செவ்வாய், 29 டிசம்பர், 2020

திருமுறை

தினமொரு திருமுறை




காவிரிக்கரை தலங்களை எல்லாம் தரிசித்து வந்த நம்பியாரூரப் பெருமானுக்கு நடுநாட்டில் உள்ள #திருமுதுகுன்றத்தை தரிசிக்க ஆவலேற்பட்டதால், அதுநோக்கி நடந்த வழியில் கூடலையாற்றூர் என்னும் தலத்தில் இறைவர் நிகழ்த்திய அற்புத திருவிளையாடலை நினைந்தபடி நடந்து கொண்டிருந்தார்கள்,

முதுகுன்றம், தற்காலத்தில் ஆற்றுச்சமவெளியில் இருக்கும் மருத நிலத்தலம், ஆனால் பெயரோ "முதுகுன்றம், விருத்தாச்சலம், பழமலை" என்றெல்லாம் மலையாகவே அடையாளம் காணப்படுகிறது.

"உலகத்து மலைகளுக்கு எல்லாம் தாமே பழமலையாக இருக்கிறோம்" என்று இறைவன் உணர்த்தும் மலைத்தலம் அது, ஆனால் *"மலையோ பூமிக்கடியில் அதி சூட்சுமமாக அமைந்துள்ளது, அதன் சிகரத்தின் மீதே திருமுதுகுன்ற வாணர் திருக்கோயில் அமைந்துள்ளது"*

அந்த அதிசூக்கும மலை நம்போன்ற மானுடப்பிறவிகளுக்கு தெரியாது, ஆனால் "இதோ நம்பியாரூரப் பெருமான் முதுகுன்றத்தை நெருங்க நெருங்க அவரது ஞானத் திருவிழிகளுக்கு முதுகுன்றம் சிறிது சிறிதாக மலையாகவே தோன்றுகிறது"

மலைநிலமான குறிஞ்சித்திணைக்கு உரிய கருப்பொருட்களும் காட்சிகளும் சுவாமிகளுக்கு எங்கும் காணக்கிடைக்கிறது,

ஒரு பக்கம் யானைகள் கூட்டங்கூட்டமாக மேய்கின்றன, அதில் ஒரு யானை மணிமுத்தாற்றில் தவறி விழுந்து விட்டதே!! ஆற்றின் வேகத்தில் யானையால் கரையேற முடியவில்லையே!! அது பிளிறிக்கொண்டே ஆற்றிலடித்து செல்லப்படுகிறதே!!

அதோ மலைகளின் உச்சியில் மேகங்கள் வந்து பொழில்களை சூழ்ந்து கொள்கின்றதே!? என்ன ஒரு குளுமை!!??

ஆஹா!! இதென்ன சத்தம்!! இடிமுழக்கம் போலல்லவா இருக்கின்றது!! ஓஓ!! மலைக்குகைளில் வசிக்கும் சிங்கங்கள் கர்ஜிக்கின்றன போலும்!! என்று எண்ணியபடி குறிஞ்சி நில காட்சிகளை கண்டு வந்த சுந்தரர் பெருமான் மக்கள் வசிக்கும் தெருவிற்குள் நுழைந்தார்கள்

அங்கு ஒரு வீட்டில் சுவாமிகள் கண்ட காட்சி ஆச்சர்யப் படவைத்தது, பொதுவாக வீடுகளில் பசு வளர்ப்பவர்கள் அது சினையாய் இருந்து கன்றீனும் பொழுது உடனிருந்து உதவுவார்கள்

ஆனால் இந்த முதுகுன்றத்து பெண்கள் "ஒரு பெண்யானையை வீட்டு முற்றத்தில் கட்டி வைத்து அதற்கு பிரசவம் பார்த்து கொண்டு இருக்கிறார்களே!!" இதென்ன புதுமை??

சுந்தரர் பெருமான் அந்த நிகழ்வு நடக்கும் இடத்தருகில் சென்று அந்த பெண்களின் பேச்சை கவனித்தார்கள்

அவர்கள் வேட்டுவப் பெண்கள், "மலையில்  ஆண்யானையும் பெண்யானையும் மகிழ்வாக வாழ்ந்து வந்தது, அந்த பெண்யானை கருவுற்று இருந்தது, நிறை மாதமாகி கன்றீனும் வேளையில் ஒரு கொடுமையான சிங்கம் வந்து அந்த யானைத் தம்பதிகளில் ஆண்யானையை அடித்து கொன்று விட்டது, அதனால் கலக்கமுற்ற பெண்யானை திகைத்து அலமந்து போகவே வீரமான அந்த வேட்டுவச்சிகள் சினையாய் இருந்த பெண்யானையை ஓட்டிவந்து வாசலில் கட்டிவைத்து இப்போது பிரசவம் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்" என்பதனை அவர்களின் பேச்சிலிருந்து பெருமான் அறிந்து கொண்டார்.

அவர்கள் பேச்சில் இன்னொரு செய்தியும் அடிபட்டது, அவர்கள் தெருவுக்கு நேற்று ஒரு பாம்பாட்டி பிச்சையெடுக்க வந்திருக்கிறார் போல, அந்த பிச்சைகாரரை பார்த்தால் பிச்சைக்கு வந்தவர் போல தெரியவில்லையாம் அவ்வளவு அழகாகவும் இளமையாகவும் இருந்த பிச்சைகாரரை பார்த்து பல பெண்கள் மயங்கியே விட்டனராம்,

"அதே சமயம் அவர்கள் தெருவில் இருந்த நாய்களெல்லாம் அந்த பிச்சைகாரரை சூழ்ந்து கொண்டு குரைத்தனவாம்!! உடனே அந்த பிச்சைக்காரர் திரும்ப போய்விட்டாராம்"

இதனை கேட்டவுடன் சுவாமிகளுக்கு பிச்சை எடுக்கிற வேடத்தில் வந்தது யார் என்று புரிந்து விட்டது, ஆனாலும் மனதில் ஒரு ஆதங்கம் "நாய்கள் குரைக்கும் அளவிற்கு இவர் பிச்சை வாங்க செல்ல வேண்டிய அவசியம் என்ன?? என்று முதுகுன்றத்து தம்பிரானை நல்லதாக நாலு கேள்வி கேட்டுவிட வேண்டும்" என்று எண்ணியபடி ஆலயத்திற்கு வேகமாக நடைபோட்டார்.

ஆலயத்தை அடைந்து அணிநீடு கோபுரத்தை கடந்ததும் *"முதுகுன்றத்து எம்பிரான் லிங்க பரமேஸ்வரராக காட்சி தரவே!!"* நம்பியாரூரப்  பெருமானது அனுபவங்களும், இறைவனை கேட்க நினைத்த கேள்விகளும் தீந்தமிழ் தெய்வ திருப்பாட்டாக வெளிப்பட்டது,

நம்பிகள் பாடினார்கள்

*"சென்று இல்லிடைச் செடி நாய்
குரைக்கச் சேடிச்சிகள்
மன்றில் இடைப்பலி தேரப்
போவது வாழ்க்கையே!?
குன்றில் இடைக் களிறு
ஆளி கொள்ளக் குறத்திகள்
முன்றில் இடைப் பிடி
கன்று இடும் முதுகுன்றரே"*
 
என்று!!

பின்குறிப்பு: விருத்தாச்சலம் மருதநிலத் தலம், ஆயினும் மலைத்தலம் என்ற பெயருக்கேற்ப குறிஞ்சி நிலக் கருப்பொருட்களான சிங்கம், யானை, வேடுவர் முதலிய காட்சிகள் நிறைந்த பதிகத்தை நம்பிகள் அருளியுள்ளனர், ஆதலால் பழமலையில் நம் ஊனக்கண்களுக்கு தெரியாத மலைக்காட்சி நம்பிகளின் ஞானக்கண்களுக்கு தோன்றியது பதிகவழி அறிய கிடைக்கிறது.

ரத சப்தமி வரலாறு...

ரத சப்தமி வரலாறு...

ரிஷி காஷ்யபர் மனைவி அதிதி பூரண கர்ப்பவதி. ஒரு நாள் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த போது யாரோ கதவை தட்ட, அவள் யாரென்று பார்க்க ஒரு பிராமணன் ”பசிக்கிறது ஏதாவது சாப்பிட கொடு” என்று கேட்க ” இரு கொண்டு வருகிறேன்” என்று அதிதி மெதுவாக நடக்க முடியாமல் நடந்து வந்து கணவருக்கு உணவு பரிமாறி அவர் சாப்பிட்ட பின் ஆகாரத்தை எடுத்து கொண்டு அந்த பிராமணனுக்கு கொடுத்தாள். ”ஏன் தாமதமாக வந்து உணவைக் கொடுத்தாய். என்னை உதாசீனமா பண்ணினாய். உன் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான்” என கோபித்து சாபமிட்டான். பிராமணனிரின் சாபம் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிதி காஸ்யபரிடம் விஷயத்தை சொல்ல ”நீ இதற்கெல்லாம் வருந்தாதே அமிர்த உலகில் இருந்து அழிவில்லாத ஒரு மகன் நமக்கு கிடைப்பான்” என்று வாழ்த்த ஒளி பிரகாசமான சூரியன் மகனாக பிறந்தான். ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலகை சுற்றி வருவதால் திதிகளில் ஏழாவது நாள் சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

ரத சப்தமி அன்று ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து ஸ்நானம் செய்வது வழக்கம். காலை 6.00 லிருந்து 7.30 க்குள் ஸ்நானம் பண்ண வேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும். ரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர் நிலையை அடைவர். கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்கின்றன புராணங்கள். இந்த நாள் தியானம், யோகா செய்ய சிறந்தது. சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என்கின்றது புராணம்.

ரத சப்தமி அன்று தஞ்சை, சூரியனார் கோவில், திருமலை ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயங்களில் திருவிழா நடக்கும். ஏழு மலைகளை ஏழு குதிரைகள் என கருதி ரதசப்தமி அன்று ஏழு வாகனங்களில் மலையப்பர் சுவாமி மாட வீதிகளில் ஊர்வலம் வருவார். ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலும் ரத சப்தமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஒரு கதை சொல்கிறேன்.
ரத சப்தமி நாளின் வழிபடும் முறைகளும்… அதன் அதிசய பலன்களும்…
*ரத சப்தமி. 01.02.20* *சனிக்கிழமை*   கோவில்களில் சூரிய பிரபையுடன் கூடிய ரத சப்தமி உற்சவம் நடைபெறும். அதை தரிசித்தால் முன்னோர்கள் திருப்தியடைவர். திருப்பதி திருமலையில் நடக்கும் ரத சப்தமி உற்சவம் மிக விசேஷம். இன்று நவக்கிரகங்களில் சூரியனுக்கு சிகப்பு வஸ்திரம் அணிவித்து சிகப்பு மலர்களால் அர்ச்சனை செய்து ஒரு நெய்விளக்கு வைத்துவர சூரிய தோஷம் விலகும்.

