புதன், 16 அக்டோபர், 2013

பெண்கள் மஞ்சள் கயிறு அணியாமல் தங்கச் சங்கிலியில் திருமாங்கல்யம் அணிவது சரியா?

மாங்கல்ய தந்துனா என்று திருமணத்தில் மந்திரம் சொல்லி தாலி கட்டப்படுகிறது. தந்து என்றால் மஞ்சள் கயிறு என்று பொருள். திருமாங்கல்ய சரடு என்றும் இதனைச் சொல்வார்கள். கணவன் இல்லாதவரை விதந்துஎன்று குறிப்பிடுவார்கள். அதாவது மாங்கல்ய கயிறு இல்லாதவள் என்று பொருள். மந்திர உச்சரிப்போடு கட்டப்படுகிற மஞ்சள்கயிறைத் தான் பெண்கள் அணிய வேண்டும். விருப்பமுள்ளவர்கள் திருமாங்கல்யத்தைக் கயிற்றிலும், மற்றவற்றை சங்கிலியிலும் அணிவதும் வழக்கம். எப்படியோ மஞ்சள் கயிறு அணிந்து தான் ஆக வேண்டும்.
திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்?

இந்திய தேசத் திருமணங்களில், அம்மி மிதித்து அருந்ததி காட்டும் வழக்கம் உண்டு. வசிஷ்டா என்ற பெயருக்கு உயிர்மூச்சுடன் உறுதியான மனம் கொண்டவன் என்ற பொருளும், அருந்ததி என்ற பெயருக்கு கணவனின் எண்ணம் அறிந்து கற்பு நெறியுடன் வாழ்பவள் என்ற பொருளும் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. வஸ்து என்றால் பஞ்சபூதங்கள் என்றும், வசிஷ்தா என்றால் பஞ்சபூதங்களில் ஐக்கியமானவன் என்றும் பொருள் உண்டு. திருமண பந்தத்தில் இணையும் நாள்வரை, மணப்பெண்ணானவள் தன்னையும் தன் உடலையும் காமக்கண்ணுடன் பிறர் பார்த்ததால், திருமண நாளில் தனது உடலை அக்னிக்குள் சமர்ப்பித்து தன்னைப் பரிசுத்தப்படுத்திக்கொள்வதுடன், தன்னைத் திருமணம் செய்துகொள்பவளின் பாவங்களையும் அதே அக்னியில் சாட்சியாக நீக்கி, பரிசுத்தப்படுத்தி, தன் ஆற்றல் எனும் ஆக்ஞை சக்கரத்தை கணவனுக்கு முழுமையாகக் கொடுத்து புருவ மத்தியில் திலகமாக ஏற்றுக்கொள்கிறாள்; கணவனிடம் சரணாகதி அடைகிறாள். பெண்ணின் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவன் மணப்பெண்ணைப் பார்த்து, இனி நான் உனது உயிர்மூச்சாகவும் கல்லைப் போல மன உறுதியுடனும் இருந்து உன் வாழ்க்கைக்கு வழிகாட்டுவேன் என்பதை, வசிஷ்ட மகரிஷியின் சாட்சியாக உன் காலை அம்மிமீது வைத்து அதன் சாட்சியாக உன் காலில் மெட்டியைச் சூட்டுகின்றேன் என்று கூறுகின்றான். மணப்பெண்ணானவள், தன் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவனுக்கு அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டி அருந்ததியைப் போல் ஏழு ஜன்மங்களிலும் உமக்கு மட்டும் மனைவியாக இருப்பேன் என்று சத்யப்பிரமாணம் செய்கின்றாள். அக்னியில் பிறந்த பெண், அக்னியாலேயே பரிசுத்தப்படுத்திக்கொண்டு ஆணையும் பரிசுத்தப்படுத்தி திருமணம் எனும் தெய்வீக பந்தத்துக்குள் இணைந்து அர்த்தநாரீஸ்வரியாகத் திகழ்கின்றாள்.
ஆஞ்சநேயருக்கு வடை மாலை, வெண்ணெய் சார்த்துவது ஏன்?

