வியாழன், 17 அக்டோபர், 2019

ஐப்பசி ஸ்பெஷல் ! துலா ஸ்நானம் !

ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்று போற்றுவர். இந்த மாதத்தில் இரவு நேரமும் பகல் நேரமும் சமமாக இருப்பதால் இதற்கு ‘துலா(தராசு) மாதம் என்று பெயர். ஐப்பசி முதல் தேதி அன்று காவிரியில் நீராடுவது புண்ணியம் என்கின்றன ஞான நூல்கள். துலா மாதத்தில் இதர நதிகளும் புண்ய தீர்த்தங்களும் காவேரியில் சேர்ந்து விளங்குகின்றன. ஆதலால் அப்போது ஸ்நானம் செய்பவர்கள் பஞ்ச மஹா பாதகங்களிலிருந்தும் விடுபடுகின்றனர். அதில் ஸ்நாநம் செய்தவர்கள் அச்வமேத யாகம் செய்த பலனையும் அடைகின்றனர்.

துலா மாதத்தில் காவேரிக் கரையில் எவனோருவன் பித்ருக்களை உத்தேசித்து ச்ராத்தம், பிண்டதானம், தர்ப்பணம் இவற்றைச் செய்கிறானோ அப்படிச் செய்யப்பெற்ற அவை கல்ப கோடி வர்ஷபர்யந்தம் பித்ருக்களை த்ருப்தி செய்விக்க வல்லவையாகின்றன. ப்ரஹ்மா முதலான ஸகல தேவர்களும், ஸரஸ்வதி, கெளரி, லக்ஷ்மி, இந்த்ராணி முதலியவர்களும் அப்ஸர ஸ்த்ரீகளும் துலா மாதத்தில் ஸ்நாநம் செய்ய விரும்பி வருகின்றனர். காவேரிக் கரைகளில் பிறந்து வளர்ந்த பசு பக்ஷி முதலானவையும் அதன் காற்றினால் பரிசுத்தங்களாக ஆகி மோக்ஷத்தை அடைகின்றன என்றால் பக்தி ச்ரத்தையுடன் ஸ்நானம் செய்தவர்கள் அடையும் பலனைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

மேலும் மஹான்களின் பெருமை, துளஸியின் மஹிமை, கங்கையின் ப்ரபாவம், துளஸியைக் கொண்டு செய்யப்படும் அர்ச்சனையின் வைபவம், ஸாளக்ராமத்தின் ஆராதன மஹிமை, காவேரியின் பெருமை இவற்றை உபதேசிக்கக் கேட்பவர்கள் மஹாபாக்கியசாலிகள். ஐந்மாந்தரங்களில் புண்யம் செய்தவர்களே காவேரியைக் காணும் பாக்கியத்தையும் அதில் ஸ்நாநம் செய்ய யோக்யதையையும் பெற்றவர்களாக ஆகின்றனர். ஸாமான்யமானவர்களுக்கு இது கிட்டாது. நதிகளில் மஹா விஷ்ணுவின் திருவடியிலிருந்து உண்டான கங்கை எப்படி உயர்ந்ததோ, புஷ்பங்களில் துளஸி எவ்வாறு மேற்பட்டதோ, வ்ரதங்களுக்குள் ஏகாதசி வ்ரதம் எப்படி உயர்ந்ததாக உள்ளதோ க்ருஹஸ்தர்கள் செய்ய வேண்டிய கர்மாக்களுள் பஞ்ச மஹாயஜ்ஞங்கள் எவ்வாறு உயர்ந்தவையோ, சுத்திகளுக்குள் மநஸ்ஸுத்தி எப்படி உயர்ந்ததோ, தேவதைகளுள் ஸ்ரீமந்நாராயணன் எவ்வாறு உயர்ந்தவராக விளங்குகிறாரோ அக்ஷரங்களுக்குள் ஓங்காரம் எவ்வாறு உயர்ந்ததோ, வேதங்களுள் ஸாமவேதம் எப்படி உயர்ந்ததாகக் கருதப் பெறுகிறதோ, பதினோரு ருத்ரர்களுக்குள் சங்கரம் எப்படி உயர்ந்தவராக உள்ளாரோ, ப்ராஹ்மண ஸ்த்ரீகளுள் அருந்ததி எவ்வாறு மேம்பட்டவளோ, ஸ்த்ரீகளுக்குள்மஹாலக்ஷ்மி எப்படி உயர்ந்தவளோ, தானங்களுக்குள் அந்நதானம் எப்படி உயர்ந்ததோ அதே போல் நதிகளுக்குள் உயர்ந்தது காவேரி நதி என்று புராணங்கள் கூறுகின்றன.

ஐப்பசி முதல் நாளன்று  திருப்பராய்த்துறையிலும் ஐப்பசி கடைசி நாள் மயிலாடுதுறையிலும் நீராடுவது விசேஷமாகக் கருதப்படுகிறது. துலா மாதமாகிய ஐப்பசியில் பிரம்ம முகூர்த்தத்தில் காவிரி நதியில் நீராடினால், மஹா விஷ்ணுவின் அருள் கிட்டும். துலா மாதத்தில் சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை நேரத்திற்குமுன் காவிரியில் மும்மூர்த்திகளும், முப்பது முக்கோடி தேவர்களும், 68 ஆயிரம் ரிஷிகளும், முனிவர்களும் சித்தர்களும் நீராடுவதாக சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

துலா மாதத்தில் காவிரியில் நீராடுவது புனிதமானது என்று சாஸ்திரம் சொல்லும் அதே வேளையில் இயலாத நிலையில் ‘கடைமுகம்’ என்று சொல்லப்படும் ஐப்பசி முப்பதாம் தேதி நீராடி பலன் பெறலாம். அன்றும் நீராட முடியாதவர்கள், ‘முடவன் முழுக்கு’ என்று சொல்லப்படும் கார்த்திகை முதல் தேதி நீராடினாலும் புனிதம் பெறலாம் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

‘ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது காசியில் ஓடும் கங்கை நதியில் நீராடுவதற்கு சமம்’ என்று புராணங்கள் கூறுகின்றன. ஏனெனில் ஐப்பசி மாதமானது துலா மாதத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான பாரதத்தில் ஓடும் நதி தேவதைகள் அனைத்தும் காவிரியில் நீராடி தங்களிடம் மானிடர்கள் கரைத்துச் சென்ற பாபக்கறைகளைப் போக்கிக் கொள்கின்றது என்று காவிரி மகாத்மியம் என்னும் நூல் கூறுகிறது.

மக்கள் தங்களுடைய பாவங்களை போக்க கங்கையில் நீராடி நீராடி கங்கைக்கே பாவம் அதிகமாக சேர்ந்து தோஷம் ஏற்பட தன் பாவங்கள் தீர என்ன செய்ய வேண்டும்? என்று விஷ்ணு பகவானிடம் கேட்டாள் கங்கை. அதற்கு ஸ்ரீ மஹா விஷ்ணு "நீ காவேரி நதியில் நீராடு உன் பாவம் நீங்கும்" என்றார்.

அன்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்யக்ஷேத்ரே விநச்யதி |
புண்ய க்ஷேத்ரே கிருதம் பாபம் வாரனாச்யாம் விநச்யதி |
வாரனாச்யாம் க்ருதம் பாபம் கும்பகோனே விநச்யதி |
கும்பகோனே க்ருதம் பாபம் காவேரி ஸ்நானே விநச்யதி |
என்று காவேரி ஸ்நானத்தின் மகிமையை வேதம் போற்றுகிறது.

