புதன், 29 ஜூலை, 2020

108 திவ்ய தேசங்கள்: அருள்மிகு உய்யவந்தபெருமாள் திருக்கோயில்

மூலவர் :  உய்யவந்த பெருமாள்(அபயப்ரதன்)
தாயார் :  வித்துவக்கோட்டு வல்லி (பத்மாஸனி நாச்சியார்)
தீர்த்தம் :  சக்கரதீர்த்தம்
பழமை :  3000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :  திருமிற்றக்கோடு
ஊர் :  திருவித்துவக்கோடு
மாவட்டம் :  பாலக்காடு
மாநிலம் :  கேரளா
பாடியவர்கள் : குலசேகராழ்வார்
தருதுயரம் தடாயேல் உன் சரணல்லால் சரணில்லை விரைகுழவும் மலர்பொழில் சூழ் வித்துவக் கோட்டம்மானே! அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன் அருள்நினைந்தே அழுங்குழவி அதுவே போல் இருந்தேனே!-குலசேகராழ்வார்
      
திறக்கும் நேரம் : காலை 05:00 மணி முதல் 10:30 மணி வரை, மாலை 05:00 மணி முதல் இரவு 07:30 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு உய்யவந்த பெருமாள் திருக்கோயில், திருவித்துவக்கோடு- 679 303 (திருவிச்சிக்கோடு), பாலக்காடு மாவட்டம், கேரளா மாநிலம்.போன் : +91- 98954 03524 
     
தகவல் : இப்பகுதி மக்கள் பெரும் பாலானோர் தமிழ் பேசுகின்றனர். கோயில் சுவர்களில் அமைந்துள்ள அழகிய சுதைச்சிற்பங்களும் சிற்ப வேலைப்பாடுகளும் அர்ஜுனன் தவம் செய்த காட்சி கிருஷ்ண லீலா காட்சிகள் போன்றவை மிகவும் அற்புதமாக உள்ளது.  
      
ஸ்தல பெருமை : காசி விஸ்வநாதரே இங்கு எழுந்தருளியிருப்பதாலும் பத்து நதிகள் ஒன்றாக இணையும் பாரதப்புழா நதிக்கரையில் கோயில் அமைந்திருப்பதாலும் இத்தலத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறந்ததாகும். பெருமாள் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். மூலவர் விமானம் தத்வகாஞ்சன விமானம் ஆகும். அம்பரீஷன், பஞ்சபாண்டவர்கள் ஆகியோர் பெருமாளை தரிசித்துள்ளனர்.  
      
ஸ்தல வரலாறு : மகாபாரத காலத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தென்னிந்திய பகுதிக்கு வந்த போது இங்குள்ள நீளா நதிக்கரையோரம் ஒரு அழகான இடத்தை கண்டனர். அங்கிருந்த அழகும் தெய்வீகம் கலந்த அமைதியும் கண்ட அவர்கள் சில காலம் அங்கேயே தங்க முடிவு செய்தனர். அந்த நேரத்தில் தினமும் பூஜை செய்வதற்காக கோயில் கட்டி சிலைகளை அமைத்தனர். முதலில் அர்ஜுனன் மகா விஷ்ணுவின் சிலையை அமைத்தான். இதுவே மூலஸ்தானமாக கருதப்படுகிறது. சுற்றுப்பகுதியில் தர்மர் பிரதிஷ்டை செய்த பெருமாள் தனி சன்னதியிலும், நகுல சகாதேவர் பிரதிஷ்டை செய்த பெருமாள் தனி சன்னதியிலும், பீமன் பிரதிஷ்டை செய்த பெருமாள் தனி சன்னதியிலும் அருள் பாலிக்கிறார்கள். கோயிலில் நுழைந்தவுடன் கணபதியும் தெட்சிணாமூர்த்தியும் வீற்றிருக்கின்றனர். சாஸ்தா, நாகர், பகவதி தேவிக்கு தனித்தனி சன்னதி உள்ளது. பஞ்சபாண்டவர்கள் அனைவரும் தங்களது வன வாசத்தில் பெரும் பாலான நாட்களில் இங்கேயே தங்கி பூஜை செய்ததாக கூறப்படுகிறது. வெகு காலத்திற்கு பின் பாண்டிய மன்னன் ஒருவனால் மிகப்பெரிய மதில் சுவர் கட்டப்பட்டது. நெடுங்காலமாகவே இக்கோயிலில் பெருமாள் வழிபாடு மட்டுமே இருந்து வந்தது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியை சேர்ந்த முனிவர் ஒருவர் காசிக்கு சென்று அங்கேயே தங்கி வெகு காலம் வாழ்ந்திருந்தார். அப்போது அவரது தாயாரின் உடல் நிலை மோசமாகி இறக்கும் நிலையில் இருப்பதாக தகவல் வந்தது. இதை கேள்விப்பட்ட அவர் காசியிலிருந்து தன் தாயை பார்க்க புறப்பட்டார். அவர் கிளம்பும் போது இவரது பக்தியின் காரணமாக காசி விஸ்வநாதரும் முனிவரது குடையில் மறைந்து வந்ததாக கூறப்படுகிறது. முனிவர் வரும் வழியில் இந்த கோயிலை கண்டு தனது குடையை இத்தலத்தில் வைத்து விட்டு குளிக்க சென்றார். அவர் திரும்பி வந்து பார்த்த போது குடை வைத்திருந்த பலிபீடம் வெடித்து சிதறி அதிலிருந்து ஒரு சிவலிங்கம் தோன்றியிருப்பதையும், குடை மறைந்து விட்டதையும் கண்டார். காசியிலிருந்த விஸ்வநாதரே பஞ்ச பாண்டவர்கள் பிரதிஷ்டை செய்த இத்தலத்தில் தங்குவதற்கு வந்து விட்டதாகவும் இதற்கு அந்த முனிவர் காரணமாக இருந்ததாகவும் கூறுவர். மூலவரை தரிசிக்கும் முன் இந்த சிவலிங்கத்தை தரிசித்து செல்ல வேண்டும். கேரளாவில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இத்தலம் விளங்குகிறது. இத்தலத்ததை இப்பகுதி மக்கள் ஐந்து தல மூர்த்தி தலம் என அழைக்கின்றனர்.
108 திவ்ய தேசங்கள் :அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில்

மூலவர் :  நாவாய் முகுந்தன் (நாராயணன்)
தாயார் : மலர்மங்கை நாச்சியார் (சிறுதேவி)
தீர்த்தம் : கமல தடாகம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருநாவாய்
ஊர் :  திருநாவாய்
மாவட்டம் : மலப்புரம்
மாநிலம் : கேரளா
பாடியவர்கள்:நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கண்ணாளன் உலகத்துயிர் தேவர்கட் கெல்லாம் விண்ணாளன் விரும்பியுரையும் திருநாவாய் கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே. நம்மாழ்வார்
 
விழா : வைகுண்ட ஏகாதசி, திருவோணம்  
      
சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. திருமங்கையாழ்வார் தமது பாசுரங்களில் இத்தலத்தை திருக்கோட்டியூருக்கும், திரு நறையூருக்கும் ஒப்பிட்டு மங்களாசாசனம் செய்துள்ளார். கேரளாவில் இந்த தலத்தில் மட்டும் தான் லட்சுமிக்கு தனி சன்னதி உண்டு என்கிறார்கள்.  
      
திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில், திருநாவாய் : 676 301 மலப்புரம் மாவட்டம், கேரளா மாநிலம். போன்:+91- 494 - 260 2157 
     
தகவல் : கோயிலின் சுற்றுப்பகுதியில் கணபதி, லட்சுமி, ஐயப்பனுக்கு சன்னதிகள் உண்டு. கோயிலுக்கு எதிரே உள்ள ஆற்றின் அக்கரையில் பிரம்மனுக்கும், சிவனுக்கும் தனி கோயில் உள்ளது. எனவே இத்தலத்தை மும்மூர்த்தி என அழைக்கிறார்கள்.
மிகப்பழமையான இக்கோயிலின் உட்புற சுவர்களில் காலத்தினால் அழியாத பல ஓவியங்கள் இன்றும் உள்ளன. காசியில் நடப்பதை போல இத்தலத்தில் ஏராளமானவர்கள் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் கொடுக்கிறார்கள். கேரள மாநிலத்தில் பித்ரு தர்ப்பணம் கொடுப்பதில் இத்தலம் முதன்மை வகிக்கிறது. 
     
ஸ்தல பெருமை : ஒரு முறை ஒன்பது யோகிகள் சேர்ந்து பெருமாளை நினைத்து தவம் செய்துள்ளனர். எனவே இத்தலம் நவயோகிகள் ஸ்தலம் என அழைக்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் "நாவாய் ஸ்தலம்' ஆனது. இதை தற்போது "திருநாவாய்' என அழைக்கிறார்கள். இந்த ஸ்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். இவருக்கு மேலே உள்ள விமானம் வேத விமானம் எனப்படுகிறது. இவரை லட்சுமி, கஜேந்திரன், நவயோகிகள் தரிசனம் செய்துள்ளனர்.

