செவ்வாய், 10 நவம்பர், 2020

உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம்!

உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம்!

ஈசன் அதற்கு ஏதும் பதில் சொல்லாவிட்டாலும், தடாதகை பிராட்டியாருக்கு அருள் செய்ய மனதில் எண்ணிவிட்டார். தன் மகன் முருகப்பெருமானை அழைத்தார். ஏறுமயிலேறி விளையாடியபடியே ஆறுமுகன் அவர் முன் வந்துநின்றான். தந்தையே! என்னைத் தாங்கள் அழைத்த காரணம் என்ன? என்றான். முருகனைத் தன் மடியில் அமர்த்திக்கொண்டார் ஈசன். சரவணா! அன்றொரு நாள் எனது நெற்றிக்கண்ணில் இருந்து பறந்த சுடரில் பிறந்த நீ, மக்கள் நலனுக்காக இந்த மதுரையில் பிறக்க வேண்டும். தடாதகைபிராட்டியாரின் வயிற்றில் நீ கருவாவாய், என்றார். முருகப்பெருமானும் தந்தையின் கட்டளைக்கு பணிந்து, தடாதகைபிராட்டியாரின் மணிவயிற்றில் குழந்தையாகத் தங்கினார். தான், கர்ப்பமுற்றதை அறிந்த தடாதகை மிகுந்த மகிழ்ச்சியுடன் கணவரின் மார்பில் சாய்ந்து, இந்த விஷயத்தை தெரிவித்தாள். அரசி தடாதகை கர்ப்பமுற்றதை அறிந்த அமைச்சர் சுமதி அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. அவர் இந்த விஷயத்தை மக்களுக்கு தெரிவிக்க உத்தரவிட்டார். மக்கள் தங்கள் எதிர்கால மன்னர் மதுரையில் பிறக்கப்போவதை எண்ணி மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றனர். மீனாட்சி கல்யாண உற்சவம் போல, ஊரெங்கும் மாவிலை தோரணம் கட்டி, இனிப்புகள் சமைத்து, தானம் செய்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். கர்ப்பஸ்திரீக்கு என்னென்ன தேவையோ அவையெல்லாம் செய்து கொடுக்கப்பட்டன. கர்ப்பவதிக்கு புளிப்பு வகை மிகவும் பிடிக்குமே! இதனால் ருசியான புளியோதரையை சமைத்துக் கொடுத்தனர். குழந்தை சிவப்பாக பிறக்க வேண்டுமே என்பதற்காக குங்குமப்பூ கலந்த பால், விதவிதமான பழரசங்கள் கொடுக்கப்பட்டன.

மிக முக்கியமாக வேத விற்பன்னர்கள் காலையும் மாலையும் வரவழைக்கப் பட்டு அரிய ஆன்மிகத் தத்துவங்கள், போதனைகள், கதைகள், இறைவனின் திருநாமங்களின் மகிமை ஆகியவை சொல்லப்பட்டன. இது மிகவும் முக்கியமான விஷயம். இந்தக் காலத்தில் கர்ப்பவதிகள் டிவியின் முன்னால் அமர்ந்து, கண்ட கண்ட நாடகங்களைப் பார்த்து கண்ணீர் வடிப்பதும், உணர்ச்சிவசப் படுபவதும், ஆபாசமும், வன்முறையும் கலந்த பாடல்கள், திரைப்படங் களைப் பார்த்து அவற்றையே விரும்பும் குழந்தைகளைப் பெறுகிறார்கள். தாங்கள் தவறு செய்துவிட்டு, பிள்ளைகள் கெட்டலையும் போதும், ஒழுங்காகப் படிக்காமல் இருக்கும்போதும் அவர்கள் மீது தங்கள் கடமையைச் சரிவர செய்யவில்லை என பழி போடுகிறார்கள். கர்ப்பவதிகள் தயவுசெய்து டிவி பார்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும். சிறந்த ஆன்மிக நூல்களைப் படிக்க வேண்டும். யாருடைய துணையுடனாவது கோயில்களுக்குச் சென்று ஆன்மிக  சொற்பொழிவுகளைக் கேட்க வேண்டும். இப்படி செய்தால் மிகச்சிறந்த குழந்தைகள் பிறக்கும். இப்படியாக, தடாதகை பிராட்டியாரின் கர்ப்ப கால முடிவில், அவளுக்கு வளைகாப்பு, பூச்சூடல் ஆகிய மங்கள நிகழ்ச்சிகள் மிகுந்த ஆடம்பரத்துடன் நடத்தப் பட்டன. மதுரை வாழ் மக்கள் தங்கள் அரசியாருக்கு விதவிதமான கொழுக்கட்டைகள், வடை வகைகளை கொண்டு வந்து கொடுத்தனர். ஒரு திங்கள்கிழமை, நிறைந்த திருவாதிரை நட்சத்திரம், சகல கிரகங்களும் சுபவீட்டில் இருந்த சுபயோக சுபவேளையில் தடாதகை பிராட்டியார் தன் செல்வமகனைப் பெற்றெடுத்தாள். அவள் மட்டுமா! ஊரும் உலகமும் மகிழ்ச்சியடைந்தது. சுந்தரேச பாண்டியன் தன் மகனை பார்க்க வந்த போது, மரகதவல்லியான தடாதகை பிராட்டியாரின் பச்சைக் கன்னங்களில் சிவப்பு இழையோடியது. வெட்கமும், மகிழ்ச்சியும் ஒன்றுசேரும் நேரத்தில் தான் பெண்களுக்கு அழகே கூடும் போலும்!

சுந்தரேச பாண்டியன் தன் மனைவியின் பேரழகையும், செக்கச் சிவக்க பிறந்த மகனின் பேரழகையும் ஒருசேர ரசித்தார். குறிப்பிட்ட நாட்கள் கடந்த பிறகு குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடந்தது. உக்ரவர்மன் என்று பெயர் சூட்டினர். பெயர் சூட்டு விழாவுக்கு தாய்மாமன் வந்தாக வேண்டுமே! திருமால் தன் கருட வாகனத்திலும், பிரம்மா அன்னவாகனத்திலும் அவரவர் தேவியரான ஸ்ரீதேவி, பூதேவி, சரஸ்வதியுடன் வந்து சேர்ந்தனர். தேவ குரு பிரகஸ்பதி குழந்தையை ஆசிர்வதித்து, உரிய வயது வந்ததும் தானே நேரில் வந்து குழந்தைக்கு பாடங்களைக் கற்றுக்கொடுப்பதாகவும் சுந்தரேச பாண்டியனிடம் தெரிவித்தார். ஐந்து வயதில் உக்ரவர்மனுக்கு பூணூல் அணியும் வைபவம் நடந்தது. தேவகுரு பிரகஸ்பதி பாடங்களை ஆரம்பித்தார். எட்டுவயதிலேயே சகல கலைகளையும் கற்றான் உக்ரவர்மன். தந்தை சுந்தரேசபாண்டியன், அவனுக்கு பாசுபதாஸ்திரம் எய்யும் முறையை கற்றுக் கொடுத்தார். உக்ரவர்மனுக்கு 16 வயதானது. அவனுக்கு திருமணம் செய்து வைப்பதா அல்லது பட்டம் சூட்டுவதா என்று சுந்தரேசபாண்டியனும், தடாதகை பிராட்டியாரும் யோசிக்க ஆரம்பித்தனர். அமைச்சர் சுமதியுடனும், வேத பண்டிதர்களுடனும் இதுபற்றி கலந்தோலசித்தனர். திருமணமே சிறந்த வழி என அவர்கள் ஒருமித்த முடிவெடுத்துக் கூறவே பெண் பார்க்கும் படலம் ஆரம்பமானது.

மலையத்துவஜனை அழைத்த படலம்!

மலையத்துவஜனை அழைத்த படலம்!

காஞ்சனமாலைக்கு வருத்தம். ஏழுகடல் வந்தாயிற்று, புனித நீரும் ஆடலாம். ஆனால், சாஸ்திரம் என்ன சொல்கிறது தெரியுமா? தீர்த்தமாடினாலும் சரி, கோயிலுக்கு  போனாலும் சரி...திருமணத்துக்குப் பிறகு தம்பதி சமேதராகச் சென்றால் தான் சிறந்த பலன் உண்டு. மலையத்துவஜனோ இந்த பூமியிலேயே இல்லை. காஞ்சனா என்ன செய்வாள்? இவ்வளவு செய்தும், கணவரின்றி நீராடி பயனில்லாமல் போய்விடுமே! அவளது கண்களில் நீர் முட்டியது.சிவனடியார்களை அழைத்த காஞ்சனமாலை, திருநீறு போல் வெள்ளை உள்ளம் படைத்த அடியவர்களே! அடியவளுக்காக எம்பெருமான், எழுகடலை வரவழைத்துள்ளார். அதில் நீராட வேண்டுமானால், கணவருடன் இணைந்தே நீராட வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அது என்னால் இயலாது என்பதை தாங்கள் அறிவீர்கள். இதற்கு மாற்று வழியிருக்கிறதா? எனக்கேட்டாள். அடியவர்கள் அவளது கவலையை உணர்ந்து, இதற்காக வாட வேண்டாம் தாயே! புனிததீர்த்தங்களுக்கு செல்லும் கணவனை இழந்த பெண்கள், தங்கள் புத்திரர்களின் கையைப் பிடித்தபடியே மூழ்கி எழுவதற்கு அனுமதியளிக்கிறது சாஸ்திரம். தங்களுக்கு புத்திரன் இல்லை என்பதும், ஒரே புத்திரி என்பதையும் நாங்கள் அறிவோம். இவ்வாறான சமயங்களில் பசுக்கன்றின் வாலை பிடித்தபடி நீராடுவது போதுமானதென்றும், அத்தகைய நீராடலுக்கும் புண்ணிய நீராடலின் முழுபலனும் கிடைக்கும் என்றும் சாஸ்திரம் தெரிவிக்கிறது.