அதன் படியே ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசையன்று கங்கா தேவி காவேரியில் நீராடி மக்கள் தன்னிடம் கரைத்த பாவங்களைப் போக்கிக் கொள்கிறாள் என்று புரான இதிகாசங்களில் போற்றப்படுகின்றது

துலா மாதத்தில் காவிரியில்  ஒரு முறை நீராடுபவன் ஸ்ரீமன் நாராயணனாக மாறுகிறான். மற்ற விரதங்களில் ஏதாவது சிறு தவறு ஏற்பட்டாலும் அதற்கு பிராயச்சித்தம் செய்ய வேண்டும். ஆனால், காவிரி துலா ஸ்நானத்திற்கு அப்படி எதுவுமில்லை. மக்களுக்கு புத்தியும் முக்தியும் அளிக்கும் துலா மாதத்தில் காவிரியில் நீராடுபவர்கள் தன்னையும் தங்கள் குடும்பத்தினரையும் முன்னோர்களின் பாபங்களையும் போக்கிக் கொள்வதுடன் வளமான வாழ்வு காண்கிறார்கள் என்று ஞான நூல்கள் கூறுகின்றன. துலா காவிரி நீராடல் அழகு, ஆயுள், ஆரோக்கியம், செல்வம், கல்வி, மாங்கல்ய பாக்கியம், குழந்தைப்பேறு, வலிமை ஆகியவற்றை தரும். எனவே காவிரியை நினைத்தாலும் சிறப்பைக் கேட்டாலும் பாபங்கள் விலகும் என்றார் பிரம்மா நதி தேவதைகளிடம் ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடி நீர்க்கடன் செலுத்துவோரின் முன்னோர்கள் சொர்க்கத்தை அடைகிறார்கள். காவிரி தேவியை வணங்கி துதிப்பவர்கள் சொர்க்க லோகம் செல்லும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள். தன்னில் நீராடுபவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வளமான வாழ்வு தருபவள் என்கிறது காவிரி புராணம். நதி தேவதைகளும்,
தேவர்களும், மானிடர்களும் துலா மாதத்தில் காவிரியில் நீராடி தங்களிடம் உள்ள பாபங்களைப் போக்கிக்கொண்டதும் அந்தக் கறைகள் அனைத்தையும் காவேரி போக்கிக்கொள்ள திருமங்கலக்குடி திருத்தலத்திலும், மாயூரத்தில் (மயிலாடுதுறை) உத்தர வாகினியாக (தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாய்வது) இருந்து காவிரி போக்கிக்கொள்கிறாள் என்பது ஐதீகம்.

ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் அருள் புரியும் ரங்கநாதருக்கு ஐப்பசியில் தங்கக்குடங்களில் ஸ்ரீரங்கத்தின் தென்பகுதியில் உள்ள அம்மா மண்டபம் காவிரி நதிக்கரைப் படித்துறையிலிருந்து புனிதத் தீர்த்தத்தை சேகரித்து யானை மீது எடுத்து வந்து அபிஷேகம் செய்வர். மற்ற மாதங்களில் ஸ்ரீ ரங்கத்தின் வடக்கில் உள்ள கொள்ளிடத்தில் இருந்து வெள்ளிக் குடங்களில் தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் செய்வார்கள்.

துலா காவேரி மஹாத்மியம்:

ஆதியில் உமாதேவிக்கு ஸ்ரீ பரமேச்வரன் சொன்ன காவேரி மகாத்மியத்தை தேவ வன்மன் என்ற அரசனுக்கு சுமத் திரங்கி என்ற ரிஷி சொல்லத் தொடங்குகிறார். ஒரு சமயம் பார்வதி - பரமேச்வரர்கள் ஒரு நந்தவனத்தில் தங்கியிருந்த போது அங்கு பறவைகள் வடிவில் வந்த நதி தேவதைகள், துலா மாதத்தில் காவேரியில் ஸ்நானம் செய்து விட்டு அவ்விருவரையும் தரிசிக்க வந்தன. அவர்கள் வேண்டிய வரங்கள் எல்லாவற்றையும் தந்த ஈச்வரன், மேலும் கூறலானார்:

"கங்கைக்கு நிகரான காவிரியில் நீராடினாலும் தரிசித்தாலும் அதனை பக்தியுடன் தொட்டாலும் அதன் கரையில் தானம், தர்ப்பணம் செய்தாலும் எல்லா பாவங்களும் விலகி புண்ணியம் கிட்டும். இதன் கரைகளில் காசிக்கு சமமான ஸ்தலங்களும் இருக்கின்றன. நினைத்ததைத் தரும் சிந்தாமணியான காவேரியின் பெருமையை இன்னும் சொல்கிறேன் கேள்" என்றார். அஸ்வமேத யாகம் செய்யத் தொடங்கிய அரிச்சந்திர மகாராஜாவை, முனிவர்கள், பிராயச்சித்தமாக துலா மாதத்தில் காவிரியில் நீராடிவிட்டு வரச்சொன்னார்கள்.

நாத சந்மா என்பவன் பரம பதிவ்ரதையான அனவித்யை என்பவளுடன் காவேரி ஸ்நானம் செய்வதற்காகவும் இருவரும் மோக்ஷ சாம்ராஜ்யத்தைப் பெற வேண்டியும் கௌரி மாயூர க்ஷேத்திரத்தை நோக்கி வந்தான். முனிவர்கள் தங்கள் பத்திநிகளுடனும் புத்திரர்களுடனும் தங்கி ஹோமாக்னி செய்து பலவித தானங்களை செய்து வரும் அந்த மோக்ஷ புரியில் நாமும் தங்கி நற்கதி பெறுவோம் என்றான் நாதசன்மன். அப்படியானால் காவேரி மற்ற எல்லா தீர்த்தங்களை விட எவ்வாறு உயர்ந்தது என்று அனவித்யை கேட்க நாத சந்மனும் கூறத்தொடங்கினான்.

காவிரி உருவான கதை:

காவேரன் என்ற அரசன் தனக்குப் புத்திர பாக்கியம் இல்லாததால் பிரம்மாவைக் குறித்துத் தவம் செய்தான். பிரம்மாவானவர் "உனக்குப் புத்திர பாக்கியம் இல்லா விட்டாலும் ஒரு குழந்தையை அளிக்கிறேன்" என்று கூறி தன் மனத்தால் ஒரு பெண் குழந்தையை உண்டாக்கி அவனிடம் அளித்தார். காவேரி என்ற பெயரில் அவனிடம் வளர்ந்த அப்பெண் தகுந்த கணவனை வேண்டித் தவம் செய்யலானாள். பின்னர் அகஸ்த்திய முனிவரைக் கண்ட காவேரியானவள், இவரே தனது மணாளர் ஆவார் என்று நினைத்து லோபா முத்ரா என்ற பெயருடன் அவரை திருமணம் செய்து கொண்டவுடன் அவள் விரும்பியபடியே நதி ரூபமாகி பிற நதிகளுக்கும் மனிதர்களுக்கும் ஏற்பட்ட பாவங்களை நீக்கவும், மோக்ஷத்தை அளிக்கவும் மறு அம்சமாகத் திகழுமாறு அகஸ்த்ய ரிஷி அருளினார்.

துலாக் காவேரியின் நீர்த்திவலைகள் ஒவ்வொன்றும் புண்ணிய தீர்த்தமாகும். அதிலுள்ள மணல்கள் எல்லாம் தேவதைகள். அதனால் தான் உலகிலுள்ள புனித நதிகள் அனைத்தும் துலா மாதத்தில் காவேரியில் நீராடி மக்கள் தங்களிடம் கரைத்த பாவக் கறைகளைக் கழுவி புனிதமடைகின்றன. துலா மாதத்தில் காவேரியில் நீராடுபவர்கள் தங்கள் குடும்பத்தினரையும் சேர்த்து மூன்று கோடி உறவினர்களையும் கடைத்தேற்றுகிறார்கள். துலா மாதத்தில் காவேரியில் நீராடி முன்னோர்களுக்கு பிதுர் பூஜை செய்து அன்னதானம், ஆடை தானம் அளித்தால் பித்ருக்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள். அழகு, ஆயுள், ஆரோக்கியம், சொல்வளம், கல்வி, வாழ்வில் சுகம் என எல்லாம் கிட்டு மென்று துலாக் காவேரி மகாத்மியம் கூறுகிறது.

ஆதி, இடை, கடை என்னும் மூன்று அரங்கங்களையும் தன்னகத்தே கொண்டு, சதாசர்வ காலமும் இறைவன் நாராயணனின் திருவடியைத் தழுவி வணங்கும் காவேரியின் பேறும் பெருமையும் தன்னிகரற்றது. தட்சிணகங்கை என்று போற்றப்படும் காவேரிக்கு பொன்னி, விதிசம்பூதை, கல்யாணி, சாமதாயினி, கலியாண தீர்த்தரூபி, உலோபமுத்ரா, சுவாசாஸ்யாமா, கும்பசம்பவ வல்லவை, விண்டுமாயை, கோனிமாதா, தக்கணபதசாவணி என பல பெயர்கள் உள்ளன.
காவேரியில் துலா ஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதரை வழிபட்டதன் பலனாக சந்தனு மகாராஜா பீஷ்மரை புத்திரனாக அடைந்தார்.

அர்ச்சுனன், துலா ஸ்நானம் செய்து ஸ்ரீ ரங்கநாதப் பெருமாளை துதித்து சுபத்ராவை மணம் புரிந்தான் என்று புராணம் கூறுகிறது. முரன் முதலான அசுரர்களை அழித்ததால் மஹா விஷ்ணுவிற்கு பற்றிய #வீரஹத்தி தோஷம் போக்க காவேரியில் ஐப்பசி மாதம் நாக சதுர்த்தியன்று துலா ஸ்நானம் செய்து தோஷம் நீங்கப்பெற்றார் என்று துலாக் காவேரி மகாத்மியம் கூறுகிறது

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசையன்று கங்கா தேவி காவேரியில் நீராடி மக்கள் தன்னிடம் கரைத்த பாவங்களைப் போக்கிக் கொள்கிறாள் என்பது புராணம். ஐப்பசி முதல் தேதி திருச்சிக்கு அருகிலுள்ள திருப்பராய்த்துறையிலும், இரண்டாவது நீராடலை ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபம் படித்துறையிலும், கடைசி தேதியன்று மயிலாடுதுறை நந்திக் கட்டத்திலும் முழுக்குப் போட வேண்டும் என்பது ஐதீகம்.