ஸ்தல வரலாறு : முன்னொரு காலத்தில் மகாலட்சுமியும், கஜேந்திரனும் தாமரைப்பூக்களை பறித்து பெருமாளை பூஜித்து வந்தனர். இதில் ஒரு முறை கஜேந்திரனுக்கு அர்ச்சனை செய்வதற்கு பூக்கள் கிடைக்காமல் போனது. இதனால் வருத்தமடைந்த கஜேந்திரன் பெருமாளின் தனது நிலையை கூறி வருத்தப்பட்டான். உடனே பெருமாள் லட்சுமியை தேவியை அழைத்து இனி மேல் பூப்பறிக்க வேண்டாம் கஜேந்திரனுக்காக விட்டு கொடு என்று கூறினார். லட்சுமியும் அதன் படி செய்தாள். இதனால் மகிழ்ந்த கஜேந்திரன் தினமும் ஏராளமான பூக்களைப்பறித்து பெருமாளை அர்ச்சித்து வந்தான். பூஜையின் போது பெருமாள், லட்சுமி தேவியை தன்னுடன் ஏக சிம்மாசனத்தில் அமரச்செய்து கஜேந்திரனின் பூஜையை ஏற்று தரிசனம் தந்ததாக புராண வரலாறு கூறுகிறது. கேரளாவில் இந்த தலத்தில் மட்டும் தான் லட்சுமிக்கு தனி சன்னதி உண்டு என்கிறார்கள்.
274 சிவாலயங்கள் : அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்

மூலவர் :  அக்னீஸ்வரர்
அம்மன் :  கற்பகாம்பாள்
ஸ்தல விருட்சம் :  பலா
தீர்த்தம் :  அக்னி தீர்த்தம், பராசர தீர்த்தம்
பழமை :  2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :  கஞ்சனூர்(பலாசவனம், பராசபுரம்,பிரமபுரி, அக்கினிபுரம், கம்சபுரம், முத்திரிபுரி என்ற வேறு பெயர்களும் உண்டு)
ஊர் :  கஞ்சனூர்
மாவட்டம் :  தஞ்சாவூர்
மாநிலம் :  தமிழ்நாடு
பாடியவர்கள் : திருநாவுக்கரசர்,தேவாரப்பதிகம்.
வானவனை வலிவலமும் மறைக் காடானை மதிசூடும் பெருமானை மறையோன் தன்னை ஏனவனை இமவான்தன் பேதை யோடும் இனிதிருந்த பெருமானை ஏத்து வார்க்குத் தேனவனைத் தித்திக்கும் பெருமான் தன்னைத் தீதிலா மறையோனைத் தேவர் போற்றும் கானவனைக் கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்த் தேனே.திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 36வது தலம்.
 
விழா : மாசி மகம், தைத்திங்களில் ஹரதத்தர் காட்சி, ஆடிப்பூரம், திருவாதிரை, நவராத்திரி, சிவராத்திரி   
       
சிறப்பு : நவகிரகத்தலங்களில் இத்தலம் சுக்கிரனுக்குரிய தலமாகும். சுக்கிரன் வழிபாடு செய்த தலங்களுள் இதுவும் ஒன்று. சுக்கிரனுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது. இங்கு சிவன் உயர்ந்த பாணத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நடராஜர் மூலத்திருமேனியில் சிவகாமியுடன் (சிலா ரூபமாக) இருப்பது தனிசிறப்பு வாய்ந்தது. இத்தலத்தில் ஈசன் பிரம்மனுக்கு தன் திருமணக்கோலத்தை காட்டியருளினார். எனவே தான் இங்கு அம்மனை தன் வலப்பாகத்தில் சிவன் கொண்டருள்கிறார். பராசர முனிவருக்கு சிவன் இங்கு தாண்டவ கோலம் காட்டி முக்தி அருளினார். எனவே இங்குள்ள நடராஜர் "முக்தி தாண்டவ மூர்த்தி' என அழைக்கப்படுகிறார்.   
       
திறக்கும் நேரம் : காலை 07:30 முதல் மதியம் 12:00 வரை. மாலை 04:30 முதல் இரவு 09:00 மணிவரை நடை திறந்திருக்கும். அருள் மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், கஞ்சனூர், -609 804 (வழி) துகிலி, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். போன் : +91- 435 - 247 3737  
      
தகவல் : கோயில் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. பழமையான கோயில். தெற்கு வாயில் வழியாக உள்வந்தால் உள்மண்டபம் உள்ளது.  பிரகாரமாக வலம் வந்து மண்டபத்தையடைந்தால் இடப்பால் விநாயகர் தரிசனம், வலப்பால் விசுவநாதர் சன்னதி. அடுத்து அம்பாள் சன்னதி. உள்வாயிலைத் தாண்டி சுவாமி சன்னதிக்குச் செல்லும் போது இடப்பால் (வெளவால் நெத்தி மண்டபத்தில்) விநாயகர், மயூரசுப்பிரமணியர், மகாலட்சுமி சன்னதிகள் உள்ளன.
தலமரம் புரசு (பலாசு) உள்ளது. இதன்கீழ் அக்னீஸ்வரர் லிங்கம் தரிசனம் அடுத்து மானக்கஞ்சாறர், கலிக்காமர் திருவுருவங்கள் உள்ளன. பக்கத்தில் சுரைக்காய்ப் பக்தர் என்ற அடியார் மனைவியுடன் காட்சி தருகிறார். மகா மண்டபத்தில் பைரவர், சூரியன், சனிபகவான், சந்திரன், நவக்கிரக சன்னதி, நால்வர் சன்னதிகள் உள்ளன.

பிரார்த்தனை : உடல்பிணி, சோகை நோய், சித்தபிரமை நீங்கவும், செல்வம் செழிக்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.  
      
ஸ்தல பெருமை : பராசரருக்கு சித்த பிரமை நீங்கியது. பிரம்மனுக்கு திருமண காட்சி தந்தது. அக்னிக்கு உண்டான சோகை நோயை தீர்த்தது. சந்திரனின் சாபம் நீங்கியது. கம்சன் என்னும மன்னனின் உடற்பிணி நீங்கியது. கலிக்காமருக்கு திருமணம் நடந்தது. மானக்கஞ்சாரர் அவதரித்து வழிபட்டது ஆகிய சிறப்புகளை உடையது இத்தலம். மேலும் பஞ்சாட்சர மகிமையை வெளிப்படுத்திய ஹரதத்த சிவாச்சாரியார் அவதார தலம். மகா பலியைக் காப்பாற்ற தன் கண்ணையே இழந்தவர் சுக்ராச்சாரியார். எந்தக் கஷ்டம் வந்தாலும் தன்னை நம்பி வந்தவரைக் காப்பாற்ற வேண்டுமென்ற குணம் கொண்டவர். இவரது அருள் பெற நவக்கிரக தலங்களில் தஞ்சாவூர் மாவட்டம் கஞ்சனூர் செல்ல வேண்டும். நவக்கிரகங்களில் சுக்கிரன் ஆறாவது கிரகம் ஆவார். இவர் பிரம்ம தேவரின் மானஸ புத்திரராகிய பிருகு முனிவருக்கும், பிலோமிசைக்கும் மகன். எனவே தான் இவருக்கு பார்க்கவன் என்ற பெயர் உண்டு. இவருக்கு கவி என்ற மற்றொரு பெயரும் உண்டு. சுக்கிரன் மிகச்சிறந்த சிவ பக்தர். சிவ பெருமான் அருளால் இறந்தவர்களை உயிர் பிழைக்க செய்யும் அமிர்த சஞ்சீவி மந்திரத்தை கற்றவர். இவர் வெள்ளை நிறம் கொண்டவர். வெண்தாமரையுடன் கருட வாகனத்தில் வீற்றிருப்பார். முதலை வாகனமும் உண்டு. இவர் அசுரர்களுக்கு குரு. சுக்கிராச்சாரியார் என அழைக்கப்பட்டார். ரிஷப, துலா ராசிக்கு அதிபதியான இவர் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்திற்கு உரியவர். சுக்கிர திசை இருபது ஆண்டுகள் நடக்கும். ஒரு ராசியில் சஞ்சரிக்க இவருக்கு ஒரு மாத காலம் ஆகும். சுக்கிரனுக்கு நண்பர்கள் புதனும், சனியும். எதிரி சூரியனும் சந்திரனும். சமமானவர்கள் செவ்வாயும் குருவும். மகா பலியைக் காப்பாற்ற தன் கண்ணையே இழந்தவர் சுக்ராச்சாரியார். எந்தக் கஷ்டம் வந்தாலும் தன்னை நம்பி வந்தவரைக் காப்பாற்ற வேண்டுமென்ற குணம் கொண்டவர். ஒரு முறை சுக்கிராச்சாரியாரால் விஷ்ணுவுக்கு சுக்ர தோஷம் ஏற்பட்டது. இத்தோஷத்தை நீக்க விஷ்ணு ஹரதத்தர் என்ற திரு நாமத்துடன் இங்குள்ள சிவனை வழிபட்டு தோஷம் நீங்க பெற்றார் என்கிறது புராணம். சுக்கிர தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் சுக்கிரனுக்கு அருகில் உள்ள ஐம்பொன்னால் ஆன சிவனை வழிபாடு செய்வது சிறப்பு.

