திங்கள், 15 ஏப்ரல், 2019

மருதாணி

அம்பிகைக்கு உகந்த வாசனை பொருட்களில் ஒன்று மருதாணி ஆகும். வெறும் கைகளோடு பூஜை செய்வதை விட அம்பிகைக்கு உகந்த சிவப்பு வண்ணத்தோடும், நல்ல வாசனையோடும் நம் கைகளில் மருதாணி  வைத்து கொண்டு அம்பாளுக்கு தூப, தீப, ஆராதனைகள் செய்யும் போது தேவி இன்னும் மகிழ்கிறாள். மற்ற காலங்களில் வைத்து கொள்ளாவிட்டாலும் நவராத்ரி காலங்களில் ஆவது அவசியம் வைத்துக்கொண்டு பூஜிக்கலாம்.

சிறந்த அம்பாள் பக்தையாக விளங்கிய ஒரு பெண்மணிக்கு தனது கணவருக்கு வயிற்றில் ஏற்பட்ட பிரச்சனைக்கு மருத்துவமனை அணுக அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்றும் இருப்பினும் உயிர் பிழைப்பது கடினம் என்றும் தேதி வைத்துவிட்டனர். மிகவும் வருத்தப்பட அந்த பக்தை ஒரு ஸ்ரீவித்யா உபாசகரை நாடினார். அந்த பக்தைக்காக அம்பாளிடம் பிரார்த்தித்த உபாசகர் 5 வெள்ளிக்கிழமைகள் கோயிலுக்கு சென்று வரும் சுமங்கலி பெண்களுக்கு மருதாணி வைத்து வேண்டிகொள்ளுமாறு சொன்னார். 4 வெள்ளிக்கிழமைகள் செய்தானது. 5 ஆம் வாரம் ஆலயத்திற்கு சோதனையாக ஒருபெண்களும் வரவில்லை, பயந்த பக்தை அம்பாளை பிரார்த்தித்தாள். கருணை கொண்ட அம்பிகை சிறு பெண் (பாலா) ரூபத்தில் கோயிலுக்குள்  ஓடி வந்தாள். அக்கா எனக்கு மருதாணி வச்சிவிடறீங்களா? என கொஞ்சி மழலையாக கேட்டாள். சுமங்கலிக்கு தானே வைக்கவேண்டும், வந்ததோ சிறு பெண் என தயங்கிய பக்தை அம்பாள் மீது பாரத்தை போடு விட்டு, ஆடம் பிடித்த குழந்தைக்கு கைகளில் கொப்பி கொப்பியாக மருதாணி வைத்து விட்டு, நான் கொஞ்சம் மருதாணி தருகிறேன் நீ சென்று உன் அம்மாவுக்கும் வைத்து விடு என்று கேட்டுக்கொள்ள அப்படியே செய்யவதாக சொல்லிவிட்டு ஆலயம் விட்டு ஓடிவிட்டாள். வீட்டிற்கு வந்து அம்பாள் மீது பாரத்தை போடு விட்டு மறுநாள் அறுவைசிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டு, சோதனை செய்த போது மருத்துவர்கள் வியந்தனர், புற்றுநோயாக மாற இருந்த செல்கள் அனைத்தும் சாதாரண செல்களாக மாறிவிட்டதாகவும் அறுவை சிகிச்சை தேவையில்லை என்றும் கூறிவிட்டனர். வியந்த நன்றிப்பெருக்கோடு ஸ்ரீவித்யா உபாசகரிடம் சென்று சுவாமி நான் 5ஆம்வாரம்  பூர்த்தி செய்ய முடியவில்லை சுமங்கலிக்கு வைக்கல. ஆனாலும் அம்பாள் திருவருள் மூலம் கணவர் நலம் பெற்றார் என்றார். அப்போது சிரித்த ஸ்ரீவித்யா உபாசகர், வந்தது சாஃஷாத் அம்பிகை தான் என்றும், அவளுக்கே மருதாணி வைக்கும் பெரும் பேறு உன் பக்தியால் கிடைத்தது என்று கூறினார். கண்ணீர் மல்க அம்பிகைக்கு நன்றி சொன்னார் அந்த பக்தை..

 நாமும் அம்பாளை பூஜிக்கும் தருணம் மருதாணி வைத்துக்கொள்ளலாம், நவராத்ரி காலங்களில் இல்லத்திற்கு வரும் பெண்களுக்கும் மருத்துவ குணம் நிறைந்த மருதாணி வைத்துவிடலாம். அம்பிகை அருள் பெறலாம்..  ஜெய ஜெய ஜெகதாம்பிகே ஜெய ஜெய காமாக்ஷி!

மருதாணியின்மஹிமை
=======================

 ஒருநாள் ஸ்ரீஇராமர், இராவணனை போர் செய்து கொன்றுவிட்டு சீதாதேவியை பத்திரமாக மீட்டார். அப்போது அன்னை சீதாதேவி ஸ்ரீஇராமரிடம், “இங்கு நான் இருந்த ஒவ்வொரு நாளிலும் என் கஷ்டங்களை காது கொடுத்து கேட்ட இந்த மருதாணி செடிக்கு ஏதாவது நாம் நன்மை செய்ய வேண்டும்.” என்று கூறி மருதாணி செடியிடம், “உனக்கு என்ன வரம் வேண்டும்.” என கேட்டாள்.

“எங்களுக்கு எதுவும் வேண்டாம். இன்று உன் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது. உன்னை போல அனைத்து பெண்களும் மகிழ்ச்சியாக இருந்தாலே எங்களுக்கும் மகிழ்ச்சிதான். அது போதும்.” என்றது மருதாணி செடி.
அதற்கு சீதை, “உன்னதமான உன் குணத்திற்கு நான் ஒரு வரம் தருகிறேன். உன்னை யார் பூஜிக்கிறார்களோ அல்லது யார் உன்னை கைகளில் வைத்துக்
கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு சகல நன்மைகள் கிடைக்கும். அவர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.” என்ற வரத்தை தந்தார் சீதாபிராட்டி.

அதனால்தான் இன்றுவரை வடஇந்தியர்கள் திருமணத்திற்கு முந்தைய நாளில் மெஹந்தி விழா நடத்துகிறார்கள். இதன் காரணம், ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசி மணமகளுக்கும், திருமணத்தில் கலந்துக்கொள்ளும் உறவினர் பெண்களுக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அத்துடன் மருதாணிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. மருதாணியை ஒருவர் கையில் வைக்கும் போது, மருதாணி வைக்கபட்ட கை சிவந்தால், எந்த நபர் மருதாணி வைத்தாரோ அந்த நபர் பாசமானவர் என்பதை உணர்த்தும்.
அதனால்தான் இன்றும் சில கிராமபுரத்தில் உள்ள பெண்கள், தன் கையில் மருதாணி வைக்கும் படி தன் கணவரிடம் சொல்வாள்.மருதாணி வைத்த பிறகு அந்த பெண்ணின் கை நன்றாக சிவந்தால், தன் கணவர் தன் மேல் நல்ல பாசமாக இருக்கிறார் என்பதை புரிந்துக்கொள்வாளாம்.

வெள்ளிகிழமையில் மருதாணியை ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக்கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது. ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசியும் பரிபூரணமாக கிடைக்கும்.
ஸ்ரீ சக்கர மத்தா லலிதாம்பாள்.

அனைத்து தெய்வங்கள் பசுவில் உள்ளது

பசுவிற்கு உணவளித்தால் வரும் பலன்
திங்கள்தோறும் வாழைப்பழம், புல், அகத்திக்கீரை பசுவிற்கு அளித்தால் தாய் மற்றும் தகப்பன்வழி நமக்கு வந்த தோஷங்கள் நீங்கும்.

செவ்வாய்தோறும் தண்ணீருடன் புல் கொடுத்தால் இடம், நிலம் வீடு அமையும்

புதன் தோறும் பசுவிற்கு புல் கொடுத்துவந்தால் நல்ல வேலை கிடைக்கும்

வியாழன் தோறும் அரிசிக்கஞ்சி அளித்தால் பூர்வஜென்ம பாவங்கள் நீங்கும்

வெள்ளிதோறும் பசுவிற்கு உணவளித்து பூஜை செய்தால் மஹாலட்சுமியின் அருள் கிடைக்கும்

சனிதோறும் அகத்திக்கீரையுடன் புல் மற்றும் தண்ணீர் அளித்தால் இந்த ஜென்மத்தில் நாம் செய்த பாவங்கள் தொலையும்

ஞாயிற்றுக்கிழமை தோறும் பசுவிற்கு உணவளிக்க நல்ல கண் பார்வை கிடைக்கும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும்.

அஷ்டமி தோறும் பசுவினை ஒருமுறை வலம் வந்து உணவளித்தால் கொடுத்த கடன் / வாராக்கடன் கிடைக்கும்

துவாதசி தோறும் பசுவிற்கு உணவளிக்க ஆயிரம் பேருக்கு அன்னதானம் அளித்த பலன் கிட்டும்.

தினமும் பசுவினை குளிப்பாட்டி பராமரித்து உணவளித்து நோய்களில் இருந்து காத்து கன்றுக்கு அளித்த பால் போக மீதமுள்ள பால் கறந்து தெய்வத்திற்கு அபிஷேகத்திற்கு அளித்து வந்தால் முப்பத்து முக்கோடி தேவர்கள் மற்றும் லஷ்மியின் அருள் கிடைக்கும். அதனால்தான் வீட்டில் நம் முன்னோர்கள் பசுவினை காலம் காலமாக வளர்த்து வந்தார்கள். கன்றுக்கு பசிக்கு பால் தராமல் தான் கறந்து பருகினால் மிகப்பெரிய பாவம் என்றும் அந்த பாலினால் அபிஷேகம் செய்தால் பலன்கள் எதுவும் கிட்டாது எனவும் சாஸ்திரம் சொல்கிறது.  
ஸ்ரீ சக்கர மத்தா லலிதாம்பாள்

மஹா லக்ஷ்மி அருளும் விரத பலன்.

1. உயர்ந்த ஞானம் கிடைக்கும்.
2. மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.
3. மங்கல வாழ்வு அமையும்.
4. மனதில் உள்ள விருப்பங்கள் ஈடேறும்.
5. கல்யாணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

அம்மனை பூஜை செய்ய பூஜாவிதானம் புத்தகங்களில் கூறப்பட்டுள்ள வழியையே பின்பற்றவும். அப்படிப் பின்பற்ற இயலாதவர்களுக்குச் சில எளிய பூஜா மந்திரங்கள் இதோ :

திருமகளே திருப்பாற்கடல் ஊடன்று தேவர் தொழ வருமகளே உலகெல்லாமும் என்றென்றும் வாழவைக்கும்
ஒருமகளே நெடுமால் உரத்தே உற்று உரம்பெரிது தருமகளே தமியேன் தலைமீது நின்தாளை வையே
(வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)

மஹா லட்சுமி காயத்ரீ :

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணு பத்னீ ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீ : ப்ரசோதயாத்

அர்ச்சனை நாமாக்கள் :

ஓம் லக்ஷ்மிதேவியே நமோ நம :
ஓம் தாமரைப் பூவில் அமர்ந்தவளே நமோ நம:
ஓம் பாற்கடல் உதித்தோய் நமோ நம :
ஓம் செந்தூரத் திலகம் அணிந்தாய் நமோ நம :
ஓம் நாரணன் நெஞ்சில் நிறைந்தவளே நமோ நம :
ஓம் கருணையில் சிறந்தவளே நமோ நம :
ஓம் அலை கடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே நமோ நம :
ஓம் அமரர்கள் துதிபாடும் அமுதமும் நீயே நமோ நம :
ஓம் அன்பர்களைக் காத்திடும் அலைமகளே நமோ நம :
ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே நமோ நம :
ஓம் விஜயலக்ஷ்மியே நமோ நம :
ஓம் ராஜ்ய லக்ஷ்மியே நமோ நம :
ஓம் ஜயலக்ஷ்மியே நமோ நம :
ஓம் தான்ய லக்ஷ்மியே நமோ நம :
ஓம் தனலக்ஷ்மியே நமோ நம :
ஓம் தைர்ய லக்ஷ்மியே நமோ நம :
ஓம் மஹாலக்ஷ்மியே நமோ நம :
ஓம் உன்பதம் எந்நாளும் தஞ்சம் திருமகளே நமோ நம :

ஸ்கந்த புராணத்தில் வரலட்சுமி விரதத்தின் மகிமையை சிவபெருமான் விளக்குகிறார். சுமங்கலிகளால் இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. செல்வம் மற்றும் மங்கலத்தின் இருப்பிடமாக மகாலட்சுமி விளங்குகிறாள். அறிவுசார்ந்த, நற்குணமுள்ள மக்கட்பேறு, கணவரின் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுள் வேண்டி மகாலட்சுமி பூஜை செய்யப்படுகிறது. இந்த விரதத்தன்று நீராடி, புத்தாடை அல்லது தூய ஆடை உடுத்த வேண்டும். தாமரை கோலம் வரைந்து, அதன் நடுவில் தேர் வடிவ சிற்பம் அல்லது பலகை வைக்கவேண்டும். புது அரிசி, மாவிலை, தேங்காயுடன் கூடிய ஒரு கலசத்தை அதில் வைத்து மகாலட்சுமியை ஆவாஹனம் செய்யவேண்டும். குடத்தில் இருக்கும் புது அரிசி, எதிர்கால வளர்ச்சியையும், சுபிட்சத்தையும் குறிப்பதாகும். கலசத்துக்கு பூஜை செய்த பிறகு, கணேச பூஜையும், பிறகு மங்கல சூத்திரமான மாங்கல்ய பூஜையும் நடத்த வேண்டும். வரலட்சுமி பூஜையின் முக்கிய அம்சமே பெண்ணின் வலக்கையில் ரட்சை(காப்பு) கட்டுவது தான்.

பூஜை முடிந்த பின், குங்குமம், மஞ்சள்கயிறு, பூ , வஸ்திரம் முதலிய மங்கல திரவியங்களை சுமங்கலிகளுக்கு தானமாகக் கொடுப்பர். உணவும் வழங்குவர். லட்சுமிதேவி தன் பக்தர்களுக்கு பொருள் வளத்தை மட்டுமல்லாது உயர் ஞானத்தையும் அருள்கிறாள். அவள் வித்யாசக்தியாக இருந்து, நல்ல கல்வியும் தருகிறாள். தன் பக்தர்களை பகவான் விஷ்ணுவுக்கு அவள் அறிமுகம் செய்து வைக்கிறாள். அவர்களது முக்திக்காக அவரிடம் சிபாரிசு செய்கிறாள். பகவான் விஷ்ணு அல்லது ஹரியான ஸ்ரீமன் நாராயணனின் சக்தியே மகாலட்சுமி. அழகு, கருணை, அழகான இயற்கைக் காட்சி, நாணம், அன்பு, செழிப்பு, இசை, பஞ்ச பூதங்கள் மற்றும் அவற்றின் சேர்க்கைகள், மனம், புத்தி, பிராணன் எல்லாமே அவளது தோற்றங்கள். லட்சுமிதேவி இல்லாமல் சந்நியாசிகள் கூட தங்கள் ஆஸ்ரமத்தையோ, பிரசாரத்தையோ நடத்த முடியாது. இல்லறத்தாரைக் காட்டிலும் அவர்களுக்குத் தான் லட்சுமி தேவி அதிகம் தேவைப்படுகிறாள். ஏனெனில், மக்கள் நன்மைக்காக அவர்கள் பெரும் தொண்டு செய்ய வேண்டியுள்ளது. ஆதிசங்கரர் தேவியையும், லட்சுமியையும், சரஸ்வதியையும் தமது பணியில் வெற்றிக்காக வழிபட வேண்டி நேரிட்டது. கடந்த காலத்தில் பெரும் ஆன்மிகப்பணி ஆற்றிய பெருமக்களும் இறை தூதர்களும் அன்னை லட்சுமிதேவியையும், சரஸ்வதியையும் ஆராதித்தவர்களே ஆவர். அன்னை மகாலட்சுமி உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாளாக! அவளது மந்திரத்தை நாம் பாராயணம் செய்வோம்.

