வெள்ளி, 1 நவம்பர், 2019

திருக்களிற்றுப்படியார் பகுதி - 2

31 பற்றினுட் பற்றைத் துடைப்பதொரு பற்றறிந்து
பற்றிப் பரிந்திருந்து பார்க்கின்ற பற்றதனைப்
பற்று விடில் அந்நிலையே தானே பரமாகும்
அற்றமிது சொன்னேன் அறி.

உடல், கருவி, உலகு நுகர்ச்சிப் பொருள் ஆகியவற்றில் உயிருக்கு இயல்பாகப் படர்கின்ற பற்றினைத் துடைப்பதற்கு உரிய துணையாக இருப்பது திருவடி ஞானமே என்பதனை அறிந்து அதனையே பற்றி. அன்போடு கூடித் தன் முனைப்பை நெகிழவிடின் அந்நிலையிலேயே சிவப் பேரொளி தோன்றும். இதனை உனக்கு அறிவுறுத்தினேன் கேட்பாயாக.

யான் என்னும் அகப்பற்றும், எனது என்னும் புறப் பற்றும் உயிர்களுக்கு மேலும் மேலும் பிறப்பு இறப்புக்களை உண்டாக்கும் என்பது மேலோர்கள் அறிந்து அறிவித்த உண்மை. பற்றற்று இருத்தல் என்பது எளிதில் கைகூடும் அன்று என்பதனையும் அருளாளர்கள் உணர்ந்திருந்தார்கள். இழிந்த பொருள்களில் செல்லுகின்ற பற்றினை ஒழிப்பதற்கு உரிய உபாயம், உயர்ந்த பொருளின் இறுகப் பற்றிக் கொள்ளுவதே என்று அவர்கள் நமக்கு அறிவுறுத்தினாகள். இறைவன் திருவடியை விட உயர்ந்த பொருள் வேறு ஒன்றும் இல்லை. ஆதலால் அதனையே பற்றிக் கொள்க என அறிவுத்தினார்கள். அவ்வாறு பற்றிக் கொள்ளப்பட்ட செம்பொருளே உலகியல் பற்றுக்களை அறவே துடைத்து எறியும் என்பதனையும் உணர்த்தியருளினார்கள்.

திருக்குறளில் ,பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு (குறள் 350) என்று திருவள்ளுவ நாயனார் கூறியதும், திரு உந்தியாரில் பற்றை அறுப்பதோர் பற்றினைப்பற்றி என்று தொடங்கும் பாடலும் இந்தப் பாடலுக்கு முன்னோடியாக அமைந்தன.

பற்றினை ஒழிப்பதால்தான் மனிதனின் துயரம் தீரும் என்பதை எத்தனையோ சமயங்கள் பன்னெடுங்காலமாக எடுத்துரைத்து வந்திருக்கின்றன. அத்தகைய சமயங்கள் எல்லாம் துறவு நெறியை மிகவும் வலி யுறுத்தின. துறவு நெறியிலுங்கூடத் துறவிக்குத் தன் உடல் மீது பற்று இருத்தல் கூடாது என்பதற்காக உடலை வருத்தியும் ஒறுத்தம் பழகுதல் வேண்டும் என்று அவை கூறி வந்தன. சைவசமயத்திலோ இத்தகைய கடுமையான வழிகளிலே பற்றை அறுத்தல் வேண்டும் என்று கூறாமல் செம்பொருளைப் பற்றுவதன் மூலம் உலகியல் பற்றை விட்டொழிக்க முடியும் என்ற எளிய முறை உணர்த்தப்பட்டது. நான் பற்றினைத் துறக்கிறேன் என்று எண்ணுவதும் கூட  அகப்பற்றுக்கு இடம் கொடுக்கிறது. ஆதலால் அந்த நினைவும் பற்றறுக்க முனைவாருக்கு ஏற்படுதல் கூடாது. உறங்கினவன் கையிலிருந்த பொருள் தானாக நழுவிப் போய் விடுவது போலப் பற்றுக்கள் அகல வேண்டும். அது, தற்போதம் இழந்து உயிர் சிவஞானத்தின் ஒன்றிய போதுதான் கைகூடும் என்பது இந்தப் பாடலிலும் இதுபோன்ற சாத்திர தோத்திர நூற்களிலும் எடுத்துறைக்கப்பட்டுள்ளது.

மாணிக்கவாசகர் திருவாசகத்தில் ,
 பற்று ஆங்கு அவை அற்றீர் பற்றும் பற்று ஆங்கு அது பற்றி
நற்றாங்கதி அடைவோம் எனில் கெடுவீர் ஓடிவம்மின்
தெற்றார் சடைமுடியான் மன்னுதிருப் பெருந்துறை இறைசீர்
கற்றாங்கு அவன் கழல் பேணின ரொடுங் கூடுமின் கலந்தே
என்று அருளிச் செய்ததும் இங்குக் கருதத்தகுந்தது.

32 அறிவறிவாய் நிற்கில் அறிவுபலவாம் என்று
அறிவின் அறிவு அவிழ்த்துக் கொண்டு அவ் அறிவினராய்
வாழ்ந்திருப்பர் நீத்தோர்கள் மானுடரின் மாணவகா
தாழ்ந்தமணி நாவேபோல் தான்.

உயிர் தனது அறிவினாலேயே யாவற்றையும் அறிந்து கொள்ளுவேன் என்ற முனைப்போடு உலகத்துப் பொருள்களில் படியும் போது தனது முயற்சியில் தோல்வியடைகின்றது, ஏனெனில் உயிரின் அறிவு சிற்றறிவு. அது பொருள்களைப் பற்றும் பொழுது அவ்வப்பொருள்களில் அழுந்தி அதுவதுவாகக் கண்டு பண்முகப்பட்டுச் சிதறி ஓடுமேயன்றி, ஒரு முகப்பட்ட பேரறிவு உயிருக்கு வாய்ப்பதில்லை. இதனை ஞானாசிரியன் உணர்த்த, உணர்த்தியவாறே உணர்ந்து தன் முனைப்புக் கெடுமாறு திருவருள் ஞானத்தோடு ஒன்றி இருக்கப் பெறின் உலகப் பற்றினை நீத்தவர்கள் சிவமாம் தன்மை பெறுவார்கள். அகப்பற்று புறப்பற்று எனக் கூறப்படும் யான் எனது என்னும் செருக்கை  அறுத்தவர்கள் நிலத்தின் மீது தாழ வைக்கப்பட்ட மணியின் நாவைப்போல் அசையா திருப்பார்கள்.

புலன்வழி ஓடிப் பொருள்களைச் சேரும் உயிர் அறிவு ஒன்றைப் பற்றும் இயல்புடையதேயன்றி ஒருமுகப்பட்டு யாவற்றையும் ஒருங்கே அறியும் இயல்புடையது அன்று. எனவே மெய்ப்பொருளை அறிய விழையும் உயிர்கள் தமக்கென ஒரு முயற்சியின்றித் திருவருள் ஞானத்தைப் பற்றித் தற்போதம் கெட நிற்றல் வேண்டும் அவ்வாறு பற்று அறுத்தவர்களுக்கு சிவப் பேரின்பம் கிட்டுவதனால் ஆரவாரம் அடங்கி, நிலத்தில் பொருந்த வைக்கப்பட்ட மணியின் நாவைப் போலத் திருவருளை ஆதாரமாகக் கொண்டு பேரின்பத்தில் திளைத்திருப்பர்.

33 ஓசையெலாம்  அற்றால் ஒலிக்கும் திருச்சிலம்பின்
ஓசை வழியே சென்று ஒத்து ஓடுங்கின் ஓசையினின்
அந்தத் தானத்தான் அரிவையுடன் அம்பலத்தே
வந்து ஒத்தான் அத்தான் மகிழ்ந்து.

முந்திய பாடலிலே கூறப்பட்ட படி  உலகத்தின் ஆரவாரங்கள் ஒடுங்க இறைவனின் திருவடியிலே ஒற்றித்து நின்ற உயிருக்கு ஆனந்தப் பெருங்கூத்து ஆடும் பெருமானின் திருவடியிலே விளங்கும் சிலம்பின் ஓசை கேட்கும், அந்த ஓசையைப் பற்றிக் கொண்டே அதன் வழியே சென்றால் அதன் முடிவிலே சிவகாமியம்மை காணத் திருநடனம் புரிகின்ற அம்பலக் கூத்தன் விருப்பத்துடன் வெளிப்பட்டு இவ்வுயிருடனே நேர் படக் கூடியருளுவான்.

யோக நெறியில் நின்றார்க்கு அவர்களின் அகத்துட் கேட்கும் நுண் ஒலிகளாக மணி கடல் யானை வேய்ங்குழல் மேகம் வண்டு சங்கு முதலிய பலவகை ஒலிகள் திருமந்திரத்துள் (606)கூறப்படுகின்றன. கழறிற்றறிவார் நாயனாருக்கு ஒவ்வொரு நாளும் இயற்றும் பூசையின் முடிவிலே இறைவன் தன் பாதச் சிலம்பொலி கேட்குமாறு அருள் பாலித்தான் என்று பெரிய புராணம் கூறுகிறது சிலம்பு என்பது பரவிந்து என்றும் அந்தச் சிலம்பில் தோன்றும் ஒலி என்பது பரநாதம் என்றும் கூறுவர். திருச்சிலம்பு ஒசையைப் பற்றிச் செல்பவர்களுக்கு அதன் அந்தத்தில் இறைவன் திருவருளாகிய இவ்வுயிரை விருப்பத்தோடு நேர்பட்டு ஆட்கொள்ளுவான் என்று இப்பாடலில் உணர்த்தினார்.

34  சார்பு உணர்ந்து சார்பு கெட வொழுகின் என்றமையால்
சார்பு உணர்தல்  தானே தியானமுமாம் சார்பு
கெட வொழுகின் நல்ல சமாதியுமாம் கேதப்
படவருவது இல்லை வினைப் பற்று.

என்றென்றும் உயிர்களுக்கு உண்மையான பற்றுக்கோடாகிய கொழுகொம்பு இறைவனின் திருவடிகளே என்பதனை உணர்ந்து, அன் றாட வாழ்க்கையில் நாம் உறுதி  என்று சார்ந்து இருக்கின்ற எவையும் நமக்கு ஆதரவு அல்ல என்பதையும் உணர்ந்து உலகியல் சார்புகளை விட்டு ஒழிக்க வேண்டும். உண்மைச் சார்பை உணர்தல் தியானம் ஆகும்.

உலகியல் சார்பு விட்டு அகலத் தன் முனைப்பு அற்றுப் போனால் அதுவேஉயர்ந்த சமாதி நிலையுமாகும். இந்நிலை எய்திவர்களுக்கு வினையினால் வரும் துன்பங்கள் சார்வதில்லை.

முதலில் வருகிற சார்பு எவ்வுயிர்க்கும் எப்பொருட்கும் ஆதார மாய் உள்ள இறைவனின் திருவருளைக் குறித்தது. இரண்டாவது கூறப் படும் சார்பு உலகினில் நிலை இல்லாதவற்றை நிலையாகக் கொண்டு சார்ந்து நிற்கும் உயிரின் இயல்பைக் குறித்தது. திருவருட் சார்பை உணர்ந்த அளவிலே உலகியல் சார்பு கழன்று போகும். இதுவே இறைவனின் பெருங் கருணையை ஒரு போதும் மறவாமல்  உள்ளம் பொருந்துகிற தியானத்திற்கு இட்டுச் செல்லும். அப்போது நான் தியானிக்கிறேன் என்ற தன் முனைப்பும் கெடும் என்பது இரண்டாம் முறையாகச் சார்பு கெட ஒழுகின் என்ற சொற்றொடரால் குறிக்கப்பட்டது. இந்த நிலை பேரின்பச் சுடராக உள்ள சிவபெருமாளை உணர்ந்து அவனில் ஒடுங்கும் சமாதி நிலையைக் குறிக்கிறது. இந்த நிலை அடைந்தவர்களுக்குத் தொல்லை வல்விவைகளால் வரும் துயரங்கள் வரமாட்டா.

சார்பு உணர்ந்து சார்புகெட ஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு போய் (359) என்னும் திருக்குறளின் சொல்லும் பொருளும் இந்தப் பாடலில் ஆசிரியரால் எடுத்து ஆளப்பட்ட தோடு விரிவுரையும் தரப்பட்டுள்ளது என்பதை அறிந்து போற்றுக.

35 அன்றிவரும் ஐம்புலனும் நீயும் அசையாதே
நின்றபடியே நிற்க முன்னிற்கும் சென்று
கருதுவதன் முன்னம் கருத்தழியப் பாயும்
ஒரு மகள் தன் கேள்வன் உனக்கு

மாறி நின்று உன்னை மயக்கிடும் வஞ்சப் புலன்களின் வயப்பட்டு நீயும் உலகப் பொருள்களில் படிந்து துன்புறாதே. உயிர்க்கு உயிராய் உன்னோடு பொருந்தி உள்ள திருவருளை உள்ளவாறு உணர்ந்து, அதிலே ஒடுங்கி நின்ற படியே நிற்பாயாக. திருவருள் வயப்பட்ட நிலையில் அந்த ஒளிவளர் ஞானத்திற்கு முதல்வனாகிய சிவன் உனக்கு முன் தோன்றி அருள் பாலிப்பான்.

ஐம்புலன்களால் அலைக்கழிக்கப்படும் உயிர்கள் துன்பத்தையன்றி வேறு எதனையும் அறியமாட்டா. எனவே அப்பர் அடிகளும் துள்ளுவர் ஐவர் கள்வர் தூநெறிச் சேரல் ஒட்டார்என்று அருளினார். எறும்புகளால் பற்றப்பட்ட நாங்கூழ்ப் புழுவினைப் போல ஐம்புலன்களால் அலைக்கழிக்பட்டேன் என்று அருளினார்  மணிவாசகப் பெருமான் . புலன் வழிச் சேரும் உயிருக்கு உய்வில்லை என்பதனாலே அவற்றை மாறுபட்டு என்னை மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்து என்று குறித்தனர் பெரியோர். இவ்வாறு புலன்களுக்கு ஆட்படாமல் திருவருள் வழியிலே சோர்வின்றி நிற்றலை நின்றபடி நிற்றல் என்று குறித்தார்.

தத்துவங்களிலிருந்து நீங்கித் திருவருளோடு ஒன்றி உயிர் தன் முனைப்பு அற்ற போது ஒளிவளர் ஞானம் விளங்கித் தோன்றும். தன் முனைப்பற்ற உயிருக்குத் தூய்மையான ஞானத்தின் ஒரு முதலாகிய சிவ பெருமான் உயிரின் கருத்து அழியும் வண்ணம் அருள் பாலிப்பான்.

திருவருள் என்பது திருவடி ஞானம். அது குணமும் சிவபரம் பொருள் குணியும் ஆகும். இரண்டும் ஒன்றை விட்டு ஒன்று ஒரு காலத்தும் பிரிந்து நிற்பதில்லை. ஆதலால் ஞானமும் ஞானத்திற்கு முதலாகிய சிவமும் கருதுவதன் முன்னம் கருத்து அழியப் பாயும் ஒரு மகள் கேள்வன் என்று ஒருங்கு வைத்துக் கூறப்பட்டன.

36 உண்டெனில் உண்டாகும் இல்லாமை இல்லையெனில்
உண்டாகும் ஆனமையின் ஓரிரண்டாம் உண்டில்லை
என்னும் இவை தவிர்த்த இன்பத்தை எய்தும் வகை
உன்னில் அவன் உன்னுடனே யாம்.

கருவி கரணங்களால் அறியப்பட்டு உயிரால் உண்டு என்று காணப்படும் பொருள் சிவம் எனின் உண்மையில் அப்பொருள் நிலைத்ததன்று ஆகும் ஏனெனில் உயிரறிவினால் அறியப்படும் எப்பொருளும் அசத்துப்பொருளே ஆகும். சிவபரம் பொருள் கருவி கரணங்கள் இல்லாத நிலையில் அறியப்படுவது எனின் உயிர் கருவி கரணங்களின் துணையின்றி எதனையும் அறிய முடியாது. ஆதலின் சிவபரம் பொருளும் ஒரு காலும் அறியப்படாத பொருளே ஆகி இல்பொருளாய் முடியும். இந்த இரண்டினுள்ளும் அடங்காது உயிர் அறிவினால் உண்டு என்றும் இல்லை என்றும் கொள்ளப்படுவதற்கு அப்பால், திருவருளே கண்ணாகக் காணுமிடத்து இன்ப வடிவாகத்  தோன்றும் பொருளே சிவம். அவனைப் பேரன்பினால் நினைந்து போற்றுவாயானால் அவன் தன் பேரருளால் உன்னோடு இரண்டறக் கலந்து நிற்பான்.

உண்டு எனின் இல்லாமை உண்டாகும் என்ற சொற்களால் உயிர் இறைவனைத் தன் சிற்றறிவினால் அறிந்து உண்டு என்று கண்டு கொள்ளும் இயல்புகள் இறைவனுக்கு உண்டு எனில், அது சிவபரம் பொருளை இல்லாமையில் கொண்டு உய்த்துவிடும் என்று விளக்குகிறார். சுட்டறிவுக்குப் புலப்பட்டு உள்பொருளாகத் தோன்றுகின்ற யாவும் தோன்றி நின்று அழியும் தன்மை உடையன. இந்தக் கருத்து சிவப்பிரகாசத்தில், அறிவினால் அறிந்த யாவும் அசத்தாதல் அறிதி  என்று கூறப்படும். எனவே உயிர் அறிவால் உண்டு எனக் காணப்படுவது இல்லாமையில் முடியும்.

இல்லையெனில் இல்லாமை உண்டாகும் என்பது அடுத்த கருத்து. சிவபரம் பொருள் ஒருவாற்றானும் அறியப்படாத பொருள் என்று கொண்டாலோ, அல்லது கருவி கரணங்கள் அற்ற நிலையில் உயிரால் அறியப்படுவது என்று கொண்டாலோ அப்பொழுதும் அது இல்லையாய் முடியும். ஏனெனில் ஒருவாற்றானும் அறியப்படாத பொருளும் இல்பொருளே. கருவி கரணங்கள் கடந்த நிலையில் உயிருக்கு அறிவு நிகழ்வதே இல்லை. அந்நிலையில் உயிர் எதனையும் அறியாது. ஆகையால் இறை வனையும் அறியாது. அப்போதும் இல்லாமை தோன்றுகிறது.

இவ்வாறு அறியப்படு பொருளும், அறியவே முடியாத பொருளும் அகிய இரண்டு தன்மையும் கடந்து இவை தவிர்ந்த மூன்றாவது நிலையை ஆசிரியர் உணர்த்துகிறார். அது யாதெனின் இறைவன் திருவருளயே  பற்றி அவனையே இடையறாத பேரன்பினால் வழிபடுவாருக்கு அவன் தன் கருணைத்திறத்தினால் இரண்டறக் கூடி நின்று திருவருள் பாலிப்பான்.

சிவஞான போதத்தின் ஆறாம் சூத்திரம் இப்பாடலின் கருத்தினை, உணர்உரு அசத்து எனின் உணராது இன்மையின் இருதிறன் அல்லது சிவசத்து ஆம் என இரண்டு வகையின் இசைக்கும் மன்னுலகே என்று எடுத்துரைக்கும்.

37 தூல உடம்பாய முப்பத்தோர் தத்துவமும்
மூல உடம்பாம் முதல் நான்கும்  மேலைச்
சிவமாம் பரிசினையும் தேர்ந்துணர்ந்தார் சேர்ந்த
பவமாம் பரிசறுப்பார் பார்.

உடல் கருவி உலகு நுகர்ச்சிப் பொருள் என வகைப்படுத்தப்பட்ட பரு உடம்பைத் தந்து உயிரை வாழ்வியலில் நடத்தும் தத்துவங்கள் முப்பத்தொன்று. இந்த முப்பத்தொன்றினையும் செலுத்துவன விந்து (சத்தி) சதாசிவம் ஈசுவரம் சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் நான்கு. இந்த நான்கிற்கும் மேலாய் இவற்றுக்கு ஆதாரமாய் ஒப்பற்றதாய் விளங்குகின்றது. சிவ தத்துவம். இவ்வாறு தத்துவம் முப்பத் தாறையும் ஞான ஆசிரியன் தெரிவிக்க உணர்ந்து அவற்றின் இயல்புகளையும் அறிந்து தச காரியம் எனப்படும் பத்து வகைப் படி நிலைகளிலே முயன்று உண்மை உணர்ந்தவர்கள் பிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவார்கள்.

தத்துவங்கள் முப்பத்தாறு. அவை மண் முதல் சிவம் ஈறாய் பரு மையில் தொடங்கி மிக நுண்மையில் முடிவதாகக் கூறப்படும். இவை ஆன்ம தத்துவங்கள் இருபத்துநான்கு எனவும், வித்தியா தத்துவங்கள் ஏழு எனவும், சிவ தத்துவங்கள் ஐந்து எனவும் வகுத்துரைக்கப்படும். நுகர்வும் நுகர்வுக்குக் காரணமும் ஆகிய ஆன்ம தத்துவங்கள் போசயத் திருகாண்டம் எனவும், வித்தியா தத்துவங்கள் போக்கிய காண்டம் எனவும் முறையே வழங்கப்படும். இந்த முப்பத்தொரு தத்துவங்களும் இப்பாடலில் தூல உடம்பாய முப்பத்தொரு தத்துவமும் என்று குறிக்கப் பட்டன.

இவற்றைச் செலுத்துகிற தத்துவங்கள், இவற்றினும் நுண்ணிய தாய் உள்ளனவாகிய விந்து சதாசிவம் ஈசுரம் சுத்தவித்தை ஆகிய நான்கும்  மூல உடம் பாய முதல் நான்கும் எனப்பட்டன.

இவை யாவற்றுக்கும் மேலாக, இவற்றுக்கு ஆதாரமாக விளங்கும் சிவதத்துவம் மேலைச் சிவமாம் பரிசு என்று குறிக்கப்பட்டது.

உயிர் வீடு பேறு அடைவதற்குப் பத்துப்படி நிலைகள் கூறப் பெறும். அவற்றை தச காரியம் என்பர். அவை தத்துவ ரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி, ஆன்ம ரூபம், ஆன்ம தரிசனம் ஆன்ம சுத்தி, சிவ ரூபம், சிவ தரிசனம், சிவயோகம், சிவபோகம் எனப்படும்.

ஆசிரியன் உணர்த்த இவற்றை உணர்ந்து , நீங்க வேண்டியவற்றிலிருந்து நீங்கித் திருவடி ஞானத்தால் இறைவனாகிய பரம் பொருளை உணர்ந்தவர்கள் பிறப்பு இறப்புக்களை அறுத்தவர்கள் ஆவார்கள்.

38 எத்தனையோ தத்துவங்கள் எவ்வௌர் கோட்பாடுடைய
அத்தனையும் சென்றங்கு அளவாதே சித்தமெனும்
தூது தனைப் போக்கிப் போய்த் தூக்கற்ற சோதிதனிற்
பாதிதனைக் கும்பிடலாம் பார்.

உலகத்தில் பல்வேறு சமயங்களைச் சார்ந்தவர்களும் தம்மில் மாறு பட்ட பல்வேறு வகைப்பட்ட தத்துவங்களையும் கோட்பாடுகளையும் எடுத்துரைத்து அவ்வவர் கொண்ட பொருளே சிறந்தது என்றும், உயர்ந்தது என்றும் வாதிடுவர். அவ்வாறு கூறப்படும் வழிகளில் எல்லாம் புகுந்து மனக் கலக்கமுறுதல் பயன் தருவது அன்று. சித்தத்தைச் சிவன் பாலே  வைத்துச் சந்திக்கிறோம் என்னும் உணர்வும் அழிந்து, திருவருள் வழி நின்றால் அம்மையப்பராக விளங்குகின்ற திருவருளையும் அதன் முதலாகிய ஞானத்தையும் ஒளிப்பிழம்பாகக் கண்டு வழிபடலாம்.

சமயக் கணக்கர் தாம் கண்டவற்றைச் சரியானது என்று தமக்குள் முரணி வாதிட்டு நிற்க அதனுள் புகுந்து மயங்காமல் இறைவனையே நினைந்து வழிபடும் அடியார்களுக்கு அவன் மாதொரு பாகனாக வெளிப்பட்டு ஆண்டு கொள்வான் என்று அன்பு நெறியினை இந்தப் பாடலின் மூலம் விளக்கினார்.

39 சாம் பொழுதும் ஏதும் சலமில்லை செத்தாற்போல்
ஆம்பொழுதிலே அடைய ஆசையறில் சோம்புதற்குச்
சொல்லும் துணையாகும் சொல்லாத தூய் நெறிக்கண்
செல்லும் துணையாகும் சென்று.