ஸ்தல வரலாறு : முன்பு கஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவருக்கு பிறந்த குழந்தையின் பெயர் சுதர்சனர். வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது. திரு நீறு, உருத்திராக்கதாரியாக திகழ்ந்த அக்குழந்தை எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. அவ்வூர் மக்கள் சொல்லியவாறே பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலி மீது அமர்ந்து சிவமே பரம்பொருள் என்று அக்குழந்தை மும்முறை கூறியதைக்கண்டு வியந்தனர். இக்காட்சியை சித்தரிக்கும் உருவம் இவ்வூர் பெருமாள் கோயிலிலும், அக்னீஸ்வரர் கோயில் நடராஜர் சன்னதியிலும் உள்ளது. பெருமாள் கோயிலிலும் அக்னீஸ்வரர் கற்பகாம்பாளுடன் எழுந்தருளியுள்ளார். ஹரதத்தருக்கு உபதேசித்து அருள் செய்த தெட்சிணாமூர்த்தி உருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு ஹரதத்தர் என்ற பெயர் அளித்து சிவநாம தீட்சை செய்தவர். ஒரு செல்வந்தர் தினமும் அக்னீஸ்வரருக்கு நைவேத்தியம் படைத்துவந்தார். அன்றாடம் அவர் கனவில் இறைவன் தோன்றி அவ்வுணவை உண்பது போல காட்சி தருவார். ஒரு நாள் அக்கனவு தோன்றவில்லை. காரணம் புரியாது அவர் விழித்தார். விசாரித்ததில் அன்று அக்னீஸ்வரர் ஹரதத்தரிடம் ஏழை பிராமணர் வடிவில் சென்று கஞ்சியை வாங்கி உண்டதாகவும் அதனால் வயிறு நிரம்பி விட செல்வந்தரின் உணவை ஏற்கவில்லை என்றும் உணர்ந்தார். இதன் மூலம் ஹரதத்தரின் பெருமையை அறிந்து அச்செல்வர் அவரை நாடிச்சென்று வணங்கியதாக வரலாறு சொல்லப்படுகிறது. ஆலயத்தில் ஹரதத்தரின் குடும்பமும் ஏழை அந்தணராக வந்த இறைவனின் திருவுருவமும் உள்ளன. ஊருக்குள் வரும் போது அரசமரத்தின் எதிரில் கிழக்கு நோக்கி ஹரதத்தர் சிவ பூஜை செய்வது போல உள்ள ஹரதத்தர் தனிக்கோயிலும் இத்தலத்தில் உள்ளது. சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் சுரைக்காய் பக்தர் என்ற அடியவர் மனைவியுடன் காட்சிதருகிறார்.
இவ்வூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சுரைக்காய் விற்று பிழைத்துவந்தார். இதனால் இவர் பெயர் சுரைக்காய் பக்தர் என்றாயிற்று. இவரிடம் ஒரே ஒரு சுரைக்காய்தான் எஞ்சியிருந்தது. அதை விதைக்கு ஆகும் என்று அப்படியே வைத்து விட்டார். அந்நிலையில் இறைவன் அவரிடம் விருந்தினராக வந்து உணவிடுமாறு கேட்க அவர் செய்வதறியாது திகைத்தார். அதிதிகளுக்கு சுரைக்காய் ஆகாது என்று எண்ணி கலங்கினார். அப்போது இறைவன் அசரீரியாக ஒரு பாதி விதைக்கு ஒரு பாதி கறிக்கு என்று அருளி செய்து ஏற்று அவருக்கு அருள் புரிந்தார் என்று ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.

கல்நந்தி : பிராமணர் ஒருவர் புல் கட்டை தெரியாமல் போட்டு விட்டதால் பசுக்கன்று ஒன்று இறந்தது. இதனால் அவருக்கு பசுதோஷம் நேர்ந்தது என்று பிராமணர்கள் அவரை தங்களிடமிருந்து விலக்கி வைத்து விட்டனர். அவர் செய்வதறியாமல் ஹரதத்தரிடம் முறையிட்டார். அவ்வாறு முறையிடும் போது பஞ்சாட்சரத்தைச் சொல்லியவாறே சென்றார். அதை கேட்ட ஹரதத்தர் சிவபஞ்சாட்சரத்தை சொல்லியதால் அப்பாதகம் நீங்கி விட்டதாக கூறினார். பிராமணர்கள் அதை ஏற்காமல் தங்களுக்கு நேரடிச்சான்று தந்து நிரூபிக்குமாறு கூறினர். ஹரதத்தர் உடனே அந்த பிராமணரை அழைத்து காவிரியில் நீராடி ஒரு கைப்புல் எடுத்து வந்து அந்த கல்நந்தியிடம் தருமாறு பணித்தார். அப்பிராமணரும் அவ்வாறே செய்து கல்நந்தி புல் சாப்பிடுமானால் பஞ்சாட்சரத்தால் தோஷம் நீங்கும் என்று சொல்லி புல்லைத்தர அந்நந்தியும் உண்டதாக வரலாறு.
274 சிவாலயங்கள் : அருள்மிகு பிராணநாதேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் :  பிராணநாதேசுவரர்
அம்மன் :  மங்களாம்பிகை
தல விருட்சம் :  கோங்கு, இலவு(வெள்ளெருக்கு)
தீர்த்தம் :  மங்களதீர்த்தம் (காவிரி)
பழமை : 1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருமங்கலக்குடி
ஊர் :  திருமங்கலக்குடி
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்

பொலியும் மால்வரை புக்கெடுத் தான்புகழ்ந்து ஏத்திட வலியும் வாளொடு நாள்கொடுத்தான் மங்கலக்குடிப் புலியின் ஆடையின் னானடி ஏத்திடும் புண்ணியர் மலியும் வானுலகம் புகவல்லவர் காண்மினே. திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 38வது தலம்.
 
விழா : பங்குனி உத்திரம் பத்து நாட்கள்  பிரம்மோற்சவம் இரண்டாம் நாள் திருக்கல்யாணம் விசேசம் இத்தலத்தின் மிக முக்கிய திருவிழா இதுவே ஆகும். இது தவிர சங்கட சதுர்த்தி, கிருத்திகை ஆகிய நாட்களும் இத்தலத்தில் சிறப்பு மிகுந்த நாட்கள் என்பதாகும். அஷ்டமி தேய்பிறை அன்று பைரவர்க்கு விசேசம். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.  
      
சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக கோயில்களில் சிவலிங்கத்தில், ஆவுடையாரை விட சற்று உயரம் குறைந்ததாகத்தான் பாணம் இருக்கும். ஆனால் இக்கோயிலில் பாணம், ஆவுடையாரைவிட உயர்ந்ததாக இருக்கிறது. நடராஜர் சன்னதியில் மரகதலிங்கம் ஒன்று உள்ளது. இரவில் திருக்கல்யாணம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் போன்ற கோயில்களில் காலையில் திருக்கல்யாணம் நடந்து மதிய வேளையில் திருக்கல்யாண விருந்து வைக்கப்படும். ஆனால் இக்கோயிலில் இரவில் தான் திருக்கல்யாணம் நடக்கிறது. பங்குனியில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தின் ஏழாம் நாளன்று திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று மாலை ஆறு மணிக்கு மேல் மாப்பிள்ளை அழைப்பு சுவாமி, அம்பாள் மாலை மாற்றும் வைபவமும், ஊஞ்சல் காட்சியும் நடக்கிறது. இரவு ஒன்பது மணியளவில் சுவாமி அம்பிகை திருக்கல்யாணமும் அதன் பின் திருமண விருந்தும் நடக்கும். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.  
      
திறக்கும் நேரம் : காலை 06:30 மணி முதல் 12:30 மணி வரை, மாலை 04:00 மணி முதல் இரவு 08.30 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு பிராணநாதேசுவரர் திருக்கோயில், திருமங்கலக்குடி : 612 102 தஞ்சாவூர் மாவட்டம். போன் : +91-435 - 247 0480. 
     