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணு பத்ன்யை ச தீமஹி
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத்!.  நன்றி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி.

ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

நாயன்மார்கள் என்று கூறப்படுபவர்கள் யார்? அவர்கள் எத்தனை பேர்?

63 மூன்று நாயன்மார்கள் யாவர்?

9 தொகை அடியார்கள் என்பவர்கள் யார்?

தனி அடியார், தொகை அடியார் என்றால் என்ன?

நாயன்மார்கள் வரலாறு எப்படி உருவானது?

நாயன்மார்கள் என்பவர்கள் பெரிய புராணம் எனும் நூலில் குறிப்பிடப்படும் சைவ அடியார்கள் ஆவார்.

நாயன்மார் எண்ணிக்கை அடிப்படையில் 63 நபர்கள் ஆவார்கள்.

சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையில் அறுபது சிவனடியார்கள் பற்றியே குறிப்பிட்டுள்ளார்.

அந்த நூலினை மூலமாகக் கொண்டு சேக்கிழார் பெரிய புராணத்தினை இயற்றினார்.

எனவே திருத்தொண்டத் தொகையை எழுதிய சுந்தரமூத்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார் - இசை ஞானியார் ஆகிய மூவரையும் நாயன்மார்களாக இணைத்துக் கொண்டார்.

நாயன்மார்களுக்குச் சிவாலயங்களின் சுற்றுபிரகாரத்திற்குள் கற் சிலைகள் வைக்கப்படுகின்றன.

அத்துடன் அறுபத்து மூவரின் உலோகச் சிலைகளும் ஊர்வலத்தின் பொழுது எடுத்துச் செல்லப்படுகின்றன.

இந்த ஊர்வலத்திற்கு "அறுபத்து மூவர் திருவீதி உலா " என்று பெயர்.

****63 நாயன்மார்களின் பெயர்கள் :-****

1. அதிபத்தர்

2. அப்பூதியடிகள்

3. அமர்நீதி நாயனார்

4. அரிவட்டாயர்

5. ஆனாய நாயனார்

6. இசைஞானியார்

7. இடங்கழி நாயனார்

8. இயற்பகை நாயனார்

9. இளையான்குடிமாறார்

10. உருத்திர பசுபதி நாயனார்

11. எறிபத்த நாயனார்

12. ஏயர்கோன் கலிகாமர்

13. ஏனாதி நாதர்

14. ஐயடிகள் காடவர்கோன்

15. கணநாதர்

16. கணம்புல்லர்

17. கண்ணப்பர்

18. கலிய நாயனார்

19. கழறிற்ற்றிவார்

20. கழற்சிங்கர்

21. காரி நாயனார்

22. காரைக்கால் அம்மையார்

23. குங்கிலியகலையனார்

24. குலச்சிறையார்

25. கூற்றுவர்

26. கலிக்கம்ப நாயனார்

27. கோச் செங்கட் சோழன்

28. கோட்புலி நாயனார்

29. சடைய நாயனார்

30. சண்டேஸ்வர நாயனார்

31. சத்தி நாயனார்

32. சாக்கியர் 

33. சிறப்புலி நாயனார்

34. சிறுத்தொண்டர்

35. சுந்தரமூர்த்தி நாயனார்

36. செருத்துணை நாயனார்

37. சோமசிமாறர்

38. தண்டியடிகள்

39. திருக்குறிப்புத் தொண்டர்

40. திருஞானசம்பந்தமூர்த்தி

41. திருநாவுக்கரசர்

42. திருநாளைப் போவார்

43. திருநீலகண்டர்

44. திருநீலகண்ட யாழ்ப்பாணர்

45. திருநீலநக்க நாயனார்

46. திருமூலர் இடையர்

47. நமிநந்தியடிகள்

48. நரசிங்க முனையர்

49. நின்றசீர் நெடுமாறன்

50. நேச நாயனார்

51. புகழ்சோழன்

52. புகழ்த்துணை நாயனார்

53. பூசலார் அந்தணர்
 
54. பெருமிழலைக் குறும்பர்

55. மங்கையர்க்கரசியார்

56. மானக்கஞ்சாற நாயனார்

57. முருக நாயனார்

58. முனையடுவார் நாயனார்

59. மூர்க்க நாயனார்

60. மூர்த்தி நாயனார்

61. மெய்ப்பொருள் நாயனார்

62. வாயிலார் நாயனார்

63. விறன்மிண்ட நாயனார்

******9 தொகையடியார்கள் :-*********

1.தில்லைவாழ் அந்தணர்:

தில்லையில் நடராசப் பெருமானுக்கு வழிபாடு புரியும் அந்தணர்

2.பொய்யடிமை இல்லாத புலவர்:

சங்க காலப் புலவர் நாற்பத்தொன்பதின்மர்.

3.பத்தராய்ப் பணிவார்:

திருவாரூரில் புற்றிடங்கொண்ட பெருமானை முழுமுதல் கடவுளாய் வழிபட்ட தொகையடியார்கள்.

4.பரமனையே பாடுவார்:

சிவபெருமானை மட்டுமே பாடுபவர்கள். பிற தெய்வத்தை பாடாதவர்கள்.

5.சித்தத்தை சிவன்பாலே வைத்தார்:

சிவயோக நெறியில் சித்தத்தை வைத்து முக்தியடைந்தவர்கள்.

6.திருவாரூர்ப் பிறந்தார்:

திருக்கயிலாயத்தில் உள்ள சிவகணங்களே இவர்கள்.

7.முப்போதும் திருமேனி தீண்டுவார்:

மூன்று காலங்களில் சிவபெருமானை அபிஷேகம் செய்து அர்ச்சிப்பவர்கள்.

8.முழுநீறு பூசிய முனிவர்:

உடல் முழுவதும் திருநீறு பூசி சிவபெருமானையே பூசித்து வருபவர்கள்.

9.அப்பாலும் அடிசார்ந்தார்:

முத்தமிழ் நாடுகளுக்கு அப்பால் உள்ள நாடுகளில் வாழ்ந்த சிவனடியார்கள்.

63 நாயன்மார்களின் வரலாற்றுச் சுருக்கம் :-

1. திருநீலகண்ட நாயனார்:

கூடா நட்பின் விளைவால், மனைவியை இளம் வயது முதல் தீண்டக் கூடாது, முதுமைகாலத்தில், மனைவியாருடன் கோல் பிடித்து, குளத்தில் முழுகி, சிவ பெருமான் அருளால் இளமை பெற்றார்.

2. இயற்பகை நாயனார்:

சிவனடியாராக வந்த சிவனிடம், தன்னுடைய மனைவியை , முழுநம்பிகையுடன் அனுப்பியவர்.

3. இளையான்குடிமாற நாயனார்:

நடு இரவில், சிவனாடியார் வேடத்தில் வந்த சிவபிரானுக்காக, நெல் அறுத்தவர்.தன்னுடைய , வீட்டுக் கூரையையும் விறகாக ஆக்கி, சிவனடியாருக்கு உணவு தந்தவர்.

4. மெய்ப்பொருளார்:

தன்னுடைய பகைவன், பொலி சிவவேடம் பூண்டு தன்னைக் கொன்றான்.
இருப்பினும், சாகும்தறுவாயிலும், சிவவேடத்திற்கு மரியாதைத் தந்து, பகைவனின் உயிரைக் காப்பாற்றியவர்

5. விறல்மிண்டர்:

சிவ பகதர்களை வணங்காத காரணத்தினால், சுந்தர நாயனாரைக் கடிந்து ஏசியவர். திருத்தொண்ட தொகை பாட காரணமாக விளங்கியவர்.

6. அமர்நீதியார்:

சிவனடியாராக வந்த சிவனின் கோவணம் தொலைந்துப் போக, ஈடாக , தன்னுடைய சொத்தையும்,குடும்பத்தையும் ஈடாகத் தந்தவர்.

7. எறிபத்தர்:

சிவபக்தரின் பூஜைக்குரிய பூவை எறிந்த மன்னனின் யானையைக் கொன்றவர்.பின் தவறுசெய்ததாக எண்ணிய மன்னன், சிவபக்தன் என்று உணர்ந்தவுடன், தன் கழுத்தை வெட்டத்துணிந்தவர்.

8. ஏனாதிநாதர்:
கொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததையறிந்து, பகைவனைக்கொல்லாமல், தான் உயிர் இழந்தவர்.

9. கண்ணப்பர்:

பக்தியில், சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர். அன்புப் பெருக்கால் மாமிசத்தையும் இறைவருக்குப் படைத்தவர்.

10. குங்கிவியக்கலயர்:

சாய்ந்த லிங்கத்தை தான் கழுத்தில் கயிறு கட்டி இழுத்தவர். வறுமையில் வாடினாலும், மனைவி கொடுத்த தாலியை விற்று உணவு வாங்காமல் சிவ பூஜைக்காக தூபம் ஏற்றியவர்.

11. மானக்கஞ்சறார்:

தன் மகளுக்குக் கல்யாணம் என்றாலும், சிவனடியார் கேட்க, மகளின் அழகிய கூந்தலை வெட்டியவர்.

12. அரிவாட்டாயர்:

சிவபூஜைக்குரிய பொருட்கள் கீழே விழுந்ததால் மாறாக தன்னுடைய கழுத்தை வெட்டத்துணிந்தவர்.

13. ஆனாயர்:

புல்லாங்குழல் ஓசையில் சிவ பக்தியை வெளிப்படுத்தியவர்.

14. மூர்த்தி நாயனார்:

சந்தனக் கட்டைகள் கிடைக்காது தன்னுடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர். நாடாளும் பொறுப்பு வந்தாலும் திருநீறு, உருத்திராக்கம், சடைமுடியைத் தன்னுடையசின்னமாகக் கொண்டவர்.

15. முருக நாயனார்:

வழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்கு பூமாலையாம் பாமாலையை (பாட்டினால்) சாத்தி அர்ச்சனை புரிவார். இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தை ஓதிக்கொண்டேயிருப்பார்.

16. உருத்திரபசுபதி:

கழுத்தளவு நீரில் பகல் இரவு பாராமல் ருத்ரம் ஓதியவர்.

17. திருநாளைப்போவார்:

தாழ்ந்த குலமென்பதால் கோயிலில் நுழையாமல் வெளி நின்று சிவனை வணங்குவார். தன்தரிசனத்தை மறைத்த நந்தியை நகரச் செய்தவர். சிதம்பரம் திருத்தலம் போக வெகு ஆவல்கொண்டவர்.

18. திருக்குறிப்புத் தொண்டர்:

சிவபிரான் வேடமிட்ட சிவனின் அழுக்குத் துணியைத் துவைத்தவர். ஆனால், குறித்தநேரத்தில் தன் பணியைச் செய்ய இயலாததால் தன் தலையைக் கல்லில் மோதியவர்.

19. சண்டேசுர நாயனார்:

சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்தவர். பாற்குடத்தைக் காலால் உடைத்த தந்தையின் காலை வெட்டியவர்.

20. திருநாவுக்கரசர் சுவாமிகள்:

தேவாரம் பாடி உழவாரப் பணியில் ஈடுபட்டு சிவன் அருளைச் சிறப்பித்தவர். பற்பல அற்புதங்கள் மூலம் சிவனருளைக் கண்முன் காட்டியவர்.

21. குலச்சிறையார்:

பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்து சைவத்தைக் காத்தவர்.

22. பெருமிழலைக் குறும்பர்:

சிவனாடியருக்கு வேண்டியது அளித்து உதவி புரிபவர்.
சுந்தரருடன் கயிலை சென்றவர்.

23. காரைக்கால் அம்மையார்:

இறைவனின் அருளால் , கணவருக்காக மாம்பழம் வரவழைத்தார். பின், இறைவனே துடிக்க பேய் வடிவம் எடுத்தவர். சிவபெருமானால் அம்மையே என்று அன்புடன் அழைக்கப்பெற்றவர். அறுபத்து மூவருள் அமரும் பாக்கியம் பெற்ற ஒரே அம்மையார்.

24. அப்பூதி அடிகள்:

திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்தவர். தன் மகன் பாம்பால் கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாது என்ற அச்சத்தால் இறந்த மகனை மறைத்துவைத்தவர். பின் இறந்த மகனை சிவன்அருளால் உயிர் பெற்ற செய்தவர்.

25. திருநீலநக்கர்:

திருச்சாத்தமங்கை அவயந்தி ஆலயத்தில், சிவலிங்கத்தின் மீது உள்ள சிலந்தியை ஊதிய மனைவியை கடிந்து ஏசியவர்.ஈசன் கனவில் காட்சியளித்தது அருள்புரிந்தார்

26. நமிநந்தி அடிகள்:

ஈசன் அருளால் தண்ணீரால் விளக்கு ஏற்றி அற்புதம் நிகழ்த்தியவர்.

27.திருஞானசம்பந்தர்:

ஞானக் குழந்தை பல அற்புதங்கள் செய்தவர். பார்வதி அம்மையிடம் ஞானப்பால் உண்டபேறு பெற்றவர். அப்பர் பெருமானால் மிகவும் போற்றப் பட்டவர். சமணர்களை வென்று சைவம் தழைக்கச் செய்தவர்.

28. ஏயர்கோன் கலிக்காமர்:

இறைவனை தூதுதவராய் அனுப்

பிய சுந்தரநாயனாரிடம் கடிந்து பேசியதால், சூலைநோய் பெற்றார். பின் சிவன் அருளால் நோய் நீக்கப்பட்டது.

29.திருமூலர்:

திருமந்திரம் பாடியவர். நந்தி எம்பெருமானின் மாணாக்கர். சித்தர்.விடம் தீண்டி மூலன் என்பவர் இறந்தார் இதனால் பசுக்கள் துயரம் கொண்டன. பசுவின் துயரம் தீர்க்க மூலன் உடலில் புகுந்து பசுக்களை காத்தார்.

30. தண்டி அடிகள்:

கண் குருடாக இருந்தாலும் சமுதாய நோக்கம் கொண்டு குளம் தோண்டியவர்.சமணர்கள் சவால் விட சிவஅருளால் கண் பார்வை மீண்டும் பெற்றவர். சமணர்கள் பார்வை இழந்தனர்.

31. மூர்க்கர்:

சூதாடி வரும் வருமானத்தில் சிவ பூஜை நடத்தியவர். சிவனடியார்க்கு வேண்டிய தேவைகள் செய்தார்.

32. சோமாசிமாறர்:

நிறைய யாகம் நடத்தி சிவ பூஜை செய்தவர்.லோகம் சுபிட்சம் பெற பல சிவயாகம் நடத்தி ஈசனை மகிழ்வித்தார். சுந்தரரின் நண்பர்.

33. சாக்கியர்:

அன்பால் சிவ லிங்கத்தின் மீது கல் எறிந்து வழிபட்டவர்.இவர் சிவபக்தியால் எறிந்த கல் அனைத்தும் மலர்களாக மாறின.

34. சிறப்புலி:

சிவனாடியார்கள் பேரன்புடையவர் வேண்டுவதை அளிக்கும் வள்ளல். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.

35.சிறுத்தொண்டர்:

பைரவ அடியாராய் வந்த சிவனுக்காக தன் மகனையே வெட்டி கறி சமைக்கத் துணிந்தவர்.

36. சேரமான் பெருமாள்:

சுந்தரரின் நண்பர். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். சிவனடியாரை சிவனாக பாவித்து உபசரித்தார்.

37. கணநாதர்:

சிவ பூஜையை அதிக பக்தியுடன் செய்வார். திருஞானசம்பந்த மூர்த்தியுடன் நட்பு கொண்டு சிவாலயம் பல சென்று வழிபடும் பெறும் பெற்றார்.