தலைக்காவேரி, ராமபுரம், ஸ்ரீரங்கம், திருப்பராய்த்துறை, திருவானைக்காவல், சப்தஸ்தானம், திருவையாறு, புஷ்பாரண்யம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, மயிலாடுதுறை, கும்பகோணம், திருவிடைமருதூர் முதலிய காவேரி நீர்த்துறைகள் துலா மாதத்தில் நீராட சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.

துலாக் காவேரி ஸ்நானம் செய்பவர்கள், காவேரி நதிக்குப் பூஜை செய்து வழிபடுவதுடன் அருகில் அரசமரம் இருந்தால் அதற்கு நீர் வார்த்து அதை வலம் வந்து வணங்குவது புண்ணிய பலன் தரும். காவேரிக் கரையில் கோமாதா பூஜை செய்தால் மேன்மேலும் புனிதம் கிட்டும். துலா காவேரி ஸ்நானம் செய்யும் முன் தகுந்த புரோஹிதர்களை கொண்டு ஸ்நான ஸங்கல்பம் செய்துக்கொள்வது சிறந்தது. முடியாதவர்கள் கீழ்கண்ட ஸ்லோகத்தை கூறி துலா ஸ்நானம் செய்வது உசிதம்.

"கங்கேச யமுனே சைவ
கோதாவரி சரஸ்வதீ
நர்மதே சிந்து காவேரீ
ஜலேஸ்மின் சன்னிதிம் குரு"

ஐப்பசி மாதத்தில் துலா ஸ்நானம் போற்றப் படுவதுபோல் ஐப்பசி பௌர்ணமி
அன்னாபிஷேகமும் சிவாலயங்களில் சிறப்பிக்கப் படுகின்றன.

புதன், 16 அக்டோபர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 66 ॐ

{திருக்குறிப்புத் தொண்டர் தொடர்ச்சி}

குளிர் தாங்காமல் நடுங்கிக் கொண்டிருந்த அடியார் திருக்குறிப்புத் தொண்டர் தன் துணியைத் துவைத்துத் தருவதாய்ச் சொல்லக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவர் போல் பாவனை செய்து விட்டு மேலும் சொல்லுவார் ஆஹா இந்த ஒரு கந்தல் தான் என்னிடம் மீதி உள்ளது. இதையும் தங்களிடம் கொடுத்து விட்டு நான் செய்வது என்னவோ??? ஏற்கெனவே குளிர் தாங்க மாட்டாமல் நடுங்கிக் கொண்டிருக்கின்றேனே! என்று சொல்கின்றார். மன வேதனை திருக்குறிப்புத் தொண்டர் முகத்தில் தெரிய தன் பக்தன் மனம் வாடுவது பொறுக்காத அந்த கைலைவாசன் சற்று நேரம் சிந்திப்பது போல் பாவனை செய்து விட்டுப் பின்னர் மாலைக்குள் துணியைத் துவைத்துச் சுத்தமாய் உலர்த்தித் தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் துணியைக் கொடுக்கின்றார். அப்படியே ஒத்துக் கொண்டு திருக்குறிப்புத் தொண்டர் துணியை பெற்றுக் கொள்கின்றார். குளிர் தன்னால் பொறுக்க முடியாது என்று அந்தக் கூத்தன் சொன்னதைக் கேட்டுக் கொண்ட திருக்குறிப்புத் தொண்டர் நீர்த்துறைக்கு வந்து துணியைத் துவைக்கத் தொடங்கினார். ஆரம்பம் ஆயிற்று ஈசனின் திருவிளையாடல். வருணனுக்குக் கட்டளை இட திடீரென சூரிய ஒளியால் பிரகாசமாய் இருந்த வானம் கார் மேகங்களால் மூடிக் கொண்டது. கும்மிருட்டு சூழ்ந்தது அந்தப் பகல் வேளையிலேயே. தொண்டரின் மனமும் இருள் சூழ்ந்து கலங்கியது. எவ்வாறு துவைப்பது? எங்கே காய வைப்பது??? கலங்கும் வேளையிலேயே திடீரெனக் காற்று, இடி, மின்னல், பெருமழை! பேய்க் காற்று என்பது இது தானோ??? ஊழிப் பெரும் மழையோ?? அண்டசராசரமும் குலுங்கும் வண்ணம் இடி இடிக்க மின்னல் கண்ணைப் பறித்தது. மழையோ நிற்கக் காணோமே?? என்ன செய்வது? கலங்கினார் தொண்டர். ஆஹா தவறு செய்துவிட்டோமே?? ஏற்கெனவே உடல் இளைத்து மெலிந்து இருந்தாரே சிவனடியார்? இருந்த ஒரே மேல் துணியையும் வாங்கிக் கொண்டு துவைத்துக் காய வைக்க முடியாமல் இப்படி மழை பெய்கின்றதே? மழை ஆரம்பிக்கும் போதே வீட்டுக்குச் சென்றிருந்தால் ஒரு வேளை இந்தக் காற்றிலே ஓரளவாவது உலர்ந்திருக்குமோ?? தவறு செய்து விட்டோமோ? அடியாருக்கு சிவனடியாருக்குத் துரோகம் புரிந்த நம் உயிர் உடலில் தங்கலாமா? இதோ உயிரைப் போக்கிக் கொள்ளலாம். என்று எண்ணிய வண்ணம் துவைக்கும் கல்லிலே தன் தலையைத் தானே மோதிக் கொள்ள துவங்கினார்.

125. கந்தை புடைத்திட எற்றும் கல்பாறை மிசைத் தலையைச்
சிந்த எடுத்து எற்றுவான் என்று அணைந்து செழும் பாறை மிசைத் தந்தலையைப் புடைத்து எற்ற அப்பாறை தன் மருங்கு
வந்து எழுந்து பிடித்தது அணி வளைத் தழும்பர் மலர்ச் செங்கை 1202-4

126. வான் நிறைந்த புனல் மழை போய் மலர் மழையாய் இட மருங்கு தேன் நிறைந்த மலர் இதழித் திருமுடியார் பொருவிடையின் மேல் நிறைந்த துணைவி யொடும் வெளி நின்றார் மெய்த் தொண்டர் தான் நிறைந்த அன்பு உருகக் கை தொழுது தனி நின்றார் 1203-4

127. முன் அவரை நேர் நோக்கி முக் கண்ணர் மூவுலகும்
நின் நிலைமை அறிவித்தோம் நீயும் இனி நீடிய நம்
மன்னுலகு பிரியாது வைகுவாய் என அருளி அந் நிலையே எழுந்து அருளி அணி ஏகாம்பரம் அணைந்தார் 1204-4

அப்போது ஈசன் தன் பக்தனைச் சோதிக்க விரும்பாமல் அந்தப் பாறையினின்றும் தன் மலர்க்கையை நீட்டி அவரது சிரத்தைத் தாங்கிக்காக்க நிமிர்ந்த திருக்குறிப்புத் தொண்டரின் கண்களிலே ரிஷபவாகனன் காட்சி கொடுக்கின்றான். மேலும் இந்த வண்ணார் மடம் பற்றிய தகவல்களை மீண்டும் சிதம்பரம் செல்லும் போது அறிந்து வரவேண்டும் என்று மிகவும் ஆசையாக உள்ளது.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 65 ॐ

