செவ்வாய், 28 ஜூலை, 2020

வீடு குடியேறும்போது பால்காய்ச்ச வேண்டும் என்று கூறப்படுவதன் நோக்கம் என்ன?

க்ஷீரே சுக்ராய நம: என்கிறது வேத மந்திரம். க்ஷீரம் என்ற வார்த்தைக்கு பால் என்று பொருள். பசும்பாலினில் சுக்கிரனின் அம்சம் நிறைந்துள்ளது என்பது இந்த வாக்கியத்தின் அர்த்தம்.

ஆனந்த வாழ்வினையும், குறைவில்லாத பொருட்செல்வத்தினையும் தருகின்ற கிரஹம் சுக்கிரன். ஜோதிடவியல் ரீதியாக சுக்கிரனை தனகாரகன் என்றழைக்கிறார்கள்.

பசுமாட்டினுடைய மடியினில் மகாலட்சுமி வாசம் செய்வதாகச் சொல்வார்கள். அந்த மடியிலிருந்து கறக்கப்படும் பால், மகாலட்சுமியின் பிரசாதமாகக் கருதப்படுகிறது.

நாம் குடியேறும் வீட்டினில் மகாலட்சுமியின் அம்சம் நிறைந்திருக்க வேண்டும் என்பதற்காகவும், செல்வம் குறைவின்றி நிரம்பி வழிய வேண்டும் என்பதற்காகவும் வீடு குடியேறும்போது பால் காய்ச்சப்படுகிறது. தற்காலத்தில் ஒரு சிலர் பால் காய்ச்சுவதற்கு பெரிய பாத்திரத்தை வைத்துவிட்டு அதில் சாஸ்திரத்திற்காக சிறிதளவு பாலை மட்டும் காய்ச்சுகின்றனர். அவ்வாறு செய்வதில் அர்த்தமில்லை.

பாத்திரத்தில் இருந்து பால் பொங்கி சிறிதளவு வெளியே வழிகின்ற அளவிற்கு பாலை வைக்க வேண்டும். அதற்காக முற்றிலுமாக பால் பொங்கி வெளியேறிவிடவும் கூடாது. பால் பொங்கி பாத்திரம் நிறைவது போல் வீட்டினில் செல்வம் நிறைந்திருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
கணபதி உபநிஷத்தில் வரும் ஒரு சில வரிகளும் அதன் அர்த்தமும்.

அவ த்வம் மாம்
அவ வக்தாரம்
அவ ச்ரோதாரம்
அவ தாதாரம்
அவ தாதாரம்
அவ அநூசானமவ சிஷ்யம்
அவ புரஸ்தாத்
அவ தக்ஷிணாத்தாத்
அவ பச்சாத்தாத்
அவ உத்த்ராத்தாத்
அவ ச ஊர்த்வாத்தாத்
அவ ஆதார்தாத்
ஸர்வதோ மாம் பாஹி பாஹி ஸமன்தாத்

பரம் பொருளே என்னைக் காப்பாற்று. என் னுடைய குருவைக் காப்பாற்று. என்னுடைய குருவிடம் வேதம் கற்ற அனைத்து மாணவரை யும் காப்பாற்று. வேதத்தைத் தம் சிந்தையிலே வைப்பவரைக் காப்பாற்று. மெய்ப் பொருளே! உன்னை வணங்க எனக்கு வழிகாட்டியவரைக் காப்பாற்று. இந்த உபநிஷதத்தைக் கற்பவரைக் காப்பாற்று. அனைவரையும் காப்பாற்று.

பல்வேறு திசைகளிலிருந்தும் என்னை நோக்கி வரும் துன்பங்களிலிருந்தும் என்னைக் காப்பாற்று. உன்னை நான் சரணடைந்து விட் டேன். காப்பாற்றுவது உன் கடமை !!
கடவுள் படையலை சாப்பிடுவாரா?

சிஷ்யன் ஒருவன் தன குருவிடம் ஒரு கேள்வி கேட்டான். ‘’குருவே, நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவன் சாப்பிட்டால் நாம் பிறருக்கு எப்படி பிரசாதமாக வழங்க முடியும்? கடவுள் படையலை சாப்பிடுவாரா’’? என்று கேட்டான்.

குரு எதுவும் சொல்லாமல். அவனை ஊடுருவி பார்த்துவிட்டு ‘’நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன்” என்றார்.

அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என பொருள் கொண்ட “பூர்ணமிதம்” எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார் குரு அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர்.

சிறிது நேரத்திற்கு பிறகு கேள்வி கெட்ட சிஷ்யனை சைகையால் அழைத்தார் குரு.

குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான்.
“எனதருமை சிஷ்யனே, மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா? ,” என்றார்.

“முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே”.
“எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம்”
கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி கணீர் குரலில் கூற துவங்கினான்..” பூர்ண மித பூர்ண மிதம் ...” என கூறி முடித்தான்.

மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார்.. “நீ சரியாக மனதில் உள் நிறுத்தியதாக தெரியவில்லையே.. எங்கே உனது புத்தகத்தை காட்டு”
பதட்டம் அடைந்த சிஷ்யன், புத்தகத்தை காண்பித்து கூறினான் “ குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள். ஆனால் நான் கூறியது அனைத்தும் இதில் இருப்பதை போலவே கூறினேன்...”

“இந்த புத்தகத்திலிருந்து படித்துதான் மனதில் உள்வாங்கினாயா?”. இதிலிருந்து உள்வாங்கினாய் என்றால் மந்திரம் இதில் இருக்கிறதே? நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்க கூடாதல்லவா?” சிஷ்யன் குழப்பமாக பார்த்தான்.

குரு தொடர்ந்தார், ‘’உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது. புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன். இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான். நீ உள்வாங்கிய பின் புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்துவிட்டதா? அது போலதான் இறைவன் உட்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம்.

ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும், சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேத்யத்தை உட்கொள்கிறோம். ”

தனது பக்தியற்ற தர்க்கம் செய்த அறியாமையை குருவிற்கு நைவேத்யம் செய்து முழுமையடைந்தான் சிஷ்யன்.
போதிவனம் அமைதியில் ஆழ்ந்திருந்தது. காற்றினால் இலைகள் சலசலத்துக் கொண்டிருந்தன. போதிசத்துவர் கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.

       போதிசத்துவர் தியானத்திலிருந்து கண்விழித்தார். ஒரு நடுத்தர வயது மனிதன் அவர் கால்களில் விழுந்து வணங்கினான். போதிசத்துவர் அவனைப் பார்த்து, “நீ யாரப்பா? உன் பெயர் என்ன?” என்று அன்புடன் கேட்டார். அம்மனிதன் தன் பெயர் அபிநந்தன் என்று கூறினார்.  “உனக்கு என்ன வேண்டும்?” என்றார். 

        “ தேவா! நான் ஏழை. எனக்கு மனைவியும் மூன்று பிள்ளைகளும் உண்டு. பந்தபாசங்களில் உழன்று நான் சித்தரவதைகளை அனுபவித்து விட்டேன். தாங்கள் தான் என்னைத் துறவியாக்கி ஞானம் அருள வேண்டும்” என்று வேண்டினான். போதிசத்துவர் யோசித்தார். பிறகு அவனைப் பார்த்து கேட்டார். “அபிநந்தா! இந்த மரங்களில் உள்ள இலைகள் எல்லாம் ஏன் ஆடுகின்றன என்று தெரியுமா? காற்று வந்து மோதுவதால் தான். பாசம் என்னும் காற்று மோதும் போதெல்லாம் மனித இலைகள் இப்படித்தான் ஆடுகின்றன. முதலில் உன் மனதிலிருந்து பாசத்தை அறவே ஒழித்து விட முடியுமா?”

              அபிநந்தன் “முடியும் பிரபு” என்று வாக்களித்தான். “சரி அப்படியென்றால் இன்று முதல் நீ போதிவனத்திலேயே தங்கலாம்” என்று கூறினார். அபிநந்தன் அங்கேயே தங்கினான். சில நாட்கள் சென்றன. ஒருநாள் போதிசத்துவர் குளிப்பதற்காகப் போய்க்கொண்டிருந்தவர் அபிநந்தனைக் கவனித்தார். அவனுடன் ஒரு நாய் இருந்தது.

               “அபிநந்தா! இது என்ன நாய்?” என்று விசாரித்தார். அதற்கு அவன் “பிரபு! இந்த நாய் என்னை விட்டு விலகுவதே இல்லை. இதை மட்டும் என்னுடன் வைத்துக் கொள்ள அனுமதி தாருங்கள்” என்று வேண்டினான். போதிசத்துவர் சிரித்துக்கொண்டே போய்விட்டார்.

             சில நாட்கள் சென்றன. அபிநந்தனோடும் அந்த நாய்க்குட்டியோடும் ஒரு சிறுவன் இருப்பதைக் கவனித்தார். அபிநந்தனிடம் விசாரித்தார். அதற்கு அவன், “பிரபுவே! இவன் என் மகன். இந்த நாயை விட்டு அவனால் இருக்க முடியவில்லை. ஆகையால் இவனும்” என்று இழுத்தான். போதிசத்துவர் சிரித்துக் கொண்டே போய்விட்டார். பின் ஒரு நாள் போதிசத்துவ குளத்தருகே அபிநந்தனுடன் ஒரு பெண்ணும் இருக்கக் கண்டார். அவனிடம் “யார் இந்தப் பெண்மணி” என்று விசாரித்தார். அதற்கு அவன் “குருவே! இவள் என் மனைவி. மகனை விட்டு அவளால் ஒரு வினாடி கூட இருக்கமுடியவில்லை. ஆகையால் அவளையும்” என்று இழுத்தான்.

             போதி சத்துவர் சிரித்துக் கொண்டே இரண்டு பாத்திரங்களை எடுத்தார். ஒன்றிலே நிறைய பண்டங்கள் இருந்தன. ஒன்று காலிப் பாத்திரம். இரண்டையும் தண்ணீரில் வீசினார். பண்டங்கள் நிரம்பி இருந்த பாத்திரம் அமிழ்ந்துவிட்டது. காலிப் பாத்திரம் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது.

              போதி சத்துவர் சொன்னார் “கனமான பாத்திரங்கள் அமிழ்ந்து விடுகின்றன. காலிப் பாத்திரங்கள் மட்டுமே மிதக்கின்றன. காலிப் பாத்திரமே ஞானப் பாத்திரம். கனத்த பாத்திரம் பாசப் பாத்திரம்.”