ரத சப்தமி நாளின் வழிபடும் முறைகளும்… அதன் அதிசய பலன்களும்…

பீஷ்மருக்கு விரும்பிய நேரத்தில், விரும்பியபடி மரணம் நேரும் என வரமிருந்தது. ஆனால் அவர் விரும்பியது போல் மரணம் ஏற்படவில்லையே ஏன்? மனதுக்குள் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார் பீஷ்மர். அப்போது அங்கே வந்தார் வேத வியாசர். வியாசரைக் கண்டதும் அவரிடம் பீஷ்மர் ”நான் என்ன பாவம் செய்தேன். நான் விரும்பியபடி ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை? என்று வருந்தினார். அதற்கு வியாசர் ”பீஷ்மா ஒருவர் தன் மனம், மொழி, மெய்யால் இன்னொருவருக்குத் தீமை, அநீதிகளை செய்வது மட்டுமல்ல, செய்பவர்களைத் தடுக்காமல் இருப்பதும் செயலற்றவன் போல் காட்சி தருவதும் கூட பாவம்தான். அதற்கான தண்டனையையும் அவர் அனுபவித்தே தீர வேண்டும் என்பது விதியாகும். அந்த வகையில் தான் இப்போது தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். உடல் அளவில் அவஸ்தைப்பட்டாலும் அதை விட உள்ளம் படாத பாடுபடும். அந்த வேதனையே பெரும் தண்டனைதான்” என்றார். பீஷமருக்கு வேதவியாசர் சொன்ன உண்மை புரிந்தது. துரியோதனன் அவையில், பாஞ்சாலியை துச்சாதனன் துகில் உரிந்த போது அந்த அவையிலிருந்த யாருமே அவளுக்கு உதவ முன் வரவில்லை. இது அநீதி என்று குரல் கொடுக்கவில்லை. அந்த அவையில் பீஷ்மரும் இருந்தார். ஒரு மாபெரும் அநியாயம் நடந்தும் அதைத் தடுக்கக்கூடிய நிலையில் இருந்தும் அதைத் தடுக்காமல் போனதன் காரணமாகத்தான் இப்போது அம்புப் படுக்கையில் உயிர் பிரியாமல் தவிப்பதை உணர்ந்தார் பீஷ்மர். வேதனைப்பட்ட பீஷ்மர் வியாசரிடம் ”இதற்கு என்ன பிராயச்சித்தம்?” என்று கேட்டார். ”யார் ஒருவர் தான் செய்தது மகாபாவம் என்று உணர்ந்து வருந்துகிறார்களோ அப்போதே அந்தப் பாவம் அகன்று விடும் என்று வேதம் கூறுகிறது. எனவே பீஷ்மா நீ எப்போது உன்னுடைய பாவத்தை உணர்ந்தாயோ அப்போதே அது உன்னிடமிருந்து அகன்று விட்டது. இருந்தாலும் திரவுபதி “கண்ணா என்னைக் காப்பாற்ற மாட்டாயா என்று துரியோதனன் அவையில் கதறிய போது கேட்கும் திறன் இருந்தும் அதைக் கேளாமல் இருந்த உன் செவிகள் கூர்மையான பார்வையிருந்தும் பார்த்தும் பாராதது போல் இருந்த உன் கண்கள் நீ சொன்னால் அனைவரும் கேட்பார்கள் என்ற நிலையிலும் தட்டி கேட்காத உன் வாய், உன்னிடமிருந்த அளப்பரிய தோள் வலிமையை சரியான நேரத்தில் உபயோகிக்காமலிருந்த உன் வலுவான தோள்கள், வாளையெடுத்து எச்சரிக்கை விடாத உன் உறுதியான இரு கைகள், ஆரோக்கியமுடன் அமர்ந்திருந்த போது இருக்கையிலிருந்து எழாமல் இருந்த உன் இரு கால்கள், நல்லது எது? கெட்டது எது என்று யோசிக்காத உன் புத்தி இருக்கும் இடமான உன் தலை ஆகியவற்றுக்கும் தண்டனை கிடைத்தே தீரவேண்டும் என்பது விதி” என்றார்.
”அப்படியென்றால் என்னுடைய இந்த அங்கங்களையும் பொசுக்கக்கூடிய வல்லமை படைத்தவர் அந்தச் சூரியன் தான். சாதாரண அக்னியின் சூடு போதாது. என் அங்கங்களைத் தீய்க்க சூரியசக்தியைப் பிழிந்து தாருங்கள்” என்று தன்னிலை உணர்ந்து வேதவியாசரிடம் வேண்டினார் பீஷ்மர்.
பீஷ்மர் உடனே வேதவியாசர் முன் கூட்டியே கொண்டு வந்திருந்த எருக்கன் இலைகளை பீஷ்மரிடம் காண்பித்து ”பீஷ்மா இந்த எருக்கன் இலைகள் சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் அர்க்கபத்ரம். அர்க்கம் என்றால் சூரியன் என்றே பொருள். சூரியனின் முழுச் சக்தியும் இதில் உள்ளது. ஆகவே இந்த இலைகளால் உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கப் போகிறேன். அவை உன்னைப் புனிதப்படுத்தும்” என்றார். அதன் படி பீஷ்மரின் அங்கங்களை எருக்கன் இலைகளால் அலங்கரித்தார் வியாசர். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மன அமைதியடைந்தார் பீஷ்மர். அப்படியே தியானத்தில் ஆழ்ந்தார். தியான நிலையிலேயே முக்தியும் அடைந்தார்.

‘பீஷ்மர் நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்து விட்டாரே அவருக்கு யார் பித்ருக் கடன் செய்வது?’ என்று தர்மர் வருந்தினார். தர்மருடைய வருத்தத்தைத் தெரிந்து கொண்ட வியாசர் ”தர்மரே வருந்த வேண்டாம் ஒழுக்கம் தவறாத நேர்மையான பிரம்மச்சாரிக்கும், தூய்மையான துறவிக்கும் பித்ருக் கடன் என்பது அவசியமே இல்லை. அவர்கள் மேம்பட்ட ஓர் உயர் நிலைக்குப் போய் விடுகிறார்கள். சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாகத் திகழ்பவர்கள் தான் பாவிகள். ஆனால் பீஷ்மர் தன் வாக்கு தவறாத தூய்மையானவர். இனி வருங்காலத்தில் பாரத தேசமே பீஷ்மருக்காக நீர்க்கடன் அளிக்கும் ரத சப்தமி அன்று தங்கள் உடலில் எருக்கன் இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வார்கள். அதோடு பீஷ்மருக்கு நீர்க்கடன் அளித்த புண்ணியமும் அவர்களுக்குக் கிடைக்கும்” என்று வியாசர் கூறினார்.
எனவே ரத சப்தமி அன்று விரதம் மேற்கொண்டு, எருக்கன் இலைகளைத் தலையில் வைத்துக்கொண்டு சாஸ்திரத்தில் சொல்லியபடி நீராடினால் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்கும் அதற்காக மேன்மேலும் பாவங்கள் செய்து அடுத்து வரும் ரத சப்தமியில் போக்கிக் கொள்ளலாம் என்று நினைக்கக்கூடாது. தவிர ரத சப்தமிக்கு அடுத்த நாள் அஷ்டமி திதி. இந்த அஷ்டமி திதியை பீஷ்மாஷ்டமி என்பர். அன்று புனித நீர் நிலைக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும் நம்மில் வாழ்ந்த முன்னோர்களுக்காக பித்ரு பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிட்டும் என்பது நம்பிக்கை.

குளிக்கும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்:
*ஸப்த ஸப்திப்ரியே* *தேவி ஸப்த லோகைக* *பூஜிதே!*
*ஸப்த ஜன்மார்ஜிதம்* *பாபம் ஹர ஸப்தமி !*
*ஸத்வரம் யத் யத் கர்ம* *க்ருதம் பாபம்* *மயா ஸப்தஸு ஜன்மஸு*
*தன்மே ரோகம் ச மாகரீ* *ஹந்து ஸப்தமீ நெளமி ஸப்தமி !*
*தேவி! த்வாம் ஸப்த லோகைக மாதரம்* *ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன* *மம பாபம் வ்யபோஹய !*

ரத சப்தமி நாளில் ஸ்நானம் செய்யும் முறையும் வழிபடும் முறையும்:

ரத சப்தமியன்று காலை குளிக்கும் போது சூரியனுக்குப் பிடித்த எருக்கன் இலைகளை ஏழு அல்லது ஒன்பது எண்ணிக்கையில் எடுத்து அடுக்கி அதன் மீது அட்சதை, எள் வைக்க வேண்டும் பெண்ணுக்கு அதனுடன் மஞ்சள் பொடியும் வைக்க வேண்டும். இவ்விலை அடுக்கைத் தலை மீது வைத்து ஸ்நானம் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் மின்சாரம் எப்படி உலோகக் கம்பி வழியே பாய்கிறதோ அப்படி சூரியனின் ஏழு வகைக் கதிர்கள் அன்று மட்டும் எருக்கன் இலை வழியே இழுக்கப்பட்டு விரைவில் நம் உடலில் பாய்ந்து உடல் உபாதைகளையும் நோய்களையும் நீக்குகிறது என்று நம் முன்னோர்கள் இதைச் செய்தனர். நாமும் அதையே பின் பற்றி மேற்கூறிய பலனை அடையலாம்.

