வெள்ளி, 6 டிசம்பர், 2019

பாம்பன் சுவாமிகள்

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 1848ம் ஆண்டில் ராமேஸ்வரத்தில் சாத்தப்ப பிள்ளைக்கும், செங்கமலத்தம்மையாருக்கும் பிறந்தவர். இவரது இளம்பிராயத் திருப்பெயர் அப்பாவு. சேஷகிரிராயர் என்ற பெரியவர் இவருக்கு வைத்த பெயர் குமரகுருதாசர். சுவாமிகளின் சொந்த ஊர் ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் ஆனதால், அடியார்கள் இவரை பாம்பன் சுவாமிகள் என அழைத்துவருகிறார்கள். அவன் ஞான சொரூபனான கந்தவேலவனையே வணங்கி வந்தார். இருபது ஆண்டுகள் இல்லறத்தில் இருந்து பின்னர் துறவு மேற்கொண்டார். ஸ்ரீ அருணகிரிநாதரையே தன் ஞானகுருவாக கொண்டார். இறைவன் அருளால் இள வயதிலேயே முருகப்பெருமான் மீது பாடல்கள் இயற்றி பாட ஆரம்பித்தார். முத்தைத்தரு என்னும் தொடக்கம் அருணகிரியாருக்கு அருளியதுபோல், கங்கையை சடையில் பரித்து என்னும் தொடக்கம் முருகப் பெருமானால் சுவாமிகளுக்கு அருளப்பட்டது. முருகப் பெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு 6666 பாடல்களையும், 32 வியாசங்களையும் இயற்றி அருளினார். சுவாமிகளின் இந்த பாடல்கள் மந்திரங்கள் போல் சக்தி வாய்ந்தவைகளாக கருதப்படுகிறது. செவ்வேட் பரமன் அருளை நாடி இவர் பாடிய சிறப்புமிக்க பாடல்களால் இரண்டாவது அருணகிரி என்று இவரை அழைப்பதுண்டு. சுவாமிகள் ஒரு நாள் தம் நண்பர் அங்கமுத்து பிள்ளையிடம், தாம் துறவு பூணுவதற்கு பழநிக்கு செல்ல இருப்பதாக கூறினார். பழநிக்கு வர முருகப்பெருமானிடமிருந்து உத்தரவு கிடைத்ததா ? என்று கேட்ட நண்பரிடம், சுவாமிகள் ஆம் என்று பொய் சொன்னார்.

அன்று பிற்பகல் சுவாமிகள் அமிர்தமதி என்ற பாடல்களை பாடும்போது முருகப்பெருமான் அவர் முன் தோன்றி தனது வலக்கரத்து சுட்டுவிரலை நிமிர்த்து, அசைத்து, பல்லை கடித்து அச்சுறுத்தும்படி என் உத்தரவு கிடைத்து விட்டது என்று சொன்ன பொய் அனுமதி இல்லாதது என்று கோபித்துக் கொள்வதைக் கண்டுசுவாமிகள் நடுநடுங்கி, என் அய்யனே ! நில புலத்துக்கு ஆசைப்பட்டு நான் பொய் சொல்லவில்லை. துறவு நோக்குடன் பழநி வர இருந்ததால் ஆன்மலாபம் கருதியே அவ்வாறு சொன்னேன். தவறாக இருப்பின் பொறுதற்கருள்க என மனத்தினாலேயே விடை கூறினார். அதற்கு முருகப்பெருமான், இனி யான் வருக என்று கூறும் வரை பழநிக்கு நீ வரக்கூடாது. வருவதில்லை என்று கூறு என்று கூறினார். சுவாமிகள் அப்படியே என்று மனத்தினால் உரைத்திட இறைவன் மறைந்துவிட்டான்.  ஆன்மலாபம் கருதியும் பொய் புகலக்கூடாது என ஆறுமுகன் கோபித்ததை எண்ணி, அப்பெருமான் தன்னை பழநிக்கு வருமாறு அழைப்பான் எனஎதிர்ப்பார்த்து சுவாமிகள் ஏங்கினார். அந்த அழைப்பு அவரது இறுதிகாலம் வரை வரவில்லை. ஆகையால், சுவாமிகள் தன்வாழ்நாளில் எத்தனையோ தலங்களை சுற்றிவந்தும் பழநியம்பதிக்கு மட்டும் செல்லவில்லை. சத்தியம் தவறாதவர் அல்லவா?. இதுபோல் ஒரு நிகழ்ச்சி வேறு எந்த துறவியார் வாழ்விலும் நிகழவில்லை. இந்த நிகழ்ச்சி நடந்தது 1891ம் வருடம் ஆடிமாதம், சுக்கிரவாரம் ஆகும். சுவாமிகளின் அடியார்கள் அந்த நாளை நினைவு கூர்ந்து தாங்களும் சத்தியத்தை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக சத்தியத்திருநாளாக கொண்டாடி வருகிறார்கள்.

ஒரு மூர்த்தி வழிபாடே சுவாமிகளின் கொள்கையாகும். பிற மூர்த்திகளை வணங்கும்போது தான் வழிபடும் முருகனாகவே கருதி வழிபடும் கொள்கை பிடிப்பு கொண்டவர். அடியவர் வழிபாடு, ஆண்டவன் வழிபாட்டிற்கு நிகரானது என சுவாமிகள் உபதேசித்துள்ளார். பாடல்கள் பல இயற்றியதோடு, சைவ சமய சாரம், நாலாயிர பிரபந்த விசாரம், வேதத்தை குறித்த வியாசம் என்பது போன்ற ஞான சாத்திர நூல்களை படைத்துள்ளார். அவரது சண்முக கவசம்  ஒரு மந்திர மறையாக போற்றபடுகிறது. அன்றும், இன்றும் கோடிக்கணக்கான மக்களுடைய இன்னல்களை தீர்க்கும் மருந்தாக விளங்கி வருகிறது. இதை பாராயணம் செய்யாத முருக பக்தர்கள் யாருமிலர்.  பஞ்சாமிர்த அபிஷேகப் பிரியரான முருகனுக்கு அந்த அபிஷேகம் செய்ய வசதியில்லாதவர்களும், அந்த அபிஷேகப்பலனை பெறும் வண்ணம் பரிபூஜண பஞ்சாமிர்த வண்ணம் என்ற நூலை எழுதினார். இதைப்பாடி பயனடைந்தவர் பலர் உள்ளனர். இந்த மூன்று பாடல்களும் எங்கெல்லாம் பக்தியுடன் பாராயணம் செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் பன்னிரு கை பரமன் காட்சியளிப்பான் என்று சுவாமிகள் கூறுகிறார். 79 ஆண்டுகள் ஞான வள்ளலாக உலவி 30.5.1929ல் தம் திரு உருவை மறைத்து, சென்னை திருவான்மியூரில் மகாசமாதி அடைந்தார்.

மயூர வாகன சேவன விழா: முருகன் மீது சண்முக கவசம் உள்ளிட்ட 6666 பாடல்களைப் பாடிய அருளாளர் பாம்பன்சுவாமி. 1923, டிச.27ல் சென்னை தம்புச் செட்டித்தெருவில் குதிரை வண்டி மோதியதால் சுவாமியின் இடதுகால் முறிந்து போனது. அரசு  மருத்துவமனை மன்றோ வார்டில் அனுமதிக்கப்பட்டார். வயது 73 என்பதாலும், உப்பு சேர்க்காமல் உணவு உண்பவர் என்பதாலும், குணமாவது சிரமம் என்று அறுவை சிகிச்சை செய்ய மறுத்து விட்டனர்.  பாம்பன் சுவாமி தான் பாடிய சண்முககவசத்தை பாராயணம் செய்தபடியே இருந்தார். 1924, ஜனவரி 6 இரவில், மருத்துவமனையில் சேர்ந்த 11வது நாள் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. வானில் தோகை விரித்தபடி இருமயில்கள் ஆடுவதை சுவாமி கண்டார். இன்னும் 15 நாளில் குணமாகும் என்று அசரீரி ஒலித்தது. குழந்தை வடிவ முருகனும் சுவாமிக்கு காட்சியளித்தார்.  அதன்படி பூரணகுணமும் பெற்றார். சென்னை அரசு மருத்துவமனை 11வது வார்டு பதிவுக்கல்லில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது. இதன் அடிப்படையில், சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமி சமாதியில், ஆண்டுதோறும் மார்கழி வளர்பிறை பிரதமையன்று, மயூரவாகன சேவன விழாவை வாக மகா தேஜோ மண்டல சபையினர் நடத்துவர்.  அப்போது சுவாமி எழுதிய, அசோக சாலவாசத்தை வாசிப்பர். இதில்  அவரின் தெய்வீக அனுபவம் இடம் பெற்றுள்ளது.
சிகண்டினி

துருபதனின் மகளான சிகண்டினி இப்போது சிகண்டி! இந்த சிகண்டி அழகிய கந்தர்வன் வடிவில் அடுத்து நேராகச் சென்றது புத்புதகம் எனும் இடத்திற்கு தான்..! தன் தோற்றத்தை அளித்த கந்தர்வனே, அந்த இடத்திற்கு செல்ல அவனுக்கு வழி காட்டினான். புத்புதகம் வீரர்களை உருவாக்கும் இடம். குறிப்பாக எல்லாவித அஸ்திரங்களையும் பிரயோகிக்க கற்றுத் தரும் ஒரு இடமாகும். அந்த பயிற்சிகளைப் பெற்ற சிகண்டி, வெகு சிக்கிரத்தில் பெரும் வீரனாகி விட்டான். பெரும் வீரனாக மாறி கந்தர்வனுக்கான எழிலோடு ஒரு ஆண் வாரிசாக அவன் துருபத மன்னனை வந்து சந்தித்த போது துருபதனுக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு ஒரு அளவே இல்லை.இருந்தாலும் இப்போதும் பீஷ்மரை எண்ணி துருபதன் மனம் அச்சப்படவே செய்தது. ஆனால் அந்த அச்சத்தை சிகண்டி போக்கினான். தந்தையே... கவலையை விடுங்கள். விதிப்பாடு என்னை ஆளாக்கிவிட்டது. அந்த மாலையை நான் விளையாட்டாக அணிந்த வேளை இன்று நானொரு மாவீரன். என் வீரத்துக்கு எந்த நாளிலும் இழுக்கு ஏற்படப் போவதில்லை. தைரியமாக இருங்கள். என்று ஆறுதல் கூறினான்.

மகாபாரதத்தின் பெரும் வியப்பிற்கும் சிந்தனைக்கும் உரிய பாத்திரமே சிகண்டினியாக இருந்து பின் மாறிய சிகண்டி!மகாபாரத பாத்திரங்களில் சிகண்டியை போலவே பழிவாங்கவென்றே உருவான பாத்திரம்தான் திருஷ்டத்துய்மன்! பீஷ்மரால் சிகண்டி வந்தது போல, துரோணரால் வந்தவன் இவன்.அதாவது வில்வித்தையில் தலை சிறந்த அர்ஜுனன், ஏகலைவன் போன்ற பெரும் வில்லாளி களின் குருநாதரான துரோணரை பழி வாங்கவென்றே வேள்வி ஒன்றால் பெறப்பட்டவன். இவன் யாரோ அல்ல! பாஞ்சாலி எனப்படும் திரவுபதியின் சகோதரன். இவன் எப்படி வந்தான் என்று பார்ப்போம். துரோணரும், பாஞ்சால அரசன் துருபதனும் நல்ல நண்பர்கள். ஒன்றாக படித்தவர்கள். அப்போது துருபதன் துரோணரிடம், துரோணா! நாளையே நான் பாஞ்சால நாட்டுக்கு அரசனானாலும், உன்னுடனான நட்பை துளியும் பிரிய மாட்டேன். அதுமட்டுமல்ல! என்னுடையது அனைத்தும் உனக்கும் சொந்தம். நான் எதை அனுபவித்தாலும் அதில் சரிபாதி பங்கு உனக்கும் உண்டு. அந்த வகையில், எனது பாஞ்சால நாட்டை நான் ஆளத் தொடங்கும் போது உனக்கும் அதில் பாதியை அளித்து உன்னை அதற்கு அரசனாக்குவேன், என்று சத்தியம் செய்து கொடுத்திருந்தான். துரோணரும் அவனது நட்பின் சிறப்பை எண்ணி சந்தோஷப்பட்டார்.நாட்கள் கடந்தது. துருபதனும் பாஞ்சால நாட்டு மன்னன் ஆனான். அப்போது துரோணர் வறுமையின் பிடியில் இருந்தார். அவருக்கு அஸ்வத்தாமன் என்று ஒரு பிள்ளையும் பிறந்து அவனும் பெரும் வீரனாக வளர்ந்திருந்தான். இந்த நிலையில் தனக்காக இல்லாவிட்டாலும் தன் மகனுக்காக பாஞ்சால நாட்டில் பங்கு கேட்டு, துருபதன் முன் சென்று நின்றார். ஆனால் துருபதன் மிக மாறிவிட்டிருந்தான். அரச போகமும் யோகமும் அவன் கண்களைக் கட்டியிருந்தன. துரோணர் வரவும் முதலில் யார் என்றே தெரியாதவன் போல் நடந்து கொண்டான். பின் துரோணரை தெரிந்து கொண்டவன், அடடே, குருகுலத்து நண்பனா? வேதம் படிக்க வேண்டிய நீ இங்கே எங்கே வந்தாய்? என்று கிண்டலாகக் கேட்டான். துரோணருக்கு அப்போதே துருபதன் பழைய நண்பன் இல்லை என்பது புரிந்து விட்டது. இருந்தும் அவன் குருகுலத்தில் செய்து தந்த சத்தியத்தை நினைவுபடுத்தினார். அது நினைவுக்கு வரவும் துருபதனுக்கு சிரிப்புதான் வந்தது. துரோணா! உன்னை நினைத்தால் எனக்கு பரிதாபமாக உள்ளது. பள்ளிப் பிராயத்தில் ஏதோ விளையாட்டாக சொன்னதை இவ்வளவு உறுதியாகவா எடுத்துக் கொள்வது? பாஞ்சால தேசம் என்ன வெட்டித்துண்டு போட்டுத்தர அது என்ன பட்டுத்துணியா? தேசமப்பா.... தேசம்! இந்த தேசத்தை ஒரு க்ஷத்திரியனான நான் ஆளவே பெரும் பாடுபட வேண்டியிருக்கிறது.