தகவல் : சிவன் சன்னதிக்குச் செல்லும் போது முன் மண்டபத்தில் மகாலட்சுமி, சரஸ்வதி இருவரும் துவாரபாலகிகள் போல இருபுறமும் காட்சி தருகின்றனர். இவ்விருவரும் இரு கால்களையும் மடக்கி பத்மாசனத்தில் அமர்ந்திருப்பது விசேஷமான தரிசனம். இதில் சரஸ்வதி வீணையில்லாமல் காட்சி தருகிறார்.
பிரகாரத்திலுள்ள நடராஜர் சன்னதியில் அடுத்தடுத்து இரண்டு நடராஜர்கள் சிவகாமி அம்பிகையுடன் இருக்கின்றனர். இதில் பிரதான நடராஜருக்கு அருகில் இருக்கும் மற்றொரு நடராஜரின் பாதத்திற்கு கீழே பூதகணம் ஒன்று சுவாமியின் நடனத்திற்கேற்ப இசைக்கருவி வாசித்தபடி இருக்கிறது.
பிராணநாதர் கோயில் பிரகாரத்தில் சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என இரு தீர்த்தங்களும் அருகருகில் இருக்கிறது. சிவனது இரண்டு கண்களாக இருக்கும் சூரிய, சந்திரர்களே இங்கு சிவனை குளிர் விப்பதற்காக தீர்த்தமாக இருப்பதாக சொல்வதுண்டு. சுவாமிக்கு இந்த இரு தீர்த்தத்தையும் சேர்த்தே அபிஷேகம் செய்கின்றனர். சிவன் சன்னதி கோஷ்டத்தில் விஷ்ணு துர்க்கை இருக்கிறாள். இது தவிர சிவதுர்க்கை சோமாஸ்கந்தர் சன்னதியின் பின் புறத்தில் காட்சி தருகிறாள். இவ்விருவரின் பாதங்களுக்கு கீழேயும் மகிஷாசுரன் கிடையாது. காவேரி, சிவன் கோஷ்டத்தில் துர்க்கைக்கு அடுத்து சிலை வடிவில் இருக்கிறாள். ஆடி பதினெட்டாம் பெருக்கின் போது இவளுக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.
காளி, பிரம்மா, விஷ்ணு, அகத்தியர். சூரியன், அம்பாள் ஆகாசவாணி, பூமாதேவி ஆகியோரால் பூஜிக்கப்பட்ட ஸ்தலம். இங்கு முருகன்  சண்முகர்  என்ற திருநாமத்துடன் அருள் பாலிக்கிறார். பதினோறாம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனால் திருப்பணி செய்யப்பட்டுள்ள தலம். திருவாவடுதுறை ஆதீனத்துக்கு மேற்பார்வையில் நடந்து வரும் கோயில் இது.  
      
பிரார்த்தனை : நவகிரக தலங்களில் சூரிய தலமான சூரியனார் கோயிலுக்கு செல்லும் முன்பு இத்தலத்துக்கு வந்து வழிபட வேண்டும் என்பது முக்கியமாதலால் நவகிரக தோஷம் உள்ள பக்தர்கள் இத்தலத்தில் வந்து வழிபட்ட பின்னரே சூரியனார் கோயில் செல்கின்றனர். தீர்க்க சுமங்கலி பாக்கியம் திருமணம் ஆன பெண்கள் அம்பாள் கையிலிருந்தே திருமாங்கல்ய கயிறு வாங்கி அணிந்து கொள்வது இத்தலத்தில் மிகவும் விசேசம். தவிர நவகிரக தோஷம், பெண்கள் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சுமங்கலி பாக்கியம், சத்ருபயம் (எதிரிகள் பயம்) நீக்கம்பெறல்,  திருட்டுபயம் விடுபடுதல் ஆகியவற்றுக்காக பக்தர்கள் பெருமளவில் இத்தலத்தில் வழிபாடு செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன் : தொடர்ந்து பதினொன்று ஞாயிற்றுக் கிழமைகள் மதியம் 12 மணிக்கும் 12.30 க்கும் இடையில் வெள்ளெருக்கு இலையில் தயிர் சாதம் நைவேத்தியம் செய்து அங்கு கோயில் பிரகாரத்தில் நடைபெறும் வழிபாடுகளிலும் பங்கு பெற வேண்டும். இப்படி செய்தால் நவகிரக தோஷம் எல்லாவிதமான வியாதிகளிலிருந்தும் விடுபடலாம். தொடர்ந்து ஐந்து வெள்ளிக் கிழமைகள் மங்களாம்பிகையை ஆராதிக்கும் பக்தர்களுக்கு மாங்கல்ய தோஷம் ராகு, கேது சனி முதலிய கிரக தோஷங்களும் விலகி திருமணத்திற்கு உரிய தடைகளும் நீங்கி மாங்கல்ய பாக்கியம் உண்டாகும். அம்மனுக்கு திருமாங்கல்யம், புடவை சாத்தி சுவாமிக்கு வஸ்திரம் படைத்து அபிசேகம் செய்து வழிபாடு செய்து ஐந்து சுமங்கலி பெண்களுக்கு ஜாக்கெட் துணி மஞ்சள் குங்குமம், பூ வெற்றிலை, பாக்கு, சீப்பு, கண்ணாடி வளையல், மாங்கல்ய கயிறு தட்சிணை வைத்து கொடுத்து ஆசி வாங்குதை நேர்த்திகடனாக பக்தர்கள் செய்கிறார்கள். சுவாமிக்கு நல்லெண்ணெய், மா பொடி, திரவிய பொடி, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், தேன்,பால், தயிர், பழவகைகள், இளநீர், சந்தனம் விபூதி ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். கலசாபிசேகம் செய்யலாம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். 
     
1. இந்த ஊரின் பெயர் மங்கலக்குடி
2. அம்பாள் பெயர் மங்களாம்பிகை
3. இக்கோயில் விமானம் மங்கள விமானம்
4. இத்தலத்தின் தீர்த்தத்தின் பெயர் மங்கள தீர்த்தம்
5. இத்தலத்து விநாயகர் பெயர் மங்கள விநாயகர் என்பதால் இத்தலம் மங்களமே உருவாக இருப்பதால் மங்கள ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

கிரகங்கள் வழிபட்ட சிவன் : ஒரு சமயம் காலமாமுனிவருக்கு உண்டாகவிருந்த நோயை நவக்கிரகங்கள் தடுத்ததால் அந்நோய் கிரகங்களுக்கு பிடிக்கும் படி பிரம்மா சாபம் கொடுத்தார். எனவே அவர்கள் பூலோகத்தில் இத்தலம் வந்து சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருந்த சிவனை வேண்டி தவமிருந்து சாப விமோசனம் பெற்றனர். இவ்வாறு கிரகங்களின் தோஷம் போக்கிய சிவனாக இத்தலத்தில் சிவன் அருளுகிறார்.

நின்ற லிங்கம் : பொதுவாக கோயில்களில் சிவலிங்கத்தில் ஆவுடையாரை விட சற்று உயரம் குறைந்ததாகத்தான் பாணம் இருக்கும். ஆனால் இக்கோயிலில் பாணம் ஆவுடையாரைவிட உயர்ந்ததாக இருக்கிறது. அகத்தியர் இத்தலத்திற்கு வந்த போது அவருக்கு சுவாமி உயர்ந்தவராக காட்சி தந்தாராம். இதன் அடிப்படையில் பாணம் மட்டும் பெரிதாக இருப்பதாக சொல்கிறார்கள். குள்ள முனிவரான அகத்தியர் சுவாமியின் பாணத்தின் மீது தன் கையை உயர்த்தி தான் மலர் வைத்து பூஜித்தாராம்.

முதல் கோயில் : கிரகங்கள் வழிபட்ட இத்தலத்தில் நவக்கிரகத்திற்கு சன்னதி கிடையாது. இங்கிருந்து சற்று தூரத்தில் நவக்கிரக திசையான வடகிழக்கில் கிரகங்களுக்கென தனிக்கோயிலே (சூரியனார் கோயில்) அமைந்திருக்கிறது. மொத்தத்தில் ஒரே கோயிலே இவ்வாறு இரட்டை கோயிலாக தனித்தனியே அமைந்திருக்கிறது. இதில் பிராணநாதர் கோயிலே பிரதான கோயில் ஆகும். கிரக தோஷம் உள்ளவர்கள் முதலில் பிராணநாதரை வழிபட்டு அதன் பின்பே சூரியனார் கோயிலில் வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.

எருக்கு இலையில் தயிர் சாத பிரசாதம்: நவக்கிரகங்கள் இங்கு சிவனுக்கு எருக்க இலையில் தயிர் சாத நைவேத்யம் படைத்து வழிபட்டதாக ஐதீகம். எனவே இக்கோயிலில் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் உச்சிகால பூஜையின் போது உப்பில்லாத தயிர் சாதத்தை சுவாமிக்கு நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர். பித்ரு தோஷம் (முன்னோர்களுக்கு முறையான தர்ப்பணம் போன்ற சடங்குகள் செய்யாதவர்கள்) உள்ளவர்கள் சுவாமிக்கு தயிர்சாத நைவேத்யம் படைத்து வழிபடுகிறார்கள்.

