செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

தரிகொண்ட வெங்கமாம்பா!

ஆந்திரமாநிலம் தரிகொண்டா என்ற சிறிய கிராமத்தில் பிறந்து, சதா சர்வகாலமும் திருவேங்கடவனை நினைத்து உருகி தன்னை அர்ப்பணித்து, திருவேங்கடமுடையானையே தன் கணவனாக பாவித்து, திருமலையில் ஸ்ரீவாரி சேவை செய்து பரந்தாமனை அடைந்தவள் மாத்ருஸ்ரீதரிகொண்ட வெங்கமாம்பா.

ஆந்திர மாநிலத்தில் ஒரு காலத்தில் கடும் வறட்சி ஏற்படவே ராய துர்க்க பகுதியைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து வெளியே கிளம்பி பிரத்தமிட்டா என்ற கிராமத்தில் ஒரு நாள் இரவு தங்கினர். காலையில் அங்கு லட்சுமி நரசம்மா என்ற அந்தணப் பெண்மணி தயிர்ப்பானையில் தயிர் கடைந்து கொண்டிருந்தாள். (தயிர்ப்பானைக்கு தெலுங்கில் தரிகொண்ட என்பது பெயர்.) அங்குள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மரிடம் பஞ்சத்தில் அடிபட்ட மக்களுக்காகப் பிரார்த்தனை செய்தவாறே அந்தப் பெண்மணி தயிர் கடைந்து கொண்டிருக்கையில் திடீரென்று தயிர் மத்து நின்று விட்டது. துணுக்குற்ற அவள் மீண்டும் தயிர் கடைய மீண்டும் மத்து சுழலாது நின்றது. மத்தை ஓடவிடாமல் ஏதாவது தடை செய்கிறதா என்றே கையை உள்ளே விட்டுப் பார்க்க ஏதும் இல்லாததும் கண்டு அவள் திகைத்தாள். மீண்டும் மத்து நின்ற போது, தன் கணவனை அழைத்துப் பார்க்கச் சொல்ல, கணவர் வந்து பார்த்தபோது ஸ்ரீலட்சுமிநரசிம்ம சிலை ஒன்று தயிர்பானையில் இருப்பதை அவர் கண்டார். தனக்கு கோவில் கட்டி வழிபட நல்ல காலம் பிறக்கும் என்ற அசரீரி கேட்க, ஊர் மக்கள் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு கோயில் எழுப்பி பெருமாளுக்கு தரிகொண்ட நரசிம்மர் (தயிர்ப்பானை நரசிம்மர்) என்று திருநாமம் இட்டு வழிபட்டு வந்தனர். கிராமத்தின் பெயரும் தரிகொண்ட என்று ஆயிற்று.

தரிகொண்ட கிராமத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சாந்த சொரூபராக எழுந்தருளியிருக்கிறார். ராஜகோபுரம், பலிபீடம், கொடிமரம், அகலமான பிரகாரம் ஆககியவற்றோடு கூடிய இந்த கோயிலில் பாஞ்சராத்ர ஆகமப்படி  பூஜைகள் நடைபெறுகின்றன. நீதிமன்றம், வழக்கு என்று செல்லாமல் மக்கள் இங்குள்ள பலிபீடத்தை வலம் வந்து ஆரத்தி செய்து சத்ய பிரமாணம் எடுத்துக் கொள்வது வழக்கம். எனவே தரிகொண்ட கிராமம் சத்ய ப்ரமாண க்ஷேத்ரமாகத் திகழ்கிறது. இந்த கோயிலில் செஞ்சு லட்சுமி, ஆதிலட்சுமி சன்னதிகளும், அனுமனுக்குச் சன்னதியும் உள்ளன. மேலும் இங்கு அவதரித்த பக்தை தரிகொண்ட ஸ்ரீவெங்கமாம்பாவுக்கு தனிச் சன்னதி உள்ளது. ஆந்திர மாநிலம் வாயல்பாடு என்ற ஊரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் தரிகொண்ட கிராமம் அமைந்துள்ளது. லட்சுமி நரசிம்மா வம்சத்தில் வந்தவர்கள் நியோகி அந்தணர்களான கிருஷ்ணய்யா மங்கமாம்பா தம்பதியர் குழந்தைப் பேற்றுக்காக வருந்தி திருப்பதி வெங்கடேசப் பெருமாளை அனவரதமும் அவர்கள் வேண்டி கொண்டிருக்கையில் ஒரு நாள் மங்கமாம்பாவிடம் ஒரு சிறு குழந்தை ஓடி வந்து தயிர் சாதம் கேட்க, அவள் தயிர்சாதம் எடுத்துக் கொண்டு குழந்தைக்கு ஊட்ட முற்பட்டபோது, அக்குழந்தை தயிர்சாதப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு ஓடி மறைந்தது. கிருஷ்ண பரமாத்வே தன்னிடம் வந்து தயிர் சாதம் பெற்றுச் சாப்பிட்டதாக மங்கமாம்பா மெய்சிலிர்த்தாள். ஸ்ரீவேங்கடேசப்பெருமாளையும் மனமுருகி அவர்கள் வேண்டிக்கொண்டனர். திருமலை வேங்கடவன் பெண் அம்சமாக தனக்குக் குழந்தையாகப் பிறக்கபோவதாக மங்கமாம்பா கனவு கண்டாள். அவள் கண்ட கனவு பலித்து, திருவேங்கடவன் அருளால் ஒரு பெண் குழந்தை (1730ம் ஆண்டு) அந்த தம்பதியருக்குப் பிறக்க, வேங்கடேசர், அலமேலுமங்கா ஆகிய பெயர்களை இணைத்து வெங்காம்பா என்று பெயரிட்டு அக்குழந்தையை அவர்கள் போற்றி வளர்த்தனர்.