நீயோ வேதியன். பரத்வாஜ முனிவரின் புத்திரன். தவம்புரிவதை விட்டுவிட்டு நாடாள ஆசைப்படுகிறாயே...! வேடிக்கையப்பா பெரும் வேடிக்கை....என்று இழுக்காக பேசி சிரித்தான். துரோணருக்கு கூச்சம் எடுத்தது. இருந்தும், துருபதா.... உன் சத்தியத்தை நம்பி நான் மோசம் போய் விட்டேன். சத்தியத்தை மதிக்காத பாவத்துக்கு ஆளாகாதே. வாக்கில் நில்.       உன்னைவிட என்னால் இந்த தேசத்தை நன்றாக ஆளமுடியும், என்றார்.  ஆனால் துருபதன் கேட்கவில்லை. மாறாக மேலும் அவரை இழிவுபடுத்தி வேண்டுமானால் உனக்கு பொற்காசுகளை பிச்சையிடுகிறேன். பொறுக்கிக் கொள், என்று கைநிறைய காசுகளை அள்ளி துரோணர் முன்வீசி எறிந்தான். எப்போதும் நாம் தாழ்வாக இருக்கும் பொழுதைக் காட்டிலும், உயர்வாக இருக்கும் பொழுதுதான் மிகவே கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நம் செயல்களாலேயே நாம் மோசமான வினையை தேடிக் கொள்ள நேரிடும். துரோணர் வரையில் துருபதன் நடந்துகொண்ட விதம் துரோணரை கோபத்தின் உச்சிக்கே கொண்டுசென்றது. துருபதா! உன்னை நான் சும்மாவிடமாட்டேன். வேதியன் என்றா என்னை இகழ்ந்தாய்...? வேதமும் கல்வியும் எப்படி இரு கண்களோ அப்படித்தான் எல்லாமே! நீ தர மறுத்த நாட்டை மட்டுமல்ல! உன்னையே நான் என் அடிமையாக்கிக் காட்டுகிறேன். அப்போது தெரியும் இந்த துரோணாச்சாரி எப்படிப்பட்டவன் என்று...என சபதம் போட்டுவிட்டு சென்று விட்டார்.அடுத்து அவர் ஒரு வனத்தில் சந்தித்தது பாண்டவர்களையும் கவுரவர்களையும் தான்!இருசாரரும் ஒரு இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தர்மரின் மோதிரம் அங்குள்ள கிணற்றில் விழுந்து விட்டது. அதை எப்படி எடுப்பது என்பது தெரியாமல் அவர்கள் விழித்து நின்றபோது, துரோணர் அந்த பக்கமாய் வந்தார். மோதிரம் விழுந்து விட்டதை அறிந்தவர், அர்ஜுனன் வசமிருந்த வில்லையும் அம்பையும் செலுத்தினார். அம்பின் நுனி மோதிரத்தை தன்னுள் பூட்டிக் கொண்டு துரோணர் முன் வந்து விழுந்தது. அதைக் கண்டு தர்மர் முதல் அவ்வளவு பேரும் ஆனந்தப்பட, அர்ஜுனன் துரோணரை அப்போதே தன் குருவாக வரித்துக் கொண்டான். பின், பீஷ்மரிடம் துரோணரை கொண்டு சென்று நிறுத்த அவர் இருசாரருக்கும் குருவாக துரோணரை நியமித்தார். துரோணரும் தான் அறிந்த அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்தார். ஒருநாள் அனைவருக்கும் அரங்கேற்றம் நிகழ்த்தப்பட்டது. அர்ஜுனன் ஒருபுறமும், துரியோதனன் மறுபுறமும் துரோணரிடம் தங்களது குருகாணிக்கை என்ன? என்று கேட்டனர். துரோணரும், நான் கேட்பதை நீங்கள் கட்டாயம் தருவீர்களா? என்று பலத்த பீடிகை போட்டார். அர்ஜுனன் வேகமாக முன் வந்து, குருவே! நான் என் உயிரைக் கூட தர சித்தமாக இருக்கிறேன், என்றான். அதைக் கேட்ட துரியோதனனும், குருநாதா.... நானும் ஒன்றும் அர்ஜுனனுக்கு சளைத்தவனில்லை. எதுவேண்டுமானாலும் கேளுங்கள்! தங்கள் காலடியில் அதை வைக்கிறேன், என்றான். அப்போது துரோணர் இருவரிடமும் கேட்டது ஒன்றைத்தான். அதுதான் துருபதனை ஒரு கைதியாக தன் காலடியில் கிடத்துவது என்பதாகும். ஒரு வினாடி இருவருமே அதிர்ந்தாலும், குருநாதரின் விருப்பத்தை நிறைவேற்றத் தயாராயினர்.

முதலில் துரியோதனன் துருபதன் மீது போர் தொடுத்தான். ஆனால், அதில் துருபதன் தான் வெற்றி பெற்றான். அடுத்து அர்ஜுனன் போர் தொடுத்தான். அவனுக்கு தர்மர், பீமன், நகுலன், சகாதேவன் என்று சகலரும் பெரிதும் உறுதுணை!போரில் அர்ஜுனன் வெற்றி பெற்றான். துருபதனைக் கைது செய்து தன் ரதத்திலேயே தூக்கிப் போட்டு இழுத்து வந்து துரோணரின் காலடி நோக்கி தள்ளி விட்டான். பின், குருநாதா! இப்போது உங்கள் காலடியில் கிடப்பது துருபதன் மட்டுமல்ல. இவனது பாஞ்சால தேசமும் தான்... நீங்கள் ஒருபாதியைதான் கேட்டீர்கள். ஆனால், முழு தேசத்தையே நான் இப்போது உங்களுக்கு அர்ப்பணித்து விட்டேன், என்றான்துருபதனுக்கும் தன் தவறு புரிந்தது. இருந்த போதிலும் பாண்டவர்களிடம் பிடிபட நேர்ந்து இப்படி காலில் விழுமளவு வந்தது மனதை ரணப்படுத்திவிட்டது. துரோணருக்கும் மனம் கசிந்தது. துருபதா.... என் பால் உனக்கு நட்பில்லாமல் போனாலும், என்னிடம் அது இப்போதும் உள்ளது. நீ செய்யத்தவறியதை நான் இப்போது செய்கிறேன். நீ தராத பாதி நாட்டை நான் உனக்கு தருகிறேன். பெற்றுக் கொள். இனியாவது அகந்தை கொள்ளாமல் தர்ம நெறிகளோடு வாழக் கற்றுக் கொள், என்று துருபதனுக்கு பாஞ்சால நாட்டின் வட பகுதியை தந்து அதற்கு அரசனாகவும் ஆக்கினார். தன் நாடு தனக்கே தானமாக வந்து சேர்ந்தது துருபதனை கொந்தளிக்க வைத்தது. அதுபெரும் கோபமாக மாறியது. அந்த கோபம் துரோணர் மேல்தான் திரும்பியது. துரோணரை வெற்றி கொண்டு பழிக்குபழிவாங்க துருபதன் மனது துடித்தது. துரோணரிடம் இருப்பதோ பிரம்ம தேஜோபலம்! தன்னிடம் இருப்பதோ க்ஷத்திரியபலம்.

க்ஷத்திரிய பலத்துக்கு, பிரம்ம தேஜோபலம் துளியும் ஈடாகாது என்பது துருபதனுக்கு புரிந்தது. இவ்வேளையில் தான் யாஜர், உபயாஜர் என்று இரண்டு பிரம்மரிஷிகளை துருபதன் பார்த்தான். அவர்களிடம் தன் ஆதங்கத்தைச் சொல்லி, பிரம்ம தேஜோபலத்தை வெல்லும் சக்தியை நான் பெற வழிகாட்டுங்கள், என்று கேட்டான். அவர்கள் சவுத்ராமணி எனும் யாகம் செய்யச் சொன்னார்கள். அப்படி ஒரு யாகத்தை உரிய முறையில் செய்தால் யாக பலனாய் மிகுந்த அழகும் அறிவும் வீரமும் உடைய புத்திரன் மட்டுமல்ல, புத்திரியும் தோன்றுவது நிச்சயம், என்றார் யாஜர். யாகமும் முறைப்படி நிகழ்த்தப்பட்டது. இந்த யாகத்தில் ஆகுதியை தேவர்களுக்கு அரசனும் அரசியும் சேர்ந்தே தர வேண்டும்.  ஆனால் துருபதனின் மனைவியான ப்ருஷதி, தான் இருக்கவேண்டிய இடத்தில் யாஜரையே தன்சார்பில் இருந்து யாகம்புரியச் சொன்னாள்.துருபதனும் யாஜரும் ஒன்றுபட்டு ஆகுதியை வழங்கவும். அந்த யாக நெருப்பில் இருந்து ஒரு அழகிய வீரன் வெளிப்பட்டான். அவன் வெளிப்பட்ட நொடியில் அசரீரி ஒலித்தது. இவனே துரோணருக்கு எமன். அவருக்கு நண்பனாகவும் திகழ்வான். இவனால் பாஞ்சால தேசம் நற்பெயர் பெறும், என்றது அந்த வாக்கு. இவனே திருஷ்டத்துய்மன்! ஜெயிக்க முடியாதவன் என்பது இதன் பொருள். திருஷ்டத்துய்மனைத் தொடர்ந்து அந்த யாகத்தில் அழகிய பெண்ணொருத்தியும் தோன்றினாள்! அவளே திரவுபதி.

வியாழன், 5 டிசம்பர், 2019

அம்பை, அம்பிகா, அம்பாலிகா

காசி ராஜனின் சுயம்வர மண்டபத்திலே பீஷ்மர்! அதைக்கண்ட அவ்வளவு அரசர் பெருமக்களிடமும் அதிர்ச்சி! அடுத்த அதிர்ச்சியாக பீஷ்மர் காசிராஜனின் மகள்களான அம்பை, அம்பிகா, அம்பாலிகா ஆகிய மூன்று பேரையும் தன் வாள் முனையில் மடக்கி ரதத்தில் ஏற்றி அஸ்தினாபுரத்திற்குப் புறப்பட்டு விட்டார். அந்த நாளில் அரசர்களிடையே, இப்படி கவர்ந்து மணம் செய்து கொள்வது அனுமதிக்கப்பட்டிருந்தது. இதை ராட்சஷ விவாகம் என்பார்கள். இதைப்போல, இன்னும் ஏழுவகைத் திருமணங்கள் இருந்தன. ஆனால், எந்த விவாகமாக இருந்தாலும்... அதில் அந்த பெண்ணின் விருப்பம் முக்கியம். பீஷ்மர் தன் தம்பியின் பொருட்டு, இம்மூன்று பேரையும் கவர்ந்து செல்வதைப் பொறுக்காமல், சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்த அரசர்கள் பீஷ்மரை எதிர்த்துப் போர்புரிய முற்பட்டனர். ஆனால், அவரின் வீரத்தின் முன்னால் அவர்கள் தெறித்து விழுந்தனர். சவுபல தேசத்தின் அரசன் சால்வன், கடத்தப்பட்ட அம்பையின் காதலன். அவன் மட்டும் விடாமல் பீஷ்மரின் ரதத்தை பின்தொடர்ந்தான். பாணங்களால் அவரை வீழத்தவும் முயன்றான். ஆனால், இறுதி வரை அவனால் முடியாமல் போயிற்று.ரதத்தில் இருந்த அம்பையும், சால்வன் தோற்று திரும்பச் செல்வதைக் கண்ணீருடன் பார்த்தாள்.

