புதன், 4 நவம்பர், 2020

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இவற்றை தெரியுமா?

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இவற்றை தெரியுமா?

மீனாட்சி அம்மனின் மற்றொரு பெயர் அங்கயற்கண்ணி, மீனாட்சி அம்மனின் அப்பா, அம்மா மலயத்துவசன், காஞ்சனமாலை, மீனாட்சி அம்மனின் சிலை மரகதக்கல்லினால் ஆனது. மீனாட்சி அம்மன் வலது கையில் கிளி வைத்திருப்பார், மீனாட்சி அம்மன் கோயில் குளத்தின் பெயர் பொற்றாமரைக் குளம், மீனாட்சி அம்மன் கோயில் விமானத்தின் பெயர் இந்திர விமானம். பஞ்ச சபைகளில் மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள சபையின் பெயர் வெள்ளியம்பல சபை. மீனாட்சி அம்மன் கோயிலில் கால் மாறி நடனமாடியவர் நடராஜர். மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள மிகப்பெரிய விநாயகர் பெயர் முக்குறுணி விநாயகர். மதுரையில் சிவபெருமானுக்குத் தொண்டு செய்த நாயன்மார் மூர்த்தி நாயனார், நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என கூறியவர் நக்கீரர். மீனாட்சி அம்மன் கோயிலிலுள்ள கோபுரங்கள் எத்தனை ? 14 கோபுரங்கள். மீனாட்சி அம்மன் கோயிலின் மிக உயரமானது தெற்கு கோபுரம். மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள புகழ்பெற்ற மண்டபம் எது? ஆயிரங்கால் மண்டபம் நவகிரக ஸ்தலங்களில் மீனாட்சி அம்மன் கோயில் புதன் ஸ்தலமாகும்.

மீனாட்சி குங்குமத்தில் காந்தம்: மதுரை மீனாட்சி குங்குமம் காந்தசக்தி மிக்கது என்கிறார் இங்கிலாந்து அறிஞர் சார்லஸ் டபிள்யூ லெட்பீட்டர். இவர் ஒருமுறை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகை தந்தார். அங்கே அவருக்கு குங்கும பிரசாதம் கொடுத்தார்கள். அடுத்து, சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு சென்ற போது விபூதி தரப்பட்டது. இதை ஏன் இந்திய மக்கள் நெற்றியில் இட்டுக் கொள்கிறார்கள் என்பதை அறிய அவருக்கு ஆவல். உடனே, அதை பரிசோதனை செய்தார். அவற்றிலிருந்து காந்தசக்தி வெளிப்பட்டதை உணர்ந்தார். இது என் வாழ்வில் நான் கண்ட அதிசயம் எனதான் எழுதிய தி இன்னர் லைப் என்ற புத்தகத்தில் எழுதினார். இதை விட அதிசயம் ஒன்று உண்டு என்றும் அவர் சொல்கிறார். சில ஆண்டுகள் கழித்தபிறகு, அந்த குங்குமம், விபூதியை பரிசோதனை செய்தார். அப்போதும், முன்பு கண்ட அதே அளவு காந்தசக்தி சற்றும் குறையாமல் வெளிப்படுவது கண்டு அசந்து போனார். இப்படி ஓர் அதிசயத்தை நான் எந்த நாட்டிலும் கண்டதில்லை என்று அவர் எழுதி வைத்திருக்கிறார். நாம், மீனாட்சி குங்குமத்தை கோயில் தூண்களில் கொட்டி வைத்து பாழாக்கிக் கொண்டிருக்கிறோம். இனிமேலாவது, அன்னையின்  குங்குமத்தை அளவோடு வாங்கி, பூஜையறையில் பத்திரமாக வைப்போம். அன்னையின் அருட்கடாட்சம் என்று நிலைத்திருக்கச் செய்வோம்.


சாப்பாட்டை சிந்தக்கூடாது.... ஏன் தெரியுமா?

சாப்பாட்டை சிந்தக்கூடாது.... ஏன் தெரியுமா?

தனக்கு தேவையான உணவை தானே சமைத்துக் கொள்வதை சுயம்பாகம் என்பர். மற்றவர்கள் சமைக்கும் உணவை விட இது உயர்வானது. ஏனென்றால், சமைப்பவரின் எண்ணங்கள் சமையலைப் பாதிக்கும். சமைக்கும்போது, தெய்வ சம்பந்தமாகவே கடவுளின் திருநாமத்தைச் சொல்லிக் கொண்டே சமைக்க வேண்டும். சாப்பிடும்போது, நான் உண்ணும் இந்த உணவைக் கடவுளுக்கு அர்ப்பணிக்கிறேன், என்று சொல்ல வேண்டும்.நாம் உண்ணும் அன்னமும் சிவன். அதை ஜீரணிக்கும் அக்னியும் சிவன். அதை சாப்பிடுபவனும் சிவன். அதனால் அடையப்போகும் லட்சியமான கடவுளும் சிவன், என்கிறார் காஞ்சி பெரியவா அதாவது, சாப்பாட்டை தெய்வமாகவே மதிக்க வேண்டும். அதனால் தான் குழந்தைகள் சாப்பிடும் போது, சிந்தாமல் சிதறாமல் சாப்பிடு, என கற்றுக் கொடுக்க வேண்டும்.


