வெள்ளி, 1 நவம்பர், 2019

கந்தர் சஷ்டி கவசம்

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம்
நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்
கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும்
நிமலரருள் கந்த சஷ்டி கவசந்தனை

குறள் வெண்பா

அமரரிடர் தீர வமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவுஞ் செங்கதிர் வேலோன்
பாத மிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம்பாடக் கிண்கிணியாட
மையல் நடனஞ் செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலாலெனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா வெண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருக வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரஹண பவனார் சடுதியில் வருக
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹண வீரா நமோநம
நிபவ சரஹண நிறநிற நிறென
வசர ஹணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை யாளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாசாங் குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க
விரைந்தென்னைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரையுங் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளியையும்
நிலைபெற் றென்முன் நித்தமு மொளிரும்
சண்முகன் தீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன்தினம் வருக
ஆறுமுகமும் அணிமுடி யாறும்
நீறிடும் நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியும் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழுகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நண்மணி பூண்ட நவரத்தின மாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயி றுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்
இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செகண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதனென்
றுண்டிரு வடியை உறுதியென் றென்னும்
என்றனை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேலிரண்டும் கண்ணினை காக்க
விழிசெவி யிரண்டும் வேலவர் காக்க
நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனை பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை யிரத்தின வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண் குறியிரண்டும் அயில்வேல் காக்க
பிட்டமிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வடிவேல் காக்க
பனைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிர லடியிணை அருள்வேல் காக்க
கைக ளிரண்டும் கருணைவேல் காக்க
முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க
பின்கை யிரண்டும் பின்னவ ளிருக்க
நாவிற் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பா நாடியை முனைவேல் காக்க
எப்பொழுதும் யெனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பக றன்னில் வச்சிரவேல் காக்க
அரையிரு டன்னில் அனையவேல் காக்க
ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியி நோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை யகல
வல்லபூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைக டின்னும் புழக்கட முனியும்
கொள்ளிவாய் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமரா க்ஷதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலு மிருட்டிலும் எதிர்படு மன்னரும்
கனபூசை கொள்ளும் காளியோடனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டா ளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட
ஆனை யடியினில் அரும்பாவைகளும்
பூனை மயிரும் பிள்ளைக ளென்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோரும்
ஓதுமஞ் சணமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டலறி மதிகெட்டோடப்
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுட னங்கம் கதறிடக் கட்டு
கட்டி யுருட்டு கைகால் முறியக்
கட்டுக் கட்டுக் கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதிற் செதிலாக
சொக்கு சொக்கு சூர்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடுவிடு வேலை வெகுண்டது வோடப்
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந்தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடுத்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுட னிறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலைஷயங் குன்மம் சொக்கச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
பக்கப் பிளவை படர் தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீயெனக் கருள்வாய்
ஈரே ழலகமும் எனக்குற வாக
ஆணும் பெண்ணும் அனைவரு மெனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
உன்னைத் துதிக்க உன்றிரு நாமம்
சரஹண பவனே சையொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவமொழி பவனே
அரிதிரு மருக அமரா பதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பால குமரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்னாவிருக்க யானுனைப் பாட
எனைத்தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினே னாடினேன் பரவசமாக
ஆடினே னாடினேன், ஆவினன் பூதியை
நேசமுடன் யான் நெற்றி யிலணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன் பதம் பெறவே உன்னரு ளாக
அன்புட னிரஷி அன்னமும சொன்னமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைகுற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத்துவசம்
வாழ்க வாழ்கவென் வறுமைக நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செய்யினும்
பெற்றவ நீகுரு பொறுப்ப துன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட வருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததை
காலையில் மாலையில் கருத்துட னாளும்
ஆசா ரத்துடனே அங்கந் துலக்கி
நேச முடனொரு நினைவது வாகி
கந்தர் சஷ்டி கவச மிதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே nஐபித்து உகந்து நீறணிய
அஷ்டதிக் குள்ளொர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங் கருளுவர்
மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரெட்டா வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரைப் பொடிப்பொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளம் அஷ்டலட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணிந்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத் தாட்கொள்ள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி
திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெற்றி புனையும் வேலே போற்றி
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே
மயில்நட மிடுவாய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரஹண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்.
---------------------------------------------------------------------------
திருக்களிற்றுப்படியார் பகுதி - 3

66 ஆதனமும் ஆதனியுமாய் நிறைந்து நின்றவனைச்
சேதனனைக் கொண்டே தெளிவுற்றுச் சேதனனைச்
சேதனனிலே செலுத்திச் சிற்பரத் தராய் இருப்பர்
ஏதமறக் கண்டவர்கள் இன்று.

தத்துவக் கூட்டங்களையே இருக்கையாகக் கொண்டு அவற்றில் விளங்கும் உயிர்களை நீக்கமறப் பொருந்தி இருக்கும் சிவபெருமானை அவனுடைய கருணை திருஉருவாய்க் காசியினில் தோன்றும் குருவினால் தெளிய அறிந்து அறிவுடைப் பொருளாகிய தம்மைப் பேரறிவாளனாகிய இறைவன் திருவடியிலே செலுத்திச் சிவபரமாகவே நிற்பார்கள். தமது குற்றங்களை அறுத்தவர்களாகிய சிவஞானிகள்.

ஆதனம் என்பது இருக்கை என்று பொருள்தரும். ஆதனி என்பது இருக்கையில் அமர்ந்தவரைக் குறிக்கும் தத்துவக் கூட்டங்களை இருக்கை யாகவும் அவற்றில் தங்கிச் செயல்படும் உயிர்களை இருக்கையில் அமர்ந்தவர் ஆகவும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். தத்துவக் கூட்டங்களிலும் அவற்றோடு பொருந்திய உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்திருப்பவன் சிவபெருமான். ஆயினும் அவற்றுள் தோய்வற்றும் நிற்கிறான். எனவே ஆதனமும் ஆதனியுமாய் நிறைந்து நிற்பவன் என்று இறைவனைக் குறிப்பிட்டார்.

பாடலில் சேதனன் என்ற சொல் மூன்று இடங்களில் வருகிறது. சேதனன் என்ற சொல்லுக்கு அறிவுடையவன் என்று பொருள் இச்சொல் ஒவ்வோரிடத்தும் ஒவ்வொரு பொருள் தந்து பாடலில் இடம் பெறுகிறது. முதலில் வருகிற சேதனன் என்ற சொல் பக்குவமடைந்த உயிர்களுக்கு மெய்ப் பொருளை உணர்த்த வந்த ஞான ஆசிரியனைக் குறிப்பிடுகிறது. இரண்டாவது வருகிற சேதனனை என்ற சொல் , உணர்ந்த உணரும் இயல்புபடையதாகி அறிவுடைப் பொருள் ஆகிய உயிரைக் குறித்தது. மூன்றாவது வருகின்ற சேதனனிலே என்ற சொல் பேரறிவினனாகிய சிவ பெருமானைக் குறித்தது. எனவே அறிவு வடிவாகிய ஞானாசிரியன் மெய்யுணர்வை உபதேசிக்க அதனைப் பற்றிக் கொண்டு உயிர்கள் அறிவே வடிவாகிய இறைவனிடத்தில் தம்மை முழுக்க ஆட்படுத்தி இருப்பர் என்ற திரண்ட பொருளை ஆசிரியர் உணர்த்துகிறார்.

இவ்வாறு தெளிவுற்று, அறிவினைச் சிவபரம் பொருளிடத்திலே செலுத்தியவர்கள் தன் முனைப்பு அற்று இறைவனுக்கு மீளா அடிமை பூண்டவர்கள் தம்முடைய உயிரைப் பிணித்த குற்றங்கள் எல்லாம் நீங்கப் பெற்று விளங்குவார்கள். ஏதம்  குற்றம்.

67 விரிந்தும் குவிந்தும் விழுங்குவர்கள் மீண்டும்
தெரிந்தும் தெரியாதே நிற்பர் தெரிந்தும்
தெரியாது நிற்கின்ற சேயிழைபால் என்றும்
பிரியாது நின்றவனைப் பெற்று.

உலகமெங்கும் நீக்கமற நிறைந்திருந்தும் உயிர் உணர்வுக்கு வெளிப்படாமல் இருக்கிற தன் திருவருளோடு நீக்கமின்றி நிற்பவன் சிவ பெருமான். அப்பெருமானுடைய அடியவர்கள் திருவருளின் வழி நின்று தற்போதம். இழந்தவர்கள். ஆகையினால் இறைவன் யாவற்றிலும் பரந்து நிற்கிறான் என்பதை உணர்ந்தும் தம்மை உணர்ந்து அதனுள் அடங்கியும் இறைவன் என்னும் பேரமுதை விழுங்கியும் திளைப்பார்கள். அந்நிலையில் யாவற்றையும் அறிந்து அறியாதவர் போல் எதனிலும் தோய்வற்று நிற்பார்கள்.

தெரிந்தும் தெரியாது நிற்கும் சேயிழை ஆகிய திருவருளின் வழியாக அவளை என்றும் பிரியாது நிற்கும் இறைவனைப் பெற்று விரிந்தும் குவிந்தும் விழுங்குவார்கள் ஆகிய அடியார்கள் அவனை அறிந்தும் அவனோடு ஒன்றுதலால் தன் முனைப்பு இல்லாது நிற்பர் என்று பொருள் கொள்வர். தெரிந்தும் தெரியாது நிற்கும் சேயிழை என்று திருவருளைக் குறிப்பதற்குக் காரணம் என்ன வெனின் எங்கும் நிறைந்த திருவருள் யாருக்கும் புலப்படாது நிற்றல் ஆதலின். மற்றொன்று யாவற்றொடும் பொருந்தி இருந்தும் அவற்றுள் எல்லாம் தோய்வற நிற்றலினால் என்க.விரிந்தனை குவிந்தனை விளங்கு உயிர் உமிழ்ந்தனை  எனத் தொடங்கும் திருஞான சம்பந்த நாயனார் தேவாரப் பாடல் ஆசிரியரால் எடுத்தாளப்பட்டுள்ளது. அநிந்து மகிழற்கு உரியது. விரிதல் சிவத்தோடு பொருந்தி வியாபகத் தன்மை அடைதல். குவிதல் உணர்வுகள் உலகத்துப் பொருள்களில் படராமல் சிவபரம் பொருளிடத்தே மட்டிலும் செல்லுதல். விழுங்குதல், பருகுதல் போன்ற ஆர்வத்தோடு சிவப் பேரின்பத்தை நுகர்தல், வழங்குகின்றாய்க்கு உன் அருளார் அமுதத்தை வாரிக்கொண்டு விழுங்குகிறேன்  என்று திருவாசகத்தின் அடைக்கலப்பத்தில் மணிவாசகப் பெருந்தகை அருளியது காண்க.

68 தாமடங்க இந்தத் தலமடங்கும் தாபதர்கள்
தாமுணரில் இந்தத் தலமுணரும் தாமுனியில்
பூ மடந்தை தங்காள் புகழ் மடந்தை போயகலும்
நாமடந்தை நில்லாள் நயந்து.

சிவதோடு ஒன்றிய சிவஞானச் செல்வார்கள் உள்ளதை உள்ளவாறு அறிவார்கள். அவர்கள் அறிவு தனக்கென அறியும் அறிவன்று ஆதலால் அவர்களின் ஞானத்தின் பயன் உலகத்தார் அனைவருக்கும் அறிவை விளக்கி நடத்திக் கொடுக்கும். அவகளின் அடக்கம்  உலகத்தார் அனைவருக்கும் பொறியடக்கத்தினைக் கற்பிக்கும். அத்தகைய ஞானிகள் வெகுளியை வென்றவர்கள். ஆயினும் ஏதேனும் ஒரு காரணத்தால் யாரேனும் இச்சீரியர்களுக்குச் சீற்றம் வருமாறு நடந்து கொண்டார் எனின், அச்சீற்றத்திற்கு ஆளானவர்களிடத்துத் திருமகள் தங்கமாட்டாள். புகழ் மடந்தையும் போய் அகலுவாள். நாமகளாகிய கல்வியும் அவர்களிடத்து நில்லாள்.

உணர்ந்தும் அடங்கியும் வாழுகின்ற சிவஞானிகள் ஒரு நாட்டில் இருப்பது நாட்டுக்கும் மக்களுக்கும் நலம் பயக்கும். அவர்கள் அறிவும் அடக்கமும் மற்றையோருக்கும் வழிகாட்டுவதால் அனைவரும் அப்பெருமக்கள் வழிப் பின்பற்றித் தாமும் அறிந்தும் அடங்கியும் ஒழுகிப் பயன்பெறுவர்.

அறுபகை செற்ற இச் சிவஞானியர் சிவத்தைக் கடிந்து வென்ற வர்கள் எனவே அவர்கள் யாரிடத்தும் எப்போதாயினும்  யாரே ஆயினும் அவர்களுக்கு சினமூட்டும் வண்ணம் தவறு இழைப்பார்கள் ஆயின் சிவ ஞானியர்க்கு ஓர் கணமே வெகுளி தோன்றி மின்னல்போல் மறைந்து விடும். எனவே தான் திருவள்ளுவர், குணம் என்னும் குன்பேறி நின்றார் வெகுளி, கணமேயும் காத்தல் அரிதுஎன்றார். நொடிப்பொழுதே ஆயினும்,விற்பிடித்து நீர் கிழிய எய்த வடுப் போல மாறுமே சீர் ஒழுகு சான்றோர் சினம் என்பது உண்மையே ஆயினும், அதனால் சின மூட்டிய வருக்கும் நேரும் கேடு அளவிடற்கரியது. தவறு இழைத்தவர்களுக்குச் செல்வம் அகலும் புகழ் அழியும் கல்வியும் நீங்கும் என்று சிவஞானியிரின் பெருமையை ஆசிரியர் எடுத்துரைத்தார்.

69 துரியம் கடந்தசுடர்த் தோகையுடன் என்றும்
பிரியாது நிற்கின்ற பெம்மான் துரியத்தைச்
சாக்கிரத்தே செய்தருளித் தான் செய்யும் தன்மைகளும்
ஆக்கியிடும் அன்பர்க்கு அவன்.

ஒளியே வடிவான அருட்சத்தியுடன் என்றென்றும் பிரிப்பின்றி நிற்கின்ற சிவபெருமான் தன்னிடத்து மீளாத அன்பு பாராட்டும் மெய் அடியார்களுக்குச் சிவப் பேரின்பத்தை அவர்கள் இவ்வுலகில் வாழ்கின்ற போதே வழங்கியருளுவான். அருள்பெற்ற அடியவர்கள் நனவு நிலையிலேயே துரிய நிலை எய்துவார் அந்நிலையில் சிவபெருமானின் திருவருட் செயல்கள் அவன் அடியார்களின் செயலாகவே நிகழும் வண்ணம் தன் திருவருட் சத்தியினை அவர்களிடத்துத் திகழச் செய்வான்.

இறைவன் உயிர்களின் சுட்டறிவிற்கும் சிற்றறிவுக்கும் எட்டாத நிலையிலே உள்ளவன் என்பதை துரியம் கடந்த...... பெம்மான் என்பதனால் உணர்த்தினார். யாவர்க்கும் அரியவனாகிய தன்னைப் பிரியாத திருவருட் சத்தியுடன் மெய்யடியவர்களுக்கு எளிவந்து அவர்களுக்கு உடனாய் நின்று அவர்களின் வாயிலாகத் தன் அருட்செயல்களை நிகழ்துவிப்பான். அப்போது மெய்யடியார்கள் நனவு நிலையிலேயே துரிய நிலை கைவரப் பெறுவார்கள். இறைவனின் ஆற்றல் அடியவர்களின் ஆற்றலாகவே விளங்கித் தோன்றும். சிவஞான சித்தியார் இப்பெருமக்களை சாக்கிரத்தே அதீதத்தைப் புரிந்தவர்கள் எனவும் சர்வ சங்க நிவர்த்தி வந்த போதனர்கள் எனவும் பராவு சிவர் எனவும் குறிப்பிட்டுப் போற்றும்.

இத்தகைய மெய்யடியார்கள் இறைவன் திருவருளால் நிகழ்த்திய அற்புதச் செயல்களை நால்வர் வாழ்க்கையில் நிகழ்ந்தவற்றை எடுத்துக் காட்டி இதனை அடுத்துவரும் நான்கு பாடல்களிலும் ஆசிரியர் விளக்குகிறார்.

70 ஓடம் சிவிகை உலவாக் கிழியடைக்கப்
பாடல் பனைதாளம் பாலை நெய்தல்  ஏடெதிர் வெப்பு
என்புக்கு உயிர் கொடுத்தல் ஈங்கிவைதாம் ஓங்கு புகழ்த்
தென்புகலி வேந்தன் செயல்.

தென்புகலி என்று புகழ் பெற்று ஓங்கிய சீர்காழிப்பதியிலே அவதரித்தவர் திருஞான சம்பந்தப் பெருமான். அவர் திருக்கொள்ளம் பூதூர் என்ற திருப்பதிக்குச் செல்லுங்கால் ஓடக்காரன் இல்லாமையால் ஓடத்தில் ஏறித் திருப்பதிகம் பாடி அக்கரை சேர்ந்தார். அவருடைய திருப் பாடல்களைக் கேட்டு நுகர்ந்த சிவபெருமான் அவருக்கு திருஅரத்துறையிலே முத்துச் சிவிகை ஒன்று வழங்கினான். அவருடைய தந்தையார் வேள்வி நடத்த விரும்பினார். திருஞானசம்பந்தர் திருவாவடுதுறைப் பெருமான் முன்னிலையில் இடரினும் தளரினும் எனத் தொடங்கும் திருப்பதிகத்தை  விண்ணப்பிக்க சிவபெருமான் எடுக்கக் குறையாத பொற்கிழி ஒன்றை அவருக்கு வழங்கினார் திருமறைக்காட்டில் மறைக்கதவம் அடைக்க சதுரம் மறைதான்  என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடினார். ஞான சம்பந்தர் தன்னுடைய மென்மலர்க் கைகளால் தாளம் இட்டுப் பாடியதைக் கே ட்ட இறைவன் திருக்கோலக்காவிலே அவருக்குப் பொற்றாளம் வழங்கினாள்.பாலை நிலமாக இருந்த திருநனிபள்ளியைத் தமது அருட் பதிகத்தால் நெய்தல் நிலமாக மாற்றினார். சமணரோடு நடந்த வாதிலே, திருஞானசம்பந்தர் இட்ட  திருப்பதிக ஏடு வெள்ளத்தைக் கிழித்துக் கொண்டு எதிர் ஏறிச் சென்றது. மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் வெப்பு நோயினால் துயருற்ற போது, திருஞான சம்பந்தர் திருநீற்றுப் பதிகம் பாடி நோய் தீர்த்தருளினார். மயிலாப்பூரிலே மட்டிட்ட புன்னையம் கானல் எனக் தொடங்கும் திருப்பதிகத்தை இசைக்க எலும்புகள் பெண் உருப்பெற்றுப் பூம்பாவையாக விளங்கும் அற்புதத்தைத் திருவருளால் நிகழ்த்தினார். இத்தகைய அற்புதங்கள் எல்லாம் திருஞானசம்பந்தர் நிகழ்த்திய செயற்கரிய செயல்களாகும்.

71 கொல்கரியின் நீற்றறையின் நஞ்சின் கொலை தவிர்த்தல்
கல்லே மிதப்பாய்க் கடல் நீந்தல்  நல்ல
மருவார் மறைக்காட்டில் வாசல் திறப் பித்தல்
திருவாமூ ராளி செயல்.

நடுநாட்டில் திருவாமூரில் அவதரித்தவராகிய திருநாவுக்கரசு நாயனார் சமணத்திலிருந்து சைவ  சமயம் திரும்பியதைப் பொறாத சமணர்கள் அக்காலத்து ஆண்டுவந்த பல்லவ மன்னனைத் தூண்டி அவருக்குப் பல இடையூறுகளை விளைவித்தார்கள் . திருநாவுக்கரசரை பட்டத்து யானையைக் கொண்டு தலையை இடற முயன்றனர். சுண்ணாம்புக் காளவாயில் இட்டும், பாற்சோற்றில் நஞ்சு கலந்து ஊட்டியும் கல்லிலே பிணித்துக் கடலில் இட்டும் ஆளுடைய அரசைக் கொல்ல முயன்றனர். இறைவன் திருவருளால் அப்பர் பெருமான் இந்தக் கொலை முயற்சிகளையெல்லாம் வென்றார். திருமறைக் காட்டில் மறைகள் பாடி அடைப்பித்த கதவை பண்ணின் நேர் மொழியாள் உமை பங்கரோ என்று தொடங்கும் திருப்பதிகம் பாடித் திறப்பித்தார். இவை இறைவன் திருவருளால் திருநாவுக்கரசு நாயனார் நிகழ்த்திய அற்புதச் செயல்கள்.

72 மோகம் அறுத்திடின் நாம் முத்தி கொடுப்பதென
ஆகமங்கள் சொன்ன அவர் தம்மைத் தோகையர்பால்
தூதாகப் போகவிடும் வன்றொண்டன் தொண்டுதனை
ஏதாகச் சொல்வேன் யான்.

சுந்தரமூர்த்தி நாயனார் புத்தூர் சடங்கவி சிவாச்சாரியர் திருமகளை மணப்பதற்காக மணக்கோலம் கொண்டிருந்த போது, சிவ பெருமான் கிழவேதியர் உருவில் வந்து அற்பதப் பழ ஆவணம் காட்டி அவரைத்தடுத்து ஆட்கொண்டார். அப்போது சுந்தரமூர்த்தி நாயனார்வன் மைகள் பேசி வாதாடியதனால் வன் தொண்டர் என்ற பெயரைச் சிவ பெருமான் அவருக்குச் சூட்டினான். அத்தகைய சிவபெருமான் உரைத்த ஆகமங்கள் மோகத்தை அறுத்தாலே இறைவன் முத்தி கொடுப்பான் என்று முழங்குகின்றன. ஆயினும் வன் தொண்டர் ஆகிய சுந்தர மூர்த்தி நாயனாரின் பொருட்டுப் பரவையார், சங்கிலியார் ஆகிய இருவரிடத்தும் சிவபெருமானே வன் தொண்டருக்காகத் தூது நடந்தான் அத்தகைய நம்பி ஆரூரரின் தொண்டுகளை என்னால் எவ்வாறு எடுத்துரைக்க இயலும்?

73 பாய்பரியோன் தந்த பரமானந்தப் பயனைத்
தூய திருவாய் மலராற் சொற்செய்து மாயக்
கருவாதை யாம் அறியாவாறு செய்தான் கண்டாய்
திருவாதவூர் ஆளும் தேன்.

வேதத்தினையே தனக்குரிய குதிரையாகக் கொண்டு அதன் மேல் தாவி ஏறி வருபவன் சிவபெருமான். அந்தப் பேரின்ப வெள்ளமாகிய பெருமானை தனது தூய திருவாயில் மலர்ந்த மலர்களாகிய சொற்களால் மாலை தொடுத்துச் சூட்டி அந்தப் பாமாலையை எம்போல்வார் மனம் கசிந்து ஓதுவதனால் அதன் பயனாக எமது பிறவிப் பிணியை திருவாதவூரர் ஆகிய தேனனைய மாணிக்கவாசகப் பெருமான், தீர்த்தருளினார். திருவாசகத்தைத் தேன் என வழங்குதல் அறிஞர் மரபு. ஆசிரியர் திருவாசத்தை அருளிய மணிவாசகப் பெருமானையே தேன் என்று பாராட்டினார். மாணிக்கவாசகர் தமது தூய்மையான திருவாய் மலரினாலே சொல் மாலை செய்தார். அத்தகைய திருவாசகத்தை ஓதியதால் என்போல் அடியார்கள் கருவாதை  உட்பட்டுக் கலங்காதவாறு செய்தார் என்று நன்றி பாராட்டுகிறார்.

74 அம்மையிலும் இம்மையிலும் அச்சந் தவிர்த்தடியார்
எம்மையுமாய் எங்கும் இயங்குதலான் மெய்ம்மைச்
சிவயோகமே யோகம் அல்லாத யோகம்
அவயோகம் என்றே அறி.

இப்பிறப்பிலும் இனிவரும் பிறப்புக்களிலும் தோன்றுகின்ற அச்சத்தைத் தவிர்த்து என்றென்றும் எங்கெங்கும் அடியார்களின் துன்பத்தைத் துடைப்பது உண்மையான சிவயோக மேயன்றி வேறில்லை. சிவபெருமானைக் கருத்தில்  இருத்திச் செய்கின்ற யோகத்தைத் தவிர மற்றைய யோக முறைகள் யாவும் பயனற்றவை என்று அறிவாயாக.

யோக நெறிகள் எனப்படுவன பலவகை. அவை எட்டு உட்பிரிவுகளை கொண்டன. ஆதலால் அட்டாங்க யோகம் எனப்படும். இந்த நெறியில் பயில்வோர் சிவபெருமானைப் பற்றுக் கோடாகக் கொண்டு ஒழுகினாலன்றி யோகநெறி தானே பயன்தரவல்லதன்று. ஆதலால் பிற வகை யோகப் பயிற்சிகளை அவயோகம் என்று குறித்தார்.