இயற்கையாகவே சிறுவயதிலேயே இறைப்பற்று கொண்டிருந்த ஸ்ரீவெங்கமாம்பா தரிகொண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயிலுக்குச் சென்று கோயில்க் கைங்கர்யங்கள் செய்வதில் ஈடுபட்டாள். சுப்ரமண்ய ஆச்சார்யர் என்பவரிடம் ராமாயணம், பாரதம், பாகவதம் போன்றவற்றைப் பயின்றாள். திருமண வயது வந்தவுடன் பெற்றோர் வெங்கமாம்பாவுக்கு தக்க வரணைத் தேடி திருமணம் செய்து வைத்தனர். ஆனால் வெங்கமாம்பாவோ இல்லறத்தில் ஈடுபாடின்றி, பக்தி மேலீட்டால் திருவேங்கடமுடையானே தன்னுடைய பதி என்று கூறி பரவசப்பட்டு வந்தாள். நோய்வாய்ப்பட்டு அவள் கணவன் இறந்தபோது, தன்னுடைய மணாளன் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் என்றும், தான் நித்ய சுமங்கலி என்றும் கூறிய வெங்கமாம்பா தன்னிடமிருந்து மங்கலப்பொருட்கள் அகற்றப்படுவதைத் தடுத்தாள். அவளது பக்தியைக் கண்ட கிராம மக்கள் வெங்கமாம்பா அலிமேலுமங்கா (அலர்மேல் மங்கா) அவதாரம் என்று கூறி, அவளை தேவுடம்மா என்று வழிபட்டனர். தரிகொண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயிலில் கைங்கர்யங்கள் செய்வதிலும், இறைவன் மீது கீர்த்தனைகள் இயத்துவதிலும், பாடுவதிலும், ஆடுவதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மாத்ருஸ்ரீ வெங்கமாம்பா திருமலையானைத் தரிசக்க பயணம் மேற்கொண்டாள்.

திருவேங்கடவன் மீது 36000 கீர்த்தனைகள் எழுதி இறவாப் புகழ் பெற்ற தாளப்பாக்கம் அன்னமய்யா (1408-1503) அவர்களின் சந்ததியினர் -ஸ்ரீவெங்கமாம்பாவின் மகிமை அறிந்து அவளை வரவேற்றனர். முதலில் ஸ்ரீவெங்கமாம்பவை கோயிலுற்குள் அனுமதிக்க மறுத்த அர்ச்சகர்களும் அவள் மகிமை அறிந்து ஏற்றுக் கொண்டனர். திருவேங்கடவன்  மீது ஆறாத காதல் கொண்ட ஸ்ரீவெங்கமாம்பா ஏராளமான கீர்த்தனைகளை இயற்றினாள். தன்னை மறந்து கோயில்க் கைங்கர்யங்களில் ஈடுபட்டு வந்த அவள், ஸ்ரீவேங்கடாசல மஹாத்மியம், தரிகொண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சதகம், நரசிம்மர் விலாச கதை, சிவ நாடகம், பாலகிருஷ்ண நாடகம், விஷ்ணு பாரிஜாதம் போன்ற பல முக்கியமான நூல்களை இயற்றியதோடு யோகக் கலையையும் நன்கு பயின்று அஷ்டாங்க யோக சாரம் என்ற நூலையும் இயற்றி பெருமையடைந்தாள். திருமலையையும், திருவேங்கடமுடையானையும் பற்றி ஏராளமான கவிகள் இயற்றி தலைசிறந்த கவியத்ரியாகத் திகழ்ந்த மாத்ருஸ்ரீ வெங்கமாம்பாதான் இயற்றிய கீர்த்தனைகளில் முத்திரையாக கிருஷ்ணமய்யாவின் மகள் வெங்கமாம்பா என்று பதிஷ செய்திருக்கிறாள்.

தன் உடல், ஆவி அனைத்தையும் திருவேங்கடவனுக்கே அர்ப்பணித்த ஸ்ரீவெங்கமாம்பா ஒவ்வொரு நாள் இரவும் ஏகாந்தசேவை ஆரத்தி கைங்கரியத்தின்போது தட்டில் முத்துக்களை வைத்து வேங்கடவனை வணங்கி வந்தாள். தினந்தோறும் காலையில் ஸ்ரீவேல்கடவன் சன்னிதிக் கதவுகள் திறக்கப்படும்போது அங்கு சிதறிக் கிடந்த முத்துக்களைக் கண்டு துணுக்குற்ற அர்ச்சகர்கள், வெங்கமாம்பாவே இதற்குக் காரணம் என்றறிந்து வெங்கமாம்பாவை கோயிலிலிருந்து தொலைவில் உள்ள தும்புரகோணா என்ற குகைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வேங்கடவன் அருளால் அங்கிருந்து ஒரு குகைப் பாதையின் வழியாக தன் ஆரத்தி சேவையை அவள் மீண்டும் தொடர்ந்தாள். பெருமாளும் தன் பக்தை வெங்கமாம்பாவின் ஆரத்தியுடன் தான் தனக்கு இரவு பூஜை முடிய வேண்டும் என்று அர்ச்சகர்களின் கனவில் கட்டளையிட அர்ச்சகர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து ஏகாந்த சேவையின்போது வெங்கமாம்பாவை அனுமதித்தனர். தன்னுடைய ஆரத்தியில் திருவேங்கடமுடையானையே அவள் கண்டு மெய்மறந்தாள்.

