்தி தன் கண்ணெதிரில் சயனித்திருக்க  லட்சுமி நாராயணான அவரை லட்சுமி நரசிம்மராகக் கருதிய பிருகு  லட்சுமி நரசிம்மா! அறியாமல் செய்த தவறுக்கு என்னை மன்னிக்க வேண்டும் என்றார். மஹா விஷ்ணு அவரிடம் சமாதானமாக, கவலை வேண்டாம் முனிவரே! பக்தனின் பாதம் பட நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தங்கள் பிரச்னையைச் சொல்லுங்கள், என்றார். பிருகுவும் யாகபலனை பெற பூலோகம் வரவேண்டும் என்று சொல்ல அவ்வாறே ஆகட்டும் என பெருமாள் அருள் பாலித்தார். பிருகு புறப்பட்டார். மஹா லட்சுமிக்கோ கடும் கோபம். இங்கே என்ன நடக்கிறது? இந்த முனிவர் என்னை எட்டி உதைக்கிறார்? நீங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறீர்களே! [முனிவரின் கண்ணைப் பறித்தது லட்சுமிக்கு தெரியாது] இவரை இதற்குள் அழித்திருக்க வேண்டாமா? நம்பி வந்த மனைவியைக் காப்பாற்றுவது கணவனின் கடமை. இந்த தர்மத்தைக் கடைபிடிக்காத உங்களுடன் வாழ எனக்கு விருப்பமில்லை. நான் பூலோகம் செல்கிறேன். என்னை அங்கு வந்து பாருங்கள் என்று சொல்லி விட்டு சயனத்தில் இருந்து எழுந்து வேகமாக எழுந்தாள் லட்சுமி தாயார்.

பகவான் அவளைச் சமாதானம் செய்தார். லட்சுமி! பொறுமைக்கு இலக்கணமான பெண்களுக்கு கோபம் வரக்கூடாது. பிருகு யார்? நம் பக்தன்! பக்தர்கள் நமது குழந்தைகள். பல குழந்தைகளை பூமிக்கு அனுப்பினோம். சிலர் நம்மை வணங்குகிறார்கள், சிலர் தூஷிக்கிறார்கள். நம்மை தூஷிக்கிற குழந்தைகளுக்கு தான் நாம் ஏராளமான செல்வத்தைக் கொடுக்கிறோம் அவர்களையும் கருணையுடன் பார்க்கிறோம். காரணம் என்ன! அவன் தூஷணையை கை விட்டு நற்கதிக்கு திரும்ப வேண்டுமே என்பதற்காகத் தான்! பிருகு ஒரு சோதனைக்காகவே இங்கு வந்தான்.

அந்த சோதனையில் வெற்றி பெற நான் அவனுக்கு உதவினேன். நீயும் அவனை ஆசிர்வதிக்காமல் விட்டு விட்டாயே என்றார். லட்சுமி அவரிடம் தாங்கள் சொல்லும் சமாதானத்தை ஏற்க முடியாது. கணவனிடம் என்று பாதுகாப்பு கிடைக்கவில்லை என ஒரு பெண் உணர்கிறாளோ, அதன் பின் அவனை நம்பிப் பயனில்லை. நான் தங்களை விட்டுப் பிரிகிறேன். மேலும் நீர் சந்தர்ப்பவாதி எந்த விஷயமாக இருந்தாலும் சமாதானம் கூறி மாயம் செய்து தப்பித்து விடுவீர்! என்னை அவமதித்த பிருகுவைத் தண்டித்தே தீருவேன் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

பூலோகத்திலுள்ள ஒரு புண்ணியத்தலத்துக்கு வந்தாள். ஊரின் பெயரிலேயே பேரழகு.... ஆம்... அவ்வூரின் பெயரிலேயே ஜீவகாருண்யம் இருந்தது... அதுதான் கொல்லாபுரம்.

தொடரும்....