சிவயோகப் பயிற்சி இம்மை மறுமை அம்மை எனப்படும் மும்மையிலும் பயன் தருவதனால் அதன் வழி ஒழுகிய மெய்யடியார்க்கும் அவர்களைச் சார்ந்தார்க்கும் பிறப்பினால் வருகின்ற அச்சம் விளையாது என்று உறுதிபடக் கூறினார்.

75 மன்னன் அருள் எவ்வண்ணம் மானுடர்பால் மாணவக
அன்ன வகையே அரன் அருளும்  என்னில்
அடியவரே எல்லாரும் ஆங்கவர்தாம் ஒப்பில்
அடியவரே எல்லாம் அறி.

நாடாளும் மன்னவன் தன் குடிகளிடத்து ஒத்த அருள் கொண்டு அவர்களை முறை செய்து செங்கோல் செலுத்துவான். அது போலவே உலகத்து உயிர்கள் யாவற்றையும் நடுவு நிலை பிறழாமல் சிவபெருமானும் காத்து அருள் புரிவான். உலகத்து உயிர்கள் யாவும் சிவ பெருமானின் அடியவரே. ஆயினும் அவனிடத்து மிக்க அன்பு கொண்டு ஒழுகி அவன் திருவடியை அன்றிப் பிறிதொன்றினை நினையாதவர்க்கு அவன் மிகுந்த அருள்பாலிப்பான் . அத்தகைய அடியவர்களே அவனோடு ஒத்து நிற்றலால் யாவையுமாய்த் திகழ்வார்கள் என்று அறிவாயாக.

வேண்டுதல்  வேண்டாமை இலான் ஆகிய இறைவன் தன் அடியவரிடத்து மட்டிலும் அன்பு பூண்டு அருள்பாலிக்கிறோன் என்பது நடுவு நிலைமை  திறம்பிய செயல் ஆகாதோ? அவனது அருட் குணத்திற்கு இழுக்கன்றோ? என்று  மாணவர் வினாவிய வழி அவருடைய ஐயத்தைத் தீர்த்து விளக்கம் சொல்லுவது போல அமைந்தது இந்தப் பாடல் .

மண்ணுலகத்து வேந்தர் தம் குடிமக்கள் யாவரையும் தண்ணளியோடு புரந்து வரும் கடப்பாடு உடையவர்கள். அவ்வாறே தீமை காணுங்கால் ஒப்ப நாடி அந்தக ஒறுத்தலும் வேந்தர்கள் கடமை. இதனால் வேந்தர்கள் தம் ஆணை வழி ஒழுகினார்க்குப் பரிசுகள் தந்து சிறப்பித்தும் ஒழுகா தார்க்குத் தண்டம் விதித்தும் நடக்கின்ற முறைமை நடுவு நிலைமை திறம்பிய செயலாகாது அறமேயாகும்.

அது போன்றே இறைவனும் வேண்டுதல் வேண்டாமை இலான் ஆயினும் அவனோடு ஒற்றித்து நிற்கும் அடியார்களுக்குப் பேரின்பத்தை வழங்கியும், அவன் ஆணை வழி நில்லாதார்க்கு அவ்வவர் தகுதிக்கேற்பப் படி நிலையிலே வைத்தும் முறை செய்வான். இதுவும் ஒரு பால் கோடுதல் ஆகாது. நீதிமுறைமையாகவே கொள்ளப்படும். அவ்வாறு நிகழ்வது அவனது ஆணையே அன்றி விருப்பு வெறுப்புக்களால் அன்று. அவனோடு ஒற்றித்த அடியவர்கள் இவ்வுலகில் மிக்க பெருமைக்கு உரியவர்கள்.

76 உடம்புடைய யோகிகள் தாம் உற்ற சிற்றின்பம்
அடங்கத்தம் பேரின்பத்து ஆக்கில்  தொடங்கி
முளைப்பதும் ஒன்றில்லை முடிவதும் ஒன்றில்லை
இளைப்பதும் ஒன்றில்லை இவர்.

அணைந்தோர் ஆகிய சீவன் முத்தர்கள் எனப்படுவோர் இவ்வுலகில் உடம்போடு வாழ்கிற காலத்திலேயே சிவபெருமானதுபேரருளுக்கு உரியவர்கள் ஆகிறார்கள்.  அவர்களுக்கு உலகியல் இன்பங்கள் வரினும் அவை இறைவனுக்கே உரியன என்று கருதுவர். விருப்பு வெறுப்பு இரண்டு மின்றி வாழ்ந்தால் அவர்களை ஏறுவினை பற்றுவதில்லை. எனவே இனியும் பிறப்பிற்கு ஆட்பட மாட்டார்கள் இறப்பு என்பதும் அவர்களுக்கு இல்லை அவர்கமுக்குத் தளர்ச்சியும் வருவல்தில்லை.

உடம்புடைய யோகிகள் என்பது இங்கு சீவன் முத்தரைக் குறித்தது. அவர்கள் தன் முனைப் பற்று இன்பத்தில் மகிழ்தலும் துன்பத்தில் வாடுதலும் இன்றி இருப்பதனால் அவர்களுக்குப் பிறவி முளைப்பதில்லை என்றார். அவர்கள் மும்மலங்களும் நீங்கியவர்கள் ஆதலால் முடிவதும் ஒன்றில்லை என்றார். அவர்களுக்கு இன்பத்தால், வரும் மயக்கமும் துன்பத்தால் வரும் சோர்வும் தளர்ச்சியைத் தருவது இல்லை எனவே இளைப்பதும் ஒன்றில்லை என்றார்.

77 பேரின்பமான பிரமக் கிழத்தியுடன்
ஓரின்பத்து உள்ளானை உள்ளபடி பேரின்பம்
கண்ட வரே கண்டார் கடலுயிர்த்த இன்னமுதம்
உண்டவரே உண்டார் சுவை.

பேரின்ப வெள்ளமாகிய சிவபெருமான் தன்னுடைய திருவருளோடு கூட நீக்கமின்றி நின்று இவ்வுலகத்திற்கு அருள்பாலித்து வருகிறான். இன்பக்  கடலான இறைவனை அவனது திருவருள் செலுத்திய வழியிலே சென்று கண்டு அவனோடு ஒன்றிய அடியவர்களே உண்மையான இன்பத்தை உணர்ந்தவர்கள் ஆவர். பாற்கடலில் தோன்றிய அமுதத்தை மாந்தியவர்களே அதன் சுவையை உணர்ந்தாற்போல சிவப் பேரின்பத்தை அருந்தியவர்களே அதன் இயல்பை உணர்ந்தவர்கள் ஆவார்.

உள்ளதனை உள்ளபடி காணுவதற்கு உபாயம் ஒன்றுதான் என்பது இப்பாடலில் வலியுறுத்தப்பட்டது. தம் முனைப்பு அற்று தலைவன் தான் சேர்ந்தார் மட்டிலுமே அவனுடைய பேரின்பத்தை நுகர்ந்தவர் ஆவார்.நுகர்ச்சி இத் தன்மையது என்று சொல்லுவதும் இயலாது. மற்றையோர்க்கு அச்சுவை தெரியவும் வாராது. படி நிலைகளிலே பயின்று திருவடியிலே திளைத்து அப் பேரின்பத்தை நுகர்தல் வேண்டும் என்பதை ஆசிரியர் உணர்த்தினார்.

78 நங்கையினால் நாமனைத்தும் செய்தாற் போல் நாடனைத்தும்
நங்கையினாற் செய்தளிக்கும் நாயகனும்நங்கையினும்
நம்பியாய்த் தான்நடுவே நாட்டப் பெறுமிதுகாண்
எம்பெருமானார் தம் இயல்பு.

நாம் நமது கையினால் விரும்பியவற்றைச் செய்கிறோம். இறைவன் தன்னோடு பிரிப்பின்றி நிற்கின்ற சத்தியாகிய நங்கையினால் உலகனைத்தும் காத்தும் படைத்தும் கரந்தும் செயலாற்றுகிறான். அத்தகைய அப்பனும் அம்மையும் உயிர்களின் உள்ளத்திலே என்றும் பிரியாது விளங்குகின்றனர். இதுவே சிவபெருமானது உண்மை இயல்பாகும்.

முதலில் வருகிற நங்கையினால் என்ற சொல்லை நம் கையினால் என்று பிரித்துப் பொருள் கொள்ளவேண்டும். இந்த உலகில் நாம் இயற்றும் எல்லாச் செயல்களையும் நமது கையினாலேயே இயற்றுகிறோம். மனிதனின் கை நுட்பமான காரியங்களுக்கும் பயன்படுகிறது என்பதை உயிரியலாளர்கள் ஆராய்ந்து தெரிவித்துள்ளார்கள். அதற்குக் காரணமாக அவர்கள் சொல்லுவது, மனிதக் கை ஒன்றில் தான் பெருவிரல் மற்றைய எல்லா விரல்களோடும் எளிதில் பொருந்திப் பணியாற்ற முடியும் என்பதாகும். இந்த அமைப்பு , பிற உயிரினங்களிடத்து இல்லை, இந்த அமைப்பை தி ஆப்போசிங் தம்ப் என வழங்குவர்.

இறைவனோ உலக முழுவதையும் ஆக்கவும் காக்கவும் ஒடுக்கவும் மறைக்கவும் அருளவும் நங்கையைக் கொண்டு இயற்றுகிறான். இவ்விடத்தில் நங்கை என்பது இறைவனோடு நீக்கமின்றி நிற்கும் சிவ சத்தியைக் குறித்தது. அருளது சத்தியாகும் அரன் தனக்கு. அருளை இன்றித் தெருள் சிவம் இல்லை. அந்தச் சிவமின்றிச் சத்தி இல்லை  என்பது அருள் நந்தி சிவனார் சிவஞான சித்தியாரில் எடுத்துரைக்கும் உண்மை.

சிவமும் சத்தியுமாக இணைந்து உயிர்களின் உள்ளம் தோறும் எழுந்தருளி விளங்குவதாய், உயிர்களுக்குப் பாச நீக்கமும் சிவப்பேறும் வழங்குவதாய் அந்தப் பேற்றினை வழங்குவதற்குத் தம் ஒப்பற்ற கருணையினால் ஐந்தொழிலும் நடத்துவதாய் உள்ளதே அம்மையப்பரின் இயல்பு என்பதனை இப்பாடல் தெளிவுறுத்தினார்.

79 பொன்னிறம் கட்டியினும் பூணினும் நின்றாற்போல்
அந்நிறம் அண்ணலும் அம்பிகையும் செந்நிறத்தள்
எந்நிறத்த னாயிருப்பன் எங்கள் சிவபதியும்
அந்நிறத்த னாயிருப்பன் ஆங்கு.

கட்டிப் பொன்னின் இயல்பும் நிறமும் அதனால் செய்யப் பெற்ற வகை வகையான அணிகலன்கள் யாவற்றிலும் மாற்றமின்றி அப்படியே இருக்கும் . அதுபோலவே சிவமும் சத்தியும் பொன்னும் அணிகலனும் போல  வேறுபாடு அற்று விளங்கும். திரு நின்ற செம்மையாளனாகிய சிவ பெருமானின் ஆற்றலே வடிவாகிய சிவசத்தி எங்கு எப்படி எந்நிறத்ததாய் இருக்குமோ அங்கு அப்படி அந்நிறத்தனாய் எங்கள் இறைவனாம் சிவ பெருமாவுனும் நிற்பன்.

சத்திக்கும் சிவத்துக்கும் இயல்பிலும் மாறுபாடு இல்லை. இருப்பும் மாறுபடாது. சத்தியைத் தனியே வழிபடும் கொள்கை சைவ சமயத்திற்கு ஏற்புடையதன்று. அவ்வாறே சத்தியை விடுத்துச் சிவத்தை மட்டும் வழிபடுவதையும் சைவ சமயம் ஏற்காது. தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும் பால் வெள்ளை நீறும் பசுஞ் சாந்தும் சூலமும் தொக்க வளையும் உடைய தொன்மைக் கோலமே சைவ சமயத்தவர் வழிபடும் திருக்கோலமாகும்.

பொன்னின் மாற்றும், நிறமும் அதனால் செய்யப்பெற்ற அணிகலன்களிடத்தும் மாறாதிருப்பது போலக் கட்டிப் பொன்னாகிய சிவபெருமானும் அணிகலனாகிய திருவருளும் தமக்குள் வேறுபாடுஅற்றுத் திகழும். இப்பாடலில் செந்நிறத்தாளகிய அன்னை எந்நிறத்தாளாயிருப்பள் எங்கள் சிவபதியும் அந்நிறத்தனாய் இருப்பன் என்று இத்தன்மை அம்மையின் மீது வைத்துக் கூறப்பட்டது. இதே கருத்து சிவஞான சித்தியார் சுபக்கத்தில் , எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பாள் என்று அப்பன் மீது வைத்து உணர்த்தப்பட்டது.

80 தாரத்தோடு ஒன்றாவர் தாரத் தோர் கூறுவர்
தாரத்தோடு எங்கும் தலை நிற்பர் தாரத்தின்
நாதாந்தத்தே இருப்பர் நாற்றானத்தே இருப்பர்
வேதாந்தத்தே இருப்பர் வேறு.

சிவபிரான் தன் துணைவியாகிய அருட்சத்தியுடன் நீக்கமின்றி நிலைத்து ஒன்றாகவே இருப்பான். அவன் தன் சத்தியைத் தனது உடலின் இடப்பாகத்திலே கொண்டு பெண் உடல் ஒருதிறமாகவும் நிற்பன். சிவமும் சத்தியும் எல்லாவிடத்திலும் நிகழும் வண்ணமும் எங்கும் நிறைந்தும் நிற்பன். சிவமும் சத்தியும் எல்லாவிடத்திலும் திகழும் வண்ணமும் எங்கும் நிறைந்தும் நிற்பன். நாததத்துவத்தின் முடிவிலே தன் துணைவியாகிய சிவசத்தியுடன் எழுந்தருளி விளங்குவன் . நின்மல துரியம் என்னும் நான்காம் நிலையிலே சத்தியுடன் விளங்குவான். வேதத் தலை தருபொருளாகி அதற்கும் மேம்பட்டு சத்தியும் சிவமுமாய் நிற்பான். இவ்வாறு எல்லாம் நிற்பினும் எதனினும் தோய்வின்றித் தத்துவங்களை எல்லாம் கடந்து தனித்த பொருளாகவும் விளங்குவான்.

நாதாந்தத்தே இருப்பர் என்பது நாததத்துவத்தின் முடிவிலே இருப்பன் என்ற பொருளைத் தந்தது. நாற்றானம் என்பது பிரமரந்திரப் பெருவெளியைக் குறித்தது. வேதாந்தம் என்பது வேதத்தின் முடிவு என்ற பொருளைத் தந்து அவன் மறையின் ஈறு தொடர ஒண்ணாத தன்மை யாளன் என்பதைக் குறித்தது.

81 ஒன்றுரைத்தது ஒன்றுரையார் சாத்திரங்கள் ஒன்றாக
நின்றுரைத்து நிச்சயிக்க மாட்டாவால் இன்றுரைக்க
என்னால் இயன்றிடுமோ என் போல்வார் ஏதேனும்
சொன்னால் தான் ஏறுமோ சொல்.

உலகில் உள்ள சாத்திர நூற்கள் யாவும் தமக்குள் மாறுபட்டு இறைவனின் இயல்பைப் பற்றி வெவ்வேறு கருத்துக்களைச் சொல்லும். இவற்றுள் எந்த நூலில் கூறப்பட்ட செய்தியும்  இறைவன் இன்ன தன்மையன் இப்படியன் என்று உறுதிப்படுத்திக் கூற இயலாது தடு மாறுவதைக் காண்கிறோம் . இப்படி இருக்க அப்பெருமானின் பெருமையை இன்னதென்று என்னால் அளவிட்டு உரைத்தற்கு இயலுமோ உலக வயப்பட்ட மக்கள் நடுவிலே நான் கூறும் மொழிகள்தாம் அவர் காதிலே ஏறுமோ?

சொல்லுக்கும் மனத்துக்கும் எட்டாத பரம்பொருளை பரந்து பட்ட சாத்திரங்களால் இத்தகையவன் என்று வரையறுத்துக் கூறமுடியாமலும் தம்முள் ஒன்றுபட்டு நிற்க முடியாமலும் தடுமாறுவதை நாம் காண்கிறோம். அதனால்தான் அருளாளர்கள் ஐய நின் தன்மை அளப்பரிது எமக்கே  (திருவாரூர் நான் மணி மாலை 29 குமரகுருபரர் ) என்று உரைத்தனர். தொன்மையான நூல்களே சுட்ட முடியாத பரம் பொருளைத் தான் மட்டிலும் எவ்வாறு சுட்ட முடியும் என்று கேட்கிறார் ஆசிரியர். அவ்வாறு சொல்ல முயன்றாலும் உலக இன்பத்தினால் ஈர்க்கப்பட்டுள்ள மாந்தர் செவியில் தன் சொல் ஏறுமோ என்றும் கேட்கிறார்.

இறைவனின் இயல்பு அவன் அருளே கண்ணாகக் காண்பார் அல்லது காண இயலாது என்பதனை இப்பாடலில் வலியுறுத்திக் கூறினார்.

82யாதேனும் காரணத்தால் எவ்வுலகில் எத்திறமும்
மாதேயும் பாகன் இலச்சினையே ஆதலினால்
பேதமே செய்வாய் அபேதமே செய்திடுவாய்
பேதா பேதஞ் செய்வாய் பின்.

இந்த உலகில் மட்டிலும் இன்றி எல்லா உலகங்களிலும் , அவற்றில் உள்ள எல்லாப் பொருள்களிலும் ஆராய்ந்து பார்க்கும் காலத்துச் சிவசத்தியுடன் கூடிய சிவபெருமானின்  எல்லையற்ற கருணையின் பதிவைக் காணுதல் கூடும். இறைவனின் கருணைத் திறன் உள்ளபடி தேடும் அடியவர்களுக்கு இன்னபடிஇன்ன வகை இக்காரணம் என்றில்லாமல் ஏதேனும் ஓர் முறையில் வெளிப்படலாம் . எனவே அம்மையப்பரை வழிபட்டு அடியார்களின் பெருமையை உணர்ந்து சைவ சமயத்துள் முப்பொருள் உண்மைகளை உணர்ந்து கொண்ட நீ பேதம் அபேதம் பேதா பேதம் என்ற முத்திறங்களுள் எதனைப் பின் பற்றினும் அதுவும் உன்னை நன்னெறியில் இட்டுச் செல்லும்.

எவ்வுலகில் என்று கூறியதனால் உலகங்கள் பல என்ற சைவ சித்தாந்தக் கொள்கையை ஆசிரியர் வலியுறுத்தினார். எனவே நாம் அறியாத உலகங்களில் வாழுகின்ற உயிரினங்களும் சிவபெருமான் படைப்பே. அவற்றுக்கும் உய்யும் நெறியைக் காட்டும் சமய ஒழுக்கங்களை சிவ பெருமான் வகுத்தருளியிருப்பான். அவை இன்ன வென்று நமக்குத் தெரியாவிடினும் அவையும் அந்தந்த உலகத்து உயிர்களை முத்திநிலைக்கு இட்டுச் செல்வனவே என்பதைக் குறிக்க எத்திறத்தும் என்றார். அவ்வாறு இறைவன் வகுத்தருளிய அந்தந்த உலகத்துக்குரிய நெறிகள் இறைவனால் வேறுபட அருளப் பெற்றிருப்பின் . அவை அவ்வாறு அருளப்பட்டிருப்பதன் காரணம் நமக்குத் தெரியவாராது. ஆதலால் யாதேனும் காரணத்தால் என்றும் குறிப்பிட்டார்.

இவ்வாறு கூறுவதன் மூலம் சமய ஒழுக்கங்களும் தத்துவ நெறிகளும் தமக்குள் மாறுபட்டிருந்தாலும் அவை யாவும் முழுமுதற் பொருளான சிவபெருமான், தன் எல்லையற்ற கருணையால் அவரவர் தகுதிக்கேற்ப வகுத்தனவே என்பதைக் காட்ட மாதேயும் பாகன் இலச் சினையே என்றுரைத்தார் இலச்சினை முத்திரை, அடையாளம். எல்லா உயிர்களும் அவை எவ்வுலகில் வாழ்ந்தாலும் சிவபெருமானின் அருளுக்கு உரியனவே என்பதனை இந்தப் பாடலின் முதலிரண்டு அடிகள் குறித்தன. விரிவிலா அறிவினார்கள் வேறு ஒரு சமயம் செய்து எரிவினால் சொன்னா ரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும்  என்றும், ஆறுசமயத்து அவரவரைத் தேற்றும் தகையன, தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே ஏற்றும் தகையன  இன்னம்பாரன் தன் இணையடியே  என்றும் திருநாவுக்கரசு நாயனார் அருளிய திருவாக்குகள் இங்கு நினையத்தகும் அது போலவே அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன் என்ற சுந்தர மூர்த்தி நாயனாரின் அருளுரையும் இங்குப் பொருந்தும். சந்தான குரவர்களுள் அருள் நந்தி சிவனார் யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகிய ஆங்கே மாதொருபாகனார் தாம் வருவார் என்று அறிவுறுத்தியதும் இக்கருத்தே பற்றி என்க சமயாதீதப் பெருமையடைய சைவம் மற்றைச் சமயங்களைக் காழ்ப்பும் வெறுப்பும் இன்றி அணுகும் முறை இதிலிருந்து புலனாகும்.

எவ்வுலகும் எத்திறத்தும் மாதேயும் பாகன் இலச்சினையே என்று அறிவுறுத்திய ஆசிரியர்அதற்கு எடுத்துக் காட்டுத் தருவார் போல மூன்று கொள்கைளைப் பாடலின் பிற்பகுதியில் குறிப்பிடுகிறார். பேதம் என்பது இறைவனும் உயிரும் ஒளியும் இருளும் போல தம்முள் மாறு பட்டவை. என்ற கொள்கையுடைய தத்துவம். அபேதம் என்பது இறைவனும் உயிரும் பொன்னும் பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களும் போலத் தமக்குள் மாறுபாடு இல்லாதவை என்ற ஒருமைக் கொள்கை. இது ஏகான்வாதம் எனவும் கூறப்படும். இறைவனும் உயிரும் சொல்லும் பொருளும் போல ஒரு வகையால் வேறுபட்டும் மற்றொரு வகையால் வேறுபடாமலும் விளங்குவன என்ற கருத்து பேதா பேதம் என்று கூறப்படும். இது விசிட்டாத் துவைதம் எனவும் பெயர் பெறும்.

சைவசித்தாந்தம் இம்மூன்றையும் தனித்தனியே கொள்ளாமல் பிறிவரும் அத்துவிதமாகக் கொள்ளும் என்பதை உமாபதிசிவம் சிவப் பிரகாசத்தில் ,
புறச்சமயத் தவர்க்கு இருளாய் அகச்சமயத்து ஒளியாய்ப்
   புகழ் அளவைக்கு அளவாகிப் பொன் பணிபோல் அபேதப்
 பிறப்பு இலதாய் இருள் வெளிபோல் பேதமும் சொற்பொருள்போல்
   பேதா பேதமும் இன்றிப் பெருநூல் சொன்ன
 அறத்தினால் விளைவதாய் உடல் உயிர் கண் அருக்கன்
   அறிவொளி போல் பிறிவு அரும் அத்துவிதம் ஆகும்
 சிறப்பினதாய் வேதாந்தத் தெளிவாம் சைவ
   சித்தாந்தத் திறன் இங்குத் தெரிக்கல் உற்றாம்
 என்ற திருப்பாடலில் எடுத்துரைக்கிறார்.

83 நின்றபடி நின்றவர்கட்கு அன்றி நிறம் தெரியா
மன்றினுள் நின்றாடல் மகிழ்ந்தானும் சென்றுடனே
எண்ணுறும் ஐம்பூதம் முதல்  எட்டுருவாய் நின்றானும்
பெண்ணுற நின்றாரடும் பிரான்.

இறைவன் திருவருள்  நெறியிலே தலைப்பட்டுத் தம்மை இழந்து அவன் அருளே கண்ணாகக் காணும் அடியவர்களுக்கு அல்லாமல் அவன் இயல்பு அறிய ஒண்ணாது. அத்தகைய பேரருளாளன் ஐம்பெரும் பூதங்களும் கதிரவனும் மதியும் ஆன்மாவும் ஆகிய அட்டமூர்த்தமாய் நின்று அருளுகிறான். அவனே திருவம்பலத்துள் சிவகாமி அம்மையுடன் நின்று திருக்கூத்து ஆடுகின்றான். அவனே ஊழிக் காலத்தில் தனது சத்தியையும் தன்னுள் அடக்கித் தான் ஒருவனே நின்று தனிக்கூத்தும் ஆடுகிறான்.