தாங்கள் அதற்கான ஏற்பாட்டைச் செய்யுங்கள்,என்றனர். காஞ்சனமாலைக்கு கண்ணீர் இன்னும் அதிகமானது. தன் மகள் தடாதகையிடம் சென்று, மகளே! நான் கொடுத்து வைக்காத பாவியாகி விட்டேன். கணவரை இழந்தேன், ஆண் குழந்தைகளைப் பெறவில்லை. ஒரு பசுக்கன்றின் வாலைப் பிடித்தபடி நீராடும் நிலைக்கு ஆளானேன். என்னவோ என் மனம் இதற்கு ஒப்பவில்லை. உன் மணாளரிடமே கேட்டு, இதையும் விட சிறந்த உபா யத்தை அறிந்து சொன்னால், அந்த ஈசனின் கட்டளையை நிறைவேற்ற சித்தமாயிருக் கிறேன், என்றாள். தாயின் வருத்தம் மகளைக் கலக்கியது. மீன் தன் குஞ்சுகளைக் காப்பது போல், மக்களைக் காக்கும் மாதரசி மீனாட்சியான தடாதகை பிராட்டியார் தன் கணவரிடம் சென்று, ஈசனே! என் தாய் நீராடுவதற்காக மதுரைக்கு புனித தீர்த்தங்களை வரவழைத்தீர்கள். ஆனால், கணவனை இழந்து, புத்திரனைப் பெறாத அவள், பசுக்கன்றின் வாலைப்பிடித்தபடி நீராடுவது குறித்து வருந்துகிறாள். இந்நிலைக்கு மாற்று ஏற்பாட்டைத் தாங்களே செய்ய வேண்டும், என்றாள். தன்னை முழுமையாக நம்புவர்க்கு கேட்டதை கேட்டபடி தரும் ஈசன் அவளுக்கு அருள்புரிய மனம் கொண்டார். தேவாதி தேவனான இந்திரனை நோக்கிப் பார்த்தார். அவன் ஓடோடி வந்தான். இந்திரா! என் மாமியார் புனித தீர்த்தமாட விரும்புகிறார். கணவனுடன் இணைந்து தீர்த்தமாடினால் தான் புண்ணியபலம் கிடைக்கும் என்பதால், சொர்க்கத்தில் இருக்கும் மலையத்துவஜ பாண்டியனை புஷ்பகவிமானத்தில் ஏற்றி தக்க மரியாதைகளுடன் மதுரைக்கு அனுப்பி வை, என்றார். அதன்படியே அவன் செய்ய, மலையத்துவஜன் எழுகடல் தீர்த்தக்கரையில் வந்து இறங்கினான்.

ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ என்ற பழமொழி ஈசனின் திருவருளால் பொய்யானது. காஞ்சனமாலை தன் கணவனைக் கண்டு கதறியழுது அவன் பாதம் பற்றி வணங்கினாள். தடாதகைபிராட்டியாரோ தன் தங்கத்தந்தையைப் பார்த்ததும் உணர்ச்சிப்பூர்வமானாள். மலையத்துவஜபாண்டியன் ஈசனை வணங்கினான். பெருமானே! எனக்கு ஆண்மகன் இல்லை என்ற வருத்தமே இல்லை. ஏனெனில், பெண்ணைப் பெற்றதால் பெருமையடைந்தவன் நான். ஈசனாகிய தாங்களே எனக்கு மருமகனாகக் கிடைத்ததை என்னவென்று சொல்வேன்! தங்கள் ஆசிர்வாதம் எனக்கு வேண்டும், எனச் சொல்லி அவரது பாதத்தில் விழச்சென்றான். சிவபெருமான் அதைக்கண்டு பின்வாங்கினார். மாமனாரே! நான் பூமிக்கு மானிட அவதாரம் எடுத்து வந்துள்ளேன். தாங்கள் எனக்கு மாமனார். மாமன் என்பவர் தந்தைக்குச் சமமானவர். எனவே, தங்களுக்குத்தான் நான் மரியாதை செய்யவேண்டும். ஈசன் என்ற அந்தஸ்துடன் என் பாதத்தில் விழ தங்களை அனுமதிக்கமாட்டேன், என பணிவுடன் சொன்னார். மருமகன்கள் தங்கள் மாமனாருக்கு செய்ய வேண்டிய மரியாதையை, இந்த இடத்தில் தெளிவாக நடத்திக் காட்டியுள்ளார் ஈசன். பின்னர் சிவனடியார்களை அழைத்த அவர்,  அடியவர்களே! முறைப்படி இவர்களுக்கு தீர்த்த ஸ்நானம் செய்து வையுங்கள், என்றார். இறைவனின் கட்டளைக் கேற்ப சிவனடியார்களே அவர்களுக்கு தீர்த்தஸ்நானம் செய்வித்தனர். பின்னர் காஞ்சனமாலையும், மலையத்துவஜனும் பிறவாப்பெருவாழ்வு பெற்றனர். அவர்கள் சிவபெருமானுடன் ஜோதியில் கலந்தனர். என்னதான் பெருவாழ்வு பெற்றாலும், தாயையும், தந்தையையும் பிரிந்த மகளுக்கு வருத்தம் இருக்காதா என்ன! தடாதகைப் பிராட்டியாருக்கு கண்ணீர் முட்டிநின்றது. இருப்பினும், தன் மணாளனின் பாதம் பணிந்து தன் பெற்றோருக்கு நற்கதி கொடுத்ததற்காக நன்றி தெரிவித்தாள்.பின்னர் சுந்தரபாண்டியனான தன் கணவரிடம்,அன்பரே!  என் தாய் தந்தை சிவலோகம் அடைந்து விட்டனர். எனக்கு சகோதரர்கள் இல்லை. பாண்டியவம்சம் நம்மோடு முடிந்து விடக்கூடாது. தாங்கள் தான் நம் வம்சவிருத்திக்கு அருளவேண்டும், எனக் கேட்டுக் கொண்டாள்.

ஏழுகடல் அழைத்த படலம்!

ஏழுகடல் அழைத்த படலம்!

கவுதமர் என்னும் மகரிஷி, அரசி காஞ்சனமாலையைச் சந்தித்தார். ஸ்ரீராமபிரானால் கல்லாய் இருந்து சுயரூபம் பெற்றாளே அகலிகை, அவளது கணவரே இந்த கவுதமர். தேவேந்திரன் தப்பு செய்தாலும் அவனையே சபிக்கும் ஆற்றலுள்ளவர், மிகப் பெரிய தபஸ்வி. மீனாட்சி திருமணத்திற்கு வந்திருந்த அவர், சிவபெருமானிடம் விடை பெற்ற பிறகு, மரியாதை நிமித்தமாக காஞ்சனமாலை அம்மையாரையும் சந்தித்து விடை பெற்றுக் கொள்ள வந்தார். அவரை அரண்மனைக்குள் அழைத்து வந்த காஞ்சனமாலை தகுந்த மரியாதை செய்தாள். உயர்ந்த ஆசனத்தில் அவரை அமர செய்து, சிறிய ஆசனம் ஒன்றில் தான் அமர்ந்து கொண்டாள். பெரியவர்கள் ஒரு இடத்தில் அமர்ந்திருக்கும் போது, சிறியவர்கள் தரையில் அமர்ந்து கொள்ள வேண்டும். பெரியவர்களுக்கு தரப்படும் மரியாதை மிகப்பெரிய புண்ணியத்தையும், அவர்களின் ஆசியையும் நமக்குத் தரும். அவரிடம் காஞ்சனமாலை, மாமுனிவரே! என் மகள் மீனாட்சியின் திருமணம் நல்லபடியாக முடிந்து விட்டது. என் மருமகனாக அந்த ஈசனே வந்துவிட்டார். இனி மதுரையின் காலம் பொற்காலமாகவே திகழும். எனவே, நான் பிறவாப் பெருநிலை அடைய விரும்புகிறேன். அதற்கு என்ன வழி என்று தாங்கள் தான் உபதேசிக்க வேண்டும், என்றாள். குழந்தைகளுக்கு திருமணம் முடிந்தபிறகும், அவர்கள் விஷயத்தில் தலையிடாமல், அதன் பிறகு முக்திக்குரிய நிலையாகிய தெய்வ வழிபாட்டை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்பது இதன்மூலம் தெளிவாகிறது. பிள்ளைகளுக்கு திருமணமான பிறகும், வீட்டுக்கு வந்த மருமகள், மருமகனின் செயல்பாடுகளில் தலையிட்டால் நிம்மதியின்மையே ஏற்படும் என்பது இதன்மூலம் கிடைக்கும் அறிவுரையாக இருக்கிறது.காஞ்சனமாலையின் மன ஓட்டத்தை கவுதமரும் புரிந்து கொண்டார்.

