வியாழன், 3 டிசம்பர், 2020

நடனகோபாலநாயகி சுவாமிகள்

நடனகோபாலநாயகி சுவாமிகள்

நடனகோபாலநாயகி சுவாமிகள், மதுரையில் 1843, ஜனவரி 9 (மார்கழி மிருகசீரிட நட்சத்திரம்) வியாழக்கிழமை அவதரித்தார். இவரது தந்தையார் ரங்கார்யர், தாய் லட்சுமிபாய். பெற்றோர் பிள்ளைக்கு ராமபத்ரன் என்று பெயரிட்டனர். பள்ளியில் படித்த காலத்தில் ஓம் என்ற மந்திரத்தின் பொருளைக் கேட்டு ஆசிரியர்களையே திகைக்கச் செய்தார். அவரது மனம் எப்போதும் இறைச் சிந்னையிலேயே இருந்தது. இளமையில் வணிகர் ஒருவரிடம் கணக்கெழுதும் பணியில் சேர்ந்தார். ஆனால், வணிகர் ராமபத்ரனின் இறைச்சிந்தனையைக் கண்டு வேலையை விட்டு வெளியேற்றினார். பின்னர் தன் வீட்டுத் தொழிலான நெசவுத்தொழிலைச் செய்தார். திடீரென்று ஒருநாள் வீட்டைவிட்டு கிளம்பி, திருப்பரங்குன்றத்தில் துறவியைப் போல யோகத்தில் ஆழ்ந்தார். 12 ஆண்டுகால தவத்திற்கு  பின், பரமக்குடி நாகலிங்க அடிகளாரிடம் சதாநந்தர் என்று தீட்சாநாமம் பெற்றார். சித்தரைப் போல பல அற்புதங்களை நிகழ்த்தி மக்களிடம் பிரபலமானார்.ஒருமுறை மதுரை அருகில் உள்ள அழகர்கோவில் சுந்தராஜப்பெருமாளை தரிசித்தார். அன்றுமுதல் ஆழ்வார்களின் மீதும், நாலாயிரதிவ்ய பிரபந்தங்களின் மீதும் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. நம்மாழ்வார் அவதரித்த ஆழ்வார் திருநகரிக்குச் சென்றார். அங்குள்ள ஆதிநாதசுவாமியை தரிசித்தார். அங்கே, நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாடல்களை வடபத்ராரீயர் என்ற பக்தர் பாடிக் கொண்டிருந்தார். அந்த வரிகள் சதாநந்தரின் மனதை கொள்ளை கொண்டது. அவர் அந்த பக்தரை சாஷ்டாங்கமாக பணிந்து தமக்கு வழிகாட்டும்படி கேட்டுக் கொண்டார். அந்த பக்தர், அவரைத் தன் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றார். விஷ்ணுவின் அம்சம் நிறைந்த சதா நந்தருக்கு, நடன கோபால் என்று பெயரிட்டார்.

ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம், கீதாபாஷ்யம், பிரம்மசூத்திர பாஷ்யம், பகவத்கீதை, விஷ்ணு புராணம், நாலாயிரதிவ்ய பிரபந்தம் ஆகியவற்றை அவரிடம் கற்று முடித்தார். தன்னை ஒரு பெண்ணாகவும், திருமாலை ஆணாகவும் கருதி ஹரிபக்தியில் ஆழ்ந்தார். பின், பல திவ்யதேசங்களுக்கு தீர்த்தயாத்திரை புறப்பட்டார். ஸ்ரீரங்க ரங்க நாதர் மீது பாடல்கள் பாடினார். அங்கிருந்த ஸ்ரீரங்கநாராயண ஜீயர் நடனகோபாலை நடனகோபால நாயகி என்று அழைத்தார்.  தம்முடைய வாழ்நாள் முடிய இருப்பதை முன்கூட்டியே உணர்ந்து, அழகர்கோவில் அருகிலுள்ள காதக்கிணறு என்னுமிடத்தில் தமக்கான பிருந்தா வனத்தை(சமாதி) அமைக்குமாறு கூறினார். 1914 ஜனவரி 8, வைகுண்ட ஏகாதசி நாளில்பகவான் ஹரி வந்து விட்டார் என்று சொல்லிக் கொண்டே மகாவிஷ்ணுவின் திருவடிகளில் இணைந்தார். நடனகோபால நாயகி சுவாமிகள் என்று பக்தர்களால் இன்று போற்றப்படுகிறார். இவர் பிரபந்தப்பாடல்கள், பக்திரச கீர்த்தனைகள், நாமாவளிகள், தமிழ் கீதகோவிந்தம் ஆகியவற்றை இயற்றியுள்ளார். ஸ்ரீமதே ராமானுஜா என்ற மந்திரம் ஜெபித்தால் மனத்தூய்மை உண்டாகும் என்கிறார் சுவாமிகள். ராமானுஜரின் உரைகளையும்,உபதேசங்களையும் படிக்கவேண்டும் என்று நம்மை வேண்டுகிறார். பிருந்தாவனக்கோயிலில் இவர் வழிபட்ட ருக்மணி, சத்யபாமா சமேத நடனகோபால கிருஷ்ணர் விக்ரகம் உள்ளது. இவர் பயன்படுத்திய ஆண்டாள் கொண்டை, துளசிமணிமாலை, பாதுகையை (காலணி) ஆகியவற்றை இங்கு தரிசிக்கலாம். இவரது அவதார தினம் டிசம்பர் 21, மார்கழி மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிருந்தாவனத்தில் கொண்டாடப்படுகிறது.


ரமணர்

ரமணர்

அன்று ஆருத்ரா தரிசனம் ! அதாவது, மார்கழி திருவாதிரை நட்சத்திரம்! திருச்சுழி பூமிநாதசுவாமி திருக்கோயிலில் நடராஜர் புறப்பாடு சிறப்பாக நடந்தது. வீதி உலா இனிதே நிறைவு பெற்று திருக்கோயிலில் சுவாமி பிரவேசிக்கும் நேரம்! பூமிநாதர் திருக்கோயில் மணி ஒலித்தது! அதே நேரத்தில் அருட்குழந்தை ரமணர் பூவுலகில் அவதரித்தார்.

ஜோதி தரிசனம்
பூமிநாதர் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் நிறைவு பெற்ற நேரத்தில், கண்பார்வை இல்லாத ஒரு பெண்மணிக்கு ஜோதி தரிசனம் கிடைத்தது! ஆம்! ரமணரின் தாய் அழகம்மாவிற்குப் பிரசவம் பார்க்க வந்த பெண்மணி கண்பார்வை இல்லாதவர் ரமணர் பூமியில் அவதரித்த அதே நேரத்தில் அந்தப் பெண்மணிக்கு ஒரு ஜோதி தரிசனம் கிடைத்தது!

தலைச்சுழியை மாற்றும் திருச்சுழி
பாண்டிய நாட்டிலுள்ள பதினான்கு பாடல் பெற்ற சிவத்தலங்களில் பத்தாவது திருத்தலம் திருச்சுழியல். இது மதுரைக்குத் தென்கிழக்கே சுமார் ஐம்பது கி.மீ தொலைவில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது.

திருஞானசம்பந்தர் திருவவதாரம் செய்த சீர்காழி, பிரளய வெள்ளத்தில் தோணியப்பர் திருவருளால் மிதந்து தப்பித்தது! ரமணர் உதித்த திருச்சுழியல் பிரளய வெள்ளம் பாதாளத்தில் புகுந்ததால் பிழைத்தது! சிவபெருமான் பிரளய வெள்ளத்தை ஓர் அம்பினால் சுழித்து பாதாளத்தில் செலுத்திக் காத்ததால் இத்தலத்தை திருச்சழியல் என அழைத்தனர் தற்காலத்தில் திருச்சுழி என வழங்கி வருகிறது திரிசூலபுரம், முத்திமாநகர் மகா ஆவர்த்தபுரம், ஜோதிவனம் போன்ற வேறு பெயர்களும் உள்ளன.

சிவபக்தர் சுந்தரம் ஐயர்
தேவாரம் போற்றும் திருச்சுழி பூமிநாதப் பெருமானை அன்றாடம் வழிபடும் பக்தரான சுந்தரம் ஐயர், அழகம்மா என்ற பெண்ணை மணந்து இனிதே இல்லறம் நடத்தி வந்தார். சுந்தரம் ஐயர் உழைப்பால் உயர்ந்து, செல்வம், சேர்த்து அறச்செயல்கள் புரிந்தவர்.

கணக்கப்பிள்ளை குமாஸ்தாவாக இருந்தவர், மனுக்களும் விண்ணப்பங்களும் எழுதிக் கொடுக்கும் தொழிலை மேற்கொண்டார். சட்ட நுணுக்கங்களைக் கற்று பட்டம் பெறாத வழக்கறிஞராக உயர்ந்தார். சட்ட உதவியைத் தொழிலாகக் கருதாமல் தம்மை நாடி வந்தவர்களுக்கு நல்லதே செய்யும் பண்பாளராக விளங்கினார். அதனால் அப்பகுதியில் சுந்தரம் ஐயர் மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.

ஆங்கிலக் கணக்குப்படி 1879 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முப்பதாம் நாள் சுந்தரம் ஐயர் அழகம்மாள் தம்பதியரின் மகனாக ஸ்ரீரமணர் அவதரித்தார். சுந்தரம் ஐயர் தம்பதியர் தங்கள் மகனுக்கு வேங்கடராமன் என்று பெயர் சூட்டினர். குழந்தையின் சுட்டித்தனத்தைக் கண்டு மகிழ்ந்த அனைவரும் ராமன் என்று செல்லமாக அழைத்தனர்.

சுந்தரம் ஐயர் தம்முடைய குழந்தைகளுக்கு ஆங்கிலக் கல்வியை அளிக்க விரும்பினார். பள்ளிமடம் வட்டத்திலிருந்த ஒரு மிஷனரி ஆரம்பப்பள்ளியில் வேங்கடராமனைச் சேர்ந்தார்.

வேங்கடராமனின் மனம் பள்ளிப்படிப்பில் ஈடுபட வில்லை. வயிற்றுப் பிழைப்புக்காகப் படிக்கும் கல்வியில் அவருக்கு நாட்டம் இல்லை.

கால்பந்து விளையாடுதல், மல்யுத்தம் பயிறுதல், ஓடுதல், நீந்துதல், கபடி விளையாடுதல் போன்றவை வேங்கடராமனுக்கு விருப்பமான விளையாட்டுக்களாக இருந்தன. அதனால் அவனுக்கு அதிகமான நண்பர்கள் கிடைத்தனர். அவர்களிடையே வேங்கடராமன் முக்கியத்துவமும் முதன்மையும் பெற்றுத் திகழ்ந்தான் கௌண்டின் யநதி பள்ளிக்கு அருகில் இருந்தது, அந்த நதிக்கரையில் வேங்கடராமன் தனது நண்பர்களுடன் விளையாடுவான் காளையார்கோயில் வேங்கடராமன் படித்த பள்ளிக்கு அருகில் இருந்தது. திருச்சுழியிலிருந்து கோயில் பூஜை செய்யும் குருக்கள், பட்ட,ர் வேத விற்பன்னர்கள் ஆகியோர் அன்றாடம் காளையார் கோயிலுக்குச் செல்வார்கள் அவர்களுடன் சிறுவன் வேங்கடராமனும் சென்று அங்கு விளையாடுவான்.

ஒரு முறை சுந்தரம் ஐயரின் முன்னோர் ஒருவரின் இல்லம் தேடி வந்த சந்தியாசியை அவர் உரிய முறையில் வரவேற்று உபசரிக்கவில்லை அதனால் சந்நியாசி கோபம் கொண்டு சாபம் கொடுத்துவிட்டார் உங்கள் பரம்பரையில் தலைமுறைக்கு ஒருவர் வீட்டை விட்டு வெளியேறி கையேந்தி பிச்சை வாங்கிச் சாப்பிடும் நிலை ஏற்படும் என்று அந்த சந்தியாசி சபித்தார்

அச்சாபம் குறித்து சுந்தரம் ஐயர் அழகம்மாவிடம் கூறினார். அச்சாபப்படி நடந்து வருவதாகவும் விளக்கினார். சுந்தரம் ஐயரின் தகப்பனாரின் சகோதரர் ஒருவர் காவியுடுத்துத் துறவியாகித் திரித்து கொண்டு இருந்தார். சுந்தரம் ஐயரின் மூத்த சகோதரர் வீட்டை விட்டு வெளியேறிப் பரதேசியாகத் திரிந்தார்.

திண்டுக்கல்லில் வேங்கடராமன் ஐந்தாம் வகுப்பு வரைகற்றான். திண்டுக்கல் பகுதியில் இருந்த மலைகள், கோயில்கள் ஆகிய அனைத்தும் அவனுக்கு அத்துபடி! நண்பர்களுடன் அங்கெல்லாம் அலைந்து திரிந்து விளையாடி மகிழ்வான். வேங்கடராமன் திண்டுக்கல்லில் படித்துக் கொண்டிருந்தபொழுது எதிர்பாராத விதமாக சுந்தரம் ஐயர் காலமானார் அழகம்மாவும் குழந்தைகளும் சோகத்தில் ஆழ்ந்தனர். அந்தச் சோகத்திலும் வேங்கடராமன் சிந்தனையில் மூழ்கினான்.

உடல்தான் சுந்தரம் ஐயரா? அவருடைய உயிர் எங்கே போயிற்றது? மரணம் என்பது என்ன? மரணத்தைத் தவிர்க்க இயலாத? உயிரை எடுத்துக் கொண்டு போவது யார்? என்றெல்லாம் பலவாறு வேங்கடராமன் சிந்திக்கலானான். சுந்தரம் ஐயரின் இறுதிக்கடன்கள் முடிந்தன. கூட்டுக் குடும்பங்கள் நிறைந்திருந்த அக்காலத்தில் சுந்தரம் ஐயரின் சதோதரர்கள் அழகம்மா மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசித்தனர். குடும்ப நண்பரான பூமிநாதசுவாமிதிருக்கோயில் குருக்களும் உடன் இருந்தார்.

சுந்தரம் ஐயரின் தம்பிகளில் ஒருவரான சுப்பையா மதுரையில் வசித்து வந்தார் மற்றொரு தம்பியான நெல்லையப்பர் மானாமதுரையில் இருந்தார். நாகசாமி மற்றும் வேங்கடராமன் மதுரையிலுள்ள சுப்பையா வீட்டில் தங்கி, படிப்பைத் தொடருவது நல்லதென எண்ணினார். அழகம்மாள் குழந்தைகள் நாகசுந்தரம், அலமேலு ஆகிய மூவரையும் நெல்லையப்பர் தன்னுடன் மானமதுரைக்கு அழைத்துச் செல்லத் தீர்மானித்தார் சுந்தரம் ஐயரின் குடும்பச் சுமையை அவருடைய சகோதரர்கள் அன்புடன் பங்கிட்டுத் தாங்க முற்பட்டனர்.

மானாமதுரையில் தங்கியிருந்த அழகம்மா மற்றும் குழந்தைகளை நெல்லையப்பர் பரிவுடன் கவனித்துக் கொண்டார். அதே நேரத்தில் மதுரைக்குச் சென்ற நாகசாமி கல்லூரியில் சேர்ந்து படித்தான். தம்பி வேங்கடராமன் வழக்கம் போல் பள்ளிக்கல்வியில் நாட்டம் இல்லாமல் இருந்தான்.

வேங்கடராமன் ஆங்கிலத்தில் மோசமாகவும் தமிழ் தவிர மற்றப் பாடங்களில் சுமாராகவும் மதிப்பெண்கள் வாங்கினான். தமிழில் ஆர்வம் ஆதிகம் இருந்தது நன்னூல் சூத்திரங்கள் வேங்கடராமனுக்கு மனப்பாடமாக இருந்தன இந்தச் செய்திகளை சுப்பையா கடிதம் மூலம் அழகம்மாவிற்கு தெரியப்படுத்தினார் அழகம்மா மதுரையில் இருந்த இரண்டு மகன்களையும் சென்று பார்க்க விரும்பினார்.

