ஞாயிறு, 13 அக்டோபர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 60 ॐ

{நடராஜனும் & கோவிந்த ராஜனும்}

மாணிக்க வாசகர் காலம் பற்றிய கேள்விகளுக்கு இன்னும் பதில் வரவில்லை. வந்தால் தனிப்பதிவாய்ப்போடுகின்றேன். இப்போது நடராஜரும், கோவிந்தராஜரும் சேர்ந்தே தில்லையில் காட்சி அளிப்பதன் தாத்பரியத்தைப் பார்ப்போம். இதைப் பற்றி ஜெயஸ்ரீசாரநாதன் தன் பதிவில் மிக மிக அருமையாக எழுதி இருக்கின்றார். இங்கே ஜெயஸ்ரீ அந்த அளவுக்கு அழகாயோ விபரங்கள் கொடுத்தோ எழுத முடியா விட்டாலும் ஓரளவுக்கு அனைவருக்கும் புரியுமாறு எடுத்துச் சொல்லுகின்றேன். நமது முன்னோர்களால் இயற்கையே வணங்கப்பட்டு வந்தது. மழை பொழியச் செய்யும் வருணனும், இந்திரனும், வாயுவும், அக்னியும், நீரும் வணங்கப்பட்டது. எனினும் வேதங்களிலும், உபநிஷத்துக்களிலும் இவை அனைத்துக்கும் மேலே ஒன்று எல்லாவற்றிலும் சிறந்த ஒன்று படைப்புக்கும் அதைச் சேர்ந்த இருப்புக்கும் அழிவுக்கும் காரணம் என்று சொல்லி வந்தது வருகின்றது. எவராலும் காணமுடியாத இந்தப் பரப்பிரும்மத்தைக் காண ஞானமும் தேவை அனைவராலும் காணமுடியாது. இருந்தும் இல்லாதது. இல்லாமலும் இருப்பது போல் இருப்பது. இந்தப் பரப்பிரும்மத்தையே நாளாவட்டத்தில் மனிதர்கள் பல உருவங்களில் வணங்க ஆரம்பித்தனர். அவரவர்களின் வசதிக்கும் வணங்கும் செளகரியத்துக்கும் உணர்வுகளுக்கும் ஏற்ப இந்தக் கடவுள் பலவிதங்களில் உருவெடுக்க ஆரம்பித்தார். என்றாலும் வேதங்கள் சொல்லுவதோ ஒன்றே கடவுள் என்பது மட்டுமே. புராண காலங்களில் கடவுள் வழிபாடு பிரம்மா, விஷ்ணு, சிவன், கணபதி, ஸ்கந்தன், தேவி எனப் பல உருவங்களில் வழிபட ஆரம்பித்தனர். எனினும் அனைவருக்கும் அதிபதியும் அனைத்துக்கும் ஆதாரமும் ஆனவன் அந்தச் சர்வேஸ்வரனே என்பதில் சந்தேகம் இல்லை. அந்தப் பரமேஸ்வரனே பிரக்ருதியின் துணை கொண்டு இம்மூவரையும் சிருஷ்டி செய்ததோடு அல்லாமல் தன்னிலிருந்து தேவையான சக்தியையும் கொடுத்து இம்மூவரையும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்ய வைக்கின்றான். மனித வாழ்வின் மூன்று முக்கிய குணங்களையும் குறிக்கவல்லது அத்தொழில்கள். அம்மூன்று குணங்கள் : சத்வ குணம், ராஜச குணம், தமோ குணம் ஆகியவை ஆகும். இம்மூன்று குணங்களின் அடிப்படையிலேயே இம்மூர்த்திகளும் அமைந்தனர் என்பதும் உண்மை. இவர்களில் யார் பெரியவர் யார் சிறியவர் என்பதொன்றும் இல்லை. சில சமயம் விஷ்ணுவே பெரியவர் எனவும் சிலசமயம் பிரம்மா எனவும் சில சமயம் சிவன் எனவும் சொல்லலாம். ஒரே சக்தியின் வெவ்வேறு வடிவங்களே இவை. இவற்றுக்கென்று தனி உருவம் நாமாக அமைத்துக் கொண்டது தானே தவிர இவற்றில் பேதம் ஏதும் இல்லை. முத்தொழிலைச் செய்யும் ஈசன் அந்தத் தொழிலைச் செய்யும்போது தன் இடை விடாத ஆட்டத்தின் மூலம் இவ்வுலகின் ஒவ்வொரு இயக்கத்துக்கும் காரணம் ஆகின்றான். ஈசன் தன் நெஞ்சத்தில் விஷ்ணுவின் மூச்சுக்காற்றைச் சக்தியாய்க் கொண்டே இயங்குகின்றான். அதே போல் விஷ்ணுவாகிய கோவிந்தராஜரோ நடராஜனின் ஆட்டத்தின் தாளத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மூச்சு விட்டுக் கொண்டே அவனைத் தன் இதயத்தில் சுமந்து கொண்டு இவ்வுலகைக் காக்கின்றார். அந்த ஆட்டமும் தாளமும் இல்லை எனில் இவ்வுலகு இயங்குவது எங்கே? இருவரும் ஒருவரே. ஒருவர் இல்லாமல் மற்றொருவர் இல்லை. உண்மையான சிவசக்தி ஐக்கியம் சிவவிஷ்ணு சேர்ந்தே இருப்பதில் தான் உள்ளது. இந்த சிவ சக்தி ஐக்கியமே இந்தப் பிரபஞ்சத்தின் மூலகர்த்தாவும் ஆகும்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ

சனி, 12 அக்டோபர், 2019

20:நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!!

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள இரண்டு ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