அன்று முதல் தொடர்ந்து, திருமலை திருவேங்கடவன் திருக்கோவிலின் கடைசி சேவையான ஏகாந்த சேவையின் போது மாத்ரு ஸ்ரீ வெங்கமாம்பாவின் சந்ததியினர் இந்த ஆரத்திக் கைங்கர்யத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெங்கமாம்பா முத்துக்களைக் காணிக்கையாக்கியதால் இந்த ஆரத்தி முத்தியா<லு ஆரத்தி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆரத்தியின் போது ஒரு வெள்ளத்தட்டில், வெற்றிலை, பாக்குதூள் ஆகியவற்றோடு மாத்ருஸ்ரீ வெங்கமாம்பாவின் இஷ்ட தெய்வமான முத்துமாலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சிலை ஆகியவை வைக்கப்படுகின்றன. தினந்தோறும் கடைசி சேவையான ஏகாந்த சேவை அதிகாலை 1.30 மணி அளவில் முடிந்து, திருக்காப்பிடப்பட்டு, மீண்டும் 3.00 மணிக்கு ஸ்ரீவாரி சுப்ரபாத சேவையுடன் அடுத்த நாள் பூஜைகள், வழிபாடுகள் துவங்குகின்றன. 1730ஆம் ஆண்டு வேங்கடவன் அருளால் அவதரித்த ஸ்ரீவெங்கமாம்பா, எண்ணற்ற கீர்த்தனைகளையும், நூல்களையும் இயற்றி, இறுதியில் 1817 ஆம் ஆண்டு தனது 87வது வயதில் தன் பெருமானுக்காக அமைத்த துளசி வனத்தில் ஜீவசமாதி அடைந்தார். ஒரு பள்ளிக் கூட வளாக்ததிற்குள் அமைந்திருக்கும் பக்தை ஸ்ரீவெங்கமாம்பாவின் சமாதி பக்தர்களின் பார்வைக்காகத் தினமும் திறந்து வைக்கப்படுகிறது. மேலும் திருப்பதியில் மாத்ருஸ்ரீ வெங்கமாம்பாவின் சிலை ஒன்றும் இரயில்வே பாலத்தின் கீழ் உள்ள சந்திப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் திருமலையில் கவியத்ரி மாத்ருஸ்ரீ வெங்கமாம்பாவின் 285வது ஜயந்தி நாள் கொண்டாடப்படுகிறது. வெங்கமாம்பாவின் ஜயந்தி மற்றும் நினைவு நாட்களை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தினர் மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். கூர்ம ஜயந்தி இதே நாளில்தான் தாளப்பாக்க அன்னமய்யாவின் ஜயந்தி நாளும் கொண்டாடப்படுகிறது.
-----------------------------------------------
பராசர பட்டர்!

எம்பெருமானார் எதிராஜர், உடையவர், பாஷ்யக்காரர், பெரும்பூதூர் முனிவர் என்று ஆறாத அன்பினால் அடியார்கள் போற்றும் ஸ்ரீராமானுஜரின் பவித்திரமெனப் போற்றப்பட்டவர் கூரத்தாழ்வான். கூரம் என்ற ஊரில் சிற்றரசர் போல் செழிப்புடன் வாழ்ந்தவர். அவருக்கேற்ற குணவதியான பத்தினி ஆண்டாள். பவிஷ்யாச்சாரியார் என்று அடையாளம் கண்டு போற்றப்படும் சிறப்பினுக்குரிய லட்சுமணமுனி யான திருப்பாவை ஜீயரின் குணப்பண்புகளில் உளம் தோய்ந்து, பக்தியினால் ஆழங்கால் பட்டு அவரையே தன் ஆசாரியனாக வரித்து அவர் சரண் புகுந்தார் கூரத்தாழ்வான். தன் சுகபோகங்கள் அனைத்தையும் மனைவியுடன் இளையாழ்வாரேசரண் என்று வந்தடைந்தவர் ஆழ்வான்.

ஓரிரவு நகர்வலமாக வந்த கூரத்தாழ்வான், ஒரு வீட்டில் நடந்த துயரமான வாக்குவாதங்களைக் கேட்க நேர்ந்தது. ஆண்டாளை மணந்து கொள்பவன் முதல் இரவில் மரித்து விடுவான் என்று அவள் ஜாதகத்தில் இருந்ததால், அவளது திருமணம் தடைபட்டுவந்தது. காலமெல்லாம் கண்ணீருடன் தன் அருமை மகள் வருந்துவதைச் சகியாது அவளது பெற்றோர்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் கடைசி முடிவுக்கு வந்து விட்டனர். மறுநாள் கூரத்தாழ்வான் அவர்களை வரவழைத்து ஆண்டாளைத் தான் மணமுடித்து அவளை மகிழ்ச்சியோடு வாழ வைப்பதாகக் கூறி, பலவிதங்களிலும் அவர்களைச் சமாதனப்படுத்தி, ஸ்ரீஎம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனை,

அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய்
ஒத்தொவ்வாத பல்பிறப்பொழிந்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முன் மேவினார்!
எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே.