ஒருவழியாக பீஷ்மர், வருங்கால அஸ்தினாபுர ராணிகளுடன் அரண்மனை புகுந்தார். அந்த மூவரிடத்திலும் அப்போது தான் தன் தம்பி விசித்திர வீரியன் பற்றிக் கூறினார். இளவரசிகளே! உங்களை நான் என்பொருட்டு கவர்ந்து வரவில்லை. என்தம்பியும்,  அஸ்தினாபுரத்து அரசனுமான விசித்திர வீரியனுக்காகவே கவர்ந்து வந்தேன். உங்களால் எங்கள் வம்சம் விருத்தியடைந்து இந்த நாட்டு மக்கள் வாழ்வாங்கு வாழவேண்டும் என்று விரும்புகிறேன், என்றார். அவரின் கருத்தை அம்பிகையும், அம்பாலிகையும் ஏற்றுக் கொண்டனர். ஆனால், அம்பை பீஷ்மரைப் பார்த்துக் கண்ணீர் விட்டாள். பீஷ்மரே! நீங்கள் என் விஷயத்தில் அவசரப்பட்டு விட்டீர்கள். நான் சவுபல அரசன் சால்வனை விரும்புகிறேன். சுயம்வரத்தில் அவருக்கே மாலை சூட எண்ணியிருந்தேன். இதை அறியாமல் நீங்கள் என்னைக் கவர்ந்து வந்தது பெரும்பிழை. இது நீதியாகாது, என்றாள். பீஷ்மர் ஆடிப்போனார். அவர் துளியும் எதிர்பார்த்திராத நிலைப்பாடு. பெண்களிடம் சினேகம், அவர்களை ரசிப்பது, அவர்கள் தொடர்பான காதல் தொடர்பான உணர்வுகளுக்கெல்லாம் இடமே இல்லாத, சத்திய வாழ்வு வாழ்பவராக இருந்ததால், இப்படி ஒரு காதல் சிக்கல் உருவாகக்கூடும் என்பதை அவரால் யூகிக்க முடியாமல் போய்விட்டது.அம்பையின் கண்ணீரும், கோபமும் பீஷ்மரை சிந்திக்க வைத்தது. ஒரு முடிவுக்கு வந்தவராக, பெண்ணே நீ சால்வனை மணந்து கொள். உன் காதலை நான் கெடுக்கத் தயாரில்லை.

நீ போகலாம், என்றார்.அம்பைக்கு தன் காதல் தப்பி பிழைத்துவிட்ட சந்தோஷம். அதே சமயம் அம்பாலிகையும், அம்பிகையும் விசித்திரவீரியனை மணந்து கொண்டனர். அம்பை தன் காதலன் சால்வனின் நாட்டுக்கு ரதமேறி சென்றாள். ஆனால், பாவம்.....! அவள் வாழ்வில் விதி விபரீதமாக விளையாடத் தொடங்கியது. தன் முன் வந்து நின்ற அம்பையை ஏற்க அவன் மறுத்து விட்டான். உன்னை நான் எதிரியிடம் இருந்து வெல்ல முடியாதவனாகி விட்டேன். தர்மப்படி நீ பீஷ்மரின் உடைமையாகி விட்டாய். உன்னைக் கவர்ந்து சென்றவன் மணப்பது தான் நியாயம். உனக்கும் அது தான் அழகு, என்று சொல்ல அம்பைக்கு தலையில் இடி விழுந்தது போல் ஆனது. வேறு வழியின்றி மீண்டும் அஸ்தினாபுரத்திற்கே திரும்பினாள். பீஷ்மரிடம் நடந்ததைச் சொன்னாள். என்னை நீங்கள் கவர்ந்து வந்தபடியால், எவருமே என்னை மணம்புரிய மறுப்பார்கள் என்பது தான் இப்போது என்நிலை. எனவே, என்னைக் கவர்ந்து வந்த நீங்களே மணந்து கொள்ளுங்கள், என்றாள். பீஷ்மர் அவளிடம், அம்பா! நான் ஜிதேந்திரியன். இப்பிறப்பில் எவரையும் மணக்க மாட்டேன் என்று சத்திய பிரக்ஞை கொண்டிருப்பவன். அதனால், உன்னை மட்டுமல்ல யாரையும் நான் எண்ணத் தயாரில்லை. சால்வனின் கருத்து சரியாக இருக்கலாம். ஆனால், உன்னை நான் கவர்ந்தது நான் மணப்பதற்காக அல்ல. இந்த விஷயத்தை நீ அவனிடம் மீண்டும் சென்று சொன்னால் உனக்கு விமோசனம் பிறக்கும், என்றார்.

அம்பையும் அவர் சொன்னது போல செய்ய சால்வன் ஏற்கனவே சொன்ன பதிலையே திரும்பச் சொன்னான். மண்ணில் கைதவறி விழுந்த பதார்த்தத்தை திரும்ப எடுத்து உண்ண முயல்வது எப்படி இழுக்கான செயலோ.... அப்படித்தான் நான் உன்னை மணப்பதும் ஆகும். எனவே, என்னை மன்னித்து விலகிச் செல் , என்றான். சால்வனின் பதிலால் அம்பை விக்கித்துப் போனாள். நடுத்தெருவில் நிற்பவள் போல் ஆனாள். அம்பைக்கு ஏற்பட்ட இந்த ஏமாற்றம் அவளுக்குள் பெரும் கோபமாக உருவெடுத்தது. பீஷ்மரிடம் திரும்பிய அவள்,ஒரு பெண்ணாகிய என் பாவத்தை கொட்டிக் கொண்ட விட்ட உங்களைச் சும்மா விடமாட்டேன். நீங்கள் நினைத்தால் மட்டுமே மரணிக்கலாம் என்னும் வரம் பெற்ற உங்களுக்கு, என்னாலேயே மரணம் சம்பவிக்க வேண்டும் என்பதே இனி என் விருப்பம். அது சம்பவித்தே தீரும். அதற்காக நான் தவம் மேற்கொள்வேன், என்று சங்கல்பம் செய்து கொண்டவள் இமயச்சாரலை அடைந்து நெடிய தவத்தைத் தொடங்கினாள். எப்படி தெரியுமா? கால் கட்டை விரலை ஊன்றி, ஆக்ரோஷமும் பெரும் கோபமுமாய் அவள் செய்யத் தொடங்கிய தவம் 12 ஆண்டுகள் தொடர்ந்தது. அது தேவாதி தேவர்களை எல்லாம் கலக்கியது. விண்ணில் இருந்த இந்திரன் அவளின் தவத்தைப் பார்த்து வியந்தான். தனக்கு இணையான வீரரான பீஷ்மரை அழிக்க எண்ணி அவள் தவம் செய்ததால், அவனால் வரம் தர முடியவில்லை. இறுதியில், அம்பையின் தவம் முருகப்பெருமானையே வரவழைத்து விட்டது. முருகப்பெருமானும் அம்பை கோரிய வரமான பீஷ்மரைக கொல்லும் நேரடியாகத் தந்து விடவில்லை. தேவலோகத்து தாமரைப் பூக்களால் ஆன ஒரு மாலையை அவளிடம் தந்த முருகன், இதை எவன் ஒருவன் சூகின்றானோ, அவனே பீஷ்மனுக்கு காலன், என்று கூறி மாலையைத் தந்து விட்டு மறைந்தார்.ஆனால், அந்த மாலைக்குரிய கழுத்து அகப்பட வேண்டுமே? அதிலும், பீஷ்மாச்சாரியாரை எதிரியாகக் கருதி அவரைக் கொல்லும் எண்ணம் கொண்ட ஒரு அரசனும் அப்போது இல்லை. மேலும், அம்பைக்காக அவரை யாரும் பகைத்துக் கொள்ளவும் விரும்பவில்லை. அம்பை அந்த மாலையுடன் பல அரசர் பெருமக்களைச் சென்று பார்த்தாள். அதைச் சூடிக் கொள்பவருக்கு நான் அடிமை என்றும் சொல்லிப் பார்த்தாள். யாரும் உடன்படவில்லை.

இறுதியாக, பாஞ்சால அரசன் துருபதனை நாடி வந்தாள். இவன் யார் தெரியுமா?மகாபாரதத்தில் பிரதான நாயகியான திரவுபதி எனப்படும் பாஞ்சாலியின் தந்தை. அவன் பாஞ்சால தேசத்திற்கு அரசன் ஆனதே ஒரு ஆச்சரியமூட்டும் செய்தி. அவனது பிறப்பும் மிக விநோதமானது. அதை அறிந்தால் தான் துருபதன் என்னும் பெயர் காரணத்தை நாம் அறிய முடியும். இவன் பிறப்பை மட்டுமல்ல. இவனது மகளான சிகண்டினி பற்றியும் தெரிந்து கொண்டால் தான் அம்பையின் வாழ்வில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது நமக்கு தெரிய வரும். பாஞ்சால மன்னன் முதலில் புத்திரப்பேறு இல்லாமல் இருந்தான். அதற்காக காட்டுக்குச் சென்று தவத்தில் இறங்கினான். அரசர்கள் கடுந்தவம் புரிவது மிகவும் கடினம். அவர்களால் புலன்களை நெடுங்காலத்திற்கு அடக்கியாள முடியாது. துருபதனுக்கும் இதே போன்ற சோதனை இந்திர லோகத்து மேனகை வடிவில் ஏற்பட்டது. அந்த வனத்தில் இருந்த அபூர்வ ஜாதி பூக்களை பறித்துச் செல்ல அவள் வந்திருந்தாள். தவச்சிந்தனை கலைந்த துருபதன் அவளைப் பார்த்து விட்டான். அவள் மீது ஆசை கொண்டான். அந்த ஆசையின் விளைவாக அவனையும் அறியாமல் அவனது இந்திரியம் கீழே விழுந்தது. தன்னை மேனகை இழிவாக கருதி விடுவாளோ என்று எண்ணி அதனைக் காலால் மறைத்து விட்டான். இவை அனைத்தும் துரு என்னும் மரத்தின் கீழ் நிகழ்ந்தது. மேனகை சென்றதும், மன்னன் காலை விலக்கினான். அந்த இடத்தில் கர்ப்பத்தில் உருக்கொண்டது போல ஒரு குழந்தை. இதை கலியுகத்தோடு ஒப்பிடக்கூடாது. துவாபர யுகத்து தர்மத்திற்கேற்ப, இந்த சம்பவம் நிகழ்ந்தது. துரு மரத்தின் கீழ் கால் என்னும் பதம் பட்டு பிறந்த காரணத்தால், அந்த குழந்தை துருபதன் என்று பெயர் வந்தது. இந்த துருபதனைப் பார்க்கத் தான் அம்பை தேவலோகத்து மாலையுடன் வந்தாள்.

புதன், 4 டிசம்பர், 2019

ராகவேந்திரர் பகுதி மூன்று

பிராமன்ய தீர்த்தர் சொன்னபடியே அந்தத்தாய் கர்ப்பமானார். 1447, ஏப்ரல் 22 ஒரு புண்ணிய தினமாக இந்த உலகத்துக்கு அமைந்தது. ஆம்... அன்று தான் அந்த அற்புதக்குழந்தை பூமியில் அவதரித்தது. தீர்த்தர் சொன்னபடி பிறந்த அன்றே குழந்தையை ஆஸ்ரமத்தில் ஒப்படைத்து விட்டனர் பெற்றோர். குழந்தைக்கு எத்திராஜன் என்று பெயர் வைத்தார் தீர்த்தர். குழந்தையைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டார் தீர்த்தர். எத்திராஜனுக்கு ஆறு வயதானது. அவருக்கு உபநயனம் (பூணூல் அணிவிக்கும் சடங்கு) நடத்தப்பட்டது. அதன் பின் இரண்டே ஆண்டுகள். எட்டே வயதில் சன்னியாசமும் வழங்கப்பட்டு விட்டது. சன்னியாசம் பெற்ற எத்திராஜனின் பெயர் வியாசராயர் என மாற்றப்பட்டது. வியாசராயருக்கு மத்வாச்சாரியாரின் துவைத கருத்துக்கள் போதிக்கப்பட்டன. வியாசராயரும் அதை அக்கறையுடன் படித்தார். பின்னர் மேல் படிப்புக்காக மூலபஹல் என்ற ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவ்வூரில் ஸ்ரீ பாதராஜர் என்ற மகான் இருந்தார். அவர் சிறந்த கல்விமான். அந்தக் கல்விமானிடம் படித்த வியாசராயரும் பெரும் கல்வியாளர் ஆனார். அது மட்டுமல்ல! துவைதக் கருத்துக்களை மிகத்துல்லியமாக மற்றவர்களுக்கும் கற்பிக்கும் ஆற்றலைப் பெற்றார். இந்த நேரத்தில் வியாசராயரை வளர்த்து ஆளாக்கிய பிரமான்ய தீர்த்தர் முக்தி பெற்றார். அவருக்குப் பின் ஆஸ்ரமத்தை சிறந்த முறையில் நடத்த கல்விமானான வியாசராயரே தகுதியானவர் என அங்கிருந்தோர் கருதினர். மடத்தின் தலைவராக வியாசராயர் நியமிக்கப் பட்டார். பின்னர் அவர் நாடு முழுவதும் பயணம் செய்து துவைதக் கருத்துக்களை மக்களிடையே எடுத்துச் சொன்னார். அவரது கருத்துக்களை ஏற்ற பெரியவர்கள் எல்லாம் தங்கள் சொத்தையே ஆஸ்ரமத்துக்கு எழுதி வைத்தனர். அந்த மடம் வியாசராய மடம் என்று பெயர் பெற்றது. வியாசராயர் அந்தப் பணத்தைக் கொண்டு ஏராளமான ஆன்மிகப்பணிகளைச் செய்தார். நாடெங்கும் 700க்கும் மேற்பட்ட இடங்களில் ராமதூதனான ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்ய விக்ரகம் வடித்துக் கொடுத்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலிலுள்ள வழிபாட்டு முறைகளை நெறிப்படுத்திக் கொடுத்தார். 12 நூல்களை அவர் எழுதினார். வியாசராயரின் அரும்பணிகளும் ஒரு நாள் முடிவுக்கு வந்தன. துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள நவபிருந்தாவனத்தில் அவர் சமாதியடைந்தார். ஆக பிரம்மாவின் ஆணைப்படி மூன்று பிறவிகளையும் நிறைவு செய்து விட்டான் சங்குகர்ணன். இனி அவன் பிரம்மலோகம் சென்று விடலாம் என்று நினைத்திருந்தான். சங்குகர்ணன் அளவுக்கதிகமான புண்ணியம் செய்திருந்ததால் அதன் பலன் இன்னும் 700 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்து அனுபவிக்கும் அளவுக்கு மிஞ்சியிருந்தது. அதையும் இந்த பூமியில் பிறந்து மக்களுக்கு அருள் வழங்கிக் கழிக்கலாம் என முடிவெடுத்தான் சங்குகர்ணன். மாசில்லாத வானத்தில் வரும் வட்டநிலா போல பூமிக்கு வரத் தயாரானது அந்தச் செல்வம். 1519ல் கர்நாடக மாநிலத்தில் வேதசாஸ்திரங்களை அறிந்த கிருஷ்ணபட்டர் குடும்பத்தினர் வசித்து வந்தனர். பட்டர் சிறந்த இசைமேதையும் கூட. விஜயநகரப் பேரரசை நிறுவிய கிருஷ்ணதேவராயரே இவரிடம் தான் வீணை கற்றுக்கொண்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! அத்துடன் விஜயநகரப் பேரரசின் ஆஸ்தான கவியாகவும் விளங்கினார். கிருஷ்ணபட்டரின் மகன் கனகசாலபட்டரும் தந்தைக்கு சற்றும் குறையாத அறிஞராக விளங்கினார். கனகசால பட்டரின் வாரிசாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு திம்மண்ணா பட்டர் என்று பெயர் சூட்டினர். திம்மண்ணா துவைத சித்தாந்தத்தில் பெரும் மேதையாகத் திகழ்ந்தார். புலிக்கு பிறந்தது புலி என்பதை நிரூபிக்கும் வகையில், வீணை வாசிக்கவும் கற்றுக்கொண்டார். அது மட்டுமல்ல! வீணை இசை பெரிதா! இவர் குரலழகு பெரிதா என்று மற்றவர்கள் விவாதிக்கும் வகையில், பாடும் திறமையையும் பெற்றிருந்தார். ஆனால் என்ன துரதிர்ஷ்டமோ... தனது முன்னோரைப் போல திம்மண்ணா பட்டருக்கு அரசவைப்பதவி கிடைக்கவில்லை.

