திங்கள், 7 டிசம்பர், 2020

பிருது

பிருது

மதர்மராஜனின் மகள் சுனிதா, அவள் கணவன் அங்கா, இவர்களின் புதல்வன்தான் வேனா, எமதர்மராஜனின் பேரனான இவன் தர்மத்தை அழித்து வாழும் அரக்கனாக இருந்தான். அவன் இப்பூவுலகின் மன்னனானதும் அவனது மமதையும் அகங்காரமும் மேலோங்கி நின்றன. தர்மத்தின் காவலனான எமதர்மராஜனின் பேரன் என்பதை மறந்து, அதர்மத்தையே தனது லட்சியமாகக் கொண்டு கொடுங்கோல் ஆட்சி புரிந்தான் அவன். தேவர்களையும் மகரிஷிகளையும், நல்லவர்களையும் விரோதியாகக் கருதி அவர்களை அடக்கி, அழித்தொழிக்கும் செயல்களில் ஈடுபட்டான். தானே முழுமுதற் கடவுள் என்று பிரகடனம் செய்தான். முனிவர்கள் செய்யும் யாகங்களில் தனக்கே முதல் ஆஹுதி தர வேண்டும் எனக் கட்டளையிட்டான். அவ்வாறு செய்ய மறுத்த முனிவர்களின் யாகங்களை அழித்து, அவர்களைத் துன்புறுத்தினான்.வேனாவின் கொடுங்கோல் ஆட்சியில் பெரிதும் பாதிக்கப்பட்டது பூமியும் அதன் இயற்கைச் செல்வங்களும்தான்! வேனாவின் கொடுமைகள் எல்லை மீறியதால் இயற்கை அழிந்துகொண்டிருப்பதைச் சகிக்கமுடியாத பூமாதேவி. தான் படைத்த செல்வங்கள் எல்லாவற்றையும் திருப்பி எடுத்துக்கொண்டு தன்னுள் அடக்கிக் கொண்டாள். ஒரு பசு வடிவம் எடுத்து,அண்ட சராசரங்களில் எங்கோ மறைந்துகொண்டாள். வேனாவின் பூமி எந்தவித இயற்கைச் செல்வங்களும் இன்றி வறண்டு காட்சி தந்தது. பூமியில் தண்ணீர் இல்லை. தாவரங்கள் இல்லை; பசுமை மறைந்தது. நோயும் வறுமையும் மக்களைச் சூழ்ந்துகொண்டன. இந்த நிலையைப் போக்கி, பூமியை வளம் பெறச் செய்ய, மகரிஷிகள் யாகங்கள் செய்தனர். முப்பெரும் தேவர்களைக் நோக்கி தவம் இருந்தனர். முடிந்தவரை பொறுமையாக வேனாவுக்கு அறிவுரை கூறினர். ஆனால், வேனா எவரையும் மதிக்கவில்லை. நல்லோர் உபதேசங்களைக் காதில் வாங்கவில்லை. முப்பெரும் தேவர்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரைப் பற்றி இழிவாகப் பேசினான். எல்லா மக்களும் மற்ற கடவுள்களை வழிபடுவதை நிறுத்திவிட்டுத் தனக்கே பூஜை செய்ய வேண்டுமென ஆணையிட்டான்.

பொறுமையைக் கடைப்பிடித்து பூமியைக் காக்க தவம் செய்து வந்த சப்த ரிஷிகளும் வேனாவின் கொடும் செயல்களால் கோபம் அடைந்தனர். தர்ப்பை எனும் புனிதமான புல்லைக் கையிலெடுத்து மந்திரங்கள் ஓதி, அந்த தர்ப்பையையே அஸ்திரமாக்கி, வேனா மீது ஏவினர். எமதர்மராஜனும் தன் பேரனை அழித்து பூவுலகைக் காப்பதே தர்மம் எனக் கருதி, தன் பாசக்கயிற்றை வேனா மீது வீசினான். வேனா மடிந்து தரையில் வீழ்ந்தான். தேவர்களும், மகரிஷிகளும் வேனாவின் உடலிலிருந்து அவனது தீய சக்திகள் அனைத்தையும் நீக்கி அழிக்க முடிவு செய்தனர். அதேநேரம், அவனுள் இருந்த சில நல்ல சக்திகளை மட்டும் திரட்டி, அவனுக்கு வாரிசாக ஒரு மகனை உருவாக்கவும் முடிவு செய்தனர். முதலில் அவர்கள், வேனாவின் இறந்த உடலின் தொடையைப் பிளந்து, அதிலிருந்து ஓர் எலும்பால் அந்தத் தொடையைக் கடைந்தனர். அப்போது அவலட்சணமான முகத்துடன், கறுப்பான நிறத்தில், குள்ளமான ஓர் உருவம் தோன்றியது. அந்த உருவம், தான் என்ன செய்ய வேண்டும் என்று மகரிஷிகளைக் கேட்டது. அதற்கு அவர்கள் நிஷாத என்று கூறினர். நீ எதுவும் செய்ய வேண்டாம் சும்மா இரு என்பது அதன் பொருள்.
தீமைகளும் தீய சக்திகளும் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து அழிந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வாறு கூறினர் ரிஷிகள். அந்த உருவத்துக்கு நிஷாதன் என்று பெயர் சூட்டி, விந்திய பர்வதத்தில் அமர்த்தினர். அங்கே வேனாவைச் சூழ்ந்திருந்த தீய சக்திகள் மெதுவாகத் தேய்ந்து மண்ணோடு மண்ணாக மறைந்தன. அதன்பின், வேனாவின் உடலிலிருந்து அவனது நல்ல சக்திகளைப் பெற்று உலகுக்குப் பயன்படுத்தும் முயற்சியை மேற்கொண்டனர் மகரிஷிகள். அவர்கள் வேனாவின் உடலின் வலது கையைப் பிளந்து கடைந்தபோது, அதிலிருந்து அற்புதமான தேஜஸுடன் நல்ல சக்திகளின் பிரதிநிதியாக ஒரு மனிதன் தோன்றினான். அவனுக்கு பிருது எனப்பெயர் சூட்டினர். பிருது வேறு யாருமல்ல; பூவுலகை அழிவிலிருந்து காக்க ஸ்ரீமகாவிஷ்ணுவே பிருதுவாக அவதரித்தார். பிருது தோன்றியபோது விண்ணிலிருந்து அஜகரா எனும் அற்புத சக்திவாய்ந்த வில்லும், சில அம்புகளும் பூமியில் விழுந்தன. நல்லாட்சி நடத்தத் தோன்றியிருந்த பிருதுவுக்கு, தீமைகளை அழிக்க உதவுவதற்காக அந்த ஆயுதங்கள் தேவர்களால் அளிக்கப்பட்டன.

அந்தத் தருணத்தில் பிரம்மா தோன்றினார் ஆங்கீரஸ் மகரிஷியின் வேண்டுகோளுக்கிணங்க பிரம்மாவே பிருதுவுக்கு முடிசூட்டினார். மன்னனாகப் பொறுப்பேற்ற பிருதுவுக்குப் பல கடமைகள் இருந்தன. பசு வடிவில் இருந்த பூமாதேவியைத் தேடிக் கண்டுபிடித்து, அவளைச் சமாதானப்படுத்தி, தன் நாட்டில் மறைந்த இயற்கை வளங்களைப்பெற்று, மக்களையும் மற்ற ஜீவராசிகளையும் காப்பாற்ற வேண்டியதுதான் அவனது முதல் கடமையாக இருந்தது. இதனால் அவன், பசு வடிவில் எங்கோ மறைந்திருக்கும் பூமாதேவியைத் தேடிப் புறப்பட்டான். ஆனால் பூமாதேவியோ அவன் கண்ணில் படாத இடத்துக்குச் சென்று மறைந்து கொண்டாள். எனினும், பிருது தன் முயற்சியைக் கைவிடவில்லை. இயற்கையைக் காப்பாற்றி மக்களை வாழவைக்கத் துடிக்கும் பிருதுவின் முயற்சியைப் பாராட்டி, பசு வடிவில் இருந்த பூமாதேவியே மணமிரங்கி பிருது முன் தோன்றினாள். பிருது பூமித்தாயை வணங்கி, தன் தந்தை வேனாவுக்காக மன்னிப்புக் கோரினான். மீண்டும் தன் நாட்டை வளமாக்க வழி செய்யவேண்டும் என வேண்டினான்.பிருது மன்னா! என்னிடமிருந்து சுரக்கும் பாலைப் பொழிந்து, அழிந்துபோன இயற்கைச் செல்வங்களை மீண்டும் தோன்றச் செய்கிறேன். ஆனால், என்னிடமிருந்து பால் சுரக்க ஒரு கன்றுக்குட்டி வேண்டுமே.... என பூமாதேவி கூறினாள். பிருது, பூமாதேவிக்கு நன்றி கூறி, ஸ்வாயம்புவ மனு எனும் தேவனை வேண்ட, அவனே கன்றுக்குட்டியாக வந்தான். பசு வடிவில் இருந்த பூமாதேவி பாலைச் சுரந்தாள். அது அருவியாக ஆறாக, ஓடி, பூமியில் பசுமையை உண்டாக்கியது. மறைந்த மரம், செடி, கொடிகளும், மலர்களும் பூமியை அலங்கரித்தன. ஜீவராசிகள் நன்றியோடு பிருதுவையும் பூமாதேவியையும் பூஜித்தன. மனித இனம் வாழத் தேவையான அத்தனை செல்வங்களையும் பூமாதேவி வழங்கினான். பிருது, மகாவிஷ்ணுவின் அம்சம். பூமாதேவி அவன் மார்பில் வாழும் ஒரு பத்தினி, பிருதுவால் தேடிக் கண்டடையப் பெற்றவள் என்பதால் அவள் பிருத்வி எனப் பெயர் பெற்றாள்.

பிருது தோன்றியபோது அவனது வலது கையில் மகாவிஷ்ணுவின் சுதர்சன சக்கரம் ரேகை வடிவில் இருந்தது. இதனால் பிருது, விஷ்ணுவின் அம்ஸாவதாரம் என மகரிஷிகள் அறிந்தனர். பிருது, பூமாதேவியை பசு வடிவில் வழிபட்டு பூமியை வளம் பெறச் செய்ய சக்தி தந்தது இந்த சக்கர ரேகைதான் என்று அறிந்து, அவனைச் சக்கரவர்த்தி என்று புகழ்ந்தனர் தேவர்களும் ரிஷிகளும்! சக்கரவர்த்தி என்ற சொல் முதன்முதலில் அடைமொழியானது மன்னன் பிருதுவுக்குத்தான். அவனுக்குப் பிறகு தோன்றி, நாட்டை நலமுடன் ஆண்ட மன்னர்களும் சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்டனர். பூமியின் அம்சமே பசு வடிவம் ஆனதால், இன்று பூமி பூஜை செய்யும்போதும், வீடுகளில் கிரஹப்ரவேசம் செய்யும்போதும் ஒரு பசு மாட்டையும் கன்றுக்குட்டியையும் கொண்டுவந்து கோபூஜை செய்து வணங்குவது வழக்கத்தில் உள்ளது. இதனால் பிருத்வியின் நல்லாசியும் அருளும் பெற்று சவுபாக்கியங்களுடன் வாழலாம் என்பது நம்பிக்கை.


ஏழரை சனிக்கு அறிவியல் பரிகாரம்

ஏழரை சனிக்கு அறிவியல் பரிகாரம்!

எனக்கு ஏழரைச்சனி எனக்கு அஷ்டமத்து சனி அர்த்தாஷ்டம சனி கண்டச்சனி என்றெல்லாம் பலரும் நடுக்கம் கொள்கிறார்கள்.இவை தங்கள்  வாழ்க்கையில் பெரும் பின்னடவை ஏற்படுத்தும் என நினைக்கிறார்கள்.இதற்காக பல பரிகாரங்களைச் செய்கிறார்கள்.அதில் தவறில்லை.ஆனால் செலவே இல்லாமல் எளிய அறிவியல் பரிகாரம் ஒன்று உள்ளது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.கோள்களின் நகர்வுகளை அறிந்து  கொண்டால் பரம்பொருளான கடவுளின் நிலையை அடையமுடியும் என வானவியல் அறிஞர் ஆர்யபட்டா கூறியுள்ளார்.கோள்களின் நகர்வு பற்றி  அறிந்தவர்கள் நல்ல பிள்ளைகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என யஜுர் வேத ஜோதிடம் கூறுகிறது.

நாசா விஞ்ஞானி கார்ல் சாகன் நாம் கிரகங்கள் நட்சத்திரங்களில் இருந்து தான் பிறந்திருக்கிறோம்.நம் பூர்வீகமே நட்சத்திரங்கள் தான்.அவைகளைப் பற்றி எந்த அளவுக்கு அறிந்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு நம்முடைய எதிர்காலம் நன்றாக அமையும் என்று குறிப்பிடுகிறார்.கிரகம் நட்சத்திரங்களை நோக்கி தியானம் செய்தால் நற்பலனை நிச்சயம் நம்மால் பெற முடியும்.வானத்தில் கிரகங்கள் எந்த இடத்தில் சுற்றுகின்றன  என்பது பற்றி யாரும் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை.அதனைத் தெரிந்து கொள்வதால் நமக்கு உண்டாகும் பலனையும் யாரும் அறிந்து  கொள்ளவில்லை.பொதுவாக ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் கிரகம் செல்வதை பெயர்ச்சி என குறிப்பிடுகிறோம். அந்த வகையில் குரு சனி கிரகங்களின் பெயர்ச்சிகளை மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். மெதுவாக நகர்வதால் சனியை மந்த கிரகம் என்பர்.9 கோடி மைல்  துõரத்தில் இருக்கும் பூமி சூரியனைச் சுற்றி வர ஒரு வருடம் ஆகிறது.ஆனால் சூரியனை விட்டு 85 கோடி மைல் தள்ளியிருக்கும் சனி அதற்கான  சுற்றுப்பாதையில் ஒரு முறை சுற்றி வர 30 வருடம் ஆகிறது.மிக நீண்ட தொலைவில் இருப்பதால் சனி ஒரு ராசியைக் கடக்க உத்தேசமாக  இரண்டரை ஆண்டு காலம் ஆகிறது.  

தற்போது சனி கிரகம் தீர்க்க ரேகை 209ல் இருந்து 210 ஐ அடைகிறது.அதாவது 209 டிகிரியில் உள்ள துலாமை விட்டு210 டிகிரியிலுள்ள விருச்சிக ராசியை அடைவதையே துலாம்- விருச்சிக ராசி மாற்றம் என்கிறோம்.சரி இனி அறிவியல் ரீதியாக சனி பரிகாரம் தேடுவது பற்றி பார்ப்போம்.பஞ்சாங்கம் அல்லது எபிமரிஸ் அளிக்கும் கிரக நிலைகளை ஒரு வரைபடத்தில் சுற்றுப்பாதைகளில் அமைத்துக் கொண்டால் சனி உள்ளிட்ட எல்லா
கிரகங்களையும் அதன் இருப்பிடத்திலேயே பறவைப் பார்வையாக மனதாலேயே நம்மால் பார்க்க முடியும்.அதாவது கிரகங்களை ஒரு குறிப்பிட்ட  இடத்தில் இருப்பதாக மனதில் கற்பனை செய்து கொள்ள வேண்டும்.தற்போதைய சனிப்பெயர்ச்சியில் சூரியனுக்கு மிகவும் அருகில் அதாவது 15 டிகிரி அளவு வித்தியாசத்தில் சனி இருக்கும்.எனவே இந்த முறை ஏற்படும் சனிப்பெயர்ச்சியை நேரில் பார்ப்பது கடினம்.எனவே சூரியனுக்கு சற்று  மேலாக சனி இருப்பதாக நம் மனதில் கற்பனை செய்து கொள்ள வேண்டும்.முதலில் பூமியின் வடதுருவத்தை மனதில் வரவழைக்க வேண்டும்.அங்கிருந்து பல லட்சம் கோடி மைல் தூரம் மனதாலேயே கடந்து செல்ல வேண்டும்.

அப்போது சூரிய மண்டலத்தையும் அதனைச் சுற்றியுள்ள நட்சத்திரங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பார்வையாக நம் மனதால் காண முடியும்.சூரியனுக்கு அருகில் சனி இருப்பதாக மனதில் கற்பனை செய்து சனீஸ்வரா!எனக்கு உன்னால் வரும் கெடுபலன்களில் இருந்து காப்பாற்று என  மனதால் தியானம் செய்ய வேண்டும்.இந்த முறையில் இரவில் அல்லது பகலில் எந்த நேரத்திலும் மனத்திரையில் கண்டு தியானிக்கலாம்.சனி மட்டுமல்ல!பிற கிரகப்பெயர்ச்சிகளால் நமக்கு பிரச்னை இருந்தாலும் சம்பந்தப்பட்ட கிரகங்களுடன் ஒன்றாகவோ அல்லது குறிப்பிட்ட கிரகத்துடன்  அன்றைய நாளில் சம்பந்தப்பட்ட நட்சத்திரத்துடன் ஒன்றிக் கலந்தோ உயிர்க்கலப்பு பெறலாம். கிரகங்களின் இருப்பிடத்தை மனத்திரையில் கண்டு  தியானத்தில் ஆழ்ந்து விடுவதன் மூலம் அவைகளிடம் இருந்து காந்த அலைக்கதிர்களைநம்மால் ஈர்க்க முடியும்.10 அல்லது 15 நிமிடம் இந்த தியானத்தை செய்வதன் மூலம் கிடைக்கும் பலன் கோயில்களில் நவக்கிரகங்களை வலம் வந்து அடையும் பலனுக்கு ஈடாகவோ அல்லது அதற்கும் மலானதாகவோ இருக்கும்.உங்கள் பிறந்த நட்சத்திர நாளில் உங்களது நட்சத்திரம் இருக்குமிடத்தை உத்தேசமாகக் கணக்கிட்டு அந்த இடத்திற்கு  மனதால் சென்று தியானம் செய்பவர்கள் பிரத்யேக பலனைப் பெற முடியும்.கிரகங்கள் ஒன்பதும் நம் உடம்பில் ஒவ்வொரு பாகத்தைக் குறிக்கும்.சூரியன்,எலும்பு,சந்திரன்,ரத்தஓட்டம், செவ்வாய்,மஜ்ஜை, புதன்,தோல், வியாழன்,மூளை, சுக்கிரன்,உயிர்ச்சக்தி,சனி,நரம்பு மண்டலம்.அந்தந்த உறுப்புகள் நலம் பெற அந்த கிரகத்தை நோக்கி தியானம் செய்யலாம்.  மொத்தத்தில், இரவு நேரத்தில் மட்டுமே கிரகம்,நட்சத்திரங்களைக் கண்டுகளிக்கலாம் என்ற நிலையை மாற்றி பிரமிப்பூட்டும் பறவைப்பார்வை மூலம் பகல்,இரவு பாகுபாடு இல்லாமல் எந்த நேரத்திலும் மனதை செலுத்தி  உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி மன ஆரோக்கியத்தை அடையலாம்.இதை நடைமுறையில் கொண்டு வர நாம் எதையும் கற்றுக் கொள்ள  வேண்டியதில்லை. வீட்டிலேயே அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து கிரகங்களின் இருப்பிடம் அறிந்து மனம் செலுத்தி தியானம் செய்வதே  போதுமானது. இவ்வாறு தொடர்ந்து செய்பவர்கள் வாழ்வில் பல நன்மைகளைப் பெறுவது உறுதி.