            20:ஸ்ரீ மூக சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
                          (கி.பி. 398 -கி.பி.437 வரை)
ஸ்ரீ மூக சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்'நான்காம் சங்கரர்'என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர்இவரின் தந்தை பெயர் வித்யாவதி,வானவியல் வல்லுனர் பிறவி ஊமையாக இருந்த ஸ்ரீ சங்கரேந்திரருக்கு ஸ்ரீவித்யா கநேந்திரர் அருளாள் பேச்சு வந்தது!
உடனே,'மூகபஞ்ச சதீ'என்னும் ஐநூறு அருட் பாடல்களைப் பொழிந்தார். நன்றிக் கடனாக மடத்துக்கே இவரைக் கொடுத்து விட்டனர் இவரின் பெற்றோர்.ஸ்ரீ மூகசங்கரர் காலத்தில் பேரரசனாக இருந்தவன்'சஹாரி விக்ரமாதித்யன்'.அவனது ஆட்சிகாலம் கி.பி.375-413 என்று வரலாற்று நூல்கள் கூறுகின்றன.அவனுக்குக் கப்பம் கட்டிய வேந்தர்கள் காஷ்மீரப் பகுதிகளை ஆண்ட மாத்ருகுப்தனும்,ப்ரவரசேனனுமாவர்.இருவருமே ஸ்ரீ மூக சங்கரரிடம் பெரும் பக்தி உண்டு.வேலைக்காரனான மாத்ருகுப்தன் அரசனான கதையை சுருக்கமாக பார்ப்போம்.சிருவயதில் மாத்ருகுப்தன்,சஹாரி விக்ரமாதித்யன் அரண்மனையில் சந்தனம் அரைக்கும் தொழிலை செய்து கொண்டிருந்தான்.விக்ரமாதித்யன் காஷ்மீரத்தை வென்று அங்கு முகாமிட்டிருந்த இரவு நேரம்.நள்ளிரவு எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்க,மாமன்னன் திடிரென விழித்தான்
விளக்குகளெல்லாம் அனைந்திருந்தன.வேந்தன் விளக்கேற்ற காவலரை அழைத்தான்.மாத்ரு குப்தன் விளக்குடன் வந்தான்.நீ ஏன் தூங்கவில்லை என்று கேட்டான் அரசன்"புதிதாக வெற்றி பெற்ற அரசர் அலுப்பில் உறங்கலாம்.இப்படி உறங்கிய பாண்டவர்களின்
மைந்தர்களையும்,மைத்துனனையும் எதிரிகளின் தளபதியான அச்வத்தாமன் வெட்டியது இரவில்தான்"எனப்பொருள்படும்.
 ஸமஸ்கிருதக் கவிதையைச் சொல்லியபடியே விளக்கேற்றினான் சிறுவன்.மன்னன் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!சிருவனுக்கு வெகுமதி தர விரும்பி அவனை காஷ்மீரத்தின் மன்னனாக்க ரகசியமாக அரசாணை பிறப்பித்தான்.பிறகு மாத்ருகுப்தனிடம் தனது முத்திரை மோதிரத்தை அளித்து காஷ்மீர் தலைநகருக்கு அனுப்பினான்.நகர எல்லையில் தனக்களிக்கப்பட்ட அரச மரியாதைகளைக் கண்டு திக்குமுக்காடிப் போனான் மாத்ருகுப்தன்.சஹாரி விக்ரமாதித்யன் எதிர்பார்த்தும் இதைத்தானே!இப்படி எதிர்பாராத விதமாக மணிமுடி சூட்டப்பட்ட மாத்ருகுப்தனுக்கு நாளடைவில் கர்வம் மிகுந்தது.அதனால் எவரையும் மதிப்பதில்லை ஸ்ரீ மூக சங்கரருக்கு இச்செய்தி எட்டியது.அவனது குறையை உணர்த்தத் திருவுள்ளம் கொண்டார்.அரசன் இருப்பிடம் சென்றார்.ராமிலன் என்கிற குதிரை மாவுத்தனையும்,
மேது(மெந்தன்)என்கிற யானைப் பாகனையும் அழைத்து தனது அருள் நோக்கால் நினைத்தார்.இருவரும் கவி பாடும் ஆற்றல் பெற்றனர்.ராமிலன்,'மணிப்ரபா'என்ற கவிதை நாடக நூலையும்,மேது'ஹயக்ரீவ வதம்'என்கிற நாடக நூலையும் படைத்தனர்.
கவிதைத்திறன் என்பது'கர்வம் கொள்வதற்கல்ல'என்று புரிந்து கொண்டான் மாத்ருகுப்தன்.அவனது செருக்கு இருந்த இடம் தெரியாது மறைந்தது.மூக சங்கரரின் திருப்பாதங்களைப் பணிந்தான்.
ஸ்வாமி! தங்கள் கட்டளைப்படி ஏதாவது செய்தால் தான் மனம் சமாதானமாகும்"என்று வேண்டினான்.மன்னா!ஜீலம் நதி முதல் சிந்து நதி வரை அடர்ந்த காட்டுப்பகுதியாக இருக்கிறது.கொடிய மிருகங்கள் வாழ்கின்றன.முட்செடிகள் அடர்ந்துள்ளன.ஜனங்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.காட்டைத் திருத்திப் பாதை
அமைத்துக்கொடு"என்றார் ஜகத் குரு.அதை சிரமேற்க்கொண்டு நிறைவேற்றினான் மாத்ரு குப்தன் அந்த நெடுஞ்சாலை'சுஷ்மா'என அழைக்கப்படுகிறது.மாத்ரு குப்தன் ஸேது பந்தம் என்ற காவியத்தைப் படைத்து ஆசார்யாளுக்கு அர்ப்பணித்தான்.அரசாட்சியை ராஜ உரிமை பெற்ற ப்ரவரசேனனிடம் ஒப்படைத்து ஆசார்ய ஸ்வாமிகளிடம் உபதேசம் பெற்று'ஸார்வ பௌமன்'என்னும் நாமத்தோடு"இளைய குரு"ஆனார்.ப்ரவரசேனன் ஸார்வபௌமர் ஜீ விதகாலம் வரை காஷ்மீர் நாட்டின் வரி வருமானம் முழுவதையும் ஸ்ரீ காமகோடி பீடத்துக்கு அனுப்பி வந்ததாய் ராஜதரங்கணீயம் கூறுகிறது.இப்படி செயற்ரிய செயல்களைச் செய்த மூக சங்கரர் கி.பி.437-ஆம் ஆண்டு,தாது வருடம்,ஆவணி மாதம்,பௌர்ணமியன்று கோதாவரி தீரத்தில் சித்தியடைந்தார்.
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 59 ॐ
   {கோவிந்தராஜப் பெருமாள்!}

அடுத்ததாய் நாம் காணப் போவது சிதம்பரம் கோயிலுக்கு உள்ளேயே அமைந்திருக்கும் கோவிந்தராஜப் பெருமாள் பற்றிய சில தகவல்கள். ஈசனின் ஆனந்தத் தாண்டவத்தை மனதுக்குள்ளேயே கண்டு களித்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணு பின்னர் தான் தினமும் நேரில் கண்டு ஆனந்திக்க வேண்டியே இங்கே கோயில் கொண்டாரோ எனச் சொல்லும்படிக்கே ஈசனின் தாண்டவக் கோலத்தைப் பார்த்தபடிக்கு கோவிந்தராஜப் பெருமாளின் சன்னதி அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஒரு கொடிமரம் கருடனுக்கு ஒரு சன்னதி பலிபீடம் முதலியன உள்ளன. சிறிய ஒரு பிரகாரமும் உள்ளது. நிருத்த சபைக்கு அடுத்து மகாலட்சுமிக்கு எனத் தனியாக ஒரு சன்னதி உள்ளது. இந்தக் கோயிலை ஸ்ரீவைஷ்ணவர்கள் புண்டரீகபுரம் என அழைப்பதால் அன்னையின் திருநாமம் இங்கே புண்டரீகவல்லித் தாயார் ஆகும். விஷ்ணுவின் சன்னதியையும் இந்த விஷ்ணுவின் கோயிலையும் திருச்சித்திரகூடம் என வைஷ்ணவர்கள் அழைக்கின்றனர். முதன் முதலில் இந்தக் கோயில் பல்லவ மன்னன் நந்திவர்மனால் 8ம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டிருக்கலாம் எனச் சரித்திரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. காஞ்சியின் வைகுந்தபெருமாள் கோயிலைக் கட்டிய இவனே இந்தக் கோயிலையும் எழுப்பியதாயும் ஆதாரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பர், சுந்தரர், சம்மந்தர் காலத்தில் இங்கே விஷ்ணுவுக்கெனக் கோயில் இல்லை எனவும் சொல்லும் இந்தத் தகவல் மாணிக்கவாசகர் காலத்திலேயே இந்தக் கோயில் எழுப்பப் பட்டிருக்கவேண்டுமென்றும் சொல்கின்றது.

"பைம்பொன்னும் முத்தும் மணியுங் கொணர்ந்து
படை மன்னவன் பல்லவர்கோன் பணிந்த
செம்பொன்மணி மாடங்கள் சூழ்ந்த தில்லைத்
திருச்சித்திர கூடஞ்சென்று சேர்மின்களே!" என திருமங்கை ஆழ்வாரும்