நமது உடல் தசையால் ஆனது. தசை வளர்ச்சிக்கு உளுந்து முக்கிய காரணமாகிறது. ஒல்லியாக இருப்பவர்கள் இட்லி, தோசை, உளுந்துவடை சாப்பிட்டால் சதைப்பிடிப்பு ஏற்படும். ஆனால், சதையாலான இந்த உடம்பு எதற்காவது பயன்படுமா? எனவே, பயனற்ற இந்த உடலை உனக்கே அர்ப்பணிக்கிறேன் ஆஞ்சநேயா என்ற தத்துவார்த்தத்தின் அடிப்படையிலேயே உளுந்துவடை மாலை அணிவிக்கிறோம். அனுமானுடைய தாய் அஞ்சனாதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடைசெய்து கொடுத்ததாக ஐதீகம். உளுந்து எலும்புகளுக்கு நல்ல போஷாக்கு.

வெண்ணெய் சாத்துதல்: ராம ராவண யுத்தம் நடக்கிறது அப்போது ராமரையும் லக்குமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டு சென்றார் அனுமான் அப்போது ராவணன் சராமாரியாய் அம்பு தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப் பட்டார், அந்தக் காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய் பூசிக் கொண்டாராம். வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை, அதனால் வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது,
பூஜையில் சுண்டலின் முக்கியத்துவம் தெரியுமா!

பூஜையின் போது சுண்டலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. பொதுவாக  இறைவனை நினைத்து உபவாசம் இருப்பதே மேலானது. இந்நேரத்தில் புரதச்சத்து மிகுந்த சமச்சீர் உணவான சுண்டலை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியம். நீராவியில் வேக வைப்பதால் சத்து குறையாது. நோயாளிகளுக்கும் கருவுற்ற பெண்களுக்கும் சுண்டல் அற்புதமான உணவு. மேலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான தானிய வகை சுண்டல் சமைத்தால், நவக்கிரகங்களையும் திருப்திபடுத்தலாம்.

ஞாயிறு (சூரியன்)- அவித்த கோதுமை கலந்த சுண்டல், திங்கள் (சந்திரன்)- பாசிப்பயிறு, அப்பளம் கலந்த புட்டு, செவ்வாய்- துவரை சுண்டல், புதன்- பயறு சுண்டல், வியாழன்- கொண்டைக்கடலை சுண்டல், வெள்ளி- மொச்சை சுண்டல், சனி- எள் சேர்த்த சுண்டல், ராகு- உளுந்து சுண்டல், கேது- கொள்ளு சுண்டல்.
பக்தி என்றால் என்ன?

இறைவனிடம் அதைக்கொடு, இதைக்கொடு என்று கேட்கிறார்கள். காந்தக் கல்லோடு எப்படி ஊசி போய் ஒட்டிக் கொள்கிறதோ, பதிவிரதையின் மனமானது பர்த்தாவினிடத்தில் போய் கவிந்து கொள்கிறதோ, நதியானது மகாசமுத்திரத்தில் கலந்து விடுகிறதோ... அதுபோல், கடவுளுடன் நமது மனமும் கலந்து விட வேண்டும். நமக்கு அனுக்கிரஹம் செய்கிற, பரமாத்வினிடத்தில், தன்னை அறியாமல் போய் நிற்க வேண்டும். அதற்கு காரணமே இருக்கக்கூடாது. காரணம் என்று வந்தால் அது வியாபாராமாகி விடும். இறைவனிடம் எதைக் கேட்டாலும் அது வியாபாரம் தான்! ஏதோ ஒன்றுக்கொன்று கொடுப்பது போல,செல்வத்தைக் கொடு, பக்தி செய்கிறேன், என்று இறைவனிடம் பரிமாறிக் கொள்வதனால் வியாபாரமாகிவிடும். அப்படியில்லாமல் எதையுமே நினைக்காது, ஈஸ்வரனிடத்தில் போய் சேருவதையே நினைத்து தன்னை அறியாமல் ஓடுகிற சித்த விருத்தி இருக்கிறதே, அதற்கு தான் பக்தி என்று பெயர்.
கோயில்களில் மணியடிப்பது எதற்காக?

மணிச்சத்தம் அதிரும் போது ஓம் என்ற பிரணவம் எழும். ஆத்மார்த்த சிந்தனையுடன், இறைவனுடன் கருத்தொமிருத்து கேட்டால் இந்த நாதத்தைக் கேட்கலாம். இதற்கு எல்லாம் நானே என்பது பொருள். இருப்பதெல்லாம் இறைவனே என்ற பொருளை உணர்த்துவதே மணிச்சத்தம்.
கோகுலாஷ்டமி அன்று கிருஷ்ணனை எவ்வாறு வழிபட வேண்டும்?

எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் பூமியில் தலையெடுக்கிறதோ அப்போதெல்லாம் நான் தோன்றுவேன். கொடியவர்களை அழித்து பக்தர்களைக் காப்பதற்காகவும், தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் யுகம்தோறும் அவதரிப்பேன், என்பது கீதைநாயகன் கிருஷ்ணரின் அருள்வாக்கு. இப்படியொரு நிலையைச் சீர்படுத்துவதற்காக துவாபரயுகத்தில் அவர் அவதரித்தார். தர்மநெறிதவறி நடந்த கொடிய அரசர்களிடம் இருந்து உலகைக் காப்பதற்காக குரு÷க்ஷத்திர யுத்தத்தை நடத்தினார். மகாபாரதம் என்னும் மகத்தான இதிகாசத்தில் இவருடைய வரலாறு இடம்பெற்றுள்ளது. முழுமுதற்கடவுளாகிய மகாவிஷ்ணுவே கிருஷ்ணராக வசுதேவரின் மகனாகப் பிறந்தார். யதுகுலத்தின் தலை வனான சூரசேனன் மதுராநகரை ஆட்சி செய்து வந்தார். அவரது மகனான வசுதேவர், தேவகர் என்பவரின் மகளான தேவகியை திருமணம் செய்து மகிழ்ச்சியில் திளைத்தார். தேவகியின் ஒன்று விட்ட சகோதரன் கம்சன். அவன் மகாகெட்டவன். உக்கிரசேனன் என்பவரின் மகன். தந்தையையே கொடுமைப்படுத்தியவன். ஆனால், தங்கை தேவகி மீது அன்பு கொண்டவன். அவன் புதுமணத்தம்பதியரை தேரில் அழைத்துக் கொண்டு வீதியில் வந்து கொண்டிருந்தான். அப்போது, ஆகாயத்தில் அசரீரி ஒலித்தது.

மூடனே கம்சா! உன் சகோதரிக்கு தேரோட்டிச் செல்கிறாயே! அந்தத்தங்கையின் எட்டாவது பிள்ளை உன்னைக் கொல்லப் போகிறான்! என்றது. கோபமடைந்த கம்சன், தங்கை என்றும் பாராமல் தேவகியைக் கொல்ல வாளை எடுத்தான்.  வசுதேவர் அவனிடம், கம்சா! உன் தங்கையால் உனக்கு ஒரு கெடுதலும் நேராது. அவளுக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளை உன்னிடமே ஒப்படைத்து  விடுகிறேன். அவர்களை நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள்!, என்று வாக்களித்தார். சமாதானமடைந்த கம்சன் அவர்கள் இருவரையும் சிறையில் அடைத்தான். அவர்களுக்குப் பிறந்த ஆறு குழந்தைகளை கம்சன் தன் கையாலே கொன்றழித்தான். பரம்பொருளான மகாவிஷ்ணு, ஏழாவது கர்ப்பத்தை வசுதேவரின் இன்னொரு மனைவியான ரோகிணியின் வயிற்றில் வளரச் செய்தார். அவரே, பலராமராக ஆயர்பாடியில் பிறந்தார். மகாவிஷ்ணு, எட்டாவது குழந்தையாக ஆவணி மாதம் அஷ்டமி நாள் நள்ளிரவில் வசுதேவர், தேவகி தம்பதியருக்கு குழந்தையாகப் பிறந்தார். அதே நேரத்தில் விஷ்ணுவின் மாயசக்தியான அம்பிகை, ஆயர்பாடியில் வசித்த நந்தகோபனுக்கும், யசோதைக்கும் மகளாகப் பிறந்தாள். வசுதேவரின் ஆத்ம நண்பராக விளங்கியவர் நந்தகோபன். குழந்தை பிறந்ததும், விஸ்வரூபம் எடுத்து தேவகி, வசுதேவர் தம்பதியருக்கு தெய்வீக வடிவத்தைக் காட்டியது. நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை மலர் ஒளிவீசின.