சூரிய வழிபாடு ஆதிகாலம் முதல் உள்ளது. சூரிய வழிபாட்டிற்கு மந்திரம் தெரியாவிடில் பரவாயில்லை. எளிமையாக “*ஓம்*** நமோ* ஆதித்யாய* புத்திர் பலம்* தேஹிமே சதா’** என்று காலை சூரியனைப் பார்த்துக் கூறி மூன்று முறை வணங்க வேண்டும். சூரியனாருக்கு உகந்த தானியம் கோதுமை. எனவே நைவேத்தியத்தில் கோதுமை உணவு இருப்பது உத்தமம். அவருக்குப் பிடித்த செந்தாமரை மற்றும் செந்நிற மலர்களால் அர்ச்சித்து அவரை வழிபடுவது விசேஷம். ஆலயங்களுக்குச் சென்று சூரிய பகவானுக்கு சிகப்பு நிற வஸ்திரம் வழங்கி தரிசித்தால், பாவமெல்லாம் பறந்தோடிவிடும். சூரிய பகவானை ரத சப்தமி நன்னாளில் பூஜித்து வழிபட்டால் ஏழு ஜென்மப் பாவமும் விலகிவிடும். அடுத்தடுத்து ஏழு தலைமுறையினரும் சீரும் சிறப்புமாக வாழ்வார்கள் ரத சப்தமி நன்னாள். சூரிய உதயத்தின் போது கிழக்குப் பார்த்த படி நீராடுங்கள். வாழ்வில் ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம். அந்த நாளில் செய்யப்படுகிற தான தருமங்கள் நூறு மடங்கு புண்ணியங்களைச் சேர்க்கும் என்கிறது சாஸ்திரம்! முக்கியமாக நாம் ஆத்மார்த்தமாக வழங்குகிற தானங்களை சூரிய பகவான் அந்த ரதத்தில் எடுத்துச் சென்று நம் முன்னோர்களுக்கு வழங்குகிறார். இதனால் பித்ருக்களின் ஆசியும் நமக்கு கிடைத்து நம்மை மேன்மைப்படுத்துவது நிச்சயம்.. நம்மை புனிதப்படுத்த வரும் நன்னாள் ரதசப்தமி. பயன்படுத்தி பலன் அடைவோமாக.


கோதாவரி நதி


கோதாவரி நதிக்கரையில் ஆபேகாம் எனும் சிற்றூரில் வாழ்ந்த அந்தண குலத்தவரான கோவிந்த பண்டிதர்-நிருபமாதேவி தம்பதிக்கு 13-ம் நூற்றாண்டில் மகனாகப் பிறந்தான், விடோபா. சிறு வயதிலேயே ஆன்மிகத்தில் லயித்த விடோபா, புனிதத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டான். அப்படி, ஆலந்தி நகருக்கு வந்தபோது, அவரின் முகத்தில் படர்ந்த தேஜஸ் மற்றும் அவரது இறை சிந்தனை ஆகியவற்றால் அதிசயித்த சித்தோபந்த் எனும் அந்தணர், தன் மகள் ருக்மிணியை அவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். நாட்கள் நகர்ந்தன. ஒருநாள், மனைவியின் சம்மதத்துடன் காசிக்குச் சென்றார் விடோபா. அங்கே, சுவாமி ராமானந்தரைச் சந்தித்தவருக்குத் துறவறம் மேற்கொள்ளும் எண்ணம் எழுந்தது. தான் திருமணமானவன் என்பதை மறைத்து, ராமானந்தரிடம் தீட்சை பெற்று துறவறம் பூண்டார். பிறகு காசியிலேயே துறவு வாழ்க்கையைத் தொடர்ந்தார். அவரின் மனைவி ருக்மிணி கணவரைக் காணோமே எனப் பரிதவிப்புடன் காத்திருந்தாள். இந்த நிலையில், சுவாமி ராமானந்தர் யாத்திரை புறப்பட்டார். வழியில் ஆலந்தியை அடைந்தார். அவரைச் சந்தித்து தனது குறையைச் சொன்னாள் ருக்மிணி. அதைக் கேட்ட சுவாமி, விடோபா தான் இவளின் கணவன் என அறிந்து வேதனைப்பட்டார். பிறகு காசிக்குத் திரும்பியவர், விடோபாவைக் கடிந்து கொண்டதுடன் மனைவியுடன் சேர்ந்து வாழ்வாயாக! என்றார். அவரின் கட்டளைப்படி, ஆலந்திக்கு திரும்பிய விடோபாவை அன்புடன் வரவேற்றாள் ருக்மிணி. காலங்கள் ஓடின. அந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். அவர்களின் இரண்டாவது மகனாக அவதரித்தவரே ஞானேஸ்வரர் (கி.பி. 1275ம் வருடம்).

அவரை விஷ்ணுவின் அம்சம் எனப் போற்றுவர். வேதங்களையும் உபநிடதங்களையும் இளமையிலேயே கற்றுத் தேர்ந்த ஞானேஸ்வர், அவற்றை மிக எளிமையாகப் போதித்து வந்தார். தான் செய்த தவற்றால், சமூகத்தால் தள்ளி வைக்கப்பட்டு, தான் அடைந்த துன்பத்தை குழந்தைகள் அனுபவிக்கக் கூடாது எனக் கருதிய விடோபா, தவற்றுக்குப் பிராயச் சித்தமாக, மனைவியை அழைத்துக்கொண்டு கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடத்தில் மூழ்கி, உயிர்த் தியாகம் செய்தார். ஆதரவற்ற நிலையில் தவித்த குழந்தைகளைக் கண்டு, ஆலந்தி அந்தணர்கள் மனமிரங்கினர். குல வழக்கப்படி அவர்களுக்கு உபநயனம் செய்யவும் முடிவு செய்தனர். இருப்பினும், பைதன் நகர பண்டிதர்களின் அனுமதியைப் பெற்று வரும்படி, அவர்களை அனுப்பி வைத்தனர்.வேத சாஸ்திரங்களில் கரைகண்டவர்கள் அந்த அந்தணர்கள். அவர்களின் முன், இளம் சகோதரர்கள் மூவர் பணிவுடன் நின்றனர். அந்தணர்களின் புனிதக் கடமை, உபநயனம் செய்து கொள்வது ! எங்களது ஆலந்தி கிராமத்து அந்தணர்கள், எங்களுக்கு உபநயனம் செய்துவைக்கத் தயாராக உள்ளனர். ஆனாலும், உங்களின் அனுமதிக்காக எங்களை இங்கு அனுப்பியுள்ளனர். எங்களுக்கு அனுமதி வழங்கி உதவுங்கள் ! என்றனர். அதைக் கேட்டதும் அந்தப் பண்டிதர்கள், உபநயனம் செய்துகொள்ள, உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? எனப் பரிகசித்தனர். அதில் ஆவேசமான மூவரும், மடமடவென வேதத்தை ஓதத் துவங்கினர். உடனே பண்டிதர்கள், முறையற்று வாழ்ந்த அந்தணன் பெற்றெடுத்த மக்கள் நீங்கள். எனவே, உங்களுக்கு வேதம் ஓதுகிற உரிமையில்லை. அது, எங்களைப் போன்ற உயர் மக்களுக்கே உரித்தானது! என்று கர்வத்துடன் சொன்னார்கள். இதைக் கேட்டு, மூன்று சகோதரர்களில் ஒரு சிறுவன், கொதித்து எழுந்தான்; அவனுக்கு வயது எட்டு.

அருகில் தண்ணீர்ப் பானைகளைச் சுமந்தபடி வந்த எருமைக் கிடாவைச் சுட்டிக் காட்டி, வேதம் ஓதும் தகுதி உங்களுக்கு மட்டுமே உரியதல்ல! இதோ... இந்த எருமைக்கும் தகுதி உண்டு என்று சொல்லிவிட்டு, அந்த எருமையின் முதுகில் கைவைக்க... அப்போது நிகழ்ந்தது அந்த அதிசயம் ! மூவரும் வேதம் ஓதி நிறுத்தினார்கள், அல்லவா... அந்த இடத்தில் இருந்து வரி பிசகாமல், வேதம் ஓதத் துவங்கியது, எருமை. இறுதியில், பிறப்பால் தாழ்ந்த குலத்தவனாக இருப்பினும், கர்மானுஷ்டானங்களான செயல்களாலும் நடத்தையாலும் ஒருவன் உயர்ந்த குலத்தவனாகிறான் எனப் பொருள்படும்படி, நான்கு கவிதைகளை அழகாகச் சொல்லிற்று. எருமை வேதம் ஓதியதைக் கேட்டு, வாயடைத்துப் போனது பண்டிதர் கூட்டம். அனைவரும் ஓடோடி வந்து, சிறுவனை நமஸ்கரித்தனர். தனது மூத்த சகோதரரான நிவ்ருத்திநாத்தையே குருவாக ஏற்று, குண்டலினி யோகம் முதலானவற்றைக் கற்றுத் தேர்ந்தார். குருநாதர் அறிவுரைப்படி, தனது 15-வது வயதில், மராட்டிய மொழியில், பாமரர்க்கும் புரியும் வகையில், 18 அத்தியாயங்களில் அற்புதமான விளக்கவுரை எழுதினார், ஞானேஸ்வர். பாவார்த்த தீபிகா தீகா எனும் பெயரில் அறியப்பட்ட அந்த உரை, பிறகு அவரது திருநாமத்துடன் ஞானேஸ்வரி எனப் போற்றப்படுகிறது. அத்வைத சித்தாந்தத்தை விளக்கும் அம்ருதானுபவ எனும் நூல், அவரின் மற்றொரு படைப்பு. அவர் நிகழ்த்திய அற்புதங்களும் ஏராளம் ! இறை நம்பிக்கையற்ற ஒருவனைத் திருத்துவதற்காகத் தனது முதுகையே அடுப்பாக்கி, கொதிக்கச் செய்து, தனது சகோதரி முக்தாபாயை, தன் முதுகின் மீது ரொட்டி சுடச் செய்திருக்கிறார், ஞானேஸ்வர். தனது யோக சக்தியின் மீது கர்வம் கொண்டு, புலியின் மீது அமர்ந்து, பாம்பைக் கையில் பிடித்தபடி வாதம் செய்ய வந்த சித்த புருஷர் சாங்கதேவரை, தாம் அமர்ந்திருந்த குட்டிச் சுவரை அப்படியே நகர்த்தி தடுத்து நிறுத்தி, அவருக்கு உபதேசித்து ஆட்கொண்டருளினார் ஞானேஸ்வர். சகோதர - சகோதரிகள் மற்றும் நாமதேவருடன் இணைந்து பண்டரிபுரம், துவாரகை, அயோத்தி, மதுரா, காசி, மதுரை, ராமேஸ்வரம் முதலான தலங்களுக்குச் சென்று உபதேசங்கள் செய்து, பக்தர்களை நெறிப்படுத்தியுள்ளார். பிறகு, 1296-ஆம் வருடம், தனது 22 - வது வயதில், பிறவியெடுத்ததன் நோக்கம் நிறைவேறியதாக உணர்ந்த ஞானேஸ்வர், கார்த்திகை மாதம், ஆலந்தி நகரில், தியான நிலையில் இருந்தபடி மகாசமாதியானார். தனது ஞானம் மற்றும் உபதேசத்தால் மக்களுக்கு இறையுணர்வூட்டி, மராட்டிய மண்ணில் பக்தி சம்பிரதாயத்துக்கு வித்திட்ட ஞானேஸ்வர் இன்றளவும் போற்றி வணங்கப்படுகிறார்.