ரமணர்

ரமணர்

அன்று ஆருத்ரா தரிசனம் ! அதாவது, மார்கழி திருவாதிரை நட்சத்திரம்! திருச்சுழி பூமிநாதசுவாமி திருக்கோயிலில் நடராஜர் புறப்பாடு சிறப்பாக நடந்தது. வீதி உலா இனிதே நிறைவு பெற்று திருக்கோயிலில் சுவாமி பிரவேசிக்கும் நேரம்! பூமிநாதர் திருக்கோயில் மணி ஒலித்தது! அதே நேரத்தில் அருட்குழந்தை ரமணர் பூவுலகில் அவதரித்தார்.

ஜோதி தரிசனம்
பூமிநாதர் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் நிறைவு பெற்ற நேரத்தில், கண்பார்வை இல்லாத ஒரு பெண்மணிக்கு ஜோதி தரிசனம் கிடைத்தது! ஆம்! ரமணரின் தாய் அழகம்மாவிற்குப் பிரசவம் பார்க்க வந்த பெண்மணி கண்பார்வை இல்லாதவர் ரமணர் பூமியில் அவதரித்த அதே நேரத்தில் அந்தப் பெண்மணிக்கு ஒரு ஜோதி தரிசனம் கிடைத்தது!

தலைச்சுழியை மாற்றும் திருச்சுழி
பாண்டிய நாட்டிலுள்ள பதினான்கு பாடல் பெற்ற சிவத்தலங்களில் பத்தாவது திருத்தலம் திருச்சுழியல். இது மதுரைக்குத் தென்கிழக்கே சுமார் ஐம்பது கி.மீ தொலைவில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது.

திருஞானசம்பந்தர் திருவவதாரம் செய்த சீர்காழி, பிரளய வெள்ளத்தில் தோணியப்பர் திருவருளால் மிதந்து தப்பித்தது! ரமணர் உதித்த திருச்சுழியல் பிரளய வெள்ளம் பாதாளத்தில் புகுந்ததால் பிழைத்தது! சிவபெருமான் பிரளய வெள்ளத்தை ஓர் அம்பினால் சுழித்து பாதாளத்தில் செலுத்திக் காத்ததால் இத்தலத்தை திருச்சழியல் என அழைத்தனர் தற்காலத்தில் திருச்சுழி என வழங்கி வருகிறது திரிசூலபுரம், முத்திமாநகர் மகா ஆவர்த்தபுரம், ஜோதிவனம் போன்ற வேறு பெயர்களும் உள்ளன.

சிவபக்தர் சுந்தரம் ஐயர்
தேவாரம் போற்றும் திருச்சுழி பூமிநாதப் பெருமானை அன்றாடம் வழிபடும் பக்தரான சுந்தரம் ஐயர், அழகம்மா என்ற பெண்ணை மணந்து இனிதே இல்லறம் நடத்தி வந்தார். சுந்தரம் ஐயர் உழைப்பால் உயர்ந்து, செல்வம், சேர்த்து அறச்செயல்கள் புரிந்தவர்.

கணக்கப்பிள்ளை குமாஸ்தாவாக இருந்தவர், மனுக்களும் விண்ணப்பங்களும் எழுதிக் கொடுக்கும் தொழிலை மேற்கொண்டார். சட்ட நுணுக்கங்களைக் கற்று பட்டம் பெறாத வழக்கறிஞராக உயர்ந்தார். சட்ட உதவியைத் தொழிலாகக் கருதாமல் தம்மை நாடி வந்தவர்களுக்கு நல்லதே செய்யும் பண்பாளராக விளங்கினார். அதனால் அப்பகுதியில் சுந்தரம் ஐயர் மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.

ஆங்கிலக் கணக்குப்படி 1879 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முப்பதாம் நாள் சுந்தரம் ஐயர் அழகம்மாள் தம்பதியரின் மகனாக ஸ்ரீரமணர் அவதரித்தார். சுந்தரம் ஐயர் தம்பதியர் தங்கள் மகனுக்கு வேங்கடராமன் என்று பெயர் சூட்டினர். குழந்தையின் சுட்டித்தனத்தைக் கண்டு மகிழ்ந்த அனைவரும் ராமன் என்று செல்லமாக அழைத்தனர்.

சுந்தரம் ஐயர் தம்முடைய குழந்தைகளுக்கு ஆங்கிலக் கல்வியை அளிக்க விரும்பினார். பள்ளிமடம் வட்டத்திலிருந்த ஒரு மிஷனரி ஆரம்பப்பள்ளியில் வேங்கடராமனைச் சேர்ந்தார்.

வேங்கடராமனின் மனம் பள்ளிப்படிப்பில் ஈடுபட வில்லை. வயிற்றுப் பிழைப்புக்காகப் படிக்கும் கல்வியில் அவருக்கு நாட்டம் இல்லை.

கால்பந்து விளையாடுதல், மல்யுத்தம் பயிறுதல், ஓடுதல், நீந்துதல், கபடி விளையாடுதல் போன்றவை வேங்கடராமனுக்கு விருப்பமான விளையாட்டுக்களாக இருந்தன. அதனால் அவனுக்கு அதிகமான நண்பர்கள் கிடைத்தனர். அவர்களிடையே வேங்கடராமன் முக்கியத்துவமும் முதன்மையும் பெற்றுத் திகழ்ந்தான் கௌண்டின் யநதி பள்ளிக்கு அருகில் இருந்தது, அந்த நதிக்கரையில் வேங்கடராமன் தனது நண்பர்களுடன் விளையாடுவான் காளையார்கோயில் வேங்கடராமன் படித்த பள்ளிக்கு அருகில் இருந்தது. திருச்சுழியிலிருந்து கோயில் பூஜை செய்யும் குருக்கள், பட்ட,ர் வேத விற்பன்னர்கள் ஆகியோர் அன்றாடம் காளையார் கோயிலுக்குச் செல்வார்கள் அவர்களுடன் சிறுவன் வேங்கடராமனும் சென்று அங்கு விளையாடுவான்.

ஒரு முறை சுந்தரம் ஐயரின் முன்னோர் ஒருவரின் இல்லம் தேடி வந்த சந்தியாசியை அவர் உரிய முறையில் வரவேற்று உபசரிக்கவில்லை அதனால் சந்நியாசி கோபம் கொண்டு சாபம் கொடுத்துவிட்டார் உங்கள் பரம்பரையில் தலைமுறைக்கு ஒருவர் வீட்டை விட்டு வெளியேறி கையேந்தி பிச்சை வாங்கிச் சாப்பிடும் நிலை ஏற்படும் என்று அந்த சந்தியாசி சபித்தார்

அச்சாபம் குறித்து சுந்தரம் ஐயர் அழகம்மாவிடம் கூறினார். அச்சாபப்படி நடந்து வருவதாகவும் விளக்கினார். சுந்தரம் ஐயரின் தகப்பனாரின் சகோதரர் ஒருவர் காவியுடுத்துத் துறவியாகித் திரித்து கொண்டு இருந்தார். சுந்தரம் ஐயரின் மூத்த சகோதரர் வீட்டை விட்டு வெளியேறிப் பரதேசியாகத் திரிந்தார்.

திண்டுக்கல்லில் வேங்கடராமன் ஐந்தாம் வகுப்பு வரைகற்றான். திண்டுக்கல் பகுதியில் இருந்த மலைகள், கோயில்கள் ஆகிய அனைத்தும் அவனுக்கு அத்துபடி! நண்பர்களுடன் அங்கெல்லாம் அலைந்து திரிந்து விளையாடி மகிழ்வான். வேங்கடராமன் திண்டுக்கல்லில் படித்துக் கொண்டிருந்தபொழுது எதிர்பாராத விதமாக சுந்தரம் ஐயர் காலமானார் அழகம்மாவும் குழந்தைகளும் சோகத்தில் ஆழ்ந்தனர். அந்தச் சோகத்திலும் வேங்கடராமன் சிந்தனையில் மூழ்கினான்.

உடல்தான் சுந்தரம் ஐயரா? அவருடைய உயிர் எங்கே போயிற்றது? மரணம் என்பது என்ன? மரணத்தைத் தவிர்க்க இயலாத? உயிரை எடுத்துக் கொண்டு போவது யார்? என்றெல்லாம் பலவாறு வேங்கடராமன் சிந்திக்கலானான். சுந்தரம் ஐயரின் இறுதிக்கடன்கள் முடிந்தன. கூட்டுக் குடும்பங்கள் நிறைந்திருந்த அக்காலத்தில் சுந்தரம் ஐயரின் சதோதரர்கள் அழகம்மா மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசித்தனர். குடும்ப நண்பரான பூமிநாதசுவாமிதிருக்கோயில் குருக்களும் உடன் இருந்தார்.

சுந்தரம் ஐயரின் தம்பிகளில் ஒருவரான சுப்பையா மதுரையில் வசித்து வந்தார் மற்றொரு தம்பியான நெல்லையப்பர் மானாமதுரையில் இருந்தார். நாகசாமி மற்றும் வேங்கடராமன் மதுரையிலுள்ள சுப்பையா வீட்டில் தங்கி, படிப்பைத் தொடருவது நல்லதென எண்ணினார். அழகம்மாள் குழந்தைகள் நாகசுந்தரம், அலமேலு ஆகிய மூவரையும் நெல்லையப்பர் தன்னுடன் மானமதுரைக்கு அழைத்துச் செல்லத் தீர்மானித்தார் சுந்தரம் ஐயரின் குடும்பச் சுமையை அவருடைய சகோதரர்கள் அன்புடன் பங்கிட்டுத் தாங்க முற்பட்டனர்.

மானாமதுரையில் தங்கியிருந்த அழகம்மா மற்றும் குழந்தைகளை நெல்லையப்பர் பரிவுடன் கவனித்துக் கொண்டார். அதே நேரத்தில் மதுரைக்குச் சென்ற நாகசாமி கல்லூரியில் சேர்ந்து படித்தான். தம்பி வேங்கடராமன் வழக்கம் போல் பள்ளிக்கல்வியில் நாட்டம் இல்லாமல் இருந்தான்.

வேங்கடராமன் ஆங்கிலத்தில் மோசமாகவும் தமிழ் தவிர மற்றப் பாடங்களில் சுமாராகவும் மதிப்பெண்கள் வாங்கினான். தமிழில் ஆர்வம் ஆதிகம் இருந்தது நன்னூல் சூத்திரங்கள் வேங்கடராமனுக்கு மனப்பாடமாக இருந்தன இந்தச் செய்திகளை சுப்பையா கடிதம் மூலம் அழகம்மாவிற்கு தெரியப்படுத்தினார் அழகம்மா மதுரையில் இருந்த இரண்டு மகன்களையும் சென்று பார்க்க விரும்பினார்.

மதுரை சென்ற அழகம்மா வேங்கடராமனுக்கு, அறிவுரைகளைக் கூறினார். வேங்கடராமன் அவற்றை அமைதியாகக் கேட்டான். வேங்கடராமன் விடுமுறை நாள்களில் மலையடிவாரங்ளுக்கும்  திருக்கோயில்களுக்கும் செல்வான். திருச்சுழியைச் சேர்ந்த சொக்குப் பட்டர் என்பவர் தீபத்திருநாளைக் காணத் திருவண்ணாமலைக்குச் சென்று திரும்புகையில் மதுரையில் வேங்கடராமனின் தந்தையின் இளவல் சுப்பையரின் இல்லத்திற்குச் சென்றார். பெரியவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் வேங்கடராமன், எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டான்.

சொக்குப் பட்டர், நான் அருணாசலத்திலிருந்து வருகிறேன் என்றார் வேங்கடராமன் அப்பெயரைக் கேட்டவுடன் அனைத்தையும் மறந்தான்! தன்னை மறத்த நிலையில் வேங்கடராமன் வேகமாக மாடியறைக்குச் சென்றான் சிறிது நேரம் கழித்து மாடியறையில் இருந்த பெரிய புராணப் புத்தகத்தை எடுத்து ஈடுபாட்டுடன் படிக்கலானான். சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் திருச்சுழியில் பிறந்த வேங்கடராமன் என்ற சிறுவனின் மனதில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மகரிஷி ரமணரை மாநிலத்திற்கு அளித்தது! இறைவனுக்காக எதையும் தியாகம் செய்யத்துணிந்த சிவனடியார்களின் தொண்டு வாழ்க்கை சிறுவன் வேங்கடராமனின் மனதில் ஆழப் பதிந்தது பள்ளிக் கல்வியில் நாட்டமில்லாத வேங்கடராமனை ஒரு திருமுறை நூல் கவர்ந்தது விந்தைதான்!

மதுரையில் சுப்பையாவின் இல்லம் மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு அருகில் இருந்தது. அதனால் வேங்கடராமன் அன்றாடம் கோயிலுக்குச்  செல்வான் , மீனாட்சியிடம் சுந்தரரேசுவரிடமும் தான் நாயன்மார்களைப் போன்ற பயனுள்ள வாழ்க்கை வாழ வேண்டுமென உள்ளம் உருகி வேண்டிக் கொள்வான் வேங்கடராமனிடம் சிவபக்தியும் ஞானவைராக்கியமும் வளரலாயிற்று.

மாடியறையில் அமர்ந்து மரணம் முதலான விஷயங்கள் குறித்துச் சிந்தித்தான் வேங்கடராமன். ஆழ்ந்த சிந்தனை தியானமாக மாறியது! தியானம் உச்ச நிலையைத் தொட்டது. வேங்கடராமன் சிறிது நேரம் மரணத்தின் விளிம்பிற்கே சென்றுவந்தான் ! அது முதல் அவனுக்கு மரணம் குறித்த அச்சம் ஒழிந்தது.

கோயிலுக்குச் செல்வதும் தியானம் செய்வதுமே முக்கியப் பணியாகிவிட்ட வேங்கடராமனுக்குப் படிப்பு அறவே வெறுத்துப் போயிற்று. ஆர்வத்துடன் ஈடுபட்ட விளையாட்டுக்களும் மகிழ்ச்சியைத் தர வில்லை. நண்பர்கள் குழாத்தையும் நாடவில்லை.

ஆங்கில இலக்கணப் புத்தகத்தின் சில பகுதிகளை மூன்று முறை எழுதும் தண்டனையைப் பெற்றான் வேங்கடராமன். அதன்படி, இரண்டு முறை எழுதி முடிந்த நிலையில் வேங்கடராமனுக்கு விரக்தியும்  வெறுப்பும் மேலிட்டது. இலக்கணப் புத்தகம், பேனா ஆகியவற்றை வேங்கடராமன் வீசி எறிந்தான்.

அச்செயலைக் கண்ட அண்ணன் நாகசாமி பெரிதும் கடிந்து கொண்டார். அதனைப் பொருட்படுத்தாத வேங்கடராமன் அடுத்த நடவடிக்கை குறித்துச் சிந்தித்தான். அருணாசலம் குறித்த நினைப்பு மேலிட்டது. இனி அருணாசலத்தை நோக்கிப் புறப்பட வேண்டியதுதான்!என்ற திடமான, தீர்மானமான முடிவிற்கு வந்தான். அன்றைய சூழ்நிலை அவனுக்குச் சாதகமாகவே அமைந்தது!

 பள்ளிக்கூடத்தில் இன்று ஸ்பெஷல் கிளாஸ் போய்விட்டு வருகிறேன் என்று வேங்கடராமன் அண்ணனிடம் கூறினான். அப்படியா? கீழே இருக்கும் என் பெட்டியைத் திறந்து ஐந்து ரூபாய் எடுத்துக்கொள்; போகும் வழியில் எங்கள் காலேஜில் கட்டிவிடு என்று அண்ணன் நாகசாமி கூறினார். அதுவும் அண்ணாமலையார் திருவருளே என்று கருதிய வேங்கடராமன் ஜந்து ரூபாயை எடுத்துக் கொண்டான்.

இரயில் மார்க்கங்கள் குறித்த ஒரு வரைபடத்தைப் பார்த்ததில் திருவண்ணாமலை பயணத்திற்கு மூன்று ரூபாய் போதும் என்று தெரிந்தது.

நான் என் தகப்பனாரைத் தேடிக் கொண்டு அவருடைய உத்தரவுப்படி இவ்விடத்தை விட்டுக் கிளம்பிவிட்டேன் . நல்ல காரியத்திற்கே புறப்படுவதால் எவரும் விசனப்பட வேண்டாம். பணமும் செலவு செய்ய வேண்டாம் உன் சம்பளத்தை இன்னும் செலுத்தவில்லை ரூ.2 இதோடு கூட இருக்கிறது என்று அண்ணனுக்கு ஒரு கடிதத்தை எழுதி வைத்தான் வேங்கடராமன்.

அவசரமாக மதுரை இரயில் நிலையத்திற்குச் சென்றான். அன்று தெய்வாதீனமாக இரெயில் சற்றுக் காலதாமதமாக வந்தது! திண்டிவனத்திற்குப் பயணச் சீட்டு வாங்கினான் ஒருவாறு விடுதலை பெற்ற உணர்வோடு வண்டியில் ஏறி அமர்ந்தான். வண்டியும் புறப்பட்டது.

அண்ணாமலை, அருணாசலம், அருணகிரி ஆகிய சொற்கள் பக்தர்களைச் சொக்க வைக்கும் மந்திரச் சொற்கள் மகான்களைத் தன்பால் ஈர்த்து, இறையருள் இன்பத்தில் திளைக்கச் செய்து, புகழும் முக்தியும் அருளும் அற்புதத் திருத்தலம் அண்ணாமலை!

மலையும் அண்ணாமலை! மகிமைமிகு தலமும் அண்ணாமலை தலத்தில் உறையும் மகேசன் பெயரும் அண்ணாமலை!

மதுரையிலிருந்து திண்டிவனத்திற்கு ரெயில் கட்டணம் இரண்டு ரூபாய் பதின்மூன்று அணா. அது போக வேங்கடராமனிடம் மூன்று அணாதான் எஞ்சி இருந்தது. திண்டிவனத்திலிருந்து திருவண்ணாமலை மிகவும் அருகில் இருக்குமென்று வேங்கடராமன் கருதினான். வண்டியேறிய பிறகு வேங்கடராமன் வயதான ஒருவர் புதிய வழித்தடம் குறித்துக் கூறினார். விழுப்புரத்திலிருந்து காட்பாடி செல்லும் வண்டிகள் திருவண்ணாமலை வழியாகச் செல்கின்றன என்ற விவரத்தைக் கூறினார்.