38.கூற்றுவர்:

நாடாள முடிசூட விரும்பியவர். ஆனால், வாய்ப்புக் கிடைக்காததால் தன்சிந்தையில் சிவனே முடி சூட்டி தந்ததாக எண்ணியவர்.

39. புகழ்ச்சோழ நாயனார்:

எறிபத்தர். தவறு செய்த யானையை கொன்றுவித்தார் என்று அறிந்து சிவனை நினைத்து தன் உயிரை விட நினைத்த மன்னர்.சிவனாடியார் தலை கொய்திய காரணத்தால் யாகத்தில் உயிர் துறந்தவர்.

40. நரசிங்க முனையரையர்:

சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்த்தவர். சிவாலயம் பல கட்டி சைவம் வளர்த்தார். மூர்த்தி வேடம் கொண்ட சிவனாடியரை கண்ட பல பதுங்கி செல்ல அவரை வணங்கி நீதி அளித்தார்.

41. அதிபத்தர்:

வலையில் கிடைக்கும் முதல் மீனை சிவனை
நினைத்து, ஆற்றில் விடுபவர். அன்று ஒருபொன் மீன் கிடைத்தாலும் சிவனுக்காக ஆற்றில் விட்டு விட்டார்.

42. கலிக்கம்பர்:

முன்பு வேலைக்காரனாக இருந்தவன் சிவனடியாராய் வந்திட உபசரிக்க மறுத்தமனைவியின் கையை வெட்டியவர்.

43. கலியர்:

வறுமையில் தன் மனைவியே விற்று விளக்கு ஏற்றினார். எண்ணெய் வாங்கக் காசுஇல்லாத சமயத்தில் தன் இரத்தத்தால் விளக்கு ஏற்றியவர்.

44. சத்தி:

சிவனைப் பற்றி தவறாக பேசியவரின் நாக்கை அறுத்தவர்.

45. ஐயடிகள் காடவர்கோன்:

மன்னன் பதவியை விட்டு திருத்தல யாத்திரை மேற்கொண்டவர்.

46. கணம்புல்லர்:

விளக்கு ஏற்றுவதற்குத் தடை ஏற்பட்டதால், தன் தலைமுடியைக் கொண்டு விளக்கு ஏற்றியவர்

47. காரி:

காரிக்கோவை என்ற நூல் இயற்றி வரும் வருமானத்தில் சிவாலயங்களை அமைத்தார்.

48. நின்றசீர் நெடுமாறனார்:

திருஞான சம்பந்தாரால் தன்னுடைய நோயும் கூனும் நீக்கப்பெற்று சைவத்தைவளர்க்கும் அரசராய் வாழ்ந்தவர்.

49. வாயிலார்:

இறைவனை எப்போதும் நினைக்கக்கூடிய தமது மனக்கோயிலில் இருத்தினார். உணர்வுஎன்னும் தூய விளக்கேற்றினார். ஒப்பில்லா அரும்பெரும் இன்பம் என்னும்திருவமுதத்தால் வழிபட்டு சிவபெருமானுடைய சேவடி நீழலை எய்தும் பேரின்ப வாழ்வுபெற்றார்.

50. முனையடுவார்:

அரசருக்காகப் போர் புரிந்து வரும் வருமானத்தில் சிவனாடியார்களா அனைவருக்கும் உணவு அளித்தார்.

51. கழற்சிங்க நாயனார்:

சிவ பூஜைக்கு உரிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டியவர்.

52. இடங்கழி:

அரசனாய் இருந்தாலும் தன்னுடைய நெல் களஞ்சியத்தை சிவ பூஜைக்கு வாரித் தந்தவர்.

53. செருத்துணை நாயனார்:

சிவ பூஜைக்குரிய மலரை மோந்த கழற்சிங்கநாயனாரின் மனைவியின் மூக்கை வெட்டியவர்.

54. புகழ்த்துணை:

வறுமை வந்தாலும் கோயிலில் சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். பின் ஊரின்பஞ்சத்தைத் தீர்க்க பொருள் பெற்றார்.

55. கோட்புலி:

சிவபூஜைக்குரிய நெல்லை எடுத்த உறவினர்களின் நெல்லை அழித்தவர்.

56. பூசலார்:

பொருள் இல்லாததால் மனத்தில் கோயில் கட்டினார். மன்னன் கட்டிய கற் கோயிலைவிட்டு இறைவன் முதலில்
பூசலாரின் மனக்கோவிலுக்கு வருகை அளித்தார்.

57. மங்கையர்க்கரசியார்:

சைவத்தைப் பரப்பிய பாண்டிய மகாராணி. நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. அமைச்சர் குலச்சிறையாரின் துணையுடன் ஞான சம்பந்தரை மதுரைக்கு அழைத்து சைவமதம் தழைக்கும் படி செய்த அம்மையார்.

58. நேசர்:

சிவனாடியார்களுக்கு உடையும் கோவணமும் அளித்தார்.
எப்பொழுதும் சிவனின் நாமத்தை நினைத்தவர்.

59. கோச்செங்கட் சோழர்:

முற்பிறவியில், சிலந்தியாய் சிவனை வழிபட்டு யானையால் இடர் பட்டு மன்னராய்பிறந்தார். பின் மன்னராய் நிறைய சிவ ஆலயங்களை யானை நுழைய இயலா வண்ணம்கட்டினார்.

60. திருநீலகண்ட யாழ்ப்பாணர்:

ஞான

சம்பந்தருடன் யாழ் இசையின் மூலம் சிவனைப் போற்றியவர்

61. சடையனார் நாயனார்:

சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை.

62. இசைஞானியார்:

சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை.

63. சுந்தரமூர்த்தி நாயனார்:

தேவாரம் பாடியவர். சிவ பெருமானின் தோழர். ஈசன் நட்புகாக இவரைத் தேடி வந்தார். திருத்தொண்டத்தொகை பாடியருளியவர்.  பல அற்புதங்களை நிகழ்த்தினார்.

* நாயன்மார்கள் வரலாறு எப்படி உருவானது?

நாயன்மார் என்போர் கி.பி 400-1000 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலராவார்கள். சுந்தரமூர்த்தி நாயன்மார் திருத்தொண்டத் தொகையில் அறுபத்து இரண்டு நாயன்மார்களைப் பற்றி கூறியுள்ளார்.

அதன் பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட, அறுபத்து இரண்டு பேருடன் சுந்தரமூர்த்தி நாயன்மாரையும் இணைத்து அறுபத்து மூவரின் வரலாற்றை திருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாயன்மார்களின் பட்டியல் :-

நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். அவர் பாடிய நாயன்மார் 60 பேர். 63 பேர் அல்ல. சுவாமிமலைக்குப் படி 60. ஆண்டுகள் 60. மனிதனுக்கு
விழா செய்வதும் 60 வது ஆண்டு. ஒரு நாளைக்கு நாழிகை 60. ஒரு நாழிகைக்கு வினாடி 60. ஒரு வினாடிக்கு நொடி 60. இப்படி 60 என்றுதான் கணக்கு வரும். 63 என்று வராது.

சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய நாயன்மார் 60 பேர்தான்.

சுந்தரமூர்த்தி நாயனார் மறைவுக்குப் பின் 100 ஆண்டுகள் கழித்து, நம்பியாண்டார் நம்பி அடிகள், சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மாரைக் கொஞ்சம் விரிவாகப் பாடுகின்றார்.

அப்போது 60 நாயன்மாரைப் பாடி, அந்த 60 நாயன்மாரைப் பாடிக் கொடுத்த சுந்தரர், அவரைப் பெற்றுக் கொடுத்த அப்பா (சடையனார்), அம்மா (இசைஞானியார்) ஆகியோரைச் சேர்த்து 63 ஆக ஆக்கினார்.

* பக்தியே பிரதானம்:

நாயன்மாரில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள்.

மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே.

 பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர் வாழ்ந்தவர்கள்.

இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும்......

எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே......

இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது.

பெண்கள் வீட்டோடு இருந்த அக்காலக் கட்டத்தில் காரைக்கால் அம்மையார், மங்கையர்கரசி, இசைஞானியார் மற்றும் திலகவதியார், சந்தனத் தாதியார், கமலவதியார், ஆகியோர் சிவ பூஜையே பிரதானமாக கொண்டு.....

சிவனாடியார்களுக்கு தொண்டுகள் பல செய்து.....

முக்தியடைந்தது வியக்கத்தக்க ஒன்று ஆகும்...

ஈசன் இன்றி அணுவும் ஆசையாது, காலனை உதைத்த கருணாமூர்த்தியே தன்னலமற்ற பக்தியுடன் நாம் சிவாலயம் சென்று சிவபெருமானை வழிபடுவோம்.

நம் துன்பம், வறுமை, நோய் நீங்கி வாழ்வில் வளங்கள் பல பெறுவோம்.

ஓம் நமச்சிவாய.!
நற்றுணையவது நமசிவாயவே..!
திருத்தொண்டத்தொகை - திருவாரூர்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ புற்றிடங்கொண்டார், ஸ்ரீ தியாகராஜர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அல்லியம் பூங்கோதை, ஸ்ரீ கமலாம்பிகை

திருமுறை : ஏழாம் திருமுறை 39 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்

திருத்தொண்டத்தொகை சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடப்பட்டது. சிவனுடைய அடியவர்களுக்கெல்லாம் தான் அடிமை என்ற பொருள்பட அமைந்த திருத்தொண்டத்தொகை 11 பாடல்களால் ஆனது. திருவாரூர் கோயிலில் இருந்த போது சிவபெருமானே அவருக்குத் "தில்லைவாழ் அந்தணர்" என அடியெடுத்துக் கொடுத்துப் பாடுமாறு பணித்தார் என்பது சைவ மக்களின் நம்பிக்கை. இதுவே சேக்கிழாரின் பெரியபுராணத்துக்கு முதல் நூல் ஆகும். இதை விரிவு படுத்தி அடியவர்களின் வரலாறுகளைப் பெரியபுராணமாகத் தந்தார் சேக்கிழார்.

திருத்தொண்டத்தொகை 72 அடியார்களின் பெயர்களை எடுத்துக்கூறுகின்றது.

இவர்களில் 63 தனி அடியார்களும்,

9 தொகை அடியார்களும் அடங்குவர்.

தனிப்பட்ட ஒருவரை அடியவராகச் சுட்டும் போது அவர் தனி அடியார் எனப்படுவார்.

ஒன்றுக்கு மேற்பட்டவர்களை ஒருங்கே அடியவர்களாகச் சுட்டும் போது அவர்கள் தொகை அடியார் எனப்படுவர்.

63 அடியவர்களுள்.....

60 அடியவர்கள் ஆண்கள்......
3 அடியவர்கள் பெண்கள்.....

பாடல் எண் : 01

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்

திருநீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்

இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்

இளையான் தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்

வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்

விரிபொழில்சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன்

அல்லிமென் முல்லையந்தார் அமர் நீதிக்கு அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

பாடல் எண் : 02

இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தற்கு அடியேன்

ஏனாதி நாதன் தன் அடியார்க்கும் அடியேன்

கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பற்கு அடியேன்

கடவூரில் கலயன் தன் அடியார்க்கும் அடியேன்

மலை மலிந்த தோள் வள்ளல் மானக்கஞ்சாறன்

எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்

அலை மலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

பாடல் எண் : 03

மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்

முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்

செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்

திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்

மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க

வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த

அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக்கு அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

பாடல் எண் : 04

திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட

திருநாவுக்கரையன் தன் அடியார்க்கும் அடியேன்

பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்

பெருமிழலைக் குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன்

ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்

ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன்

அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

பாடல் எண் : 05

வம்பறா வரிவண்டு மணநாற மலரும்

மதுமலர் நல் கொன்றையான் அடியலாற் பேணா

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்

ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்

நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்

நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன்

அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

பாடல் எண் : 06

வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே

மறவாது கல்லெறிந்த சாக்கியற்கும் அடியேன்

சீர்கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்

செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டற்கு அடியேன்

கார்கொண்ட கொடை கழறிற்றறிவாற்கும் அடியேன்

கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்

ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

பாடல் எண் : 07

பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்

பொழில் கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற்கு அடியேன்

மெய்யடியான் நரசிங்க முனையரையற்கு அடியேன்

விரி திரை சூழ் கடல் நாகை அதிபத்தற்கு அடியேன்

கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்

கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்

ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

பாடல் எண் : 08

கறைக்கண்டன் கழலடியே காப்புக் கொண்டிருந்த

கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன்

நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற

நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்

துறைக்கொண்ட செம்பவளம் இருள் அகற்றும் சோதித்

தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்

அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவாற்கு அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

பாடல் எண் : 09

கடல் சூழ்ந்த உலகு எலாம் காக்கின்ற பெருமான்

காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்

மடல் சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை

மன்னவனாஞ் செருத்துணை தன் அடியார்க்கும் அடியேன்

புடை சூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி

பொன்னடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்

அடல் சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

பாடல் எண் : 10

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்

பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்

சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்

திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்

முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்

முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்

அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

பாடல் எண் : 11

மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்

வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்

தென்னவனாய் உலகாண்ட செங்கணாற்கு அடியேன்

திருநீல கண்டத்துப் பாணனார்க்கு அடியேன்

என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்

இசைஞானி காதலன் திருநாவலூர்க்கோன்

அன்னவனாம் ஆரூரன் அடிமை கேட்டு உவப்பார்

ஆரூரில் அம்மானுக்கு அன்பர் ஆவாரே.

நற்றுணையாவது நமச்சிவாயவே!
உபவாசம் என்றால் என்ன?

தபோவனத்தில் ஒரு சம்பவம் : ஞானானந்த கிரி சுவாமி தபோவனத்தில் இருந்த போது இரண்டு பாகவதர்கள் வந்தார்கள். அன்று இரவு முழுதும் திவ்யநாம சங்கீர்த்தனம் நடந்தது.
பஜனை முடிந்ததும் சுவாமியும் பாகவதர்களும் ஓய்வெடுக்க சங்கல்பித்தார்கள். சுவாமி பாகவதர்களை பார்த்து "நன்கு ஓய்வெடுப்போம். நாளை இருந்து பூஜைகளைப் பார்த்து ஆகராம் செய்து பிறகு போவோம்" என்று சொன்னார்.

இருவர் முகத்திலும் ஏதோ கலவரம். புரிந்து கொண்ட சுவாமி என்ன என்று கேட்டார். உடனே அவர்கள் "நாளை ஏகாதசி வ்ரதம். முழுநாள் சாப்பிட மாட்டோம்" என்றார்கள். சுவாமியும் குறும்புத்தனமாக ஒரு சிரிப்பு சிரித்து விட்டு "சரி. நாளைய உபவாசம் நம்முடனேயே தபோவனத்தில் இருக்கட்டும்" என்று ஆணையிட்டார்.
மறுக்க முடியாமல் ஒப்புக்கொண்டு இரவு ஓய்வெடுத்தனர். மறுநாள் காலை விடியும் முன் எழுந்து நீராடி சுவாமியின் தரிசனத்திற்காக காத்திருந்தார்கள்.
ஞான பிழம்பாய் சுவாமி தன் அறையை விட்டு வெளியில் வந்தார்.

காலை தனுர் மாத பூசை முடிந்தது.
பாகவதர்கள் இருவரையும் சுவாமி அழைத்தார். தனுர் மாத பூஜை முடிந்தது. பொங்கல் பிரசாதம் வாங்கி சாப்பிட்டு சுவாமியின் அறைக்கு வெளியில் நிற்போம். சுவாமி இருவரையும் கூப்பிடும் என்று சொல்லி வேறு எதுவும் பேச சந்தர்ப்பம் கொடுக்காமல் அறைக்கு சென்றார். குருநாதரின் வார்த்தையை தட்ட முடியாமல் பாகவதர்கள் இருவரும் பிரசாதம் சாப்பிட்டு சுவாமியின் அறைக்கு வெளியில் சுவாமியின் அழைப்பிற்காக காத்திருந்தனர்.
சுவாமி அழைத்தார். ஓடினர் இருவரும். "பாத பூஜையை தரிசித்து விட்டு மீண்டும் வருவோம்" என்றார். அப்படியே செய்தனர். மதியம் ஆயிற்று. மீண்டும் சுவாமி அழைத்தார்.