மரகத லிங்கம் : நடராஜர் சன்னதியில் மரகத லிங்கம் ஒன்று இருக்கிறது. தினமும் உச்சிக்காலத்தில் மட்டும் இதற்கு பூஜைகள் செய்கின்றனர். அப்போது வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு நைவேத்யம் படைத்து வலம்புரி சங்கில் பால், பன்னீர், தேன், சந்தனம் ஆகிய நான்கு திரவிய அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேக தீர்த்தத்தை பருகினால் நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.

தாலி தரும் தாய் : அம்பிகை மங்களாம்பிகை தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி அருளுகிறாள். இவளே இங்கு வரப்பிரசாதியாவாள். இவளது பெயரிலேயே கோயிலும் அழைக்கப்படுகிறது. அம்பிகையின் வலது கையில் எப்போதும் தாலிக்கயிறு அணிவிக்கப்பட்டிருக்கிறது. அம்பிகையை வழிபடும் பெண்களுக்கு இதையே பிரசாதமாக கொடுக்கின்றனர். இதனால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையும் திருமணமான பெண்கள் நீண்டகாலம் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர் என்பது நம்பிக்கை. இந்த அம்பிகை தன்னை வேண்டுபவர்களுக்கு தாலி தரும் தாயாக இருந்து அருளுகிறாள். சுமங்கலிப்பெண்கள் அம்பிகையிடம் இருந்து தாலியை வாங்கி தங்கள் கழுத்தில் அணிந்து கொண்டு ஏற்கனவே அணிந்திருக்கும் தாலியை அம்பாள் பாதத்தில் வைத்து பூஜை செய்கின்றனர். இதனால் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சந்தன அலங்காரம் : நவராத்திரியின் போது கோயில்களில் அம்பாள் உற்சவர் சிலைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரங்கள் செய்வர். ஆனால் இங்கு மூலஸ்தானத்தில் இருக்கும் அம்பிகைக்கே அலங்காரம் செய்யப்படுகிறது. அப்போது இவளது சிலைக்கு வஸ்திரம், ஆபரணங்கள் என எதுவும் சாத்தப்படாமல் சந்தனக்காப்பு மட்டும் செய்யப்படுகிறது. அந்த சந்தனத்திலேயே பட்டுத் துணிகளுக்கு பயன் படுத்தப்படும் வண்ண சாயங்களை சேர்த்து வஸ்திரம் மற்றும் ஆபரணங்கள் அணிந்ததை போல அலங்கரிக்கின்றனர். சந்தனத்திலேயே இவ்வாறு அம்பிகை சர்வ அலங்காரத்துடன் காட்சி தருவதை காண கண் கோடி வேண்டும். ஒவ்வொரு வருடமும் தை மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையன்று முழுதும் அம்பிகையை சந்தனக்காப்பு அலங்காரத்தில் தரிசிக்கலாம். விசேஷ நாட்கள் தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் இந்த அலங்காரம் செய்யலாம்.  
      
ஸ்தல வரலாறு : பதினோறாம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரியாக இருந்த அலைவாணர் என்ற மந்திரி மன்னனிடம் அனுமதி பெறாமல் வரிப்பணத்தில் இக்கோயிலை கட்டினார். இதை அறிந்த மன்னன் கோபம் கொண்டு மந்திரியை சிரச் சேதம் செய்ய உத்தரவிட்டார்.  கொலையுண்ட மந்திரி தன்னை திருமங்கலக்குடியில் தகனம் செய்யுமாறு ஏற்கனவே கூறியிருந்ததால் அவரது உடல் திருமங்கலக்குடிக்கு எடுத்து வரப்பட்டது. ஊரின் எல்லைக்கு வரும் போது மந்திரியின் மனைவி மங்களாம்பிகை கோயிலில் சென்று தனது கணவரின் உயிரை திரும்ப தருமாறு வேண்டினார். அவளது பிரார்த்தனை பலிக்கும் என்று அசரீரி கேட்டது. அது படி மந்திரி உயிர் திரும்ப பெற்றார். மகிழ்ச்சியில் கோயிலுக்குள் சென்று பிராணநாதேசுவரரை கட்டிப்பிடித்து ஜீவதாயகன் என்று கூறி பூஜித்தார். அன்று முதல் இங்குள்ள பிம்பமானது பிராணநாதேசுவரன் (ஜீவதாயகன்) என்ற பெயரால் அழைக்கப்பெற்றார். கணவர் உயிரை தந்த அம்பாள் மங்களாம்பிகை என்றழைக்கப்பட்டாள். இங்கு வந்து வழிபடும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உண்டாக வேண்டும் என்று மந்திரியும் மனைவியும் வேண்டிக்கொள்ள அதுபடியே சுவாமியும் அம்பாளும் அருளியதாக வரலாறு கூறுகிறது.
274 சிவாலயங்கள் :அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில்

மூலவர் : அருணஜடேசுவரர்
அம்மன் : பெரிய நாயகி
தல விருட்சம் : பனைமரம்
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
ஆகமம் பூஜை  : காமிய ஆகமம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : தாடகையீச்சரம், திருப்பனந்தாள்
ஊர் : திருப்பனந்தாள்
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : சம்பந்தர்

விரித்தவன் நான்மறையை மிக்க விண்ணவர் வந்திறைஞ்ச எரித்தவன் முப்புரங்கள் ளியலேமுல கில்லுயிரும் பிரித்தவன் செஞ்சடைமேல் நிறை பேரொலி வெள்ளந்தன்னைத் தரித்தவனூர் பனந்தாள் திருத்தாடனை யீச்சரமே.-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 39வது தலம்.

விழா : சித்திரையில் பிரமோற்சவம் நடைபெறுகிறது.  
      
சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். சித்திரை மாதம் சில நாட்களில் மூலவர் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுகின்றன. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.  
      
திறக்கும் நேரம்:காலை 06:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 05.30 மணி முதல் இரவு 09.30 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில், திருப்பனந்தாள் : 612 504 தஞ்சாவூர் மாவட்டம்.போன் : +91- 435 - 245 6047, 94431 16322, 99658 52734 
     
தகவல் : இத்தல விநாயகர் ஆண்ட விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். கொள்ளிடம் ஆற்றின் தென்பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் மேற்கு நோக்கிய ஏழு நிலை ராஜகோபுரம்.கிழக்கில் ஐந்து நிலை கோபுரம், மூன்று பிரகாரகங்களுடன் கோயில் உள்ளது. சிவனும் அம்மனும் கிழக்கு நோக்கி திருமண கோலத்தில் அருள் பாலிக்கின்றனர். தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான இக்கோயிலில் குமரகுருபரர் ஏற்படுத்திய காசிமடம் உள்ளது.

பிரார்த்தனை : நாக தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபாடு செய்வது சிறப்பு. குறிப்பாக பெண்களுக்கான தோஷ நிவர்த்தி தலம்.
     
ஸ்தல பெருமை : கீழப்பெரும்பள்ளம், காளகஸ்தி, திருநாகேஸ்வரம் ஆகியவை ஆண் நாகம் வழிபாடு செய்த தலமாகும். திருப்பனந்தாள் பெண் நாகம் (நாககன்னி) வழிபாடுசெய்த தலமாகும். மிகவும் சக்தி வாய்ந்த துர்க்கை இங்கு அருள்பாலிக்கிறாள். இரண்டு ஆண் பனைமரங்கள் கோயில் பிரகாரத்தில் உள்ளன. இத்தல இறைவனை பார்வதி, ஐராவதம், சங்கு கன்னன், நாகு கன்னன், நாக கன்னியர், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். ஆவணி அமாவாசையன்று இங்குள்ள பிரம தீர்த்தத்தில் இறைவன் எழுந்தருள்வார். சித்திரை மாதம் சில நாட்களில் மூலவர் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுகின்றன. ஆஸ்தான மண்டபத்தில் ஊர்த்துவ தாண்டவர் உள்ளார். திருநாவுக்கரசர், ஐயடிகள் காடவர்கோன், நம்பியாண்டார் நம்பி, அருணகிரிநாதர், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், செஞ்சடை வேதிய தேசிகர், தருமை சண்முகத்தம்பிரான் ஆகியோர் இத்தலத்தை போற்றி பாடியுள்ளனர்.