என்று உறுதிபூண்டு, ஒத்தொவ்வாத பல் பிறப்பையும் அளித்து ஆட்கொள்வன்- அவன்தானே! என்று ஞானத்தால் தேறி ஆண்டாளை தன் துணைவியாக ஏற்றார். எம்பெருமானின் அருளால் இந்த திவ்விய தம்பதிகள் 80 பிறை கண்டு நிறைவாழ்வு வாழ்ந்தனர். ஒருமுறை உணவு இடுவதற்கு முன் வாழை இலை வெட்டியபோது வாழை இலை வெட்டிய இடத்திலிருந்து நீர் வருவதைக் கண்டு, கண்ணீர் விட்டு அழுதார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலாருக்கு இவர் முன்னோடியாகத் திகழ்ந்தார் வாத்ஸல்ய பாவத்தில். ஒரு மழை காலத்தில் வெளியில் பிட்சைக்கு போகாமல் இரவில் கண்ணயர தர்மபத்தினியான ஆண்டாள் ஒருக்கணம் எண்ணினால், ஏவலர்கள் எடுபிடியாக ஏவல் செய்ய, தங்கத் தட்டில் பலவிதமான உயர்ந்த உணவு வகைகளை உண்டுகளித்த என் கணவர் இன்று பட்டினியோடும் படுக்க நேர்ந்ததே! ரங்கா, உன் பக்தன் பட்டினி புலம்பவும் அந்த அற்புதம் நிகழ்ந்தது. அரங்கன் அர்ச்சாரூபமாக ஆழ்வானுக்கு பிரசாதங்கள் அனுப்பி வைக்க உத்திரவிட, அதன்படி உத்தமநம்பிகள் என்பவர் பெருமாள் பிரசாதங்களுடன் ஆழ்வான் இல்லத்துக்கு வந்து பிரசாதங்களைத் தந்தார்.

ஆழ்வான் ஆண்டாளை அழைத்து நீ ஏதாவது பெருமானிடம் குறைப்பட்டுக் கொண்டதுண்டோ என்று வினவ, நீங்கள் பசியோடிருப்பதைக் கண்டு மனம் பொறாமல், நான் பெருமானிடம் முறையிட்டது உண்மைதான் என்று கூறி மன்னிப்பு வேண்டினாள். ஆழ்வான் அந்த அமுதத்தை மூன்றில் ஒரு பங்கு கொடுத்து சாப்பிடச் சொல்லி விட்டு தானும் ஒரு பங்கை உண்டு உறங்கச் சென்றார். ஆண்டாள் எம்பெருமானின் அருளால் கருவுற்று இரண்டு ஆண்மகவுகளைப் பெற்றெடுத்தாள். ஆழ்வானும் தாம் பெற்ற குழந்தைகளுக்கு நாமகரணம் செய்ய ஆசாரியனை வேண்டினார். எம்பார் குழந்தைகளை தூக்கிக் கொண்டு வர வேதவியாச பட்டர், பராசர பட்டர் என்னும், திருநாமங்களை எதிராசன் சூட்டி மகிழ்ந்தார். வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் பிறந்த சிசுக்களில் பராசரபட்டர் என்ற குழந்தையை ஸ்ரீரங்கநாதர் தமது சுவிகாரபுத்திரனாக ஏற்றுக் கொண்டார்.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்றபடி பட்டர் ஐந்து வயதிலேயே திருவாய்மொழியில் வரும் சிறு மாமனிசர் என்ற பதத்தைக் கூறி சிறு என்பது சிறியது. மா என்றால் பெரியது. எப்படி எதிர்மறையான இவை ஒருவரிடம் ஒன்றாகப் பொருந்தியிருக்கும்? என்று பட்டர் கேள்வி கேட்டபோது வியப்படைந்த தந்தை கூரத்தாழ்வான் அதற்குரிய விளக்கங்களையும் எடுத்துக் கூறினார். ஆகிருதியில் (உருவத்தில்) பெரியவராக இருப்பவரை அப்படிக் கூறி வணங்குகிறோம் என்று கூறினார். ஒரு சமயம் மற்ற பையன்களுடன் மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தார் பட்டர். அப்போது சர்வக்ஞபட்டர் என்பவர் பல்லக்கில் பவனி வந்து கொண்டிருந்தார். அவருடைய சீடர்கள் விருதுகள் சொல்லிக் கொண்டு பின்னே வந்தனர். பட்டர் தன் சிறு கரங்களில் மண்ணை அள்ளி வைத்துக் கொண்டு இதற்குள் எவ்வளவு மண் இருக்கிறது என்று கூற முடியுமா? என்று கேட்க, சர்வக்ஞரும் சிரித்து விட்டு பதில் பேசாதிருந்தார். பையன் ஒரு கைப்பிடி மண் என்று கூறத் தெரியாமல் சர்வக்ஞர் பட்டர் என்று பெயர் கொண்டு, செல்லுதல் தகுமோ? என்று கேட்கவும் பையன் யார் குழந்தை என்று விசாரித்து மகிழ்ந்து பல்லக்கில் ஏற்றி வீட்டுவாசலில் இறக்கி விட கண்ணே என்று ஆண்டாள் உட்சென்று திருஷ்டி கழித்தார்.