            {புதிய செய்திகள்}

ஒரு பழைய தினமலர் பத்திரிகையில் திரு எஸ். கிருஷ்ணமூர்த்தி என்பவர் சிதம்பரம் கோயிலின் ஆய்வு பற்றிய ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தார் அந்த கட்டுரையின் தொகுப்பு இதோ தங்களுக்காக பதிவிடுகிறேன். அநேகமாய் அனைவரும் படித்திருக்கலாம். எனக்கு அந்த விஷயம் புதியது. ஆகவே பகிர்ந்து கொள்கின்றேன். சிதம்பரம் கோயில் பற்றியும் அதைச் சுற்றி நகரில் உள்ள கோயிலைச் சார்ந்த பல்வேறு மடங்கள் பற்றியும் பல்வேறு விதமான சாசனங்கள் இன்னமும் தேடிக் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன. அதில் சிலவற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு கட்டுரையை வைத்தே போன மூன்று பதிவுகள் வந்தன. இப்போது கிடைத்திருப்பது சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற "வண்ணார் மடம்" பற்றிய செப்பேடுகள். இவை இரண்டு செப்பேடுகளாய்க் கிடைத்திருக்கின்றது. மேலும் விஜயநகர அரசர் காலத்தில் ஏற்படுத்தப் பட்டதாயும் தெரியவருகின்றது. மூன்று ஏடுகளைக் கொண்ட முதல் செப்பேடும் ஒரே ஏட்டுடன் கூடிய இரண்டாவது செப்பேடும் ஒரே காலத்தைச் சேர்ந்தது என்றும் தெரிய வருகின்றது. இவற்றில் சிவலிங்கம், நந்தி, சூலம், சூரிய, சந்திரர், வீரமணவாளர் தேவியருடன், எல்லாவற்றுக்கும் மேல் துணி வெளுக்கும் கல் போன்றவை சிற்பங்களாய்ச் செதுக்கப்பட்டிருப்பதாய்த் தெரியவருகின்றது. விஜயநகர அரசர் மெய்க்கீர்த்தியும் கிருஷ்ணதேவராயர் மற்றும் அச்சுதராயர் காலத்தில் வண்ணார் மடம் புதுப்பிக்கப்பட்ட செய்தியும் இவற்றில் கிடைத்திருப்பதாய்ச் சொல்லப் படுகின்றது. வண்ணார் தோன்றிய விதமும் அதாவது அதற்கான புராண வரலாறும் இதில் சொல்லப் பட்டிருக்கின்றது.

அது பின்வருமாறு : ஈசனின் மாமனார் ஆன தட்சன் ஈசனை அழைக்காமல் யாகம் செய்ய அவனையும் அவனுக்கு உதவியாக யாகத்தில் தொண்டாற்றிய தேவர்கள் மற்றும் தேவிகளை அழிக்கவும் ஈசனால் தோற்றுவிக்கப்பட்டவர் ஈசனின் அம்சம் ஆன வீரபத்திரர். தேவியரை அழிக்கவேண்டி அன்னையால் தோற்று விக்கப்பட்டவளே காளி ஆவாள். இருவரும் அவ்வாறே தேவ தேவிகளை அழித்தனர். இருவரும் அழித்த தேவ தேவியர் பின்னர் இறைவனாலும் இறைவியாலும் உலக க்ஷேமத்தைக் கருதி மீண்டும் உயிர்ப்பிக்க வீரபத்திரராலும் காளியாலும் ஏற்பட்ட காயங்களின் குருதி அவர்கள் மீது அழியாமல் இருந்தது. அந்தக் குருதி நீங்க வேண்டி ஈசன் வருணனை மழை பொழியும் படி ஆணை இட வருணனும் அவ்வாறே மழையாகப் பொழிகின்றான். எனினும் குருதிக் கறை ஆடைகளில் தங்கி விட்டது. ஆகவே அந்தக் கறை நீங்க வேண்டி வீரபத்திரருக்கு ஈசன் ஆணை இட அவர் மரபில் ஒருவர் தோற்றுவிக்கப்பட்டார். அவருக்கு வீரன் என்னும் பெயர் சூட்டப்பட்டு தேவ தேவியரின் ஆடைகளை வெளுக்க அவர் அனுப்பி வைக்கப்படுகின்றார். அந்த வீரபத்திரர் வழியிலும் வீரன் வழியிலும் வந்தவர்களே வண்ணார் எனப்பட்டனர். அவர்கள் பூமியில் வந்து அதே தொழிலைச் செய்தனர். இந்த மரபில் வந்த ஒருவரே திருக்குறிப்புத் தொண்டர் ஆவார். திருக்குறிப்புத் தொண்டர் பற்றிய கதை அநேகமாய் அனைவரும் அறிந்திருக்கலாம். சிவனடியார் ஒருவரின் துணி ஏதாவது ஒன்றையாவது அன்றாடம் துவைத்துக் கொடுத்து அவருக்குப் பணிவிடைகள் செய்து உணவு ஊட்டியுமே தன் உணவை உண்ணும் வழக்கம் திருக்குறிப்புத் தொண்டருக்கு. சிவனடியார்களின் துணியின் மாசு நீங்கினால் தன் பிறவிப் பிணியின் மாசு நீங்கும் என்ற எண்ணம் கொண்ட திருக்குறிப்புத் தொண்டர் முன் ஒரு குளிர் காலத்தில் நடுங்கிக் கொண்டே ஒரு சிவனடியார் தோன்றினார். நல்ல குளிர் காலத்தில் நடுக்கும் குளிரில் மெலிந்த உடலும் அழுக்கான கந்தலான வஸ்திரமும் கொண்டு தூய வெண்ணீறணிந்து தன் முன் தோன்றிய சிவனடியாரைப் பணிந்து வணங்கினார் திருக்குறிப்புத் தொண்டர். அடியாரிடம் திருக்குறிப்புத் தொண்டர் வினவுகின்றார். ஐயா தங்கள் திருமேனி இவ்வளவு இளைத்திருப்பதன் காரணம் என்னவோ? என. ஆனால் வந்தவர் குறுநகை புரிய எதுவும் புரியாத திருக்குறிப்புத் தொண்டர் ஐயா தாங்கள் வந்தது என் பாக்கியமே. அடியாரின் ஆடையைத் தோய்த்துச் சுத்தம் செய்து தருவதை நாம் அடியாருக்குச் செய்யும் தொண்டாகக் கருதிச் செய்து வருகின்றோம். ஈசன் எனக்கிட்ட கட்டளை அதுவே எனவும் அறிந்தேன். தாங்கள் தங்கள் ஆடையை என்னிடம் தந்தால் தங்கள் வெண்ணீறு போல் தூய்மையாகத் துவைத்துத் தருவேன். என்று சொல்லுகின்றார். அடியார் பெரும் அதிர்ச்சி அடைந்தார். வந்தவர் யார்?? சாமானியம் ஆனவரா?? இல்லை அல்லவா? சாட்சாத் அந்தக் கைலை வாசனே அல்லவா வந்திருக்கின்றான். அவன் ஆடாத ஆட்டமா?? போடாத வேஷமா?? நடிக்காத நாடகமா?? ஆடல்கலையில் வல்லவன் அல்லவா?? ஆட்டுவிப்பவனும் அவனே ஆடுபவனும் அவனே அல்லவா??

