புதன், 22 ஜூலை, 2020

*தீர்க்க சுமங்கலி பவா என்றல் என்ன ? அறிந்துகொள்வோம்* .

தீர்க்க சுமங்கலி பவா ! என்ற ஆசிக்கு *மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.*

திருமணத்தில் ஒன்று,
 *60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று* .
 *70 வயது பீமரத சாந்தியில் ஒன்று* .
 *80 வயது சதாபிஷேகத்தில்ஒன்று* .
 *96 வயது கனகாபிஷேகத்தில் ஒன்று* !

#இவைகள் பற்றி ஒரு சிறு விளக்கம்:

ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.

பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மணவிழா காணும் பாக்கியம் அமைகிறது.

இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன.

சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன.

உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம்மகிழும்.

நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும்.

பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு

சூரியனுக்கு ஓர் ஆண்டும்,
செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும்,
சந்திரனுக்கு ஒரு மாதமும்,
புதனுக்கு ஒரு வருடமும்,
வியாழனுக்கு 12 வருடங்களும்,
வெள்ளிக்கு ஒரு வருடமும்,
சனி பகவானுக்கு 30 வருடங்களும்,
ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும்,
கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன.

இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும்.

மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும்.

ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்.

பூஜையின் போது 84 கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும்.

அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது.

பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும்.

 *அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 84  கலசங்கள் எதைக் குறிக்கின்றன* ?

தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது என்பதை நாம் அறிவோம்.

இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளையும், இந்த தேவதைகளின் அதிபதிகளாகிய...

அக்னி,
சூரியன்,
சந்திரன், 
வாயு,
வருணன்,
அஷ்ட திக் பாலகர்கள்,
பாலாம்பிகை,
அமிர்த கடேஸ்வரர்,
நவநாயகர்கள்..
சேர்த்து குறிப்பதற்காகத்தான்
84 கலசங்கள் என்பது ஐதீகம்.

பிரபவ முதல் விஷு வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும்,

சித்ரபானு முதல் துன்முகி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும்,

ஹேவிளம்பி முதல் விரோதிகிருது வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும்,

பரிதாபி முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும்..
அதிபதிகள் ஆவார்கள்.

தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்துதான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும்.

தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே…. எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும்.

தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள்.

காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீஷ்ம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும்.

70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும்.

ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும்.

அவனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை.

இப்படி அனைத்திலும் இறைவனை, அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை ஒரு மனிதன் 80 வயதில் பெறும் போதுதான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறார். அப்போது சதாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்.

இறையோடு இரண்டரக் கலந்து இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு 96 வயதில் கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி பவா ஆசிக்கு உரியதாக அமைகிறது.
*கர்மபலன்* இதுதான்...!

*ப்ரத்யக்ஷ தெய்வம்* என்று நாமெல்லாம் கொண்டாடும் நம் *பெரியவாளும்* இதைப் பலமுறை கூறியிருக்கிறார்.

நாம் பேசும் பேச்சுக்கூட கணக்காயிருக்கணும் என்று பெரியவா உபதேஸிப்பார். நம் ஆத்திரம், கோபத்தை தீர்த்துக் கொள்ள, அடுத்தவர்களை தூற்றுவது, உருவத்தை வைத்து கேலி செய்வது, நம் குழந்தைகள் மட்டுமில்லை, நம் சுற்றம்-நட்பு, ஏன்? முன்பின் தெரியாதவர்களானாலும், அவர்களை நோக்கி வீசப்படும் வசவுகள், நிந்தனைகள் எல்லாமே..... அப்படி நிந்திப்பவர், அதை தூண்டுபவர், ஆமோதிப்பவர், அதைத் தடுக்காமல் அமைதி காத்து வேடிக்கை பார்ப்பவர் இப்படியாக இத்தனை பேர் கணக்கிலும் debit side-ல் வரவு வைக்கப்படுகிறது.

நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும், இது அத்தனைபேருக்கும் பொதுவான இயற்கையின் விதி! நியதி!

இந்த ஜன்மத்தில் நமக்கு வாய்த்திருக்கும் _அம்மா, அப்பா, ஸஹோதர-ஸஹோதரிகள், நண்பர்கள், கணவன்-மனைவி, சுற்றம்_, அத்தனையுமே... நாம் பூர்வ ஜன்மங்களில் ஆசைப்பட்டதுதான்! ஆனாலும், நம்முடைய பூர்வ ஜன்ம கர்மவினைகளால், இவை அநுகூலமாகவோ, ப்ரதிகூலமாகவோ இருக்கும்.

நல்ல அன்பான பெற்றோர்கள், கணவன்-மனைவி, ஸொந்தங்கள் இருந்தும், நாம் அவர்களை மதிக்காமல், கரித்துக்கொட்டி வெறுத்து ஒதுக்கினால், இந்த ஜன்மத்தில் நாம் ஏதோ அவர்களை பழி வாங்கியதாக நினைத்து ஸந்தோஷப்படலாம். ஆனால், இந்த அன்பான நன்மை, அடுத்தடுத்த ஜன்மங்களில், நம்மிடமிருந்து பறிக்கப்பட்டுவிடும் என்பதே ஸத்யம்!