"மதியம் உணவருந்தி வருவோம்" என்றார். மறுக்க முடியாமல் அவ்வண்ணமே செய்தனர். உத்தரவுக்காக காத்திருந்தனர். மாலை ஆனது. சுவாமி அழைத்தார். "சாய பூஜையை தரிசிப்போம்" என்று ஆணையிட்டார். பைரவர் பூஜை முடிந்தவுடன் சுவாமி இருவரையும் அழைத்தார் "இரவு உணவருந்தி சுவாமி அறைக்கு வருவோம்" என்று சொன்னதும் இருவரும் அவ்வன்னாமே செய்தனர்.

இரவு உணவு முடிந்து சுவாமியின் அறைக்கு வந்த இருவரையும் பார்த்து "இன்னைக்குத்தான் நாம உண்மையில ஏகாதசி விரதம் இருந்தோம்" என்று சொன்னார் சுவாமி. இவர்களுக்கு ஒன்னும் புரியவில்லை.

"இன்னைக்கு முழுதும் சுவாமி எப்போ கூப்டுவாரோன்னு முழுசா இருவரின் மனசும் ஸ்வாமியிடமே இருந்தது. எங்கு சென்றாலும் சாப்பிடும் போது கூட சுவாமி எப்போ கூப்பிடுவார்ன்னு சதா சுவாமியையே ஸ்மரணை இருந்தது. இது தான் உபவாசம் என்பது. உடம்பை பட்டினிப்போட்டு வருத்துவதில் ஒன்னும் பயன் இல்லை. உபவாசம் என்றால் அருகில் வாசம் செய்வது என்று பொருள். எப்பொழுதும் இறைவனை மனதில் ஸ்மாரிதுக்கொண்டு எப்பவும் இறைவன் அருகிலேயே இருப்பது தான் உபவாசம் என்பது. அதை எந்த வேலை செயும் போதும் கடைபிடிக்கலாம். உடம்பைப் பட்டினி போட்டு தான் என்று இல்லை" என்று சுவாமி சொன்னார்.

புதன், 27 மார்ச், 2019

காமாக்ஷி ஸ்தோத்திரம்

மங்கள சரணே மங்கள வதனே மங்கள தாயினி காமாக்ஷி

குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

ஹிமகிரி தனயே மம ஹ்ருதி நிலயே ஸஜ்ஜன ஸதயே காமாக்ஷி

குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

க்ரஹநுத சரணே க்ருஹ சுத தாயினி நவ நவ பவதே காமாக்ஷி

குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

சிவமுக விநுதே பவசுக தாயினி நவ நவ பவதே காமாக்ஷி

குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

பக்த சுமானஸ தாப வினாசினி மங்கள தாயினி காமாக்ஷி

குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

கேனோ பநிஷத் வாக்ய வினோதினி தேவி பராசக்தி காமாக்ஷி

பரசிவ ஜாயே வர முனி பாவ்யே அகிலாண்டேஸ்வரி காமாக்ஷி

குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

ஹரித்ரா மண்டல வாஸினி நித்யே மங்கள தாயினி காமாக்ஷி

குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

ஜகன் மாதாவை நினைத்து தை, செவ்வாய், வெள்ளி கிழமைகளில் காமாக்ஷி விளக்கேற்றி வைத்து, ஏழு முறை தீப பிரதக்ஷணம் செய்து பக்தியுடன் இதை சொன்னால் மங்கள காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.

கல்யாணம் ஆகாதவர்களுக்கு வழி பிறக்க ஜகத்குரு காஞ்சி மஹா பெரியவாள் இயற்றி அனுக்கிரகித்த காமாக்ஷி ஸ்தோத்திரம் இது.

செவ்வாய், 26 மார்ச், 2019

#குடிமல்லம் பழமையான "சிவன்" கோயில் !

எத்தனையோ முறை திருப்பதி சென்றுள்ளோம் . இந்த முறை சென்றால் தயவுசெய்து இக்கோவில் தரிசனத்தை மட்டும் தவறவிடாதீர்கள் உலகப் பழம்பெறும் சிவலிங்கத்தை தரிசனம் செய்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் கர்மவினை முற்றிலும் நீங்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். இதை தரிசனம் செய்த பல மனிதர்கள் வாழ்க்கையில் அத்தனை ஆனந்த திருப்பங்களும் வாழ்வில் பிறந்த பயனையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



ரேணிகுன்டாவில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள "குடிமல்லம்" எனும் கிராமத்தில் உள்ள "பரசு ராமேஸ்வர" ஆலயத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த லிங்க வடிவம் காணப்படுகிறது. இக்கோயிலில் உள்ள செங்கல் கிபி ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்பட்டுள்ளது. பல்லவர், பாணர், சோழர் கால கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் பழமையானது நந்திவர்மன் காலத்து கல்வெட்டு.

லிங்கம் 5 அடி உயரம். தடிமன் 1 அடி. லிங்கத்தின் தண்டு பகுதி 4 அடி. நுனியில் உள்ள மொட்டு 1 அடி. தண்டுப் பகுதியில் ஓர் வேடன் உருவம் வலது கையில் ஆட்டை தொங்கவிட்டும், மறு கையில் சிறு பாத்திரமும், தோளில் வேட்டை கோடரி (பரசு) யும் வைத்துள்ளவாறு செதுக்கப்பட்டுள்ளது. மார்பில் பூணூல் இல்லை. ஜடாமுடி தரித்துள்ளது. லிங்கத்தின் கீழ் யோனி பீடம் (ஆவுடை) காணப்படவில்லை.

எனவே அக்காலத்தில் சிந்து சமவெளி நாகரீகத்தில் இருந்தது போல தமிழ்நாட்டிலும் (இந்தியாவின் பிற பகுதிகளிலும்) " இக்கோவில் கலை காணப்படுகிறது.

பழமையான சிவலிங்கம் :-

உலகின் மிகப் பழமையான சிவ லிங்கம் 'ஹரப்பா' வில் உள்ளது.

அதற்கு அடுத்த பழமையான சிவலிங்கங்கள் தமிழகத்தில் மட்டுமே உள்ளன. 'குடிமல்லம்' என்ற இடத்தில் உள்ள சிவலிங்கம். பழைய எல்லைப்படி இது தமிழகம். இன்றைய எல்லைப்படி இது ஆந்திரா. ஆம் ரேணிகுண்டாவிற்கு அருகில் உள்ள ஊர். இந்த குடிமல்லம் சிவன் கோயில் ASI (Archaeological Survey of India) -ன் கட்டுப்பாட்டில் உள்ளது.

உலகில் சிவலிங்கத்தை ஆராய்ச்சி செய்பவர்களின் கருத்துப்படி இதுவே மிகவும் பழமையான சிவலிங்கம்.

ஆன்மீகத்தில் முன்னேற விரும்பும் ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் காண வேண்டிய சிவ ஸ்தலம். மிகவும் சாதாரணமாக இருக்கும் என்பதற்கு இந்த ஊர் சிவலிங்கம் ஒரு உதாரணம். மக்கள் யாரும் இந்த ஊருக்கு வருவதில்லை. நன்கு விஷயம் அறிந்தவர்கள் மட்டுமே இந்த ஊர் கோயிலில் உள்ள சிவலிங்கத்தை காண வருகின்றனர். உண்மை ஆன்மீகத்திற்கான திறவுகோல் இந்த சிவ லிங்கம். உண்மையில் தேடுபவர்களுக்கு மட்டுமே உண்மைப் பொருள் விளங்கும். இத்தனை முக்கியமான சிவன் கோயிலுக்கு மக்கள் வருவதே இல்லை. ஆனால் ரேணிகுண்டாவை தாண்டித்தான் லட்சக்கணக்கானோர் திருப்பதிக்கு செல்கின்றனர்.

அப்படி என்ன இந்த சிவ லிங்கத்தில் உள்ளது என்பது என்பதை காண ஆன்மீகவாதிகள் சென்று முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஆன்மீக முன்னேற்றம் பெற விரும்பும் ஒவ்வொருவரும் வாழ்கையில் ஒரு முறையாவது அந்த சிவலிங்கத்தை நேரில் சென்று தரிசனம் செய்ய தவறாதீர்கள்.
இது மாதிரி மனசிருந்தா மழை கொட்டும்!

காமதம் என்ற வனப் பகுதியில் அத்திரி முனிவரும், அவரது மனைவி அனுசூயாவும் ஆஸ்ரமம் அமைத்து தங்கியிருந்தனர். பல முனிவர்களும் அங்கிருந்தனர். ஐந்தாண்டுகள் மழை இல்லாததால் வறட்சி ஏற்பட்டது. அங்கிருந்த முனிவர்கள் வேறு இடங்களுக்கு புறப்பட்டனர். ஆனால்,அனுசூயா இதை பொருட்படுத்தாமல், கணவருக்கு பணிவிடை செய்து வந்தாள். அவள் முன் தோன்றிய கங்காதேவி, அம்மா அனுசூயா! மற்றவர்கள் வறட்சிக்கு பயந்து கிளம்பிய நிலையிலும், அதைப் பொருட்படுத்தாமல் கணவனுக்கு சேவை செய்தது கண்ட சிவன், என்னை அனுப்பினார். வேண்டும் வரம் கேள் என்றாள். தாயே! வறண்ட வனத்தை வளமாக்கு என்றாள். அப்படியே ஆகட்டும் என்ற கங்கை, அனுசூயாவிடம், எல்லோரும் என்னில் நீராடுவதால், அவர்கள் செய்த பாவமெல்லாம் எனக்குள் கரைந்து கிடக்கிறது. உன் போன்ற பதிவிரதை மனம் வைத்தால் நான் சுத்தமாகி விடுவேன், என்றாள். சற்று கூட தயக்கமின்றி, அனுசூயா கணவருக்கு சேவை செய்த புண்ணியத்தை தர சம்மதித்தாள். அப்போது சிவன் தேவியோடு காட்சி தந்து, புண்ணியத்தையே தானம் செய்த புண்ணியவதி நீயம்மா என வாழ்த்தினார். அங்கு நீர் வளம் பெருகியது.

சரப சாஸ்திரிகள்...


சரப சாஸ்திரிகள்

புல்லாங்குழல், ஒரு காலத்தில் கச்சேரிகளில் பக்க வாத்தியமாக மட்டுமே வாசிக்கப்பட்டு வந்தது. அத்தகைய வாத்தியத்துக்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்து. அதை எல்லோராலும் கவனிக்க வைத்த பெருமைக்குரியவர் - ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் அவதாரம் என்று போற்றப்பட்ட வேணுகானம்சரப சாஸ்திரிகள் ஆவார். தஞ்சை ஜில்லாவில் கும்பகோணம் சோலையப்பன் தெருவில் விஸ்வநாத சாஸ்திரிகளுக்கும் தர்மாம்பாளுக்கும் 1872-ல் இரண்டாவது திருக்குமரனாக அவதரித்தவர் ஸ்ரீசரப சாஸ்திரிகள் (இந்தத் தம்பதியரது முதல் திருக்குமாரன் ஸ்ரீசிவக்குமார் சாஸ்திரிகள் கும்பகோணம் கல்லூரியில் நல்ல உத்தியோகத்தில் இருந்தவர்). சரப சாஸ்திரிகளின் இயற்பெயர் ராமச்சந்திரன். வேத சாஸ்திரங்களில் பெரிய பண்டிதராகவும், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் வித்வானாகவும் விளங்கியவர் விஸ்வநாத சாஸ்திரிகள்.

குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட ஒரு வியாதியால் தனது இரண்டாம் வயதிலேயே இரு கண் பார்வையையும் இழந்தார் சரப சாஸ்திரிகள். புத்திரனுக்கு ஏற்பட்ட இத்தகைய ஒரு சோகத்தைப் பெற்ற மனம் தாங்குமா? ஓடியாடி விளையாட வேண்டிய வயதில் குழந்தை தட்டுத் தடுமாறி நடந்தால் எப்படி இருக்கும்? விஸ்வநாத சாஸ்திரிகளும் தர்மாம்பாளும் துடித்துப் போனார்கள். போதிய சிகிச்சைகள் செய்தும் அது பலன் தரவில்லை. கல்வி மற்றும் கேள்வி ஞானங்களில் எதிர்காலத்தில் தன்னைப் போல் பெரும் பண்டிதராக விளங்குவான் என்று எதிர்பார்த்த தந்தைக்கு ஏமாற்றம். இவன் வயதை ஒத்த வயதுடைய சிறுவர்கள் பள்ளிக்கூடத்துக்குச் செல்வதை மிகவும் ஏக்கத்துடன் பார்த்து வந்தனர். விஸ்வநாத சாஸ்திரிகளும் தர்மாம்பாளும். என்றாலும், வேறு வழி தெரியாததால், மனதைத் தேற்றிக் கொண்டனர்.

மகனுக்கு எதில் நாட்டம் இருக்கிறது என்பது தந்தையாருக்குப் புரியவில்லை. ஒரு நாள் மகனிடமே கேட்டார் - எதிர்காலத்தில் நீ என்ன செய்யப் போவதாக உத்தேசம்?0 புல்லாங்குழல் கொடுத்தால், என்னால் வாசிக்க முடியும் அப்பா என்று சரப சாஸ்திரிகள் இரண்டு வயதில் சொன்னது பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் திருவாக்கோ என்னவோ! அதிலேயே அவர் பெரும் புகழும் பெற்றார். மகனது பதிலில் நெகிழ்ந்து போனார். தந்தை பார்வையே தெரியாமல் இருக்கும்போது எப்படித் துளைகளை அடையாளம் கண்டு கொண்டு இவனால் புல்லாங்குழல் வாசிக்க முடியும் என்று விஸ்வநாத சாஸ்திரிகள் யோசிக்கவில்லை. இசைதான் இவனுடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்தி போலிருக்கிறது என்று தெளிந்தார். ஒரு நாள் யதேச்சையாகத் தன் வீட்டுத் தோட்டத்தில் இருந்து பக்குவப்பட்ட ஒரு மூங்கிலை எடுத்து அதில் துளைகள் போட்டு. புல்லாங்குழலாக உருவாக்கி மகன் சரப சாஸ்திரிகளிடம் கொடுத்தார் விஸ்வநாத சாஸ்திரிகள்.

தந்தையார் தன் ஆசிகளோடு வழங்கிய அந்தக் கருவியைக் கையில் வாங்கிய சரப சாஸ்திரிகள், அதைத் தன் வாயில் வைத்து காற்றைச் செலுத்தி, இசைக்கத் துவங்கியதும், எங்கே இருந்து இந்த வேணு கானம் கேட்கிறது? என்று தந்தையாரான விஸ்வநாத சாஸ்திரிகள் சுற்றும்முற்றும் பார்த்தார். பிறகுதான் விஷயம் அறிந்து தெளிந்தார் - தன் மகன் இசைக்கும் இந்தப் பச்சை மூங்கிலில் இருந்துதான் மயக்குகின்ற இந்த இசை வருகிறது என்று. தெய்வீகத் தன்மையுடன் கேட்ட இந்த தேவ கானத்தில் தன்னையே இழந்த விஸ்வநாத சாஸ்திரிகள் அன்றைய தினம் முதல் மகனுக்கு முறைப்படி சங்கீதம் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார். சுயமாகவே புல்லாங்குழலை வாசிக்கும் திறன் படைத்த சரப சாஸ்திரிகளின் அருட்திறன் அப்போது அந்தத் தெருவில் இருந்த எல்லோராலும் சிலாகித்துப் பேசப்பட்டது.