ஸ்தல வரலாறு : தாடகை என்ற பெண் இத்தல இறைவனை நாள்தோறும் பூஜித்து வந்தாள். ஒரு நாள் சிவனுக்கு மாலை சாத்தும் போது அவளது மேலாடை நழுவியது. ஆடையை ஒரு கையால் பற்றிக்கொண்டு மாலை சாத்த முடியாமல் அப்பெண் வருந்தினாள். அப்போது இறைவன் அந்த பெண்ணுக்காக இரங்கி தன் தலையை சற்று சாய்த்து கொடுத்தார். மங்கையும் மாலையை அணிவித்து விட்டு மகிழ்ச்சியுடன் வணங்கி சென்றாள். அன்று முதல் சிவலிங்க திருமேனி சாய்ந்தே இருந்தது. அப்போது இந்தக்கோயிலில் சோழ மன்னனின் திருப்பணி நடந்து கொண்டிருந்தது. சிவன் தலை சாய்ந்திருக்கும் செய்தியை மன்னன் கேள்விப்பட்டான். உடனே தனது படையை அனுப்பி சிவனது தலையை நிமிர்த்த ஏற்பாடு செய்தான். யானைகளை சிவலிங்கத்தோடு சேர்த்து கயிற்றால் கட்டி இழுத்தனர். ஆனால் முடியவில்லை. மனம் வருந்தினான் மன்னன். அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான குங்குலியக்கலய நாயானர் இத்தல சிவனை வழிபட வந்திருந்தார். அவருக்கும் இந்த செய்தி எட்டியது. நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதிய படி சிவனுக்கு குங்குலியப்புகையினால் தூபமிட்டார். பின் பூவினால் சுற்றப்பட்ட ஓர் கயிறை எடுத்து ஒரு முனையை சிவலிங்கத்தில் இணைத்து மற்றொரு முனையை தன் கழுத்தில் கட்டி பலமாக இழுத்தார். கயிறு இறுகியதால் இவரது உயிர் போகும் நிலை ஏற்பட்டது. ஆனால் நாயனார் கவலைப்படவில்லை. தன் முழு பலத்தையும் கொண்டு இழுத்தார். இவரது அன்புக்கு கட்டுப்பட்டார் சிவன். இதற்கு மேலும் நாயனாரை இறைவன் சோதிக்க விரும்பவில்லை. சிவலிங்கம் நேரானது. குங்குலியக்கலயனாரின் பக்தியையும் இறைவனிடம் கொண்ட அன்பையும் கண்ட மன்னன் மகிழ்ந்தான். நாயனாருக்கு பல பரிசுகள் கொடுத்து கவுரவப்படுத்தினான்.
274 சிவாலயங்கள்:அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில்

மூலவர் : பாலுகந்தநாதர்
அம்மன் : பெரியநாயகி
தல விருட்சம் : அத்தி
தீர்த்தம் : மண்ணியாறு
பழமை :  2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : வீராக்கண், திருஆப்பாடி
ஊர் : திருவாய்பாடி
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : திருநாவுக்கரசர்
      
ஆதியும் அறிவுமாகி அறிவுனுட் செறிவுமாகிச் சோதியுட் சுடருமாகித் தூநெறிக்கு ஒருவனாகிப் பாதியிற் பெண்ணுமாகிப் பரவுவார் பாங்கராகி வேதியர் வாழும் சேய்ஞல் விரும்பும் ஆப்பாடியாரே-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 40வது தலம்.
 
விழா : சிவராத்திரி அமாவாசையில் சண்டேஸ்வரர் பிரமோற்சவம் கொண்டாடப்படுகிறது.  
      
திறக்கும் நேரம்:காலை 07:00 மணி முதல் 09:00 மணி வரை, மாலை 05:00 மணி முதல் இரவு 07.30 மணி வரை திறந்திருக்கும். 
    
முகவரி : அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில் திருவாய்ப்பாடி - 612 504. திருப்பனந்தாள் போஸ்ட். திருவிடைமருதூர் வட்டம். தஞ்சாவூர் மாவட்டம்.போன்:+91- 94421 67104
 
தகவல் : முன் மண்டபம் வவ்வால் நெற்றி அமைப்புள்ளது. வலப்பக்கத்தில் அம்மன் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது.
மகா மண்டபத்தில் பைரவர், சூரியன், சனிபகவான், நடராஜர் சபை, பைரவர் சன்னதிகள் உள்ளன.

ஸ்தல பெருமை : அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர் இவர். அருகிலுள்ள சேய்ஞலூர் இவரது அவதார தலமாகவும் திருவாய்ப்பாடி லிங்கம் அமைத்து வழிபட்டு முக்தி பெற்ற தலமாகவும் போற்றப்படுகிறது. மூலஸ்தானத்தின் அருகிலேயே சண்டிகேஸ்வரர் அருள் பாலிப்பது சிறப்பு.
 
ஸ்தல வரலாறு : எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக பிறந்தவர் விசாரசருமன். இவர் தன் இளம் வயதில் அனைத்தும் கற்றார். ஏழாவது வயதில் குல முறைப்படி உபநயனம் நடந்தது. சிவனே அனைத்தும் என நினைத்து அதன்படி வாழ்ந்து வந்தார். ஒரு நாள் கன்றுக்குட்டி தன்னை மேய்க்கும் இடையனை முட்ட பாய்ந்தது. உடனே அவன் கம்பால் அடித்தான். இதைக்கண்ட விசாரசருமன் தானே அப்பசுக்களை மேய்த்தான். தாயன்புடன் இவன் மேய்த்ததால் முன்னை விட அதிக பால் கொடுத்தது. விசாரசருமன் எப்போதும் சிவசிந்தனையிலேயே இருந்ததால் மண்ணியாற்றங்கரையில் வெண் மணலால் ஆத்திமர நிழலின் கீழ் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தான். அதற்கு பசுக்கள் சொரியும் பாலை அபிஷேகம் செய்தான். இருந்தாலும் பசுவின் சொந்தக்காரருக்கு சரியான அளவு பால் கிடைத்து வந்தது. விசாரசருமரின் இந்த செயலை பார்த்த சிலர் வேள்விக்கு உபயோகப்படுத்தும் பாலை வீணாக்குவதாக கூறினர். இவனது தந்தையும் இதை கேள்விப்பட்டு மறைந்திருந்து நடப்பதை பார்த்தார். இதையெல்லாம் அறியாத விசாரசருமன் எப்போதும் போல் நீராடி விட்டு தன் பூஜைகளை தொடர்ந்தான். பசுவின் பாலால் அபிஷேகமும் செய்தான். இதைப்பார்த்த தந்தை அவனை அடித்ததுடன் பால் குடங்களையும் தட்டி விட்டார். சிவ பூஜையில் ஆழ்ந்திருந்த விசாரசருமன் பூஜைக்கு இடையூறு செய்தவரை ஒரு கோலால் தாக்க அதுவே மழுவாக மாறி கால்களை வெட்டியது. கால்கள் வெட்டப்பெற்றவர் தன் தந்தை என்பதை அறியாத விசாரசருமன் மீண்டும் சிவ பூஜையில் ஆழ்ந்தார். இதைக்கண்ட சிவபெருமான் பார்வதியுடன் தரிசனம் தந்து என் மீது கொண்ட பக்தியால் தந்தையின் கால்களை வெட்டினாய். இனி நானே உனக்கு தந்தையாவேன் என கூறி தன் கழுத்திலிருந்த கொன்றை மாலையை விசாரசருமனுக்கு சூட்டி சண்டிகேஸ்வரர் ஆக்கினார். இறைவன் விசாரசருமன் அபிஷேகம் செய்த பாலை விரும்பி ஏற்றதால் பாலுகந்தநாதர் ஆனார். விசாரசருமன் "ஆ'(பசு) மேய்த்த தலமாதலால், "ஆப்பாடி' ஆனது.
மனவலிமை பெற!

ஸிம்ஹீம் ஸிம் ஹமுகீம் பகவத;
ஸ்ரீபைரவஸ்யோல்லஸத்
சூல ஸ்தூல கபால பாச டமரு
வ்யக்ரோக்ர ஹஸ்தாம்புஜாம்
தம்ஷ்ட்ராகோடி விசங்கடாஸ்ய
குஹராம் ஆரக்த நேத்ரத்ரயீம்
பாலேந்து த்யுதிமௌளிகாம் பகவதீம்
ப்ரத்யங்கிராம் பாவயே

அன்பரிடம் பேரன்பு கொண்டவள் பிரத்யங்கிரா.இவளைத் துதிப்பவர்க்கு பகை,எதிர்ப்பு, போன்றவை தாமாகவே விலகும்.மனோபலம் மிகும். தினமும் காலையில் குளித்துவிட்டு மனதில் ஸ்ரீப்ரத்யங்கிரா தேவியை எண்ணிக்கொண்டு 108 முறை(குறைந்தது 12 முறை)இந்தத் துதியைச் சொல்லவும்.அஷ்டமி,அமாவாசை தினங்களில் அம்பிகைக்கு செவ்வரளி அல்லது சிவப்பு மலர்களால் மாலை சூட்டி அர்ச்சிப்பது சிறப்பு.
ஆண்டாளுக்கு வயது 5020!

ஆடிதோறும் பூரநட்சத்திரம் வந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் ஆண்டாள் அவதரித்த பின் தான் அந்நாளுக்கு தனிச்சிறப்பு உண்டானது. அவள் பூமிப்பிராட்டியின் அம்சம். கிணற்றில் விழுந்த குழந்தையைக் காக்க எண்ணிய தாய் தானே கிணற்றுக்குள் குதிப்பதைப் போல பாசம் ஆசை  என்னும் கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருக்கும் உயிர்களை  காப்பாற்றி பரந்தாமனிடம் சேர்க்க பூவுலகில் அவதரித்தாள்.