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ

செவ்வாய், 15 அக்டோபர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 64 ॐ

        {சரித்திரத் தகவல்கள்}

நந்திவர்ம பல்லவன் வழிபட்ட இடத்திலேயே அவனுக்குப் பின்னர் பல நூறு ஆண்டுகள் கழித்து அச்சுதராயன் பிரதிஷ்டை செய்தான் எனவும் அதன் பின்னரே 1597ல் கொண்டம நாயக்கனால் விரிவு செய்யப்பட்டது என்பதையும் அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர் திரு C.S.ஸ்ரீநிவாசாச்சாரியார் என்பவர் எழுதி இருப்பதாயும் தெரிய வருகின்றது. இதற்கும் பின்னர் கி.பி.1643ல் 3ம் ஸ்ரீரங்கராயன் என்பவனால் பெருமாள் கோயிலை மேலும் விரிவு படுத்த எண்ணி அவனாலேயே புண்டரீகவல்லித் தாயார் சந்நிதியும் அமைக்கப்பட்டது. அப்போது சில சிவ சந்நிதிகள் இடிக்கப் பட்டதாயும் அதனால் தீட்சிதர்களுக்கும் விஷ்ணு கோயிலின் பட்டாச்சாரியார்களுக்கும் ஏற்பட்ட பகைமை முற்றிப் போய் அது வெகு காலம் நீடிக்க கூடாது என இரு தரப்புமே ஒப்பந்தம் போட்டுக் கொண்டதாயும் தெரிய வருகின்றது. அதன் படி இனி பெருமாள் கோயிலை விரிவு படுத்தும் பணியை வைணவர்கள் மேற்கொள்ள மாட்டார்கள் எனவும் பெருமாளுக்கு என தனியாக பிரம்மோற்சவம் போன்ற விழாக்கள் தனித்துச் செய்யப்படமாட்டாது எனவும் இருதரப்பிலும் நடந்த பேச்சு வார்த்தைகளில் உறுதி செய்யப் பட்டிருக்கின்றதாயும் சொல்லப் படுகின்றது. ஆனாலும் இதற்கான ஆதாரம் என்று சொல்ல முடிவதோ கி.பி.1862ல் வைணவர்களுக்கும் தீட்சிதர்களுக்கும் ஏற்பட்ட வழக்கின் ஆதாரமே கிடைக்கின்றது என்றும் நம்பப்படுகின்றது. இதற்கான நீதிமன்றத் தீர்ப்பும் கி.பி.1867-ல் கிடைத்துள்ளது எனவும் சொல்கின்றார்கள். இந்தத் தகவல்கள் கலைமாமணி பேராசிரியர் திரு.க.வெள்ளைவாரணனார் எழுதிய "தில்லைப் பெருங்கோயில் வரலாறு" என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் அறிய வேண்டுவோர் இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம். மேற்கண்ட தகவல்கள் அதாவது நந்திவர்மபல்லவனால் தான் முதலில் பெருமாள் கோயில் கட்டப்பட்டது என்று எழுத ஆரம்பித்த சிதம்பர ரகசியம் பதிவுகள் அனைத்தும் நண்பர் ஒருவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலேயே எழுதப்பட்டது. என்றாலும் இவை மிகுந்த விவாதத்துக்கு உள்ளானது. முதலில் சொன்ன விஷ்ணு தான் சிவனின் நாட்டியத்தைக் காண சிதம்பரம் வந்தார் என்ற என்னுடைய கூற்றையே நான் மறந்து விட்டேன். சிவன் கோயில்களில் விஷ்ணு கட்டாயமாய் இடம் பெறுவார் என்பதையும் நன்கு அறிவேன். புராணக் கதையையும் மறக்கவில்லை. மற்றும் நான் எழுதிய எதையும் மறக்கவில்லை அதே சமயம் நான் சிதம்பரம் சென்றிருந்தபோது கோயிலில் விஷ்ணு சுற்றுப் பரிகார தேவதையாக இருந்தவர் தனி இடம் பெற்றது நந்திவர்மபல்லவனாலேயே என்று தீட்சிதர் உறுதி செய்ததையுமே எழுதி உள்ளேன். சிதம்பரம் கோயிலில் விஷ்ணு முதலிலேயே இல்லை என சொல்லவில்லை. மற்ற படி இதன் மூலம் யார் மனமாவது புண்பட்டிருக்குமானால் என்னுடைய மன்னிப்பையும் கோருகின்றேன். பொதுவாகக் கோயில் வரலாறு என எழுதும் போது சிதம்பரம் கோயிலுக்குக் கட்டுமானப் பணிகளில் உதவிகள் செய்த அரசர்கள் பற்றியும் இதற்கு முன்னர் எழுதினேன். அந்தமாதிரியே இப்போது விஷ்ணு கோயிலின் திருப்பணிகள் செய்த அரசர்களைப் பட்டியலிட வேண்டி அம்மாதிரிச் செய்தேன். என்னைப் பொறுத்தவரை எனக்கு இதில் எந்தவிதமான வித்தியாசமோ அல்லது தவறாகவோ தெரியவில்லை. அம்மாதிரி நான் எழுதியதாய் ஒரு கருத்து யாருக்கானும் இருந்தால் அது அவர்கள் சொந்தக் கருத்து. என்னை எவ்விதத்திலும் பாதிக்காது. எனக்குக் கிடைத்த தகவல்களை உங்கள் முன் வைக்கிறேன். அவ்வளவே! இன்னும் சில தகவல்கள் கிடைத்ததும் இதை முடித்துவிடுவேன்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
மொத்தம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

1. பெண் சாபம்,
2. பிரேத சாபம்,
3. பிரம்ம சாபம்,
4.  சர்ப்ப சாபம்,
5. பித்ரு சாபம்,
6.  கோ சாபம்,
7. பூமி சாபம்,
8. கங்கா சாபம்,
9.  விருட்ச சாபம்,
10. தேவ சாபம்
11. ரிஷி சாபம்
12. முனி சாபம்,
13. குலதெய்வ சாபம்

அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

1. பெண் சாபம் :

இது எப்படி ஏற்படுகிற தென்றால், பெண்களை ஏமாற்றுவதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.

2. பிரேத சாபம் :

இறந்த மனிதனின் உடலை வைத்துக் கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.

3. பிரம்ம சாபம் :

நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது. பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.

4. சர்ப்ப சாபம் :

பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டாகும். இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.

5.  பித்ரு சாபம் :

முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும், அவர்களை ஒதுக்கி வைப்பதும்,பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.

6.  கோ சாபம் :

பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும்போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும்.இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.

7. பூமி சாபம் :

ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும். பூமி சாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.

8. கங்கா சாபம் :

பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும்.
கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.

9. விருட்ச சாபம் :

பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும்.விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.

10. தேவ சாபம் :

தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.

11. ரிஷி சாபம் :

இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும்.
ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.

12. முனி சாபம் :

எல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும்.முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.

13. குலதெய்வ சாபம் :

இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது. குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.

திங்கள், 14 அக்டோபர், 2019

சிதம்பர ரகசியம் பகுதி : 63 ॐ

{சில தகவல்களும் பதில்களும்}

பல புத்தகங்களும் வாங்கிப் படிக்க முடிய வில்லை தான் இல்லை என்று சொல்ல வில்லை ஆனால் அதற்காகச் சான்றுகள் ஏதும் இல்லாமலும் எதுவும் எழுதவில்லை. என்னிடம் இருக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே எழுதுகின்றேன். இதில் காய்தல் உவத்தல் பார்ப்பது அவரவர் கண்ணோட்டமே அன்றி என் தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. காதில் காலிப்ளவர் வைக்க முடியாட்டாலும் குறைந்த அளவுக்கு ஒரு கனகாம்பரமாவது வைக்கலாம் என்று எண்ணம். மற்றபடி இங்கே தெரிவிக்கப்பட்ட கருத்துகள் அனைத்துக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு மேலே தொடருகின்றேன்.

இரண்டாம் குலோத்துங்கன் மகாவிஷ்ணு சிலையை அப்புறப்படுத்தியது பற்றிப் பார்த்தோம். இது பற்றிய ஆராய்ச்சிக்கட்டுரை இருப்பது பற்றி நண்பர் கொடுத்த தகவல்களிலேயே இருக்கின்றது. என்னுடைய வேலைப் பளுவினால் என்னால் முடிந்த அளவுக்கு பதிவிடுகிறேன். மேற்கண்ட தகவல்கள் இருப்பது இவற்றால் சிற்றம்பலமான சிவாலயவழிபாட்டையும் தெற்றியம்பலமான சித்திர கூட வழிபாட்டையும் முறைப்படி புரிந்து வந்தவர்கள் தில்லை மூவாயிரவர் என்பது விளக்கமாம் (சென்னைப் பல்கலைக் கீழ்த்திசை மொழி ஆராய்ச்சித்துணர் தொகுதி III (1938-39) பகுதி I) என்று ஆராய்ச்சியாளரும் வைணவரும் ஆன திரு மு.ராகவ ஐயங்கார் அவர்கள் எழுதி இருப்பதாய்த் தெரிய வருகின்றது. குலோத்துங்கன் விஷ்ணு சிலையை அப்புறப்படுத்தியதை வைத்து அவன் வைணவத்துக்கு எதிரி எனச் சித்திரிக்கப்பட்டதும் தவறு என்று (பிற்காலச் சோழர் சரித்திரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு பக்கம் 95,96 பார்க்க).சொல்லுவதாய்த் தெரிய வருகின்றது. கிருஷ்ணதேவராயர் காலத்திற்குப் பின்னர் அச்சுதராயர் காலத்தில் மறு பிரதிஷ்டை செய்யப்பட்டதும் அரசனால் நியமிக்கப்பட்ட வைணவர்களே விஷ்ணுவுக்குப் பூஜை வழிபாடுகளை நடத்த ஆரம்பித்தனர். அப்போதில் இருந்து இங்கே வைகானசமுறையில் வழிபாடுகள் நடை பெறுகின்றன. பின்னர் கொண்டம நாயக்கன் காலத்தில் இந்த சந்நிதித் தனிக்கோயிலாக மாறும் பெருமையப் பெற்றது. தில்லை வாழ் அந்தணர்களான தீட்சிதர்கள் இதை ஆட்சேபித்து நடராஜருக்கே என உரிய கோயிலில் விஷ்ணுவிற்குத் தனிக் கோயில் வேண்டாம் எனச் சொல்லியும் போராட்டங்கள் நடத்தியும் கொண்டம நாயக்கன் கோயிலைக் கட்டினான் என்றும் தீட்சிதர்கள் சிலர் அப்போது நடந்த போராட்டத்தில் கொண்டமநாயக்கனின் வீரர்களால் சுடப்பட்டு இறக்க நேரிட்டது எனவும் அதை நேரில் பார்த்த ( Jesuit Father N. Pimenta) என்னும் பாதிரியார் கொண்டம நாயக்கன் செய்த இக்கொடுங்கோன்மையை நேரில் கண்டு வருந்தியதுடன் இக்கொடுஞ் செயலைத் தம்முடைய யாத்திரைக் குறிப்பிலும் குறித்துள்ளார்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 62 ॐ