"செந்தளிர் வாய் மலர் நகைசேர் செழுந்தண்சோலைத் தில்லைநகர்த் திருச்சித்ரகூடந்தன்னுள அந்தணர்களோடு மூவாயிரவரேத்த
வணிமணியாசனத்தமர்ந்த வம்மான்றானே!" எனக் குலசேகர ஆழ்வாரும் மங்களா சாசனம் செய்வித்திருக்கின்றார்கள் இந்தத் தில்லை கோவிந்தராஜருக்கு. ஆனால் தீவிர சைவர்கள் ஆன சோழமன்னர்கள் காலத்தில் 12ம் நூற்றாண்டில் ஆண்ட 2ம் குலோத்துங்கன் காலத்தில் விஷ்ணு கோயிலில் இருந்து விஷ்ணு விக்ரஹம் எடுக்கப்பட்டுக் கடலில் வீசி எறியப் பட்டதாயும் தெரிய வருகின்றது. பின்னர் அந்த விக்ரஹம் வைஷ்ணவ பக்தர்களால் எடுக்கப்பட்டு திருமலையின் கீழே திருப்பதிக்குக் கொண்டு வரப்பட்டு அங்கே ராமானுஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்டுக் கோயிலும் கட்டப்பட்டதாய்ச் சரித்திரம் கூறுகின்றது. அதன் பின்னர் வந்த கிருஷ்ண தேவராயரின் குலத்தைச் சேர்ந்த அச்சுதராயன் என்பவன் மகாவிஷ்ணுவின் ஆலயத்தைத் திரும்பக்கட்டிய தோடல்லாமல் விஷ்ணுவின் விக்ரஹத்தையும் அங்கே பிரதிஷ்டை செய்ய ஆவன செய்தான். இது தவிரவும் வைகானச முறைப்படி கோயிலில் தினசரி வழிபாடுகள் நடத்தவும் அதற்கான நிதி உதவியும் அச்சுதராயனால் செய்யப் பட்டது. பின்னர் வந்த வேலூரை ஆண்ட ரங்கராயன் என்பவனால் கோயில் மேலும் புதுப்பிக்கப் பட்டு புண்டரீகவல்லித் தாயாருக்கு விமானமும் எழுப்பப்பட்டு கோவிந்தராஜரின் சன்னதிக்கு முன்னால் இருக்கும் மண்டபமும் புதுப்பிக்கப் பட்டது. 5 கிராமங்களுக்கு வரிவிலக்கு அளித்து அவற்றின் வருமானத்தை விஷ்ணு கோயிலின் வழிபாடுகளுக்கும் கொடுத்தான். தற்காலத்தில் சிதம்பரம் கோயில் தீட்சிதர்களுக்கும் விஷ்ணு கோயில் அறங்காவலர்களுக்கும் உள்ள பிரச்னை செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களால் சுமுகமாய்த் தீர்த்து வைக்கப் பட்டு ராஜா சர் செட்டியார் அவர்கள் விஷ்ணு கோயிலின் திருப்பணிகளையும் செய்து கொடுத்தபின்னர் 1934க்குப் பின்னர் விஷ்ணு கோயிலின் அறங்காவலர்களுக்கும் நடராஜர் கோயிலின் தீட்சிதர்களுக்கு சுமுகமான உறவே இருந்து வருகின்றது. விஷ்ணு கோயிலின் வழிபாட்டு விஷயங்களில் தீட்சிதர்கள் தலை இடுவதில்லை. வைகானஸ முறைப்படியே வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் பலவேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.

ஒவ்வொருவரும் தாங்கள் கருதிய கருத்துக்களை நிலை நாட்டுவதற்கு பலவேறு ஆதாரங்களைக் காட்டுகின்றனர். எல்லோருடைய ஆராய்ச்சியும் அடிகளார் கடைச் சங்க காலத்திற்கு பின் தொடங்கி 11ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலங்களில் ஏதேனும் ஒருகாலம் மணிவாசகர் வாழ்ந்த காலம் என முடிவு செய்கின்றது. இக்கால ஆராய்ச்சிகளைத் தொகுத்து ஆராய்ந்து மணிவாசகர் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என முடிவு செய்து தருமை ஆதீனத் திருவாசக நூல் வெளியீட்டில் மகாவித்துவான் திரு. ச.தண்டபாணி தேசிகர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்களுடைய கால ஆராய்ச்சித் தொகுப்புரையின் ஒரு பகுதியைச் சுருக்கித் தருகின்றோம்.

திருமலைக் கொழுந்துப் பிள்ளை அவர்கள் முதல் நூற்றாண் டாகவும் பொன்னம்பலப் பிள்ளை அவர்கள் இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டாகவும் மறைமலையடிகளார் அவர்கள் மூன்றாம் நூற்றாண்டாகவும் வில்ஸன்வுட் என்பவர் ஏழாம் நூற்றாண்டு என்றும் G.U.. போப் ஏழு எட்டு அல்லது 9  ஆம் நூற்றாண்டு என் றும், சூலின் வின்ஸன் 9 அல்லது 10 - நூற்றாண்டு என்றும் Mr. கௌடி 8 லிருந்து 10 ஆம் நூற்றாண்டுக்குள் என்றும் Dr. ரோஸ்ட்டு 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டு என்றும், நெல்ஸன் 9 ஆம் நூற்றாண்டு என்றும் K.G. சேஷய்யர் 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டு என்றும் சீனிவாசப் பிள்ளை 9 ஆம் நூற்றாண்டு என்றும் C.K.சுப்பிரமணிய முதலியார் மூவர்க்கும் முந்தியவர் என்றும் கூறுகின்றனர்.

மூவர்க்கு முந்தியவர் மணிவாசகர் என்ற கருத்து பொருத்த முடையதாகத் தோன்றுகிறது. மணிவாசகர் காலத்தில் நம் நாட்டில் தலையெடுத்திருந்த புறச்சமயம் பௌத்தம் ஒன்றே எனத் தெரிகிறது. மூவர் காலத்தில் பௌத்தம் ஓரளவிலும் சமணம் சிறப்புற்றும் இருந்தன. மணிவாசகர் வாக்கில் சமண் சமயக் குறிப்பேதும் காணப் பெறவில்லை. திருவாசகத்தில் விநாயகரைப் பற்றிய குறிப்பு எதுவும் காணப் பெறவில்லை. இன்ன பல காரணங்களால் மணிவாசகர் மூவர்க்கும் முந்தியவர் என்று கொள்ளலாம்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 58 ॐ

மேலும் தகவல்கள் கொடுக்கின்றார் வெங்கட்ராம் திவாகர்!
சிம்மவர்மன், மகேந்திர பல்லவனின் தாத்தா அதாவது சிம்ம விஷ்ணுவின் தந்தை. சிம்மவர்மனுக்கு தோல் நோய் கண்டவர். இந்நோய் தீர தில்லையில் உள்ள சிவகங்கை குளத்தில் மூழ்கி பெரும் பலன் பெற்றதாக பழைய தகவல்கள் உள்ளன. இவர் ஆண்ட காலம் ஏறத்தாழ கி.பி.550 ஆகும். சைவத் திருமரபில் புகழ்பெற்ற ஐய்யடிகள் காடவர்கோன் சிம்மவர்மன் காலத்தவர். இவர்தான் சிம்மவர்மனை சிதம்பரத்திற்கு இழுத்ததாக சரித்திர ஆசிரியர் (என். சுப்பிரமணியன்-Social and Cultural History of Tamilnadu) எழுதியுள்ளார். ஐய்யடிகள் காடவர் கோனும் ஒரு பல்லவ மன்னர் தாம் என்றாலும் இவர் சிம்மவர்மனுக்கு கீழாகவோ அல்லது உறவாகவோ இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு. இவர் எழுதிய 24 பாடல்கள் மிகப் புகழ் பெற்றவை. க்ஷேத்திர திருவெண்பா எனும் பெயர் கொண்ட இப்பாடல்கள் தான் தமிழின் முதல் கோயில் பயண நூல். 24 கோயிலகளில் குடி கொண்ட சிவ பெருமானை வழிபட்டால் என்னென்ன பலன்களை இம்மையிலும் மறுமையிலும் பெறலாம் என எழுதியுள்ளார். 11 ஆவது திரு முறையில் சேர்க்கப்பட்டுள்ள இந்தப் பாடல்களைப் படித்தாலே தமிழும் தேனும் ஏன் ஒரே வகையில் சேர்க்கப்பட்டது என்பது புரியும். சுந்தரப் பெருமானும் நம்பியாண்டார் நம்பியும் மற்றும் சேக்கிழார் பெருமானும் இப்பெருமானைப் பற்றி எழுதியுள்ளார்கள். அடுத்து கோப்பெருஞ்சிங்கன் (பதிமூன்றாம் நூற்றாண்டு) பிற்காலப் பல்லவ அரசன். மீண்டும் பல்லவ சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க ஆசை கொண்டு தோற்றுப் போனவன்) இவன் முதலில் சேந்தநல்லூரை தலை இடமாகக் கொண்டு ஆண்டு வந்த சிற்றரசன் தான். ஆனால் காலம் செல்ல செல்ல இவன் சோழப் பேரரசனாக இருந்த மூன்றாம் குலோத்துங்கனையும் மீறி பலம் பெற்றவன். ஏறத்தாழ ஒரு சக்கரவர்த்தி போல ஆட்சி செய்தவன். தில்லை அம்பலத்து கீழவாசல் கோபுரம் இவனால் கட்டப்பட்டது என்பார்கள் சரித்திர ஆசிரியர்கள். இந்த அரசனைப் பற்றிக் காவியமே எழுதப்பட்டது.(காத்யகர்ணாம்ருதம்-சமுஸ்கிருத நூல்) சிதம்பரம் கோயிலைப் பற்றி ஆய்வாளர்கள் எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் (ஏறத்தாழ 2000 பக்கங்கள் கொண்டது) மற்றும் குடவாயில் பாலசுப்ரமணியம் ஆய்வுப் புத்தகங்களை எழுதியுள்ளார்கள்.