ஆழ்வார்களும் அவதாரமும் பொய்கையாழ்வார்

பன்னிரெண்டு ஆழ்வார்கள் பற்றிய விபரம் பகுதி : 1

                           பொய்கையாழ்வார்

பிறந்த ஊர் : காஞ்சிபுரம், திருவெக்கா பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர்
பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு
நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி)
கிழமை : செவ்வாய்
எழுதிய நூல் : முதல் திருவந்தாதி
பாடல்கள் : 100
சிறப்பு : திருமாலின் சங்கின் அம்சம் (பாஞ்சஜந்யாம்சம்).
பிற பெயர்கள் : பொய்கைப்பிரான் கவிஞர் போரேறு, பத்மமுநி ஸரோயோகி காஸாரயோகி

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன்சொன் மாலை
இடராழி நீங்குகவே என்று !

இவ்வாறு நூறு பாடல்களைப்பாடியவர் பொய்கையாழ்வார்.
வைணவத்தினர் இவரை கவிஞர் தலைவன் என்று போற்றுகின்றனர். இவர்  காஞ்சி நகர் திருவெக்கா பொய்கையில் அவதரித்தார். பொய்கையில் அவதரித்த காரணத்தாலேயே இவர் பொய்கைஆழ்வார் என அழைக்கப்பட்டார். திருமாலின் கருணையால் அனைத்தையும் கற்றார். கற்றதின் பயனாய் இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தரக்கூடியது திருமாலின் தொண்டு தான் என்பதை உணர்ந்தார். அத்துடன் தன்னையே பெருமாளின் தொண்டிற்கு அர்ப்பணித்து கொண்டார். மொத்தம் 6 திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்துள்ளார். இவர்தான் முதலில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை இவ்வுலகிற்கு அர்ப்பணித்தவர். சதா சர்வ காலமும் விஷ்ணுவின் நினைப்பிலேயே இருப்பார். தன்னையே மறந்து பகவானை பாடி மகிழ்வார். ஹரியும் சிவனும் ஒன்றுதான். ஹரியை வணங்குபவர்கள் சிவனை வெறுக்க வேண்டாம். சிவனை வழிபடுபவர்கள் ஹரியை பழிக்க வேண்டாம். இதை மக்களிடம் கூறிக்கொண்டதோடு ஹரியிடம் மாறாபக்தி கொண்டும் அவருக்கு சேவைசெய்தும் வாழ்ந்து வந்தார். இறைவனை அடைந்து ஒன்றாக கலப்பது தான் ஆத்மாவின் தன்மை என்றும், இறைவனை பிரிந்திருப்பது தான் துன்பங்களுக்கெல்லாம் மூல காரணம் என்பதையும் பொய்கையாழ்வார் உணர்த்துகிறார். ஒரு சமயம் பொய்கை ஆழ்வார் திருக்கோவிலூர் மிருகண்டு முனிவரது ஆசிரமத்துக்கு சென்றார். அங்கு பூதத்தாழ்வாரும்  பேயாழ்வாரும் வந்து சேர்ந்தனர். இவர்கள் மூவரும் நெருக்கியடித்து நிற்க அங்கு சங்கு சக்கரத்துடன் திருமால் தோன்றி மூவருக்கும் காட்சியளித்தார். இவர் பேயாழ்வார் மற்றும் பூதத்தாழ்வாருடன் பல திவ்ய தேசங்களுக்கு சென்று பரந்தாமனைப் பாடி பணிந்தார்.


சூரபத்மனின் வரலாறு

சூரபத்மனின் வரலாறு

சூரபத்மன் மிகப்பெரிய அரக்கன். சிவனிடம் பெற்ற வரத்தால் உலகையே ஆட்டிப்படைத்தான். ஆணவத்தின் உச்சியில் இருந்த அவன் பற்றிய வரலாறு வருமாறு:-