இவனிடம் மீதமிருந்த சில்லரை அறையணி நல்லூர் வரை செல்லுமளவிற்கே இருந்தது. அங்கே இறங்கி நடந்தே திருவண்ணாமலைக்குச் செல்லத் தீர்மானித்தான் மாலை நேரத்தில் அறையணி நல்லூரில் இறங்கி மலைக்கோயில் ஈசனைத் தரிசிக்கச் சென்றான் வேங்கடராமன். அங்கு ஒரு ஜோதி தோன்றியது சன்னிதியிலிருந்த ஈசன் திருமேனியில் அந்த ஜோதி ஐக்கியமானது!

திருக்கோவிலூர் பாகவதரிடம் வேங்கடராமன் தனது கடுக்கனை அடகு வைத்து நான்கு ரூபாய் வாங்கிக் கொண்டான் அடுத்தநாள் காலையில் திருக்கோவிலூரிலிருந்து ரயிலில் திருவண்ணாமலைக்குப் பயணமானான் திருவண்ணாமலையை நெருங்கிய உடனேயே வேங்கடராமன் ஆனந்தக் கண்ணீர் உகுத்தான் .உடல் சிலிர்த்தது!

அருணாசலசிவ! அருணாசலசிவ! என்ற மந்திரத்தை உள்ளம் உருகி ஜபித்தபடி 1886 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள் வேங்கடராமன் பாலரமணராக அண்ணாமலையில் அடியெடுத்து வைத்தார். ஈசனும் பாலரமணரைப் பாசத்துடன் வரவேற்றார்! ஆனால் பாலரமணர் பாசங்கள் அனைத்தையும் துறந்தார்.

தன் தலையை மொட்டை அடித்துக் கொண்டார். வேட்டியைக் கோவணமாகக் கட்டிக் கொண்டார். ஜாதி சின்னமாகிய பூணூலை அறுத்து எறிந்தார். அனைத்தையும் துறந்த சுத்தபுருஷனாக ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார். பால் வடியும்  முகம் கொண்ட பாலரமணரின் தவத்தைக் கண்டு பலரும் வியந்தனர். எனினும், விஷமிகள் சிலர், அவர் மீது கற்களை வீசித் தொந்தரவு செய்தனர்.

அண்ணாமலையர் கோயிலில் ஓர் இருண்ட குகை இருந்தது. அதனைப் பாதாளலிங்கக் குகை என்று கூறுவார். அங்குப் பகல் நேரத்திலேயே இருள் நிறைந்திருக்கும். பாலரமணர் அதுவே தனது தவத்திற்கு ஏற்ற தனிமையான இடம் எனத் தேர்ந்தெடுத்தார். அங்குச் சென்று தவத்தில் அமர்ந்தார். ஊண், உறக்கம் இல்லாமல் கடுந்தவம் இயற்றினார். உடல் மெலிந்தது. குகைக்குள் இருந்த புழுக்களும் பூச்சிகளும் பாலரமணரின் உடலைத் துளைத்தன. பாலயோகியின் தொடைப்பகுதி அரிக்கப்பட்டது ஆனாலும் அவருடைய தவம் கலையவில்லை!

அங்கு அவர் எத்தனை காலம் கடுந்தவம் இயற்றினார் என்பது எவருக்கும் தெரியாது. சேஷாத்ரி சுவாமிகள் அக்குகையில் நுழைந்து வெளியே வந்தார். உள்ளே தவமியற்றிய உத்தமத் துறவியை உலகிற்கு அறிமுகம் செய்தார். சேஷாத்ரி சுவாமிகள் ரமணர் திருவண்ணாமலைக்கு வருவதற்கு எழு ஆண்டுகள் முன்பு வந்தவர். வயதிலும் ரமணரைவிட மூத்தவர். உத்தண்டி நயினார் என்ற சாது பாலரமணரிடம் உபதேசம் பெற வந்தார் அவர் பாலரமணருக்குப் பாதுகாவலாக இருந்தார். அவர் இல்லாத நேரங்களில் விஷமிகள் ரமணருக்கு இடையூறுகள் செய்தனர். எனினும் ரமணர் தமது மௌனத் தவத்தைத் தொடர்ந்தார்.

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் முதல் குருநாதரான ஸ்ரீமத்தெய்வசிகாமணி பரமாச்சார்ய சுவாமிகளின் சமாதி அமைந்துள்ள திருக்கோயிலை குருமூர்த்தம் என்று அழைத்தனர். அண்ணாமலைத் தம்பிரான் என்ற சுவாமிகள் பாலரமணரை குருமூர்த்தத்தில் அமர்ந்து தவம் இயற்ற உதவினார் அங்கு பாலரமணர் பதினெட்டு மாதங்கள் கடுந்தவம் இயற்றினார்.

அண்ணாமலைத் தம்பிரான் மதுரையில் ஆற்றிய ஒரு சொற்பொழிவில் பாலரமணரின் பெருமைகளை எடுத்துக் கூறினார் அதனைக் கேட்ட சிறுவன் ஒருவன் திருச்சுழி வேங்கடராமன் திருவண்ணாமலையில் இருப்பதாக உறவினர்களிடம் கூறினான். வேங்கடராமனின் மற்றொரு சிற்றப்பாவான நெல்லையப்பர் திருவண்ணாமலைக்கு வந்தார் மாந்தோப்பில் பரண் அமைத்து அதன் மீதிலிருந்து தவம் இயற்றிக் கொண்டிருந்தார் பாலரமணர் மானாமதுரை நெல்லையப்பர் தரிசனம் செய்ய விரும்புகிறார் என்று எழுதியனுப்பினார் சிற்றப்பா. அவருக்கு அனுமதி கிடைத்தது. பாலரமணரின் கோலத்தைக் கண்டு ஒருபுறம் பெரிதும் வருந்தினார் மறுபுறம் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பாலகன் பரமஞானியாகத் திகழ்வதைக் கண்டு மகிழ்ந்தார். தன்னுடன் ஊருக்கு வருமாறு அழைத்தார். பாலரமணர் எவ்விதச் சலனமும் இன்றி மௌனமாக இருந்தார். அவருடைய வைராக்கியத்தைப் புரிந்து கொண்ட நெல்லையப்பர் ஊர் திரும்பினார்.

தாய் அழகம்மை தனது மூத்த மகன் நாகசாமியுடன் திருவண்ணாமலைக்கு வந்தார். அப்போது பாலரமணர் பவளக் குன்று என்ற வேறு இடத்தில் நிஷ்டையில் அமர்ந்திருந்தார். மகன் வேங்கடராமனை கௌபீன தாரியாகக் கண்ட தாயின் மனம் துடித்தது. தாயும் அண்ணனும் தவசீலரைத் தங்களுடன் அழைத்தனர். பந்தபாசங்கள் அனைத்தையும் அறுத்துவிட்ட ஞானி பாலரமணர் அவர்களின் சொற்களைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை தாயின் கதறலைக் கண்ட பக்தர்கள், பதிலை எழுதிக் காட்ட பாலரமணரிடம் வேண்டினர்.

அவரவர் பிராப்தப் பிரகாரம் அதற்கானவன்
ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான்
நடவா தென் முயற்சிக்கினும் நடவாது
நடப்ப தென்றடை செய்யினும் நில்லாது
இதுவே திண்ணம் ஆதலின்
மௌனமாய் இருக்கை நன்று!

என்ற ஞானமொழிகளை பாலரமணர் எழுதினார் தாய் வேறு வழியின்றி நாகசாமியுடன் ஊர் திரும்பினார்.

விசாகப்பட்டினம் நரசிம்ம சாஸ்திரிகளின் மகன் கணபதி முனிவர், திருவண்ணாமலை வந்து தியானத்தில் அமர்ந்திருந்தார். அப்போது பகவான் அழைக்கிறார் என்றல ஒரு ஒலி அவுருக்குக் கேட்டது உடனே மலையேறிச் சென்று விருபாட்ச குகையில் அமர்ந்திருந்த பகவானைக் கண்டு வணங்கினார்.

தன்னைச் சீடனாக ஏற்று நல்லுபதேசம் செய்ய வேண்டினார். பகவான் அவ்வாறே அவரைச் சீடராக ஏற்று பதினைந்து நிமிடத்திற்கு உபதேசம் செய்தருளினார். பின்னர் கணபதி முனிவர், பாலரமணரை இளமையிலேயே புலன்களை அடக்கி ஆண்டவர் என்ற பொருளில் அவரை ரமணர் என்று அழைத்தார். அப்பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது!

சேஷாத்ரி சுவாமிகள் அடையாளம் காட்டிய பாலரமணரைப் பாமர மக்கள் பிராமண சாமியார் என்றே அழைத்து வந்தனர். திருவண்ணாமலையில் அடியெடுத்து வைத்தவுடன் வேங்கடராமன் பூணூலை அறுத்தெறிந்தார். ஜாதிமதங்களைக் கடந்த உத்தமராகி விட்டார் எனினும் அவருக்கும் ஜாதி முத்திரை!

வேங்கடராமன் சிறுவனாக இருந்தபொழுது, அவருடைய உறவினர் லட்சுமண  அய்யர் என்பவர் அவரை ரமணி என்ற செல்லப் பெயரிட்டு அழைத்து வந்தார். அவரது விருப்பப்படியும் ரமணர் என்ற பெயர் பொருத்தமாக அமைந்துவிட்டது.

அடுத்தநாள் ரமணமகரிஷி தமது சீடர்களுக்கு, சிறிது நேரம் உபதேசம் செய்தருளினார் காவியகண்ட கணபதி முனிவர் முன்னரே பிரபலமாக இருந்தார். அவர் ரமண மகரிஷியின் சீடரான பிறகு மக்கள் மத்தியில் ரமணர் பெரும் புகழ் பெற்றார் பகவான் அவ்வப்பொழுது பக்தர்களின் வினாக்களுக்கு அளித்த பதில்களைத் தொகுத்து ரமணகீதை என்ற நூலாக வெளியிட்டவர் கணபதி முனிவரே ஆவார்.

முதல் முறை திருவண்ணாமலைக்கு வந்து மகனைக் கண்டு ஏமாற்றத்துடன் மானாமதுரைக்குத் திரும்பினார் அழகம்மை. எனினும் மகனைக் காணஅடிக்கடி வந்து சென்றார் 1914 ஆம் ஆண்டு அண்ணாமலை வந்த அழகம்மைக்கு உடல் நலம் குன்றியது இருபது நாள்களுக்கு மேல் அவர் படுத்த படுக்கையாக இருந்தார். அப்போது ரமணர் தமதுஅன்னையை அன்புடன் கவனித்துப் பணிவிடைகள் செய்தார் உடல் நலம் தேறியவுடன் அழகம்மை மானாமதுரைக்குத் திரும்பினார்.

அழகம்மைக்குப் பாதுகாப்பாக இருந்து வந்த நெல்லையப்பர் காலமானார். மகன் நாகசுந்தரத்தின் மனைவியும் மறைந்தார். சோகங்கள் தொடர்ந்தன. துவண்டு போன அழகம்மை தம்முடைய  ஞானப் புதல்வனே கதியென்று கருதி 1916 ஆம் ஆண்டு மீண்டும் திருவண்ணாமலைக்கு வந்தார்.

அழகம்மையின் வருகைக்குப் பிறகு பகவான் ஸ்கந்தாஸ்ரமத்தில் வசிக்கலானார். அழகம்மை சமையல் பணிகளை மேற்கொண்டு,பக்தர்களுக்கு அன்னம் அளித்தார். அழகம்மை உடன் இருப்பதை பகவான் விரும்பமாட்டார் என்றும் அவர் நமது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டுவிடுவார் என்றும் பக்தர்கள் எண்ணினர். பகவான் அவ்வாறு செய்யவில்லை எனினும் ரமணர் பக்தர்களிடம் பேசிய அளவிற்கு அழகம்மையிடம் பேசியதில்லை.

பகவான், ஆசிரமத்திலுள்ள பல பக்தர்களில் ஒருவராகவே அழகம்மையையும் கருதினார். பகவானின் தாய் என்ற முறையில் அவருக்கென்று எந்த விதமான தனியுரிமையும் அளிக்கவில்லை எனினும், பகவான் அவ்வப்பொழுது அழகம்மையின் ஆச்சார அனுஷ்டானங்கள் குறித்து நகைச்சுவை கலந்த விமர்சனங்கள் செய்வார் அந்த முறையிலேயே தமது தாயை ஞானமார்க்கத்திற்குத் திரும்பினார்.

அழகம்மையின் இறுதிக்கால வாழ்க்கையில் ஆறு ஆண்டுகள் ஆச்சிரமத்தில் கழிந்தன. அப்போது அவருக்கு பகவானிடம் பூரண நம்பிக்கை ஏற்பட்டது. அழகம்மையின் இறுதிநாளும் வந்தது.

அழகம்மைக்கு மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. பகவான் தமது வலக்கரத்தை அன்னையின் இதயப் பகுதியிலும் இடக்கையை உச்சந்தலையிலும் வைத்தபடி அருகிலேயே உட்கார்ந்திருந்தார். இரவு எட்டு மணிக்கு அழகம்மை முக்தி அடைந்தார். அழகம்மை சமாதிநிலை அடையும் வரை பகவானும் பக்தர்களும் சாப்பிடாமல் இருந்தனர். சமாதி எய்திய பிறகு பகவான் இனி நாம் சாப்பிடலாம் தீட்டும் இல்லை ஒன்றும் இல்லை என்று கூறினார்.

அடுத்தநாள் காலையில் சமாதிக் கிரியைகள் தொடங்கின. அழகம்மையின் உறவினர்களும் , ரமணரின் பக்தர்களும் கூட்டமாக வந்தனர். மலைக்கு அப்பாலுள்ள பாலிதீர்த்தம் என்ற இடத்தில் முறைப்படி சமாதிக் குழியில் விபூதி, கற்பூரம் உப்பு ஆகியவற்றை நிரப்பினர். அதன் மீது ஒரு சமாதி கட்டினார். சமாதியின் மீது சிவலிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த சிவலிங்கம் மாத்ருபூதேசுவரர் என்று பெயர் பெற்றது மாத்ருபூதேசுவரருக்கு அன்றாட பூஜைகள் தொடர்ந்து நடக்கின்றன. ஆண்டு தோறும் வைகாசி தேய்பிறை நவமியில் மாத்ருபூதேசுவரர் மகாபூஜை சிறப்பாக நடைபெறுகிறது .

கணபதி சாஸ்திரிகளைப் போன்ற கல்வியாளர்கள் பலரும் ரமணரின் சீடர்களானார்கள். பல துறைகளைச் சேர்ந்த சான்றோர்களும் பாமரரும் பகவானுக்குச் சீடர்கள் ஆகி தங்களால் இயன்ற பணிவிடைகளையும் தொண்டுகளையும் செய்தனர்.

ரமணாஸ்ரமம்

ரமணர் 54 ஆண்டுகள் திருவண்ணாமலையில் வாழ்ந்தார். அதில் 26 ஆண்டு வாழ்க்கையை பாதாளலிங்கக் குகை குருமூர்த்தம், மாந்தோப்பு, பவழக் குன்று, விருபாட்ச குகை, ஸ்கந்தாஸ்ரமம் ஆகிய வேறுபட்ட இடங்களில் வாழ்ந்தார் இருபத்தெட்டு ஆண்டுகள் பகவான் ரமணாஸ்ரமத்தில் தொடர்ந்து எழுந்தருளியிருந்தார்.

ரமண பக்தர்களில் ஒருவர் கந்தசாமி. இவர் தன்னுடைய சொந்த முயற்சியாலும் உழைப்பாலும் ஸ்கந்தாஸ்மரத்தை உருவாக்கினார். அவருடைய நினைவைப் போற்றும் வகையில் தான் ரமணர் அந்த இடத்திற்கு ஸ்கந்தாஸ்ரமம் என்று பெயரிட்டார்.

மலையிலுள்ள ஸ்கந்தாஸ்ரமத்திலிருந்து ரமணர் அடிக்கடி அன்னையின் சமாதிக்குச் சென்று வருவார். ஒரு நாள் அன்னையின் சமாதிக்கு வந்த ரமணர் தெய்வீக உந்துதலால் அங்கேயே தங்கிவிட்டார். அந்த இடம் பக்தர்கள் எளிதில் வந்து போகவும் வசதியாக இருந்தது. ஆகவே அந்த இடத்திலேயே பக்தர்கள் ரமணாஸ்ரமத்தை நிறுவினர்.

ஆஸ்ரம நடைமுறைகள்
ரமணர் விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்து விடுவார். ஆஸ்ரம அன்பர்கள் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, மண்டபத்தில் கூடிவிடுவார்கள். தியானமும், பக்தியிசையும் நடைபெறும். ஐந்து மணிக்கு ரமணர் தமது ஆசனத்தில் அமர்வார் . அவர் பதினைந்து மணித்துளிகள் தியானம் செய்வார்.

ஆழ்ந்த தியானத்தில் ரமணரை, பக்தர்கள் தவயோகியாகக் கண்டு தரிசிப்பார்கள். ஆஸ்ரம வாழ்க்கையில் எல்லோரும் எல்லாவற்றிலும் சமம் என்ற கோட்பாட்டை, பகவான் வலியுறுத்தினார். பதினோரு மணியளவில் ஆஸ்ரமத்திலுள்ள பசு முதலான வாயில்லா ஜீவன்களுக்கும், வெளியில் காத்திருக்கும் ஏழைகளுக்கும் உணவு வழங்கப்படும்.

புதிய மரபு

ரமணாஸ்ரமத்தில் விலங்கினங்களுக்கும், ஏழைகளுக்கும் முதலில் உணவு வழங்குப்படும் ரமணாஸ்ரமத்தில் பக்தர்களுக்கு உணவு பரிமாறிய பிறகே ரமணருக்குப் பரிமாறுவர்! இது புதிய மரபு!

ரமணரின் எளிமை

பிரமாண்ட பந்தலில் பூஜை, அன்னதானம் என அமர்க்களப்படுகிறது. காலை 10 மணி முகூர்த்தத்தில் ரமணரை அழைத்து வந்து பூஜை செய்ய ஏற்பாடு. இதற்கிடையே அன்னதானத்திற்காக நிறைய பரதேசிகள் வி.ஐ.பி பந்தலில் நுழைந்துவிட்டனர். அப்போது யாரோ ஒருவர், பரதேசிகளுக்கு கிழக்குப் பந்தலில் அன்னதானம் நடக்கும். அங்கே செல்லுங்கள். இங்கே வராதீர்கள்! என்று விரட்டியடித்தார். மணி காலை 9.50 ரமணரை அழைக்கப் போனால் அவரைக் காணோம்! எங்கே தேடியும் கிடைக்காமல் திடுக்கிட்டு திகைத்தனர். பூஜை நேரமோ நெருங்கிவிட்டது. அப்போது ஒருவர் ஓடோடி வந்து. கிழக்குப் பக்க பந்தலில் ரமணரைப்போல் ஒருவர் உட்கார்ந்திருப்பதாகச் சொன்னார். அங்கு போய்ப் பார்த்தால், பரதேசிகளுக்கு நடுவே ரமணர் அமர்ந்திருக்கிறார். இங்கே வந்து ஏன் உட்கார்ந்திருக்கிறீர்கள்! என்று கேட்டபோது, ரமணர் சொன்னார். பரதேசிகள் கிழக்குப் பந்தலுக்குப் போகணும்னு ஒருவர் விரட்டினார். அதான் இங்கு வந்து விட்டேன்!