               “அபிநந்தா! உதிர்ந்து போக விரும்பும் ரோமங்கள் உதிர்ந்து போகின்றன. உதிர விரும்பாத ரோமங்கள் நரைக்கின்றன. உதிர்ந்து விட்ட ரோமங்கள் ஓடிவிடுகின்றன. உதிராத ரோமங்கள் தலையில் இருந்த கொண்டே கேலி செய்கின்றன. விலக்க முடியாத பந்தங்களும் அப்படியே. உன் இதயம் பாசத்துக்காகவே படைக்கப்பட்டது. சித்ரவதை என்பது அதற்கு நீ கொடுத்தே தீரவேண்டிய விலை. போய்வா” என்றார்.

என்ன ஒரு பாடம் !!!
கடவுள் எனபது என்ன? கட -- உள் (வேதாத்திரி மகான் என்கின்ற புத்தகத்தில் இருந்து ) சில சாரம் ஒரு தொகுப்பு பதிவு. என்னுடைய எழுத்தும் உண்டு நண்பர்களே !!!!

முன்பு நான் பதிவு செய்த  இந்த கட்டுரையை என்னுடைய புதிய நண்பர்களுக்காக மீண்டும் பதிவு இடுகின்றேன்.

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து வலையுலகில் தற்போது வால்பையன்  அவர்கள் விவாதங்களை ஆரம்பித்து வைத்துள்ளார்.

அவரது கருத்துகள் கடவுள் மறுப்பாக இருந்தாலும், இலாவகமாக பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறார். கேள்வி கேட்கப்பட்ட விதத்திற்கு பதிலடியாக உள்ளது. அதற்கு வரும் பின்னூட்டங்கள் சில சமயங்களில் ஆரோக்கியமாகவும்,சில சமயம் அர்த்தமற்றதாகவும் (என் பார்வையில்), இருக்கின்றது.

கடவுள் இருக்கிறார் என சில நண்பர்கள் விவாதம் செய்யும் தொனியில், எனக்கு சில அடிப்படை விசயங்கள் அதில் தவறு என நினைக்கும்போது, அதை மிக வலுவாகவும், தர்க்கரீதியாகவும் எதிர்க்கின்ற இவர்களிடமும் எனக்கு குழந்தைகள் விளையாட்டுக்கு அடித்துக்கொள்வதை பார்க்கின்ற உணர்வே ஏற்படுகிறது.

சரி விசயத்துக்கு வருவோம்.

உங்கள் கையை நான் வெட்டி விடுகிறேன், இப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? உங்களை சேர்ந்தவர்கள் என்னை என்ன செய்யப் போகிறார்கள்.?

என் கைய வெட்டின நீயோ, உன் வம்சமோ இனிமேல் இருக்கக்கூடாது என நினைப்பீர்கள்.

உங்களை சேர்ந்தவர்களோ என்னை உயிரோடு விட்டால்தான் ஆச்சரியம்.

சரி அரசாங்கமும், நீதித்துறையும் என்ன செய்யப் போகிறது?. சிறையில் அடைத்து தண்டனை தந்துவிடும்.

அட ஒண்ண சொல்ல மறந்திட்டேனே.

நான் ஒரு டாக்டர், நீங்க என்னிடத்தில் அறுவைச்சிகிச்சைக்கு வந்த நோயாளி !

உங்கள் கையை நான் வெட்டி விடுகிறேன், இப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? உங்களை சேர்ந்தவர்கள் என்னை என்ன செய்யப் போகிறார்கள்.?

என் கைய எடுத்து, என்ன காப்பத்தின டாக்டர், நீங்களும் உங்க வம்சமும் நீண்ட நாளைக்கு நல்லா இருக்கனும் என நினைப்பீர்கள்.

உங்களை சேர்ந்தவர்களோ என்னை தெய்வமாக நினைக்கா விட்டால்தான் ஆச்சரியம்.

பாருங்க மக்கள் எப்படின்னு??

ஒருத்தர் கைய வெட்டினா அது தப்புங்கிறாய்ங்க..

இன்னொருத்தர் கைய வெட்டினா ரொம்ப நல்லதுங்கிறாய்ங்க...

ய்ஏஏஏஏஏன்ன்ன்???

செயலிலே இல்லை சரி என்பதும் தவறு என்பதும். அதன் விளைவைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.

இதற்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்??

தேங்காய், பழம் உடைத்து வைத்தால் சாமியா வந்து சாப்பிடுது? ஆனா அது ஏன் என்று மெதுவா உள்ளே கேளுங்கள், மூட நம்பிக்கையா நினைக்காதீங்க, பொருத்தமான விடை வந்து சேரும். அதுதான் தத்துவம், உள்ளடங்கிய விளைவு,

உருவ வழிபாட்டு முறையின் செயல்பாடுகளில், உள்ள உள்ளார்ந்த அர்த்தங்களை உணருங்கள். இதற்கு என்ன அர்த்தம் என்றால் யார் சொன்னாலும் நம்புங்க, கூடவே நம்பாதீங்க.

உருவ வழிபாட்டின் எந்த ஆன்மீக செயலாக இருந்தாலும் அதன் விளைவை கூர்ந்து கவனியுங்கள். (செயல் செய்து முடித்த பின்), ஆடி மாதம் கடவுளுக்கு கிடாவெட்டா, விளைவு உயிர்ப்பலி தேவையான்னு யோசிங்க வேண்டாம்னு ஒதுக்குங்க.

திருவண்ணாமலை கிரிவலம் போகனுமா என்னபலன் மேலோட்டமா பார்த்தாக்கூட நடைப்பயிற்சிதானே! யாருக்கு நட்டம்? போயிட்டு வாங்க.

கடவுள் விசயமும் இப்படித்தான், ரொம்ப ஆராய்ச்சி பண்ண வேண்டாம்,

பிராமணரா? முடிந்தால் சரியான நபரா என ஆராயுங்கள், சொல்றத கேளுங்க, பிடிக்கலை விட்டுடுங்க, ஆனால் சொல்றத செய்துபார்த்துட்டு, தவறுன்னு தெரிஞ்சா விட்டுடுங்க, ஆனா செய்யாமலேயே அது எப்படி சரியா வருமான்னா குழப்பம்தான் மிஞ்சும்.

எல்லாமே மனசுக்குத்தான், அது நிறைவடையத்தான் இத்தனையும்

சும்மா இயல்பா இருங்க, கடவுளப் பத்தி கவலைப்படாம இருங்க, அவரு உங்கள பார்த்துக்குவாரு. அல்லது பார்த்துக்க மாட்டாரு அப்படின்னும் வச்சுக்குங்க , ஆனா இயல்பா இருங்க,

நீங்க உங்களுக்கும் பிறருக்கும் நல்ல விளைவுகளை தரக்கூடிய செயல்களை மாத்திரம் செய்யுங்க, அது எதுவானாலும் சரி.

செயல் செய்யும்போது ஆராய்ச்சி பண்ணாம, செய்வதற்கு முன் ஆராய்ச்சி பண்ணுங்க.,

தெரியல, புரியல அப்படின்னா செய்துட்டு அப்புறமா கூட ஆராய்ச்சி பண்ணுங்க

இத அனுபவத்தில் கொண்டு வந்து பாருங்க, விவாதம் குறையும், விளக்கம் கூடும்.

இனி வேதாத்திரி மகானின் கவிதைகள் இங்கே உங்கள் சிந்தனைக்கு....

கடவுள்

கடவுள் யார் என அறிய ஆர்வம் கொண்டு

கருத்துடனே ஆராயும் அன்பா கேளாய்

கடவுள் ஒன்றே பூரணமாம், உவமை இல்லை

கருத்தொடுங்கிக் கருத்தறிந்த நிலையில் மெளனம்

கடவுள் அணு,ஒலி,ஒளி,ஈர்ப்பு இவையாக உள்ளான்

கண்டிடலாம் அவனை எங்கும் இயற்கையாக

கடவுளே அணு, அண்ட பிண்டமானான்

கருத்தானான் அந்நிலையே நீயும் நானும்.

* * *

கட-உள் என்று சொல்லிவிட்டான் கருவறிந்தோன்

கருத்தறியான் ஊன்றி இதைக்காணவில்லை;

கட-உள் என்ற ஆக்கினையின் குறிப்பை மாற்றி

கண்டறிந்த நிலைக்கே அப்பெயரைக் கொண்டான்

கட-உள் என்ற இரு சொல்லை ஒன்றாய்ககூட்டி

கடவுள் என்றே சொல்லிச்சொல்லி வழக்கமாச்சு

கடவுள்! என்று மனிதன் ஓர் குறிப்புத்தந்தான்

கடவுள் எங்கே? என்று பலரும் தேடுகின்றார்
தமிழ்நாடு இராமனாதபுர மாவட்டத்திலுள்ள உத்திரகோசமங்கை

அதில் முக்கியமான மூன்று விஷயங்கள்.

1. இந்தக்கோவில்தான் உலகின் முதல் சிவன் கோவில் 8000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

2. இங்குள்ள இலந்தை மரம் 3300 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் பூத்துக்குலுங்குகிறது.

3. இங்குதான் இராவணன், மண்டோதரி திருமணம் நடைபெற்றதற்கு சாட்சியாக கல்வெட்டுக்கள் உள்ளன.

எனவே இராமாயணம் ஒரு கட்டுக்கதை என்று கூறுபவர்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

இந்த எஸ்ரா சற்குணம் " இந்தியா கிறித்துவ தேசம்" என்று கூறித்திரிகிறாரே, அவருக்கு ஒரு கேள்வி " யேசுநாதர் பிறந்து 2100 வருடங்கள்தானே ஆகிறது. இந்த இந்துக்கோவில் ( இன்னும் பல கோவில்கள் உள்ளன) 8000 ஆண்டுகளுக்கு மேல் இருக்கிறதே. அப்படியானால் இந்தியா எப்படி கிறித்துவ தேசமாகும்.?

சரி போறான் கிறுக்கன் என்று ஒதுக்கிவிட்டு அக்கோவிலின் சிறப்பம்சங்களை பாருங்கள்.

*உலகின் முதல் சிவன் ஆலயம்*
*அதன் சிறப்பு தகவல்கள்*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சிவனின் சொந்த ஊர், உலகிலயே முதல் நடராஜர் தோன்றிய ஊர்,
உலகின் உள்ள அனைத்து ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் வந்து வழிபாடு செய்த கோவில்.

நவகிரகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான கோயில். நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான ஆலயம். ஆயிரம் சிவ  அடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்று சகஸ்கர லிங்கம் உருவாக்கிய ஆலயம்.

3000 ஆண்டுகளாய் பூத்து குலுங்கும் இலந்தை மரம் உள்ள ஆலயம்.

*தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி* என்ற வாக்கியம் உருவான இடம்.

மரகத நடராஜர் சிலை உள்ள ஆலயம். இப்படி பல அதிசயங்களையும், ஆச்சயர்களையும்   தன்னகத்தே கொண்டு சாந்தமாய் இருக்கும் ஆலயம் அதுதான் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருஉத்ரகோசமங்கை மங்களநாதார் மங்களநாயகி திருக்கோவில்.

தவறாமல் இத்திருக்கோவிக்கு ஒருமுறையாவது சென்று வாருங்கள்.

இராமநாதபுரம் மாவட்டதில் அமைந்துள்ள உத்தரகோச மங்கை புனித தலம் பற்றிய 60 சிறப்பு தகவல்கள் :-

1. உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது.

2. உத்தரகோச மங்கை கோவில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

3. உத்தரகோச மங்கையே சிவபெருமானின் சொந்த ஊர் என்று அழைக்கப்படுகிறது.

4. இத்தலத்துக்கு உமா மகேசுவரர் சன்னதி முன்பு நின்று வழிபாடுகள் செய்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும்.

5. திருவிளையாடல் புராணத்தில் வரும் ‘வலை வீசி மீன் பிடித்த படலம்‘ இத்தலத்தில்தான் நடந்தது.

6. உத்தரகோச மங்கை கோவிலில் முக்கிய திருப்பணிகளை பாண்டிய மன்னர்களே செய்தனர். பாண்டிய மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில்

சிறந்து இருந்த போது, அவர்களது. தலைநகராக சிறிது காலத்துக்கு உத்திரகோசமங்கை இருந்தது.

7. ஆதி காலத்தில் இந்த தலம் சிவபுரம்,‘தெட்சிண கைலாயம்‘, சதுர்வேதி மங்கலம், இலந்தி கைப் பள்ளி, பத்ரிகா ஷேத்திரம்,

பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பதரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என்றெல்லாம் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது.

8. மங்கள நாதர், மங்கள நாயகி இருவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் முழுமையான பலன்கிடைக்கும்.

9. இத்தலத்தில் வழிபாடுகள் செய்பவர்களுக்கு இம்மையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். மறுமையில் முக்தி கிடைக்கும்.

10. மங்கள நாதர் தலத்தில் திருமணம் செய்தால் நிறைய மங்களம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே முகூர்த்த நாட்களில் நிறைய

திருமணங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன.

11. மூலவருக்கு மங்களநாதர் என்ற பெயர் தவிர மங்களேசுவரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர் என்ற பெயர்களும் உண்டு.

12. இறைவிக்கு மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி ஆகிய பெயர்கள் உள்ளன.

13. இறைவி மங்களேசுவரி பெயரில் வ.த. சுப்பிரமணியப் பிள்ளை என்பவர் பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார். 1901-ம் ஆண்டு வெளியான

அந்த நூல் 1956-ம் ஆண்டு மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டது.

14. இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களில் ராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே இத்தலம் ராமாயண

காலத்துக்கும் முன்பே தோன்றியதற்கான ஆதாரமாக இந்த கல்வெட்டு கருதப்படுகிறது.

15. இத்தலத்தில் வேதவியாசர், காக புஜண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர், அருணிகிரிநாதர் ஆகியோர்

வழிபட்டு ஈசன் அருள் பேறு பெற்றுள்ளனர்.

16. இத்தலத்து பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர். இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப்படைப்பாக உள்ளார்.

17. கோவில் வாசலில் விநாயகப்பெருமானும், முருகப்பெருமானும் இடம் மாறியுள்ளனர்.

18. இத்தலத்து முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில் அளித்தான்

என்று, இத்தலமான்மியமான ‘ஆதி சிதம்பர மகாத்மியம்’ கூறுகிறது.

19. ராமேஸ்வரத்தில் இருந்து 83 கிலோமீட்டர் தொலைவிலும், ராமநாதபுரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலும் இவ்வாலயம் இருக்கிறது.

20. சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் “இலவந்திகைப் பள்ளி” என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்கிறார்கள். மேற்குறித்த

கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது.

21. மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம்.

22. இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று இப்பெருமான் போற்றப்படுகிறார்.

23. இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம்.

24. சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்துகொண்டு இத்தலத்திலேயே

அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, பின்னர் அம்பிகையுடன் மதுரை சேர்ந்ததாக மதுரைப்புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

25. ஆதிசைவர்கள் வசமிருந்த இத்தலம் பின்னரே ராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதுமுதல் இன்றுவரை ராமநாதபுர

சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்து வருகிறது இத்தலம்.

26. உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாழிகளில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன

பந்தை கொண்டுள்ளது. நாம் கையை நுழைத்துக்கூட பந்தை நகர்த்த முடியும்.

27. இத்தலத்து கோவில் குளத்தில் வாழும் மீன்கள் நல்ல நீரில் வாழும் மீன்கள் இல்லை. கடல்நீரில் வாழும் மீன்களாகும்.

28. பிரதோஷத்தன்று இங்கு தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர்.இந்த கோவிலில்சிவனுக்கு அம்பாளுக்கு தாழம்பூ மாலை

கட்டிப்போட்டால் அனைத்து தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம். இதனால் திருமணம் உடனே கைகூடும்.

29. இங்கு ஆதிகாலத்து வராகி கோவில் உள்ளது இங்கு ஒவ்வொரு வெள்ளி,செவ்வாய்.ஞாயிறு தினங்களில் ராகுகாலத்தில் பூஜை

தொடர்ந்து செய்தால் தீராத பிரச்னைகள்,திருமண்த்தடை போன்றவை விலகுகின்றன.

30.ராமேஸ்வரம் வருபவர்கள் இந்த கோவிலுக்கு செல்லலாம்.

31. டெல்லியை தலைநகராகக் கொண்டு 1300-ம் ஆண்டு ஆட்சி செய்து வந்த அலாவுதீன் கில்ஜி, உத்தரகோச மங்கையில் மரகதகல்

நடராஜர் சிலை இருப்பதை அறிந்து அதை கொள்ளையடிக்க முயன்றான். மங்களநாதர் அருளால் அவன் முயற்சிக்கு வெற்றிகிடைக்கவில்லை.

32. இத்தலத்தில் தினமும் முதல் - அமைச்சரின் அன்னத்தானத்திட்டம் நடைபெறுகிறது. ரூ. 700 நன்கொடை வழங்கினால் 50 பேருக்குஅன்னதானம் கொடுக்கலாம்.

33. காகபுஜண்ட முனிவருக்கு கவுதம முனிவரால் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில்தான் நீங்கியது.

34. சிவனடியார்கள் 60 ஆயிரம் பேர் இத்தலத்தில் தான் ஞான உபதேசம் பெற்றனர்.

35. இத்தலத்தில் உள்ள மங்களநாதர் சன்னதி, மங்களேசுவரி சன்னதி, மரகதகல் நடராஜர் சன்னதி சகஸ்ரலிங்க சன்னதி நான்கும்

தனிதனி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரத்துடன் தனித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

36. நடராஜர் மரகத கல்லில் இருப்பதால் இத்தலத்தை சிலர் ரத்தின சபை என்கிறார்கள். ஆனால் உலகின் முதல் கோவில் என்பதால்

இது எந்த சபைக்கும் உட்படாதது என்றும் சொல்கிறார்கள்.

37. காரைக்கால் அம்மையாரும் இத்தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டு சென்றுள்ளார்.

38. உத்தரகோசமங்கை கோவிலின் கட்டிடக்கலை திராவிட கட்டிடக்கலையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்.

39. ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், கிருத்திகை, சதுர்த்தி நாட்களில் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

40. சித்திரை மாதம் திருக்கல்யாண வைபவம் வைகாசி மாதம் வசந்த உற்சவம், ஆனி மாதம் பதுநாள் சிவ உற்சவம், ஐப்பதி மாதம்

அன்னாபிஷேகம், மார்கழி மாதம் திருவாதிரை விழா மாசி மாதம் சிவராத்திரி ஆகியவை இத்தலத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள்ஆகும்.

41. தினமும் இத்தலத்தில் காலை 5.30 மணிக்கு உஷத் காலம், 8 மணிக்கு கால சாந்தி, 10 மணிக்கு உச்சிக் காலம், மாலை 5 மணிக்கு

சாயரட்சை, இரவு 7 மணிக்கு இரண்டாம் காலம், இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜைகள் நடத்தப்படுகிறது.

42. மங்களநாதருக்கு தினமும் காலை 6 மணிக்கு, மதியம் 12.30 மணிக்கு, மாலை 5.30 மணிக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.

43. இத்தலத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையும் பிற்பகல் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் சாமி தரிசனம்செய்யலாம்.

44. மரகத கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.

45. இத்தலத்தில் மொத்தம் 11 விநாயகர்கள் உள்ளனர்.

46. மங்களநாதர் சன்னதியை சுற்றி வரும் போது இடது பக்க மூலையில் மகாலட்சுமியை வழிபடலாம்.

47. இத்தலத்தில் உள்ள ராஜகோபுரத்தில் சர்பேஸ்வரர் சிலை உள்ளது.

48. உலகத்தில் முதலில் தோன்றிய கோவில் என்ற சிறப்பு உத்தரகோசமங்கை தலத்துக்கு உண்டு. இந்த ஆலயம் சிதம்பரம் கோவிலுக்கு முன்பே தோன்றியது.

49. நடராஜர் இங்கு அறையில் ஆடிய பின்னர்தான் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடினார்.

50. இது அம்பிகைக்கு பிரணவப்பொருள் உபதேசித்த இடம்.

51. இங்குள்ள மங்களநாதர் லிங்க வடிவில் உள்ளார்.

52. தலவிருட்சமான இலந்தமரம் மிகமிகத் தொன்மையானதும் இன்று வரை உயிருடன் உள்ளதும் பல அருள் தலைமுறைகளையும்

முனிவர்கள் தரிசித்த தல விருட்சம் ஆகும். இந்த இலந்த மரம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது.