திம்மண்ணா பட்டருக்கு கோப்பம்மா என்ற பெண்மணியைத் திருமணம் செய்து வைத்தனர். இந்த சமயத்தில் விஜயநகரப் பேரரசுக்கு உட்பட்ட பகுதிகளில் மதக்கலவரம் ஏற்பட்டதால் அங்கு இந்துக்களால் வாழ முடியாத சூழல் ஏற்பட்டது. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருந்தது. சிறுமிகளுக்கும் வயதான பெண்களுக்கும் கூட பாதுகாப்பில்லாமல் போனது. எனவே இந்துக்கள் அங்கிருந்து வேறு இடங்களுக்கு இடம் பெயர வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாயினர். திம்மண்ணா பட்டருக்கு குருராஜ் என்ற மகனும், வெங்கம்மா என்ற பெண் குழந்தையும் இருந்தனர். பெண்ணைப் பெற்றவர் என்பதாலும் மனைவிக்கும் பாதுகாப்பு வேண்டும் என்பதாலும் திம்மண்ணா பட்டரும் தன் இருப்பிடத்தை மாற்ற முடிவெடுத்தார். தன் பாட்டனாரும், தந்தையும் சேர்த்து வைத்த நவரத்தினங்களையும், தங்கம், விலை உயர்ந்த ஆடைகளை எடுத்துக் கொண்டு அவர்கள் இந்துக்களின் புனித பூமியாகத் திகழ்ந்த தஞ்சாவூர் வந்து சேர்ந்தனர். தஞ்சாவூர் அருகே புவனகிரி என்ற கிராமம் இருந்தார். அங்கே திம்மண்ணா பட்டர் குடியேறினார். அங்கே பாதுகாப்பு கிடைத்ததே தவிர அன்றாடச் செலவுக்கு திண்டாட வேண்டியிருந்தது. விஜயநகரத்தில் இருந்து கொண்டு வந்த பொருட்களை விற்று செலவழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். செக்களவு பொன் இருந்தாலும் செதுக்கித் தின்றால் எத்தனை நாளைக்கு வரும் என்பது நம்மவர் சொல்லியிருக்கும் பொன்மொழி. திம்மண்ணா பட்டர் வீட்டில் இருந்த கஜானா காலியாகத் தொடங்கியது.

தொடரும்
ராகவேந்திரர் பகுதி இரண்டு

பாலிகனாகப் பிறந்த சங்குகர்ணன் கவுரவர்களுடன் இணைந்திருந்தாலும் கூட அப்போதும் சில புண்ணியங்களைச் சேர்த்துக் கொண்டான். மனிதர்கள் பாவம் செய்தாலும் சரி புண்ணியம் செய்தாலும் சரி! கன்மம் எனப்படும் இந்த இரு வினைகளால் ஏற்படும் பலன்களை அனுபவிப்பதற்காக பூலோகத்தில் மீண்டும் பிறக்க நேரிடும். அதனால் தான் பாவ, புண்ணியம் இரண்டும் கலந்த இந்த பிறவிச்சுழலில் இருந்து காப்பாற்றும் படி  இறைவனிடம் மகான்கள் வேண்டிக் கொள்வார்கள். பாலிகன் செய்த புண்ணியத்தின் விளைவை அனுபவிக்க அவன் பூலோகத்தில் பிறக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பல நூறு ஆண்டுகள் கடந்தன. கலியுகம் பிறந்தும் பல ஆண்டுகள் ஓடி விட்டன. மைசூர் மாநிலத்தில் (இப்போதைய கர்நாடகம்) அப்பூர் என்ற கிராமத்தை ஒட்டிய குக்கிராமத்தில் ராமாச்சாரியார் என்பவர் வசித்தார். இவருக்கு குழந்தை இல்லை. ராமாச்சாரியாரும் அவரது மனைவியும் மனம் நொந்து போய் இருந்தனர். ஒரு தம்பதிக்கு குழந்தை இல்லை என்றால் ஊரார் அவர்களைப் பற்றி வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவார்கள். குறிப்பாக உறவுக்காரர்கள் அந்தப் பெண்ணை மலடி என ஏசுவார்கள். அந்த ஆண்மகனை குடும்ப வாழ்வுக்கு லாயக்கற்றவன் என்பர். ராமாச்சாரியரும் இதற்கு விதிவிலக்கல்ல. கணவனும், மனைவியும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானார்கள். அந்த தம்பதியர் கண்ணீர் வடிக்காத நாளில்லை. அவர்கள் தங்கள் பிரச்னைக்கு தீர்வு வேண்டி பிரமான்ய தீர்த்தர் என்ற வைணவத்துறவியை அணுகினர். தீர்த்தர் சுவாமிகளுக்கு எங்கள் நமஸ்காரம். இவள் என் மனைவி நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் அவதிப்படுகிறோம். ஊராரும் உற்றாரும் எங்களைப் பற்றி பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மனம் நொந்து போயிருக்கிறோம். குழந்தை இல்லாதவர்கள் வாழ்வதை விட சாவதே மேல். மேலும் குழந்தை இல்லாதவர்கள் தங்களுக்கு சிரார்த்தம் முதலியன செய்ய ஆள் இல்லாததால் நரகத்திற்கு செல்வார்கள் என்கிறது சாஸ்திரம். நாங்கள் ஏன் வாழ வேண்டுமென நினைக்கிறோம். எங்களுக்கு குழந்தை பிறக்க வழியிருக்கிறதா? நீங்கள் தான் ஒரு யோசனை சொல்ல வேண்டும் என்றார்.

தீர்த்தர் ராமாச்சாரியரிடம் அன்பனே! கவலைப்படாதே. உனக்கு குழந்தை பிறக்கும் காலம் கனிந்து விட்டது. ஒரு ஆண் குழந்தை உனக்குப் பிறக்கும் என்றதும் தம்பதியர் உணர்ச்சிப்பிழம்பாகி விட்டனர். தீர்த்தரை சேவித்த அவர்கள் சுவாமி! இதென்ன அதிசயம்! நிஜமாகவா இது நிகழப்போகிறது! எங்களுக்கு குழந்தையா! அதிலும் ஆண் குழந்தையா! என்னே நாங்கள் செய்த பாக்கியம் என்று புன்னகையும் கண்ணீருமாகக் கேட்டவர்களுக்கு அடுத்து வார்த்தைகள் வர மறுத்தன. நா தழுதழுத்தது. மனிதர்களுக்கு மிதமிஞ்சிய மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சரி அல்லது சோகம் நிகழ்ந்தாலும் சரி! ஏனோ வார்த்தைகள் வர மறுக்கின்றன. பிரமான்ய தீர்த்தரே அவர்களது இந்த உணர்ச்சிவசப்படும் தன்மையைக் கண்டித்தார். ராமாச்சாரி! நீ ரொம்பவும் சந்தோஷப்படாதே. மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும் போதும் வேண்டாத நிகழ்ச்சிகள் நடக்கும் போதும் மனதை ஒரே நிலையில் வைத்திருப்பவனே சிறந்த மனிதன். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தெரியாத நிலையற்ற உலகில் நாம் வசிக்கிறோம் என்பதை மறந்து விடாதே. நல்லது நடக்கப் போகிறது என்பதற்காக மகிழாமலும், துன்பம் வரப்போகிறது என்பதற்காக கலங்காமலும் இருக்க வேண்டும் என சொல்லி விட்டு ராமாச்சாரி! இந்த அறிவுரையை நான் எதற்காக உன்னிடம் சொன்னேன் என்று உனக்குத் தெரியுமா? என்றதும் கேள்விக்குறியோடு தீர்த்தரின் முகத்தை அந்த தம்பதியர் ஒரு வித பயத்தோடு நோக்கினர். அத்துடன் தீர்த்தர் சொன்னதில் இருந்த நியாயத்தை உணர்ந்து தங்கள் மகிழ்ச்சியை ஒரு குட்டையைப் போல் சுருக்கிக்கொண்டு அவர் சொல்வதைக் கேட்க தயாராயினர். ராமாச்சாரி! உங்களுக்கு குழந்தை பிறக்கும். ஆனால் அந்தக் குழந்தை எனக்குரியது. குழந்தை பிறந்தவுடன் அவனை எனக்கு தத்துக் கொடுத்து விட வேண்டும் என்றார். இந்த நிபந்தனையைக் கேட்டதும் தம்பதிகள் விக்கித்துப் போனார்கள். சற்று முன் அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி நதியில் கரைந்த சர்க்கரை போல் ஆயிற்று. குழந்தை பிறந்தவுடன் சீராட்டி, பாலூட்டி வளர்க்க வேண்டும்.

குருகுலத்துக்கு அனுப்பி அவனுக்கு பெரிய படிப்பெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும் இளைஞன் ஆனதும் சிறந்த பெண்ணை அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். அந்த திருமணத்தை ஊரே வியக்கும் வகையில் பெரிய அளவில் நடத்த வேண்டும். பேரன், பேத்திகளுடன் மகிழ்ந்து விளையாட வேண்டும் என்றெல்லாம் கற்பனை செய்வது எல்லாப் பெற்றோர்களுக்கும் வாடிக்கை தானே! ஆனால் தீர்த்தர் தங்களுக்கு இப்படி ஒரு நிபந்தனை விதிக்க என்ன காரணம் என்று யோசித்தனர். சுவாமி! எங்களுக்கு குழந்தை பிறக்குமென தங்கள் திருவாக்கு மலர்ந்ததும் நாங்கள் மகிழ்ந்தோம். இப்போது இப்படி ஒரு நிபந்தனை விதிக்க காரணமென்ன? என அவர்கள் கவலையுடன் கேட்டனர். ராமாச்சாரி! கவலைப்படாதே! உங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தை சாதாரண குழந்தையல்ல. அவன் உலக இச்சைகளில் வாழ்வதற்காகப் பிறக்கவில்லை. மிகப்பெரிய புண்ணிய ஆத்மாவான அந்தக் குழந்தை சன்னியாச நிலை பெற்றுய்வதற்காக பிறக்கிறது. நீங்கள் அந்தக் குழந்தையை என்னிடம் ஒப்படைப்பதாக வாக்குறுதி அளித்தால் மட்டுமே உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லா விட்டால் இதுவும் சிரமமே! என்றார். உலகம் உய்வதற்காக ஒரு மகானைப் பெற்றுத் தரப்போகிறோம். அத்துடன் மலடி என்று ஊரார் சூட்டிய கொடுமையான பட்டத்தில் இருந்து விடுதலையும் கிடைக்கும். துறவியின் நிபந்தனைக்கு சம்மதித்து விட வேண்டியது தான் என முடிவெடுத்த அந்தத்தாய் சுவாமி! எனக்கு குழந்தை பிறந்தால் போதும் பிறந்தவுடன் தங்களிடமே ஒப்படைத்து விடுகிறேன் என்று கண்ணீர் மல்க கூறினார்.