அரசியாரே! உமையவளை மகளாகவும், ஈசனையே மருமகனாகவும் அடைந்த பெறற்கரிய புண்ணியத்தைப் பெற்ற மகராசியான உங்களுக்கு உபதேசிக்கும் தகுதி எனக்கில்லை. இருப்பினும், ஞானத்தை யாசிக்கும் போது அதை அருள்வதே ஒருவரின் கடமை. இதோ! பிறப்பற்ற நிலையடைய மூன்று வழிகளைச் சொல்கிறேன். தர்மம் செய்தல், உண்மையை மட்டுமே பேசுதல், இறைவனைத் தியானம் செய்தல், நம் மனத்தைக் கட்டுப்படுத்தி ஆசைகளைக் குறைத்தல் ஆகியவை ஒரு ரகம். சிவாயநம என்னும் மந்திரத்தை தினமும் ஓதுவது, வேதநூல்களை  படிப்பது, யாகங்கள் செய்வது ஆகியவை இரண்டாவது ரகம். சிவபெருமானை வில்வத்தால் அர்ச்சனை செய்வது, கோயிலை வலம் வருவது, தல யாத்திரை செல்வது, தீர்த்தங்களில் நீராடுவது ஆகியவை மூன்றாவது ரகம். இதில், கடல் உள்ள இடத்தில் நீராடுவது மேலும் நலம் பயக்கும், என்றார். அவர் சென்றபிறகு, காஞ்சனமாலை தன் மகளிடம் வந்தாள். மீனாட்சி! எனக்குள் ஒரு ஆசை, பிறப்பற்ற நிலையடைய விரும்புகிறேன். கவுதம மகரிஷியின் அறிவுரைப்படி பார்த்தால் தீர்த்தமாடுவதே முக்திநிலைக்கு முதல் பாதையாக இருக்குமென கருதுகிறேன். அதிலும் ஆறும் கடலும் இருக்குமிடத்தில் நீராடுவது மிகப்புண்ணியமானதென்று அவர் கூறினார். நம் மதுரை நகரில் உன் கணவரின் அருளால் வைகை என்னும் மலர்க்கொடியாள் மலர்ந்து பரந்து ஓடுகிறாள். ஆனால், இங்கே கடல் இல்லையே! கடல் இங்கிருந்தால் நான் அதில் நீராடி பிறப்பற்ற நிலைக்கு பாதை காண்பேன், என்றாள். தாயின் விருப்பத்தை ஆண் பிள்ளைகள் இருந்தால் நிறைவேற்றி வைப்பார்கள். மீனாட்சியோ ஆணுக்கு ஆணாகவும், பெண்ணுக்கு பெண்ணாகவும் இருக்கிறாள்.

திருமணத்துக்குப் பிறகும் கூட கணவர் வீடான இமயத்துக்குச் செல்லாமல், கணவரையும் இங்கேயே தங்க வைத்து விட்டாள். மணாளனோ மகாதேவன். அவர் உத்தரவிட்டால் கடல்களே விழுந்தடித்துக் கொண்டு இங்கே வராதா என்ன! தன் அன்னையின் விருப்பத்தை அவள் தன் நாதனிடம் சொன்னாள். மாமியின் விருப்பத்தை நிறைவேற்ற அந்த சாமியும் முடிவு செய்து விட்டார். கடல்களே! மதுரைக்கு வாருங்கள், என்றார். ஒன்றல்ல, இரண்டல்ல...ஏழு கடல்களும் மதுரைக்கு வந்து சேர்ந்தன. எங்கும் பேரிரைச்சல்... அலைகள் நர்த்தனமாடின. அவற்றில் கிடந்த சங்குகளும், முத்துச் சிப்பிகளும் ஒன்றோடொன்று உரசி எழுப்பிய ஓசை எல்லையே இல்லாமல் விரிந்து சென்றது. மக்களின் கண்களுக்கு கடல்கள் தெரியவில்லையே ஒழிய கடல் ஓசை தெளிவாகக் கேட்டது. அவர்கள் குலை நடுங்கிப் போனார்கள். அவர்கள் ஓடோடி வந்து மன்னர் சுந்தரேசரை வணங்கி, எம்பெருமானே! எங்கள் மன்னனே! இதென்ன ஓசை... கடல் அலைகளின் பேரிரைச்சல் கேட்கிறதே! என்ன இது! ஊழிக்காலமாகிய உலகம் அழியும் காலம் வந்துவிட்டதா! என பலவாறாகக் கேட்டனர். சுந்தரேசர் அந்தக் கடல்களை அடக்கினார். அமைதியாயிருங்கள்! நீங்கள் மீனாட்சி ஆலயத்தின் வெளிப்புறமுள்ள கிணற்றில் சென்று அடக்கமாய் இருங்கள், என்று கர்ஜித்தார். அவ்வளவுதான்! சத்தமே வரவில்லை. மக்கள் மகிழ்ந்தனர். சுந்தரேசர் குறிப்பிட்ட இடத்தில் சென்று பார்த்தனர். கிணற்றில் நீர் நிரம்பிக் கிடந்தது. கருணை வடிவான ஈசனை மனதார துதித்த காஞ்சன மாலை பரிவாரங்களுடன் கிணற்றுக்குச் சென்றாள். மதுரை மீனாட்சி கோயில் கிழக்கு கோபுரம் எதிரேயுள்ள புதுமண்டபத்தைக் கடந்தால் வரும் தெருவுக்கு எழுகடல் தெரு என்று இப்போதும் பெயர் இருக்கிறது.

அன்னக் குழியும் வையையும் அழைத்த படலம்!

அன்னக் குழியும் வையையும் அழைத்த படலம்!

நாதா! இதென்ன அதிசயம்! பல லட்சக்கணக்கானோருக்கான உணவை இவன் ஒருவன் சாப்பிட்டு விட்டானே! இன்னும் இவனை விட்டால் சமையல்காரர்களையும், பாத்திரங்களையும் கூட தின்று விடுவான் போலிருக்கிறதே! அதற்கும் பசி அடங்கா விட்டால் உலகையை விழுங்கி விடுவானோ! ஐயனே! இதென்ன சோதனை! என்றாள்.மீனாட்சியை அமைதிப்படுத்திய சுந்தரேசர், நான்கு  குழிகளை வரவழைத்தார். அவற்றில் பால் சோறு, தயிர்ச்சோறு உள்ளிட்ட அன்னவகைகள் குறைவின்றி கிடைக்க ஏற்பாடு செய்தார். குண்டோதரன் அவற்றைச் சாப்பிட்டு சாப்பிட்டு களைத்துப் போனான். அந்தக் குழியில் இருந்து வந்த சாப்பாடு குறையவே இல்லை. பசி தணியவே, தண்ணீர் குடிக்க நீர்நிலைகளை தேடியலைந்தான். மதுரையில் இருந்த பல குளங்களின் நீரும் வற்றும் வகையில் தண்ணீர் குடித்தும் தாகம் அடங்கவில்லை. ஐயனே! என் தாகத்தையும் தீர்க்க வேண்டும், என சுந்தரேசரிடம் வேண்டினான். அவர் தன் தலைமுடியைச் சாய்த்து கங்கையை கீழே இறங்கச் சொன்னார். கங்கா! நீ பிரவாகமெடுத்து ஆறாக இந்நகரின் வழியே ஓடிவா, என்றார்.

அவள் சுந்தரேசரிடம், சுவாமி! தங்கள் சித்தப்படியே செய்கிறேன். உங்கள் திருமணநாளன்று உருவாகும் பாக்கியம் பெற்ற என்னில் மூழ்கி எழுபவர்கள் பிறப்பற்ற நிலையாகிய மோட்சத்தை அடைய அருள்பாலிக்க வேண்டும், என வேண்டினாள். கங்கா! மோட்சத்தலங்களான வைகுண்டத்தின் முதல் எழுத்தாகிய வை கைலாயத்தின் முதல் எழுத்தாகிய கை இவை இரண்டையும் இணைத்து நீ வைகை என வழங்கப்படுவாய். உன்னில் குளிப்பவர்கள், தீர்த்தமாகப் பருகுபவர்களுக்கு மோட்சம் கிட்டும். அவர்கள் சகல செல்வங்களோடும் வசிப்பார்கள், என்றார். பின்னர் கங்காதேவி, ஆறாக வேகமாக ஓடிவந்தாள். அவளுக்கு வேகவதி என்ற பெயர் உண்டாயிற்று. குண்டோதரன் அந்த ஆற்றின் இருகரைகள் மீதும் கைகளை விரித்து வைத்துக் கொண்டு ஆற்றின் போக்கை தடுத்து தண்ணீர் அருந்தி தாகம் தீர்ந்தான். இதனாலும் இந்த நதிக்கு வைகை என்று பெயர் வந்ததாக சொல்வர். தன் தாகம் தீர்த்த வைகை சிவனின் தலையில் இருந்து தோன்றிய தால் அதற்கு சிவதீர்த்தம் என்னும் புனித பெயரும் வைத்தான். சிவனின் திருமணத்திற்கு வந்து, திருமணப்பணிகளை சிறப்பாக செய்த அவனுக்கு பூதகணங் களின் தலைமைப் பதவியை சுந்தரேசப் பெருமான் அளித்தார்.

குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்!

குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்!