பிரம்மதேவனுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு மகன்கள் இருந்தார்கள். அவர்களுள் தக்கன் சிவனை நோக்கித் கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்தான். ஆனால் வரத்தின் வலிமையைச் சிரத்தில் கொண்டு சிவனை மதியாது யாகம் செய்தான். இதனால் சிவனால் தோற்றுவிக்கப் பெற்ற வீரபத்திர கடவுளால் கொல்லப்பட்டான். காசிபனும் கடுந்தவம் புரிந்து சிவனிடம் இருந்து மேலான சக்தியைப் பெற்றான். ஒருநாள் அசுரர்களின் குருவான சுக்கிரனால் (நவக் கிரகங்களுள் வெள்ளியாக கணிக்கப்பெறுபவர்) ஏவப்பட்ட "மாயை'' என்னும் அரக்கப் பெண்ணில் மயங்கி தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தான். இதனைத் தொடந்து காசிபனும் மாயை என்னும் அசுரப் பெண்ணும் இணைந்து மனித தலையுடன் கூடிய சூரபத்மனும் சிங்க முகம் கொண்ட சிங்காசுரனும் யானை முகம் கொண்ட தாரகாசுரனும் ஆட்டின் முகம் கொண்ட அசமுகி என்ற அசுர குணம் கொண்ட பிள்ளைகளைப் பெற்றனர். இவர்களுள் சூரபத்மன் சர்வலோகங்களையும் அரசாளும் சர்வவல்லமைகளைப் பெற எண்ணி சுக்கிலாச்சாரியாரிடம் உபதேசம் பெற்று சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தான். அதன் மூலம் 108 யுகங்கள் உயிர் வாழவும் 1008 அண்டங்களையும் ஆரசாளும் வரத்தையும் இந்திரஞாலம் எனும் தேரையும் சிவசக்தியால் அன்றி வேரு ஒரு சக்தியாலும் அவனை அழிக்க முடியாது என்னும் வரத்தையும் பெற்றான். இவ்வரத்தின் பயனாக சூரன் தம்மைப்போல் பலரை உருவாக்கி அண்ட சராசங்களை எல்லாம் ஆண்டு வந்தான். சூரபத்மன் பதுமகோமளை என்னும் பெண்ணை திருமணம் செய்தான். வீரமகேந்திரபுரியை இராச தானியாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு பதுமகோமளை மூலம் பானுகோபன், அக்கினிமுராசுரன், இரணியன், 10 தலைகளைக் கொண்டவச்சிரவாகு ஆகிய நான்கு மகன்களும் வேறு மனைவியர் மூலம் மூவாயிரவரும் பேர் (3000) பிறந்தனர். இவர்களுடன் இன்னும் 120 பிள்ளைகள் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. சூரபத்மன் தான் பெற்ற வரத்தின் வலிமையினால் ஆணவம் மிகுந்து கர்வம் கொண்டான். இந்திரன் மகனான சயந்தன் முதலான தேவர்களை சிறையிலிட்டு சித்திரவதை செய்தான். அதர்ம வழியில் ஆட்சி செய்யலானான். அசுரர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். இறைவன் அவர்களைக் காப்பாற்ற திருவுளம் கொண்டார் சூரபத்மன் முதலான பலம் மிக்க அசுரர்களை அழிக்கும் சக்தி படைத்த ஆறுமுகனை அவதரிக்க செய்தார். அதன் படி தான் முருகன் திருச்செந்தூர் தலத்தில் எழுந்தருளினார். அவருக்கும் சூரனுக்கும் 6 நாட்கள் கடும் போர் நடந்தது. 6வது நாள் சூரனை முருகப்பெருமான் வீழ்த்தினார். அதுவே சூரசம்ஹாரம் என்று அழைக்கப்படுகிறது.


ஆழ்வார்களும் அவதாரமும் பூதத்தாழ்வார்

ஆழ்வார்களும் அவதாரமும்

2. பூதத்தாழ்வார்

பிறந்த ஊர் : மகாபலிபுரம்
பிறந்த நாள் : 7ம் நூற்றாண்டு
நட்சத்திரம் : ஐப்பசி அவிட்டம் (வளர்பிறை நவமி திதி)
கிழமை : புதன்
எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி
பாடல்கள் : 100
சிறப்பு : குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம்.

மகாபலிபுரத்தில் மல்லிகைப்புதரின் நடுவில் நீலோத்பவ மலரின் பெருமாளின் கவுமாதிதி என்னும் கதையில் அம்சமாக பிறந்தார் பூதத்தாழ்வார். இந்த உலக வாழ்வை சிறிதும் விரும்பாமல் பரமனிடம் ஆழ்ந்த பக்தியோடு திகழ்ந்தார். இவர் 13 திவ்யதேசங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். முதல் ஆழ்வார் மூவருள் இரண்டாவது ஆழ்வார் இவர். பொய்கையாழ்வார், பேயாழ்வார் இருவரையும் திருக்கோவிலூரில் சந்தித்து மகிழ்கிறார். பொய்கையாழ்வார் வையம் தகளியாய் என ஆரம்பித்து நூறு பாடல்களை பாட பூதத்தாழ்வாரோ அன்பே தகளியாய் என நூறு பாடல்களை பாடினார். மகிழ்வில் உருகிய மனமாகிய திரியை பக்தி என்று எண்ணெயில் இட்டு ஞானச்சுடர் ஏற்றி என பாடி திருமாலை பாடும் பெருமையை தனக்கு கிடைத்ததை நினைத்து அடிக்கடி மகிழ்கிறார். பல திவ்ய தேசங்களுக்கும் சென்று பெருமாளின் புகழைப் பரப்பினார். பெருமாளின் 108 திருப்பதிகளில் பூதத்தாழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 14 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.