மகாபுத்திசாலியாகவும், ஏகசந்தக்கிரகியாகவும் (தன் தந்தையைப் போல) விளங்கிய பட்டருக்கு ஆழ்வானும் எம்பாருமேவேதம் முதல் அனைத்து சாஸ்திரங்களையும் கற்பிக்க எதிராஜர் நியமனம் செய்தார். ஒரு சமயம் பட்டர் பகவத் சந்நிதியில் திரைசாத்தியிருக்கும் போது, நெருங்கி சமீபம் வரும் ஒரு குரல் யாரது? வெளியே போ என்று ஆணையிட பட்டரும் உடன் விலகி வெளியே வந்து விட்டார். சில நொடியில் மீண்டும் யாரது பட்டரா? உள்ளே வர வேண்டும் என்று குரல் ஒலித்தது. வெளியே போம் என்று சொன்னபோது நினைத்ததென்ன? என்று பெருமாள் வினவ, இன்று பகவானும், பிராட்டியும் ஏகாந்தமாக இருக்கிறார்கள் என்று எண்ணினேன். இதற்கு முன் நினைத்தது என்ன? என்று விடாப்பிடியாக எம்பெருமானும் வினவ, ஆழ்வானும் ஆண்டாளுமாக எண்ணினேன் என்றார் பட்டர். பட்டரே இது நம் ஆணை எப்பொழுதும் இதுபோலவே நினைத்து இருக்கக்கடவீர் என்று நியமித்தருள, பட்டர் பெருமாளின் சத்புத்திரர் என்ற விஷயம் மேலும் உறுதியாயிற்று.

பட்டருக்கு வயது வந்தவுடன் விவாகம் செய்து வைக்க எண்ணினார் ஆழ்வானும் ஆண்டாளும் பெரியநம்பிகள் <உறவினரின் பெண்ணை பராசரபட்டருக்கு திருமணம் முடிக்க அவர்கள் முனைந்தபோது, புது சம்பந்தமாக இது இருப்பதால் எனக்கு சம்மந்தமில்லை என்று பெண்ணைப் பெற்றவர் மறுத்துவிட்டார். ஆண்டாள் மனம் நொந்து பெருமாளிடம் விண்ணப்பம் செய்தாள். ஆழ்வான் நிச்சிந்தையாக ஈச்வரனின் குடும்பக் கவலைகளை ஏன் இழுத்துப் போட்டுக் கொண்டு, கவலைப் படுகிறாய்? எல்லாம் எம்பெருமானே பார்த்துக் கொள்வார் என்று கூறிவிட்டார்.

அன்று இரவே, அரங்கன் பெண்ணைப் பெற்றவர் கனவில் தோன்றி உமது இரண்டு பெண்களையும் பட்டருக்கே மனம் முடியுங்கள், பட்டர் என்னுடைய ஸ்வீகாரப்புத்திரன் என்பதால் எங்கள் குலமரபுப்படி, உபயநாச்சியாரோடு இருக்கும்படித் திருக்கல்யாணத்தை முடித்து வையுங்கள் என்றார். அதன்படி தனது இரு குமாரத்திகளையும் பட்டருக்கே துணைவியாகத் திருமணம் செய்து மகிழ்ந்தார். ஆழ்வான் பட்டினி கிடந்து அன்று நாம் அனுப்பிய பிரசாதத்தை உண்ட இந்த தம்பதிகள் நமது சங்கல்பத்தால் இரண்டு குமாரர்களைப் பெற அவற்றில் ஒன்றை நமக்காக்கிக் கொண்டோம் என்று உகப்புடன் பெருமாள் கூறிய செய்திகள் அனைத்தையும் எதிராஜர் சந்நிதியில் ஆழ்வான் விஞ்ஞாபனம் செய்ய குருநாதரும் அகமகிழ்ந்தார்.

ஒரு சமயம் ஸ்ரீரங்கத்தில் வைணவர்கள் பட்டரை எதிர்கொண்டு அரங்க நகரப்பன் சன்னதிக்கு அழைத்துச் சென்றார்கள். அரங்கனை மங்களாசாசனம் பண்ணிய பின் மாலை பரிவட்டம் முதலிய மரியாதைகள் செய்து அவர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். தாயாகிய ஆண்டாளைச் சேவித்து ஆசி பெற்ற பின் எப்பவும் போல, சிஷ்யர்களுக்கு தர்சன கிரந்த <உபதேசங்களைச் செய்து கொண்டிருந்தார். இதற்கிடையில் கங்கோத்தரியில் வேதாந்த மார்க்கம் மாறியபின் பரம வைஷ்ணவரான பட்டர் திருவடிகளே கதியெனயிருந்த தானிஜ், ஒருநாள், இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள் மிகுந்த பசியோடு அவர் கிருஹத்திற்குச் செல்ல, உணவிட மறுத்த அவரது மனைவிமார்கள் அங்கு அன்னமில்லை நீராடும் இடத்திற்குச் செல்லுங்கள். அங்கே உங்கள் வேதாந்தி இருக்கிறார் என்று நிஷ்டூரமாகச் சொல்ல, வேதாந்தி மனம் கலங்கினார். தமது சொத்துக்களை மூன்று பாகமாக்கி அதில் இரண்டு பங்கை தன் மனைவியர் இருவருக்கும் தந்து விட்டு தன்னுடைய பங்கை ஓர் ஒட்டகத்தில் ஏற்றிக் கொண்டார்.