அனைத்து மக்களும் சாப்பிட்டாயிற்று. லட்சக்கணக்கில் திருமணத்துக்கு வந்திருந்த மக்களும் சாப்பிட்டாலும், சமைத்ததில் பெரும் பங்கு மிஞ்சிவிட்டது. எவ்வளவு பரிமாறினாலும், உணவின் அளவு அப்படியே இருப்பது போல் தெரிகிறதே! இது ஏதோ மாயவித்தை போல் தெரிகிறதே! சமையல் குழுவினர் பிரமித்தனர். இதுபற்றி முறையிட அரசி மீனாட்சியிடம் அவர்கள் ஓடினர். மீனாட்சி மடப்பள்ளியில் சென்று பார்த்தாள். சமைத்த உணவில், லட்சக்கணக்கானவர்கள் சாப்பிட்டிருந்தும் கூட, சற்று கூட குறையாமல் அப்படியே இருந்தது. இது இறைவனின் லீலை என்பதை அவள் எப்படி அறிவாள்? சுந்தரேசர் ஏதும் அறியாதவர் போல் இருந்தாள். மீனாட்சி தன் கணவரிடம் நாணத்துடன் சென்றாள். சுவாமி! எங்கள் இல்லத்தில் நாங்கள் சமைத்த உணவு அப்படியே மீந்துவிட்டது. லட்சக் கணக்கானவர்கள் மாப்பிள்ளை இல்லம் சார்பாக வந்திருந்தும் அப்படியே இருப்பது ஆச்சரியமூட்டுவதாக உள்ளது. உணவை வீணடிப்பது மகாபாவம் என்பது தாங்கள் அறியாததல்ல! அது அன்னபூரணிக்கு மாசு கற்பித்தது போல் ஆகும். இந்த உணவு காலியாக தாங்கள் தான் அருள்புரிய வேண்டும், என்றாள்.

அவளது பேச்சில் சற்றே ஆணவம் தொனித்தது போல் தெரிந்தது. மனிதனுக்கு சிறிதளவு ஆணவம் இருந்தாலும் இறைவனை அடைய முடியாது. அந்த ஆணவத்தைக் களைய அவன் சோதனைகளைத் தருவான். தன் மனைவியிடமும் விளையாடிப் பார்க்க இறைவன் திருவுளம் கொண்டார். அப்படியா! ஏராளமாகவா சமைத்தீர்கள்! எல்லோரும் சாப்பிட்டாயிற்றே! சரி...என் பூதகணங்கள் சாப்பிட்டதா என விசாரித்து விடுகிறேன், என்றவர், பூதகணங்களை அழைத்து விசாரிப்பவர் போல் நடித்தார். குண்டோதரன் என்ற பூதகணத்தை தவிர மற்றவர்கள் சாப்பிட்டாயிற்று என்றனர். குண்டோதரனுக்கு திருமணப்பணிகள் அதிகமாக இருந்ததால், பிறகு சாப்பிடலாம் என இருந்துவிட்டான். குண்டோதரா! சாப்பிடாமல் அப்படி என்ன வேலை செய்து கொண்டிருக்கிறாய்! போ போ, முதலில் சாப்பாட்டை முடி! அப்புறம், பணிகளை செய்யலாம், என செல்லமாகக் கடிந்துகொண்டார் மாப்பிள்ளை சுந்தரேசர். குண்டோதரன் சாப்பிடச் செல்லும் போது மீனாட்சி அவரிடம், சுவாமி! இவன் ஒருவன் சாப்பிடுவதால் உணவு தீர்ந்துவிடுமா! இன்னும் சாப்பிடாதவர்கள் நிறைய இருப்பார்கள். அவர்களையும் வரச்சொல்லுங்கள், என்றாள்.

புன்னகையை உதிர்த்த சுந்தரேசர், இவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கட்டும், இன்னும் யார் யார் சாப்பிடவில்லை என விசாரித்து அனுப்பி வைக்கிறேன், என்றார். குண்டோதரன் மடப்பள்ளிக்குள் நுழைந்தானோ இல்லையோ, அவனது வயிற்றில் வடவைத்தீ எனப்படும் கொடும் பசித்தீயை எரிய வைத்தார் சுந்தரேசன். மடப்பள்ளிக்குள் நுழைந்த குண்டோதரன் ஒரு நிமிடத்தில் அனைத்தை யும் சாப்பிட்டு விட்டு, ஐயோ! பசி பொறுக்க முடியவில்லையே! திருமண வீட்டுக்கு வந்தவர்களுக்கு வயிற்றுக்குச் சோறிட வேண்டாமோ, என புலம்பினான். மீண்டும் சமையல் செய்யப்பட்டது. அதுவும் கணநேரத்தில் காலியாகி விட்டது. மீனாட்சியும் அரண்மனையில் இருந்த மற்றவர்களும் அதிசய அதிர்ச்சியை அடைந்தனர்.இதென்ன புதுமை! ஒரு தனிநபரால் இப்படி உணவுண்ண முடியுமா! இவன் வாயைத் திறந்ததும் எல்லாமே தானாக வயிற்றுக்குள் போய் விடுகிறதே! மீண்டும் மீண்டும் சமைத்து ஓய்ந்துவிட்டனர் சமையல்காரர்கள். அரண்மனையில் வாங்கி வைத்திருந்த சமையல் பொருட்கள் அத்தனையும் காலி. மீனாட்சிக்கு இதில் ஏதோ சூட்சுமம் இருப்பது புரிந்து விட்டது.

வெள்ளியம்பல திருக்கூத்தாடிய படலம்!

வெள்ளியம்பல திருக்கூத்தாடிய படலம்!

எம்பிரானுக்கும், தடாதகை பிராட்டியாருக்கும் திருமணம் இனிதே நிறைவுபெற்ற பின் திருமண விருந்து துவங்கியது. திருமணத்துக்கு வந்தவர்களையெல்லாம் விருந்துண்ண சுந்தரேசர் அழைத்தார். இருவரை தவிர எல்லோரும்  விருந்துண்ண  சென்றனர். அவர்கள் தான் சாஸ்திரங்களில் தேர்ந்த பதஞ்சலி முனிவரும்,  பக்தியில் முதிர்ந்த வியாக்ரபா முனிவரும்! அவர்கள் சிவபெருமானின் பாதம் பணிந்தனர். பதஞ்சலி முனிவர் சிவனிடம், சோமசுந்தரப் பெருமானே! நாங்கள் ஒரு உறுதி எடுத்துள்ளோம். அதாவது, தில்லையம்பலமாகிய சிதம்பரத்தில் நாங்கள் தங்கள் திருநடனக்கோலத்தை தரிசித்த பிறகே உணவு உண்போம். இங்கு என்ன செய்வதென தெரியவில்லை, என்றதும், அதற்கென்ன! அங்கு ஆடிய நடனத்தை இங்கும் ஆடுகிறேன். தாங்கள் இருவரும் கண்டுகளித்த பின் உணவருந்துங்கள், என்றார். முனிவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. சிவபெருமான் அவர்களை அழைத்துக் கொண்டு மதுரை கோயிலுக்குள் சென்றார். மேலும் சிவபெருமான் உலகனைத்தும் வடிவான விராட்புருடனுக்குத் தில்லைப் பதி இதயமாகும். மதுரையோ துவாத சாந்தத் தானம் என மொழிந்தார். இதைக் கேட்டு மகிழ்வுற்ற முனிவர்கள் வேந்தர் வேந்தே! பிறஉறுப்புகள் எது என தெளிவாக விளக்குங்கள் என கூறினர்.

இறைவடிவான சுந்தர பாண்டியர் கூறியதாவது மூலதாரமான இப்பூவுலகிலே எல்லையற்ற இறைத்தன்மைத் தானங்கள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைக் கேளுங்கள். திருவாரூர் மூலதாரத் தானம், திருவானைக்கா சுவாதிட்டானத் தானம், திருவண்ணாமலை நாபி, தில்லைபதி இதயம், திருக்காளத்தி கண்டம், காசித் தலம் புருவமத்தியம், திருக்கயிலாயம் பிரமநாடி, இந்த மதுரைப் பதி துவாத சாந்தத்தானம். இது எவ்வாறு சிறந்ததென்று கேட்பீர்களானால், அது முன்னர் தோன்றிய முறையால் என்று தெளிந்த விளக்கத்தினை எடுத்து இயம்பினார். அதன் பின் அனைவரும் கோயிலுக்குள் சென்றார்கள். அங்கே ஓர் அற்புதத்தை அவர்களுக்கு நிகழ்த்திக் காட்டினார் சிவபெருமான். இந்திரனால் அமைக்கப்பட்ட தங்க விமானத்தின் கீழ், ஒளி பொங்கும் வெள்ளி அம்பலம் ஒன்றை உருவாக்கினார். பளபளவென மின்னிய அந்த அரங்கத்தில் மாணிக்க பீடம் ஒன்று வந்து அமர்ந்தது. கோடி சூரியர்கள் ஒரே சமயத்தில் உதித்தாற் போல் குருபரன் தோன்றினார். மனம், மொழி, பக்கம், மேல், கீழ், முன், பின் என்ற இவைகளைக் கடந்த மெய்ஞ்ஞானப் பேரொளி வடிவே அது. சிவகணங்கள் முழக்க, நந்தி தேவர் மத்தளம் அடிக்க, திருமால் இடக்கை முழக்க, தும்புரு நாரதர் இசைபாட தேவர்கள் பூமழை பொழிய, கடல்நிற மேனி படைத்த செந்தீப்புறமயிர் முயலகண் மேல் வடவைத் தீப்போல் அவனது செங்கண்கள் பிதுங்கவும், சினங்கொள்ளவும் முதுகு முறியவும் வலது திருவடியை ஊன்றி சிவபெருமான் அந்த பீடத்தில் நின்று நடனமாடினார்.