{பெருமாள் கோயில் சில தகவல்கள்}

சிதம்பரம் கோயில் எப்போது எனக் காலம் நிர்ணயிக்க முடியாத கால கட்டத்தில் இருந்தே ஈசன் கோயிலாகவே இருந்து வந்தது. சிவனடியார்கள் போற்றிப் பாடும் இடமாகவும் சிவனடியார்களால் கோயில் எனக் குறிப்பிடப்படும் இடமாகவுமே இருந்து வந்தது. தேவார மூவர் காலத்திலேயும் மாணிக்கவாசகர் காலத்திலேயும் இங்கே ஈசன் மட்டுமே அன்னையோடு குடி இருந்து வந்ததாயும் தெரிய வருகின்றது. பல தமிழ் நூல்களும் வடமொழி நூல்களும் இந்தக் கோயிலையே தலைமைக் கோயில் எனச் சிறப்பித்துச் சொல்லியும் இருக்கின்றன. திரு ஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் அருளிய தேவாரத் திருப்பதிகங்களும் மாணிக்கவாசகர் அருளிய திரு வாசகம் திருச்சிற்றம்பலக் கோவையாகிய அருள் நூல்களும் திரு மூலர் திருமந்திரம் முதல் திருத்தொண்டர் புராணம் போன்றவைகளும் சிதம்பரம் கோயில் சைவத்தின் தலைமைக் கோயில் எனச் சிறப்பித்துச் சொல்லி இருக்கின்றன. பல கல்வெட்டுக்களும் அவ்வாறே குறிப்பிட்டு வருகின்றன. இந்நிலையில் தில்லைக் கோயிலில் கோவிந்தராஜப் பெருமாள் வந்த வரலாறு என்ன? நண்பர் ஒருவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலும் சமீபத்தில் சிதம்பரத்தில் தீட்சிதரிடம் பேசி உறுதி செய்து கொண்டதும் ஆன அந்தத் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதன் முதல் நந்திவர்ம பல்லவன் காலத்திலேயே கோவிந்தராஜப் பெருமாளுக்கு எனத் தனியாக ஒரு சன்னதி ஏற்படுத்தப்பட்டது என்று தெரியவருகின்றது. கி.பி726-775 வரை ஆட்சி செய்த நந்திவர்ம பல்லவன் தன் ஆட்சியின் ஆரம்ப காலத்திலே சைவ வைணவ மதங்களை ஒன்றாகக் கருதி வந்தாலும் பின்னர் திருமங்கை ஆழ்வாரால் பரம வைணவன் ஆகிவிட்டான் என வரலாறு கூறுகின்றது. அவன் வேண்டுகோள் பேரிலும் மன்னனுக்கே இயல்பாக எழுந்த ஆசையினாலுமே தில்லையில் கோவிந்தராஜப் பெருமாளுக்கு எனத் தனியாக சன்னதி எழுப்பப்பட்டு அங்கே பிரதிஷ்டையும் செய்யப் பட்டிருக்கின்றார். இதைத் திருமங்கை ஆழ்வார் தன் பாசுரத்தில் இவ்வாறு கூறுகின்றார்.

"பைம் பொன்னும் முத்தும் மணியுங் கொணர்ந்து
படைமன்னவன் பல்லவர்கோன்பணிந்த
செம்பொன் மணிமாடங்கள் சூழ்ந்த தில்லைத்
திருச் சித்திரகூடம் சென்று சேர்மின்களே"
(பெரிய திருமொழி 3-2-3)

இதிலே சித்திரகூடம் என்பதற்குத் தெற்றியம்பலம் என அர்த்தம் வருவதாயும் தெற்றி=திண்ணை எனப் பொருள் கொள்ள வேண்டும் எனவும் தமிழறிஞர்கள் சொல்கின்றனர். தெற்றியம்பலம் என்பது சிறிய திண்ணை எனப் பொருள் எனவும் சிறிய திண்ணை போன்ற இடத்திலேயே பெருமாள் கோவில் கொண்டிருந்திருக்கின்றார் எனவும் சொல்லப்படுகின்றது. இந்த அரசன் பற்றிய பட்டயச் செய்திகளில் இறைவன் திருவடிகளைத் தவிர வேறொன்றுக்கும் இவன் தலை வணங்கியதில்லை என்று இருப்பதில் இருந்தே இவன் வைணவனாக மாறியது புலனாகின்றது. தவிர இங்கே பெருமாள் பிரதிஷ்டை செய்யப்பட்டதில் இருந்தே தில்லையம்பல நடராஜரைச் சுற்றி இருக்கும் பரிவார தேவதைகளில் ஒருவராகவே இருந்து வந்திருக்கின்றார். ஆகவே இந்த கோவிந்தராஜரின் வழிபாடுகளையும் தில்லை மூவாயிரவர் எனப்படும் தீட்சிதர்களே செய்து வந்திருக்கின்றார்கள் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இன்றியே! இது போலவே காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலிலும் பரிவார தெய்வமாகவே பெருமாள் எழுந்தருளி இருக்கின்றார் என்பதும் "நிலாத்திங்கள் துண்டத்தான்" என அதே திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்டிருப்பதும் அங்கே இன்றளவும் சிவாச்சாரியார்களாலேயே பெருமாள் பூஜிக்கப் படுகின்றார் என்பதும் கவனிக்கத் தக்கது.

"மூவாயிரநான் மறையாளர் முறையால் வணங்க
தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்திரகூடம்" (பெ.தி. 3.2-8)

"தில்லைநகர்த் திருச்சித்திர கூடந்தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவ ரேத்த
அணிமணியா சனத்திருந்த வம்மான்" (குல.தி. 10.2)

என்று பெரிய திருமொழியிலும் குலசேகர ஆழ்வாராலும் பாடப் பட்டு வந்தது. பின்னாட்களில் வைணவர்கள் கைக்குப் போனதும் அப்போது நடந்தவை பற்றியும் இனி வரும் நாட்களில்  பார்ப்போம்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 61 ॐ
அரியும், சிவனும் ஒண்ணுதாங்க!!!!

தனக்கென ஒரு மகன் இல்லையே என வருந்திய மகாவிஷ்ணுவானவர் இறைவனைக் குறித்துத் துதிக்க தன்னை ஒதுக்கிவிட்டாரோ என நினைத்த தேவியானவள் மனம் வருந்த விஷ்ணுவுக்குப் பிள்ளைப் பேறும் கூடவே சிவனையும் தேவியையும் வணங்கித் துதிக்கும்படியான கட்டளையும் கிடைக்கின்றது. அப்போது தனக்குப் பிள்ளைப் பேறு அளித்த சிவனையும் குடும்பத்தோடு பார்க்க விரும்பிய விஷ்ணு அவ்விதமே இறைவனை வேண்ட இறைவன் காட்சி அளித்த கோலமே சோமாஸ்கந்த கோலம். நடுவிலே ஸ்கந்தன் அமர்ந்திருக்க இரு பக்கமும் தாய் தந்தையர்கள் இருக்கக் காட்சி கொடுத்த அந்த விக்ரகத்தைப் பூஜித்து விஷ்ணு பெற்ற பிள்ளையே மன்மதன் ஆவான். இந்த மகாவிஷ்ணு எந்நேரமும் இறைவனைத் தன் மூச்சிலேயே நிலை நிறுத்தி இதயத்திலே வைத்து மானசீகப் பூஜை செய்ய இறைவன் மகாவிஷ்ணுவின் இதயத்திலே ஆனந்த நடனம் ஆடினார். அப்போது அதற்குத் தாளம் விஷ்ணுவின் மூச்சுக் காற்றே சற்றும் சத்தமே இல்லாத இந்த மூச்சுக்காற்றின் தாளத்திற்கு ஏற்ப இறைவன் ஆடிய நடனமே "அஜபா நடனம்" என்று சொல்லப் படுகின்றது.
பின்னர் மகாவிஷ்ணு இறைவனின் ஆனந்தத் தாண்டவத்தைக் காணவிரும்ப இறைவன் தான் சிதம்பரம் க்ஷேத்திரத்திலே ஆடப்போவதாயும் ஆகவே அங்கே வந்து காணுமாறும் சொல்லத் தன் பரிவாரங்களோடு சிதம்பரத்திலே எழுந்தருளினார் மகாவிஷ்ணு. இவரே இன்றளவும் கோவிந்தராஜர் என்ற பெயரோடு சிதம்பரம் என்று சைவர்களாலும் திருச்சித்திர கூடம் என்று வைஷ்ணவர்களாலும் அழைக்கப் படும் சிதம்பரத்தில் கோயில் கொண்டுள்ளார். இருவரும் ஒருவரே என்பதே பெரும்பாலான பக்தர்களின் கூற்றும் கூட. இதை மெய்ப்படுத்துவதே போல் பல பக்திமான்களும் பாடியுள்ளனர், போற்றித் துதித்துள்ளனர் இருவரையும் பற்றி. முதலாழ்வார்களின் பாசுரத்தில் காணப்பட்டபடி அரன் நாரணன் நாமம் ஆன் விடை யுன்னூர்தி உரைநூல் மறை உறையும் கோயில் வரை நீர் கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி உருவமெரி கார்மேனி ஒன்று எனப் பொய்கை ஆழ்வாரும்,

ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற
நன்றெழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்றனும் மனத்து வைத்து உள்ளலும் இருபசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடை நாளே!"
என்று நம்மாழ்வாரும் சொன்னபடிக்குக் காட்சி அளிக்கின்றனர், சிதம்பரத்தில் நடராஜரும், கோவிந்தராஜரும். சில கேள்விகளுக்குப் பதிலுக்காகக் காத்திருத்தலில் பல நாட்கள் ஆகிவிட்டன. ஆகவே பதில் வரும் போது வரட்டும் என இதை முடிக்க எண்ணி உள்ளேன். பல மன்னர்களின் திருப்பணிகளாலும் பல பக்தர்களின் பெரும் முயற்சியாலும் சிதம்பரம் கோயிலின் திருப்பணிகள் இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. எப்போது ஆரம்பித்தது, எப்போது கட்டப்பட்டது என்று நிர்ணயம் செய்யமுடியாத காலத்தில் இருந்தே இருப்பதாய்ச் சொல்லப் படும் இந்தக் கோயிலின் திருப்பணிகள், நாளடைவில் ஒவ்வொரு பாகமாய்ச் சேர்க்கப் பட்டு ஒவ்வொரு பாகமும் ஒவ்வொருவரால் கட்டப் பட்டு இன்று முழுப் பூர்த்தி அடைந்த கோயிலாகக் காட்சி அளிக்கின்றது. மாணிக்க வாசகரின் திரு அகவல் ஒன்றிலே அவர் பாடிய வண்ணம்.

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி!
நீரிடை நான்காய்த் திகழ்ந்தாய் போற்றி!
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி!
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி!
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி!
என்னும்படிக்கு, இந்தப் பூமியானது, சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், நாற்றம் என்ற ஐந்து குணங்களையும், நீரானது, சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம் என்ற நான்கு குணங்களையும், தீயானது, சப்தம், ஸ்பரிசம், ரூபம் என்ற மூன்று குணங்களையும், வளியென்று சொல்லப் படும் காற்றானது சப்தம், ஸ்பரிசம் எனப்படும் இரு குணங்களையும் அண்டவெளியெனப்படும் ஆகாசம் ஆனது சப்தங்களால் மட்டுமே நிறைந்த ஒரே குணம் உடையதாகவும் காணப்படுகின்றன. இந்த அண்டவெளியின் சப்தம் இந்த ஆடலரசனின் ஆட்டத்தால் மட்டுமே நிறைந்து காணப்படுகின்றது. ஆகவே பஞ்சபூதங்களில் ஆகாயம் எனப்படும் ஆகாயமாகச் சிதம்பரம் க்ஷேத்திரத்தில் நடராஜர் ஆடலரசனாய்க் காணப்படுகின்றார். இந்த ஆடலரசனின் ஆட்டத்தைக் காண வந்த விஷ்ணுவும் இங்கே நிரந்தரமாய்க் கோயில் கொண்டு தினம் தினம் ஆடலரசனின் ஆட்டத்தைக் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருக்கின்றார். திருவீழிமிழலைப் பதிகம் ஒன்றிலே சொன்னாற்போலே அரியும் சிவனும் ஒன்றே என்னும் கருத்தைப் பக்தர்களுக்கு நிலைநாட்டவே இவ்விதம் கோயில் கொண்டுள்ளனர் என்றும் சொல்லலாமோ????

"மண்ணினை உண்ட மாயன் தன்னைப் பாகங்கொண்டார்
பண்ணினைப் பாடி ஆடும்பத்தர்கள் சித்தம் கொண்டார்
கண்ணினை மூன்றுங்கொண்டார் காஞ்சிமாநகர் தன்னுள்ளால்
எண்ணினை எண்ண வைத்தாரிலங்கு மேற்றளியனாரே!

(இது அப்பர் தேவாரம், குறிப்பிட மறந்திருக்கின்றேன், சுட்டிக் காட்டிய ஜீவாவுக்கு நன்றி)

ஓருருவம் மூவுருவம் ஆன நாளோ
நாரணனை இடப்பாகத்து அடைந்தார் போலும்."
என்றும்,
"அரியாகிக் காப்பான், அயனாய்ப் படைப்பான்,
அரனாயழிப்பவனுந்தானே!"

என்று அனைத்துமே அவன் ஒருவனே எனச் சொல்கின்றனர். அரியின் இதயத்தில், அரனும், அரனின் இதயத்தில் அரியும் குடி இருக்கின்றார்கள். இருவரும் ஒருவரே என்பதைச் சொல்லும் வண்ணம், "அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவர் வாயிலே மண்ணு" என்றும் சொல்லுவதுண்டு. சிவன் எந்தவிதமான அடையாளமும் இல்லாதவர் என்பதைக் குறிக்கும் வண்ணம் "அலிங்கம்" எனவும், விஷ்ணு எந்தவிதமான ரூபமும் இல்லாதவர் என்பதைக் குறிக்கும் வண்ணம், "அமூர்த்தி" எனவும் சொல்லப் படுகின்றனர்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.

அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்

வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்

தங்கம் தானம் தர தோஷம் விலகும்

பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும்

தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்

நெய் தானம் தர நோயைப் போக்கும்

பால் தானம் தர துக்கநிலை மாறும்

தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்

நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்

தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்

தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்

கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்

பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும்

ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும்

அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.
குளிகன் கொடுப்பான்..!! குளிகன் கெடுப்பான்..!!!எப்போது..!  அறிவோமா..!!

குளிகை நேரம் கிடைக்க கொடுத்து வைத்திருத்திருக்க வேண்டும்.

தினமும் ராசி பலன் பார்த்து இன்றைய நாள் எப்படி இருக்கும் என தெரிய அனைவரும் ஆசை படுகிறோம்.

தினசரி பத்திரிக்கையில் ராசி பலன் பகுதியிலோ அல்லது காலண்டரிலோ குளிகை என்ற பகுதி கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.

ராகு காலம்., எமகண்டம் தெரிந்த அளவு குளிகை பற்றி பலருக்கு தெரிவதில்லை.

வார நாட்கள் 7

நவகிரகம் 9

7 கிரகங்களுக்கு 7 நாட்கள்.

ஆனால் ராகு, கேதுவிற்கு தினசரி 1½ மணி நேரம் ராகு காலம்., எமகண்டமாக பிரித்து கொடுக்கப்படுகிறது. அதனால் ராகு., கேதுவிற்கு கிழமை கிடையாது.

ஆனால் குளிகை யார்.?

குளிகன் சனி—ஜேஷ்டா தேவியின் புதல்வன்.

ராகு., கேதுவை போல் தினமும் பகலும்., இரவும் 1½., 1½ மணி நேரம் இவருக்கும் பிரித்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த காலத்தில் செய்யும் செயல்கள் பெரும் வளர்ச்சி பெறும் என்பதால் #அசுப காரியங்களை தவிர்ப்பது நல்லது.

ஆனால்., எந்த நல்ல செயல் செய்தாலும் நல்ல வளர்ச்சியை கொடுக்கும்.

குறிப்பாக கடன் கழுத்தை நெரிப்பவர்கள் குளிகை காலத்தில் கடனில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் விரைவில் அடைபடும்.

*"சுப செயலான நகை வாங்குவது., தொழில் தொடங்குவது., நடவு செய்வது போன்ற சுப நிகழ்ச்சிகள் தாராளமாக செய்யலாம்."*

*"அது போல் கடன் வாங்குவது., பிரேதத்தை தூக்குவது போன்ற அசுப நிகழ்ச்சியை முற்றிலும் தவிர்க்க வேண்டும்."*

கிழமைகள் ~~
பகல் பொழுது
மற்றும்
இரவுப் பொழுது

ஞாயிறு ~~
பகல் ~ 03:00 — 04:30
மற்றும்
இரவு ~ 09:00 — 10:30

திங்கள் ~~
பகல் ~ 01:30 — 03:00
மற்றும்
இரவு ~ 07:30 — 09:00

செவ்வாய் ~~
பகல் ~ 12:00 — 01:30
மற்றும்
இரவு ~12:00 — 01:30

புதன் ~~
பகல் ~ 10.30 — 12.00
மற்றும்
இரவு ~ 03.00 — 04.30

வியாழன் ~~
பகல் ~ 09.00 — 10.30
மற்றும்
இரவு ~ 01.30 — 03.00

வெள்ளி  ~~
 பகல் ~ 07.30 — 09.00
மற்றும்
இரவு ~12.00 — 01.30

சனி ~~
பகல் ~ 06:00 — 07:30
மற்றும்
இரவு ~ 10:30 — 12:00

மேலே குறிப்பிட்டுள்ள தினசரி குளிகை கால காலத்தை பயன்படுத்தி முன்னேற்றம் பெறுங்கள்.