மஞ்சள்நிறப் பட்டாடை, ஸ்ரீவத்சம், கவுஸ்துபமணி ஆகியவையும் அவருக்கு அழகு செய்தன. சிறையில் இருந்த தேவகியும், வசு தேவரும் பரம்பொருளே தங்களுக்குப் பிள்ளை யாகப் பிறந்திருப்பதை அறிந்து மகிழ்ந்தனர். அவர் வசுதேவரிடம், தந்தையே! என்னை ஆயர்பாடிக்கு எடுத்துச் செல்லுங்கள். உங்கள் நண்பர் நந்தகோபரின் மனைவி யசோதைக்குப் பிறந்த யோக மாயா என்னும் பெண் குழந் தையை இங்கு கொண்டு வந்து விடுங்கள், என்று கட்டளையிட்டு,தன் தெய்வீகக்கோலத்தை மறைத்து,சாதாரணக் குழந்தையாக மாறினார். அப்போது சிறையின் கதவுகள் தானாகத் திறந்தன. காவலர்கள் தூக்கத்தில் ஆழ்ந்தனர். தனக்கு பிறந்த கண்ணுக்கு கண்ணான கண்ணனைத் தூக்கிக் கொண்டு வசுதேவர் ஆயர்பாடிக்குக் கிளம்பினார். அப்போது பலத்த மழை பொழிந்தது. ஆதிசேஷன், குழந்தை நனையாதபடி குடையாக வந்து நின்றார். யமுனை ஆறு இரண்டாகப் பிளந்து வழி விட்டது. அதை எளிதில் கடந்த வசுதேவர், நந்தகோபன்மாளிகையில் கண்ணனை ஒப்படைத்து விட்டு, யோகமாயாவை எடுத்துக் கொண்டு மதுரா வந்து சேர்ந்தார். கம்சன் குழந்தையைக் கொல்ல உள்ளே வந்தான். பெண் குழந்தை பிறந்துள்ளதை எண்ணி ஏமாந்தான். ஏனெனில், ஆண் குழந்தையால் மட்டுமே அவனுக்கு அழிவு ஏற்படும் என்பது அசரீரி வாக்கு. இருப்பினும், சந்தேகத்துடன் அந்தப் பெண் குழந்தையின் கால்களைப் பிடித்து சுழற்றி வானில் வீசினான். அவள் காளியாய் மாறி, உன்னைக் கொல்லப்பிறந்த கண்ணன் ஆயர்பாடிக்கு சென்று விட்டான், என்று எச்சரித்து மறைந்தாள். இவ்வாறு அநியாயத்தை ஒழிக்க அவதரித்த கண்ணன் பிறந்த நாளையே கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடுகிறோம். இந்நாளில் பாகவதம், பகவத்கீதை ஆகியவற்றை பாராயணம் செய்து பூரண அருள் பெறுவோம்.

எவ்வாறு வழிபட வேண்டும்: பொதுவாக குழந்தை கிருஷ்ணனுக்கு விருப்பமான பட்சணங்கள், வெண்ணெய், பால், திரட்டுப்பால், பழங்கள் ஆகியற்றை வைத்து, கிருஷ்ணன் காலடி வரைந்து வழிபடுவதே எங்கும் சகஜமாக இருக்கிறது. அறிவாற்றல், நற்புத்தி, நேர்மை, சமயோஜித புத்தி ஆகியவற்றின் மொத்த வடிவமான பகவானை வழிபட்டு அவர் காட்டிய கீதை வழி நடக்க முயற்சிப்பதே இப்பண்டிகையின் தத்துவார்த்தம்.
உங்களுக்கு பிடித்த சொல் பயமா? அபயமா?