ஏழுமலையான் பகுதி - மூன்று

ஏழுமலையான் பகுதி - மூன்று

பிருகு முனிவர் சத்யலோகம் சென்ற போது அங்கே அன்னை சரஸ்வதியுடன் உரையாடிக் கொண்டிருந்தார் பிரம்மா. அனர்கள் வெள்ளை பொற்றாமரை சிம்மாசனத்தில் வீற்றிருந்தனர். அங்கே ஏராளமான மகரிஷிகள் அமர்ந்திருந்தனர். தேவரிஷிகள், பிரம்மரிஷிகளும் அவர்களில் அடக்கம். அனைவரும் வேதத்தின் பொருளை பிரம்மா மூலம் கேட்டுக் கொண்டிருந்தனர். பிருகு முனிவர் சோதிக்க வந்த வரல்லவா! பிரம்மாவுக்கு கோபமூட்டினாலும், தன்னை வரவேற்கிறாரா அல்லது எடுத்தெறிந்து பேசுகிறாரா என பரீட்சை வைக்கும் பொருட்டு, பிரம்மாவுக்கும், சரஸ்வதிக்கும் சம்பிரதாயத்துக்காக வணக்கம் கூட தெரிவிக்காமல் அங்கிருந்த ஆசனத்தில் மிகவும் கர்வத்துடன் அமர்ந்து கால்மேல் கால் போட்டுக் கொண்டார்.

பிரம்மாவுக்கு கோபம் இந்த பிருகு வந்தான், ஒரு வணக்கம் கூட சொல்லவில்லை எனக்குத்தான் சொல்ல வேண்டும், இங்கே அவனை விட உயர்ந்த விஸ்வாமித்திரர், வசிஷ்டர் போன்ற பிரம்மரிஷிகளெல்லாம் வீற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு சொல்லியிருக்கலாம். இவனது வாய் பேசுவதற்கு காரணமான சரஸ்வதிக்கு சொல்லியிருக்கலாம். இவனை ஒரு கை பார்த்து விட வேண்டியது தான் என்றெண்ணியவராய், முகத்தில் கடும் கோபத்தைத் தேக்கி, ஏ பிருகு! என் வம்சத்தில் பிறந்த நீ, பிறருக்கு மரியாதை செய்வது என்ற சாதாரண தர்மத்தைக் கூட பின் பற்றவில்லை. இப்படிப்பட்ட, உன்னால் மற்ற உயர்ந்த தர்மங்களை எப்படி காப்பாற்ற முடியும்? இங்கே இருக்கும் விஸ்வாமித்திரர், வசிஷ்டர் போன்றவர்களெல்லாம் நாராயணனையே வழி நடத்தியவர்கள். இதோ இருக்கிறாரே! அத்திரி! அவர் மும்மூர்த்திகளையும் குழந்தையாக்கிய பெருமையை உடையவர். இதோ இருக்கிறாரே! ஜமதக்னி! அவருடைய மகனாக பெருமாளே அவதரித்தார். பரசுராமராக இருந்து இவரது உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, பெற்றவளையே வெட்டித்தள்ளினார். இதோ இங்கே பவ்யமாக அமர்ந் திருக்கிறாரே, கவுதமர்! அவரது மனைவியை இழிவுபடுத்திய காரணத்துக்காக இந்திரனுக்கே சாபமிட்டவர்... இப்படிப் பட்ட உயர்ந்தவர்கள் முன்னால் நீ கொசுவுக்கு சமமானவன். அப்படியிருந்தும் இந்த சபையை அவமதித்தாய் என்று சத்தமாகப் பேசினார். பிருகுவுக்கு வந்த வேலை முடிந்து விட்டது. ஆனாலும் அவர் பிரம்மனுக்கு ஒரு சாபத்தைக் கொடுத்தார். நான் முனிவனாயினும் மனிதன், நீயோ தெய்வம்.. அதிலும் படைப்பவன், உனக்கு பொறுமை இல்லை. நான் ஒரு தேர்வுக்காக இங்கு வந்தேன், அந்தத் தேர்வில் நீ தோற்றாய் வருகிறேன் என்று கிளம்பினார்.