கலியையும் பலி கொள்ளும்


கலியையும் பலி கொள்ளும்

1. கலியையும் பலி கொள்ளும் துளி நியமமும் இல்லாத கீர்த்தனம் பாடீரே! கீர்த்தனம் பாடீரே!
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

2. ஈரெட்டா வரணத்தை நீக்கியே முக்தி நல்கிடும் ஈரெட்டு சொற்கள் கொண்ட கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)


3. மண்ணுலக ஆசைகளும் விண்ணுலக ஆசைகளும்
கணப்பொழுதில் நல்கிடும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)


4. பொருளோ செலவில்லை எனினும் அருளோ குவிந்திடும் கருவில் வாராது காக்கும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)


5. பண்டிதன் முதற்க்கொண்டு பாமரன் வரையிலும் அண்டி பிழைத்திடும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)


6. வாரி இரைத்தாலும் ரத்தினம் ரத்தினமே அருமையில் அருமையான கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)


7. உலக மக்கள் உய்ய ஓர் வழி கண்டாரே அவல நிலை போக்கும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)


8. யோகமும் யாகமும் தீர்த்தமும் தெய்வமும் குடி கொண்ட நாமத்தை கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)


9. சித்தாகாஸத்தில் மிளிர்ந்திடும் நாமமாம் யோக சித்தி நல்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)


10.பாடிடும் பக்தரையும் பாடிடும் தலத்தையும் பாவனமாக்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)


11. பறவை விலங்கினம் புல் பூண்டு ஒன்றின்றியே பரகதி நல்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)


12. தேவரும் தெரிவரே தெய்வமும் பேசுமாம் உலகம் வணங்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)


13. உலகம் அறிய செய்வேன் என சபதம் செய்தாரே
அவர் சபதம் நிறைவேற கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)


14. உணவு மாரிடினும் நீரினில் மாற்றமுன்டோ
நீர் போன்று ஆதாரமாம் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)


15. இருந்த இடத்தில் இருந்த படியே
வருவினை மாற்றிடும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)


16.சைதன்ய தேவரும் நித்யானந்தரும்
பக்தி வெள்ளம் பாய்ச்சிய கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)

 

சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ

1. கேதாரீஸ்வரர், மலைக்கோவில், கேதர்நாத், உத்ராஞ்சல்.

2. விஸ்வேஸ்வரர், நதிக்கரைக் கோவில், (கங்கை நதிக்கரை) வாரணாசி, உத்ரபிரதேசம்.

3. சோமநாதேஸ்வரர், கடற்கரை ஸ்தலம், (அரபிக் கடற்கரை) சோமநாதம், குஜராத்.

4. மஹா காளேஸ்வரர், நதிக்கரைக் கோவில் (சிப்ரா நதிக்கரை) உஜ்ஜயினிமத்திய பிரதேசம்.

5. ஓங்காரேஸ்வரர், நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ள மலை கோவில், இந்தூர், மத்திய பிரதேசம்.

6. திரியம்பகேஸ்வரர், நதிக்கரைக் கோவில், (கோதாவரி நதிக்கரை)
நாசிக், மகாராஷ்டிரா.

7. குஸ்ருணேஸ்வரர், ஊரின் நடுவே அமைந்த ஸ்தலம், ஓளரங்கபாத், மகாராஷ்டிரா.

8. நாகநாதேஸ்வரர், தாருகாவனம் காட்டு ஸ்தலம், ஓளண்டா, மகாராஷ்டிரா.

9. வைத்திய நாதேஸ்வரர், ஊரின் நடுவே அமைந்த ஸ்தலம், பரளி, மகாராஷ்டிரா.

10. பீமசங்கரர், மலைக்கோவில், பூனா, மகாராஷ்டிரா.

11. மல்லிகார்ஜுனர், மலை கோவில், ஸ்ரீ சைலம், ஆந்திர பிரதேசம்.

அருள் மிகு பாபநாசநாதர் திருக்கோவில்

அருள் மிகு பாபநாசநாதர் திருக்கோவில்
 



மூலவர் : பாபநாசநாதர்
அம்மன் : உலகம்மை, விமலை, உலகநாயகி
பழமை :2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :இந்திரகீழ க்ஷேத்திரம்
ஊர் :பாபநாசம்
மாவட்டம் :திருநெல்வேலி
மாநிலம் :தமிழ்நாடு
 
திருவிழா:சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், சித்திரைப் பிறப்பன்று அகத்தியருக்கு திருமணக்காட்சி விழா, தைப்பூசம்   
       
தல சிறப்பு:நவகைலாயங்களில் முதல் தலமான பாபநாசம் முதல் கிரகமான சூரியனுக்குரியதானது. சூரிய தலம் என்றும் சூரிய கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோருக்கு ஒரு தைப்பூசத்தன்று நடராஜர் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நின்று நடன தரிசனம் தந்தார். எனவே இங்கு தைப்பூசத்தில் நந்திக்கு சந்தனக்காப்பு செய்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது விமலை சக்தி பீடம் ஆகும்.   
       
திறக்கும் நேரம்:காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில், பாபநாசம்-627 551, திருநெல்வேலி மாவட்டம்.போன்:+91- 4634 - 223 268.  
      
பொது தகவல்:ராஜகோபுரத்தை அடுத்து நடராஜர் தனிச்சன்னதியில் ஆனந்ததாண்டவ கோலத்தில் இருக்கிறார். இவரை, "புனுகு சபாபதி' என்கின்றனர்.   
       
பிரார்த்தனை:கிரக ரீதியாகவோ, ஜாதக ரீதியாகவோ குழந்தைகளுக்கு தோஷம் இருந்தால் அவர்களை இறைவனுக்கு தத்து கொடுத்து வாங்க உகந்த ஸ்தலம் இது.

உலகம்மைக்கு அபிஷேகிக்கப்படும் மஞ்சள் தீர்த்தத்தை சிறிது அருந்தினால், திருமண, புத்திர பாக்கியங்கள் கிடைக்கும், பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பர் என்பதாக நம்புகின்றனர்.
நேர்த்திக்கடன்:சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.  
      
தலபெருமை:பெயர்க்காரணம்: அசுர குருவான சுக்ராச்சாரியாரின் மகன் துவஷ்டா என்பவனை குருவாக ஏற்றான் இந்திரன். ஒருசமயம் துவஷ்டா அசுரர்களின் நலனுக்காக யாகம் ஒன்றை நடத்தினார். இதனை அறிந்த இந்திரன் அவரை கொன்று விட்டான். இதனால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. பூலோகத்தில் பல தலங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு விமோசனம் தேடினான். வியாழ பகவான் இந்திரனிடம், இத்தலத்தில் உள்ள சுவாமியை வணங்கினால் தோஷம் நீங்கும் என்றார். அதன்படி இந்திரன் இத்தலத்தின் எல்லைக்கு வந்தபோதே பாவம் நீங்கப்பெற்றான். இந்திரனின் பாவத்தை நீக்கிய சிவன் என்பதால் இவரை "பாபநாசநாதர்' என்கின்றனர். இத்தலத்திற்கு "இந்திரகீழ க்ஷேத்திரம்' என்ற பெயரும் இருக்கிறது.

சூரியதலம்: அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்யவும், அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரைமலர்களை தாமிரபரணியில் வீசும்படியும், அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட, 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை "நவ கைலாய தலங்கள்' எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. நவகைலாயங்களில் முதல் தலமான பாபநாசம் முதல் கிரகமான சூரியனுக்குரியதானது. சூரிய தலம் என்றும் சூரிய கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.

முக்கிளா லிங்கம்: இத்தலத்து லிங்கத்திற்கு " முக்கிளா லிங்கம்' என்ற பெயரும் உண்டு. கருவறையில் ருத்ராட்ச வடிவிலும், பிரகாரத்தில் முக்கிளா மரத்தின் கீழும் பாபநாசர் இருக்கிறார். ரிக், யஜுர், சாமம் ஆகிய மூன்று வேதங்களே கிளா மரமாக மாறி இறைவனுக்கு நிழல் தந்தும், அதர்வண வேதம் ஆகாயமாக இருந்தும் இவரை வழிபட்டது. எனவே சிவனுக்கு இப்பெயர் வந்ததாக சொல்கிறார்கள்.

சிறப்பம்சம்: பொதிகை மலையில் உருவாகி மலைகளில் விழுந்து வரும் தாமிரபரணி நதி இக்கோயிலுக்கு அருகேதான் சமநிலையடைகிறது. தினமும் உச்சிக்கால பூஜையின் போது தாமிரபரணி நதியில் மீன்களுக்கு நைவேத்திய உணவுகளைப் படைத்து பூஜைகள் செய்யப்படுகிறது. வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோருக்கு ஒரு தைப்பூசத்தன்று நடராஜர் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நின்று நடன தரிசனம் தந்தார். எனவே இங்கு தைப்பூசத்தில் நந்திக்கு சந்தனக்காப்பு செய்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது.அம்பாள் உலகம்மை சன்னதி முன்பு ஒரு உரல் இருக்கிறது. இதில் பெண்கள் விரளி மஞ்சளை இட்டு அதனை இடிக்கின்றனர். இம்மஞ்சளாலேயே அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடக்கிறது. அபிஷேகிக்கப்படும் மஞ்சள் தீர்த்தத்தை சிறிது அருந்தினால், திருமண, புத்திர பாக்கியங்கள் கிடைக்கும், பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பர் என்பதாக நம்புகின்றனர்

தல வரலாறு: கைலாயத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடந்த போது வடக்கே தாழ்ந்து, தெற்கே உயர்ந்தது. பூமியை சமப்படுத்துவதற்காக, அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பினார் சிவன். சித்திரை மாதப்பிறப்பன்று அவருக்கு தனது திருமண கோலத்தை காட்டியருளினார். கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் கல்யாண சுந்தரராக அம்பாளுடன் ரிஷபத்தின் மீது அமர்ந்த கோலத்தில் சிவன் இருக்கிறார். அருகிலேயே அகத்தியரும் அவர் மனைவி, லோபாமுத்திரையும் வணங்கிய கோலத்தில் உள்ளனர்.
 
 சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: நவகைலாயங்களில் முதல் தலமான பாபநாசம் முதல் கிரகமான சூரியனுக்குரியதானது. சூரிய தலம் என்றும் சூரிய கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோருக்கு ஒரு தைப்பூசத்தன்று நடராஜர் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நின்று நடன தரிசனம் தந்தார். எனவே இங்கு தைப்பூசத்தில் நந்திக்கு சந்தனக்காப்பு செய்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அம்மனின் சக்தி பீடங்களில் இது விமலை பீடமாகும்.

அருள் மிகு கொடுங்கலூர் பகவதி அம்மன் திருக்கோவில்

அருள் மிகு கொடுங்கலூர் பகவதி அம்மன் திருக்கோவில்
 



மூலவர் :பகவதி அம்மன்
பழமை :2000 வருடங்களுக்கு முன்
ஊர் :கொடுங்கலூர்
மாவட்டம் :திருச்சூர்
மாநிலம் :கேரளா
 
திருவிழா:தை மாதம் 1 முதல் 4ம் தேதிவரை "தாழப்புலி' என்ற உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சுமங்கலி பெண்கள் எண்ணை, குங்குமம், மஞ்சள், பூ இவைகளை மேளதாளத்துடன் அம்மனுக்கு படைப்பார்கள்.  நவராத்திரி சிவராத்திரி ஆடி வெள்ளி தினங்களில் இங்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.   
       
தல சிறப்பு:இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுதிய காலத்திலேயே கோயில் கட்டப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது. இந்த பகவதியை இவ்வூரின் தாயாக கருதுகிறார்கள். தங்கள் இல்லங்களில் நடக்கும் எந்த விசேஷமாக இருந்தாலும் முதல் மரியாதை இந்த அம்மனுக்கு தான். ஆரம்ப காலத்தில் இந்த பகவதி மிகவும் உக்கிர தெய்வமாக இருந்துள்ளாள். அப்போதெல்லாம் இவளுக்கு உயிர்ப்பலியிட்டும் கள் நைவேத்தியம் செய்தும் வழிபாடு செய்துள்ளார்கள். அதன் பின் ஆதிசங்கரர் எந்திர பிரதிஷ்டை செய்து சாந்த சொரூபியாக்கினார். ஆனால் பகவதியை இப்போது பார்த்தாலும் கோபத்துடன் பார்ப்பதை போலவே தோன்றும். உயிர்ப்பலிக்கு பதில் குங்குமத்தில் குருதி பூஜையும் கள்ளிற்கு பதில் இளநீரும் மஞ்சள்பொடியும் கலந்து நைவேத்தியம் செய்வதற்காக ஒரு நம்பூதிரியை ஆதிசங்கரர் நியமித்தார். அதன் தொடர்ச்சியாக இன்றும் இதன்படி நைவேத்யம் செய்யப்படுகிறது. கோயில் அமைப்பு:எட்டு கை பெரிய கண் சிறிய இடை எதிரியை அழிக்கும் கோபத்துடன் கூடிய முகம் ஆறடி உயரம் வலது கால் மடக்கி இடது கால் தொங்கவிட்டு அமர்ந்த கோலத்தில் வடக்கு நோக்கி தலையில் கிரீடத்துடன் ஒரு அரசியைப்போல் பகவதி அருள் பாலிக்கிறாள்.  அம்மனின் விக்ரகம் பலா மரத்தினால் செய்யப்பட்டது. இதனை" வரிக்க பிலாவு' என்கிறார்கள். இதனால் அம்மனுக்கு சாதாரண அபிஷேகம் செய்வதில்லை. "சாந்தாட்டம்' என்ற சிறப்பு அபிஷேகம் மட்டுமே செய்யப்படுகிறது. அம்மனின் கர்ப்பகிரகத்திற்கு அருகே ஒரு ரகசிய அறை உள்ளது.இதையும் மூலஸ்தானமாக கருதி இதற்கும் சிறப்பு பூஜை செய்கிறார்கள். சிவனுக்கு கிழக்கு நோக்கி தனி சன்னதி உள்ளது. ஒரே இடத்தில் நின்று பகவதியையும் சிவனையும் தரிசிக்கும்படியான அமைப்பு இங்குள்ளது. இங்கு சிவனை விட அம்மனுக்கு தான் முக்கியத்துவம் அதிகம். கோயில் நுழைவு வாயிலில் க்ஷத்திர பாலகர் உள்ளனர். அவர்களுக்கு சர்க்கரை சாதத்தில் தயிர் சேர்த்து நிவேதனம் செய்யப்படுகிறது. கோயில் முழுவதும் செம்பு தகடு வேயப்பட்டுள்ளது.   
       
திறக்கும் நேரம்:காலை 4 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:கொடுங்கலூர் பகவதிஅம்மன் திருக்கோயில் கொடுங்கலூர் திருச்சூர் மாவட்டம்.கேரளா மாநிலம்.போன்:+91- 480-280 3061.  
      
பொது தகவல்:கோயில் அமைப்பு எட்டு கை, பெரிய கண் சிறிய இடை எதிரியை அழிக்கும் கோபத்துடன் கூடிய முகம் ஆறடி உயரம் வலதுகால் மடக்கி இடது கால் தொங்கவிட்டு அமர்ந்த கோலத்தில் வடக்கு நோக்கி தலையில் கிரீடத்துடன் ஒரு அரசியைப்போல் பகவதி அருள் பாலிக்கிறாள். அம்மனின் விக்ரகம் பலா மரத்தினால் செய்யப்பட்டது. இதனை" வரிக்க பிலாவு 'என்கிறார்கள். இதனால் அம்மனுக்கு சாதாரண அபிஷேகம் செய்வதில்லை. "சாந்தாட்டம்' என்ற சிறப்பு அபிஷேகம் மட்டுமே செய்யப்படுகிறது. அம்மனின் கர்ப்பகிரகத்திற்கு அருகே ஒரு ரகசிய அறை உள்ளது. இதையும் மூலஸ்தானமாக கருதி இதற்கும் சிறப்பு பூஜை செய்கிறார்கள். சிவனுக்கு கிழக்கு நோக்கி தனி சன்னதி உள்ளது. ஒரே இடத்தில் நின்று பகவதியையும் சிவனையும் தரிசிக்கும்படியான அமைப்பு இங்குள்ளது. இங்கு சிவனை விட அம்மனுக்கு தான் முக்கியத்துவம் அதிகம்.

கோவில் நுழைவு வாயிலில் சேத்திர பாலகர் உள்ளனர். அவர்களுக்கு சர்க்கரை சாதத்தில் தயிர் சேர்த்து நிவேதனம் செய்யப்படுகிறது. கோவில் முழுவதும் செம்பு தகடு வேயப்பட்டுள்ளது.
 
பிரார்த்தனை:அம்மை நோய் கண்டவர்கள் இங்கு நேர்ந்து கொள்கிறார்கள். கண்திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்கள் மன அமைதி இல்லாதவர்கள் எதிரி தொந்தரவு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடைகிறார்கள்.

"துலாபார வழிபாடு' இங்கு சிறப்பு. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் துலாபாரம் காணிக்கை செலுத்துவதாக நேர்ந்து கொள்கிறார்கள்.
 
தலபெருமை: இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுதிய காலத்திலேயே கோயில் கட்டப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது. இந்த பகவதியை இவ்வூரின் தாயாக கருதுகிறார்கள். தங்கள் இல்லங்களில் நடக்கும் எந்த விசேஷமாக இருந்தாலும் முதல் மரியாதை இந்த அம்மனுக்கு தான். ஆரம்ப காலத்தில் இந்த பகவதி மிகவும் உக்கிர தெய்வமாக இருந்துள்ளாள். அப்போதெல்லாம் இவளுக்கு உயிர்ப்பலியிட்டும் கள் நைவேத்தியம் செய்தும் வழிபாடு செய்துள்ளார்கள். அதன் பின் ஆதிசங்கரர் எந்திர பிரதிஷ்டை செய்து சாந்த சொரூபியாக்கினார். ஆனால் பகவதியை இப்போது பார்த்தாலும் கோபத்துடன் பார்ப்பதை போலவே தோன்றும். உயிர்ப்பலிக்கு பதில் குங்குமத்தில் குருதி பூஜையும், கள்ளிற்கு பதில் இளநீரும் மஞ்சள்பொடியும் கலந்து நைவேத்தியம் செய்வதற்காக ஒரு நம்பூதிரியை ஆதிசங்கரர் நியமித்தார். அதன் தொடர்ச்சியாக இன்றும் இதன்படி நைவேத்யம் செய்யப்படுகிறது.
 
ஸ்தல வரலாறு: சிலப்பதிகாரத்தில் கோவலன் செல்வ சீமாட்டியான கண்ணகியை திருமணம் செய்கிறான். ஆனால் கூடா நட்பால் செல்வங்களை இழந்து மிகவும் கஷ்டப்படுகிறான். சொத்துக்களை இழந்த அவன் கடைசியில் மனைவி கண்ணகியுடன் பிழைப்பு தேடி மதுரை வருகிறான். அங்கு மனைவியின் கால் சிலம்பை விற்கும் போது மதுரை அரசியின் காணாமல் போன சிலம்பும் ஒரே மாதிரியாக இருக்க இவன் மேல் குற்றம் சாட்டப்பட்டு மன்னனின் ஆணையால் கொல்லப்படுகிறான். கணவன் இறந்த செய்தி கேட்டதும் கண்ணகி கோபத்துடன் மன்னனின் அரசபைக்கு சென்று மன்னனை சபிக்கிறாள். மதுரையை எரித்து விடுகிறாள். பின் அதே கோபத்துடன் சேர நாடு நோக்கி செல்கிறாள். இவளுக்கு சேரன் செங்குட்டுவன் கோயில் கட்டி பகவதி அம்மனாக வழிபாடு செய்கிறான். இதுவே தற்போது அமைந்துள்ள கொடுங்கலூர் பகவதி அம்மன் கோயிலாகும்.