உயிரும் உடம்பும் கூடி வாழ்ந்திருக்கும் காலத்திலேயே அகப்பற்றையும் புறப்பற்றையும் அறவே ஒழித்துவிட்டவர்கள் உலகத்தைப் பொறுத்தவரை உயிரோடு இருந்தும் செத்தவர்களைப் போல் ஆவார்கள். ஏனெனில் ஐம்புல வழி ஒடும் ஆசைகள் அவர்களுக்கு இல்லை. அத்தகைய மனத்துறவு உடையவர்களுக்கு உயிர் நீங்கும் காலம் வந்துற்ற போதும் வருகின்ற துயரம் இல்லை ; இவ்வாறு தன் பணி நீத்து ஒழுகுதல் இறைபணி நிற்றற்கு உறுதுணையாகும் இன்னதென்று சொல்லால் விளக்கப்படாத தூநெறியாகிய வீட்டு நெறியிலே சென்று சேர்வதற்கும் அது உயரிய துணையாகும்.

சோம்பர் என்பது உயிர் தனக்கென ஒரு முயற்சியின்றி இறைவனின் திருவருள் வழியிலே நடப்பது ஆகும். தன் முனைப்பின்மையால் தன் முயற்சியற்று இருத்தல் சோம்புதல் எனப்பட்டது. தூநெறி என்பது அவாவின்மையால் வருவதாகும் தவநெறி. அது உயிரை வீட்டு இன்பத் துக்கு இட்டுச் செல்லும் உற்ற துணையாகும்.

40 வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என்றமையால்
வேண்டின் அஃதொன்றுமே வேண்டுவது வேண்டினது
வேண்டாமை வேண்டவரும் என்றமையால் வேண்டிடுக
வேண்டாமை வேண்டும் அவன் பால்.

இறைவனிடத்து ஒன்றை வேண்டிப் பெறுங்கால் அவ்வாறு வேண்டத்தக்கது பிறவாமை ஒன்றுமே ஆகும். அப்பிறவாமையும் வேண்டாமை எனப்படும் அவா அறுத்தலால் விளைவதால் இறைவனிடம் வேண்டும் போது அவா அறுத்தலையே வேண்டுக.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது, வேண்டாமை வேண்டவரும் என்ற திருக்குறளின் சொல்லும் பொருளும் பொருந்த எழுந்தது இப்பாடல். அதனோடு அமையாமல் இக்குறட்பாவின் நயத்தை எல்லாம் வெளிப்படுத்தும் உரை போலவும் இப்பாடல் அமைந்துள்ளது.

வேண்ட முழுதும் தருவோய் நீ என்று மணிவாசகப் பெருந்தகையும் , வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் என்று அப்பர் பெருமானும் கூறியருளியதிலிருந்து சிற்றுயிர்கள் விரும்பி வேண்டுவன எவை யாயினும் அவற்றை வழங்கும் வள்ளன்மை உடையவன் இறைவன் என்பது புலனாகும். வரையாது கொடுக்கும் அவ்வள்ளலிடத்தே வேண்டத்தக்கது எது? உலகத்துப் பேறுகளிலெல்லாம் மிக உயர்ந்த பேறாகிய மீண்டும் பிறவாமையையே அவனிடம் வேண்டிப் பெறுதல் வேண்டும். பிறப்பு என்பது தளை . பிறவாமை என்பது வீடு.

பிறவாமை எப்போது கைகூடும்? அவாவினைப் பற்று அற ஒழித்த போதே எய்தற் பாலது பிறவாமை. எனவே வேண்டாமையாகிய அவா அறுத்தலை இறைவனிடம் வேண்டினால் அப்பெருமான் அதனை நமக்கு நல்குவான். அதனைப் பெற்ற அளவிலே அதுவே பிறவாமையை நல்கும். ஆதலால் வேண்டுவதற்கு உரிய வள்ளலாகிய இறைவனிடத்து வேண்டாமையை வேண்டுக என்று இந்தப் பாடலில் நுட்பமாக அறிவுறுத்தினார்.

41 அரண உணர்வுதனில் அவ்வுணர்வை மாற்றில்
கரணமும் காலும் கைகூடும் புரணமது
கூடாமையும் கூடும் கூடுதலுங் கூட்டினுக்கு
வாடாமையும் கூடும் வந்து.

ஆன்மாவின் அறிவை உலகத்தில் செல்லவிடாது அரண் செய்து காக்கும் திருவடி ஞானத்தில் சிந்தையைச் செலுத்தினால் கரணங்களும் உடம்புக்குள் இயங்குகின்ற பத்து வாயுக்களும் கட்டுக்குள் அடங்கி நிற்கும். அதாவது சிவஞானத்தை விட்டு விலகாதிருக்கும். அந்த நிலையில் சுட்டறிவாகிய ஏகதேச அறிவு மீண்டும் வந்து தாக்காது நிற்றலும் கைகூடும். அது கைவரப் பெற்றதும் உடம்பாகிய கூடு வாடாது நிற்கும்  இயல்பும் வந்து பொருந்தும்.

அவ்வுணர்வு என்றது உயிர் அறிவினை. அரணம் என்பது காப்பு அரண் போன்ற திருவடி ஞானத்தினை. உலகத்துப் பொருள்களில் ஈடு பட்டுச் சிதறியோடும் ஆன்மாவின் அறிவை அவ்வாறு ஓடாது அரண் போல நின்று காக்கும் திருவடி ஞானத்தில் ஒடுக்கினால் கரணங்கள் வசப்படும். உடம்பில் இயங்கும் காற்றுக்களும் வசப்படும். கால்  காற்று. இந்நிலையில் மாறாது நிற்கும் போது உயிரறிவு மீண்டும் உலக இன்பங்களை நோக்கிப் புரண்டு போகாமையும் கைகூடும் . புரணம் மீண்டும். திருவருள் நெறிப்பட்டு அதனுள் அடங்கி நிற்கின்ற உயிருக்குக் கரணங்களும் காற்றுகளும் வசப்படுவதனால் உடம்பாகிய கூடு வாடாது நிலை பெறும். உடல், நரை, திரை, மூப்பு ஆகியவற்றுக்கு உட்படும் தன்மை உடையது. எனினும் கரணங்களும் காற்றுகளும் வசப்பட்டதனால் சமாதி நிலையில் உடம்பும் வாடாதிருக்கும்.

42 இன்று இங்கு அசேதனமாம் இவ்வினைகள் ஓரிரண்டும்
சென்று தொடருமவன் சென்றிடத்தே  என்றுந்தான்
தீதுறுவன் ஆனால் சிவபதிதான் கைவிடுமோ
மாதொரு கூறு அல்லனோ மற்று.

முன்னைப் பிறப்பில் செய்யப்பட்ட இருவினைப் பயன்கள் ஆகிய புண்ணிய பாவங்கள் அறிவற்றன. ஆயினும் அவை இறைவன் ஆணை யால் அடுத்த பிறப்பில் செய்தவனையே சென்று பற்றுகின்றன. அவ்வாறாயின் வினைகள் ஈட்டிய உயிருக்கு விடிவு காலமே கிடையாதா? என்றென்றைக்கும் தான் செய்த வினையில் விளைந்த தீமைகளை அது அனுபவித்துக் கொண்டே கிடக்க வேண்டுமா? சிவனாகிய தலைவன் அதனைக் கைவிட்டு விடுவானோ? என்று கேட்பின் திருவருளை ஒரு கூறாக உடைய உமை யொருபாகன் ஒரு நாளும் ஆன்மாவைக் கைவிடமாட்டான்.

வினைகள் நல்வினை தீவினை என இரண்டு. அவற்றின் பயன்கள் புண்ணிய பாவங்கள். இன்று இங்கு அசேதனமாம் இவ்வினைகள் எனக் கூறியதன் மூலமாக வினைகள் அறிவற்றவை . எனவே அவை தாமாகச் சென்று அடுத்த பிறவியில் தம்மைச் செய்தவனைப் பற்றும் என்பதனை மறுத்தார். வினையின் பயனை அதனைச் செய்தவனுக்கே ஊட்டுவது இறைவனின் ஆணையே அன்றிப் பிறிதன்று என்பதை உயத்து உணர வைத்தார்.  அவ்வினையைப் பேராமல் ஊட்டும் பிரானின் நுகராரேல் யார் தான் அறிந்து அணைப்பார் அங்கு என்ற சிவஞானபோதி எடுத்துக் காட்டுச் செய்யுள் இதனை நன்கு விளக்கும்.

கடல் அலைபோல் வரும் வினைத் தொடர்பால் மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்புட் பட்டு வரும் உயிருக்கு விடுதலையே கிடையாதா என்ற கேள்விக்கு விடை தருவார் போல, மாதொரு கூறு அல்லனோ என்று கூறினார். சிவபதி எனவே ஒப்பற்ற தலைவன் அவன். சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடன் ஆதலினால் அவன் உயிர்களைக் கைவிடுவானல்லன். அது மட்டுமன்றி அவன் திருவருளாகிய சத்தியினைத் தன் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டிருக்கிறான். பெருங் கருணைத் தடங்கடலைத் தன்னில் பிரியாது கொண்டிருக்கும் தலைவன் உயிருக்கு வினைப் பயன்களை ஊட்டிக் கழித்துத் தன் திருவருட்பேற்றினை அருளியே தீருவான். ஒரு போதும் கைவிடமாட்டான் என்பதனை இப்பாடலில் ஆசிரியர் உணர்த்தினார்.

43 அனாதி சிவனுடைமை யால் எவையும் ஆங்கே
அனாதி எனப்பெற்ற அணுவை அனாதியே
ஆர்த்த துயரகல அம்பிகையோடு எவ்விடத்தும்
காத்தல் அவன் கடனே காண்.

இறைவன், உயிர்கள், உயிர்களைக் கட்டும் தளைகள் ஆகிய முப் பொருள்களும் என்றென்றும் உள்ளவை. தோற்றமில் காலம் தொட்டே உலகம் சிவபெருமானுக்கு உடைமையும் உயிர்கள் சிவபெருமானுக்கு அடிமையும் ஆவன. எனவே உயிரைத் தோற்றமில் காலம் தொட்டே பிணித்து நிற்கும் பாசங்களை அறுத்து எல்லாவிடத்தும் எல்லா நிலைகளிலும் உயிருக்குத் துணையாக நின்று அதன் துயரத்தை அகற்றுவது மாதொரு பாகனான இறைவனின் கடமை என்று அறிவாயாக.

முப்பொருள்களும் தோற்றமில் காலந்தொட்டே உள்ளன என்பது சைவசித்தாந்தம் கூறுகின்ற உண்மை. என்று உயிர் உளதோ அன்றே அது ஆணவத்தில் அழுத்தி அதனால் தன் அறிவு முற்றிலும் மறைக்கப்பட்டிருக்கிறது, எனவே கேவல நிலையில் உயிர் தனக்கென ஒரு செயலின்றி உள்ளது. இறைவன் தன்னுடைய கருணையினால் உயிருக்கு உடல் கருவி முதலியவற்றைத் தானே இரங்கித் தந்தருளுகிறான். இப்பொழுது உயிர் சகல நிலைக்கு வருகிறது. இந்நிலையிலும் இறைவனே உயிருக்கு ஒன்றாய் வேறாய் உடனாய் நின்று அதே நேரத்தில் தோன்றாத் துணை யாகவும் இருந்து உயிரின் வினைப் பயன்களை அதற்கு அருத்திப் படிப்படியே அதனை உயர்த்துகிறான். உரிய பக்குவம் எய்திய உயிர்களை குரு வடிவம் கொண்டு ஆண்டருள் புரிகிறான் . அவன் திருவடிப் பேற்றை அடைந்த உயிர்கள் சுத்த நிலையை அவன் அருளால் பெறுகின்றன.

ஆக, கேவலம் சகலம் சுத்தம் என்னும் மூன்று நிலைகளிலும் இறைவனின் துணையின்றி உயிர் தனக்கென ஒரு செயலின்றியே இருக்கிறது என்பது புலனாகிறது. திருவருளாகிய சத்தியோடு பிரிப்பின்றி நிற்கின்ற சிவபெருமானே தன் கருணையால் உயிரைக் காத்துக் கடைத் தேற்றுகின்ற கடமை உடையவனாக விளங்குகிறான். தன் கடன் அடியேனையும் தாங்குதல் என்ற அப்பர் பெருமான் திருவாக்கில் அண்டங்கள் அனைத்தையும் தாங்கி வழி நடத்தும் இறைவன் சிற்றுயிராகிய அடியேனையும் தாங்கி அருள் பாலிக்க வேண்டும் அதுவே கடமை என்ற வேண்டுகோள் இனிது அமைந்துள்ளது இங்கு நினையத் தகும்.

44 தம்மில் சிவலிங்கம் கண்டு அதனைத் தாம் வணங்கித்
தம்மன்பால் மஞ்சனநீர் தாம் ஆட்டித் தம்மை யொரு
பூவாக்கிப் பூ அழியா மற்கொடுத்துப் பூசித்தால்
ஓவாமை யன்றே உடல்.

தம் உடலிலேயே இறைவன் கோவில் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து அவனுடைய அருவுருவத் திருமேனியாகிய சிவலிங்கம் உள்ளக் கோயிலில் எழுந்தருளி இருப்பதைக் கண்டு, அதற்குத் தம் அன்பினால் திருமஞ்சனம் ஆட்டித் தம்மையே திருமாலையாக்கி அப்பொருமானுக்குச் சாத்தி அவனை ஒரு நாளும் தவறாமல் வணங்கிப் பூசித்தால் அத்தகைய அன்பர்களுக்கு அவர்களின் உள்ளத்தே கோவில் கொண்டருளிய சிவபெருமான் வெளிப்பட்டு அருள் பாலிப்பான்.

புற வழிபாடு அக வழிபாடு என்று சிவ வழிபாடு இரு வகைப்படும். இங்கே கூறப்பட்டது அகவழிபாடு எனப்படும் அந்தரியாக வழிபாடு. உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்ற திருமந்திரமும்,  காயமே கோயிலாக கடிமனம் அடிமையாக , வாய்மையே தூய்மையாக மன மணி லிங்கமாக, நேயமே நெய்யும் பாலாய் நிறைய நீர் அமைய ஆட்டிப் பூசனை ஈசனார்க்குப் போற்று அவிக் காட்டினோமே  என்ற அப்பர் அடிகள் தேவாரமும் இங்கு நினையத்தக்கது.

45 தன்னை பெறுவதன் மேல் பேறு இல்லை, தான் என்றும்
தன்னைத்தான் பெற்றவன் தான் ஆரென்னில்  தன்னாலே
எல்லாந்தன்னுள் கொண்டு கொண்டதனைக் கொள்ளாதே
எல்லாமாய் நிற்கும் இவன்.

உலகத்துப் பேறுகள் யாவற்றுள்ளும் மிக உயர்ந்த பேறு தன்னைத் தான் பெறுவதேயாகும். அத்தகைய பேறு பெற்றவர் யார் எனக் கேட்பின் தத்துவங்களை உணர்ந்து அவற்றை விட்டு நீங்கித் தன்னில் நிலைத் திருக்கும் திருவருளைப் பற்றுவதனாலே தன் முனைப்பும் அழிந்து சிவபெருமானாகிய பரம் பொருளோடு ஒற்றித்து நிற்பதனால் தன் வியாபக நிலையை உணர்ந்தவன் ஆவான்.

தன்னைப் பெறுவது என்பது தத்துவங்கள் வேறு தான் வேறு என உணர்தல். அவ்வாறு உணர்ந்த உடன் தனக்கு எக்காலத்திலும் ஆதாரமாக நின்று வழி நடத்தும் திருவருளைத் தன்னுள்ளே கண்டு தான் என்னும் முனைப்பையும் அறவே ஒழித்துச் சிவபெருமான் வியாபகத்துள் அடங்கி நிற்பவனே உண்மையில் தன்னைப் பெற்றவன் என்று கூறத் தகுந்தவன்.

46 துன்பமாம் எல்லாம் பரவசனாய்த் தான்துவளில்
இன்பமாம் தன் வசனாய்த் தானிருக்கில்  என்பதனால்
நின்வசனா யேயிருக்கில் நின்னுடனாம் நேரிழையாள்
தன்வசனா யேயிருப்பன் தான்.

உயிர் உறுதிப்பாட்டை இழந்து தன் நிலையில் நிற்காமல் ஐம்பொறிகள் வழியே ஒடி உலக இன்பங்களில் ஈடுபடுமானால் அதற்கு உறுவது துன்பமேயன்றி இன்பம் இல்லை. இதற்கு மாறாக ஐம்பொறிகளைத் தன் வசப்படுத்தி அடக்கி ஐம்புல நுகர்ச்சிகளை விரும்பாது இருப்பின் அதனால் விளைவது இன்பமேயன்றித் துன்பமில்லை இவ்வாறு மெய்ந் நூல்கள் கூறுகின்றன. எனவே பொறி புலன்களை வசப்படுத்தி அருள் வழியில் நிற்கின்றவனுக்கு அம்பிகை பாகனாகிய சிவபெருமான் உடன் நின்று அருள் பாலிப்பான்.

கள்ளப் புலன்கள் உயிரை அருள்வழிச் செல்லாது தடுக்கும் இயல் புடையவை. அவற்றின் ஆற்றலுக்கு முன்னால் துவண்டு போகிற உயிர் துன்பத்தையே அனுபவிக்க நேரும். தான் துவளாமல் நின்று பொறிகளை அடக்கி நன்னெறியில் ஒழுகுவோர்க்கு இறைவன் தன் திருவருளாகிய சத்தியுடன் வந்து பொருந்தித் துன்பக் கலப்பற்ற இன்பத்தை அருளுவான் என்பது இப்பாடலில் கூறப்பட்டது.

47 செத்தாரே கெட்டார் கரணங்கள் சேர்ந்ததனோடு
ஒத்தாரே யோகபரர் ஆனார் எத்தாலும்
ஆராத அக்கரணத்து ஆர்ப்புண்டு இங்கு அல்லாதார்
பேராமற் செல்வர் அதன் பின்.

தன் முனைப்பு அற்றவர்களே கருவி கரணங்களால் உளவாகின்ற துயரங்களைக் கெடுத்தவர்கள். தன் முனைப்பை ஒழித்தவர்கள் பரம் பொருளாகிய சிவத்தோடு பொருந்தி அதன் வழி நடக்கின்ற இயல்பு கை கூடியவர்கள், மேலான சிவயோகம் கைவரப் பெற்றவர்கள். தன் முனைப்பு அறப்பெறாதவர்கள் நிறைவு  என்பதையே அறியாத கருவி கரணங்களினால் கட்டப் பெற்று அவற்றின் வழியே சென்று மீண்டும் பிறந்தும் இறந்தும் எல்லையற்ற துன்பங்களிலே உழல்பவர்கள் ஆவார்கள்.

செத்தல் என்பது இவ்விடத்தில் இறத்தலைக் குறியாமல் ஊன் கெட்டு உயிர் கெட்டு உள்ளமும் போய் நான் என்னும் முனைப்பும் கெட்டலைக் குறித்தது. அதனோடு சேர்ந்து ஒத்தார் என்ற சொற்றொடருக்கு, ஒப்பற்ற பரம் பொருளோடு கூடி அருள் வழியிலே ஒத்து நின்றவர் என்று பொருள் காண்க. எல்லா யோக நிலையிலும் மிக உயர்ந்த சிவயோகம் கைவரப் பெற்றவர்களை யோகபரர் என்ற சொல்லால் குறித்தார்.

எதனாலும் நிறைவு பெறாதவை கரணங்கள் என உணர்த்துவார் எத்தாலும் ஆறாத அக்கரணம் என்று குறிப்பிட்டார். பெற்ற சிறுகப் பெறாத பெரிது உள்ளும் இயல்பு ஐம்பொறி வயப்பட்டவர்களுக்கு உளதாகும். ஆதலால் கரணங்கள் நிறைவு அறியாதவை எனப்பட்டன. திருக்குறளிலும்  ஆரா இயற்கை அவா  என்று இது உணர்த்தப்பட்டது. கரணங்கள் உயிரைக் கட்டு நிலையில் செலுத்துவன ஆதலால் ஆர்ப்புண்டு  என்று கூறினார். ஆராமை நிறைவு பெறாமை . ஆர்புண்டல் பிணிக்கப்படுதல்.

48 கண்ணும் கருத்தும் கடந்த தொரு பேறேயும்
கண்ணும் கருத்தும் களிகூர  நண்ணி
வடம் அடக்கிநிற்கும் வடவித்தே போல
உடனடக்கி நிற்பர்காண் உற்று.

சிவபரம் பொருள் என்பது கண்ணுக்கும் புலப்படாமல் கருத்துக்கும் அளவு படாமல் இவை யாவற்றையும் கடந்து நிற்கும் எல்லையற்ற தோர் பெரும் பொருள். ஆயினும் அப்பரம் பொருள் தம்மை யடக்கித் தற்போதம் இழந்து சிவயோகத்திலே ஒன்றி இருக்கும் அருளாளர்களுக்கு, அவர்களுடைய கண்ணும் கருத்தும் பேரின்பத்திலே மூழ்கித் களி கூருமாறு வெளிப்பட்டுத் தோன்றும். இது எத்தகையது போல் என்றால் மிக நுண்ணிய ஆலம் விதையினுள் ஆலமரமே அடங்கி இருந்தது போன்றது.

பரம்பொருள் எல்லையற்றுப் பரந்து விரிந்து திகழ்வது. கண்ணால் காணவும் கருத்தால் நினைக்கவும் எட்டாதது. அப்பெரும் பொருள் ஐம்புலனும் அகத்தடக்கி சிவயோக நிலை கைவரப்பெற்று, பசுபோதம் இழந்து சிவபோதத்தில் அழுந்தி இருக்கும் சிவயோகியர்களுக்கு அவர்களது கண்ணும் கருத்தும் மகிழுமாறு வெளிப்பட்டுத் தோன்றி அருள் பாலிக்கும்.

தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒரு விதை, தெண்ணீர்க் கமத்துச் சிறுமீன் சினையினும் நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை அணிதேர் புரவி ஆட்பெரும் படையோடு மன்னர்க்கு இருக்க நிழாகும்மே  என்று வெற்றிவேற்கை கூறும். ஆலம் விதை மீனின் முட்டையினும் சிறிதாக இருந்தாலும் பரந்து உயர்ந்து வேரோடி விழுது விட்டுப் பெரும் படைக்கும் நிழல் தரும் ஆலமரத்தைத் தன்னுள் நுண்ணிய வடிவில் அடக்கிக் கொண்டிருக்கும். அதுபோலவே ஒப்பற்ற பரம் பொருள் சிவஞானிகளின் உள்ளத்தில் எழுந்தருளி இருக்கும், வடம்  ஆலமரம். வடவித்து  ஆலமரத்தின் வித்து . பேறேயும் பேறே ஆயினும்.

49 வானகமும் மண்ணகமு மாய் நிறைந்த வான்பொருளை
ஊனகத்தே உன்னுமது என் என்றனையேல்  ஏனகத்து
வாதனையை மாற்றும் வகையதுவே மண்முதலாம்
ஆதனமே அன்றோ அதற்கு.

எல்லையற்ற வான் பரப்பும் அவற்றில் உள்ள அண்டங்களும் இம் மண்ணுலகில் உள்ள எல்லாப் பொருள்களுமாய் நிறைந்தும் அதற்கு அப்பாலும் விளங்குகின்ற உயர்ந்த பொருளாகிய இறைவன் ஊனாலாகிய உடம்புக்குள்ளே உளன் என்று எண்ணுவது எவ்வாறு பொருந்தும்? என்று கேட்பாய் ஆயின் எளியோரிடத்தும் தோற்றமில் காலம் தொட்டுப் பிணித்து இருக்கிற பாசக் கூட்டத்தை அறவே ஒழிப்பதற்கு அப்பரம் பொருளே துணை. தத்துவங்களில் இறுதியாக எண்ணப்பட்ட நிலமும் அதற்கு மேம்பட்ட நுண்ணிய தத்துவங்களும் அப்பரம் பொருள் எழுந்தருளி இருக்கும் ஆசனம் அன்றோ?

பரம்பொருளுக்கு இலக்கணம் கூறும் போது அது வாக்கையும் மனத்தையும் கடந்து நிற்பது என்று கூறிவிட்டு, அதன் பின்னர் அப்பரம் பொருளை உள்ளமாகிய திருக்கோவிலில் எழுந்தருளுவித்து வழிபட வேண்டும் என்று கூறுவது எவ்வாறு பொருந்தும் என்று மாணவர் வினவ அதற்கு ஆசிரியர் விடை தருவது போன்று அமைந்திருப்பது இப்பாடல்.

எல்லாப் பொருள்களிலும் கலந்தும் வேறாயும் நிற்கின்ற பெருமை உடையவன் சிவபெருமான். தத்துவங்களுள் கடைப்பட்டதாக எண்ணப்படுவது நிலம். பருமையான நிலத்தில் கலந்து நிற்பது போலவே அதனினும் மேம்பட்ட முப்பத்து ஐந்து தத்துவங்களிலும் கலந்தும் தத்துவங்களைக் கடந்த தத்துவ ஆதீதனாகவும் இறைவன் விளங்குகிறான். மனத் தகத்தான் தலை மேலான் வாக்கினுள்ளான்  என்று தொடங்கும் திருத்தாண்டகத்துள் திருநாவுக்கரசு நாயனார் இறைவன் எல்லாவிடத்திலும் செறிந்து விளங்குகிறான் என்பதை அருளிச் செய்கிறார்.  அவ்வாறு அவன் எழுந்தருளி இருப்பது உயிர்களின் மலப் பிணிப்பை நீக்கும் பெருங் கருணையினாலேயே என்பதையும் ஆசிரியர் விளக்கினார்.