அதோடு, இந்த உலகில் எல்லோருக்கும் எல்லாமுமே கிடைக்காது! இல்லாத ஒன்றுக்காக அலைவதை விட்டுவிட்டு, நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் அன்பு காட்டி, பகவானுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

*ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்...*

🙂🙏
அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் இல்லத்திற்கு வந்தார் முனிவர் ஒருவர். அப்போது அபிமன்யு வீட்டில் இல்லாததால், அவனது மனைவி உத்தரையைச் சந்தித்து ஆசியளித்த அவர் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை பரிசளித்தார்.

அதன் முன் நிற்பவருக்கு பிரியமானவர் யாரோ அவரது முகமே கண்ணாடியில் தெரியும். உத்தரை உற்றுப் பார்த்தாள். அவளது கணவர் அபிமன்யு தெரிந்தார். சற்று நேரத்தில் வீடு திரும்பிய அபிமன்யு கண்ணாடியைப் பற்றிய விபரம் அறிந்து வியந்தான். அவன் பார்த்த போது அதில் மனைவியான உத்தரை தெரிந்தாள். அன்புக்கயிறால் இருவரும் கட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ந்தனர். அப்போது அபிமன்யுவின் தாய்மாமன் கிருஷ்ணர் அங்கு வந்த போது, ”கண்ணாடியைப் பார்த்து ஆச்சரியப்படுகிறீர்களே! என்ன விஷயம்?” என்றார்.

”மாமா! இந்த கண்ணாடியில் நீங்கள் தெரிய மாட்டீர்கள். உங்களுக்கு அன்புக்குரியவர் யாரோ அவரே தெரிவார். உங்கள் மனதைக் கவர்ந்தவர் அத்தை ருக்மணியா, பாமாவா” என்றான் அபிமன்யு. யாராவது ஒரு மனைவியை அடையாளம் காட்டி, இன்னொருத்தியிடம் சிக்குவானா அந்த மாயக்கிருஷ்ணன்! அவன் கண்ணாடி யைப் பார்த்த போது அதில் சகுனி தெரிந்தான்.

”இதென்ன விந்தை” என்றான் அபிமன்யு. ”அபிமன்யு! பக்தர்கள் கூட காரியம் ஆக வேண்டுமென்றால் தான் என்னை நினைப்பார்கள். ஆனால் துாக்கத்திலும் கூட என்னைக் கொல்லத் துடிக்கிறான் சகுனி. எப்போதும் அவனுக்கு என் நினைவு தான். அதனால் எனக்கும் அவன் நினைவு” என்றார். நிந்தனை செய்தாலும் நாத்திகர்கள் தான் கடவுளை அதிகம் சிந்திக்கிறார்கள் என்பதற்கு சகுனியே சாட்சி.

செவ்வாய், 14 ஜூலை, 2020

நவதுர்க்கை என்றால் துர்க்கையின் ஒன்பது வடிவங்கள் என கூறப்படுகின்றது.*

‘நவ’ என்றால் ஒன்பது என்பது பொருள். வேதங்கள் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றது.

நவ துர்க்கைகள் - துர்க்கை அவதாரங்கள் :

1.சைலபுத்ரி

2.பிரம்மசாரிணி

3.சந்திர காண்டா

4.கூஷ்மாண்டா

5.ஸ்கந்த மாதா

6.காத்யாயனி

7.காளராத்திரி

8.மகாகௌரி

9.சித்திதாத்ரி

1.சைலபுத்ரி

துர்க்கை அம்மனின் முதல் வடிவம் சைலபுத்ரி. நவராத்திரி முதல் நாளில் சைலபுத்ரி துர்க்கையை வழிபடுவது வழக்கம். சைலபுத்ரி என்பது ‘மலைமகள்’ என்று பொருள். மலை அரசனான இமவானின் என்பவரின் மகள் இவர். இவருக்கு பார்வதி, சதி, பவானி தேவி என பல்வேறு பெயர்கள் உள்ளன.

இவர் தனது முன் அவதாரத்தின் தட்சனின் மகளாக பிறந்ததால் ‘தாட்சாயினி’ என்றும் கூறுவர். இவர் தான் சிவனை திருமணம் பார்வதி தேவி ஆவார்.

ஒன்பது சக்கரங்களில் முதல் சக்கரமாக, மூலாதாரமாக விளங்குகின்றார். இவரின் வாகனம் நந்தியாகவும், ஆயுதம் சூலத்தையும் ஏந்தி நிற்கிறாள்.

நவராத்திரி விழாவில் ஒவ்வொரு தினத்தில் செய்ய வேண்டிய பூஜை மற்றும் பிரசாதங்களின் விபரம்

2.பிரம்மசாரிணி

நவராத்திரி திருவிழாவில் இரண்டாம் நாளில் வணங்கப்படும் துர்க்கையாக பிரம்மசாரிணி தேவியை வணங்கப்படுகிறது.