இறைவனின் இயல்பைக் கூற வந்த ஆசிரியர் அவனை நின்றபடி நின்றவர்க்கு அல்லாமல் நிறந்தெரியான் என்று குறிப்பிடுகின்றார். நிறம் என்பது இந்த இடத்தில் வடிவத்தை உணர்த்திற்று நிறங்களோர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பொருமான் என்ற மணிவாசகப் பெருமான் திருவாக்கு மனங்கொள்ளத்தக்கது. உலகத்துப் பொருள்கள் ஒவ்வொன்றும் ஒரு நிறத்தைக் கொண்டன ஆயினும் அவை நமது புறக்கண்ணுக்குப் புலப்படும். ஆகமக்கருத்துப்படி அடிப்படை நிறங்கள் ஐந்து. இறைவன் ஐந்து நிறங்களும் உடையவன். ஆயினும் நம் கண்ணுக்குப் புலப்படாதவன்.

நின்றபடி நிற்றல் என்பது இறைவன் திருவருளிலே ஒடுங்கித் தன் முனைப்பு இன்றி ஒழுகும் அடியார்களின் செயலைக் குறித்தது அத்தகைய மெய்யடியார்களுக்கு அன்றி இறைவனின் தன்மை பிறரால் அறிய வொண்ணாதது. இறைவன் அட்டமூர்த்தமாய் விளங்குகிறான் என்பது ஆகமங்களாலும் திருமுறைகளாலும் பன்முறை எடுத்து ஓதப்பட்ட கருத்து, அட்டமூர்த்தம் என்பது நிலம், நீர், காற்று, விண் ஆகிய ஐம்பூதங்களும் ஞாயிறும் திங்களும் இயமானன் என்று கூறப்படும் ஆன்மாவும் ஆகிய இவை எட்டிலும் நிறைந்து விளங்குகின்ற இறைவனது பெரு வடிவு. இதனை, எண்ணுறும் ஐம்பூதம் முதல் எட்டுருவாய் நின்றான் என்று இப்பாடலில் குறித்தார்.

தில்லைச் சிற்றம்பலத்தில் இறைவன் ஆடுகிற திருக்கூத்து ஆனந்தக்கூத்து என்று வழங்கப்பெறும். அத்திருக்கூத்தை அடியார் பலர் பலவகையாக ஏத்திப் பாடி அருளியுள்ளார்கள். அதன் உட்பொருளை உண்மை விளக்கம் முதலிய சாத்திர நூல்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. ஆனந்தக் கூத்தை ஆடுகின்றவனும் சிவ பெருமானே என்பதை மன்றினுள் நின்று ஆடல் மகிழ்ந்தானும் என்ற சொற்களால் குறிப்பிடுகின்றார். பேரூழிக் காலத்தில் சிவசக்தியையும் தன்னுள் அடக்கிக் கொண்டு சிவபெருமான் திருநடனம் புரிந்து அருள் கிறான் என்பது பெண்ணுற நின்றாடும் பிரான் என்பதனால் இப்பாடலில் குறிப்பிடப்பட்டது. பெண்ணுக்கும் ஒரு திறன் ஆகின்ற அவ்வுரு தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் என்பது அம்மை திருவுருவையும் தன்னுட் கரந்து தான் தமியனாய் நின்றதனைக் குறிக்கும்.

84 சிவமே சிவமாக யான் நினைந்தாற் போலச்
சிவமாகிய இருத்தல் அன்றிச்  சிவமென்று
உணர்வாரும் அங்கே உணர்வழியச் சென்று
புணர்வாரும் உண்டோ புவி.

சிவ பரம் பொருள் ஒன்றே மெய்ப்பொருளாகவும் அதனுள் ஒடுங்கித் தன்னை இழந்து நிற்றலே உயர்நெறி என்றும் அதன் பயன் சிவமாம் தன்மையைப் பெறுதல் என்பதும் ஆகிய இவையே என் தியானத்தின் வழிகளாகவும், அவ்வாறே நீயும் நினைத்தாலன்றி வேறு எவ்வகையிலும் அப்பெருமானை அடைதல் இயலாது. ஏனெனில் உயிர் உணர்வினால் சிவபெருமானைச் சென்று அடைதலும் இல்லை. உயிரின் முயற்சியினால் அவனைச் சென்று கலத்தலும் இல்லை.

தத்துவ விவாதங்களும் தவ முயற்சிகளும் இறைவனிடத்தில் உயிரைக் கொண்டு சேர்க்கும் வல்லமையற்றன. தன் முனைப்புக் கெட்டு இறைவன் திருவருள் வழியிலே தம்மை முழுவதும் ஒப்படைத்துக் கொண்டவர்களே சிவமாம் தன்மை பெறும் திருவினர். ஆசிரியர் தாம் அவ்வின்பத்தினைப் பெற்றது போலத் தம் மாணவனும் பெற வேண்டும்  என்று இப்பாடலின் மூலம் அறிவுறுத்துகிறார்.

நானே உணர்வேன் என்று முயல்வார்க்கு அறிய பொருள் சிவம்  என்பதையும், சிவனருள் இல்லாமல் அவனைச் சென்று கலத்தல் இல்லம் என்பதனையும் இவை கைகூடத் திருவருளின் துணை வேண்டும் என்பதனையும் இப்பாடலில் அறிவுறுத்தினார்.

85 அதுஇது என்றும் அவன் நானே என்றும்
அதுநீயே ஆகின்றாய் என்றும்  அதுவானேன்
என்றும் தமையுணர்ந்தார் எல்லாம் இரண்டாக
ஒன்றாகச் சொல்லுவரோ உற்று.

பரம் பொருளாகிய ஒன்று, உயிராகிய மற்றொன்று என இரண்டு பொருள்கள் உள்ளன என்றும், பரம்பொருளே நான் என்று ஒன்றாகவும், அப்பரம் பொருள் நீ ஆகின்றாய் எனவும், நான் அப்பரம் பொருள் ஆனேன் என்றும் இவ்வாறு பல்வகையாகத் தவ முயற்சியுடைய பெரியோர் கூறியிருக்கின்றார்கள். இவற்றிலிருந்து சிவபரம் பொருளின் தன்மை வேறு உயிரின் தன்மை வேறு என்று பொருட்தன்மையால் இரண்டு என்பதன்றி மூன்றே என்று வாதிப்பவர்களும் உண்டோ? இல்லை என்க;

இந்தப் பாடலில் ஆசிரியர் பெரும் பெயர்க் கடவுளையும் உயிர்களையும் பற்றிக் தவ முதிர்ச்சி உடையவர்கள் கூறிய கூற்றுக்களை எடுத்துரைத்து அவற்றுக்குச் சைவ சித்தாந்த நெறியிலே பொருள்விரிவு காணுகின்றார்.

வேதங்கள் நான்கு. நான்கு வேதங்களுக்கும் இதயம் போல ஒவ்வொன்றுக்கும் ஒரு சொற்றொடர் அமைந்திருப்பதாகப் பெரியோர் கூறுவர். இந்த வடமொழிச் சொற்றொடர்களுக்கு மகா வாக்கியங்கள் என்று பெயர். சிவஞான போதத்திற்குப் பேருரை வகுத்தருளிய மாதவச் சிவஞான முனிவர் சிறப்புப் பாயிரத்துக்கு உரை வரைகின்ற போது,பெரும் பெயர் என்பதும் மகா வாக்கியம் என்பதும் ஒரு சொல் என்பதும் ஒரே பொருளைத் தருவன என்று சுட்டிச் செல்லுகின்றார்.

பிரக்ஞானம் பிரம்மம் என்ற சொற்றொடர் இருக்கு வேதத்தின் மகாவாக்கியம் என்று கூறுவர். ஒப்பற்ற அறிவே பிரமப் பொருள் என்பது இதன்  பொருள். அகம் பிரம்மாஸ்மி என்ற சொற்றொடர் யசுர் வேதத்துக்கு உரிய மகா வாக்கியம் என்பர். நான் பிரம்மம் ஆகின்றேன் என்பது இதன் பொருள் . சாம வேதத்துக்கு உரிய மகா வாக்கியமாக தத்துவமசி என்ற சொற்றொடர் கூறப்படும். நீ அது ஆகின்றாய் என்பது இதன் பொருள். இங்கு அது என்றது பிரம்ப் பொருளைக் குறித்தது. அதர்வண வேதத்திற்குரிய மகா வாக்கியமாக அயம் ஆத்மா பிரம்மம் என்ற சொற்றொடர் கூறப்படும், இதற்கு, அந்த ஆன்மாவே பிரமம் என்று பொருள்.

இந்த நான்கு மகா வாக்கியங்களும் அந்தந்த வேதத்தின் உயிர் நாடியாகக் கருதப்படுகின்றன. இவற்றின் அமைப்பு முறையைக் கூர்ந்து நோக்கினால் முதல் மகாவாக்யம் பொதுமையில் கூறப்பட்ட ஒன்றாகவும் இரண்டாவது தன்மை நிலையில் கூறப்பட்டதாகவும். மூன்றாவது முன்னிலைப் படுத்திப் பேசப்பட்டதாகவும் நான்காவது படர்க்கையில் வைத்து உரைக்கப்பட்டதாகவும் கொள்ள முடியும்.

இவற்றை உளத்துள் கொண்டே இந்தப் பாடலின் சொற்கிடக்கை முறை அமைந்திருப்பதை அறியலாம்.

இந்த மகா வாக்கியங்கள் யாவும் அத்துவிதக் கொள்கையை உணர்த்த எழுந்தவை. அத்துவிதக் கொள்கை பல்வேறு ஆசிரியர்களால் பல்வேறு முறைகளிலே விரித்துரைக்கப்பட்டது. எனினும் அத்துவித மெய்ம்மையை, மெய்கண்ட தேவநாயனாரே உள்ளபடி கண்டு உணர்த்தினார் என்பதனைத் தாயுமான அடிகள்,

 பொய் கண்டார் காணாப் புனிதமென்னும் அத்துவித
 மெய்கண்ட நாதன் அருள் மேவும் நாள் எந்நாளோ

என்று எடுத்துரைக்கின்றார். உண்மை விளக்கத்தில் திருவதிகை மன வாசகம் கடந்தார்,  பொய்காட்டிப் பொய் அகற்றிப் போதானந்தப் பொருளாம் மெய்காட்டும் மெய்கண்டாய் விண்ணப்பம்  என்று இக்கருத்தை முன்மொழிந்துள்ளார்.

அது இது என்பது அதுவேறு இது வேறு என்று பொருள் கொள்ள நிற்பதால் பேதவாதிகள் கொள்கையாகக் கொள்ளப்படும். அவன் நானே என்பது ஒருமை சுட்டுவதால் அபேதவாதிகளின் கூற்றாகக் கொள்ளப்படும் அது நீயே ஆகின்றாய், அது ஆனேன் என்பவை பேதா பேத வாதம் என்று கொள்ளுவர்.

இந்தப் பாடலின் சொல்லும் பொருளும் இந்நூல்க்குக் காலத்தால் பிற்பட்ட மெய்கண்ட தேவநாயனாரின் சிவஞான போதத்தில் பன்னிரண்டாம் நூற்பாவின்  நான்காம் அதிகரணத்தில் முதல் எடுத்துக் காட்டு வெண்பாவாகிய

அது இது என்றது அது அல்லலான் கண்டார்க்கு
அது இது என்றதையும் அல்லான் பொது அதனில்
அத்துவிதம் ஆதல் அகண்டமும் தைவமே
அத்துவிதி அன்பின் தொழு

என வரும் பாடலில் அமைந்துள்ளமையே அறிந்து மகிழலாம்.

அத்துவித நிலைபற்றிச் சைவசித்தாந்தம் கண்ட கொள்கை இந்த நூலின் எண்பத்து இரண்டாவது பாடலில் ஆசிரியரால் குறிப்பாக உணரர்த்தப்பட்டு. சிவமும் உயிரும் பொருள் தன்மை யால் வேறாகவும் கலப்பினால் ஒன்றாகவும், உயிர்க்கு உயிராதல் தன்மையால் உடனாகவும் நிற்கும் என்று முத்திறக் கொள்கையையும் தனக்குள்  அடக்கிக் கூறுவதே சைவ சித்தாந்தத்தின் நிலைப்பாடாகும் ஒன்றும். இது அருள் நந்தி சிவாச்சாரியரால்,  ஒன்றாகாமல் இரண்டாகாமல் ஒன்றும் இரண்டும் இன்றாகாமல்  என்று இருபா இருபஃது (20)நூலில் செறிவாகக் குறிக்கப் பட்டது.

86 ஈறாகி அங்கே முதலொன்றாய் ஈங்கு இரண்டாய்
மாறாத எண் வகையாய் மற்றிவற்றின் வேறாய்
உடனாய் இருக்கும் உருவுடைமை என்றும்
கடனாய் இருக்கின்றான் காண்.

யாவற்றையும் ஒடுக்குகின்ற முற்றழிப்புக் காலத்தில் தனது அருட்சத்தியையும் தன்னுள் கரந்து சிவம் ஒன்றேயாகியும் அதன் பின்னர் அண்டங்கள் அனைத்தையும் மீளத் தோற்று விக்கும் காலத்து சத்தியும் சிவமும் என இரண்டாகி நின்றும் ஐம்பெரும் பூதங்களும் கதிரவனும் மதியும் ஆன்மாவும் ஆகிய எட்டு உருவினன் ஆகி அவற்றுள் நிறைந்தும்  இவை யாவற்றுள்ளும் கலந்து நின்றும் அவற்றில் தோய்வறத் தன்னியல் பால் வேறாகியும் உயிருக்கு உயிராய் உள்நின்று இயக்கியும் காணும் உபகாரம் காட்டும் உபகாரம் ஆகியவற்றைப் புரிதலால் உடனாகியும் இருக்கின்ற இயல்பினை உடையவன் சிவபெருமான்.

திருமுறைகளின் பிழிவே சைவ சித்தாந்தம் என்று அறிஞர்கள் கொள்ளுவர், அதற்கு ஓர் அரிய எடுத்துக் காட்டாக இப்பாடல் அமைந்துள்ளது. திருவீழிமிழலையில் எம்பந்த வல்லினை நோய் தீர்த்திட்டு எமையாளும் சம்பந்த பெருமான் அருளிய திருப்பாடல் ;

ஈறாய் முதல் ஒன்றாய் இருபெண் ஆண் குணம் மூன்றாய்
மாறாமறை நான்காய் வரு பூதம் அவை ஐந்தாய்
ஆறார் சுவை ஏழு ஓசையோடு எட்டுத்திசை தானாய்
வேறாய் உடன் ஆனான் இடம் வீழிம்மிழலையே.  (1112)

அருமையான இத்தேவாரப் பாடலில் கூறப்பட்ட கருத்துக்கள் திருக்களிற்றுப்பபடியாரின் ஆசிரியரால் இந்தப் பாடலில் பொதிந்து வைக்கப்பட்டிருப்பதும் போற்றுதற்குரியதாகும்.

முற்றழிப்புக் காலம் சர்வ சங்கார காலம் என்று கூறப்படும். அப்போது தன்னிற் பிரிவிலாத் தனது அருட் சத்தியையும் தன்னுள்அடக்கிக் கரந்து சிவபெருமான் ஒருவனே தான் தனியனாக நிற்பான். இதன் முடிவில் உலகங்கள் அனைத்தையும் மீளத் தோற்றுவிக்கும் திருக்குறிப்பு அவன் திருவுள்ளத்தில் நிகழும் போது சிவமும் சத்தியுமாக ஈருருவாய் விளங்கித் தோன்றுவான் . உலகை மீளத் தோற்றுவித்தலை புனருற்பவம் என்று கூறுவர். அவ்வாறு தோற்றுவிக்கும் போது உலகத் தொகுதிகளும் உயிர்த்  தொகுதிகளும் ஆகிய யாவற்றுள்ளும்  சிவபெருமான் கலந்திருப்பான் ஐம்பெரும் பூதங்களும் ஞாயிறும்  திங்களும்  இயமானனும் (ஆன்மாவும்) ஆகிய இவை யாவற்றையும்  தனது வடிவாகக் கொண்டிருக்கும் நிலை அட்ட மூர்த்தம் என்று வழங்கப் பெறும்.

இவ்வாறு யாவற்றுள்ளும் எங்கும் கலந்து  நிறைந்திருந்தாலும் அவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றித் தான் தனித்து வேறாய் நிற்பன். உலகுயிர்க்ளுக்கும் ஆதாரமாகவும் உயிர்க்குயிராய் நிற்றலானும் இறைவன் உடனாயும் இருப்பான். இவ்வாறு முத்திறப்பட்டு நிற்றல் இறைவனது இயல்பு என்று எடுத்துரைத்தார் ஆசிரியர்.

87 உன் உதரத்தே கிடந்த கீடம் உறுவது எல்லாம்
உன்னுடையது எண்ணா நீ உற்றனையோ மன்னுயிர்கள்
அவ்வகையே காண் இங்கு அழிவதுவும் ஆவதுவும்
செவ்வகையே நின்ற சிவன் பால்.                

மாணவனே, உன்னுடைய வயிற்றில் பற்பல சிறு புழுக்கள் உள்ளன. அவை பிறந்தும் வளர்ந்தும் முட்டைகள் இட்டும் இறந்தும் வருகின்றவேனும் அவற்றின் தோற்றக் கேடுகள் உனக்கு உரியன ஆகா. அதுபோலவே உலகு உயிர்த் தொகுதிகள் யாவற்றிலும் சிவபரம் பொருள் கலந்து நிற்பினும் வினைப் பயன்களால் உயிர்களுக்கு வரும் இன்பத் துன்பங்களும் சிவபெருமானைப் பற்றுவதில்லை. அப்பெருமான் எங்கும் நிறைந்து யாவற்றையும் கலந்து இருந்தாலும் தான் தூய்மையான செம் பொருளாய் அவற்றிலிருந்து வேறுபட்டுத் தன்னிலை மாறாமல் எப்போதும் ஒரு தன்மையனாய் விளங்குகிறான்.

இறைவன் உலகுயிர்களோடு கலந்து நிற்பான் என்பது முந்திய பாடலில் கூறப்பட்டது. அதனைக் கேட்ட மாணவனுக்கு ஓர் ஐயம் எழும். உலகமும் உயிர்த் தொகுதியும் பல்வேறு மாற்றங்களுக்கும் தோற்றக் கேடுகளுக்கும் துன்பங்களுக்கும் உள்ளாகின்றனவே இவற்றோடு கலந்து நிற்கும் இறைவனுக்கும் இம்மாறுபாடுகள் உண்டாகுமோ என்பது ஐயம். சிற்றுயிர்களின் இன்ப துன்பங்களோ உலகத்தில் நிகழும் மாற்றங்களோ இறைவனைப் பற்றுவதில்லை. அவன் இவற்றைக் கடந்த, தூய்மையான செம்பொருள் என்பது ஆசிரியர் எடுத்துரைக்கும் தெளிவு.

இதற்கு ஓர் உவமையைப் பயன்படுத்துகிறார். வலிமையுள்ள மாந்தர்களுக்கும் வயிற்றிலும் குடலிலும் சிறு சிறு புழுக்கள் தோன்றுவதுண்டு. வயிற்றுக்குள்ளேயே மடிவதும் உண்டு. அவற்றின் நுகர்ச்சிகள் அவை கிடக்கும் வயிறு உடையானை எவ்வகையிலும் பாதிப்பதில்லை. அது போலவே சிற்றுயிர்களின் இன்பத் துன்பங்களை இறைவனும் நுகர்வானல்லன் என்று உவமை காட்டி விளக்குகிறார். உதரம்வயிறு, கீடம்புழு, உறுவதுஅநுபவிப்பது

அவனே அவனி முதலாகி நின்றானும்
அவனே அறிவாய் நின்றானும் அவனே காண்
ஆணாகிப் பெண்ணாய் அலியாகி நின்றானும்
காணாமை நின்றானும் கண்டு.

இவ்வுலகங்களுக்கு எல்லாம் ஒப்பற்ற முதல்வனாய் நிமித்த காரணமாக விளங்குபவன் சிவபெருமானே. உயிர்களின் அறிவிற்குக் காரணமாகியும், அறிந்தும் அறிவித்தும் வருபவன் சிவபெருமானே. உயிர்கள் முன்னை வினைக்கு ஏற்பப் பல்வேறு பிறப்புகளில் சேருமாறு செய்து அவற்றின் பயனை அருந்தச் செய்து அவை உலகில் வாழும் காலத்துத் தோன்றாத் துணையாகி அவற்றுடன் கலந்து நிற்கும் போதும் அவ்வுயிர்களால் காண ஒண்ணாது, அவற்றின் அறிவுக்கு அப்பாற்பட்டு நிற்பவனும் சிவபெருமானே ஆவான்.

அவனிக்கு முதலாயினானும் அவனே. அறிவாய் நின்றானும் அவனே. ஆணாகிப் பெண்ணாகி அலியாகி நின்றானும் அவனே, காணாமை கண்டு நின்றானும் அவனே என்று கொண்டு கூட்டிப் பொருள் காண்க. அவன் என்பது எல்லாவற்றையும் கடந்து நிற்பவனாக விளங்குகின்ற சிவபெருமானைக் குறிப்பதனால் சேய்மைச் சுட்டுச் சொல்லால் உணர்த்தப்பட்டது. முதல் என்ற சொல் சிவபெருமானின் முதன்மையையும், தலைமையையும் உணர்த்தி அவன் நிமித்த காரணன் என்பதனை வலியுறுத்திற்று.

அவனே அறிவாய் நின்றான் என்று கூறியதனால் இறைவனின் அறிவு முற்றறிவு என்பதும், உயிர்கள் அவன் அறிவிக்கவே அறிவன என்பதும் உணர்த்தப் பெற்றன. எல்லாப் பொருளாய் அப்பொருட்களுக்கெல்லாம் அப்பாலாய் யாவற்றுள்ளும் கலந்து இருந்தும் உயிர்களால் காணப்படாத தன்மை உடையவன் இறைவன் என்பது பன்னிரண்டு அடிகளால் அறிவுறுத்தப்பட்டது. அம்மை திருவந்தாதியில் பன்னிரண்டு அடிகளால் அறிவுறுத்தப்பட்டது. அம்மை திருவந்தாதியில்

அறிவானும் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே அறிகின்ற
மெய்ப்பொருளும் தானே விரிசுடர் பார்ஆகாசம்
அப்பொருளும் தானே அவன் (அற்புதத் திருவந்தாதி 20)
எனவரும் திருப்பாடல் இதனுடன் இணைத்து நோக்கி மகிழத்தக்கது.

இன்றுதான் நீயென்னைக் கண்டிருந்துங் கண்டாயோ
அன்றித்தான் நானுன்னைக் கண்டேனோ என்றால்
அருமாயை ஈன்றவள்தன் பங்கனையார் காண்பார்
பெருமாயைச் சூழல் பிழைத்து

மாணவனே, இன்று நீ என்னை உன் ஊனக் கண்ணால் கண்டும் என் ஆன்மாவன் தன்னியல்பைக் கண்டாயோ? காணவில்லை. அன்றி நான்தான் உன் பருவுடம்பைக் கண்டிருந்தும் உன்னுடைய உயிர் இயல்பைக் கண்டேனோ? கண்டிலேன் மாந்தராகிய நாம் ஒருவரை ஒருவர் கண்ணால் கண்டும் முற்றிலும் கண்டிலோம் எனில், நுண்ணிய மாயையிலிருந்து இவ்வுலகங்களை எல்லாம் தோற்றுவித்து அருளும் சிவ சத்தியைத் தன்னுடைய ஒரு பாகத்திலே கொண்ட உமையொரு பாகனை மாயையுட்பட்ட யார்தான் காண இயலும்? ஒருவராலும் காண ஒண்ணாது.

மாயையை ஈன்றவள் என்பது மாயையிலிருந்தும் உடல்கருவி உலகு நுகர்ச்சிப் பொருள் ஆகிய யாவற்றையும் படைத்து உயிர்களுக்கு வழங்கிய சிவத்தியைக் குறித்தது. வேயுறு தோளி பங்கன் என்பது போல அவளைத் தன் பங்கிலே உடைய சிவபெருமான் பங்கன் என்ற சொல்லால் குறிக்கப்பெற்றார்.

மயக்கமும் செய்யும் மாயையினால் பிணிக்கப்பட்ட உயிர்கள் மாயச் சூழலை வென்று சிவபெருமானைக் காண்பதற்குரிய ஆற்றல் அற்றன என்பதனைப் பெருமாயைச் சூழல் பிழைத்துக் காண்பார் யார் என்று கூறினார். இறைவன் உயிரின் அறிவால் காண்பதற்கு அரியவன் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.

கடல் அலைத்தே ஆடுதற்குக் கைவந்து நின்றும்
கடல் அளக்க வாராதாற் போலப் படியில்
அருத்திசெய்த அன்பரைவந்து ஆண்டதும் எல்லாம்
கருத்துக்குச் சேயனாய்க் காண்.