53. வேதவியாசரும், பாராசரும் காகபுஜண்டரிஜி மிருகண்டு முனிவர்கள் பூஜித்த தலம்.

54. உலகில் உள்ள 1087 சிவாலயங்களிலும் இருக்கும் அருட் சக்திகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் சகஸ்ரலிங்கம் இங்குள்ளது.

55. ஆண்டுக்கு இரண்டு திருவிழா இங்கு நடத்தப்படுகிறது. ஒன்று சித்திரைத் திருவிழா, இன்னொன்று மார்கழித் திருவாதிரைத் திருவிழா

56. இத்திருத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உள்ளது.

57. சிவபெருமானால் பரத நாட்டிய கலையை உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.

58. ஈசன் ஈஸ்வரி பிறந்த ஊரான உத்திரகோச மங்கையில் ஒரு முறை பக்தர்கள் வந்து மிதித்தால் சொர்க்கம் செல்லுவது நிச்சயாமாகும்.

59. உத்தர கோசமங்கை திருத்தலமானது ஸ்ரீராமருக்கு ஈசன் சிவலிங்கம் வழங்கி சேது சமுத்திரத்தில் பாலம் போட உத்தரவு வழங்கிய இடமாகும்.

60. இத்தலத்தில் மாணிக்கவாசகர் பாடிய பொன்னூஞ்சல் பாடலை குழந்தைகளை தாலாட்டும்போது பாடினால், குழந்தைகள்
உயரமாகவும், உன்னத மாகவும் வாழ்வார்கள் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.

*இந்து மதத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது* இது உண்மையிலும் உண்மை..

அதே சமயம் நம் இந்து மதத்தை போற்றி பாதுகாப்பதும், நம் இந்து மதத்தின் வரலாற்று உண்மையை பிறருக்கு தெரிய படுத்துவதும் நம் கடமை.

*ஒம் நம சிவாயா*
#பிதாமகர்

களத்தில் வீழ்த்தப்பட்டார் பீஷ்மர் என்ற செய்தி கர்ணனை அடைந்ததும், அதிர்ந்துபோனான். எவர் வீழ்த்தியது என ஆவேசப்பட்டான். அர்ஜூனனின் பெயர் கேட்டவுடன் கொதித்தான்.

பிதாமகரை அத்தனை எளிதாய் வீழ்த்திவிட்டானா அர்ஜூனன் ?.. என கோபப்பட்டான் கர்ணன்.

இல்லை. சிகண்டியை முன்னிறுத்தி பீஷ்மரை வீழ்த்திவிட்டார்கள்.. என்றான் தகவல் கொண்டுவந்த வீரன்.

அதர்மத்தின் பக்கம் நாங்கள் நிற்கிறோம் என்று எங்களை குறைகூறிய பாண்டவர்களே, அதர்மத்தினைக் கையாளுவதுதான் தர்மமா ?
அர்ஜூனா.. இதோ வருகிறேன். சந்திக்கிறேன் உன்னை களத்தில். உன்னைக் கொல்லவேண்டும் என நான் நினைத்ததற்கான காரணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக கூடிக்கொண்டே போகின்றன.. என தனக்குள் பொங்கினான்.

இறுதியாக ஒருமுறை, பீஷ்மரின் திருமுகத்தைக் கண்டுவரக் கிளம்பினான் குருஷேத்திரம் நோக்கி.

கௌரவர் சேனையும், பாண்டவர் சேனையும் அணிவகுத்து நின்று, ஒவ்வொருவராய் பீஷ்மரைக் கண்டு கலங்கியபடியே நகர்ந்தார்கள் களத்தில்.
போதும் புறப்பட்டுவிடலாம் என நினைத்த பீஷ்மம், தனது தாயின் மடியினைத் தேடியது. தாய் தந்த அமுதோடு உயிர்கொண்டோம். அதோடே, உயிர் துறப்போம் என்று எண்ணிய பீஷ்மர், அர்ஜீனனை அருகில் அழைத்தார்.

அர்ஜூனா.. தாகம் அதிகம். இதுவரை கொண்ட அத்தனை தாகத்தினையும் மறக்கச் செய்யும் அதீத தாகம். என் தாய் கங்கையால் மட்டுமே தீர்க்கமுடிந்த தாகம். தீராமல், இவ்விடம் விட்டு நகர்தல் என்பது இயலாது. புரிகிறதா ?.. என்றார்.

அர்ஜீனனின் கண்கள் கண்ணனை நோக்க, அவனும் தலையசைக்க, தனது பாணங்களை நிலம் நோக்கி செலுத்தினான் அர்ஜீனன். நிலம் பிளந்து, பாறைகள் தாண்டி, ஆழத்தில் பயணித்துக் கொண்டிருந்த கங்கையினை தொட்டது அர்ஜீனனின் அம்புகள்.

அம்பு பயணித்த இடைவெளியின் ஊடே, பீஷ்மரின் சுவாசமும் கலந்து பயணிக்க, சீறி எழுந்தாள் கங்கை. கிடைத்த இடைவெளியில் பொங்கி வழிந்து ஊற்றாய் பெருகி, பாலாய்ப் பொழிந்தாள். மண்தொட்டு கிளம்பிய கங்கை, நேராக, தன் மகனின் தாகம் தீர்க்கத் தாயாக மாறி, பாலூட்ட ஆரம்பித்தாள் பிதாமகர் பீஷ்மருக்கு.

கங்கை உள்நிரம்பியதும், வெம்மையாய் இருந்த கொஞ்ச நஞ்ச எண்ணங்களும் குளிர்ந்துபோக,

போதும் தாயே போதும். கொண்டதொரு பணி நிறைவாய் முடிந்தது. விடைகொடு எனக்கு.. என்று மனதாலேயே தன் தாயை வணங்க, கங்கை அடங்கினாள்.

பீஷ்மத்தைப் பெற்றதனால், புனிதமானாள் கங்கை என நாளைய சரித்திரம் சொல்லுமடா உன் பெயரை.. என வாழ்த்தினாள்.

பீஷ்மரின் கண்கள் விண்ணை நோக்கின. தேவர்களும், விண்ணவர்களும் புடைசூழ நிற்பது கண்டு வணங்கினார். சூரிய தேவனுக்கு அருகிலேயே, மரண தேவனும் தன் அனுமதிக்கு காத்திருப்பது தெரிந்தது.

வாரும் மரணதேவரே.. வாரும். இதுநாள்வரை உம் கடமை நிறைவேற்றத் தடையாயிருந்தமைக்கு மன்னியும் என்னை. நானே அழைக்கிறேன் உம்மை. வந்தெம்மை ஆட்கொள்ளும்.. என பீஷ்மரின் மனம் இறைஞ்சியது.

சற்றுப் பொறும் பீஷ்மரே. இருக்கும் அத்தனை பேரையும் விருப்பு வெறுப்பின்றி ஆசீர்வதித்து செல்கிறீரே.. வந்து கொண்டிருக்கிறான் எம் மைந்தன். அவனையும் ஆசிகொடுத்துவிட்டுச் செல்லாமே.. வேண்டினான் சூரியதேவன்.

அதேநேரம், கர்ணனும் நுழைந்தான் அவ்விடம். அம்புப் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்த பீஷ்மரைக் கண்டதும் ஆடிப்போனான் கர்ணன். மனம் கலங்கியது. அவரை எதிர்த்து உதிர்த்த வார்த்தைகள் நினைவில் வந்து நெஞ்சினைக் கிளறியது. அவரது கால் தொட்டு வணங்கினான். அருகே சென்றான்.

பிதாமகரே.. அறியாமல் கோபத்தில் நான் உதிர்த்த வார்த்தைகள், உம்மைக் காயப்படுத்தியிருப்பின் மன்னியுங்கள் என்னை... என்றான் கர்ணன்.

தவறான புரிதலால் ஏற்பட்ட விளைவிற்கு காரணமாக எதையுமே கற்பிக்க இயலாது கர்ணா.. இதோ.. நீ விரும்பியது காத்திருக்கிறது. நாளைமுதல் நான் களத்தில் இருக்கப் போவதில்லை... என்றார் பீஷ்மர்.

அவசரப்பட்டு பேசிவிட்டேனோ என்று அதற்காகப் பலமுறை வருந்தியிருக்கிறேன் பிதாமகரே. உம்மோடு களம்புகுந்து, பார்போற்றும் உமது வீரத்தினை அருகிருந்து காணும் கொடுப்பினை கிட்டியும், அவசரப்பட்டு தவறவிட்டுவிட்டேனே என வருந்தாத நாளில்லை ஐயனே.. என்றான் கர்ணன் உருக்கமாக.

எல்லாம் நன்மைக்கே கர்ணா.. என் இடத்தை நிரப்பாமல் செல்கிறேனே என்ற கடைசிக்குறையும் தீர்ந்தது உன்னால். களம் காண்பாய் கர்ணா.. என்றார் பீஷ்மர்.

நீங்கள் இட்ட பணி தொடர, வெற்றி பெற வாழ்த்தியருள வேண்டுகிறேன் பிதாமகரே.. என்றான் கர்ணன்.

எவரும் பெறமுடியாத புகழினை இக்களத்தினில் நீ பெறுவாய் கர்ணா.. உன் தர்மம் அதற்குத் துணைநிற்கும்.. என கர்ணனை ஆசீர்வதித்த பீஷ்மர், கண்மூட ஆரம்பித்தார்.
மனதாலேயே மரணதேவனை ஆட்கொள்ள அழைக்க, பீஷ்மரின் ஆன்மாவினை தனதாக்கிக் கொண்டான் மரணதேவன். உடல் மட்டுமே உயிர்ப்போடு இருந்தது.

விண்ணெங்கும், மண்ணெங்கும் பீஷ்ம.. பீஷ்ம..பீஷ்ம.. என்னும் குரல்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன.

கலங்கிய கண்களோடும், கனத்த இதயத்தோடும் செய்வதறியாது நின்ற அர்ஜீனனை அவ்விடம் விட்டு சற்று தூரமாய் அழைத்துவந்தான் கண்ணன்.

இழப்பின் வலி என்னவென்பதை பிதாமகர் உணர்த்திப் போனபின்பும், மண்ணிற்கான இப்போர் தொடரத்தான் வேண்டுமா கண்ணா ?.. கலங்கியபடியே கேட்டான் அர்ஜீனன்.

பீஷ்மர் ஆவது அத்தனை எளிதென்று எண்ணிவிட்டாயா அர்ஜீனா ?.. கேட்டான் கண்ணன்.