50 கல்லில் கமரில் கதிர் வாளில் சாணையினில்
வல்லுப் பலகையினில் வாதனையைச் சொல்லும்
அகமார்க்கத் தால் அவர்கள் மாற்றினர்காண் ஐயா
சகமார்க்கத் தால் அன்றே தான்.

துணி துவைக்கும் கல்லில் சிவனடியார்களின் ஆடைகளைத் துவைத்தும், அதற்கு முட்டுப்பாடு ஏற்பட்ட பொழுது தம் தலையை அக்கல்லின் மீது மோதியும் சிவபெருமானின் திருவருளைப் பெற்றார் திருக்குறிப்புத் தொண்ட நாயனார். சிவபெருமானுக்கு அமுதுபடியாகச் செந்நெல்லும் செங்கீரையும் மாவடுவும் தலைமீது ஏந்திச் சென்ற அரிவாட்டாய நாயனார் பசியினால் வயலில் தடுக்கிக் கீழே விழ அவர் சுமந்து சென்ற அமுதுபடிக்கான பொருள்கள் நிலத்தின் வெடிப்பின் உள்ளே விழுந்தன. இதனால் துயருற்ற நாயனார் அரிவாளால் தம் கழுத்தை அறுக்க முற்பட்ட போது வயற் கமரில் இருந்து வெளிப்பட்ட இறைவனின் திருக்கரம், அவரது அரிவாள் ஏந்திய கையைத் தடுத்துப் பிடித்தது. அதனோடு இறைவன் மாவடுவைக் கடித்ததால் உண்டான ஓசையும் அவர்காதில் விழுந்தது . இறைவன் அவருக்குத் தோற்றம் காட்டி ஆட்கொண்டான்.

ஏயர் கோன் கலிக்காம நாயனார் சுந்தரமூர்த்தி நாயனாருடன் மனம் வேறுபட்டு அவரைக் காண விரும்பாமல் தம் வாளால்  தம் வயிற்றைக் கிழித்துக் கொண்டு உயிர் நீத்தார். நாயனாரின் அன்பின் திறத்தை அறிந்த இறைவன் அவருக்கு அருள் பாலித்தான் . மூர்த்தி நாயனார் சிவ பெருமானுக்குச் சந்தனம் அரைத்துச் சாத்தும் திருத்தொண்டு புரிந்து வந்தார். ஒரு சமயம் சந்தனக் கட்டைகள் கிடைக்கப் பெறாமை யால் தன்னுடைய முழங்கையையே சந்தனக் கட்டையாகக் கொண்டு வட்டம் திகழ் பாறையில் வைத்துத் தேய்த்தார்.  இத்தகு செயல் செய்ய வேண்டா, அரசனாகி நாடு காத்து அதன் பின் நம் உலகு எய்துக  என்று இறைவன் விண்ணில் எழுந்த ஒரு வாக்கால் மூர்த்தி நாயனாருக்கு அருள் புரிந்தான்.

மூர்க்க நாயனார் சிவனடியாருக்கு அமுதூட்டுவதற்காகச் சூதாடி, அதில் வென்று பொருள் ஈட்டி அப்பொருளால் அடியவர்களுக்கு அமுது ஊட்டிவந்தார். அதனால் இறைவன் திருவருள் கிடைக்கப் பெற்றார்.

மேலே கூறப்பட்ட ஐந்து அடியார்களும் சிவபெருமானிடத்துக் கொண்ட பேரன்பினாலே அகமார்க்கத்தைப் பின் பற்றி அதனால் தம் பிறப்பை மாற்றினார்களேயன்றி , அவர்கள் சக மார்க்கத்தைப் பின் பற்றி யவர்கள் அல்லர்.

அகமார்க்கம் என்பது இந்த இடத்தில் இறைவனைத் தம் உள்ளத்து இருத்தி அன்பால் உருகி அவனடியே சிந்தித்துத் தாவர சங்கம வழிபாட்டை மேற்கொள்ளுபவர் என்பதைக் குறித்தது. உள்ளத்தில் ஊறும் அன்பு நெறி அகமார்க்கம் என்க.

சகமார்க்கம் என்பது தோழமை நெறி என்று வழங்கப்படும் யோக நெறியாகும். இறைவனை அடைவதற்கான வழிகளில் தொண்டு நெறி மகன்மை நெறி தோழமை நெறி ஞான நெறி என நான்கு கூறப்படும். இவை முறையே தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம் , சக மார்க்கம், சன் மார்க்கம் என்றும் கூறப்படும், திருநாவுக்கரசு நாயனார், திருஞான சம்பந்த நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் பெருமக்களும் முறையே இந்த நான்கு நெறிகளையும் பின்பற்றியதாகக் கூறுவர்.

கமர்  நிலத்தின் வெடிப்பு, சாணை  சந்தணக்கல், வல்லுப் பலகை  சூதாடும் பலகை.

51 உள்ளும் புறம்பும் நினைப் பொழியில் உன்னிடையே
வள்ளல் எழுந்தருளும் மாதினொடும்  தெள்ளி
அறிந்தொழிவாய் அன்றியே அன்புடையை ஆயின்
செறிந் தொழிவாய் ஏதேனுஞ் செய்

இறைவனை அகத்தில் இருத்தி வழிபடுவது என்பது ஒரு வகை, மற்றொரு வகை அவனைப் புறத்தே கண்டு வழிபடுவது. இரண்டு நிலை யினானும் இறைவன் மீது கொண்ட இடைவிடாத அன்பினால் வழிபடுவாருக்குச்சிவபெருமான் அவர் பக்குவம் அறிந்து அருள் பாலிப்பான். உள்ளும் புறமும் என்ற வேறுபாட்டு உணர்வுகள் எல்லாம் வழிபடுவோருக்கே அன்றிச் சிவபெருமானுக்கு இல்லை. எந்நிலையில் நின்றாலும் தன் முனைப்பை ஒழித்தவர்களுக்கே சிவ பெருமான் உமையம்மையோடும் எழுந்தருளி அருள் பாலிப்பான் என்பதனை உறுதியாக அறிவாயாக. அறிவு நெறியும் அன்பு நெறியும் ஆகிய இரண்டில் உனக்கு ஏற்ற ஒரு நெறியில் ஒழுகி இறைவனது அருளைப் பெறுதல் கூடும்.

ஞான மார்க்கம் பத்தி மார்க்கம் என்ற இரண்டும் இறைவனிடம் இட்டுச் செல்லும். ஒன்று உயர்ந்தது, மற்றொன்று தாழ்ந்தது என்று கொள்ள வேண்டா. ஆயினும் இரண்டு நெறிகளிலும் தன் முனைப்பை இழத்தலும், தன்னுயிர் தான் அறப்பெறுதலும் இன்றியமையாத தேவை. யோகத்திலே நின்று ஞானம் கைவரப் பெற்றுத் தன் முனைப்பு அறுதல் அல்லது அன்பு நெறியிலே நின்று சிவபெருமான் திருவடிகளிலே பத்தியுடன் வழிபட்டுத் தன் முனைப்பு அறுதல் என்ற இவை இரண்டிலும் உமையொரு பாகன் திருவருளை வழங்குவான். எனவே உனக்கு இயன்றதோர் நெறியில் நின்று இறைவன் திருவருளைப் பெறுவாயாக என்று ஆசிரியர் அறிவுறுத்துகிறார்.

52 கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை என்ற மையால்
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பதனைக் கண்ணப்பர்
தாம் அறிதல் காளத்தியார் அறிதல் அல்லது மற்று
யாமறியும் அன்பன்று அது.

மணிவாசகப் பெருந்தகை திருவாசகத்துள் திருக்கோத்தும்பியுள் கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்  என்று அருளிச் செய் துள்ளார். மிக உயரிய அன்பின் திறத்துக்குக் கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு என்று எடுத்துக் காட்டியதால் , இறைவன் பால் அன்பு செலுத்தியவர்கள் யாவருள்ளும் கண்ணப்ப நாயனாரோடு ஒப்ப அன்பு கொண்டவர் வேறு யாருமிலர் என்பதாயிற்று. கண்ணப்பரின் அன்பைக் காளத்தியப்பர் அறிவாரேயன்றிப் பிறர் எவராலும் அறியமுடியாத தகைமை உடையது அது என்று அறிக.

கண்ணப்ப நாயனார் திருக்காளத்தியில் குடுமித் தேவரைக் கண்டு, அவர் மீது ஆராத அன்பு பாராட்டி ஆறே நாட்களில் தம் கண்ணை இடந்து அப்பிச் சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டார். அவருடைய அன்போடு ஒத்த அன்பினை வேறு எவரிடத்திலும் காண்கிலோம். ஆதலால் மாணிக்கவாசகர்.

 கண்ணப்பன்  ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என் ஒப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
வண்ணப்பணித்து என்னை வா என்ற வான்கருணைச்
கண்ணப்பொன் நீற்றற்கே சென்று ஊதாய் கோத்தும்பி
என்று அருளினார்.

இத்திருப்பாடலுக்குப் பொருள் காணும் பொழுது கண்ணப்ப நாயனார் அன்புடைமையில் எவ்வாறு தலைசிறந்து நின்றாரோ அவ்வாறே அன்பின்மையின் எல்லையில் அடியேன் நின்றேன். அவ்வாறு இருந்தும் என் தந்தையாகிய சிவபெருமான் என்னைத் தன் அடியானாக ஏற்றுக் கொண்டான் என்று கொள்ள வேண்டும். கண்ணப்ப நாயனாரின்  அன்பைப் பட்டினத்து அடிகளும்  நான் ஆறில் கண் இடந்து அப்பவல்லேன் அல்லேன் என்று பாடினார். சேக்கிழார் நாயனார் கண்ணப்பரை  அன்பு பிழம்பாய்த் திரிவார் அவர் கருத்தின் அளவினரோ என்று போற்றினார்.

கண்ணப்பரின் அன்பின் திறம் நாயனாருக்குத் தெரியும். காளத்தி யப்பருக்குத் தெரியும் என்பதல்லது வேறு யாராலும் அறிய இயலாத சீர்மை உடையது என்று ஆசிரியர் விளக்குகிறார்.

53 அவிழ்ந்த துணியில் அவிழ்ந்த அவிழை
 அவிழ்ந்த மனத்தால் அவிழ்க்க அவிழ்ந்தசடை
வேந்தனார்க்கு இன்னமுதம் ஆயிற்றே மெய்யன்பிற்
சேர்ந்தனார் செய்த செயல்

திருவிசைப்பா அருளிய சேந்தனார் மிக எளிமையான களிய முதினை ஒரு கந்தல் துணியிலே இட்டுத் தில்லையம்பலவாணப் பெருமானுக்கு மெய்யன்போடு அமுதுபடியாகப் படைக்க, அதனையே இன்னமுதமாகப் பெருமான் ஏற்று அருளினார் இது பேரன்பின் திறத்தால் நிகழ்ந்த செயலன்றோ?

சேர்ந்தனார் தாழத்தபட்ட குலத்தில் உதித்த சிவனடியார். அவர் எளிமையான களியமுதினைத் தமது கந்தல் துணியே கொள்கலமாக இறைவனுக்கு மனமுவந்த அன்பினோடு படைத்தார். தில்லைக்கூத்தப் பெருமான் அவ்வாறு நிவேதிக்கப்பட்ட களியையும் இன்னமுதமாக ஏற்றுக் கொண்டார். சேர்ந்தனாரின் அன்பின் திறத்தை இச்செயல் விளக்குகிறது.

54 சுரந்த திருமலைக்கே துய்யசிவ ஞானம்
சுரந்துண்டார் பிள்ளையெனச் சொல்லச் சுரந்த
தனமுடையாள் தென்பாண்டி மாதேவி தாழ்ந்த
மனமுடையாள் அன்பிருந்த வாறு.

திருஞானசம்பந்த நாயானார் சீர்காழிப் பதியிலே திருக்குளக் கரையில் உமையம்மையார் அளித்த ஞான அமுதப் பாலைப் பொற்கிண்ணத்தில் ஊட்ட அந்நிலையில்  சிவஞானம் கைவரப் பெற்றார் என்று கேள்விப் பட்ட அளவிலே தென்பாண்டி மாதேவியாகிய மங்கையர்க்கரசியார் தாய்மை உணர்வு மீதூரப் பெற்றுத் தம்முடைய திருமார்பில் பால் சுரக்கப் பெற்றார். அந்த அன்பு முதிர்ந்த திரு உள்ளம் எவ்வளவு பெருமைக் குரியது?

ஞானசம்பந்தர் அழுததைக் கண்டதும் இறைவி ஞானப் பால் சுரந்து ஊட்டினார். பாண்டி மாதேவியாரோ அவர் அழுததைக் காணாத போதும், செய்தி கேட்ட அளவிலேயே அமுதப் பால் சுரக்கப் பெற்றார் என்பது அவரது தாய்மை அன்பின் ஆழத்தைப் புலப்படுத்துகிறது. இத்தகைய பேரன்பை எவ்விடத்தும் கண்டதில்லை. ஆதலால் அதன் உயர்வை நம்மால் அளவிட்டு உரைக்க இயலாது.

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். தாம் அருளிய நால்வர் நான்மணி மாலையில் இந்த நிகழ்ச்சிகளைச் சுட்டிக் காட்டிச் சம்பந்தப் பெருமானை நோக்கி பொற்கிண்ணத்தில் பால் வழங்கிய தாயும், அந்த நிகழ்ச்சியைக் கேட்ட அளவில் பால் சுரந்த தாயும் ஆகிய இருவரில் யாரு டைய அன்பு உயர்ந்தது? எனக்கு அதைச் சொல்வாயாக ? என்று கேட்ப தாக அமைந்தது.

இலைபடர்ந்த பொய்கை இடத்து அழுதல்கண்டு
முலைசுரந்த அன்னையோ முன்நின் நிலைவிளம்பக்
கொங்கை சுரந்த அருட் கோமகளோ சம்பந்தா
இங்கு உயர்ந்த தார்யார் சொல் எனக்கு.   எனும் பாடல்.

55 அன்பே என் அன்பே என்று அன்பால் அழுது அரற்றி
அன்பே அன்பாக அறிவு அழியும்  அன்பு அன்றித்
தீர்த்தம் தியானம் சிவார்ச்சனைகள் செய்யும் அவை
சாற்றும் பழமன்றே தான்.

அன்பே வடிவாகியவனே, என் அன்புக்குரியவனே என்று பல வாறும் அன்பினால் அழுதும் அரற்றியும் அன்பின் நிறைவினால் தன் முனைப்பற்றும், அறிவும் உணர்வும் இழந்து சிவபெருமான் மீது அன்பு பாராட்டுவது ஒன்றே அவனை அடைவதற்குரிய நெறியாகும் அன்பு இல்லாமல் புண்ணிய தீர்த்தங்களிலே நீராடுவதும் தியானத்தை மேற்கொள்ளுவதும் பூவும் மலரும் இட்டுப் போற்றி வழிபடுவதும் ஆகிய எவையும் பயன் தரா.

 அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார் என்னும் திரு மந்திரம், சைவ சமயத்தில் அன்பிற்குரிய பெருமையினை எடுத்து விளக்கு வதாகும். அன்பால் அகம் குளிர்ந்து நெக்கு உருகுவார்க்கு அருளும் சிவபெருமான் ஆரவாரமான புறப் பூசை செய்வாரைக் கண்டு நாணி நிற்பான் என்பதனை,  நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே, புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன் பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு, நக்கு நிற்பன் அவர்தமை நாணியே  என்ற அப்பர் அடிகள் அருள் வாக்கால் உணரலாம். மாணிக்கவாசகரை  அழுது அடி அடைந்த அன்பர்  என்றே பெரியோர் பாராட்டுவர். அழுதல் அவரது அன்பின் முதிர்ச்சியைக் காட்டிற்று.

இப்பாடலின் செம்பொருள் தீர்த்தமாடுதலும் தியானமும் சிவ அர்ச்சனையும் அன்பால் அகம் குளிர்ந்து இயற்றப்படுதல் வேண்டும், அன் பின்றிச் செய்யப்படும் புறப்பூசைகள் பயன்தரா என்பதே ஆகும்.

பழம்பயன்.

56 எல்லார் அறிவுகளின் தாற்பரியம் என்னறிவு
செல்லும் இடத்தளவும் சென்றறிந்தேன்  வல்லபடி
வாதனையை மாற்றும் வகையிதுவே மற்றவற்றுள்
ஏதமறக் கண்ட விதம்.

எல்லா மெய்ப்பொருள் நூல்களிலும் பல்வேறு சமயத்தைச் சார்ந்தவர்கள் கண்டு சொன்ன கோட்பாடுகளின் உட்கருத்துக்களை என் ஆன்ம சிற்சத்தி செல்லுமளவு சென்று அறிந்தேன். அவை யாவற்றிலும் உட் கருதாய் அமைந்திருப்பது, தக்கதொரு ஞான ஆசிரியனை அடைந்து அவர் அருளிச் செய்த முறையிலே ஒழுகித் தன் முனைப்பு என்பதனை அறவே போக்கிச் சிவஞானத்துடன் ஒன்றியிருப்பதே உலகத் துன்பங்கள் யாவற்றையும் அறுத்தொழிக்க வல்ல நெறி என்பதே.

தாற்பரியம் என்பது வெளிப்பட்டுத் தோன்றாமல் சொல்லின் உள்ளே பொதிந்திருக்கும் உட்கருத்தாகும். எல்லார் அறிவுகளின் தாற்பரியம் என்னுமிடத்துப் பல்வேறு வகைப்பட்ட சமயங்களில் அவரவர் உரைத்த நூல்களை. அப்படிப் பல வகைப்பட்ட நூல்களிலும் கருது கோளும், எய்தப்படுவதாகிய குறிக்கோளும் வேறு வேறாய் இருப்பினும் துன்பத்தை மாற்றும் வகை ஒன்றாகவே காணப்படுகிறது. அது யாதெனின் தகுதியுடைய ஞானாசிரியனை அடுத்து அவ்வாசிரியன் உணர்த்தும் நெறிப் படி தன் முனைப்பின்றி ஒழுகி ஞான நன்னெறியிலே நிற்றல் ஒன்றே உலகத் துன்பங்களை அறுத்தற்குரிய நெறி என்பதாம்.
தாற்பரியம்  உட்கருத்து. வாதனை  துன்பம். ஏதம் குற்றம்.

57 வித்தும் அதன் அங்குரமும் போன்றிருக்கும் மெய்ஞ்ஞானம்
வித்தும் அதன் அங்குரமும் மெய்யுணரில்  வித்து அதனிற்
காணாமை யால் அதனைக் கைவிடுவர் கண்டவர்கள்
பேணாமை யால் அற்றார் பேறு.

வித்தாக இருப்பது சிவபரம் பொருளான முழுமுதல். அதனின்று வெளிப்பட்டுத் தோன்றும் முளையாக இருப்பது திருவருள். மறைந்திருப்பது சிவம். வெளிப்பட்டுத் தோன்றுவது திருவருள் ஞானம். ஒன்றிய முனையினிடத்து விதை வெளிப்படக் காணப்படுவதில்லை. எனவே விதை என்ற ஒன்று உளது என்பதை உண்டு என்று அறியாது அதனைக்கைவிடுவார்கள் சிலர். மற்றும் சிலர் வெளிப்படத் தோன்றிய முளையினைப் போற்றிப் பாதுகாக்கத் தவறி அதனால் பெறுவதற்குரிய வளர்ச்சியின் எல்லையாகிய சிவப்பேற்றைப் பெறாமல் போவதும் உண்டு.

வயலிலே விதைக்கப்பட்ட நெல் முளைத்தெழுந்து வருகின்ற காலத்து வித்து நிலத்துக்கு அடியிலேயே இருக்கும். முளை மட்டிலுமே வெளிப்பட்டுத் தோன்றும் அது போலவே தனி முதற் பொருளாயுள்ள சிவம் தன்வயத்ததாக நிற்க, அதன் திருவருள் வெளிப்பட்டுத் தோன்றும் இந்த உண்மையை உணர்ந்தவர்கள் விதையுண்டு என்பதை மறவார். மறந்தவர்கள் வித்தினைக் கண்ணால் காணாமையால் அதனைக் கைவிடுவர்.

மற்றொரு சாரார் இந்த முளையின் முழுமைப்பட்ட தன்மையே விதை என்று உணராமல் இம் முளையினைப் பேணிக் காக்கத் தவறுவதனால், விளைவின் பயனாம் வித்தினைப் பெற இயலாமல் பேறு இழந்தவர்கள் ஆவார்கள்.இந்தப் பாடலுக்கு அடிப்படையாக அமைந்த திருமந்திரம்,  வித்தினில் அன்றி முளை இல்லை அம்முளை. வித்தினில் அன்றி வெளிப் படுமாறு இல்லை, வித்தும் முளையும் ஒன்றல்ல வேறல்ல, அத்தன்மைத்தாகும் அரனெறி தானே  ( 1932) என்பதாகும்.

முளையைக் கண்ட போது வித்தினையும் , வித்தினைக் கண்ட போது முளையினையும் தேடித் திரியாமல் பெற்றதனைப் பேணி வளர்த்து மற்றதனைப் பெறுதல் கூடும் என்று இப்பாடல் உணர்த்துகிறது. பிசிச் செய்யும் போல ஒட்டணியில் அமைந்த இப்பாடலின் உட்கருத்து நுணுகி உணரத் தக்கது.

58 ஒன்றன்று இரண்டன்று உளதன்று இலதன்று
நன்றன்று தீதன்று நானன்று நின்ற
நிலையன்று நீயன்று நின்னறிவும் அன்று
தலையன்று அடியன்று தான்.

உயிர் சிவத்தோடு பொருந்திய நிலை எத்தகையது? பெறுவான் வேறு. அவன் பெறுகின்ற பேறு வேறு. அப்பேற்றினால் விளைகின்ற பேரின்பம் வேறு. எனவே அந்த நிலை ஒன்றன்று. முத்தியைச் சேர்ந்த உயிர் அதிலிருந்து மீண்டும் பிறப்பதில்லை ஆகையினால் இரண்டும் அன்று. சிவமும் உயிரும் தனித்துத் தோன்றாமையினால் உள்ளதுமன்று. உயிருக்கு சிவமும் உயிரும் தனித்துத் தோன்றாமையினால் உள்ளதுமன்று. உயிருக்கு சிவப் பேரின்பத்தை நுகர்கின்ற பேறு கிடைப்பதால் இல்லாததுமன்று. உலக வாழ்க்கையில் நல்லதும் தீயதும் பகுத்துக் காணும் உயிரின் அறிவிற்கும் அப்பாற்பட்டு உள்ளதனால் நன்றும் அன்று தீயதும் அன்று.

முத்தி நிலை, சுட்டி உணரப்படும் இயல்புடையதன்று. ஆதலால் நான், நீ என்று பிரித்துக் காணும் இடமன்று. தற்போதம் கெட்டதனாலே உயிரின் அறிவும் அன்று . தோற்றம் முடிவு என்ற இரண்டையும் கடந்த தனால் தலையுமன்று அடியுமன்று.

சொல்லின் வரம்புக்கு உட்படாத நிலையே உயிர் சிவத்தோடு ஒன்றுபட்ட நிலை. ஆதலால் அதன் தன்மை இன்னது என்று வரையறுத்துச் சொல்ல முடியாத இயல்பினை ஆசிரியர் இந்தப் பாடலில் கூறுகிறார். எனவே இது அன்று, இது அன்று என்று கழித்து, இவற்றை எல்லாம் கடந்து எதுவோ அதுவே சிவத்தோடு ஒன்றிய நிலையாகும் என்று கூறுகிறார்.

மனத்தால் நினைத்தற்கும் வாக்கால் உணர்த்துதற்கும் அரிய நிலை என்பதைப் புரிய வைத்தார்.

59 செய்யாச் செயலை அவன் செய்யாமை கண்டுதனைச்
செய்யாச் செயலிற் செலுத்தினால் எய்யாதே
மாணவக ! அப்பொழுதே வாஞ்சைக் கொடிவளர்க்கும்
ஆணவமும் அற்றது அறி.

தன் ஒருவனை அன்றி வேறு எவராலும் செய்ய முடியாத ஐந்தொழில்கள் இயற்றுபவன் சிவபெருமான். ஐந்தொழில் இயற்றும் காலத்தும் அவன் அவற்றுள் தோயாது நின்றும் விகாரப்படுவதின்றியும் தன் சங்கற்ப மாத்திரையினாலே செய்வான் , இத்தகைய பெருமையை அறிந்து உயிர் அவன் திருவருளோடு ஒன்றித் தன் செயல்களையும் தன் நினைப்பினையும் விட்டொழித்தால் அந்நிலையிலேயே ஆசைக் கொடியை வளர்க்கும் ஆணவ மலம் உயிருக்குத் துன்பத்தைச் செய்யாது தேய்ந்து போகும். ஆணவம் தேய்ந்தால் பிறப்பும் இறப்பும் தரும் எய்ப்பு இன்றி என்றென்றும் சிவப் பேரின்பத்தினை நுகர்ந்து மகிழலாம் என்பதை, மாணவனே, நீ அறிவாயாக,

படைத்தல், காத்தல், மறைத்தல், ஓடுக்குதல், அருளுதல் என்ப்படுகின்ற ஐந்தொழிலும் செய்வதற்குரிய வல்லமை உடையவன் சிவபெருமானே. இந்தச் செயல்கள் யாவும் வேறு எவராலும் செய்யப்படாதவை. ஆதலினால் இவற்றை செய்யாச் செயல் என்றார். இச் செயல்களை எல்லாம் விகாரப்படாமலும் தனது திருவருட் குறிப்பு ஆகிய சங்கற்ப மாத்திரையினாலேயே இவற்றைச் செய்கிறான் . ஆதலால் செய்யாமை கண்டு எனக் கூறினார்.