தொடரும்
ராகவேந்திரர் பகுதி ஒன்று

பிரம்மலோகத்தில் பெரும் பிரளயமே நிகழ்ந்து கொண்டிருந்தது சங்குகர்ணா எனது படைப்புக்கலன்களில் இந்த மண் கலயம் உடைந்து கிடக்கிறதே ஏன் இதை என்னிடம் சொல்ல வில்லை! நீ வேலை செய்யும் லட்சணம் இது தானா பிரம்மன் கத்தினார். சங்குகர்ணன் நடுநடுங்கிக் கொண்டிருந்தான். மன்னிக்கவேண்டும் பிரபோ! தாங்கள் சத்திய லோகத்தில் அன்னை சரஸ்வதி யுடன் அளவளாவிக் கொண்டிருந்த வேளையில் தங்கள் படைப்புக்கலன்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தேன். இந்த மண் கலயத்தை மேல் தட்டில் அடுக்கி வைக்க முயன்ற போது கைதவறி விழுந்து உடைந்து விட்டது. தங்களிடம் இதை எப்படி சொல்வதென தெரியாமல் தவித்தேன். இதை உடைத்த தற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்றவனாய் காலில் விழுந்தான். பிரம்மனின் சீற்றம் தணிய வில்லை. ஏனடா! பணியில் இருப்பவன் எதிலும் கவனமாக இருக்க வேண்டாமா! மண் கலயத்தை தரையில் வைப்பது மற்ற உலோகக் கலன்களை மேலடுக்கில் வைப்பது என்ற பாலபாடத்தை கூட நீ அறியவில்லையாயின் எனது ஏவலாளாக இருக்கும் தகுதியை இழந்து விட்டாய். குறிப்பாக பக்தி மார்க்கத்தில் இருப்பவன் தன் கடமைகளை ஒழுங்காகச் செய்யத் தெரிந்தவனாக இருக்க வேண்டும். சோதனைகளைத் தாண்டும் வல்லமையுள்ளவனாக இருக்க வேண்டும். எனவே நீ பூலோகத்தில் கடவுள் என்றால் நான் தான் என தன்னைத் தானே பெருமை பாராட்டிக் கொண்டிருக்கும் ஒரு நாத்திகனின் மகனாகப் பிற. அவனோடு சேர்ந்திருந்து பல பாடங்களைக் கற்றுக்கொள் என்று சாபமிட்டார். பிரபோ! எனக்கு தாங்கள் தரும் தண்டனை கொடுமையானது. என்னை இங்கேயே அழித்து விடுங்கள். நான் சாம்பலாகவேனும் இந்த பிரம்மலோகத்தில் கிடக்கிறேன் எனக் கதறினான். அவனது கதறல் கேட்டு பிரம்மன் மனம் இரங்கினார்.

சங்குகர்ணா! காரணகாரியங்கள் இல்லாமல் எதுவும் நிகழ்வதில்லை. உலகவுயிர்களின் தலையெழுத்தை நிர்ணயிப்பவன் நானே! இத்தனை நாளும் எனது வேலையாளாக இருக்க வேண்டும் என்பது உன்விதி. இனி நீ பூலோகத்தில் இருக்க வேண்டும் என்ற எழுத்தை என்னாலோ மற்ற தேவர்களாலோ மாற்ற இயலாது. தலையெழுத்தை அனுபவித்தே தீரவேண்டும். நான் சொன்னபடி பூலோக சோதனையில் வெற்றி பெற்ற பின் என்னை மீண்டும் வந்தடைவாய் என்று ஆசி வழங்கினார். சங்குகர்ணன் அவருக்கு நன்றி தெரிவித்து நமஸ்கரித்தான். இந்நிலையில் பூலோகத்தில் இரண்யகசிபு என்ற மன்னன் ஆட்சி செலுத்தி வந்தான். வைகுண்டத்தைக் காவல் காத்த இவன் விஷ்ணுவை வழிபட வந்த முனிவர்களை அவமதித்ததால் அவரது சாபம் பெற்று பூமியில் மன்னனாகப் பிறந்தவன். அவன் செய்த தவறுக்கு நூறு பிறவி நல்லது செய்தோ அல்லது மூன்று பிறவிகள் நாராயணனுக்கு எதிராக தீமை செய்தோ மீண்டும் வைகுண்டத்தை அடையலாம் என்பது சாபம். காலம் குறைவாக இருந்ததால், கெட்டதை தேர்ந்தெடுத்தான் அந்த காவலன். அதன் பலனாக இரண்யனாக பிறந்து நாராயணனுக்கு எதிரான செயல்களைச் செய்து கொண்டிருந்தான். தானே கடவுள் என்று கூறி ஓம் இரண்யாய நமஹ என்றே நாட்டு மக்கள் சொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தான். அவ்வாறு சொல்லாதவர்களின் சிரம் துண்டிக்கப்படும் என்று கட்டளை போட்டான். இந்த கொடுமைக்கார மன்னனின் மகனாகப் பிறந்தான் சங்குகர்ணன். இப்பிறவியில் சங்குகர்ணனுக்கு பிரகலாதன் என்று பெயர் சூட்டப்பட்டது. பிரகலாதன் பிறவியில் இருந்தே நாராயண பக்தனாகத் திகழ்ந்தான். இது இரணியனுக்குப் பிடிக்க வில்லை. பெற்ற பிள்ளையைத் தன் வழிக்கு கொண்டு வர செய்த முயற்சிகள் வீணாயின. இறுதியில் நாராயணனை நேரில் வரச்செய்ய முடியுமா எனக் கேட்டபோது நாராயணன் நரசிம்ம அவதாரம் எடுத்து தூணிலிருந்து வெளிப்பட்டார். அவருடன் இரணியன் போரிட்டான். போரின் இறுதியில் அவன் மாய்ந்தான். பின்பு பிரகலாதனை நாராயண மூர்த்தி அந்நாட்டின் அரசனாக் கினார்.

பிரகலாதனின் காலத்தில் மக்கள் நிம்மதியுடன் வாழ்ந்தனர். அவன் அனுஷ்டிகம், சாத்வீகம் என்ற இருவகையான புண்ணியங்களைச் சேர்த்தான். அனுஷ்டிகம் என்பது தர்மம் செய்வதால் வரக்கூடியது. சாத்வீகம் என்பது ஹிம்சை செய்தவரிடமும் அஹிம்சையைக் காட்டுவதால் கிடைக்கக்கூடியது. முந்தைய புண்ணியத்தால் செல்வம் பெருகும். வாழ் நாள் கூடும். பிந்தைய புண்ணியம் பிறப்பற்ற நிலையை ஏற்படுத்தும் இரக்க மனம் கொண்ட பிரகலாதன் இரண்டு விதமான புண்ணியங்களையும் அளவுக்கதிகமாகச் சேர்த்து விட்டான். அவன் பிரம்மனை வணங்கி தெய்வமே! தாங்கள் எனக்கிட்ட சாபம் தீரும் காலம் வந்து விட்டதா? என மனமுருகிக் கேட்டான். பிரம்மன் அவன் முன்பு தோன்றி சங்குகர்ணா! நீ இப்பிறவியில் அளவுக்கதிகமாக புண்ணியத்தை சேர்த்து விட்டாய். இவ்வாறு புண்ணியம் செய்பவர்கள் அந்த புண்ணியத்திற்குரிய பலன்களை பூமியில் இருந்து அனுபவிக்க வேண்டும். உலகின் சுகமான இன்பங்களை அனுபவித்த பிறகே பிரம்மலோகம் வர முடியும் என்றார். சங்குகர்ணன் அவரிடம் சுவாமி! அப்படியானால் எனது புண்ணியங்களைத் தீர்க்கும் வழி யாது? என்றான். நீ அடுத்த பிறவியிலும் மன்னனாகவே பிறப்பாய். இப்பிறவியில் மகா விஷ்ணுவின் பக்தனாக இருந்த நீ அடுத்த பிறவியில் பாலிகன் என்ற பெயரில் பிறந்து அவருக்கு எதிராக செயல்படும் மக்களுக்கு ஆதரவாக இருப்பாய். எனவே உன் புண்ணியத்தின் பெரும்பகுதி கரையும். அதன் பிறகும் நீ சேர்த்த புண்ணியங்களின் விளைவை கலியுகத்தில் தான் தீர்ப்பாய் என்று அருள் பாலித்து மறைந்தார். பிரகலாதனாய் பிறந்த சங்குகர்ணன் இப்பிறவியில் பாலிகன் என்ற மன்னனாகப் பிறந்தான். கவுரவர்களின் நண்பனாக வேண்டிய சூழல் இவனுக்கு ஏற்பட்டது. குருக்ஷேத்திர யுத்தத்தில் இவன் கவுரவர்களுடன் சேர்ந்து பகவான் கிருஷ்ணரின் நண்பர்களான பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட்டு அழிந்தான். அடுத்த யுகமான கலியுகத்தில் பாலிகனின் அவதாரம் உலகமே வியக்கக்கூடியதாக இருந்தது.

தொடரும்

செவ்வாய், 3 டிசம்பர், 2019

பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா

ஹரே ராமா.... ஹரே கிருஷ்ணா !

ஜலதூதா எனும் பெயர் கொண்ட கப்பல், 1965 - ஆம் வருடம், இந்திய தேசத்திலிருந்து அமெரிக்கக் கரையை நோக்கிச் சென்றுகொண்டு இருந்தது. அதில், 69 வயது பெரியவர் ஒருவர், பயணம் மேற்கொண்டு இருந்தார். குடை, கைப்பை, சாப்பிடுவதற்குக் கொஞ்சம் தானிய வகை உணவுகள் மற்றும் பெட்டிகள் சிலவற்றில் புத்தகங்கள்; தவிர, 300 ரூபாய் மதிப்புள்ள ஏழு அமெரிக்க டாலர்கள்; இவையே அவருடைய உடைமைகள் !

அமெரிக்கக் கரையை நெருங்கிக்கொண்டிருந்தது கப்பல். தான் எதிர்கொள்ளவேண்டிய புதியதொரு சூழல் அவருக்குள் கவலையையும் மலைப்பையும் தந்தது ! கொண்டு வந்திருந்த பெட்டிகளில் ஒன்றினைத் திறந்து, நாட்குறிப்பேட்டை எடுத்தார். அன்றைய தினத்தின் பக்கத்தில், இன்று, என்னருமைத் துணைவன் கிருஷ்ணனிடம் உள்ளத்தில் இருப்பதைக் கொட்டித் தீர்த்தேன் என்று குறிப்பு எழுதினார். பிறகு, மண்டியிட்டுக் கண்கள் மூடி, கிருஷ்ணா, உனக்கு இங்கே ஆற்றவேண்டிய செயல்கள் ஏராளமாக இருக்கவேண்டும். இல்லையெனில் முற்றிலும் புதிதான இந்த பூமிக்கு என்னை ஏன் அழைத்துவந்தாய் ? நான் எளியவன்; சக்தியேதும் இல்லாதவன்; உனது பணியை நிறைவேற்ற எனக்குக் கருணை காட்டுவாயாக  என்று மனமுருகிப் பிரார்த்தித்தார். அவருக்குள் கண்ணனின் கருணை, வெள்ளமெனப் பாய்ந்தது. கிருஷ்ண பக்தி எனம் அமுதூற்று உலகளாவிய கிருஷ்ண விழிப்பு உணர்வு சங்கம் (இண்டர்நேஷனல் சொசைட்டி ஃபார் கிருஷ்ணா காண்சியஸ்நெஸ்) எனும் பெயரில் (இஸ்கான்), சிறு வித்தாய்த் தோன்றியது; பிறகு அதுவே பேரியக்கமாகப் பல்கிப் பெருகி, நாடுகளையும் கண்டங்களையும் தாண்டி, அனைவரையும் அரவணைத்தது ! இவை அனைத்துக்கும் அடிகோலிய அந்த முதியவர்... பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா ! 1896 ஆம் வருடம், கிருஷ்ண ஜன்மாஷ்டமிக்கு மறுநாள், செப்டம்பர் 1-ஆம் தேதியன்று, கொல்கத்தாவில்... கௌர் மோஹன் டே - ரஜனி டே ஆகிய வைணவத் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு, அபய் சரண் எனப் பெயரிட்டு, அன்புடன் வளர்த்தனர். தெய்வ பக்தியும், தேச பக்தியுமாக வளர்ந்தான், அபய் சரண். பள்ளிக் கல்வி முடித்ததும், கொல்கத்தாவில் ஸ்காடிஷ் சர்ச் கல்லூரியில் ஆங்கிலம், தத்துவம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் பட்டப் படிப்பை முடித்தான். ஆங்கிலத்தில் புலமை, தலைமையேற்று நடத்தும் திறமை, சம்ஸ்கிருதத்தில் பாண்டித்யம் என சிறந்து விளங்கினான் அபய் சரண். ஆனாலும் காந்திய வழியில், கதராடைகளையே உடுத்தி வந்தான். அது மட்டுமா ?! ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும்விதமாக, தன் படிப்புக்கு உரிய பட்டத்தையும் ஏற்க மறுத்தான் ! உரிய வயது வந்ததும், தந்தை சொல்படி, ராதா ராணி தத்தா என்பவளை மணந்தான்; அடுத்து ஆண் குழந்தைக்கும் தந்தையானான். ஆனாலும், ஆன்மிகத்தில் திளைப்பதிலும், ஸ்ரீ கிருஷ்ணரை நினைப்பதிலுமாக வாழ்ந்தான் அபய் சரண் ! 1922 - ஆம் வருடம் சுவாமி பக்தி சித்தாந்த சரஸ்வதி எனும் மகானைச் சந்தித்தான் அபய் சரண். அவரைத் தரிசித்த மாத்திரத்திலேயே வெகுவாகக் கவரப்பட்டு, அவரை தனது குருவாக ஏற்றான். அதுவே, அவனது வாழ்வின் மிகப் பெரிய திருப்புமுனை ! வேதங்கள், உபநிஷதங்கள் ஆகியவற்றில் உள்ள கருத்துக்களையும், சைதன்ய மகாபிரபுவின் ஸ்ரீகிருஷ்ண பக்தி சாரத்தையும், ஆங்கிலப் புலமையால், உலக மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும். என விரும்பினார் குருநாதர். அதன்படி, தனது வாழ்க்கையை அதற்காகவே அர்பணிக்க முடிவு செய்தார் அபய் சரண். அடுத்த சில வருடங்களில், பகவத்கீதைக்கு ஆங்கிலத்தில் உரை எழுதினார். அப்போது முதல், அபய் சரணின் ஆன்மிகப் பயணம், கிருஷ்ண பக்தி எனும் பாதையில் சீராகச் செல்லத் துவங்கியது. பரத கண்டத்தின் கலாசாரப் பொக்கிஷங்கள் அனைத்தும், அபய் சரணின் ஆங்கிலப் புலமையால், புத்தகங்களாக வெளிவந்தன; உலகெங்கும் பரவத் துவங்கின !