சம காலத் திருப்பணிகள் : விஜயநகர சாம்ராஜ்யத்தில் கிருஷ்ணதேவராயருக்குப் பின்னர் வந்த அச்சுத தேவ ராயர், ஸ்ரீரங்க ராயர், வெங்கட ராயர் போன்றவர்களுக்குப் பின்னர் நாயக்க வம்சத்தைச் சேர்ந்த திருமலை ராயன், வீரப்ப நாயகன் போன்றவர்களும் பெருமளவில் சிதம்பரம் கோயிலின் திருப்பணிகளில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர்கள். சேர நாட்டை ஆண்டு வந்த சேரமான் பெருமாள் நாயனாரும் சிதம்பரம் கோயிலின் திருப்பணிகளில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர். ஆனால் இவர் காலத்தில் சற்றே குழப்பம் ஏற்படுகின்றது. சேர நாட்டின் கொல்லம் ஆண்டை ஒட்டி இவர் 9ம் நூற்றாண்டு என்று சொல்லப்படுகின்றது. ஆனால் இவரும் சுந்தரரும் சமகாலத்தவர். இவர் காலத்தைப் பற்றி www.thevaaram.org என்ன சொல்கின்றது என்று பார்த்தால்:
சுந்தரரும் சேரமான் பெருமாளும் சமகாலத்தவர். சேரமான் பெருமாள் சுந்தரர் இருவரும் பாண்டிய நாடடைந்த போது பாண்டிய மன்னனும் சோழனும் வரவேற்றனர். கொல்லம் ஆண்டின் தொடக்கத்தோடு சேரமான் பெருமாளின் ஆட்சிக் காலத்தை இணைத்து கி.பி. 825க்கு முன்னும் பின்னும் எனக் கூறுதல் பொருந்தாதெனப் பலரும் மறுத்துள்ளனர். சுந்தரரை வரவேற்ற பாண்டியன் கோச்சடையன் ரணதீரன் (கி.பி. 670-710). ஆகவே இவர் காலம் 7-ம் நூற்றாண்டின் பிற்பகுதியும் 8ம் நூற்றாண்டின் முற்பகுதியுமாக இருக்கலாம். இவர் எழுதிய "திருக்கைலாய ஞான உலா" திரு கைலையிலேயே ஈசன் முன்னால் அரங்கேற்றப்பட்டுப் பின்னர் மாசாத்துவான் என்பவரால் திருப்பிடவூரில் அரங்கேற்றப்பட்டது என்று சொல்வதுண்டு. பாடல் பக்கம் திறக்க முடியவில்லை. பின்னர் கேரளத்தின் கொச்சியில் ஆண்டு வந்த மகாராஜா ராமவர்மனாலும் கட்டளை மேற்கொள்ளப்பட்டு கொண்டமநாயகன் கட்டளை என்ற பெயரால் நிறைவேற்றப் பட்டது எனவும் அறிகின்றோம். இப்போது பதினெட்டாம் நூற்றாண்டின் காலங்களில் செய்யப்பட்ட திருப்பணிகள் காஞ்சியைச் சேர்ந்த பச்சையப்ப முதலியாரால் கோயிலின் திரு விழாக்களில் முக்கியமான பிரம்மோற்சவம் முறைப்படுத்தப் பட்டதோடு அல்லாமல் திருவாதிரைத் திரு நாளைப் போன்ற முக்கியத்துவம் ஆனித் திருமஞ்சனத்துக்கும் அளிக்கப்பட்டுப் பெரிய அளவில் கொண்டாட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப் பட்டது. நடராஜரின் ரதம் இருக்கும் பீடம் உள்பட ரதங்களையும் மராமத்து செய்து கிழக்குக் கோபுரத்தின் திருப்பணியையும் ஏற்றுச் செய்ய ஆரம்பித்தார் பச்சையப்ப முதலியார். அது பூர்த்தி அடைவதற்குள் இறந்து போகவே அவரின் மனைவியும் சகோதரியும் சேர்ந்து அவர் ஆவலைப் பூர்த்தி செய்தனர். இவரின் தூண்டுதலின் பேரில் மணலியில் வாழ்ந்து வந்த சின்னையா முதலியாரும் சிதம்பரம் கோயிலுக்கு நந்தவனங்களைச் செப்பனிடுதல் மற்றும் கோயிலின் பல திருப்பணிகள் எல்லாவற்றுக்கும் மேல் சித்சபையின் படிக்கட்டுகளை வெள்ளியால் அமைத்தல் போன்றவற்றைச் செய்து கொடுத்தார். நாட்டுக் கோட்டை நகரத்தார் என அழைக்கப்படும் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்களாலும் சிதம்பரம் கோயிலின் பல திருப்பணிகள் செய்யப் பட்டிருக்கின்றன. செட்டி நாட்டு ராஜாவான சர் அண்ணாமலைச் செட்டியார் அவரின் சகோதரர் திவான் ராமசாமிச் செட்டியார் போன்றவர்களும் நாலு கோபுரங்களின் திருப்பணிகள் கனகசபையின் கூரையை மறு செப்பனிடுதல் சுற்றுச் சுவர்களைச் செப்பனிடுதல் பிரகாரங்களில் கல்லால் ஆன பாதை அமைத்தல் சிவகங்கைக் குளத்துப் படிக்கட்டுகளைக் கல்லால் செப்பனிடுதல் திரு வீதி உலாவுக்கான வாகனங்களைச் செய்து அளித்தல் விளக்குகள் பாத்திரங்கள் போன்ற முக்கியமான தேவைகளை அளித்தல் போன்றவற்றைச் செய்து கொடுத்து மிகப் பெரிய அளவில் கும்பாபிஷேகமும் செய்து வைத்ததாயும் தெரிய வருகின்றது. 1891ல் இவை நடந்ததற்குப் பின்னர் கிட்டத் தட்ட 64 வருடங்கள் சென்ற பின்னரே 1955ல் திரு ரத்னசபாபதிப் பிள்ளையும் திரு ரத்னசாமிச் செட்டியாரின் முயற்சியாலும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டதாயும் தெரிய வருகின்றது.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம்
பூஜையில் உபயோகப்படுத்தும் நைவேத்ய பொருள்களின் சமஸ்க்ருத பெயர்கள் :