சிற்றறிவும் சிறு தொழிலும் உடைய உயிர், தன் முனைப்போடு செயல்படுகிற போது அது அங்குமிங்கும் பரந்து உலகியல் பொருள்களைப் பற்றித் துயருறும். துயரத்தைத் தவிர்ப்பதற்கு உரிய ஒரே வழி தன் பரபரக்கும் இயல்பை அறவே ஒழித்துத் திருவருளின்கண் அடங்கி நிற்றலே ஆகும். முனைப்பு அடங்குவதை செய்யாச் செயலின் செலுத்துதல் என்றார். இது திருவாசகம் திருத்தெள்ளேணத்தில் செயல் மாண்டவாறு, என்று அருளப்படும்.

இந்த நிலையை எய்திய உயிருக்கு அப்பொழுதே மோகத்தை வளர்க்கின்ற ஆணவ மலம் தேய்ந்து இறும். அதனை வாஞ்சைக் கொடி வளர்க்கும் ஆணவம் என்று குறித்தார். ஆணவ மலத்தின் காரிய வேறு பாடுகளை ஏழு வகையாகப் பகுத்து உணர்த்திய மாதவச் சிவஞான முனிவர், அதன் முதலாவது காரியம் மோகம் என்று உணர்த்தினார். மோகமும் நீங்கிய வழியேஆணவ மலக் கேடு கைகூடும் எனவும் கூறினார்.மோகத்தை இப்பாடலில் வாஞ்சைக் கொடி என்று சுட்டினார் ஆசிரியர். மாணவனை நெறிப்படுத்தும் முறையில் இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடலுக்குச் சில பாட வேறுபாடுகளும் உள்ளன.

60 ஏதேனும் காலமுமாம் ஏதேனும் தேசமுமாம்
ஏதேனும் திக்கு ஆசனமுமாம்  ஏதேனும்
செய்தால் ஒருவலுமாம் செய்யாச் செயலதனைச்
செய்யாமை செய்யும் பொழுது.

செய்தற்கு அரிய செயலாக முன் பாடலில் கூறப்பட்ட திருவருட் செயலுள் அடங்கி நிற்போருக்கு எய்தற்கு அரிய நிலை வந்து எய்தியதால் அவர்களுக்கு வழிபாட்டுக் கென நூல்களில் விதிக்கப்பட்ட நியதிகள் எதுவும் கிடையா. காலம் எதுவாயினும் இடம் எதுவாயினும் திசை எதுவாயினும் இருக்கை எதுவாயினும், அவர்கள் செயல் நன்றே ஆயினும் தீதே ஆயினும் அவர்கள் இயற்றும் வழிபாட்டினை மேற்கொள்ளுவர்.

சிவபெருமானை வழிபடுவதற்கு உரியன என்று காலம் இடம் திசை இருக்கை முதலிய நியமங்கள் நூல்களில் வரையறுக்கப்பட்டுள்ளன. இவ்வரையறையை மீறிச் செய்தாலும் நூல்களில் விலக்கிய வகையில் செய்தாலும் சிவ அபராதம் ஆகும். உலக வாழ்க்கையில் ஈடுபட்டு அந்தப் பிடிப்பை நீக்கிக் கொள்ள விரும்பும் மாந்தருக்காகவே விதிகளும் விலக்குகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. இத்தகைய வரையறைகள் ஆன்மபோதத்தை முற்றிலும் இழந்து திருவருளின் வழி நின்றார்க்குப் பொருந்துவனவல்ல. அவர்கள் எங்கேனும் இருந்து தங்கள் வழிபாட்டினை இயற்றுகின்ற உரிமை உடையவர்கள்.

பாசத்தை விட்டு நீங்கியவர்களுக்கு நியமத்தைக் கடைபிடிக்க வேண்டிய தேவையில்லை என்று கூறிய பொழுதே, அத்தன்மை எய்தாதவர்களுக்கு நியமத்தை விட்டு விலகுதல் சிவ அபராதம் எனவும் எதிர்மறை முகத்தால் வலியுறுத்தினர்.

61 செய்தற் கரிய செயல்பலவுஞ் செய்து சிலர்
எய்தற் கரியதனை எய்தினார்  ஐயோநாம்
செய்யாமை செய்து செயல் அறுக்கல் ஆயிருக்கச்
செய்யாமை செய்யாத வாறு.

செயற்கரிய செயல்கள் பலவற்றைச் செய்து சில அடியவர்கள் எய்துவதற்கு மிகவும் அரியதாகிய சிவபரம் பொருளை எய்தி இன்புற்றார்கள். அத்தகைய வன் தொண்டுகள் நம்மால்  செய்வதற்கு அரியனவேனும் நம் தன் முனைப்பே அடக்கி இறைவன் திருவடியில் ஒடுங்கி ஏதும் செய்யாமல் இருத்தாலே இறைவன் திருவருள் நம்மை ஆண்டு கொள்ளும் என்பதை அறிந்திருந்தும் நாம், செய்யாதிருக்கும் அதனைக்கூட மேற்கொள்ளாது இருக்கிறோமே? இந்நிலை இரங்கத்தக்கதாகும்.

செய்தற்கரிய செயல்கள் என்று இப்பாடலில் குறிப்பிட்ட வல்வினைகள் இந்நூலில் 18,19,20 ஆகிய பாடல்களில் எடுத்துரைக்கப்பட்ட சிறுத்தொண்டர், சண்டீசர், அரிவாட்டாயர் ஆகிய நாயன்மார்களின் செயல்களாகும், இவற்றை அப்பாடல்களில் வல்லினை என்று ஆசிரியர் குறித்தருளினார். இத்தகைய தொண்டுகள் நோற்பார் சிலரே, பலரல்லர். என்பதனையும் வலியுறுத்தினார். எய்தற்கரியது என்று இப்பாடலில் குறிக்கப்பட்டது சென்றடையாத திருவுடையானாகிய  சிவபரம் பொருள்.

 செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர், செயற்கரிய செய்கலாதார் ( குறள் 26) என்பதனையும் எய்தற்கரிய இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல்  (குறள்489) என்பதனையும் இணைத்து இந்த அருட்பாடல் நம்மை நெறிப்படுத்துகின்றது.

செய்யாமையே போதுமானதாக இருக்க அதனையும் செய்வதற்கு முன்வராதிருக்கிறோமே என்று இரங்கிக் கூறுகிறார். செய்யாமை என்பது தன் பணி நீத்தல் . இந்நிலைமை கைகூடுமென்றால் அப்பொழுதே இறை பணி நிற்றல் உதிக்கின்றது.

62 இப்பொருள்கள் யாதேனும் ஏதெனினும் ஒன்று செய்தல்
எப்பொருளும் செய்யா தொழிந்திருத்தல்  மெய்ப்பொருளைக்
கண்டிருத்தல் செய்யாதே கண்ட மனிதரெலாம்
உண்டிருப்ப தென்னோ உரை.

இதுவரை கூறப்பட்ட பாடல்களுள் இறைவனைச் சென்று அடை வதற்குரிய நெறிகள் பல கூறப்பட்டன. சிவதருமம் என்ற முறையிலே, அரிய செயல்களாகிய வல்வினையும், எளிய செயல்களாகிய மெல்வினையும் விளக்கப்பட்டன. இவற்றுள் இரண்டனையும் பின்பற்றாது தன் செயலற்று இறைவன் திருவருளில் ஒடுங்கிச் செயல் ஏதும் செய்யாமலிருத்தல் மூலமும் சிவபரம் பொருளோடு ஒன்றிருப்பது கூடும். இவ்வாறு தன்னால் இயன்ற நெறிகளில் ஒன்றைப் பின்பற்றி சிவப் பேரின்பத்தை அனுபவிக்க வழிகள் பல இரு ப்பினும் இவற்றுள் எதனையும் பின்பற்றாது நிலையாதவற்றை நிலைத்தன என்று கருதி வாழ்நாளை  வறிதே கழிக்கின்றனரே இதனால் என்ன பயன்?

பல பாடல்களில் விரிவாகக் கூறிய கருத்துக்களை சுருக்கமாகச் சுட்டுவார். இப்பொருள்கள் என்று குறித்தார். பொருள்கள் என்பது நெறிகளுள் ஒன்றைக் கடைபிடித்தல் என்பது அதன் பின்னர் வரும் யாரேனும் ஏதெனினும் ஒன்று செய்தல் என்ற சொற்றொடரால் பெறப்பட்டது.

இவற்றுள் ஏதேனும் ஒரு வழியைப் பின்பற்றினாலும் மெய்ப் பொருளைக் கண்டிருத்தல் உறுதி என உணர்த்துவதற்கு கண்டிருத்தல் செய்யாதே என்று குறித்தார்.

உண்டிருத்தல் என்பது நுகர்ந்திருத்தல் என்ற பொருளைத் தரும். சிவஞான போதத்துள் உண்டிவினை இன்மையின் என்பதும் இப் பொருட்டு ஆயினும் நிலையற்ற பொருள்களை நுகர்ந்து நிலையான பொருள்களைத் தேடாதிருப்பவர் வாழ்க்கை உண்பதும் உறங்கு வதுமாய் முடியுமேயன்றிப் பயனுள்ள வாழ்க்கை ஆகாது. எனவே அத்தகைய மக்கள் உப்பிற்கும் காடிக்கும் கூற்று உரைந்ததாகக் கொள்ளலும் பொருந்தும்.

63 வீட்டிலே சென்று வினை யொழித்து நின்றிடிலென்
நாட்டிலே நல்வினைகள் செய்திடிலென் கூட்டில்வாள்
சாத்தியே நின்றிலையேல் தக்கனார் வேள்வி செய்த
மாத்திரமேயாம் கண்டாய் வந்து.

வீட்டு நெறியிலே செல்வதற்காகத் துறவறத்தை மேற்கொண்டு இருவினைகளும் பற்றாதவண்ணம் ஒழுகினால் என்ன ? அன்றி நாட்டிடை வதிந்து இல்லற நெறியில் நின்று மனைவியுடன் நல்வினைகளைச் செய்து ஒழுகினால் தான் என்ன? இரண்டாலும் பயன் விளைய வேண்டும் என்றால் தற்போதத்தை இழந்து உயிர்எனும்  உறையில் திருவடி ஞானமாகிய வாளினைச் சாத்தித் தன் முனைப்பற்று இருத்தல் வேண்டும். அவ்வாறு நில்லாவிடில் தக்கன் தன் முனைப்போடு இயற்றப் புகுந்த வேள்வி தீவினையாய் முடிந்தது போன்று, நீ மோற் கொள்ளும் முயற்சிகளும் நல்லனவே எனினும் தீயனவாய் முடியும்.

வீட்டிலே என்ற சொல்  வீட்டின் பத்திலே விருப்பம் கொண்டு என்ற பொருளைத் தந்தது. நாட்டிலே நல்வினைகள் செய்தல் என்பது இல்லறத்தில் மனையாளுடன் கூடியிருந்து துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் மற்றையோர்க்கும் துணையாக நல்வினைகள் புரிவதனைக் குறித்தது.

கூட்டில் என்பது உடம்பாகிய உறையினுள் திருவடி ஞானமாகியவாளினைச் சாத்தி அருள்வழி ஒழுகுதலைக் குறித்தது. உறை கழித்த வாள் தீமை பயத்தல் உலகியலில் காணலாம். இங்கு வாள் கூட்டில் இருத்தல் தன் முனைப்பு அறுதலுக்கு எடுத்துக் காட்டு ஆயிற்று. தக்கன் செய்த வேள்வி நல்வினை எனப்படுமாயினும் அவன் செருக்கோடு இயற்றியதனால் வேள்வியும் முற்றுப் பெறவில்லை. வேள்வியில் முயன்ற அவனுக்கு, வேள்விக்கும் வந்த மற்றைய தேவர்களுக்கும் அது தீய பயனையே தந்தது.

64 சிவன் முதலே அன்றி முதலில்லை என்றும்
சிவனுடையது என்னறிவ தென்றும் சிவனவனது
என்செயல் அது ஆகின்றது என்றும் இவையிற்றைத்
தன் செயலாக் கொள்ளாமை தான்.

சிவபெருமான் ஒருவனே முழு முதற்பொருள். அவனன்றி முதற் பொருள் என்று சொல்லுவதற்குரிய பொருள் வேறு ஒன்றும் இல்லை. என்னுடைய அறிவு என்று நான் கூறுகின்ற யாவும் அப்பொருமான் அறிவிக்க அறிந்ததன்றி நானாக அறிந்தன அல்ல. அது போலவே நான் இயற்றுகின்ற எந்தச் செயலும் அப்பெருமானுடைய துணையின்றி நிகழாது என்பதை உணர்ந்து இவை அனைத்தையும் அறிபவனும் செய்பவனும் இறைவனே; நான் அல்லேன் என உணர்வதே உயிர் உய்வதற்கு உரிய வழியாகும்.

போற்றி என் வாழ் முதலாகிய பொருளே  என்ற திருவாசகத்தொடர் சிவபரம் பொருளின் முதன்மைத் தன்மையையும் தலைமையையும் நான்கு விளக்குவது. உயிர், தானே அறிந்தும் தானே செய்தும் வருவதாகக் கருதுவது தவறு. இறைவன் அறிவிக்கவே உயிர் அறிகின்றது. இறைவன் இயக்கவிக்கவே உயிர் செயல்படுகிறது. உயிர்க் குயிராய் நின்ற இறைவனின் துணையின்றி உயிர்களுக்கு எச்செயலும் இல்லை,

எல்லாம் சிவன் செயல் என்ற கருத்தினைச் சிலர் பிறழ உணர்ந்து கொள்ளுகின்றனர். எல்லாம் சிவன் செயல் என்று சொன்னால் நாம் செய்கிற தவறுகளுக்கும் நாம் பொறுப்பாளி ஆக முடியாது அல்லவா? என்பது அவர்களுடைய வினா. ஆனால் இறைவன் நம் உயிருக்கு உயிராக உள்நின்று இயக்குகிறான் ஆதலினால் அவனையன்றி நமக்குச் செயல் இல்லை என்பதே எல்லாம் சிவன் செயல் என்பதன் உட்கருத்து.

நமது உடலின் துணை கொண்டும், நம் உறுப்புகளின் துணை கொண்டும் கணக்கற்ற செயல்களை நாம் செய்து வருகிறோம். ஆயினும் நம் உடலுக்குள்ளேயே நுட்பமாக இயங்குகிற இரத்தச் சுழற்சியும், உயிர் மூச்சும் , உண்ட உணவு செரிப்பதும் இன்னும் இத்தகைய எண்ணற்ற நுட்பமான செயல்கள் எல்லாம் நாம் அறிந்து செய்வதில்லை. அவற்றின் ஆதாரம் இல்லாமல் நமக்கு வேறு செயலாற்றும் வல்லமையும் இல்லை, உலகில் உயிரோடு இருப்பதே வியப்புக்குரிய. அந்த உயிரைத் தந்த இறைவன் நம்மையும் இயக்குகிறான் என்பதில் ஐயம் இல்லை.

உடல் கருவி உலகு நுகர்ச்சிப் பொருள் ஆகியவற்றைத் தனது பெருங்கருணையினால் வழங்கிய இறைவன் உலகியல் செயற்பாடுகளில் நமக்கு உரிமை தந்திருக்கிறான். நல்லனவற்றைத் தேர்ந்து செய்யவும் அல்லனவற்றை விலக்கவும் . அறிவையும் தந்திருக்கிறான். ஆதலால்  எதனைச் செய்ய வேண்டும், எதனைச் செய்யலாகாது என்று முடிவு செய்யும் பொறுப்பு நம்முடையதே. இறைவன் அனைத்துக்கும் ஆதாரமாகிறான் என்பதே எல்லாம் சிவன் செயல் என்பதற்குக் கருத்து. இந்த அடிப்படையில் ,

  உலகினில் என்செயல்  எல்லாம் உன்விதியே நீயே
உள்நின்றும் செய்துவித்தும் செய்கின்றாய் என்றும்
நிலவுவதோர் செயல்எனக்கு இன்று உன் செயலே என்றும்
நினைவார்க்கு வினைகள் எல்லாம் நீங்கும் தானே  ( சிந்தியார் 30)

என்று அருள் நந்தி சிவம் சிவஞான சித்தியாரில் அருளிச் செய்துள்ளார்.

65 இன்று இச்சமயத்தின் அல்லதுமற்று ஏழையுடன்
ஒன்று சொலி மன்றத்து நின்றவர் ஆர் இன்றிங்கே
அங்கம் உயிர் பெறவே பாடும் அடியவரார்
எங்குமிலை கண்டாய் இது.

உலகில் கணக்கற்ற சமயங்கள் உள. எனினும் சைவசமயம் ஒன்றில் தான் இறைவனும் இறைவியுமாகத் தில்லைப் பொன் அம்பலத் திலே ஆனந்தக் கூத்து இயற்றி இறைவன் உயிர்களுக்கு அருள் உபதேசம் செய்கிறான். அதுவும் அல்லாமல் வெறும் எலும்பு உயிர் பெற்றுப் பூம்பாவை என்னும் அழகிய பெண்ணாக வடிவெடுக்கும்படி தமிழ்ப் பதிகம் பாடிய அடியவர் சைவசமயத்திலேயன்றி வேறு எந்தச் சமயத்திலும் இலர்.

ஏழை என்ற சொல் பெண் என்ற பொருளைக் குறிக்கு மேயல்லது, இன்றைய வழக்கில் உள்ளது போல வறுமையுற்றவரைக் குறிக்காது. இங்கு இச்சொல் சிகாமியம்மையைக் குறித்தது. பொன்னம்பலத்தில் ஆனந்தக் கூத்தாடுகின்ற இறைவன் தன் அருட்கூத்தின் மூலம் உயிர்களுக்குக் குறிப்பால் அருளுபதேசம் புரிகின்றான் திருநாவுக்கரசு பெருமான் இத்திருக்குறிப்பை  எங்கு வந்தாய் என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே  என்று அருளுகிறார் இறைவனது ஞான நடனம் ஊன நடனம் ஆனந்த நடனம் ஆகிய யாவும் அவன் ஐந்தொழில் இயற்றும் தன்மையையும் உயிர்களுக்கு அருள் பாலிக்கும் வண்மையையும் குறிப்பனவாக உண்மை விளக்கம் முதலிய அருள் நூல்கள் எடுத்துரைக்கின்றன. சைவ சமயத்திலன்றி வேறு எச்சயத்திலும் மன்றத்துள் நின்று ஒன்றே ஆகிய மெய்ப்பொருளை உணர்த்தியவர் யாரும் இலர் என்று ஆசிரியர் சிவ பெருமானது அருளின் திறத்தை வியந்து போற்றுகிறார்.

திருமயிலாப்பூரில் அடியவர் ஒருவரின் மகள் பாம்பு தீண்டி இறந்தனள். அவளது எலும்புகளை ஒரு குடத்திலிட்டுப் பாதுகாத்து வைத்திருந்து, திருஞான சம்பந்த நாயனார் திருமயிலைக்கு எழுந்தருளிய போது அவர் முன்னிலையில் அக்குடத்தினை வைத்தார் அந்த அடியவர். திருஞான சம்பந்த நாயனார் பணித்தபடி அக்குடத்தை திருக்கோயில் முற்றத்தில் வைத்தனர்,  நாயனாரும்  மட்டிட்ட புன்னையம் கானல்  எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி அருளினார். குடத்தினுள் இருந்த எலும்புகள் பூம்பாவை என்னும் பெண்ணாக உயிர் பெற்று எழுந்தன. இத்தகைய அற்புதம் வேறு எந்தச் சமயத்தில் நிகழ்ந்தது என்று வினவுகிறார். ஆசிரியர்.

இப்பாடலில் ஆசிரியர் சைவ சமயத்தின் சிறப்பினையும் சிவனடியார் உயர்வினையும் எடுத்துரைக்கிறார்.
திருக்களிற்றுப்படியார் பகுதி - 1

மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கனுள் திருவுந்தியாரை அடுத்துத் திருக்களிற்றுப்படியார் இடம் பெறுகிறது. இவ்விரண்டு நூல்களும் மெய்கண்ட தேவ நாயனாரின் காலத்துக்கு முற்பட்டவை என்பதை ஆராய்ச்சி அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளுகிறார்கள்.

திருவுந்தியாரின் ஆசிரியராகிய திருவியலூர் உய்யவந்ததேவ நாயனார் ஆளவந்த தேவ நாயனார் என்ற பெரியாரைத் தமது மாணவராக ஏற்றுக் கொண்டார் என்பர். ஆளவந்ததேவ  நாயனார் இயற்றியதாக நமக்கு எந்த நூலும் கிடைக்கவில்லை. இவருடை மாணவரே திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார். தம் ஆசிரியரிடத்திலே திருவுந்தியாரை முறைப்படி பாடம் கேட்ட திருக்கடவூர் உய்யவந்ததேவ நாயனார் திருஉந்தியாரில் கூறப்பட்ட செய்திகளை விளக்கியும் சில புதிய செய்திகளை இணைத்தும் இயற்றியருளினார்.

தில்லையிலே அம்பலவாணப் பெருமான் ஆனந்தக் கூத்து ஆடு கின்ற பொன்னரங்கினை ஏறிச் சென்று அடைவதற்கு ஐந்து படிகள் உள்ளன. இவை பஞ்சாக்கரப் படிகள் எனப்படும். அப்படிகளின் இருபக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாகக் கல்லால் வடிக்கப்பட்ட இரு களிறுகள் துதிக்கையை நீட்டிஇருப்பது போல அமைக்கப்பட்டுள்ளன. ஆதலால் அப்படிகள்  திருக்களிற்றுப்படி என்றும் வழங்கும் சுந்தரமூர்த்தி நாயனார் தில்லைப் பெருமானை வழிபட அங்குச் சென்று நின்ற நிகழ்ச்சியைச் சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்ற பொழுது

செய்தவப் பெரியோன் சென்று தாழ்ந்து எழுந்தான்
திருக்களிற்றுப்படி மருங்கு (தடுத்தாட். 105)
என்று கூறுவது நினையத்தகும்.

திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார் தில்லையில் சென்று தில்லைக் கூத்தப் பெருமானை வணங்கி இந்நூலைத் திருக்களிற்றுப் படியில் வைக்க அதனைக் கல்லால் இயன்ற களிறு தன் துதிக்கையால் எடுத்துக் கூத்தப் பெருமானின் திருவடி மலர்களில் வைத்தது எனவும், அதிலிருந்து இந்நூல் திருக்களிற்றுப்படியார் என்னும் பெயரினைப் பெற்றது எனவும் கூறுவர்.

கடவுள் வாழ்த்து

1 அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்று அறிக
அம்மையப்பர் அப்பரிசே வந்து அளிப்பர்  அம்மையப்பர்
எல்லா உலகுக்கும் அப்புறத்தார் இப்புறத்தும்
அல்லார்போல் நிற்பர் அவர்.

உமையொரு பாகராகிய சிவபெருமானே இவ் உலகிற்குத் தாயும் தந்தையும் என்று அறிக. உயிர்களுக்கு அருள் பாலிக்கும் பொருட்டு அம்மையப்பராக விளங்குகின்ற சிவபெருமான் திருவருளாகிய சத்தியுடன் தோன்றிப் பாச வீடும் சிவப்பேறும் அளித்தருளுவார். தன்னை விட்டு ஒரு போதும் நீங்காத அம்மையுடன் சிவபெருமான் எல்லா உலகங்களுக்கும் அப்பாற்பட்டவராய்த் திகழ்வார் எனினும் இந்த உலகத்திலும், உயிர்களின் உள்ளும் நீக்கமற நிறைந்து நிற்பார் அவர்.