நான் கேட்பது என்ன ? நீ சொல்வது என்ன ?.. எரிச்சலோடு கேட்டான் அர்ஜீனன்.

புரிந்துகொள்ளும் மனநிலையில் நீயில்லை எனப் பொருள் அர்ஜீனா.. என்றான் கண்ணன்.

என்ன புரியவில்லை ? இன்னும் என்ன புரியவேண்டும் ? எவர் பார்த்து இவர்போல் ஆகவேண்டும் என நினைத்தேனோ, அவரை என்னைக் கொண்டே வீழ்த்த வைத்தது புரியவில்லையா எனக்கு ? மனம் முழுதும் நிறைந்திருந்த பிதாமகரை, மண்விட்டு அனுப்ப, காரணமாகிப் போனேனே நான்.. இதுகூடவா எனக்குப் புரியவில்லை ?.. படபடத்தான் அர்ஜீனன்.

பீஷ்மர் மண்விட்டுப் போய் வெகுகாலமாகிவிட்டது அர்ஜூனா... என்றான் கண்ணன்.

திகைப்பாய்ப் பார்த்தான் அர்ஜீனன்.

ஆம் அர்ஜீனா.. மண்ணாள மட்டும் பீஷ்மர் நினைத்திருந்தால், தடுப்பார் எவருமில்லை அன்று. மண்ணோடு தன் தொடர்பை என்றோ விட்டொழித்தார் பீஷ்மர். அதனாலேயே, தன் சுக துக்கங்களை அவரால் மறக்க முடிந்தது.
தன்னைப் பற்றிய நினைவே இன்றி, தம் குலத்திற்காக மட்டுமே வாழ்வினை அர்ப்பணிக்க முடிந்தது.

பிரம்மச்சரியம் மட்டுமே பீஷ்மமாகாது அர்ஜீனா.. விருப்பு, வெறுப்பின்றி எதனையும் அணுகமுடிவதே #பீஷ்மம்.
கொண்ட கொள்கைக்காக, தனைப்பற்றிய சிந்தனையே இன்றி, தொடர்ந்து கடமையாற்றுவதே #பீஷ்மம்.

பீஷ்மரின் கொள்கை தன் குலம் காத்து நிற்பது மட்டுமே. அதற்கு எது சரியோ, அதை மட்டுமே சிந்தனையில் கொள்பவர். அது சரியா, தவறா என்றுகூட யோசிக்கமாட்டார்.
தன் நிலை தாழ்ந்தாலும் கவலைப்படாமல், தன்னை நம்பியிருக்கும் தன் குலம் காப்பவர் எவரோ.. அவரே #பீஷ்மர். அதற்காக, அவர் கைக்கொண்ட தவம்தான் பிரம்மச்சர்யம்.

மண்ணிலிருந்து தன்னை விலக்கிக் கொள்பவனால் மட்டுமே பீஷ்மனாக முடியும்.. என்றான் கண்ணன்.

பஞ்சபூதங்களில் ஒன்றுதானே இம்மண். அதை மட்டும் விட்டு விலகிநின்றால் போதுமா ?.. கேட்டான் அர்ஜீனன்.

நீர், நெருப்பு என இரண்டையும் தன்னுள் அடக்கி, தன்னைத் தொட்டே தன் பலத்தினை நிரூபிக்க முடியும் என வாயுவிற்கும் வாய்ப்பளிக்கும் மண்ணை அத்தனை சாதாரணமாக எண்ணிவிடாதே அர்ஜீனா. இங்கு அனைத்திற்கும் காரணம் மண்தான். மண்தொட முடியாத ஒரே விஷயம் ஆகாயம் மட்டுமே. அதுவும், இறப்பிற்கு பின்மட்டுமே அடையமுடியும் இடம்.

உலகின் அத்தனை செயல்களுக்கும் ஆதாரமாய் நிற்பது #மண் மட்டுமே. மனிதப்பிறவியின் அசைக்கவே முடியாத, விடவே இயலாத, ஆழமான ஓர் உணர்வு ஆசை. அந்த ஆசையின் அஸ்திவாரமே #மண்தான்.

கருவில் இருக்கும்வரை, மண்ணோடு தொடர்பில்லை. வெளியில் வந்தபின்னும், தாய்மடியில் இருக்கும்வரை, தனக்கென்று ஓர் தனித்த சிந்தனை இருப்பதே இல்லை எந்தக் குழந்தைக்கும்.

எப்போது குழந்தை என்ற ஓருயிர், மண்தொட ஆரம்பிக்கிறதோ.. அப்போது நுழைகிறது அதனுள் ஆசை. தான் படுத்திருக்கும் இடம் தன் இடம். அதுமட்டும் போதுமா ? போதாது. உள்நுழைந்த ஆசை விட்டுவிடுமா என்ன ? புரள்கிறது குழந்தை.. இன்னும் இடம் கிடைக்கிறது. அதுவும் தன் இடம் என்றபின், முன்னோக்கி நகர்கிறது.. தவழ்கிறது இடம் பிடிக்க.

அதுவும் போதவில்லை. கண்படும் இடமெல்லாம் தனதாகவேண்டுமே.. எழ முயற்சித்து தொட நினைக்கிறது.. எழுகிறது.. நடக்கிறது.. ஓடுகிறது.. இத்தனை இடம் கிடைத்தும் போதவில்லை. மண் மட்டும் போதுமா ? மண்மேல் இருக்கும் அத்தனை சுகங்களும் வேண்டும்.. ஓடுகிறது.. தேடுகிறது.. வாழ்நாள் முழுதும் தேடியே ஓய்கிறது.

முதுமையில் தளர்ந்து மறுபடியும் மண்மேல் விழும்வரை ஓய்வதில்லை. எல்லாம் ஓய்ந்தபின்னே, உயிர்பிரிந்து போனபின்னே, மண்ணால் வந்த மனிதனின் ஆசை, மண்ணுக்குள்ளேயேதான் புதைக்கவும் படுகிறது. இத்தனைக்கும் காரணமான இம்மண்ணை மட்டும், அத்தனை எளிதாய் எவராலும் துறக்க முடியாது.

வாழும் காலத்திலேயே, மண்ணாசையை.. மண்ணால் கொண்ட உணர்வுகளை துறந்து நின்றதால்தான் அவர் பீஷ்மர்.. என கண்ணன் கூறியதைக் கேட்ட அர்ஜீனன் திகைத்தான்.

அதனால்தான், மண்படாது பீஷ்மரை அம்புப் படுக்கையில் ஏற்றச் சொன்னாயா கண்ணா ?.. விழிகள் விரியக் கேட்டான் அர்ஜீனன்.

சரியான புரிதல்தான் அர்ஜீனா.
பிதாமகர் பீஷ்மர் வாவென்றழைக்காமல், மரணதேவனால் அவரை நெருங்கக்கூட இயலாது. வாழும்போது மண்ணோடு தான் கொண்ட உறவறுத்து வாழ்ந்த பீஷ்மர், இறுதி நேரத்தில் மண்மீது விழுந்துவிட்டால், மண் அவரை விட்டுவிடுமா என்ன ? மறுபடியும் வாழவேண்டும் என்ற ஆசைதனை அவருள் புகுத்திவிட்டால் ?..

மீண்டும் எழுந்து, பீஷ்மம் மறந்து, மண்ணாள ஆசை கொண்டுவிட்டால். ?
உன்னால், என்னால், எவராலும் அவரை தடுத்து நிறுத்திட இயலாது என்பதால்தான் அம்புப் படுக்கையில் கிடத்தச் சொன்னேன்.

ஒருவேளை, அதிலிருக்கும்போதும், மண்தொட அவர் விரும்பினாலும், அம்புகள் குத்தி நிற்கும் உடலின் வலி அதிகரிக்கும்.

மண்தொட ஆசைப்பட்டால், வலிதான் மிஞ்சும் என்பதாலேயே, மறந்தும் கூட அவர் அதனை செய்ய மாட்டார். அதனாலேயே, இறுதிவரை அவரை மண் பார்க்க விடாமல், விழிகளை விண்நோக்கியே இருக்கச் செய்தேன்.

பீஷ்மர் தவறலாம் அர்ஜீனா.. அவர் கொண்ட பீஷ்மம் தவறிவிடக்கூடாது.. என்றான் கண்ணன்.

இத்தனையும்தான் நானறிந்து கொண்டேனே ? மண் வேண்டாம் என என்னால் போரிடாமல் விலக முடியாதா ?.. ஆதங்கத்தோடு கேட்டான் அர்ஜீனன்.

சிரித்தான் கண்ணன்.
நீ நிற்பதே மண்மீதுதான். உன் இருப்பே மண்மீதுதான் என்றபின், விலகி எங்கு செல்ல முடியும் அர்ஜீனா ? விண் நோக்கிச் செல்ல, உனக்கான காலம் இன்னும் வரவில்லை என்றபின்,

மண்ணில்தான் போராடவேண்டும். மண்ணோடுதான் போராடவேண்டும்.. மண்ணிற்குள் மறைந்து மண்ணாகும்வரை.. என்றான் கண்ணன்.

அர்ஜீனனுக்குப் புரிந்தது.
மண்ணில் கலக்கத்தான் இத்தனை போராட்டங்களும்.. மண்ணாக மாறத்தான் இந்த ஓர் பிறவியும். நாம் கொண்ட சுகங்களும், துக்கங்களும் மண்ணால்தான் அருளப்பட்டது. அதை அடையத்தான் இந்த வாழ்க்கைப் போராட்டமும்.

எதை வெல்ல நினைத்தோமோ, அதில்தான் அடங்கப் போகிறோம். இங்கு நாம் கண்ட உறவுகள் அத்தனையும், இந்த மண் தந்ததுதான். உறவுகளையும், உணர்வுகளையும் கொடுத்த மண்தான், அவைகளை திரும்பவும் பெற்றுக் கொள்ளப் போகிறது.

எனில், நான் என்பது யார் ? நான் என்பதும் அதுதான்.
இதைப் புரிந்து கொள்ளவே வாழ்க்கை. புரிந்தாலும், புரியாவிட்டாலும், தான் யார் என்பதை மண் புரியவைத்துவிடும்.

அர்ஜீனன், தர்மன், பீமன், நகுலன், சகாதேவன், துரியோதனன், கர்ணன், துரோணன் என எல்லாம் ஒன்றுதான். அத்தனை பேரும், விரைவாய் மண்ணோடு கலக்க, போராடும் களமே வாழ்க்கை. எவர் முந்துகிறார் என்பது மட்டுமே வாழ்க்கையின் சுவாரஸ்யம்.