அருள் மிகு வண்டி மலைச்சி அம்மன் திருக்கோவில் {வடசேரி}

அருள் மிகு வண்டி மலைச்சி அம்மன் திருக்கோவில் {வடசேரி}
 



தமிழ்நாட்டில் தூத்துக்குடி திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய பல மாவட்டங்களில் வண்டி மலைச்சி அம்மன் கோயில் வழிபாடு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு வரலாறு கூறப்படுகிறது.அதில் நாகர்கோயில், வடசேரியில் அமைந்திருக்கும் அருள்மிகு வண்டிமலையான் உடனுறை வண்டி மலைச்சி அம்மன் மிகப்பெரிய திருமேனியாக சயன நிலையில் அதாவது கிடந்த நிலையில் காட்சி தந்து அருள்புரியும் அற்புத திருத்தலத்தை பற்றி இப்பகுதியில் காண்போம்.

தல வரலாறு:சலவைத் தொழிலாளி ஒருவரின் கனவில் தோன்றிய பாதாள பைரவி அந்த ஊரின் குளக்கரையில் தன்னுடைய சிலை அமைத்து வழிபட்டு வந்தால் ஊர் மக்களின் வாழ்வைச் செழிப்புடையதாக மாற்றுவதாக கூறியிருக்கிறார்.இதையடுத்து அவர் குளக்கரையில் பாதாள பைரவிக்கு சிலை ஒன்றை வைத்து, தினமும் வழிபட்டு வந்தார்.ஒரு வருட காலத்திற்குள் அவருக்கு அதிகமான செல்வம் சேர்ந்து அவருடைய வாழ்க்கையும் வளமாகிப் போனது.இதனால் மகிழ்ச்சியடைந்த அவர் தான் வணங்கி வந்த பாதாள பைரவிக்கு சிறப்பு வழிபாடுகளைச் செய்யவும் ஊர் மக்கள் அனைவருக்கும் சிறந்த உணவுகளை வழங்கவும் முடிவு செய்தார்.விழா ஏற்பாடுகளைச் செய்த அவர் அந்த ஊர் மக்களின் வீடுகளுக்குச் சென்று கோவில் விழாவில் கலந்து கொண்டு உணவருந்திச் செல்ல வேண்டுமென்று அழைப்பு விடுத்தார்.

விழாவில் பங்கேற்க ஊர் மக்கள் அனைவரும் வருவார்கள் என்கிற நம்பிக்கையில் அதிக அளவில் உணவுகளைத் தயாரித்து வைத்திருந்தார்.ஆனால் அந்த ஊர்ப்பெரியவர்கள் அந்தக் கோவில் விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.ஊர்ப்பெரியவர்கள் யாரும் கலந்து கொள்ளாததால் ஊரிலிருந்த பொதுமக்களும் அவர்களுக்கு அச்சப்பட்டு விழாவில் பங்கேற்கவில்லை.இதனால் அந்தக் கோவில் விழாவிற்காகத் தயார் செய்யப்பட்ட உணவுகள் அனைத்தும் மீதமாகிப்போனது.இதனால் வருத்தமடைந்த சலவைத் தொழிலாளி தானும் அந்த உணவை உண்ணாமல் கோவிலுக்கு அருகிலேயே மீதமாகிப்போன உணவுகளைப் போட்டுவிட்டு வீடு திரும்பினார்.பின்னர் தனக்கு வாழ்வளித்த பாதாள பைரவிக்கு சிறப்புற விழா நிகழ்த்த முடியவில்லையே என மிகுதியாய் மனம் வருந்தினார்.

அடுத்த நாள் ஊர்ப் பெரியவர்கள் சிலர் ஒரு வண்டியில் வெளியூர் சென்று விட்டு ஊருக்குள் திரும்பிக் கொண்டிருந்தனர்.அவர்கள் வந்த வண்டி கோவில் அருகே வந்தபோது அங்கிருந்த கல்லில் வண்டிச் சக்கரம் மோதி வண்டி கவிழ்ந்தது.அப்போது ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.சாலையின் குறுக்காக பெரிய உருவத்திலான பெண் ஒருத்தி படுத்திருப்பது போன்றும் தெரிந்தது.இதைக் கண்டு வண்டியை ஓட்டி வந்தவரும் ஊர்ப் பெரியவர்களும் அச்சமடைந்தனர்.

அப்போது என் பக்தன் நடத்திய கோவில் விழாவில் நீங்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததால் அவன் மிகுந்த வருத்தமடைந்து இருக்கிறான். அவனுடைய விருப்பத்திற்காக ஊர் மக்கள் அனைவரும் இந்த உணவை உண்ணவேண்டும் என்று அசரீரி குரல் ஒன்று ஒலித்தது.உடனடியாக அனைவரும் சென்று பார்த்த போது உணவுகள் அணைத்தும் கெட்டுப் போகாமல் அதே சூட்டுடன் இருந்தது.

இதைக்கண்ட ஊர்ப் பெரியவர்கள் அம்மனிடம் தங்களை மன்னித்தருளும்படி வேண்டினர்.அதன் பிறகு அவர்கள் அந்த சலவைத் தொழிலாளரிடம் சென்று அம்மன் தங்கள் முன்பாகத் தோன்றியதைத் தெரிவித்துத் தங்களை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.பின்பு அம்மன் காட்சி தந்த அதே இடத்தில்(சயன கோலத்தில்)கிடந்த கோலத்தில் சிலை நிறுவி கோவில் ஒன்றையும் ஊர் மக்கள் அமைத்தனர்.பின்னர் வண்டி மறிச்ச அம்மன் என்ற பெயர் மருவி “வண்டி மலைச்சி அம்மன்”என்று மாறியதாக சிலர் கூறுகின்றனர்.

வழிபாடு:பெரும்பாலான வண்டி மலைச்சி அம்மன் கோவில்களில் வண்டி மலையான் சுவாமியும் சேர்ந்து இருப்பது போன்ற சிலைகள் மிகப் பெரியதாகக் கிடந்த நிலையில் (சயன நிலையில்)அமைக்கப்பட்டிருக்கின்றன. இப்படி அமைக்கப்பட்ட பல்வேறு கோவில்களில் நாகர்கோவில் வடசேரியில் அமைந்திருக்கும் வண்டி மலைச்சியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கொடை விழா எனும் பெயரில் அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அருள்மிகு வண்டிமலையான் சுவாமி
திருவடி மலரடி போற்றி! போற்றி!
அருள்மிகு வண்டி மலைச்சி அம்மன்
திருவடி மலரடி போற்றி! போற்றி!

போக்குவரத்து வசதி:நாகர்கோயில் பேருந்து நிலையத்திலிருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 06 கி.மீ.தொலைவில் வடசேரி உள்ளது.

 கோயில் முகவரி:அருள்மிகு வண்டி மலைச்சி அம்மன் திருக்கோவில்
69, ரவிவர்மன் புதிய தெரு
வடசேரி,நாகர்கோயில்.

அருள் மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவில் (அந்தியூர்)

அருள் மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவில் (அந்தியூர்)
 



தமிழகத்தில் கொங்கு நாட்டில் அமையப்பெற்ற அற்புதத் தலம்.மாட்டு சந்தைக்கு பெயர் பெற்ற அந்தியூரில் அமையப்பெற்ற மகிமை வாய்ந்த திருத்தலம்.சுமார் 1000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த தலம்.பங்குனி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து வழிபடும் புண்ணிய திருத்தலம்.இவ்வாறு ஏராளமான பெருமைகளை உள்ளடக்கிய அழகான திருத்தலம் இதுவாகும்.

கொங்கு நாடு:முற்காலத்தில் கொங்கு நாடு தனக்கென்று தனியான எல்லைகள் வரலாறு கலை பண்பாடு நாகரிகம் பழக்க வழக்கம் ஆகியவைகளைக் கொண்டிருந்தது.இதனைப் பழங்கால இலக்கியங்களும் கல்வெட்டுக்களும் உறுதிப்படுத்துகின்றன.

நீலகிரி கோவை ஈரோடு நாமக்கல் சேலம் தருமபுரி ஆகிய மாவட்டங்களும் திண்டுக்கல் மாவட்டம் பழனிமலைப் பகுதியும் மற்றும் கரூர் மாவட்டம் குழித்தலைப் பகுதிகளுமே கொங்கு நாடாகும்.அக்கொங்கு நாடு 24 உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருந்தது.அவற்றுள்"வடகொங்கு வடகரை நாடு" என்பது ஒன்றாகும்.அதாவது பவானி ஆற்றின் வடக்கில் உள்ள பகுதியே வடகரை நாடு என்று அழைக்கப்பட்டு வந்தது.அந்த வடகரை நாட்டின் தலைநகராக விளங்கியது"அத்தியூர்" ஆகும்.தற்போது ஈரோடு மாவட்டத்தின் ஒரு பகுதியே அந்தியூர் ஆகும்.

தொண்மைச் சிறப்பு:தமிழில் மிக தொண்மையான இலக்கியங்களுள் ஒன்றாகக் கருதப்படுவது "அகநானூறு"ஆகும். அவ்வாறு சிறப்புமிக்க அகநானூற்றின் 71 ஆம் பாடலைப் பாடிய"அந்தி இளங்கீரனார்"என்ற புலவர் அந்தியூரைச் சார்ந்தவர் என்பதன் மூலம் இவ்வூரின் தொண்மைச் சிறப்பை அறிய முடிகிறது.

காளிதேவி வழிபாடு:தமிழகத்தில் காளிதேவி வழிபாடு என்பது சங்ககாலத்தில் இருந்தே வழக்கத்தில் இருந்துள்ளது.தட்சன் தாருகாசூரன் மகிடாசூரன் ஆகியோரை அழித்தவள் காளி என்பதாக சங்ககாலத்தின் பல இலக்கியங்கள் கூறுகின்றன.இதை ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான இளங்கோவடிகள் இயற்றிய "சிலப்பதிகாரம்"வழக்குரைக் காதை பகுதியில் மிக அழகாக கூறுகிறது.

அடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணிப்பிடர்த் தலைப் பீடம் ஏறிய மடக்கொடி வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை அல்லள்;அறுவர்க்கு இளைய நங்கை இறைவனை
ஆடல் கண்டருளிய அணங்கு, சூர்உடைக் கானகம் உகந்த காளி தாருகன் பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள்; (இளங்கோவடிகள்)

காளிதேவி பல்வேறு இடங்களில் பல்வேறு பெயர்களில் அழைக்கப் படுகிறாள்.மாகாளி உச்சினி மாகாளி ஓம் காளி எண்ணை முத்துக்காளி காளியம்மன் சீலக்காளி கல்கத்தா காளி கடுக்காளி கரிய காளியம்மன் பாதாள காளி பத்ரகாளி வீரகாளி வீரசூரகாளி வீரமாகாளி போன்காளியம்மன் போன்றவை ஆகும். அதில் பத்ரகாளி வழிபாடு தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

"பத்ரம்"என்ற சொல்லுக்கு"இலை அழகிய உருவம் பாதுகாப்பு"என்று பல அர்த்தங்கள் உள்ளது.இலை வடிவ தோடை காதில் அணிந்து கொண்டு அழகிய வடிவத்தில் இந்த புவனத்தை காக்கின்றாள் என்ற அர்த்தத்தை உள்ளடக்கி"பத்ரகாளி"என்ற திருநாமம் பெற்றாள்.

தல வரலாறு:கன்று ஈன்ற ஐந்து மடிகளைக் கொண்ட பசு ஒன்று காட்டில் மேய்ந்து விட்டு தினசரி பாலின்றி வெற்று மடியோடு வீட்டுக்கு வந்துள்ளது.பசுவின் உரிமையாளர் அப்பசுவைத் தொடர்ந்து சென்று கண்காணித்தார்.அப்போது ஒருபுற்று அருகே பசு சென்றது. புற்றிலிருந்து ஐந்து தலை நாகமொன்று வெளிப்பட்டு பசுவின் ஐந்து மடிகளிலிருந்தும் பாலைக் குடித்தது.இதைப்பார்த்ததும் பசுவின் உரிமையாளர் அதிர்ச்சியுற்றார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய அம்மன் தான் பத்ரகாளி என்றும் தன்னை இவ்விடத்திலேயே வைத்து வழிபடுக என்றும் கூறி மறைந்தாள். அம்மனின் அருள்வாக்கை ஏற்று அந்த இடத்தில் பக்தர்கள் கோயில் அமைத்து அம்பாளுக்குப் பத்ரகாளி என்ற திருநாமம் சூட்டி வழிபடத் துவங்கினர்.

காளியின் தோற்றம்:கருவறையில் பத்ரகாளியம்மன் எட்டு கைகளுடன் அருள்பாலிக்கிறாள்.சுடர் விட்டு பரவும் சுவாலை கொண்ட தலை மண்டை ஓட்டு கீரிடம் எட்டு கைகளில் உடுக்கை கட்கம் கபாலம் சூலம் மகிடனின் தலைமேல் கால் வைத்திருக்கும் பாவனை, விஸ்மய ஹஸ்தம்(செயற்கரிய செயல்களை செய்யும் போது வியந்து பாராட்டும் சிறப்பம்சம்)நாகம் மணி கிண்ணத்துடன் அம்மன் அருள்பாலிக்கிறாள்.

பகைவர்களின் தலைகளை மாலையாக தொடுத்து அதையே மார்புக்கச்சாக கட்டியிருக்கிறாள். மகிடனின் தலையில் கால் வைத்துள்ளதால் நவராத்திரி நாயகியான மகிடாசுரமர்த்தினியாகவும் கருதப்படுகிறாள்.

இக்கோயிலில் பத்ரகாளியம்மனின் காவல் தெய்வமாக மகாமுனி திகழ்கிறார்.இக்கோவிலைச் சுற்றிலும் மகாமுனி உருவங்கள் ஏராளமாக உள்ளன.போர்களத்தில் வெற்றியடைந்து அதன் விளைவாக காளிதேவிக்கு தன்னையே களபலி கொடுத்த வீரர்கள் சிற்பங்கள் இக்கோயிலில் நிரம்பியுள்ளன. அக்காலத்தில் நம் நாட்டு மக்களும் மன்னர்களும் போரில் பகைவர்களை அழித்து வெற்றி பெற வேண்டும் என்று எண்ணிய வீரர்கள் வெற்றி வாகை சூடிய பின் தன் காவல் தெய்வமாகிய காளிதேவிக்கு தம்மைத்தாமே பலியிட்டுக் கொள்ளும் வழக்கம் நிலவி வந்தது.இச்சம்பவத்தை செயங்கொண்டார் கலிங்கத்துபரணியில் கோயில் பாடியது பகுதியில் மிக அழகாக பாடியுள்ளார்.

அடிக்கழுத்தி னெடுஞ்சிறப்பை யாரிவ ராலோ
அரிந்தசிர மணங்கின்கைக் கொடுப்ப ராலோ
கொடுத்தசிரங் கொற்றவையைப் பரவு மாலோ
குறையுடலங் கும்பிட்டு நிற்கு மாலோ
-செயங்கொண்டார்

 தீமிதி திருவிழா:ஆண்டுதோறும் பங்குனி மாதம் பத்ரகாளியம்மன் திருக்கோயில் தீமிதி திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது.

முதல் வியாழக்கிழமை–பூச்சாட்டுதல்
இரண்டாவது புதன்கிழமை-மகிடாசூரன் வதம்
மூன்றாவது புதன்கிழமை -கொடியேற்றம்
நான்காவது புதன்கிழமை-தீமிதி திருவிழா.பூச்சாட்டுதல் முதல் தீமிதி திருவிழா வரை அன்னை பத்ரகாளியம்மன் ஏழு நாட்களும் ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலா வந்து அருள் பாலிக்கிறாள்.அதில் ஏழாம் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து வழிபடுகின்றனர்.

பிரார்த்தனை:இங்கு வீரஆஞ்சநேயரின் சன்னதியும் இருப்பதால் சனிதோடம் உள்ளவர்களும் பிரார்த்தனைக்கு வருகின்றனர்.பெண்கள் தங்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க தங்கள் தாலியையே காணிக்கையாக தருவதாக அம்பாளிடம் வேண்டுகின்றனர்.குறிப்பாக உயிருக்கு போராடும் கணவருக்காக இத்தகைய பிரார்த்தனையைச் செய்வது மரபாக உள்ளது.

ராகுவின் அதிதேவதையாக காளி விளங்குவதால் செவ்வாய் வெள்ளி ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி திருமணத்தடை விலக கன்னியர்கள் வாலிபர்கள் வேண்டுகின்றனர். குழந்தை பாக்கியம் கிடைக்க தொட்டில் கட்டும் வழிபாடு நடக்கிறது.கல்வி செல்வம் வீரம் ஆகியவற்றை வழங்கும் பத்ரகாளி இங்கே தைரிய லட்சுமி அவதாரமாக இருக்கிறாள்.

தரிசனம் நேரம்:காலை 06.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை.மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 வரை.

கோயில் அமைவிடம்: ஈரோட்டிலிருந்து 40 கி.மீ. தொலைவில் அந்தியூர் உள்ளது. அந்தியூர் பேருந்து நிலையத்தின் மிக அருகாமையில் கோயில் உள்ளது.

திருக்கோயில் முகவரி:நிர்வாக அதிகாரி, அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவில், அந்தியூர், ஈரோடு – 638 501, தொடர்புக்கு: 04256 261774

கோபால சுந்தரி

சம்மோஹன கிருஷ்ணர் ஸ்துதி  (கோபால சுந்தரி


)

ஸ்ரீக்ருஷ்ணம் கமலபத்ராட்சம் திவ்ய ஆபரண பூஷிதம்

த்ரிபங்கி லலிதாகாரம் அதிசுந்தர மோகனம்

பாகம் தட்சிணம் புருஷம் அந்ய ஸ்திரீரூபிணம் ததா

சங்கம் சக்ரம் சாங்கு சஞ்ச புஷ்ப பாணம் ச பங்கஜம்

இட்சீ சாபம் வேணு வாத்யம்ச தாரயந்தம் புஜாஷ்டகை

ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்

ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் ஸ்ரீக்ருஷ்ண மாஸ்ரயே!

பொருள்:

வலப்புறம் புருஷ உருவமும், இடப்புறம் ஸ்த்ரீ உருவமும் கொண்டு, சங்கம், சக்ரம், அங்குசம், தாமரை, மலர், கரும்பு வில், மலரம்புகள். வேணு என்ற புல்லாங்குழல் ஆகியவற்றை ஏந்திய எட்டு கரங்களோடு, அழகான தாமரைக் கண்களும், திவ்ய ஆபரணங்களும் அணிந்து, த்ரிபங்க நிலையில், வெண்சந்தனம் பூசி மனதை மயக்கும் மிக அழகிய திருவுருவத்தைக் கொண்ட ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணரை எனது அனைத்து ஆசைகளும் நிறைவேறும் பொருட்டு வழிபடுகிறேன்.

#கோபாலசுந்தரி_தியானம்

1. க்ஷீராம்போநிதி மத்ய ஸம்ஸ்தித
லஸத் த்வீபஸ்த கல்பத்ருமோ
த்யானோத்யத்மணி மண்டபாந்த
ருதிதஸ்ரீபீட பாதோஜகம்
தோர்தண்டை: அரிசங்கவேணு ஸ்ருணி
ஸத்பாசேஷூ சாபாசுகான்
பிப்ராணம் கமலாமஹீ விலஸிதம்
வந்தேருணாங்கம் ஹரிம்.

க்ருஷ்ணம் கமலபத்ராக்ஷம் திவ்யாபரணபூஷிதம்
த்ரிபங்கி லலிதாகாரம் அதிஸுந்தர மோஹனம்
பாகம் தக்ஷிணம் புருஷம் அந்யத் ஸ்த்ரீ ரூபிணம்
ததா
ஸங்கம் சக்ரம் ஸாங்குஸஞ்ச புஷ்பபாணம்ச பங்கஜம்
இக்ஷு சாபம் வேணுவாத்யம்ச தாரயந்தம்
புஜாஷ்டகை
ஸ்வேத கந்தானுலிப்தாங்கம் புஷ்பவஸ்த்ர த்ர
குஜ்வலம்
ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் க்ருஷ்ண
மாஸ்ரயே.

