திங்கள், 13 ஜனவரி, 2014

பொங்கல் பண்டிகையில் சூரியனை வழிபாடுவது ஏன்?

பொங்கல் விழாவே ஒரு சூரிய வழிபாட்டு விழாவாகும். ஆகாயத்தில் காற்றும், காற்றில் தீயும் உருவாகின்றன. தீயினால் புதுப்பானையில் (நிலம்) உள்ள அரிசி (நிலத்தின் பயன்) நீரில் வெந்து பொங்கலாகிறது. பொங்கலைப் படைத்து சூரியனை வழிபடுகின்றவர்கள், ஐம்பெரும் பூதங்களையே வழிபடுகின்றனர் என்பது ஐதீகம்.பாரதத்தில் சூரிய வழிபாடு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. ரிக்வேத காலத்துக்கும் முன்பிருந்தே இந்த வழிபாடு இருந்து வருகிறது. அசையும் பொருள்கள் அனைத்திற்கும் சூரியனே உயிர் தருகிறான் என்கின்றன, வேதங்கள் !இந்த வழிபாடு எப்படி ஏற்பட்டது என்பது பற்றி நிச்சயமாக ஒன்றும் கூறமுடியவில்லை கிமு 2000 - க்கு முன்பே சூரியன், அக்னி, வருணன் ஆகியோரை இந்தியர்கள் வழிபட்டு வந்துள்ளனர்.நம்நாடு சூரிய வெப்பம் மிகுந்த நாடு. ஆகவே, அவன் அருளைப் பெற அவனை மக்கள் வழிபட முற்பட்டதில் வியப்பில்லை. பல நோய்களை சூரிய கிரணங்கள் குணப்படுத்துவதாக அதர்வண வேதம் குறிப்பிடுகிறது. உபநிஷத்துக்களும் புராண இதிகாசங்களும் சூரியனின் புகழைப் பேசுகின்றன. பிற தெய்வங்களைப் போல் அல்லாமல் சூரியன் கண்ணெதிரே தோன்றும் தெய்வமாக விளங்குகிறான்.

சூரிய வழிபாட்டினால் தோல் நோய், கண் நோய்கள் குணமாகிவிடும் என்று மக்கள் நம்பினார்கள். சூரியனுக்காகக் கட்டிய புராதனக் கோயிலில் ஒன்று ஒரிஸ்ஸாவிலுள்ள கொனார்க் கோயில். கலிங்கத்தை ஆண்ட நரசிங்கதேவன் (கி.பி 1238--64) இதைக் கட்டினான்.இந்த ஆலயத்தில் உள்ள சிற்பங்கள் உலகில் வேறு எங்கும் காண கிடைக்காத வேலைப்பாடு மிக்கவை.தமிழ்நாட்டில் கும்பகோணத்தை அடுத்துள்ள சூரியனார் கோயில் என்ற இடத்தில் சூரியனுக்கென்று தனி ஆலயமே இருக்கிறது. சூரியனைப் பரம்பொருளாக ஆதித்திய ஹிருதயம் கூறுகிறது. மார்க்கண்டேய புராணம், பவிஷ்ய புராணம் முதலியவை சூரிய வழிபாட்டை விவரிக்கின்றன. மந்திரங்களில் மிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் காயத்ரி சூரியனுக்கு உகந்த மந்திரம். சூரிய நமஸ்காரம் என்பது உடற்பயிற்சி, யோகப் பயிற்சியுடன் கூடிய வழிபாடு. இன்று இது மேனாட்டிலும் பரவியுள்ளது. சூரிய வழிபாடு சௌரமதம் என்ற பெயரில் ஷண்மதங்களுள் ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. சௌரமதம் ஒரு காலத்தில் உலகளாவிய மதமாகவும் பரவியிருக்கிறது. தை மாதம் முதல் நாள் - சூரியன் மகர ராசிக்குள் (உத்தராயணம்) பிரவேசிக்கும் நாள் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்பட்டு சூரிய வழிபாடு நடத்துகிறார்கள். கீதையில் கண்ணபிரான் ஜ்யோதிஷம் ரவிர் சும் சுமான் என்று கூறி ஜ்யோதிகளில் தாம் சூரியனாக இருப்பதாகத் தெரிவிக்கிறார். அந்தக் காலத்தில் ரிஷிகள் சூரியனின் கனிந்த ஒளியிலே நாள் தவறாமல் திளைத்து வந்தார்கள். சூரிய கிரணங்களை ஜீவத்திறல் என்றும் ஆயுளை வளர்க்கும் அன்னம் என்றும் போற்றினார்கள். அவர்கள் உடல், உள்ளம், உயிரில் தேவசக்தியும் தெய்வ ஒளியும் துள்ளின. சுற்றும் உலகுக்கே சூத்திரமாக விளங்கும் சூரியனின் பெருமை இன்று சுருங்கிப்போய் விட்டது. என்றாலும், பொங்கல் திருநாளில் மட்டும் ஆதித்தனைப் போற்றும் பழக்கம் இன்றும் தொடர்கிறது.
சூரியனின் குடும்பம்!

பெற்றோர்:காஷ்யப முனிவர்,அதிதி.
சகோதரர்கள்:கருடன்,அருணன்
மனைவியர்:உஷா,பிரத்யுஷா(சாயாதேவி)
மகன்கள்:எமதர்மன்,சனீஸ்வரர்,அஸ்வினி தேவர்கள்,கர்ணன்,சுக்ரீவன்
மகள்கள்:யமுனை,பத்திரை

பார்த்தபின் சாப்பிடுங்க:தாபனீய உபநிஷத் என்னும் நூலில் நரசிம்மருக்கு மூன்று கண்கள் உண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் வலக்கண் சூரியன், இடக்கண் சந்திரன், நடுக்கண் அக்னியாக விளங்குகிறது. புருஷ சூக்தம் என்ற நூல், விஷ்ணுவின் கண்களில் இருந்து சூரியன் உண்டானதாகச் சொல்கிறது. சூரியனை வணங்காமல் சாப்பிடுவது கூடாது என வேதம் கூறுகிறது. சூரியவழிபாடைத் தவறாமல் செய்தால் வாக்குவன்மை, ஆரோக்கியம் உண்டாகும். சூரியனைக் காணாத நாள் ஒவ்வொன்றும் வீண்நாளே என்கிறார் காஞ்சிப் பெரியவர்.

முதல் கடவுள்:மனிதன் தோன்றிய காலம் தொட்டே சூரியவழிபாடு இருந்து வருகிறது. இருளில் தவித்த மனிதன், தினமும் காலையில் கிழக்கு வெளுத்து சூரிய உதயமாவதைக் கண்டு மகிழ்ந்தான். தன் இருகைகளைக் குவித்து வணங்கி வழிபட்டான். விநாயகர், முருகன், சிவன், சக்தி, விஷ்ணு ஆகிய தெய்வ வழிபாடுகள் பிற்காலத்திலேயே தோன்றின. சூரிய வழிபாட்டுக்குரிய மதத்தை "சவுரம் என அழைத்தனர். இதனால் சூரியன், "முதல் கடவுள் என்ற சிறப்புக்கு <உரியவராகிறார்.