அ என்ற முதலெழுத்துக்கு அபார சக்தி உண்டு. ஒரு வேலையைச் செய்கிறோம். திருப்தி என்றால் கேட்பதற்கே சந்தோஷமாக இருக்கிறது. அந்த வார்த்தையின் முன்னால் அ சேர்த்து விட்டால் முகத்தை சுளிக்க வைத்து விடுகிறது. இதுபோல பயம் என்ற சொல் மற்றவர்களிடம் நம்மைத் தலை குனிய வைக்கிறது. பயப்படுபவனை கோழை, நம்பிக்கையில்லாதவன் என்றெல்லாம் திட்டுகின்றனர். இவர்கள் இறைவனைச் சரணடைந்து விட்டால் அவன் பயம் என்ற சொல்லுடன் அ  வை சேர்த்து அபயம் அளித்து விடுகிறான். அதாவது, படைத்தவன் இருக்கான் பார்த்துக் கொள்வான் என்று செயல்பாட்டில் இறங்குபவர்களுக்கு பயமே இருப்பதில்லை. ஆக, அ என்ற எழுத்து செய்யும் வேலையைக் கவனித்தீர்களா! அதனால் தான் வள்ளுவர் திருக்குறளை அகர முதல எழுத்தெல்லாம் என்று ஆரம்பித்திருக்கிறார் போலும்!
கடவுளின் ஆயுதங்களை பூஜிப்பது சரியா?

ஆயுதங்களை தனித்து பூஜிப்பது இந்து மதத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த கலாசாரம். தீயசக்திகளை ஆயுதங்களைக் கொண்டே தெய்வங்கள் அழித்திருப்பதாக புராணங்கள் வாயிலாக அறிகிறோம். இந்த ஆயுதங்களை தெய்வமாக வழிபடுவதும், அரசனின் போர்வாளை அவ்வரசனாக எண்ணுவதும் மரபு. ராஜஸ்தான் பகுதி அரச பரம்பரையினர் மணமகன் இல்லாத போதும் கூட அவனது போர்வாளை மணமகனாக எண்ணி, மணமகளை மாலையிடச் செய்வர். இதுபோலவே முருகப்பெருமானின் வேலாயுதமும், பெருமாளின் சங்கு, சக்கரமும், சிவசக்தியின் சூலாயுதமும், இன்னும் பிற தெய்வங்களின் ஆயுதங்களும் பூஜைக்குரியவனாக அமைந்துள்ளது. இந்த அடிப்படையில் தான் ஆயுதபூஜை கொண்டாடுகிறோம்.
கோயிலுக்கு செல்ல இயலாதவர்களுக்கு மட்டும்!

வீடுகளில் விரதம் இருப்பவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கோயிலுக்கு செல்ல நேரம் கிடைக்காமல் இருக்கலாம். சிலருக்கு உடல்நிலை ஒத்துழைக்காது. இதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை. குத்துவிளக்கில் ஒரு முகம் அல்லது ஐந்து முகம் ஏற்றிவைத்து அதை மூன்று முறை வலம் வந்தாலே கோயிலுக்கு சென்று வந்ததாக பொருளாகும். ஆனால் இந்த சடங்கை கோயிலுக்கு செல்ல முடியாத பட்சத்தில் மட்டுமே செய்ய வேண்டும். கோயிலுக்கு செல்ல நேரமிருந்தும் வீட்டில் இந்த வழிபாட்டை செய்யக்கூடாது.
பாலுக்குள் இவ்ளோ இருக்கா?

பசுகள்  ஒன்றும் அறியாத ஜீவன்கள். அவற்றை பராமரித்து, அவற்றிடம் உள்ள பாலை பயன்படுத்தி, நல்ல பலனைப் பெறுவது எப்படி என்று உபதேசிப்பவன் கோபாலன். பால் என்றால் உள்ளம் என்று பொருள். முதலில் உள்ளத்தை பால் போல் சுத்தமானதாக்க வேண்டும். கோபாலனை அண்டி பக்தி என்னும் தீயில் அதை பதமாக காய்ச்ச வேண்டும். சாந்தத்தைக் கொண்டு உறை ஊற்றி தயிராக்க வேண்டும். இதயம் என்னும் குடத்தில் தயிர் ஊற்றி அது உறைந்ததும், பக்தியென்ற மத்தைக் கொண்டு கடைந்து, பூத்துவரும் வெண்ணெயைப் போன்ற அனந்தசயனனான பரமபுருஷனைக் காண வேண்டும். தயிரில் பால், வெண்ணெய், நெய் ஆகிய முப்பொருளும் அடங்கியிருந்தாலும், அவற்றை தக்க முறைகள் கொண்டே தனித்தனியாக்க முடியும் என்பது உண்மை. அதைப்போலவே நம் இதயத்தில் உறைந்திருக்கும் கடவுளை நாம் காண வேண்டுமானால், தக்க முயற்சிகள் எடுத்தால் தான் இயலும்.

-காஞ்சிப்பெரியவர்