அலைமோதும் கடல் மக்கள் குளிப்பதற்கு இடம் தந்து அவர்களுக்கு எட்டுவதாய் இருக்கும். ஆயினும் கடலின் பரப்பையும் ஆழத்தையும் நினைக்கப் புகுங்கால் அதன் பெருமை அளக்க இயலாதது என்பது புரியும். அவ்வாறே அன்பே வடிவான மெய்யடியார்களுக்கு அருள் பாலிப்பதற்காக ஆசிரியத் திருமேனி தாங்கிச் சிவபெருமான் அவர்களை அணுகி வந்து ஆண்டுகொள்வான். எனினும் அவனுடைய இயல்புகள் யாவும் யாராலும் அறிய ஒண்ணாதன.

கடலில் குளிப்பவர்கள் கடற்கரையின் ஒரு துறையிலே மணற்பாங்கான பகுதியில் இறங்கிக் குளிப்பார்கள். அக்கடலும் தன் அலைக் கைகளை நீட்டி அவர்களை நீராட்டும். குளிப்பவர்களும் தாங்கள் கடலில் குளிப்பதாகவே கொள்ளுவார்கள். ஆனாலும் எல்லையற்று விரிந்து பரந்த ஆழம் காணமுடியாத பெருங்கடலின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மிகச் சிறு எல்லைக்குள்தான் அவர்கள் நீராடுகிறார்களே அன்றிக் கடல் முழுதும் அவர்கள் வசம் ஆவதில்லை. கடலில் குளித்தேன் என்று சொல்லும்போது பெருங்கடலின் மிகச்சிறு பகுதியில் குளித்தேன் என்றே பொருள்தரும் இவ்வுண்மை நுணுகி ஆராய்வார்கே புலனாகும்.

சிவபெருமான் தன் பெருங் கருணையால் பக்குவப்பட்ட உயிரை ஆண்டு கொள்ளுவதற்காக ஆசிரியத் திருமேனி தாங்கி எழுந்தருளுவான். உயிரை அணுகி அருள் பாலிக்கின்ற இறைவன் உயிரின் அறிவுக்கு மிகச் சேய்மையில் உள்ளான் என்பதை நுணுகி ஆராய்வார் உணர்ந்துகொள்ள முடியும். ஏனெனில் இறைவனின் கருணை எல்லையற்று விரிந்துகிடக்கும் அண்டங்களில் எல்லாம் பரந்து நிற்பது. உயிரின் சிற்றறிவு அவ் விரிவினை உணர்ந்துகொள்ள இயலாது.

இறைவன் எளிவந்தானாயினும் அவன் அருமை அளவிடற்கரியது என்பதை இப்பாடலால் கூறினார்.

சிவன் எனவே தேறினன் யான் என்றமையால் இன்றும்
சிவன் அவனி வந்தபடி செப்பில் அவனிதனில்
உப்பெனவே கூர்மை உருச்செய்யக் கண்டமையில்
அப்படியே கண்டாய் அவன்.

மாணிக்கவாசகர் திருவண்டப் பகுதியில் சிவன் என யாரும் தேறினன் காண்க என்று அருளியுள்ளார். இவ்வாறு அவர் அருளியது அவரை ஆட்கொள்ள வேண்டி ஞானாசிரியத் திருமேனி தாங்கிக் குருந்த மரத்தடியில் எழுந்தருளியிருந்த சிவபெருமானின் கருணைத் திறத்தினை, ஆதலால் சிவபெருமான் அவனியில் புகுந்து ஆட்கொண்டனன் என்பது விளக்கப்பட்டது. கடல் நீரில் ஒவ்வொரு துளியிலும் கலந்திருந்தும் கண்ணுக்குப் புலப்படாது நிற்கும் உப்பு உரிய காலத்தில் கூர்த்த நுனி கொண்ட உப்புக் கற்களாக மாறுவதைப் போல் வடிவம் குறியும் அற்ற பெருமான் அடியார்களை ஆட்கொள்ளும் பொருட்டுத் திருமேனி தரித்தருளுவான் என்பதனை உணர்க.

பாடலின் முதல் வரியில் சிவன் எனவே தேறினன் யான் என்றமையால் என்று ஆசிரியர் காட்டுகிற மேற்கோள் மணிவாசகப் பெருந்தகை அருளிச் செய்த திருவாசகத்தின் திருவண்டப் பகுதியில் வருகின்ற சொற்றொடர் ஆகும்

புவனியில் சேவடி தீண்டினன் காண்க
சிவனென யானுந் தேறினன் காண்க
அவனெனை யாட்கொண்ட டருளினன் காண்க.

என்பது அப்பகுதி, பாண்டிய மன்னனுக்காகப் பரி வாங்கச் சென்ற வாதவூர் அடிகள் குருந்த மரத்தினடியில் எழுந்தருளி வீற்றிருந்த ஞானாசிரியப் பெருந்தகையாகிய சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டார் என்பது அடிகளின் வரலாற்றால் அறியப்படுகின்ற அகச் சான்றுகளால் உறுதிப் படுத்தப்படுகிறது.

வான்பழித்து இம்மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளலாகிய சிவபெருமான் இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி அடியவர்களை ஆண்டுகொண்டு அருளுவான். அருபரத்து ஒருவன் அவனியில் வந்து குருபரனாகி அருளிய பெருமையைப் போற்றித் திரு அகவல் இயம்பி அருளுகிறது. குருவே சிவன் எனக் கூறினன் நந்தி என்று திருமந்திரம் அறிவுறுத்துகிறது.

92. அவன் இவனாய் நின்றது அவனருளால் அல்லது
எவன் அவனாய் நிற்கின்றது ஏழாய் அவனிதனில்
தோன்றும்மரப் புல்லூரி தொல்உலகில் அம்மரமாய்
ஈன்றிடுமோ சொல்லாய் இது.

வாக்கு மனம் கடந்த வான் கருணையாளனாகிய சிவபெருமான். தன் அடியார்களை ஆண்டுகொண்டு அவர்களைச் சிவமாக்கி அருள் பாலித்து பெருங் கருணைத் திறத்தினாலேயே அன்றி வேறன்று. சிவபெருமான் எளிவந்த தன்மையோடு ஆண்டிலனேல் இவ்வுயிர்கள் எவை தாம் அவனாய் நிற்கின்ற தன்மையைத் தாமாக அடைய முடியும் ? அறிவால் எளியவனே, உலகத்தில் கனிமரங்களைப் பற்றி உயிர் வாழ்கின்ற புல்லூரி அம்மரங்களோடு ஆண்டாண்டுக் காலம் பொருந்தி இருந்தாலும் அம் மரத்தின் கனியைத் தாம் தரவல்லதோ? வல்லதன்று. அது போன்றதே உயிர்களின் தன்மையும் .

பக்குவம் பெற்ற உயிர்கள் இறைவனது திருவருளால் சிவமாம் தன்மை எய்தும். அவ்வாறு எய்துவது சிவ பெருமான் திருவருளால் அல்லாமல் உயிர்களின் முயற்சியினால் அன்று. அது மட்டிலுமல்லாமல் அந்நிலை அடைந்த உயிர்கள் இறைவனுக்கு அடிமைகளாகவே இருக்கும். சிவ பெருமானுக்குரிய ஐந்தொழில் ஆற்றும் வல்லமையோ பிற இயல்புகளோ உயிர்களுக்கு வாய்க்காது. இதனையே மணிவாசகர் சிவமாக்கி எனை ஆண்ட் என்ற சொற்களால் குறித்தருளுகிறார். இந்தப் பகுதி சிவசமவாதக் கொள்கையை மறுத்து எழுந்த பகுதியாகும்.

இக் கொள்கையை மறுப்பதற்கு ஒரு அழகிய உவமையை ஆசிரியர் பயன்படுத்துகிறார். புல்லூரி என்பது ஒருவகை ஒட்டுண்ணித் தாவரம். இது மரங்களின் மேற்பட்டைகளில் ஒட்டிக் கொண்டு தனக்கு வேண்டிய உயிர்ச் சத்தை அந்த மரங்களிடமிருந்தே பெற்று உயிர் வாழ்வது .

இவ்வாறு ஒரு புல்லுருவி சுவைமிக்க கனி தரும் மாமரத்தில் பல்லாண்டுகளாக ஒட்டிக் கொண்டு உயிர் வாழ்கிறது என்று வைத்துக் கொள்ளுவோம். புல்லூரி தனக்கு வேண்டிய உயிர்ச் சத்தை மாமரத்திலிருந்தே நெடுங்காலமாகப் பெற்று வருகிறது. மாமரத்தின் உயிர்ச் சத்து பூங்கொத்தாய், காயாகிக் கனியாகப் பழுத்தும் பயன்தரவல்லது. ஆனால் புல்லூரி அதே உயிர்ச் சத்தை உண்டும் ஒரு நாளும் மாங்கனியைத் தருவதில்லை. இது போலவே எல்லையற்ற சிவபரம் பொருளோடு உயிர் ஒன்றி நின்றாலும் , சிவ பெருமான் அருட்கனி வழங்கும் வள்ளலாக விளங்குகிறான். அவைனச் சார்ந்த உயிர் புல்லூரியைப் போல ஒட்டுண்ணியாக வாழுமே தவிர அது பூப்பதுமில்லை. காய்ப்பதுமில்லை. கனி தருவதுமில்லை.

இப்பாடலின் மூலம் சிவனே பரம்பொருள் என்பதுவும் உயிர் அப் பரம்பொருளுக்கு மீளா அடிமை என்பதையும் அழகிய உவமை மூலம் ஆசிரியர் விளக்கினார்.

93 முத்தி  முதல் கொடிக்கோ மோகக் கொடி படர்ந்து
அத்தி பழுத்தது அருளென்னும் கத்தியினால்
மோகக் கொடி அறுக்க  முத்திப் பழம் பழுக்கும்
ஏகக் கொடியெழும் காண் இன்று .

உயிர் என்னும் கொடி முறைப்படி வளர்ந்து முத்தி என்னும் கனியினைத் தருவதற்கு உரியது. ஆயின் அந்த முத்திக்  கொடியைச் சுற்றிலும் ஆணவ மலத்தின் காரியமாகிய மோகம் என்னும் கொடி பற்றிப் படர்ந்து மூடிற்று. இதன் விளைவாக முத்திக் கனி கனியாமல் அத்திப்பழம் பழுத்தது. திருவருளாகிய கத்தியின் துணை கொண்டு மோகக் கொடியை வேருடன் அறுத்து நீக்கினால் சிவானந்தப் பெருவாழ்வாகிய முத்திப் பழம் உயிர்க் கொடியிலே பழுக்கும். அப்போது உயிர் இறைவனோடு இரண்டறக் கலத்தலாகிய பேரின்பமும் விளையும்.

இப்பாடல் முற்றுருவமாக அமைந்துள்ளது. ஆன்மாவை முத்தி முதற் கொடி என்றார். ஏனெனில் பரம்பொருளாகிய சிவபெருமான் இயல்பாகவே பாசங்களின்  நீங்கியவன் என்பதால் அவனுக்கு விடுதலை என்ற ஒன்று பேசுவதற்கே இடமில்லை. பாசங்களோவென்னில் அவை யாவும் சடப் பொருள்கள் ஆதலால் அவற்றுக்கு வீடு பேறு என்ற ஒன்று இல்லை. இவ்வாறு முப்பொருள்களில் இரண்டு கழிக்கப்பட்ட பிறகு எஞ்சுவது அடைந்தும் உய்வதற்கு உடையது. எனவே முத்திக்கனி பழுப்பதே உயிர்க்கு உரிய குறிக்கோள் வாழ்வின்  பண்பும் பயனும் அதுவே

தோற்றமில் காலந் தொட்டே உயிரைப் பற்றி நின்ற ஆணவத்தினால் மோகம் என்னும் கொடி அடர்ந்து படர்ந்து உயிராகிய முத்திக் கொடியை முற்றிலும் மூடி விடுகிறது. இதன் பயனாக முத்திக்  கனி பழுக்காமல் அத்திப்பழம்பழுத்தது. அத்திப்பழம் என்பது இங்கு உரிய பயனுக்கு மாறாக மற்றொண்று விளைந்தது என்ற பொருளைத் தந்தது. அத்தி என்பது அருத்தி என்ற சொல்லின் இடைக் குறையாகக்  கொண்டு அவா என்னும் பொருளைத் தருவதாகக் கொள்வாரும் உண்டுகளை போலப் படர்ந்த மோகக் கொடியை அறவே நீக்கினாலன்றி முத்திப்பயன் விளையாது என்பதறிந்து திருவருளாகிய கத்தியைக் கொண்டு மோகக் கொடியை வேரோடு அறுத்து நீக்குதல் வேண்டும். இவ்வாறு நீக்கினால் முத்திந் பழம் விளையும் என்று ஆசிரியர் அறிவுறுத்துகிறார்.                                                                                                                                                             
மோகக் கொடி வேரோடு நீக்கப்பட்ட பிறகு முத்திப்பழம் பழக்கும் ஏகக் கொடி எழும் என்றார். பாசத்தின் கட்டுக்களைத் தகர்த்தெழுந்த உயிர் இறைவனோடு இரண்டற நிற்கும் தகுதியைப் பெற்றுச் சிவானந்தக் கனியைப் பெறும் என்று விளக்கிற்று இப்பாடல், கூர்த்த மெய்ஞ்ஞானம் இப்பாடலில் கத்தியாக உருவகம் செய்யப்பட்டது.

94 அகளத்தில் ஆனந்தத் தானந்தி யாயே
சகளத்தில் தையலுடன் தோன்றி  நிகளத்தைப்
போக்குவதும் செய்தான் தன் பொன்னடிஎன் புன்தலைமேல்
ஆக்குவதும் செய்தான் அவன்.        

அருவநிலையில் இன்பத்துக்குள் இன்பம் தரும் ஞானமே உருவாக விளங்குகின்ற இறைவன் தன் கருணையாகிய சத்தியோடு திருமேனி தாங்கி வந்து குருவடிவம் கொண்டு, தேற்றமில்  காலத்தொட்டே என்னைப் பிணித்திருந்த பாசமாகிய விலங்குகளை அறுத்து எறிந்தான் . தன்னுடைய பொன்னார் திருவடிகளை எனது புல்லிய தலைமீது வைத்து என்னை ஆட்கொண்டான்.

இறைவன் தன்னிலையில் நிற்கும் போது ஞானமே வடிவாகக் குறிகளும் அடையளமும் அற்று விளங்குவான் . அது அருவ நிலை அகளம் அருவம், அந்த நிலையிலும் அவன் ஒப்பற்ற பேரின்ப வடி வினனே , உயிர்களிடத்து வைத்த பேரன்பினால் தனது திருவருட் சத்தி யோடும்கூடத் திருமேனி தாங்கி இறைவன் உயிர்களை ஆட்கொள்ளும் வதற்காக ஞான ஆசிரியனாய் எழுந்தருளுவான் . அதனை அருள்நந்திசிவம்  சிவஞான சித்தியாரில் நம்தம் கருமேனி கழிக்கவந்த கருணையின் வடிவுகாணே (75) என்று அருளிச் செய்கிறார். இது சகள நிலை எனப்படும். (சகளம்உருவம்).

மாதொரு பாகனாக எழுந்தருளிவந்த இறைவன் உயிரைப் பற்றி யிருந்த பாசமாகிய விலங்குகளைத் தறித்துப் போக்குகிறான் . நிகளம் விலங்கு .ஆசா நிகளம் துகளாயின பின் பேசா அனுபூதி பிறந்ததுவே  என்பது அருணகிரிநாதர் திருவாக்கு. விலங்கினை ஒழித்ததுமின்றித் தன் பொன்னடிக் கமலங்களை என்தலை மீது சூட்டியதன் மூலம் எனக்குத் திருவருள் பாலித்தான் என்கிறார் ஆசிரியர்.

95 குற்றம் அறுத்து என்னை ஆட்கொண்டருளித் தொண்டனேன்
உற்ற தியானத்து உடன் உறைவன் முற்றவரின்
மாட்சியுமாய் நிற்பன்யான் மற்றொன்றைக் கண்டிடின் அக்
காட்சியுமாய் நிற்பன் கலந்து.

ஞானாசிரியனாக எழுந்தருளி வந்த சிவபெருமான் என்னைப் பற்றியிருந்த குற்றங்களாகிய மும்மலங்களையும் அறவே போக்கி என்னை ஆட்கொண்டு அருளினான். அவன் திருவருளால் என்னுடைய தியானத்தில் தாமும் நானும் என்ற வேற்றுமை அகன்று போக என்னோடு உடனாக உறைந்தான். தியானம்  முதிர அதன் மாட்சியுமாய்த் திகழ்ந்தான் வாதனையின் பயனாக என் நினைவு வேறு ஒரு பொருள் மேல் செல்ல நேர்ந்தாலும் அந்தக் காட்சியும் தானேயாய்க் கலந்து நின்றான்.

சித்த மலம் அறுவித்துச் சிவமாக்கி எனை ஆண்ட என்ற மாணிவாசகப் பெருந்தகையின் திருவாக்கிற்கு ஏற்ப ஞான வடிவாக வந்த சிவபெருமான் ஆசிரியரது மலப் பிணிப்புக்களை அறுத்தொழித்தான் என்கிறார். அந்நிலையே  தியானத்தில் அழுந்திய ஆசிரியர் தியானத்துக் குரிய பொருளாகிய சிவமும் தியானிப்பவராகிய ஆசிரியரும் தியானித்தல் என்ற நினைவும் மறைந்தகல இறைவன் அவரோடு இரண்டறக் கலந்து நின்றனன் என்கிறார். உலக வாதனை தாக்கும் பொழுது அந்தக் காட்சியுமே குறைவற்ற செல்வமாகிய சிவப் பேரின்பத்தையே நலகும் வகையில் கலந்து நின்றான் என்றுரைத்தார்.

96 ஆளுடையான் என்தரமும் ஆளுடையானே அறியும்
தாளுடையான் தொண்டர் தலைக்காவல் நாளும்
திருவிசலூர் ஆளுஞ் சிவயோகி இன்றென்
வருவிசையை மாற்றினான் மாற்றினாள் வந்து.

உலகையெல்லாம் ஆளுடைய பிரானாகிய சிவபெருமான் என் பொருட்டுத் திருவியலூரைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்ட சிவயோகி ஆகி ஆளுடைய தேவ நாயனார் என்னும் திருப்பெயர் தாங்கி எனக்கு ஆசிரியராக எழுந்தருளி என்னை ஆண்டு கொண்டார். முற்றறிவுடைய திருவருளால் நிரம்பப் பெற்ற அத் தலைவன் தன்னைச் சார்ந்தவர்களைக் காக்கும் இயல்புடைய முதல்வன் அவன் என்னை ஆண்டு கொண்டமையினால் என்னைப்பிறப்பு இறப்புகளுக்கு உட்படுத்தும் பாசப் பிணிப்புகள் தமது ஆற்றலை இழந்தன. நான் அவனது திருவடி நிழலிலே மாறாத பேரின்பத்தை நுகர்ந்திருக்கும் பேறு பெற்றேன்.

இப்பாடலில் முதலில் வருகிற ஆளுடையான் என்ற சொல் உலகனைத்தையும் தனக்கு உடைமையாகவும் உயிரனைத்தையும் தனக்கு அடிமையாகவும் கொண்ட சிவபெருமானைக் குறித்தது. இரண்டாவது வரும் ஆளுடையானே என்னும் சொல் திருவியலூர் உய்ய வந்த தேவ நாயனாரின் மாணவராகவும் திருக்கடவூர் உய்ய வந்த தேவ நாயனாருக்கு ஞானாசிரியராகவும் விளங்கிய ஆளுடைய தேவ நாயனாரைக் குறித்தது. அவர் சிவயோகியார் என்பதும் திருவியலூரைத் திருப்பதியாகக் கொண்டவர் என்பதும் பாடலின் பிற்பகுதியில் எடுத்துரைக்கப்பட்டன.  இப்பாடலின் இந்தப் பகுதி இந் நூலின் மூன்றாவது பாடலில் குறிப்பாகக் கூறப்பட்டமையும் காண்க.

இறைவன் திருவடி ஞானமே வடிவானது. அவையே உயிர்களின் பொருட்டு ஐந்தொழிலும் நிகழ்த்தி உயிர்களை முத்தி நிலையில்  சேர்ப்பன. எனவே திருத்தளை விதந்து கூறினார்.சாந்தாரைக் காத்தல் தலைவர் கடன் ஆதலினால் தொண்டரைக் காக்கும் இறைவன் திறத்தினை மனமுவந்து போற்றினார். மாறி மாறிப் பிறப்பதற்கு விசையாக அமைந்தது பாசப் பிணிப்பு ஆதலால்  அதை அறுப்பதன் மூலம் செயல் இழக்கச் செய்தான் என்று கூறுவார், விசையை மாற்றினான் என்றார். இத்தகைய பெருங் கருணையைத் தானாக வந்து வழங்கினான் என்பதை உணர்ந்த வந்து மாற்றினான் என்றும் கூறினார்.

97 தூலத்து அடுத்த பளிங்கின் துளக்கம் எனத்
தூலத்தே நின்று துலங்காமல் காலத்தால்
தாளைத்தந்து என் பிறவித்தாளை அற விழித்தார்க்கு
ஆளன்றி என் மாறு அதற்கு.

தனக்கென ஒரு நிறமற்ற படிகக்கல் தன் அருகில் உள்ள பிற பொருள்களின் வேறுபட்ட பல நிறங்கள் தன் மீது படிவதனால் பன்னிறம் காட்டும். அதனால் நொடிக்கு நொடி வேறுபட்டுத் தோன்றும். சார்ந்ததன் வண்ணமாம் தன்மை உடைய உயிராகிய நான் உலகத்துப் பொருள்களில் பிணிப்புண்டு கலங்காமல் மலபரிபாகமும் இருவினை ஒப்பும் சத்திநிபாதமும் நிகழ்ந்த காலத்தில் ஞானசிரியனாக எழுந்தருளி வந்து தன்னுடைய திருவடிப் பேற்றை வழங்கி என் பிறவியின் வேர் அறுமாறு திருக்கடைகண் பாலித்த  சிவ பெருமானுக்கு மீளா அடிமையாகித் தொண்டு செய்தலன்றி நான் வேறு என்ன கைம்மாறு செய்ய வல்லேன்?

பளிங்கு என்று இப்பாடலில் குறிக்கப்படுவது தனக்கென ஒரு நிறமற்ற படிகக்கல். படிகக்கல் தன் அருகில் உள்ள பொருளின் நிறத்தைப் பெற்று விளங்குவதன்றித் தனது இயல்பான நிறத்தை நுணுகிப் பார்ப்பவர்களுக்கன்றிக் காட்டுவதில்லை. முதலில் குறிப்பிடப்பட்ட தூலம் என்பது படிகத்தின் அருகில் உள்ள பருப்பொருளை. இப்பருப் பொருளின் இயல்புக்கேற்றவாறு படிகக்கல் பல்வேறு நிறங்களைக் காட்டி மாறுபட்டுத் தோன்றும். ஆன்மாவும் சார்ந்ததன் வண்ணமாம் தன்மை உடையது. ஆதலால் அது படிகக்கல்லைப் போன்றது.சகல நிலையில் உலகத்துப் பொருள்களில் ஆன்மா படிவதால் அவற்றிலே அழுத்தித் தன்னியல்பு விளங்காமல் கலக்கமுறும். இரண்டாவது வரியில் தூலத்தே நின்று துலங்காமல் என்று ஆசிரியர் குறித்தது உலகத்தப் பொருள்களில் அழுந்தி ஆன்மா கலங்காத வண்ணம் என்ற பொருளைத் தந்தது.

காலத்தால் என்பது உயிருக்கு பக்குவம் வந்துற்ற காலத்தில் என்று பொருள் தரும். பரிபக்குவ காலத்தைப் பற்றிக் குறிப்பிடும் குமரகுருபர முனிவர் தமது கந்தர் கலிவெண்பாவில் , நால் வகையாம் சத்திநிபாதம் தருதற்கு இருவினையும் ஒத்துவரும் காலம் உளவாகி  என்று அருளுதல் நினைவு கூரற்பாலது. உரிய காலத்தில் இறைவன் குரு வடிவு கொண்டு  எழுந்தருளி வந்து தனது திருவடியைத் தந்தருளுகிறான் என்பதனை ஆசிரியர் குறிப்பிடுகிறார். முதலில் வரும் தாள் என்பது இறைவன் திருவடியையும் அதன் பின்னர் வரும் பிறவித்தாள் என்பது பிறவியின் வேர் என்பதனையும் குறித்தன.

தன் திருக்கடைக்கண் பார்வையினால் இறைவன் பிறவியை வேரறுத்தான் என்பதைக் குறிக்க தாளை அற விழித்தான் என்று அருளினார், இப்பெருங் கருணைக்குக் கைம்மாறு இறைவனுடைய திருவடிக்கு மீளா அடிமையாய் ஆட்பட்டிருப்பதன்றி வேறு ஒன்றும் இல்லை என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.