இவருடைய புலமை, மனித குலத்துக்கு ஆற்றி வரும் சேவை ஆகியவற்றின் காரணமாக, பக்தி வேதாந்த... பிரபுபாதா ஆகிய பட்டங்கள் இவரது பெயருடன் இணைந்தன. ஒரு கட்டத்தில், பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா என அனைவராலும் அழைக்கப்பட்டார். மனம் ஏற்காத சம்சார வாழ்வைத் துறந்தார். ஸ்ரீகண்ணன் லீலைகள் செய்த பிருந்தாவனத்தை, 1950-ஆம் வருடத்தில் தனது இருப்பிடமாக்கிக் கொண்டார் சுவாமிஜி. 59 - ஆம் வருடத்தில் தீட்சை பெற்று, காவியுடை அணிந்து, துறவறம் பூண்டார் பிரபுபாதா. ராதா தாமோதர் கோயிலும், கௌடியா மடத்திலும் வாழ்ந்துகொண்டே, உன்னிடம் எப்போது பணம் சேர்ந்தாலும், புத்தகத்தை வெளியிடு என்ற குருநாதரின் கட்டளைப்படி, தனது பக்தி இலக்கிய சேவையை முனைப்புடன் தொடர்ந்தார். சம்ஸ்கிருதம், ஹிந்துஸ்தானி போன்ற மொழிகளில் இருந்த பாகவத புராணம் முதலான அற்புதமான வைணவ கிரந்தங்கள், இவரது மொழிபெயர்ப்பில் விரிவான உரையுடன், ஆங்கில நூல்களாக வெளியாகின. கிருஷ்ண பக்தியை உலகெங்கும் பரவச் செய்யும் நோக்கில், 1965-ஆம் வருடம் கொல்கத்தாவில் கப்பலேறினார் பிரபுபாதா. கையில் அதிகம் பணமில்லை; வெளிநாட்டில் வரவேற்பாரும் இல்லை; உதவுபவர்களும் கிடையாது. நியூயார்க்கை அடைந்தவர், ஏழைகள் குடியிருக்கும் பகுதியில் பொது இடத்தில் ஓரு மரத்தடியில் காவியுடையும் நெற்றியில் சந்தனக் கீற்றுமாக அமர்ந்தார்; கையில் தாளத்தைத் தட்டிக்கொண்டே... ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே எனும் கிருஷ்ண நாமத்தைப் பாடத் தொடங்கினார். பாடலைக் கேட்டவர்கள் நின்றனர்; அருகில் வந்தனர்; அவர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமைகளின் லீலைகளையும் கீதையையும் பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில், ஆங்கிலத்தில் தெளிவாக எடுத்துரைத்தார். இதில் கிறங்கிப்போன பலரும், அவருடன் இணைந்து கிருஷ்ண நாமாவளியைப் பாடத் துவங்கினர். இப்படி எளிமையாய்த் துவங்கியதுதான் பிரபுபாதாவின் அமைப்பு ! தன்னை மதித்து அழைப்பவர் வீட்டில் தங்குவது, கொடுப்பதை உண்பது, பொது இடங்களில் கிருஷ்ணனின் நாமத்தைச் சொல்லி சொற்பொழிவு ஆற்றுவது என அவரது வாழ்க்கை முறை மாறியது.

அதுமட்டுமா ?! மது, போதை மருந்துகள், பாலியல் வன்முறைகள் எனச் சீரழிந்துகொண்டு இருந்த அமெரிக்க இளைஞர்களிடமும், யுவதிகளிடமும் பேசினார்; கிருஷ்ண பக்தி, நல்லொழுக்கம் மற்றும் நாம சங்கீர்த்தனம் ஆகியவற்றால் அவர்களைத் திருத்தி வெற்றி கண்டார். இதனால் பிரபுபாதாவின் புகழ் பரவியது. இவரது பக்தி இலக்கியங்களும் சொற்பொழிவுகளும் அனைவரையும் வசீகரித்தன. இதையடுத்து, 1966 - ஆம் வருடம், ஜூலை மாதம், நியூயார்க் நகரில், இஸ்கான் எனும் அமைப்பு உதயமானது. அடுத்து, சான்பிரான்சிஸ்கோ மற்றும் அமெரிக்காவின் பல நகரங்களிலும் இஸ்கான் கிளைகள் துவக்கப்பட்டன. ஸ்ரீகிருஷ்ணருக்கு ஆலயங்கள், பிரார்த்தனைக் கூடங்கள், கல்விச் சாலைகள், தொழில் மற்ணும் விவசாய மையங்கள் என கிளை பரப்பியது இஸ்கான் அமைப்பு. இங்கிலாந்தில் இந்த இயக்கத்தில், பீட்டில்ஸ் எனும் புகழ்பெற்ற பாப் இசைக் குழுவினர் இணைந்ததால், லண்டன் போன்ற முக்கிய நகரங்களிலும் இந்த இயக்கம் வேரூன்றியது. 1971-ஆம் வருடம் இந்தியா திரும்பிய பிரபுபாதா, இங்கேயும் பல நகரங்களில் ஸ்ரீகிருஷ்ணருக்கு அற்புதமான ஆலயங்களை அமைத்தார். நூற்றுக்கணக்கான ஆன்மிகப் புத்தகங்களை மொழிபெயர்த்தும் உரை எழுதியும் சேவையாற்றிய சுவாமியின் நூல்கள், இதுவரை 80-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ளன. இந்திய பக்தி இலக்கி யங்களைப்பிரசுரித்த வகையில், இன்றைக்கும் முன்னிலையில் நிற்கிறது இஸ்கான் அமைப்பு. உலகெங்கும் ஐந்நூறுக்கும் மேற்பட்ட மையங்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆலயங்களையும் கொண்டு விளங்கும் ஹரே கிருஷ்ண இயக்கத்தைத் துவக்கி வழி நடத்திய சுவாமி பிரபுபாதா, 77-ஆம் வருடம் நவம்பர் 14-ஆம் நாள், பிருந்தாவன மண்ணில், தனது வாழ்வை நிறைவு செய்துகொண்டார். எளிமையாக வாழ்ந்து, அரிதான செயல்களை நிகழ்த்தி, ஸ்ரீ கிருஷ்ண பக்தி சாம்ராஜ்ஜியத்தை உலகெங்கும் நிறுவிய சுவாமி பிரபுபாதாவை உலகமே போற்றுகிறது; கிருஷ்ண பக்தி இருக்கும்வரை, பிரபுபாதாவின் புகழும் இருக்கும்!
சித்திர புத்திர நாயனார்

அண்ட புவனங்களெங்கும் பாவபுண்ணியம் பலன் தெரியவேண்டிப் பரமசிவன் உமையம்மையார் மூலம் திருவிளையாடல் புரிய நினைத்தார்.

சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்துடன் பௌர்ணமியும் இணைந்த ஒருநாளில் அன்னை பார்வதிதேவி தன் கைதிறமையால் அழகான குழந்தை ஒவியத்தை வரைந்தார். அந்த ஓவியம் சாதராண ஓவியமாக இல்லாமல் நிஜ குழந்தை போல தத்ரூபமாக இருந்ததை கண்ட சிவபெருமான் பார்வதியிடம் “நீ வரைந்த இந்த ஓவியத்திற்கு உயிர் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.”என்று கூறி கொண்டே தன் கைகளால் அந்த ஓவியத்தை எடுத்து தன்னுடைய மூச்சிகாற்றை அந்த ஒவியத்தின் மேல் பதித்தார். ஈசனின் மூச்சி காற்று காற்று சில்லென்று ஓவியத்தில் பட்டஉடன் அந்த ஓவியத்தில் இருந்த குழந்தை உயிர் பெற்று சிரிக்க ஆரம்பித்து ஒரு அழகான குழந்தையாக வெளிவந்தது..இந்த அற்புதத்தை கண்ட பார்வதிதேவி மிகவும் மகிழ்ச்சியடைந்து“நான் வரைந்த குழந்தை ஒவியம் ஒரு நிஜ குழந்தையாக மாறியதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.நான் வரைந்த சித்திரம் குழந்தையாக மாறியதால் இந்த குழந்தைக்கு சித்திர குப்தன் என்றும் சித்திரபுத்திரன் என்றும் அழைக்கபடட்டும்” என்று ஆசி வழங்கினார்.சித்திரகுப்தன் தோன்றிய ஒவ்வொரு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் பௌர்ணமி அன்று சித்ரா பவுர்ணமி விழா எடுத்து சித்திரகுப்தரை வணங்குவது சிறப்பு.

சித்திர குப்தனுக்கு பதவி:ஒருநாள் யமதர்ம ராஜன் சிவபெருமானிடம்“இறக்கும் ஜீவராசிகளை அழைத்துவரும் போது அவர்கள் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களையும் தண்டனைகளையும் தர வேண்டும் என்பது நீங்களும் விஷ்ணுபகவானும் எமக்கு கட்டளையிட்டீர்கள்.ஆனால் யார் எவ்வளவு பாவ புண்ணியங்கள் செய்தார்கள் என்று எப்படி கண்டுபிடிப்பது?என்று தன் மன கவலையை தெரிவித்தார் யமதர்மராஜன்.அதற்கு சிவன் இதற்கான தீர்வை பிரம்மனிடம் சென்று கேள் என்றார்.உடனே பிரம்மா சக்திதேவியின் திருக்கரங்களால் வரையபட்ட ஒரு சித்திரம், சிவபெருமானின் அருளால் உயிர் பெற்று ஒரு ஆண் குழந்தையாக வளர்கிறது. அவன் பெயர் சித்திர குப்தன். சித்திர குப்தனை உன் யமலோகத்தில் முக்கிய பதவியில் அமர்த்துகிறேன்.அவன் உனக்கு உறுதுணையாக இருந்து, யார் எந்த அளவுக்கு பாவ பண்ணியங்கள் செய்கிறார்கள் என்பதை சித்திர குப்தன் கவனித்து கணக்கு எழுதுவான். அதனால் உன் மனகவலையை ஒழித்து உன் தர்மபடி பணி செய்.”என்று ஆலோசனை வழங்கினார் பிரம்மன் தேவர்.அதன்படி சித்திர குப்தனை உடனே அழைத்து, யமதர்மராஜனிடம் அறிமுகப்படுத்தினார் பிரம்ம தேவன்.பிரம்மனின் உத்தரவை ஏற்ற சித்திர குப்தன் தன்னுடைய ஒரு கையில் எழுதுபோலும் மறுகையில் எழுதுகோலுக்கு தேவையான மை நிறைந்த கிண்ணமும் ஏந்தி காட்சி தந்தார்.அன்றிலிருந்து இன்றுவரை பூலோகத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகள் செய்யும் ஒவ்வொரு பாவ புண்ணிய கணக்கை சித்திரகுப்தர் எழுதி வருகிறார்.