உலகத்திலுள்ள சமயங்களில் எல்லாம் கடவுள் வழிபாடு என்பது அவனை ஆணாகக் கொண்டு அல்லது பெண்ணாகக் கொண்டு வழிபடுவதாகவே அமைவதைக் காண்கிறோம். சைவசமயத்தில் மட்டிலுமே வலப்பாகம் பெருமானும் இடப்பாகம் பிராட்டியுமாய் விளங்குகின்ற தொன்மைக் கோலத்தை வழிபடுகின்ற முறைமை பல நூற்றாண்டுகளாக இருந்து வருகின்றது. உமையொரு பாகன் தாயும் ஆனவன், அர்த்தநாரீசுவரன் என்றெல்லாம் வழங்குகிற பெயர்களை விடுத்து ஆசிரியர் அம்மையப்பர் என்ற திருப்பெயரைக் கூறி இறைவனை வழிபடுகிறார். எளிமையும் அழகும் நிறைந்த திருப்பெயர்  இப்பாடலில் நான்கு முறை பயன்படுத்தப் பட்டுள்ளமை ஒரு நயம்

சங்க நூல்களிலும், திருமுறைகளிலும் பல இடங்களில் இறைவனின் பெண் உரு ஒரு திறன் ஆகிய இவ்வருள் வடிவம் பலமுறை போற்றி அருளாளர்களால் வணங்கப்பட்டுள்ளது. உலக மாந்தர்க்கு அறைகூவி அறிவுறுத்துவதைப் போல இப்பாடலின் முதல் அடி அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்று அறிக என்று அமைந்துள்ளது. சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் வேறில்லை என்பதையும், அவன் தன் அருட்சத்தியை விட்டுப் பிரிவிலாக் கோமான் என்பதையும் தென்னாடுடைய சிவன் எந்நாட்டவருக்கும் இறைவன் என்பதையும் ஒரு வெண்பாவில் முதல் நான்கு சீர்களில் தெளிவுறுத்திக் கூறிய திறம் வியந்து போற்றுதற் குரியது.

தன் கருணைத் திறத்தினால் உயிர்களுக்கு அருள் பாலிக்கும் பொருட்டு இறைவன் எழுந்தருளுகிற போது தன் அருட் சத்தியோடு கூடவே தோற்றமளிப்பான் என்பது அதனை அடுத்த அடியில் எடுத்துரைக்கப்பட்டது. உயிர்களின் பக்குவத்துக்கு ஏற்றவாறும் வரிசையறிந்தும் அருள் வழங்குவான் என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.

அம்மையப்பராகிய இறைவன் யாவற்றையும் கடந்து நிற்பவன் யாவற்றையும் கடந்து எங்கோ தொலைதூரத்தில் உள்ளனன் என்று கருதல் வேண்டா. உலகிலும் உயிர்களிலும் உள்நிறைந்து. உயிர்க்கு உயிராகி அவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றி விளங்குகிறான் இறைவன் என்பதனை இப்புறத்தும் அல்லார் போல் நிற்பர் என்று குறித்தார். கடந்த நிலையும் ஒவ்வொரு பொருளின் உள்ளே நிறைந்த நிலையும் உடையவன் இறைவன். எனவே அவன் கடவுள் நிறைந்த நிலையும் உடையவன் இறைவன். எனவே அவன் கடவுள் எனப்பட்டான் . எவ்வௌர் தன்மையும் தன்வயிற்படுத்துத் தானே ஆகிய தயாபரன் எம் இறை என்ற மாணிக்கவாசகப் பெருமான் திருவாக்கும் நினைதற்குரியது. அண்டங்கடந்தும் அணுவுக்குள் அணுவாகியும் இறைவன் நிற்பான் என்பது இப்பாடலால் உணர்த்தப்பட்டது. அம்மையோடு அப்பனாகிச் செறிவு ஒழியாது நின்ற சிவனடி சென்னி வைப்பாம் என்ற அருள்நந்தி சிவனாரின் திருவாக்கும் காண்க.

2 தம்மில் தலைப்பட்டார் பாலே தலைப்பட்டுத்
தம்மில் தலைப்படுதல் தாம் உணரின் தம்மில்
நிலைப்படுவர் ஓரிருவர் நீக்கி நிலை ஆக்கித்
தலைப்படுவர் தாம் அத்தலை.

உயிரின் பக்குவம் அறிந்து திருமேனி தாங்கி, அதற்கு அருள் பாலிக்கும் பொருட்டு வந்த ஞான ஆசிரியனின் திருவடிகளை வணங்கி உயிர் இறைவனோடு பொருந்தும் முறைமையினை அவரிடத்திலே உபதேச வழியால் பெற்று அவ்வழியிலே தவறாது ஒழுகி வந்தால் சத்தியும் சிவமுமாகிய இறைவன் உயிரை ஆட்கொள்ளுவான். அப்போது உயிரைப் பற்றியிருந்த தளைகள் நீங்கித் திருவருள் உயிரின் கண் நிலை பெறும். அதனால் சிவஞானமும் அதன் வழி மெய்ப்பொருளாகிய சிவமும் அப்பொழுதிலேயே அறியப்படும்.

இப்பாடலில் தம் தாம் தலை என்ற மூன்று சொற்களும் சொற்பின் வரும் நிலையாக ஆசிரியரால் அமைக்கப்பட்டன. தம்மில் தலைப் பட்டார் என்ற இடத்து தம் என்ற சொல்லால் குறிக்கப்பட்டது உயிர். உயிர் தன் சிற்றறிவினால் இறைவனை அடைய இயலாது. எனவே இறைவனே உயிரின் பக்குவ நிலை அறிந்து அதற்கு உண்மை ஞானம் உணர்த்துவதற்காக ஆசிரியத் திருமேனி தாங்கி எழுந்தருளுவான். அவருடைய திருவடியை உறுதியாகப் பற்றிக் கொண்டு உயிரும் சிவமும் பொருந்தும் நிலையை ஞான ஆசிரியன் உணர்த்த உயிர் உணருமாகில் அதனிடத்தே சத்தியும் சிவமுமாய ஒன்றே ஆகிய இருவர் நிலைத்து நிற்பர். உலகத்துப் பொருள்கள் மீது எழுகின்ற விருப்பம் தளைகளினால் உண்டாவது. அத்தளைகள் யாவற்றையும் நீக்கி உயிரைத் திருவருளிலே நிலைபெறுமாறு செய்து அந்நிலையிலேயே  உயிர்களுக்குக் காட்சி கொடுத்து அருளுவான். தாம் உணரின் என்ற இடத்து தாம் என்பது உயிரையும், தலைப்படுவர் தாம் அத்தலை என்ற இடத்துத் தாம் என்ற சொல் இறைவனையும் குறிக்கின்றன.

இப்பாடல் ,தலைப்பட்டார் நீர்த் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர்  என்ற திருக்குறளை நினைவூட்டுவதாகும்.

3 என்னறிவு சென்றளவில் யான் நின்று அறிந்தபடி
என்னறிவிலார் அறிக என்றொருவன்  சொன்னபடி
சொல்லக்கேள் என்று ஒருவன் சொன்னான் எனக்கு அதனைச்
சொல்லக்கேள் யான் உனக்கு அச் சொல்.

நான் அறிகிறேன் என்று எண்ணும் தன் முனைப்பு என்னை விட்டு நீங்கிய அளவில் எனக்கு ஒருவன் ஞான ஆசிரியனாக எழுந்தருளி அறிவுறுத்தினான். அந்நிலையில் அதனைப் பின்பற்றி நின்று நான் அறிந்த வற்றை ஆன்ம போதம் கெட்டுத் திருவருள் வழிப்பட்டு நின்றவர்கள் எல்லாம் கேட்டுப் பயன்  படும்படி யான் கேட்டவற்றை உனக்குச் சொல்லுவேன் என்று என் ஆசிரியப் பெருமான் எனக்கு உணர்த்தினான் . அதனை அம் முறைமையிலேயே உனக்கு நான் உணர்த்துவேன். அதனைக் கேட்டு நீ பயன் பெறுவாயாக.

திருக்களிற்றுப்படியாராகிய இந்நூல் எழுந்த வரலாற்றைக் கூறுவது இப்பாடல் தன்முனைப்பற்றவராகிய திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் இறைவன் திருவருள் வழிநின்று பக்குவம் பெற்றவராகிய ஆளவந்த தேவ நாயனாருக்குத் திருவுந்தியார் என்ற ஞான நூலை வழங்கி அறிவுறுத்தினார். ஆளவந்த தேவ நாயனார் திருவுந்தியார்ப் பொருளை தம் மாணவராகிய திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனாருக்கு உபதேசித்தார். அம்முறையிலே பிறழாது அவர் தமது மாணவர்க்குத் திருக்களிற்றுப் படியாராகிய இந்நூலை அருளிச் செய்தார் என்பது இப்பாடலின் திரண்ட பொருள்.

என் அறிவு சென்ற அளவில் யான் நின்று அறிந்தபடி சொன்ன ஒருவர் திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார். சொன்னபடி சொல்லக் கேள் என்ற ஒருவன் ஆளுடைய தேவ நாயனார். யான் உனக்கு அச் சொல் சொல்லக் கேள் என்று அருளியவர் இந்நூல் ஆசிரியர்.

இதுவரை வந்த மூன்று பாடல்களும் கடவுள் வாழ்த்தாகவும். நூற் பயனாகவும், நூல் வரலாறு ஆகவும் அமைந்துள்ளன. இதன் பின்னர் வரும் பாடல்கள் திருவுந்தியாகப் பாடல்களை அடியொற்றி அவற்றின் தெளிபொருள் விளக்கமாக அமைகின்றன.

4 அகளமய மாய்நின்ற அம்பலத்து எம் கூத்தன்
சகளமயம் போல் உலகில் தங்கி  நிகளமாம்
ஆணவ மூல மலம் அகல ஆண்டான் காண்
மாணவக என்னுடனாய் வந்து.

வடிவம் குறியும் அற்ற பரம்பொருளாகிய அழகிய சிற்றம்பல முடைய கூத்தப் பெருமான் தனது பேரருளால் திருமேனி தாங்கி ஞான ஆசிரியனாக என்முன் தோன்றி என்னைப் பிணித்திருந்த மூலமலமாகிய ஆணவ மலம் என்னை விட்டு நீங்குமாறு என்னைத் தளையிலிருந்து விடுவித்து மாணவனே, என்னுடனே நின்று என்னை ஆண்டு கொண்டான்.

இப்பாடல் ஆசிரியராகிய திருகடவூர் உய்யவந்த தேவநாயனார் தம் மாணவனை முன்னிலைப்படுத்தி விளித்து எல்லையற்ற பரம் பொருள் தன் பெருங்கருணையால் திரு உருத் தாங்கி ஞான ஆசிரியனாய் எழுந்தருளி வந்து ஆணவமாகிய மூலமலத்தினை அகற்றிப் பாச விலங்கொடித்துத் தன்னை ஆட்கொண்ட கருணைத் திறத்தைப் போற்றுகிறார்.

அகளம், உருவற்று எல்லையற்று விளங்கும் தன்மை. சகளம், உருவம் கொண்டதனால் எல்லைக்கு உட்பட்ட திருமேனி சகளமயம் என்பது நம் போலும் மாயையின் காரியங்களால் ஆன உடம்பு அன்று என்று உணர்த்துவதற்குச் சகள மயம் போல உலகில் தங்கி என்றார். எனவே தோற்றத்தில் சகளமும் உண்மையால் அகளமும் என்று தெளிவுறுத்தினார். நிகளம் சங்கிலி, விலங்கு. ஆணவமாகிய மூலமலம் உயிரைப் பிணிந்து உள்ளதனால் நிகளமாம் ஆணவ மூலமலம் என்று குறிப்பிட்டார். ஒரு நாளும் அழியாத் தன்மையுடையதாகிய ஆணவ மலத்தை அதன் வலிகெடச் செய்து உயிருக்கு உண்மை ஞானத்தை அருளுவதை இப்பாடலில் போற்றினார்.

5 ஆகமங்கள் எங்கே அறுசமயம் தான் எங்கே
யோகங்கள் எங்கே உணர்வு எங்கே  பாகத்து
அருள் வடிவம் தானுமாய் ஆண்டிலனேல் அந்தப்
பெருவடிவை யார் அறிவார் பேசு

அம்மையப்பராகிய இறைவன் தன்னை விட்டுப் பிரியாத திருவருளும் தானுமாக எளிவந்து பக்குவம் பெற்ற உயிர்களை ஆண்டிலனேல் அண்டங்கடந்து நிற்கும் அவனுடைய பெருவடிவை யாரால் அறிய இயலும்? அவ்வாறே இறைவன் அருளே திருமேனியாகக் கொண்டு ஆக மங்களை அருளிச்  செய்யாவிடிலோ, அகச் சமயங்கள் ஆறினையும் உணர்த்தாவிடிலோ, யோகியாய் இருந்து உயிர்களுக்கு யோகத்தை உணர்த்தாவிடிலோ இப்பெருமை மிக்க அருள் நூலும் அருள் வழியும் உலகில் எவ்வாறு நிலைபெறும்?  சைவ ஆகமங்கள் இருபத்து எட்டும் சிவபெருமான் திருமுகங்கள் ஐந்திலிருந்தும் தோன்றின என்பர் பெரியோர். ஆறு சமயத்து அவரவரைத் தேற்றியவனும் சிவபெருமானே என்பது அப்பர் பெருமான் அருள்வாக்கு சிவபெருமான் யோகியாய் இருந்து உயிர்களுக்கு யோகத்தை உணர்த்தியும், போகிறாய் இருந்து உயிர்களுக்கு போகத்தை வழங்கியும் அருள் பாலிக்கிறான் என்பது அருளாளர்கள் கூறும் உண்மை. உயிர் உணர்ந்த உணரும் இயல்பினை உடையது. எனவே கட்டு நிலையில் உயிர்கள் அறியாவண்ணம் உள்நின்று உணர்த்தியும், வீட்டு நிலையில் உயிர்களின் பக்குவத்திற்கு ஏற்பத் தன்மை முன்னிலை படர்க்கை ஆகிய மூவிடங்களில் நின்று உணர்த்தியும் அருள்பவன் சிவபெருமானே ஆதலால் உணர்வு எங்கே என்றும் வினவினார்.

தானே வந்து இரங்கித் தலையளித்து ஆட்கொண்டு அருளும் சத்தி சிவத்தின் கருணையினால் உலகில் ஆகமங்களும் அறுவகைச் சமயங்களும் யோக நெறியும் பயிற்சியும் இறை உணர்வும் திகழ்கின்றன. என்பது இப்பாடலில் விளக்கப்பட்டுள்ளது.

6 சாத்திரத்தை ஓதினார்க்குச் சற்குருவின் தன்வசன
மாத்திரத்தே வாய்க்கும்நலம் வந்துஉறுமே  ஆர்த்தகடல்
தண்ணீர் குடித்தவர்க்குத தாகம் தணிந்திடுமோ
தெள்நீர்மையாய் இதனைச் செப்பு.

ஞானாசிரியரின் துணையின்றி ஞான நூல்களைக் கற்கப் புகுவார் அந்நூற்களின் மெய்ப்பொருளை உணர இயலாது. அவ்வாறின்றி நல்ல ஞானாசிரியனை அடுத்து உபதேசம் பெறுவார் அவ்வுபதேசத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே நன்னலம் பெற நிறைந்த ஞானத்தைப் பெறுவார்கள். அலைகள் ஆரவாரிக்கின்ற பெருங்கடல் ஆயினும் அதில் உள்ள நீரைக் குடித்தவர்க்கு நீர்வேட்கை தணிந்திடாது. தெளிந்த அறிவினை உடைய மாணவனே இதனை அறிவாயாக.

ஆரணமும் அருள் நூல்களும் கடல் போல் விரிந்துள்ளன. தக்க ஆசிரியரின் துணையின்றி அந்நூல்களைக் கற்க முற்படுகிறவர்களுக்கு அவற்றின் தெளித்த பொருள் விளங்குவதில்லை. ஆனால் ஞானாசிரியர் ஒருவர் உணர்த்துகிற மொழியைக் கேட்ட அளவிலேயே பிறவி வெப்பத்தினால் தோன்றிய மயக்கங்கள் எல்லாம் அற்றுத் தெளிவு பிறக்கும்.

சாத்திரக் கடலுக்கு ஒப்பாக ஆர்க்கின்ற அலைகடல் உவமை கூறப் பட்டது. எல்லையற்ற பெருங்கடல் போன்றன எல்லையற்ற ஞான நூல்கள். கடல் நீரை அள்ளிப்பருகினால் அதன் உவர்ப்புத் தன்மையினால் நீர் வேட்கை தணியாது. ஆனால் அருகிலுள்ள சிறிய ஊற்றின் தண்ணீர் விடாய் தீர்ப்பது போன்று ஞான ஆசிரியரின் அருள் மொழி ஞான வேட்கையைத் தணிக்கும்.

கடல் பெரிது. தண்ணீரும் ஆகாது. அதன் அருகே சிறு ஊறல்  உண்ணீரும் ஆகிவிடும் என்ற அறநூல் கருத்தும்,உண்ணீர் மருங்கின் அதர் பலவாகும் என்ற புறநானூற்றுப் பாடல் வரியும் இங்கு நினைதற்குரியன.

இப்பாடலால் வெறும் நூலறிவு பயன் தராது என்பதும் ஞானாசிரியன் வழிகாட்ட, அவனது உபதேச மொழிகளைக் கேட்ட அளவிலே பயன் விளையும் என்பதும் உணர்த்தப்பட்டன. தெண்ணீர்மையாய் என்று மாணவனை விளித்தார். அவன் தெளிந்த  அறிவினை உடையவன் என்பதை உணர்த்துவதற்காக.

7 இன்று பசுவின் மலம் அன்றே இவ்வுலகில்
நின்ற மலமனைத்தும் நீக்குவதிங்கு  என்றால்
உருவுடையான் அன்றே உருவழியப் பாயும்
உருவருள வல்லான் உரை.

நம் போலவே மாயையின் காரியங்களாகிய உடல் கருவி முதலியவற்றில் கட்டுண்டு காட்சி தரும் குரு நம்மில் ஒருவராதல் அன்றி நம்மைக் கட்டியிருக்கும் மலங்களை விடுவிக்க வல்லவரோ என்ற ஐயத்தைத் தீர்ப்பது இந்தப் பாடல்.

இவ்வுலகில் பசுவின் சாணம் இடங்களைத் தூய்மைப்படுத்துவதற்கும். அனைந்து ஆட்டுதற்கும், திருநீற்றினை விளைவிப்பதற்கும் பயன் படுத்தப்படுகிறது. பசுவின் சாணம் அழுக்கு எனக் கூறப்படுமாயினும் புற அழுக்கையும் அக அழுக்கையும் போக்குவதற்குப் பயன்படுத்துவது போல ஞானாசிரியன் மேற்கொண்ட உருவம் மாணவரது பாசங்கள் அனைத்தையும் அகற்றும். ஞானமே வடிவாக உடைய உருவினை வழங்க வல்லது ஆகும்.

கோமயம் என்று உயர்த்து வழங்கப்படுகிற ஆன் சாணம் இறைவனுக்கு உகந்தது என்பது திருநாவுக்கரசு நாயனார் ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல் என்று அருளியமையால் விளங்கும். ஆன்சாணமே பராவணமாகிய திருநீற்றை விளைவிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. திருநீற்றின் பெருமையைத் திருஞானசம்பந்த நாயனார் ஒரு பதிகம் முழுவதும் எடுத்துக் கூறிப் பாராட்டுகிறார். திருநீறு புறத்தூய்மை மட்டுமின்றி அகத்தூய்மையையும் தரும். பூசும் நீறுபோல் உள்ளும் புனிதர்கள் என்பது சேக்கிழார் திருவாக்கு. அழுக்கைக் கொண்டு அழுக்கைப் போக்குவது போல உயிர்களின் அழுக்கைப் போக்குவதற்காக அவற்றைப் போலவே உடல் தாங்கி ஞான ஆசிரியனாகி இறைவன் எழுந்தருளுவான். இதில் மாறுபாடு உண்டா கூறுவாயாக என்று கேட்கும் முறையில் இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடலில் உரு என்ற சொல் மூன்று இடங்களில் வந்தது. முதலில் வருகிற உரு ஆசிரியன் திருமேனி தாங்கி வருவதையும் இரண்டாவது உரு மாயைத் தொடக்கால் ஆன உயிர்களது உடலையும், மூன்றாவது உரு ஞானமே வடிவான நிலையினையும் குறிக்கின்றன.

8 கண்டத்தைக் கொண்டு கருமம் முடித்தவரே
அண்டத்தின் அப்புறத்தது என்னாதே  அண்டத்தின்
அப்புறமும் இப்புறமும் ஆரறிவுஞ் சென்றறியும்
எப்புறமும் கண்டவர்கள் இன்று.

காணப்பட்ட திருமேனியுடைய ஞான ஆசிரியனின் உபதேச மொழிகளைக் கடைப்பிடித்து, தன் முனைப்பற்றுத் திருவருளில் ஒடுங்கி நின்றார்களே தமது வினைத் தொடக்கை அறுத்தவர்கள் ஆவார்கள். அத்தகையவர்களே பரம்பொருளை உலகின் உள்நின்றது என்றும், உலகைக் கடந்து நின்றது என்றும் பலவாறு ஊசலிடாமல் அப்பரம்பொருள் அண்டத்தின் உள்ளும் இருக்கும் புறம்பும் இருக்கும் எப்புறத்தும் இருக்கும். அறிவுக்கு அறிவாகவும் அறிவைக் கடந்ததாகவும் இருக்கும் என்று அறிந்தவர்கள் ஆவார்கள்.

முன்னே வந்து எதிர் தோன்றும் ஞான ஆசிரியன் வழங்கியருளுகின்ற மெய்ஞ்ஞானப் பொருள் மொழிகளை அவன் வழங்கியவாறே கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து நிட்டை கூடி அருளில் தலைப்பட்டுத் தமதுவினைத் தொடர்பை அறுத்துக் கொண்டவர்கள் பரம்பொருளின் உண்மை நிலையை ஐயம் திரிபற உணர்ந்தவர்கள் ஆவார்கள். ஞானாசிரியன் வழங்கும் முறை உயிரின் பக்குவத்திற்கேற்பப் பல்வகைப்படும். திரு நோக்கால் , தொட்டருள்வதால், திருவாக்கால், மானதத்தால் இன்னபிற வகைகளால் உணர்த்தும் முறைமைகளை எல்லாம் இதனுள் அடக்கிப் பொருள் கொள்க.

கருமம் முடித்தது என்பது வினைத் தொடர்பை அறுத்ததோடு பாச நீக்கம் முழுவதையும் உணர்த்திற்று. பரம்பொருள் அண்டத்தின் இப்புறமும் அறிவில் கலந்து உயிருக்கு உயிராகியும் சொல்லும் மனமும் கடந்தது என்றும் திருவருள் பெற்ற பேரறிவாளர்கள் தெளிய உணர்வார்கள் என்பதை இப்பாடல் உணர்த்திற்று .

9 அன்று முதல் ஆரேனும் ஆளாய் உடனாகிச்
சென்றவர்க்கும் இன்னது எனச் சென்றதில்லை  இன்று இதனை
எவ்வாறு இருந்த தென்று எவ்வண்ணஞ் சொல்லுகேன்
அவ்வாறு இருந்தது அது.

பரம்பொருளாகிய சிவபெருமானுடைய திருவடிக்கு ஆளாகி அவன் ஆணைக்கு ஆட்பட்ட பெரியவர்கள் யாராயினும் அவர்கள் அனைவரும் இறைவனின் பேரின்பம் இத்தன்மையது என்று முற்ற அறிந்த தில்லை அவ்வாறு இருக்க அப்பரம் பொருள் வழங்குகின்ற திருவடி இன்பம் எவ்வாறு இருக்கும் என்று நான் எப்படிக் கூறுதல் கூடும்? அப்பேரின்பம் தனக்கு ஒப்பும் உவமையும் இல்லாமல் அத்தன்மையதாகவே இருந்தது என்பதன்றி வேறு என்ன சொல்ல முடியும்?

உலகில் தோன்றிய உயிர்கள் எண்ணிறந்தன. அவ்வாறே இறை வனின் திருவடிப்பேறு பெற்ற உயிர்களும் கணக்கற்றன.  பிறந்தநாள் மேலும் பிறக்கும் நாள் போலும் துறந்தோர் துறப்போர் தொகை  என்று திருவருட் பயன் (பாடல் 11) உணர்த்துகிறது. அவ்வாறு திருவடிப்பேறு அடைந்தோர் யாரே ஆயினும் அவர்கள் இறைவனுக்கு ஆட்பட்டு உடனாகி எல்லையில்லாப் பேரின்பம் துய்த்தனரேயன்றி, அதனை அளவிட்டு அறிந்தார்கள் அல்லர். பேசுவதற்கரிய பேரின்ப வெள்ளத்தை எவ்வாறு இருந்தது என்று எப்படிச் சொல்லுவேன் அது அப்படித்தான் இருந்தது என்பது அன்றி ஒப்பிடுவதற்கோ உவமை சொல்லுவதற்கோ இயலாது.

சிவானந்தப் பெருவெள்ளம் அகத்தில் கண்கொண்டு அனுபவிக்கப்படுகிற ஆனந்தமேயன்றி விண்டுரைக்க முடியாத தன்மை உடையது என்பதைத் திருமந்திரத்தில் திருமூல தேவநாயனார் மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய சுகத்தைச் சொல் எனில் சொல்லுமாறு எங்ஙனம் என்று கூறியருளுகிறார். சிவானுபவம் சொற்பதம் கடந்தது என்பதை இந்த அரிய பாடலால் உணர்த்தினார் ஆசிரியர்.

ஆரேனும் ஆளாய் உடனாகி என்பதற்குத் திருமாலும் நான்முகனுமாகிய தேவர்களும் கூட இறைவனுக்கு ஆட்பட்டு அவன் ஏவல் வழி ஒழுகினார்களேயன்றி அவன் இன்ன தன்மையன் என்று அறிந்தாரில்லை என்று பொருள் கொள்வர் சில உரையாசிரியர்கள்.