என் கடன் பணிசெய்து கிடப்பதே

என்கடன் பணிசெய்து கிடப்பதே என்றார் அப்பர்பெருமான் அதற்கேற்ப பகவான் ரமணர் எப்போதும் ஏதாவது ஒரு பணியில் தன்னை ஈடு படுத்திக் கொள்வார் காலையில் ஒன்பது மணிக்கு செய்தித்தாள்களைப் படிப்பார். கடிதங்களைப் படிப்பார். அச்சுப் பிரதிகளைத் திருத்துவார் புத்தக பைண்டிங் செய்வார். காய்கறிகளை நறுக்குவார்; தோட்ட வேலைகள் செய்வார்; எனினும் அவருடைய உள்ளம் எப்போதும் ஆத்மானுபவத்தில் திளைத்து இருக்கும்!

மாலை மூன்று மணி அளவில் ஆஸ்ரம அன்பர்களுக்கு காபி அல்லது தேநீர் வழங்கப்படும். அதன் பிறகு ரமணர் பக்தர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பார். ஐயங்களைப் போக்குவார். சில நாள்களில் ரமணர் மெதுவாக நடந்து சென்று கிரிவலம் வருவார். ரமணரின் இளவலும் சின்ன சுவாமி என்று அழைக்கப்பட்டவரும் ஆகிய நிரஞ்சனானந்தர்  ஆஸ்ரமம் பொறுப்பாளராக இருந்து அனைத்து வளர்ச்சிப்பணிகளையும் நிறைவேற்றினார்.

ஆஸ்ரமத்தில் புத்தக விற்பனை மையம் திறப்பு மாத்ருபூதேஸ்வர் கோயில் குடமுழுக்கு, வேத பாடசாலை தொடக்கம் ஆகிய பணிகள் அனைத்தும் நிரஞ்சானந்தரால் செல்வனே நிறைவேற்றப்பட்டன. ஆஸ்ரமத்தில் இரவு ஏழு மணிக்கு மேல் பக்திப் பாடல்களை இசைப்பார்கள் ஒன்பது மணிக்கு இரவு உணவு பரிமாறப்படும்.

ரமண மகரிஷியும் ஸ்ரீநாராயணகுருவும்
அண்மைக்காலத்தில் வாழ்ந்த அருளாளர்களில் முக்கியமானவர் ஸ்ரீநாராயணகுரு. அண்ணாமலையில் ரமண மகரிஷியும், கேரளத்தில் ஸ்ரீநாராயண குருவும் சமகாலத்தில் ஞானச்செங்கோல் ஓச்சி வந்தனர்.

அச்சுதானந்தர் கோவிந்தானந்தர் வித்யானந்தர் ஆகிய சீடர்களுடன் நாராயணகுரு அண்ணாமலைக்கு வந்தார். ரமணமகரிஷி ஸ்கந்தாஸ்ரமத்தில் தாழ்வாரத்தில் அமர்ந்திருந்தார். சற்று நேரம் அவரை உற்று நோக்கிய ஸ்ரீநாராயணகுரு மரத்தடியில் அமர்ந்து ரமணருடன் அளவளாவினார்.

இன்று எங்களுடன் சாப்பிடலாமே! என்று ரமணர் ஸ்ரீநாராயணகுருவிடம் மலையாளத்தில் கூறினார். இருவரும் அமர்ந்து உணவருந்தினர். ஸ்ரீநாராயணகுரு பத்தியச் சாப்பாடு மேற்கொண்டு இருந்ததால் மோர்சாதம் கனிகள் அப்பளம் பாயசம் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டார். ரமணர் மதிய உணவிற்குப் பிறகு சற்று நேரம் நேரம் மலைப்பக்கம் சென்று வருவார். அன்று ரமணர் மலைப்பக்கம் சென்றுவருவதற்குள் ஸ்ரீநாராயணகுரு அவருக்கு கவிதைக் காணிக்கை  ஒன்றை ஆயத்தமாக வைத்திருந்தார்!

ஆம் கவிதை எழுதிய சீட்டை நாராயணகுரு ரமணரிடம் கொடுத்தார். நாராயணகுரு விடைபெற்றுச் சென்ற பிறகு ரமணர் அந்தச் சீட்டைப் பிரித்துப் படித்தார். நிவ்ருத்தி பஞ்சகம் என்ற தலைப்பில் ஸ்ரீநாராயணகுரு ரமணரைப் போற்றிப் புகழ்ந்து, சம்ஸ்காரத்தில் ஐந்து சுலோகங்கள் எழுதியிருந்தார்.

சிலநாட்கள் சென்ற பின் நாராயணகுருவின் வர்க்கலை ஆசிரமத்திலிருந்து ரமணருக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் நாராயணகுரு பகவானைப் போற்றி முனிசரய பஞ்சகம் என்ற தலைப்பில் மேலும் ஐந்து சுலோகங்கள் இயற்றி அனுப்பியிருந்தார்.

ஸ்ரீநாராயணகுரு இயற்றிய பத்துப் பாடல்களையும் (இரண்டு பஞ்சகங்கள் ) ரமணர் ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தில் தமது கைப்பட எழுதி வைத்துள்ளார். நாராயணகுரு பகவானை ராஜ சர்ப்பம் என்று போற்றி உரைத்துள்ளார். வர்க்கலை ஆசிரமத்திற்கு வரும் பக்தர்களிடம் ஸ்ரீநாராயணகுரு ரமணரைப் பற்றி விசாரிப்பது வழக்கம்.

நாராயணகுரு உடல் நலம் குன்றிய செய்தி தந்தி மூலம் ரமணருக்குத் தெரிவிக்கப்பட்டது. பகவான் ரமணர், ஸ்ரீநாராயணகுருவிற்கு உதவுவதற்காகத் தமது சீடர்கள் இருவரை அனுப்பி வைத்தார். ஸ்ரீநாராயணகுரு சமாதி அடையும் வரை அவர்கள் வர்க்கலையில் தங்கியிருந்து அவருக்கு அணுக்கத் தொண்டுகள் புரிந்தனர். இவ்வாறு இரு  நட்புக் கொண்டிருந்தனர்.

ரமணாஸ்ரமத்தில் ராஜேந்திர பிரசாத்

அப்போது இந்திய விடுதலை வேள்வி இறுதிக் கட்டத்தில் இருந்தது. மகாத்மா காந்தியின் தூதுவர்களாக மூவர் ரமணாஸ்ரமத்திற்கு வந்து, ஒரு வாரம் தங்கினர். ரமணரைத் தரிசித்து மகிழ்ந்தனர்.

பாபு ராஜேந்திர பிரசாத், ஜம்னாலால் பஜாஜ், காமத் ஆகிய மூவருமே ரமணாஸ்ரமம் வந்தார்கள். அவர்கள் விடைபெற்றுச் செல்வதற்கு முன்னால் ரமணரைத் தரிசித்தனர். பஜாஜ் அவர்கள் ரமண தரிசனம் தங்களுக்கு புதிய ஆத்ம பலத்தைக் கொடுத்துள்ளதாகக் கூறினார். ரமணரும் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். சுதந்திரத்திற்குப் பிறகு 1950 இல் ரமணரின் ஆசிகளைப் பெற்ற பாபு ராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் ஜனாதிபதியாகப் பெறுப்பேற்றார்.

தமிழ்க் கவிஞர் ரமணர்

ஆத்மஞானியாகவும் சித்தபுருஷராகவும் திகழ்ந்த ரமணர் ஒரு சிறந்த தமிழ்க் கவிஞர் ஆவார். பிøக்ஷ ஏற்கச் செல்லும் பக்தர்கள் பாடுவதற்கு ஏற்றதாக ரமணர் இயற்றியது அக்ஷரமணமாலை என்ற தோத்திரம்.

அக்ஷரம்  என்றால் அழியாதது என்று பொருள். எழுத்துக்கள் காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்பதால் அக்ஷரம் என்றனர். மேலும் எழுத்துக்கள் அகரத்தில் தொடங்கி, க்ஷகர த்தில் முடிவடைகின்றன. அழியாமல் இருக்கும் இறைவனுக்கு அழியாமல் இருக்கும் எழுத்துக்களால் தொடுத்ததே அக்ஷரமணமாலை. அக்ஷ+ரமணமாலை என்றும், அக்ஷர மணமாலை என்றும் பொருள் கொள்ளலாம். இதனை ரமணர் தமிழில் தொடுத்ததால் அ வில் தொடங்கி வை என்ற எழுத்தில் நிறைவு செய்கிறார். மொத்தம் நூற்றெட்டுக் கண்ணிகளைக் கொண்டது அக்ஷரமணமாலை. நூலின் தொடக்கத்தில் கணபதி காப்பும் அருணாசலசிவ! அருணாசலசிவ! என்ற பல்லவியும் உள்ளது. வள்ளுவர் தமது பெற்றோர் பெயர்கள் வரும் வகையில் ஆதிபகவன் என்று தொடங்கினார் ரமணர் அக்ஷரமணமாலையின் இரண்டாம் கண்ணியில் அழகு சுந்தரம் போல் என்று குறிப்பிட்டுள்ளார். ரமணரின் தாய் அழகம்மா தந்தை சுந்தரம் இருவர் பெயரையும் இணைந்து அழகுசுந்தரம் என்று இரண்டாவது கண்ணியைத் தொடங்குகிறார். தோத்திரமாகப் பாட ஏற்றது. எனினும் அக்ஷரமண மாலையில் மேலான வேதாந்தக் கருத்துக்கள் பொதிந்துள்ளன.

நான் யார் என்ற ஆத்ம விசார நூலை ரமணர் இயற்றியுள்ளார். ரமணர் இயற்றிய உள்ளது நாற்பது, திருமூலரின் திருமந்திரத்தைப் போன்ற நடையில் இயற்றப்பட்டுள்ளது.

வடமொழியில் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளிலும் ரமணர் சில கவிதைகள் இயற்றி உள்ளார். எனினும், தமிழ்க்  கவிதை எழுதுவதிலேயே ஆதிக ஆர்வம் கொண்டிருந்தார். ரமணரின் தாயார் உடல் நலம் குன்றியிருந்த பொழுது அவர் இனிய வெண்பாக்களை இயற்றினார்.

அலையாய் வருபிறவி அத்தனையும் மாற்ற
மலையாய் எழுந்த மருந்தே!- தலைவாநின்
தாள்கதியாய் வாழும் என் தாய் தாப மாற்றியே
ஆள்வதும் உன்கடனே ஆம்.

நினைத்த மாத்திரத்தில் வெண்பாக்களை இயற்றும் திறமை பெற்றவர் ரமணர். ரமணரின் நூல்கள் ரமண நூற்றிரட்டு என்ற பெயரில் வெளிவந்துள்ளன. தனி நூல்களும் உள்ளன.

ரமணர் திருவண்ணாமலைக்கு வந்த பொன்விழா ஆண்டு 1946 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. 1948 ஆம் ஆண்டு பகவானுக்கு இடது முழங்கைக்குக் கீழே ஒரு கட்டி தோன்றியது சர்க்கோமா என்ற புற்றுநோய்க் கட்டி என்று மருத்துவர்கள் கண்டறிந்தனர். கரத்தை வெட்டி எடுக்க வேண்டுமென்று கூறினார். மகான் இயற்கை வழி நடக்கட்டும் என்று கூறிவிட்டார். அறுவைச் சிகிச்சை பயனளிக்கவில்லை. நோயைப் பொருட்படுத்தாமல் மகரிஷி தனது பணிகளைச் செய்து வந்தார்.

1950ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் பகவான் பரிபூரணம் எய்தினார். சற்றே கண்களை விரித்து, புன்னகை மலர்ந்து விழியோரத்தில் பேரானந்தக் கண்ணீர் மல்கக் காட்சியளித்த நிலையில் சித்தி அடைந்தார். அதே நேரத்தில் ஓர் எரிநட்சத்திரம் வானவெளியில் மெல்ல நகர்ந்து அண்ணாமலைச் சிகரத்தில் ஐக்கியமானதை நகரவாசிகள் கண்டனர்! அருணாசலசிவ என்று பக்தர்கள் முழங்கினர்.

மகரிஷியின் பூதவுடலை பத்மாசனத்தில் இருக்கச் செய்து அபிஷேக ஆராதனைகள் நடத்தினர். மாத்ரு பூதேஸ்வரர் சன்னதி பழைய தரிசன மண்டபம் இரண்டுக்கும் இடையில் பூதவுடலை சமாதிகொள்ளச் செய்தனர். அன்றாட வழிபாடுகள் நடைபெறுகின்றன.

திருவண்ணாமலை ரமணாசிரமத்தில் ஆண்டு தோறும் ஆராதனை விழா நடைபெறுகிறது. ரமணாசிரமம் சேஷாத்ரி சுவாமிகள் அதிஷ்டானம் உள்ள அதே சாலையில் வலப்புறத்தில் அமைந்துள்ளது.

திருவண்ணாமலையில் ரமணாஸ்ரமத்தில் அவருடைய கமண்டலம், பாதணி, கைத்தடி ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த புண்ணிய பூமியில் ரமணர் இன்றும் தங்கியிருந்து தங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் பக்தர்கள்.


ஞாயிறு, 6 டிசம்பர், 2020

சிகண்டினி

சிகண்டினி

துருபதனின் மகளான சிகண்டினி இப்போது சிகண்டி! இந்த சிகண்டி அழகிய கந்தர்வன் வடிவில் அடுத்து நேராகச் சென்றது புத்புதகம் எனும் இடத்திற்கு தான்..! தன் தோற்றத்தை அளித்த கந்தர்வனே, அந்த இடத்திற்கு செல்ல அவனுக்கு வழி காட்டினான். புத்புதகம் வீரர்களை உருவாக்கும் இடம். குறிப்பாக எல்லாவித அஸ்திரங்களையும் பிரயோகிக்க கற்றுத் தரும் ஒரு இடமாகும். அந்த பயிற்சிகளைப் பெற்ற சிகண்டி, வெகு சிக்கிரத்தில் பெரும் வீரனாகி விட்டான். பெரும் வீரனாக மாறி கந்தர்வனுக்கான எழிலோடு ஒரு ஆண் வாரிசாக அவன் துருபத மன்னனை வந்து சந்தித்த போது துருபதனுக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு ஒரு அளவே இல்லை.இருந்தாலும் இப்போதும் பீஷ்மரை எண்ணி துருபதன் மனம் அச்சப்படவே செய்தது. ஆனால் அந்த அச்சத்தை சிகண்டி போக்கினான். தந்தையே... கவலையை விடுங்கள். விதிப்பாடு என்னை ஆளாக்கிவிட்டது. அந்த மாலையை நான் விளையாட்டாக அணிந்த வேளை இன்று நானொரு மாவீரன். என் வீரத்துக்கு எந்த நாளிலும் இழுக்கு ஏற்படப் போவதில்லை. தைரியமாக இருங்கள். என்று ஆறுதல் கூறினான்.

மகாபாரதத்தின் பெரும் வியப்பிற்கும் சிந்தனைக்கும் உரிய பாத்திரமே சிகண்டினியாக இருந்து பின் மாறிய சிகண்டி!மகாபாரத பாத்திரங்களில் சிகண்டியை போலவே பழிவாங்கவென்றே உருவான பாத்திரம்தான் திருஷ்டத்துய்மன்! பீஷ்மரால் சிகண்டி வந்தது போல, துரோணரால் வந்தவன் இவன்.அதாவது வில்வித்தையில் தலை சிறந்த அர்ஜுனன், ஏகலைவன் போன்ற பெரும் வில்லாளி களின் குருநாதரான துரோணரை பழி வாங்கவென்றே வேள்வி ஒன்றால் பெறப்பட்டவன். இவன் யாரோ அல்ல! பாஞ்சாலி எனப்படும் திரவுபதியின் சகோதரன். இவன் எப்படி வந்தான் என்று பார்ப்போம். துரோணரும், பாஞ்சால அரசன் துருபதனும் நல்ல நண்பர்கள். ஒன்றாக படித்தவர்கள். அப்போது துருபதன் துரோணரிடம், துரோணா! நாளையே நான் பாஞ்சால நாட்டுக்கு அரசனானாலும், உன்னுடனான நட்பை துளியும் பிரிய மாட்டேன். அதுமட்டுமல்ல! என்னுடையது அனைத்தும் உனக்கும் சொந்தம். நான் எதை அனுபவித்தாலும் அதில் சரிபாதி பங்கு உனக்கும் உண்டு. அந்த வகையில், எனது பாஞ்சால நாட்டை நான் ஆளத் தொடங்கும் போது உனக்கும் அதில் பாதியை அளித்து உன்னை அதற்கு அரசனாக்குவேன், என்று சத்தியம் செய்து கொடுத்திருந்தான். துரோணரும் அவனது நட்பின் சிறப்பை எண்ணி சந்தோஷப்பட்டார்.நாட்கள் கடந்தது. துருபதனும் பாஞ்சால நாட்டு மன்னன் ஆனான். அப்போது துரோணர் வறுமையின் பிடியில் இருந்தார். அவருக்கு அஸ்வத்தாமன் என்று ஒரு பிள்ளையும் பிறந்து அவனும் பெரும் வீரனாக வளர்ந்திருந்தான். இந்த நிலையில் தனக்காக இல்லாவிட்டாலும் தன் மகனுக்காக பாஞ்சால நாட்டில் பங்கு கேட்டு, துருபதன் முன் சென்று நின்றார். ஆனால் துருபதன் மிக மாறிவிட்டிருந்தான். அரச போகமும் யோகமும் அவன் கண்களைக் கட்டியிருந்தன. துரோணர் வரவும் முதலில் யார் என்றே தெரியாதவன் போல் நடந்து கொண்டான். பின் துரோணரை தெரிந்து கொண்டவன், அடடே, குருகுலத்து நண்பனா? வேதம் படிக்க வேண்டிய நீ இங்கே எங்கே வந்தாய்? என்று கிண்டலாகக் கேட்டான். துரோணருக்கு அப்போதே துருபதன் பழைய நண்பன் இல்லை என்பது புரிந்து விட்டது. இருந்தும் அவன் குருகுலத்தில் செய்து தந்த சத்தியத்தை நினைவுபடுத்தினார். அது நினைவுக்கு வரவும் துருபதனுக்கு சிரிப்புதான் வந்தது. துரோணா! உன்னை நினைத்தால் எனக்கு பரிதாபமாக உள்ளது. பள்ளிப் பிராயத்தில் ஏதோ விளையாட்டாக சொன்னதை இவ்வளவு உறுதியாகவா எடுத்துக் கொள்வது? பாஞ்சால தேசம் என்ன வெட்டித்துண்டு போட்டுத்தர அது என்ன பட்டுத்துணியா? தேசமப்பா.... தேசம்! இந்த தேசத்தை ஒரு க்ஷத்திரியனான நான் ஆளவே பெரும் பாடுபட வேண்டியிருக்கிறது.