‘பிரம்ம’ என்றால் தபஸ் அதாவது தவம் செய்தல் என்று பொருள். மிக எளிமையாக காட்சி தரும் இந்த பிரம்மசாரிணியின் வலக் கரத்தில் கமண்டலம் காணப்படுகிறது.ம். இந்த துர்க்கைக்கு வாகனம் ஏதும் இல்லை.

சிவ பெருமானை திருமணம் செய்யும் பொருட்டு பல ஆயிரம் ஆண்டுகளாக கடும் தவம் புரிந்தார். இவரின் தவ உக்கிரம் மூன்று உலகங்களையும் உலுக்கியது. இறுதியில் சிவ பெருமான் பிரம்மசாரிணியைத் திருமணம் புரிந்தார் என்பது புராணக் கதை.

அறிவு, ஞானம், நன்றி நிறைந்த பிரம்மச்சாரிணியை வணங்குவதன் மூலம் பொறுமையைத் தர வல்லவள். அதோடு சோம்பலை நீக்கி சுறுசுறுப்பை தரவல்லவர்.

பிரம்மசாரிணி துர்க்கைக்கு கன்னியாகுமரியில் கோயில் உள்ளது.

ஆதி சக்தி பீடமாக விளங்கும் தாராதாரிணி கோயில் வரலாறு!

3. சந்திரகாண்டா

நவராத்திரியின் மூன்றாம் நாளில் சந்திர காண்டா அன்னையை வணங்கப்படுகிறார். இவர் அன்னையின் மூன்றாவது வடிவமாவார். நீதியை நிலை நாட்டி சந்திர பிறையை அணிந்தவள். ‘சந்திர’ என்றால் நிலவு. ‘காண்டா’ என்றால் மணி என்று பொருள்.

சந்திர மணி அணிந்த சந்திர காண்டா, பத்து கைகளை கொண்டு காட்சி தருகின்றார். இவர் சிங்க வாகனத்துடன் அருளுகின்றார்.

சந்திரகாண்டா போருக்கு தயாரான கோலத்தில் காட்சி தருகிறார்.

இவளின் கோவில்கள் : உத்தர பிரதேசம், வாரணாசியில் உள்ள சித்ரகந்த குல்லி கோயில்

4. கூஷ்மாண்டா:

நவராத்திரி விழாவின் 4ஆம் நாளான சதுர்த்தி தினத்தன்று ‘கூஷ்மாண்டா’ வடிவ துர்க்கையை வணங்குவது வழக்கம்.கு, உஷ்மா, ஆண்டா என்ற மூன்று சொற்கள் உள்ள பெயரின் முறையே சிறிய, வெப்பமான, உருண்டை என்ற பொருள் கொண்டது.

கூஷ்மாண்டா என்பவர் ஆதிசக்தி துர்கா தேவியின் படைத்தல் உருவம் ஆகும். இவர் சூரியமண்டலத்தை இயக்குவதாகக் கூறப்படுகின்றது. இவரை வணங்குவோர் உடல் , மன வலிமை பெறுவர்.



கூஷ்மாண்டாவுக்கான கோவில்கள் : உத்தர பிரதேசம், கான்பூர் நகரரில் உள்ள கதம்பூர்.

5. ஸ்கந்த மாதா

ஸ்ரீ ஸ்கந்த மாதா நவராத்திரி விழாவின் 5ம் நாளில் வணங்கப்படுகின்றாள். ஸ்கந்த என்றால் முருகனை குறிக்கும். மாதா என்றால் அன்னை அதாவது முருகனின் தாய் ஆவார்

இவர் தேவர்கள், மனிதர்களுக்கு பகைவர்களாக விளங்கிய சூரபத்மனை (தாரகாசுரனை) வதம் செய்தவள். தேவர்களின் சேனாதிபதியாக விளங்கும் முருகனின் தாயாக மிகவும் மதிக்கப்படுபவள் ஆவார்.

உருவம்:

நான்கு கரங்களை உடைய ஸ்கந்த மாதா இரண்டு கரங்களில் தாமரையும், ஒரு கரம் பக்தர்களுக்கு ஆசி வழங்குவது போன்றும், மற்றொரு கரம் மடியில் குழந்தை முருகனை ஆறுமுகத்துடன் அரவணைத்து காட்சி தருகின்றாள். இவர் தாமரை மலர் மீது அமர்ந்து தவம் செய்பவளாக விளங்குகின்றார்.

இவரை வணங்குவோரை கைவிட மாட்டாள். மோட்சத்திற்கு இட்டுச் செல்வார் என நம்பப்படுகின்றார்.

மற்ற தேவிகளுக்கு இல்லாத சிறப்புகள் இவருக்கு உண்டு. இவரை வழிபடும் போது நாம் முருகனையும் சேர்த்து வணங்குகின்றோம். இதனால் இருவரின் ஆசி நமக்கு கிட்டுகின்றது.

குலச்சேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் சிறப்புகள்

6. காத்யாயனி

நவராத்திரி விழாவின் ஆறாம் நாளில் மாதா காத்யாயனியை வணங்குவது வழக்கம்.

முற்காலத்தில் காதா என்ற முனிவர் இருந்தார். அவருக்கு காதயா என்ற மகன் இருந்தார். காதா கடும் தவம் செய்து துர்க்கையை மகளாக பெற்றார். இதனால் இவருக்கு ‘காத்யாயனி’ என்ற பெயர் வந்தது. இவருக்கு மகிஷாசுர மர்த்தினி என்ற பெயரும் உண்டு.