திருக்கூத்தாடும் இடது திருவடித் தாமரையும், பத்துத் திருக்கரங்களும், வலக்கரம் ஐந்தில் அபய அத்தத்திலே சூலமும், மற்ற நான்கு கரங்களில் உடுக்கை, அம்பு, வாள், மழு என்பனவும் இடக்கரம் ஐந்தில் வரத அத்தத்திலே பாம்பும், மற்றைய நான்கு கரங்களில் அக்கினி, வில், கேடகம், தண்டு என்பனவும், திருநீலகண்டமும், சங்க குண்டலம் பூண்ட திருச்செவியும், விரித்த செஞ்சடையும், வெள்ளிய திருநீற்றொளித் திருமேனியும், முக்கண்களும், அரவக் கச்சையும், அம்மையார் ஒதுங்கி நிற்கும் பக்கமும், அவ்வம்மையார் மேல் வைத்த திருநோக்கமும் திருநகையும் தோன்றத் திருநடனம் செய்தருளினார். அந்த முனிவர்களும் மதுரை மாநகர மக்களும் இறைவனின் நடன காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர். பின்னர் பதஞ்சலி, வியாக்கிரபாத முனிவர்கள் கருணாமூர்த்தியைப் பாக்களால் பலபடப் பூசித்துப் போற்றி மகிழ்ந்தனர். பரந்தாமன் அம்முனிவர்களிடம் நீங்கள் இன்னும் விரும்பியது யாது? அதை யாம் நிறைவேற்றி வைப்போம் என வினவினார். உடனே அவ்விருவரும், எந்தையே! இத்திருக்கூத்துடனம் எப்பொழுதும் இவ்வெள்ளியம்பலத்துள்ளே நின்று எல்லோருடைய பாச பந்தங்களையும் போக்கி அருள் செய்தல் வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள். திருமண விழாக்களில் பிறர் நடனமாடி நாம் ரசிப்பது வழக்கம் தான்! ஆனால், இங்கோ மணமகனே நடனமாடினார். அந்தக் காட்சியைக் கண்ட பிறகு முனிவர்கள் உணவருந்தச் சென்றனர்.

தடாதகையாரின் திருமணப் படலம்!

தடாதகையாரின் திருமணப் படலம்!

உலகத்துக்கே ஒரு தாயை ஈன்றெடுத்துக் கொடுத்த காஞ்சனமாலையும், உலகத்தாயான தடாதகைபிராட்டியும் தங்கள் குல தலைமையை இழந்து அடைந்த கவலைக்கு அளவே இல்லை. அவருக்குரிய ஈமச்சடங்குகளை தடாதகையே முன்னின்று செய்தாள். தந்தையில்லாத வீடு... மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால் வீட்டுக்கு மருமகன் வந்துவிடுவார். தடாதகையை நல்லபடியாக பார்த்துக் கொள்வார். இவளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால் நல்லதென முடிவெடுத்து, மகளிடம் சொன்னாள் காஞ்சனமாலை. மகள் அவளிடம், அம்மா! ஒரு தாயாக இருந்து உனக்குரிய கடமையை நீ சொன்னாய். ஆனால், தந்தைக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவது எனது கடமை. தந்தையார் என்னிடம் சொன்னபடி நான் உலகமெங்கும் சுற்றி, அனைத்து தேசங்களையும் என் ஆட்சியின் கீழ் கொண்டு வரவேண்டியிருக்கிறது. நீ என்னை வாழ்த்தி வழியனுப்பு! திரும்பி வந்ததும், உன் விருப்பப்படியே திருமணம் நடக்கும், என்றாள். மகளின் விருப்பத்திற்கு தாயும் குறுக்கே நிற்கவில்லை. அமைச்சர் சுமதி போருக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். போர்க்கோலம் பூண்ட தடாதகை பிராட்டி, தாயிடம் நல்லாசி பெற்று புறப்பட்டாள். தாரை, தப்பட்டை ஆர்ப்பரிக்க, சங்குகள் முழங்க அவளது நால்வகைப் படையும் கிளம்பியது.

இவர்களது படையைப் பார்த்தவுடனேயே எதிரிகளெல்லாம் அஞ்சி, நடுங்கி அவளை சரணடைந்தனர். பூவுலகில் வெற்றிக்கொடி நாட்டி தடாதகை பிராட்டியார், தேவலோகத்திற்குச் சென்றாள். புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால், குழந்தை பிறக்குமென மலையத்துவஜனுக்கு வாக்களித்த இந்திரன், கலங்கிப் போனான். நமது யோசனையால் பிறந்த குழந்தையே, நம்மை நோக்கி படையெடுத்து வருகிறதே என அஞ்சி நடுங்கினான். பதவியை விட்டுவிட்டு, ஓடி ஒளிந்து கொண்டான். தடாதகை பிராட்டியார் தேவேந்திரனுக்குச் சொந்தமான சங்கநதி, பதுமநிதி, சிந்தாமணி, காமதேனு, கற்பகதரு போன்ற மிகப் பெரிய செல்வங்களையெல்லாம் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டாள். தேவ கன்னியர்களை தனக்கு பணிபுரிவதற்காக தன்னோடு வரச்சொன்னாள். பிறகு, கயிலை மலையையும் தன் வசமாக்கிக் கொள்வதற்காக படைகளுடன் அங்கு புறப்பட்டாள். தடாதகை பிராட்டியார் வாழ்க! அமைச்சர் சுமதி வாழ்க! என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது.கயிலையை அவள் அடைந்ததும், சிவபெருமான் அவளை முகம் மலர வரவேற்றார். தடாதகை  பிராட்டியார் மதுரையிலிருந்து கிளம்பியபோதே, சுந்தரேஸ்வர பெருமானும் அவள் அறியாவண்ணம் அவளது தேரிலேயே அமர்ந்து வந்தார் என்பதை, அவளால் உணர முடியவில்லை. இதை அறியாத நந்திதேவர், பிராட்டியாரின் படை கண்டு நடுங்கி நின்றார். இப்படி ஒரு படை வந்திருக்கிறதே! நம்மையே அடிமைப் படுத்த வந்துள்ள இந்தப் பெண் மணியை நீங்கள் வரவேற்கிறீர்களே! என் கட்டுக்காவலை மீறி இவர்கள் உள்ளே வந்துள்ளார்கள். இப்போது நாம் என்ன செய்வது? என சிவனிடம் யோசனை கேட்டார்.

சிவபெருமான் அவரிடம், போருக்கென வந்தவர்களிடம் மோதிப்பார்த்து விட வேண்டியதுதான். நீ நம் படைகளுடன் புறப்படு, என்றார். சக்திதேவியான தடாதகை பிராட்டியாரின் வீரத்தை உலகுக்கு உணர்த்துவதற்காக, சிவபெருமான் இப்படியொரு நாடகம் ஆடினார். நந்தி தேவரின் தலைமையில் புறப்பட்ட படைகள் அனைத்தும் தடாதகை பிராட்டியால் விரட்டியடிக்கப்பட்டன. சிவகணங்கள் ஓடி ஒளிந்து கொண்டனர். சூரியன், சந்திரன், அக்னி, வருணன் முதலான தேவர்களின் அஸ்திரங்களை எல்லாம் தடாதகை பிராட்டியார் அழித்தாள். பூதங்களின் வலிமை பிராட்டியின் வலிமை முன்னால் எடுபடவில்லை. வேறு வழியின்றி சிவபெருமானே அவளுடன் போர் செய்ய கிளம்பினார். அவர் அன்னையின் முன் வந்து நின்றதும், அந்த அதிசயம் நிகழ்ந்தது. அவளது தனங்களில் ஒன்று மறைந்தது. மன்மதனின் கணைகள் அவளைத் தாக்கியது போன்ற உணர்வு ஏற் பட்டது. ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, நாணத்தால் தலை குனிந்து நின்றாள் தடாதகை. அமைச்சர் சுமதி ஆச்சரியப் பட்டார். அவருக்கு தான் மீனாட்சியின் தன ரகசியம் தெரியுமே! எதிரே நிற்பது சிவபெருமான் என்பதும், அவளே அவரை மணந்து கொள்வார் என்பதும் தெரிந்து விட்டது. தடாதகை பிராட்டியார் குனிந்த தலைநிமிராமல், அவரது பாதத்தில் விழுந்தாள். அதுவரையில் இருந்த வீரம், காதலாக மாறிவிட்டது.