நீயோ வேதியன். பரத்வாஜ முனிவரின் புத்திரன். தவம்புரிவதை விட்டுவிட்டு நாடாள ஆசைப்படுகிறாயே...! வேடிக்கையப்பா பெரும் வேடிக்கை....என்று இழுக்காக பேசி சிரித்தான். துரோணருக்கு கூச்சம் எடுத்தது. இருந்தும், துருபதா.... உன் சத்தியத்தை நம்பி நான் மோசம் போய் விட்டேன். சத்தியத்தை மதிக்காத பாவத்துக்கு ஆளாகாதே. வாக்கில் நில்.       உன்னைவிட என்னால் இந்த தேசத்தை நன்றாக ஆளமுடியும், என்றார்.  ஆனால் துருபதன் கேட்கவில்லை. மாறாக மேலும் அவரை இழிவுபடுத்தி வேண்டுமானால் உனக்கு பொற்காசுகளை பிச்சையிடுகிறேன். பொறுக்கிக் கொள், என்று கைநிறைய காசுகளை அள்ளி துரோணர் முன்வீசி எறிந்தான். எப்போதும் நாம் தாழ்வாக இருக்கும் பொழுதைக் காட்டிலும், உயர்வாக இருக்கும் பொழுதுதான் மிகவே கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நம் செயல்களாலேயே நாம் மோசமான வினையை தேடிக் கொள்ள நேரிடும். துரோணர் வரையில் துருபதன் நடந்துகொண்ட விதம் துரோணரை கோபத்தின் உச்சிக்கே கொண்டுசென்றது. துருபதா! உன்னை நான் சும்மாவிடமாட்டேன். வேதியன் என்றா என்னை இகழ்ந்தாய்...? வேதமும் கல்வியும் எப்படி இரு கண்களோ அப்படித்தான் எல்லாமே! நீ தர மறுத்த நாட்டை மட்டுமல்ல! உன்னையே நான் என் அடிமையாக்கிக் காட்டுகிறேன். அப்போது தெரியும் இந்த துரோணாச்சாரி எப்படிப்பட்டவன் என்று...என சபதம் போட்டுவிட்டு சென்று விட்டார்.அடுத்து அவர் ஒரு வனத்தில் சந்தித்தது பாண்டவர்களையும் கவுரவர்களையும் தான்!இருசாரரும் ஒரு இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தர்மரின் மோதிரம் அங்குள்ள கிணற்றில் விழுந்து விட்டது. அதை எப்படி எடுப்பது என்பது தெரியாமல் அவர்கள் விழித்து நின்றபோது, துரோணர் அந்த பக்கமாய் வந்தார். மோதிரம் விழுந்து விட்டதை அறிந்தவர், அர்ஜுனன் வசமிருந்த வில்லையும் அம்பையும் செலுத்தினார். அம்பின் நுனி மோதிரத்தை தன்னுள் பூட்டிக் கொண்டு துரோணர் முன் வந்து விழுந்தது. அதைக் கண்டு தர்மர் முதல் அவ்வளவு பேரும் ஆனந்தப்பட, அர்ஜுனன் துரோணரை அப்போதே தன் குருவாக வரித்துக் கொண்டான். பின், பீஷ்மரிடம் துரோணரை கொண்டு சென்று நிறுத்த அவர் இருசாரருக்கும் குருவாக துரோணரை நியமித்தார். துரோணரும் தான் அறிந்த அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்தார். ஒருநாள் அனைவருக்கும் அரங்கேற்றம் நிகழ்த்தப்பட்டது. அர்ஜுனன் ஒருபுறமும், துரியோதனன் மறுபுறமும் துரோணரிடம் தங்களது குருகாணிக்கை என்ன? என்று கேட்டனர். துரோணரும், நான் கேட்பதை நீங்கள் கட்டாயம் தருவீர்களா? என்று பலத்த பீடிகை போட்டார். அர்ஜுனன் வேகமாக முன் வந்து, குருவே! நான் என் உயிரைக் கூட தர சித்தமாக இருக்கிறேன், என்றான். அதைக் கேட்ட துரியோதனனும், குருநாதா.... நானும் ஒன்றும் அர்ஜுனனுக்கு சளைத்தவனில்லை. எதுவேண்டுமானாலும் கேளுங்கள்! தங்கள் காலடியில் அதை வைக்கிறேன், என்றான். அப்போது துரோணர் இருவரிடமும் கேட்டது ஒன்றைத்தான். அதுதான் துருபதனை ஒரு கைதியாக தன் காலடியில் கிடத்துவது என்பதாகும். ஒரு வினாடி இருவருமே அதிர்ந்தாலும், குருநாதரின் விருப்பத்தை நிறைவேற்றத் தயாராயினர்.

முதலில் துரியோதனன் துருபதன் மீது போர் தொடுத்தான். ஆனால், அதில் துருபதன் தான் வெற்றி பெற்றான். அடுத்து அர்ஜுனன் போர் தொடுத்தான். அவனுக்கு தர்மர், பீமன், நகுலன், சகாதேவன் என்று சகலரும் பெரிதும் உறுதுணை!போரில் அர்ஜுனன் வெற்றி பெற்றான். துருபதனைக் கைது செய்து தன் ரதத்திலேயே தூக்கிப் போட்டு இழுத்து வந்து துரோணரின் காலடி நோக்கி தள்ளி விட்டான். பின், குருநாதா! இப்போது உங்கள் காலடியில் கிடப்பது துருபதன் மட்டுமல்ல. இவனது பாஞ்சால தேசமும் தான்... நீங்கள் ஒருபாதியைதான் கேட்டீர்கள். ஆனால், முழு தேசத்தையே நான் இப்போது உங்களுக்கு அர்ப்பணித்து விட்டேன், என்றான்துருபதனுக்கும் தன் தவறு புரிந்தது. இருந்த போதிலும் பாண்டவர்களிடம் பிடிபட நேர்ந்து இப்படி காலில் விழுமளவு வந்தது மனதை ரணப்படுத்திவிட்டது. துரோணருக்கும் மனம் கசிந்தது. துருபதா.... என் பால் உனக்கு நட்பில்லாமல் போனாலும், என்னிடம் அது இப்போதும் உள்ளது. நீ செய்யத்தவறியதை நான் இப்போது செய்கிறேன். நீ தராத பாதி நாட்டை நான் உனக்கு தருகிறேன். பெற்றுக் கொள். இனியாவது அகந்தை கொள்ளாமல் தர்ம நெறிகளோடு வாழக் கற்றுக் கொள், என்று துருபதனுக்கு பாஞ்சால நாட்டின் வட பகுதியை தந்து அதற்கு அரசனாகவும் ஆக்கினார். தன் நாடு தனக்கே தானமாக வந்து சேர்ந்தது துருபதனை கொந்தளிக்க வைத்தது. அதுபெரும் கோபமாக மாறியது. அந்த கோபம் துரோணர் மேல்தான் திரும்பியது. துரோணரை வெற்றி கொண்டு பழிக்குபழிவாங்க துருபதன் மனது துடித்தது. துரோணரிடம் இருப்பதோ பிரம்ம தேஜோபலம்! தன்னிடம் இருப்பதோ க்ஷத்திரியபலம்.

க்ஷத்திரிய பலத்துக்கு, பிரம்ம தேஜோபலம் துளியும் ஈடாகாது என்பது துருபதனுக்கு புரிந்தது. இவ்வேளையில் தான் யாஜர், உபயாஜர் என்று இரண்டு பிரம்மரிஷிகளை துருபதன் பார்த்தான். அவர்களிடம் தன் ஆதங்கத்தைச் சொல்லி, பிரம்ம தேஜோபலத்தை வெல்லும் சக்தியை நான் பெற வழிகாட்டுங்கள், என்று கேட்டான். அவர்கள் சவுத்ராமணி எனும் யாகம் செய்யச் சொன்னார்கள். அப்படி ஒரு யாகத்தை உரிய முறையில் செய்தால் யாக பலனாய் மிகுந்த அழகும் அறிவும் வீரமும் உடைய புத்திரன் மட்டுமல்ல, புத்திரியும் தோன்றுவது நிச்சயம், என்றார் யாஜர். யாகமும் முறைப்படி நிகழ்த்தப்பட்டது. இந்த யாகத்தில் ஆகுதியை தேவர்களுக்கு அரசனும் அரசியும் சேர்ந்தே தர வேண்டும்.  ஆனால் துருபதனின் மனைவியான ப்ருஷதி, தான் இருக்கவேண்டிய இடத்தில் யாஜரையே தன்சார்பில் இருந்து யாகம்புரியச் சொன்னாள்.துருபதனும் யாஜரும் ஒன்றுபட்டு ஆகுதியை வழங்கவும். அந்த யாக நெருப்பில் இருந்து ஒரு அழகிய வீரன் வெளிப்பட்டான். அவன் வெளிப்பட்ட நொடியில் அசரீரி ஒலித்தது. இவனே துரோணருக்கு எமன். அவருக்கு நண்பனாகவும் திகழ்வான். இவனால் பாஞ்சால தேசம் நற்பெயர் பெறும், என்றது அந்த வாக்கு. இவனே திருஷ்டத்துய்மன்! ஜெயிக்க முடியாதவன் என்பது இதன் பொருள். திருஷ்டத்துய்மனைத் தொடர்ந்து அந்த யாகத்தில் அழகிய பெண்ணொருத்தியும் தோன்றினாள்! அவளே திரவுபதி.


அம்பை, அம்பிகா, அம்பாலிகா

அம்பை, அம்பிகா, அம்பாலிகா

காசி ராஜனின் சுயம்வர மண்டபத்திலே பீஷ்மர்! அதைக்கண்ட அவ்வளவு அரசர் பெருமக்களிடமும் அதிர்ச்சி! அடுத்த அதிர்ச்சியாக பீஷ்மர் காசிராஜனின் மகள்களான அம்பை, அம்பிகா, அம்பாலிகா ஆகிய மூன்று பேரையும் தன் வாள் முனையில் மடக்கி ரதத்தில் ஏற்றி அஸ்தினாபுரத்திற்குப் புறப்பட்டு விட்டார். அந்த நாளில் அரசர்களிடையே, இப்படி கவர்ந்து மணம் செய்து கொள்வது அனுமதிக்கப்பட்டிருந்தது. இதை ராட்சஷ விவாகம் என்பார்கள். இதைப்போல, இன்னும் ஏழுவகைத் திருமணங்கள் இருந்தன. ஆனால், எந்த விவாகமாக இருந்தாலும்... அதில் அந்த பெண்ணின் விருப்பம் முக்கியம். பீஷ்மர் தன் தம்பியின் பொருட்டு, இம்மூன்று பேரையும் கவர்ந்து செல்வதைப் பொறுக்காமல், சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்த அரசர்கள் பீஷ்மரை எதிர்த்துப் போர்புரிய முற்பட்டனர். ஆனால், அவரின் வீரத்தின் முன்னால் அவர்கள் தெறித்து விழுந்தனர். சவுபல தேசத்தின் அரசன் சால்வன், கடத்தப்பட்ட அம்பையின் காதலன். அவன் மட்டும் விடாமல் பீஷ்மரின் ரதத்தை பின்தொடர்ந்தான். பாணங்களால் அவரை வீழத்தவும் முயன்றான். ஆனால், இறுதி வரை அவனால் முடியாமல் போயிற்று.ரதத்தில் இருந்த அம்பையும், சால்வன் தோற்று திரும்பச் செல்வதைக் கண்ணீருடன் பார்த்தாள்.

ஒருவழியாக பீஷ்மர், வருங்கால அஸ்தினாபுர ராணிகளுடன் அரண்மனை புகுந்தார். அந்த மூவரிடத்திலும் அப்போது தான் தன் தம்பி விசித்திர வீரியன் பற்றிக் கூறினார். இளவரசிகளே! உங்களை நான் என்பொருட்டு கவர்ந்து வரவில்லை. என்தம்பியும்,  அஸ்தினாபுரத்து அரசனுமான விசித்திர வீரியனுக்காகவே கவர்ந்து வந்தேன். உங்களால் எங்கள் வம்சம் விருத்தியடைந்து இந்த நாட்டு மக்கள் வாழ்வாங்கு வாழவேண்டும் என்று விரும்புகிறேன், என்றார். அவரின் கருத்தை அம்பிகையும், அம்பாலிகையும் ஏற்றுக் கொண்டனர். ஆனால், அம்பை பீஷ்மரைப் பார்த்துக் கண்ணீர் விட்டாள். பீஷ்மரே! நீங்கள் என் விஷயத்தில் அவசரப்பட்டு விட்டீர்கள். நான் சவுபல அரசன் சால்வனை விரும்புகிறேன். சுயம்வரத்தில் அவருக்கே மாலை சூட எண்ணியிருந்தேன். இதை அறியாமல் நீங்கள் என்னைக் கவர்ந்து வந்தது பெரும்பிழை. இது நீதியாகாது, என்றாள். பீஷ்மர் ஆடிப்போனார். அவர் துளியும் எதிர்பார்த்திராத நிலைப்பாடு. பெண்களிடம் சினேகம், அவர்களை ரசிப்பது, அவர்கள் தொடர்பான காதல் தொடர்பான உணர்வுகளுக்கெல்லாம் இடமே இல்லாத, சத்திய வாழ்வு வாழ்பவராக இருந்ததால், இப்படி ஒரு காதல் சிக்கல் உருவாகக்கூடும் என்பதை அவரால் யூகிக்க முடியாமல் போய்விட்டது.அம்பையின் கண்ணீரும், கோபமும் பீஷ்மரை சிந்திக்க வைத்தது. ஒரு முடிவுக்கு வந்தவராக, பெண்ணே நீ சால்வனை மணந்து கொள். உன் காதலை நான் கெடுக்கத் தயாரில்லை.

நீ போகலாம், என்றார்.அம்பைக்கு தன் காதல் தப்பி பிழைத்துவிட்ட சந்தோஷம். அதே சமயம் அம்பாலிகையும், அம்பிகையும் விசித்திரவீரியனை மணந்து கொண்டனர். அம்பை தன் காதலன் சால்வனின் நாட்டுக்கு ரதமேறி சென்றாள். ஆனால், பாவம்.....! அவள் வாழ்வில் விதி விபரீதமாக விளையாடத் தொடங்கியது. தன் முன் வந்து நின்ற அம்பையை ஏற்க அவன் மறுத்து விட்டான். உன்னை நான் எதிரியிடம் இருந்து வெல்ல முடியாதவனாகி விட்டேன். தர்மப்படி நீ பீஷ்மரின் உடைமையாகி விட்டாய். உன்னைக் கவர்ந்து சென்றவன் மணப்பது தான் நியாயம். உனக்கும் அது தான் அழகு, என்று சொல்ல அம்பைக்கு தலையில் இடி விழுந்தது போல் ஆனது. வேறு வழியின்றி மீண்டும் அஸ்தினாபுரத்திற்கே திரும்பினாள். பீஷ்மரிடம் நடந்ததைச் சொன்னாள். என்னை நீங்கள் கவர்ந்து வந்தபடியால், எவருமே என்னை மணம்புரிய மறுப்பார்கள் என்பது தான் இப்போது என்நிலை. எனவே, என்னைக் கவர்ந்து வந்த நீங்களே மணந்து கொள்ளுங்கள், என்றாள். பீஷ்மர் அவளிடம், அம்பா! நான் ஜிதேந்திரியன். இப்பிறப்பில் எவரையும் மணக்க மாட்டேன் என்று சத்திய பிரக்ஞை கொண்டிருப்பவன். அதனால், உன்னை மட்டுமல்ல யாரையும் நான் எண்ணத் தயாரில்லை. சால்வனின் கருத்து சரியாக இருக்கலாம். ஆனால், உன்னை நான் கவர்ந்தது நான் மணப்பதற்காக அல்ல. இந்த விஷயத்தை நீ அவனிடம் மீண்டும் சென்று சொன்னால் உனக்கு விமோசனம் பிறக்கும், என்றார்.

அம்பையும் அவர் சொன்னது போல செய்ய சால்வன் ஏற்கனவே சொன்ன பதிலையே திரும்பச் சொன்னான். மண்ணில் கைதவறி விழுந்த பதார்த்தத்தை திரும்ப எடுத்து உண்ண முயல்வது எப்படி இழுக்கான செயலோ.... அப்படித்தான் நான் உன்னை மணப்பதும் ஆகும். எனவே, என்னை மன்னித்து விலகிச் செல் , என்றான். சால்வனின் பதிலால் அம்பை விக்கித்துப் போனாள். நடுத்தெருவில் நிற்பவள் போல் ஆனாள். அம்பைக்கு ஏற்பட்ட இந்த ஏமாற்றம் அவளுக்குள் பெரும் கோபமாக உருவெடுத்தது. பீஷ்மரிடம் திரும்பிய அவள்,ஒரு பெண்ணாகிய என் பாவத்தை கொட்டிக் கொண்ட விட்ட உங்களைச் சும்மா விடமாட்டேன். நீங்கள் நினைத்தால் மட்டுமே மரணிக்கலாம் என்னும் வரம் பெற்ற உங்களுக்கு, என்னாலேயே மரணம் சம்பவிக்க வேண்டும் என்பதே இனி என் விருப்பம். அது சம்பவித்தே தீரும். அதற்காக நான் தவம் மேற்கொள்வேன், என்று சங்கல்பம் செய்து கொண்டவள் இமயச்சாரலை அடைந்து நெடிய தவத்தைத் தொடங்கினாள். எப்படி தெரியுமா? கால் கட்டை விரலை ஊன்றி, ஆக்ரோஷமும் பெரும் கோபமுமாய் அவள் செய்யத் தொடங்கிய தவம் 12 ஆண்டுகள் தொடர்ந்தது. அது தேவாதி தேவர்களை எல்லாம் கலக்கியது. விண்ணில் இருந்த இந்திரன் அவளின் தவத்தைப் பார்த்து வியந்தான். தனக்கு இணையான வீரரான பீஷ்மரை அழிக்க எண்ணி அவள் தவம் செய்ததால், அவனால் வரம் தர முடியவில்லை. இறுதியில், அம்பையின் தவம் முருகப்பெருமானையே வரவழைத்து விட்டது. முருகப்பெருமானும் அம்பை கோரிய வரமான பீஷ்மரைக கொல்லும் நேரடியாகத் தந்து விடவில்லை. தேவலோகத்து தாமரைப் பூக்களால் ஆன ஒரு மாலையை அவளிடம் தந்த முருகன், இதை எவன் ஒருவன் சூகின்றானோ, அவனே பீஷ்மனுக்கு காலன், என்று கூறி மாலையைத் தந்து விட்டு மறைந்தார்.ஆனால், அந்த மாலைக்குரிய கழுத்து அகப்பட வேண்டுமே? அதிலும், பீஷ்மாச்சாரியாரை எதிரியாகக் கருதி அவரைக் கொல்லும் எண்ணம் கொண்ட ஒரு அரசனும் அப்போது இல்லை. மேலும், அம்பைக்காக அவரை யாரும் பகைத்துக் கொள்ளவும் விரும்பவில்லை. அம்பை அந்த மாலையுடன் பல அரசர் பெருமக்களைச் சென்று பார்த்தாள். அதைச் சூடிக் கொள்பவருக்கு நான் அடிமை என்றும் சொல்லிப் பார்த்தாள். யாரும் உடன்படவில்லை.