காலப்போக்கில் விஸ்வநாத சாஸ்திரிகள் இறைவன் திருவடியைச் சேர்ந்தார். இதற்குப் பின் கும்பகோணத்தில் வசிக்கப் பிடிக்காமல் தன் இரு திருக்குமாரர்களையும் அழைத்துக் கொண்டு திருவையாறு வந்தார் தர்மாம்பாள். அங்கே சத்குரு தியாகராஜ ஸ்வாமிகளின் இல்லத்துக்கு அடுத்தாற்போல் வசித்து வந்த தன் சகோதரர் வீட்டில் தங்கினார் தர்மாம்பாள். இளைய மகன் சரப சாஸ்திரிகளை இசைத் துறையில் சிறந்த மேதை ஆக்க வேண்டும் என்பதற்காக தன் இன்னொரு சகோதரரும் தியாகராஜ ஸ்வாமிகளின் அன்புக்குப் பாத்திரமானவருமான குப்புஸ்வாமி ஐயரிடம் சங்கீதம் கற்க அனுப்பினார் தர்மாம்பாள்.

இதன் பின் தியாகராஜ ஸ்வாமிகளின் நெருங்கிய உறவினாரும், அவரது முக்கிய சீடர்களில் ஒருவருமான மானம்புச்சாவடி வெங்கட சுப்பய்யரிடம் இசை பயில அனுப்பினார் (திருவையாறு ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள் ஸித்தி ஆனது 1847-ஆம் வருடம். இதற்குப் பிறகுதான் சரப சாஸ்திரிகள் அவதரித்தார். ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகளின் முக்கிய சிஷ்யர்கள் - தில்லை ஸ்தானம் ராமய்யங்கார், வாலாஜாபேட்டை வெங்கட்ரமண பாகவதர், மானம்புச்சாவடி வெங்கட சுப்பய்யர், திருவெற்றியூர் வீணை குப்பய்யர், ஐயா பாகவதர், லால்குடி ராமய்யர், உமையாள்புரம் கிருஷ்ண பாகவதர், அமிர்தலிங்கம் பிள்ளை, சுந்தர பாகவதர் போன்றோர். கர்னாடக சங்கீதம் நாடு முழுதும் பரவ வேண்டும் என்பதற்காக ஜாதி வித்தியாசம் பாராமல் ஆர்வம் உள்ள பலரையும் தன் சிஷ்யர்களாகச் சேர்த்து கொண்ட மாபெரும் மகான் தியாகராஜ ஸ்வாமிகள்).

தியாகராஜ ஸ்வாமிகளின் சிஷ்யராக விளங்கிய மானம்புச்சாவடி வெங்கட சுப்பய்யரிடம் பல மாணவர்கள் சங்கீதம் கற்றுக் கொண்டனர். எப்படி தியாகராஜ ஸ்வாமிகள் பல சிஷ்யர்களை உலகுக்கு அளித்தாரோ, அதுபோல் மானம்புச்சாவடி வெங்கட சுப்பய்யரும் ஒளி வீசும் ஐந்து ரத்தினங்களாக ஐந்து சிஷ்யர்களை உருவாக்கினார். அவர்களும் சரப சாஸ்திரிகளும் ஒருவர். ஏனைய நால்வர் - மகா வைத்தியநாதசிவன், பட்டணம் சுப்ரமணிய ஐயா, தியாகராஜ ஸ்வாமிகளின் பெண் வயிற்றுப் பேரனான தியாகராஜா மற்றும் பிடில் வெங்கோபராவ். புல்லாங்குழல் வாத்தியத்தில் நெளிவு சுளிவுகளை சரப சாஸ்திரிகளுக்கு விளக்கி, அவருக்குப் பல யுக்திகளைச் சொன்னவர்- கோவிந்த நாயணக்காரர் எனும் நாகஸ்வர வித்வான். மேலும், பல்லவி நாராயண சுவாமி ஐயர், நாடியம் ராமு ஐயர் போன்ற பெரிய வித்வான்களும் இவருடைய கலை ஞானத்தைப் புரிந்து கொண்டு இந்த வாத்தியத்தின் சூட்சுமங்களைச் சொல்லிக் கொடுத்து வழிகாட்டியாக இருந்தனர். தியாகராஜ ஸ்வாமிகளின் அநேக க்ருதிகளை பயின்றார் சரப சாஸ்திரிகள். பின்னாளில் சுந்தர பாகவதர் நடத்தும் ஸ்ரீதியாகராஜ ஆராதனையின் போது சரப சாஸ்திரிகளின் கச்சேரியுடன்தான் ஆராதனையே துவங்கிற்று என்றால், சாஸ்திரிகளின் இசைத் திறனுக்கு சுந்தர பாகவதர் கொடுத்த முக்கியத்துவம் நன்றாகவே விளங்கும்.

சரப சாஸ்திரிகளுக்கு இனிமையான சாரீரம் அமைந்ததோடு வயலின், மிருதங்கம் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். தமிழ் தவிர சமஸ்க்ருதம்,  தெலுங்கு, மராத்தி போன்ற மொழிகளிலும் பாண்டித்யம் கொண்டிருந்தார். வட மொழியில் எண்ணற்ற சாகித்யங்களை இவர் சுயமாக இயற்றியது இவரது பன்மொழிப் புலமையை உணர்த்தும். புல்லாங்குழல் வாசிப்பில் பெரும் புகழ் பெற்று விளங்கிய சரப சாஸ்திரிகளை பல வித்வான்கள் அணுகி, அவரது இசைப் பயணத்தில் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு வேண்டினர். இப்படி தன்னிடம் வந்த பல திறமையாளர்களை ஊக்குவித்து. அவர்களையும் புகழ் பெற வைத்தார் சரப சாஸ்திரிகள். கடம் பழநி கிருஷ்ணய்யர் ஒரு முறை சரப சாஸ்திரிகளை சந்தித்து, அவரிடம் கடம் வாசித்துக் காண்பித்து பாராட்டுகளைப் பெற்றார். இதன் பின் சரப சாஸ்திரிகளின் கச்சேரியில் அடிக்கடி வாசிக்க ஆரம்பித்தார். சரப சாஸ்திரிகளின் சம காலத்திய வித்வான்களுள் குறிப்பிடத்தகுந்த சிலர் - புதுக்கோட்டை மான் பூண்டியாபிள்ளை, தட்சிணாமூர்த்தி பிள்ளை. திருவையாறு சுப்ரமண்ய ஐயர். திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர், திருமருகல் நடேச நாயணக்காரர், எட்டாயபுரம் ராமச்சந்திர பாகவதர்.

உரிய காலத்தில் அம்பு அம்மாள் எனும் யுவதியை மணந்தார் சரப சாஸ்திரிகள். நாயன்மார்களின் சரித்திரத்தைத் தமிழிலும் மராத்தியிலும் சுமார் 500 சாஹித்யங்களாக (கதைப் பாடல்களாக) புனைந்து இசையமைத்தார். சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் தன்னுடைய கதாகாலட்சேபத்தில் நாயன்மார்களின் இந்தப் பாடல்களைப் பாடுவது வழக்கம். நகுமோமு கனலேனி என்ற ஆபேரி கீர்த்தனையில் அற்புதங்கள் பலவற்றை அமைத்துத் தந்துள்ள சரப சாஸ்திரிகள். தானம் வாசிப்பதில் தேர்ந்தவர். இரு கண்களில் பார்வையை இழந்திருந்தாலும், எதையும் ஒரு முறை கேட்ட மாத்திரத்திலேயே கிரஹித்துக் கொள்ளக் கூடிய அபார ஆற்றல் பெற்றவராக விளங்கினார் சரப சாஸ்திரிகள். இதனால் இவர் ஏக சந்த்ர கிரஹி என எல்லோராலும் அழைக்கப்பட்டார்.புல்லாங்குழல் வாசிப்பில் எதையும் கொண்டு வர முடியும் என்பதை நிரூபித்துப் பல புதுமைகளைப் புகுத்தியவர் சரப சாஸ்திரிகள். எப்படிப்பட்ட ஒரு துல்லியமான சத்தத்தையும் புல்லாங்குழலில் கொண்டு வருவது இவருக்குக் கைவந்த கலை. இவரது நேரடி சீடர்தான் பல்லடம் சஞ்சீவ ராவ்.

கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் வழியில் மூப்பக்கோயில் என்ற இடத்தில் வலப் பக்கமாக ஒரு சாலை பிரியும். அங்கிருந்து சுமார் இரண்டு கி.மீ. தொலைவு சென்றால் ஏராகரம் என்கிற கிராமம் வரும். இங்கு மிகவும் புராதனமான முருகப் பெருமான் கோயில் கொண்டுள்ளார். ஒரு முறை சில பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டி. இந்த முருகப் பெருமானை வந்து வணங்கி, மன அமைதி பெற்றுள்ளார் சரப சாஸ்திரிகள். அதோடு, அங்குள்ள மக்களிடம் அந்த முருகப் பெருமானின் சிறப்பு பற்றிச் சொல்லி இருக்கிறார். முருகப் பெருமான் என்றாலே காவடிதானே விசேஷம்! எனவே, சர்ப்ப காவடி மச்ச காவடி போன்றவற்றைத் தூய பக்தியுடன் சுமந்து, இந்த முருகனை மனம் குளிரச் செய்யுங்கள்... உங்களையும் ஊரையும் காப்பாற்றுவார் என்று கிராமத்தவர்களிடம் சொல்லி, ஏராகரத்தின் பெருமையை உலகறியச் செய்தார்.

சரப சாஸ்திரிகளின் புல்லாங்குழல் வாசிப்பைக் கேட்டு மகிழ வேண்டும் என்று ஆசைப்பட்டார் மைசூர் மகாராஜா. இதற்கான 1904-ஆம் ஆண்டு தன் அரசாங்கப் பிரதிநிதி ஒருவரை கும்பகோணத்துக்கு அனுப்பி, சாஸ்திரிகளின் வசதியைக் கேட்டறிந்து வருமாறு அனுப்பினார் மகாராஜா. ஆனால், தன்னிடம் வந்த அரசுப் பிரதிநிதியிடம், என்னைப் போன்ற பார்வையற்ற ஒருவரை அதிகாரத்தில் உள்ள மகாராஜா சந்திப்பது முறையல்ல. மகாராஜாவின் முன் வாசிக்க நான் தகுதி அற்றவன். விஷயத்தைப் பக்குவமாக மகாராஜாவுக்குச் சொல்லுங்கள் என்று அன்புடன் அனுப்பி வைத்தார்.

தன் பிரதிநிதி சொன்னதைக் கேட்ட மகாராஜாவுக்கு சரப சாஸ்திரிகளின் மீதுள்ள மரியாதை இன்னும் கூடியது. எப்படியேனும் அவரது இசையை நான் கேட்டே ஆக வேண்டும். என்று ஆவல் மிகுதியில் மீண்டும் ஆள் அனுப்பினார். மகாராஜாவின் இசை ஆர்வத்தைக் கண்டு நெகிழ்ந்த சரப சாஸ்திரிகள் ஒரு நாள் மைசூருக்குப் பயணப்பட்டார். தான் வாசிக்கும் மேடையின் முன் ஒரு திரையைத் தொங்க விட்டு, அந்த மறைவில் இருந்தபடி வாசித்தார் சரப சாஸ்திரிகள். அதாவது மகாராஜாவுக்கு சாஸ்திரிகள் இசைக்கும் வாத்தியத்தின் ஒலி மட்டுமே கேட்கும். ஆனால், இவரை நேரில் பார்க்க முடியாது. அது போன்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தி இருந்தார். சரப சாஸ்திரிகள் அன்றைய தினம் பல க்ருதிகளை அற்புதமாக வாசித்து மகாராஜாவை மகிழ்வித்தார் சாஸ்திரிகள்.

நீண்ட நேர இசைக் கச்சேரியைக் கேட்ட மகாராஜா. சரப சாஸ்திரிகளின் திருமுகத்தைப் பார்க்க கூடிய வாய்ப்பு தனக்குக் கிடைக்காததால். அவரை ஒரு புகைப்படம் எடுத்துத் தன்னுடன் வைத்துக் கொள்ள ஆசைப்பட்டார். ஆனால், சரப சாஸ்திரிகள் தன்னைப் புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கவில்லை (சரப சாஸ்திரிகளின் புகைப்படம் வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.)மைசூரில் இருந்து கும்பகோணத்துக்கு சரப சாஸ்திரிகளை உரிய மரியாதைகளுடன் அனுப்பி வைத்தார் மகாராஜா. ஏராளமான சன்மானங்களையும் அரசாங்கத்தின் சார்பாகக் கொடுத்து அனுப்பினார். ஆனால், சரப சாஸ்திரிகளின் சேவை போதும் என்று இறைவன் முடிவெடுத்து விட்டான் போலும். கும்பகோணத்துக்குத் திரும்பும் வழியிலேயே கடும் ஜுரம் சாஸ்திரிகளைத் தாக்கியது. ஜுரத்துடனே வீட்டுக்கு வந்த சாஸ்திரிகள் போதிய சிகிச்சைகளையும் எடுத்துக் கொண்டார். ஆனால், அது பலன் தரவில்லை. ஒரு சில நாட்களிலேயே அவரது உடலில் இருந்து ஜீவன் பிரிந்தது. ஆதி சங்கரர். மகாராஜா சுவாதித் திருநாள் ஆகியோர் போல் இளம் வயதிலேயே இவ்வுலகை நீத்தார் சரப சாஸ்திரிகள்.

வெறும் 32 வருடங்களே வாழ்ந்த சரப சாஸ்திரிகள். தியாகராஜ ஸ்வாமிகளின் வழியில் ஸ்ரீராம பக்தியை என்றென்றும் அனுஷ்டித்து வந்தார். ஸ்ரீராமர் படங்களை வைத்தும், விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்தும் தினசரி வழிபாட்டை நடத்தி வந்தார். ஸ்ரீராம பஜனை ஸபா என்கிற அமைப்பைத் தொடங்கி, ஒவ்வொரு வருடமும் ஸ்ரீராம நவமி உள்ளிட்ட பல வைபவங்களை நடத்தி வந்தார். எண்ணற்ற கலைஞர்களை அழைத்து, இசைக் கச்சேரிகளையும் நடத்தினார். அவர் நடத்திய அதே வழியிலேயே இந்த பஜனை சபாவின் அமைப்பாளர்கள் இன்றும் தொடர்ந்து வைபவங்களை நடத்தி வருவது பாராட்டத்தக்கது. கும்பகோணம் சோலையப்பன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீராம பஜனை ஸபாவில் ஏகாதசி பஜனை. மார்கழி மாதத்தில் ராதா கல்யாணம் போன்ற வைபவங்கள் சிறப்பாக நடந்து வருகின்றன. இந்த பஜனை ஸபாவில் சரப சாஸ்திரிகள் காலத்து ஸ்ரீராமர் ஓவியங்களும், சரப சாஸ்திரிகள் தன் வாசிப்புக்குப் பயன்படுத்திய - பொக்கிஷம் போன்ற இரண்டு புல்லாங்குழல்களையும் நாம் காணலாம். 1956 - ஆம் ஆண்டு கும்பகோணத்தில் நிகழ்ந்த மகா மக வைபவத்தின்போது காஞ்சி ஸ்ரீமகா ஸ்வாமிகள் புனித நீராட வந்திருந்தார். அப்போது மகா பெரியவர் இந்த பஜனை ஸபாவுக்கு வருகை புரிந்தார். சரப சாஸ்திரிகளின் பெருமைகளைப் பற்றி அப்போது பக்தர்களுக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார். சரப சாஸ்திரிகள் துவக்கி வைத்த இந்த பஜனை ஸபா இன்றளவும் தன் புகழைப் பரப்பி வருகிறது. இந்த ஸபாவின் நிகழ்வுகளையும் பராமரிப்பையும் வேணுகானம் ஸ்ரீசரப சாஸ்திரிகள் மெமோரியல் டிரஸ்ட் பொறுப்பேற்று நடத்தி வருகிறது.