பாற்கடலில், கற்பக விருட்சத்தின் நடுவில் மணி மண்டபத்தில் ஒய்யாரமாக குழலூதியபடி, தன் கரங்களில் சங்கு, சக்கரம், பாசம், அங்குசம், கரும்பு  வில், புஷ்ப பாணம் போன்றவற்றை ஏந்தி பக்தர்களுக்கு அருள்புரியும் ஸ்ரீவித்யா ராஜகோபாலன் என்று வணங்கப்படும் கோபாலசுந்தரியை நமஸ்கரிக்கிறேன். கிருஷ்ணனும், தாமரைக் கண்ணனும், சர்வாலங்காரங்களுடன் திகழ்பவனும் த்ரிபங்கி நிலையில் லலிதையோடு பேரழகாய் அருட்கோலம்  காட்டுபவனும் பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும் கோபாலனாம் கிருஷ்ணனை வணங்குகிறேன்.  இந்த மந்திரங்கள் மிகவும்  அற்புதமானவை. இதை நம்பிக்கையுடன் ஜபம் செய்து வந்தால் பெருஞ்செல்வம் கிட்டும். மழலைவரம் வேண்டுவோர்க்கு அந்த பாக்கியம் பெறுவார் கள். கண்ணனின் திருவருளும் லலிதா பரமேஸ்வரியின் பேரருளும் கிட்டும்.

2. கோதண்டம் மஸ்ருணம் ஸுகந்தி விசிகம் சக்ராப்ஜ பாசாங்குசம்
ஹைமீம் வேணுலதாம் கரைச்ச தததம் ஸிந்தூர புஞ்ஜாருணம்
கந்தர்ப்பாதிக ஸுந்தரம் ஸ்மிதமுகம்
கோபாங்கனா வேஷ்டிதம்
கோபாலம் ஸததம் பஜாமி வரதம்
த்ரைலோக்ய ரக்ஷாமணீம்
க்ருஷ்ண கர்ணாம்ருதம்.

விசித்திரமான வில்லையும் நல்ல மணமுடைய புஷ்ப பாணத்தையும் சக்கரத்தையும் சங்கத்தையும் பாசத்தையும் அங்குசத்தையும் பொன்மயமான கொடி போன்ற குழலையும் ஏந்தி,  அடர்ந்த நிறம் கொண்டவனாய், மன்மதனைக் காட்டிலும் பேரழகு கொண்டவனாய், புன்முறுவல் பூத்த முகத்தினனாய், கோபியர்களால் சூழப்பெற்றவனாய், மூவுலகையும் காப்பவனாய், வேண்டியதை எப்போதும் அருளும் கோபாலனாய் திகழ்பவனை தியானிக்கிறேன்.
 

கோபாலசுந்தரி காயத்ரி

ஓம் லலிதாயை வித்மஹே
கோபாலாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

ஸ்ரீ சக்ர பூர்ண மகா மேரு

ஸ்ரீ சக்ர பூர்ண மகா மேரு




யாகங்களில் உயர்ந்தது அஸ்வமேதம்.

தேவர்களில் உயர்ந்தவர் ஹரி.

யானைகளில் உயர்ந்தது ஐராவதம்.

குதிரைகளில் உயர்ந்தது பஞ்சகல்யாணி.

பசுக்களில் உயர்ந்தது காமதேனு.

மிருகங்களில் உயர்ந்தது ஸிம்ஹம்.

பெண்களில் உயர்ந்தவர் சீதை.

அது போல யந்திரங்களில் உயர்ந்தது ஸ்ரீ சக்ரம் எனப்படும் ஸ்ரீ சக்ர பூர்ண மகாமேரு.

விநாயகன் உறையுமிடம் ஆனந்தபுரி.

முருகன் இருக்குமிடம் ஸ்கந்தலோகம்.

ப்ரமன் இருக்குமிடம் ஸத்யலோகம்.

நாராயணன் இருக்குமிடம் வைகுந்தம்.

இந்திரன் இருக்குமிடம் தேவலோகம்.

சிவபெருமான் இருக்குமிடம் கைலாயம்.

அது போல அன்னை ஜகன்மாதா அம்பிகை எம்பெருமானுடன் கூடி இன்புற்று உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டு அருள்பாலிக்கும் இடம்
ஸ்ரீ புரம் எனக் கூறப்படும் ஸ்ரீ சக்ர பூர்ண மகாமேரு பீடம் என்னுமிடமாகும்.

அன்னையுறையும் இந்த யந்திரத்தை கோடுகளாக வரைந்து வைத்தால் அது ஸ்ரீ சக்ரம் எனவும் அதற்கு வடிவம் கொடுத்தால் அதுவே மகாமேரு எனவும் கூறப்படும.

அன்னை உறையும் இந்த மகாமேரு 9 ஆவரணம் என்னும் கோட்டைகளைக் கொண்டது.

அரசர்கள் அரண்மனைகளைச் சுற்றிகோட்டை மதில்களை அமைத்துக் காப்பது போல் தேவியின் ஸ்ரீ சக்ரபுரம் என்னும் கோட்டையைச் சுற்றி 9 கோட்டைகள் உண்டு.

ஒவ்வொரு கோட்டையையும் சேனாதிபதிகள் காப்பது போல பெண் சேனாதிபதிகள் காவல் காக்கின்றனர். ஒவ்வொரு கோட்டையும் ஒவ்வொரு அமைப்பைக் கொண்டது.

முதலில் சதுரக் கோட்டை த்ரைலோக்ய மோகனசசக்கரம் எனறு பெயர். இதனை ப்ரகடயோகினி முதலான 8 தேவியர் காவல்புரிகின்றனர்.

தாமரை இதழ்போன்ற 16 அமைப்புக்கள் கொண்ட பரிபூரக சக்ரம் என்னும் கோட்டை. இதை குப்தயோகினி முதலான 16 தேவியர் காவல் புரிகின்றனர்

3 தாமரை இதழ் போன்ற அமைப்பபைக் கொண்ட 8 தளங்களைக் கொண்ட கோட்டை இதற்கு ஸர்வரரேக ஸம்சேஷோபனா சக்ரம் என்ற பெயர். இதனை குப்ததரயோகினி முதலான 8 தேவியர் காவல் புரிகின்றனர்.

14 முக்கோணங்களைக் கொண்ட ஸர்வ ஸொபாக்கியதாயக சக்ரம் என்ற பெயரைக் கொண்டது இதனை ஸம்ப்ரதாய யோகினி முதலான 14 தேவதைகள் காவல் புரிகின்றனர்.

முக்கோணங்களைக் கொண்ட ஸர்வார்த்த ஸாதக சக்கரம் என்ற பெயரைக் கொண்டது. இதை குலோத்தீரண யோகினி முதலான 10 தேவதைகள் காவல் புரிகின்றனர்.

10 முக்கோணங்களைக் கொண்ட சர்வரக்ஷாகர சக்ரம் என்ற பெயரினைக் கொண்டது. இதனை நிகர்ப்பயோகினி முதலான பத்து தேவதைகள் காவல் புரிகின்றனர்.

முக்கோணங்களைக் கொண்ட சர்வரோகஹர சக்ரம் என்ற பெயரினைக் கொண்டது. இதனை ரஹஸ்ய யோகினி முதலான 8 தேவதைகள் காவல்புரிகின்றனர்.

ஒரே முக்கோணம் சர்வஸித்தப் பிரதாயக சக்கரம் என்ற பெயரைக் கொண்டது. இதனை அதிரஹஸ்ய யோகினி முதலான தேவதைகள் காக்கின்றனர்.

பிந்து ஸ்தானம் எனப்படும் ஸர்வானந்தமய சக்கரம் என்ற பெயரைக் கொண்டது. இது ஒரு புள்ளி போன்ற இடமாகும். இதில் பரதேவதையான அம்பிகை ஸ்ரீ லலிதா மகாத்ரிபுர சுந்தரியாக இருந்து கொண்டு அருள் பாலிக்கின்றாள். லலிதா மஹாத்ரிபுர சுந்தரியாக இருந்து கொண்டு அருள் பாலிக்கின்றாள்.

இந்த அமைப்பைக்கொண்ட ஸ்ரீ சக்ரம் உலகம் உய்யும் பொருட்டு, ஆதிசங்கரரால் பாரத தேசத்தில் காஞ்சி. திருவானைக்கா, மற்றம் திருஓற்றியூர்; போன்ற தலங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

மக்களின் துயரைப் போக்கி அன்னையின் அருளை அளிக்கும். ஒரு சிறந்த மார்க்கம் இந்த மஹாமேரு வழிபாடாகும்.

அன்னையிடம் நாம் செய்யும் அபசாரத்தினால் உண்டாகும் கோபம் தணிய தேவிக்கு இந்த சக்ரஸ்தாபனம் செய்து வழிபட்டால் எல்லா நன்மையும் பெறுவது திண்ணம்.                     

#ஸ்ரீ_சக்கரத்தின்_மகிமை:

மேரு மலையின் மீது புஷ்பதந்தர் என்பவரே இந்த சக்கர வழிபாட்டை வரை கலையாக எழுதி வைத்தார் எனவும், விநாயகப் பெருமான் அதற்கு முழுவதுமாக வடிவம் கொடுத்தார் என்றும், ஆதிசங்கரரின் குருவான கௌடபாதர் தான் அதை கிரஹித்து அவருக்கு உபதேசித் தருளினார் என்றும் லிங்கபுராணச் செய்யுள் குறிப்பிடுகிறது.

#மோகினி_ஹிருதயம் எனும் நூல் ஸ்ரீ சக்ர வடிவை பற்றி மிக எளிமையாகவும் தெளிவாகவும் பல விவரங்களை நமக்கு தெரிவிக்கிறது இந்த நூலை #வாமகேஷ்வர_தந்திரம் என்று வேறொரு பெயராலும் அழைக்கிறார்கள் இதில் தந்திர மார்க்கம் சார்ந்த உபாசன முறைகள் விவரிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ சக்ரம் என்பது பிரபஞ்சவெளியில் எங்கும் வியாபித்துள்ள பரம்பொருளின் தன்மையை ஒருமைபாட்டை விளக்குவதே ஆகும்.

இந்த விளக்கத்தை ஒவ்வொரு மனிதனும் நன்கு விளங்கி கொள்ள ஒன்பது நிலைகளை கடந்து செல்ல வேண்டும் அதாவது மனிதனுக்கும் பிரம்மத்திற்கும் இடையில் ஒன்பது மறைப்புகள் உள்ளன.இந்த மறைப்புகளை ஸ்ரீ சக்ர தத்துவம் ஒன்பது ஆவரணங்கள் என்று பெயரிட்டு அழைக்கிறது.

விஞ்ஞான ரீதியான சில கருத்துக்களை நமது சுவாசம் மற்றும் உடல் அமைப்புகளை வைத்து மற்றும் ஒரு பதிவு ஸ்ரீ.மோகினி ஹ்ருதயம் கண்ணோட்டத்தில் கட்டுரை எழுதிக் கொண்டு இருக்கிறேன் விரைவில் பதிவிடுகிறேன்.