காத்யாயனி கோவில்கள் :

டெல்லி, சட்டர்பூரில் கோயில் உள்ளது.

தமிழகத்தில், தஞ்சையில் காத்யாயனி அம்மன் கோவில் உள்ளது.

7. காளராத்திரி

நவராத்திரி திருவிழாவின் ஏழாம் நாளில் ‘காளராத்திரி’ யை வழிபடுவது வழக்கம். அன்னையின் ஒன்பது ரூபங்களில் மிக பயங்கரமான ரூபம் இந்த காளராத்திரி எனும் காளி ரூபம்.

காள என்றால் நேரத்தையும், மரணத்தையும் குறிக்கும். ராத்திரி என்றால் இரவு எனவும் பொருள். காளராத்திரி என்றால் காலத்தின் முடிவு என பொருள்படும்.

இந்த துர்க்கை வடிவம் எதிரிக்கும் அச்சத்தைத் தரக்கூடியது.இவளின் நான்கு கைகளின், ஒன்றில் கரத்தில் வஜ்ராயுதமும், மறுகரத்தில் வாளும் இருக்கும். மற்ற இரு கரங்கள் பக்தர்களுக்கு அபயம் தருவதாக உள்ளது.

இந்த அன்னைக்கு கழுதை வாகனமாக உள்ளது. இவளின் பார்வை பட்டாலே துன்பமும், பாவமும் தொலைந்திடும். பேய் பிசாசுகள் பயந்து ஓடும் என்றும் நம்புகின்றனர்.

காளராத்திரி கோவில்கள்:

காளராத்திரி துர்கா ஆலயம், வாரணாசி, உத்தரப் பிரதேசம்

8. மகாகௌரி

மகா கௌரி துர்க்கை அம்மனை நவராத்திரி தினத்தின் 8ஆம் நாளில் வணங்கப்படுகின்றது.

மகா என்றால் பெரிய என்றும், கௌரி என்றால் தூய்மையானவள் என்றும் பொருள்படும். இவரின் பால் போல் வெண்மையாகக் காட்சி தருகின்றார்.

முற்காலத்தில் மகாகௌரி, ஈசனை மணம் செய்து கொள்ள வேண்டி கடுமையாக தவத்தை மேற்கொண்டார். அப்போது அவரின் உடலை மண் சூழ்ந்து கருமையாக்கியது. இவரின் தவத்தை மெட்சிய சிவன் இவரை மணந்து கொள்வதாக கூறினார். ஆனால் அதற்கு முன் கங்கை நீரில் நீராடினார். அப்போது தேவியின் உடல் பால் போன்று வெண்மையாக மாறியதால் இவரை மகாகௌரி என அழைக்கப்படுகிறார்.

நான்கு கரம் கொண்ட மகாகௌரி, ஒரு கரத்தில் சூலம், மறு கரத்தில் மணியையும் தங்கி நிற்கிறாள். மற்ற இரு கரங்கள் பக்தர்களுக்கு அபயம் தருகிறார். இவருக்கு வெண்மையான காளை வாகனமாக இருக்கின்றது. இவளின் அருள் கிடைத்தால் நம் வாழ்வு வசந்தமாகும்.

மகாகௌரி கோவில்கள் : கண்க்ஹல், ஹரித்வார், உத்தரகண்ட் மாநிலம்

9. சித்திதாத்ரி

நவராத்திரி விழாவின் கடைசி நாளான மகா நவமி தினத்தில் ‘சித்தி தாத்ரி’ துர்க்கை வழிபாடு செய்வர். ‘சித்தி’ என்றால் சக்தி என்றும், தாத்ரி என்றாள் அருள்பவள், அதாவது சக்தியை அருள்பவள் என்று பொருள்.

மார்கண்டேய புராணத்தில் பக்தர்களுக்கு அன்னை அருளிய எட்டு விதமான சித்திகளான சித்திகள் -அணிமா, மகிமா, கரிமா, லஹிமா, ப்ராப்தி, பிரகாமியம், வாசித்வம், ஈசத்வம் வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தாமரை மலரில் அமர்ந்திருக்கும் சித்திதாத்ரி, நான்கு கரங்களில், இடது கரத்தில் கதை, சக்கரத்துடனும், வலக் கரத்தில் தாமரை, சங்கு ஏந்தியும் அருள்பவள்.

சித்திதாத்ரி அன்னையின் வாகனம் சிங்கம். சிவன் பெருமானே இவளை வழிபாடு செய்து அனைத்து சித்திகளையும் பெற்று 'அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என தேவி புராணம் கூறுகிறது.

மோட்சத்தை அருளக்கூடிய சித்திதாத்ரி தேவியை எந்நேரமும் மனிதர், தேவர், முனிவர், யட்சர், கிங்கரர் வழிபடுவர்.

இப்படி 9 விதமான துர்க்கைகள் உள்ளன.