தொடர்புக்கு:

செகரெட்டரி, ஸ்ரீராம பஜனை ஸபா,
110, சோலையப்பன் தெரு,
கும்பகோணம் - 612 001.
போன்: 0435 - 2422517,

அருள்மிகு படம்பக்கநாதர் திருக்கோயில்

மூலவர் : படம்பக்கநாதர், ஒற்றீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத்தியாகர்
அம்மன்/தாயார் : வடிவுடையாம்பிகை, வட்டப்பாறையம்மன், திரிபுரசுந்தரி
தல விருட்சம் : மகிழம், அத்தி
தீர்த்தம் : பிரம்ம, நந்தி தீர்த்தம்
ஆகமம்/பூஜை  : காரணம், காமீகம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருவொற்றியூர்
ஊர் : திருவொற்றியூர்
மாவட்டம் : திருவள்ளூர்
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், காளமேகப்புலவர், இரட்டைப்புலவர்கள், தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், மறைமலையடிகளார்

தேவாரப்பதிகம்:மனமென்னும் தோணிபற்றி மதியெனும் கோலையூன்றிச் சினமெனும் சரக்கையேற்றிச் செறிகடல் ஓடும்போது மதமெனும் பாறைதாக்கி மறியும்போது அறியவொண்ணா துணையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே.
திருநாவுக்கரசர்தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 20வது தலம்.

திருவிழா:சித்திரையில் வட்டப்பாறையம்மன் உற்சவம், வைகாசியில் வசந்தோற்ஸவம், சிவராத்திரி, திருக்கார்த்திகை, மாசி மகம். 
     
தல சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். எல்லாம் இரண்டு: திருவொற்றியூர் தலத்தில் மூலவர் ஆதிபுரீஸ்வரர், ஒற்றீஸ்வரர் என இரண்டு மூர்த்திகள் பிரதானம் பெற்றிருக்கின்றனர். தவிர, வடிவுடையாம்பிகை, வட்டப்பாறையம்மன், அத்தி, மகிழம் என இரண்டு தலவிருட்சம், பிரம்ம தீர்த்தம், அத்தி தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள், காரணம், காமீகம் என இரண்டு ஆகம பூஜை என்று இத்தலத்தில் இரண்டு என்ற எண்ணிக்கை பிரதானம் பெற்றிருக்கிறது. இங்கு, சிவன் பாணலிங்க வடிவில் உயரமாகக் காட்சியளிக்கிறார். ஆவுடையார் கிடையாது. பைரவர், இத்தலத்தில் நாய் வாகனம் இல்லாமல் காட்சியளிக்கிறார். கோஷ்டத்திலுள்ள துர்க்கையின் காலுக்குக் கீழே மகிஷாசுரன் இல்லை. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது இஷீ சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 253 வது தேவாரத்தலம் ஆகும். 
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:அ/மி. தியாகராஜசுவாமி திருக்கோயில், திருவொற்றியூர்- 600 019. திருவள்ளூர் மாவட்டம். போன்:+91-44 - 2573 3703. 

 பொது தகவல்:சென்னை சுற்றுவட்டாரத்தில் மூன்று அம்பிகையர் இச்சா, கிரியா, ஞான சக்திகளாக இருந்து அருளுகின்றனர். பல்லாண்டுகளுக்கு முன்பு மேலூர் திருமணங்கீஸ்வரர் கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக சிற்பி ஒருவர், பெரிய பாறையைக் கொண்டு சென்றார். வழியில் அந்த பாறை வெடித்து மூன்று பாகங்களாகச் சிதறியது. கலங்கிய சிற்பி, தன் உயிரை விடத்துணிந்தார். அப்போது அம்பிகை அவருக்கு காட்சி தந்து, தன்னை மூன்று வடிவில் சிலையாக வடித்து மேலூர், திருவொற்றியூர், திருமுல்லைவாயில் ஆகிய தலங்களில் பிரதிஷ்டை செய்யும்படி கூறினாள். அதன்படி சிற்பி மூன்று சிலைகள் வடித்து இக்கோயில்களில் பிரதிஷ்டை செய்தார்.

இதில் இத்தலம் ஞானசக்திக்குரியதாகும்.இக்கோயிலில் இருந்து 15 கி.மீ., தூரத்திலுள்ள மேலூரில் திருவுடைநாயகி இச்சா சக்தியாகவும், 25 கி.மீ., தூரத்திலுள்ள திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் தலத்தில் கொடியிடைநாயகி கிரியா சக்தியாகவும் அருளுகின்றனர். இந்த மூன்று அம்பிகையரையும் பவுர்ணமியன்று காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளில் வழிபடுவது விசேஷ பலன்களைத் தரும். அன்று இந்த மூன்று கோயில்களும் நாள் முழுதும் திறந்திருக்கும். இத்தலவிநாயகர் செல்வ விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். அம்பாள் வடிவுடைநாயகி, வட்டப்பாறையம்மன் இருவரும் தனித்தனி கொடிமரத்துடன் கூடிய சன்னதிகளில் காட்சி தருகின்றனர். தியாகராஜர் கோயிலில் இருந்து சற்று தூரத்தில் வங்காளவிரிகுடா கடற்கரையில் பட்டினத்தார் கோயில் உள்ளது.

பிரார்த்தனன திருமணம், புத்திர தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக்கொள்ளலாம். 
     
நேர்த்திக்கடன்:சுவாமி, அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம் செய்து, நைவேத்யம் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 
     
தலபெருமை:மாணிக்க தியாகர்: சப்தவிடங்கத் தலங்களில் இத்தலமும் ஒன்றாகும். இத்தலத்து தியாகராஜர் பிரசித்தி பெற்ற மூர்த்தி என்பதால், இவரது பெயரிலேயே தலம் அழைக்கப்படுகிறது. இவ்வூரில் வசித்த ஏலேலசிங்கர் என்பவர், மன்னனுக்குக் கொடுப்பதற்காக மாணிக்க நகைகள் வைத்திருந்தார். அச்சமயத்தில் காசியில் வசித்த சிவபக்தர்கள் இருவர், இங்கு வந்தனர். அப்போது சிவன் ஏலேல சிங்கரிடம், அந்த பக்தர்களுக்கு மாணிக்கத்தைத் தரும்படி கூறவே, அவரும் கொடுத்துவிட்டார். மன்னன் ஏலேல சிங்கரிடம் மாணிக்கம் கேட்டபோது, அவர் செய்வதறியாது திகைத்தார். அப்போது, சிவனே அவருக்கு மாணிக்கம் தந்து அருள் செய்தார். எனவே இவர், "மாணிக்க தியாகர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

பெட்டி வடிவ லிங்கம்: வாசுகி என்னும் நாகம், உபமன்யு முனிவரின் ஆலோசனைப்படி இத்தலத்தில் முக்தி வேண்டி சிவனை வழிபட்டது. வாசுகிக்கு அருள்புரிய எண்ணிய சிவன், புற்று வடிவில் எழுந்தருளி தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார். எனவே இவர், "படம்பக்கநாதர்' என்று பெயர் பெற்றார். இவருக்கு மேலே பெட்டி போன்ற அமைப்பில் கவசம் அணிவித்திருக்கிறார்கள். சுவாமி இங்கு தீண்டா திருமேனியனாகக் காட்சி தருவதால், இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் செய்கின்றனர். அர்ச்சகர்கள் சுவாமியைத் தொட்டு பூஜை செய்வதில்லை.
இத்தலத்தில் மூலவர் படம்பக்கநாதர் எப்போதும் கவசத்துடன் மட்டுமே காட்சி தருவார். கார்த்திகை பவுர்ணமியை ஒட்டி 3 நாட்கள் மட்டும், இவரது கலசம் களைந்து தைலாபிஷேகம் செய்யப்படும். பவுர்ணமியன்று மாலையில் இவருக்கு புனுகு மற்றும் சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்கிறார்கள். மூன்றாம் நாள் இரவில் மீண்டும், சுவாமிக்கு கவசம் சாத்தி விடுவர். வருடத்தில் இந்த மூன்று நாட்கள் மட்டுமே, சுவாமியின் சுயரூப கோலத்தை தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் சிவனின் லிங்க ரூபத்தைக் காண முடியாது. இம்மூன்று நாட்களும் பிரம்மா, விஷ்ணு, வாசுகி ஆகிய மூவரும் சிவனைப் பூஜிப்பதாக ஐதீகம்.

மூன்று அம்பிகையர் தரிசனம்: அம்பிகை வடிவுடைநாயகி, தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் அருளுகிறாள். 51 சக்தி பீடங்களில் இத்தலம் "இக்ஷீ' பீடமாகும். அம்பாளுக்குக் கீழே ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. கேரள நம்பூதிரிகளே இவளுக்குப் பூஜை செய்கின்றனர். தினமும் காலை 9 மணி, மாலை 6 மணிக்கு இவள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, "புஷ்பாஞ்சலி சேவை' காட்சி தருகிறார். திருமணத்தடை உள்ளவர்கள் இவளுக்கு இந்த அலங்காரம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள். இதை, "சுயம்வர புஷ்பாஞ்சலி' என்கிறார்கள்.

வட்டப்பாறை அம்மன்: பாண்டியன் அரசவையில் அநீதி இழைக்கப்பெற்ற கண்ணகி, மதுரையை எரித்துவிட்டு உக்கிரத்துடன் கிளம்பினாள். அவள் இத்தலத்திற்கு வந்தபோது சிவனும், அம்பிகையும் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தனர். அவளது உக்கிரத்தைத் தணிக்க எண்ணிய சிவன், தாயக்கட்டையை உருட்டி அருகிலிருந்த கிணற்றில் விழச்செய்தார். கண்ணகி, தாயக்கட்டையை எடுக்க கிணற்றிற்குள் இறங்கினாள். அப்போது சிவன், அங்கிருந்த வட்ட வடிவ பாறையால் கிணற்றை மூடி விட்டார். பின்பு, கண்ணகி பாறையின் வடிவிலேயே எழுந்தருளினாள். எனவே இவள், "வட்டப்பாறையம்மன்' என்று பெயர் பெற்றாள். பிற்காலத்தில் இந்த பாறையின் அருகில், தனியே சிலை வடிக்கப்பட்டது. வட்டப்பாறையம்மனின் உக்கிரம் குறைப்பதற்காக, இச்சன்னதியில் ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரம் ஸ்தாபித்துள்ளார். பக்தர்கள் இங்கு மஞ்சள், குங்குமம் போட்டு வேண்டிக்கொள்கிறார்கள்.

சுந்தரர் திருமணம்: சென்னை செங்குன்றம் அருகிலுள்ள ஞாயிறு என்னும் ஊரில் பிறந்த சங்கிலியார், சிவ பக்தையாக திகழ்ந்தார். இளவயதிலேயே இத்தலம் வந்து சிவனுக்கு சேவை செய்தார். திருவாரூரில் பரவையாரை திருமணம் செய்திருந்த சுந்தரர், இத்தலம் வந்தார். சங்கிலியாரின் சிவசேவையைக் கண்ட சுந்தரர் அவர் மீது காதல் கொண்டார். தனக்கு அவரை மணம் முடித்துத் தரும்படி சிவனிடம் வேண்டினார். அவரும் ஒப்புக்கொண்டு சங்கிலியாரிடம், சுந்தரரை மணந்து கொள்ளும்படி அருளினார். அப்போது சங்கிலியார் சிவனிடம், சுந்தரர் ஏற்கனவே பரவையாரை மணந்து கொண்டதால், இரண்டாவதாக தான் எப்படி மணக்க முடியும்? எனக்கேட்டாள். சிவன் அவளிடம், சுந்தரரை அவளை விட்டு பிரிந்து செல்லாதபடி சத்தியம் வாங்கித்தருவதாகக் கூறினார். இதையறிந்த சுந்தரர், தான் சன்னதி முன்பு சங்கிலியாருக்கு சத்தியம் செய்து தருவதாகவும், அப்போது பிரகாரத்திலுள்ள மகிழ மரத்தடியில் எழுந்தருளும்படியும் சிவனிடம் வேண்டிக்கொண்டார். ஆனால், சிவன் சங்கிலியாரிடம் சுந்தரரை மகிழ மரத்தடியில் சத்தியம் வாங்கும்படி சொல்லிவிட்டார். அதன்படி இங்குள்ள மரத்தடியில் சத்தியம் செய்து சுந்தரர், சங்கிலியாரை மணந்து கொண்டார்.
மாசி மாதம், மகம் நட்சத்திரத்தன்று சுந்தரர் திருமணம் நடக்கிறது. இவ்விழாவின்போது சிவன் மகிழ மரத்தடியில் எழுந்தருளி, சுந்தரருக்கு திருமணம் செய்து வைப்பார். மாசியில் நடக்கும் இந்த விழாவை, "மகிழடி சேர்வை' என்கிறார்கள். இவ்விழாவின்போது அறுபத்துமூவரும் எழுந்தருளுவர். இங்குள்ள மகிழ மரத்தடியில், சிவன் பாதம் இருக்கிறது. இதற்கு சந்தனக்காப்பிட்டு அலங்கரிக்கிறார்கள். நீண்டநாட்களாக திருமணத்தடை உள்ளவர்களும், திருமணமான தம்பதியரும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

கலிய நாயனார் முக்தி: கலியனார் என்னும் சிவபக்தர், இங்கு சுவாமிக்கு தினமும் விளக்கேற்றி வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரது பக்தியை சோதிக்க எண்ணிய சிவன், வறுமையை உண்டாக்கினார். ஆனாலும் அவர் விளக்கிட்டு சிவனை வழிபட்டார். ஒரு கட்டத்தில் அவரிடம் தீபத்திற்கு எண்ணெய் வாங்கக்கூட பணமில்லை. எனவே தனது கழுத்தை அறுத்து, ரத்தத்தில் தீபம் ஏற்ற முயன்றார். அப்போது சிவன் அவருக்குக் காட்சி தந்து, அவரது பக்தியை உலகறியச் செய்தார். கலியனார் நாயன்மார்களில் ஒருவரானார். இவருக்கு இக்கோயிலில் தனிச்சன்னதி இருக்கிறது. ஆடி கேட்டை நட்சத்திரத்தன்று குருபூஜை நடக்கிறது. இங்கு சிவனுக்கு அதிகளவில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள்.

பட்டினத்தார் கோயில்: காவிரிப்பூம்பட்டணத்தில் வசித்த பட்டினத்தார் என்னும் வணிகர், முக்தி வேண்டி சிவனை வழிபட்டார். அவருக்குக் காட்சி தந்த சிவன், கையில் ஒரு கரும்பைக் கொடுத்து, ""இந்த கரும்புடன் செல்! எவ்விடத்தில் நுனிக்கரும்பு இனிக்கிறதோ, அங்கு முக்தி கிடைக்கும்!'' என்றார். கரும்புடன் பல தலங்களுக்குச் சென்ற பட்டினத்தார், இங்கு வந்து சிவனை வழிபட்டார். அப்போது நுனிக்கரும்பு இனித்தது. தனது முக்திக்காலம் நெருங்கியதை உணர்ந்த அவர், இங்கிருந்தவர்களை அழைத்து தன்னை ஒரு பாத்திரத்தால் மூடும்படி கூறினார். அவர்களும் அவ்வாறு செய்யவே, லிங்க வடிவமாக மாறி முக்தி பெற்றார். பிற்காலத்தில் இவ்விடத்தில் பட்டினத்தாருக்கு கோயில் எழுப்பப்பட்டது.
இங்கு பட்டினத்தார் லிங்க வடிவில், காட்சி தருகிறார். இவரை சிவனாகவே கருதி பூஜிக்கின்றனர். பிரதோஷம், சிவராத்திரி பூஜை மற்றும் ஐப்பசியில் அன்னாபிஷேகமும் செய்யப்படுகிறது. ஆடி பவுர்ணமியை ஒட்டி வரும் உத்திராடம் நட்சத்திரத்தன்று இவரது குருபூஜை விழா கொண்டாடுகின்றனர்.