செவ்வாய், 3 நவம்பர், 2020

சேக்கிழார்

சேக்கிழார்

இது சேக்கிழார் திருப்பணி செய்த ஸ்தலமாகும். இங்கு திருப்பணிகள் செய்த சேக்கிழார் தான் பிறந்த,

சென்னை - குன்றத்தூரிலும் இதே பெயரில் ஒரு கோயிலை கட்டி அதற்கு திருநாகேஸ்வரம் என்று பெயர் சூட்டினார் என்றால் அவருக்கு இந்த ஆலயத்தின் மீது எந்த அளவுக்கு பக்தியும் மரியாதையும் இருந்திருக்கும் என்பதை உணரலாம்.

இக்கோயிலில் இவருடைய அமர்ந்த நிலையிலான சிலை உள்ளது. 

உருத்திராக்க மாலையோ அணிகலன்களோ இல்லாமல் உள்ள இந்த சிலையின் அருகே இவரது தம்பியான பாலறாவாயரின் உருவச்சிலையும் இவரது தாயாரின் உருவச்சிலையும் உள்ளன.

ராகு ஸ்தலம் : பெரிய பிரகாரத்தின் தென் மேற்கு மூலையில் ராகு சன்னதி உள்ளது. ராகுவின் பிறப்பு வரலாறும் கிரகச்சிறப்பும் சுவை நிரம்பியவை. ராஜ வம்சத்து மன்னன் ஒருவனுக்கும் அசுரகுலப் பெண்ணொருத்திக்கும் மகனாகப் பிறந்தவன் ராகு. தேவர்களும் - அசுரர்களும் பாற்கடலைக் கடையும் போது அசுரனாகிய ராகு உருமாறி தேவர்கள் வரிசையில் சேர்ந்து மகா விஷ்ணுவிடமிருந்து அமிர்தத்தைப் பெற்று உண்டு விட்டான். 

உண்மை அறிந்த மகா விஷ்ணு கையிலிருந்த அகப்பையால் அவனது மண்டையில் அடிக்க தலை வேறு உடல் வேறாகி விழுந்தான். ஆனாலும் அமிர்தம் உண்ட மகிமையால் அவன் தலைப்பகுதியில் உயிர் இருந்தது. 
ராகுவும் தவறுக்கு வருந்தி இறைவனை வேண்டி நிற்க இறைவன் பாம்பின் உடலை அவனுக்குக் கொடுத்து அவனை ஒரு நிழல் கிரகமாகவும் ஆக்கினார்... 

ஆன்மீக கதை

ஆன்மீக கதை

ஒரு ஊர்ல ஒரு அறிவாளி ஆள் இருந்தார். அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம். அடிக்கடி கோவிலுக்கு போவார். கடவுளை வேண்டிக்குவார். அதுக்கப்புறம் காட்டுக்கு போவார். விறகு வெட்டுவார் அதை கொண்டு போய் விற்பனை செய்வார். ஓரளவுக்கு வருமானம் வந்தது. அதை வைத்துக் கொண்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தார் .

ஒரு நாள் அது மாதிரி அவர் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தார். அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை. ஏதோ விபத்துல இழந்து விட்டது போல இருக்கு.. ! அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு..
அதை இவர் பார்த்தார். அப்போ இவர் மனசுல ஒரு சந்தேகம்? இந்த நரிக்கு இரண்டு காலும் இல்லை ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ..?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சார்

இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது.. அதை பார்த்த உடனே ஓடி போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சி கிட்டார். ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சார். அந்த புலி என்ன பண்ணிச்சுன்னா ... ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது ...

அதை சாப்பிட்டது ...

சாப்பிட்டது போக மீதியை அப்படியே அங்கேயே போட்டுட்டு போய்ட்டது...

புலி போனப்பின் கால் இல்லாத அந்த நரி மெதுவா நகர்ந்து கிட்ட வந்தது ... மிச்சமிருந்ததை சாப்பிட்டது ..

திருப்தியா போய்ட்டது !

இவ்வளவையும் மரத்துக்கு பின்னாடி நின்னு நம்ம   ஆள் கவனிச்சி பார்த்து கிட்டு இருக்கார். இப்ப அவர் யோசிக்க ஆரம்பிச்சார். " ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடறான் . அப்படி இருக்கறப்போ... தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்ருவானா? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம்.. நாம எதுக்கு அனாவசியமா வெயில்லயும் மழைலயும் கஷ்டபடனும் ..? எதுக்காக வேர்வை சிந்தி விறகு வெட்டனும் ...? இப்படி யோசிச்சார் .

அதுக்கப்பறம் அவர் காட்டுக்கே போறதில்லை. கோடலியை தூக்கி எறிஞ்சிட்டாரு. பேசாம ஒரு மூலையிலே உக்கர்ந்துட்டார்.
அப்பபோ கோவிலுக்கு மட்டும் போயிட்டு வருவார்." கடவுள் நம்மை காப்பாத்துவார்... அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார் அப்படின்னு நம்பினார்.

கண்ணை முடிகிட்டு கோயில் மண்டபத்துலேயே ஒரு தூண்ல சாஞ்சி உக்காந்துகிட்டார். ஒவ்வொரு நாளும் போய்கிட்டே இருக்கு... சாப்பாடு வந்த பாடில்லே.. !