கடன் தொல்லை கடுமையாக இருப்பவர்கள் செவ்வாய்கிழமை பகல் 12:00 — 01:30குள் கடனில் சிறுபகுதியை கொடுங்கள்.

நீங்களே ஆச்சிரியபடும் அளவிற்கு கடன் அடைபடுவதை கண் முன் காணலாம்.

பலரும் பயன் பெற்ற மிக எளிய பரிகாரம்.

முதலில் கொடுத்திருக்கும் நேரம் பகல் பொழுது இரண்டாவது இரவு பொழுது குளிகன் நேரம் .

மொத்தம் நவ கிரஹங்கள் அதாவது நவ என்றல் ஒன்பது. ஆனால் ஏழு கிரஹங்களுக்கும் அதன் பெயரிலேயே ஒரு நாள் இறைவனால் பரிசு கொடுக்கப்பட்டிருக்கிறது .

ராகுவுக்கு கேதுவுக்கும் நாள் கொடுக்கப்படவில்லை என்றாலும் வாரத்தின் ஏழு நாளிலும் ஒரு முகூர்த்த நேரம் ( 1½ ஒன்றரை மணி நேரம் ஒரு முகூர்த்த நேரம் ) கொடுக்க பட்டுள்ளது.

அதேபோன்று குளிகனுக்கும் வாரத்தில் ஏழு நாட்களிலும் காலை மற்றும் இரவு என்று இரண்டு வேளையும் ஒரு முகூர்த்த நேரம் கொடுக்கப் பட்டுள்ளது.

எல்லா நாட்களும் இரண்டு வேளையும் ஒரு முகூர்த்த நேரம் பரிசாக பெற்றுள்ள குளிகன் மிகவும் சக்தி வாய்ந்தவன் என்பது இதிலிருந்து புலனாகிறது..!

ஓம் ஸ்ரீ மஹா பைரவாய நமஹ..! என்று எவனொருவன் பைரவர் சன்னதி முன் ஜபிப்பதற்கு முன் விளக்கேற்றி செவ்வரளி மலர் சாற்றி அவர் முன் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் மாலை 3 முதல் 4.30 வரை குளிகன் காலத்தில் ஜபித்தால் கோடி மடங்கு பலன்.

ஏனென்றால் குளிகனுக்கு ஒன்றை., பல மடங்காக ஆக்கும் சக்தி உண்டு. அது அந்த நேரத்தில் நல்ல காரியங்கள் செய்தாலும் சரி., கெட்ட காரியங்கள் செய்தாலும் சரி., அது பல்கி பன் மடங்காக பெருகும் என்பது நிதர்சனமான உண்மை .

அனால் இந்த குளிகன் சூட்சும நேர மகிமை பலருக்கும் தெரியவில்லை.

ஞாயிறு, 13 அக்டோபர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 60 ॐ

{நடராஜனும் & கோவிந்த ராஜனும்}

மாணிக்க வாசகர் காலம் பற்றிய கேள்விகளுக்கு இன்னும் பதில் வரவில்லை. வந்தால் தனிப்பதிவாய்ப்போடுகின்றேன். இப்போது நடராஜரும், கோவிந்தராஜரும் சேர்ந்தே தில்லையில் காட்சி அளிப்பதன் தாத்பரியத்தைப் பார்ப்போம். இதைப் பற்றி ஜெயஸ்ரீசாரநாதன் தன் பதிவில் மிக மிக அருமையாக எழுதி இருக்கின்றார். இங்கே ஜெயஸ்ரீ அந்த அளவுக்கு அழகாயோ விபரங்கள் கொடுத்தோ எழுத முடியா விட்டாலும் ஓரளவுக்கு அனைவருக்கும் புரியுமாறு எடுத்துச் சொல்லுகின்றேன். நமது முன்னோர்களால் இயற்கையே வணங்கப்பட்டு வந்தது. மழை பொழியச் செய்யும் வருணனும், இந்திரனும், வாயுவும், அக்னியும், நீரும் வணங்கப்பட்டது. எனினும் வேதங்களிலும், உபநிஷத்துக்களிலும் இவை அனைத்துக்கும் மேலே ஒன்று எல்லாவற்றிலும் சிறந்த ஒன்று படைப்புக்கும் அதைச் சேர்ந்த இருப்புக்கும் அழிவுக்கும் காரணம் என்று சொல்லி வந்தது வருகின்றது. எவராலும் காணமுடியாத இந்தப் பரப்பிரும்மத்தைக் காண ஞானமும் தேவை அனைவராலும் காணமுடியாது. இருந்தும் இல்லாதது. இல்லாமலும் இருப்பது போல் இருப்பது. இந்தப் பரப்பிரும்மத்தையே நாளாவட்டத்தில் மனிதர்கள் பல உருவங்களில் வணங்க ஆரம்பித்தனர். அவரவர்களின் வசதிக்கும் வணங்கும் செளகரியத்துக்கும் உணர்வுகளுக்கும் ஏற்ப இந்தக் கடவுள் பலவிதங்களில் உருவெடுக்க ஆரம்பித்தார். என்றாலும் வேதங்கள் சொல்லுவதோ ஒன்றே கடவுள் என்பது மட்டுமே. புராண காலங்களில் கடவுள் வழிபாடு பிரம்மா, விஷ்ணு, சிவன், கணபதி, ஸ்கந்தன், தேவி எனப் பல உருவங்களில் வழிபட ஆரம்பித்தனர். எனினும் அனைவருக்கும் அதிபதியும் அனைத்துக்கும் ஆதாரமும் ஆனவன் அந்தச் சர்வேஸ்வரனே என்பதில் சந்தேகம் இல்லை. அந்தப் பரமேஸ்வரனே பிரக்ருதியின் துணை கொண்டு இம்மூவரையும் சிருஷ்டி செய்ததோடு அல்லாமல் தன்னிலிருந்து தேவையான சக்தியையும் கொடுத்து இம்மூவரையும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்ய வைக்கின்றான். மனித வாழ்வின் மூன்று முக்கிய குணங்களையும் குறிக்கவல்லது அத்தொழில்கள். அம்மூன்று குணங்கள் : சத்வ குணம், ராஜச குணம், தமோ குணம் ஆகியவை ஆகும். இம்மூன்று குணங்களின் அடிப்படையிலேயே இம்மூர்த்திகளும் அமைந்தனர் என்பதும் உண்மை. இவர்களில் யார் பெரியவர் யார் சிறியவர் என்பதொன்றும் இல்லை. சில சமயம் விஷ்ணுவே பெரியவர் எனவும் சிலசமயம் பிரம்மா எனவும் சில சமயம் சிவன் எனவும் சொல்லலாம். ஒரே சக்தியின் வெவ்வேறு வடிவங்களே இவை. இவற்றுக்கென்று தனி உருவம் நாமாக அமைத்துக் கொண்டது தானே தவிர இவற்றில் பேதம் ஏதும் இல்லை. முத்தொழிலைச் செய்யும் ஈசன் அந்தத் தொழிலைச் செய்யும்போது தன் இடை விடாத ஆட்டத்தின் மூலம் இவ்வுலகின் ஒவ்வொரு இயக்கத்துக்கும் காரணம் ஆகின்றான். ஈசன் தன் நெஞ்சத்தில் விஷ்ணுவின் மூச்சுக்காற்றைச் சக்தியாய்க் கொண்டே இயங்குகின்றான். அதே போல் விஷ்ணுவாகிய கோவிந்தராஜரோ நடராஜனின் ஆட்டத்தின் தாளத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மூச்சு விட்டுக் கொண்டே அவனைத் தன் இதயத்தில் சுமந்து கொண்டு இவ்வுலகைக் காக்கின்றார். அந்த ஆட்டமும் தாளமும் இல்லை எனில் இவ்வுலகு இயங்குவது எங்கே? இருவரும் ஒருவரே. ஒருவர் இல்லாமல் மற்றொருவர் இல்லை. உண்மையான சிவசக்தி ஐக்கியம் சிவவிஷ்ணு சேர்ந்தே இருப்பதில் தான் உள்ளது. இந்த சிவ சக்தி ஐக்கியமே இந்தப் பிரபஞ்சத்தின் மூலகர்த்தாவும் ஆகும்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