திங்கள், 13 ஜூலை, 2020

நாகரத்தினம்மாளும் தியாகராஜ ஆராதனையும் & வரலாறும் {பகுதி-3}

நாகரத்தினம்மாளும் தியாகராஜ ஆராதனையும் & வரலாறும் {பகுதி - மூன்று}

பெரிய கட்சியில் அவரது நண்பர்கள் பலர் இருந்ததால் நாகரத்தினம்மாள் அந்தக் கட்சியின் ஆதரவை முதலிலேயே வென்று விட்டார். சமாதி இருந்த இடம் ராஜா ராமண்ணாஜி சூர்வே என்பவரது வசமிருப்பதாக அவர்கள் மூலமாகத் தெரியவரவே நாகரத்தினம் அவருடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கினார். பொது நன்மைக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிலத்தை விற்பதில் சட்டரீதியான வில்லங்கங்கள் இருந்தாலும் நாகரத்தினம் தனது வசமுள்ள சில சொத்துகளை மாற்றாக வைத்து ஒருவழியாக ஏற்பாடு செய்து விட்டார். இரண்டு கட்சிகளும் நடப்பவற்றை அவநம்பிக்கையுடன் பார்த்துக் கொண்டிருந்தன. நாகரத்தினம்மாள் சற்றும் தாமதியாமல் தனது சொந்தச் செலவிலேயே தியாகராஜரின் கற்சிலை ஒன்றைச் செய்வித்துப் பிருந்தாவனத்தின் முன் பிரதிஷ்டை செய்தார். சின்னக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதை விரும்பவில்லை. சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் இந்தச் சிலையைப் பற்றி மோசமாகப் பேசி வந்தார். பிருந்தாவனத்தை விக்கிரகம் மறைப்பதாக ஒரு சர்ச்சை இன்று வரை தொடர்கிறது. நாகரத்தினம்மாள் அந்த இடத்தை வாங்கி விட்டதால் எவராலும் எதுவும் பேச முடியவில்லை. சமாதியின் மீது கோவில் எழுப்புவதற்கான அடிக்கல் 1921 ஆண்டு அக்டோபர் 27 இல் இடப்பட்டுப் பணியும் தொடங்கியது. இடைப்பட்ட ஆண்டுகளில் இரண்டு கட்சிகளின் ஆராதனை விழாக்களும் நடந்து வந்தன, ஒரே ஒரு வித்தியாசத்துடன். பெரிய கட்சி ஆராதனை நாளன்று தனது விழாவைத் தொடங்கி ஐந்து நாள்கள் நடத்தியது. சின்னக் கட்சி ஆராதனைக்கு நான்கு நாள்கள் முன்பாகத் தனது விழாவைத் தொடங்கி ஆராதனையன்று முடித்துக் கொண்டது. எப்படியோ திருவையாறு மக்களுக்கு ஒன்பது நாள்கள் தொடர்ச்சியாக நல்ல விருந்து கிடைத்தது வயிற்றுக்கும் செவிக்கும்.

கோயில் பணி 1925 இல் முடிந்து கும்பாபிஷேகம் ஜனவரி 7 இல் நடந்தது. ராமுடு பாகவதர் தினசரிப் பூசைக்கான பூசாரியாக நாகரத்தினம்மாளால் நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டு சின்னக் கட்சியின் விழா மூன்றாம் நாள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளையும், நாகரத்தினம்மாளும் திருவையாறு சப் இன்ஸ்பெக்டர் ராமசாமி ஐயரிடம் சென்று இரண்டு கட்சிகளும் ஒன்றாகச் சேர்ந்து விழாவை நடத்த வில்லை என்றால் அங்குச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை எழக்கூடும் என்பதை எடுத்துக் கூறினர். அவர் சின்னக் கட்சியினரைச் சென்று பார்த்து பெரிய கட்சியினரோடும் நாகரத்தினம்மாளோடும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். சந்திப்புக்கு ஏற்பாடாகிக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே கோவிந்தசாமிப் பிள்ளைக்கும், வைத்தியநாத ஐயருக்கும் தகராறு மூண்டதால் இரு கட்சியினரும் பரஸ்பரம் விழாக் கொண்டாட்டங்களை நடக்க விடுகிறேனா பார் என்று மிரட்டிக் கொண்டார்கள். அன்று மாலை சின்னக் கட்சியினர் வைத்தியநாத ஐயர் அரியக்குடி [அவர் அப்போது அந்தக் கட்சிக்கு வழி நடத்துபவராக மாறியிருந்தார்] இருவரின் தலைமையில் திருவையாறு மாஜிஸ்திரேட் ஏ.வி. சுப்பையாவைச் சந்தித்து ஆராதனை விழா நடக்கும் மறுநாள் 'பந்தோபஸ்து' தரும்படி கேட்டுக் கொண்டனர். மாஜிஸ்திரேட் இரண்டு கட்சியிரையும் அழைத்து ஆராதனையன்று காலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் பெரிய கட்சி தனது பூஜைகளை முடித்துக் கொள்ள வேண்டும். சின்னக் கட்சியினர் ஒன்பது மணியிலிருந்து பன்னிரண்டு மணிவரை பூஜை செய்வதற்குச் சமாதியை அவர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்றும் உத்தரவு இட்டார். எல்லாம் சுமுகமாக நடப்பதற்காகப் போலீஸ் காவலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