அடுத்து அவர், சிவலோகத்தை அடைந்தார். அங்கே நந்தீஸ்வரர் வாசலில் நின்றார். சிவபெருமான் தன் மனைவி பார்வதியுடன் தனித்திருந்தார். வாசலில் பூதங்களும், துவார பாலர்களான காவலர்களும் பாதுகாத்து நின்றனர். நந்திதேவர் வாசலை மறித்துக் கொண்டிருந்தார். பிருகுவோ இவர்கள் யாரையும் மதிக்கவில்லை. அங்கே நடந்த தியான வைபவத்தை பார்வையிட்டபடியே அத்துமீறி புகுந்தார். நந்தியிடமோ, பிற காவலர்களிடமோ அனுமதி பெறவில்லை. சிவன் கோபத்தின் பிறப் பிடமல்லவா! தாங்கள் தனித்திருந்த போது உள்ளே நுழைந்த பிருகுவிடம் நீ பிரம்ம வம்சத்தில் பிறந்திருந்தும் தர்மங்களை அறியாமல் உள்ளே வந்து விட்டாய். தம்பதியர் தனித்திருக்கும் போது அங்கே செல்லக்கூடாது என்ற எளிய தர்மம் கூட புரியாத உனக்கு தபஸ்வி என்ற பட்டம் எதற்கு? இதோ! உன்னைக் கொன்று விடுகிறேன் என்றவராய் திரிசூலத்தை எடுத்தார். ஆனால்  அன்னை பார்வதி சிவனைத் தடுத்து விட்டார். நாம் தனித்திருக்கும் வேளையில் நம் பிள்ளை தெரியாமல் வந்து விட்டது. உலக உயிர்கள் அனைத்துமே நம் பிள்ளைகள் தானே! அதிலும் பிருகு தவத்தால் உயர்ந்தவன். எந்நேரமும் இறைநாமம் சொல்பவன். அவன் தெரியாமல் ஏதோ செய்து விட்டான் என்பதற்காக இப்படி சூலத்தை ஓங்குகிறீர்களே என்று பிருகுவுக்கு சாதகமாகப் பேசினாள். ஆனாலும் பிருகு இந்த சமாதானத்தைக் கண்டு கொள்ளவில்லை. அவர் வந்த வேலை முடிந்து விட்டது. கோபப்படுவது போல் நடித்து அங்கிருந்து வைகுண்டம் சென்றார்.

ஹரி ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரம் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. அன்னை மஹாலட்சுமியின் கடாட்சத்தால் எங்கும் நவரத்தினங்களின் ஒளி வெள்ளம் பாய்ந்தது. அது ஒரு அருமையான நகரம். அந்த நகரத்தில் மாளிகைகளெல்லாம் தங்கத்தால் எழுப்பப் பட்டிருந்தன. வைகுண்டத்திலுள்ள ஒரு அரண்மனையில் மஹா விஷ்ணு துயிலில் இருந்தார். மஹாலட்சுமி அவரது திருவடிகளைப் பிடித்துக் கொண்டிருந்தாள். பிருகு வந்தது மஹா விஷ்ணுவுக்கு தெரியும். ஆனாலும் அவன் மாயவன் ஆயிற்றே! எந்த பரீட்சை வைத்தாலும் தேறி விடுவானே! படிக்கிற குழந்தைகள் மஹா விஷ்ணுவை தினமும் வணங்க வேண்டும். அவர் கல்வியின் அதிபதியான ஹயக்ரீவராகத் திகழ்கிறார். ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மகே என்ற ஸ்லோகத்தை தினமும் சொன்ன பிறகு  கேசவா... கேசவா... கேசவா என ஏழு தடவைகள் தொடர்ச்சியாக சொன்ன பிறகு கல்விக்கூடத்துக்கு கிளம்பும் குழந்தைகள் மிகப்பெரிய தேர்ச்சி பெறுவார்கள். பெருமாள் கோயிலுக்குப் போனால் முதலில் தாயாரை வணங்க வேண்டும். அப்படி அல்லாமல் நேராகப் பெருமாளை போய் வணங்கினால் கோரிக்கை அவ்வளவு எளிதில் நிறைவேறாது. பிருகுவோ மஹாலட்சுமியைக் கண்டு கொள்ளவே இல்லை. அது மட்டுமல்ல! ஏ நாராயணா! பிரம்மலோகத் துக்கும், சிவலோகத்துக்கும் போய் அவமானப்பட்டு உன் லோகம் வந்தேன். நீயோ எழக்கூட இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கிறாய். பக்தனின் கோரிக்கைகளை கவனிக்காமல் இப்படி உறங்கினால் உலகம் என்னாவது? எழுந்திரு  என கத்தினார். மஹா விஷ்ணு அது காதில் விழாதது போல் இருந்தார். எல்லாரும் பகவானின் திருவடி தன் மீது படாதா என நினைப்பார்கள். இங்கே பகவானோ பக்தனின் திருவடி தன் மீது படாதா என காத்திருந்தார். இதோ! அது பட்டுவிட்டது.

தொடரும்