அம்பாளின் வலக்கண்: சூரியனைச் சிவ அம்சமாகக் கொண்டு சிவசூரியன் என்றும், விஷ்ணுவின் அம்சமாகக் கொண்டு சூரியநாராயணர் என்றும் சொல்வர். இவர் அம்பிகையின் வலக்கண்ணாக இருப்பதாகவும் கூறுவர். ஜோதிட சாஸ்திரம் சூரியனை நவக்கிரக நாயகனாகப் போற்றுகிறது. இவரைச் சுற்றியே மற்ற கிரகங்கள் நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. நவக்கிரக மண்டபத்தில் நடுவில் வீற்றிருந்து அருளுகிறார் சூரியன். இதுதவிர, சிவாலயங்களில் இவர் தனது துணைவியரான உஷா, பிரத்யுஷாவுடன் தனி சந்நிதியிலும் இருப்பார்.

சூரியமந்திரம் சொல்வோமா:சூரியவழிபாட்டுக்கு உகந்த நாள் ஞாயிறு. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்கள் சிறந்தவை. திதிகளில் வளர்பிறை சப்தமி ஏற்றது. இந்த நாட்களில் காலையில் நீராடிய பிறகு, கிழக்கு நோக்கி நின்று சூரியனை வணங்க வேண்டும்.

நம:ஸவித்ரே ஜகதேச சக்ஷúஷே
ஜகத் ப்ரஸூதி ஸ்திதி நாச ஹேதவே
த்ரயீமயாய த்ரிகுணாத்ம தாரிணே
விரிஞ்ச நாராயண சங்கராத்மனே
ஜபாகு ஸும ஸங்காசம்
காஸ்யபேயம் மஹாத்யுதிம்
த்வாந்தாரிம் ஸர்வ பாபக்னம்
ப்ரணதோஸ்மி திவாகரம்
என்ற சூரிய மந்திரத்தைச் சொல்ல வேண்டும். இதன் பொருளையும் சொல்லலாம்.

பொருள்:உலகிற்குக் கண்ணாக இருப்பவனே! முத்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைச் செய்பவனே! வேத வடிவமே! முக்குணங்களைப் பெற்றவனே! பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்தியாகவும் திகழும் சூரியனே! உமக்கு நமஸ்காரம். காஷ்யப முனிவரின் மகனே! செம்பருத்திப்பூவின் நிறத்தைக் கொண்டவனே! இருளின் எதிரியே! பேரொளி உடையவனே! பாவங்களைப் போக்குபவனே! திவாகரனே! உம்மைப் போற்றுகிறேன். இந்த மந்திரத்தை ஜெபித்தால் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் உண்டாகும்.

சத்ய நாராயண விரதமுறையும் பலனும்!

அனுஷ்டிக்க விதிமுறைகள்: ஆந்திராவில் மிகவும் பிரபலமானது சத்ய நாராயண விரதம். சமீப காலமாக தமிழக பக்தர்களும் இதைகடைபிடிக்கின்றனர். மகாவிஷ்ணுவே சத்ய நாராயணர். இந்தவிரதத்தை ஒவ்வொரு பவுர்ணமியன்றும் கடைபிடிக்க வேண்டும். (பவுர்ணமியன்று பெண்களுக்கு வசதிப்படாவிட்டால், தமிழ் மாதப்பிறப்பு அல்லது வளர்பிறை ஏகாதசி திதியன்று விரதமிருக்கலாம்) இந்தவிரதம் எளிமையானது. இதைகணவனும், மனைவியும் சேர்ந்து அனுஷ்டிக்க வேண்டும். அன்று பகலில் சாப்பிடக் கூடாது. மாலை 4.30-6.00 மணிக்குள் உறவினர்கள், நண்பர்கள், அயல்வீட்டாரை வீட்டுக்கு வரவழைக்க வேண்டும். சத்ய நாராயணர் படத்தின் முன், நெய் விளக்கேற்ற வேண்டும். பழம், பால், வெல்லம், தேன், கோதுமை நெய் அப்பங்களை சத்திய நாராயணருக்கு நைவேத்யம் செய்ய வேண்டும். அந்நாளில், சத்யநாராயணர் விரதக்கதைகளை படிக்க வேண்டும். இந்தவிரதத்தைகடைபிடிக்க இத்தனை வாரம் தான் நியதி இல்லை. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும், தொடர்ந்து அனுஷ்டித்தால், நம்மை ஜெயிக்க யாரும் இல்லை என்ற நிலை உருவாகும். பணவசதி பெருகும். புதுமணத்தம்பதிகள், வாழ்வின் துவக்கம் முதலே இதைதகடைபிடித்தால் தீர்க்காயுள் உள்ள புத்திசாலித்தனமான குழந்தைகள் பிறப்பார்கள். வசதி உள்ளவர்கள், கலசம் வைத்து புரோகிதர்களைதகொண்டு இந்தபூஜையை நடத்தலாம்.

ஆந்திராவில் சத்தியநாராயணர்: ஆந்திர மக்கள் சத்யநாராயண விரதத்தை தவறாமல் கடைபிடிக்கின்றனர். செல்வந்ததம்பதிகள், இந்தவிரதம் துவங்குவதற்கு முன்னதாக ஆறுமாதங்கள் வரை, ஏதாவது ஒரு புனிதத்தலத்தில் தங்கி வந்து இந்தவிரதத்தைதுவங்குகிறார்கள். விரதபூஜையை, பவுர்ணமியன்று பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30-6.00) நடத்துகிறார்கள். அன்று, மாலையில் அன்னதானம் செய்யும் நோக்கத்தில் பெருமளவு சமைக்கிறார்கள். சமைத்ததில் கால் பங்கை மட்டும் தங்களுக்கும், தங்கள் உறவினர்களுக்கும் எடுத்துதகொண்டு, மீதியை தானம் செய்து விடுகிறார்கள்.

பணம் வரப்போகுது சொல்பவர் நாரதர்: கலியுகத்தில், மனிதனுக்கு தேவை அதிகம். அவனது தேவைகளை நிறைவேற்ற பணம் வேண்டும். அது கிடைக்க எளிய வழி சத்ய நாராயண விரதம் என்கிறார் நாரதர்.சுதானந்தர் என்பவர் இந்த விரதத்தை முறையாகக் கடைபிடித்ததால், மறுபிறவியில் சுதாமா (குசேலர்) என்னும் பெயரில் பிறந்து, கிருஷ்ண தரிசனத்துடன் பெரும் செல்வத்தைப் பெற்றார். விறகு விற்றுக் கொண்டிருந்த பல்லன் என்ற தொழிலாளி, இந்த விரத மகிமையால், மறுபிறவியில் குகன் என்னும் பெயரில் பிறந்து ராமதரிசனம் பெற்று, அழியாச் செல்வமான முக்தியை அடைந்தான். உல்காமுகன் என்ற அரசரோ, இதை முறையாகச் செய்து, மறுபிறவியில் தசரதராகப் பிறந்து 60ஆயிரம் ஆண்டுகள் சகல செல்வத்துடன் வாழும் பாக்கியம் பெற்றதுடன், ராமனுக்கே தந்தையும் ஆனார். ஸ்காந்த புராணத்தில் (கந்த புராணம்) வரும் ஸ்லோகம் ஒன்றில், இந்த விரதத்தை அனுஷ்டித்தால், கஷ்டங்கள் குறையும். பணமும், தானியமும் பெருகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித்தரும் குழந்தைகள் பிறக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
தாயார் திருவடிகள் சரணம்!