98 இக்கணமே முத்தியினை எய்திடினும் யான் நினைந்த
அக்கணமே ஆனந்தம் தந்திடினும்  நற்கணத்தார்
நாயகர்க்கும் நாயகிக்கும் நந்திக்கும் யான் அடிமை
ஆயிருத்தல் அன்றியிலேன் யான்

இந்த வினாடியிலேயே இறைவன் திருவருளால் எனக்கு முத்தி நிலை வந்து கூடிடினும் பேரின்பப் பொருளாகிய சிவபெருமான் நான் நினைத்த வினாடியிலேயே எனக்கு மாறாத சிவானந்தத்தை வழங்கிடினும், நல்ல சிவனடியார்களுக்குத் தலைமை பூண்டு விளங்குகின்ற சிவபெருமானுக்கும் பிராட்டிக்கும் அடிமையாய் இருத்தலன்றி நான் பெறும் பேறு மற்றொன்று இலேன்.

மெய்த் தொண்டர்களின் நிலை இதுவெனக் காட்டும் திருப்பாடலாகும் இது. பெறுதற்கரிய முத்தி நிலை வந்தாலும் எல்லையற்ற பேரின்பத்தில் திளைத்திருந்தாலும் அம்மையப்பருக்கு ஆட்பட்டிருப்ப தன்றிச் சிந்தையும் செயலும் வேறு எதனையும் விழையாது திருத்தொண்டிலேயே உறைந்திருப்பர் சிவஞானிகள்.

99 என்னை உடையவன் வந்து என்னுடனாய் என்னளவில்
என்னையும் தன் ஆளாகக் கொள்ளுதலால் என்னை
அறியப் பெற்றேன் அறிந்த அன்பருக்கே ஆளாய்ச்
செறியப் பெற்றேன் குழுவில் சென்று.

என்னை ஆளுடைய சிவபெருமான் தோன்றாத் துணையாய் இருந்து அருள் பாலித்ததோடு அமையாமல் ஞானாசிரியத் திருமேனி கொண்டு எழுந்தருளி வந்து எளியேனாகிய என்னையும் ஆண்டு கொண்டதனால் அவனருளால் என் இயல்பை உள்ளவாறு அறியப் பெற்றேன். அவ்வாறு அறிந்த அன்பர்களுக்கு ஆட்பட்டேன். அவர்களின் திருக்கூட்டத்தில் நானும் ஒருவனாக இடம் பெற்றேன்.

சிவஞானச் செல்வர்கள் திருக் கூட்டத்தில் தாமும் ஒருவராகச் சென்று சேரும் பேறு பெற்றமையை வியந்து போற்றுகிறார் ஆசிரியர். இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே , வாழ்வின் ஒப்பற்ற போது என்பது மெய்யடியார்கள் கண்டு உணர்த்திய கருத்து. சிவஞான போதம் பன்னிரண்டாம் சூத்திரம் அன்பரோடு மருவுதலைச் சிறப்பித்துக் கூறும். திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர் நம்பியாரூரர் ஆகிய மூவரும் சிவனடியார்களோடு சேர்ந்திருக்க விழைந்து பாடி அருளிய திருப்பதிகங்கள் இதனை வலியுறுத்தும்.

100 சிந்தையிலும் என் தன் சிரத்தினிலும் சேரும் வண்ணம்
வந்தவனை மண்ணிடை நாம் வாராமல்  தந்தவனை
மாதினுடன் எத்திறமும் வாழ்ந்திருக்க என்பதலால்
ஏது சொலி வாழ்த்துவேன் யான்.

என் சிந்தையிலும் சிரத்தினிலும் சேர்ந்திருக்கும் வண்ணம் எளிவந்து அருளுகின்ற சிவபெருமானை, வினைவயப்பட்டு மண்ணுலகில் மீண்டும் பிறவாதவாறு என்னை ஆட்கொண்டு தன் பேரருளை வழங்கிய பெருமானை அம்மையப்பராக என்றென்றும் எழுந்தருளியிருந்து அருள் பாலிக்க வேண்டும் என்று போற்றுவதன்றி வேறு என்ன சொல்லி எவ்வாறு வாழ்த்துவேன்.
திருக்களிற்றுப்படியார் பகுதி - 2

31 பற்றினுட் பற்றைத் துடைப்பதொரு பற்றறிந்து
பற்றிப் பரிந்திருந்து பார்க்கின்ற பற்றதனைப்
பற்று விடில் அந்நிலையே தானே பரமாகும்
அற்றமிது சொன்னேன் அறி.

உடல், கருவி, உலகு நுகர்ச்சிப் பொருள் ஆகியவற்றில் உயிருக்கு இயல்பாகப் படர்கின்ற பற்றினைத் துடைப்பதற்கு உரிய துணையாக இருப்பது திருவடி ஞானமே என்பதனை அறிந்து அதனையே பற்றி. அன்போடு கூடித் தன் முனைப்பை நெகிழவிடின் அந்நிலையிலேயே சிவப் பேரொளி தோன்றும். இதனை உனக்கு அறிவுறுத்தினேன் கேட்பாயாக.

யான் என்னும் அகப்பற்றும், எனது என்னும் புறப் பற்றும் உயிர்களுக்கு மேலும் மேலும் பிறப்பு இறப்புக்களை உண்டாக்கும் என்பது மேலோர்கள் அறிந்து அறிவித்த உண்மை. பற்றற்று இருத்தல் என்பது எளிதில் கைகூடும் அன்று என்பதனையும் அருளாளர்கள் உணர்ந்திருந்தார்கள். இழிந்த பொருள்களில் செல்லுகின்ற பற்றினை ஒழிப்பதற்கு உரிய உபாயம், உயர்ந்த பொருளின் இறுகப் பற்றிக் கொள்ளுவதே என்று அவர்கள் நமக்கு அறிவுறுத்தினாகள். இறைவன் திருவடியை விட உயர்ந்த பொருள் வேறு ஒன்றும் இல்லை. ஆதலால் அதனையே பற்றிக் கொள்க என அறிவுத்தினார்கள். அவ்வாறு பற்றிக் கொள்ளப்பட்ட செம்பொருளே உலகியல் பற்றுக்களை அறவே துடைத்து எறியும் என்பதனையும் உணர்த்தியருளினார்கள்.

திருக்குறளில் ,பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு (குறள் 350) என்று திருவள்ளுவ நாயனார் கூறியதும், திரு உந்தியாரில் பற்றை அறுப்பதோர் பற்றினைப்பற்றி என்று தொடங்கும் பாடலும் இந்தப் பாடலுக்கு முன்னோடியாக அமைந்தன.

பற்றினை ஒழிப்பதால்தான் மனிதனின் துயரம் தீரும் என்பதை எத்தனையோ சமயங்கள் பன்னெடுங்காலமாக எடுத்துரைத்து வந்திருக்கின்றன. அத்தகைய சமயங்கள் எல்லாம் துறவு நெறியை மிகவும் வலி யுறுத்தின. துறவு நெறியிலுங்கூடத் துறவிக்குத் தன் உடல் மீது பற்று இருத்தல் கூடாது என்பதற்காக உடலை வருத்தியும் ஒறுத்தம் பழகுதல் வேண்டும் என்று அவை கூறி வந்தன. சைவசமயத்திலோ இத்தகைய கடுமையான வழிகளிலே பற்றை அறுத்தல் வேண்டும் என்று கூறாமல் செம்பொருளைப் பற்றுவதன் மூலம் உலகியல் பற்றை விட்டொழிக்க முடியும் என்ற எளிய முறை உணர்த்தப்பட்டது. நான் பற்றினைத் துறக்கிறேன் என்று எண்ணுவதும் கூட  அகப்பற்றுக்கு இடம் கொடுக்கிறது. ஆதலால் அந்த நினைவும் பற்றறுக்க முனைவாருக்கு ஏற்படுதல் கூடாது. உறங்கினவன் கையிலிருந்த பொருள் தானாக நழுவிப் போய் விடுவது போலப் பற்றுக்கள் அகல வேண்டும். அது, தற்போதம் இழந்து உயிர் சிவஞானத்தின் ஒன்றிய போதுதான் கைகூடும் என்பது இந்தப் பாடலிலும் இதுபோன்ற சாத்திர தோத்திர நூற்களிலும் எடுத்துறைக்கப்பட்டுள்ளது.

மாணிக்கவாசகர் திருவாசகத்தில் ,
 பற்று ஆங்கு அவை அற்றீர் பற்றும் பற்று ஆங்கு அது பற்றி
நற்றாங்கதி அடைவோம் எனில் கெடுவீர் ஓடிவம்மின்
தெற்றார் சடைமுடியான் மன்னுதிருப் பெருந்துறை இறைசீர்
கற்றாங்கு அவன் கழல் பேணின ரொடுங் கூடுமின் கலந்தே
என்று அருளிச் செய்ததும் இங்குக் கருதத்தகுந்தது.

32 அறிவறிவாய் நிற்கில் அறிவுபலவாம் என்று
அறிவின் அறிவு அவிழ்த்துக் கொண்டு அவ் அறிவினராய்
வாழ்ந்திருப்பர் நீத்தோர்கள் மானுடரின் மாணவகா
தாழ்ந்தமணி நாவேபோல் தான்.

உயிர் தனது அறிவினாலேயே யாவற்றையும் அறிந்து கொள்ளுவேன் என்ற முனைப்போடு உலகத்துப் பொருள்களில் படியும் போது தனது முயற்சியில் தோல்வியடைகின்றது, ஏனெனில் உயிரின் அறிவு சிற்றறிவு. அது பொருள்களைப் பற்றும் பொழுது அவ்வப்பொருள்களில் அழுந்தி அதுவதுவாகக் கண்டு பண்முகப்பட்டுச் சிதறி ஓடுமேயன்றி, ஒரு முகப்பட்ட பேரறிவு உயிருக்கு வாய்ப்பதில்லை. இதனை ஞானாசிரியன் உணர்த்த, உணர்த்தியவாறே உணர்ந்து தன் முனைப்புக் கெடுமாறு திருவருள் ஞானத்தோடு ஒன்றி இருக்கப் பெறின் உலகப் பற்றினை நீத்தவர்கள் சிவமாம் தன்மை பெறுவார்கள். அகப்பற்று புறப்பற்று எனக் கூறப்படும் யான் எனது என்னும் செருக்கை  அறுத்தவர்கள் நிலத்தின் மீது தாழ வைக்கப்பட்ட மணியின் நாவைப்போல் அசையா திருப்பார்கள்.

புலன்வழி ஓடிப் பொருள்களைச் சேரும் உயிர் அறிவு ஒன்றைப் பற்றும் இயல்புடையதேயன்றி ஒருமுகப்பட்டு யாவற்றையும் ஒருங்கே அறியும் இயல்புடையது அன்று. எனவே மெய்ப்பொருளை அறிய விழையும் உயிர்கள் தமக்கென ஒரு முயற்சியின்றித் திருவருள் ஞானத்தைப் பற்றித் தற்போதம் கெட நிற்றல் வேண்டும் அவ்வாறு பற்று அறுத்தவர்களுக்கு சிவப் பேரின்பம் கிட்டுவதனால் ஆரவாரம் அடங்கி, நிலத்தில் பொருந்த வைக்கப்பட்ட மணியின் நாவைப் போலத் திருவருளை ஆதாரமாகக் கொண்டு பேரின்பத்தில் திளைத்திருப்பர்.

33 ஓசையெலாம்  அற்றால் ஒலிக்கும் திருச்சிலம்பின்
ஓசை வழியே சென்று ஒத்து ஓடுங்கின் ஓசையினின்
அந்தத் தானத்தான் அரிவையுடன் அம்பலத்தே
வந்து ஒத்தான் அத்தான் மகிழ்ந்து.

முந்திய பாடலிலே கூறப்பட்ட படி  உலகத்தின் ஆரவாரங்கள் ஒடுங்க இறைவனின் திருவடியிலே ஒற்றித்து நின்ற உயிருக்கு ஆனந்தப் பெருங்கூத்து ஆடும் பெருமானின் திருவடியிலே விளங்கும் சிலம்பின் ஓசை கேட்கும், அந்த ஓசையைப் பற்றிக் கொண்டே அதன் வழியே சென்றால் அதன் முடிவிலே சிவகாமியம்மை காணத் திருநடனம் புரிகின்ற அம்பலக் கூத்தன் விருப்பத்துடன் வெளிப்பட்டு இவ்வுயிருடனே நேர் படக் கூடியருளுவான்.

யோக நெறியில் நின்றார்க்கு அவர்களின் அகத்துட் கேட்கும் நுண் ஒலிகளாக மணி கடல் யானை வேய்ங்குழல் மேகம் வண்டு சங்கு முதலிய பலவகை ஒலிகள் திருமந்திரத்துள் (606)கூறப்படுகின்றன. கழறிற்றறிவார் நாயனாருக்கு ஒவ்வொரு நாளும் இயற்றும் பூசையின் முடிவிலே இறைவன் தன் பாதச் சிலம்பொலி கேட்குமாறு அருள் பாலித்தான் என்று பெரிய புராணம் கூறுகிறது சிலம்பு என்பது பரவிந்து என்றும் அந்தச் சிலம்பில் தோன்றும் ஒலி என்பது பரநாதம் என்றும் கூறுவர். திருச்சிலம்பு ஒசையைப் பற்றிச் செல்பவர்களுக்கு அதன் அந்தத்தில் இறைவன் திருவருளாகிய இவ்வுயிரை விருப்பத்தோடு நேர்பட்டு ஆட்கொள்ளுவான் என்று இப்பாடலில் உணர்த்தினார்.

34  சார்பு உணர்ந்து சார்பு கெட வொழுகின் என்றமையால்
சார்பு உணர்தல்  தானே தியானமுமாம் சார்பு
கெட வொழுகின் நல்ல சமாதியுமாம் கேதப்
படவருவது இல்லை வினைப் பற்று.

என்றென்றும் உயிர்களுக்கு உண்மையான பற்றுக்கோடாகிய கொழுகொம்பு இறைவனின் திருவடிகளே என்பதனை உணர்ந்து, அன் றாட வாழ்க்கையில் நாம் உறுதி  என்று சார்ந்து இருக்கின்ற எவையும் நமக்கு ஆதரவு அல்ல என்பதையும் உணர்ந்து உலகியல் சார்புகளை விட்டு ஒழிக்க வேண்டும். உண்மைச் சார்பை உணர்தல் தியானம் ஆகும்.

உலகியல் சார்பு விட்டு அகலத் தன் முனைப்பு அற்றுப் போனால் அதுவேஉயர்ந்த சமாதி நிலையுமாகும். இந்நிலை எய்திவர்களுக்கு வினையினால் வரும் துன்பங்கள் சார்வதில்லை.

முதலில் வருகிற சார்பு எவ்வுயிர்க்கும் எப்பொருட்கும் ஆதார மாய் உள்ள இறைவனின் திருவருளைக் குறித்தது. இரண்டாவது கூறப் படும் சார்பு உலகினில் நிலை இல்லாதவற்றை நிலையாகக் கொண்டு சார்ந்து நிற்கும் உயிரின் இயல்பைக் குறித்தது. திருவருட் சார்பை உணர்ந்த அளவிலே உலகியல் சார்பு கழன்று போகும். இதுவே இறைவனின் பெருங் கருணையை ஒரு போதும் மறவாமல்  உள்ளம் பொருந்துகிற தியானத்திற்கு இட்டுச் செல்லும். அப்போது நான் தியானிக்கிறேன் என்ற தன் முனைப்பும் கெடும் என்பது இரண்டாம் முறையாகச் சார்பு கெட ஒழுகின் என்ற சொற்றொடரால் குறிக்கப்பட்டது. இந்த நிலை பேரின்பச் சுடராக உள்ள சிவபெருமாளை உணர்ந்து அவனில் ஒடுங்கும் சமாதி நிலையைக் குறிக்கிறது. இந்த நிலை அடைந்தவர்களுக்குத் தொல்லை வல்விவைகளால் வரும் துயரங்கள் வரமாட்டா.

சார்பு உணர்ந்து சார்புகெட ஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு போய் (359) என்னும் திருக்குறளின் சொல்லும் பொருளும் இந்தப் பாடலில் ஆசிரியரால் எடுத்து ஆளப்பட்ட தோடு விரிவுரையும் தரப்பட்டுள்ளது என்பதை அறிந்து போற்றுக.

35 அன்றிவரும் ஐம்புலனும் நீயும் அசையாதே
நின்றபடியே நிற்க முன்னிற்கும் சென்று
கருதுவதன் முன்னம் கருத்தழியப் பாயும்
ஒரு மகள் தன் கேள்வன் உனக்கு

மாறி நின்று உன்னை மயக்கிடும் வஞ்சப் புலன்களின் வயப்பட்டு நீயும் உலகப் பொருள்களில் படிந்து துன்புறாதே. உயிர்க்கு உயிராய் உன்னோடு பொருந்தி உள்ள திருவருளை உள்ளவாறு உணர்ந்து, அதிலே ஒடுங்கி நின்ற படியே நிற்பாயாக. திருவருள் வயப்பட்ட நிலையில் அந்த ஒளிவளர் ஞானத்திற்கு முதல்வனாகிய சிவன் உனக்கு முன் தோன்றி அருள் பாலிப்பான்.

ஐம்புலன்களால் அலைக்கழிக்கப்படும் உயிர்கள் துன்பத்தையன்றி வேறு எதனையும் அறியமாட்டா. எனவே அப்பர் அடிகளும் துள்ளுவர் ஐவர் கள்வர் தூநெறிச் சேரல் ஒட்டார்என்று அருளினார். எறும்புகளால் பற்றப்பட்ட நாங்கூழ்ப் புழுவினைப் போல ஐம்புலன்களால் அலைக்கழிக்பட்டேன் என்று அருளினார்  மணிவாசகப் பெருமான் . புலன் வழிச் சேரும் உயிருக்கு உய்வில்லை என்பதனாலே அவற்றை மாறுபட்டு என்னை மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்து என்று குறித்தனர் பெரியோர். இவ்வாறு புலன்களுக்கு ஆட்படாமல் திருவருள் வழியிலே சோர்வின்றி நிற்றலை நின்றபடி நிற்றல் என்று குறித்தார்.

தத்துவங்களிலிருந்து நீங்கித் திருவருளோடு ஒன்றி உயிர் தன் முனைப்பு அற்ற போது ஒளிவளர் ஞானம் விளங்கித் தோன்றும். தன் முனைப்பற்ற உயிருக்குத் தூய்மையான ஞானத்தின் ஒரு முதலாகிய சிவ பெருமான் உயிரின் கருத்து அழியும் வண்ணம் அருள் பாலிப்பான்.

திருவருள் என்பது திருவடி ஞானம். அது குணமும் சிவபரம் பொருள் குணியும் ஆகும். இரண்டும் ஒன்றை விட்டு ஒன்று ஒரு காலத்தும் பிரிந்து நிற்பதில்லை. ஆதலால் ஞானமும் ஞானத்திற்கு முதலாகிய சிவமும் கருதுவதன் முன்னம் கருத்து அழியப் பாயும் ஒரு மகள் கேள்வன் என்று ஒருங்கு வைத்துக் கூறப்பட்டன.

36 உண்டெனில் உண்டாகும் இல்லாமை இல்லையெனில்
உண்டாகும் ஆனமையின் ஓரிரண்டாம் உண்டில்லை
என்னும் இவை தவிர்த்த இன்பத்தை எய்தும் வகை
உன்னில் அவன் உன்னுடனே யாம்.

கருவி கரணங்களால் அறியப்பட்டு உயிரால் உண்டு என்று காணப்படும் பொருள் சிவம் எனின் உண்மையில் அப்பொருள் நிலைத்ததன்று ஆகும் ஏனெனில் உயிரறிவினால் அறியப்படும் எப்பொருளும் அசத்துப்பொருளே ஆகும். சிவபரம் பொருள் கருவி கரணங்கள் இல்லாத நிலையில் அறியப்படுவது எனின் உயிர் கருவி கரணங்களின் துணையின்றி எதனையும் அறிய முடியாது. ஆதலின் சிவபரம் பொருளும் ஒரு காலும் அறியப்படாத பொருளே ஆகி இல்பொருளாய் முடியும். இந்த இரண்டினுள்ளும் அடங்காது உயிர் அறிவினால் உண்டு என்றும் இல்லை என்றும் கொள்ளப்படுவதற்கு அப்பால், திருவருளே கண்ணாகக் காணுமிடத்து இன்ப வடிவாகத்  தோன்றும் பொருளே சிவம். அவனைப் பேரன்பினால் நினைந்து போற்றுவாயானால் அவன் தன் பேரருளால் உன்னோடு இரண்டறக் கலந்து நிற்பான்.

உண்டு எனின் இல்லாமை உண்டாகும் என்ற சொற்களால் உயிர் இறைவனைத் தன் சிற்றறிவினால் அறிந்து உண்டு என்று கண்டு கொள்ளும் இயல்புகள் இறைவனுக்கு உண்டு எனில், அது சிவபரம் பொருளை இல்லாமையில் கொண்டு உய்த்துவிடும் என்று விளக்குகிறார். சுட்டறிவுக்குப் புலப்பட்டு உள்பொருளாகத் தோன்றுகின்ற யாவும் தோன்றி நின்று அழியும் தன்மை உடையன. இந்தக் கருத்து சிவப்பிரகாசத்தில், அறிவினால் அறிந்த யாவும் அசத்தாதல் அறிதி  என்று கூறப்படும். எனவே உயிர் அறிவால் உண்டு எனக் காணப்படுவது இல்லாமையில் முடியும்.

இல்லையெனில் இல்லாமை உண்டாகும் என்பது அடுத்த கருத்து. சிவபரம் பொருள் ஒருவாற்றானும் அறியப்படாத பொருள் என்று கொண்டாலோ, அல்லது கருவி கரணங்கள் அற்ற நிலையில் உயிரால் அறியப்படுவது என்று கொண்டாலோ அப்பொழுதும் அது இல்லையாய் முடியும். ஏனெனில் ஒருவாற்றானும் அறியப்படாத பொருளும் இல்பொருளே. கருவி கரணங்கள் கடந்த நிலையில் உயிருக்கு அறிவு நிகழ்வதே இல்லை. அந்நிலையில் உயிர் எதனையும் அறியாது. ஆகையால் இறை வனையும் அறியாது. அப்போதும் இல்லாமை தோன்றுகிறது.

இவ்வாறு அறியப்படு பொருளும், அறியவே முடியாத பொருளும் அகிய இரண்டு தன்மையும் கடந்து இவை தவிர்ந்த மூன்றாவது நிலையை ஆசிரியர் உணர்த்துகிறார். அது யாதெனின் இறைவன் திருவருளயே  பற்றி அவனையே இடையறாத பேரன்பினால் வழிபடுவாருக்கு அவன் தன் கருணைத்திறத்தினால் இரண்டறக் கூடி நின்று திருவருள் பாலிப்பான்.

சிவஞான போதத்தின் ஆறாம் சூத்திரம் இப்பாடலின் கருத்தினை, உணர்உரு அசத்து எனின் உணராது இன்மையின் இருதிறன் அல்லது சிவசத்து ஆம் என இரண்டு வகையின் இசைக்கும் மன்னுலகே என்று எடுத்துரைக்கும்.

37 தூல உடம்பாய முப்பத்தோர் தத்துவமும்
மூல உடம்பாம் முதல் நான்கும்  மேலைச்
சிவமாம் பரிசினையும் தேர்ந்துணர்ந்தார் சேர்ந்த
பவமாம் பரிசறுப்பார் பார்.

உடல் கருவி உலகு நுகர்ச்சிப் பொருள் என வகைப்படுத்தப்பட்ட பரு உடம்பைத் தந்து உயிரை வாழ்வியலில் நடத்தும் தத்துவங்கள் முப்பத்தொன்று. இந்த முப்பத்தொன்றினையும் செலுத்துவன விந்து (சத்தி) சதாசிவம் ஈசுவரம் சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் நான்கு. இந்த நான்கிற்கும் மேலாய் இவற்றுக்கு ஆதாரமாய் ஒப்பற்றதாய் விளங்குகின்றது. சிவ தத்துவம். இவ்வாறு தத்துவம் முப்பத் தாறையும் ஞான ஆசிரியன் தெரிவிக்க உணர்ந்து அவற்றின் இயல்புகளையும் அறிந்து தச காரியம் எனப்படும் பத்து வகைப் படி நிலைகளிலே முயன்று உண்மை உணர்ந்தவர்கள் பிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவார்கள்.

தத்துவங்கள் முப்பத்தாறு. அவை மண் முதல் சிவம் ஈறாய் பரு மையில் தொடங்கி மிக நுண்மையில் முடிவதாகக் கூறப்படும். இவை ஆன்ம தத்துவங்கள் இருபத்துநான்கு எனவும், வித்தியா தத்துவங்கள் ஏழு எனவும், சிவ தத்துவங்கள் ஐந்து எனவும் வகுத்துரைக்கப்படும். நுகர்வும் நுகர்வுக்குக் காரணமும் ஆகிய ஆன்ம தத்துவங்கள் போசயத் திருகாண்டம் எனவும், வித்தியா தத்துவங்கள் போக்கிய காண்டம் எனவும் முறையே வழங்கப்படும். இந்த முப்பத்தொரு தத்துவங்களும் இப்பாடலில் தூல உடம்பாய முப்பத்தொரு தத்துவமும் என்று குறிக்கப் பட்டன.