நமது பாவ-புண்ணியங்களை பொறுத்து சித்திர குப்தன் எழுதும் கணக்கின் அடிபடையில்தான் ஒவ்வொரு பிறவியிலும் நாம் அனுபவிக்கும் இன்பமும் துன்பமும் நிகழ்கிறது.அதனால் பாவம் செய்வதை கனவில் நினைக்காமல் இந்த பிறவியில் மட்டுமல்லாமல் எந்த பிறவியிலும் புண்ணியங்களை மட்டுமே செய்து“இது புண்ணிய ஆத்மா”என்று சித்திர குப்தன் அவரின் கணக்கு புத்தகத்தில் நம்மை பற்றி குறிப்பு எழுதிவிட்டால் அடுத்த பிறவி இல்லை அல்லது எந்த பிறவியிலும் துன்ப நிலை இல்லாமல் இறைவன் துணை இருப்பார்.சித்ரா பவுர்ணமி அன்று சிவலிங்கத்தை வில்வஇலைகளை அர்ச்சனை செய்தால் நம்முடைய புண்ணிய கணக்கு இரண்டு இரட்டிப்பாகும்.சித்ரா பவுர்ணமி அன்று சித்திர குப்தரை ஆலயம் சென்று வணங்க முடியாதவர்கள் அவருடைய படத்தை இல்லத்தில் வைத்து சர்க்கரை பொங்கல் படைத்து வணங்கி அத்துடன் அவருடைய கதைளை படித்து, அன்னதானம், விசிறி, குடை, செருப்பு போன்ற உங்களால் முடிந்த தான தர்மங்களை செய்தால் சித்திரகுப்தர் உங்கள் கணக்கில் நீங்கள் செய்த பாவங்களை குறைத்து, புண்ணியங்களை அதிகப்படுத்துவார். தர்மதேவதையின் அருட்பார்வையை உங்கள் பக்கம் திரும்பி பார்க்க வைப்பார். தர்மதேவைதை நம்மை பார்த்தாலே நாம் செய்யும் தான தர்மங்கள் பலமடங்கு பெருகும். நோய்நொடி இல்லாமல் எந்த பிறவியும் வளமாகும்.வாழ்வே இனிதாகும்.
வைணவத்தை வாழவைத்த ராமானுஜர்!

ராமானுஜர், 1017ம் ஆண்டு பிறந்து 1137 வரை 120 ஆண்டுகள் வாழ்ந்த மிகப்பெரிய மகான். ஜாதி, பேதமற்ற சமுதாயத்தை படைக்க அவர் வழிகாட்டினார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த திருக்கச்சி நம்பியை தனது குருவாக ஏற்றுக்கொண்டவர். உறங்காவில்லிதாசர் என்ற தாழ்த்தப்பட்ட சமுதாய மாணவரை தனது சீடராக ஏற்றுக் கொண்டவர். இவரது தந்தை ஆருலகேசவ சோமயாகி. தாய் காந்திமதி அம்மையார். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர். ராமானுஜர் தனது வீட்டிலேயே தங்கியிருந்து தன் தந்தையிடமே வேதங்களை எல்லாம் கற்று வந்தார். 16ம் வயதில் தனது தந்தையை இழந்தார். 17வது வயதில் தஞ்சம்மாளை தன் பார்யாளாக ஏற்றார். பின்பு யாதவப்பிரகாசர் என்பவரிடம் பாடங்களை கற்றார். பாடம் நடத்த பல்வேறு சமயங்களில், ராமானுஜருக்கும் யாதவப்பிரகாசருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும். இதனால் குருவுக்கு கோபம் வந்து, கொன்றுவிடவும் திட்டமிட்டார். இப்படித்தான் விசிஷ்டாத்வைதத்தின் விதை முளைத்தது. அதன்பிறகு திருக்கச்சி நம்பியிடம் மாணவராக சேர்ந்து விட்டார். இதையடுத்து ராமானுஜரின் பெயரும் புகழும் எல்லா இடங்களிலும் பரவியது. பிற்காலத்தில் தன் சொல் வன்மையாலும், இறைவனின் கருணையாலும் ஆயிரக்கணக்கானோரை வைணவ சம்பிரதாயத்தின் பால் ஈர்த்தார் ராமானுஜர். பின் விஷ்ணுதாசர்கள் இன்றும் போற்றி மகிழும் வேதாந்த சங்ரஹம், வேதாந்த சாரம், வேதாந்த தீபம், கீதா பாஷ்யம், கட்யத்ரயம் ஆகியவற்றை உலகுக்கு அளித்தார். கோயில்களில் பின்பற்றப்படும் திருவாராதனத்தை ஒழுங்குபடுத்தும் நித்யம் என்ற கிரந்தத்தையும் வகுத்தார்.

அப்போது ஸ்ரீரங்கத்தில் ஆளவந்தார் என்பவர் வாழ்ந்துவந்தார். அவர் காஞ்சிபுரம் சென்று ராமானுஜரை சந்தித்தார். வைஷ்ணவத்தை வளர்க்க ஒரு மகான் கிடைத்துவிட்டார் என்ற திருப்தி அவருக்கு ஏற்பட்டது. ஸ்ரீரங்கத்திற்கு வரும்படி ராமானுஜரிடம் ஆளவந்தார் கேட்டுக்கொண்டார். ஸ்ரீரங்கம் திரும்பியதும் ஆளவந்தாரின் உடல்நிலை மோசமானது. அவர் தனது சீடர் பெரியநம்பியை அனுப்பி ராமானுஜரை உடனடியாக ஸ்ரீரங்கத்திற்கு அழைத்துவரும்படி செய்தார். பெரியநம்பி காஞ்சி சென்று ராமானுஜருடன் ஸ்ரீரங்கம் திரும்பினார். அதேநாளில் ஆளவந்தார் பரமபதம் அடைந்தார். ஒருமுறை திருக்கச்சி நம்பியிடம் பெருமாள் தோன்றி, சன்னியாசம் பெற்ற ராமானுஜரை நல்ல ஒரு மடத்தில் வைத்து வேதம் கற்றுக்கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படியே ராமானுஜருக்கு பல்வேறு வேதங்கள் கற்றுத்தரப்பட்டன. அங்கு வந்த ராமானுஜரின் பழைய குருவான யாதவபிரகாசர், மாணவன் என்றும் பாராமல் ராமானுஜரின் கால்களில் விழுந்தார். தன்னைக் கொல்ல முயன்றவர் என்றும் பாராமல் அவருக்கு  கோவிந்தஜீயர் பட்டத்தை வழங்கினார் ராமானுஜர். எதிரியையும் நட்புடன் நடத்திய பெருமைக்குரியவர் ராமானுஜர். சிறிது காலம் கழித்து அவர் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார். ஸ்ரீரங்கம் கோயிலில் அவ்வூர் பிராமணர்கள் மிகுந்த ஆசாரசீலராக தங்களை காட்டிக்கொண்டதை ராமானுஜர் கண்டித்தார். நீங்கள் அத்தனை உயர்ந்தவர்களாக இருந்தால் ஸ்ரீ ரங்கநாதனை நீங்கள் சேவிக்கக்கூடாது. அவருக்கு நிவேதனம் செய்யபடும் பிரசாதத்தையும் ஏற்கக்கூடாது. தீண்டப்படாதவரான திருப்பாணாழ்வாரை அவர் தம்முடன் இணைத்துக்கொண்டதால் உங்கள் நோக்கப்படி ரங்கநாதனும் தீட்டு உள்ளவர்தான். அவர் அருகே செல்லாதீர்கள் என்று கண்டித்தார்.

இந்த அளவுக்கு ஜாதி வித்தியாசம் பாராமல் திட சித்தமுள்ளவராக இருந்து உலகில் இணையற்ற ஒரு மதத்தை ஸ்தாபித்து அருளிய ராமானுஜரின் புகழ் எங்கும் பரவியது. வைஷ்ணவம் எங்கும் பரவியது. இவ்வளவும் இருந்தது போக, அவருக்கு ஒரு குறையும் இருந்தது. அது தான் நாராயண மந்திரத்தின் பொருள் அறிவது. இதற்காக ஆளவந்தாரின் சீடரான திருக்கோஷ்டியூர் நம்பியிடம் சரண் புகுந்தார். ஆனால் நம்பியோ, ராமானுஜரை நம்பி மந்திரத்தின் பொருள் கூற மறுத்தார். ஸ்ரீரங்கம் திரும்பிய ராமானுஜர் சற்றும் மனம் தளரவில்லை. 17 முறை தொடர்ந்து ஸ்ரீரங்கத்திற்கும் திருக்கோஷ்டியூருக்கும் நடையாய் நடந்தார். அந்த பாதயாத்திரையின் பலன் 18வது சந்திப்பில் கிடைத்தது. ராமானுஜர் மீது இரக்கப்பட்டு திருமந்திரத்திற்கு விளக்கம் சொன்னார். அத்துடன் இதை வேறு யாருக்கும் வெளியிடக்கூடாது எனவும் நிபந்தனை விதித்தார். குருவின் கருத்தை புறக்கணித்த ராமானுஜர் நேராக திருக்கோஷ்டியூர் கோபுரத்தின் மீதேறி திருமந்திரத்தின் பொருளை இந்த உலகமே அறியும் படி உறக்க கத்தினார். இதனால் ஆத்திரமடைந்து நம்பி ராமானுஜரிடம் விளக்கம் கேட்டார். இந்த மந்திரத்தை அறிந்து கொள்வதால் ஆயிரக்கணக்கானோருக்கு வைகுண்டம் செல்ல வாய்ப்பு கிடைக்குமானால் நான் நரகம் செல்வதில் கவலையில்லை என்றார். ஆழ்வார்களின் தமிழ் பாசுரங்களை வடமொழி வேதங்களுக்கு இணையாக கருதும்படி செய்தார். பிறகு தனது சக்தி அனைத்தையும் ஸ்ரீபெரும்புதூரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரகத்தில் புகுத்திவிட்டு திவ்யமந்திரத்தை உச்சரித்தபடியே திருநாடு (பெருமாள் திருவடி) எய்தினார். இப்போதும் உடையவரின் திருஉடல் ஸ்ரீரங்கம் கோயிலில் அப்படியே உள்ளது.
மக்கள் சேவையே மகேசன் சேவை: சுவாமி சிவானந்தர்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம். மலேசியாவில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர் குறித்து, அந்த நாட்டு மக்கள் அதிசயத்துடன் பேசிக்கொண்டனர். அந்த மருத்துவர் பொருளீட்டியதை விட, ஏழைகளுக்கு இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த கட்டணம் வாங்கிக்கொண்டோ செய்த மருத்துவச் சேவையே அதிகம் ! வியாதியுடன் அவரிடம் வந்த அனைவருமே நோயிலிருந்து விடுபட்டுள்ளனர். அத்தனை கைராசியுள்ள மருத்துவர் அவர். ஆனால், மக்கள் அதிசயிக்க இவை எதுவும் காரணமல்ல ! மருத்துவத்தைச் சேவையாகப் பார்த்த அதே வேளையில், அவரது உள்ளத்தில் வேறொரு விநோத சிந்தனை குடி கொண்டிருந்தது. மக்களின் உடல் உபாதைகளை என்னால் தீர்த்து வைக்க முடிகிறது. ஆனால், இதனால் மட்டுமே அவர்களின் துயரங்கள் அனைத்தும் மறைந்துவிடவில்லை. வாழ்வில், நிம்மதியும் ஆனந்தமும் அவர்கள் அடைவதில்லை. ஆக வியாதிகளைக் குணமாக்குவது மேம்போக்கான தீர்வு. உலக பந்தங்களில் கட்டுண்டு உழலும் அவர்கள் உண்மையிலேயே விடுதலை பெறவும், ஆனந்த வாழ்வும் அவர்களின் ஆன்ம நலத்தைப் பேணுவதே சிறந்த வழி ! எனத் தீர்மானித்தார். இந்தச் சிந்தனையே, தமிழ் மண்ணில் தோன்றிய அந்த மருத்துவ நிபுணரை, மனித குலத்துக்கு நல்வழி காட்டிய மகானாக உயர்த்தியது. அவர்தான் சிவானந்த சரஸ்வதி. திருநெல்வேலி மாவட்டத்தில், பத்தமடை எனும் ஊரில் வருவாய்த்துறை அதிகாரியாகப் பணிபுரிந்த வேம்பு ஐயருக்கு, 1877-ஆம் வருடம், செப்டம்பர் 8-ஆம் தேதியன்று ஆண் குழந்தை பிறந்தது. குப்புஸ்வாமி என்று குழந்தைக்குப் பெயர் சூட்டி, அன்புடன் வளர்த்து வந்தார், வேம்பு ஐயர். எட்டயபுரம் ராஜா உயர்நிலைப்பள்ளியில் பயின்ற குப்புஸ்வாமி, கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்தவனாகத் திகழ்ந்தான்.