கமல வல்லி கனகவல்லி கற்பகவல்லி பாதம் !
அமுதவல்லி அம்ருதவல்லி அழகியவல்லி பாதம் !

குமுத வல்லி குருகூர்வல்லி குழைக்காதவல்லி பாதம் !
புஷ்பவல்லி பூர்ணவல்லி பளவவல்லி பாதம் !

அபிஷேக வல்லி அம்புஜவல்லி அஞ்சிலைவல்லி பாதம் !
செண்பகவல்லி செங்கமலவல்லி கோமளவல்லி பாதம் !

ஆதிநாதவல்லி அம்ருதகடவல்லி அரவிந்தவல்லி பாதம் !
குறுங்குடி வல்லி கோளூர்வல்லி குளந்தைவல்லி பாதம் !

வஞ்ஜுளவல்லி வாத்ஸல்யவல்லி வரகுணவல்லி பாதம் !
வேதவல்லி வேளுக்கைவல்லி வைகுந்தவல்லி பாதம் !

மதுரவல்லி மரகதவல்லி வித்துவகோட்டுவல்லி பாதம் !
சுதாவல்லி சுந்தரவல்லி புண்டரீகவல்லி பாதம் !

கல்யாணவல்லி செங்கமலவல்லி சௌந்தர்யவல்லி பாதம் !
ரமாமணி வல்லி மோகூர்வல்லி நேர்ஒருவரில்லா வல்லி பாதம்!

தஞ்தை நாயகி ரங்கநாயகி பரிமளரங்கநாயகி பாதம் !
சார நாயகி லோகநாயகி புரு÷ஷாத்தமநாயகி பாதம் !

பூமிதேவி பூர்வாதேவி சிறுதேவி பாதம் !
மகாதேவி இந்திராதேவி வாத்ஸல்ய தேவி பாதம் !

செண்பகச்செல்வி பங்கயச்செல்வி பொற்றாமரையாள் பாதம் !
மலர்மகள் பூமகள் கடல் மகள் பாதம் !

செங்கமலநாச்சியார் மதுரவேணி நாச்சியார் தாமரை நாயகி பாதம் !
தலைச்சங்க, திருப்பேரை நாச்சியார் நரசிங்கவல்லி பாதம் !

கல்யாண நாச்சியார் உபயநாச்சியார் பாமாருக்மணி பாதம் !
அல்லிமாமலர் திருமாமகள் பூங்கோவல் நாச்சியார் பாதம் !

மலர்மங்கை நிலமங்கை மடவரல் மங்கை பாதம் !
கிரீவரமங்கை அலர்மேல் மங்கை அணிமாமலர் மங்கை பாதம் !

பொற்கொடி ஆண்டாள் செல்வத்திருக்கொழுந்து பாதம் !
பத்மாசனி பத்மாமணி பெருஞ்செல்வநாயகி பாதம் !

பெருந்தேவி கண்ணபுரநாயகி உய்யவந்த நாச்சியார் பாதம் !
லட்சுமி ஹரிலட்சுமி கருந்தடக்கண்ணி பாதம் !

செல்வநாயகி செம்மலர் பாதங்களை மனம்குளிர நினைந்திடுவோம்!
தாயார் திருவடியை தினமும் நாம் தொழுது தனமழையில் நனைந்திடுவோம்!
காளியை வணங்கும் முறை (ராகுதோஷம் நீங்க )

ராகு திசை நடக்கும் போதோ, ராகு பெயர்ச்சியால் ஒருவரது செயல்பாடுகள் பாதிக்கும் போதோ, நமது பணிகளில் பிறரது தலையீடு தேவையின்றி வரும்போதோ, அவர்கள் நம் பக்கமே வராமல் இருக்கவோ காளிக்கு நாமாகவே அர்ச்சனை செய்யலாம். குறிப்பாக, நவராத்திரி காலத்தில் இதைச் செய்தால் மிகவும் நல்லது.எண் கணிதப்படி ராகுவுக்குரிய எண் 4. இந்த எண் தடைகளை தரும் என்பது நம்பிக்கை. எனவே தான் 22 (கூட்டினால் 4) ஸ்லோகம் கொண்ட அர்ச்சனையை காளிக்காக வடித்துள்ளதாக கருத வேண்டியுள்ளது. இந்த ஸ்லோகத்தை வீட்டில் மாரியம்மன் அல்லது துர்க்கை படம் முன் அமர்ந்து சொல்லலாம். கொலு வைத்திருந்தால் மேடை முன் அமர்ந்து சொல்லலாம். இந்த ஸ்லோகத்தைச் சொல்லும்போது, செவ்வரளி மலர்களை தூவ வேண்டும்.

ஓம் காள்யை நம:
ஓம் க்ருஷ்ண ரூபாயை நம:
ஓம் பராத்மகாயை நம:
ஓம் முண்டமாலாதராயை நம:
ஓம் மஹாமாயாயை நம:
ஓம் ஆத்யாயை நம:
ஓம் கராளிகாயை நம:
ஓம் ப்ரேதவாஹாயை நம:
ஓம் ஸித்தலக்ஷ்மையை நம:
ஓம் கால ஹராயை நம:
ஓம் ப்ராஹ்மை நம:
ஓம் நாராயண்யை நம:
ஓம் மாஹேஸ்வர்யை நம:
ஓம் சாமுண்டாயை நம:
ஓம் கவுமார்யை நம:
ஓம் அபராஜிதாயை நம:
ஓம் வராஹ்யை நம:
ஓம் நாரஸிம்ஹாயை நம:
ஓம் கபாலின்யை நம:
ஓம் வரதாயின்யை நம:
ஓம் பயநாசின்யை நம:
ஓம் ஸர்வ மங்களாயை நம:
 
மார்க்கபந்து ஸ்தோத்திரம்

அப்பய்ய தீக்ஷிதரின் கல்வி, அனுபூதி முதலியவற்றைக் கண்டு பொறாமையுற்ற சிலர் அவர் மீது சில கொடியவர்களை ஏவினர். கொடியவர்கள் தம்மை மடக்க எண்ணியதை அறிந்த தீக்ஷிதர் பின்வரும் ஐந்து சுலோகங்களால் பரமேஸ்வரனைத் துதித்தார். பரமேஸ்வரன் மார்க்க ஸஹாயனாக வந்து, அந்தக் கொடியவர்களை விரட்டியடித்தார்.

சம்போ மஹாதேவ தேவ, சிவ சம்போ மஹாதேவ தேவேச சம்போ, சம்போ மஹாதேவ தேவ

பாலாவநம்ரத்கிரீடம் பால நேத்ரார்ச்சிஷா தக்தபஞ்சேஷுகீடம்
சூலாஹதாராதிகூடம் சுத்த மர்த்தேந்துசூடம் பஜே மார்கபந்தும் (சம்போ)

திவ்யமான கிரீடத்தைத் தரித்தவரும் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்தவரும் சூலத்தால் எதிரிகளை வதைத்தவரும் சந்திரனைத் தலையில் தரித்தவரும் வழித்துணைத் தெய்வமாக விளங்குபவருமான மார்க்கபந்துவை வணங்குகிறேன்.