இவற்றைச் செலுத்துகிற தத்துவங்கள், இவற்றினும் நுண்ணிய தாய் உள்ளனவாகிய விந்து சதாசிவம் ஈசுரம் சுத்தவித்தை ஆகிய நான்கும்  மூல உடம் பாய முதல் நான்கும் எனப்பட்டன.

இவை யாவற்றுக்கும் மேலாக, இவற்றுக்கு ஆதாரமாக விளங்கும் சிவதத்துவம் மேலைச் சிவமாம் பரிசு என்று குறிக்கப்பட்டது.

உயிர் வீடு பேறு அடைவதற்குப் பத்துப்படி நிலைகள் கூறப் பெறும். அவற்றை தச காரியம் என்பர். அவை தத்துவ ரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி, ஆன்ம ரூபம், ஆன்ம தரிசனம் ஆன்ம சுத்தி, சிவ ரூபம், சிவ தரிசனம், சிவயோகம், சிவபோகம் எனப்படும்.

ஆசிரியன் உணர்த்த இவற்றை உணர்ந்து , நீங்க வேண்டியவற்றிலிருந்து நீங்கித் திருவடி ஞானத்தால் இறைவனாகிய பரம் பொருளை உணர்ந்தவர்கள் பிறப்பு இறப்புக்களை அறுத்தவர்கள் ஆவார்கள்.

38 எத்தனையோ தத்துவங்கள் எவ்வௌர் கோட்பாடுடைய
அத்தனையும் சென்றங்கு அளவாதே சித்தமெனும்
தூது தனைப் போக்கிப் போய்த் தூக்கற்ற சோதிதனிற்
பாதிதனைக் கும்பிடலாம் பார்.

உலகத்தில் பல்வேறு சமயங்களைச் சார்ந்தவர்களும் தம்மில் மாறு பட்ட பல்வேறு வகைப்பட்ட தத்துவங்களையும் கோட்பாடுகளையும் எடுத்துரைத்து அவ்வவர் கொண்ட பொருளே சிறந்தது என்றும், உயர்ந்தது என்றும் வாதிடுவர். அவ்வாறு கூறப்படும் வழிகளில் எல்லாம் புகுந்து மனக் கலக்கமுறுதல் பயன் தருவது அன்று. சித்தத்தைச் சிவன் பாலே  வைத்துச் சந்திக்கிறோம் என்னும் உணர்வும் அழிந்து, திருவருள் வழி நின்றால் அம்மையப்பராக விளங்குகின்ற திருவருளையும் அதன் முதலாகிய ஞானத்தையும் ஒளிப்பிழம்பாகக் கண்டு வழிபடலாம்.

சமயக் கணக்கர் தாம் கண்டவற்றைச் சரியானது என்று தமக்குள் முரணி வாதிட்டு நிற்க அதனுள் புகுந்து மயங்காமல் இறைவனையே நினைந்து வழிபடும் அடியார்களுக்கு அவன் மாதொரு பாகனாக வெளிப்பட்டு ஆண்டு கொள்வான் என்று அன்பு நெறியினை இந்தப் பாடலின் மூலம் விளக்கினார்.

39 சாம் பொழுதும் ஏதும் சலமில்லை செத்தாற்போல்
ஆம்பொழுதிலே அடைய ஆசையறில் சோம்புதற்குச்
சொல்லும் துணையாகும் சொல்லாத தூய் நெறிக்கண்
செல்லும் துணையாகும் சென்று.

உயிரும் உடம்பும் கூடி வாழ்ந்திருக்கும் காலத்திலேயே அகப்பற்றையும் புறப்பற்றையும் அறவே ஒழித்துவிட்டவர்கள் உலகத்தைப் பொறுத்தவரை உயிரோடு இருந்தும் செத்தவர்களைப் போல் ஆவார்கள். ஏனெனில் ஐம்புல வழி ஒடும் ஆசைகள் அவர்களுக்கு இல்லை. அத்தகைய மனத்துறவு உடையவர்களுக்கு உயிர் நீங்கும் காலம் வந்துற்ற போதும் வருகின்ற துயரம் இல்லை ; இவ்வாறு தன் பணி நீத்து ஒழுகுதல் இறைபணி நிற்றற்கு உறுதுணையாகும் இன்னதென்று சொல்லால் விளக்கப்படாத தூநெறியாகிய வீட்டு நெறியிலே சென்று சேர்வதற்கும் அது உயரிய துணையாகும்.

சோம்பர் என்பது உயிர் தனக்கென ஒரு முயற்சியின்றி இறைவனின் திருவருள் வழியிலே நடப்பது ஆகும். தன் முனைப்பின்மையால் தன் முயற்சியற்று இருத்தல் சோம்புதல் எனப்பட்டது. தூநெறி என்பது அவாவின்மையால் வருவதாகும் தவநெறி. அது உயிரை வீட்டு இன்பத் துக்கு இட்டுச் செல்லும் உற்ற துணையாகும்.

40 வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என்றமையால்
வேண்டின் அஃதொன்றுமே வேண்டுவது வேண்டினது
வேண்டாமை வேண்டவரும் என்றமையால் வேண்டிடுக
வேண்டாமை வேண்டும் அவன் பால்.

இறைவனிடத்து ஒன்றை வேண்டிப் பெறுங்கால் அவ்வாறு வேண்டத்தக்கது பிறவாமை ஒன்றுமே ஆகும். அப்பிறவாமையும் வேண்டாமை எனப்படும் அவா அறுத்தலால் விளைவதால் இறைவனிடம் வேண்டும் போது அவா அறுத்தலையே வேண்டுக.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது, வேண்டாமை வேண்டவரும் என்ற திருக்குறளின் சொல்லும் பொருளும் பொருந்த எழுந்தது இப்பாடல். அதனோடு அமையாமல் இக்குறட்பாவின் நயத்தை எல்லாம் வெளிப்படுத்தும் உரை போலவும் இப்பாடல் அமைந்துள்ளது.

வேண்ட முழுதும் தருவோய் நீ என்று மணிவாசகப் பெருந்தகையும் , வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் என்று அப்பர் பெருமானும் கூறியருளியதிலிருந்து சிற்றுயிர்கள் விரும்பி வேண்டுவன எவை யாயினும் அவற்றை வழங்கும் வள்ளன்மை உடையவன் இறைவன் என்பது புலனாகும். வரையாது கொடுக்கும் அவ்வள்ளலிடத்தே வேண்டத்தக்கது எது? உலகத்துப் பேறுகளிலெல்லாம் மிக உயர்ந்த பேறாகிய மீண்டும் பிறவாமையையே அவனிடம் வேண்டிப் பெறுதல் வேண்டும். பிறப்பு என்பது தளை . பிறவாமை என்பது வீடு.

பிறவாமை எப்போது கைகூடும்? அவாவினைப் பற்று அற ஒழித்த போதே எய்தற் பாலது பிறவாமை. எனவே வேண்டாமையாகிய அவா அறுத்தலை இறைவனிடம் வேண்டினால் அப்பெருமான் அதனை நமக்கு நல்குவான். அதனைப் பெற்ற அளவிலே அதுவே பிறவாமையை நல்கும். ஆதலால் வேண்டுவதற்கு உரிய வள்ளலாகிய இறைவனிடத்து வேண்டாமையை வேண்டுக என்று இந்தப் பாடலில் நுட்பமாக அறிவுறுத்தினார்.

41 அரண உணர்வுதனில் அவ்வுணர்வை மாற்றில்
கரணமும் காலும் கைகூடும் புரணமது
கூடாமையும் கூடும் கூடுதலுங் கூட்டினுக்கு
வாடாமையும் கூடும் வந்து.

ஆன்மாவின் அறிவை உலகத்தில் செல்லவிடாது அரண் செய்து காக்கும் திருவடி ஞானத்தில் சிந்தையைச் செலுத்தினால் கரணங்களும் உடம்புக்குள் இயங்குகின்ற பத்து வாயுக்களும் கட்டுக்குள் அடங்கி நிற்கும். அதாவது சிவஞானத்தை விட்டு விலகாதிருக்கும். அந்த நிலையில் சுட்டறிவாகிய ஏகதேச அறிவு மீண்டும் வந்து தாக்காது நிற்றலும் கைகூடும். அது கைவரப் பெற்றதும் உடம்பாகிய கூடு வாடாது நிற்கும்  இயல்பும் வந்து பொருந்தும்.

அவ்வுணர்வு என்றது உயிர் அறிவினை. அரணம் என்பது காப்பு அரண் போன்ற திருவடி ஞானத்தினை. உலகத்துப் பொருள்களில் ஈடு பட்டுச் சிதறியோடும் ஆன்மாவின் அறிவை அவ்வாறு ஓடாது அரண் போல நின்று காக்கும் திருவடி ஞானத்தில் ஒடுக்கினால் கரணங்கள் வசப்படும். உடம்பில் இயங்கும் காற்றுக்களும் வசப்படும். கால்  காற்று. இந்நிலையில் மாறாது நிற்கும் போது உயிரறிவு மீண்டும் உலக இன்பங்களை நோக்கிப் புரண்டு போகாமையும் கைகூடும் . புரணம் மீண்டும். திருவருள் நெறிப்பட்டு அதனுள் அடங்கி நிற்கின்ற உயிருக்குக் கரணங்களும் காற்றுகளும் வசப்படுவதனால் உடம்பாகிய கூடு வாடாது நிலை பெறும். உடல், நரை, திரை, மூப்பு ஆகியவற்றுக்கு உட்படும் தன்மை உடையது. எனினும் கரணங்களும் காற்றுகளும் வசப்பட்டதனால் சமாதி நிலையில் உடம்பும் வாடாதிருக்கும்.

42 இன்று இங்கு அசேதனமாம் இவ்வினைகள் ஓரிரண்டும்
சென்று தொடருமவன் சென்றிடத்தே  என்றுந்தான்
தீதுறுவன் ஆனால் சிவபதிதான் கைவிடுமோ
மாதொரு கூறு அல்லனோ மற்று.

முன்னைப் பிறப்பில் செய்யப்பட்ட இருவினைப் பயன்கள் ஆகிய புண்ணிய பாவங்கள் அறிவற்றன. ஆயினும் அவை இறைவன் ஆணை யால் அடுத்த பிறப்பில் செய்தவனையே சென்று பற்றுகின்றன. அவ்வாறாயின் வினைகள் ஈட்டிய உயிருக்கு விடிவு காலமே கிடையாதா? என்றென்றைக்கும் தான் செய்த வினையில் விளைந்த தீமைகளை அது அனுபவித்துக் கொண்டே கிடக்க வேண்டுமா? சிவனாகிய தலைவன் அதனைக் கைவிட்டு விடுவானோ? என்று கேட்பின் திருவருளை ஒரு கூறாக உடைய உமை யொருபாகன் ஒரு நாளும் ஆன்மாவைக் கைவிடமாட்டான்.

வினைகள் நல்வினை தீவினை என இரண்டு. அவற்றின் பயன்கள் புண்ணிய பாவங்கள். இன்று இங்கு அசேதனமாம் இவ்வினைகள் எனக் கூறியதன் மூலமாக வினைகள் அறிவற்றவை . எனவே அவை தாமாகச் சென்று அடுத்த பிறவியில் தம்மைச் செய்தவனைப் பற்றும் என்பதனை மறுத்தார். வினையின் பயனை அதனைச் செய்தவனுக்கே ஊட்டுவது இறைவனின் ஆணையே அன்றிப் பிறிதன்று என்பதை உயத்து உணர வைத்தார்.  அவ்வினையைப் பேராமல் ஊட்டும் பிரானின் நுகராரேல் யார் தான் அறிந்து அணைப்பார் அங்கு என்ற சிவஞானபோதி எடுத்துக் காட்டுச் செய்யுள் இதனை நன்கு விளக்கும்.

கடல் அலைபோல் வரும் வினைத் தொடர்பால் மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்புட் பட்டு வரும் உயிருக்கு விடுதலையே கிடையாதா என்ற கேள்விக்கு விடை தருவார் போல, மாதொரு கூறு அல்லனோ என்று கூறினார். சிவபதி எனவே ஒப்பற்ற தலைவன் அவன். சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடன் ஆதலினால் அவன் உயிர்களைக் கைவிடுவானல்லன். அது மட்டுமன்றி அவன் திருவருளாகிய சத்தியினைத் தன் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டிருக்கிறான். பெருங் கருணைத் தடங்கடலைத் தன்னில் பிரியாது கொண்டிருக்கும் தலைவன் உயிருக்கு வினைப் பயன்களை ஊட்டிக் கழித்துத் தன் திருவருட்பேற்றினை அருளியே தீருவான். ஒரு போதும் கைவிடமாட்டான் என்பதனை இப்பாடலில் ஆசிரியர் உணர்த்தினார்.

43 அனாதி சிவனுடைமை யால் எவையும் ஆங்கே
அனாதி எனப்பெற்ற அணுவை அனாதியே
ஆர்த்த துயரகல அம்பிகையோடு எவ்விடத்தும்
காத்தல் அவன் கடனே காண்.

இறைவன், உயிர்கள், உயிர்களைக் கட்டும் தளைகள் ஆகிய முப் பொருள்களும் என்றென்றும் உள்ளவை. தோற்றமில் காலம் தொட்டே உலகம் சிவபெருமானுக்கு உடைமையும் உயிர்கள் சிவபெருமானுக்கு அடிமையும் ஆவன. எனவே உயிரைத் தோற்றமில் காலம் தொட்டே பிணித்து நிற்கும் பாசங்களை அறுத்து எல்லாவிடத்தும் எல்லா நிலைகளிலும் உயிருக்குத் துணையாக நின்று அதன் துயரத்தை அகற்றுவது மாதொரு பாகனான இறைவனின் கடமை என்று அறிவாயாக.

முப்பொருள்களும் தோற்றமில் காலந்தொட்டே உள்ளன என்பது சைவசித்தாந்தம் கூறுகின்ற உண்மை. என்று உயிர் உளதோ அன்றே அது ஆணவத்தில் அழுத்தி அதனால் தன் அறிவு முற்றிலும் மறைக்கப்பட்டிருக்கிறது, எனவே கேவல நிலையில் உயிர் தனக்கென ஒரு செயலின்றி உள்ளது. இறைவன் தன்னுடைய கருணையினால் உயிருக்கு உடல் கருவி முதலியவற்றைத் தானே இரங்கித் தந்தருளுகிறான். இப்பொழுது உயிர் சகல நிலைக்கு வருகிறது. இந்நிலையிலும் இறைவனே உயிருக்கு ஒன்றாய் வேறாய் உடனாய் நின்று அதே நேரத்தில் தோன்றாத் துணை யாகவும் இருந்து உயிரின் வினைப் பயன்களை அதற்கு அருத்திப் படிப்படியே அதனை உயர்த்துகிறான். உரிய பக்குவம் எய்திய உயிர்களை குரு வடிவம் கொண்டு ஆண்டருள் புரிகிறான் . அவன் திருவடிப் பேற்றை அடைந்த உயிர்கள் சுத்த நிலையை அவன் அருளால் பெறுகின்றன.

ஆக, கேவலம் சகலம் சுத்தம் என்னும் மூன்று நிலைகளிலும் இறைவனின் துணையின்றி உயிர் தனக்கென ஒரு செயலின்றியே இருக்கிறது என்பது புலனாகிறது. திருவருளாகிய சத்தியோடு பிரிப்பின்றி நிற்கின்ற சிவபெருமானே தன் கருணையால் உயிரைக் காத்துக் கடைத் தேற்றுகின்ற கடமை உடையவனாக விளங்குகிறான். தன் கடன் அடியேனையும் தாங்குதல் என்ற அப்பர் பெருமான் திருவாக்கில் அண்டங்கள் அனைத்தையும் தாங்கி வழி நடத்தும் இறைவன் சிற்றுயிராகிய அடியேனையும் தாங்கி அருள் பாலிக்க வேண்டும் அதுவே கடமை என்ற வேண்டுகோள் இனிது அமைந்துள்ளது இங்கு நினையத் தகும்.

44 தம்மில் சிவலிங்கம் கண்டு அதனைத் தாம் வணங்கித்
தம்மன்பால் மஞ்சனநீர் தாம் ஆட்டித் தம்மை யொரு
பூவாக்கிப் பூ அழியா மற்கொடுத்துப் பூசித்தால்
ஓவாமை யன்றே உடல்.

தம் உடலிலேயே இறைவன் கோவில் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து அவனுடைய அருவுருவத் திருமேனியாகிய சிவலிங்கம் உள்ளக் கோயிலில் எழுந்தருளி இருப்பதைக் கண்டு, அதற்குத் தம் அன்பினால் திருமஞ்சனம் ஆட்டித் தம்மையே திருமாலையாக்கி அப்பொருமானுக்குச் சாத்தி அவனை ஒரு நாளும் தவறாமல் வணங்கிப் பூசித்தால் அத்தகைய அன்பர்களுக்கு அவர்களின் உள்ளத்தே கோவில் கொண்டருளிய சிவபெருமான் வெளிப்பட்டு அருள் பாலிப்பான்.

புற வழிபாடு அக வழிபாடு என்று சிவ வழிபாடு இரு வகைப்படும். இங்கே கூறப்பட்டது அகவழிபாடு எனப்படும் அந்தரியாக வழிபாடு. உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்ற திருமந்திரமும்,  காயமே கோயிலாக கடிமனம் அடிமையாக , வாய்மையே தூய்மையாக மன மணி லிங்கமாக, நேயமே நெய்யும் பாலாய் நிறைய நீர் அமைய ஆட்டிப் பூசனை ஈசனார்க்குப் போற்று அவிக் காட்டினோமே  என்ற அப்பர் அடிகள் தேவாரமும் இங்கு நினையத்தக்கது.

45 தன்னை பெறுவதன் மேல் பேறு இல்லை, தான் என்றும்
தன்னைத்தான் பெற்றவன் தான் ஆரென்னில்  தன்னாலே
எல்லாந்தன்னுள் கொண்டு கொண்டதனைக் கொள்ளாதே
எல்லாமாய் நிற்கும் இவன்.

உலகத்துப் பேறுகள் யாவற்றுள்ளும் மிக உயர்ந்த பேறு தன்னைத் தான் பெறுவதேயாகும். அத்தகைய பேறு பெற்றவர் யார் எனக் கேட்பின் தத்துவங்களை உணர்ந்து அவற்றை விட்டு நீங்கித் தன்னில் நிலைத் திருக்கும் திருவருளைப் பற்றுவதனாலே தன் முனைப்பும் அழிந்து சிவபெருமானாகிய பரம் பொருளோடு ஒற்றித்து நிற்பதனால் தன் வியாபக நிலையை உணர்ந்தவன் ஆவான்.

தன்னைப் பெறுவது என்பது தத்துவங்கள் வேறு தான் வேறு என உணர்தல். அவ்வாறு உணர்ந்த உடன் தனக்கு எக்காலத்திலும் ஆதாரமாக நின்று வழி நடத்தும் திருவருளைத் தன்னுள்ளே கண்டு தான் என்னும் முனைப்பையும் அறவே ஒழித்துச் சிவபெருமான் வியாபகத்துள் அடங்கி நிற்பவனே உண்மையில் தன்னைப் பெற்றவன் என்று கூறத் தகுந்தவன்.

46 துன்பமாம் எல்லாம் பரவசனாய்த் தான்துவளில்
இன்பமாம் தன் வசனாய்த் தானிருக்கில்  என்பதனால்
நின்வசனா யேயிருக்கில் நின்னுடனாம் நேரிழையாள்
தன்வசனா யேயிருப்பன் தான்.

உயிர் உறுதிப்பாட்டை இழந்து தன் நிலையில் நிற்காமல் ஐம்பொறிகள் வழியே ஒடி உலக இன்பங்களில் ஈடுபடுமானால் அதற்கு உறுவது துன்பமேயன்றி இன்பம் இல்லை. இதற்கு மாறாக ஐம்பொறிகளைத் தன் வசப்படுத்தி அடக்கி ஐம்புல நுகர்ச்சிகளை விரும்பாது இருப்பின் அதனால் விளைவது இன்பமேயன்றித் துன்பமில்லை இவ்வாறு மெய்ந் நூல்கள் கூறுகின்றன. எனவே பொறி புலன்களை வசப்படுத்தி அருள் வழியில் நிற்கின்றவனுக்கு அம்பிகை பாகனாகிய சிவபெருமான் உடன் நின்று அருள் பாலிப்பான்.

கள்ளப் புலன்கள் உயிரை அருள்வழிச் செல்லாது தடுக்கும் இயல் புடையவை. அவற்றின் ஆற்றலுக்கு முன்னால் துவண்டு போகிற உயிர் துன்பத்தையே அனுபவிக்க நேரும். தான் துவளாமல் நின்று பொறிகளை அடக்கி நன்னெறியில் ஒழுகுவோர்க்கு இறைவன் தன் திருவருளாகிய சத்தியுடன் வந்து பொருந்தித் துன்பக் கலப்பற்ற இன்பத்தை அருளுவான் என்பது இப்பாடலில் கூறப்பட்டது.

47 செத்தாரே கெட்டார் கரணங்கள் சேர்ந்ததனோடு
ஒத்தாரே யோகபரர் ஆனார் எத்தாலும்
ஆராத அக்கரணத்து ஆர்ப்புண்டு இங்கு அல்லாதார்
பேராமற் செல்வர் அதன் பின்.

தன் முனைப்பு அற்றவர்களே கருவி கரணங்களால் உளவாகின்ற துயரங்களைக் கெடுத்தவர்கள். தன் முனைப்பை ஒழித்தவர்கள் பரம் பொருளாகிய சிவத்தோடு பொருந்தி அதன் வழி நடக்கின்ற இயல்பு கை கூடியவர்கள், மேலான சிவயோகம் கைவரப் பெற்றவர்கள். தன் முனைப்பு அறப்பெறாதவர்கள் நிறைவு  என்பதையே அறியாத கருவி கரணங்களினால் கட்டப் பெற்று அவற்றின் வழியே சென்று மீண்டும் பிறந்தும் இறந்தும் எல்லையற்ற துன்பங்களிலே உழல்பவர்கள் ஆவார்கள்.

செத்தல் என்பது இவ்விடத்தில் இறத்தலைக் குறியாமல் ஊன் கெட்டு உயிர் கெட்டு உள்ளமும் போய் நான் என்னும் முனைப்பும் கெட்டலைக் குறித்தது. அதனோடு சேர்ந்து ஒத்தார் என்ற சொற்றொடருக்கு, ஒப்பற்ற பரம் பொருளோடு கூடி அருள் வழியிலே ஒத்து நின்றவர் என்று பொருள் காண்க. எல்லா யோக நிலையிலும் மிக உயர்ந்த சிவயோகம் கைவரப் பெற்றவர்களை யோகபரர் என்ற சொல்லால் குறித்தார்.

எதனாலும் நிறைவு பெறாதவை கரணங்கள் என உணர்த்துவார் எத்தாலும் ஆறாத அக்கரணம் என்று குறிப்பிட்டார். பெற்ற சிறுகப் பெறாத பெரிது உள்ளும் இயல்பு ஐம்பொறி வயப்பட்டவர்களுக்கு உளதாகும். ஆதலால் கரணங்கள் நிறைவு அறியாதவை எனப்பட்டன. திருக்குறளிலும்  ஆரா இயற்கை அவா  என்று இது உணர்த்தப்பட்டது. கரணங்கள் உயிரைக் கட்டு நிலையில் செலுத்துவன ஆதலால் ஆர்ப்புண்டு  என்று கூறினார். ஆராமை நிறைவு பெறாமை . ஆர்புண்டல் பிணிக்கப்படுதல்.

48 கண்ணும் கருத்தும் கடந்த தொரு பேறேயும்
கண்ணும் கருத்தும் களிகூர  நண்ணி
வடம் அடக்கிநிற்கும் வடவித்தே போல
உடனடக்கி நிற்பர்காண் உற்று.

சிவபரம் பொருள் என்பது கண்ணுக்கும் புலப்படாமல் கருத்துக்கும் அளவு படாமல் இவை யாவற்றையும் கடந்து நிற்கும் எல்லையற்ற தோர் பெரும் பொருள். ஆயினும் அப்பரம் பொருள் தம்மை யடக்கித் தற்போதம் இழந்து சிவயோகத்திலே ஒன்றி இருக்கும் அருளாளர்களுக்கு, அவர்களுடைய கண்ணும் கருத்தும் பேரின்பத்திலே மூழ்கித் களி கூருமாறு வெளிப்பட்டுத் தோன்றும். இது எத்தகையது போல் என்றால் மிக நுண்ணிய ஆலம் விதையினுள் ஆலமரமே அடங்கி இருந்தது போன்றது.