இவர் பசியால வாடி போனார் உடம்பு துரும்பா இளைச்சு போய்டுச்சு. எலும்பும் தோலுமா ஆயிட்டார்.
ஒரு நாள் ராத்திரி நேரம் கோயில்ல யாருமே இல்லை. இவர் மெதுவா கண்ணை திறந்து கடவுளை பார்த்தார். ஆண்டவா என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா.....? நான் இப்படியே பட்டினி கிடந்தது சாக வேண்டியது தானா? காட்டுல அந்த நரிக்கு புலி மூலமா சாப்பாடு போட்டியே..! அதை பார்த்துட்டு தானே இங்கே வந்தேன்.  என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே இது நியாயமா ? ன்னாரு

இப்போ கடவுள் மெதுவா கண்ணை திறந்து சொன்னாராம்.....
..
" முட்டாளே ! நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லே.. !  புலி கிட்ட இருந்து ..!
அப்படின்னாராம்..... . புலி போல் உழைத்து சாப்பிட்டு மீதியை இயலாதவர்களுக்கு  தானமா  கொடுன்னாராம்....

ஆதிசேஷன்

ஆதிசேஷன் ஸ்தல வரலாறு

பாதாள லோகத்திலிருந்து நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் ஒருமுறை சிவபெருமானை வேண்டித் தொழுவதற்காக இந்த செண்பகவனம் வந்தான். 

இங்கு ஒரு தீர்த்தம் ஏற்படுத்தி அதன் கரையில் அமர்ந்து கடும் தவம் செய்தான். ஆதிசேஷனின் இடையறாத தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு காட்சியளித்தார். நாகராஜனுக்கு அருளிய மூலவர் "நாகநாதசுவாமி" என அழைக்கப்பட்டார். அவன் உருவாக்கிய தீர்த்தம் நாக தீர்த்தம் ஆனது. நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்து கொள்ளலாம். 

1986 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் நாள் ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது தனது சட்டையை மாலையாக இராகு பகவானுக்கு அணிவித்து இவரது பெருமையை உலகிற்கு உணர்த்தியது. இது இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் பார்வைக்குக் காட்சிப் பொருளாக கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இது பஞ்ச குரோசத்தலங்களில் ஒன்றாகும்.

வழிபட்டோர்: இராகு, தட்சகன், கார்கோடகன், ஆதிசேஷன், வாசுகி...
ஆகியோர் வழிபட்ட தலமாகும்... 


கிருஷ்ண கீதை பகுதி ஒன்று

கிருஷ்ண கீதை பகுதி ஒன்று

மொத்தம் 30 பிரிவுகளை கொண்டுள்ளது. தினமும் ஒரு பதிவு. பயனுள்ள மிக நல்ல பொக்கிஷம்.

                   கிருஷ்ண கிருஷ்ணா! முகுந்தா ! ஜனார்த்தனா!
                   கிருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே !!
                   அச்யுதானந்த கோவிந்த மாதவா!
                   ஸச்சிதானந்த நாராயண ஹரே!!

இவ்விதம் ஆரம்பிக்கின்ற ஒரு பக்தி கானத்தை நம்மில் பலரும் கேட்டிருப்போம். இந்த நாம சங்கீர்த்தனம் தான் ஞானப்பானா என்ற மலையாள பக்தி காவியத்தின் ஆரம்ப வரிகள். ஞானப்பானா என்றால் ஞானக்களஞ்சியம் அறிவு பெட்டகம் என்று பொருள்.

கிருஷ்ணா என்ற நாமத்தில் எல்லா ஞானமும் அடங்கும் என்று கூறுகின்ற இந்த பக்தி காவியம், வேத-வேதாநதங்களில் காணும் உயரிய தத்துவங்களை உள்ளடக்கியுள்ளது.

இந்த நூலை எனக்குத் தெரிந்த அளவில் விளக்கிக் கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நூலின் தோற்றம் ஞானப்பானா என்கின்ற பக்தி நூல் பதினாறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு மலையாள பக்தி காவியம். இதை எழுதியவர் பூந்தானம் இல்லத்தைச் சேர்ந்த ஒரு நம்பூதிரி.

அவர் ‘பூந்தானம்’ என்ற அவரது இல்லப் பெயராலேயே பிற்காலத்தில் அறியப்பட்டார். அவரது இயற்பெயர் சரியாக தெரியவில்லை.

‘நாராயணீயம்’ என்ற சம்ஸ்கிருத நூலை எழுதிய நாரயண பட்டதிரிப்பாடின் சமகாலத்தவர் பூந்தானம்.

ஞானப்பானா எல்லோருக்கும் புரியும் படியான எளிய மலையாளத்தில் ஒரு பக்தி காவியம்.

பக்தியோடு ஞானத்தையும் கலந்து நமக்கு அளித்துள்ளார் பூந்தானம்.
இந்த பக்தி காவியம் ஸ்ரீமத் பாகவதம், பகவத் கீதை, பஜ கோவிந்தம் விவேக சூடாமணி முதலிய தார்சனிக கிரந்தங்களின் சாரம்சத்தை பக்தியில் குழைத்து தருகிறது. இதை மலையாள பகவத் கீதை என்று கூறுவோரும் உண்டு.