அங்கே விராஜத்புஜங்கம் அப்ரகங்காதரங்கா பிராமோத்தமாங்கம்
ஓம்காரவாடீகுரங்கம் ஸித்தஸம்ஸேவிதாங்க்ரிம் பஜே மார்கபந்தும் (சம்போ)

பாம்பை ஆபரணமாக அணிந்தவர், கங்கையைத் தரித்தவர், ஓங்காரத் தோட்டத்துக்கு மான் போன்றவரும்(பிரணவப் பொருளானவரும்). சித்தர்களால் வணங்கப்பட்ட திவ்ய சரணாரவிந்தங்களை உடையவரும் வழித்துணைத் தெய்வமாக.....

நித்யம் சிதாநந்தரூபம் நிஹ்நுதாசேஷலோகே சவைரிப்ரதாபம்
கார்த்தஸ்வராகேந்த்ரசாபம் க்ருத்திவாஸம் பஜே திவ்யஸந்மார்கபந்தும் (சம்போ)

நித்யரும் சிதானந்த ரூபியும், லோக பாலர்களுக்கு எதிரிகளான அசுரர்களின் பிரதாபத்தையும் அழித்தவரும், பொன்மலையை வில்லாக்கியவரும், யானைத் தோலை அணிந்தவரும் வழித்துணைத் தெய்வமாக....

கந்தர்ப்பதர்பக்நமீசம் காலகண்டம் மஹேசம் மஹாவ்யோமகேசம்
குந்தாபதந்தம் ஸுரேசம் கோடிசூர்யப்ரகாசம் பஜே மார்கபந்தும் (சம்போ)

மன்மதனின் திமிரை அடக்கியவர், விஷத்தைக் கழுத்தில் தரித்திருப்பவர், ஆகாசத்தையே கேசமாக உடையவர், வெண்பற்களை உடையவர், கோடி சூரியனுக்கு நிகரானவர், வழித்துணைத் தெய்வமாக....

மந்தாரபூதேருதாரம் மந்தராகேந்த்ரஸாரம் மஹாகௌர்யதூரம்
ஸிந்தூரதூரப்ரசாரம் ஸிந்துராஜாதிதீரம் பஜே மார்கபந்தும் (சம்போ)

மந்தாரம் என்ற கற்பக விருக்ஷத்தைவிட அதிகமாக வேண்டியவற்றை அருள்பவர், மந்தர மலையைவிட அதிக வலுவுள்ளவர், பார்வதி தேவிக்கு அருகில் உள்ளவர், ரிஷபத்தின் மீது ஏறி சஞ்சாரம் செய்பவர், சமுத்திரராஜனைவிட அதிக தீரராக இருப்பவருமான, வழித்துணைத் தெய்வமாக விளங்குபவருமான மார்க்கபந்துவைப் பூஜிக்கிறேன்.

அப்பய்யயஜ்வேந்த்ரகீதம் ஸ்தோத்ர
ராஜம் படேத்யஸ்து பக்த்யா ப்ரயாணே
தஸ்யார்த்தஸித்திம் விதத்தே மார்க
மத்யேபயம் சாதுதோ÷ஷா மஹேச (சம்போ)

அப்பய்ய தீக்ஷிதரால் அருளப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தை வெளியே செல்லும்போது பக்தியுடன் படிக்கின்றவருக்கு, பரமேச்வரர் காரிய சித்தியையும் வழியில் பயமின்மையையும் நல்குகிறார்.
கங்காஷ்டகம்

1. கத்யஸ்தீனி கரோடய: கதி சுதா தாம்னச்சகண்டா கதி காகோலா: கதி பன்னகா: கதி கதி த்வீபித் விஷாணாம் த்வச:
கிம் ச த்வம் ச கதி த்ரிலோக ஜனனி! த்வத்வாரி பூரோதரே மஜ்ஜஜ-ஜந்து கதம்பகம் ஸமுதயத்யே கைக மாதா யயத்

பொருள் : ஹே மூவுலகத் தாயே ! நீ எண்ணற்ற எலும்புத் துண்டுகள், மண்டையோடுகள் நிறைந்தவளாகவும், அம்ருத தாரைகளுக்கு இருப்பிடமாகவும், நீர்ப்பறவைகள், பாம்புகள் நிறைந்தும் <உள்ளாய். உன்னுள் மூழ்கும் எல்லா உயிரினங்களையும் வாழ்வில் மேலே தூக்கிவிடும் உன் பெருமையே பெருமை!

2. தேவி! த்வத்புலிநாங்கணே ஸ்திதிஜுஷாம் நிர்மாநினாம் ஞானினாம் ஸ்வல்பாஹார நிபத்த சுத்த வபுஷாம் தார்ணம் க்ருஹம் ச்ரேயஸே
நான்யத்ர க்ஷிதிமாண்ட லேச்வரசதை: ஸம்ரக்ஷிதோ பூபதே: ப்ராஸாதோ லலநாகணைரத கதோ போகீந்த்ர - போகோந்நத

பொருள் : நூற்றுக்கணக்கான அரசர்கள் காவலுள்ள, அந்தப்புரப் பெண்கள் பலர் சூழ்ந்துள்ள, படமெடுத்த ஆதிசேஷனைப் போல் உயர்ந்து விளங்கும் அரச மாளிகையை விட ஹே தேவி, உனது கரையின் மணலில் அமைந்த, கோபத்தை வென்ற, சிறிதே உணவருந்தி, தூயவர்களாகிய, உலகின் நன்மையை விரும்பும் ஞானிகளின் புல்லால் வேயப்பட்ட குடில் மேலானது.

3. தத் - தீர்த்தகதை: கதர்த்தனசதை: கிம் தைரநர்தாச்ரிதை: ஜ்யோதிஷ்டோ மமுகை: கிமீச விமுகைர்யக்ஞைரவ ஞாஹ்ருதை:
ஸூதே கேசவவாஸவாதி விபுதக் ராமாபிராமாம் ச்ரியம் கங்கே தேவி! பவத்தடே யதி குடீவாஸ: ப்ரயாஸம் வினா

பொருள் : ஹே கங்கையே! உனது கரையில் குடிலமைத்து வாழ்வது - விஷ்ணு, இந்திரன் போன்ற தேவர்களுக்கே வியப்பளிக்கும் விதமான செல்வத்தை (மனஅமைதி) அளிக்கும் எனில், எதற்காக உடலை வருத்திக் கொண்டு, பல தீர்த்த யாத்திரைகள் செய்ய வேண்டும்?
இறைநினைவின்றி (எந்திரம்போல) ஜ்யோதிஷ்டோமம் முதலிய யாகங்களை ஏன் செய்ய வேண்டும்?