உலகையே வென்று நம் கைக்குள் கொண்டு வந்தாலும், மனிதன் இறைவனிடமே அடைக்கலமாக வேண்டும் என்பதை உணர்த்தியது இந்தக் காட்சி. சிவபெருமான் அவளைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். பின்னர் மீனாட்சி மதுரை திரும்பினாள். தாய் காஞ்சனமாலை வெற்றிக்கனி பறித்து வந்த மகளை வரவேற்றாள். உலகை வென்றதுடன், ஈசனின் இதயத்தையும் தன் மகள் வென்று வந்தாள் என்ற செய்தியறிந்து, மகளுக்கு மணநாள் குறிக்க ஏற்பாடு செய்தாள். இறைவனுக்கே திருமணம் நடத்தி வைக்கும் பாக்கியம் கிடைத்தது குறித்து அமைச்சர் சுமதி ஆனந்தம் கொண்டார். திருமண பட்டோலை எழுதி, பல தேசத்து மன்னர்களுக்கும் அனுப்பினார். மதுரை மக்களுக்கு தடாதகை பிராட்டி யாருக்கு திருமணம் நடக்க இருப்பது குறித்து முரசறைந்து அறிவிக்க ஏற்பாடு செய்தார். மக்கள் மகிழ்ந்தனர். தங்கள் வீட்டு திருமணம் அல்லவா? நகரை அவர்கள் அலங்கரித்த விதம் அலாதியாக இருந்தது. தங்கள் வீடுகளை சுத்தம் செய்து வண்ண ஓவியங்களைத் தீட்டினர். நகர் முழுவதும் கமுகு, வாழை மரத்தோரணங்களைக் காண முடிந்தது.இறைவனுக்கு அம்பாளின் அவதாரமான தடாதகை பிராட்டியுடன் நடக்கப் போகும் திருமணத்துக்கு முனிவர்களும், தேவர்களும் வந்து சேர்ந்தனர். சிவபெருமானுக்கும், தடாதகை பிராட்டியாருக்கும் செய்யப் பட்ட அலங்காரத்தை சொல்லி மாளாது. தடாதகை பிராட்டி தன் மக்களை மீன் போல் பாதுகாத்தவள். அதாவது, மீன்கள் தங்கள் கண்களாலேயே குஞ்சுகளுக்கு உணவூட்டுபவை. சற்றும் இமைக்காதவை. இக்காரணத்தால், எங்கள் மீனாட்சிக்கு கல்யாணம் என மக்கள் ஆரவாரம் செய்தனர்.

 அந்த மீனாட்சிக்கு சரஸ்வதியும், லட்சுமியும் வந்திருந்து அலங்காரம் செய்தனர். ஊர் மகிழ்ந்திருந்த வேளையில், காஞ்சனமாலைக்கு மட்டும் கண்ணீர் வழிந்தது. இதையெல்லாம் பார்க்க தன் கணவர் மலையத்துவஜன் இல்லையே என்று! தந்தையில்லாத மீனாட்சிக்கு தந்தையாயும், தமையனாயும் இருந்து திருமணத்தை நடத்தி வைக்க அந்த மகாவிஷ்ணுவே வந்துவிட்டார். ஈசனுக்கு பட்டு அங்கவஸ்திரம், விதவிதமான நகைகள் அணிவிக்கப்பட்டு மிக அழகாக இருந்தார். இவரல்லவோ சுந்தரன் என்று மக்கள் ஆனந்தமாகப் பேசினர். சுந்தர ஈஸ்வரன் எங்கள் மீனாட்சியின் கரம் பற்ற வந்துள்ளான், என புகழ்ந்தனர். இதனால் சிவபெருமானுக்கு சுந்தரேஸ்வரன் என்ற பெயர் உண்டாயிற்று. அமைச்சர் சுமதி ஆனந்தக் கண்ணீர் வழிய நின்றிருந்தார். மணமேடைக்கு மணமக்கள் வந்தனர். அவர்கள் மாலை மாற்றி  கொண்டனர். பிரம்மா வேதமந்திரம் முழங்க, திருமால் தாரை வார்த்துக்கொடுக்க, மணமகளுக்கு திருமாங்கல்யத்தை அணிவித்தார் சுந்தரேசர். அவளது பாதத்தில் மெட்டி அணிவித்தார். எங்கும் பூ மழை பொழிந்தது. மீனாட்சி அம்மியில் கால் வைக்கவும், திருமணத்துக்கு வந்திருந்த வசிஷ்டரின் மனைவி அருந்ததி தேவி, மீனாட்சியின் முன்னால் வந்து நின்று, தங்களின் பார்வை என் மீது பட நான் இங்கே காத்திருக்கிறேன், என்று தலை வணங்கி கைகூப்பி நின்றாள். அருந்ததிக்கு ஈசனும், பிராட்டியும் அருள் செய்தனர். மதுரையிலேயே தங்கி, தன் மகளுடன் நல்லாட்சி செய்ய வேண்டுமென காஞ்சனமாலை இறைவனிடம் வேண்டிக் கொண்டாள். இறைவனும் அந்தக் கோரிக்கையை ஏற்றார். மீனாட்சியுடன் இணைந்து மதுரை நகரை அரசாள முடிவெடுத்தார்.

வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்!

வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்!

இந்திரனின் வாகனமான ஐராவதம் அவனுக்காக காத்து நின்றது. கருடனால் பாம்பை பிடிக்க முடியும்... ஆனால், அது பரமசிவன் கழுத்தில் இருந்தால் கருடனால் நெருங்க முடியுமா! அதுபோல் தான் ஊரில் எத்தனை யானை இருந்தாலும், ஐராவத யானை வெள்ளை நிறம் என்பதால், அதற்கு மிகவும் கர்வம்.அகம்பாவிகளுக்கு என்றாவது ஒருநாள் அடி விழும். அப்படி ஒரு சோதனை ஐராவதம் யானைக்கும் ஏற்பட்டது. இந்திரன் தேவலோகம் வந்ததும், அவனை ஏற்றிக் கொண்டு இந்திரபுரிக்குள் அட்டகாசமாக நுழைந்தது. துர்வாசர் என்ற மகரிஷி இருந்தார். அவருக்கு ஒழுக்கம் ரொம்ப முக்கியம். சிறிது பிசகலாக பேசினாலோ, நடந்தாலோ கூட மூக்கு மேல் கோபம் வந்துவிடும். அப்படிப்பட்ட கோபக்காரரிடம் அந்த யானை மாட்டிக் கொண்டது. அன்று துர்வாசர் சிவபெருமானை மலர் தூவி வணங்கினார். அவரது பக்திக்கு மகிழ்ந்த ஈசன், தன் ஜடையில் இருந்த பொற்றாமரை ஒன்றை கீழே விழும்படி செய்தார். இறைவன் தந்த அந்த பிரசாதத்தை எடுத்து முனிவர் தன் கமண்டலத்தில் வைத்துக் கொண்டார். இந்திரனை தேவர்கள் ஆரவாரமாக அழைத்து வந்து கொண்டிருந்தனர். இவ்வளவு அடிபட்டும் இந்திரனுக்கு அலட்சிய குணம் மட்டும் மாறவில்லை. மேலும் விருத்திராசுரனையே வென்று விட்டோமே என்ற மமதையுடன் வந்தான். எதிரே வந்த துர்வாசர், அவன் நீடுழி வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் கமண்டலத்தில் இருந்த பொற்றாமரையை அவனிடம் கொடுத்தார். பிரசாதம் வாங்கும் போது பணிவு வேண்டும்.

இந்திரன் சற்றும் பணிவின்றி அந்த தாமரையை அலட்சியமாக வாங்கி அதை யானையின் மத்தகத்தின் மீது வைத்தான். யானை அதை தும்பிக்கையால் எடுத்து கால்களில் போட்டு மிதித்து விட்டது. துர்வாசர் நெருப்பு பொங்கும் கண்களுடன் இந்திரனையும், யானையையும் பொசுக்கி விடுவது போல பார்த்தார். தேவேந்திரா... என்று அவர் கோபத்தில் எழுப்பிய சப்தம் அந்த பிரதேசத்தையே கிடுகிடுக்கச் செய்தது. விட்டது வினை என்று இங்கு வந்தால் இந்த துர்வாசரிடம் சிக்கிக் கொண்டோமே என்று இந்திரன் நடுங்கினான். அவன் எதிர்பார்த்தபடியே துர்வாசர் சாபமிட்டார். ஏ இந்திரா! கடம்பவன நாதனான எம்பிரானின் பிரசாதத்தையா அலட்சியம் செய்தாய்! அதை மரியாதையுடன் பெற்றிருந்தால், உன் நிலையே வேறு விதமாக இருந்திருக்கும்! ஆனால், கேடு கெட்ட இந்த யானையிடம் கொடுத்தாய். அது காலில் போட்டு மிதித்தது. தேவனாகிய நீ பூலோகத்தில் பாண்டிய மன்னன் ஒருவனிடம் தோற்றுப் போவாய். அவனுடைய சக்கராயுதம் உன் தலையைக் கொய்து விடும், என்றார். தேவேந்திரனும் தேவர்களும் நடுங்கி விட்டனர். யானையில் இருந்து குதித்த இந்திரன், ஐயனே! அறியாமல் செய்த பிழையை மன்னிக்க வேண்டும். ஏற்கனவே பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டு பல்லாண்டுகள் பூலோகத்தில் வாடிக்கிடந்த நான் மீண்டும் பூலோகம் செல்வதா? அதிலும், ஒரு மானிடனிடம் தோற்றுப்போவதா? ஐயோ! இதை விட வேறென்ன கொடிய தண்டனையை நான் பெற முடியும்? தவங்களில் சிறந்தவரே! என்னை மன்னியும், என்றான். தேவர்கள் எல்லாருமே கிரீடங்கள் தலையில் பதியும்படி அவர் காலில் விழுந்து கிடந்தனர்.