பரம்பொருள் எல்லையற்றுப் பரந்து விரிந்து திகழ்வது. கண்ணால் காணவும் கருத்தால் நினைக்கவும் எட்டாதது. அப்பெரும் பொருள் ஐம்புலனும் அகத்தடக்கி சிவயோக நிலை கைவரப்பெற்று, பசுபோதம் இழந்து சிவபோதத்தில் அழுந்தி இருக்கும் சிவயோகியர்களுக்கு அவர்களது கண்ணும் கருத்தும் மகிழுமாறு வெளிப்பட்டுத் தோன்றி அருள் பாலிக்கும்.

தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒரு விதை, தெண்ணீர்க் கமத்துச் சிறுமீன் சினையினும் நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை அணிதேர் புரவி ஆட்பெரும் படையோடு மன்னர்க்கு இருக்க நிழாகும்மே  என்று வெற்றிவேற்கை கூறும். ஆலம் விதை மீனின் முட்டையினும் சிறிதாக இருந்தாலும் பரந்து உயர்ந்து வேரோடி விழுது விட்டுப் பெரும் படைக்கும் நிழல் தரும் ஆலமரத்தைத் தன்னுள் நுண்ணிய வடிவில் அடக்கிக் கொண்டிருக்கும். அதுபோலவே ஒப்பற்ற பரம் பொருள் சிவஞானிகளின் உள்ளத்தில் எழுந்தருளி இருக்கும், வடம்  ஆலமரம். வடவித்து  ஆலமரத்தின் வித்து . பேறேயும் பேறே ஆயினும்.

49 வானகமும் மண்ணகமு மாய் நிறைந்த வான்பொருளை
ஊனகத்தே உன்னுமது என் என்றனையேல்  ஏனகத்து
வாதனையை மாற்றும் வகையதுவே மண்முதலாம்
ஆதனமே அன்றோ அதற்கு.

எல்லையற்ற வான் பரப்பும் அவற்றில் உள்ள அண்டங்களும் இம் மண்ணுலகில் உள்ள எல்லாப் பொருள்களுமாய் நிறைந்தும் அதற்கு அப்பாலும் விளங்குகின்ற உயர்ந்த பொருளாகிய இறைவன் ஊனாலாகிய உடம்புக்குள்ளே உளன் என்று எண்ணுவது எவ்வாறு பொருந்தும்? என்று கேட்பாய் ஆயின் எளியோரிடத்தும் தோற்றமில் காலம் தொட்டுப் பிணித்து இருக்கிற பாசக் கூட்டத்தை அறவே ஒழிப்பதற்கு அப்பரம் பொருளே துணை. தத்துவங்களில் இறுதியாக எண்ணப்பட்ட நிலமும் அதற்கு மேம்பட்ட நுண்ணிய தத்துவங்களும் அப்பரம் பொருள் எழுந்தருளி இருக்கும் ஆசனம் அன்றோ?

பரம்பொருளுக்கு இலக்கணம் கூறும் போது அது வாக்கையும் மனத்தையும் கடந்து நிற்பது என்று கூறிவிட்டு, அதன் பின்னர் அப்பரம் பொருளை உள்ளமாகிய திருக்கோவிலில் எழுந்தருளுவித்து வழிபட வேண்டும் என்று கூறுவது எவ்வாறு பொருந்தும் என்று மாணவர் வினவ அதற்கு ஆசிரியர் விடை தருவது போன்று அமைந்திருப்பது இப்பாடல்.

எல்லாப் பொருள்களிலும் கலந்தும் வேறாயும் நிற்கின்ற பெருமை உடையவன் சிவபெருமான். தத்துவங்களுள் கடைப்பட்டதாக எண்ணப்படுவது நிலம். பருமையான நிலத்தில் கலந்து நிற்பது போலவே அதனினும் மேம்பட்ட முப்பத்து ஐந்து தத்துவங்களிலும் கலந்தும் தத்துவங்களைக் கடந்த தத்துவ ஆதீதனாகவும் இறைவன் விளங்குகிறான். மனத் தகத்தான் தலை மேலான் வாக்கினுள்ளான்  என்று தொடங்கும் திருத்தாண்டகத்துள் திருநாவுக்கரசு நாயனார் இறைவன் எல்லாவிடத்திலும் செறிந்து விளங்குகிறான் என்பதை அருளிச் செய்கிறார்.  அவ்வாறு அவன் எழுந்தருளி இருப்பது உயிர்களின் மலப் பிணிப்பை நீக்கும் பெருங் கருணையினாலேயே என்பதையும் ஆசிரியர் விளக்கினார்.

50 கல்லில் கமரில் கதிர் வாளில் சாணையினில்
வல்லுப் பலகையினில் வாதனையைச் சொல்லும்
அகமார்க்கத் தால் அவர்கள் மாற்றினர்காண் ஐயா
சகமார்க்கத் தால் அன்றே தான்.

துணி துவைக்கும் கல்லில் சிவனடியார்களின் ஆடைகளைத் துவைத்தும், அதற்கு முட்டுப்பாடு ஏற்பட்ட பொழுது தம் தலையை அக்கல்லின் மீது மோதியும் சிவபெருமானின் திருவருளைப் பெற்றார் திருக்குறிப்புத் தொண்ட நாயனார். சிவபெருமானுக்கு அமுதுபடியாகச் செந்நெல்லும் செங்கீரையும் மாவடுவும் தலைமீது ஏந்திச் சென்ற அரிவாட்டாய நாயனார் பசியினால் வயலில் தடுக்கிக் கீழே விழ அவர் சுமந்து சென்ற அமுதுபடிக்கான பொருள்கள் நிலத்தின் வெடிப்பின் உள்ளே விழுந்தன. இதனால் துயருற்ற நாயனார் அரிவாளால் தம் கழுத்தை அறுக்க முற்பட்ட போது வயற் கமரில் இருந்து வெளிப்பட்ட இறைவனின் திருக்கரம், அவரது அரிவாள் ஏந்திய கையைத் தடுத்துப் பிடித்தது. அதனோடு இறைவன் மாவடுவைக் கடித்ததால் உண்டான ஓசையும் அவர்காதில் விழுந்தது . இறைவன் அவருக்குத் தோற்றம் காட்டி ஆட்கொண்டான்.

ஏயர் கோன் கலிக்காம நாயனார் சுந்தரமூர்த்தி நாயனாருடன் மனம் வேறுபட்டு அவரைக் காண விரும்பாமல் தம் வாளால்  தம் வயிற்றைக் கிழித்துக் கொண்டு உயிர் நீத்தார். நாயனாரின் அன்பின் திறத்தை அறிந்த இறைவன் அவருக்கு அருள் பாலித்தான் . மூர்த்தி நாயனார் சிவ பெருமானுக்குச் சந்தனம் அரைத்துச் சாத்தும் திருத்தொண்டு புரிந்து வந்தார். ஒரு சமயம் சந்தனக் கட்டைகள் கிடைக்கப் பெறாமை யால் தன்னுடைய முழங்கையையே சந்தனக் கட்டையாகக் கொண்டு வட்டம் திகழ் பாறையில் வைத்துத் தேய்த்தார்.  இத்தகு செயல் செய்ய வேண்டா, அரசனாகி நாடு காத்து அதன் பின் நம் உலகு எய்துக  என்று இறைவன் விண்ணில் எழுந்த ஒரு வாக்கால் மூர்த்தி நாயனாருக்கு அருள் புரிந்தான்.

மூர்க்க நாயனார் சிவனடியாருக்கு அமுதூட்டுவதற்காகச் சூதாடி, அதில் வென்று பொருள் ஈட்டி அப்பொருளால் அடியவர்களுக்கு அமுது ஊட்டிவந்தார். அதனால் இறைவன் திருவருள் கிடைக்கப் பெற்றார்.

மேலே கூறப்பட்ட ஐந்து அடியார்களும் சிவபெருமானிடத்துக் கொண்ட பேரன்பினாலே அகமார்க்கத்தைப் பின் பற்றி அதனால் தம் பிறப்பை மாற்றினார்களேயன்றி , அவர்கள் சக மார்க்கத்தைப் பின் பற்றி யவர்கள் அல்லர்.

அகமார்க்கம் என்பது இந்த இடத்தில் இறைவனைத் தம் உள்ளத்து இருத்தி அன்பால் உருகி அவனடியே சிந்தித்துத் தாவர சங்கம வழிபாட்டை மேற்கொள்ளுபவர் என்பதைக் குறித்தது. உள்ளத்தில் ஊறும் அன்பு நெறி அகமார்க்கம் என்க.

சகமார்க்கம் என்பது தோழமை நெறி என்று வழங்கப்படும் யோக நெறியாகும். இறைவனை அடைவதற்கான வழிகளில் தொண்டு நெறி மகன்மை நெறி தோழமை நெறி ஞான நெறி என நான்கு கூறப்படும். இவை முறையே தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம் , சக மார்க்கம், சன் மார்க்கம் என்றும் கூறப்படும், திருநாவுக்கரசு நாயனார், திருஞான சம்பந்த நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் பெருமக்களும் முறையே இந்த நான்கு நெறிகளையும் பின்பற்றியதாகக் கூறுவர்.

கமர்  நிலத்தின் வெடிப்பு, சாணை  சந்தணக்கல், வல்லுப் பலகை  சூதாடும் பலகை.

51 உள்ளும் புறம்பும் நினைப் பொழியில் உன்னிடையே
வள்ளல் எழுந்தருளும் மாதினொடும்  தெள்ளி
அறிந்தொழிவாய் அன்றியே அன்புடையை ஆயின்
செறிந் தொழிவாய் ஏதேனுஞ் செய்

இறைவனை அகத்தில் இருத்தி வழிபடுவது என்பது ஒரு வகை, மற்றொரு வகை அவனைப் புறத்தே கண்டு வழிபடுவது. இரண்டு நிலை யினானும் இறைவன் மீது கொண்ட இடைவிடாத அன்பினால் வழிபடுவாருக்குச்சிவபெருமான் அவர் பக்குவம் அறிந்து அருள் பாலிப்பான். உள்ளும் புறமும் என்ற வேறுபாட்டு உணர்வுகள் எல்லாம் வழிபடுவோருக்கே அன்றிச் சிவபெருமானுக்கு இல்லை. எந்நிலையில் நின்றாலும் தன் முனைப்பை ஒழித்தவர்களுக்கே சிவ பெருமான் உமையம்மையோடும் எழுந்தருளி அருள் பாலிப்பான் என்பதனை உறுதியாக அறிவாயாக. அறிவு நெறியும் அன்பு நெறியும் ஆகிய இரண்டில் உனக்கு ஏற்ற ஒரு நெறியில் ஒழுகி இறைவனது அருளைப் பெறுதல் கூடும்.

ஞான மார்க்கம் பத்தி மார்க்கம் என்ற இரண்டும் இறைவனிடம் இட்டுச் செல்லும். ஒன்று உயர்ந்தது, மற்றொன்று தாழ்ந்தது என்று கொள்ள வேண்டா. ஆயினும் இரண்டு நெறிகளிலும் தன் முனைப்பை இழத்தலும், தன்னுயிர் தான் அறப்பெறுதலும் இன்றியமையாத தேவை. யோகத்திலே நின்று ஞானம் கைவரப் பெற்றுத் தன் முனைப்பு அறுதல் அல்லது அன்பு நெறியிலே நின்று சிவபெருமான் திருவடிகளிலே பத்தியுடன் வழிபட்டுத் தன் முனைப்பு அறுதல் என்ற இவை இரண்டிலும் உமையொரு பாகன் திருவருளை வழங்குவான். எனவே உனக்கு இயன்றதோர் நெறியில் நின்று இறைவன் திருவருளைப் பெறுவாயாக என்று ஆசிரியர் அறிவுறுத்துகிறார்.

52 கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை என்ற மையால்
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பதனைக் கண்ணப்பர்
தாம் அறிதல் காளத்தியார் அறிதல் அல்லது மற்று
யாமறியும் அன்பன்று அது.

மணிவாசகப் பெருந்தகை திருவாசகத்துள் திருக்கோத்தும்பியுள் கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்  என்று அருளிச் செய் துள்ளார். மிக உயரிய அன்பின் திறத்துக்குக் கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு என்று எடுத்துக் காட்டியதால் , இறைவன் பால் அன்பு செலுத்தியவர்கள் யாவருள்ளும் கண்ணப்ப நாயனாரோடு ஒப்ப அன்பு கொண்டவர் வேறு யாருமிலர் என்பதாயிற்று. கண்ணப்பரின் அன்பைக் காளத்தியப்பர் அறிவாரேயன்றிப் பிறர் எவராலும் அறியமுடியாத தகைமை உடையது அது என்று அறிக.

கண்ணப்ப நாயனார் திருக்காளத்தியில் குடுமித் தேவரைக் கண்டு, அவர் மீது ஆராத அன்பு பாராட்டி ஆறே நாட்களில் தம் கண்ணை இடந்து அப்பிச் சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டார். அவருடைய அன்போடு ஒத்த அன்பினை வேறு எவரிடத்திலும் காண்கிலோம். ஆதலால் மாணிக்கவாசகர்.

 கண்ணப்பன்  ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என் ஒப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
வண்ணப்பணித்து என்னை வா என்ற வான்கருணைச்
கண்ணப்பொன் நீற்றற்கே சென்று ஊதாய் கோத்தும்பி
என்று அருளினார்.

இத்திருப்பாடலுக்குப் பொருள் காணும் பொழுது கண்ணப்ப நாயனார் அன்புடைமையில் எவ்வாறு தலைசிறந்து நின்றாரோ அவ்வாறே அன்பின்மையின் எல்லையில் அடியேன் நின்றேன். அவ்வாறு இருந்தும் என் தந்தையாகிய சிவபெருமான் என்னைத் தன் அடியானாக ஏற்றுக் கொண்டான் என்று கொள்ள வேண்டும். கண்ணப்ப நாயனாரின்  அன்பைப் பட்டினத்து அடிகளும்  நான் ஆறில் கண் இடந்து அப்பவல்லேன் அல்லேன் என்று பாடினார். சேக்கிழார் நாயனார் கண்ணப்பரை  அன்பு பிழம்பாய்த் திரிவார் அவர் கருத்தின் அளவினரோ என்று போற்றினார்.

கண்ணப்பரின் அன்பின் திறம் நாயனாருக்குத் தெரியும். காளத்தி யப்பருக்குத் தெரியும் என்பதல்லது வேறு யாராலும் அறிய இயலாத சீர்மை உடையது என்று ஆசிரியர் விளக்குகிறார்.

53 அவிழ்ந்த துணியில் அவிழ்ந்த அவிழை
 அவிழ்ந்த மனத்தால் அவிழ்க்க அவிழ்ந்தசடை
வேந்தனார்க்கு இன்னமுதம் ஆயிற்றே மெய்யன்பிற்
சேர்ந்தனார் செய்த செயல்

திருவிசைப்பா அருளிய சேந்தனார் மிக எளிமையான களிய முதினை ஒரு கந்தல் துணியிலே இட்டுத் தில்லையம்பலவாணப் பெருமானுக்கு மெய்யன்போடு அமுதுபடியாகப் படைக்க, அதனையே இன்னமுதமாகப் பெருமான் ஏற்று அருளினார் இது பேரன்பின் திறத்தால் நிகழ்ந்த செயலன்றோ?

சேர்ந்தனார் தாழத்தபட்ட குலத்தில் உதித்த சிவனடியார். அவர் எளிமையான களியமுதினைத் தமது கந்தல் துணியே கொள்கலமாக இறைவனுக்கு மனமுவந்த அன்பினோடு படைத்தார். தில்லைக்கூத்தப் பெருமான் அவ்வாறு நிவேதிக்கப்பட்ட களியையும் இன்னமுதமாக ஏற்றுக் கொண்டார். சேர்ந்தனாரின் அன்பின் திறத்தை இச்செயல் விளக்குகிறது.

54 சுரந்த திருமலைக்கே துய்யசிவ ஞானம்
சுரந்துண்டார் பிள்ளையெனச் சொல்லச் சுரந்த
தனமுடையாள் தென்பாண்டி மாதேவி தாழ்ந்த
மனமுடையாள் அன்பிருந்த வாறு.

திருஞானசம்பந்த நாயானார் சீர்காழிப் பதியிலே திருக்குளக் கரையில் உமையம்மையார் அளித்த ஞான அமுதப் பாலைப் பொற்கிண்ணத்தில் ஊட்ட அந்நிலையில்  சிவஞானம் கைவரப் பெற்றார் என்று கேள்விப் பட்ட அளவிலே தென்பாண்டி மாதேவியாகிய மங்கையர்க்கரசியார் தாய்மை உணர்வு மீதூரப் பெற்றுத் தம்முடைய திருமார்பில் பால் சுரக்கப் பெற்றார். அந்த அன்பு முதிர்ந்த திரு உள்ளம் எவ்வளவு பெருமைக் குரியது?

ஞானசம்பந்தர் அழுததைக் கண்டதும் இறைவி ஞானப் பால் சுரந்து ஊட்டினார். பாண்டி மாதேவியாரோ அவர் அழுததைக் காணாத போதும், செய்தி கேட்ட அளவிலேயே அமுதப் பால் சுரக்கப் பெற்றார் என்பது அவரது தாய்மை அன்பின் ஆழத்தைப் புலப்படுத்துகிறது. இத்தகைய பேரன்பை எவ்விடத்தும் கண்டதில்லை. ஆதலால் அதன் உயர்வை நம்மால் அளவிட்டு உரைக்க இயலாது.

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். தாம் அருளிய நால்வர் நான்மணி மாலையில் இந்த நிகழ்ச்சிகளைச் சுட்டிக் காட்டிச் சம்பந்தப் பெருமானை நோக்கி பொற்கிண்ணத்தில் பால் வழங்கிய தாயும், அந்த நிகழ்ச்சியைக் கேட்ட அளவில் பால் சுரந்த தாயும் ஆகிய இருவரில் யாரு டைய அன்பு உயர்ந்தது? எனக்கு அதைச் சொல்வாயாக ? என்று கேட்ப தாக அமைந்தது.

இலைபடர்ந்த பொய்கை இடத்து அழுதல்கண்டு
முலைசுரந்த அன்னையோ முன்நின் நிலைவிளம்பக்
கொங்கை சுரந்த அருட் கோமகளோ சம்பந்தா
இங்கு உயர்ந்த தார்யார் சொல் எனக்கு.   எனும் பாடல்.

55 அன்பே என் அன்பே என்று அன்பால் அழுது அரற்றி
அன்பே அன்பாக அறிவு அழியும்  அன்பு அன்றித்
தீர்த்தம் தியானம் சிவார்ச்சனைகள் செய்யும் அவை
சாற்றும் பழமன்றே தான்.

அன்பே வடிவாகியவனே, என் அன்புக்குரியவனே என்று பல வாறும் அன்பினால் அழுதும் அரற்றியும் அன்பின் நிறைவினால் தன் முனைப்பற்றும், அறிவும் உணர்வும் இழந்து சிவபெருமான் மீது அன்பு பாராட்டுவது ஒன்றே அவனை அடைவதற்குரிய நெறியாகும் அன்பு இல்லாமல் புண்ணிய தீர்த்தங்களிலே நீராடுவதும் தியானத்தை மேற்கொள்ளுவதும் பூவும் மலரும் இட்டுப் போற்றி வழிபடுவதும் ஆகிய எவையும் பயன் தரா.

 அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார் என்னும் திரு மந்திரம், சைவ சமயத்தில் அன்பிற்குரிய பெருமையினை எடுத்து விளக்கு வதாகும். அன்பால் அகம் குளிர்ந்து நெக்கு உருகுவார்க்கு அருளும் சிவபெருமான் ஆரவாரமான புறப் பூசை செய்வாரைக் கண்டு நாணி நிற்பான் என்பதனை,  நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே, புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன் பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு, நக்கு நிற்பன் அவர்தமை நாணியே  என்ற அப்பர் அடிகள் அருள் வாக்கால் உணரலாம். மாணிக்கவாசகரை  அழுது அடி அடைந்த அன்பர்  என்றே பெரியோர் பாராட்டுவர். அழுதல் அவரது அன்பின் முதிர்ச்சியைக் காட்டிற்று.

இப்பாடலின் செம்பொருள் தீர்த்தமாடுதலும் தியானமும் சிவ அர்ச்சனையும் அன்பால் அகம் குளிர்ந்து இயற்றப்படுதல் வேண்டும், அன் பின்றிச் செய்யப்படும் புறப்பூசைகள் பயன்தரா என்பதே ஆகும்.

பழம்பயன்.

56 எல்லார் அறிவுகளின் தாற்பரியம் என்னறிவு
செல்லும் இடத்தளவும் சென்றறிந்தேன்  வல்லபடி
வாதனையை மாற்றும் வகையிதுவே மற்றவற்றுள்
ஏதமறக் கண்ட விதம்.

எல்லா மெய்ப்பொருள் நூல்களிலும் பல்வேறு சமயத்தைச் சார்ந்தவர்கள் கண்டு சொன்ன கோட்பாடுகளின் உட்கருத்துக்களை என் ஆன்ம சிற்சத்தி செல்லுமளவு சென்று அறிந்தேன். அவை யாவற்றிலும் உட் கருதாய் அமைந்திருப்பது, தக்கதொரு ஞான ஆசிரியனை அடைந்து அவர் அருளிச் செய்த முறையிலே ஒழுகித் தன் முனைப்பு என்பதனை அறவே போக்கிச் சிவஞானத்துடன் ஒன்றியிருப்பதே உலகத் துன்பங்கள் யாவற்றையும் அறுத்தொழிக்க வல்ல நெறி என்பதே.

தாற்பரியம் என்பது வெளிப்பட்டுத் தோன்றாமல் சொல்லின் உள்ளே பொதிந்திருக்கும் உட்கருத்தாகும். எல்லார் அறிவுகளின் தாற்பரியம் என்னுமிடத்துப் பல்வேறு வகைப்பட்ட சமயங்களில் அவரவர் உரைத்த நூல்களை. அப்படிப் பல வகைப்பட்ட நூல்களிலும் கருது கோளும், எய்தப்படுவதாகிய குறிக்கோளும் வேறு வேறாய் இருப்பினும் துன்பத்தை மாற்றும் வகை ஒன்றாகவே காணப்படுகிறது. அது யாதெனின் தகுதியுடைய ஞானாசிரியனை அடுத்து அவ்வாசிரியன் உணர்த்தும் நெறிப் படி தன் முனைப்பின்றி ஒழுகி ஞான நன்னெறியிலே நிற்றல் ஒன்றே உலகத் துன்பங்களை அறுத்தற்குரிய நெறி என்பதாம்.
தாற்பரியம்  உட்கருத்து. வாதனை  துன்பம். ஏதம் குற்றம்.

57 வித்தும் அதன் அங்குரமும் போன்றிருக்கும் மெய்ஞ்ஞானம்
வித்தும் அதன் அங்குரமும் மெய்யுணரில்  வித்து அதனிற்
காணாமை யால் அதனைக் கைவிடுவர் கண்டவர்கள்
பேணாமை யால் அற்றார் பேறு.

வித்தாக இருப்பது சிவபரம் பொருளான முழுமுதல். அதனின்று வெளிப்பட்டுத் தோன்றும் முளையாக இருப்பது திருவருள். மறைந்திருப்பது சிவம். வெளிப்பட்டுத் தோன்றுவது திருவருள் ஞானம். ஒன்றிய முனையினிடத்து விதை வெளிப்படக் காணப்படுவதில்லை. எனவே விதை என்ற ஒன்று உளது என்பதை உண்டு என்று அறியாது அதனைக்கைவிடுவார்கள் சிலர். மற்றும் சிலர் வெளிப்படத் தோன்றிய முளையினைப் போற்றிப் பாதுகாக்கத் தவறி அதனால் பெறுவதற்குரிய வளர்ச்சியின் எல்லையாகிய சிவப்பேற்றைப் பெறாமல் போவதும் உண்டு.

வயலிலே விதைக்கப்பட்ட நெல் முளைத்தெழுந்து வருகின்ற காலத்து வித்து நிலத்துக்கு அடியிலேயே இருக்கும். முளை மட்டிலுமே வெளிப்பட்டுத் தோன்றும் அது போலவே தனி முதற் பொருளாயுள்ள சிவம் தன்வயத்ததாக நிற்க, அதன் திருவருள் வெளிப்பட்டுத் தோன்றும் இந்த உண்மையை உணர்ந்தவர்கள் விதையுண்டு என்பதை மறவார். மறந்தவர்கள் வித்தினைக் கண்ணால் காணாமையால் அதனைக் கைவிடுவர்.

மற்றொரு சாரார் இந்த முளையின் முழுமைப்பட்ட தன்மையே விதை என்று உணராமல் இம் முளையினைப் பேணிக் காக்கத் தவறுவதனால், விளைவின் பயனாம் வித்தினைப் பெற இயலாமல் பேறு இழந்தவர்கள் ஆவார்கள்.இந்தப் பாடலுக்கு அடிப்படையாக அமைந்த திருமந்திரம்,  வித்தினில் அன்றி முளை இல்லை அம்முளை. வித்தினில் அன்றி வெளிப் படுமாறு இல்லை, வித்தும் முளையும் ஒன்றல்ல வேறல்ல, அத்தன்மைத்தாகும் அரனெறி தானே  ( 1932) என்பதாகும்.