10 ஒன்றுங் குறியே குறியாத லால் அதனுக்கு
ஒன்றுங்குறி யொன்று இலாமையினால்   ஒன்றோடு
 உவமிக்க லாவதுவும் தானில்லை ஓவாத்
தவமிக்கா ரே இதற்குச் சான்று.

சிவபெருமானுக்கு அவனுடன் நீக்கமின்றி நிற்கும் அவனது திருவருளே வடிவமாகும். அத்திருவருளைத் தவிரப் பரம்பொருளோடு பொருத்திக் கூறக் கூடிய அடையாளம் வேறு ஒன்றும் இல்லை. பெருமானுக்கு உவமை காட்டிச் சொல்லத் தக்க பொருளும் உலகத்தில் வேறு எதுவுமில்லை. எனின் அத்தகையதொரு செம்பொருள் உண்டு என்பதற்குச் சான்று எதுவெனின் அவனோடு ஒற்றித்திருந்து இடைவிடாத தவத்தினை உடைய திருவருட் செல்வர்களேயாவர்.

ஒன்றுதல்  பொருந்துதல். குறிகளும் அடையாளமும் குறித்துக் சொல்லுவதற்கரிய பரம்பொருளுக்கு அவனது திருவருளையன்றித் திரு மேனி என்ற வேறு ஒன்று இல்லை. இதனையே சிவஞான சித்தியாரில்

உருஅருள் குணங்களோடும் உணர்வு அருள் உருவில் தோன்றும்
கருமமும் அருள் அரன்தன் கரசரணாதி சாங்கம்
தரும் அருள் உபாங்கம் எல்லாம் தான் அருள் தனக்கு ஒன்று (இன்று)
அருள்உரு உயிருக்கு என்றே ஆக்கினன் அசிந்தன் அன்றே (பாடல்67)

என்னும் திருப்பாடலில் ஆசிரியர் அருள்நந்தி சிவம் எடுத்துரைத்தார். எனவே சிவபெருமானோடு பொருந்திய அருளே அவனுக்கு அடையாளமாகி வேறு ஒன்றும் அடையாளமாகப் பொருந்துவதில்லை என்றார். அடையாளம் இல்லையேனும் உவமை கூறத்தகுமோ எனின் அதுவும் இல்லை என்பதை அறுதியிட்டுக் கூறினார். தனக்கு உவமை இல்லாதான் என்று திருவள்ளுவரும், ஒப்புடையன் அல்லன்... ஓர் உவமன் இல்லி என்று திருநாவுக்கரசு நாயனாரும், ஒப்பு இன்மையான் (திருவருட்பயன்3) என்று உமாபதி சிவனாரும் அருளியவற்றை இங்கு நினைவு கூர்க.

ஒப்பற்ற பரம்பொருளை உணர்வதுதான் எப்படி? அதற்குச் சான்று ஏது? என்று கேட்பாருக்கு ஓயாத பெருந்தவத்தில் உள்ளம் திளைத்து அவனோடு ஒன்றியிருக்கும் சிந்தையுடைய அவனது மெய்யடியார்களே இதற்குச் சான்று என்று கூறினார்.

11 ஆற்றால் அலைகடற்கே பாய்ந்த நீர் அந்நீர்மை
மாற்றி அவ் வாற்றான் மறித்தாற்போல்  தோற்றிப்
புலன்களெனப் போதம் புறம்பொழியும் நந்தம்
மலங்களற மாற்றுவிக்கும் வந்து.

ஆற்றின் வழியே சென்று அலைகடலில் பாய்ந்த நீர் தன் இயல்பான தன்மை கெட்டுக் கடல் நீரின் தன்மையை ஏற்கும். ஏதேனும் ஒரு காரணத்தால் அந்நீர் மீண்டும் ஆற்றின் உள்ளே மறித்துப் பாய நேரிட்டாலும் அது மீண்டும் ஆற்று நீரின் தன்மையைப் பெறாது கடல் நீரின் தன்மையையே கொண்டு இருக்கும். அதுபோலத் தன் முனைப்பற்றுச் சிவபரம் பொருளோடு ஒன்றி அவன் திருவடிகளையே சிந்தித்திருப்பார்க்கு அவர்களது அறிவு புலன்வழிச் செல்லாமலும் பசுகரணங்களாக அல்லாமலும் சிவகரணங்களாகவே விளங்கும். அன்றியும் அது நமது மலங்களையெல்லாம் அறவே மாற்றியருளும்.

இப்பாடல் அணைந்தோர் தன்மை என்ற சீவன் முத்தரது நிலையை எடுத்து விளக்குகிறது. முந்தியபாடலில் மெய்யடியார்களே இறைவனுடைய திருவருட் பெருக்கை நமக்கு உணர்த்தும் சான்றுகளாவர் எனக் கூறிய ஆசிரியர் இப்பாடலில் அதன் தொடர்ச்சியாக மேலும் சிலவற்றைக் கூறலுற்றார். சீவன் முத்தர்கள் சில நேரங்களில் புலன் வழிச் செல்லும் உணர்வோடுகூடக் காட்சியளிக்கிறார்களே என்ற வினாவிற்கு , சீவன் முத்தர்கள் புறத்தே செல்லும் புலன் உணர்வு கொண்டவர்கள் போல் தோன்றினும் அவர்களின் பசுகரணங்கள் யாவும் சிவ கரணம் ஆனதால் உலகில் தோய்வற நிற்பர் என்றார்.

ஆற்றலிருந்து கடலில் பாய்ந்த நீர் , உவா நாட்களிலும், கடல் பொங்கும் காலத்தும் மீண்டும் ஆற்றுக்குள்ளேயே புகும். அவ்வாறு நிகழும் போதும் அப்படிப் புகுந்த நீர் கடல் நீரின் தன்மையையே கொண்டிருக்குமே அல்லாமல் ஆற்று நீராக இருக்காது என்ற உவமையை எடுத்துக் காட்டுகிறார். இங்கே கடல் நீர் இறைவனது திருவருட் பெருக்கையும் ஆற்று நீர் அவனது திருவடியை அடைந்த மெய்யடியார்களையும் குறித்தன.

புலன்வழிப்படர்வது போன்ற மெய்யடியார்களின் உணர்வும் நம் போல் வாரது மலப்பிணிப்பை அறவே மாற்றுவிப்பதற்குப் பயன்படுமே யன்றி வேறன்று என்றும் உறுதிபடக் கூறினார்.

12 பாலை நெய்தல் பாடியதும் பாம் பொழியப் பாடியதும்
காலனை அன்று ஏவிக்கராம் கொண்ட பாலன்
மரணந் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நந்தம்
கரணம்போல் அல்லாமை காண்.

சிவபெருமான் திருவருளால் அவனுடைய அடியார்களாகிய மூவர் முதலிகளும் பாலை நிலத்தை நெய்தல் நிலமாகும்படி திருப்பதிகம் பாடியதும், பாம்பு கடித்து இறந்த சிறுவனை மீளவும் உயிர்ப்பித்ததும், பல் லாண்டுகளுக்கு முன்பு முதலையால் விழுங்கப்பெற்ற பாலனைத் திருப்பதிகம் பாடி உயரோடு மீட்டுக் கொடுத்தும் ஆகிய இத்தகைய பல அற்புதச் செயல்களைச் செய்தனர். இது எவ்வாறு நிகழ்ந்தது எனில் அந்த அருளாளர்களின் கரணங்கள் யாவும் நம் போல்வார் கரணங்களைப் போலப் பசு கரணமாய் நில்லாமல்  சிவகரணங்களாய்த் திகழ்ந்தமையினாலேதான் இவ்வற்புதச் செயல்கள் நிகழ்ந்தன என்பதை அறிவாயாக.

திருஞான சம்பந்த நாயனார் மூவாண்டில் ஞானப்பால் அருந்தித் திருப்பெருகு சிவஞானம் கைவரப்பெற்றார் . அவர்தம் தாயார் தோன்றிய பதியாகிய திருநனி பள்ளிக்குச் செல்லும்போது அப்பதி பாலை நிலமாக இருப்பதைக் கண்டார். காரைகள் கூகை முல்லை  என்று தொடங்கும் திருப்பதிகத்தை அவர் அருளிச் செய்யப் பாலை நிலம் நெய்தல் நிலமாக மாறியது.

திருநாவுக்கரசு நாயனார் திங்களூரில் அப்பூதியடிகளின் மூத்த திருமகன் பாம்பு தீண்டி இறந்த போது ஒன்றுகொலாம் என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி அவன் மீண்டும் உயிருடன் எழுமாறு இறைவன் திருவருளால் வியத்தகு செயலைச் செய்தார்.

சுந்தரமூர்த்தி நாயனார் திருப்புக்கொளியூர் அவிநாசியிலே பல்லாண்டுகளுக்கு முன் முதலையால் விழுங்கப் பெற்ற சிறுவன் ஒருவனை  எற்றான் மறக்கேன் என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி அப்பதிகத்தின் நான்காவது பாடலில் கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே  என்று வேண்டவே ,மாண்ட சிறுவன் இறைவன் திருவருளால் மீண்டும் எழுந்த அற்புத நிகழ்ச்சி நிகழ்ந்தது.

இம்மூன்றும் அற்புதங்களும் திகழ்ந்தமைக்குக் காரணம் நாயன்மார் மூவரின் கரணங்கள் யாவும் சிவகரணங்களாகத் திகழ்ந்தமையே என்று விளக்குகிறார் ஆசிரியர். அருளாளர்கள் மூவரும் தற்போதம் நீங்கித் தம் முனைப்பற்று இறைவன் திருவருள் வழியிலே ஒழுகியவர் ஆதலால் வியத்தகு செயல்களை ஆற்றினார்கள்,

சங்கரர் திக்கு விசயம் பற்றிக் கூறும் நூலில் ஆதிசங்கரர் இறந்து போன ஒரு சிறுவனைத் தாம் மீட்டுத் தருவதாக மும்முறைமந்திரம் செபித்து நீர் தெளித்தும் அவன் உயிர் பெற்று  ஏழவில்லை என்பதும், வானிலிருந்து எழுந்த அசரீரி வாக்கு அவரை அம்முயற்சியில் ஈடுபடலாகாது என்று தடுத்தமையும் இங்கு நினைவு கூரற்பாலன. நான்செய்கிறேன் என்னும் தன் முனைப்புப் பசுகரணமாய் நிற்பதையும் இறைவன் திருவருள் வழி நடந்தேறட்டும் என்ற நினைப்பு பசு கரணங் கெட்டுச் சில கரணமாய் நிற்றலையும் இப்பாடலில் உணர்த்தினார்.

13 தூங்கினரைத் தூய சயனத்தே விட்டதற்பின்
தாங்களே சட்ட உறங்குவர்கள்  ஆங்கது போல்
ஐயன் அருட்கடைக்கண் ஆண்டதன் பின் அப்பொருளாய்ப்
பைய விளையுமெனப் பார்.

உறக்கம் வந்தவர்களைத் தூய்மையான படுக்கையிலே விட்டதன் பின் அவர்கள் தூங்குகிறோம் என்ற உணர்வின்றி எவ்வித முயற்சியுமின்றித் தாமாகவே ஆழ்துயில் கொள்ளுவார்கள். அதுபோலவே சரியை, கிரியை, யோகம் என்ற மூவகைத் தொண்டாற்றிப் பக்குவப் பட்ட உயிர்கள் ஞான ஆசிரியரது திருக்கடைக்கண் நோக்கம் வாய்க்கப் பெற்ற அளவிலே இறைவனுக்கு மீளா அடிமைத்திறம் பூண்டு, அவன் திருவருள் வழி எந்த முயற்சியும் இன்றி நிற்பார்கள். அதன் பின்னர் அவர்களிடத்துச் சிவபெருமானின் திருவருள் ஞான விளக்கமும் மெல்ல மெல்ல விளையும். இதனை முன் பாடலில் கூறிய அருளாளர்களின் வாழ்வில் பார்த்துத் தெளிந்து கொள்க.

தூங்குதல் என்பது இங்கே உயிர் தன் செயலற்றுத் தான் அற்று, உணர்வு புறத்தே செல்லாது சிவபெருமானின் திருவருளிலே ஒடுங்கி இருப்பதை உணர்த்துகிறது.  தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம் என்ற தாயுமானவர் வாக்கும் இந்த நிலையையே உணர்த்திற்று.

திருவருட் பயனில் ஆசிரியர் உமாபதி சிவம் அணைந்தோர் தன்மை கூறுமிடத்து, ஓங்கு உணர்வின் உள் அடங்கி உள்ளத்துள் இன்பு னையே ஒடுங்கத் தூங்குவர் மற்று ஏது உண்டு சொல்  என்று இக்கருத்தினையே விளக்குகின்றார்.

சட்ட உறங்குவார்கள் என்பது செம்மையாகத் தூங்குவார்கள் என்ற பொருளை உணர்த்திற்று. பிறர்தலையீடும், தமது முயற்சியுமற்றுத் தாமே துயில் கொள்ளுவர் என்பதாம்.

அவ்வாறே தலைவனாகிய ஞான ஆசிரியன் திருக்கடைக்கண் சாத்தி ஆண்டு கொண்டதன் பின் தன் முனைப்பற்றுத் திருவருளிலே உறைத்து நின்று ஒழுகுவார்க்கு  அப்பொருளாய் என்று குறிக்கப்பட்ட சிவபரம் பொருளின் திருவடி ஞானம் மெல்ல விளையும். இதற்கு எடுத்துக் காட்டு முன் கூறப்பட்ட பாடலில் குறிப்பிடப்பட்ட அடியார்களின் வரலாறே.

14 உள்ள முதலனைத்தும் ஒன்றாய் உருகவரின்
உள்ளம் உருகவந்து உன்னுடனாம் தெள்ளி
உணருபவர் தாங்கள் உளராக என்றும்
புணரவர நில்லாப் பொருள்.

தத்துவங்கள் யாவும் உயிரை விட்டு நீங்கிய நிலையிலே திருவருள் சத்தி உயிர் மீது பதியும் அந்த நிலையில் சிவபரம் பொருள் உயிரின் உள்ளம் உருக அதனுடன் வந்து பொருந்தும் அதுவல்லாமல் பரம் பொருளை இத்தன்மையது என்று நான்தெளிந்து உணர்வேன் என்று முயலுகின்ற உயிருக்குச் சிவபரம் பொருள் எட்டாமல் நிற்கும்.

முதல் என்ற சொல் இங்குத் தத்துவங்களைக் குறித்தது. இத்தத்து வங்கள் யாவும் மாயையிலிருந்து விரிந்து காரியப்பட்டு உயிருக்குத் துணை செய்வன. இவை காரண நிலையிலிருந்து வெளிப்பட்டுத் தோன்றி, ஒடுக்க நிலையில் மறைந்து போகும் இயல்புடையன. ஆயினும் அவை இல்லாமல் போகாமல் மாயையின் உள்ளே காரண வடிவாய் நிற்றலின் உள்ள முதல் என்று கூறினார். மாயையை உள்பொருள் என்றே சைவசித்தாந்தம் கொள்ளுகிறது.

இத்தத்துவங்களில் இருந்து முற்றிலும் நீங்குவது அனைத்தும் ஒன்றாய் உருகுதல் என்று குறிப்பிடப்பட்டது. அவ்வாறு நீங்கிய நிலையில் ஆன்மா இறைவனின் பெருங்கருணையை நினைத்து நெகிழ்ந்து உருகும். அந்த நெகிழ்ச்சி உயிருக்குத்திருவருள் வந்து பொருந்தியதனால் தோன்றியதாகும். அந்நிலையில் இறைவன் ஆன்மாவும் தானும் வேறில்லை என்னும் வண்ணம் உடனாய் நிற்பான். இவ்வாறு இல்லாமல் இறைவனை நானே தெளிந்து அறிவேன் என்று முற்படுகிற ஆன்மா தன் முனைப்போடு செயல்படுவதனால் மெய் பொருளாகிய இறைவன் அதற்கு அகப்படாமல் விலகியே நிற்பான்.

யான் எனது என்று கருதும் நிலை அற்றுப் போனாலன்றி இறைவனை உணர்தல் உயிரால் ஆகாது என்பதை இப்பாடலில் வலியுறுத்தினார்.

15 நல்லசிவ தன்மத்தால் நல்லசிவ யோகத்தால்
நல்லசிவ ஞானத்தால் நான் அழிய  வல்லதனால்
ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படும் காண்
ஆரேனும் காணா அரன்.

முறையே நன்மையைத் தரும் சிவதருமத்தினாலும், சிவ யோகத்தினாலும் சிவ ஞானத்தினாலும் உயிர் படிப்படியே முன்னேறிப் பக்குவப்பட்ட காலத்து நான் என்னும் உணர்வு அழியும். அத்தகைய வன்மை கிட்டுவதனால் யார் ஒருவர் சிவபெருமானிடத்து அன்பு செய்வாரோ அவருக்கு யாராலும் காண்பதற்கரிய சிவபெருமான் எளிவந்து வெளிபட்டுத் தோன்றுவான்.

தவம் மேற்கொண்டு ஒழுகுவார்க்கு இறைவனின் திருவருள் கிடைக்கும் என்பது எல்லாச் சமயத்தாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து. ஆயினும் தவத்தின் இலக்கணம் ஒவ்வொரு சமய நெறியிலும் வேறுபடும். பட்டினிகிடத்தல் , உடம்பை ஒறுத்தல் , வெயில் காலத்தில் சுடுபாறையில் கிடத்தல் , கடும் குளிரில் தண்ணீரினுள் நின்று நோற்றல் என்று தவமுயற்சி சமயங்களால் வேறு வேறாகக் கொள்ளப்பட்டன.

சரியை என்பது மெய்த் திருத்தொண்டு. திருக்கோயில் அலகிடுதல், பூத்தொடுத்தல் முதலிய தொண்டுகளாகும். கிரியை என்பது சிவபெருமானுடைய அருஉருவத் திருமேனியைத் திருமஞ்சனம் ஆட்டுதல் , திருப்பள்ளித் தாமம் சாத்தி உள்ளம் உருகி வழிபடுதல். யோகம் என்பது உயிர்ப்பை அடக்கி உள்ளக்கிழியில் உரு எழுதிச் சிவபெருமானைச் சிந்தையில் கொண்டு வழிபடுவது. ஞானம் என்பது கேட்கும் சிந்தித்தும் தெளிந்தும் நிட்டை கூடியும் சிவபரம் பொருளை வழிபடுவது.

இந்தப் பாடலில் சரியை நிலையும் கிரியை நிலையும் நல்ல சிவதன்மம் என்று ஒன்றாகக் குறிப்பிடப்பட்டன. அதனை அடுத்த யோகம் என்ற நெறி நல்ல சிவ யோகத்தால் எனப்பட்டது . அட்டாங்க யோகம் சிவ பெருமானை நோக்கியே இயற்றப்படுதல் வேண்டும் என்பதைத் திருமூல தேவநாயனார் அருளிச் செய்த திருமந்திரத்தில் தெளிவாக எடுத்துரைத்தார். இந்த மூன்று படிநிலைகளையும் முறையே கடந்து வந்த உயிர்களுக்குச் சிவஞானம் தைவாப்பெறும் திருவடி ஞானமே சிவஞானம் என்பதை உணர்தல் வேண்டும்.

யார் ஒருவர் இந்தப் படிமுறையை மேற்கொண்டு ஒழுகினாலும் அவர்களுக்குச் சிவபெருமானிடத்து அன்பு தோன்றி மேன்மேல் வளர்ந்து வரும். அத்தகையோருக்குச் சிவபெருமான் தன் பெருங்கருணையால் எழுந்தருளி வந்து அவரோடு ஒன்றாய் நிற்பான் என்பதனை இப்பாடலில் ஆசிரியர் உணர்த்துகிறார்.

யாவர்க்கும் காண்பரிய ஈசன் அன்பு செய்வாரிடத்து எளிதில் வெளிப்பட்டுத் தோன்றுவான் என்பதனை அங்கே தலைப்படுங்காண் யாரேனும் காணா அரன் என்ற சொற்களால் விளக்கினார்.

யார் ஒருவர் உள்குவார் உள்ளத்துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும் என்று திருப்பூவணத் திருத்தாண்டகத்திலும் , எவரேனும் தாமாக கவராதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே, என்று திருக்கன்றாப்பூர்த் திருத்தாண்டகத்திலும் அப்பர் அடிகள் அருளிச் செய்த திருவாக்குகள் இங்கு நினையத் தக்கன.

16 மெல்வினையே என்ன வியனுலகில் ஆற்றரிய
வல்வினையே என்ன வரும் இரண்டும் சொல்லில்
சிவதன்மம் ஆம் அவற்றிற் சென்றதிலே செல்வாய்
பவகன்மம் நீங்கும்படி.

முந்திய பாடலில் கூறப்பட்ட சிவதருமம் மெல்வினை என்றும், பரந்த உலகில் செய்வதற்கரிய வல்வினை என்றும்  இரண்டு வகைப்படும். இவ்விரண்டினுள் உன்னால் இயற்றக்கூடிய சிவதருமத்தைக் கடைப்பிடித்து நின்று உறைத்த அன்போடு இருந்தால் உனது பிறப்புக்குக் காரணமாகிய வினைப்பயன்கள் யாவும் சிவபெருமான் திருவருளாலே உன்னை விட்டு நீங்கும் . எனவே ஏதாவது ஒரு நெறியிலே நிலைத்து நின்று தொண்டு செய்வாயாக.

சிவதருமம் என்று கூறப்பட்டதனை ஆசிரியர் மெல்வினை என்றும் வல்வினை என்றும் இரண்டு பிரிவுகளாக அமைத்துக் காட்டுகிறார். ஆயினும் இரண்டு நெறிகளும் அன்பு நெறிகளே என்பது இதற்கு முந்திய பாடலில் யாரேனும் அன்பு செய்யின் அங்கே தலைப்படுங்காண் யாரேனும் காணா அரன் என்று கூறுவதனாலே விளக்கப்பட்டது. மெல்வினை என்பது யாது? வல்வினை என்பது யாது? என்பவற்றைப் பற்றிய விளக்கம் இதனைத் தொடர்ந்து வரும் பாடல்களில் ஆசிரியரால் விளக்கப்படுகின்றன.

இரண்டில் ஒன்றைப் பற்றி அதிலே நிலைத்து நிற்கின்ற உயிர்களுக்குப் பிறப்புக் காரணமாகிய வினைத் தொடர்பு நீங்கும் என்பது இப்பாடலில் கூறப்பட்டது.

17 ஆதியை அர்ச்சித்தற்கு அங்கமும் அங்கங்கே
தீதில் திறம்பலவும் செய்வனவும்  வேதியனே
நல்வினையாம் என்றே நமக்கும் எளி தானவற்றை
மெல்வினையே என்றது நாம் வேறு.

வேதங்களில் வல்லமாணவனே, இறைவனை அர்ச்சித்து வழிபடுவதற்கு உரியன என்று ஆகமங்கள் முதலியவற்றுள் விதிக்கப்பட்டுள்ள உறுப்புக்களும் அதனை இயற்றும் வகையால் தீமையை அகற்றுவதற்கு உரிய திறங்களும் நல்வினையே ஆதலினால் அவை நம் போன்றார்க்கும் எளிதானவையே. அத்தகைய வழிபாட்டு முறைமைகளையே இங்கு நாம் மெல்வினை என்று வகைப்படுத்திக் கூறியனவாம்.

இறைவழிபாட்டில் கைக்கொள்ளுவதற்கு உரியன என்று ஆகமங்களில் விதிக்கப்பட்டுள்ளவை அங்கங்கள் எனப்பட்டன. வழிபாட்டிற்கான மலரும் நீரும் திரு அமுதும் போன்றவை . இவை தவிரப் பூசையின் போது இயற்றப்படும் பஞ்சசுத்தி முதலியனவும் வழிபாட்டின் அங்கங்களே ஆம். எனவே இவை யாவும் சேர்ந்து ஆதியை அர்ச்சித்தற்கு அங்கமும், தீதில் திறம்பலவும் செய்வனவும் எனப்பட்டன.

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை என்பது போல இவ்வழி முறை எளியது. ஆயினும் தீமையை விலக்குவதும் நன்மையை விளைவிப்பதுவும் இதன் பயன்கள். ஆதலால் இவ்வாறு செய்யும் வழிபாட்டை மெல்வினை என்ற வகையுள் அடக்கிக் கூறினார்.

வல்வினை பற்றிய ஆசிரியர் கருத்து இதன் பின்னர் வரும் பாடல்களில் விளக்கப்பட்டுள்ளன.

18 வரங்கள் தரும் செய்ய வயிரவர்க்குத் தங்கள்
கரங்களினால் அன்றுகறி யாக்க  இரங்காதே
கொல்வினையே செய்யும் கொடுவினையே ஆனவற்றை
வல்வினையே என்றது நாம் மற்று.