துர்வாசர் இதுகண்டு மனம் மாறினார். கோபம் உள்ள இடத்தில் தானே குணமும் இருக்கும்! அவர் இந்திரனிடம், இந்திரா! கொடுத்த சாபத்தை திரும்பப் பெற இயலாது. இருப்பினும், பாண்டிய மன்னன் பயன்படுத்தும் சக்ராயுதம் உன் தலையைக் கொய்ய வரும்போது, அது உன் கிரீடத்தை மட்டும் பறித்துச் செல்லும் நிலை வரும். தலைக்கு வருவது தலைப்பாகையோடு போகும், என்றவர் யானையைப் பார்த்தார். ஏ ஐராவதமே! பெரியவர்களிடம் பணிபுரிபவர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதற்கு உன் வாழ்க்கை இந்த உலகத்துக்கு பாடமாக இருக்க வேண்டும். உன் வெள்ளை நிறம் அழிந்து போகும். தேவலோக யானையான நீ, பூலோகம் சென்று காட்டுக்குள் பிற யானைகளுடன் கலந்து, புழுதி படிந்து நூறாண்டு காலம் திரிவாய். பின்னர், இந்திர லோகத்தை அடைவாய், என சாபமிட்டார். வெள்ளை யானை கண்ணீர் வடித்தது. பின்னர் அது பூலோகம் வந்து பல இடங்களிலும் சுற்றித் திரிந்தது. ஒருவழியாக நூறாண்டுகள் கடந்தன. பல வனங்களில் சுற்றிய அந்த யானை, கடம்ப வனத்துக்குள் புகுந்தது. அதுவே இந்திரனால் உருவாக்கப்பட்ட மதுரையம்பதி. அங்கிருந்த சொக்கலிங்கத்துக்கு அது பொற்றாமரைக் குளத்தில் இருந்து தும்பிக்கையில் தண்ணீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்தது. தங்கத் தாமரைகளைப் பறித்து வந்து தூவி வழிபட்டது. அந்த யானையின் மீது இரக்கம் கொண்ட சொக்கநாதர் அதன் முன் தோன்றினார். ஐராவதமே! நீ செய்த சிவஅபச்சாரம் நீங்கியது. நீ இந்திரலோகம் திரும்பலாம்,என்றார். யானை சிவனிடம், எம்பெருமானே! இந்த வனத்தின் அழகில் நான் மெய்மறந்து விட்டேன். மேலும் தங்களைப் பிரிய எனக்கு மனமில்லை. நான் இந்த வனத்திலேயே இருக்கிறேனே! தங்கள் விமானத்தை (கருவறைக்கு மேலுள்ள கோபுரம் போன்ற அமைப்பு) தாங்கும் யானைகளில் ஒன்றாக என்னையும் கொள்ள வேண்டும், என்றது. சிவபெருமான் அதனிடம், ஐராவதமே! இந்திரன் எனது பக்தன். அவனைச் சுமந்தால் என்னையே சுமப்பது போலாகும். நீ இந்திரலோகத்திற்கே செல், என்றார். மேலும், அதன் சுயவடிவத்தையும் தந்தார்.அந்த யானைக்கோ கடம்பவனத்தை விட்டு செல்ல மனமில்லை. அது கடம்பவனத்தின் ஒரு பகுதிக்குச் சென்று அங்கிருந்த ஒரு லிங்கத்திற்கு பூஜை செய்து அங்கேயே தங்கி விட்டது. வெள்ளை யானை வந்து தங்கிய அந்த இடத்துக்கு அதன் பெயரான ஐராவதநல்லூர் என்று அமைந்தது. பின்னர், இந்திரன் அந்த யானை பற்றி அறிந்து வந்து அதை அழைக்க வந்தான். சிவபெருமானிடம் யானையின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தான் எழுப்பிய விமானம் தன் பெயரால் இந்திர விமானம் என அழைக்கப்பட வேண்டும் என்றும், வெள்ளை யானை தன்னைத் தாங்குவது போல், அந்த விமானத்தையும் ஐராவதமே எட்டு வடிவங்களில் தாங்குவது போன்ற தோற்றம் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். அதன்படியே, எட்டு வெள்ளை யானைகள் மதுரை சொக்கநாதரின் விமானத்தை தாங்கியுள்ள காட்சியை இப்போதும் காணலாம்.

ஆண்டாள்

ஆழ்வார்களும் அவதாரமும்

6. ஆண்டாள்

பிறந்த இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
தந்தை : பெரியாழ்வார் (வளர்ப்புத்தந்தை)
பிறந்த காலம் : 9ம் நூற்றாண்டு நள ஆண்டு ஆடி மாதம்
நட்சத்திரம் : ஆடி பூரம் (வளர்பிறை சதுர்த்தசி திதி)
கிழமை : செவ்வாய்
எழுதிய நூல் : திருப்பாவை, நாச்சியார் திருவாய்மொழி
பாடிய பாடல் : 173
சிறப்பு : கரும்பார் குழல் கோதை என்ற சிறப்பு பெயர் பெற்றவள், திருமாலின் மனைவியாகும் பாக்கியம் செய்தவள். (பூமிப்பிராட்டியாம்சம்)
பிற பெயர்கள் : கோதைப்பிராட்டி, சூடிக்கொடுத்த நாச்சியார்

ஸ்ரீ வில்லிபுத்தூர் நந்தவனத்தில் ஒரு துளசி செடியின் அடியில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் மகாலட்சுமியே ஆண்டாளாக அவதாரம் செய்தார். பெரியாழ்வார் இந்த நந்தவனத்திற்கு வந்தபோது ஆண்டாளை எடுத்து சுரும்பார் குழற்கோதை என்ற பெயரிட்டு வளர்த்து வந்தார். அந்த நந்தவனத்தின் மலர்களை தினமும் பறித்து மாலையாக தொடுத்து ரெங்கமன்னாருக்கு வழங்குவது ஆழ்வாரின் முக்கியப்பணியாகும். மாதவனின் தோளைத் தழுவும் அந்த மாலையை அவர் மீது கொண்ட காதலால் ஆண்டாள் தம் கழுத்தில் அணிந்து அழகு பார்த்து அதன் பின் பெருமாளுக்கு அனுப்பி வைப்பாள். ஒரு முறை பெருமாள் அணிந்திருந்த மாலையில் நீண்ட முடி இருப்பதை கண்ட அர்ச்சகர்கள் அதை எறிந்து விட்டு வேறுமாலை கொண்டு வரும் படி ஆழ்வாரிடம் கூறிவிட்டனர். பகவானின் சேவையில் தவறு வந்து விட்டதே என்று ஆழ்வார் வருந்தினார். மறுநாளும் மாலை தொடுத்து ஆண்டவனுக்கு அனுப்பும் சமயத்தில் அந்த மாலையை ஆண்டாள் அணிவதை கண்டார். ஆண்டாளை கண்டித்தார். அன்று இரவே பெருமாள் ஆழ்வாரின் கனவில் தோன்றி ஆண்டாள் சூடிய மாலையையே தனக்கு அணிவிக்கும்படி கூறினார். அது முதல் ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் பூமாலை மட்டுமின்றி பாமாலையும் சூடி மகிழ்ந்தாள். ஸ்ரீ ரங்கப்பெருமாளை திருமணம் செய்வதற்காக ஆண்டாள் மார்கழியில் நோன்பிருந்து பக்தியின் சாரமாக திருப்பாவையும். காதலின் வரமாக நாச்சியார் திருமொழியையும் காதலின் வீரமாக நாச்சியார் திருமொழியையும் பாடினார். தன் தந்தையிடமும் இந்த தெய்வீக திருமணம் பற்றி கூறினார். ஆழ்வாரும் ஆண்டாளை பல்லக்கில் ஏற்றி வந்தார். இதைக்கேள்விப்பட்ட பாண்டிய மன்னன் ஆண்டாள் திருமணத்தை சிறப்பாக நடந்த ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஸ்ரீரங்கம் வரை அலங்கரிக்க ஏற்பாடு செய்தார். காவிரியின் தென்கரையில் இறங்கி அங்கிருந்து நடந்து செல்ல ஆண்டாள் விருப்பப்பட்டாள். ஆண்டாள் பாதம் வலிக்குமே என்றெண்ணிய ரெங்கநாதர் அவளை தன் மார்பில் வீற்றிருக்கும்படியாக செய்தார். பங்குனி உத்திர நன்னாளில் ஆண்டாள் ரெங்கநாதர் திருமணம் சிறப்பாக நடந்தது. பெருமாளின் 108 திருப்பதிகளில் ஆண்டாள் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 10 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.