வள்ளலாருக்கு அருளிய அம்பிகை!: வள்ளலார் வடிவுடையநாயகி மீது அதீத பக்தி கொண்டிருந்தார். தினமும் இங்கு அம்பிகையை வழிபடுவார். ஒருசமயம் கோயிலில் அர்த்தஜாம பூஜையைப் பார்த்துவிட்டு, வீட்டிற்கு தாமதமாகச் சென்றார். கதவு அடைத்திருக்கவே, சாப்பிடாமல் பசியுடனே வெளியில் திண்ணையிலேயே படுத்து விட்டார். வள்ளலாருக்கு அருள்புரிய எண்ணிய அம்பிகை, ஒரு இலையில் வெண்பொங்கல் வைத்து அவருக்குக் கொடுத்துச் சென்றாள். இதை வள்ளலார் தனது அருட்பாவில் குறிப்பிட்டிருக்கிறார். இவ்வாறு பசி நீக்குபவளாக இத்தலத்தில் அம்பிகை அருளுகிறாள்.

கலங்கரை விளக்கம்!: வங்கக்கடற்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு வந்த திருநாவுக்கரசர் கடலில் திசை தெரியாமல் செல்லும் கப்பல்களுக்கு, கரையிலிருக்கும் கலங்கரை விளக்கம் வழி காட்டுவதைப்போல, வாழ்க்கையில் வழி தெரியாமல் செல்பவர்களுக்கு ஒளி கொடுக்கும் "ஞான தீபமாக' இத்தலத்து சிவன் அருளுகிறார் என்று பாடியிருக்கிறார். வாழ்வில் பிடிப்பில்லாதவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள, வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பது நம்பிக்கை.

வரி இல்லாத தலம்!: சூரிய குலத்தைச் சேர்ந்த மாந்தாதா என்னும் மன்னனின் ஆளுகைக்குட்பட்டு, இப்பகுதியை சிற்றரசன் ஒருவன் ஆண்டு வந்தான். ஒருசமயம் அம்மன்னன், இப்பகுதிக்கு வரி கேட்டு ஓலை அனுப்பினான். அந்த ஓலையில் "இவ்வாணை ஒற்றியூர் நீங்கலாகக் கொள்க' என்று திருத்தம் செய்யப்பட்டிருந்தது. இறைவனே இவ்வாறு ஓலையில் திருத்தம் செய்ததாக கருதிய மன்னன், இவ்வூருக்கு வரி விதிக்காமல் விலக்கி வைத்தான். இதனாலும் இவ்வூருக்கு "திருவொற்றியூர்' என பெயர் உண்டானதாகச் சொல்வர்.
இதை சேக்கிழார் பெரியபுராணம்,
""ஏட்டுவரியில் ஒற்றியூர் நீங்கல் என்ன எழுத்தறியும்
நாட்டமலரும் திருநுதலார்,'' என்கிறார்.

சிவன் இக்கோயிலில் கௌலீஸ்வரர் என்ற பெயரில் தனிச்சன்னதியில் இருக்கிறார். சுயரூபத்துடன், யோக நிலையில் அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவர், இடது மேல் கையில் ஓடு வைத்து, கீழ் கையை மார்புக்கு கீழே வைத்தபடி இருக்கிறார். வலது கையில் சின்முத்திரை காட்டுகிறார். "என்னை மனதில் நிறுத்தி வழிபடுபவருக்கு ஞானம் தருவேன்' என்று சொல்லும்படியாக இவர் இந்த கோலத்தில் காட்சி தருகிறார். குழந்தைகள் இவரிடம் வேண்டிக்கொண்டால் அவர்களது கல்வி சிறக்கும்.
படம்பக்கநாதர் சன்னதி முன்மண்டபத்தில் உள்ள விநாயகர்,"குணாலய ஏரம்ப விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள நற்குணம் உண்டாகும் என்பது நம்பிக்கை. எனவே இவர் இப்பெயரில் அழைக்கப்படுகிறார். குணாலயச்செல்வர் என்றும் இவரை அழைக்கிறார்கள்.

பிரகாரத்தில் 27 நட்சத்திரங்களின் பெயரில் வரிசையாக சிவலிங்கங்கள் இருக்கிறது. இந்த லிங்கங்கள் அனைத்தும் வடக்கு நோக்கியிருக்கிறது. மாசி மாதம் சிவராத்திரியன்று மாலையில் இந்த லிங்கங்களுக்கு விசேஷ அபிஷேக, அலங்காரங்கள் நடக்கும். ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் தங்களுக்கான நட்சத்திர நாட்களில், அந்தந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வித்து, சர்க்கரைப் பொங்கல் படைத்து, நெல் தானியத்தை தானமாகக் கொடுத்து வேண்டிக்கொண்டால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை.

திருப்தி தரும் சிவன்: வட்டப்பாறையம்மன் சன்னதிக்கு அருகில் "திருப்தீஸ்வரர்' என்ற பெயரில் சிவன் காட்சி தருகிறார். இவர், ஒரு சதுர வடிவ கல்லில் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார். வாழ்வில் திருப்தியில்லாதவர்கள் இவரிடம் நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள். இதனால் வாழ்க்கை சிறக்கும் என்பது நம்பிக்கை.

சுவாமி, கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். பிரகாரத்திலுள்ள நந்தி, ஒரு உயரமான பீடத்தின் மீது அமைக்கப்பட்டிருக்கிறது. பிரகாரத்தில் ஆகாச லிங்க சன்னதி இருக்கிறது.

சிறப்புகள் சில வரிகளில்...
முக்தி தலம், ஆதிபுரி, பூங்கோயில், பூவுலகச் சிவலோகம் என்பன இத்தலத்தின் சிறப்பைக் காட்டும் பெயர்கள்.

நந்திதேவருக்காக சிவன், பத்ம தாண்டவம் ஆடிக்காட்டிய தலம் இது.

கார்த்திகை 3ம் திங்களன்று, தியாகராஜர் சன்னதியில் சங்காபிஷேகம் நடக்கும். ஐப்பசி பவுர்ணமியன்று ஆதிபுரீஸ்வரருக்கு மட்டும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

இங்குள்ள அருள்ஜோதி முருகன், அருணகிரியாரால் பாடப்பெற்றவர் ஆவார். வயிற்று வலி நீங்க இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். சங்கிலியாருடன், சுந்தரருக்கு சன்னதி இருக்கிறது. பவுர்ணமிதோறும் இவருக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது.புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள குழந்தீஸ்வரரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

தல வரலாறு:பிரளயகாலத்தில் உலகம் அழிவுற்று, மீண்டும் புதிதாக உலகம் தோன்றும். அப்போதெல்லாம் பிரம்மா தோன்றி, உயிர்களைப் படைப்பார். ஒரு பிரளயகாலம் வந்தபோது, உலகம் அழிவதை பிரம்மா விரும்பவில்லை. எனவே, உலகம் அழியாமல் காக்கும்படி சிவனை வேண்டி யாகம் நடத்தினார். யாகத்தின் மத்தியில் அக்னி வடிவில் தோன்றிய சிவன், அவரது வேண்டுதலை ஏற்றார். பின், பிரம்மாவின் வேண்டுதலுக்காக லிங்க ரூபமாக எழுந்தருளினார். யாக குண்டம் கோயிலாக உருவானது. பிரளயம் நீங்கி, உலகம் மீண்டும் துவங்கிய வேளையில் இங்கு எழுந்தருளியதால் இத்தலத்து சிவன், "ஆதிபுரீஸ்வரர்' என்று பெயர் பெற்றார். பிரளய வெள்ளத்தை ஒற்றச் செய்து (விலகச்செய்தல்) அருளியதால் தலம் "திருவொற்றியூர்' என்று பெயர் பெற்றது. 
     
சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு, சிவன் பாணலிங்க வடிவில் உயரமாகக் காட்சியளிக்கிறார். ஆவுடையார் கிடையாது.
அருள்மிகு படம்பக்கநாதர் திருக்கோயில்

மூலவர் : படம்பக்கநாதர், ஒற்றீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத்தியாகர்
அம்மன்/தாயார் : வடிவுடையாம்பிகை, வட்டப்பாறையம்மன், திரிபுரசுந்தரி
தல விருட்சம் : மகிழம், அத்தி
தீர்த்தம் : பிரம்ம, நந்தி தீர்த்தம்
ஆகமம்/பூஜை  : காரணம், காமீகம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருவொற்றியூர்
ஊர் : திருவொற்றியூர்
மாவட்டம் : திருவள்ளூர்
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், காளமேகப்புலவர், இரட்டைப்புலவர்கள், தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், மறைமலையடிகளார்

தேவாரப்பதிகம்:மனமென்னும் தோணிபற்றி மதியெனும் கோலையூன்றிச் சினமெனும் சரக்கையேற்றிச் செறிகடல் ஓடும்போது மதமெனும் பாறைதாக்கி மறியும்போது அறியவொண்ணா துணையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே.
திருநாவுக்கரசர்தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 20வது தலம்.

திருவிழா:சித்திரையில் வட்டப்பாறையம்மன் உற்சவம், வைகாசியில் வசந்தோற்ஸவம், சிவராத்திரி, திருக்கார்த்திகை, மாசி மகம். 
     
தல சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். எல்லாம் இரண்டு: திருவொற்றியூர் தலத்தில் மூலவர் ஆதிபுரீஸ்வரர், ஒற்றீஸ்வரர் என இரண்டு மூர்த்திகள் பிரதானம் பெற்றிருக்கின்றனர். தவிர, வடிவுடையாம்பிகை, வட்டப்பாறையம்மன், அத்தி, மகிழம் என இரண்டு தலவிருட்சம், பிரம்ம தீர்த்தம், அத்தி தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள், காரணம், காமீகம் என இரண்டு ஆகம பூஜை என்று இத்தலத்தில் இரண்டு என்ற எண்ணிக்கை பிரதானம் பெற்றிருக்கிறது. இங்கு, சிவன் பாணலிங்க வடிவில் உயரமாகக் காட்சியளிக்கிறார். ஆவுடையார் கிடையாது. பைரவர், இத்தலத்தில் நாய் வாகனம் இல்லாமல் காட்சியளிக்கிறார். கோஷ்டத்திலுள்ள துர்க்கையின் காலுக்குக் கீழே மகிஷாசுரன் இல்லை. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது இஷீ சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 253 வது தேவாரத்தலம் ஆகும். 
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:அ/மி. தியாகராஜசுவாமி திருக்கோயில், திருவொற்றியூர்- 600 019. திருவள்ளூர் மாவட்டம். போன்:+91-44 - 2573 3703. 

 பொது தகவல்:சென்னை சுற்றுவட்டாரத்தில் மூன்று அம்பிகையர் இச்சா, கிரியா, ஞான சக்திகளாக இருந்து அருளுகின்றனர். பல்லாண்டுகளுக்கு முன்பு மேலூர் திருமணங்கீஸ்வரர் கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக சிற்பி ஒருவர், பெரிய பாறையைக் கொண்டு சென்றார். வழியில் அந்த பாறை வெடித்து மூன்று பாகங்களாகச் சிதறியது. கலங்கிய சிற்பி, தன் உயிரை விடத்துணிந்தார். அப்போது அம்பிகை அவருக்கு காட்சி தந்து, தன்னை மூன்று வடிவில் சிலையாக வடித்து மேலூர், திருவொற்றியூர், திருமுல்லைவாயில் ஆகிய தலங்களில் பிரதிஷ்டை செய்யும்படி கூறினாள். அதன்படி சிற்பி மூன்று சிலைகள் வடித்து இக்கோயில்களில் பிரதிஷ்டை செய்தார்.

இதில் இத்தலம் ஞானசக்திக்குரியதாகும்.இக்கோயிலில் இருந்து 15 கி.மீ., தூரத்திலுள்ள மேலூரில் திருவுடைநாயகி இச்சா சக்தியாகவும், 25 கி.மீ., தூரத்திலுள்ள திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் தலத்தில் கொடியிடைநாயகி கிரியா சக்தியாகவும் அருளுகின்றனர். இந்த மூன்று அம்பிகையரையும் பவுர்ணமியன்று காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளில் வழிபடுவது விசேஷ பலன்களைத் தரும். அன்று இந்த மூன்று கோயில்களும் நாள் முழுதும் திறந்திருக்கும். இத்தலவிநாயகர் செல்வ விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். அம்பாள் வடிவுடைநாயகி, வட்டப்பாறையம்மன் இருவரும் தனித்தனி கொடிமரத்துடன் கூடிய சன்னதிகளில் காட்சி தருகின்றனர். தியாகராஜர் கோயிலில் இருந்து சற்று தூரத்தில் வங்காளவிரிகுடா கடற்கரையில் பட்டினத்தார் கோயில் உள்ளது.

பிரார்த்தனன திருமணம், புத்திர தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக்கொள்ளலாம். 
     
நேர்த்திக்கடன்:சுவாமி, அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம் செய்து, நைவேத்யம் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 
     
தலபெருமை:மாணிக்க தியாகர்: சப்தவிடங்கத் தலங்களில் இத்தலமும் ஒன்றாகும். இத்தலத்து தியாகராஜர் பிரசித்தி பெற்ற மூர்த்தி என்பதால், இவரது பெயரிலேயே தலம் அழைக்கப்படுகிறது. இவ்வூரில் வசித்த ஏலேலசிங்கர் என்பவர், மன்னனுக்குக் கொடுப்பதற்காக மாணிக்க நகைகள் வைத்திருந்தார். அச்சமயத்தில் காசியில் வசித்த சிவபக்தர்கள் இருவர், இங்கு வந்தனர். அப்போது சிவன் ஏலேல சிங்கரிடம், அந்த பக்தர்களுக்கு மாணிக்கத்தைத் தரும்படி கூறவே, அவரும் கொடுத்துவிட்டார். மன்னன் ஏலேல சிங்கரிடம் மாணிக்கம் கேட்டபோது, அவர் செய்வதறியாது திகைத்தார். அப்போது, சிவனே அவருக்கு மாணிக்கம் தந்து அருள் செய்தார். எனவே இவர், "மாணிக்க தியாகர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

பெட்டி வடிவ லிங்கம்: வாசுகி என்னும் நாகம், உபமன்யு முனிவரின் ஆலோசனைப்படி இத்தலத்தில் முக்தி வேண்டி சிவனை வழிபட்டது. வாசுகிக்கு அருள்புரிய எண்ணிய சிவன், புற்று வடிவில் எழுந்தருளி தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார். எனவே இவர், "படம்பக்கநாதர்' என்று பெயர் பெற்றார். இவருக்கு மேலே பெட்டி போன்ற அமைப்பில் கவசம் அணிவித்திருக்கிறார்கள். சுவாமி இங்கு தீண்டா திருமேனியனாகக் காட்சி தருவதால், இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் செய்கின்றனர். அர்ச்சகர்கள் சுவாமியைத் தொட்டு பூஜை செய்வதில்லை.
இத்தலத்தில் மூலவர் படம்பக்கநாதர் எப்போதும் கவசத்துடன் மட்டுமே காட்சி தருவார். கார்த்திகை பவுர்ணமியை ஒட்டி 3 நாட்கள் மட்டும், இவரது கலசம் களைந்து தைலாபிஷேகம் செய்யப்படும். பவுர்ணமியன்று மாலையில் இவருக்கு புனுகு மற்றும் சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்கிறார்கள். மூன்றாம் நாள் இரவில் மீண்டும், சுவாமிக்கு கவசம் சாத்தி விடுவர். வருடத்தில் இந்த மூன்று நாட்கள் மட்டுமே, சுவாமியின் சுயரூப கோலத்தை தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் சிவனின் லிங்க ரூபத்தைக் காண முடியாது. இம்மூன்று நாட்களும் பிரம்மா, விஷ்ணு, வாசுகி ஆகிய மூவரும் சிவனைப் பூஜிப்பதாக ஐதீகம்.