இறுதியாக, பாஞ்சால அரசன் துருபதனை நாடி வந்தாள். இவன் யார் தெரியுமா?மகாபாரதத்தில் பிரதான நாயகியான திரவுபதி எனப்படும் பாஞ்சாலியின் தந்தை. அவன் பாஞ்சால தேசத்திற்கு அரசன் ஆனதே ஒரு ஆச்சரியமூட்டும் செய்தி. அவனது பிறப்பும் மிக விநோதமானது. அதை அறிந்தால் தான் துருபதன் என்னும் பெயர் காரணத்தை நாம் அறிய முடியும். இவன் பிறப்பை மட்டுமல்ல. இவனது மகளான சிகண்டினி பற்றியும் தெரிந்து கொண்டால் தான் அம்பையின் வாழ்வில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது நமக்கு தெரிய வரும். பாஞ்சால மன்னன் முதலில் புத்திரப்பேறு இல்லாமல் இருந்தான். அதற்காக காட்டுக்குச் சென்று தவத்தில் இறங்கினான். அரசர்கள் கடுந்தவம் புரிவது மிகவும் கடினம். அவர்களால் புலன்களை நெடுங்காலத்திற்கு அடக்கியாள முடியாது. துருபதனுக்கும் இதே போன்ற சோதனை இந்திர லோகத்து மேனகை வடிவில் ஏற்பட்டது. அந்த வனத்தில் இருந்த அபூர்வ ஜாதி பூக்களை பறித்துச் செல்ல அவள் வந்திருந்தாள். தவச்சிந்தனை கலைந்த துருபதன் அவளைப் பார்த்து விட்டான். அவள் மீது ஆசை கொண்டான். அந்த ஆசையின் விளைவாக அவனையும் அறியாமல் அவனது இந்திரியம் கீழே விழுந்தது. தன்னை மேனகை இழிவாக கருதி விடுவாளோ என்று எண்ணி அதனைக் காலால் மறைத்து விட்டான். இவை அனைத்தும் துரு என்னும் மரத்தின் கீழ் நிகழ்ந்தது. மேனகை சென்றதும், மன்னன் காலை விலக்கினான். அந்த இடத்தில் கர்ப்பத்தில் உருக்கொண்டது போல ஒரு குழந்தை. இதை கலியுகத்தோடு ஒப்பிடக்கூடாது. துவாபர யுகத்து தர்மத்திற்கேற்ப, இந்த சம்பவம் நிகழ்ந்தது. துரு மரத்தின் கீழ் கால் என்னும் பதம் பட்டு பிறந்த காரணத்தால், அந்த குழந்தை துருபதன் என்று பெயர் வந்தது. இந்த துருபதனைப் பார்க்கத் தான் அம்பை தேவலோகத்து மாலையுடன் வந்தாள்.


ராமகிருஷ்ணர் பகுதி ஐந்து

ராமகிருஷ்ணர் பகுதி ஐந்து

கதாதரனுக்கு அவரது தந்தை சுதிராம் தம் முன்னோர்களின் பெயரை வரிசையாக சொல்லிக் கொடுத்தார். அவர் சொல்வதை கதாதரன் அக்கறையுடன் கவனிப்பான். எத்தனை நாள் கழித்து திரும்ப கேட்டாலும் அப்படியே சொல்வான். ஆனால், அவருக்கு பள்ளிப்பாடத்தில் மட்டும் அதிக நாட்டம் இல்லை. குறிப்பாக கணக்கு என்றால் அவருக்கு வேப்பங்காய். யாராவது வாய்ப்பாடு சொன்னால் அவரை வெறுப்போடு பார்ப்பார். சிறிது காலத்தில் கதாதரன் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.பள்ளியில் சேர்ந்த சில மாதங்களிலேயே அவரை அனைவருக்கும் பிடித்துவிட்டது. படிப்பில் புத்திசாலியில்லாவிட்டாலும், மற்றவகைகளில் அவரை ஏனோ அத்தனைபேருக்கும் பிடித்திருந்தது. கடைசி வரை கணக்குப்பாடத்தை மட்டும் அவர் விரும்பவேயில்லை. இதை சுதிராம் பெரிதுப்படுத்தவில்லை. இறைவனின் ஆணைப்படி எப்படியாவது தன் மகன் முன்னேறிவிடுவான் என்றே அவர் நினைத்தார். வீட்டில் குறும்பு செய்தால்கூட அவர் கண்டிப்பதில்லை. அதேநேரம் கதாதரனும் குறும்பு செய்துவிட்டு எதையும் மறைப்பதில்லை. நான்தான் அதை செய்தேன் என தைரியமாக ஒப்புக் கொள்வார். இந்தப் போக்கு சுதிராமுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் கதாதரனுக்கு புத்திமதிகள் சொல்வார். குறும்பு செய்யவேண்டாம் என கேட்டுக் கொள்வார். அதை அப்படியே ஏற்றுக் கொள்வார் கதாதரன். ஆனால் வேறுமாதிரியான குறும்புகளை செய்வார். அந்த குறும்பினால் நிச்சயமாக மற்றவர்களுக்கு பாதிப்பு இருக்காது. இப்படியாக அவரது இளமைக்காலம் கழிந்து கொண்டிருந்தது. சிறிது காலம் கழித்து கணிதம் நீங்கலாக மற்ற பாடங்களில் கதாதரன் ஆர்வம் செலுத்தினார். நன்றாக எழுதினார். ஆன்மிக பெரியவர்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொண்டார். அவற்றை படிக்கும் நேரத்தில் இந்த உலகையே மறந்துவிடுவார். தியானம் செய்பவரை போல தோன்றும்.

 அவரது காலத்தில் ராமாயணமும், மகாபாரதமும் மிகவும் பிரசித்தம். ஊர் ஊராக நாடகம் மூலம் ராமாயணம், மகாபாரதம் கதை மக்களிடம் சொல்லப்படும். ஆனால் நாடகக் குழுவினரிடம் பணம் இருக்காது. எனவே அவர்கள் மேடைப்போட்டு நாடகம் நடத்தமாட்டார்கள். தெருவோரங்களில் மாதக்கணக்கில் தொடர்ச்சியாக நாடகத்தை நடத்திக் காட்டுவார்கள். இதைப்பார்ப்பதற்கென்று தவறாமல் கூட்டம் வரும். அந்த கூட்டத்தில் ஒருவராக கதாதரனும் இருப்பான். அந்த நாடகத்தில் வரும் வசனங்களையும், பாடல்களையும் கதாதரன் வரிவிடாமல் கேட்பார். வீட்டிற்கு வந்து ஒன்றுவிடாமல் திரும்ப சொல்லிப்பார்ப்பார். கற்றலில் கேட்டலே நன்று என்ற பழமொழிக்கு ஏற்ப, கதாதரனின் மனதில் ராமாயணம், மற்றும் மகாபாரத கதைகள் இலகுவாக பதிந்தன. இதைத்தவிர தான் வாழ்ந்த கிராமத்தில் உள்ள குயவர்களின் வீட்டிற்கு சென்றுசுவாமி பொம்மைகளை வாங்கி வருவார். அவர்கள் பொம்மை செய்யும் விதத்தை பார்த்துக் கொண்டேயிருப்பார். அவர்களோடு இணைந்து பொம்மை செய்யவும் கற்றுக் கொண்டார். நண்பர்கள் வீட்டிற்கு சென்று பொம்மைகள் செய்து கொடுப்பார். யாரேனும் ஓவியரைக் கண்டால் விடமாட்டார். அவர்களோடு சேர்ந்த ஓவியம் வரைவார். பொம்மை செய்வதிலும், ஓவியம் வரைவதிலும் தேர்ச்சி பெற்றார். பள்ளிப்படிப்பை விட இதுபோன்ற காரியங்களில் அவருக்கு அதீத அக்கறை இருந்தது. ஓய்வு நேரங்களில் புராண இதிகாசங்களை படிப்பார். வளர வளர தெய்வீக எண்ணங்கள் மனதில் பதிந்தன. சில நேரங்களில் பக்தி பரவசத்தால் மயங்கி விழுந்துவிடுவார். நாட்டுப்புற பாடல்களையும் அவர் கற்றுக் கொண்டார். அந்தக் காலத்தில் பேய், பிசாசு பயம் மக்களிடம் மிகவும் அதிகம். அங்கே பேய் இருக்கிறது, இங்கே பிசாசு இருக்கிறது என்றெல்லாம் மக்கள் பேசிக் கொள்வார்கள். அந்த இடங்களுக்கு தைரியமாக சென்று வருவார் கதாதரன்.

சுதிராமுக்கு ஆதரவு அளித்த சட்டர்ஜி குடும்பத்தினருக்கு தெய்வ அருள் வந்து ஆடுவார்கள். அவர்கள் அருகில் செல்லவே கிராமமக்கள் தயங்குவார்கள். ஆனால் கதாதரன் தைரியமாக அவர்களது அருகில் சென்று அவர்கள் செய்வதையெல்லாம் கவனிப்பார்.இந்த மாமா, அத்தை ஆகியோர் சுவாமி ஆடுவதைப் போல எனக்கும் ஆடத் தோன்றுகிறது. என்மேலும் தெய்வம் வந்து அமராதா? என்று வேடிக்கையாக சொல்வார். கதாதரனிடம் ஒரு வசீகர சக்தி இருந்தது. தன்னோடு பழகும் சிறுவர்களை விரைவில் தன்வசப்படுத்திவிடுவார். அவரது நண்பர்கள் சாப்பிடச் செல்லும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் அவரோடு இருப்பார்கள். அதுமிட்டுமின்றி அந்த கிராமத்தில் வசிக்கும் பெண்களும், உறவுக்காரர்களும் ஏதாவது காரணம் சொல்லிக் கொண்டு கதாதரனைக் காண வருவார்கள். அவர்கள் கையில் மிட்டாய் அல்லது பழங்கள் இருக்கும். கமார்புகூரில் சுதிராமனுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார். அவரது பெயர் மாணிக்ராம். அவர் கதாதரனைப் பார்க்காமல் ஒருநாள் கூட இருக்கமாட்டார். கதாதரனின் உடலில் உள்ள அங்க அடையாளங்களைக் கொண்டு இவன் பிற்காலத்தில் பெரிய மகானாக வருவான் என்று சொல்வார். கதாதரனுக்கு பல பரிசுகளை கொடுப்பார். இதிகாசங்களை படித்த கதாதரன் அதிலுள்ள பாத்திரங்களைப் போல நடித்துக் காட்டுவார். சில நேரங்க்ளில் அந்த பாத்திரத்தோடு ஒன்றி அப்படியே மயக்கநிலையில் ஆழ்ந்துவிடுவார். ஊராரில் சிலர் வேறுமாதிரியாக பேச ஆரம்பித்தனர்.அந்த சிறுவனுக்கு வலிப்பு வருகிறது. அதனால்தான் அவன் அடிக்கடி மயக்கம் அடைந்துவிடுகிறான், என்று கேலிபேசினர். கதாதரனின் பெற்றோர் இந்த கேலிபேச்சு கண்டு பயந்தார்கள். இப்படியே சொல்லிச் சொல்லி மற்றவர்களையும், நம்பவைத்து விடுவார்களோ என பயந்தனர்.


வெள்ளி, 4 டிசம்பர், 2020

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள் ...
H A V E    A    P L  E  A  S  A  N  T    D A Y  . . .

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள் .....

Astonishing facts about Thirupathi

திருப்பதி செல்கிறோம், திருவேங்கடமுடையான் ஏழுமலை வாசனை வணங்கி மகிழ்கின்றோம். ஆனால் திருப்பதியில் நம்மில் சிலருக்குத் தெரியாத அதிசயங்கள், உண்மைகள், நடைமுறைகள் எவ்வளவோ உள்ளன. அவற்றிவ் சிலவற்றை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

We visit Thirupathi to worship Lord Balaji. At the same time, we are unaware of certain facts and practices and secrets which are stranger than fiction. They are as follows.

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும்
ரகசியங்கள் உள்ளன.

There are certain astonishing secrets in Lord Venkateswara's statue.
அவைகளில் சில......... few are

1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

There are are very rare stones (rocks) within one kilo meter from the temple. They are known as "Silaa thoranam" These stones(rocks) are available  only here in the whole world. The age of these stones(rocks) is 250 crores of years . The image of Balaji is made out of these stones

2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள்.இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை.

They smear the image of deity with a "type of camphor ". It is a chemical and if a granite stone is smeared with that it will crack in due course. All the 365 days of the year the image is smeared with this chemical. But this image does not show any cracks due to this practice.

3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின்
உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில்நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.

Usually any image made of granite or metal will reveal the chisel marks of the sculptor at least at one spot. If it is metal, the places of joint, after they are heated and poured will be visible. No such marks are visible in the Deity's image. Any stone statue will be rough, but in the statue of Lord Venkateswara, even the minute artist works appears as though they are polished. Even the artist work of the sculptor on ornaments such as "chutti, ear ring, Brows, and Naagabarnam are shining like, as though new jeweleries are polished.

4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட்
வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள
குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும்
திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.

The image is always kept in 110 degree Fahrenheit. The Thirupathi hills are 3000 ft above sea level. At 4.30 A.M oblations are done with cold water, milk and scented water. After the oblation the image of Balaji sweats and the sweat is wiped with "Peethaambar" cloth. On Thursdays, before oblation, when the jewels are removed the ornaments are felt hot.

திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.

Thirupathi temple, the prayers, Hundi collections, Pooja procedures, Historical incidents are very special and astonishing nature.

1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரியதாகும். பொங்கல்,
தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம்,
போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி,
முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார்
செய்யப்படுகின்றன.

In the kitchen, which is very big, Pongal, curd rice, tamarind rice, chitrannam, Vadai, Murukku, Jilebi, Poli, Appam, Moukaaram, Laddu, Paayasam, Dosa, Rava kesari, Badam kesari, cahewnut kesari are prepared in huge quantity.

2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில்
தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக்
குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள்
எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

Every day the temple purchase a new mud pot for Balaji and only curd rice is offered to the Lord. No other Neivedhyam ( food preparations) will go inside sanctum, crossing "kulasekara padi (step)" and offered to Lord. Even Gold, diamond vessels will not cross this step. A devotee is considered very fortunate if he gets this mud pot and curd rice.

3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

The dress of the deity consistsd of 10 1/2 yards length and 6 kgs weight and made of silk,  This cannot be purchased in the shop. Rs.12,500/- is to be paid at Thirupathi Dhewasthaanam's office. only once in a week, i.e on Friday alone they decorate the Lord as outer dress with this cloth.  The person who offered the donation for this has to wait for three years for his turn.

4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

The inner set of cloth set will cost Rs. 20.000/- . Fifteen sets on every Friday is offered to Lord. Those who paid for this service has to wait for ten years for his turn after paying the money.

5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர்
வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது
Apart from the dress offered by devotees, the Government offerings are offered to Lord twice in a year.

6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

If you want to offer Oblations to Lord, you have to wait for three years after paying the money.

7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து
கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை
திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு,
தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

For "Abhishekam" Saffron is ordered from Spain,"Kasthuri"(Musk) from Nepal, Civet, the perfume from China. and many other perfumes from Paris. They are liquidised in a Golden plate with Sandal and 51 braced vessel known as "Vattil" with milk is mixed and then poured on the image of the Lord. After the Musk and Civet is applied , from  4.30 A.M to 5.30 A.M the "Abhishekam" is performed. This cost is about Rs. 1.00 lac.

8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய்.

The well preserved roses from Amsterdam of Europe are sent by devotees  by plane.  The cost of one such rose is about Rs.80/-

9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம்,
இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள்ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

Scented articles sch as camphor, Frankincense, sandal, fragrant flowers, cloves, saffron etc., are sent to the temple from China.

10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை
வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

The worth of jeweleries of Lord Venkateswara is Rs. 1000 crores. There is no space  to store them or  time to decorate the deity with these jewels . They are auctioned after publishing in newspapers.

11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.

The Lord's "Saalagrma" golden necklace weighs 12 kilos and requires three priests to carry and place it on the image. "Surya Kattari" weighs 5 kilos; the covering sheets for the feet weighs 375 kilos. The blue gem in temple is nowhere else in this world and it costs about 100 crores.

12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர்
போன்றோர் .ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.

Emperors like Raajendra chozhan, Krishna Dhevaraayer, Achutha rayer have donated amply to this temple They also created many charitable trusts and the details of which are engraved in stones and copper plates. The queen of Chola also visited the temple and made offerings.

13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து
 காணிக்கைசெலுத்திஉள்ளார்.

Since the size of  the deity in the sanctum sanctorum is huge, to make it convenient to perform the oblation and decoration a smaller idol made of silver was installed on 8th June 966 A.D. Kaadavan perundhevi, the queen of Pallava king Sakthi vidangan, donated her jewels to make the idol as well created a charitable trust for the pooja. King Kuloththungan I  visited Thirumalai and made his offering to Lord.

14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

The paintings in the temple are 300 years old.

15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது.

On Fridays the "vilva" (Crat&ae;va religiosa ) leaves are used for "Archana"

மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

It is also used in the month of Margazhi (Dec 15th to  Jan 14).

16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது.

On sivarathri day a festival called "Kshethra paalikaa" is observed.  The silver idol which is meant to take to procession, is decorated with diamond  sacred ash, and taken out in procession around the temple.

தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை
பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி
ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார்.
 
Thaalappakkam Annamayya has composed songs on Venkatachalapathi in the form of "parabrahmaa", and also in the form of Eaaswara and Shakthi and engraved the songs on copper plates.
திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு
வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத
மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர்,
மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது
பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.
 