மதுரை சென்ற அழகம்மா வேங்கடராமனுக்கு, அறிவுரைகளைக் கூறினார். வேங்கடராமன் அவற்றை அமைதியாகக் கேட்டான். வேங்கடராமன் விடுமுறை நாள்களில் மலையடிவாரங்ளுக்கும்  திருக்கோயில்களுக்கும் செல்வான். திருச்சுழியைச் சேர்ந்த சொக்குப் பட்டர் என்பவர் தீபத்திருநாளைக் காணத் திருவண்ணாமலைக்குச் சென்று திரும்புகையில் மதுரையில் வேங்கடராமனின் தந்தையின் இளவல் சுப்பையரின் இல்லத்திற்குச் சென்றார். பெரியவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் வேங்கடராமன், எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டான்.

சொக்குப் பட்டர், நான் அருணாசலத்திலிருந்து வருகிறேன் என்றார் வேங்கடராமன் அப்பெயரைக் கேட்டவுடன் அனைத்தையும் மறந்தான்! தன்னை மறத்த நிலையில் வேங்கடராமன் வேகமாக மாடியறைக்குச் சென்றான் சிறிது நேரம் கழித்து மாடியறையில் இருந்த பெரிய புராணப் புத்தகத்தை எடுத்து ஈடுபாட்டுடன் படிக்கலானான். சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் திருச்சுழியில் பிறந்த வேங்கடராமன் என்ற சிறுவனின் மனதில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மகரிஷி ரமணரை மாநிலத்திற்கு அளித்தது! இறைவனுக்காக எதையும் தியாகம் செய்யத்துணிந்த சிவனடியார்களின் தொண்டு வாழ்க்கை சிறுவன் வேங்கடராமனின் மனதில் ஆழப் பதிந்தது பள்ளிக் கல்வியில் நாட்டமில்லாத வேங்கடராமனை ஒரு திருமுறை நூல் கவர்ந்தது விந்தைதான்!

மதுரையில் சுப்பையாவின் இல்லம் மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு அருகில் இருந்தது. அதனால் வேங்கடராமன் அன்றாடம் கோயிலுக்குச்  செல்வான் , மீனாட்சியிடம் சுந்தரரேசுவரிடமும் தான் நாயன்மார்களைப் போன்ற பயனுள்ள வாழ்க்கை வாழ வேண்டுமென உள்ளம் உருகி வேண்டிக் கொள்வான் வேங்கடராமனிடம் சிவபக்தியும் ஞானவைராக்கியமும் வளரலாயிற்று.

மாடியறையில் அமர்ந்து மரணம் முதலான விஷயங்கள் குறித்துச் சிந்தித்தான் வேங்கடராமன். ஆழ்ந்த சிந்தனை தியானமாக மாறியது! தியானம் உச்ச நிலையைத் தொட்டது. வேங்கடராமன் சிறிது நேரம் மரணத்தின் விளிம்பிற்கே சென்றுவந்தான் ! அது முதல் அவனுக்கு மரணம் குறித்த அச்சம் ஒழிந்தது.

கோயிலுக்குச் செல்வதும் தியானம் செய்வதுமே முக்கியப் பணியாகிவிட்ட வேங்கடராமனுக்குப் படிப்பு அறவே வெறுத்துப் போயிற்று. ஆர்வத்துடன் ஈடுபட்ட விளையாட்டுக்களும் மகிழ்ச்சியைத் தர வில்லை. நண்பர்கள் குழாத்தையும் நாடவில்லை.

ஆங்கில இலக்கணப் புத்தகத்தின் சில பகுதிகளை மூன்று முறை எழுதும் தண்டனையைப் பெற்றான் வேங்கடராமன். அதன்படி, இரண்டு முறை எழுதி முடிந்த நிலையில் வேங்கடராமனுக்கு விரக்தியும்  வெறுப்பும் மேலிட்டது. இலக்கணப் புத்தகம், பேனா ஆகியவற்றை வேங்கடராமன் வீசி எறிந்தான்.

அச்செயலைக் கண்ட அண்ணன் நாகசாமி பெரிதும் கடிந்து கொண்டார். அதனைப் பொருட்படுத்தாத வேங்கடராமன் அடுத்த நடவடிக்கை குறித்துச் சிந்தித்தான். அருணாசலம் குறித்த நினைப்பு மேலிட்டது. இனி அருணாசலத்தை நோக்கிப் புறப்பட வேண்டியதுதான்!என்ற திடமான, தீர்மானமான முடிவிற்கு வந்தான். அன்றைய சூழ்நிலை அவனுக்குச் சாதகமாகவே அமைந்தது!

 பள்ளிக்கூடத்தில் இன்று ஸ்பெஷல் கிளாஸ் போய்விட்டு வருகிறேன் என்று வேங்கடராமன் அண்ணனிடம் கூறினான். அப்படியா? கீழே இருக்கும் என் பெட்டியைத் திறந்து ஐந்து ரூபாய் எடுத்துக்கொள்; போகும் வழியில் எங்கள் காலேஜில் கட்டிவிடு என்று அண்ணன் நாகசாமி கூறினார். அதுவும் அண்ணாமலையார் திருவருளே என்று கருதிய வேங்கடராமன் ஜந்து ரூபாயை எடுத்துக் கொண்டான்.

இரயில் மார்க்கங்கள் குறித்த ஒரு வரைபடத்தைப் பார்த்ததில் திருவண்ணாமலை பயணத்திற்கு மூன்று ரூபாய் போதும் என்று தெரிந்தது.

நான் என் தகப்பனாரைத் தேடிக் கொண்டு அவருடைய உத்தரவுப்படி இவ்விடத்தை விட்டுக் கிளம்பிவிட்டேன் . நல்ல காரியத்திற்கே புறப்படுவதால் எவரும் விசனப்பட வேண்டாம். பணமும் செலவு செய்ய வேண்டாம் உன் சம்பளத்தை இன்னும் செலுத்தவில்லை ரூ.2 இதோடு கூட இருக்கிறது என்று அண்ணனுக்கு ஒரு கடிதத்தை எழுதி வைத்தான் வேங்கடராமன்.

அவசரமாக மதுரை இரயில் நிலையத்திற்குச் சென்றான். அன்று தெய்வாதீனமாக இரெயில் சற்றுக் காலதாமதமாக வந்தது! திண்டிவனத்திற்குப் பயணச் சீட்டு வாங்கினான் ஒருவாறு விடுதலை பெற்ற உணர்வோடு வண்டியில் ஏறி அமர்ந்தான். வண்டியும் புறப்பட்டது.

அண்ணாமலை, அருணாசலம், அருணகிரி ஆகிய சொற்கள் பக்தர்களைச் சொக்க வைக்கும் மந்திரச் சொற்கள் மகான்களைத் தன்பால் ஈர்த்து, இறையருள் இன்பத்தில் திளைக்கச் செய்து, புகழும் முக்தியும் அருளும் அற்புதத் திருத்தலம் அண்ணாமலை!

மலையும் அண்ணாமலை! மகிமைமிகு தலமும் அண்ணாமலை தலத்தில் உறையும் மகேசன் பெயரும் அண்ணாமலை!

மதுரையிலிருந்து திண்டிவனத்திற்கு ரெயில் கட்டணம் இரண்டு ரூபாய் பதின்மூன்று அணா. அது போக வேங்கடராமனிடம் மூன்று அணாதான் எஞ்சி இருந்தது. திண்டிவனத்திலிருந்து திருவண்ணாமலை மிகவும் அருகில் இருக்குமென்று வேங்கடராமன் கருதினான். வண்டியேறிய பிறகு வேங்கடராமன் வயதான ஒருவர் புதிய வழித்தடம் குறித்துக் கூறினார். விழுப்புரத்திலிருந்து காட்பாடி செல்லும் வண்டிகள் திருவண்ணாமலை வழியாகச் செல்கின்றன என்ற விவரத்தைக் கூறினார்.

இவனிடம் மீதமிருந்த சில்லரை அறையணி நல்லூர் வரை செல்லுமளவிற்கே இருந்தது. அங்கே இறங்கி நடந்தே திருவண்ணாமலைக்குச் செல்லத் தீர்மானித்தான் மாலை நேரத்தில் அறையணி நல்லூரில் இறங்கி மலைக்கோயில் ஈசனைத் தரிசிக்கச் சென்றான் வேங்கடராமன். அங்கு ஒரு ஜோதி தோன்றியது சன்னிதியிலிருந்த ஈசன் திருமேனியில் அந்த ஜோதி ஐக்கியமானது!

திருக்கோவிலூர் பாகவதரிடம் வேங்கடராமன் தனது கடுக்கனை அடகு வைத்து நான்கு ரூபாய் வாங்கிக் கொண்டான் அடுத்தநாள் காலையில் திருக்கோவிலூரிலிருந்து ரயிலில் திருவண்ணாமலைக்குப் பயணமானான் திருவண்ணாமலையை நெருங்கிய உடனேயே வேங்கடராமன் ஆனந்தக் கண்ணீர் உகுத்தான் .உடல் சிலிர்த்தது!

அருணாசலசிவ! அருணாசலசிவ! என்ற மந்திரத்தை உள்ளம் உருகி ஜபித்தபடி 1886 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள் வேங்கடராமன் பாலரமணராக அண்ணாமலையில் அடியெடுத்து வைத்தார். ஈசனும் பாலரமணரைப் பாசத்துடன் வரவேற்றார்! ஆனால் பாலரமணர் பாசங்கள் அனைத்தையும் துறந்தார்.

தன் தலையை மொட்டை அடித்துக் கொண்டார். வேட்டியைக் கோவணமாகக் கட்டிக் கொண்டார். ஜாதி சின்னமாகிய பூணூலை அறுத்து எறிந்தார். அனைத்தையும் துறந்த சுத்தபுருஷனாக ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார். பால் வடியும்  முகம் கொண்ட பாலரமணரின் தவத்தைக் கண்டு பலரும் வியந்தனர். எனினும், விஷமிகள் சிலர், அவர் மீது கற்களை வீசித் தொந்தரவு செய்தனர்.

அண்ணாமலையர் கோயிலில் ஓர் இருண்ட குகை இருந்தது. அதனைப் பாதாளலிங்கக் குகை என்று கூறுவார். அங்குப் பகல் நேரத்திலேயே இருள் நிறைந்திருக்கும். பாலரமணர் அதுவே தனது தவத்திற்கு ஏற்ற தனிமையான இடம் எனத் தேர்ந்தெடுத்தார். அங்குச் சென்று தவத்தில் அமர்ந்தார். ஊண், உறக்கம் இல்லாமல் கடுந்தவம் இயற்றினார். உடல் மெலிந்தது. குகைக்குள் இருந்த புழுக்களும் பூச்சிகளும் பாலரமணரின் உடலைத் துளைத்தன. பாலயோகியின் தொடைப்பகுதி அரிக்கப்பட்டது ஆனாலும் அவருடைய தவம் கலையவில்லை!

அங்கு அவர் எத்தனை காலம் கடுந்தவம் இயற்றினார் என்பது எவருக்கும் தெரியாது. சேஷாத்ரி சுவாமிகள் அக்குகையில் நுழைந்து வெளியே வந்தார். உள்ளே தவமியற்றிய உத்தமத் துறவியை உலகிற்கு அறிமுகம் செய்தார். சேஷாத்ரி சுவாமிகள் ரமணர் திருவண்ணாமலைக்கு வருவதற்கு எழு ஆண்டுகள் முன்பு வந்தவர். வயதிலும் ரமணரைவிட மூத்தவர். உத்தண்டி நயினார் என்ற சாது பாலரமணரிடம் உபதேசம் பெற வந்தார் அவர் பாலரமணருக்குப் பாதுகாவலாக இருந்தார். அவர் இல்லாத நேரங்களில் விஷமிகள் ரமணருக்கு இடையூறுகள் செய்தனர். எனினும் ரமணர் தமது மௌனத் தவத்தைத் தொடர்ந்தார்.

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் முதல் குருநாதரான ஸ்ரீமத்தெய்வசிகாமணி பரமாச்சார்ய சுவாமிகளின் சமாதி அமைந்துள்ள திருக்கோயிலை குருமூர்த்தம் என்று அழைத்தனர். அண்ணாமலைத் தம்பிரான் என்ற சுவாமிகள் பாலரமணரை குருமூர்த்தத்தில் அமர்ந்து தவம் இயற்ற உதவினார் அங்கு பாலரமணர் பதினெட்டு மாதங்கள் கடுந்தவம் இயற்றினார்.

அண்ணாமலைத் தம்பிரான் மதுரையில் ஆற்றிய ஒரு சொற்பொழிவில் பாலரமணரின் பெருமைகளை எடுத்துக் கூறினார் அதனைக் கேட்ட சிறுவன் ஒருவன் திருச்சுழி வேங்கடராமன் திருவண்ணாமலையில் இருப்பதாக உறவினர்களிடம் கூறினான். வேங்கடராமனின் மற்றொரு சிற்றப்பாவான நெல்லையப்பர் திருவண்ணாமலைக்கு வந்தார் மாந்தோப்பில் பரண் அமைத்து அதன் மீதிலிருந்து தவம் இயற்றிக் கொண்டிருந்தார் பாலரமணர் மானாமதுரை நெல்லையப்பர் தரிசனம் செய்ய விரும்புகிறார் என்று எழுதியனுப்பினார் சிற்றப்பா. அவருக்கு அனுமதி கிடைத்தது. பாலரமணரின் கோலத்தைக் கண்டு ஒருபுறம் பெரிதும் வருந்தினார் மறுபுறம் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பாலகன் பரமஞானியாகத் திகழ்வதைக் கண்டு மகிழ்ந்தார். தன்னுடன் ஊருக்கு வருமாறு அழைத்தார். பாலரமணர் எவ்விதச் சலனமும் இன்றி மௌனமாக இருந்தார். அவருடைய வைராக்கியத்தைப் புரிந்து கொண்ட நெல்லையப்பர் ஊர் திரும்பினார்.

தாய் அழகம்மை தனது மூத்த மகன் நாகசாமியுடன் திருவண்ணாமலைக்கு வந்தார். அப்போது பாலரமணர் பவளக் குன்று என்ற வேறு இடத்தில் நிஷ்டையில் அமர்ந்திருந்தார். மகன் வேங்கடராமனை கௌபீன தாரியாகக் கண்ட தாயின் மனம் துடித்தது. தாயும் அண்ணனும் தவசீலரைத் தங்களுடன் அழைத்தனர். பந்தபாசங்கள் அனைத்தையும் அறுத்துவிட்ட ஞானி பாலரமணர் அவர்களின் சொற்களைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை தாயின் கதறலைக் கண்ட பக்தர்கள், பதிலை எழுதிக் காட்ட பாலரமணரிடம் வேண்டினர்.

அவரவர் பிராப்தப் பிரகாரம் அதற்கானவன்
ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான்
நடவா தென் முயற்சிக்கினும் நடவாது
நடப்ப தென்றடை செய்யினும் நில்லாது
இதுவே திண்ணம் ஆதலின்
மௌனமாய் இருக்கை நன்று!

என்ற ஞானமொழிகளை பாலரமணர் எழுதினார் தாய் வேறு வழியின்றி நாகசாமியுடன் ஊர் திரும்பினார்.

விசாகப்பட்டினம் நரசிம்ம சாஸ்திரிகளின் மகன் கணபதி முனிவர், திருவண்ணாமலை வந்து தியானத்தில் அமர்ந்திருந்தார். அப்போது பகவான் அழைக்கிறார் என்றல ஒரு ஒலி அவுருக்குக் கேட்டது உடனே மலையேறிச் சென்று விருபாட்ச குகையில் அமர்ந்திருந்த பகவானைக் கண்டு வணங்கினார்.

தன்னைச் சீடனாக ஏற்று நல்லுபதேசம் செய்ய வேண்டினார். பகவான் அவ்வாறே அவரைச் சீடராக ஏற்று பதினைந்து நிமிடத்திற்கு உபதேசம் செய்தருளினார். பின்னர் கணபதி முனிவர், பாலரமணரை இளமையிலேயே புலன்களை அடக்கி ஆண்டவர் என்ற பொருளில் அவரை ரமணர் என்று அழைத்தார். அப்பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது!

சேஷாத்ரி சுவாமிகள் அடையாளம் காட்டிய பாலரமணரைப் பாமர மக்கள் பிராமண சாமியார் என்றே அழைத்து வந்தனர். திருவண்ணாமலையில் அடியெடுத்து வைத்தவுடன் வேங்கடராமன் பூணூலை அறுத்தெறிந்தார். ஜாதிமதங்களைக் கடந்த உத்தமராகி விட்டார் எனினும் அவருக்கும் ஜாதி முத்திரை!