சன்யாச ஆசிரமத்தையும் ஏற்றுக் கொண்டு ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் சிறுபுத்தூருக்கு எழுந்தருளினார். பரமபாகவத சிகாமணியான அனந்தாழ்வான் முன்பு பட்டரை எதிர்கொண்டது போலவே இவரையும் எதிர் கொண்டு வரவேற்றார். ஸ்வாமி சுகுமார மனோகரனாக இருந்த தேவரீர் இப்படிச் செய்யலாமே? வேர்த்தபோது நீராடி, பசித்தபோது அமுதுண்டு. பட்டர் திருவடிகளே சரணம் என்று இருந்ததால் உம்மைப் பரமபதத்திலிருந்து தள்ளி விடுவார் உண்டோ? என்று கேட்டு அளவளாவி உணவிட்டு உபசரித்து மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தார்.வேதாந்தி தனது மூட்டை முடிச்சுகளுடன் பயணகதியில் பட்டர் திருமாளிகை அடைந்து தனது குரு நாதரைத் தண்டனிட்டு, தான் கொண்டு வந்த தனங்களை அவரது திருவடிகளில் சமர்ப்பித்தார். பட்டர் இதெல்லாம் என்ன? என்று கேட்டார். வேதாந்தி வீட்டு விஷயங்களையெல்லாம் விஸ்த்தாரமாக எடுத்துக்கூறி பசியோடு வந்த ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அன்னம் மறுக்கப்படும்போது, அந்த கிருகஸ்தாஸ்ரமத்தில் என்ன பயன் என்று தேடி அவர்களின் பங்கை அளித்து விட்டு அடியேன் துறவு பூண்டு வந்துள்ளேன் என்று விண்ணப் பித்தார். அதை ஸ்வாமியின் திருவுள்ளப்படியே உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று விண்ணப்பித்தார். அதை ஸ்வாமியின் திருவுள்ளப்படியே உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று விண்ணப்பித்தார். வேதாந்தியும் அவ்விதம் செய்ய அந்தத் திரவியம் சீண்டுவாரின்றி அங்கே போட்டபடியே கிடந்தது. ஒரு நாள் பட்டர் நீராடச் சென்றபோது, இந்தத் திரவியக் குவியல் ஏது? என்று வினவ, வேதாந்தியும் விபரம் கூறினார்.

இந்தத் திரவியம் கொண்டு நந்தவனம் அமைத்து, மேற்கொண்டு பணம் இருந்தால், ததியாராதனம் செய்யக்கடவீர் என்று நியமிக்க அதன்படி நந்தவனம் அமைத்து பகவானுக்கு ததியாராதனம் செய்து வந்தார். அவரது குருபக்தியையும், வைணவ நெறியின் பால் கொண்டிருந்த எல்லையற்ற பக்தி விசுவாசமும் கண்ட பட்டர் அவரை அன்போடு அணைத்து நம் ஜீயர் என்ற நாமம் சூட்டினார். அவரை எக்கணமும் தம்முடன் பிரியாமல் இருக்க பணித்து சகல சாஸ்திரங்களையும் குளிரக் கடாக்ஷித்து, பட்டரைப் பற்றிக் கூறும்போது நஞ்சீயர் பட்டர் பிரபாவமும் நஞ்சீயரைப் பற்றி நவிலும் போது பட்டரின் ஆசாரிய விசேஷமும் வெளிப்படுகின்ற அதிசய குருபரம்பர வைபவமாகும். நஞ்சீயர் ஒருமுறை ஒரு சந்தேகம் கேட்டார். நம் பெருமாள் இங்கே சந்திரப்புஷ்கரணிக்கரையிலே கண் வளர்கிறாரே அதன் திருவுள்ளக்கிடக்கை என்ன வென்று, பட்டர் மறுமொழி பகர்ந்தார். நாராயணா, மணிவண்ணா என்று கூக்குரலிட்டபின் கஜேந்திரனைக் காக்க எழுந்தருளி வந்தார் எம்பெருமான். இங்கே நான் கூப்பிடுவதற்கு முன்னாலேயே தயாராக அவர் ரட்சகம் செய்யக் காத்துக் கண்வளர்கிறார் என்றார்.

பின்னொரு சமயம் பட்டரும் நஞ்சீயருடன் சேதுஸ் நானம் செய்ய எண்ணினார். செல்லும் வழியில், ஓர் இரவு களைப்பு மிகுதியினால் பட்டர் நஞ்சீயரின் மடியில் தலை வைத்து கண் துயின்றார். குருநாதர் தூக்கம் கெடுக்கக் கூடாது என்பதற்காக நஞ்சீயர் கால் களையோ உடம்பையோ சிறிதும் அசைக்காமல் அப்படியே அமர்ந்திருந்தார். ஒரு சிஷ்யன் தன் ஆசானிடம் எப்படியிருக்க வேண்டுமென்ற உதாரண புருஷராயிருந்தார். ஆளவந்தாருக்கு ராமானுஜமுனி ஏகலைவன் என்று எம்பார் ஒருமுறை கூறியது இங்கும் பொருத்தமாக (வேறு ஒரு பொருளில்) பட்டரின் ஏகலைவனாக நஞ்சீயர் திகழ்ந்தார் எனலாம். கூரகுலோத்மம் என்ற ஊரிலே பட்டர் ஒரு சமயம் தங்கியிருந்தபோது அங்கு கூரகுலோத்மதாசரின் நந்தவனத்தில் பட்டரின் குடும்பத்தார் புழங்க, அதைப் பராமரிக்கும் காவலர்கள் அதைத் தடுத்தனர். அதைக் கேட்ட கூரகுலோத்தமதாசர் (இவர் கூரத்தாழ்வாருக்கும் பட்டருக்கும் சிஷ்யராக இருந்த பெரியவர். இந்த நந்தவனத்தை ஏற்படுத்தி நிர்வகிப்பவர். ஏகாங்கிகளை கோபித்து இது முற்றிலும் ஆசாரியர் குடுப்பத்தின் உகப்பிற்காகவே உள்ளது பட்டர் விரும்புவதால் பெருமாள் கைங்கரியத்துக்கும் பயன்படுகிறது என்று கூறினாராம். (வார்த்ததாமாலை-177ம் வார்த்தை)