1) வெற்றிலைப் பாக்கு - தாம்பூலம்

2) முழுத்தேங்காய் - நாரிகேலம்

3) பல தேங்காய் மூடிகள் - நாரிகேல கண்டாணீ

4) வாழைப்பழம் - கதலி பலம்

5) மாம்பழம் - ஆம்ர பலம்

6) விளாம்பழம் - கபித்த பலம்

7)நாகப்பழம் ( நாவல்பழம்  ) - ஜம்பு பலம்

8)பலாப்பழம் - பனஸ பலம்

9) சாத்துக்குடி - நாரங்க பலம்

10) ஆப்பிள் பழம் - காஷ்மீர பலம்

11) பேரிக்காய் - பேரீ பலம்

12) கொய்யாப் பழம் - பீஜா பலம்

13) திராட்சை பழம் - திராட்ஷா பலம்

14) பேரீச்சம் பழம் - கர்ஜீர பலம்

15) பிரப்பம் பழம் - வேத்ர பலம்

16) கரும்பு - இக்ஷூ தண்டம்

17) மாதுளம்பழம் - தாடிமீ பலம்

18) எலுமிச்சம்பழம் - ஜம்பீர பலம்

19) வடை - மாஷாபூபம்

20) மஞ்சள் பொங்கல் - ஹரித்ரான்னம்

21) எள்ளுச்சாதம் - திலோன்னம்

22) சர்க்கரைப் பொங்கல் - குடான்னம்

23) அக்காரவடிசல் - சர்க்கரான்னம்

24) வெண்பொங்கல் - முத்கான்னம்

25) புளியோதரை - திந்திரிணியன்னம்

26) வெள்ளைசாதம் - சுத்தான்னம்

27) எலுமிச்சைசாதம் - ஜம்பீரபலன்னம்

28) தேங்காய் சாதம் - நாரிகேலன்னம்

29) தயிர்சாதம் - தத்யோன்னம்

30) பலவித சாதங்கள் - சித்ரான்னம்

31) சுண்டல் - க்ஷணகம்

32) பால் பாயாசம் - க்ஷீர பாயஸம்

33) வெல்ல பாயாசம் - குட பாயஸம்

34) புட்டு - குடமிச்சபிஷ்டம்

35) முறுக்கு - சஷ்குலி

36) இட்லி - லட்டுகானி

37) கொழுக்கட்டை - மோதகானி

38) அப்பம் - குடாபூபம்

39) மாவிளக்கு - குடமிஸ்ஸபிஷ்டம்

40) அதிரசம் - குடாபூபம்

41) உளுந்து - மாஷம்

42) பயறு - முத்கம்

43) எள் - திலம்

44) கடலை - க்ஷணகம்

45) கோதுமை - கோதுமா

46) அரிசி - தண்டுலம்

47) அவல் - ப்ருதுகம்

48) நெய் - ஆஜ்யம்

49) பருப்பு பாயாசம் - குடபாயஸம்

50) பால் - க்ஷீரம்

51) சுக்கு வெல்லம் கலந்த நீர் - பானகம்

52) வெண்ணெய் - நவநீதம்

53) கல்கண்டு - ரஸ கண்டாளீ

56) மல்லிகைப்பூ - மல்லிகாபுஷ்பம்

57) செவ்வந்திப்பூ - ஜவந்திபுஷ்பம்

58) தாமரைப்பூ - பத்மபுஷ்பம்

59) அருகம்புல் - தூர்வாயுக்மம்

60) வன்னிஇலை - வன்னிபத்ரம்

61) வில்வ இலை - பில்வபத்ரம்

62) துளசி இலை - துளஸிபத்ரம்

63) ஊதுபத்தி / சாம்பிராணி - தூபம்

64) விளக்கு - தீபம்

65) சூடம் - கற்பூரம்

66) மனைப்பலகை - ஆசனம்

67) ரவிக்கைத்துணி - வஸ்த்ரம்

68) மஞ்சள்/குங்குமம் கலந்த அரிசி - மங்களாட்சதை

69) ஜலம் நிரப்பிய சொம்பு - கலசம்

70) திருமாங்கல்ய சரடு - மங்கலசூத்ரம்

71) மற்ற பட்சணங்கள் - விசேஷபக்ஷணம்

72) பூநூல் - யக்ஞோபவீதம்

73) சந்தணம் - களபம்

74) விபூதி - பஸ்பம்

75) வாசனை திரவியங்கள் - ஸுகந்தத்ரவ்யா

புதன், 9 அக்டோபர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 56 ॐ
     சில சரித்திரக் குறிப்புகள்

கூற்றிருக்கு மடலாழிக் குரிசின்முத லோரிறைஞ்சக் கொழுந்தேன் பில்கி ஊற்றிருக்குந் தில்லைவனத் தசும்பிருக்கும் பசும்பொன்மன்றத் தொருதா ளூன்றி வண்டுபா டச்சுடர் மகுடமா டப்பிறைத் துண்டமா டப்புலித் தோலுமா டப்பகி ரண்டமா டக்குலைந் தகிலமா டக்கருங் கொண்டலோ டுங்குழற் கோதையோ டுங்கறைக் கண்டனா டுந்திறங் கான்மினோ காண்மினோ.

மேற்கண்ட குமரகுருபரரின் பாடலுக்கு விளக்கம் கீழே காணலாம். இனி இறைவனுக்கு அபிஷேகமும் ஆராதனைகளும் நடத்தப்படுவது எதற்கு எனப் பலரும் நினைக்கின்றனர். சொல்லவும் சொல்கின்றனர். ஆனால் அந்த ஆராதனைகளுக்கும் ஒரு மகத்துவம் இருக்கிறது. ஈசனை அவர் அமர்ந்திருக்கும் பீடத்தில் இருந்து எழுப்பி பின்னர் ஆராதனைக்குரிய இடத்தில் எழுந்தருளச் செய்வது தோற்றம் என்னும் சிருஷ்டியையும் இறைவனின் திருமேனியைப் பாலாலும் தேனாலும் சந்தனம் போன்ற வாசனாதித் திரவியங்களாலும் அபிஷேகம் செய்விப்பது திருமஞ்சன நீராட்டுவது காத்தல் என்னும் திதியையும் இறைவனுக்குக் கறுப்புச் சாந்து அணிவிப்பது அழித்தல் சம்ஹாரம் என்னும் தொழிலையும் வெண்ணிற ஆடையை ஈசனுக்கு அணிவிப்பது மறைப்பு அல்லது திரோபாவம் என்னும் தொழிலையும் இறைவனின் திருமேனியை ஊர்வலமாய்த் திருவீதிகளில் பவனி வரச் செய்தலை அருளல் என்னும் அனுக்கிரகத் தொழிலாகவும் கருதப் படுகிறது. இனி சிதம்பரம் கோயிலில் சில சரித்திர நாயகர்கள் செய்த திருப்பணிகள் பற்றிய குறிப்புக்கள். காலத்தால் முற்பட்டது என்று சொல்லப்படும் சிதம்பரம் கோயிலில் எப்போது கட்டப்பட்டது என்று சொல்ல முடியவில்லை என்ற பொதுவான கருத்து இருந்து வந்தாலும் முதல் முதல் கோயிலில் திருப்பணிகள் செய்து கோவிலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த மன்னன் ஹிரண்யவர்மன் ஆவான். இந்த அரசன் கெளட தேசத்தை ஆண்டு வந்ததாயும் இவன் பெயர் சிம்ஹவர்மன் எனவும் பின்னர் இவன் பெயரை ஹிரண்யவர்மன் என மாற்றிக் கொண்டதாயும் சொல்லப் படுகிறது. இந்த அரசன் தன்னுடைய உடல் நலத்துக்காக தல யாத்திரை செய்து வந்த காலத்தில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் அவன் உடல் நலத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்துக்கு நன்றி செலுத்தும் விதமாய் நடராஜ ராஜாவின் சன்னதியைச் சுற்றிப் பல மண்டபங்கள் ஏற்படுத்தியதாய்ச் சொல்லப்படுகிறது.