வா கண்ணா.. நாளைய போருக்கு தயார் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உண்டு.. என அர்ஜூனன் கூற, கண்ணனுக்குப் புரிந்தது.. தன்னை எவரென உணர்ந்துவிட்டான் அர்ஜூனன் என்பது.

இங்கு ஒவ்வொருவர் வாழ்வும் குருஷேத்திரமே.. ஒவ்வொருவரும் அர்ஜூனரே. விளங்கச் சொல்ல, கண்ணன் எனும் சாரதி ஒவ்வொருவர் உள்ளும் உண்டு.

வாழும்போதே அதை உணர்ந்தது, பீஷ்மரைத் தவிர வேறு எவரும் இல்லை..!!!

ஞாயிறு, 26 ஜூலை, 2020

குரு பூர்ணிமா & வியாச பூஜை


குரு பூர்ணிமா அல்லது வியாச பூர்ணிமா விரதம்

ஒவ்வொரு வருடமும் ஆனி மாதத்தில் வரும் பவுர்ணமி குரு பூர்ணிமா அல்லது வியாச பூஜை என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளை எப்படி விரதமிருந்து அனுசரிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

குரு பூர்ணிமா அல்லது வியாச பூஜா விரதம் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் வரும் பவுர்ணமி குரு பூர்ணிமா அல்லது வியாச பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் சன்னியாச ஆசிரமத்தில் இருக்கும் சன்னியாசிகள் வியாச பூஜை செய்து வேத வியாசரை ஆராதிப்பார்கள்.

வாழ்க்கை முழுவதும் சன்னியாசிகள் ஒவ்வொருவரும் வேதாந்தத்தில் ஈடுபட்டு, குரு மற்றும் ஈஸ்வரனை வழிபட வேண்டும். சன்னியாசி தான் ஞானத்தை பெற்றதற்கு நன்றியை வெளிபடுத்தும் வகையிலும் தான் துவங்க விருக்கும் வேதாந்த உபதேசம் தடையில்லாமல் முடிவடையவும் வியாச பகவானை ஆராதித்துப் பூஜை செய்யும் இந்நாள் குரு பவுர்ணமி என்றும் வியாச பவுர்ணமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் துறவிகள் மட்டுமில்லாமல் ஞான மற்றும் மோட்ச சாஸ்திரத்தை அறிய முற்படும் அனைவரும் தங்களது குருவையும், வியாச பகவானையும் ஆராதிக்க வேண்டும். வியாச பகவானை நிமித்தமாக வைத்து ஆதிகுருவில் (சிவபெருமான் அல்லது ஸ்ரீமன் நாராயணன்) தொடங்கி தங்களுடைய இப்பொழுதைய குரு வரை குரு பரம்பரையில் உள்ள அனைவரையும் இந்நாளில் வழிபட வேண்டும். வேதத்தை நான்காக வகுத்தவர் வியாசர். பகவான் கிருஷ்ணன் அருளிய கீதையைத் தொகுத்தவர் அவர் தான். பிரம்ம சூத்திரத்தை (வேதங்களின் சாரம்) எழுதியவர் வியாசர். இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த ப்ரஸ்தான த்ரயம் எனப்படும் மூன்று நூல்களிலுமே வியாச முனிவரின் பங்குள்ளது.

எனவே வியாச பகவானை முன் வைத்து ஆடி மாதப் பவுர்ணமியன்று குரு பூர்ணிமா அனுசரிக்கப்படுகிறது. இந்த வருடம் ஆங்கில தேதியான இன்று ஜூலை 27 ஆம் தேதி குருப் பூர்ணிமா அனுசரிக்கப்படும். பொதுவாக குரு பூர்ணிமா ஆனியில் தான் வரும் இந்த ஆண்டு ஆடியில் வந்தால் பதிவை மாற்றி அமைத்துள்ளேன்.

வியாழன், 23 ஜூலை, 2020

தேவியின் மகிமை:-

உலகில் துன்பம் நீங்கிச் சுகத்தை அடையும் பொருட்டு, துக்க காலத்தில் அம்மா என்று தாயை நினைத்துக் கொள்கிறோம். அது ஏன். நம்மைப் பெற்று நமக்குப் பால் கொடுத்து வளர்த்தவள் தாய். அதனால் வேதமும் மாத்ரு தேவோ பவ என்று தகப்பனுக்கு முன் தாயை வணங்கு என்கிறது.

இந்த ஒரு தேஹத்தை உண்டு பண்ணி வளர்த்த தாயின் மஹிமை இவ்வாறானால் ஜகன்மாதாவான ஸர்வேசுவரியின் மஹிமையை எப்படி அளவிட முடியும். தாய்க்குக் குழந்தையிடமுள்ள அன்பு சிநேகம் குழந்தைக்குத் தாயிடமுள்ள அன்பைவிடப் பலமடங்கு அதிகரிக்கிறது. கெட்ட புத்திரனுண்டு, கெட்ட தாய் கிடையாது என்பது பழமொழி.

உலகத்திற்கு மூலாதரமானது நிர்குண ப்ரஹ்மம். அது முக்குணமுள்ள மாயையின் சேர்க்கையால் ஸகுண ப்ரம்மமாகிறது.ஸத்வகுணத்தால் விஷ்ணுவாகவும் ரஜோகுணத்தால் ப்ரஹ்மாவாகவும் தமோ குணத்தால் ருத்ரனாகவும் ஸகுண ப்ரஹ்மம் வழங்கப்படுகிறது.

விஷ்ணுவும் ராவணாதி ஸம்ஹார காலத்தில் சிவமே. சிவனும் பக்தனை பரிபாலிக்கும்போது விஷ்ணுவேயாவர். இது மாத்திரமல்ல.

உபாஸகர்களை அனுக்ரஹிக்கும் பொருட்டு பரப்ரஹ்மமும் லக்ஷ்மீ, ஸரஸ்வதி, கௌரீ என்ற மூன்று வித ரூபங்களையும் எடுத்துக்கொள்கிறது என்று சாஸ்திரங்கள் கூறுகினறன.

தேவிக்கும் ப்ரஹ்மத்திற்கும் தர்ம தர்மி ஸம்பந்தம் என்றும் புராணங்கள் கூறுகின்றன. எனினும் தேவியின் உருவம் ஸச்சிதானந்த ப்ரஹ்ம ஸ்வரூபமே தவிர வேறு எதுவும் இல்லை.

தத் பத லக்ஷ்யார்த்தா, சிதேகரஸ ரூபிணீ, நிர்குணா, நித்யா என்ற பெயர்களும் தேவியின் ப்ரஹ்ம ரூபத்தைக் காட்டுகினறன. ஆகவே தேவியை ஸ்த்ரீ என்றோ, புருஷன் என்றோ, நபும்ஸக மென்றோ கொள்ளக்கூடாது.

நாம் நம்முடைய தாயையே அப்படி நினைக்கிறதில்லை. தாயாகப் பகவானை நினைத்துத் துதித்தாலும் பூஜித்தாலும் த்யானித்தாலும் நமக்குச் சீக்கிரம் ஸித்திகள் உண்டாகும். ஆதலால் தாயாகப் பகவானை வழிபடுவது உத்தமமான கொள்கை.

தேவியின் இருப்பிடம் மஹா மேரு மத்தியில் ஸ்வர்ண மயமான நகரமென்று ஸ்ரீ துர்வாஸர் லலிதாஸ்தவரத்தினத்தில் கூறுகிறார். அவ்விடம் இரண்டு நகரங்களுள். ஒன்று க்ஷீரஸமுத்ர மத்தியில் இருக்கிறது. ரத்னமயமானது. சுற்றிலும் கல்ப விருஷங்களாலும் மந்தாரம், பாரிஜாதம், கதம்பம் முதலிய விருஷங்களாலும் சூழப்பட்டுள்ளது. அதன் மத்தியில் புஷ்பராக ரத்ன பிராகாரம். அதன் பின் கிரமமாகப் பத்மராக மணிப் பிரகாரம், கோமேதகரத்னப் பிரகாரம் வஜ்ர பிரகாரம்,

மரகதமய ரத்ன பிரகாரம், பவழரத்ன பிரகாரம் இவைகளுக்குள் மாணிக்க்ய மண்டபம். அதற்குள் ஆயிரங்கால் மண்டபம். அதற்குள் மஹா பத்மாடவீ மத்தியில் ஒர் சிந்தாமணி மயமான கிருஹத்தில் இருக்கிறாள் தேவி.

அந்த கிருஷத்திற்கு நான்கு வாசல்கள். பூர்வாம்நாயம். தக்ஷிணாம்நாயம் முதலியவைகள். கிருஹ மத்தியில் பிரஹ்மா, விஷ்ணு, ருத்ரன், ஈச்வரன் எண தேவமயமான கால்கள் கொண்ட மஞ்சத்தில் ஸிம்ஹாசஸனத்தில் வீற்றிருக்கிறாள்.

தேவி இருக்கும் ஸ்தானம் ஒன்பது சக்கரங்களால் சூழப்பட்டுள்ளது. முதலில் த்ரைலோக்ய சக்ரம். இதில் அணிமாதி ஸித்திகள் தேவீ ரூபத்தை எடுத்துக் கொண்டு காத்துவருகிறார்கள். தவிரவும் பிராஹ்மீ, மஹேச்வரீ முதலிய ஸப்த மாதாக்களும் ஸர்வஸம்க்ஷேபிணீ முதலிய பிரகட யோகினிகளும் தேவியை ஸேவித்து வருகிறார்கள்.

இரண்டாவது ஸர்வசா பரிபூரக சக்ரம். அதில் கர்மாகர்ஷிணீ, புத்தி ஆகர்ஷிணீ முதலிய தேவிகள் வீற்றிருக்கின்றன. இவர்கள் குப்த யோகிகள் எனப்படுவர்.

மூன்றாவது ஸர்வஸம்க்ஷேபண சக்ரம். அதில் அநங்க குஸுமா முதலிய தேவிகள் அனுக்ரஹம் செய்கின்றார்கள்.

 நான்காவது ஐந்தாவது ஸர்வாத்த ஸாதக சக்ரம். அதில் ஸர்வ ஸித்திப்ரதா, ஸர்வ ஸம்பத் ப்ரதா முதலிய தேவிகள் அனுக்ரஹம் செய்கிறார்கள்.