குருவாயூரப்பனின் மஹாபக்தரான இந்த கவிவரியர் 1547 மாசிமாதம் அசுவதி நட்சத்திரத்தில் கேரள  நாட்டில் மலப்புறம் ஜில்லாவில் கீழாற்றூர் எனும் இடத்தில் பூந்தானம் எனும் ஒரு நம்பூதிரி குடும்பத்தில் பிறந்தார். அவரது இருபதாவது வயதில் திருமணம் ஆயிற்று. ஆனால் நீண்ட நாட்களுக்கு அவருக்கு சந்தான பாக்கியம் கிட்டவில்லை. ஆகவே குருவாயூரப்பனை தியானித்து ‘சந்தான கோபாலம்” சுலோகங்களை சொல்லிவந்தார். அதன் பயனாக அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இல்லத்தில் எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்து ஆனந்த்தித்தார்கள்.ஆனால் தெய்வ நிச்சயம் வேறு ஒன்றாக இருந்தது.

குழந்தைக்கு ஒரு வயதாகும் முன் அன்னபிராசனத்திற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கவே குழந்தை இறைவனடி சேர்ந்தது. குழந்தையின் மறைவைக் குறித்து நிறைய கதைகள் சொல்லக்கேட்டிருப்போம். அவைகளில் மிகவும் நமபத் தகுந்ததாக நான் கருதுவது கீழ்க்கண்ட கதை.

சாதாரணமாக கேரள மானிலத்தில் அன்னப்பிராசனம் எனும் ‘சோறூணு” குழந்தையின் 5 - 7 மாதங்களில் நடைபெறும். பூந்தானத்தின் செல்வனுக்கு சோறூணுக்கு ஏற்பாடுகள் அவரது இல்லத்தில் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.

இந்த இடத்தில் கேரள நம்பூதிரி இல்லங்களின் கட்டமைப்பைக் குறித்து ஒரு சில வார்த்தைகள் சொல்ல வேண்டியுள்ளது.
இல்லங்களின் முன்புறம் தாழ்வாரம், அதன் பின் பூமுகம், பிறகு அகத்தளம் அதன் பின்னால் வடதிசையில் ‘வடக்கினி’ எனும் அறை, தெந்திசையில் ‘தெற்கினி’ எனும் அறை, ‘வடக்கினியின் பின்னால் சமயலறை என்றவாறு இருக்கும். இதில் ‘தெற்கினி’ காற்றோட்டமாக ஜன்னல்களுடன் விசாலமாக இருக்கும்.

’வடக்கினியோ’ இருளடைந்து இரு வாசல்களுடன் இருக்கும். ஒரு வாசல் அகத்தளத்திற்கு திறக்கும்; இன்னொரு வாசல் அடுக்களை அல்லது சமயலறைக்கு திறக்கும்.

அகத்தளத்திற்கு திறக்கும் கதவு எப்பொழுதும் மூடியே இருக்கும். அன்றைய தினம் பூந்தானத்தின் இல்லத்தம்மை குழந்தைக்கு பாலூட்டி விட்டு குழந்தை தூங்கியவுடன் வடக்கினியில் குழந்தையை விட்டு விட்டு  அடுக்களைக்கு செல்லும் கதவை மெல்ல சாத்தி விட்டு சென்றாள். மற்ற பெண்டிர் ஒவ்வொருவராக குளித்து விட்டு வடக்கினிக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டு உடை மாற்றிக் கொண்டார்கள். அங்கே விதி விளையாடியது. முதலில் சென்ற பெண்மணி குழந்தை இருப்பதை கவனிக்காமல் ஈர உடையை குழந்தையின் முகத்தின் மீது போட்டு விட்டாள். அடுத்து வந்த பெண்டிரும் தம் தம் ஈர உடைகளை அதன் மீதே போட்டார்கள். சோறூணிற்கு நேரமான போது பூந்தானத்தின் இல்லத்தரசி குழந்தையை கொண்டு வருவதற்காக வடக்கினிக்குள் சென்றாள். அந்தோ பரிதாபம்! குழந்தை மூச்சுத் திணறி இறந்து உடல் சில்லிட்டு படுத்திருந்தது. பிறகு அங்கு நிகழ்ந்த சோகக் கதறல்களை விவரிகவும் வேண்டுமோ!
துயரத்தில் ஆழ்ந்த பூந்தானம் குருவாயுரப்பனை சரணடைந்தார்.

குருவாயூர் கோவிலில் இருந்து கொண்டே ‘குமாரஹரணம்’ என்ற நூலை இயற்றினார். ஒரு முறை குருவாயுரப்பனே குழந்தை உருவத்தில் அவர் மடியில் வந்தமர்ந்ததாகவும் மனதில் பரமனே இருக்கும் பொழுது துயரத்திற்கு ஏது இல்லை என்ற ஞானம் பிறந்ததாகவும் ஐதீகம்.