இந்த அரசன் பல்லவ வம்சத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லப் பட்டாலும் அதற்கான உரிய சான்றுகள் கிட்டவில்லை. ஆனால் உமாபதி சிவாச்சாரியாரின் கோயில் புராணத்தில் இந்த அரசனைப் பற்றிய குறிப்புக்கள் இருப்பதாய்ச் சொல்லப் படுகிறது. இவன் காஞ்சியை ஆண்டு வந்ததாயும் சொல்கிறார்கள். இவனுடைய காலம் கி.பி. 5 அல்லது 6ம் நூற்றாண்டு என்றும் சொல்லப்படுகிறது. என்றாலும் கி.மு. 2ம் நூற்றாண்டிலேயே தில்லைத் தலத்தைப் பற்றிய குறிப்புக்கள் பதஞ்சலி முனிவர் வியாக்ரபாதர் போன்றவர்களின் குறிப்புக்களில் இருந்து தெரிய வருவதாய்ச் சொல்கின்றனர். பதஞ்சலி முனிவர் என்று ஒருத்தர் மட்டும் இல்லை எனவும் பலர் இருந்ததாயும் சரித்திர ஆசிரியர்கள் கூறி வருகின்றனர். ஆன்மீகவாதிகளோ எனில் காலத்தால் முற்பட்டது எனச் சொல்லுகின்றனர். இந்த நடராஜரின் ஆட்டத்தைப்பற்றிய பல பாடல்கள் பலராலும் பாடப் பட்டிருக்கிறது என்றாலும் குமர குருபரரின் ஒரு பாடலை இங்கே காண்போம்.

கூற்று இருக்கும் அடல் ஆழிக் குரிசின் முதலோர் இறைஞ்சக் கொழுந்து என்பில்கி ஊற்று இருக்கும் தில்லை வனத்து அசும்பு இருக்கும் பசும் பொன் மன்றத்து ஒரு தாள் ஊன்றி வண்டு பாடச் சுடர் மகுடம் ஆடப் பிறைத் துண்டம் ஆடப் புலித் தோலும் ஆடப் பகிரண்டம் ஆடக் குலைந்து அகிலம் ஆடக் கருங் கொண்டலோடும் குழற் கோதையோடும் கறைக்கண்டன் ஆடும் திறம் காண்மினோ! காண்மினோ!"

இறைவனின் ஆட்டத்தை வர்ணிக்கும் குமரகுருபரரின் இந்தச் செய்யுள் "சிதம்பரச் செய்யுட் கோவை"யில் இடம் பெற்ற பாடல் ஆகும். இது தவிர குமரகுருபரர் சிதம்பர மும்மணிக் கோவை சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை ஆகியவையும் பாடியுள்ளார். இப்பாடலில் இறைவன் தன் ஒரு காலை ஊன்றித் தன் மகுடமும் தன் சடாமுடியில் சூடி இருக்கும் பிறை நிலாவும் புலித் தோலும் ஆடுவதோடு மட்டுமில்லாமல் தன் ஆட்டத்தால் அண்ட பகிரண்டத்தையும் ஆட்டுவிப்பதையும் குறிக்கிறார்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ

செவ்வாய், 8 அக்டோபர், 2019

நமது முன்னோர்களாகிய பித்ருக்களின் ஆசிகளைப் பெற:-

நமது வீட்டில் ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முதல் நாள் அன்று வருகை தருவர். வந்து,அமாவாசை முடியும் வரை இரண்டு நாட்கள் வரை தங்குவர்.

அவர்கள் வருவதும்,வந்து நம்மை ஆசிர்வாதிப்பதும் யுகம் யுகமாக நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது.

அப்படி வரும் போது அவர்கள் தங்கும் பொருட்கள் பட்டியல்:

#உரல்

#ஆட்டுக்_கல்,

#செம்புப்_பாத்திரம்,

#நெல்_மூட்டை,

#அரிசிப்பானை,

#நறுமணம்_தரும்_பூக்கள்,

#மூங்கிலில்_செய்யப்பட்டடபொருட்கள்,

#சுரைக்_குடுவை,

#துளசி_மாடம்,

#பசு,

#மிருதங்கம்,

#மாங்கல்யச்_சரடுகள்,

#வெட்டி_வேர்,

#மெட்டி,

#மாசிக்காய்,

#சீந்தல்_கொடி,

#பிரண்டை,

#கஸ்தூரி_மஞ்சள்,

#பஞ்சபாத்திரமும்
உத்திரிணியும்,

#உலக்கை,

#முறம்,

#மண்பானை,

#சந்தனக்_கல்,

#சந்தனக்_கட்டை,

#அம்மி

இவைகளில் ஏதாவது 5 பொருட்களாவது நமது வீட்டில் இருப்பது அவசியம்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று பித்ரு தர்ப்பணம் செய்து வந்தாலே நமது அனைத்து கடன்/நோய்/எதிரி/வருமானப் பற்றாக்குறை முழுமையாக நீங்கிவிடும்.

மாதம் தோறும் பித்ரு தர்ப்பணம் அல்லது ஆண்டுக்கு மூன்று முறையாவது (ஆடி அமாவசை,புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை) அல்லது புரட்டாசி அமாவாசையிலாவது செய்து வர வேண்டும்.

கூடவே மாதம் தோறும் குலதெய்வ வழிபாடு மற்றும் மாதம் தோறும் சிவராத்திரியன்று அண்ணாமலை கிரிவலம் சென்றால் போதுமானது.

கால.மாற்றத்தில் அவர் அவர்களின் செயல்பாடுகள் மூலமாக மேலே கூறப்பட்ட பொருட்கள் நமது வீட்டில் இல்லாமல் போய்வி்ட்டது

எவர் வீட்டிலும் இவை அனைத்தும் இருக்கின்றனவோ அவர்களுக்கு அவர்களது முன்னோர்களாகிய பித்ருக்களின் ஆசிகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.

திங்கள், 7 அக்டோபர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 55 ॐ

ஆனித் திருமஞ்சனம்!

ஆதிரையைத் தவிர நடராஜர் வீதி உலா தேரில் வரும் இன்னொரு நிகழ்ச்சி "ஆனித் திருமஞ்சனம்" ஆகும். இது ஒவ்வொரு வருஷத்திலும் தமிழ் மாதம் ஆன ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தில் நடை பெறுகிறது. உத்தர பால்குனி என்றே தீட்சிதர்கள் இதைக் குறிப்பிடுகின்றனர். நடராஜருக்கு அப்போது அபிஷேகம் நடைபெறுகிறது. ஆங்கில மாதம் ஆன ஜூன் நடுவில் இருந்து ஜூலை நடுவரை உள்ள ஒரு நாளில் உத்திர நட்சத்திரம் வரும்போது இந்தத் திருவிழா நடைபெறும். கோடைக் காலத்தின் நடுவே நடைபெறும் இந்த உற்சவமும், வானமும், நட்சத்திரங்களும் சார்ந்தே இருக்கிறது. ஆகாயத் தலம் ஆன சிதம்பரத்தின் அனைத்து நிகழ்வுகளுமே ஆகாயம் சார்ந்து இருப்பதில் வியப்பு என்ன?

இந்த உத்திர நட்சத்திரம் "துருவ" நட்சத்திரம் என்று இந்தியர்களாலும், "pole star" என மற்றவர்களாலும் குறிப்பிடப்படும் நட்சத்திரத்துக்குச் சமானம் என்று சிலப் பழைய நூல்கள் தெரிவிப்பதாய்ச் சொல்கின்றார்கள். ஆனிமாதம் உத்திர நட்சத்திர நன்னாளில், ஆகாயத்தின் வடதிசையில், இந்தத் துருவ நட்சத்திரம் என்றழைக்கப் படும் நட்சத்திரம், தன் நட்சத்திரக் குடும்பத்து மற்ற நட்சத்திரங்களுடன், "ராஜ சபை" என அழைக்கப் படும், ஆயிரங்கால் மண்டபத்திற்கு மேல் தெரிவதாயும் சொல்லுகிறார்கள். இதைத் தவிர, மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரத்திலும், தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்திலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இதில் தை மாதப் பூச நட்சத்திரத்தில் வரும் உற்சவம் மிக முக்கியமாய்க் கருதப் படுகிறது. ஆடல்வல்லான் தன் ஆனந்தத் தாண்டவத்தைச் சித் சபையில் இந்த குரு பூசத்தில் நடத்தியதாய்ச் சொல்லப் படுகிறது. இந்த குரு பூசம் என்பது 5 வருஷங் (அல்லது அதற்கு மேலும் சில சமயம் ஆகிறது,)களுக்கு ஒருமுறை,மட்டுமே வரும் இந்தத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக, பதஞ்சலி, வியாக்ரபாதர் இருவருக்கும் இறைவன் தன் நாட்டியத்தைக் காட்டி முக்தி கொடுத்ததாய்க் கூறப்படுகிறது. முதன் முதல் தில்லைப் பதியில் "கனகசபை" அமைத்து இறைவன் ஆனந்தத் தாண்டவம் ஆடியதும் தைப்பூச நன்னாளில் தான் என்று சொல்லப் படுகிறது. சிவனுக்கே உரிய "சூல விரதம்" அன்று சிறப்பித்துச் சொல்லப் பட்டாலும், அது தற்சமயம் அவர்தம் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய சிவனின் அம்சம் ஆன சுப்ரமணியருக்கு உரிய நாளாக மாறி இருக்கிறது. அன்று இறைஅவனுக்கு அன்னப் பாவாடை சார்த்திப் பின்னர் அது பக்தர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப் படும். இனி வரும் நாட்களில், சில சரித்திரச் சான்றுகளைப் பார்க்கலாம்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 54 ॐ
உமாபதி சிவாசாரியாரின் கொடிக்கவி!

தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவரில் ஒருவர் ஆன உமாபதி சிவாசாரியார் அவர்கள் நாயன்மார்களுக்குப் பின்னர் வந்த சைவ சித்தாந்தத்தைப் பரப்பியவர்களுள் முக்கியமானவராய்க் கருதப் படுகின்றார். 13-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 14-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த இவர் தில்லை வாழ் அந்தணர் அல்லாத ஒருவரைத் தம் குருவாக கொண்டார். மறைஞான சம்மந்தர் என்னும் இவரின் குருவிடம் சைவ நூல்களைப் பயின்ற இவர் இயற்றிய பல நூல்களுள் "உண்மை நெறி விளக்கம் வினா-வெண்பா கொடிக்கவி" ஆகியன மிக மிக முக்கியமானவை. "கோயிற்புராணம்" என்ற பெயரில் சிதம்பரத்தின் தல வரலாற்றையும் எழுதி இருக்கின்றார் இவர். சேக்கிழாரின் வரலாற்றையும் "சேக்கிழார் புராணம்" என்ற பெயரில் இவர் எழுதி இருக்கின்றார். தமிழைப் போலவே வடமொழியிலும் புலமை பெற்றிருந்த இவர் "பெளஷ்கர ஆகமம்" என்னும் நூலுக்கு பாஷ்யமும் எழுதி இருக்கின்றார்.
தில்லை வாழ் அந்தணர்களில் ஒருவரைக் குருவாய்க் கொள்ளாத காரணத்தால் மற்ற தீட்சிதர்கள் இவரைக் கோயிலில் பூஜை வழிபாட்டுக்கு அனுமதிக்கவில்லை. ஆகவே இவர் சிதம்பரத்துக்கு வெளியே வாழ்ந்து வந்தார். ஒரு முறை கோயிலின் உற்சவத்தில் கொடியேற்றும் உரிமை இவருடையதாய் இருந்த போதிலும் இவரை விடுத்து இன்னொரு தீட்சிதருக்கு அந்த உரிமை அளிக்கப்பட்டது. ஆனால் கொடி மேலே ஏறவே இல்லை. பின்னர் உமாபதி சிவாசாரியாரின் பக்தியின் பெருமையை உணர்ந்த மற்ற சில தீட்சிதர்களால் அவர் வரவழைக்கப்பட்டார். உமாபதி சிவாசாரியார் ஒவ்வொரு பாடலாகப் பாடப் பாடக் கொடியும் மேலே ஏறி ஐந்தாவது பாடலில் முழுதும் மேலே ஏறியதாம். இவ்வாறு இறைவன் தன் அடியார்க்குச் செய்த அருளையும் இங்கு நினைவு கூருவோம்.

கீழே அந்தக் கொடிக்கவிப் பாடல்களைக் கொடுத்துள்ளேன்.

கொடிக்கவி
1. ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடிலொன்
றொளிக்கு மெனினு மிருளட ராதுள் ளுயிர்க் குயிராய்த்
தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே
குளிக்கு முயிரருள் கூடும் படிக் கொடி கட்டினனே.

2. பொருளாம் பொருளேது போதேது கண்ணே
திருளாம் வெளியே திரவே - தருளாளா
நீபுரவா வையமெலா நீயறியக் கட்டினேன்
கோபுர வாசற் கொடி.

3. வாக்காலு மிக்க மனத்தாலு மெக்காலுந்
தாக்கா துணர்வரிய தன்மையனை - நோக்கிப்
பிறித்தறிவு தம்மிற் பிறியாமை தானே
குறிக்குமரு ணல்கக் கொடி.

4. அஞ்செழுத்து மெட்டெழுத்து மாறெழுத்து நாலெழுத்தும்
பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்தும் நெஞ்சழுத்திப்
பேசு மெழுத்துடனே பேசா வெழுத்தினையுங்
கூசாமற் காட்டாக் கொடி.

5. அந்த மலமறுத்திங் கான்மாவைக் காட்டியதற்
கந்த அறிவை அறிவித்தங் - கிந்தறிவை
மாறாமல் மாற்றி மருவு சிவப் பேறென்றுங்
கூறாமல் கூறக் கொடி.

கொடிக்கவி முற்றும்  சிதம்பர ரகசியம் இன்னும் முடியவில்லை!!!

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ

ஞாயிறு, 6 அக்டோபர், 2019

19:நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!!

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள இரண்டு ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

                19:ஸ்ரீ வித்யா கேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்-II
                                 (கி.பி. 385 -கி.பி.398 வரை)
ஸ்ரீ வித்யா கேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்-II.இவரும் மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்தவரே.தந்தையின் பெயர் உமேசசங்கரர்.பெற்றோர்கள் இவருக்கு இட்ட நாம தேயம் ஸ்ரீகண்டர்.சிறு வயதில் இவர் தேகத்தை வெண் மேக நோய் பற்றிக் கொண்டது.அதனால் இவரைத் தினமும் சூரிய நமஸ்காரம் செய்யச் சொன்னார் ஒரு பெரியவர்.இவரும் தினமும் 1008 சூரிய நமஸ்காரம் செய்தார்.நோய் பறந்து போயிற்று.ஆனாலும் இவர் சூரிய நமஸ்காரம் செய்வதை நிறுத்தவில்லை.எனவே இவர் சூரியதாசர் எனவும் மார்த்தாண்ட வித்யாகனர் என்றும் அழைக்கப்பட்டார்.பதினெட்டாவது வயதில் இவர் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதியாய் பொறுப்பேற்று பல திக்விஜய யாத்திரைகள் மேற்கொண்டார்.பன்னிரண்டு ஆண்டுகள் மட்டுமே பீடத்தை அலங்கரித்தார்.கி.பி. 398-ஆம் ஆண்டு,ஹே விளம்பி வருஷம்,புரட்டாசி மாதம்,தேய்பிறை நவமியில்,கோதாவரி நதி தீரத்தில் சித்தியுற்றார்.
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 53 ॐ

அருளே வடிவான ஆனந்தக் கூத்தனே!