4. கங்காதீரமுபேத்ய சீதலசிலாமாலம்ப்ய ஹைமா சலீம் யைராகர்ணி குதூஹலாகுலதயா கல்லோல கோலாஹல:
தே ச்ருண்வந்தி ஸூபர்வபர்வதசிலா ஸிம்ஹாஸனாத் யாஸின: ஸங்கீதாகம சுத்த ஸித்தரமணீ மஞ்ஜீர தீரத்வனீன்

பொருள் : கங்கைக்கரையை அடைந்து ஹிமாசலத்தின் குளிர்ந்த கற்பாறைகள் மீது அமர்ந்து, குதூகலத்துடன் (கங்கையின்) அலைகளின் கோலாகலமான ஒலியை யார் கேட்கிறார்களோ, அவர்கள் தேவபர்வதத்தின் (ஹிமாலயத்தின்) பாறைகளாகிய சிம்மாசனத்தில் (இந்திரன் போல) அமர்ந்து, தேவ மங்கையரின் சதங்கைகளின் ஓரங்களிலிருந்து உண்டாகும் சங்கீத (ஆகம) நூல்களின் கூற்றுப்படி அமைந்த (இனிய) ஒலியைக் கேட்கும் அனுபவம் பெறுகிறார்கள்.

அதாவது, இமயப்பாறைகள் சிம்மாசனத்திற்கும், கங்கை அலை ஓசை தேவமங்கையரின் காற்சதங்கை ஒலிக்கும் ஒப்பாகும். இமயமலைப் பாறைகளின் மீதமர்ந்து கங்கை அலையோசையைக் கேட்பது, இந்திரன் சிம்மாசனத்தில் அமர்ந்து தேவலோகத்து இசையைக் கேட்பதற்கு ஒப்பாகும்.

5. தூரம் கச்ச ஸகச்சபம் சபவதோ நாலோகயாமோ முகம் ரே வாராக பராக ஸாகமிதரைர்நாகப்ரதைர் கம்யதாம்.
ஸத்ய: ப்ரோத்யதமந்தமாருதரஜ ப்ராப்தா கபோலஸ்தலே கங்காம்ப: கணிகா விமுக்த கணிகா ஸங்காய ஸம்பாஷ்யதே

பொருள் : சொர்க்கத்தை அளிக்கும் ஹோமத்தின் தூய புகை வெகுதூரம் செல்லட்டும். அது நமக்கு வேண்டாம். பெண்ணாசை துறந்த மகான்களின் நட்பைப் பெறும் தகுதி - மந்தமாருதத்தால் உந்தப்பட்டு, தூசியுடன் கலந்து, எங்கள் கன்னங்களில் படும் புனித கங்கை நீரின் கணங்களாலேயே ஏற்பட்டு விடுகிறது என்றல்லவா (பெரியோர்களால்) கூறப்படுகிறது!

6. விஷ்ணோஸ் ஸங்க திகாரிணீ ஹரஜடா ஜூடாட வீசாரிணீ பிராயச்சித்த நிவாரணீ ஜலகணை: புண்யௌக விஸ்தாரிணீ
பூப்ருத்கந்தரதாரிணீ நிஜஜலே மஜ்ஜஞ்ஜனோத் தாரிணிச்ரேயஸ்ஸ்வர்க விஹாரிணீ விஜயதே கங்கா மனோஹாரிணீ

பொருள் : மஹாவிஷ்ணுவுடன் தொடர்பை ஏற்படுத்துபவளும், பரமேஸ்வரனின் அடர்ந்த காடாகிய ஜடையில் சஞ்சரிப்பவளும், இமயமலையின் குகைகளில் எப்போதும் இருப்பவளும், தன் நீரில் நீராடுபவர்களை வாழ்வில் முன்னேற்றுபவளும், செல்வம் மிக்க சொர்க்கத்தில் உலவுபவளும், மனதைக் கொள்ளை கொள்பவளுமான கங்காதேவி வெற்றியுடன் விளங்குகிறாள்.

7. வாசாலம் விகலம் கலம் ச்ரிதமலம் காமாகுலம் வ்யாகுலம் சாண்டாலம் தரலம் நிபீதகரலம் தோஷாவிலம்சாகிலம்
கும்பீபாகக தம் தமந்தககராதா க்ருஷ்ய கஸ்தாரயேத் மாதர்ஜஹ்னுமுனீந்த் ரநந்தினி தவ ஸ்வல்போத பிந்தும் வினா

பொருள் : ஜஹ்னு முனிவரின் மகளாகிய கங்கையே! அளவுக்கதிகமாகப் பேசுபவன், ஊனமுற்றவன், தீய எண்ணமுடையவன், கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுபவன், ஆசை வசப்பட்டவன், மிகுந்த கலக்கத்துடன் இருப்பவன், இழிபிறவி, சஞ்சலமானவன், விஷம் உண்டவன், எல்லாப் பாவங்களுடன் இருப்பவன், கும்பீபாகம் என்ற நரகத்தை அடைந்தவன் - அப்படிப்பட்டவனை எமனிடமிருந்து பிடித்திழுத்து, உன் சில நீர்த் துளிகளாலன்றி வேறு யார்தான் காப்பாற்ற முடியும்?

8. ச்லேஷ்மாஷ்லேஷணயாமலேஷ்ம்ருதபி லே காலாகுலே வ்யாகுலே கண்டேகர்கரகோ ஷநாத மலினே காயே ச ஸம்மீலதி
யாம் த்யான்னபி பாரபங்குரதரம் ப்ராப்நோதி முக்திம் நர: ஸ்நாதுஸ்சேதஸி ஜாஹ்னவீ நிவஸதாத் ஸம்ஸாரஸந்தாபஹ்ருத்

பொருள் : கபம் நிறைந்த நெஞ்சுக் குழியுடனும், மரண பயத்தால் கலங்கியவனும், இறக்கும் தருவாயில் தொண்டையிலிருந்து வரும் ஓசை உடலுடன் அடங்கும்போதும் கங்கையைத் தியானித்து முக்தியை அடைகிறவனும், கங்கையில் நீராடித் தன் மனதில் ஸம்ஸாரம் என்ற பெரும் தாபத்தைக் களைபவனுமாகியவர்களின் மனதில் ஜாஹ்னவி (கங்கை) வசிப்பாளாக!
ஆதி சங்கரர் அருளிய நிர்வாணாஷ்டகம்!

சிவ வழிபாட்டின் உன்னத நோக்கத்துக்கு, பயனுக்கு நம் வேதாந்திகளின் முதல்வர் - மதச் சீர்திருத்தம் செய்தவரும் ஷண்மத ஸ்தாபகருமான ஆதி சங்கரர் அருளிய நிர்வாணாஷ்டகம் என்னும் பாக்களே சிறந்த சான்று. ஆதிசங்கரர் அருளிய ஆனந்த நிலையின் ஆறு சுலோகங்கள் : (நிர்வாணாஷ்டகம்)

1. மனமும் நானல்ல; புத்தியும் நானல்ல;
நான் என்ற அகங்காரமும் நானல்ல;
அறிவும் சக்தியும் நானல்ல.
உடலின் அங்கங்களும் நானல்ல; ஆகாயம், பூமியும் நானல்ல;
ஜோதியும் நானல்ல; காற்றும் நான் அல்ல.
ஆனந்த மயமான சிவனே நான் - நானே சிவன்.