மறுநாள் நாகரத்தினம்மாளும் கோவிந்தசாமிப் பிள்ளையும் ராமுடு பாகவதரைப் பெரிய கட்சியின் பூஜையை ஒன்பது மணிக்குள் முடிக்கச் சொல்லி சமாதிக் கோவில் கதவைப் பூட்டிச் சாவியை அவரிடம் கொடுத்து அனுப்பி விட்டனர். பூஜைக்காக வந்த சின்னக் கட்சியினர் போலீஸை அழைத்தனர். போலீஸ் பூட்டை உடைக்க உத்தர விட்டது. ஆனால் ராமுடு பாகவதர் சமயத்துக்கு வந்து அவரே கதவைத் திறந்து விட்டார். மேலும் தான் சின்னக் கட்சியின் பூஜைக்கு இடைஞ்சலாக இருக்க மாட்டேன் என்று எழுத்து மூலமாக மாஜிஸ்திரேட்டுக்கு உறுதி மொழியும் அளித்தார். போலீஸ் சமாதி இருந்த இடத்தில் நுழைந்து பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்தது. 1926 இல் சின்னக் கட்சி தனது ஆராதனை விழாவைப் புஷ்ய கல்யாண மண்டபத்திலிருந்து சென்ட்ரல் உயர் நிலைப் பள்ளிக்கு மாற்றியது. அந்த ஆண்டு நாகரத்தினம்மாள் சமாதி தனக்குப் பாத்தியப்பட்டது என்றும் தன்னால் நியமிக்கப் பட்டவரைத் தவிர யாரும் பூஜை செய்யக் கூடாது என்றும் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இரு கட்சியினரின் ஆராதனை விழாக்களும் முன்பு போலத் தொடர்ந்தன.

நாகரத்தினம்மாள் சின்னக் கட்சியோடு மோதிக் கொண்டது போல் பெரிய கட்சியோடும் உறவை முறித்துக் கொள்ளும் சந்தர்ப்பமும் ஏற்பட்டது. 1927இல் பெரிய கட்சி நடத்திய ஒர் இசை அஞ்சலி விழாவில் கலந்து கொள்ள வந்த நாகரத்தினம்மாள் பாடுவதற்காக மேடையேறினார். ஆனால் பக்கவாத்தியக்காரர்கள் பெண்களுக்கு சமாதிக்கு முன்பு பாட அனுமதியில்லை என்று கூறி வாத்தியங்களைக் கீழே வைத்து விட்டனர். கோப முற்று வெளியேறிய நாகரத்தினம்மாள் சொந்தமாகவே விழா எடுக்கத் தீர்மானித்தார். இப்படியாக பெங்களூர் நாகரத்தினம்மாள் கட்சி ஒரு மூன்றாம் அணியாக உருவெடுத்து பெரிய கட்சி விழா எடுத்த அதே நாள்களில் சமாதியின் பின்னால் விழா நடத்தத் தொடங்கியது. பெண்களும் இளம் இசைக் கலைஞர்களும் ஊக்குவிக்கப்பட்டனர். மற்ற இரு கட்சிகளின் விழாக்களை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டு இந்தக் கட்சியின் விழாகளைகட்டியது. தனது கட்சியின் விழாக்களுக்கெல்லாம் நாகரத்தினம்மாள் தன் கைப்பணத்தைச் செலவழித்து வந்தார். இறுதியாகத் தன் சென்னை வீட்டை விற்று விட்டு 1930 இல் நிரந்தரமாகத் திருவையாறுக்குக் குடிவந்து விட்டார். மேலும் ஒவ்வோர் ஆண்டும் நன்கொடை வசூல் செய்வதற்காகப் பல இடங்களுக்குச் சென்றார். தனது பருத்த உடலையும் தூக்கிக்கொண்டு தொலை தூரங்களுக்குக்கூட ஆராதனை விழா நிதி திரட்டு வதற்காகத் தளராமல் சென்று வந்தார்.

1930 இல் மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளைக்கு மாரடைப்பு வந்து அவரது உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாக நலியத் தொடங்கியது. 1931இல் அவர் இறப்பதற்கு முன்னால் பெரிய கட்சியின் ஆராதனை விழாவை ஏற்று நடத்தும் பொறுப்பைத் திருவீழிமிழலைச் சகோதரர்கள் வசம் ஒப்படைத்தார். நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை போன்ற வித்வான்கள் அவர்களுக்கு உதவியாக இருந்தனர். காஞ்சிபுரம் நாயனா பிள்ளையும் 1934 இல் அவர் மரணமடையும் வரையிலும் முக்கியப் பங்கு வகித்துவந்தார். நாடகக் கம்பெனிகளான தஞ்சாவூர் சுதர்ஸன சபா நவாப் ராஜமாணிக்கத்தின் நாடகக் குழு போன்றவை பெரிய கட்சி ஆராதனை விழாவில் பங்கேற்றன. எந்தப் பிரச்சினையும் இல்லாமல் விழா நல்ல முறையில் நடந்து வந்தது. ஆனால் நாகரத் தினம்மாள் நடத்திய விழா தான் வெகு விமரிசையாக நடந்தது. 1938 இல் நாகரத்தினம்மாள் சமாதியைச் சுற்றியுள்ள இடங்களையும் விலை கொடுத்து வாங்கித் தியாகராஜ ஆசிரமம் என்று அதற்குப் பெயர் கொடுத்தார். திருவையாறு வக்கீல் சி.வி. ராஜகோபாலாச்சாரி போன்ற பிரமுகர்களும் அவரது விழாக்களில் பங்கேற்றனர். இந்தச் சூழ்நிலையில் பெரிய கட்சி, சிறிய கட்சியோடு இணைவது பற்றித் தீவிரமாக யோசிக்கத் தொடங்கியது.