வேங்கடராமன் சிறுவனாக இருந்தபொழுது, அவருடைய உறவினர் லட்சுமண  அய்யர் என்பவர் அவரை ரமணி என்ற செல்லப் பெயரிட்டு அழைத்து வந்தார். அவரது விருப்பப்படியும் ரமணர் என்ற பெயர் பொருத்தமாக அமைந்துவிட்டது.

அடுத்தநாள் ரமணமகரிஷி தமது சீடர்களுக்கு, சிறிது நேரம் உபதேசம் செய்தருளினார் காவியகண்ட கணபதி முனிவர் முன்னரே பிரபலமாக இருந்தார். அவர் ரமண மகரிஷியின் சீடரான பிறகு மக்கள் மத்தியில் ரமணர் பெரும் புகழ் பெற்றார் பகவான் அவ்வப்பொழுது பக்தர்களின் வினாக்களுக்கு அளித்த பதில்களைத் தொகுத்து ரமணகீதை என்ற நூலாக வெளியிட்டவர் கணபதி முனிவரே ஆவார்.

முதல் முறை திருவண்ணாமலைக்கு வந்து மகனைக் கண்டு ஏமாற்றத்துடன் மானாமதுரைக்குத் திரும்பினார் அழகம்மை. எனினும் மகனைக் காணஅடிக்கடி வந்து சென்றார் 1914 ஆம் ஆண்டு அண்ணாமலை வந்த அழகம்மைக்கு உடல் நலம் குன்றியது இருபது நாள்களுக்கு மேல் அவர் படுத்த படுக்கையாக இருந்தார். அப்போது ரமணர் தமதுஅன்னையை அன்புடன் கவனித்துப் பணிவிடைகள் செய்தார் உடல் நலம் தேறியவுடன் அழகம்மை மானாமதுரைக்குத் திரும்பினார்.

அழகம்மைக்குப் பாதுகாப்பாக இருந்து வந்த நெல்லையப்பர் காலமானார். மகன் நாகசுந்தரத்தின் மனைவியும் மறைந்தார். சோகங்கள் தொடர்ந்தன. துவண்டு போன அழகம்மை தம்முடைய  ஞானப் புதல்வனே கதியென்று கருதி 1916 ஆம் ஆண்டு மீண்டும் திருவண்ணாமலைக்கு வந்தார்.

அழகம்மையின் வருகைக்குப் பிறகு பகவான் ஸ்கந்தாஸ்ரமத்தில் வசிக்கலானார். அழகம்மை சமையல் பணிகளை மேற்கொண்டு,பக்தர்களுக்கு அன்னம் அளித்தார். அழகம்மை உடன் இருப்பதை பகவான் விரும்பமாட்டார் என்றும் அவர் நமது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டுவிடுவார் என்றும் பக்தர்கள் எண்ணினர். பகவான் அவ்வாறு செய்யவில்லை எனினும் ரமணர் பக்தர்களிடம் பேசிய அளவிற்கு அழகம்மையிடம் பேசியதில்லை.

பகவான், ஆசிரமத்திலுள்ள பல பக்தர்களில் ஒருவராகவே அழகம்மையையும் கருதினார். பகவானின் தாய் என்ற முறையில் அவருக்கென்று எந்த விதமான தனியுரிமையும் அளிக்கவில்லை எனினும், பகவான் அவ்வப்பொழுது அழகம்மையின் ஆச்சார அனுஷ்டானங்கள் குறித்து நகைச்சுவை கலந்த விமர்சனங்கள் செய்வார் அந்த முறையிலேயே தமது தாயை ஞானமார்க்கத்திற்குத் திரும்பினார்.

அழகம்மையின் இறுதிக்கால வாழ்க்கையில் ஆறு ஆண்டுகள் ஆச்சிரமத்தில் கழிந்தன. அப்போது அவருக்கு பகவானிடம் பூரண நம்பிக்கை ஏற்பட்டது. அழகம்மையின் இறுதிநாளும் வந்தது.

அழகம்மைக்கு மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. பகவான் தமது வலக்கரத்தை அன்னையின் இதயப் பகுதியிலும் இடக்கையை உச்சந்தலையிலும் வைத்தபடி அருகிலேயே உட்கார்ந்திருந்தார். இரவு எட்டு மணிக்கு அழகம்மை முக்தி அடைந்தார். அழகம்மை சமாதிநிலை அடையும் வரை பகவானும் பக்தர்களும் சாப்பிடாமல் இருந்தனர். சமாதி எய்திய பிறகு பகவான் இனி நாம் சாப்பிடலாம் தீட்டும் இல்லை ஒன்றும் இல்லை என்று கூறினார்.

அடுத்தநாள் காலையில் சமாதிக் கிரியைகள் தொடங்கின. அழகம்மையின் உறவினர்களும் , ரமணரின் பக்தர்களும் கூட்டமாக வந்தனர். மலைக்கு அப்பாலுள்ள பாலிதீர்த்தம் என்ற இடத்தில் முறைப்படி சமாதிக் குழியில் விபூதி, கற்பூரம் உப்பு ஆகியவற்றை நிரப்பினர். அதன் மீது ஒரு சமாதி கட்டினார். சமாதியின் மீது சிவலிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த சிவலிங்கம் மாத்ருபூதேசுவரர் என்று பெயர் பெற்றது மாத்ருபூதேசுவரருக்கு அன்றாட பூஜைகள் தொடர்ந்து நடக்கின்றன. ஆண்டு தோறும் வைகாசி தேய்பிறை நவமியில் மாத்ருபூதேசுவரர் மகாபூஜை சிறப்பாக நடைபெறுகிறது .

கணபதி சாஸ்திரிகளைப் போன்ற கல்வியாளர்கள் பலரும் ரமணரின் சீடர்களானார்கள். பல துறைகளைச் சேர்ந்த சான்றோர்களும் பாமரரும் பகவானுக்குச் சீடர்கள் ஆகி தங்களால் இயன்ற பணிவிடைகளையும் தொண்டுகளையும் செய்தனர்.

ரமணாஸ்ரமம்

ரமணர் 54 ஆண்டுகள் திருவண்ணாமலையில் வாழ்ந்தார். அதில் 26 ஆண்டு வாழ்க்கையை பாதாளலிங்கக் குகை குருமூர்த்தம், மாந்தோப்பு, பவழக் குன்று, விருபாட்ச குகை, ஸ்கந்தாஸ்ரமம் ஆகிய வேறுபட்ட இடங்களில் வாழ்ந்தார் இருபத்தெட்டு ஆண்டுகள் பகவான் ரமணாஸ்ரமத்தில் தொடர்ந்து எழுந்தருளியிருந்தார்.

ரமண பக்தர்களில் ஒருவர் கந்தசாமி. இவர் தன்னுடைய சொந்த முயற்சியாலும் உழைப்பாலும் ஸ்கந்தாஸ்மரத்தை உருவாக்கினார். அவருடைய நினைவைப் போற்றும் வகையில் தான் ரமணர் அந்த இடத்திற்கு ஸ்கந்தாஸ்ரமம் என்று பெயரிட்டார்.

மலையிலுள்ள ஸ்கந்தாஸ்ரமத்திலிருந்து ரமணர் அடிக்கடி அன்னையின் சமாதிக்குச் சென்று வருவார். ஒரு நாள் அன்னையின் சமாதிக்கு வந்த ரமணர் தெய்வீக உந்துதலால் அங்கேயே தங்கிவிட்டார். அந்த இடம் பக்தர்கள் எளிதில் வந்து போகவும் வசதியாக இருந்தது. ஆகவே அந்த இடத்திலேயே பக்தர்கள் ரமணாஸ்ரமத்தை நிறுவினர்.

ஆஸ்ரம நடைமுறைகள்
ரமணர் விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்து விடுவார். ஆஸ்ரம அன்பர்கள் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, மண்டபத்தில் கூடிவிடுவார்கள். தியானமும், பக்தியிசையும் நடைபெறும். ஐந்து மணிக்கு ரமணர் தமது ஆசனத்தில் அமர்வார் . அவர் பதினைந்து மணித்துளிகள் தியானம் செய்வார்.

ஆழ்ந்த தியானத்தில் ரமணரை, பக்தர்கள் தவயோகியாகக் கண்டு தரிசிப்பார்கள். ஆஸ்ரம வாழ்க்கையில் எல்லோரும் எல்லாவற்றிலும் சமம் என்ற கோட்பாட்டை, பகவான் வலியுறுத்தினார். பதினோரு மணியளவில் ஆஸ்ரமத்திலுள்ள பசு முதலான வாயில்லா ஜீவன்களுக்கும், வெளியில் காத்திருக்கும் ஏழைகளுக்கும் உணவு வழங்கப்படும்.

புதிய மரபு

ரமணாஸ்ரமத்தில் விலங்கினங்களுக்கும், ஏழைகளுக்கும் முதலில் உணவு வழங்குப்படும் ரமணாஸ்ரமத்தில் பக்தர்களுக்கு உணவு பரிமாறிய பிறகே ரமணருக்குப் பரிமாறுவர்! இது புதிய மரபு!

ரமணரின் எளிமை

பிரமாண்ட பந்தலில் பூஜை, அன்னதானம் என அமர்க்களப்படுகிறது. காலை 10 மணி முகூர்த்தத்தில் ரமணரை அழைத்து வந்து பூஜை செய்ய ஏற்பாடு. இதற்கிடையே அன்னதானத்திற்காக நிறைய பரதேசிகள் வி.ஐ.பி பந்தலில் நுழைந்துவிட்டனர். அப்போது யாரோ ஒருவர், பரதேசிகளுக்கு கிழக்குப் பந்தலில் அன்னதானம் நடக்கும். அங்கே செல்லுங்கள். இங்கே வராதீர்கள்! என்று விரட்டியடித்தார். மணி காலை 9.50 ரமணரை அழைக்கப் போனால் அவரைக் காணோம்! எங்கே தேடியும் கிடைக்காமல் திடுக்கிட்டு திகைத்தனர். பூஜை நேரமோ நெருங்கிவிட்டது. அப்போது ஒருவர் ஓடோடி வந்து. கிழக்குப் பக்க பந்தலில் ரமணரைப்போல் ஒருவர் உட்கார்ந்திருப்பதாகச் சொன்னார். அங்கு போய்ப் பார்த்தால், பரதேசிகளுக்கு நடுவே ரமணர் அமர்ந்திருக்கிறார். இங்கே வந்து ஏன் உட்கார்ந்திருக்கிறீர்கள்! என்று கேட்டபோது, ரமணர் சொன்னார். பரதேசிகள் கிழக்குப் பந்தலுக்குப் போகணும்னு ஒருவர் விரட்டினார். அதான் இங்கு வந்து விட்டேன்!

என் கடன் பணிசெய்து கிடப்பதே

என்கடன் பணிசெய்து கிடப்பதே என்றார் அப்பர்பெருமான் அதற்கேற்ப பகவான் ரமணர் எப்போதும் ஏதாவது ஒரு பணியில் தன்னை ஈடு படுத்திக் கொள்வார் காலையில் ஒன்பது மணிக்கு செய்தித்தாள்களைப் படிப்பார். கடிதங்களைப் படிப்பார். அச்சுப் பிரதிகளைத் திருத்துவார் புத்தக பைண்டிங் செய்வார். காய்கறிகளை நறுக்குவார்; தோட்ட வேலைகள் செய்வார்; எனினும் அவருடைய உள்ளம் எப்போதும் ஆத்மானுபவத்தில் திளைத்து இருக்கும்!

மாலை மூன்று மணி அளவில் ஆஸ்ரம அன்பர்களுக்கு காபி அல்லது தேநீர் வழங்கப்படும். அதன் பிறகு ரமணர் பக்தர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பார். ஐயங்களைப் போக்குவார். சில நாள்களில் ரமணர் மெதுவாக நடந்து சென்று கிரிவலம் வருவார். ரமணரின் இளவலும் சின்ன சுவாமி என்று அழைக்கப்பட்டவரும் ஆகிய நிரஞ்சனானந்தர்  ஆஸ்ரமம் பொறுப்பாளராக இருந்து அனைத்து வளர்ச்சிப்பணிகளையும் நிறைவேற்றினார்.

ஆஸ்ரமத்தில் புத்தக விற்பனை மையம் திறப்பு மாத்ருபூதேஸ்வர் கோயில் குடமுழுக்கு, வேத பாடசாலை தொடக்கம் ஆகிய பணிகள் அனைத்தும் நிரஞ்சானந்தரால் செல்வனே நிறைவேற்றப்பட்டன. ஆஸ்ரமத்தில் இரவு ஏழு மணிக்கு மேல் பக்திப் பாடல்களை இசைப்பார்கள் ஒன்பது மணிக்கு இரவு உணவு பரிமாறப்படும்.

ரமண மகரிஷியும் ஸ்ரீநாராயணகுருவும்
அண்மைக்காலத்தில் வாழ்ந்த அருளாளர்களில் முக்கியமானவர் ஸ்ரீநாராயணகுரு. அண்ணாமலையில் ரமண மகரிஷியும், கேரளத்தில் ஸ்ரீநாராயண குருவும் சமகாலத்தில் ஞானச்செங்கோல் ஓச்சி வந்தனர்.

அச்சுதானந்தர் கோவிந்தானந்தர் வித்யானந்தர் ஆகிய சீடர்களுடன் நாராயணகுரு அண்ணாமலைக்கு வந்தார். ரமணமகரிஷி ஸ்கந்தாஸ்ரமத்தில் தாழ்வாரத்தில் அமர்ந்திருந்தார். சற்று நேரம் அவரை உற்று நோக்கிய ஸ்ரீநாராயணகுரு மரத்தடியில் அமர்ந்து ரமணருடன் அளவளாவினார்.

இன்று எங்களுடன் சாப்பிடலாமே! என்று ரமணர் ஸ்ரீநாராயணகுருவிடம் மலையாளத்தில் கூறினார். இருவரும் அமர்ந்து உணவருந்தினர். ஸ்ரீநாராயணகுரு பத்தியச் சாப்பாடு மேற்கொண்டு இருந்ததால் மோர்சாதம் கனிகள் அப்பளம் பாயசம் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டார். ரமணர் மதிய உணவிற்குப் பிறகு சற்று நேரம் நேரம் மலைப்பக்கம் சென்று வருவார். அன்று ரமணர் மலைப்பக்கம் சென்றுவருவதற்குள் ஸ்ரீநாராயணகுரு அவருக்கு கவிதைக் காணிக்கை  ஒன்றை ஆயத்தமாக வைத்திருந்தார்!

ஆம் கவிதை எழுதிய சீட்டை நாராயணகுரு ரமணரிடம் கொடுத்தார். நாராயணகுரு விடைபெற்றுச் சென்ற பிறகு ரமணர் அந்தச் சீட்டைப் பிரித்துப் படித்தார். நிவ்ருத்தி பஞ்சகம் என்ற தலைப்பில் ஸ்ரீநாராயணகுரு ரமணரைப் போற்றிப் புகழ்ந்து, சம்ஸ்காரத்தில் ஐந்து சுலோகங்கள் எழுதியிருந்தார்.

சிலநாட்கள் சென்ற பின் நாராயணகுருவின் வர்க்கலை ஆசிரமத்திலிருந்து ரமணருக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் நாராயணகுரு பகவானைப் போற்றி முனிசரய பஞ்சகம் என்ற தலைப்பில் மேலும் ஐந்து சுலோகங்கள் இயற்றி அனுப்பியிருந்தார்.

ஸ்ரீநாராயணகுரு இயற்றிய பத்துப் பாடல்களையும் (இரண்டு பஞ்சகங்கள் ) ரமணர் ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தில் தமது கைப்பட எழுதி வைத்துள்ளார். நாராயணகுரு பகவானை ராஜ சர்ப்பம் என்று போற்றி உரைத்துள்ளார். வர்க்கலை ஆசிரமத்திற்கு வரும் பக்தர்களிடம் ஸ்ரீநாராயணகுரு ரமணரைப் பற்றி விசாரிப்பது வழக்கம்.

நாராயணகுரு உடல் நலம் குன்றிய செய்தி தந்தி மூலம் ரமணருக்குத் தெரிவிக்கப்பட்டது. பகவான் ரமணர், ஸ்ரீநாராயணகுருவிற்கு உதவுவதற்காகத் தமது சீடர்கள் இருவரை அனுப்பி வைத்தார். ஸ்ரீநாராயணகுரு சமாதி அடையும் வரை அவர்கள் வர்க்கலையில் தங்கியிருந்து அவருக்கு அணுக்கத் தொண்டுகள் புரிந்தனர். இவ்வாறு இரு  நட்புக் கொண்டிருந்தனர்.