முளையைக் கண்ட போது வித்தினையும் , வித்தினைக் கண்ட போது முளையினையும் தேடித் திரியாமல் பெற்றதனைப் பேணி வளர்த்து மற்றதனைப் பெறுதல் கூடும் என்று இப்பாடல் உணர்த்துகிறது. பிசிச் செய்யும் போல ஒட்டணியில் அமைந்த இப்பாடலின் உட்கருத்து நுணுகி உணரத் தக்கது.

58 ஒன்றன்று இரண்டன்று உளதன்று இலதன்று
நன்றன்று தீதன்று நானன்று நின்ற
நிலையன்று நீயன்று நின்னறிவும் அன்று
தலையன்று அடியன்று தான்.

உயிர் சிவத்தோடு பொருந்திய நிலை எத்தகையது? பெறுவான் வேறு. அவன் பெறுகின்ற பேறு வேறு. அப்பேற்றினால் விளைகின்ற பேரின்பம் வேறு. எனவே அந்த நிலை ஒன்றன்று. முத்தியைச் சேர்ந்த உயிர் அதிலிருந்து மீண்டும் பிறப்பதில்லை ஆகையினால் இரண்டும் அன்று. சிவமும் உயிரும் தனித்துத் தோன்றாமையினால் உள்ளதுமன்று. உயிருக்கு சிவமும் உயிரும் தனித்துத் தோன்றாமையினால் உள்ளதுமன்று. உயிருக்கு சிவப் பேரின்பத்தை நுகர்கின்ற பேறு கிடைப்பதால் இல்லாததுமன்று. உலக வாழ்க்கையில் நல்லதும் தீயதும் பகுத்துக் காணும் உயிரின் அறிவிற்கும் அப்பாற்பட்டு உள்ளதனால் நன்றும் அன்று தீயதும் அன்று.

முத்தி நிலை, சுட்டி உணரப்படும் இயல்புடையதன்று. ஆதலால் நான், நீ என்று பிரித்துக் காணும் இடமன்று. தற்போதம் கெட்டதனாலே உயிரின் அறிவும் அன்று . தோற்றம் முடிவு என்ற இரண்டையும் கடந்த தனால் தலையுமன்று அடியுமன்று.

சொல்லின் வரம்புக்கு உட்படாத நிலையே உயிர் சிவத்தோடு ஒன்றுபட்ட நிலை. ஆதலால் அதன் தன்மை இன்னது என்று வரையறுத்துச் சொல்ல முடியாத இயல்பினை ஆசிரியர் இந்தப் பாடலில் கூறுகிறார். எனவே இது அன்று, இது அன்று என்று கழித்து, இவற்றை எல்லாம் கடந்து எதுவோ அதுவே சிவத்தோடு ஒன்றிய நிலையாகும் என்று கூறுகிறார்.

மனத்தால் நினைத்தற்கும் வாக்கால் உணர்த்துதற்கும் அரிய நிலை என்பதைப் புரிய வைத்தார்.

59 செய்யாச் செயலை அவன் செய்யாமை கண்டுதனைச்
செய்யாச் செயலிற் செலுத்தினால் எய்யாதே
மாணவக ! அப்பொழுதே வாஞ்சைக் கொடிவளர்க்கும்
ஆணவமும் அற்றது அறி.

தன் ஒருவனை அன்றி வேறு எவராலும் செய்ய முடியாத ஐந்தொழில்கள் இயற்றுபவன் சிவபெருமான். ஐந்தொழில் இயற்றும் காலத்தும் அவன் அவற்றுள் தோயாது நின்றும் விகாரப்படுவதின்றியும் தன் சங்கற்ப மாத்திரையினாலே செய்வான் , இத்தகைய பெருமையை அறிந்து உயிர் அவன் திருவருளோடு ஒன்றித் தன் செயல்களையும் தன் நினைப்பினையும் விட்டொழித்தால் அந்நிலையிலேயே ஆசைக் கொடியை வளர்க்கும் ஆணவ மலம் உயிருக்குத் துன்பத்தைச் செய்யாது தேய்ந்து போகும். ஆணவம் தேய்ந்தால் பிறப்பும் இறப்பும் தரும் எய்ப்பு இன்றி என்றென்றும் சிவப் பேரின்பத்தினை நுகர்ந்து மகிழலாம் என்பதை, மாணவனே, நீ அறிவாயாக,

படைத்தல், காத்தல், மறைத்தல், ஓடுக்குதல், அருளுதல் என்ப்படுகின்ற ஐந்தொழிலும் செய்வதற்குரிய வல்லமை உடையவன் சிவபெருமானே. இந்தச் செயல்கள் யாவும் வேறு எவராலும் செய்யப்படாதவை. ஆதலினால் இவற்றை செய்யாச் செயல் என்றார். இச் செயல்களை எல்லாம் விகாரப்படாமலும் தனது திருவருட் குறிப்பு ஆகிய சங்கற்ப மாத்திரையினாலேயே இவற்றைச் செய்கிறான் . ஆதலால் செய்யாமை கண்டு எனக் கூறினார்.

சிற்றறிவும் சிறு தொழிலும் உடைய உயிர், தன் முனைப்போடு செயல்படுகிற போது அது அங்குமிங்கும் பரந்து உலகியல் பொருள்களைப் பற்றித் துயருறும். துயரத்தைத் தவிர்ப்பதற்கு உரிய ஒரே வழி தன் பரபரக்கும் இயல்பை அறவே ஒழித்துத் திருவருளின்கண் அடங்கி நிற்றலே ஆகும். முனைப்பு அடங்குவதை செய்யாச் செயலின் செலுத்துதல் என்றார். இது திருவாசகம் திருத்தெள்ளேணத்தில் செயல் மாண்டவாறு, என்று அருளப்படும்.

இந்த நிலையை எய்திய உயிருக்கு அப்பொழுதே மோகத்தை வளர்க்கின்ற ஆணவ மலம் தேய்ந்து இறும். அதனை வாஞ்சைக் கொடி வளர்க்கும் ஆணவம் என்று குறித்தார். ஆணவ மலத்தின் காரிய வேறு பாடுகளை ஏழு வகையாகப் பகுத்து உணர்த்திய மாதவச் சிவஞான முனிவர், அதன் முதலாவது காரியம் மோகம் என்று உணர்த்தினார். மோகமும் நீங்கிய வழியேஆணவ மலக் கேடு கைகூடும் எனவும் கூறினார்.மோகத்தை இப்பாடலில் வாஞ்சைக் கொடி என்று சுட்டினார் ஆசிரியர். மாணவனை நெறிப்படுத்தும் முறையில் இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடலுக்குச் சில பாட வேறுபாடுகளும் உள்ளன.

60 ஏதேனும் காலமுமாம் ஏதேனும் தேசமுமாம்
ஏதேனும் திக்கு ஆசனமுமாம்  ஏதேனும்
செய்தால் ஒருவலுமாம் செய்யாச் செயலதனைச்
செய்யாமை செய்யும் பொழுது.

செய்தற்கு அரிய செயலாக முன் பாடலில் கூறப்பட்ட திருவருட் செயலுள் அடங்கி நிற்போருக்கு எய்தற்கு அரிய நிலை வந்து எய்தியதால் அவர்களுக்கு வழிபாட்டுக் கென நூல்களில் விதிக்கப்பட்ட நியதிகள் எதுவும் கிடையா. காலம் எதுவாயினும் இடம் எதுவாயினும் திசை எதுவாயினும் இருக்கை எதுவாயினும், அவர்கள் செயல் நன்றே ஆயினும் தீதே ஆயினும் அவர்கள் இயற்றும் வழிபாட்டினை மேற்கொள்ளுவர்.

சிவபெருமானை வழிபடுவதற்கு உரியன என்று காலம் இடம் திசை இருக்கை முதலிய நியமங்கள் நூல்களில் வரையறுக்கப்பட்டுள்ளன. இவ்வரையறையை மீறிச் செய்தாலும் நூல்களில் விலக்கிய வகையில் செய்தாலும் சிவ அபராதம் ஆகும். உலக வாழ்க்கையில் ஈடுபட்டு அந்தப் பிடிப்பை நீக்கிக் கொள்ள விரும்பும் மாந்தருக்காகவே விதிகளும் விலக்குகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. இத்தகைய வரையறைகள் ஆன்மபோதத்தை முற்றிலும் இழந்து திருவருளின் வழி நின்றார்க்குப் பொருந்துவனவல்ல. அவர்கள் எங்கேனும் இருந்து தங்கள் வழிபாட்டினை இயற்றுகின்ற உரிமை உடையவர்கள்.

பாசத்தை விட்டு நீங்கியவர்களுக்கு நியமத்தைக் கடைபிடிக்க வேண்டிய தேவையில்லை என்று கூறிய பொழுதே, அத்தன்மை எய்தாதவர்களுக்கு நியமத்தை விட்டு விலகுதல் சிவ அபராதம் எனவும் எதிர்மறை முகத்தால் வலியுறுத்தினர்.

61 செய்தற் கரிய செயல்பலவுஞ் செய்து சிலர்
எய்தற் கரியதனை எய்தினார்  ஐயோநாம்
செய்யாமை செய்து செயல் அறுக்கல் ஆயிருக்கச்
செய்யாமை செய்யாத வாறு.

செயற்கரிய செயல்கள் பலவற்றைச் செய்து சில அடியவர்கள் எய்துவதற்கு மிகவும் அரியதாகிய சிவபரம் பொருளை எய்தி இன்புற்றார்கள். அத்தகைய வன் தொண்டுகள் நம்மால்  செய்வதற்கு அரியனவேனும் நம் தன் முனைப்பே அடக்கி இறைவன் திருவடியில் ஒடுங்கி ஏதும் செய்யாமல் இருத்தாலே இறைவன் திருவருள் நம்மை ஆண்டு கொள்ளும் என்பதை அறிந்திருந்தும் நாம், செய்யாதிருக்கும் அதனைக்கூட மேற்கொள்ளாது இருக்கிறோமே? இந்நிலை இரங்கத்தக்கதாகும்.

செய்தற்கரிய செயல்கள் என்று இப்பாடலில் குறிப்பிட்ட வல்வினைகள் இந்நூலில் 18,19,20 ஆகிய பாடல்களில் எடுத்துரைக்கப்பட்ட சிறுத்தொண்டர், சண்டீசர், அரிவாட்டாயர் ஆகிய நாயன்மார்களின் செயல்களாகும், இவற்றை அப்பாடல்களில் வல்லினை என்று ஆசிரியர் குறித்தருளினார். இத்தகைய தொண்டுகள் நோற்பார் சிலரே, பலரல்லர். என்பதனையும் வலியுறுத்தினார். எய்தற்கரியது என்று இப்பாடலில் குறிக்கப்பட்டது சென்றடையாத திருவுடையானாகிய  சிவபரம் பொருள்.

 செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர், செயற்கரிய செய்கலாதார் ( குறள் 26) என்பதனையும் எய்தற்கரிய இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல்  (குறள்489) என்பதனையும் இணைத்து இந்த அருட்பாடல் நம்மை நெறிப்படுத்துகின்றது.

செய்யாமையே போதுமானதாக இருக்க அதனையும் செய்வதற்கு முன்வராதிருக்கிறோமே என்று இரங்கிக் கூறுகிறார். செய்யாமை என்பது தன் பணி நீத்தல் . இந்நிலைமை கைகூடுமென்றால் அப்பொழுதே இறை பணி நிற்றல் உதிக்கின்றது.

62 இப்பொருள்கள் யாதேனும் ஏதெனினும் ஒன்று செய்தல்
எப்பொருளும் செய்யா தொழிந்திருத்தல்  மெய்ப்பொருளைக்
கண்டிருத்தல் செய்யாதே கண்ட மனிதரெலாம்
உண்டிருப்ப தென்னோ உரை.

இதுவரை கூறப்பட்ட பாடல்களுள் இறைவனைச் சென்று அடை வதற்குரிய நெறிகள் பல கூறப்பட்டன. சிவதருமம் என்ற முறையிலே, அரிய செயல்களாகிய வல்வினையும், எளிய செயல்களாகிய மெல்வினையும் விளக்கப்பட்டன. இவற்றுள் இரண்டனையும் பின்பற்றாது தன் செயலற்று இறைவன் திருவருளில் ஒடுங்கிச் செயல் ஏதும் செய்யாமலிருத்தல் மூலமும் சிவபரம் பொருளோடு ஒன்றிருப்பது கூடும். இவ்வாறு தன்னால் இயன்ற நெறிகளில் ஒன்றைப் பின்பற்றி சிவப் பேரின்பத்தை அனுபவிக்க வழிகள் பல இரு ப்பினும் இவற்றுள் எதனையும் பின்பற்றாது நிலையாதவற்றை நிலைத்தன என்று கருதி வாழ்நாளை  வறிதே கழிக்கின்றனரே இதனால் என்ன பயன்?

பல பாடல்களில் விரிவாகக் கூறிய கருத்துக்களை சுருக்கமாகச் சுட்டுவார். இப்பொருள்கள் என்று குறித்தார். பொருள்கள் என்பது நெறிகளுள் ஒன்றைக் கடைபிடித்தல் என்பது அதன் பின்னர் வரும் யாரேனும் ஏதெனினும் ஒன்று செய்தல் என்ற சொற்றொடரால் பெறப்பட்டது.

இவற்றுள் ஏதேனும் ஒரு வழியைப் பின்பற்றினாலும் மெய்ப் பொருளைக் கண்டிருத்தல் உறுதி என உணர்த்துவதற்கு கண்டிருத்தல் செய்யாதே என்று குறித்தார்.

உண்டிருத்தல் என்பது நுகர்ந்திருத்தல் என்ற பொருளைத் தரும். சிவஞான போதத்துள் உண்டிவினை இன்மையின் என்பதும் இப் பொருட்டு ஆயினும் நிலையற்ற பொருள்களை நுகர்ந்து நிலையான பொருள்களைத் தேடாதிருப்பவர் வாழ்க்கை உண்பதும் உறங்கு வதுமாய் முடியுமேயன்றிப் பயனுள்ள வாழ்க்கை ஆகாது. எனவே அத்தகைய மக்கள் உப்பிற்கும் காடிக்கும் கூற்று உரைந்ததாகக் கொள்ளலும் பொருந்தும்.

63 வீட்டிலே சென்று வினை யொழித்து நின்றிடிலென்
நாட்டிலே நல்வினைகள் செய்திடிலென் கூட்டில்வாள்
சாத்தியே நின்றிலையேல் தக்கனார் வேள்வி செய்த
மாத்திரமேயாம் கண்டாய் வந்து.

வீட்டு நெறியிலே செல்வதற்காகத் துறவறத்தை மேற்கொண்டு இருவினைகளும் பற்றாதவண்ணம் ஒழுகினால் என்ன ? அன்றி நாட்டிடை வதிந்து இல்லற நெறியில் நின்று மனைவியுடன் நல்வினைகளைச் செய்து ஒழுகினால் தான் என்ன? இரண்டாலும் பயன் விளைய வேண்டும் என்றால் தற்போதத்தை இழந்து உயிர்எனும்  உறையில் திருவடி ஞானமாகிய வாளினைச் சாத்தித் தன் முனைப்பற்று இருத்தல் வேண்டும். அவ்வாறு நில்லாவிடில் தக்கன் தன் முனைப்போடு இயற்றப் புகுந்த வேள்வி தீவினையாய் முடிந்தது போன்று, நீ மோற் கொள்ளும் முயற்சிகளும் நல்லனவே எனினும் தீயனவாய் முடியும்.

வீட்டிலே என்ற சொல்  வீட்டின் பத்திலே விருப்பம் கொண்டு என்ற பொருளைத் தந்தது. நாட்டிலே நல்வினைகள் செய்தல் என்பது இல்லறத்தில் மனையாளுடன் கூடியிருந்து துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் மற்றையோர்க்கும் துணையாக நல்வினைகள் புரிவதனைக் குறித்தது.

கூட்டில் என்பது உடம்பாகிய உறையினுள் திருவடி ஞானமாகியவாளினைச் சாத்தி அருள்வழி ஒழுகுதலைக் குறித்தது. உறை கழித்த வாள் தீமை பயத்தல் உலகியலில் காணலாம். இங்கு வாள் கூட்டில் இருத்தல் தன் முனைப்பு அறுதலுக்கு எடுத்துக் காட்டு ஆயிற்று. தக்கன் செய்த வேள்வி நல்வினை எனப்படுமாயினும் அவன் செருக்கோடு இயற்றியதனால் வேள்வியும் முற்றுப் பெறவில்லை. வேள்வியில் முயன்ற அவனுக்கு, வேள்விக்கும் வந்த மற்றைய தேவர்களுக்கும் அது தீய பயனையே தந்தது.

64 சிவன் முதலே அன்றி முதலில்லை என்றும்
சிவனுடையது என்னறிவ தென்றும் சிவனவனது
என்செயல் அது ஆகின்றது என்றும் இவையிற்றைத்
தன் செயலாக் கொள்ளாமை தான்.

சிவபெருமான் ஒருவனே முழு முதற்பொருள். அவனன்றி முதற் பொருள் என்று சொல்லுவதற்குரிய பொருள் வேறு ஒன்றும் இல்லை. என்னுடைய அறிவு என்று நான் கூறுகின்ற யாவும் அப்பொருமான் அறிவிக்க அறிந்ததன்றி நானாக அறிந்தன அல்ல. அது போலவே நான் இயற்றுகின்ற எந்தச் செயலும் அப்பெருமானுடைய துணையின்றி நிகழாது என்பதை உணர்ந்து இவை அனைத்தையும் அறிபவனும் செய்பவனும் இறைவனே; நான் அல்லேன் என உணர்வதே உயிர் உய்வதற்கு உரிய வழியாகும்.

போற்றி என் வாழ் முதலாகிய பொருளே  என்ற திருவாசகத்தொடர் சிவபரம் பொருளின் முதன்மைத் தன்மையையும் தலைமையையும் நான்கு விளக்குவது. உயிர், தானே அறிந்தும் தானே செய்தும் வருவதாகக் கருதுவது தவறு. இறைவன் அறிவிக்கவே உயிர் அறிகின்றது. இறைவன் இயக்கவிக்கவே உயிர் செயல்படுகிறது. உயிர்க் குயிராய் நின்ற இறைவனின் துணையின்றி உயிர்களுக்கு எச்செயலும் இல்லை,

எல்லாம் சிவன் செயல் என்ற கருத்தினைச் சிலர் பிறழ உணர்ந்து கொள்ளுகின்றனர். எல்லாம் சிவன் செயல் என்று சொன்னால் நாம் செய்கிற தவறுகளுக்கும் நாம் பொறுப்பாளி ஆக முடியாது அல்லவா? என்பது அவர்களுடைய வினா. ஆனால் இறைவன் நம் உயிருக்கு உயிராக உள்நின்று இயக்குகிறான் ஆதலினால் அவனையன்றி நமக்குச் செயல் இல்லை என்பதே எல்லாம் சிவன் செயல் என்பதன் உட்கருத்து.

நமது உடலின் துணை கொண்டும், நம் உறுப்புகளின் துணை கொண்டும் கணக்கற்ற செயல்களை நாம் செய்து வருகிறோம். ஆயினும் நம் உடலுக்குள்ளேயே நுட்பமாக இயங்குகிற இரத்தச் சுழற்சியும், உயிர் மூச்சும் , உண்ட உணவு செரிப்பதும் இன்னும் இத்தகைய எண்ணற்ற நுட்பமான செயல்கள் எல்லாம் நாம் அறிந்து செய்வதில்லை. அவற்றின் ஆதாரம் இல்லாமல் நமக்கு வேறு செயலாற்றும் வல்லமையும் இல்லை, உலகில் உயிரோடு இருப்பதே வியப்புக்குரிய. அந்த உயிரைத் தந்த இறைவன் நம்மையும் இயக்குகிறான் என்பதில் ஐயம் இல்லை.

உடல் கருவி உலகு நுகர்ச்சிப் பொருள் ஆகியவற்றைத் தனது பெருங்கருணையினால் வழங்கிய இறைவன் உலகியல் செயற்பாடுகளில் நமக்கு உரிமை தந்திருக்கிறான். நல்லனவற்றைத் தேர்ந்து செய்யவும் அல்லனவற்றை விலக்கவும் . அறிவையும் தந்திருக்கிறான். ஆதலால்  எதனைச் செய்ய வேண்டும், எதனைச் செய்யலாகாது என்று முடிவு செய்யும் பொறுப்பு நம்முடையதே. இறைவன் அனைத்துக்கும் ஆதாரமாகிறான் என்பதே எல்லாம் சிவன் செயல் என்பதற்குக் கருத்து. இந்த அடிப்படையில் ,

  உலகினில் என்செயல்  எல்லாம் உன்விதியே நீயே
உள்நின்றும் செய்துவித்தும் செய்கின்றாய் என்றும்
நிலவுவதோர் செயல்எனக்கு இன்று உன் செயலே என்றும்
நினைவார்க்கு வினைகள் எல்லாம் நீங்கும் தானே  ( சிந்தியார் 30)

என்று அருள் நந்தி சிவம் சிவஞான சித்தியாரில் அருளிச் செய்துள்ளார்.

65 இன்று இச்சமயத்தின் அல்லதுமற்று ஏழையுடன்
ஒன்று சொலி மன்றத்து நின்றவர் ஆர் இன்றிங்கே
அங்கம் உயிர் பெறவே பாடும் அடியவரார்
எங்குமிலை கண்டாய் இது.

உலகில் கணக்கற்ற சமயங்கள் உள. எனினும் சைவசமயம் ஒன்றில் தான் இறைவனும் இறைவியுமாகத் தில்லைப் பொன் அம்பலத் திலே ஆனந்தக் கூத்து இயற்றி இறைவன் உயிர்களுக்கு அருள் உபதேசம் செய்கிறான். அதுவும் அல்லாமல் வெறும் எலும்பு உயிர் பெற்றுப் பூம்பாவை என்னும் அழகிய பெண்ணாக வடிவெடுக்கும்படி தமிழ்ப் பதிகம் பாடிய அடியவர் சைவசமயத்திலேயன்றி வேறு எந்தச் சமயத்திலும் இலர்.

ஏழை என்ற சொல் பெண் என்ற பொருளைக் குறிக்கு மேயல்லது, இன்றைய வழக்கில் உள்ளது போல வறுமையுற்றவரைக் குறிக்காது. இங்கு இச்சொல் சிகாமியம்மையைக் குறித்தது. பொன்னம்பலத்தில் ஆனந்தக் கூத்தாடுகின்ற இறைவன் தன் அருட்கூத்தின் மூலம் உயிர்களுக்குக் குறிப்பால் அருளுபதேசம் புரிகின்றான் திருநாவுக்கரசு பெருமான் இத்திருக்குறிப்பை  எங்கு வந்தாய் என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே  என்று அருளுகிறார் இறைவனது ஞான நடனம் ஊன நடனம் ஆனந்த நடனம் ஆகிய யாவும் அவன் ஐந்தொழில் இயற்றும் தன்மையையும் உயிர்களுக்கு அருள் பாலிக்கும் வண்மையையும் குறிப்பனவாக உண்மை விளக்கம் முதலிய அருள் நூல்கள் எடுத்துரைக்கின்றன. சைவ சமயத்திலன்றி வேறு எச்சயத்திலும் மன்றத்துள் நின்று ஒன்றே ஆகிய மெய்ப்பொருளை உணர்த்தியவர் யாரும் இலர் என்று ஆசிரியர் சிவ பெருமானது அருளின் திறத்தை வியந்து போற்றுகிறார்.

திருமயிலாப்பூரில் அடியவர் ஒருவரின் மகள் பாம்பு தீண்டி இறந்தனள். அவளது எலும்புகளை ஒரு குடத்திலிட்டுப் பாதுகாத்து வைத்திருந்து, திருஞான சம்பந்த நாயனார் திருமயிலைக்கு எழுந்தருளிய போது அவர் முன்னிலையில் அக்குடத்தினை வைத்தார் அந்த அடியவர். திருஞான சம்பந்த நாயனார் பணித்தபடி அக்குடத்தை திருக்கோயில் முற்றத்தில் வைத்தனர்,  நாயனாரும்  மட்டிட்ட புன்னையம் கானல்  எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி அருளினார். குடத்தினுள் இருந்த எலும்புகள் பூம்பாவை என்னும் பெண்ணாக உயிர் பெற்று எழுந்தன. இத்தகைய அற்புதம் வேறு எந்தச் சமயத்தில் நிகழ்ந்தது என்று வினவுகிறார். ஆசிரியர்.

இப்பாடலில் ஆசிரியர் சைவ சமயத்தின் சிறப்பினையும் சிவனடியார் உயர்வினையும் எடுத்துரைக்கிறார்.