சின்னக் கட்சியிலும் இதே உணர்வு தான் இருந்தது. அக்கட்சியில் நிதி திரட்டுவதிலும் ஆராதனை விழாவிலும் முக்கியப் பங்காற்றிவந்த அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், முசிறி சுப்பிரமணிய ஐயர், செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் போன்ற இளம் கலைஞர்கள் ஆராதனை விழாவை இணைந்து நடத்தும் படி வலியுறுத்தினர். மூத்த கலைஞர்களான மகாராஜபுரம் விஸ்நாத ஐயரும், பல்லடம் சஞ்சீவராவும் கூட இதே போன்ற எண்ணம் கொண்டிருந்தனர். சூலமங்கலம் வைத்தியநாத ஐயர் இதில் ஈடுபாடு காட்டவில்லை என்றாலும் வயதாகிக் கொண்டு வந்ததால் அவருக்கும் விழாவை நடத்துவது சிரமமாக இருந்தது. 1939 இல் காவேரி டெல்டா பகுதியின் தனி அலுவலராகப் பொறுப்பேற்ற எஸ்.ஒய். கிருஷ்ண சாமி, ஐ.சி.எஸ். ஒன்று பட்ட ஆராதனை விழா நடத்தப்பட வேண்டும் என்பதில் தீவிரமான ஆர்வம் காட்டினார். அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் 1940 ஜனவரி முதல் வாரத்தில் சென்னையில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். நாகரத்தினம்மாள் அணி சார்பில் நாகரத்தினம்மாளும் சி.வி. ராஜகோபாலாச்சாரியும், பெரிய கட்சி சார்பில் திருவீழிமிழலைச் சகோதரர்களும், சின்னக் கட்சி சார்பில் முசிறியும் செம்மாங்குடியும் கலந்து கொண்டனர். ஆராதனை விழாவை நடத்துவதற்காகப் புதியதோர் அமைப்பை ஏற்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. சூலமங்கலம் வைத்தியநாத பாகவதருக்குக் கடிதம் அனுப்பப்பட்டது. அவர் கீழ்க்காணும் நிபந்தனைகள் விதித்து இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக் கொண்டார். அ.சின்னக் கட்சியினரின் பூஜை செய்யும் உரிமையை நீதிமன்றம் உறுதி செய்திருப்பதால் ஆராதனை நாளன்று ராஜகோபால பாகவதர் சமாதியில் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும். ஆ. நாதஸ்வரக் கலைஞர்களை மேடையில் கச்சேரி நடத்த அனுமதிக்கக் கூடாது. இ. பிராமணர்களுக்கான போஜனம் சின்னக் கட்சியின் வழிமுறைப்படி நடத்தப்பட வேண்டும்.

தியாகப் பிரம்ம மஹோத்சவ சபா 1940 ஜனவரியில் தொடங்கப்பட்டது. அந்த ஆண்டு ஆராதனையையும் அது நடத்தியது. இரு அணிகளும் இணைந்ததைக் கேள்விப்பட்ட ஹரிகேசவ நல்லூர் முத்தையா பாகவதரும் ஆராதனையில் கலந்து கொண்டார். சூலமங்கலம் வைத்தியநாத ஐயர் ஹரிகதை நடத்திக்கொண்டிருந்த போது நாகரத்தினம்மாள் மேடையில் ஏறி அவர் பக்கத்தில் சென்று அமர்ந்தார். கூட்டம் கரகோஷம் செய்து வரவேற்றது. அந்த ஆண்டு ஆராதனை விழா மிகவும் வெற்றிகரமாக நடந்தது. பெண்கள் மேடையேற அனுமதிக்கப்பட்டனர். நாதஸ்வர வித்வான்களை மேடையேற்ற அனுமதிக்காததைக் கண்டித்து டி.என். ராஜரத்தினம் பிள்ளை தனது எதிர்ப்பைக் காட்டியதால் அந்த நிபந்தனையும் தளர்த்தப்பட்டது. சூலமங்கலம் வைத்தியநாத ஐயர் வைதீகம் முடிவுக்கு வரும் நாள் நெருங்கிவிட்டதை உணர்ந்து கொண்டார். அதைத் தொடர்ந்த வருடங்களில் நடந்த ஆராதனை விழாக்களில் அவர் கலந்து கொள்ளவில்லை. முசிறி போன்ற பெரிய வித்வான்கள் பங்கெடுத்துக் கொண்ட போதும் 1934 இல் தியாகராஜரைப் போல அவரும் சன்னியாசம் வாங்கிக் கொண்டார். அவரைப் போலவே மூன்று நாள்கள் கழித்துக் காலமானார். அவரது உடல் சொந்த ஊரான சூலமங்கலத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 1941 இல் தான் பஞ்சரத்ன கீர்த்தனைகளை அனைவருமாகப் பாடும் முறை முதன் முறையாக அறிமுகப்படுத்தபட்டது. அதற்கு முன்பெல்லாம் பல்லடம் சஞ்சீவராவ் பைரவி ராகத்தில் அமைந்த 'சேதுலரா'வை மட்டும் வாசிப்பார். இந்த மரபு இன்றும் தொடர்கிறது. இன்றும் கூடப் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடத் தொடங்குவதற்கு முன் புல்லாங்குழல் கலைஞர்கள் அந்தக் கிருதியை இசைப்பார்கள்.