ரமணாஸ்ரமத்தில் ராஜேந்திர பிரசாத்

அப்போது இந்திய விடுதலை வேள்வி இறுதிக் கட்டத்தில் இருந்தது. மகாத்மா காந்தியின் தூதுவர்களாக மூவர் ரமணாஸ்ரமத்திற்கு வந்து, ஒரு வாரம் தங்கினர். ரமணரைத் தரிசித்து மகிழ்ந்தனர்.

பாபு ராஜேந்திர பிரசாத், ஜம்னாலால் பஜாஜ், காமத் ஆகிய மூவருமே ரமணாஸ்ரமம் வந்தார்கள். அவர்கள் விடைபெற்றுச் செல்வதற்கு முன்னால் ரமணரைத் தரிசித்தனர். பஜாஜ் அவர்கள் ரமண தரிசனம் தங்களுக்கு புதிய ஆத்ம பலத்தைக் கொடுத்துள்ளதாகக் கூறினார். ரமணரும் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். சுதந்திரத்திற்குப் பிறகு 1950 இல் ரமணரின் ஆசிகளைப் பெற்ற பாபு ராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் ஜனாதிபதியாகப் பெறுப்பேற்றார்.

தமிழ்க் கவிஞர் ரமணர்

ஆத்மஞானியாகவும் சித்தபுருஷராகவும் திகழ்ந்த ரமணர் ஒரு சிறந்த தமிழ்க் கவிஞர் ஆவார். பிøக்ஷ ஏற்கச் செல்லும் பக்தர்கள் பாடுவதற்கு ஏற்றதாக ரமணர் இயற்றியது அக்ஷரமணமாலை என்ற தோத்திரம்.

அக்ஷரம்  என்றால் அழியாதது என்று பொருள். எழுத்துக்கள் காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்பதால் அக்ஷரம் என்றனர். மேலும் எழுத்துக்கள் அகரத்தில் தொடங்கி, க்ஷகர த்தில் முடிவடைகின்றன. அழியாமல் இருக்கும் இறைவனுக்கு அழியாமல் இருக்கும் எழுத்துக்களால் தொடுத்ததே அக்ஷரமணமாலை. அக்ஷ+ரமணமாலை என்றும், அக்ஷர மணமாலை என்றும் பொருள் கொள்ளலாம். இதனை ரமணர் தமிழில் தொடுத்ததால் அ வில் தொடங்கி வை என்ற எழுத்தில் நிறைவு செய்கிறார். மொத்தம் நூற்றெட்டுக் கண்ணிகளைக் கொண்டது அக்ஷரமணமாலை. நூலின் தொடக்கத்தில் கணபதி காப்பும் அருணாசலசிவ! அருணாசலசிவ! என்ற பல்லவியும் உள்ளது. வள்ளுவர் தமது பெற்றோர் பெயர்கள் வரும் வகையில் ஆதிபகவன் என்று தொடங்கினார் ரமணர் அக்ஷரமணமாலையின் இரண்டாம் கண்ணியில் அழகு சுந்தரம் போல் என்று குறிப்பிட்டுள்ளார். ரமணரின் தாய் அழகம்மா தந்தை சுந்தரம் இருவர் பெயரையும் இணைந்து அழகுசுந்தரம் என்று இரண்டாவது கண்ணியைத் தொடங்குகிறார். தோத்திரமாகப் பாட ஏற்றது. எனினும் அக்ஷரமண மாலையில் மேலான வேதாந்தக் கருத்துக்கள் பொதிந்துள்ளன.

நான் யார் என்ற ஆத்ம விசார நூலை ரமணர் இயற்றியுள்ளார். ரமணர் இயற்றிய உள்ளது நாற்பது, திருமூலரின் திருமந்திரத்தைப் போன்ற நடையில் இயற்றப்பட்டுள்ளது.

வடமொழியில் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளிலும் ரமணர் சில கவிதைகள் இயற்றி உள்ளார். எனினும், தமிழ்க்  கவிதை எழுதுவதிலேயே ஆதிக ஆர்வம் கொண்டிருந்தார். ரமணரின் தாயார் உடல் நலம் குன்றியிருந்த பொழுது அவர் இனிய வெண்பாக்களை இயற்றினார்.

அலையாய் வருபிறவி அத்தனையும் மாற்ற
மலையாய் எழுந்த மருந்தே!- தலைவாநின்
தாள்கதியாய் வாழும் என் தாய் தாப மாற்றியே
ஆள்வதும் உன்கடனே ஆம்.

நினைத்த மாத்திரத்தில் வெண்பாக்களை இயற்றும் திறமை பெற்றவர் ரமணர். ரமணரின் நூல்கள் ரமண நூற்றிரட்டு என்ற பெயரில் வெளிவந்துள்ளன. தனி நூல்களும் உள்ளன.

ரமணர் திருவண்ணாமலைக்கு வந்த பொன்விழா ஆண்டு 1946 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. 1948 ஆம் ஆண்டு பகவானுக்கு இடது முழங்கைக்குக் கீழே ஒரு கட்டி தோன்றியது சர்க்கோமா என்ற புற்றுநோய்க் கட்டி என்று மருத்துவர்கள் கண்டறிந்தனர். கரத்தை வெட்டி எடுக்க வேண்டுமென்று கூறினார். மகான் இயற்கை வழி நடக்கட்டும் என்று கூறிவிட்டார். அறுவைச் சிகிச்சை பயனளிக்கவில்லை. நோயைப் பொருட்படுத்தாமல் மகரிஷி தனது பணிகளைச் செய்து வந்தார்.

1950ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் பகவான் பரிபூரணம் எய்தினார். சற்றே கண்களை விரித்து, புன்னகை மலர்ந்து விழியோரத்தில் பேரானந்தக் கண்ணீர் மல்கக் காட்சியளித்த நிலையில் சித்தி அடைந்தார். அதே நேரத்தில் ஓர் எரிநட்சத்திரம் வானவெளியில் மெல்ல நகர்ந்து அண்ணாமலைச் சிகரத்தில் ஐக்கியமானதை நகரவாசிகள் கண்டனர்! அருணாசலசிவ என்று பக்தர்கள் முழங்கினர்.

மகரிஷியின் பூதவுடலை பத்மாசனத்தில் இருக்கச் செய்து அபிஷேக ஆராதனைகள் நடத்தினர். மாத்ரு பூதேஸ்வரர் சன்னதி பழைய தரிசன மண்டபம் இரண்டுக்கும் இடையில் பூதவுடலை சமாதிகொள்ளச் செய்தனர். அன்றாட வழிபாடுகள் நடைபெறுகின்றன.

திருவண்ணாமலை ரமணாசிரமத்தில் ஆண்டு தோறும் ஆராதனை விழா நடைபெறுகிறது. ரமணாசிரமம் சேஷாத்ரி சுவாமிகள் அதிஷ்டானம் உள்ள அதே சாலையில் வலப்புறத்தில் அமைந்துள்ளது.

திருவண்ணாமலையில் ரமணாஸ்ரமத்தில் அவருடைய கமண்டலம், பாதணி, கைத்தடி ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த புண்ணிய பூமியில் ரமணர் இன்றும் தங்கியிருந்து தங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் பக்தர்கள்.


வைணவத்தை வாழவைத்த ராமானுஜர்!

வைணவத்தை வாழவைத்த ராமானுஜர்!

ராமானுஜர், 1017ம் ஆண்டு பிறந்து 1137 வரை 120 ஆண்டுகள் வாழ்ந்த மிகப்பெரிய மகான். ஜாதி, பேதமற்ற சமுதாயத்தை படைக்க அவர் வழிகாட்டினார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த திருக்கச்சி நம்பியை தனது குருவாக ஏற்றுக்கொண்டவர். உறங்காவில்லிதாசர் என்ற தாழ்த்தப்பட்ட சமுதாய மாணவரை தனது சீடராக ஏற்றுக் கொண்டவர். இவரது தந்தை ஆருலகேசவ சோமயாகி. தாய் காந்திமதி அம்மையார். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர். ராமானுஜர் தனது வீட்டிலேயே தங்கியிருந்து தன் தந்தையிடமே வேதங்களை எல்லாம் கற்று வந்தார். 16ம் வயதில் தனது தந்தையை இழந்தார். 17வது வயதில் தஞ்சம்மாளை தன் பார்யாளாக ஏற்றார். பின்பு யாதவப்பிரகாசர் என்பவரிடம் பாடங்களை கற்றார். பாடம் நடத்த பல்வேறு சமயங்களில், ராமானுஜருக்கும் யாதவப்பிரகாசருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும். இதனால் குருவுக்கு கோபம் வந்து, கொன்றுவிடவும் திட்டமிட்டார். இப்படித்தான் விசிஷ்டாத்வைதத்தின் விதை முளைத்தது. அதன்பிறகு திருக்கச்சி நம்பியிடம் மாணவராக சேர்ந்து விட்டார். இதையடுத்து ராமானுஜரின் பெயரும் புகழும் எல்லா இடங்களிலும் பரவியது. பிற்காலத்தில் தன் சொல் வன்மையாலும், இறைவனின் கருணையாலும் ஆயிரக்கணக்கானோரை வைணவ சம்பிரதாயத்தின் பால் ஈர்த்தார் ராமானுஜர். பின் விஷ்ணுதாசர்கள் இன்றும் போற்றி மகிழும் வேதாந்த சங்ரஹம், வேதாந்த சாரம், வேதாந்த தீபம், கீதா பாஷ்யம், கட்யத்ரயம் ஆகியவற்றை உலகுக்கு அளித்தார். கோயில்களில் பின்பற்றப்படும் திருவாராதனத்தை ஒழுங்குபடுத்தும் நித்யம் என்ற கிரந்தத்தையும் வகுத்தார்.

அப்போது ஸ்ரீரங்கத்தில் ஆளவந்தார் என்பவர் வாழ்ந்துவந்தார். அவர் காஞ்சிபுரம் சென்று ராமானுஜரை சந்தித்தார். வைஷ்ணவத்தை வளர்க்க ஒரு மகான் கிடைத்துவிட்டார் என்ற திருப்தி அவருக்கு ஏற்பட்டது. ஸ்ரீரங்கத்திற்கு வரும்படி ராமானுஜரிடம் ஆளவந்தார் கேட்டுக்கொண்டார். ஸ்ரீரங்கம் திரும்பியதும் ஆளவந்தாரின் உடல்நிலை மோசமானது. அவர் தனது சீடர் பெரியநம்பியை அனுப்பி ராமானுஜரை உடனடியாக ஸ்ரீரங்கத்திற்கு அழைத்துவரும்படி செய்தார். பெரியநம்பி காஞ்சி சென்று ராமானுஜருடன் ஸ்ரீரங்கம் திரும்பினார். அதேநாளில் ஆளவந்தார் பரமபதம் அடைந்தார். ஒருமுறை திருக்கச்சி நம்பியிடம் பெருமாள் தோன்றி, சன்னியாசம் பெற்ற ராமானுஜரை நல்ல ஒரு மடத்தில் வைத்து வேதம் கற்றுக்கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படியே ராமானுஜருக்கு பல்வேறு வேதங்கள் கற்றுத்தரப்பட்டன. அங்கு வந்த ராமானுஜரின் பழைய குருவான யாதவபிரகாசர், மாணவன் என்றும் பாராமல் ராமானுஜரின் கால்களில் விழுந்தார். தன்னைக் கொல்ல முயன்றவர் என்றும் பாராமல் அவருக்கு  கோவிந்தஜீயர் பட்டத்தை வழங்கினார் ராமானுஜர். எதிரியையும் நட்புடன் நடத்திய பெருமைக்குரியவர் ராமானுஜர். சிறிது காலம் கழித்து அவர் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார். ஸ்ரீரங்கம் கோயிலில் அவ்வூர் பிராமணர்கள் மிகுந்த ஆசாரசீலராக தங்களை காட்டிக்கொண்டதை ராமானுஜர் கண்டித்தார். நீங்கள் அத்தனை உயர்ந்தவர்களாக இருந்தால் ஸ்ரீ ரங்கநாதனை நீங்கள் சேவிக்கக்கூடாது. அவருக்கு நிவேதனம் செய்யபடும் பிரசாதத்தையும் ஏற்கக்கூடாது. தீண்டப்படாதவரான திருப்பாணாழ்வாரை அவர் தம்முடன் இணைத்துக்கொண்டதால் உங்கள் நோக்கப்படி ரங்கநாதனும் தீட்டு உள்ளவர்தான். அவர் அருகே செல்லாதீர்கள் என்று கண்டித்தார்.

இந்த அளவுக்கு ஜாதி வித்தியாசம் பாராமல் திட சித்தமுள்ளவராக இருந்து உலகில் இணையற்ற ஒரு மதத்தை ஸ்தாபித்து அருளிய ராமானுஜரின் புகழ் எங்கும் பரவியது. வைஷ்ணவம் எங்கும் பரவியது. இவ்வளவும் இருந்தது போக, அவருக்கு ஒரு குறையும் இருந்தது. அது தான் நாராயண மந்திரத்தின் பொருள் அறிவது. இதற்காக ஆளவந்தாரின் சீடரான திருக்கோஷ்டியூர் நம்பியிடம் சரண் புகுந்தார். ஆனால் நம்பியோ, ராமானுஜரை நம்பி மந்திரத்தின் பொருள் கூற மறுத்தார். ஸ்ரீரங்கம் திரும்பிய ராமானுஜர் சற்றும் மனம் தளரவில்லை. 17 முறை தொடர்ந்து ஸ்ரீரங்கத்திற்கும் திருக்கோஷ்டியூருக்கும் நடையாய் நடந்தார். அந்த பாதயாத்திரையின் பலன் 18வது சந்திப்பில் கிடைத்தது. ராமானுஜர் மீது இரக்கப்பட்டு திருமந்திரத்திற்கு விளக்கம் சொன்னார். அத்துடன் இதை வேறு யாருக்கும் வெளியிடக்கூடாது எனவும் நிபந்தனை விதித்தார். குருவின் கருத்தை புறக்கணித்த ராமானுஜர் நேராக திருக்கோஷ்டியூர் கோபுரத்தின் மீதேறி திருமந்திரத்தின் பொருளை இந்த உலகமே அறியும் படி உறக்க கத்தினார். இதனால் ஆத்திரமடைந்து நம்பி ராமானுஜரிடம் விளக்கம் கேட்டார். இந்த மந்திரத்தை அறிந்து கொள்வதால் ஆயிரக்கணக்கானோருக்கு வைகுண்டம் செல்ல வாய்ப்பு கிடைக்குமானால் நான் நரகம் செல்வதில் கவலையில்லை என்றார். ஆழ்வார்களின் தமிழ் பாசுரங்களை வடமொழி வேதங்களுக்கு இணையாக கருதும்படி செய்தார். பிறகு தனது சக்தி அனைத்தையும் ஸ்ரீபெரும்புதூரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரகத்தில் புகுத்திவிட்டு திவ்யமந்திரத்தை உச்சரித்தபடியே திருநாடு (பெருமாள் திருவடி) எய்தினார். இப்போதும் உடையவரின் திருஉடல் ஸ்ரீரங்கம் கோயிலில் அப்படியே உள்ளது.


பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா

பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா

ஹரே ராமா.... ஹரே கிருஷ்ணா !

ஜலதூதா எனும் பெயர் கொண்ட கப்பல், 1965 - ஆம் வருடம், இந்திய தேசத்திலிருந்து அமெரிக்கக் கரையை நோக்கிச் சென்றுகொண்டு இருந்தது. அதில், 69 வயது பெரியவர் ஒருவர், பயணம் மேற்கொண்டு இருந்தார். குடை, கைப்பை, சாப்பிடுவதற்குக் கொஞ்சம் தானிய வகை உணவுகள் மற்றும் பெட்டிகள் சிலவற்றில் புத்தகங்கள்; தவிர, 300 ரூபாய் மதிப்புள்ள ஏழு அமெரிக்க டாலர்கள்; இவையே அவருடைய உடைமைகள் !