2. உச் சுவாச, நிச் சுவாச மூச்சினால் ஆனவன் அல்ல, நான்.
கப, பித்தம் முதலிய ஏழு தாதுக்களால் ஆனவனுமல்ல; பஞ்ச (ஐந்து) கோசத்தால் ஆனவனும் அல்ல.
வாக்க நான் அல்ல, கை கால்களும் நான் அல்ல.
ஆனந்த மயமான சிவனே நான் - நானே சிவன்.

3. துவேஷம் எனக்கில்லை; ராகமும் (அன்பும்) எனக்கு இல்லை. லோபமும் எனக்கில்லை; மோகமும் எனக்கில்லை.
மதமும் எனக்கில்லை, மாத்சர்யமும் (சினமும்) எனக்கில்லை, தர்மத்துக்கும் தொடிசு இல்லை, சம்பத்துக்கும் சம்பந்தமில்லை.
ஆனந்தமயமான சிவனே நான் - நானே சிவன்.

4. புண்ணிய பாவமும் எனக்கேது? ஓதுவது, தீர்த்தாடனம் எனக்கேது? வேதம், வேள்வி எனக்கேது? சுகம் ஏது? துக்கம் ஏது?
ஹவிஸ் நானல்ல; அனுபவிக்கிறவனும் நானல்ல; அனுபவிக்கப்படுபவனும் நானல்ல!
ஆனந்தமயமான சிவனே நான்; நானே சிவன்.

5. மிருத்யுவிடம் (மரணத்திடம்) எனக்குப் பயமில்லை. ஜாதி வித்தியாசம் எனக்கில்லை.
தகப்பனும் இல்லை; தாயும் இல்லை; பிறவியும் எனக்கில்லை;
பந்துவும் இல்லை; சினேகிதனும் எனக்கில்லை. ஆசானும் இல்லை; சிஷ்யனும் எனக்கில்லை. ஆனந்தமயமான சிவனே நான் - நானே சிவன்.

6. சஞ்சலம் இல்லாதவன்; உருவங்களால் கட்டுப்படாதவன்; இந்திரியங்கள் அனைத்தையும் ஜயித்தவன்; பற்றை அறவே துறந்தவன்; எனக்கு முக்தியே.

பந்தமோ விஷயமோ இல்லை. ஆனந்தமய சிவனே நான் - நானே சிவன். சொல்லும் அதன் பொருளும் போல் இணைபிரியாத ஜகத்துக்கே தாய் தந்தையராக விளங்கும் பார்வதி பரமேசுவரரை நான் வணங்குகிறேன். சொல்லும் அதன் பொருளும் நான் நன்றாக அறிவதற்கு அருள வேண்டும்.
அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்

மூலவர் :திருநீரகத்தான்
உற்சவர்:ஜெகதீசப்பெருமாள்
அம்மன்/தாயார்:நிலமங்கை வல்லி
தீர்த்தம்:அக்ரூர தீர்த்தம்
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திருநீரகம்
ஊர் :திருநீரகம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்: மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார்

நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண்துறை நீர் வெஃகாகவுள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் உலகமேத்தும்
காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா
காமரு பூங்காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய்
பெருமானுன் திருவடியே பேணினேனே.
-திருமங்கையாழ்வார்

திருவிழா:வைகுண்ட ஏகாதசி

தல சிறப்பு:பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 48 வது திவ்ய தேசம். இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும். இக்கோயிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன் கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார்.

திறக்கும் நேரம்:காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு உலகளந்த பெருமாள் கோயில், திருநீரகம், காஞ்சிபுரம் - 631 502. காஞ்சிபுரம் மாவட்டம்.போன்:+91- 94435 97107, 98943 88279

பொது தகவல்:இத்தல இறைவன் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ஜெகதீஸ்வர விமானம் எனப்படும். இத்தல இறைவனை அக்ரூரர் தரிசனம் செய்துள்ளார்.

பிரார்த்தனை:ஆணவம் நீங்க வழிபாடு செய்யப்படுகிறது.

நேர்த்திக்கடன்:பிரார்த்தனை நிறைவேறியதும் இங்குள்ள பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.

தலபெருமை:பெருமாளின் 108 திருப்பதிகளுள் இது திருநீரகம் எனப்படும். இது உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளேயே உள்ள திவ்ய தேசம் ஆகும். இந்த கோயிலின் உள்ளேயே திருஊரகம், திருக்காரகம், திருகார்வானம் என்ற மூன்று திவ்ய தேசங்கள் உள்ளது. அதாவது ஒரு கோயிலுக்குள்ளேயே 4 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது. இதைப்போல் வேறு எங்கும் பார்க்க முடியாது. திருஊரகத்தை தவிர மற்ற மூன்றும் வேறு இடத்தில் இருந்ததாகவும் பிற்காலத்தில் ஒரே தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறுவதுண்டு. ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேசத்து பெருமாளையும் சேர்த்து திருமங்கை ஆழ்வார் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார்.

தல வரலாறு:"நீரகத்தாய்' என்று பாடலில் முதற்சொல்லாகவே திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த "திருநீரகம்' முன் காலத்தில் எங்கிருந்ததென இதுவரை யாருக்கும் தெரியவில்லை. உற்சவரே மூலவரின் இடத்திலிருந்து அருள்பாலிக்கிறார். பெருமாள் நீர்மைத் தன்மை கொண்டவன். நீரிடை மீனாக அவதாரம் செய்தவன். நீர் மேல் அமர்ந்து அதையே இருப்பிடமாக கொண்டவன். பிரளய காலத்தின் போது இந்த பூமி நீரால் சூழ, அதன் மீது ஆலிலை கண்ணனாக மிதப்பவன். எனவே பெருமாளை நீரகத்தான் என திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். ஆனால் இந்த தலம் எங்கிருந்தது என்று மட்டும் அவர் யாருக்கும் சொல்லவில்லை. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ய இங்கு எழுந்தருளிய போது இந்த மூன்று தலங்களும் "திருஊரகத்துடன்' வந்து விட்டதா?. அல்லது வெவ்வேறு இடங்களில் இந்த திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தாரா? அல்லது எந்த காலச்சூழ்நிலையில் இந்த மூன்று திவ்ய தேசங்கள் இங்கு வந்தது என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும். இக்கோயிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன் கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார்.
அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில்

மூலவர்:ஏகாம்பரநாதர்
உற்சவர்:உற்சவர்சொர்ணாம்பாள்
அம்மன்/தாயார்:காமாட்சி (ஏழவார்குழலி)
தல விருட்சம்:மாமரம்
தீர்த்தம்:சிவகங்கை
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:கச்சி
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:அப்பர் , சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்

தேவாரப்பதிகம்:பண்டு செய்த பழவினையின் பயன் கண்டுங் கண்டுங் களித்திகாண் நெஞ்சமே வண்டுலா மலரச் செஞ்சடை யேகம்பன் தொண்டனாய்த் திரியாய் துயர் தீரவே.-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது முதல் தலம்.

திருவிழா:பங்குனி உத்திரம் பெருவிழா - 13 நாட்கள் நடைபெறும் - வெள்ளி ரதம், வெள்ளி மாவடி சேர்வை, தங்க ரிஷபம் ஆகியவை விசேசம் - இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர் பௌர்ணமி, அம்மாவாசை, பிரதோச நாட்களில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு தமிழ், ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.