பிறந்த வருடம் : ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள நந்தவனத்தில் ஒரு துளசிச் செடியின் அடியில் கலியுகம் பிறந்து 98வதாக நிகழ்ந்த நளவருடத்தில் ஆண்டாள் அவதரித்தாள். ஆடிமாதம் வளர்பிறை பஞ்சமி திதியும் பூரநட்சத்திரமும் செவ்வாய்க்கிழமையும் கூடிய நன்னாளில் பெரியாழ்வார்  அவளைக் கண்டெடுத்தார். தற்போது கலியுகம் 5117 நடக்கிறது. இவ்வகையில் ஆண்டாளுக்கு இவ்வாண்டு 5020 வது பிறந்த நாள். தான் பூஜித்து  வந்த வடபத்ரசாயி (ஸ்ரீவில்லிபுத்தூர் மூலவர்) குழந்தையை எடுத்துச் சென்றார். அவளுக்கு கோதை என்னும் பெயரிட்டு வளர்த்து வரும்படி அவர்  அருள்புரிந்தார். கோதை என்றால் நல்வாக்கு அருள்பவள் எனப்பொருள். ஆண்டாள் பெருமாளிடம் கொண்ட பக்தி காதலாக மாறியது. அவரையே தன் கணவனாக நினைத்து வாழத் தொடங்கினாள். கண்ணனோடு வாழ்ந்த கோபியர்களில் ஒருத்தியாக தன்னைக் கருதிக் கொண்டாள். ஸ்ரீவில்லி புத்தூரை கண்ணன் வசித்த ஆயர்பாடியாக கற்பனை செய்து அங்குள்ள பெண்களை கோபியராகச் சித்தரித்து அனைவருமாக இணைந்து பாவை நான்பு நோற்பதாக முப்பது பாடல்கள் எழுதினாள். அதுவே திருப்பாவை என்னும் இனிய நூல் ஆயிற்று.
ஆடியில் கூழ் வார்த்தலுக்கும் அம்மனுக்கும் என்ன தொடர்பு?

ஆடி மாதம் வந்து விட்டால் போதும் சின்னஞ்சிறிய அம்மன் கோயிலில் கூட கூழ் வார்த்தல் என்பது விமரிசையாக நடக்கும். கூழ் வார்த்தலுக்கும் அம்மனுக்கும் என்ன தொடர்பு? ஜமதக்னி முனிவரும் அவர் மனைவியான ரேணுகா தேவியும் இல்லறத்தை நல்லறமாக நடத்தி வந்தனர். தன்னுவன், அனுவன், விஸ்வாவசு, பரசுராமன் என நால்வர் பிறந்தார்கள். அதன் பின் ஒருசமயம் கார்த்தவீரியனின் பிள்ளைகள் ஜமதக்னி முனிவரிடம் பகை  கொண்டு அவரைக் கொன்று விட்டார்கள். கணவரை இழந்த ரேணுகா தேவி உயிர் வாழ விரும்பாமல் தீயில் இறங்கினாள். அப்போது இந்திரன் வருணனை அழைத்து மழை பொழியச் செய்தான். தீ அணைந்தது. ஆனால் அதற்குள் ரேணுகாதேவியின் ஆடைகள் எல்லாம் எரிந்து போய் உடலில் தீக்கொப்புளங்கள் உண்டாயின. அவள் ஆடை இல்லாத நிலையில் காட்டில் இருந்த வேப்பிலையைப் பறித்து ஆடை போல் அணிந்து கொண்டாள். இதுவே அம்மனுக்கு வேப்பிலை ஆடை அணியும் வழக்கம் உருவான வரலாறு. வேப்பிலை ஆடையில் புறப்பட்ட ரேணுகா தேவி காட்டில் வாழ்ந்தவர்களிடம் பசிக்கிறது என உணவு கேட்டாள். அங்கிருந்தவர்கள் சற்று விலகி நின்று அம்மா! நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள். நீயோ அந்தணப் பெண்ணைப் போலத் தோற்றமளிக்கிறாய். உனக்கு எங்கள் உணவைத் தரக் கூடாது. அதற்குப் பதிலாக பச்சரிசி மாவு வெல்லம், பானகம், இளநீர் இவற்றைப் பெற்றுக் கொள் என்று அளித்தனர். இந்த பச்சரிசிமாவையே திருநெல்வேலி மாவட்ட கிராமங்களில் துள்ளு மாவு என்கிறார்கள். உரலில் இட்டு இடிக்கும் போது  துள்ளிக்குதிப்பதால் இந்தப் பெயர் வந்தது. அரிசி மாவு கொண்டு ரேணுகா கூழ் காய்ச்சிக் குடித்து பசியாறினாள். அவர்கள் தந்ததைக் கொண்டு பசியாறிக் கொண்ட ரேணுகாதேவி சலவைத் தொழிலாளர்கள் வாழும் பகுதிக்கு வந்து அவர்கள் அளித்த ஆடைகளை அணிந்து கொண்டாள். அப்போது ரேணுகாதேவியின் மனதில் மீண்டும் துயரம் எழுந்தது. கணவரை எண்ணிக் கண்ணீர் சிந்தினாள். சிவபெருமான் அவளுக்கு காட்சியளித்து ரேணுகாதேவி! சக்தியின் அம்சம் நீ ! மனித குலத்தை தீமையில் இருந்து காப்பாற்றும் சக்தியை உனக்கு அளிக்கிறேன். நீ கொண்ட கொப்புளங்கள் மக்களுக்கு அம்மைக் கொப்புளங்களாக ஆகும். நீ அணிந்த வேப்பிலை ஆடையே அந்த துன்பத்தை நீக்கும் மருந்தாக அமையும். நீ உணவாகக்  கொண்ட பானகம், இளநீர், பச்சரிசி மாவு, வெல்லம் ஆகியவற்றை பக்தர்கள் நைவேத்யமாகப் படைப்பார்கள். உன்னை நாடி வழிபடுவோரின் துயரத்தை நீக்கு! என்று வரம் அளித்து மறைந்தார். அதன் பின் ரேணுகா தேவி முத்துமாரி எனப் பெயர் பெற்றாள். இந்த நிகழ்ச்சி மழைக்காலத்தின்  தொடக்கமான ஆடி மாதத்தில் நடந்தது. அதன் காரணமாகவே மாரியம்மன் கோயில்களில் ஆடி மாதத்தில் கூழ் வார்த்தலும் பெண்கள் வேப்பிலை  ஆடை கட்டி வலம் வரும் வேண்டுதலும் நடக்கின்றன. ஆகாய மழையும் அருள் மழையும் பொழியுமாறு அன்னை மாரியம்மன் புனிதமான ஆடி மாதத்தில் வேண்டுவோம்.
இன்று முதல் எட்டு நாட்களுக்கு  அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்.

1. கஜலட்சுமி : நான்கு கரங்களுடனும் அதில் இரு கைகள் தாமரை மலரை ஏந்த ஒரு கரம் உன்னதமான அபய முத்திரை அளிக்க நூற்றெட்டு இதழ்த் தாமரை மலரில் வசிப்பவள். வெளுத்த திருமேனி இவளுடையது பேரொளிப் பிழம்பு என விளங்கும் பேரழகு கொண்டவள் பல வகைப்பட்ட அணிமணிகளும் பூண்டு தூய ஆடையும் அணிந்தவள். இவளின் இருபுறங்களிலும் சாமரமேந்தித் தோழியர் பணி செய்யப்பட்டாடை புனைந்து அது அவளது திருவடிகள் வரை தொங்கும். இதுவே கஜலட்சுமியின் திரு அம்சமாகும்.
காவிரி வடகரை தலங்கள்

பதினான்காவது தலம்

சீகாழி தற்போது சீர்காழி

மூலவர்                        -  பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர்,
                                           சட்டைநாதர்
அம்பாள்                       -  பெரியநாயகி என்கிற
                                           திருநிலைநாயகி
தலமரம்                       -  மூங்கில் , பாரிஜாதம் ,
                                           பவளமல்லி
தீர்த்தம்                         -  பிரம்மதீர்த்தம் முதலான 22
                                           தீர்த்தங்கள்
புராண பெயர்              -   பிரம்மபுரம், சீகாழி
தற்போதைய பெயர்  -   சீர்காழி
மாவட்டம்                    -   நாகப்பட்டினம்
மாநிலம்                        -   தமிழ்நாடு
பாடியவர்கள்               -  சம்பந்தர், மாணிக்கவாசகர்

 * தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 14வது தலம்
* சம்பந்தர் பிறந்த தலம்
* சம்பந்தர் பிரம்மதீர்த்தக் கரையில் உமையம்மை முலைப்பால் உண்ட தலம்
* சம்பந்தர் முதல் தேவார பதிகம் பாடிய தலம்
* பிரம்மன் வழிபட்ட தலம் ( பிரம்மபுரம் )
* சிவனார் மூங்கில் காட்டில் காட்சியளித்த தலம் ( வேணுபுரம் )
* சூரனுக்கு பயந்த தேவர்கள் அடைக்கலமான தலம் ( புகலி )
* வியாழன் வழிபட்டு குருத்தன்மை பெற்ற தலம் ( வெங்குரு )
* பிரளய காலத்தில் சிவனார் உமையம்மையுடன் 64 கலைகளை ஆடையாகவும், சுத்தமாயைத் தோணியாகவும் கொண்டு வந்து தங்கிய தலம் ( தோணிபுரம் )
* வராகமூர்த்தி வழிபட்ட தலம் ( பூந்தராய் )
* ராகு வழிபட்ட தலம் ( சிரபுரம் )
* சண்பைப்புல்லால் மாண்ட யாதவ குலத்தோர் பழி பற்றாதிருக்க கண்ணன் வழிபட்ட தலம் ( சண்பை )
* நடராஜருடன் வாதாடிய பாவம் போக காளி வழிபட்ட தலம் ( sri காளி - சீகாழி - சீர்காழி )
* மச்சகந்தியை கூடிய கொச்சையாம் பழிச்சொல் பராசரர் வழிபட்ட தலம் ( கொச்சைவயம் )
* மலத்தொகுதி நீங்க உரோமசர் வழிபட்ட தலம் ( கழுமலம் )
* புறா வடிவில் வந்த அக்னியால் சிபிமன்னன் நற்கதி அடைந்த தலம் ( புறவம் )
* இத்தலத்தில் 22 தீர்த்தங்கள் உள்ளன. அதில் பிரம்மதீர்த்தம், காளி, பராசர, புறவநதி, கழுமலநதி, விநாயகநதி ஆகியவை முக்கிய தீர்த்தங்கள் ஆகும்.  
* இந்திரனுக்காக இத்தல இறைவன் மூங்கில் மரமாக காட்சி கொடுத்ததால் மூங்கில் தல விருட்சமாக உள்ளது.  
* மூலஸ்தானத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். பிரம்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, மூலவர், உற்சவர் என அனைவருமே மூலஸ்தானத்தில் கைலாய காட்சியில் உள்ள ஒரே தலம் சீர்காழி தான்.
* விநாயகர்  ரொணம் தீர்த்த விநாயகர்  என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்
* கணபாத நாயனார் தொண்டு செய்து வாழ்ந்த தலம்
* முருகன் , சூரியன் , சந்திரன் , அக்னி , ஆதிசேஷன் , கேது , வியாசர் முதலியோர் வழிபட்டு அருள் பெற்ற தலம்
* வழக்குகளில் பிரச்னை உள்ளவர்கள் , குழந்தைப்பேறு வேண்டுவோர்கள் வழிபடவேண்டிய தலம்
* பிரம்மபுரீஸ்வரர் - லிங்கவடிவம் ,
தோணியப்பர் ( ஞானப்பால் தந்தவர் ) - குருவடிவம் ,
சட்டைநாதர் - சங்கமவடிவம்
* வாமனர் செருக்குற வடுகநாதர் மார்பிலடித்து வீழ்த்தினார். பின் லட்சுமியின் வேண்டுகோளுக்கிணங்க விஷ்ணுவை உயிர்ப்பித்தார். விஷ்ணுவின் வேண்டுகோளுக்கிணங்கி எலும்பை கதையாகவும் , தோலை சட்டையாகவும் போர்த்து அருள் செய்த வடிவமே சட்டைநாதர் வடிவமாகும்
* கருவறை வெளிச்சுவரில் சம்பந்தர் வரலாறு ஓவியமாக
* சம்பந்தர் மூல மற்றும் உற்சவ மூர்த்தங்கள். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், வெளியே தனியாக உள்ளனர்.
* சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் நடுவே சம்பந்தர் சன்னதி உள்ளது
* மூன்று அடுக்குகளாக கோயில் ( பிரம்மபுரீஸ்வரர் , மலை மேல் தோணியப்பர் , அவருக்கு மேல் சட்டைநாதர் தனி சந்நிதியில் )
* சோமாஸ்கந்தர் சந்நிதி தனியழகுடன்
* வெள்ளிக்கிழமைகளில் இரவு 10மணிக்கு மேல் சட்டைநாதருக்கு சிறப்பு பூஜைகள்
* மூலவர் , அம்பாள் இருவரும் கிழக்கு நோக்கி
* அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாக
* சக்திபீடங்களுள் ஒன்றாக கூறப்படுகிறது. இத்தல அம்மன் மகாலட்சுமி சொரூபமாக சக்தி பீடத்தில் 11வது பீடமாக அமர்ந்துள்ளார்
*பிரம்மனுக்கு ஏற்பட்ட அகங்காரம் நீக்கிய தலம்.
* பிரளய காலத்தில் பார்வதிக்கு ஞான உபதேசம் செய்த தலம்.
* அதிக தேவார பதிகங்கள் கொண்ட தலம்
* ஆஸ்தான மண்டபம் , வலம்புரி மண்டபம் மிகவும் சிறப்பானவை
* வலம்புரி மண்டபத்தில் அஷ்ட பைரவர்களும் காட்சியளிக்கின்றனர். காசியை காட்டிலும் மிகப்பெரிய பைரவ க்ஷேத்திரம். இங்கு அசிதாங்க பைரவர், ருருபைரவர், சண்டபைரவர், குரோத பைரவர், உண்மத்த பைரவர், சம்ஹார பைரவர், பீஷண பைரவர், அகால பைரவர் என அஷ்ட பைரவர்களும் உருவமாக உள்ளனர்.   எனவே தான் காழியில் பாதி காசி என்பர். இவர்களது சன்னதிக்குள் சட்டை அணிய அனுமதியில்லை. அஷ்டமி திதிகளில் சிறப்பு பூஜை உண்டு.
* 18 சித்தர்களில் ஒருவரான சட்டை முனி சித்தர் இங்கு ஜீவ சமாதி ஆகி உள்ளார். சிவன் கோயில் பிரகாரத்தில் இவரது ஜீவ சமாதிக்கு மேல் ஒரு பீடம் உள்ளது. இங்கிருந்தபடியே உச்சியிலிருக்கும் சட்டைநாதரை தரிசிக்க முடியும். வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு இந்த பீடத்திற்கு அபிஷேகம் நடக்கும். இரவு 12 மணிக்கு இதற்கு புனுகு சட்டம் சாத்தி, வடை மாலை அணிவித்து, பாசி பருப்பு பாயசம் நைவேத்யம் செய்யப் படுகிறது
* இக்கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்ட குன்றுக்கோயிலாக விளங்குகிறது. கீழ் தளத்தில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி அருள்பாலிக்கின்றனர். இது லிங்க மூர்த்தம் எனப்படும். இவருக்கு 6 கால பூஜை நடக்கிறது. பிரம்மன் இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். இதனால் இத்தல இறைவன் பிரம்மபுரீஸ்வரர் ஆனார். நடு அடுக்கில், உமா-மகேஸ்வரர் உள்ளனர். இவரை "தோணியப்பர்' என அழைக்கிறார்கள். இவருக்கு 4 கால பூஜை நடக்கிறது. இந்தக் குன்றையும் . "தோணிமலை' என்கின்றனர்.
* தை அமாவாசை , வைகாசி மூலம் , ஐப்பசி சதயம் நாட்களில் சம்பந்தருக்கு சிறப்பு வழிபாடுகள்
* அம்பாளுக்கு ஆடிப்பூரம், நவராத்திரி காலங்களில் சிறப்பு வழிபாடுகள்
* சித்திரை திருவாதிரையில் பிரம்மோற்ஸவம். இதில் 2ம் நாள் சம்பந்தருக்கு அம்பாள் பால் தந்த உற்சவம் பிரம்ம தீர்த்தத்தின் கரையில் நடக்கிறது. அன்றைய தினம் ஞானசம்பந்தருக்கு நைவேத்யம் செய்த பாலை பிரசாதமாக சாப்பிட்டால் மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். மலைக் கோயிலில் அருள்பாலிக்கும் உமா-மகேஸ்வரருக்கு சித்திரை, ஆடி, ஐப்பசி, தை மாதப்பிறப்புகளிலும், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை மற்றும் சிவராத்திரி நாட்களிலும் தைலாபிஷேகம் நடைபெறும். ஆடிப்பூரம், நவராத்திரி. தை அமாவாசை, வைகாசி மூலம், ஆனி ரோகிணி, ஐப்பசி சதயம் ஆகிய நாட்களிலும் சிறப்பு பூஜை உண்டு.

தரிசன நேரம்

காலை 06:00 - 12:00 &
மாலை 04:00 - 09:00

தொடர்புக்கு

04364-270235 ,
94430 - 53195

மயிலாடுதுறையில் இருந்து 21 கிமீ தொலைவிலும் , சிதம்பரத்தில் இருந்து 19 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது இந்த சீர்காழி சிவத்தலம்.