அமெரிக்கக் கரையை நெருங்கிக்கொண்டிருந்தது கப்பல். தான் எதிர்கொள்ளவேண்டிய புதியதொரு சூழல் அவருக்குள் கவலையையும் மலைப்பையும் தந்தது ! கொண்டு வந்திருந்த பெட்டிகளில் ஒன்றினைத் திறந்து, நாட்குறிப்பேட்டை எடுத்தார். அன்றைய தினத்தின் பக்கத்தில், இன்று, என்னருமைத் துணைவன் கிருஷ்ணனிடம் உள்ளத்தில் இருப்பதைக் கொட்டித் தீர்த்தேன் என்று குறிப்பு எழுதினார். பிறகு, மண்டியிட்டுக் கண்கள் மூடி, கிருஷ்ணா, உனக்கு இங்கே ஆற்றவேண்டிய செயல்கள் ஏராளமாக இருக்கவேண்டும். இல்லையெனில் முற்றிலும் புதிதான இந்த பூமிக்கு என்னை ஏன் அழைத்துவந்தாய் ? நான் எளியவன்; சக்தியேதும் இல்லாதவன்; உனது பணியை நிறைவேற்ற எனக்குக் கருணை காட்டுவாயாக  என்று மனமுருகிப் பிரார்த்தித்தார். அவருக்குள் கண்ணனின் கருணை, வெள்ளமெனப் பாய்ந்தது. கிருஷ்ண பக்தி எனம் அமுதூற்று உலகளாவிய கிருஷ்ண விழிப்பு உணர்வு சங்கம் (இண்டர்நேஷனல் சொசைட்டி ஃபார் கிருஷ்ணா காண்சியஸ்நெஸ்) எனும் பெயரில் (இஸ்கான்), சிறு வித்தாய்த் தோன்றியது; பிறகு அதுவே பேரியக்கமாகப் பல்கிப் பெருகி, நாடுகளையும் கண்டங்களையும் தாண்டி, அனைவரையும் அரவணைத்தது ! இவை அனைத்துக்கும் அடிகோலிய அந்த முதியவர்... பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா ! 1896 ஆம் வருடம், கிருஷ்ண ஜன்மாஷ்டமிக்கு மறுநாள், செப்டம்பர் 1-ஆம் தேதியன்று, கொல்கத்தாவில்... கௌர் மோஹன் டே - ரஜனி டே ஆகிய வைணவத் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு, அபய் சரண் எனப் பெயரிட்டு, அன்புடன் வளர்த்தனர். தெய்வ பக்தியும், தேச பக்தியுமாக வளர்ந்தான், அபய் சரண். பள்ளிக் கல்வி முடித்ததும், கொல்கத்தாவில் ஸ்காடிஷ் சர்ச் கல்லூரியில் ஆங்கிலம், தத்துவம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் பட்டப் படிப்பை முடித்தான். ஆங்கிலத்தில் புலமை, தலைமையேற்று நடத்தும் திறமை, சம்ஸ்கிருதத்தில் பாண்டித்யம் என சிறந்து விளங்கினான் அபய் சரண். ஆனாலும் காந்திய வழியில், கதராடைகளையே உடுத்தி வந்தான். அது மட்டுமா ?! ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும்விதமாக, தன் படிப்புக்கு உரிய பட்டத்தையும் ஏற்க மறுத்தான் ! உரிய வயது வந்ததும், தந்தை சொல்படி, ராதா ராணி தத்தா என்பவளை மணந்தான்; அடுத்து ஆண் குழந்தைக்கும் தந்தையானான். ஆனாலும், ஆன்மிகத்தில் திளைப்பதிலும், ஸ்ரீ கிருஷ்ணரை நினைப்பதிலுமாக வாழ்ந்தான் அபய் சரண் ! 1922 - ஆம் வருடம் சுவாமி பக்தி சித்தாந்த சரஸ்வதி எனும் மகானைச் சந்தித்தான் அபய் சரண். அவரைத் தரிசித்த மாத்திரத்திலேயே வெகுவாகக் கவரப்பட்டு, அவரை தனது குருவாக ஏற்றான். அதுவே, அவனது வாழ்வின் மிகப் பெரிய திருப்புமுனை ! வேதங்கள், உபநிஷதங்கள் ஆகியவற்றில் உள்ள கருத்துக்களையும், சைதன்ய மகாபிரபுவின் ஸ்ரீகிருஷ்ண பக்தி சாரத்தையும், ஆங்கிலப் புலமையால், உலக மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும். என விரும்பினார் குருநாதர். அதன்படி, தனது வாழ்க்கையை அதற்காகவே அர்பணிக்க முடிவு செய்தார் அபய் சரண். அடுத்த சில வருடங்களில், பகவத்கீதைக்கு ஆங்கிலத்தில் உரை எழுதினார். அப்போது முதல், அபய் சரணின் ஆன்மிகப் பயணம், கிருஷ்ண பக்தி எனும் பாதையில் சீராகச் செல்லத் துவங்கியது. பரத கண்டத்தின் கலாசாரப் பொக்கிஷங்கள் அனைத்தும், அபய் சரணின் ஆங்கிலப் புலமையால், புத்தகங்களாக வெளிவந்தன; உலகெங்கும் பரவத் துவங்கின !

இவருடைய புலமை, மனித குலத்துக்கு ஆற்றி வரும் சேவை ஆகியவற்றின் காரணமாக, பக்தி வேதாந்த... பிரபுபாதா ஆகிய பட்டங்கள் இவரது பெயருடன் இணைந்தன. ஒரு கட்டத்தில், பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா என அனைவராலும் அழைக்கப்பட்டார். மனம் ஏற்காத சம்சார வாழ்வைத் துறந்தார். ஸ்ரீகண்ணன் லீலைகள் செய்த பிருந்தாவனத்தை, 1950-ஆம் வருடத்தில் தனது இருப்பிடமாக்கிக் கொண்டார் சுவாமிஜி. 59 - ஆம் வருடத்தில் தீட்சை பெற்று, காவியுடை அணிந்து, துறவறம் பூண்டார் பிரபுபாதா. ராதா தாமோதர் கோயிலும், கௌடியா மடத்திலும் வாழ்ந்துகொண்டே, உன்னிடம் எப்போது பணம் சேர்ந்தாலும், புத்தகத்தை வெளியிடு என்ற குருநாதரின் கட்டளைப்படி, தனது பக்தி இலக்கிய சேவையை முனைப்புடன் தொடர்ந்தார். சம்ஸ்கிருதம், ஹிந்துஸ்தானி போன்ற மொழிகளில் இருந்த பாகவத புராணம் முதலான அற்புதமான வைணவ கிரந்தங்கள், இவரது மொழிபெயர்ப்பில் விரிவான உரையுடன், ஆங்கில நூல்களாக வெளியாகின. கிருஷ்ண பக்தியை உலகெங்கும் பரவச் செய்யும் நோக்கில், 1965-ஆம் வருடம் கொல்கத்தாவில் கப்பலேறினார் பிரபுபாதா. கையில் அதிகம் பணமில்லை; வெளிநாட்டில் வரவேற்பாரும் இல்லை; உதவுபவர்களும் கிடையாது. நியூயார்க்கை அடைந்தவர், ஏழைகள் குடியிருக்கும் பகுதியில் பொது இடத்தில் ஓரு மரத்தடியில் காவியுடையும் நெற்றியில் சந்தனக் கீற்றுமாக அமர்ந்தார்; கையில் தாளத்தைத் தட்டிக்கொண்டே... ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே எனும் கிருஷ்ண நாமத்தைப் பாடத் தொடங்கினார். பாடலைக் கேட்டவர்கள் நின்றனர்; அருகில் வந்தனர்; அவர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமைகளின் லீலைகளையும் கீதையையும் பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில், ஆங்கிலத்தில் தெளிவாக எடுத்துரைத்தார். இதில் கிறங்கிப்போன பலரும், அவருடன் இணைந்து கிருஷ்ண நாமாவளியைப் பாடத் துவங்கினர். இப்படி எளிமையாய்த் துவங்கியதுதான் பிரபுபாதாவின் அமைப்பு ! தன்னை மதித்து அழைப்பவர் வீட்டில் தங்குவது, கொடுப்பதை உண்பது, பொது இடங்களில் கிருஷ்ணனின் நாமத்தைச் சொல்லி சொற்பொழிவு ஆற்றுவது என அவரது வாழ்க்கை முறை மாறியது.

அதுமட்டுமா ?! மது, போதை மருந்துகள், பாலியல் வன்முறைகள் எனச் சீரழிந்துகொண்டு இருந்த அமெரிக்க இளைஞர்களிடமும், யுவதிகளிடமும் பேசினார்; கிருஷ்ண பக்தி, நல்லொழுக்கம் மற்றும் நாம சங்கீர்த்தனம் ஆகியவற்றால் அவர்களைத் திருத்தி வெற்றி கண்டார். இதனால் பிரபுபாதாவின் புகழ் பரவியது. இவரது பக்தி இலக்கியங்களும் சொற்பொழிவுகளும் அனைவரையும் வசீகரித்தன. இதையடுத்து, 1966 - ஆம் வருடம், ஜூலை மாதம், நியூயார்க் நகரில், இஸ்கான் எனும் அமைப்பு உதயமானது. அடுத்து, சான்பிரான்சிஸ்கோ மற்றும் அமெரிக்காவின் பல நகரங்களிலும் இஸ்கான் கிளைகள் துவக்கப்பட்டன. ஸ்ரீகிருஷ்ணருக்கு ஆலயங்கள், பிரார்த்தனைக் கூடங்கள், கல்விச் சாலைகள், தொழில் மற்ணும் விவசாய மையங்கள் என கிளை பரப்பியது இஸ்கான் அமைப்பு. இங்கிலாந்தில் இந்த இயக்கத்தில், பீட்டில்ஸ் எனும் புகழ்பெற்ற பாப் இசைக் குழுவினர் இணைந்ததால், லண்டன் போன்ற முக்கிய நகரங்களிலும் இந்த இயக்கம் வேரூன்றியது. 1971-ஆம் வருடம் இந்தியா திரும்பிய பிரபுபாதா, இங்கேயும் பல நகரங்களில் ஸ்ரீகிருஷ்ணருக்கு அற்புதமான ஆலயங்களை அமைத்தார். நூற்றுக்கணக்கான ஆன்மிகப் புத்தகங்களை மொழிபெயர்த்தும் உரை எழுதியும் சேவையாற்றிய சுவாமியின் நூல்கள், இதுவரை 80-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ளன. இந்திய பக்தி இலக்கி யங்களைப்பிரசுரித்த வகையில், இன்றைக்கும் முன்னிலையில் நிற்கிறது இஸ்கான் அமைப்பு. உலகெங்கும் ஐந்நூறுக்கும் மேற்பட்ட மையங்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆலயங்களையும் கொண்டு விளங்கும் ஹரே கிருஷ்ண இயக்கத்தைத் துவக்கி வழி நடத்திய சுவாமி பிரபுபாதா, 77-ஆம் வருடம் நவம்பர் 14-ஆம் நாள், பிருந்தாவன மண்ணில், தனது வாழ்வை நிறைவு செய்துகொண்டார். எளிமையாக வாழ்ந்து, அரிதான செயல்களை நிகழ்த்தி, ஸ்ரீ கிருஷ்ண பக்தி சாம்ராஜ்ஜியத்தை உலகெங்கும் நிறுவிய சுவாமி பிரபுபாதாவை உலகமே போற்றுகிறது; கிருஷ்ண பக்தி இருக்கும்வரை, பிரபுபாதாவின் புகழும் இருக்கும்!


சித்திர புத்திர நாயனார்

சித்திர புத்திர நாயனார்

அண்ட புவனங்களெங்கும் பாவபுண்ணியம் பலன் தெரியவேண்டிப் பரமசிவன் உமையம்மையார் மூலம் திருவிளையாடல் புரிய நினைத்தார்.

சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்துடன் பௌர்ணமியும் இணைந்த ஒருநாளில் அன்னை பார்வதிதேவி தன் கைதிறமையால் அழகான குழந்தை ஒவியத்தை வரைந்தார். அந்த ஓவியம் சாதராண ஓவியமாக இல்லாமல் நிஜ குழந்தை போல தத்ரூபமாக இருந்ததை கண்ட சிவபெருமான் பார்வதியிடம் “நீ வரைந்த இந்த ஓவியத்திற்கு உயிர் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும். ”என்று கூறி கொண்டே தன் கைகளால் அந்த ஓவியத்தை எடுத்து தன்னுடைய மூச்சிகாற்றை அந்த ஒவியத்தின் மேல் பதித்தார். ஈசனின் மூச்சி காற்று காற்று சில்லென்று ஓவியத்தில் பட்ட உடன் அந்த ஓவியத்தில் இருந்த குழந்தை உயிர் பெற்று சிரிக்க ஆரம்பித்து ஒரு அழகான குழந்தையாக வெளிவந்தது... இந்த அற்புதத்தை கண்ட பார்வதிதேவி மிகவும் மகிழ்ச்சியடைந்து “நான் வரைந்த குழந்தை ஒவியம் ஒரு நிஜ குழந்தையாக மாறியதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். நான் வரைந்த சித்திரம் குழந்தையாக மாறியதால் இந்த குழந்தைக்கு சித்திர குப்தன் என்றும் சித்திரபுத்திரன் என்றும் அழைக்கபடட்டும்” என்று ஆசி வழங்கினார். சித்திரகுப்தன் தோன்றிய ஒவ்வொரு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் பௌர்ணமி அன்று சித்ரா பவுர்ணமி விழா எடுத்து சித்திரகுப்தரை வணங்குவது சிறப்பு.

சித்திர குப்தனுக்கு பதவி:ஒருநாள் யமதர்ம ராஜன் சிவபெருமானிடம் “இறக்கும் ஜீவராசிகளை அழைத்துவரும் போது அவர்கள் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களையும் தண்டனைகளையும் தர வேண்டும் என்பது நீங்களும் விஷ்ணுபகவானும் எமக்கு கட்டளையிட்டீர்கள். ஆனால் யார் எவ்வளவு பாவ புண்ணியங்கள் செய்தார்கள் என்று எப்படி கண்டுபிடிப்பது? என்று தன் மன கவலையை தெரிவித்தார் யமதர்மராஜன். அதற்கு சிவன் இதற்கான தீர்வை பிரம்மனிடம் சென்று கேள் என்றார். உடனே பிரம்மா சக்திதேவியின் திருக்கரங்களால் வரையபட்ட ஒரு சித்திரம், சிவபெருமானின் அருளால் உயிர் பெற்று ஒரு ஆண் குழந்தையாக வளர்கிறது. அவன் பெயர் சித்திர குப்தன். சித்திர குப்தனை உன் யமலோகத்தில் முக்கிய பதவியில் அமர்த்துகிறேன். அவன் உனக்கு உறுதுணையாக இருந்து, யார் எந்த அளவுக்கு பாவ பண்ணியங்கள் செய்கிறார்கள் என்பதை சித்திர குப்தன் கவனித்து கணக்கு எழுதுவான். அதனால் உன் மனகவலையை ஒழித்து உன் தர்மபடி பணி செய். ”என்று ஆலோசனை வழங்கினார் பிரம்மன் தேவர்.அதன்படி சித்திர குப்தனை உடனே அழைத்து, யமதர்மராஜனிடம் அறிமுகப்படுத்தினார் பிரம்ம தேவன். பிரம்மனின் உத்தரவை ஏற்ற சித்திர குப்தன் தன்னுடைய ஒரு கையில் எழுதுபோலும் மறுகையில் எழுதுகோலுக்கு தேவையான மை நிறைந்த கிண்ணமும் ஏந்தி காட்சி தந்தார். அன்றிலிருந்து இன்றுவரை பூலோகத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகள் செய்யும் ஒவ்வொரு பாவ புண்ணிய கணக்கை சித்திரகுப்தர் எழுதி வருகிறார்.