Arunagiri Naadhar who sang "Thiruppugazh" has visited Thiruppathi, He is a contemporary of Annamayya. Muthuswamy Dhikshiter, one of the Music Trinity, who practiced "Sri Vidhya" had composed hundreds of songs on many deities, and his "Seshachala Naadham" in "Varaali" raaga is on this Lord.

17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

 It is believed that Lord Venkateswara opens his "third eye" at the time of oblation.

18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.

The temple tree of Lord Venkateswara is tamarind tree.

19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில்
ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

 Any God's statue with grace and tranquility will also have at least one weapon. But, in the statue of Lord Venkateswara you will not find any weapon. He is considered "devoid of any weapon" That is why he was praised in our olden days literatures, as a "hunter with empty hand"

20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில்
முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை
பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம்
நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கி றார்.

In the year 1781 the British Cannon army was camping in a place called "Thakkolam". One Mr. Levellian, who belonged to 33rd wing was injured very badly. He prayed to Lord for his cure and after he got well he sent his offering through a Hindu soldier.

21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

The britishers, Sir Thomas Manroe, Colonel Geo Strottnen are devotees of Lord Venkateswara.

22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த
ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.

Considering the divinity of Thirumalai, No English man went to Thirupathi from 1759 to 1874. Some christian preists wanted to place a cross in the mountain, But, even British Commanders did not give permission for the same. They wanted the oblation and poojas should be performed in the temple. They believed and feared, if not, their ruling will be affected.

23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில்
 வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

The skirt to Alarmel mangai is made of cotton at a place called Gadwaal. The weavers of this dress are from a community called Chenchu with lot of devotion. Since this dress is in direct touch with the deity's idol, the weavers will not consume meat or alcohol and they bathe thrice a day. To perform the oblations on Friday, all scented ingredients are ground on the previous night in a special room meant for this purpose. Saffron is also added for oblations. The devotees from abroad send regularly scented materials worth of Rs.50000?- per week

24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள்
விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று
வந்துள்ளது.

Lord Venkateswara is treated as "Ambaal" for four days, Vishnu for two days and as Lord Siva for a day in a week, for the purpose of Pooja.

25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

The water from oblation of Lord,is led by pipes into the temple tank. Since it is considered holy water, the devotees are required to take bath by standing in the water. and take the water in both the hands and leave it back into the tank. This is considered as the special worship.

25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் '' வேங்கடமெனப்பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும்.
  On Fridays, in the early hours, before oblation, a special prayer will be done. At that time as per vadakalai practice , the paasuram" Venkatamena petra" and "dhaniyans"will be chanted.
சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார்.
During the prayer the deity will be without any flowers or cloth.
முதலில் ஒரு தீபாராதனை
 எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும்.
 First a lamp worship is done and then the same worship will be repeated as per "Thenkalai" practice.
பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.
Then offerings to God and lamp worship is done and at that time the Lord will shine with exquisite beauty.

26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு
திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம்
தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து
தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

Emperor of Vizianagarm, Achutha Royar constructed a temple on 1543 for Padmavadhithaayar. In the year 1764, this was demolished by Muslim army led by Nizam Dhowla and the remains are still there.

27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள்
திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ
ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.

The garlands worn by Sri Aandaal from Thiruvilliputhtur temple are brought to Thirupathi and placed on the God. Sri Aandaal worshipped Balaji with devoton as her deity.

28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன்(பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில்
 உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.

There are 1180 carvings on stone. In this 236 belong to Pallava, Chola and Pandiyas, 169 to chaalukyaas. 229 toKrishna Dhevaroyar, 251 to Achudha royar, 147 to Sadasivaroyar and 135 to Kondai veedu kings. During the period between Nandh varma Pallava of 830 A.D and 1909, there are only 50 engravings are of Telugu and Kannada language and the rest of 1130 carvings are only inTamil Manavalan


நாராயண தீர்த்தர்

நாராயண தீர்த்தர்

வைணவ சம்பிரதாயத்தில் கிருஷ்ண லீலா தரங்கப் பாடல்களுக்கென தனிச் சிறப்பிடம் உண்டு. முதல் பாடலைக் கேட்டு பகவானே நடனம் புரிந்தார் என்பது ஐதீகம்.
17ம் நூற்றாண்டில் தஞ்சாவூர், நாயக்கர்களின் ஆளுகைக்கு உட்பட்டது. கலைக்கும், இலக்கியத்துக்கும் இவர்கள் அதிக ஆதரவு அளித்ததால் புலவர்களும், கலைஞர்களும் தங்கள் குடும்பத்தோடு தஞ்சாவூர் ஜில்லாவில் குடியேறத் தொடங்கினார். இப்படி வந்த ஒரு குடும்பத்தில் தோன்றியவர் நாராயண தீர்த்தர். 1675-ல் பிறந்த இவர், கர்நாடக சங்கீதத்தின் உத்தம வாக்கேயகாரர்களின் சபையில் ஒருவராகத் திகழ்ந்தார். 12-ம் வயது வரையில் ஒரு சாஸ்திரியிடம் பாகவதம் பயின்றார். இசையிலும் பரத சாஸ்திரத்திலும் நிபுணரான இவரை ஜயதேவரின் அஷ்டபதி மிகவும் கவர்ந்தது.திருமணமான பிறகு இவர் எப்போதாவது மாமனார் வீட்டுக்குச் செல்வார். வெண்ணாற்றின் மறுகரையில் மாமனார் வீடு இருந்ததால் இவர் நீந்தியே ஆற்றைக் கடந்து செல்வார். ஒருமுறை அப்படி நீந்திக் கொண்டிருக்கும்போது வழியில் சுழலில் மாட்டிக் கொண்டார். தப்புவதற்கு இவர் செய்த முயற்சிகள் பயனற்றுப் போயின. புதிதாக சந்நியாசத்தை ஏற்றவர்கள் செய்ய வேண்டியதை ஒட்டி, இவர் பல ÷க்ஷத்திரங்களுக்கு யாத்திரை சென்றார். திருப்பதிக்குச் செல்லும் வழியில் திருமலை அடிவாரத்தில் ஓர் அசரீரி கேட்டது.

திருவையாற்றுக்குத் தெற்கேயுள்ள கோயிலுக்கு செல் என்றது. அதற்கிணங்க அவர் அங்கு சென்றார். இவர் வந்து சேர்ந்த ஊர் வரகூர். தொன்மைப் பெயர் வராகபுரி. இந்த ஊர் காவேரிக் கரையில் திருவையாறிலிருந்து தென்மேற்கே 10 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலத்தில் தங்கி இவர் இயற்றியது தான் அமரத்துவம் பெற்ற கிருஷ்ண லீலா தரங்கிணி. பாகவதத்தின் தசம ஸ்கந்தத்தைப் பற்றிய இந்த நூல் கண்ணன் பிறந்தது முதல் ருக்மணியை மணக்கும் வரையில் உள்ள கதையை விவரிக்கிறது. பல்லவி, அநுபல்லவி இவற்றால் ஆன, தரங்கம் என்கிற இசைவடிவில் 12 சர்க்கங்களாக உள்ளன. நிருத்திய நாடகம் என்கிற வடிவில் உள்ள இது ராகம், தாளம், பாவம் ஆகிய மூன்றினாலும் அலங்கரிக்கப் பெற்றது. இனிய இசையும், நாட்டிய ஜதி முறையும் சேர்ந்து  தெளிவான மொழியில் சித்தரிக்கப் பெற்றுள்ளது.

நடன ஆசிரியராகத் தம்மை பாவித்து நாராயண தீர்த்தர் தமது சாகித்தியங்களை இயற்றியுள்ளார். தமது தரங்களுக்கு ஏற்ப கடவுளையும் ஆடும்படி வேண்டினார். ஜயஜய ராமநாத என்ற முதல் தரங்கம், வரகூரின் பிரதான தெய்வமாகிய ஸ்ரீவெங்கடேசுவரரைக் குறிக்கிறது. இவரது பாடலைக் கேட்டு, கர்ப்பகிருகத்திலிருந்து வெளியான கஜ்ஜ நாதம்-கிண்கிணி ஓசை-நாராயண தீர்த்தருக்கும் அவரது பக்தர்களுக்கும் கேட்டது. மூலஸ்தானத்திலிருந்து ஆஞ்சனேயரே தாளம் போட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த கோயிலிலுள்ள ஆஞ்சநேயர் பெயர் தாளம் கொட்டி ஆஞ்சநேயர். எந்த எந்த பாடல்களுக்குக் கடவுள் நடனம் ஆடினாரோ, அவற்றைத் தமது சீடர்களுக்கு இவர் கற்பித்தார். தியாகையரின் தந்தையான சொண்டி வேங்கட சுப்பையா அவர்களும் இவருடைய சீடர்களுள் ஒருவர். வரகூரில் பஜனை சம்பிரதாயம் ஒன்றையும் இவர் நிறுவினார். ஒவ்வோர் ஆண்டும் கோகுலாஷ்டமியை இவருடைய பக்தர்கள் தரங்கப் பாடல்களைப் பாடிக் கொண்டாடுகிறார்கள். மாசி மாதம் சுக்ல பட்ச அஷ்டமியன்று நாராயண தீர்த்தர் மறைந்தார். இவரது உடலை வரகூருக்குக் கிழக்கே திருப்பூந்துருத்தி என்ற கிராமத்தில் அடக்கம் செய்திருக்கிறார்கள்.


ராமபக்தர் ராமச்சந்திர பட்டர்

ராமபக்தர் ராமச்சந்திர பட்டர்

கோசல நாடு சரயுநதி பாயும் மிகச் செழிப்பான பூமி. சரயு நதிக்கரையில் உள்ள அமலாபுரம் என்ற சிற்றூரில் ராமச்சந்திர பட்டர் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் நான்கு வேதங்களையும் கற்றறிந்தவர். கோசல நாட்டு மன்னர் இவரை தனது குருவாக கொண்டார். ஆனாலும் ராமச்சந்திரபட்டர் ஆடம்பர வாழ்வை விரும்பவில்லை. அரசகுரு என்ற பதவியை தவறாக பயன்படுத்தியதே கிடையாது. தினமும் உஞ்சவிருத்தி (பிச்சையெடுத்தல்) சென்று அதில் கிடைக்கும் உணவில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு மீதியை தன் மனைவியிடம் கொண்டு கொடுப்பார்.கணவர் கொண்டு வரும் உஞ்சவிருத்தி அரிசியை இவரது மனைவி விருந்தினர்களும் விரும்பி உண்ணும் வகையில் பக்குவமாக சமைப்பாள்.ஒருமுறை இனிய பாடல்களை பாடியபடி உஞ்சவிருத்தி செய்தபடி வந்து கொண்டிருந்தார் ராமச்சந்திர பட்டர். இதை உப்பரிகையிலிருந்து மன்னனின் மனைவி பார்த்தாள். அவரது எளிய தோற்றத்தைக் கண்ட அரசி மன்னரிடம், தாங்கள் குருவாக ஏற்றிருக்கும் இந்த பெரியவரை நீங்கள் உஞ்சவிருத்தி செய்ய விடலாமா ? இது மிகப் பெரிய பாவமல்லவா ? என்று கேட்டாள். அதற்கு பதிலளித்த அரசன், அவர் பெரிய மகான். ஆசைகள் இல்லாதவர். எவ்வளவு பொன்பொருள் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார். எனவே என்னால் எதுவும் செய்வதற்கில்லை, என்றான்.எனவே அரசி அவரது மனைவிக்கு பொருட்களை அனுப்பலாமா என ஆலோசனை செய்தாள். அதன்படி பட்டாடைகள், விலையுயர்ந்த ஆபரணங்களை ராமச்சந்திரபட்டரின் மனைவியிடம் ஒப்படைக்கச் சென்றாள்.

அரசியை பட்டரின் மனைவி வரவேற்றாள். அவள் கொடுத்த பொருட்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டாள். வெளியில் சென்றிருந்த பட்டர் வீடு திரும்பினார். நடந்த விபரங்களை அறிந்தார். அடி அசடே  ! அரசியிடம் நீ ஏன் பொருட்களை பெற்றாய் ? பணமும் காசும் கொடிய விஷம் என்பதை நீ அறியவில்லையா ? என்றார். மறுநாள் ஹோமம் செய்யும்போது ஹோமத்தின் முடிவில் பூர்ணாஹுதி கொடுக்கும் போது அரசி கொடுத்த பட்டாடைகளையும், ஆபரணங்களையும் ஹோம குண்டத்தில் போட்டு விட்டார். பட்டரின் மனைவிக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. மன்னனுக்கும் இந்த செய்தி எட்டியது. அவன் பட்டரின் வீட்டிற்கு வந்தான். பட்டரின் மனைவி கலங்கிப்போனாள். மன்னர் கொடுத்த பரிசுப்பொருட்களை ஹோமத்தீயின் இட்டதால் தண்டனை கொடுப்பதற்காக அரசர் வந்துள்ளார் எனக் கருதினாள். மன்னன் பட்டரிடம், என் மனைவி அளித்த பொருட்கள் தங்களுக்கு வேண்டாம் என்று சொன்னதாக அறிந்தேன். அதை திருப்பி தாருங்கள், என்றான். பட்டர் சிறிது தயங்கினார். ஏதோ ஒரு தைரியத்தில், நீங்கள் அளித்த பொருட்களை இன்னும் சற்று நேரத்தில் தந்துவிடுகிறேன். பொறுத்திருங்கள், என சொல்லிவிட்டு ஹோமகுண்டத்தின் முன்பு கண்மூடி தியானம் செய்ய ஆரம்பித்து விட்டார். சற்று நேரத்தில் குண்டத்திலிருந்து ஆடைகளும், ஆபரணங்களும் ஊற்று நீர்போல பொங்கி வெளியே வந்தது. அனைவரும் திகைத்து நின்றனர். மன்னன் பட்டரின் கால்களில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். அந்த பொருட்களை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்தனர். பட்டர் ராமநாமமும், ஹரிநாமமும் சொல்லியபடியே காலத்தைக் கழித்தார்.


பக்தசேனா

பக்தசேனா

உத்திரபிரதேசத்தில் உள்ள அவந்தி என்ற சிறுநகரில் சேனா என்பவர் வசித்தார். முடி திருத்தும் பணியாளரான இவர், சிறந்த கிருஷ்ண பக்தர். அரண்மனையில் பணிபுரிந்தார். மன்னர் தரும் கூலியால் இவரது வாழ்க்கை நல்ல முறையில் சென்றது. கண்ணனை தினமும் தியானம் செய்வது சேனாவின் வழக்கம். அவரை நினைத்து, தியானத்தில் ஆழ்ந்து விட்டால் இவரை யாராலும் எழுப்ப முடியாது, இவரது மனைவி உட்பட! ஒருமுறை இப்படித்தான் சேனா கடும் தியானத்தில் ஆழ்ந்து விட்டார். அப்போது மன்னர் ஆள் அனுப்பி, அவரை அவசரமாக அரண்மனைக்கு அழைத்து வரச்சொன்னார். காவலர்கள் விரைந்தனர். வீட்டு வாசலில் நின்றபடி, ஏய்! சேனா, உடனே புறப்படு. மன்னர் அழைக்கிறார். அவருக்கு சவரம் செய்ய வேண்டும், என கத்தினர். உள்ளிருந்து அவரது மனைவி வந்தாள். கணவர் உள்ளிருப்பது தெரிந்தால், அவர்கள் உள்ளே புகுந்து விடுவார்கள். இதனால் அவரது தியானத்திற்கு தொந்தரவாகிவிடும் என நினைத்தாள் அவள். எனவே, காவலப் பெருமக்களே! அவர் வீட்டில் இல்லை. வெளியே எங்கோ சென்றிருக்கிறார். வந்தவுடன் வரச்சொல்கிறேன் என்றாள். காவலர்கள் அவளிடம் அதிகாரமாக, எப்போது வருவான்? எங்கே போயிருக்கிறான், என கேட்டனர். ஐயா! அவர் எங்கு செல்கிறார் என்பது பற்றி என்னிடம் கூறவில்லை. அவர் வந்தவுடன் அனுப்புகிறேன். மன்னர் பிரானிடம் தயவு செய்து சற்று நேரம் தரச்சொல்லுங்கள். அவர் எங்கிருந்தாலும் நானே தேடி அழைத்து வந்து விடுகிறேன், என கெஞ்சலாகச் சொன்னதும், காவலர்கள் புறப்பட்டு விட்டனர். மன்னரிடம் தகவல் சொல்லப்பட்டது.

எனக்கு அவசரப்பணி உள்ளது. அவன் எங்கிருந்தாலும் தேடிப்பிடித்து வாருங்கள், என்று உத்தரவிட்டார் மன்னர். அவரது உத்தரவையடுத்து காவலர்கள் மேலும் இரண்டு முறை சேனாவின் வீட்டிற்குச் சென்றனர். மீண்டும், மீண்டும் அவரது மனைவி அதே பதிலைத்தான் சொன்னாள். காவலர்கள் செய்வதறியாமல் பதைபதைப்புடன் நின்றனர். பக்கத்து வீட்டில் இருந்த ஒருவனுக்கு சேனாவைப் பிடிக்காது. அவன் காவலர்களிடம் ஓடிவந்தான். ஐயாமார்களே! எனக்கு சேனா இருக்குமிடம் தெரியும், என்றான். காவலர்கள் முகத்தில் பிரகாசம். எங்கே... எங்கே... ? அவசர அவசரமாய் கேட்டனர். அதோ! வீட்டிற்குள் தான் ஒளிந்திருக்கிறான். சோம்பேறி! வேலைக்கு செல்ல சோம்பல்பட்டு உள்ளே இருந்து கொண்டு பொய் சொல்கிறான், என்றான். காவலர்களுக்கு ஆத்திரம். உடனே அவரது மனைவி தடுத்தும் உள்ளே புகுந்து விட்டனர். அங்கே ஆழ்ந்த தியானத்தில் இருந்தார் சேனா. அவரை முதலில் எழுப்பிப் பார்த்தனர். அவர் எழவில்லை. எனவே தூக்கிப் பார்த்தனர். கண்ணனோடு ஐக்கியமாயிருக்கும் நிலையில் அவரைத் தூக்க அவர்களால் முடியுமா என்ன? மன்னருக்கு தகவல் பறந்தது. அவருக்கு மீசை துடித்தது. என்னிடம் பணிசெய்யும் ஒருவன் என்னை மதிக்கத் தவறி விட்டானா? அவன் இனி உயிருடன் இருக்கக்கூடாது. அவன் கையைக் கட்டி கடலில் தூக்கி போடுங்கள், என உத்தரவிட்ட நேரத்தில், சேனா வந்து விட்டார். மன்னன் சினம் தணிந்தான். ஏய்! மடையனே! இவ்வளவு நேரம் எங்கே போய் தொலைந்தாய்? அவசரமாய் வெளியே செல்ல வேண்டியுள்ளது. வந்து சவரம் செய்து தொலை, என்று கத்தினார். தங்கக் கிண்ணத்தில் தைலம் கொண்டு வரப்பட்டது. சேனா கையை கிண்ணத்தில் விட்டான். அவ்வளவுதான். தங்கக்கிண்ணத்துக்குள் இருந்த தைலம் பிரகாசித்தது. தைலத்தில் பாண்டுரங்கன் சிரித்துக்கொண்டிருந்தான். இதைக்கண்ட மன்னர் அதிர்ந்தே விட்டார். இதென்ன வியப்பு! இவன் கிண்ணத்தை தொடவும், அதில் பாண்டுரங்கன் தெரிகிறானே! ஐயையோ! தியானத்தில் இருந்த இவன் உண்மையிலேயே சக்திமிக்கவன் தான். இவனது கை தைலத்தில் நனைந்ததும் பாண்டுரங்க தரிசனம் கிடைக்கிறதே, என எண்ணிய மன்னன் தன் ஆசனத்திலிருந்து எழுந்தான். சேனாவின் காலில் பொத்தென விழுந்தான். சேனா! என்னை மன்னித்து விடு. உன் மகிமை தெரியாமல், உன்னை கடலில் வீசச் சொன்னேன். உன் தியானத்தைக் கெடுத்து விட்டேன், என மன்றாடினான். சேனாவின் கழுத்தில் தான் அணிந்திருந்த முத்து மாலையை அணிவித்தான். விலை உயர்ந்த நவரத்தின மோதிரத்தையும் மாட்டி விட்டான்.