ஏன் இந்தக் கூத்து? நான் உன்னைக் காண எப்போது சபையேறி வந்தாலும் பாடுவது திருவாசகமும் தேவாரமும்தானே! உன் ஒளிமிகுந்த முகம் பார்த்து நான் மெல்லமாய் உதடசைத்து பாடும்போதெல்லாம் எனக்குள் இனம் புரியாத மகிழ்ச்சி.. அதை நீ கேட்கும்போது உன் கருணை முகத்தில் எனக்கு மட்டுமே தெரியும் உற்சாகம் 'வாதவூரான் சொல்ல சிற்றம்பலத்தான் எழுதியது' என்று உன்னால் அம்பல மேடையிலேயே ஆசிர்வதிக்கப்பட்ட தமிழ்ச் செல்வங்களை மனதுக்கினிய பக்தர்களால் பாடப்படும் போது உனக்கு ஏற்படும் உற்சாகத்தை அந்த பக்தர்களுக்கு எப்படியோ உணர்த்திவிடுவாய்..ஒவ்வொரு கால பூஜைக்கும் தேவாரத்தைக் கணீரெனப் பாடும் போது ஏற்படும் பக்தி பரவசம் அனவரையும் அள்ளிக்கொள்ளும்படி செய்வதிலும் நீ வல்லவன்தான்! நிற்க! (நீதான் எப்போதுமே கால்கடுக்க அதுவும் ஒரு காலில் முயலகன் மீது நிற்கிறாயே.. நான் 'நிற்க' என்று எழுதியது பழைமையான கடிதம் எழுதும் வழக்குமுறையில்...) பழைமை என்றதும் நினைவுக்கு வருகிறது. வேதம் பழைமையானதுதானே.. வேத மொழி எனக்கு வேறுபட்டாலும் பழைமையான வேதத்தில் உள்ள பெருமையும், அதன் பொருளும் அதன் உள்ளார்ந்த கருத்துகளும் மிக உயர்ந்தவை என்றே எடுத்துக்கொள்கிறேன். அப்படித்தான் எங்கள் முன்னோர்களான அப்பர், சுந்தரர், சம்பந்தர், மணிவாசகர், நம்மாழ்வார், மற்றும் பெரியோர்கள் பலரும் சொல்லிச் சென்றார்கள். தேவாரம் முழுதுமே வேதத்தின் சாரம் என்று சைவர்களும் நம்மாழ்வாரின் திருவாய்மொழி தமிழ் வேதம் என்றும் பலர் எழுதியுள்ளார்கள். எழுதியும் வருகிறார்கள். ஆகையினால் பழைமை போற்றப்படவேண்டும் என்பது கூட அவர்கள் வாய்மூலம் நீ சொல்வது போலத்தான். ஏற்றுக்கொள்ள வேண்டியது தான். அம்பலத்துள்ளே நின்று உலகையே ஆட்டிப் படைப்பவனே! ஒரு கேள்வி! என்னைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு வேத பாஷை புரிவதில்லை என்று தானே முனிவர்கள் மூலம் தெய்வத் தமிழையும் எங்களுக்குப் பரிசாக அளித்தாய்... முத்தமிழின் முதல் சங்கத்தின் முதல் வனாய் இருந்து 'இறையனார்' என்று பெயர் கொண்டு முதற்கவிதை படித்தவனும் நீதானே..தமிழுக்கு சொல் கொடுத்தவனே.. ஏன் இந்தக் கூத்து? இன்றைய கூத்து? யோசிக்க வைக்கிறாய்.. புரிகின்றது கொஞ்சம். 'தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்' என நம்பிகளை வைத்து பாடவைத்தது நீதான்!. உமாபதி சிவம் தன் ஆச்சாரியனைப் பின் பற்றி நட்ட நடுப் பகலில் கோயிலை விட்டு ஓடியபோது அவருக்குப் பக்கபலம் போல அவர்கூடவே ஓடிப்போய் அதே தில்லைவாழ் அந்தணர்தம் பூசையையும் மறுத்தவன்தான் நீ! உமாபதி சிவனார் பூசித்த சின்ன ஆனந்த நடராசனுக்குத்தான் முதல் மரியாதை என்று கோயில் கொடிக்கம்பம் மூலம் அந்தணர்களுக்குப் புரியவைத்தவனும் நீதான்!. ராசராசசோழன் மூவர் பதிகங்களைக் கேட்ட போது அந்த மூவர் வந்தால் மட்டுமே பெறக்கூடியது அவை என்ற அந்தணர்களுக்குப் புரியும் விதத்தில் அந்த அரசன் மூலம் மூவர் விக்கிரகங்களை செய்வித்து பிராணாதிஷ்டையும் செய்வித்து அவர்களையும் தெய்வமாக்கியதோடு தமிழ்ச் செல்வங்களையும் கொடுத்து அருளினாய்! பின்னால் அச்சுதராயன் காலத்தில் சில அந்தணர்கள் கோயில் கோபுரம் ஏறி உயிர்த்தியாகம் செய்த போது காக்க வேண்டிய நீயோ அலட்சியம் செய்தாய்.. பிடிவாதம் பிடிப்போர்க்கு தெய்வம் துணை போகாது என்று நீ சொல்வது போலத்தான் பட்டது. ஆனால் அதே சமயத்தில் அந்த பழைமை மாறாத அந்தணர் குடும்பங்களை இது நாள் வரை (ஏன், இனியும்!) ஆதரித்து அரவணைத்து அவர்களின் ஒழுங்கான இதுவரை தவறாத ஆறுகால பூசையையும் ஏற்று வருகின்றாய். அவர்களின் அன்புக்கு என்றென்றும் கட்டுப்படுவது போல நடந்து வருகின்றாய்.. மேலும் யோசித்தேன்! அந்தணர்கள் உன் மீது கொண்ட அன்பு அலாதியானது. தன் வீட்டுச் செல்லக் குழந்தையாக வாராது வந்த மாமணி போல அவர்கள் உன்னை பாவிக்கிறார்கள். தன் அன்புக் குழந்தையை ஊட்டி வளர்ப்பது போல உன்னைப் பேணி பாதுகாக்கிறார்கள். பழைமையும் தொன்மையுமான வடமொழியில் பூசிப்பது உனக்கு பிடிக்கிறதா என்பதை விட அன்பாக அவர்கள் உன்னை ஆராதிப்பது உனக்கு மிகவும் பிடிக்கிறதாக எனக்குப் படுகிறது. கண்ணனுக்கு கோபியர்கள் போல உனக்கு தில்லைவாழ் அந்தணர்கள் போலும்.. அவர்கள் உரிமை எடுப்பது நியாயம் எனக் கூட உணர்த்தத் தயங்கமாட்டாயோ என்னவோ.. அவர்கள் பூசிக்கும் வேத மொழி கூட நீ தந்ததுதானே..'தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறைவன் என்று வாதவூரார் சொல்ல நீ எழுத அவர் கையாலேயே தமிழும் வடமொழியுமானாய் என்று கூட எழுத வைத்தவனும் நீதான். சரி.. போகட்டும்! எதற்காக இதையெல்லாம் நினைவுபடுத்துகிறாய்? நீ எதைக் கேட்க வேண்டுமோ அதைக் கேட்டு விட்டுப் போயேன்.. என்று நீ சொல்வது போல படுவதால் என் சிந்தையில் உன் மூலம் வந்த கோரிக்கையை உன்னிடமே கேட்டுவிடுகிறேன். எனக்கு எனக்கென்றில்லை எல்லோருக்கும் உன் அருள் வேண்டும்..
உன் புகழை உனக்கும் எனக்கும் புரியும் விதத்தில் உன் எதிரே பாடும் அருள் வேண்டும் உன் திருக்கோயிலின் பழைமையான புனிதம் என்றுமே காக்கப்பட வேண்டும். உன் பக்தர்களிடத்தே அவர்கள் அந்தணர்களாக இருந்தாலும் சரி அவர்களின் போக்கினை எதிர்ப்பவர்களாக இருந்தாலும் சரி ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் வேண்டும் பழமை பாதுகாக்கப்படவேண்டும்
செந்தமிழ் சிறந்து ஓங்க வேண்டும் உனக்குப் பிடித்த 'சிவபோகசாகரம்' பாடலிலிருந்து ஒரு வெண்பா பாடல்

'ஈசன் பலகீனன் என்றக்கால் ஆலயத்தில்
மோசம் வந்ததென்று மொழியலாம் - ஈசனே
ஆக்குவதும் ஆக்கி அழிப்பதுவும் தானானால்
நோக்குவெதென் யாம்பிறரை நொந்து

ஆக்கி அழித்து அருளும் ஆண்டவனே.. இப்போது அரங்கேறும் கூத்துக்கும் விடை வேண்டும் அதுவும் அனைவருக்கும் பயனுற வேண்டும்!!!

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