வரங்களை அருள வல்லவராய் சிவந்த திருமேனியோடு காட்சி அளித்த வயிரவ வேடம் தாங்கிய சிவபெருமானுக்காகக் கறிய முது ஆக்கும் பொருட்டுத் தங்களுடைய கைகளினாலே தாம் பெற்ற மகனை அரிய முன் வந்த சிறுத் தொண்ட நாயனாரைப் போன்று இறைவன் பொருட்டுக் கொடுந் தொழிலும் இயற்ற முற்படுகின்றவர்களையே நாம் வல்வினை செய்ய வல்ல அடியார்கள் என்று இதற்கு முன் வந்த பாடலில் குறிப்பிட்டோம்.

சிறுத்தொண்ட நாயனார் சிவனடியார் ஒருவருக்கு நாள்தோறும் தவறாமல் திருஅமுது ஊட்டி அதன் பின்னரே தாம் உணவு உண்பதை நோன்பாகக் கடைப்பிடித்து வந்தார். நாயனாருடைய மெய்த்தன்மை நிறைந்த அன்பினை நேரில் நுகர்ந்து அருளுவதற்காகச் சிவ பெருமான் வயிரவ அடியார் திருவேடம் தாங்கி நாயனார் வாழ்ந்த திருச்செங்காட்டங்குடிக்கு எழுந்தருளினார். அன்றைக்கு அமுதூட்ட சிவனடியார் யாரையும் காணாது சிறுத்தொண்ட நாயனார் மனம் நொந்து இருந்தார். வயிரவ வேடம் தாங்கிய சிவபெருமான் அவரிடத்து  ஆறு மாதத்திற்கு ஒரு முறை உணவு உண்ணும் பழக்கம் உடையேன் யான். அப்போது நாம் உண்பது நரப்பசு. ஒரு குடிக்கு நல்ல ஒரு மகனைத் தந்தை அரியத் தாய் பிடிக்க இருவரும் மனமுவந்து சமைத்த கறியினையே யாம் உண்பது என்று உரைத்தார்.

அதற்கு உடன்பட்டுச் சிறுதொண்ட நாயனாரும் அவர் மனைவி யாராகிய திருவெண்காடு நங்கையும் தம்முடைய ஒரே மகனான சீராளதேவனைத் தொண்டர்க்கு அமுதூட்டும் நல்வாய்ப்புக் கிடைத்ததே என்னும் ஒரே கருத்துடன் சிந்தனையில் தடுமாற்றம் இன்றி மகிழ்ச்சியுடன் அரிந்து கறியமுது சமைத்து வயிரவக் கோலம் தாங்கி வந்த சிவபெருமானை அமுதுண்ண அழைத்தனர் வயிரவரோ நம்மோடு உடன் உண்பதற்கு உமக்கு ஒரு மைந்தன்  இருந்தால்  அவனையும் அழையும்  எனப்பணித்தார். பெற்ற மகனையே அரிந்து கறி சமைத்த தந்தையார் இப்போது அவன் இங்கு உதவான் எனக் கூற அடியார் அவன் வந்தாலன்றி உண்ணோம் எனவே கட்டளையை மறுப்பதற்கு அஞ்சி, நாயனார் சீராளனைப் பேர் சொல்லி அழைக்க, அவனும் பரமன் அருளால் பள்ளியினின்று ஓடி வருவான் போல உயிர்பெற்று வந்தனன்.

இந்தச் செயற்கரும் செயலை இப்பாடலில் வல்வினை என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். உலக வழக்கத்திற்கு மாறாக இரக்கமின்றிச் செய்யப்பெற்ற வன்கொலை போலவும் ஆகிய இந்த அருஞ்செயல் மனதில் செற்றம் இல்லாமல் அடியாருக்கு உணவு அளிக்க வேண்டும் என்ற அன்பின் உறைப்பாலே செய்யப்பட்டது. ஆதலின் இது பாதகமாகாது பத்திமை ஆயிற்று.

வயிரவர் என்னும் அகச் சமய நெறி நிற்கின்ற அடியவர்கள் உடம்பில் சட்டை அணிந்து கையில் சூலம் ஏந்திக் கடுமையான நோன்புகள் மேற்கொண்டு வாழ்ந்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

19 பாதகம் என்றும பழி என்றும் பாராதே
தாதையை வேதியனைத் தாளிரண்டும்  சேதிப்பக்
கண்டுஈசர் தாமாம் பரிசளித்தார் கண்டாயே
தண்டீசர் தஞ்செயலால் தான்.

தன் தந்தையும் தனக்கு மறைபயிற்றுவித்த ஆசிரியனுமாகிய எச்சதத்தனைச் சிவபூசைக்கு இடையூறு விளைவித்தான் என்ற காரணத்தால் பாதகத்தையும் பழியையும் பாராமல் சேய்ஞலூர்ப் பிள்ளையார் அவனது இரண்டு கால்களையும் வெட்டி எறிந்தார். இதனைக் கண்ட இறைவன் அவருக்குச் சண்டீசப்பதம் தந்து ஆட்கொண்டான். இந்நிகழ்ச்சியை நீ அறிந்துள்ளாய் அன்றே.

சேய்ஞலூர்ப் பிள்ளையாராகிய விசாரசருமர் தம் அன்பின் மேலீட்டால் ஊர்ப்பசுக்களை மேய்த்து வந்தார். அப்பசுக்கள் மடிநிறைந்து பால் சுரத்தன. விசாரசருமர்  மணலால் லிங்கத் திருமேனியை அமைத்து வழிபட அப்பசுக்கள் தாமாகவே பால் சுரந்து திருமஞ்சனம் ஆட்டின. ஊரார் சொல்லை நம்பிய எச்சதத்தன் தன் மகனைப் பாலைக் கறந்து மண்ணில் சொரிந்ததாகக் கருதி மணலால் ஆன லிங்கத்தை எற்ற முற்பட்டான்.  வழிபாட்டில் அமைந்திருந்த விசாரசருமர் கண்விழித்துப் பார்த்து சிவ அபராதம் செய்தவரின்  காலை அருகில் கிடந்த கழி ஒன்றை எடுத்து வீசினார். அக்கழியே மழுவாகி எச்சதத்தனின் கால்கள் இரண்டையும் துண்டித்தன. சிவபெருமான் விசாரசருமர் முன்பு திருக்காட்சி நல்கி அவருக்குச் சண்டீசப்பதமும் அருளினார்.

தந்தையும்,தனக்கு வேதம் ஒதுவித்த ஆசிரியனும் ஆகிய உண்மை மறந்து சிவ அபராதம் ஒன்றனையே மனதில் கொண்டு அது செய்தவனைத் தாள் அற எறிந்த செயல் உலகர் முன் பாதகம் என்று கருதப்படும். பாதகத்தால் தீராப் பழி வந்து சேரும். இவற்றை நினையாது சேய்ஞலூர்ப் பிள்ளையார் செய்த வன்செயலை இறைவன் கண்டு உவந்து அருள் புரிந்தது வல்வினையின் பாற்பட்டது என்று ஆசிரியர் கூறுகிறார்.

தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டும்
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழப்
பாதகமே சோறு பற்றியவா தோ ணோக்கம்
என்ற வரும் திருவாசகப் பாடல் இங்கு நினையத்தக்கது.

20.செய்யில் உகுந்த திருப்படி மாற்றதனை
ஐயஇது அமுது செய்க என்று  பைய இருந்து
ஊட்டி அறுத்தவர்க்கே ஊட்டி அறுததவரை
நாட்டியுரை செய்வது என்னோ நாம்.

அரிவாட்டாய நாயனார் இறைவனுக்குப் படைப்பதற்காகச் செந்நெல் அரிசியும் செங்கீரையும் மாவடுவும் தமது தலைமீது சுமந்து சென்றார். பல நாள் பட்டினி இருந்த களைப்பினால் கால் இடறி நன்செய் வயலிலே வீழ்ந்தார். தலையில் சுமந்து சென்ற திரு அமுது படிக்கான பொருள்களும் வெடித்துக் கிடந்த வயலின் கமர்களிலே சிந்திப் போயின. இறைவனுக்கான அமுது படியை நிலத்தில் உகுத்தற்காக வருந்தித் தம் கையிலிருந்த அரிவாளால் தம் கழுத்தை அரியலுற்றார் அரிவாட்டாய நாயனார் அந்நிலையில், சிவபெருமானின் திருக்கரம் வயல் வெடிப்பினின்றும் வெளிப் பட்டு அரிவாளைத் தாங்கிய நாயனாரின் கையப் பிடித்துத் தடுத்தது. அதனோடு நாயனார் வேண்டிக் கொண்ட வண்ணமே சிவபெருமான் திருஅமுது கொண்டு அருளினார் எனபதற்கு அடையாளமாக மாவடுவைக் கடித்ததனால் உண்டாகிய விடேல் விடேல் என்னும் ஓசையும் நாயனார் காதில் ஒலித்தது. இறைவன் அம்மையப்பனாகக் காட்சி தந்து நாயனாரையும் அவரது மனைவியாரையும் ஆட்கொண்டு அருள் பாலித்தான். இத்தகைய தன்மை உடைய நாயனாரின் பெருமையை நாம் எவ்வாறு எடுத்துரைப்பது.

திருப்படி மாற்று என்பது திரு அமுதுபடியைக் குறிக்கும்.ஊட்டி என்ற சொல் முறையே கழுத்தையும்  பெருமானுக்கு அமுதுபடி ஊட்டியதையும் குறிக்கும்.

இதற்கு முன் வந்த மூன்று பாடல்களிலும் வல்வினை செய்த அடியார்களின் பேரின்பத் திறனை ஆசிரியர் எடுத்துரைத்தார் அதற்கு முந்திய பாடலில் மெல்வினை என்பது யாது என்பதை விளக்கினார். சிறுத் தொண்ட நாயனார். சண்டேசுவர நாயனார் போன்ற அடியார்களின் தொண்டு உலகத்தவர் பழிப்புக்கு இடந்தருமேனும் உறைத்த அன்பின் அடியார்கள் வல்வினை செய்யத் தயங்கார் என்பதனை எடுத்துக் காட்டின.

21 செய்யும் செயலே செயலாகச் சென்று தமைப்
பையக் கொடுத்தார் பரங்கெட்டார்  ஐயா
உழவும் தனிசும் ஒரு முகமே யானால்
இழவுண்டே சொல்லாய் இது.

தன்முனைப்பற்ற அடியவர்கள் தாம் செய்யும் செயல் யாவும் இறைவன் செயலே ஆகத் தம்மை இறைவனின் உடைமை ஆக்கித் தமது சுமை கெடுமாறு நிற்பர். உழவுத் தொழிலும் அதனை மேற்கொள்ளுவதற்காகப் பெற்ற கடனும் ஒருவரிடத்திலே அமையுமானால் அதனால் இழப்பு வருமோ? வருவதில்லை. அவ்வாறே தம்மை இழந்த அடியார்கள் வினைச்சுமை தீர்ந்து வீடு பேற்றினை அடைவார்கள்.

செய்யும் செயல் என்பது உயிர்கள் தன் முனைப்புடன் யான் என்றும் எனது என்றும் கருதிச் செய்யும் வினைகளை. அடுத்து வரும் செயலாக என்பதற்கு இறைவனின் செயலாகுமாறு என்று  சொல் வருவித்துப் பொருள் கொள்ளுக. இந்நிலை விரைவில் கை வருவதில்லை படிப்படியே வருவது என்பதனைக் குறிக்கப் பையக் கொடுத்தார் என்று கூறினார். பரம் கெட்டார் என்பது சுமையினின்றும் நீங்கினார் என்ற பொருளைத் தரும்,

உழவுத் தொழிலை மேற்கொண்ட ஒருவன் கடன் பெற்று விதையும் உரமும் வாங்கிப் பயிரை விளைவிக்கும் முயற்சியிலே ஈடுபடுகிறான். அவனே நிலத்திற்கு உடைமையாளன் ஆயின் விளைவின் பயனை அவனே உறுதி யாகப் பெறுவான். ஆதலால் அவனுக்கு இழப்பு நேராது. தனிசு என்ற சொல் கடன் என்ற பொருளைத் தரும்.

22 ஆதார யோகம் நிராதார யோகம் என
மீதானத்து எய்தும் விதியிரண்டே  ஆதாரத்து
ஆக்கும் பொருளாலே ஆக்கும் பொருளாம் ஒன்று
ஆக்காப் பொருளேயொன் றாம்.

யோகப் பயிற்சி என்பது ஆதாரயோகம் என்றும் நிராதாரயோகம் என்றும் இரு வகையாகச் சொல்லப்படும். இருவகை நிலையிலும் நின்றவர்கள் மிக மேலான இறைவன் திருவடியிலே சென்று கூறுவது உறுதி. இவற்றுள் ஆதார யோகம் என்பது ஞான ஆசிரியனால் கற்பிக்கப்பட்ட ஆறு ஆதாரங்களிலும் இறைவனது அந்தந்த இடத்துக்குரிய திருமேனிகளை உள்ளக்கிழியில் உரு எழுதி வழிபட்டுப் பயன் பெறுவதாகும். நிராதார யோகம் என்பது இவை யாவற்றிலும் உயர்ந்ததாய் மனத்தின் அசைவும் அற்றதாய்ப் பற்றுக் கோடும் இல்லாததாய் இறைவனது திருவடியைப் பொருந்துவதாய் அமைவது.

இரண்டு வகையாகப் பயின்றாலும் எய்தும் பொருள் இறைவன் திருவடி ஆகிய ஒன்றே. முதல் நெறியில் உடம்பின் ஆதாரங்களைப் பற்றி அதன் மேலும் சென்று ஆக்கும் பொருள் என்பதும் . இரண்டாம் நெறியில் படிநிலைகள் எதுமில்லாமல்  கைகூடுகிற திருவருள் ஆக்கப் பொருள் என்றும் உணர்த்தினார்.

ஆறு ஆதாரங்கள் என்பன மூலாதாரம். சுவாதிட்டானம், மணி பூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகியன. இவை ஒவ்வொன்றுக்கும் அதி தெய்வங்கள் முறையே விநாயகர், அயன் , திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவன் ஆவர். இந்த ஆறு ஆதாரங்களுக்கும் வடிவங்களாக மூலாதாரத்துக்கு நான்கு இதழ்த் தாமரையும் சுவாதிட்டானத்துக்கு ஆறு இதழ்த் தாமரையும், மணிபூரகத்துக்குப் பத்து இதழ்த் தாமரையும், அநாகதத்திற்குப் பன்னிரண்டு இதழ்த் தாமரையும் விசுத்திக்குப் பதினாறு இதழ்த் தாமரையும், ஆஞ்ஞைக்கு இரண்டு இதழ்த் தாமரையும் கூறப்படும்.

ஆஞ்ஞை என்பது புருவ நடுவில் நிலைபெறுவதாகக் கொள்ளுவர். மீதானம் என்ற நிலை நிராதாரம் எனப்படும். இது உச்சிக்கு மேல் பன்னிரண்டு அங்குல உயரத்தில் ஆயிரம் இதழ்த் தாமரை வடிவாக அமைந்தது என்பர். இது பிரமரந்திரம் என்றும் கூறப்படும். இவ்விடத்தில் சிவசத்தியுடன் பிரியாது நின்ற சிவபெருமானை வழிபடுதல் வேண்டும். ஆதார யோகம் பயிற்சி முறை என்றும் நிராதார யோகம் பயிற்சியின் பயன் எனவும் கொள்ளப்படும்.

23 ஆக்கி ஒரு பொருளை ஆதாரத்து அப்பொருளை
நோக்கி அணுவில் அணுநெகிழப் பார்க்கில்
இவனாகை தானொழிந்திட்டு ஏகமாம் ஏகத்து
அவனாகை ஆதார மாம்.

முன் பாடலில் கூறப்பட்ட ஆறு  ஆதாரங்களிலும் ஞானாசிரியன் கற்பித்த நெறியிலே இறைவனை வழிபட்டு அதனதனுக்குரிய திருவடிவத் தை உளத்துள் பதித்து தியானம் செய்து அதிலேயே நெடுநாள் நிலைத்திருந்தால் தன் முனைப்புக் கெட்டுச் சிவபரம் பொருள் ஒன்றே முதிர்ந்து உயிரில் ஒங்கித் தோன்றும். வழிபடுவானும் வழிபடப் பெறும் பொருளும் வழிபடுகிறேன் என்ற உணர்வும் நெகிழ்ந்து போக ஒன்றேயாகிய சிவபரம் பொருள் இவனோடு பிரிப்பின்றி நிற்கும் நிலை ஆதார யோகமாகும்.

ஆதாரத்தினைப் பற்றி ஒரு பொருளை ஆக்கி அதனால் கைவந்த அப்பொருளை நோக்கி அணுவாகிய ஆன்மா தற்போதம் கெடப்பார்க்கின் இவன் என்ற பொருள் ஒழிந்திட்டு ஒப்பற்ற பரம்பொருள் ஆகிய அவனே ஏகமாய்த் தோன்றுவான். அதுவே ஆதார யோகம் ஆகும். தன் முனைப்பற்ற நிலையில் சிவம் விளங்கித் தோன்றும் இந்நிலையே இடைவிடாத ஆதார யோகப் பயிற்சியின் சிறந்த பயனாகும்.

24 கொண்டது ஒரு பொருளை கோடிபடக் கூறுசெயிற்
கொண்டவனும் அப்பரிசே கூறுபடும்  கொண்ட
இரு பொருளும் அன்றியே இன்னது இது என்னாது
ஒரு பொருளேயாய் இருக்கும் உற்று.

தியானிப்பதற்காக மனதுட் கொண்ட பரம் பொருளையும் அதன் இயல்புகளையும் நுணுகி நுணுகி ஆராய்ந்து அதன் எண்ணிறந்த இயல்புகளைப் பல்கோடி முறை சிந்தித்து வழிபட்டால் அந்த வழிபாட்டைச் செய்பவன் தானும் அவ்வாறு நுண்மையுடையவன் ஆவான். அதனோடு தியானிப்பவன் தியானிக்கப்படும் பொருள் என்ற வேறுபாடுகள் மறைந்து இன்னது இது என்று புரிந்து கொள்ளவும் விளக்கிச் சொல்லவும் இயலாத வாக்குமனம் கடந்த இறைவன் வழிபடுவோனாகிய இவனுடன் கூடி ஒரு பொருளாகவே விளங்குவான்.

முந்திய பாடலில் ஆதார யோகத்தைப் பயில்கின்ற முறையை அணுவாகிய ஆன்மா நெகிழ்வுறுமாறு பார்த்தல் என்பதனை விளக்கிய ஆசிரியர் இந்தப் பாடலில் வழிபடப் பெறுகின்ற பரம் பொருளின் இயல்புகளை பல்கோடி விதமாக நீள நினைத்து உருகும் நுட்பத்தை அறிவுறுத்துகிறார். கொண்ட பொருள் பரம் பொருளாகவும் கொண்டவன் வழிபாடு இயற்றுபவனாகவும் பொருள் காணப்படும். இரு பொருளாக இருக்கின்ற நிலை மாறிப் பரம் பொருளோடு ஒன்றி ஒரு பொருளேயாகும் இயல்பு இப் பாடலில் எடுத்துரைக்கப்பட்டது.

25 அஞ்செழுத்துமே அம்மை அப்பர்தமைக் காட்டுதலால்
அஞ்செழுத்தை ஆறாகப் பெற்றறிந்தே  அஞ்செழுத்தை
ஓதப்புக்கு உள்ள மதியுங்கெடில் உமைகோன்
கேதமற வந்தளிக்கும் கேள்.

திருவைந்தெழுத்தே ஓதுவார் தமை அம்மையப்பராக விளங்குகின்ற இறைவனின் திருவடி இன்பத்தை நோக்கி இட்டுச் செல்லும் வல்லமையுடையது. எனவே ஞானாசிரியனும் திருவைந்தெழுத்தை உபதேசிக்க அதனைப் பெற்று முறைப்படி ஓதி வந்தால் தற்போதம் கெடும். கெடவே அம்மையப்பனாகிய இறைவன் உயிரோடு கூடவே நின்று துன்பம் அனைத்தையும் துடைத்து, எல்லையில்லாப் பேரின்பத்தை வழங்கியருளுவான்.

திருவைந்தெழுத்தில் ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கும். எனவே அதனை அஞ்சுபதம் என்று சுந்தரமூர்த்தி நாயனார் குறிப்படுகிறார். அந்தியும் நண்பகலுங் அஞ்சுபதம் சொல்லி என்பது அவர் திருவாக்கு. சிகரம் சிவத்தையும், வகரம் திருவருளையும், யகரம் உயிரையும் , நகரம் திரோதத்தையும், மகரம் மலத்தையும் குறிப்பனவாகும் . இவ்வைந்து பொருள்களுள் சிவத்தைக் குறிப்பதாகிய சிகரமும் திருவருளைக் குறிப்பதாகிய வகரமும் பெருமை பெற்று விளங்குவன ஆதலால்  அஞ்செழுத்துமே அம்மையப்பர் தமைக் காட்டுதலால் என்றார் ஆசிரியர். நடுவில் நின்ற உயிர் அதனை அடுத்து நின்ற நகர மகரங்களாகிய மலங்களிலிருந்து விடுபட்டுச் சிவமும் சத்தியுமாகிய உமையொரு பாகனது திருவடிப் பேரின்பத்தை எய்துதற்கு உரிய சாதகன். அதனைத் தகுந்த ஞானாசிரியன் வழிப்பெற்று ஓதும் முறைமையிலும் நிற்கும் முறைமையிலும் பிறழாது ஒழுகினால் தன் முனைப்பு அறும். இறைவன் அருள் பாலித்து உயிரை தன்னடிக்கீழ்க் கூட்டுவிப்பான் என்பதனை இப்பாடலில் விளக்கினார்.

26 ஆக்கப்படாத பொருளாய் அனைத்தினிலும்
தாக்கித்தான் ஒன்றொடும் தாக்காதே  நீக்கியுடன்
நிற்கும் பொருளுடனே நிற்கும் பொருளுடனாய்
நிற்கை நிராதார மாம்.

வாக்கும் மனமும் கடந்து நிற்கும் பரம்பொருள் இன்னதன்மையன் என்று அறியொண்ணாதவன் . ஆதலால் ஆன்மாவின் அறிவினால் கற்பித்துக் கொள்ளப்படும் கற்பனைக்கும் அப்பாலானவன். உலகத்துப் பொருள்கள் அனைத்திலும் கலந்து நின்ற போதிலும் எவற்றிலும் தோய் வற்று நிற்கும் தானேயாகிய தயாபரன். ஆதலால் உயிர்களின் துயரங்களைத் தன் பெருங்கருணையால் அறிந்து நீக்கும் பரம் பொருள் அவன். அப்பரம் பொருளோடு பிரிவின்றி நிற்கும் திருவருளில் திளைத்து நிற்றலே நிராதார யோகம் எனப்படும்.

எவ்வௌர் தன்மையும் தன் வயிற்படுத்துத் தானேயாகிய தயாபரன் எம் இறை  என்ற மணிவாசகரின் அருள்மொழிக்கு ஏற்ப இறைவன் உலகத்துப் பொருள்கள் யாவற்றிலும் கலந்து நின்றும், அவற்றில் தோய்வின்றி விளங்குவான். மனம் வாக்குக்கு எட்டாத அவனுக்கு வடிவும் நிறமும் கற்பித்து மனத்து இருத்துதல் ஒருவராலும்  இயலாததாகும். உடன் நிற்கும் பொருளுடனே நிற்கும் பொருள் என்பது இறைவனோடு நீக்கமின்றி நிற்பதாகிய அவனது சத்தியாகிய திருவருளை. அதன் வழி நின்று முழு முதற் பொருளை அடைவதே நிராதார யோகம்.

27 காண்கின்றது ஓர் பொருளைக் காண்கின்ற யோகிகளே
காண்கின்றார் காட்சியறக் கண்ணுதலைக் காண்கின்றார்
காண்பானுங் காணப் படும்பொருளும் அன்றியே
காண்கையினாற் கண்டனரே காண்.

ஆன்மா காணும் இயல்புடையது. எனினும் அது தானே காணும் இயல்புடையது அன்று. இறைவன் காட்டவே ஆன்மாக்கள் காணும்திறன் பெறுகின்றன. மெய்ப்பொருளைக் காண்பதற்கும் சிவபெருமானின் திருவருளே துணையாக வேண்டும். மேலே கூறப்பட்ட ஆதார யோகம், நிராதர யோகம் என்ற இரண்டு நெறிகளிலும் ஒழுகிய சிவயோகியர்களுக்கு இறைவனின் திருவருள் துணை நின்று காண்கிறோம் என்ற சுட்டறிவும் நீங்கச் சிவபெருமானைக் காட்டும். அத்தகையவர்கள் காண்பவர்களாகிய தாமும் காணப்படுவதாகிய சிவமும் வேறு வேறு எனக் காணாமல் தற்போம் இழந்து சிவத்துடன் ஒன்றிவிடுவார்கள். ஆதலால் அம்மெய்ப்பொருளை உள்ளவாறு உணர்ந்து நுகர்பவர்கள் இவர்களே யாவர்.