நமது பாவ - புண்ணியங்களை பொறுத்து சித்திர குப்தன் எழுதும் கணக்கின் அடிபடையில்தான் ஒவ்வொரு பிறவியிலும் நாம் அனுபவிக்கும் இன்பமும் துன்பமும் நிகழ்கிறது. அதனால் பாவம் செய்வதை கனவில் நினைக்காமல் இந்த பிறவியில் மட்டுமல்லாமல் எந்த பிறவியிலும் புண்ணியங்களை மட்டுமே செய்து “இது புண்ணிய ஆத்மா”என்று சித்திர குப்தன் அவரின் கணக்கு புத்தகத்தில் நம்மை பற்றி குறிப்பு எழுதிவிட்டால் அடுத்த பிறவி இல்லை அல்லது எந்த பிறவியிலும் துன்ப நிலை இல்லாமல் இறைவன் துணை இருப்பார்.சித்ரா பவுர்ணமி அன்று சிவலிங்கத்தை வில்வஇலைகளை அர்ச்சனை செய்தால் நம்முடைய புண்ணிய கணக்கு இரண்டு இரட்டிப்பாகும். சித்ரா பவுர்ணமி அன்று சித்திர குப்தரை ஆலயம் சென்று வணங்க முடியாதவர்கள் அவருடைய படத்தை இல்லத்தில் வைத்து சர்க்கரை பொங்கல் படைத்து வணங்கி அத்துடன் அவருடைய கதைளை படித்து, அன்னதானம், விசிறி, குடை, செருப்பு போன்ற உங்களால் முடிந்த தான தர்மங்களை செய்தால் சித்திரகுப்தர் உங்கள் கணக்கில் நீங்கள் செய்த பாவங்களை குறைத்து, புண்ணியங்களை அதிகப்படுத்துவார். தர்மதேவதையின் அருட்பார்வையை உங்கள் பக்கம் திரும்பி பார்க்க வைப்பார். தர்மதேவைதை நம்மை பார்த்தாலே நாம் செய்யும் தான தர்மங்கள் பலமடங்கு பெருகும். நோய்நொடி இல்லாமல் எந்த பிறவியும் வளமாகும்.வாழ்வே இனிதாகும்.


ராமகிருஷ்ணர் பகுதி மூன்று

ராமகிருஷ்ணர் பகுதி மூன்று

காளிதேவியை பணிந்து வணங்கினார் ராம்குமார். அவள் ராம்குமாரின் நாவில் ஏதோ எழுதினாள். இதன்பிறகு ராம்குமாரின் ஒவ்வொரு வார்த்தையும் பலிக்க ஆரம்பித்தது. தனக்கு முதல் குழந்தை பிறந்தவுடன், தன் மனைவி இறந்து விடுவாள் என ராம்குமார் சொல்லியிருந்தார். அதுபோலவே நடக்கவும் செய்தது. மூத்தமகன் குடும்பப் பொறுப்பைச் சுமந்ததால், சுதிராமுக்கு ஆன்மிக வழிபாடுகளில் ஈடுபட அதிக நேரம் கிடைத்தது. எப்படியேனும் ஒருமுறை ராமேஸ்வரம் சென்று வர முடிவு செய்தார். கமார்புகூருக்கும், ராமேஸ்வரத்துக்கும் 2,400 கி.மீ., தூரம். அந்தக்காலத்தில் இந்த தூரத்தைக் சுதிராம் நடந்தே கடந்தார். வழியிலுள்ள எல்லா தலங்களையும் தரிசிக்கவும் செய்தார். 1824ல் இந்தப் பயணம் நிகழ்ந்தது. ராமேஸ்வரம் தரிசனம் முடிய அவருக்கு ஒரு ஆண்டு ஆகிவிட்டது. ஊர் திரும்பியதும், சந்திராதேவி கர்ப்பமானார். 1826ல் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ராமேஸ்வரம் ராமநாதரின் பெயரையே குழந்தைக்கு சூட்டினார். ராமேஸ்வர் என்பது இரண்டாவது மகனின் பெயர்.இதன்பிறகு பதினொரு ஆண்டுகள் சுதிராமின் வாழ்வில் எந்தப்புயலும் இல்லை. அமைதியாக அவரது வாழ்க்கை கழிந்தது. நிறைந்த செல்வமும் கிடைத்தது. ஆயினும், அவர் தனது நண்பர் கோஸ்வாமி கொடுத்த குடிசை வீட்டில் தான் வசித்தார். வயதும் அதிகமாகி விட்டது. கயாவுக்கு தீர்த்த யாத்திரைக்கு செல்ல விரும்பினார் சுதிராம். கயாவில், முன்னோர்களை எண்ணி பிண்டம் கரைத்தால், அவர்கள் பேரின்பம் பெறுவர் என்பது ஐதீகம். அதன் அடிப்படையில், தன் முன்னோர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கயாவுக்கு புறப்பட்டார் சுதிராம். கமார்புகூருக்கும், கயாவுக்கும் 320 கி.மீ., தூரம். இந்த தூரத்தையும் நடந்தே கடந்தார் சுதிராம். 1835 ஜனவரியில் புறப்பட்ட அவர், மார்ச்சில் அங்கு போய் சேர்ந்தார். மூன்று மாதம் நடந்தாலும் களைப்பேதும் தெரியவில்லை.

ராமேஸ்வரத்துக்கே நடந்தவருக்கு இது பெரிய காரியமில்லை என்றாலும், முதுமையிலும் மனம் தளரவில்லை என்பதை நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். குறிப்பாக முதியவர்கள் தாங்கள் தளர்ந்து விட்டது போன்ற உணர்வுக்கு ஆளாகக்கூடாது. சுதிராமின் வாழ்க்கையை தங்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். கயாவில் கதாதரர் என்ற பெருமாள் கோயில் இருந்தது. விஷ்ணுவை வழிபட்டு கோயிலிலேயே தங்கியிருந்தார் சுதிராம். பிண்டம் கரைத்தார். விஷ்ணுவின் பாதங்களில் பிண்டங்கள் இட்டு வழிபட்டார். ஒருநாள் மாலையில், விஷ்ணுவை வழிபட்டு, இரவில் கோயிலிலேயே படுத்து அயர்ந்துறங்கி விட்டார். நள்ளிரவு வேளையில் ஒரு கனவு.அந்தக் கோயிலினுள் இருந்து ஒளிவெள்ளம் பாய்நது எங்கும் பரவியது. ஒரு குரல் கேட்டது.ஹே சுதிராம்! நான் சொல்வதைக் கேள். உலக நன்மைக்காகவும், அநியாயங்களை ஒடுக்கவும் நான் பூவுலகில் அவதரிக்கப் போகிறேன். அதுவும் உன் மகனாகப் பிறக்கப் போகிறேன். நீ வசிக்கும் குடிசை எனக்கு போதுமானது, குரல் அடங்கி விட்டது. விஷ்ணுவின் பாதங்களில் சுதிராம் இட்ட பிண்டங்களை அந்த ஒளி ஏற்றுக் கொள்வது போல் தெரிந்தது. ஒரு ஆசனத்தில் ஏதோ ஒரு தெய்வம் அமர்ந்திருப்பது போல் தோன்றியது.சுதிராம் மகிழ்ச்சிக்கடலில் மிதப்பது போன்ற ஒரு காட்சி. அதே நேம் முக வாட்டத்துடன், வேண்டாம் பிரபு. தாங்கள் என் குடிசையில் அவதரிப்பதா? என்னிடம் என்ன இருக்கிறது, உங்களை வளர்க்க. போயும் போயும் ஒரு பரதேசியின் வீட்டிலா பிறக்க வேண்டும். உங்களுக்கு சேவை செய்யும் போது, ஏதேனும் குறை நிகழ்ந்தால் என்னால் தாங்க முடியாது, என்றார். அந்த தெய்வ ஒளி, அவரைத் தேற்றியது.சுதிராம்! கவலை கொள்ளாதே. அனைத்தும் நல்லதாகவே நடக்கும்,.கனவு கலைந்து விட்டது. சுதிராம் திடுக்கிட்டு எழுந்தார்.

அந்த பரமாத்மாவே என் வீட்டில் அவதரிக்கப் போகிறாரா? இறைவா! உன் கருணையை என்னென்பேன்,. அவர் மகிழ்ச்சியுடன் உறங்கிப் போனார்.இதே நேரத்தில், கமார்புகூரிலும் சில அதிசயங்கள் நிகழ்ந்தன. சந்திராதேவி வீட்டில் தனித்து படுத்திருந்த போது, வீட்டினுள் ஜல்...ஜல்...ஜல்...என சலங்கை ஒலி கேட்டது. அருகில் சுதிராம் அமர்ந்திருப்பது போன்ற ஒரு உணர்வு. ஆனால், அவர் ஒளிப்பிழம்பாகக் காணப்பட்டார். திடுக்கிட்ட சந்திராதேவி விளக்கை ஏற்றி சுற்றுமுற்றும் பார்த்தார். எதுவுமே இல்லை.விடியவிடிய இதே நினைவில் இருந்த அவர் மறுநாள் தன் தோழிகள் பிரசன்னமயி, தனி ஆகியோரிடம் இதைச்சொன்னார். அவர்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்னும் சின்னக்குழந்தையாக இருக்கிறாயே! ஏதேனும் கனவு கண்டிருப்பாய். கவலை கொள்ளாதே. இதற்கு போய் பயப்படலாமா? என சிரித்துக் கொண்டே கூறினர். மறுநாள் அவர், தன் தோழி தனியுடன் சிவாலயத்திற்கு சென்றார். அப்போது பேரொளி ஒன்று புறப்பட்டு வந்தது. சிவாலய வாசலில் நின்ற சந்திராதேவியை நோக்கி அந்த ஒளி வெள்ளம் பாய்ந்தது. சந்திராதேவி வியப்போடு அந்த ஒளியை நோக்கினார். அந்த ஒளிக்கற்றைகள் சிவலிங்கத்தில் இருந்து கிளம்பி பாய்ந்து கொண்டிருந்தது.ஐயோ தனி! இங்கே பார். இது என்ன ஒளி, என்னை நோக்கி வருகிறதே, என அவர் சொல்ல, தனி அதைப் பார்க்க முயல்வதற்குள் அந்த ஒளி சந்திராதேவியாரின் வயிற்றில் ஐக்கியமாகி விட்டது. அவர் மூர்ச்சையாகி விட்டார். தனி பதறிப் போனார். தண்ணீர் தெளித்து தோழியை எழுப்பினார். மலங்க மலங்க விழித்த தோழிக்கு விசிறியால் வீசி, ஆசுவாசப்படுத்தினார். சந்திரா! உன்னிடம் ஏனிந்த மாற்றம். எதைக் கண்டு இப்படி பயப்படுகிறாய். நீ தைரியமாய் இருக்க வேண்டும். நாங்கள் இருக்கிறோம், என ஆறுதல் சொன்னார். சந்திராதேவியார் தான் கண்ட காட்சியை தோழியிடம் சொன்னார்.அட பைத்தியக்காரி! மீண்டும் இதே கதையைச் சொல்கிறாயா? நீ சொல்வது போல ஒளியோ எதுவுமோ தோன்றியிருக்காது. ஏதோ மவ பிரமையில் இவ்வாறு சொல்கிறாய், என்று தேறுதல் சொன்னார்.  ஆனால், வீடு திரும்பிய சந்திராதேவியின் உடலில் மாற்றங்கள் தெரிந்தன. வயிற்றில் ஏதோ மாறுதல்.நான் கர்ப்பம் தரித்திருக்கிறேனா? சந்திராதேவி ஆச்சரியத்தில் மூழ்கினார்.


தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....

1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த
பண்ணு...
தப்புங்க தப்பு,,,
ஆயிரம் பேரிடம் போய்
சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு... இதாங்க
சரி...

2.படிச்சவன் பாட்டை கெடுத்தான்,
எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்....
இதுவும் தப்பு
சரியானது என்னன்னா ...........
படிச்சவன் பாட்டை கொடுத்தான் ,
எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் ....

3.ஆயிரம் பேரை கொன்றவன்
அரை வைத்தியன்...
இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )
ஆயிரம் வேரை கொன்றவன்
அரை வைத்தியன்.......

4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ....
சூடு அல்ல சுவடு...
சந்தையில்
மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம்
சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும்
மாடே அதிக பலம் வாய்ந்தது...
ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம்
புலனாகும்....

5.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த
ராத்திரியில் கொடை புடிப்பான்....
அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த
ராத்திரியிலும் கொடை கொடுப்பான்....
வள்ளல் ஆனவரை கஞ்சனாக
மாற்றி விட்டோம் ...

காலப்போக்கில்....
நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக
சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற
உபயோகிக்கிறோம்....

புதன், 2 டிசம்பர், 2020

Sri Thiruvikrama swamy temple

Sri Thiruvikrama swamy temple
 



Moolavar : Trivikramar
Urchavar : Aayanar, Kovalan

Thayar : Poongoval Nachiar
Thala Virutcham : Punnai tree
Theertham : Pennai River, Krishna and Sri Chakra Theerthas
Old year : 1000 years old
Historical Name : Tirukovilur
City : Thirukovilur
District : Viluppuram
State : Tamil Nadu

 Vaishnavite Saints Poigai Azhwar, Bhoodhathazwar, Peyazhwar and Tirumangai Azhwar had sung the glory of Lord Trivikrama in their celebrated hymns of Nalayira Divya Prandam.

      
Festival : 15 day Panguni Brahmmotsavam in March-April with Sri Pushpavalli Thayar Oonjal on Friday drawing huge crowd and Masi Magam in February-March, Lord visiting Cuddalore carried on the shoulders of devotees are the main festivals of the temple. Other festivals are Purattasi Pavithra Utsav and Navarathri in September-October; Chithirai Sri Rama Navami, Sri Ramanuja Jayanthi and Vasanth Utsav in April-May; Vaikasi Visaka Garuda Seva, Nammazhwar Sattrumurai in May-June; Aani Periazhwar Sattrumurai in June-July; Aadi Thiruvadipooram, Andal Utsav in July - August; Avani Sri Jayanthi, Uriyadi utsav in August-September; Aipasi Mudalazwar Sattrumurai, 10 day Sri Manavala Mamunigal utsav in October-November; Karthikai Kaisika Ekadasi; Tirukarthikai in November - December; Margazhi Rapathu, Pagal Pathu, Vaikunda Ekadasi in December - January. Besides the above, important days as Pongal-Makar Snkranti, Deepavali, Tamil and English New Year days are also observed with special pujas to Lord Trivikrama.      
             
Temple's Speciality : This is one of the 108 Holy Divya Desas of Perumal. Presiding deity Perumal is made of Tharu - wood. So tall a Perumal is no where in Tamilnadu temples. Lord Krishna made of Salagrama stone is gracing devotees from a separate shrine.      
             
Opening Time:The temple is open from 6.30 a.m. to 12.00 a.m. and from 4.00 p.m. to 8.30 p.m. Address:Sri Trivikramaswami Temple, Tirukovilur-605 757; Villupuram district.Phone:+91- 94862 79990     
          
General Information : Lord Trivikrama Perumal graces the devotees from the sanctum under the Sri Chakra Vimana. Lord Venugopala plays the Kshetra Balaka role. There are shrines in the prakara for Lords Venugopala, Lakshmi Narayana, Lakshmi Raghava, Lakshmi Narasimha, Sri Rama and Sri Veera Anjaneya, Mother Sri Andal and Shukracharya, the Guru of Asuras.

The tower of the temple is the third tallest in the state, the first at Sri Rangam, the second at Srivilliputhur. This is a 11 tier 192 feet tall tower. The temple area covers 5 acres. Even after crossing the main tower, there are residential parts. The place is praised as Nadu Nadu Tirupathi. There is a temple for Lord Vamana Murthy in Tirukakarai in Kerala.  Vamanamurthi graces here from behind the presiding deity.
    
Prayers : Devotees strongly believe that Lord Trivikrama would respond their prayers seeking high positions, promotions and regaining the positions they have lost. Devotees are blessed with happy wedding, children and freedom from enemies. Lord Chakarathzhwar frees the devotees from the evil effects of spells and witchcrafts.
    
Thanks giving : Offering Vastras and Tulsi garlands to Lord and Mother, lighting ghee lamps, performing turmeric abishek to Mother, Kumkum abishek to Mother Durga and feeding the devotees - Annadhanam- are the prayer commitments followed by devotees.     
            
Greatness Of Temple : The object of Lord in His Vamanavatara - Trivikrama Avatara was to teach that wealth of even great kings should not land them pride and arrogance. He took the Vishwarupa, measured the space with His right Leg and the Earth with the right. He stood too tall touching both earth and sky.  In His extreme delight to bless Emperor Mahabali, the illustrious grandson of Prahladha who was instrumental for His Narasimha Avtar, Lord appears here with the conch in the right hand and the discus in the left - vice - versa. This is described as His teaching wisdom to devotees. His posture-left leg on the earth and the right in the sky - appears as if He is asking where to place His foot for the third foot of land due from Mahabali as promised to Him. Lord Brahmma is worshipping the foot in the sky.

This is a very popular story of Lord Vishnu as a Vamana seeking three foot step land from Mahabali, which he could not afford as Lord had covered both earth and sky with two feet itself leaving no space for the third.