மூன்று அம்பிகையர் தரிசனம்: அம்பிகை வடிவுடைநாயகி, தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் அருளுகிறாள். 51 சக்தி பீடங்களில் இத்தலம் "இக்ஷீ' பீடமாகும். அம்பாளுக்குக் கீழே ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. கேரள நம்பூதிரிகளே இவளுக்குப் பூஜை செய்கின்றனர். தினமும் காலை 9 மணி, மாலை 6 மணிக்கு இவள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, "புஷ்பாஞ்சலி சேவை' காட்சி தருகிறார். திருமணத்தடை உள்ளவர்கள் இவளுக்கு இந்த அலங்காரம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள். இதை, "சுயம்வர புஷ்பாஞ்சலி' என்கிறார்கள்.

வட்டப்பாறை அம்மன்: பாண்டியன் அரசவையில் அநீதி இழைக்கப்பெற்ற கண்ணகி, மதுரையை எரித்துவிட்டு உக்கிரத்துடன் கிளம்பினாள். அவள் இத்தலத்திற்கு வந்தபோது சிவனும், அம்பிகையும் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தனர். அவளது உக்கிரத்தைத் தணிக்க எண்ணிய சிவன், தாயக்கட்டையை உருட்டி அருகிலிருந்த கிணற்றில் விழச்செய்தார். கண்ணகி, தாயக்கட்டையை எடுக்க கிணற்றிற்குள் இறங்கினாள். அப்போது சிவன், அங்கிருந்த வட்ட வடிவ பாறையால் கிணற்றை மூடி விட்டார். பின்பு, கண்ணகி பாறையின் வடிவிலேயே எழுந்தருளினாள். எனவே இவள், "வட்டப்பாறையம்மன்' என்று பெயர் பெற்றாள். பிற்காலத்தில் இந்த பாறையின் அருகில், தனியே சிலை வடிக்கப்பட்டது. வட்டப்பாறையம்மனின் உக்கிரம் குறைப்பதற்காக, இச்சன்னதியில் ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரம் ஸ்தாபித்துள்ளார். பக்தர்கள் இங்கு மஞ்சள், குங்குமம் போட்டு வேண்டிக்கொள்கிறார்கள்.

சுந்தரர் திருமணம்: சென்னை செங்குன்றம் அருகிலுள்ள ஞாயிறு என்னும் ஊரில் பிறந்த சங்கிலியார், சிவ பக்தையாக திகழ்ந்தார். இளவயதிலேயே இத்தலம் வந்து சிவனுக்கு சேவை செய்தார். திருவாரூரில் பரவையாரை திருமணம் செய்திருந்த சுந்தரர், இத்தலம் வந்தார். சங்கிலியாரின் சிவசேவையைக் கண்ட சுந்தரர் அவர் மீது காதல் கொண்டார். தனக்கு அவரை மணம் முடித்துத் தரும்படி சிவனிடம் வேண்டினார். அவரும் ஒப்புக்கொண்டு சங்கிலியாரிடம், சுந்தரரை மணந்து கொள்ளும்படி அருளினார். அப்போது சங்கிலியார் சிவனிடம், சுந்தரர் ஏற்கனவே பரவையாரை மணந்து கொண்டதால், இரண்டாவதாக தான் எப்படி மணக்க முடியும்? எனக்கேட்டாள். சிவன் அவளிடம், சுந்தரரை அவளை விட்டு பிரிந்து செல்லாதபடி சத்தியம் வாங்கித்தருவதாகக் கூறினார். இதையறிந்த சுந்தரர், தான் சன்னதி முன்பு சங்கிலியாருக்கு சத்தியம் செய்து தருவதாகவும், அப்போது பிரகாரத்திலுள்ள மகிழ மரத்தடியில் எழுந்தருளும்படியும் சிவனிடம் வேண்டிக்கொண்டார். ஆனால், சிவன் சங்கிலியாரிடம் சுந்தரரை மகிழ மரத்தடியில் சத்தியம் வாங்கும்படி சொல்லிவிட்டார். அதன்படி இங்குள்ள மரத்தடியில் சத்தியம் செய்து சுந்தரர், சங்கிலியாரை மணந்து கொண்டார்.
மாசி மாதம், மகம் நட்சத்திரத்தன்று சுந்தரர் திருமணம் நடக்கிறது. இவ்விழாவின்போது சிவன் மகிழ மரத்தடியில் எழுந்தருளி, சுந்தரருக்கு திருமணம் செய்து வைப்பார். மாசியில் நடக்கும் இந்த விழாவை, "மகிழடி சேர்வை' என்கிறார்கள். இவ்விழாவின்போது அறுபத்துமூவரும் எழுந்தருளுவர். இங்குள்ள மகிழ மரத்தடியில், சிவன் பாதம் இருக்கிறது. இதற்கு சந்தனக்காப்பிட்டு அலங்கரிக்கிறார்கள். நீண்டநாட்களாக திருமணத்தடை உள்ளவர்களும், திருமணமான தம்பதியரும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

கலிய நாயனார் முக்தி: கலியனார் என்னும் சிவபக்தர், இங்கு சுவாமிக்கு தினமும் விளக்கேற்றி வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரது பக்தியை சோதிக்க எண்ணிய சிவன், வறுமையை உண்டாக்கினார். ஆனாலும் அவர் விளக்கிட்டு சிவனை வழிபட்டார். ஒரு கட்டத்தில் அவரிடம் தீபத்திற்கு எண்ணெய் வாங்கக்கூட பணமில்லை. எனவே தனது கழுத்தை அறுத்து, ரத்தத்தில் தீபம் ஏற்ற முயன்றார். அப்போது சிவன் அவருக்குக் காட்சி தந்து, அவரது பக்தியை உலகறியச் செய்தார். கலியனார் நாயன்மார்களில் ஒருவரானார். இவருக்கு இக்கோயிலில் தனிச்சன்னதி இருக்கிறது. ஆடி கேட்டை நட்சத்திரத்தன்று குருபூஜை நடக்கிறது. இங்கு சிவனுக்கு அதிகளவில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள்.

பட்டினத்தார் கோயில்: காவிரிப்பூம்பட்டணத்தில் வசித்த பட்டினத்தார் என்னும் வணிகர், முக்தி வேண்டி சிவனை வழிபட்டார். அவருக்குக் காட்சி தந்த சிவன், கையில் ஒரு கரும்பைக் கொடுத்து, ""இந்த கரும்புடன் செல்! எவ்விடத்தில் நுனிக்கரும்பு இனிக்கிறதோ, அங்கு முக்தி கிடைக்கும்!'' என்றார். கரும்புடன் பல தலங்களுக்குச் சென்ற பட்டினத்தார், இங்கு வந்து சிவனை வழிபட்டார். அப்போது நுனிக்கரும்பு இனித்தது. தனது முக்திக்காலம் நெருங்கியதை உணர்ந்த அவர், இங்கிருந்தவர்களை அழைத்து தன்னை ஒரு பாத்திரத்தால் மூடும்படி கூறினார். அவர்களும் அவ்வாறு செய்யவே, லிங்க வடிவமாக மாறி முக்தி பெற்றார். பிற்காலத்தில் இவ்விடத்தில் பட்டினத்தாருக்கு கோயில் எழுப்பப்பட்டது.
இங்கு பட்டினத்தார் லிங்க வடிவில், காட்சி தருகிறார். இவரை சிவனாகவே கருதி பூஜிக்கின்றனர். பிரதோஷம், சிவராத்திரி பூஜை மற்றும் ஐப்பசியில் அன்னாபிஷேகமும் செய்யப்படுகிறது. ஆடி பவுர்ணமியை ஒட்டி வரும் உத்திராடம் நட்சத்திரத்தன்று இவரது குருபூஜை விழா கொண்டாடுகின்றனர்.

வள்ளலாருக்கு அருளிய அம்பிகை!: வள்ளலார் வடிவுடையநாயகி மீது அதீத பக்தி கொண்டிருந்தார். தினமும் இங்கு அம்பிகையை வழிபடுவார். ஒருசமயம் கோயிலில் அர்த்தஜாம பூஜையைப் பார்த்துவிட்டு, வீட்டிற்கு தாமதமாகச் சென்றார். கதவு அடைத்திருக்கவே, சாப்பிடாமல் பசியுடனே வெளியில் திண்ணையிலேயே படுத்து விட்டார். வள்ளலாருக்கு அருள்புரிய எண்ணிய அம்பிகை, ஒரு இலையில் வெண்பொங்கல் வைத்து அவருக்குக் கொடுத்துச் சென்றாள். இதை வள்ளலார் தனது அருட்பாவில் குறிப்பிட்டிருக்கிறார். இவ்வாறு பசி நீக்குபவளாக இத்தலத்தில் அம்பிகை அருளுகிறாள்.

கலங்கரை விளக்கம்!: வங்கக்கடற்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு வந்த திருநாவுக்கரசர் கடலில் திசை தெரியாமல் செல்லும் கப்பல்களுக்கு, கரையிலிருக்கும் கலங்கரை விளக்கம் வழி காட்டுவதைப்போல, வாழ்க்கையில் வழி தெரியாமல் செல்பவர்களுக்கு ஒளி கொடுக்கும் "ஞான தீபமாக' இத்தலத்து சிவன் அருளுகிறார் என்று பாடியிருக்கிறார். வாழ்வில் பிடிப்பில்லாதவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள, வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பது நம்பிக்கை.

வரி இல்லாத தலம்!: சூரிய குலத்தைச் சேர்ந்த மாந்தாதா என்னும் மன்னனின் ஆளுகைக்குட்பட்டு, இப்பகுதியை சிற்றரசன் ஒருவன் ஆண்டு வந்தான். ஒருசமயம் அம்மன்னன், இப்பகுதிக்கு வரி கேட்டு ஓலை அனுப்பினான். அந்த ஓலையில் "இவ்வாணை ஒற்றியூர் நீங்கலாகக் கொள்க' என்று திருத்தம் செய்யப்பட்டிருந்தது. இறைவனே இவ்வாறு ஓலையில் திருத்தம் செய்ததாக கருதிய மன்னன், இவ்வூருக்கு வரி விதிக்காமல் விலக்கி வைத்தான். இதனாலும் இவ்வூருக்கு "திருவொற்றியூர்' என பெயர் உண்டானதாகச் சொல்வர்.
இதை சேக்கிழார் பெரியபுராணம்,
""ஏட்டுவரியில் ஒற்றியூர் நீங்கல் என்ன எழுத்தறியும்
நாட்டமலரும் திருநுதலார்,'' என்கிறார்.

சிவன் இக்கோயிலில் கௌலீஸ்வரர் என்ற பெயரில் தனிச்சன்னதியில் இருக்கிறார். சுயரூபத்துடன், யோக நிலையில் அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவர், இடது மேல் கையில் ஓடு வைத்து, கீழ் கையை மார்புக்கு கீழே வைத்தபடி இருக்கிறார். வலது கையில் சின்முத்திரை காட்டுகிறார். "என்னை மனதில் நிறுத்தி வழிபடுபவருக்கு ஞானம் தருவேன்' என்று சொல்லும்படியாக இவர் இந்த கோலத்தில் காட்சி தருகிறார். குழந்தைகள் இவரிடம் வேண்டிக்கொண்டால் அவர்களது கல்வி சிறக்கும்.
படம்பக்கநாதர் சன்னதி முன்மண்டபத்தில் உள்ள விநாயகர்,"குணாலய ஏரம்ப விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள நற்குணம் உண்டாகும் என்பது நம்பிக்கை. எனவே இவர் இப்பெயரில் அழைக்கப்படுகிறார். குணாலயச்செல்வர் என்றும் இவரை அழைக்கிறார்கள்.

பிரகாரத்தில் 27 நட்சத்திரங்களின் பெயரில் வரிசையாக சிவலிங்கங்கள் இருக்கிறது. இந்த லிங்கங்கள் அனைத்தும் வடக்கு நோக்கியிருக்கிறது. மாசி மாதம் சிவராத்திரியன்று மாலையில் இந்த லிங்கங்களுக்கு விசேஷ அபிஷேக, அலங்காரங்கள் நடக்கும். ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் தங்களுக்கான நட்சத்திர நாட்களில், அந்தந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வித்து, சர்க்கரைப் பொங்கல் படைத்து, நெல் தானியத்தை தானமாகக் கொடுத்து வேண்டிக்கொண்டால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை.

திருப்தி தரும் சிவன்: வட்டப்பாறையம்மன் சன்னதிக்கு அருகில் "திருப்தீஸ்வரர்' என்ற பெயரில் சிவன் காட்சி தருகிறார். இவர், ஒரு சதுர வடிவ கல்லில் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார். வாழ்வில் திருப்தியில்லாதவர்கள் இவரிடம் நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள். இதனால் வாழ்க்கை சிறக்கும் என்பது நம்பிக்கை.

சுவாமி, கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். பிரகாரத்திலுள்ள நந்தி, ஒரு உயரமான பீடத்தின் மீது அமைக்கப்பட்டிருக்கிறது. பிரகாரத்தில் ஆகாச லிங்க சன்னதி இருக்கிறது.

சிறப்புகள் சில வரிகளில்...
முக்தி தலம், ஆதிபுரி, பூங்கோயில், பூவுலகச் சிவலோகம் என்பன இத்தலத்தின் சிறப்பைக் காட்டும் பெயர்கள்.

நந்திதேவருக்காக சிவன், பத்ம தாண்டவம் ஆடிக்காட்டிய தலம் இது.

கார்த்திகை 3ம் திங்களன்று, தியாகராஜர் சன்னதியில் சங்காபிஷேகம் நடக்கும். ஐப்பசி பவுர்ணமியன்று ஆதிபுரீஸ்வரருக்கு மட்டும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

இங்குள்ள அருள்ஜோதி முருகன், அருணகிரியாரால் பாடப்பெற்றவர் ஆவார். வயிற்று வலி நீங்க இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். சங்கிலியாருடன், சுந்தரருக்கு சன்னதி இருக்கிறது. பவுர்ணமிதோறும் இவருக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது.புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள குழந்தீஸ்வரரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

தல வரலாறு:பிரளயகாலத்தில் உலகம் அழிவுற்று, மீண்டும் புதிதாக உலகம் தோன்றும். அப்போதெல்லாம் பிரம்மா தோன்றி, உயிர்களைப் படைப்பார். ஒரு பிரளயகாலம் வந்தபோது, உலகம் அழிவதை பிரம்மா விரும்பவில்லை. எனவே, உலகம் அழியாமல் காக்கும்படி சிவனை வேண்டி யாகம் நடத்தினார். யாகத்தின் மத்தியில் அக்னி வடிவில் தோன்றிய சிவன், அவரது வேண்டுதலை ஏற்றார். பின், பிரம்மாவின் வேண்டுதலுக்காக லிங்க ரூபமாக எழுந்தருளினார். யாக குண்டம் கோயிலாக உருவானது. பிரளயம் நீங்கி, உலகம் மீண்டும் துவங்கிய வேளையில் இங்கு எழுந்தருளியதால் இத்தலத்து சிவன், "ஆதிபுரீஸ்வரர்' என்று பெயர் பெற்றார். பிரளய வெள்ளத்தை ஒற்றச் செய்து (விலகச்செய்தல்) அருளியதால் தலம் "திருவொற்றியூர்' என்று பெயர் பெற்றது. 
     
சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு, சிவன் பாணலிங்க வடிவில் உயரமாகக் காட்சியளிக்கிறார். ஆவுடையார் கிடையாது.