அவருடைய கீழ்க்கண்ட வரிகள் இந்த உண்மையை எடுத்து விளம்புகின்றன.
                        உண்ணிக்கிருஷ்ணன் மனஸில் களிக்கும்போள்
                        உண்ணிகள் மற்று வேணமோ மக்களாய்
அதன் பின் நாமஜபமே முக்திக்கு வழி என்று கருத்துப்பட ‘ஞானப்பானா’வை இயற்றினார்.
(தொடரும்)


நல்ல இல்லத்திற்கு சில ஆன்மீக குறிப்புகள்

நல்ல இல்லத்திற்கு சில ஆன்மீக குறிப்புகள்.

எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.

எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.

வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.

எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது. சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.

தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.

குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்.

அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாற வேண்டும். 

கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.

பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது. அமாவாசையன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. 

வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.

இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.

ஆன்மீக தகவல்

ஆன்மீக தகவல்கள்


நம்முடைய கஷ்டங்கள் தீராமல் தொடர்வதற்கு, தீபம் ஏற்றும்போது நாம் செய்யும் இந்த தவறுகளும் ஒரு காரணம்.

 நம்முடைய சாஸ்திரத்தில் மிக மிக முக்கியமான வழிபாடாக சொல்லப்பட்டுள்ள வழிபாடுகளில், தீப வழிபாடும் ஒன்று. நம்முடைய சம்பிரதாயப்படி காலை மாலை இரண்டு வேளையும் கட்டாயம் வீட்டில் தீபமேற்றி வழிபடவேண்டும். காலை தீபம் ஏற்ற முடியாதவர்கள் கூட, மாலை வேளையில் கட்டாயம் தீபமேற்றி வழிபடுவது தான்
நம்முடைய வீட்டிற்கும் நல்லது. லட்சுமி கடாட்சமும் கூட, இதேபோல் சிலர் பரிகாரங்களுக்காக தீபம் ஏற்றுவார்கள். இத்தனை வாரம், இந்த குறிப்பிட்ட கோவில்களுக்கு சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கை இருக்கும். ராகுகால தீபம் அல்லது ராகு கேது தீபம், விநாயகருக்கு தீப ஏற்றுவது, சிவபெருமானுக்கு தீபம் ஏற்றுவது, இப்படி எந்த கடவுளுக்காக இருக்கட்டும். நீங்கள் தீபத்தை கோவிலுக்கு சென்று ஏற்றினாலும் சரி, வீட்டில் ஏற்றி வழிபாடு செய்தாலும் சரி, அது குத்துவிளக்காக இருந்தாலும் சரி, காமாட்சியம்மன் விளக்காக இருந்தாலும் சரி, மண் அகல் தீபம் இருந்தாலும் சரி, நாம் அந்த தீபத்தை எப்படி ஏற்றினால் வேண்டுதல்களுக்கான பலனை உடனடியாக, முழுமையாகப் பெற முடியும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்

 இந்த பதிவில் கொடுக்கப்போகும் குறிப்புகள் சில பேருக்கு தெரிந்திருக்கலாம். சில பேருக்கு
தெரியாமலும் இருக்கலாம். தெரியாதவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டுள்ள சில முக்கியமான குறிப்புகள். முதலில் நம்முடைய வீட்டில் தீபம் ஏற்றுவதற்கு முன்பாக முகம் கை கால்களை அலம்பி விட்டு தான் ஏற்ற வேண்டும். காலையில் குளித்து இருப்போம். குளித்தபின்பு தீபம் ஏற்றி இருப்பீர்கள் அல்லது வேலை
சுமை காரணமாக தீபம் ஏற்றாமலும் இருக்கலாம். இருப்பினும் மாலை தீபம் ஏற்றும் போது கை கால் முகம் கழுவாமல் தீபம் ஏற்றவே கூடாது. எந்த இடத்திலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, கை கால் கழுவாமல் தீபம் ஏற்றாதீர்கள்.

 வீட்டிலிருந்து புறப்பட்டு சென்று ஆண்கள் கடைக்கு போவார்கள். கடைக்கு போன உடனேயே தீபத்தை ஏற்றி வைத்து விட்டு, கல்லா பெட்டியில் அமர்ந்து விடுவார்கள். இது மிகப்பெரிய தவறு. கை கால்களை கழுவிவிட்டு தான் தொழில் செய்யும் இடத்திலும் தீபமேற்ற வேண்டும். அப்போதுதான் அந்த தொழில் மேலும் சிறக்கும்.