திரிபுவன வீரதேவன் என்கிற காஞ்சிமன்னர் பட்டரின் வாக்குவன்மை மற்றும் ஆன்மீக மேன்மையை உணர்ந்து தமது அரண்மனைக்கு வந்து போகுமாறு தன் விருப்பத்தைத் தெரிவிக்க பட்டரும் அன்புடன் சிறிய பதிலை அந்த மணிப்பிரவாளத் தமிழிலே தருகிறோம் படித்துச் சுவையுங்களேன். திரிபுவன வீரதேவன் பட்டருடைய சபிஜாத்யம் கண்டு நீர் நம் பக்கல் ஒருநாள் வந்து போவீர் என்று அபேக்ஷிக்க பள்ளி கொள்ளுகிறவர் கை மறுத்தால், உன்னுடைய வாசலொழியப் போக்குண்டோ? என்றருளினார். எவ்வளவு சமத்காரமான பதில்கள். அரங்கன் கைவிட்டு விட்டால், நீதானே கதி என்று உயர்த்துவது போல் மன்னனைக் கூறி தனது மறுப்பையும் அதிலேயே தெரிவித்த நேர்த்தி, குரு மணிக்கு மேல் பதக்குண்டு என்று கூறிய கூரேசரின் அருமைப்புதல்வரல்லவா பட்டர்?

குருபரம்பரா பிரபாவத்திலும், வார்த்தா மாலையிலும் இடம்பெற்றுள்ள ஸ்ரீவைஷ்ணவ லட்சணத்தைப் பற்றி இங்கு தெரிந்து கொள்வது சுவையானது. பட்டரை ஆச்ரியித்த ஆர்வமுடைய ஸ்ரீவைஷ்ணவரை நோக்கி, நீர் அனந்தாழ்வானிடம் சென்று ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம் இருக்கும்படி என்ன வென்று தெரிந்து வாரும் எனப் பட்டர் ஆக்ஞாபித்தார். அந்த அடியாரும் அதைச் சிரமேற் கொண்டு அனந்தாழ்வான் திருமாளிகைக்குச் செல்ல அப்பொழுது ததியாராதனை நடைபெற்று வந்தது. வந்தவர் பெருமையுடன் ஒரு பக்கம் காத்திருந்தார். பந்தி முடிந்தவுடன் வந்த விருந்தினரை ஆழ்வான் உள்ளே அழைத்துச் சென்று அன்புடன் அமுது படைத்து விபரம் கேட்டார். வைணவர் நான் பட்டரால் அனுப்பப் பட்டேன் என்றும் வைஷ்ணவ லட்சணங்களைக் கேட்டு உம்மிடம் தெரிந்து வரச் சொன்னார். ஆசாரியர் பவ்வியமாக மொழிந்தார்.

அனந்தாழ்வான் ஒரு புன்முறுவலுடன் இது மொழிந்தார். கொக்கு போல, கோழி போல, உப்பு போல உம்மைப் போல இருக்கும் என்று அவரிடம் விண்ணப்பம் செய்யுமென்று அருளினார். இதன் பொருள் நீர்க்கரையில் நின்று கொண்டிருக்கும் கொக்கு தனக்கு ஏற்ற மீனுக்காக காத்திருக்குமாப் போல, நீர் வண்ணனிடம் ஆசார அபசாரங்களை ஒதுக்கி, பாகவத கைங்கரியமென்ற பரம புருஷார்த்தத்தையே வைஷ்ணவன் கேட்டுப் பெறுவான். கோழி எப்படி குப்பையைக் கிளரி வேண்டாத விஷயங்களைத் தள்ளி தனக்கு ஏற்ற நெல்மணிகளையே தெரிந்து எடுத்துக் கொள்வது போல அவனும் சாஸ்திரங்களைத் துருவித் துருவி தனக்கு உரியத் தரமான ஸத் விஷயங்களையே ஸ்வீகரித்து பலன் பெறுவான்.