Sage Mrigandu wanted to have this Vishwarupa Darshan of Lord and approached Lord Brahmma for His advice. Brahmma suggested that the sage go to Krishna Kshetra (now Tirukovilur) on the banks of Krishnabadra River to realize his wish. The sage along with his wife Mitravathi came to this place and performed severe penance for the darshan of Lord.

Lord came to their abode in the guise of an old Brahmin and begged for food. They didn’t have even a single grain of rice to offer.  The sage turned to his wife. Mitravathi went in, took a bowl in hand and prayed to Lord Narayana to fill the bowl with food if she was the chaste wife of the sage. The bowl was full of delicious food. Pleased with their penance, Perumal granted His Vishwarupa darshan to the sage couple.

This is the holy place where the first three Azhwars - Poigai Azhwar, Boodhathazhwar and Peyazhwar- met together incidentally by the grace of Lord. It was night raining heavily. Poigai Azhwar sought a place in the Ashram of Sage Mrigandu. He was shown a place to rest down. After a little while, Boodhathazwar came to the same place for a space.  The first Ahwar shared the space just sufficient for two to sit. The third Azhwar - Peyahwar too came there. The two shared the space with him sufficient only for standing. Suddenly, they were pressed due to the presence of a fourth comer who was but Perumal Himself granting His darshan.

The songs sung by the three Azhwars how they were blessed with darshan of Lord as lighting a lamp to dispense the rainy darkness, is chanted even now by the devotees while lighting lamps in their houses in mornings and evenings.

The Three Azhwars attained salvation in this holy land. Lord Perumal is praised as Ulagu Alanda Perumal - Ulagalanda Perumal as He sought a small piece of land measuring just three feet. The idol is made of wood in a standing posture, the tallest in the country.  Against the tradition, Perumal is holding the conch in the right hand and the discus in the left. Of the 108 Divya Desas of Perumal, this is the only temple with Swayambu Vishnu Durga. This is an important kshetra for the Vishnavas and Hindus in general in the Nadu Nadu region.  The tower of the temple is third tallest in the state scaling 192 feet. Shukracharya, (Venus in the zodiac sign) Guru of the Asuras, has a place in the temple.

It is noteworthy that the holy scriptures Nalayira Divya Prabandam containing 4000 verses in praise of Lord Vishnu sung by 12 Alzhwars from time to time at various places, began from Tirukovilur.

It is mostly in Shiva temples, we see Mother Vishnu Durga in the prakaras. In Tirukovilur temple, Lord and His beloved Sister Durga (Maya the feminine form of Lord Vishnu) are in shrines nearby to each other. Tirumangai Azhwar who generally praises Lord alone in his hymns had made a devotional line to Mother Durga in one of his verses. People pray to Mother Vishnu Durga during Rahu Kalams on Tuesdays and Fridays for relief from the adverse aspects of planets.

There is a 40 feet tall Garuda Pillar with a small temple built on it opposite Perumal shrine.  It is believed that Garuda Bhagwan is worshipping Lord from this temple. Of the Pancha Krishna Sthalas – Five great temples of Lord Krishna- 1)Tirukovilur, 2) Tirukannapuram, 3) Tirukannangudi, 4) Tirukannamangai and 5) Kabisthalam, Tirukovilur is the first. Lord Krishhna in this temple, made of Salagrama stone, graces the devotees from a shrine on the right side of the Gopuram entrance. The devotees must begin the worship from this shrine and pass to the presiding Perumal only then. Great Vaishnava Acharya Manavala Mamunigal also had rendered many hymns in praise of Lord Perumal.

According to scriptures and Tamil literatures. Sage Parasurama and Sage Agasthya had performed penance at Tirukovilur. The puranic age Krishnabadra River is flowing now in the name of Thenpennai.  Before butter (Vennai in Tamil) melts, Pennai (the name of the river) melts, is an old saying.
    
Temple History : Emperor Mahabali, though good natured, ever helpful to those in need, had a desire that none should exceed him in status and fame. To realize this aim, he conducted a great yajna headed by his Guru Shukracharya. Lord thought to bring down his pride. He took the form of dwarf, came to the Yajna field and sought three foot steps of land (three steps by His foot) as dhan (charity). Guru Shukracharge sensed some mischief in the dwarf and understood that the visitor was none other than Lord Vishnu. He vehemently warned Mahabali and did his best to prevent his promise. Mahabali did not relent. He was only keen to keep up his word to dwarf and offered His wish. Lord took His Vishwarupa, measured the earth by one foot step and the Akasha by the second step and there was no place for the third step and asked Mahabali for the third. Mahabali gracefully accepted his inability and offered his head for the third. Lord placed his head on Mahabali and demanded that he solemnize the dhan with water from his right hand. Mahabali took the water bowl to confirm his promise but Shuracharya took the form of a bee and blocked the hole of the bowl from releasing the water. Lord Vishnu took a grass piece, put it on the bowl hole that blinded the Guru.  Mahabali was pressed by the Lord to the Padala Loka and taken later with Him, goes the story.

Any devotee who would indeed like to read and enjoy this Vamanavathara-Trivikrama story of Lord, should read Sriman Narayaneeyam by Narayana Pattadri and Srimad Bhagavatha by Sage Veda Vyasa.  They will have to close the book only unwillingly.

அருள் மிகு அகஸ்தீஸ்வரர் திருக் கோவில்
 
மூலவர் : அகஸ்தீஸ்வரர் {அக்ஞீசரம் உடையவர்}
அம்மன் : அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம் : வன்னி மரம்
தீர்த்தம் : அக்னி, கன்வ தீர்த்தம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : கிளிஞனூர், திருக்கிளியன்னவூர்
ஊர் : கிளியனூர்
மாவட்டம் : விழுப்புரம்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : திருஞான சம்பந்தர்

தேவாரப்பதிகம்:தார் சிறக்கும் சடைக்கு அணி வள்ளலின் சீர் சிறக்கும் துணைப்பதம் உன்னுவோர் பேர் சிறக்கும் பெருமொழி உய்வகை ஏர் சிறக்கும் கிளியன்ன வூரனே!-திருஞானசம்பந்தர்

இத்தலம் தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் 276வது தலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    
திருவிழா:மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை     
    


        

சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்தும், அம்மன் கிழக்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள். அகத்தியர் பிரதிஷ்டை செய்ததால் இத்தல இறைவன் அகத்தீஸ்வரர் எனப்படுகிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.     
            
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.    
          
முகவரி:அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கிளியனூர், திண்டிவனம்- 604001. விழுப்புரம் மாவட்டம்.போன்:+91 - 94427 86709    
           
பொது தகவல்:இக்கோயில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது.

கல்வெட்டுச் செய்திகள் ஆதாரம் : சிதம்பரம் தொல்லியல் அலுவலர் அறிக்கை. அகஸ்தீஸ்வரர் கோயில் தென்புறக் கருவறைச் சுவர் கல்வெட்டு - சோழ மன்னன் பெயர் சிதைவடைந்துள்ளது. தங்கள் அம்பலவன் கண்டராதித்தன் என்ற குவாலம் - கங்கரைசர் தானம் செய்துள்ள விவரம் போன்றவை தெரியவருகின்றன.

தெற்கு வடகிழக்கு சுவர் கல்வெட்டு - இராசேந்திர சோழன் கல்வெட்டு முழுமையில்லை. 13ம் ஆட்சி ஆண்டு கிளியனூர் என்ற கேரளாந்தக சதுர்வேதி மங்கலம் இடம் பெறுகிறது. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து ஒய்மா நாட்டு பிரம்மதேயத்தில் இந்த ஊர் இருக்கிறது.

கிழக்குச் சுவர் கல்வெட்டு - பரகேசரி 10-ம் ஆட்சியாண்டு ஆறுங்களத்தைச் சேர்ந்த தீயன், சாத்தன் ஆகிய பராசரன் என்பவன் அக்னீஸ்வரமுடையார் கோயிலுக்கு அமாவாசை மற்றும் சங்கராந்தி நாட்களில் வழிபாட்டுக்கு உதவியுள்ளார். இராசேந்திரன் 3ம் ஆட்சியாண்டு பிராமணப் பெண் விளக்கு வைத்த 90 ஆடுகள் அளித்துள்ளாள். கல்வெட்டு சேதமாக உள்ளது.

வடபுறச் சுவர் கல்வெட்டு - விக்ரமசோழ தேவன் 10ம் ஆட்சியாண்டு. கல்வெட்டு முழுமை பெறவில்லை. பூமாதுரை தொடக்கம் காண்கிறோம். திருவக்னீஸ்வரமுடைய மகாதேவர் பூஜைக்காக கிளியனூர் என்ற உலகுய்ய கொண்ட சோழ சதுர்வேதி மங்கல ஊரவர் நிலத்தானம் செய்துள்ளனர். ஒய்மா நாடு விஜயராஜேந்திரன் வளநாடு எனவும் வழங்கப்பட்டுள்ளது.

முன்மண்டபம் வடக்கு கிழக்கு கல்வெட்டு : இராஜாதி ராஜன் 28ம் ஆட்சியாண்டு கல்வெட்டு திங்களேர்தரு என்று தொடங்குகிறது. கேரளாந்தக சதுர்வேதி மங்கல ஊரவர் திருவக்னீஸ்வரமுடைய பெருமானுக்கு திருவமுது நிலம் விற்ற விபரம் அறிகிறோம்.இராஜாதி ராஜன் 29ம் ஆட்சியாண்டு வேறொரு நிலம் கோயில் திருவமுதுக்காக விற்ற விபரம் தெரிகிறது.கிழக்குச் சுவர் கல்வெட்டு - குலோத்துங்கச் சோழன் 3ம் ஆட்சியாண்டு உலகுய்ய வந்த சோழ சதுர்வேதி மங்கலமாகிய கிளியனூர் சபை சில நிலங்களுக்காக வரி விலக்கு அளித்தது. கருவூலத்தில் விடப்பட்ட முதலுக்குரிய வட்டி திருவக்னீஸ்வரத்தைச் சேர்ந்த பிச்சதேவர் கோயில் போன்ற விபரம் காண்கிறோம்.

கோயில் தணிக்கல் கல்வெட்டு : மடைப்பள்ளியில் உள்ளது. மல்லிகார்ச்சுவராயர் சக 1372 பிரமோதூத சித்திரை 15 சேதம் விருப்பராய காங்கேயன் மகன் விஜய.. ராய காங்கேயன் மதகு கட்டியது. புயலின்போது சிதலமடைந்த ஏரியைப் புதுப்பித்தது.  கிளிவளநல்லூர் என ஊர்ப் பெயர் உள்ளது. மேலும் புதிதாகக் கிடைத்துள்ளது 276 திருக்கிளியன்னவூர்.
    
பிரார்த்தனை:திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தல இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்து அதை சாப்பிட்டால் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.
    
நேர்த்திக்கடன்:சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.    
           
தலபெருமை:காளவ மகரிஷி தனது இரு பெண் குழந்தைகளின் தீராத மிக கொடிய நோய் நீங்க இத்தலம் வந்து பல ஆண்டுகள் வழிபாடு செய்தார்.  சிவனின் திருவருளால் அவரது குழந்தைகளின் நோய் நீங்கியது. சுகப்பிரம்ம மகரிஷி இத்தல சிவனை வழிபட்டு தனது வயிற்று வலி நோய் நீங்கப்பெற்றார்.

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய தேவாரத் திருப்பதிகத்தில் கிளியன்னவூர் பெருமானுடைய திருவடிகளை வழிபடும் அடியவர்கள் தீங்குகளிலிருந்து  விடுபட்டுப் புகழுடன் வாழ்வர். வன்மை செய்யும் வறுமை வந்தாலுமே, தன்மை இல்லவர் சார்பு இருந்தாலும், புன்மைக் கன்னியர் பூசல் உற்றாலுமே, நன்மை உற்ற கிளியன்னவூரனே மிகக்கடினமான வறுமை, இயல்பற்றவர்களின் தொடர்பு, மகளிரால் ஏற்படும் பூசல் இவற்றிலிருந்து விடுபடுவர்.

கொடியவர் நெஞ்சில் ஒருபோதும் தங்காத இறைவன் அடியவர் துயரைப் போக்கி அவர் வேண்டியதை அருள்பவன். அடியவர்கள் இவ்வுலகில் மறுபிறப்பு எடுப்பினும் முழுச் செல்வத்துடன் நல்வாழ்வு அளிப்பவர். இத்தல தேவாரப் பதிகத்தை ஓதுபவர்கள் இவ்வுலகக் கொடுமைகளிலிருந்து விடுபட்டு ஒரு குறையும் இல்லாது நல்வாழ்வு வாழ்வர்.

மதுரை கொண்ட பரகேசரி வர்மனாகிய முதல் பராந்தகன் காலத்திலேயே இவ்வூர்க்கோயில் கருங்கல் கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. (ஆதாரம் : இம்மன்னனுடைய 10 -ம் ஆண்டு கல்வெட்டு) இவ்வூர் ஒய்மா நாட்டுப் பிரம்மதேயமான கிளிஞனூர் எனவும், இங்குள்ள திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் பெருமான் திரு அக்ஞீசரம் உடையவர் எனவும் கல்வெட்டில் காணப்படுகின்றது.

கல்வெட்டுகளில் பராந்தகனுடைய ஆட்சியில் கிராம நிர்வாக அதிகாரி ஒருவர் அமாவாசை, மாதப் பிறப்பு தினங்களில் சிறப்பான நிவேதனங்களுக்கு மான்யம் வழங்கியதாக செய்தி உள்ளது. (ஏ.ஆர்.இ.1919, நெ.148) முதல் குலோத்துங்கன் ஆட்சியில் இக்கோயில் கருவறையின் மேற்குப்புறம் வெளிச்சுற்றில் பிச்சாண்டவருக்காக பூஜைக்கு மான்யம் வழங்கியுள்ள செய்தி (ஏ.ஆர்.இ1919, நெ.153)யும், நந்தா விளக்கு தொடர்ச்சியாக எரியவிட மான்யம், கோயில் பூஜைகள் தினந்தோறும் நடக்கவும், கோயில் திருப்பணிக்கும் பல மான்யங்கள் ஒன்பதாம் நூற்றாண்டு முதல் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் நன்மக்கள் பலரால் சிறப்பாக பாதுகாக்கப்பட்ட செய்திகள் என தெரிய வருகிறது.

1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கோயிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் அடியவர்களுக்கு அருள்பாலித்துவரும் இக்கோயிலைப் போற்றிப் பாதுகாப்பதும், கோயில் வழிபாட்டை நாளும் தவறாமல் கடமையாகக் கொண்டு வாழ்வதும் நன் மக்கள் கடமையாகும்.
    
தல வரலாறு:இன்று சிற்றூராகக் காட்சி அளிக்கும் கிளியனூர் கி.பி.6-ம் மற்றும் 7-ம் நூற்றாண்டில் சிறப்புற்ற ஊராக இருந்ததை கல்வெட்டுக்கள் மூலம் அறிகிறோம். கிள்ளி என்பது பழங்காளச் சோழர்களின் பொதுப் பெயர். உதாரணமாக -நெடுங்கிள்ளி, கிள்ளிவளவன் முதலிய சோழ மன்னர் பெயர்கள் நம் பழைய சங்கப் பாடல்களில் காணப்படுகின்றன.

சோழர் காலத்தில் தோன்றிய கிள்ளியநல்லூர் என்ற ஊர்ப்பெயர்  நாளடைவில் கிளியனூர் என்று மருவியிருக்கலாம். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் காலத்தில் இவ்வூர் திருக்கிளியன்னவூர் என்று வழங்கி வந்துள்ளதை இவர் பாடி அருளியுள்ள தேவாரத் திருப்பதிகம் மூலம் நாம் அறிய முடிகின்றது.

திருஞானசம்பந்தர் காலத்தில் செங்கற்கோயிலாக இருந்திருக்கக்கூடிய  இத்திருக்கோயில் இடைக்காலத்துச் சோழநாட்டையாண்ட மன்னர்கள் காலத்தில் கற்கோயிலாக கட்டப்பட்டிருக்கிறது. இப்போதும் இக்கற்கோயில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இத்தல பெருமான் அகத்திய முனிவருக்கு அருள்பாலித்தவர். ராகு, கேது என்ற கிரகங்களுக்கும் அருள்பாலித்தவர்.