சத்தினால் சத்தினை அறிந்தும் சத்தின் கண் அழுந்தியும், அசத்தினால் அசத்தினை அறிந்தும் அசத்தின் கண் அழுந்தியும் அனுபவித்து வரும் இயல்புடைய ஆன்மா சதசத்து எனப்படும். அது சார்ந்ததன் வண்ணமாம் தன்மை உடையது. அறிவிக்க அறிவது. யோக நிலையிலும் உயிர்களுக்குத் திருவருள் உடன் நின்று உணர்ந்த வேண்டும். அவ்வாறு உணர்த்தப் பெற்ற யோகியர்களே இறைவனாகிய மெய்ப்பொருளின் தன்மையைத் தெளிய உணரும் பேறு பெற்றவர்களாவார்கள்.

இந்த உணர்வு நிலையில் உயிரினிடத்து நான் காண்கின்றேன் என்னும் தன் முனைப்பு அற்றுப் போகும். அறவே, திருவருளோடு ஒன்றி நின்று அறிவதாகிய மேலான நிலை உயிருக்குவாய்க்கும். இவ்வாறு கண்டவரே மாசு அறு காட்சியவர்.

பேசாமை பெற்று அதனிற் பேசாமை கண்டனரைப்
பேசாமை செய்யும் பெரும் பெருமான்  பேசாதே
எண்ணொன்றும் வண்ணம் இருக்கின்ற யோகிகள் பால்
உள்நின்றும் போகான் உளன்.

உரைக்கு அடங்காத திருவருள் கைவரப்பெற்று, அதன் வழியே ஒழுகி, இன்னதன்மையன் என்று பேசுவதற்கு அரிய பரம் பொருளைக் கண்டவர்களுக்கு வெளியிட்டுச் சொல்ல முடியாத சிவப் பேரின்பத்தை அருளி அவரைப் பேசாத மோன நிலையில் இருந்துவான் சிவபெருமான். நினைவுகள் புறத்தே போகாது எண்ணம் பரம்பொருளையே பற்றி ஒற்றித்து நிற்கும் சிவயோகியர்களிடத்து அவர்களின் நெஞ்சத் திருக்கோயில் என்றும் நீங்காத நிலையில் இறைவன் கோவில் கொண்டிருப்பான்.

பேசாமை என்பது மோன நிலை. யோகப் பயிற்சியில் மோன நிலையின்  இயல்புகளை உணர்த்துவது இத்திருப்பாடல். முதலில் கூறப்படும் பேசாமை திருவருளைக் குறிப்பதாகும் . திருவருள் இத்தன்மையுடையது என்று எடுத்துரைக்க இயலாதது. அதனைப் பெற்றவர்கள் மாற்றம் மனம் கழிய நின்ற சிவபரம் பொருளைக் கண்டவர் ஆவார். அந்நிலையில் அவர்களுக்கு வாய்க்கும் பேரின்பம் இத்தகையது என்று எடுத்துரைக்க இயலாததாகும் . இங்ஙன் இருந்ததென்று எவ்வண்ணம் சொல்லுகேன். அங்ஙன் இருந்தது என்று திருஉந்தியாரில் இத்தன்மை விளக்கப்படுகிறது .வாக்கு இறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய், எல்லாமாய் அல்லவுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டிச் சொல்லாமல் சொன்னவர் என்ற ஆலமர் செல்வனின் வழிபாட்டுப்  பாடல் பகுதி இங்கு நினையத்தக்கது. மோனம் என்பது ஞானவரம்பு என்று நீதி நூலும் கூறும். உரை அவிந்து இருத்தல் என்பது தானாக மேற்கொள்ளாது அதுவாக வந்து வாய்க்கும் என்பது இப்பாடலில் விளக்கப்பட்டது. இத்தன்மை வாய்க்கப்பெற்ற அடியார்கள் நெஞ்சத்தில் சிவ பெருமான் கோவில் கொண்டிருப்பான் . அவரைவிட்டு நீங்கான் என்பதனையும் ஆசிரியர் வலியுறுத்தினார்.

29 ஓட்டற்று நின்ற உணர்வு பதிமுட்டித்
தேட்டற்று நின்ற இடஞ்சிவமாம்  நாட்டுற்று
நாடும் பொருளனைத்தும் நானா விதமாகத்
தேடுமிடம் அன்று சிவம்

பரபரப்போடு அங்குமிங்கும் அலைகின்ற இயல்புடைய மனம் திருவருள் ஞானம் கைவரப் பெற்ற அளவில் சலனமற்று நிற்கும். அதன் பின் ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றுதல் என்னும் இயல்புகெட்டுச் சிவப்பேரின்பத்திலே அழுந்தி வேறு தேட்டம் இல்லாதிருக்கும். அதுவே சிவபரம் பொருள் உயிர்களுக்கு வெளிப்பட்டு அருளும் நிலையாகும். உயிர்களால் சுட்டியறிதற்கு உரிய உலகத்துப் பொருள்களைப் பல்வகையாகத் தேடி அலைபாய்கின்ற வரம்புக்குள் நில்லாத தனிப்பொருள் சிவபெருமான் ஆவன்.

உலகத்துப் பொருட்கள் யாவும் உயிர்களால் சுட்டியறியும் எல்லைக்கு உட்பட்டவை. அவை நிறைவைத் தராததால் உயிர்கள் ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றி நாலா பக்கங்களிலும் தடுமாறி உழல்கின்றன. அதுவுமின்றி அறிவினால் அறிந்த யாவும் அசத்தாதல் அறிதி என்ற சிவப்பிரகாச உண்மைக்கு ஏற்ப உயிரறிவினால் அறியப்பட்ட பொருள்கள் யாவும் நிலையற்று அழிந்து போகும் இயல்பினை உடையன. இந்த எல்லைக்குள் சிவபெருமான் நிற்பவனல்லன்.

மெய்பொருளிய சிவபெருமான் உயிர்களால் அறிதற்கு அரியவன் என்றால் அவன் முயற்கோடு போலவும் ஆகாயத் தாமரை போலவும் இல்பொருள் ஆவானோ எனில், அதுவன்று பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் அறியப்படாத சிவன் பதிஞானம் ஒன்றினாலேயே அறியப்படுபவன். அவ்வாறு பதிஉணர்வு நேர்பட்ட போது உயிரறிவு சலனமற்று இருந்து இறைவன் திருவடிகளைப் பற்றிக் கொண்டு பேரின்ப வெள்ளத்தில் திளைத்திருக்கும் என்பதனை இந்தப் பாடலில் எடுத்து விளக்கினார். தேடும் இடம் சிவனன்று என்றும் தேட்டற்று நின்ற இடம் சிவம் என்றும் இருவகையால் ஆசிரியர் வலியுறுத்தினார்.

30 உணராதே யாதும் உறங்காதே உன்னிப் பு
ணராதே நீ பொதுவில் நிற்கில்  உணர்வரிய
காலங்கள் செல்லாத காதலுடன் இருத்தி
காலங்கள் மூன்றினையும் கண்டு.

பரம்பொருளை உன் சிற்றறிவினால் அறிவேன் என்று முயலாமலும் உலக வாழ்க்கையின் நிலையற்ற தன்மைகளில் தன்மைகளில் மயங்காமலும், தன் முனைப்பற்றுக் திருவருளாகிய ஞானத்தில் பொருந்திப் பொதுமையில் நிற்பாயானால் முக்காலங்களையும்  கண்டு அழிவின்றிக் கால தத்துவத்தைக்  கடந்த இறைவனுடன் என்றும் கூடி இருக்கின்ற இன்பத்தைப் பெற்றிருப்பாய்.

உணர்த்தல் எனப்படுவது தன் முனைப்போடு மெய்ப்பொருளைத் தேட முற்படுதல்.  உறங்காதே என்பது உலகியலில் ஈடுபட்டு மயங்கா திருத்தல். உன்னிப் புணராதே என்பது மல வாதனையால் மீண்டும் உலகியலில் பொருந்தாமை. பொதுவே நிற்றல் என்பது தனக்கெனச் செயல் வேறு இன்றி எல்லாம் சிவன் செயல் என்றுதெளிந்து, திருவருள் செலுத்திய வழிச் செல்லுதல்.  இந்த நெறியிலே நிற்பதனால் விளையும் பயன்களைப் பாடலின் பின் இரண்டு அடிகளால் ஆசிரியர் எடுத்துரைக்கிறார். உலகு கால தத்து வத்துக்கு உட்பட்டது. இறைவன் ஒருவனே கால தத்துவத்தைக் கடந்து நிற்பவன். உடலில் நிலை பெற்றாலன்றிச் செயலற்று  இருக்கும் உயிர். மெய்யின் வழியாகத் தோன்றவும் செயல்படவும் வேண்டியிருப்பதால் அதுவும் கால தத்துவத்திற்கு உட்பட்டதாகிறது. இந்நிலையில் உயிருக்கு இறந்த காலம்,நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்றும் உளவாகின்றன. கால அதீதனாகிய இறைவனோடு ஒன்றிவிட்ட நிலையில் முக்காலம் என்னும் பாகுபாடும் கால எல்லைக்கு உட்படுவதும் இன்றி உயிர் அழிவில்லாப் பேரின்பத்தில் திளைத்து இருக்கும்.
சிராத்தம்

சிரார்த்தின் போது மனைவியும் உடன் இருக்க வேண்டும் மனைவி மாதவிலக்கு இருந்தால் கூடாது.

அனுஷம் நட்சத்திரம் அமாவாசையும் சேரும் கார்த்திகை மாதத்தில் பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்தால் பித்ருக்களுக்கு ஒரு வருஷத்திற்கு திருப்தி உண்டாகும் மாதத்தில் விசாகம் அல்லது சுவாதியில் அமாவாசை வரும் அன்றைக்கு சுத்தம் செய்தால் ஒரு வருஷம் திருப்தியடைவார்கள் ஆனி மாதத்தில் திருவாதிரை அல்லது புனர்பூசம் நட்சத்திரத்தில் வரும் அமாவாசையில் செய்கின்ற ரத்தமும் ஆடி மாதத்தில் பூச நட்சத்திரத்தில் வரும் அமாவாசையில் பித்ருக்களுக்கு 12 வருஷம் திருப்தியளிக்கும்.

தை மாதத்தில் அவிட்ட நட்சத்திரம் அமாவாசை வரும் மாசி மாதத்தில் சதய நட்சத்திரம் அல்லது பூரட்டாதியில் அமாவாசை வரும் பங்குனியில் பூரட்டாதியில் அமாவாசை வரும் இந்த மூன்று காலங்களும் தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலம் என்று சொல்லப்பட்டுள்ளது .

மாசிமகத்தன்று அமாவாசையானது எப்போதாவது சதய நட்சத்திரம் கூடும் ஆனால் அது மிகவும் புண்ணியகாலம் அற்ப புண்ணியம் உள்ள மனிதர்களுக்கு கிடைக்காது.

அதே நேரத்தில் அவிட்ட நட்சத்திரமும் சேரும் ஆயின் அப்போது பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்பவனுக்கு ஆயிரம் ஆண்டுகள் பித்ருக்களை திருப்தி செய்த பலன் கிடைக்கும் அக்காலத்தில் பூரட்டாதியும் சேரும் ஆனால் அதில் பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள்.

கிருதயுகம் திரேதாயுகம்  துவாரம் யுகம் கலியுகம் ஆரம்பிக்கும் காலங்களிலும் சூரிய சந்திர கிரகண நேரங்களிலும் பித்ருக்களுக்கு ஒருவன் எள்ளும் தண்ணீரும் இறைத்து அவன் ஆயிரம் ஆண்டுகள் சிராத்தம் செய்த பயனை அடைவான்.

வசதியிருந்தால் என்ற அளவு பித்ருக்களுக்கு பிண்டம் போட்டு பிராமணருக்கு தானம் செய்யவேண்டும் வசதி இல்லாவிட்டால் சில எல்லை ஆவது நல்ல பிராமணனுக்கு நுனிகளால் கொடுக்க வேண்டும் அதற்கு வழி இல்லாவிட்டால் ஏழெட்டு எள்ளுடன் ஒரு கையை தண்ணீராவது பெற்றுவிடவேண்டும் எதுவுமே இல்லாத நிலை இருந்தால் காட்டுக்கு சென்று சூரியன் முதலிய வரை உரத்த குரலில் கூவி அழைத்து எனக்கு பித்ரு தர்ப்பணம் செய்வதற்கு பொருள் ஒன்றுமில்லை எனக்கு ஒன்றுமில்லை என்று என இரண்டு கையையும் தூக்கி காட்டுகிறேன் எனது பித்ருக்களுக்கு திருப்திப்படுத்த வேண்டும் என்று கூறினால் பித்ருக்கள் திருப்தி அடைவார்கள் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

சிராத்தம் செய்வதற்கு முன்பு

சுத்தம் செய்பவர் ஒரு மாதம் அல்லது 14 நாட்கள் முன்பு சவரம் எண்ணெய் தேய்த்தால் உடலுறவு இவைகளை செய்யக்கூடாது பிறர் அன்னதானத்தை சாப்பிடக்கூடாது நண்பன் சகோதரர் குரு மாமனார் வீடு தோஷம் கிடையாது.

கண்டிப்பாக முதல்நாள் இவற்றை செய்யவே கூடாது சமஸ்தானம் புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்த பின்பும் பஞ்சகவியம் சிரார்த்தம் செய்ய வேண்டும்.ஒரே பசுவிடம் இருந்து பெறப்பட்ட பால் தயிர் நெய் சாணம் கோமியம் இவற்றை கலந்து தயாரிப்பதுதான் பஞ்ச காவியம் ஆகும் மிகவும் விஷத்தன்மை கொண்டது இறைவனுக்கு அபிஷேகம் செய்வதும் உண்டு.

சிராத்தத்துக்கு முன்பும் அன்று பல் தேய்க்க கூடாது வாய் கொப்பளித்தல் போதுமானதாகும்.
மகான் ராகவேந்திரர் பகுதி - 2

பிரகலாதனின் காலத்தில் மக்கள் நிம்மதியுடன் வாழ்ந்தனர். அவன் அனுஷ்டிகம் சாத்வீகம் என்ற இருவகையான புண்ணியங்களைச் சேர்த்தான். அனுஷ்டிகம் என்பது தர்மம் செய்வதால் வரக்கூடியது. சாத்வீகம் என்பது ஹிம்சை செய்தவரிடமும் அஹிம்சையைக் காட்டுவதால் கிடைக்கக்கூடியது. முந்தைய புண்ணியத்தால் செல்வம் பெருகும். வாழ்நாள் கூடும். பிந்தைய புண்ணியம் பிறப்பற்ற நிலையை ஏற்படுத்தும் இரக்க மனம் கொண்ட பிரகலாதன் இரண்டு விதமான புண்ணியங்களையும் அளவுக்கதிகமாகச் சேர்த்து விட்டான். அவன் பிரம்மனை வணங்கி தெய்வமே! தாங்கள் என்க்கிட்ட சாபம் தீரும் காலம் வந்து விட்டதா? என மனமுருகிக் கேட்டான். பிரம்மன் அவன் முன்பு தோன்றி சங்குகர்ணா! நீ இப்பிறவியில் அளவுக்கதிகமாக புண்ணியத்தை சேர்த்து விட்டாய். இவ்வாறு புண்ணியம் செய்பவர்கள் அந்த புண்ணியத்திற்குரிய பலன்களை பூமியில் இருந்து அனுபவிக்க வேண்டும். உலகின் சுகமான இன்பங்களை அனுபவித்த பிறகே பிரம்மலோகம் வர முடியும் என்றார். சங்குகர்ணன் அவரிடம் சுவாமி! அப்படியானால் எனது புண்ணியங்களைத் தீர்க்கும் வழி யாது?என்றான். நீ அடுத்த பிறவியிலும் மன்னனாகவே பிறப்பாய். இப்பிறவியில் மகாவிஷ்ணுவின் பக்தனாக இருந்த நீ அடுத்த பிறவியில் பாலிகன் என்ற பெயரில் பிறந்து அவருக்கு எதிராக செயல்படும் மக்களுக்கு ஆதரவாக இருப்பாய். எனவே உன் புண்ணியத்தின் பெரும்பகுதி கரையும். அதன் பிறகும் நீ சேர்த்த புண்ணியங்களின் விளைவை கலியுகத்தில் தான் தீர்ப்பாய், என்று அருள்பாலித்து மறைந்தார். பிரகலாதனாய் பிறந்த சங்குகர்ணன் இப்பிறவியில் பாலிகன் என்ற மன்னனாகப் பிறந்தான். கவுரவர்களின் நண்பனாக வேண்டிய சூழல் இவனுக்கு ஏற்பட்டது. குருக்ஷேத்திர யுத்தத்தில் இவன் கவுரவர்களுடன் சேர்ந்து பகவான் கிருஷ்ணரின் நண்பர்களான பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட்டு அழிந்தான். அடுத்த யுகமான கலியுகத்தில் பாலிகனின் அவதாரம் உலகமே வியக்கக்கூடியதாக இருந்தது. பாலிகனாகப் பிறந்த சங்குகர்ணன் கவுரவர்களுடன் இணைந்திருந்தாலும் கூட அப்போதும் சில புண்ணியங்களைச் சேர்த்துக் கொண்டான். மனிதர்கள் பாவம் செய்தாலும் சரி புண்ணியம் செய்தாலும் சரி!  கர்மம் எனப்படும் இந்த இரு வினைகளால் ஏற்படும் பலன்களை அனுபவிப்பதற்காக பூலோகத்தில் மீண்டும் பிறக்க நேரிடும். அதனால் தான் பாவ புண்ணியம் இரண்டும் கலந்த இந்த பிறவிச்சுழலில் இருந்து காப்பாற்றும் படி  இறைவனிடம் மகான்கள் வேண்டிக் கொள்வார்கள். பாலிகன் செய்த புண்ணியத்தின் விளைவை அனுபவிக்க அவன் பூலோகத்தில் பிறக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பல நூறு ஆண்டுகள் கடந்தன. கலியுகம் பிறந்தும் பல ஆண்டுகள் ஓடிவிட்டன. மைசூரு மாநிலத்தில் (இப்போதைய கர்நாடகம்) அப்பூர்  என்ற கிராமத்தை ஒட்டிய குக்கிராமத்தில் ராமாச்சாரியார் என்பவர் வசித்தார். இவருக்கு குழந்தை இல்லை. ராமாச்சாரியாரும் அவரது மனைவியும் மனம் நொந்து போய் இருந்தனர். ஒரு தம்பதிக்கு குழந்தை இல்லை என்றால் ஊரார் அவர்களைப் பற்றி வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவார்கள். குறிப்பாக உறவுக்காரர்கள் அந்தப் பெண்ணை மலடி என ஏசுவார்கள். அந்த ஆண்மகனை குடும்ப வாழ்வுக்கு லாயக்கற்றவன் என்பர். ராமாச்சாரியரும் இதற்கு விதிவிலக்கல்ல. கணவனும், மனைவியும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானார்கள். அந்த தம்பதியர் கண்ணீர்  வடிக்காத நாளில்லை. அவர்கள் தங்கள் பிரச்னைக்கு தீர்வு வேண்டி பிரமான்ய தீர்த்தர் என்ற வைணவத்துறவியை அணுகினர். தீர்த்தர் சுவாமிகளுக்கு எங்கள் நமஸ்காரம். இவள் என் மனைவி நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் அவதிப்படுகிறோம். ஊராரும் உற்றாரும் எங்களைப் பற்றி பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மனம் நொந்து போயிருக்கிறோம். குழந்தை இல்லாதவர்கள் வாழ்வதை விட சாவதே மேல். மேலும் குழந்தை இல்லாதவர்கள் தங்களுக்கு சிரார்த்தம் முதலியன செய்ய ஆள் இல்லாததால் நரகத்திற்கு செல்வார்கள் என்கிறது சாஸ்திரம். நாங்கள் ஏன் வாழ வேண்டுமென நினைக்கிறோம். எங்களுக்கு குழந்தை பிறக்க வழியிருக்கிறதா? நீங்கள் தான் ஒரு யோசனை சொல்ல வேண்டும், என்றார்.

தீர்த்தர் ராமாச்சாரியரிடம் அன்பனே! கவலைப்படாதே. உனக்கு குழந்தை பிறக்கும் காலம் கனிந்து விட்டது. ஒரு ஆண்குழந்தை உனக்குப் பிறக்கும் என்றதும் தம்பதியர் உணர்ச்சிப்பிழம்பாகி விட்டனர். தீர்த்தரை சேவித்த அவர்கள் சுவாமி! இதென்ன அதிசயம்! நிஜமாகவா இது நிகழப்போகிறது! எங்களுக்கு குழந்தையா! அதிலும் ஆண் குழந்தையா! என்னே நாங்கள் செய்த பாக்கியம் என்று புன்னகையும் கண்ணீருமாகக் கேட்டவர்களுக்கு அடுத்து வார்த்தைகள் வர மறுத்தன. நா தழுதழுத்தது. மனிதர்களுக்கு மிதமிஞ்சிய மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சரி அல்லது சோகம் நிகழ்ந்தாலும் சரி! ஏனோ வார்த்தைகள் வர மறுக்கின்றன. பிரமான்ய தீர்த்தரே அவர்களது இந்த உணர்ச்சிவசப்படும் தன்மையைக் கண்டித்தார். ராமாச்சாரி! நீ ரொம்பவும் சந்தோஷப்படாதே. மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும் போதும் வேண்டாத நிகழ்ச்சிகள் நடக்கும் போதும் மனதை ஒரே நிலையில் வைத்திருப்பவனே சிறந்த மனிதன். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தெரியாத நிலையற்ற உலகில் நாம் வசிக்கிறோம் என்பதை மறந்துவிடாதே. நல்லது நடக்கப் போகிறது என்பதற்காக மகிழாமலும் துன்பம் வரப்போகிறது என்பதற்காக கலங்காமலும் இருக்க வேண்டும் என சொல்லி விட்டு ராமாச்சாரி! இந்த அறிவுரையை நான் எதற்காக உன்னிடம் சொன்னேன் என்று உனக்குத் தெரியுமா? என்றதும் கேள்விக்குறியோடு தீர்த்தரின் முகத்தை அந்த தம்பதியர் ஒரு வித பயத்தோடு நோக்கினர். அத்துடன் தீர்த்தர் சொன்னதில் இருந்த நியாயத்தை உணர்ந்து தங்கள் மகிழ்ச்சியை ஒரு குட்டையைப் போல் சுருக்கிக்கொண்டு அவர் சொல்வதைக் கேட்க தயாராயினர்.ராமாச்சாரி! உங்களுக்கு குழந்தை பிறக்கும். ஆனால் அந்தக் குழந்தை எனக்குரியது. குழந்தை பிறந்தவுடன் அவனை எனக்கு தத்துக் கொடுத்து விட வேண்டும் என்றார். இந்த நிபந்தனையைக் கேட்டதும் தம்பதிகள் விக்கித்துப் போனார்கள். சற்று முன் அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி நதியில் கரைந்த சர்க்கரை போல் ஆயிற்று. குழந்தை பிறந்தவுடன் சீராட்டி, பாலூட்டி வளர்க்க வேண்டும். குருகுலத்துக்கு அனுப்பி அவனுக்கு பெரிய படிப்பெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும். இளைஞன் ஆனதும் சிறந்த பெண்ணை அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். அந்த திருமணத்தை ஊரே வியக்கும் வகையில் பெரிய அளவில் நடத்த வேண்டும். பேரன், பேத்திகளுடன் மகிழ்ந்து விளையாட வேண்டும் என்றெல்லாம் கற்பனை செய்வது எல்லாப் பெற்றோர்களுக்கும் வாடிக்கை தானே! ஆனால் தீர்த்தர் தங்களுக்கு இப்படி ஒரு நிபந்தனை விதிக்க என்ன காரணம் என்று யோசித்தனர்.சுவாமி! எங்களுக்கு குழந்தை பிறக்குமென தங்கள் திருவாக்கு மலர்ந்ததும் நாங்கள் மகிழ்ந்தோம். இப்போது இப்படி ஒரு நிபந்தனை விதிக்க காரணமென்ன? என அவர்கள் கவலையுடன் கேட்டனர். ராமாச்சாரி! கவலைப்படாதே! உங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தை சாதாரண குழந்தையல்ல. அவன் உலக இச்சைகளில் வாழ்வதற்காகப் பிறக்கவில்லை. மிகப்பெரிய புண்ணிய ஆத்மாவான அந்தக் குழந்தை சன்னியாச நிலை பெற்றுய்வதற்காக பிறக்கிறது. நீங்கள் அந்தக் குழந்தையை என்னிடம் ஒப்படைப்பதாக வாக்குறுதி அளித்தால் மட்டுமே உங்களுக்கு குழந்தை பாக்கியம். இல்லா விட்டால் இதுவும் சிரமமே! என்றார். உலகம் உய்வதற்காக ஒரு மகானைப் பெற்றுத் தரப்போகிறோம். அத்துடன் மலடி என்று ஊரார் சூட்டிய கொடுமையான பட்டத்தில் இருந்து விடுதலையும் கிடைக்கும். துறவியின் நிபந்தனைக்கு சம்மதித்து விட வேண்டியது தான் என முடிவெடுத்த அந்தத்தாய் சுவாமி! எனக்கு குழந்தை பிறந்தால் போதும் பிறந்தவுடன் தங்களிடமே ஒப்படைத்து விடுகிறேன் என்று கண்ணீர் மல்க கூறினார்.

மீண்டும் நாளை சந்திப்போம்
______________________________________________________________________________