தல சிறப்புஇங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு. ஏகாம்பரேஸ்வரர் தனகருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு பார்த்தும், எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது. தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. பஞ்சபூத தலங்களில் இது (நிலம்) முதல் தலம் ஆகும். ஒற்றை மாமரம் இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது. உற்சவர் ஏகாம்பரேஸ்வரர் தனிச்சன்னதியில் கண்ணாடி அறையில் ருத்ராட்சப் பந்தலின் கீழ் இருக்கிறார். 5008 ருத்ராட்சங்களால் வேயப்பட்ட பந்தல் இது. இக்கண்ணாடியில் ருத்திராட்சத்துடன், எல்லையற்ற சிவனது உருவத்தையும் தரிசிக்கலாம். இத்தரிசனம் பிறப்பில்லா நிலையை அருளக்கூடியது என்கிறார்கள். கருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு பார்த்தும், எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது. ஸ்படிகம் சிவனுக்கு உகந்தது. குளிர்ச்சியை தரக்கூடியது. இந்த லிங்கத்திடம் வேண்டிக்கொண்டால் பொலிவான தோற்றம் பெறலாம், மனதில் தீய குணங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த லிங்க தரிசனம் மிகவும் விசேஷமானது. ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட சகஸ்ரலிங்கம் மற்றும் அஷ்டோத்ர (108) லிங்கங்களும் இங்கு இருக்கிறது. இந்த லிங்கத்திடம் 108 விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். கச்சியப்ப சிவாச்சாரியார் இத்தலத்தில்தான் "கந்த புராணத்தை' இயற்றினார். பின் அருகில் உள்ள குமரகோட்டம் முருகன் கோயிலில் அரங்கேற்றம் செய்தார்.

திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:நிர்வாக அதிகாரி, அருள்மிகு காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்-631501,போன்:+91- 44-2722 2084.

பொது தகவல்:மிகவும் அழகிய மண்டபங்கள், சுற்றுப்பிரகாரங்களையும் கொண்ட கோயில் இது என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.

அப்பர் , சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம் ஆகும். இவை தவிர பெரிய புராணம் போன்ற புராண இலக்கியங்களிலும் இத்தலம் ஏராளமாக பாடப்பெற்றுள்ளது. கோயில் முன்மண்டபத்தில் திவ்யதேசங்களில் ஒன்றான நிலாத்திங்கள் துண்டபெருமாள் சன்னதி இருக்கிறது.

இத்தலவிநாயகர் விகடசக்ரவிநாயகர் என்ற திருநாமத்துடனும், முருகன் மாவடி கந்தர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள ராஜகோபுரம் 9 நிலைகளைக் கொண்டது.

பிரார்த்தனை:இத்தலத்தில் அம்பாளின் வேண்டுதல் சிவபெருமானிடம் சித்தி ஆனதால் வரும் பக்தர்கள் அனைவரது வேண்டுதல்களும் இங்கு சித்தியாகிறது. திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும்.

இத்தலத்து சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும். தவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர். இது திருமணத் தலம் என்பதால் இங்கு திருமணம் செய்து கொள்ள ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

நேர்த்திக்கடன்:சுவாமி அம்பாள் ஆகியோருக்கு வேஷ்டி சேலை படைத்தல், அன்னதானம் செய்தல், தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.

தலபெருமை:காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு.

சுந்தரரருக்கு அருள்: கைலாயத்தில் பார்வதிதேவிக்கு தொண்டு செய்த அனிந்திதை, பூலோகத்தில் ஞாயிறு எனும் தலத்தில் சங்கிலியார் என்ற பெயரில் பிறந்து சிவபணி செய்து கொண்டிருந்தாள். சிவதல யாத்திரை சென்ற சுந்தரர் இத்தலத்திற்கு வந்தபோது சங்கிலியாரை இரண்டாவது மனைவியாக மணந்து கொண்டார். திருமணத்தின்போது அவரைவிட்டு பிரிந்து செல்ல மாட்டேன் என்று மகிழமரத்தின் சாட்சியாக சத்தியம் செய்து கொடுத்தார். ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவாரூருக்கு சென்றதால் கண் பார்வையை இழந்தார்.

பார்வையில்லாத நிலையிலும் சிவதலயாத்திரையை தொடர்ந்த சுந்தரருக்கு திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் கொடுத்த சிவன், இத்தலத்தில் இடது கண் மட்டும் தெரியும்படி அருள்செய்தார். எனவே, இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்கும், கண் தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

பிருத்வி தலம்: பஞ்சபூத தலங்களில் முதன்மையான இத்தலம் மணல் (நிலம்) தலமாகும். கருவறையில் சுவாமி மணல் லிங்கமாகவே இருக்கிறார். இவரது மேனியில் அம்பாள் கட்டியணைத்த தடம் தற்போதும் இருக்கிறது. இவருக்கு புனுகு மற்றும் வாசனைப்பொருட்கள் பூசி வெள்ளிக்கவசம் சாத்தி வழிபடுகின்றனர். அபிஷேகங்கள் ஆவுடையாருக்கே நடக்கிறது.

சிவன் இத்தலத்தில் அம்பாளுக்கு அருள்புரிவதற்காக கங்கையையும், ஆலகால விஷத்தின் உஷ்ணத்தால் கருப்பு நிறமாக மாறிய மகாவிஷ்ணுவை குணப்படுத்த தலையை அலங்கரிக்கும் பிறைச்சந்திரனையும் பயன்படுத்தியிருக்கிறார். தன் திருமுடியில் இருக்கும் கங்கை, சந்திரன் இருவருக்கும் சிவன் இத்தலத்தில் பணி கொடுத்திருப்பது சிறப்பு.

தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. இந்நாளில் சுவாமியை தரிசனம் செய்தால் பாவம், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானிடம் இடக்கண் பெற்ற தலம்(திருக்கச்சூர் - ஊன்றுகோல் , காஞ்சி - இடக்கண், திருவாரூர் - வலக்கண்) சிவ ஆலய பிராகாரத்துக்குள் வைணவர்கள் முக்கியமாக கருதப்படும் திவ்ய தேச தலமான நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி இருப்பது மிகவும் சிறப்பு.

ஒற்றை மாமரம் : ஏகாம்பரேஸ்வரர் கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் மாமரம் ஒன்றுஉள்ளது. இம்மரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமஸ்கந்த வடிவில் இருக்கிறார். அம்பாள் நாணத்துடன் தலை கவிழ்ந்தபடி சிவனை நோக்கி திரும்பியிருக்கிறாள். இதனை சிவனது "திருமணகோலம்' என்கிறார்கள்.

அம்பாள் தவம் செய்தபோது, சிவன் இம்மரத்தின் கீழ்தான் காட்சி தந்து மணம் முடித்தாராம். இம்மரத்தின் பெயராலேயே சுவாமி "ஏகாம்பரேஸ்வரர்' (ஏகம் - ஒரு; ஆம்ரம் - மரம்) எனப்படுகிறார். இதனை வேத மாமரம் என்றும் அழைப்பர்.

இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. மிகவும் புனிதமானது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது.

மக்கட்பேறு இல்லாதவர்கள் இம்மாமரத்தின் கனியை புசித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கிறது.

நிலாத்துண்ட பெருமாள் (திவ்ய தேசம்): திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தெடுக்கும் காலத்தில் மகாவிஷ்ணு மேல் ஏற்பட்ட வெப்பம் நீங்குவதற்கு ஈசான பாகத்தில் தியானம் செய்து சிவனுடைய சிரசிலிருந்து சந்திர ஒளி விஷ்ணு மேல் பட்டு வெப்பம் நீங்கி சாந்தி அடைந்ததால் நிலாத்துண்ட பெருமாள் எனும் பெயர் பெற்றார்.

தல வரலாறு:கைலாயத்தில் சிவன் யோகத்தில் இருந்தபோது, அம்பாள் அவரது இரண்டு கண்களையும் விளையாட்டாக தன் கைகளால் மூடினாள். இதனால் கிரகங்கள் இயங்கவில்லை. சூரியனும் உதிக்கவில்லை. உலகம் இருண்டு இயக்கம் நின்றது. தவறு செய்துவிட்டதை உணர்ந்த அம்பாள் சிவனிடம், தன்னை மன்னிக்கும்படி வேண்டினாள். அவரோ செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். எனவே பூலோகத்தில் தன்னை எண்ணி தவம் செய்து வழிபட விமோசனம் கிடைக்கும் என்றார். அம்பாள் தவம் செய்ய ஏற்ற இடத்தை கேட்க, இத்தலத்திற்கு அனுப்பினார்.

இங்கு வந்த அம்பாள் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் லிங்கத்தை பிடித்து வைத்து பஞ்ச அக்னியின் மத்தியில் நின்றபடி தவம் செய்தாள். அவளது தவத்தை சோதிக்க எண்ணிய சிவன் தன் தலையில் குடிகொண்டிருக்கும் கங்கையை பூமியில் ஓடவிட்டார். கங்கை வெள்ளமாக பாய்ந்துவர தான் பிடித்து வைத்த லிங்கம் கரைந்துவிடும் என அஞ்சிய அம்பாள் லிங்கத்தை மார்போடு அணைத்துக் கொண்டு காத்தாள். அம்பாளின் பக்தியில் மகிழ்ந்த சிவன் அவளுக்கு காட்சி தந்து பாவத்தை மன்னித்தருளி, திருமணம் செய்துகொண்டார். அம்பாள் அணைத்த சிவன் என்பதால் சுவாமிக்கு "தழுவக்குழைந்த நாதர்' என்ற பெயரும் இருக்கிறது.

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு. தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. ஒற்றை மாமரம் இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது.
 


51சக்தி பீடங்கள்-பகுதி-16
அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:வடாரண்யேஸ்வரர், தேவர்சிங்கப்பெருமான்
அம்மன்/தாயார்:வண்டார்குழலி, மகாகாளி
தல விருட்சம்:பலா
தீர்த்தம்:முத்தி
பழமை:2000 வருடங்களுக்கு முன்
ஊர்:திருவாலங்காடு
மாவட்டம்:திருவள்ளூர்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்: திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர்

தேவாரப்பதிகம்:கூடினார் உமைதன் னோடே குறிப்புடை வேடங் கொண்டு சூடினார் கங்கையாளைச் சுவறிடு சடையர் போலும் பாடினார் சாமவேதம் பைம்பொழில் பழனை மேயார் ஆடினார் காளி காண ஆலங்காட்டு அடிகளாரே.-திருநாவுக்கரசர்.

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 15வது தலம்.

திருவிழா:மார்கழி திருவாதிரை இங்கு மிக சிறப்பு. இது தவிர சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் இங்கு கொண்டாடப்படுகிறது.

தல சிறப்பு:சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நடராஜப்பெருமான் நித்தமும் நடமாடும் பஞ்ச சபைகளுள் இது ரத்தின சபை.இறைவனால் அம்மையே என அழைக்கப்பெற்று சிறப்பிக்க பெற்ற காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியின் கீழிருந்து, சிவனின் ஆனந்த இன்ப வெள்ளத்தில் திளைத்திருக்கும் திருக்கோயில் இது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காளி சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 248 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 9 மணி வரை நடை திறந்து இருக்கும்.

முகவரி:அருள்மிகு வண்டார்குழலி உடனுறை வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு-609 810, திருவள்ளூர் மாவட்டம். போன்:+91- 4118-272 608.

பொது தகவல்:முன் காலத்தில் ஆலமரக்காடாக இருந்து அதில் இறைவன் சுயம்புவாக தோன்றி, நடனம் செய்த படியால் இத்தல இறைவன் வடாரண்யேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.

பிரார்த்தனை:நடனக்கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவர்கள் வணங்க வேண்டிய தலம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையை பலப்படுத்தும் தலம்.

நேர்த்திக்கடன்:மார்கழி திருவாதிரையில் சிவனுக்கு அபிஷேக ஆராதனை செய்தல்.

தலபெருமை:காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் பெற்ற சிறப்புடையது. தாமரை மலர் விரித்தாற் போல் அமைந்து அதன் மேல் அமைந்துள்ள "கமலத்தேர்' இங்கு தனி சிறப்பு.

தல வரலாறு:சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்கள் ஆலமரங்கள் அதிகமாக உள்ள காட்டில் தங்கி தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்தனர். இதனால் பாதிப்படைந்தவர்கள் சிவ பார்வதியிடம் சென்று முறையிட்டனர். பார்வதி தேவி தன் பார்வையால் காளியை தோற்றுவித்து அரக்கர்களை அழித்து விட்டு, அவளையே ஆலங்காட்டிற்கு தலைவியாக்கினாள். அரக்கர்களை அழித்து அவர்களது ரத்தத்தை உண்ட காளி, பல கோர செயல்களை புரிந்தாள். இதனால் முஞ்சிகேச கார்க்கோடக முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் கோர வடிவம் கொண்டு ஆலங்காட்டை அடைந்தார். அவரை கண்ட காளி, ""நீ என்னுடன் நடனமாடி வெற்றிபெற்றால் இந்த ஆலங்காட்டை ஆளலாம்,''என்றாள். சிவனும் காளியுடன் ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். அப்போது தன் காதில் இருந்த மணியை கீழே விழவைத்து, பின் அதை தன் இடக்கால் பெருவிரலால் எடுத்து மீண்டும் தன் காதில் பொருத்தினார்.

இதைக்கண்ட காளி, இது போன்ற தாண்டவம் தன்னால் ஆட இயலாது என தோற்று விடுகிறாள். அப்போது காளியின் முன் இறைவன் தோன்றி,""என்னையன்றி உனக்கு சமமானவர் வேறு யாரும் கிடையாது. எனவே இத்தலத்தில் என்னை வழிபாடு செய்ய வருபவர்கள், முதலில் உன்னை வழிபாடு செய்த பின் என்னை வழிபட்டால் தான் முழு பலன் கிடைக்கும்,''என்று வரமளித்தார். அன்றிலிருந்து காளி தனி கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள்.

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.