திங்கள், 9 நவம்பர், 2020

பெரியாழ்வார்

ஆழ்வார்களும் அவதாரமும்
        5. பெரியாழ்வார்

பிறந்த இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
தந்தை : முகுந்தர்
தாய் : பதுமவல்லி
பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டு குரோதன ஆண்டு ஆனி மாதம்
நட்சத்திரம் : ஆனி சுவாதி (வளர்பிறை ஏகாதசி திதி)
கிழமை : திங்கள்
எழுதிய நூல் : பெரியாழ்வார் திருமொழி
பாடிய பாடல் : 473
சிறப்பு : திருமாலின் வாகனமான கருடனின் அம்சம்
பிற பெயர்கள் : பட்டநாதன், பட்டர்பிரான், விஷ்ணுசித்தன், ஸ்ரீவில்லிபுத்தூரார், ஸ்ரீரங்கநாதஸ்வஸுரர்

பெரியாழ்வாரின் இயற்பெயர் விஷ்ணு சித்தர். ஸ்ரீ வில்லிபுத்தூரில் வடபத்ரசாயிக்கு தினமும் மாலை தொடுத்து சூட்டுவதை தன் முக்கிய பணியாக கொண்டிருந்தார் இவர். அக்காலத்தில் மதுரையில் அரசனான வல்லபதேவ பாண்டியன் நகர சோதனை வரும் போது ஒரு வேதியர் திண்ணையில் படுத்திருப்பதை கண்டு ஒரு நல்ல வார்த்தை சொல்லும் படி கேட்டார். அந்த வேதியரும் மழைக்காலத்துக்காக மற்ற எட்டு மாதங்களிலும் இரவுக்காகப் பகலிலும். கிழப்பருவத்திற்காக வாலிபத்திலும், மறுமைக்காக இம்மையிலும் முயற்சிக்க வேண்டும் என்ற சுலோகத்தை சொன்னார். மன்னனும் தம் அரசவையிலுள்ள செல்வ நம்பி என்ற அந்தணரிடம் இது பற்றி கூறினார். அதற்கு செல்வ நம்பி பரத்வ நிர்ணயம் பண்ணி அதனடியாகப் பேறு பெற வேண்டும் என்று கூறினார். ஸ்ரீ வில்லிபுத்தூரில் பெருமாள் விஷ்ணு சித்தர் கனவில் தோன்றி மதுரையில் நடந்த சம்பவத்தை கூறி உனக்குத்தான் பொற்கிழி சென்று வாரும் என்றார். அதற்கு விஷ்ணு சித்தர் கல்லாதவனான என்னால் முடியுமா ? என்று கேட்க பெருமாளும் இதற்கு நானே பொறுப்பு என்றார். விஷ்ணு சித்தர் மதுரை சென்று பாண்டியன் அரசவையில் வேதங்கள் பாடி ஸ்ரீமன் நாராயணனே பரன் (முதல்வன்) என்று நிலை நாட்டினார். பொற்கிழி தோரணம் தாழ அதனை எடுத்துக் கொண்டார். எல்லோரும் பாராட்டி ஆழ்வாரை யானை மீது ஏற்றி வீதி வலம் வந்த போது இக்கோலத்தை ரசிக்க பெருமாள் பிராட்டியுடன் கருடன் மீதமர்ந்து ஆகாயத்தில் தோன்றி ஆழ்வாருக்கு காட்சியளித்தார். ஆழ்வார் மருண்டார். நல்ல காலத்திலேயே இம் மண்ணுலகில் தீங்கு செய்வர். இக்கலியிலே முகம் காட்டுகிறானே, இதனால் கண்திருஷ்டி பட்டு விடுமோ என்று பொங்கும் பரிவால். யானை மீதுள்ள மணிகளை ஒலித்து கொண்டு பல்லாண்டு பல்லாண்டு என்று மங்களாசாசனம் பண்ணினார். எனவே தான் ஆழ்வார்களிலே பெரியாழ்வார் எனப்பட்டார். பொற்கிழியை கொண்டு ஸ்ரீ வில்லிபுத்தூர் பெருங்கோயிலுக்கு சமர்ப்பித்து மீண்டும் தொண்டு செய்தார். கண்ணன் லீலையை முற்றும் அனுபவித்து அதன் விளைவாக பெரியாழ்வார் திருமொழி என்ற பிரபந்தத்தை வெளியிட்டார். பெரியாழ்வாரின் வம்சத் தோன்றல்கள் வேதப்பிரான் பட்டர்கள் என்ற திருநாமத்துடன் இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்து வருகிறார்கள். பெருமாளின் 108 திருப்பதிகளில் பெரியாழ்வார் தனியாக சென்று 2 கோயில்களையும் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 17 கோயில்களையும் என மொத்தம் 19 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.


அப்பர்


இவர் சொல்றத கொஞ்சம் கேளுங்க

யார் அவர்? அவர் தான் அப்பர் பிரான். இரவும், பகலும் எந்நேரமும் ஏதோ ஒன்றின் பின்னால் அலைந்து கொண்டு இருக்கிறோம்.  பணம், புகழ், ஆசை, பொறாமை, காமம், பதவி என்று ஐந்து புலன்களும் நம்மை அங்கும் இங்கும் அலைக்கழிக்கின்றன. ஒரு நிமிடம் நிற்க விடுவது இல்லை.

என்ன தான் செய்வது?  எல்லாவற்றையும் விட்டு விடலாம் என்றால் அதுவும் முடிவது இல்லை. வைத்துக் கொண்டு அல்லாடாவும் முடியவில்லை. ஒரு சில சமயம் இன்பமாக இருப்பது போல இருந்தாலும், துன்பமே மிகுதியாக இருக்கிறது. இப்படி கிடந்து  உழல்வது தான் நமக்கு விதித்த விதியா? இப்படியே போய் கொண்டிருந்தால் இதற்கு என்ன தான் முடிவு.

நாவுக்கரச பெருமான் சொல்கிறார்...

"இரவும் பகலும் ஐந்து புலன்கள் நம்மை அரித்துத் தின்ன இந்த துன்பத்தில் இருந்து எப்படி விடுபடுவோம் என்று நினைத்து ஏங்கும் மனமே உனக்கு ஒன்று சொல்வேன் கேள். "திருச்சிராப்பள்ளி" என்று சொல். நீ செய்த தீவினை எல்லாம் உன்னை விட்டு முன்னே நடந்து போய் விடும்" என்று.

பாடல்

அரிச்சி ராப்பக லைவரா லாட்டுண்டு
சுரிச்சி ராதுநெஞ் சேயொன்று சொல்லக்கேள்
திருச்சி ராப்பள்ளி யென்றலுந் தீவினை
நரிச்சி ராது நடக்கும் நடக்குமே.

சீர் பிரித்த பின் அரித்து இராப் பகல் ஐவரால் ஆட்டுண்டு சுரிச்சிராது நெஞ்சே ஒன்று சொல்லக்கேள்
திருச்சிராப்பள்ளி  என்றலும்  தீவினை நரிச்சு இராது நடக்கும் நடக்குமே.

பொருள்

அரித்து = அரித்து

 இராப் பகல் = இரவும் பகலும்

ஐவரால் = ஐந்து புலன்களால்

ஆட்டுண்டு  = ஆட்டப்பட்டு

சுரிச்சிராது = துக்கப்படாமல்

நெஞ்சே  = நெஞ்சே

ஒன்று சொல்லக்கேள் = ஒன்று சொல்வேன் கேள்

திருச்சிராப்பள்ளி = திருச்சிராப்பள்ளி

 என்றலும் = என்று சொன்னால்

 தீவினை = செய்த தீய வினைகள் எல்லாம்

நரிச்சு இராது = கூடவே இருக்காமல்

நடக்கும் நடக்குமே = மெல்ல மெல்ல நடந்து சென்று விடும் (உன்னை விட்டு)

"திருச்சி" அப்படினு சொன்னா போதுமா? ஏன் திருச்சி, வேற ஊர் பேர் சொல்லக் கூடாதா ?

பெயர் அல்ல முக்கியம். எப்போதும் புலன்கள் பின்னால் அலைவதை விடுத்து மனதை நல்ல வழிகளில்  திசை திருப்பச் சொல்கிறார். புலன் இன்பம் மட்டுமே வாழ்க்கை அல்ல.  அது கொஞ்சம் கொஞ்சமாக நம் வாழ்வை அரித்து விடும். துன்பத்தையே தரும். அதை அறிந்து கொண்டு, மனதை திசை திருப்பச் சொல்கிறார். பெரியவர்கள் சொல்லும் போது ஏதோ ஒரு மந்திரத்தைச் சொல் கடவுள் பெயர், ஊர் பெயர், என்று ஏதாவது ஒன்றை பிடித்துக் கொள் என்பார்கள்.

நம்மவர்கள் உடனே ஏன் அந்த சாமிப் பெயர், எதுக்கு அந்த ஊர், அதில் இன்னார் பெரிய  உயர்வு என்று சண்டை பிடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஏதாவது ஒரு ஊர் பெயரைச் சொல் என்றால் எந்த ஊர் என்ற கேள்வி வரும். இப்படி மனம் கிடந்து அலைந்து திரியும். காரியம் நடக்காது. எனவே தான், ஒன்றை பிடித்துக் கொள் என்கிறார்கள். அது உயர்ந்தது என்பதற்காக அல்ல. எல்லாவற்றையும் தூக்கிப் போட்டால் எதை எடுப்பது எதை விடுவது என்று நாம் குழம்பிப் போவோம் என்பதற்காக. உங்கள் மனதில் எது படுகிறதோ எது இலயிக்கிறதோ அதைச் சொல்லுங்கள்.

"உலகம் யாவையும் தாமுளவாக்கலும்"

தான் உள்ளே இருக்கும் படி இந்த உலகைச் செய்தான். அனைத்திலும் அவன் இருக்கிறான் என்கிறபடியால், எதை வேண்டுமானாலும் நினைக்கலாம்.

எளிமையான பாடல்கள் என்பதால், நாம் சிலவற்றை கடந்து போய் விடுகிறோம். எல்லாவற்றிலும் பொருள் உண்டு.

"முறுக வாங்கிக் கடைய, முன் நிற்குமே"
நம்பிகள் நாமம் வளர்க