ஆறாவது ஸர்வரத்னாகர சக்ரம். அதை ஸர்வக்ஞாதேவி, ஸர்வ சக்தி தேவி முதலியவர்கள் பரிபாலிக்கிறார்கள்.

ஏழாவது ஸர்வ ரோகஹர சக்ரம், வசிநீ வாக் தேவி முதலியவர்களால் சூழப்பட்டது.

எட்டாவது ஸர்வஸித்திப்ரதசக்ரம், காமேசுவர காமேசுவரிகளின் ஆயுதங்கள் தேவதா ஸ்வரூபத்தை எடுத்துக்கொண்டு தயாராக இருக்கின்றன.

ஒன்பது ஸர்வாநந்தமய சக்ரம். அதன் மத்தியில் பரப்ரஹ்ம ஸ்வரூபமான பிந்து ஸ்தானத்தில் ஸ்ரீ லலிதா தேவி வீற்றிருக்கினாறாள்.

ஆகவே இப்படிப்பட்ட ஸ்தானத்தில் தேவீ வீற்றிருக்கின்றாள் என்றும் அவளுக்குப் பரிசாரக தேவிகள் ஸகல அபீஷ்டகத்தையும் கொடுக்க வல்லவர்கள் என்றும் தியானித்தாலேயே நமக்கு வேண்டியவைகள் கிடைக்கு மென்றும் இருக்க அவர்களைப் பரிவாரங்களுடன் கூடிய ஸ்ரீ தேவியின் ஸ்தானமான ஸ்ரீ சக்கரத்தைப் பூஜித்தால் அபீஷ்டகங்கள் ஸித்திக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா.

பகவத்பாதர்கள் தேவியிடம் மிகவும் ஈடுபட்டவர்கள். தேவி பரமாகப் பல ஸ்துதிகளும் மானஸ பூஜைகளும் எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு அமிர்தமயமாக இருக்கும். தேவீ பக்தர்களுக்கு வாக்விலாசம் மிகவும் அழகாக இருக்கும். காளிதாசனுக்குத் தேவீ அனுக்ரஹத்தால் வாக்ஸித்தி ஏற்பட்டது. அவர் தம் குருவான கீர்வாணேந்திர ஸரஸ்வதியைப் புகழும்போது ''ஸர்வாத்மநாசைல ஸுதாத்மகோ ய என்று அவர்கள் தேவீ பக்தியால் தேவீ ஸாயுஜ்யமடைந்ததாகச் சொல்கிறார்கள் ஆசார்களும் தேவீ மாநஸ பூஜையில்............

யத்ரஸ்மின் ஸமயே தவார்சன விதவானந்த ஸாந்த்ர ஸ யோ யாதோஹம் த்வபின்னதாம் தவ சிவே ஸோயம் ப்ரஸாதஸ் தவ

(அன்னையே உன் பூஜா காலத்தில் விஷயங்களை எல்லாம் மறந்து உன்னுடன்அபேதத்தை அடைந்திருப்பது உன் பிரசாதத்தால் அன்றோ) என்று சொல்லி தேவி ஸாயுஜ்யத்தை ஸசிக்கின்றார். ஸ்ரீகாமாக்ஷி தேவியினிடம் நிகரற்ற பக்தியுள்ளவர் மூக கவி. அவர்

லீயே புரஹர ஜாயே மாயே தவ தருண பல்லவச் சாயே|

சரணே சந்த்ராபரணே, காஞ்சீஸரணே நதார்த்தி ஸம்ஹரணே||

என்று சொல்லும்போது தாம் தேவியின் சரணத்தில் லயித்திருப்பதை ஸந்தோஷத்துடன் கூறுகிறார்.

தேவியின் துர்க்கை என்ற அவ​தாரம் ​ பக்தர்களுக்கு ஸகல ஸங்கடங்களிலிருந்தும் விடுதலை கொடுக்கும். துர்கா ஸப்த ஸதி பாராயணம் செய்பவர்கள் கஷ்டத்திலிருந்து விடுபடுகின்றனர்.

யுதிஷ்டிரர் 12 வருடம் காட்டில் வசித்துவிட்டுப் பிறகு அக்ஞாதவாஸம் போகும் காலத்தில் துர்க்கையைத் தியானித்துக் கொண்டு துதி செய்தார்.

அன்னையே எங்கள் அக்ஞாத வாஸத்தை ஒருவரும் அறியாதிருக்கும்படி நிறைவேற்றிப் பிறகு நாங்கள் ராஜ்யத்தை அடைய உதவி செய்வீராக என்று வேண்டிக் கொண்டார்.

துர்க்கை நேரில் தோன்றி யுதிஷ்டிரருக்கு வரம் கொடுத்து ஸமாதானம் செய்தாள் என்று மஹாபாரதத்தில் சொல்லியிருக்கிறது.
தேவியைக் கவிகள் எப்படி வர்ணிக்கிறார்கள் என்பதைக் கவனிப்போம்.

தேவியின் ஸ்வரமாதுர்யத்தைப் பற்றி ஆசார்ய பகவத்பாதாள்......

விபஞ்ச்யா காயந்தீ விவிதமபதானம் பசுபதே

த்வயாரப்தே வக்தும் சலித ஸிரஸா ஸாது வசனே

ததீயைர் மாதுர்யை ரபலபித தந்திரீ கலரவாம்

நிஜாம் வீணாம் வாணீ நிசுலயதி சோலேந நிப்ருதம்

தேவி ஸரஸ்வதீ தேவியானவள் உன் எதிரில் வீணையை மீட்டிக் கொண்டு பரமசிவனுடைய நாநாவித லீலைகளைப் பாடும்போது  அவளுக்கு சபாஷ் கொடுக்கும் பொருட்டு ஸாது என்ற வார்த்தையை உச்சரிக்குங்கால் ஸா என்ற அக்ஷரத்தை கேட்ட உடனேயே அந்த அக்ஷரத்தின் மாதுர்யம் வீணை ஸ்வத்தைத் தோற்கடிக்கவே ஸரஸ்வதீ தேவி தன் வீணையை உறையில் போட்டு மறைத்து விட்டாள். இப்படி  அவள் புகழை எழுதிக் கொண்டே செல்லலாம். அவள் அருளால் அவள் புகழ் பாடிக் கொண்டிருப்போம்.
அப்பைய தீக்ஷிதர்      
       
         மார்க்க பந்து ஸ்தோத்ரம்**
வழித்துணைவா உன்னை நமஸ்கரிக் கிறேன்**
இது அப்பய்ய தீக்ஷிதர் எழுதியது. அப்பய்ய தீக்ஷிதரும் ஒரு சிறந்த சிவபக்தர். ஸமஸ்க்ரிதத்தில் பாண்டித்யம் மிகவும் உள்ளவர். அவர் சிவபெருமானை எனக்கு துணைக்கு வா என்று பயணம் மேற்கொள்ளும்போது வழியில் எந்த ஆபத்தும் வராமல் காக்கவேண்டும் என்று கேட்பது அற்புதமாக புரிகிறாற் போல் உள்ளது:**
என் தகப்பனார் வீட்டை விட்டு எங்கு சென்றாலும் இந்த ஸ்லோகங்களை சொல்லிக்கொண்டே நடப்பார். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நொண்டிச்சிந்து  ராகத்தில்  ''நந்தவனத்தில் ஓர் ஆண்டி'' மெட்டில் பாடிப் பாருங்கள் .உற்சாகமாக இருக்கும்.

**शिव शम्भो महादेव देव शिव शम्भोशम्भो महादेव देव ..
சம்போ மஹாதேவ தேவ சிவ சம்போ மஹா தேவ,     தேவேச சம்போ சம்போ மஹாதேவ தேவ

மகாதேவா நீயே வாழ்வளிப்பவன், சாந்தி அருள்பவன், சகல சௌபாக்கியங்களும் அள்ளி தருபவன். உன்னை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கிறேன்.**

फालावनम्रत् किरीटं.   भालनेत्रार्चिषा दग्धपंचेषुकीटम्  शूलाहतारातिकूटं
शुद्धमर्धेन्दुचूडं भजे मार्गबंधुम् .. शम्भो
பாலாவநம் ரத்ந கிரீடம் பாலநேத்ராச்சிஷா தக்த பஞ்சேஷுகீடம்
சூலா ஹதாராதிகூடம் சுத்தமர்த் தேந்து சூடம் பஜே மார்க்க பந்தும் (சம்போ)

என்னை வழிகாட்டி நடத்திச் செல்லும் என் உற்ற நண்பன் சாம்பசிவன் தலையில் பளபளவென்று மின்னும் கிரீடம் அணிந்தவன், கையில் தரித்த சூலாயுதத்தால் எதிரிகளை த்வம்சம் செய்பவன். குளிர்ச்சியோடு கண்ணைப் பறிக்கும் அமிர்தம் சொட்டும் இளம்பிறையை சிரத்தில் சூடியவன், அதே சமயம் நெற்றிக்கண் அக்னியால் மன்மதன், திரிபுரத்தையும் அழித்தவன், பரமேஸ்வரா, நீயே எனக்கு வழித்துணைவனாக மார்கபந்துவாக வந்து ரக்ஷிக்க வேண்டும்.

अंगे विराजद् भुजंगं    भ्र गंगा तरंगाभि रामोत्तमांगम्  ॐकारवाटी कुरंगं
सिद्ध संसेवितांघ्रिं भजे मार्गबंधुम् .. शम्भो..

 அங்கே விராஜத் புஜங்கம் அம்பரகங்கா தரங்காபி ராமோத்த மாங்கம்
ஓங்கார வாடீ குரங்கம் ஸித்தஸம்ஸேவி தாங்க்ரிம் பஜே மார்க்க பந்தும் (சம்போ)

சர்ப்பம் சங்கரனின் ஆபரணம். அவன் உடலில் கழுத்தில், சிரத்தில் நாகம் குடிகொண்டிருக்கும். இன்றும் எத்தனையோ சிவாலயங்களில் நாகம் வசிக்கிறது. அம்புலியோடு அழகிய கங்கையையும் சிரத்தில் சூடியவனே, பிரணவம் எனும் ஒம்கார நந்தவனத்தில் மான் போல் துள்ளி விளையாடுபவராக காணும் ஆனந்த நடேஸா , சகல ரிஷிகளும் சித்தர்களும் யோகிகளும், ஞானிகளும் பூஜிக்கும் திருவடியை உடையவனே, வா வந்து வழிகாட்டு வழித்துணைவா, மார்க்க பந்துவே உன்னை நமஸ்கரிக்கிறேன் என்னை ரக்ஷித்தருள்

नित्यं चिदानंदरूपं   निह्नुताशेष लोकेश वैरिप्रतापम्  कार्तस्वरार्गेद्र चापं
कृतिवासं भजे दिव्य मार्गबंधुम् .. शम्भो.