யோகிராம் சுரத்குமார்

யோகிராம் சுரத்குமார்

உத்தரப் பிரதேசத்தில் கங்கைக் கரையோரம் அமைந்த கிராமம் நரதரா. அங்கு வாழ்ந்த ராம்தத் குன்வர், குஸும்தேவி தம்பதிக்கு 1918ல், இரண்டாவது மகனாக பிறந்தவர் ராம்சுரத் குன்வர். ராமர் மீது அன்பு கொண்டவர் என்பது இதன் பொருள்.  குழந்தைப் பருவத்திலேயே ராம்சுரத்துக்கு பக்தி இயல்பாக இருந்தது. கங்கை நதி மீது தணியாத ஆர்வத்துடன் இருந்தார். தினமும் கங்கையில் நீராடி மகிழ்வது அவரது வழக்கம். காட்டுப்பூக்களைப் பறித்துக் கொண்டு கோயிலில் வழிபட்ட பின்னரே காலை சாப்பாடு. பள்ளிக்குச் சென்றாலும், மனதில், கங்கையின் பிரவாகமே ஓடிக் கொண்டிருக்கும். பள்ளி முடிந்ததும், புத்தகப்பையை வீட்டில் போட்டுவிட்டு கங்கையை நோக்கி ஓடிவிடுவார். நதிக்கரையில் இருக்கும் துறவிகளைக் கண்டால் அவர் மனம் சந்தோஷத்தில் ஆழும். அம்மாவிடம் ரொட்டி வாங்கி வந்து அவர்களுக்குக் கொடுப்பார். இரவில், அம்மாவிடம் ராமர், கிருஷ்ணர் பற்றிய கதைகளைக் கேட்காமல் தூங்க மாட்டார்.  ராம்சுரத்துக்கு 16 வயதானது. கபாடியா பாபா என்ற துறவி அவனிடம், காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று வரும்படி கூறினார். அவரின் தூண்டுதல் படியே, காசி சென்று விஸ்வநாதரைத் தரிசித்தபோது, எல்லையில்லா பரவசம் ஏற்பட்டது. துறவு நிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்த ராம்சுரத்திற்கு பெற்றோர் திருமணம் நடத்த ஆயத்தமாயினர்.

தல்கீரியா தேவி என்ற பெண்ணைப் பேசி முடித்தனர். விஷயமறிந்த ராம்சுரத், கங்கையில் குதித்து நீந்தி மறு கரையை அடைந்தார். மாப்பிள்ளை காணாமல் போனதால் அந்த பெண்ணை ராம்சுரத்தின் தம்பியான ராம்தஹீனுக்கு மணம் செய்து வைத்தனர். திருமணம் கழிந்த மூன்று நாட்களுக்குப் பிறகு, வீட்டுக்கு வந்தான் ராம்சுரத். சில மாதங்களுக்குப் பிறகு, 1938ல் மீண்டும் வீட்டில் திருமணப் பேச்சு எழுந்தது. ராம்ரஞ்சனிதேவி என்ற பெண்ணை தங்கள் வீட்டு மருமகளாகப் பெற்றோர் தேர்ந்தெடுத்தனர். கட்டாயத் திருமணமாக ராம்சுரத்தின் கல்யாணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகும் படிப்பு தொடர்ந்து கொண்டிருந்தது.  1940ல் கடுமையான மழைபொழிந்ததால் கங்கையில் வெள்ளம் பெருக்கெடுத்தது. நரதரா கிராமமே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. ராம்சுரத் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது. அந்தக் கவலை யிலேயே ராம்தத்குன்வர் காலமாகி விட்டார்.  ஒருவழியாக பி.ஏ. பட்டத்தோடு, ஆசிரியர் பயிற்சியையும் முடித்திருந்த ராம்சுரத் 1943ல் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். யசோதா, அமிதாப் என்னும் இரு குழந்தைகள் பிறந்தனர். ஆனால், வேலையிலோ, குடும்பத்திலோ அவர் மனம் முழுமையாக ஈடுபடவில்லை. கபாடியாவில் வசித்த பாபாவைச்சந்தித்தார்.  புதுச்சேரி, திருவண்ணாமலை சென்று அரவிந்தரையும், ரமணரையும் தரிசிக்கும்படி அவர் அறிவுறுத்தினார். அதன்படி திருவண்ணாமலை வந்த ராம்சுரத், ரமணரை தரிசித்தார்.

அரவிந்தரை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஊருக்குத் திரும்பினார். பதவி உயர்வு பெற்று தலைமை ஆசிரியரானார். குடும்ப வாழ்வில் இருந்தாலும், உப்பு, காரத்தை விடுத்து பழ உணவுகளை உண்ண ஆரம்பித்தார்.  1949ல் மீண்டும் திருவண்ணாமலை ரமணாசிரமத்தை அடைந்தார். புற்றுநோயால் அவதிப் பட்ட ரமணரைக் கண்டு கண்ணீர் விட்டார். புதுச்சேரி சென்று அரவிந்தரை தரிசித்தார். அங்கிருந்த துறவி ஒருவர் ராம்சுரத்திடம், கேரளத்திலுள்ள குன்னங்காட்டு ராம்தாஸ்சுவாமியை தரிக்கும்படி கூறினார். அங்கு சென்ற ராம்சுரத், ராமதாசரின் ஆடம்பரநிலையை கண்டு ஊர் திரும்பி விட்டார்.  1950ல் மாயா என்னும் பெண் குழந்தைக்குத் தந்தையானார். அந்த சமயத்தில் அரவிந்தர், ரமணரின் இறப்புச் செய்தி ராம்சுரத்தை எட்டியது. சொல்ல முடியாத துயரத்தில் மனம் வாடினார். பள்ளிக்கோடை விடுமுறையில் ஆறுதல் தேடி கேரளாவிலுள்ள குன்னங்காடு புறப்பட்டார். ஒருமாதம் தங்கினார். ஊர் திரும்பும்போது, புனித நதிகளில் நீராடி திருத்தலங்களைத் தரிசித்தார். 1952ல் மனைவி ரஞ்சனி நான்காவது கருவைத் தாங்கினார். இந்த சமயத்தில் கேரளாவிற்கு சுவாமி ராமதாசரைக் காண வந்தார். அவரை குருவாக ஏற்று, ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம் என்ற மந்திரத்தை உபதேசம் பெற்றார். அங்கிருந்து திருவண்ணாமலை வந்த ராம்சுரத், மூன்று வாரம் தங்கியிருந்தார். பக்தி பரவசத்தில் இருந்த அவர், மீண்டும் கேரளா புறப்பட்டார். ஈரோடு ரயில்நிலையத்தில் இன்ஜின் மோதி இடது கை எலும்பு முறிந்தது. விஷயம்அறிந்த உறவினர்கள் அவரை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர்.  அதன்பின், யாருடனும் பேசாமல் ராம மந்திரத்தை ஜெபித்து வந்தார். மனைவி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு கேரளா வந்தார். ஆனால், ராமதாசர் ராம்சுரத்தை தன்னோடு சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டார். எனவே சொந்த ஊருக்குச் சென்று, குடும்பத்தினரை விட்டு விட்டு துறவியாகத் திரிந்தார்.  இறுதியாக திருவண்ணா மலையை இருப்பிடமாக்கிக் கொண்டார். தேங்காய் சிரட்டையை கையில் ஏந்தி உணவு ஏற்றார். பனை ஓலை விசிறியையும் வைத்துக் கொண்டார். குளிப்பதை நிறுத்தி விட்டார். பெற்றோர் இட்ட பெயரான ராம்சுரத் குன்வர் யோகி ராம்சுரத் குமார் என்றானது. மக்கள் அன்போடு விசிறி சாமியார் என்று அழைத்து மகிழ்ந்தனர். அவரின் புகழ் உலகெங்கும் பரவியது. வெளிமாநிலம், வெளிநாட்டு பக்தர்களும் கூட அவரைத் தரிசிக்க வந்தனர். 1993ல் ஆஸ்ரமம் ஒன்றை கட்டி அவரைத் தங்க வைத்தனர். ரமணரைப் போலவே, இவருக்கும் புற்றுநோய் உண்டானது. 2001, பிப்.20ல் இறைவனோடு கலந்தார்.


ராமகிருஷ்ணர் பகுதி இரண்டு

ராமகிருஷ்ணர் பகுதி இரண்டு

அந்த  அன்புக்கரத்திற்கு சொந்தக்காரர் கமார்புகூரில் வசித்த சுகலால் கோஸ்வாமி. அவர் சுதிராமின் நெருங்கிய நண்பர். தன் நண்பனின் கஷ்டகாலத்தில் உதவுவது தனது கடமை என நினைத்தார். தனது ஊருக்கே வந்துவிடும்படி நண்பரை அழைத்தார். சுதிராமிற்கு வேறு வழியில்லை. மனைவி, இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகளுடன் கமார்புகூரில் குடியேறினார். தேரேய்பூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இந்த கிராமம் இருந்தது. கமார் என்ற வங்காள சொல்லுக்கு கொல்லர்கள் என்பது பொருள். புகூர் என்ற சொல்லுக்கு குளம் என்பது பொருள். இவ்வூர் செழிப்புமிக்க கிராமம். தண்ணீர் வசதி அதிகமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் வயல்வெளிகளில் தாவரங்கள் செழித்து வளர்ந்திருந்தன. தாமரைப்பூக்கள் நிறைந்த குளங்கள், ஆறு இக்கிராமத்தில் இருந்தது. கோஸ்வாமி தனது நண்பருக்கு ஒரு ஏக்கர் நிலத்தை கொடுத்தார். அதில் சில குடிசைகளும் இருந்தன. அந்த இடத்திற்கு லட்சுமிஜாலா என பெயர். பல கஷ்டங்களை அனுபவித்தாலும் நடப்பதெல்லாம் பகவான் செயல் என உணர்ந்து இறைநம்பிக்கையை விடாமல் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். துன்பங்கள் தொடரும் வேளையில் சுதிராமின் மனைவி சந்திராதேவி மிகுந்த பதட்டத்திற்கு ஆளானார். அவர் படும் வேதனையைக் கண்டு பொறாத சுதிராம் ஆறுதல் சொல்வார். சந்திரா! இவை சாதாரண துன்பங்கள். நாம் பட்டினி கிடக்கிறோம். பட்டினி என்பது ஒரு நோயல்ல. அதைக்கண்டு கலங்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. எத்தனையோ பேர் செல்வம் இருந்தும் பகவானுக்காக நோன்பிருக்கிறார்கள். அவர்களே பட்டினி கிடக்கும்போது ஏழைகளான நாம் பட்டினி கிடந்தால் என்ன? இறைவன் நம்மை நோன்பிருக்கச் செய்துள்ளார். அது அவரது விருப்பமாக இருக்கிறது. சற்று காலத்தில் நாம் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்புவோம். கவலைப்படாதே! என்பார்.

காலப்போக்கில் நண்பர் கோஸ்வாமி தந்த நிலம் விளையத் தொடங்கியது. சுதிராமின் குடும்பத்தில் பட்டினிக்கு இடமில்லாமல் போனது. எஞ்சிய உணவுப் பொருளை ஏழைகளுக்கு அவர் அளித்துவந்தார். ராமபக்தரான சுதிராம் வயலுக்கு சென்றதும், ஹே.. ராமா! ரகுவீரா! என்று அழைப்பார். அதன்பிறகே கூலியாட்களை வயலுக்குள் இறக்குவார். நடுகையின்போது ராமனின் பெயரை உரக்கச்சொல்லி முதல் நாற்றை நடுவார். தொடர்ந்து பணியாட்கள் வேலை செய்வார்கள். ஒருமுறை பக்கத்து ஊருக்கு ஏதோ பணி நிமித்தமாக சென்றிருந்த சுதிராம் அதை முடித்துவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவரால் நடக்கக்கூட முடியாமல் தளர்வு ஏற்பட்டது. அங்கிருந்த மரத்தடியில் படுத்தார். காற்று இதமாக இருந்தது. மரம் தந்த நிழலின் சுகத்தில் அப்படியே கண்ணயர்ந்துவிட்டார். அப்போது கனவு ஒன்று தோன்றியது. சுதிராம்! நான் சொல்லும் இடத்திற்கு செல். அங்கே கவனிப்பாரின்றி நான் கிடக்கிறேன். என்னை உன் வீட்டிற்கு எடுத்துச்செல், என ஒரு சிறுவனின் வடிவில் தோன்றிய ராமர் சொன்னார். சுதிராம் திடுக்கிட்டு விழித்தார். சற்று தூரம் சென்றார். ராமர் கனவில் சொன்னதுபோலவே ஒரு இடம் தென்பட்டது. அங்கே ஒரு பாம்பு படமெடுத்து நின்றது. அதன்கீழ் ஒரு சாளக்கிரம ராமர்சிலை கிடந்தது. அதை எடுப்பதற்காக சுதிராம் விரைந்தார். பாம்பு அங்கிருந்து சென்றுவிட்டது. சிலையை எடுத்துக்கொண்டு கண்களில் நீர் மல்க வீடு திரும்பினார் சுதிராம். ராமரே தந்த சிலை என்பதால் அவரது பக்தி உணர்வு மிகவும் அதிகரித்தது. அந்தச்சிலையை வீட்டில் வைத்து பூஜித்து வந்தார். அவரது குலதெய்வமான சீதளாதேவி ஒரு சிறுமியின் வடிவில் வந்து தினமும் பூ பறித்து தருவாள். அவளுடன் சுதிராம் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருப்பார். அந்தக்குழந்தை அவரோடு தோட்டத்திற்கு சென்று மரக்கிளைகளை வளைத்துக் கொடுப்பாள். சுதிராம் இலகுவாக மலர்களை பறித்துக்கொள்வார்.

தெய்வத்தை நேரில் தரிசிக்கும் பாக்கியம் கொண்டவரான சுதிராமின் வாழ்வில் மற்றொரு அதிசயமும் நிகழ்ந்தது. கமார்புகூரில் இருந்து 64 கி.மீ. தொலைவில் உள்ள மேதினிப்பூர் என்ற ஊருக்கு சுதிராம் சென்றுகொண்டிருந்தார். வழியில் வில்வ மரம் ஒன்று நின்றது. பொதுவாக அந்தக்காலத்தில் மரத்தில் இலைகள் உதிர்ந்திருக்கும். ஆனால் இந்த மரத்தில் மட்டும் இலைகள் ஏராளமாக இருந்தது சுதிராமிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது சிவபெருமானின் கருணை என்றே நினைத்தார். வில்வ இலைகளை பறித்தார். மேதினிப்பூருக்கு செல்லாமல் மீண்டும் வீட்டிற்கு வந்துவிட்டார். வீட்டில் இருந்த சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட்டார். வெளியூருக்கு புறப்பட்ட காரணத்தையே மறந்துவிட்டார். மறுநாள்தான் அவருக்கு அந்த நினைவே வந்தது. அந்த அளவிற்கு மிகப்பெரிய ராமபக்தராகவும், சிவபக்தராகவும் விளங்கினார் சுதிராம். எந்தச் சூழ்நிலையிலும் அவர் நேர்மை மாறவே இல்லை. யாரிடமும் கடனாகவோ, இலவசமாகவோ எதையும் பெறமாட்டார். ஒழுக்கமற்ற மனிதர்களைக் கண்டாலே ஒதுங்கிப்போவார். அவர் காயத்ரி ஜெபம் செய்யும்போது ஒரு தெய்வீக ஒளி வீசும். கன்னங்களில் கண்ணீர் வழியும். ராமசேவையிலேயே அவரது காலம் கழிந்தது. இதனிடையே மூத்த மகன் ராம்குமாருக்கும், மூத்த மகளுக்கும் திருமணம் நடந்து முடிந்தது. ராம்குமார் ஜோதிடக்கலையில் வல்லவர். தந்தையாரின் தொழிலில் உதவியாக இருந்தார்.  இதனால் குடும்பத்தில் மீண்டும் செல்வவளம் செழித்தது. ராம்குமாரிடமும் தெய்வீகசக்திகள் இருப்பதாக ஊரார் நம்பினர். அவரது ஜோதிடம் சரியாக இருந்ததால் கூட்டம் மொய்த்தது. காளிதேவியை ராம்குமார் வழிபட்டு வந்தார். ஒருமுறை காளி கோயிலுக்கு அவர் சென்றிருந்தார். அப்போது அதிபயங்கர வடிவத்தில் காளிதேவி அவர் முன்பு தோன்றினாள்.