சேனா மன்னரிடம், என்ன காரியம் செய்தீர்கள். இந்த கீழ்மகனின் பாதத்தில் தாங்கள் விழுவதா? நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இவ்வாறு செய்தீர்கள்? என கேட்க, சேனா! உன் மகிமை உனக்கு தெரியாது. சென்று வா, என்றார். அரசவையில் இப்படி நடக்க, அதே நேரத்தில் சேனா வீட்டில் தியானம் கலைந்து எழுந்தார். அவரது மனைவி நடந்ததைச் சொன்னாள். மன்னர் ஆள் அனுப்பியதும், அவர்கள் தூக்க முயன்றதையும் சொல்லி கலவரமடைந்த சேனா, அவசரஅவசரமா அரண்மனைக்கு தன் சவரப் பெட்டியுடன் ஓடினார். மன்னா! என்னை மன்னியுங்கள். கண்ணன் மீது கொண்ட பக்தியால் தியானத்தில் மூழ்கிப்போனேன். தவறு நடந்து விட்டது. வாருங்கள். நொடியில் சவரம் செய்து விடுகிறேன், என்றார். மன்னருக்கு ஏதும் புரியவில்லை. அன்பனே! என்னப்பா இது. சற்று முன்தானே இங்கே வந்தாய். பொற்கிண்ணத்தில் பாண்டுரங்கனின் தரிசனம் காட்டினாய். இப்போது மீண்டும் வந்துள்ளாயே! காவலர்கள் கொடுத்த தொல்லையால் குழம்பிப் போய் விட்டாயோ? என்றார் கனிவுடன். பின்பு சேனாவின் கழுத்தையும், கையையும் கவனித்தார். தான் பரிசளித்த முத்துமாலை, மோதிரமும் இல்லை. அவை எங்கே? என்றார் மன்னர். தாங்கள் எனக்கு பரிசளித்தீர்களா? அவ்வளவு விலையுயர்ந்த அணிகலன்களை அணியும் பாக்கியம் இந்த ஏழைக்கு ஏது மன்னா! என்றார் சேனா குழப்பத்துடன்.  அவையோர் குழம்பினர். மன்னனோ மயக்க நிலைக்கே போய்விட்டான். சேனா கலக்கத்தில் தன் கையிலுள்ள சவரப் பெட்டியை நழுவ விட்டார். உள்ளிருந்து முத்துமாலையும், மோதிரமும் கீழே விழுந்தன. ஆ... இவை என் பெட்டிக்குள் எப்படி வந்தன? என கூக்குரலிட்டார் சேனா. அப்போது ஒரு குரல் ஒலித்தது. பக்தர்களே, கலங்க வேண்டாம். நான் தான் பாண்டுரங்கன்! என் பக்தன் சேனா, என் நினைவாக தியானத்தில் இருந்த போது, அவனது பணியை நானே செய்தேன். நானே பரிசு பெற்று, சேனாவின் பெட்டிக்குள் வைத்தேன். கிண்ணத்தில் கையை நனைத்து என்னை நானே வெளிப்படுத்தினேன், என்றது. பாண்டுரங்கனே! நீயே நேரில் வந்தாயா? இந்த மனிதப்பிறவியைத் தொட்டு சவரம் செய்தாயா? சேனா! உன்னால் எனக்கு அந்த பாண்டுரங்க தரிசனம் கிடைத்தது. அவனது கை என் உடலில் பட்டது. நான் பாக்கியசாலி... பாக்கியசாலி..., என கத்திய மன்னர் மயங்கியே விட்டார். சேனாவின் நிலை அதை விட மோசமாயிற்று. பாண்டுரங்கா! மன்னருக்கு காட்சி தந்தாய். இந்த ஏழையை ஏன் மறந்தாய்? எனக்கும் காட்சி தரமாட்டாயா? என அவர் அழுதார். கிருஷ்ண பரமாத்மா அவருக்கும் காட்சி கொடுத்தருளினார். அதன்பின், சேனாவை தன் குருவாக ஏற்றுக் கொண்டான் மன்னன். அவரது உபதேசங்களைக் கேட்டு, நல்லாட்சி புரிந்தான். பாண்டுரங்கனின் கருணையே கருணை


ஜனகர்

ஜனகர்!

ராமாயண காவியத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் ஜனக மகாராஜாவும் ஒருவர். இவர் மிதிலையை ஆண்டு வந்த மன்னர். சீதாதேவியின் தந்தை. ஒரு நாட்டின் மன்னராக இருந்தாலும், வேதம், சாஸ்திரம் மற்றும் புராணங்களைக் கற்றுத் தேர்ந்தவர். ஞானிகளையும் ரிஷிகளையும் பெரிதும் மதித்தவர். ஒவ்வொரு நாளும் ஒரு ஞானியைத் தன் அவைக்கு வரவழைத்து மரியாதை செய்து, அவர்கள் கூறும் தத்துவங்களைக் கேட்டறிந்து, அதன்படி வாழ்ந்தவர். ஆனால், யார் எது சொன்னாலும் அதை ஏன், எதற்கு, எப்படி என்று கேட்கமால், அப்படியே ஏற்றுக்கொள்வார். ஒருவர் வேதங்கள் நான்கு என்றால், அதையும் ஒப்புக்கொள்வார். மற்றொருவர் வேதங்கள் ஐந்து என்று கூறினால், அதையும் ஒப்புக்கொள்வார். அப்படியும் இருக்கலாம் என்று நினைத்துக்கொள்வார். எதையும் ஆராய்ந்து பார்க்க விரும்பாமல், எல்லாக் கருத்துக்களையும் அப்படி அப்படியே ஏற்றுக்கொண்டார். இதனால் எதிர்மறையான தத்துவங்களை எப்படி வாழ்க்கையில் கடைப்பிடிப்பது என்ற சிந்தனை அவர் மனத்தைக் குழப்பியது. அவர் தெளிவான அறிவைப் பெற்று ஒரு பிரம்ம ஞானியாக விரும்பினார். ஆனால் அதற்குரிய மன வளமையும், ஆராய்ந்தறிந்து முடிவெடுக்கும் திறனும் அவரிடம் இல்லாமல் இருந்தது. ஜனகருக்குச் சரியான வழிகாட்டி, அவரை ஒரு பிரம்ம ஞானியாக்க விரும்பினார் பஞ்சசிகர் எனும் முனிவர். வேதங்கள்தான் சத்யம், மனித ஆற்றலை வளர்க்கவும், உண்மையான ஞானத்தை அடையவும் வேதங்களே வழிகாட்ட முடியும் என்பதை நன்குணர்ந்த அவர், ஒரு முறை மிதிலாபுரிக்கு வந்தார். ஜனகர் அவரை வரவேற்று, பணிவோடு அவரிடம் தான் யாது செய்யவேண்டும் என்று கேட்டார்.

அதற்கு பஞ்சசிகர் மன்னா! உன் நாட்டில் பண்டிதர்கள் பலர் உள்ளனர். நீயும் அவர்களை மதித்து, அவர்கள் கூறும் சித்தாந்தங்களையும் தத்துவங்களையும் ஏற்றுக்கொள்கிறாய். வேதங்கள் பொய் என்று வாதிட்டு ஜெயித்தவர்களையும் பாராட்டிப் பரிசளிக்கிறாய். அதுவும் உண்மையாக இருக்குமோ என நம்பி மனக் குழப்பம் அடைகிறாய். இதிலிருந்து நீ மாறி, உண்மையான அறிவைப் பெற்று, பிரம்மஞானியாக வேண்டும் என நான் விரும்புகிறேன். இதற்காக நீ உன் நாட்டில் உள்ள பண்டிதர்களையும் ஞானிகளையும் உன் அவைக்கு அழைத்து, ஒரு ஞான மன்றத்துக்கு ஏற்பாடு செய். இது வாதம் செய்து வெற்றி பெற அல்ல. ஆராய்ச்சி செய்து சத்யத்தின் பரிமாணத்தை அறிந்து கொள்ள உதவும் ஒரு சத்ஸங்கம் ஆகும்! என்றார். ஜனகரும் ஞானிகள் சபையைக் கூட்டினார். பஞ்சசிகர் தலைமையில் நடந்த அந்த மன்றத்தில், அனைவரும் தங்கள் அறிவுக்கு எட்டிய கருத்துக்களை எடுத்துக்கூறி விவாதம் செய்தனர். வேதங்கள் பொய், உருவ வழிபாடு தவறானது துறவிகள் மட்டுமே ஞானத்தை அடைய முடியும் மோக்ஷம்தான் வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் கருத்துக்கள் கூறப்பட்டன. அனைவரின் வாதங்களையும் பொறுமையாகக் கேட்ட பஞ்சசிகர், இறுதியில் தன் வாதங்களை வைத்து வேதங்கள்தான் சத்யம். தர்மத்தை நாம் ரக்ஷித்தால் தர்மம் நம்மை ரக்ஷிக்கும். பற்றற்ற நிலையில் கர்மங்களைச் செய்பவனே கர்ம யோகி. தர்மத்திலிருந்து சிறிதும் வழுவாமல் சத்யமே வெல்லும் என்ற நம்பிக்கையுடன் வாழ்பவனே பூரண ஞானி என்பது போன்ற தத்துவங்களை எடுத்துச் சொன்னார்.

ஜனகர் மட்டுமின்றி அவையில் கூடியிருந்த ஞானிகளும் பண்டிதர்களும்கூட பஞ்சசிகர் திருவடிகளை வணங்கி, அவரையே குருவாக ஏற்றுக்கொண்டனர். பஞ்சசிகர் ஜனகரைத் தமது பிரதம சீடனாக ஏற்றுக்கொண்டார். புலன்களை அடக்கி, அதன்மூலம் மனத்தையும் அடக்கி விடு. நான் எனது என்பதை அறிவே ஒழித்து விடு. எல்லா ஜீவன்களையும் அன்போடும் பரிவோடும் காப்பாற்று. அப்போது நீ ஞானத்தைத் தேடி அலைய வேண்டாம். ஞானம் உன்னைத் தேடி வரும் என்று கூறிச் சென்றுவிட்டார். ஜனகரும் தன் குருவின் அறிவுரைப்படி தவறாமல் தன் சாதனைகளைச் செய்து புலன்களை அடக்கி, விருப்பு வெறுப்புகளை அறவே விட்டு, ஒரு இல்லற சந்நியாசியாக ராஜரிஷியாக வாழ்ந்து கொண்டிருந்தார். ஒருநாள், தன் சீடனின் பரிபக்குவத்தைச் சோதித்தறிய விரும்பினார் பஞ்சசிகர். இதற்கென தன் தவசக்தியால் அழகான ஒரு பெண் உருவம் பூண்டார். அப்ஸரஸ்களையும் மிஞ்சும் அழகுடன், தோற்றத்தில் ஒரு சந்நியாசினிபோல் வேடமணிந்து சுலபை என்று பெயர் சூட்டிக்கொண்டு, ஜனகரின் சபைக்குச் சென்றார். சுலபை அவையில் நுழைந்ததுமே அவளது அழகும். வசீகரமும் சபையோரை ஈர்த்தது. இத்தனை அழகான பெண் ஏன் சந்நியாசினியாக வேண்டும் என்று சிலர் ஆதங்கப்பட்டனர். வேறு சிலர் அவளோடு பேசவும், நெருங்கிப் பழகவும் ஆசைப்பட்டனர். ஆனால் ஜனகரோ எந்தவிதச் சலனமோ, சபலமோ, சஞ்சலமோ இன்றி அந்தத் தபஸ்வினியை வரவேற்றார். சுலபை தன் காந்த விழிகளால் ஜனகரை நேரடியாக நோக்கியபோதும், ஜனகர் எந்தவிதக் கலக்கமும் இன்றித் தன் சிம்மாசனத்தில் கம்பீரமாக வீற்றிருந்தார்.

புலனடக்க சாதனையில் ஜனகர் பரிபூரண நிலையை அடைந்துவிட்டார் என்பதைத் தெரிந்துகொண்ட சுலபை, அவருக்கு மனத்தை அடக்கும் சக்தி முழுமையாக வந்துவிட்டதா என்பதை அறிய விரும்பினாள். தன் யோக சக்தியால் ஜனகரது மனம், புத்தி ஆகியவற்றில் வியாபித்தாள். இதனை ஜனகரால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. கோபத்துடன் எழுந்து, நான் பஞ்சசிக முனிவரின் சீடன். புலன்களையும் மனத்தையும் அடக்கியவன். தாமரை இலைத் தண்ணீர்போல வாழக் கற்றுக்கொண்டவன். என் மனத்திலும் புத்தியிலும் நுழைந்து என் ஆசைகளைத் தூண்ட நினைக்கும் துஷ்ட சக்தியான நீ யார்? ஏன் என் அவைக்கு வந்து இத்தகைய அதர்மமான செயல்களைச் செய்கிறாய் என்று ஆவேசத்துடன் கேட்டார். சுலபை ஏளனமாகச் சிரித்தாள். ஜனக ராஜனே! புலனடக்கம் பூரணமாகப் பெற்றுவிட்டதாகக் கூறிய நீங்கள் கோபத்தை அடக்கவில்லையே! பூரண ஞானம் பெற்றவன், நான் இதைச் சாதித்து விட்டேன் என்று ஆணவத்துடன் கூறுவது முரண்பாடான செயல் அல்லவா? மனத்தையும் புத்தியையும் தவத்தால் தன் வயப்படுத்தியவன், அதில் எந்தச் சக்தியும் நுழைய முடியாது என்ற நம்பிக்கையுடன் அல்லவா இருக்க வேண்டும்? நீங்கள் ஏன் இவ்வளவு கலக்கமடைந்து, அதனால் கோபத்துக்குச் இடம் கொடுத்தீர்கள்? என்று கேள்விகள் தொடுத்தான். ஜனகர் வேரற்ற மரம் போல பிரக்ஞையின்றித் தடுமாறித் தரையில் விழுந்தார். அவையோர் திடுக்கிட்டு, பயத்தால் நடுங்கினர். சுலபை தன் சுய உருக்கொண்டு பஞ்சசிகராகத் தோன்றி, ஜனகர் மீது தன் கமண்டலத் தீர்த்தத்தைத் தெளித்தார்.

ஜனகர் நினைவுபெற்று எழுந்ததும், தன் குரு எதிரே நிற்பது கண்டு, அவர் திருவடிகளில் விழுந்து மன்னிப்புக் கோரினர். தன் குருவே பெண் வடிவில் வந்து தன் தவ வலிமையைச் சோதித்துள்ளார் என்பது ஜனகருக்கு அப்போதுதான் தெரிந்தது. ஆசைகளைத் துறந்த தான், ஆணவத்தையும் அகந்தையையும் துறக்கவில்லையே என்று எண்ணி வெட்கித் தலைகுனிந்தார். அப்போது பஞ்சசிகர் ஜனக ராஜனே! இதற்காக நீ கவலைப்படத் தேவையில்லை. ஞானத்தை சோதனைகள் ஏற்படலாம். அவற்றை வென்றுதான் சத்யத்தின் எல்லையைத் தொடமுடியும். அதற்கான அருகதை உனக்கு உள்ளது. நீ பூரண ஞானம் பெற வாழ்த்துகிறேன். என்று கூறிச் சென்றார். ராஜசபையில் இருந்து அரண்மனைக்கு வந்த ஜனகரின் மனம் தத்தளித்தது. அரச பீடத்தில் இருப்பதால்தான் தனக்குப் பரிபூரண ஞானம் கிடைக்கவில்லை என்று கருதி, தனது கிரீடத்தையும் ராஜ உடைகளையும் களைந்துவிட்டு, காஷாயம் தரித்து, கமண்டலமும் தண்டமும் கையிலேந்தி, கானகம் சென்று கடும் தவம் செய்யப் புறப்பட்டார். இதையறிந்த அவரது மனைவி அவரிடம் வந்தாள். அவரின் பாதங்களை வணங்கி, பணிவன்போடு பேசத் தொடங்கினாள்.

சாதுக்களையும் சந்நியாசிகளையும், பண்டிதர்களையும் பாமரர்களையும் காப்பாற்றுவதற்காகவே இறைவன் மன்னனைப் படைத்திருக்கிறான். நீங்கள் பிறரைக் காப்பாற்ற வேண்டியவர். அதுதான் உங்களுக்கென விதிக்கப்பட்ட அரச தர்மம். அதன்படி பிரஜைகளைக் காப்பாற்ற வேண்டியது உங்கள் முதல் கடமை. அரசைத் துறந்து, வனம் சென்று, தவம் புரிந்து பிரம்ம ஞானத்தை அடையலாம். ஆனால், அரச தர்மத்தையும் அதற்கான கடமைகளையும் மறந்துவிட்டு, அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்திவிட்டுச் செல்லும் நீங்கள், இந்தப் பாவத்தைப் போக்க என்ன தவம் செய்யப் போகிறீர்கள்? என்று கேட்டாள். அப்போது அவர் மனைவி அவர் முன்பு ஒரு குருவாகவே நின்றாள். விதிக்கப்பட்ட கர்மத்தைச் செய்து கொண்டு, தர்மங்களை வழுவாமல் கடைப்பிடித்து, ஆணவம் இன்றி தன்னடக்கத்துடன் வாழ்பவனே பிரம்மஞானி என்ற தத்துவத்தை உணர்ந்துகொண்ட ஜனக மகாராஜா அன்று முதல் ஒரு ராஜரிஷியாகவே வாழ்ந்தார்.