1903-ஆம் வருடம், மெட்ரிகுலேஷன் தேர்வில் சிறப்புறத் தேறினான். பிறகு, திருச்சியில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து, 1905-ஆம் வருடம், தஞ்சை மருத்துவக் கழகத்தில் பயின்று மருத்துவரானார். இந்தக் கால கட்டத்தில், அவரின் தந்தை இறந்துபோனார். குடும்பத்தில் நிதி நெருக்கடி ஏற்படவே, 1913-ஆம் வருடம், மருத்துவப் பணி செய்து சம்பாதிக்கலாம் என மலேசியா சென்றார் குப்புஸ்வாமி. வறுமை காரணமாக வேலையில் சேர்ந்தாலும், எளியோரின் துயர் போக்கும் பணியாகவே மருத்துவத் துறையைப் பார்த்தார் அவர். ஐரோப்பிய மருத்துவர்கள் சிலருடன் இணைந்து, மருத்துவமனை ஒன்றை நிர்வாகித்தார். பயனுள்ள மருத்துவ நூல்களையும் எழுதி வெளியிட்டார். இவரின் மருத்துவச் சேவையைப் பாராட்டி, லண்டனில் ராயல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பப்ளிக் ஹெல்த், ராயல் ஏஷியாடிக் கழகம் முதலான புகழ்மிக்க சங்கங்கள், அவரை உறுப்பினராக நியமித்துக் கௌரவித்தன. உடல் பிணி தீர்க்கும் மருத்துவம் பார்த்து வந்தவருக்கு, மக்களின் மன ஆரோக்கியம், ஆன்ம பலம் குறித்த சிந்தனை எழுந்தது. யோகா, தியானம் என இறைநிலையை நோக்கிய பயணத்தைத் துவக்கினார். 1923-ஆம் வருடம், இந்தியா திரும்பி, காசி, நாசிக், பண்டரிபுரம், ஹரித்வார் ஆகிய தலங்களில் அலைந்து திரிந்தார். பிறர் கொடுப்பதை உண்பது, கிடைத்த இடத்தில் உறங்குவது எனப் பற்றற்ற வாழ்க்கை நடத்தியவர், ரிஷிகேஷ் தலத்தில், சுவாமி விஸ்வானந்த சரஸ்வதி என்ற மகானிடம் உபதேசம் பெற்று, 1924-ஆம் வருடம் ஜூன் 1-ஆம் தேதி, சுவாமி சிவானந்த சரஸ்வதி எனும் திருநாமத்துடன் துறவறம் பூண்டார். இமயமலை அடிவாரத்தில், கங்கைக் கரையில் உள்ள ரிஷிகேஷில் பல வருடங்கள் தங்கி, ஆன்மிகப் பயிற்சிகளை மேற்கொண்டார்.

அவர் எடுத்திருந்த இன்ஷூரன்ஸ் பாலிசி ஒன்று முதிர்ச்சி அடைய, அதிலிருந்து வந்த பணத்தைக் கொண்டு, 1927-ஆம் வருடம், கங்கைக் கரையிலேயே மருத்துவ சேவை மையம் ஒன்றைத் துவங்கி, ஏழைகள், யாத்ரீகர்கள், சாதுக்கள் ஆகியோருக்கு இலவச சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். பிறகு, தாம் அறிந்து உணர்ந்த உண்மைகளை, ஆன்மிகப் பயிற்சிகளின் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தார். வட யாத்திரையை முடித்தவர், ராமேஸ்வரம், புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமம், திருவண்ணாமலை ஸ்ரீரமணாஸ்ரமம் ஆகிய தலங்களுக்கு விஜயம் செய்தார். பிறகு, மீண்டும் ரிஷிகேஷ் வந்தவர், 1934- ஆம் வருடம், மார்ச் மாதம், உபயோகிக்கப்படாத மாட்டுக் கொட்டகை ஒன்றில், ஆனந்தக் குடிசை எனும் பொருள்படும் ஆனந்தக் குடிர் எனும் எளிய ஆஸ்ரமத்தைத் துவக்கினார். பிறகு, மெள்ள மெள்ள சிகிச்சைகள், மருந்தகங்கள், ஆலயங்கள், தியான மையங்கள், ஆன்மிகப் பத்திரிகை அச்சகங்கள், புத்தக வெளியீட்டு மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய புனித வாழ்க்கை சங்கம் எனும் மிகப் பெரிய ஆன்மிகத் தொண்டு நிறுவனமாக அது வளர்ந்தது. சுவாமி சிவானந்தர் எழுதிய சுமார் 296 நூல்கள், பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலக மக்களுக்கு வழிகாட்டுகின்றன. ஆஸ்ரமத்துக்குக் கிடைக்கிற நன்கொடைகளை, மருத்துவச் சேவை, அன்னதானம் போன்ற தர்ம காரியங்களில் ஈடுபடுத்தி, பொருளாசையின்றி வாழ்வது குறித்து வாழ்ந்து காட்டினார். சுவாமிகள், தன்னை அறிந்துகொண்டு, விடுதலை பெறு, நல்லதைச் செய், அதை உடனே செய் எனும் எளிய போதனைகளால் மக்களின் மணம் கவர்ந்தார். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த சுவாமி சிவானந்த சரஸ்வதி, 1963-ஆம் வருடம், ஜூலை 14-ஆம் தேதி, கங்கைக் கரையில், இறைவனுடன் இரண்டறக் கலந்தார்.

திங்கள், 2 டிசம்பர், 2019

ராமகிருஷ்ணர் பகுதி -1

சத்தியம் தவறாத சுதிராமிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவ்வூரில் மிகப்பெரிய ஜமீன்தார் ராமானந்தர். அவரைப் பகைத்துக்கொண்டு யாராலும் வாழ இயலாது. அவ்வாறு பகைத்துக்கொண்டால் அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு சொத்துக்களைப் பறித்துக்கொண்டு ஊரைவிட்டே விரட்டிவிடுவார். இதே நிலைமைதான் இப்போது சுதிராமிற்கு ஏற்பட்டிருந்தது. சத்தியம் தவறாத உத்தமரான சுதிராம் கோல்கட்டாவிலிருந்து 120 கி.மீ. தொலைவில் அமைந்திருந்த தேரேய்பூர் கிராமத்தில் வசித்தார். அவரது முன்னோர்கள் புகழ்பெற்று விளங்கினர். ராமபிரான் அவர்களின் குலதெய்வம். இருந்தாலும் சிவபெருமானையும் வழிபடத் தவறுவதில்லை. 50 ஏக்கர் நிலத்திற்கு சுதிராமும், அவரது இரண்டு தம்பிகளும் சொந்தக்காரர்கள். ஏழைகளுக்கு இரக்கத்துடன் உதவுவார்கள். பிறர் துன்பம் கண்டு மனமுருகும் தன்மை கொண்டவர்கள். இக்குடும்பத்தின் புகழ் பக்கத்து கிராமங்களில்கூட பரவியிருந்தது. மாணிக்ராம் சட்டர்ஜி என்பவர்தான் இக்குடும்ப தலைவராக இருந்தார். அவரது மகன்தான் சுதிராம். சுதிராமிற்கு பிறகு நிதிராம், கனைராம் என்ற தம்பிகளும், ராம்சிலா என்ற தங்கையும் பிறந்தார்கள். இவர்களில் சுதிராம் பக்தியில் மிகுந்த நாட்டமுள்ளவர். ராமபிரானைத் துதித்துக்கொண்டே இருப்பார். காலையில் ராமனை வணங்கிய பிறகுதான் தண்ணீர்கூட குடிப்பார். தியாக உணர்வு மிக்கவர். உண்மை மட்டுமே பேசுவார். அவருக்கு இயற்கையாகவே ஆசைகள் மனதில் இல்லை. ஒழுக்கம் தவறி நடப்பவர்களைக் கண்டால் ஒதுங்கிப் போய் விடுவார். அவர்களைப்பற்றி வேதனையோடு பேசுவார். சாஸ்திர சம்பிரதாயங்களில் அதிக நாட்டம் கொண்டவர்.

அக்கால அந்தணர் மரபுப்படி, இளமையிலேயே அவருக்கு ஒரு சிறுமியை மணம் செய்து வைத்தனர். ஆனால், அச்சிறுமி மனைவி சில நாட்களில் இறந்து போனார். மீண்டும் இருபத்தைந்தாம் வயதில் சந்திரமணிதேவி என்னும் நற்குண மங்கையை மணம் செய்துகொண்டார். சந்திராவும் தன் கணவரைப் போலவே பக்திப்பிழம்பாக இருந்தார். கள்ளம் கபடமற்றவர். பிறரது துன்பங்களை வலியச்சென்று ஏற்றுக்கொள்வார். ஒரு சுமைதாங்கியாக அவர் திகழ்ந்தார். 1805-ல் இத்தம்பதியருக்கு ராம்குமார் என்ற மகன் பிறந்தான். 1810-ல் காத்யாயனி என்ற மகள் பிறந்தாள். இதன்பிறகு 16 ஆண்டுகள் கழித்து ராமேஸ்வர் என்ற மகன் பிறந்தான். மூத்தவர் என்ற முறையில், குடும்பப் பொறுப்பு சுதிராமின் கைவசம் இருந்தது. உழைப்பில் வல்லவரான அவர் குடும்பத்திற்காக ஏராளமான சொத்துக்களைச் சேர்த்தார். செழுமைக்கு பஞ்சமில்லை. ஆனால், இந்த அழகிய குடும்பத்தின் மீது யார் கண்பட்டதோ; அல்லது சுதிராம் ராமனின் பக்தர் என்பதால், இயற்கையாகவே துன்பம் ஆட்கொண்டதோ தெரியவில்லை. அவரது குடும்பத்திற்கு வந்தது சோதனை. அப்போது தேரேய்பூர் கிராமம் ஜமீன்தார்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு இருந்தது. அவர்கள் பிரிட்டிஷ்காரர்களுக்கு மொத்தமாக வரியை கட்டிவிட்டு கிராமத்தை தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வருவார்கள். அவர்கள் வைத்தது தான் சட்டம். அவர்கள் விதித்தது தான் வரி. தேரேய்பூர் கிராமம் ராமானந்தராய் என்ற ஜமீன்தாரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அவர் பெரும் கொடுமைக்காரர்.

அவ்வூரில் வசித்த ஏழை ஒருவன் அவரது கட்டளைக்கு கீழ்ப்படிய மறுத்தான். அவன்மீது பொய்வழக்கு தொடர்ந்தார் ராய். தனது வழக்கிற்கு சாட்சிகளை அவர் தேடவேண்டி வந்தது. அவ்வூரிலேயே சத்தியவான் என கருதப்பட்டவர் சுதிராம். எனவே அவரை சாட்சிசொல்ல அனுப்பினால், அந்த சாட்சியம் நியாயமானதாகக் கருதப்பட்டு, ஏழைக்கு தக்க தண்டனை கிடைக்கும் என அவர் நம்பினார். சுதிராமிற்கு ஆள் அனுப்பினார். நான் சொல்வதை நீ கேட்க வேண்டும். அந்த ஏழைக்கு எதிராக நீ நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வேண்டும். அவ்வாறு செய்தால் நான் உனக்கு வேண்டிய வசதி செய்து தருகிறேன் என்றார். சத்தியம் தவறாத சுதிராம் இதற்கு மறுத்தார். ஏய் சுதிராம்! நீ சாட்சி சொல்ல மறுத்தால் அந்த ஏழையின் கதிதான் உனக்கும் ஏற்படும். உன்மீதும் பொய் வழக்கு போட்டு உன் சொத்துக்களைப் பறிப்பேன். உன் குடும்பத்தை நடுத்தெருவிற்கு கொண்டு வந்துவிடுவேன். நீ மட்டுமின்றி உனது சகோதரர்களும் அவர்களது குடும்பமும் தெருவிற்கு வந்துவிடும், ஜாக்கிரதை, என மிரட்டினார் ராமானந்தர்.

சுதிராம் அவரது மிரட்டலுக்கு பணியவில்லை. என்னால் ஒரு ஏழையின் குடும்பம் அழியக்கூடாது. என் குடும்பம் வேண்டுமானால் அழிந்து போகட்டும், என ஆணித்தரமாகச் சொல்லி விட்டார். தன் குடும்பமே அழியப்போகிறது என தெரிந்தும் சத்தியம் தவறக்கூடாது என்பதில் உறுதியாக நின்று விட்டார். ஆனால், அந்த ஜமீன்தாரின் செல்வாக்கின் முன் சாதாரண பணக்காரரான சுதிராமின் சத்தியம் எடுபடவில்லை. ராமானந்தர் நினைத்ததை சாதித்துவிட்டார். சுதிராம்மீது பொய்வழக்கு தொடுக்கப்பட்டது. அவரது வீடு, 50 ஏக்கர் நிலம் அத்தனையும் பறிமுதல் செய்யப்பட்டன. அவை ராமானந்தருக்கு சொந்தமாகிவிட்டன. தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த வீட்டை விட்டு குடும்பத்தினர் கண்ணீருடன் வெளியேறினர். ஊர்மக்கள் அவர்கள்மீது பரிதாபப்பட்டார்களே தவிர, ஜமீன்தாருக்கு பயந்து எவ்வித உதவியும் செய்ய முன்வரவில்லை. சுதிராமின் இரண்டு சகோதரர்களும் அவரவர் மாமனார் வீட்டிற்கு சென்றுவிட்டனர். 40 வயதே நிரம்பிய சுதிராம் மனைவி, குழந்தைகளுடன் நட்ட நடுரோட்டில் தத்தளித்து நின்றார். அப்போது ஒரு கரம் அவரது தோளைப் பற்றியது..