திருவையாற்றைத் தனது இருப்பிடமாக மாற்றிக்கொண்ட நாகரத்தினம்மாள் தனது நாள்களை அவரது குருவான தியாகராஜரைத் தியானிப்பதிலேயே கழித்தார். உள்ளூர் மக்கள் அவரை ஒரு ரிஷியைப் போலப் பாவித்தார்கள். 1946 இல் சித்தூர் வி. நாகையா தியாகராஜரின் வாழ்க்கையை அடிப்படையாகவைத்துத் தியாகையா என்ற படத்தை எடுத்தார். படம் நல்ல வசூல் கண்டது. நாகரத்தினம்மாளின் விருப்பத்திற்கிணங்க நாகையா திருவையாறுக்கு வரும் பயணிகளின் வசதிக்காக அந்தப் படத்திலிருந்து கிடைத்த வருமானத்தில் 'தியாகராஜ நிலையம்' என்ற சத்திரத்தைக் கட்டினார். 1948 ஜனவரி மூன்றாம் ஆம் தேதி நாகரத்தினம்மாள் தனது உயிலை எழுதி வைத்தார். தனது எல்லாச் சொத்துகளையும் நகைகள் உட்பட தியாகராஜர் சமாதியின் பரிபாலனத்திற்காக அளித்திருந்தார். வித்யா சுந்தரி பெங்களூர் நாகரத்தினம்மாள் டிரஸ்ட் அந்தச் சமாதிக்கும் அதைச் சுற்றியிருந்த நிலங்களுக்கும் உரிமை பெற்றது. அவர் தனது உயிலில் பெண் கலைஞர்களோ பாடகர்களோ தேவதாசிகள் உட்பட சமாதியில் நிகழ்ச்சிகள் நடத்துவதை எவரும் தடை செய்ய முயலக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். 1949 இல் விஜய நகரம் மகாராணி வித்தியாவதி தேவி அவருக்குத்தியாகராஜ சேவா சந்தா என்ற பட்டத்தை அளித்தார்.

1952ஆம் ஆண்டு மே மாதம்19ஆம் தேதி நாகரத்தினம்மாள் தனக்கு நெஞ்சு வலிப்பது போல் இருப்பதாகக் கூறினார். அப்படியே அவர் மூச்சும் ஒடுங்கியது. அவரது உடல் ஊர்வலமாகத் தியாகராஜர் சமாதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அதன் அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் அவரது சிலை ஒன்று நிறுவப்பட்டு மண்டபமும் கட்டப்பட்டது. அந்தச் சிலை தியாகராஜர் சமாதியைப் பார்த்த படி அமைக்கப்பட்டது. இந்த மண்டபத்தின் எதிரில் தான் இன்று வித்வான்கள் ஆராதனையின் போது இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள். கர்நாடகத்தைச் சேர்ந்த கோலார் ராஜம்மாள் என்ற தேவதாசி தியாகராஜரின் சமாதிக்கு மின் வசதியை அமைத்துக் கொடுத்தார். தியாகராஜ ஆராதனை விழா இன்று உலகம் முழுவதையும் கவரும் விழா. இதற்கெல்லாம் காரணம் சில இசைக் கலைஞர்களும் ஒரு பெண்ணும். அந்தப் பெண் நாகரத்தினம்மாள்.

ஆராதனை விழாக் கொண்டாட்டங்கள் சேர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டாலும் பூஜைகள் தனித்தனியாக தான் செய்யப்படுகின்றன. ஆகையால் இன்றும் கூட ஆராதனை நாளன்று தியாகராஜருக்கு மூன்று அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. முதலாவது பழைய சின்னக் கட்சியில் இன்று இருப்பவர்களும் ராஜகோபால பாகவதரின் வழித் தோன்றல்களுமாகச் செய்வது இரண்டாவது பெங்களூர் நாகரத்தினம்மாள் டிரஸ்டின் சார்பாக நடைபெறுவது. இறுதியாக தியாகப் பிரம்ம மஹோத்சவ சபாவினால் செய்யப்படுவது. பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடப்படுவது இந்த அபிஷேகத்தின் போது தான். நாம் ஒவ்வொரு ஆண்டும் தொலைக்காட்சியில் காண்பதும் இதைத்தான்.

                                                                             


🌺சுபம்🌺