 அடுத்தபடியாக சில பேர் தங்களுக்கு ஏற்படக்கூடிய இயற்கை உபாதைகளை அடக்கிக் கொண்டு தீபம் ஏற்றுவார்கள். இருமல், தும்மல், சிறுநீர், மலம்,
இப்படியாக நமக்கு வரக்கூடிய இயற்கை உபாதைகளை கட்டுப்படுத்திக்கொண்டு எக்காரணத்தைக் கொண்டும் தீபம் ஏற்றக்கூடாது. பெண்கள் தங்களுடைய முந்தானையை எடுத்து சொருகிக் கொண்டு தான் தீபம் ஏற்றவேண்டும். முந்தாணையை அப்படியே விட்டுவிட்டு தீபம் ஏற்றுவது தவறு. உங்களுடைய வீட்டில் ஸ்டாண்டின் மேல் தீபம் எரிந்தாலும் கூட, பூஜை அலமாரியில் தீபத்தை வைத்து இருந்தாலும் கூட, அந்த விளக்கை எடுத்து கீழே வைத்து நீங்கள் தரையில் அமர்ந்து, சம்மணம் போட்டு அமர்ந்து எண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி, அதன் பின்புதான் அதை எடுத்து அலமாரியின் மேல் வைக்க வேண்டுமே தவிர, எக்காரணத்தைக் கொண்டும் நின்று கொண்டு, வேண்டிக்கொண்டு தீபமேற்றினால் அந்த வேண்டுதல் உடனே பலிக்காது. கோவிலுக்கு சென்றாலும் இதே விதிமுறை தான். கோவிலில் விளக்கு ஏற்றுவதற்காக ஸ்டாண்ட் வைத்திருப்பார்கள். நீங்கள் தரையில் அமர்ந்து தீபத்தை ஏற்றி எடுத்து தான், அந்த ஸ்டாண்டின் மேலே வைக்க வேண்டும். அப்போது தான் உங்களுடைய வேண்டுதல் சீக்கிரமாக நிறைவேறும். மனதில் ஒரு குறிக்கோளை
வைத்துக்கொள்ளுங்கள். அந்த குறிக்கோள் நிறைவேற வேண்டும் என்று தினம்தோறும் அமர்ந்தபடி இறைவனை நினைத்து, மனதை ஒரு நிலைப்படுத்தி உங்களது வேண்டுதலை அந்த தீபச்சுடரில் அந்த தீப ஒளியில் வைத்து ஏற்றி, மனதார பிரார்த்தனை செய்து வழிபட்டு வாருங்கள். நிச்சயம் உங்களுடைய வேண்டுதல் எதுவாக இருந்தாலும்
உங்களுடைய கோரிக்கை எதுவாக இருந்தாலும் அதை அந்த இறைவன் உடனடியாக நிறைவேற்றி வைப்பார் என்பதில் சந்தேகமே கிடையாது. சில பேர் அலமாரிகளில் பூஜை அறையை தயார் செய்து வைத்திருந்தாலும், ஸ்டண்ட் அடித்து வைத்திருந்தாலும் குறிப்பாக பெரிய பெரிய பூஜைகள் செய்யும்போது, வாழை இலை போட்டு, சுவாமி கும்பிடும் போது, அவர்கள் வீட்டில் இருக்கும் விளக்கை ஸ்டாண்டில் இருந்து கீழே இறக்கி தரைப்பகுதியில் தான் வைத்து ஏற்றுவார்கள். வெறும் தரையில் கீழே வைத்து வழிபடக் கூடாது. விளக்கு கீழே சிறிய தாம்பூலம் கட்டாயம் இருக்க வேண்டும். நிறையப்பேர் வீட்டில் பிள்ளையார் மனை இருக்கும். அந்த பிள்ளையார் மனையை, மரப்பலகையின் மீது வைத்து, இரண்டு பக்கங்கள் குத்து விளக்கு அலங்காரம்
செய்து, நடுவே ஒரு காமாட்சியம்மன் தீபமேற்றி அலங்காரம் செய்து, அதன்பின்பு படையல் இடுவார்கள். இப்படிப்பட்ட பழக்கம் வந்ததற்கும் காரணம் கீழே அமர்ந்து தீபமேற்ற வேண்டும் என்பதற்காகத்தான். அமர்ந்து தீபம் ஏற்றுவதன் மூலம் நம்முடைய மூலாதார சக்கரம் சீராக இயங்கி நமக்கும் தீபச்சுடருக்கும் இடையேயான நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது

 இதன்மூலம் உங்களது வேண்டுதல் பிரபஞ்சத்திற்கு சீக்கிரம் போய் சேர்ந்து அந்த வேண்டுதல் சீக்கிரம் பலிக்கும். இது முழுக்க முழுக்க நம் முன்னோர்களால்,
சாஸ்திரப்படி சொல்லி வைக்கப்பட்டுள்ள விஷயங்கள். தொடர்ந்து 48 நாட்கள் இப்படி தீப வழிபாடு செய்து பாருங்கள்

 இதுவரைக்கும் தீரவே தீராது அப்படின்னு நினைச்சிட்டு இருந்த பிரச்சினைகள் எல்லாமே படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

 உங்களுக்கே மனநிம்மதி மனநிறைவு ஏற்பட்டுவிடும். அதன் பின்பாக தொடர்ந்து, உங்களை அறியாமலேயே அமர்ந்து தீபம் ஏற்ற தொடங்கிவிடுவீர்கள்

நம்பிக்கை இருந்தால், நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் முயற்சி செய்து பாருங்கள்.