.நித்யம் சிதானந்த ரூபம் நின் ஹுதா சேஷலோகேச வைரி ப்ரதாபம்
கார்த்த ஸ்வரா கேந்த்ர சாபம் க்ருத்தி வாஸம் பஜே திவ்ய ஸன்மார்க்க பந்தும் (சம்போ)
பரமேஸ்வரா, நீ சத்யன், நித்யன், பரம்பொருள், சிதானந்த ரூபன், சாதுக்களை இம்சிக்கும் ராக்ஷஸர்களை, கொடூரர்களை உடனே அழிக்கும் சக்தி ஸ்வரூபா, களிற்றின் தோலில் ஆடை அணிந்தவா, தங்க மேரு போன்ற வில்லை யுடையவரும், சத்யஸ்வ ரூபனுமான சாஸ்வதமானவருமான, மார்கபந்து, வழிகாட்டியருளும் தெய்வமே, உன்னை சரணடைந்தேன். நிர்பயமாக நான் பயணத்தை மேற்கொள்ள கூடவே வந்து வழித்துணை வனாக காத்தருள்வாய்.**

कंदर्प दर्पघ्नमीचं   कालकण्ठं महेशं महाव्योमकेशम् *कुन्दाभदन्तं सुरेशं
कोटिसूर्यप्रकाशं भजे मार्गबंधुम् .. शम्भो..
கந்தர்ப்ப தர்ப்பக்ன மீசம் காலகண்டம் மஹேசம் மாஹ வ்யோ மஹேசம்
குந்தாபதந்தம் ஹுரேசம் கோடி சூர்ய ப்ரகாசம் பஜே மார்க்க பந்தும் (சம்போ)

மன்மதனுடைய கர்வத்தை,  தலைக் கனத்தை அடக்கி அவனை அழித்தவரும், ஆலஹால விஷத்தை விழுங்கிய நீலகண்டரும், பரந்த ஆகாகாசத்தை விரிந்த சடையாக கொண்டவரும், வெண்ணிற மல்லிகைப்பூக்களை, அரும்புகளை போல் பற்களை கொண்டவரும், பொன்னார் மேனியர், கோடி சூர்ய பிரகாசத்தை தனது ஒளியாக கொண்டவருமான பரமேஸ்வரன் மார்கபந்துவாக என்னோடு கூட பிரயாணம் செயது என் வழித்துணை வனாக வந்து என்னை ரக்ஷிக்க வேண்டும் .

मंदारभूतेरुदारं मंथरागेन्द्रसारं महागौर्यदूरम् सिंदूर दूर प्रचारं
सिंधुराजातिधीरं भजे मार्गबंधुम् .. शम्भो..
மந்தார பூதேருதாரம் மந்தார கேந்த்ர ஸாரம் மஹா கௌர்ய தூரம்
ஸிந்தூர தூரப்ராசரம் ஸிந்து ராஜாதி தீரம் பஜே மார்க்க பந்தும் (சம்போ)

மந்தார புஷ்பம் சிவனுக்கு ரொம்ப  பிடிக்கும். மந்தாரம் ஒரு கற்பக விருக்ஷம். கேட்பதெல்லாம் அ ளிக்கும், சிவனின் உடலோ மந்தரமலையை விட உறுதியானது. பலமிக்கது. கௌரியை இணைபிரியா அர்த்தநாரிஸ்வரா, தாம்ரவர்ணா , ரிஷபாரூடராக எங்கும் காட்சி தருபவரே, தைரியத்தில்,  தீரத்தில், சமுத்ரராஜனை மிஞ்சியவனே, என்னோடு சேர்ந்து கூடவே வழித் துணைவனாக வா, மார்க்க பந்து, வழித்துணை நண்பா உன்னை போற்றி வணங்குகிறேன்.**

अप्पय्ययज्वेन्द्रगीतं स्तोत्रराजं  पठेद्यस्तु भक्त्या प्रयाणे  तस्यार्थसिद्दिं विधत्ते
मार्गमध्येऽभयं चाशुतोषी महेशः ||
அப்பய்ய யஜ்வேந்த்ர கீதம் ஸ்தோத்ர ராஜம் படேத்யஸ்து பக்த்யா ப்ரயாணே
தஸ்யார்த்த ஸித்திம் விதத்தே மார்க மத்யே பயம் சாசு தோஸோ மஹேச; (சம்போ)
இது பலச்ருதி. யாரெல்லாம் பிரயாணம் மேற்கொள்கிறார்களோ, வழியில் எந்த இடையூறும், தடங்கலும் இல்லாமல் இனிய பயணமாக நிறைவு பெற இந்த மார்க்க பந்து ஸ்தோத்ரத்தை பாராயணம் செய்துவிட்டு பிரயாணம் துவங்கினால் சகல காரியமும் சித்தியாகும், சந்தோஷம் அபரிமிதமாக கிடைக்கும், இந்த அப்பய்ய தீக்ஷிதர் ஸ்லோகங்கள் பழையகாலத்தில் வழிப்போக் கர்கள் விடாமல் சொல்லும் மந்திரமாக இருந்தன. அப்போது மின்சாரம் இல்லை, துஷ்ட மிருகங் கள், கள்வர்கள் பயம், இருட்டு, விஷ ஜந்துக் கள் இவற்றிடமிருந்து பாது காக்க உதவியாக இருந்தது. இன்று  கொரோனா  போன்ற வேறுவிதமாக பயம் பிரயாணத்திலும்  இருக்கிறது என்பதால் இந்த ஸ்லோகம் இன்றும் மிக்க பயனுள்ளது. பயத்தை போக்குவது. சிவன், சம்பு , கூடவே வழித்துணை வனாக, மார்க்க பந்துவாக வருவான் . தேவை.

புதன், 22 ஜூலை, 2020

அமாவாஸ்யையை கணிக்கும் முறை.ஶ்ராத்த திதிக்கும் இதேதான் கணக்கு.

பஞ்சாங்கத்தில் பகற்பொழுதை "அஹஸ்"என்ற சொல்லால் குறிப்பிட்டு இருப்பார்கள்.அஹஸ்ஸானது முப்பது நாழிகைக்கு வெயில் காலங்களில் கூடுதலாகவும் பனி காலங்களில் குறைவாகவும் இருக்கும். ஆந்த அஹஸ்ஸை ஐந்தாக பிரித்துக்கொள்ளவேண்டும்.
அவை
1)ப்ராத:காலம்
2)ஸங்கவகாலம்
3)மாத்யாஹ்னகாலம்
4)அபராஹ்ன காலம்
5)சாயாஹ்ண காலம்
என்பனவாகும்.

இவற்றில் ஜன்மநக்ஷத்ரம், ஷஷ்ட்ப்த பூர்த்தி, வ்ரதங்கள் ஆகியவை ப்ராத:காலத்தை வைத்து கணிக்கப்படும்.

காயத்ரி ஜபம்,தீட்டின் நிவ்ருத்தி ஆகியவை ப்ராயஶ்சித்தங்களை  ஸங்கவ காலத்தை வைத்து.

நாந்தி முதலியவை மத்யாஹ்ன காலத்தை வைத்து

அமாவாசை ,சிராத்ததிதி நிர்ணயத்திற்கு அபராஹ்ன எனப்படும்  பிற்பகல் 01:12 மணிமுதல் 03:36 வரையில் திதி இருப்பதை கொண்டு நிர்ணயிக்கவேண்டும்.இரண்டு நாளும் அபராஹ்ன வ்யாப்தி இருந்தால் அதிகவ்யாப்தி என்றைக்கு அன்றைக்குதான் அமாவாஸ்யை பித்ருதர்ப்பணதினம்,சிராத்ததிதி.

*அயல் நாடுகளில் உள்ளவர்கள் ஸங்கல்பங்கள் செய்யும் பொழுது _"பாரத வருஷே"_ என்ற இடத்தில் என்ன சொல்வது என்ற சிறு தடுமாற்றத்தை போக்கவே இந்த பதிவு.......*

01. இந்தியா — *பாரத வர்ஷம்*.,

02. அட்லாண்டிக் பெருங்கடல் — *கேதுமாலா வர்ஷம்*.,

03. ஐரோப்பா — *ஹரி வர்ஷம்*.,

04. வடதுருவம் — *இலாவ்ருத வர்ஷம்*.,

05. தென் அமெரிக்கா — *குரு வர்ஷம்*.,

06. வட அமெரிக்கா — *ஹிரண்யக வர்ஷம்*.,

07. Green Land — *ரம்யக வர்ஷம்*.,

08. ஆசியா — *கிம்புருஷ வர்ஷம்*.,

09. பஸிபிக் சமுத்திரம் — *பத்ராஸ்வ வர்ஷம்*.

அயல் நாடுகளில் ஸங்கல்பங்களுக்கு இவற்றை கையாளலாம்.

ருதுக்கள்

சித்திரை, வைகாசி - வஸந்த ருது
ஆனி, ஆடி - க்ரீஷ்ம ருது
ஆவணி, புரட்டாசி - வர்ஷ ருது
ஐப்பசி, கார்த்திகை - சரத் ருது
மார்கழி, தை - ஹேமந்த ருது
மாசி, பங்குனி - சிசிர ருது

கிழமைகளைச் சொல்லும் முறை

ஞாயிறு - பானு வாஸர
திங்கள் - இந்து வாஸர
செவ்வாய் - பவும வாஸர
புதன் - சவும்ய வாஸர
வியாழன் - குரு வாஸர
வெள்ளி - ப்ருகு வாஸர
சனி - ஸ்திர வாஸர

பூஜைகள் செய்யும் பொழுது, மாதங்களைச் சொல்ல வேண்டிய முறை

சித்திரை - மேஷ மாஸே
வைகாசி - ரிஷப மாஸே
ஆனி - மிதுன மாஸே
ஆடி - கடக மாஸே
ஆவணி - ஸிம்ம மாஸே
புரட்டாசி - கன்யா மாஸே
ஐப்பசி - துலா மாஸே
கார்த்திகை - வ்ருச்சிக மாஸே
மார்கழி - தனுர் மாஸே
தை - மகர மாஸே
மாசி - கும்ப மாஸே
பங்குனி - மீன மாஸே.