உப்பும் தான் சேர்ந்த உணவின் சுவையைக் கூட்டி கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடுவது போல, ஸ்ரீவைஷ்ணவர்களும் தன்னைச் சார்ந்த ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் தன்னைச் சார்ந்த அடியார்களுக்கும் ப்ரயோஜனவஸ்து வாக விளங்கித் தன்னை முன்னிருந்துக் காட்டிக் கொள்ளாமல் பாகவத சேவையில் கரைந்து விடுவர் என்றும் கூறி, அனந்தாழ்வான் இவைகளுக்கு திருஷ்ட்டாந்தமாக உம்மைப் போல் இருப்பான் என்று வந்தவரைக் குறிப்பிட்டு இந்த மூன்று நியமங்களும் பொருந்திய உத்தம ஸ்ரீவைஷ்ணவராக அவரை மேம்படுத்தி உரைத்தது மிகவும் விசேஷமாகும்.

வீரசுதந்தரபிரம்மராயன் என்கிற கூரத்தாழ்வானின் சிஷ்யன், மதில்சுவர் எழுப்பும்போது பட்டரின் ஆணையையும் மீறி, பிள்ளை பிள்ளையாழ்வான் என்கிற இன்னொரு கூரத்தாழ்வான் சிஷ்யரின் கிருஹத்தை இடித்து விட்டுக் கட்டிவிட, மனம் வருந்திய பட்டர், ஸ்ரீரங்கத்தை விட்டு திருக்கோட்டியூர் சென்று அங்கு பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் வீரசுதந்தர பிரம்மராயன் இறந்துவிட பட்டருடைய தாயார் ஆண்டாள் மிக வருந்தினார். ஆழ்வாரின் சம்பந்தமுடைய பிரம்மராயன் இகலோக வாழ்விலும் சுகப்படாது பரலோகத்திலும் நரகம் சென்று துன்பப்படயிருப்பதை எண்ணியே வருந்தினார். பட்டரின் சர்வக்ஞ அறிவைப் பரிசோதிக்கவே பல வித்வான்கள் கூடி, விவாதம் செய்தனர். ஆனால் வெற்றி கிடைக்காமல் தோல்வியைத் தழுவி மேலும் பட்டரைச் சோதிக்க ஒரு குடத்தில் பாம்பை விட்டு அழைத்துக் கொண்டு வந்து, இதில் என்ன இருக்கிறது என்று கேட்க, அவர்கள் குடத்தின் வாயைக் கவிழ்த்ததும் ஒரு பாம்பு வெளியே சீரிக் கொண்டு வெளி வந்தது. இது கொற்றக் குடையா? என்று கேலியாகக் கேட்டனர். பட்டர் சொன்னார். ஆம் அதிலென்ன ஐயப்பாடு? சென்றால் குடையாம் என்றல்லவா ஆழ்வார் பாசுரம் உள்ளது என்று கூறியவுடன் அவர்கள் யாவரும் வெட்கித் தலை குனிந்தனர்.

திரிபுவன வீரதேவன் என்ற காஞ்சி மன்னன் பட்டரின் வாக்குவன்மை மற்றும் ஆன்மீக மேன்மையை உணர்ந்து தனது அரண்மனைக்கு வந்து தமது விருப்பத்தைத் தெரிவிக்கப் பட்டரும் அன்புடன் கூறிய பதிலை அந்த மணிப்பிரவாள நடையிலே தருகிறோம் படித்துச் சுவையுங்களேன் என்றார். ஒரு சமயம் பட்டர் திரும்பும் வழியில் ஓர் வேடன் குடிலுக்கும் இருவரும் சென்றபோது, அவன் அவர்களுக்கு உபசரனை செய்தான். அப்பொழுது பட்டர் கூறினார். ஐயரே இவன் நம்மை உபசரிப்பது நம் பெருமையை உணர்ந்தோ வேறுலாபங்கள் கருதியோ இல்லை. சரண்யனான பகவான் தன் அபிமானத்தால் ஒதுங்கினவரை ஏற்றுக்கொள்ளாமல்யிருப்பானா? என்று கூறி வேடனிடம் வேறு ஏதாவது விஷயம் உண்டா எனக் கேட்டபோது அவன் கூறினான். சாமி இன்று ஓர் அதிசயம் நடந்தது. வழக்கம் போல் நான் வேட்டையாடும்போது ஒரு முயல்குட்டியைப் பிடித்து விட்டேன் என்றான் வேடன். அவர்கள் இருவருக்கும் இது ஆச்சர்யம் விளைவித்தது. மாமேகம் சரணம் வ்ரஜ என்ற இந்த முயலுக்கும் யாரும் உபதேசிக்கவில்லை. ஆனாலும் சரணாகதியும், ரக்ஷணமும், இரண்டுமே பலிதமானது. என்னே! என்று பட்டர் நஞ்சீயரிடம் கூறி சந்தோஷம் கொண்டார்.

எம்பெருமானார் நியமனப்படி பட்டர் சாரதா பீடத்திற்குச் சென்று ஸ்ரீபாஷ்யத்தை ஸ்ரீசாரதாதேவிக்கு காட்டி அவள் அனுக்கிரகம் பெற்று மீண்டதும் திரும்பி வரும் வழியில் திருவேங்கடமுடையானைச் சேவித்து வரும் வழியில் மனநிலை சரியில்லாத பெண்ளுக்கும் அனுக்கிரகம் செய்திருக்கிற செயல்களை குருபரம்பரை நூல்கள் தெரிவிக்கின்றன. பட்டருக்கு இரண்டு தேவியர்கள். இப்படி இருபக்கமும் இருசர்ப்பங்களை வைத்துக் கொண்டு சம்சாரமாகிய கடலை எப்படி சமாளிக்கிறீர்கள்? என்று குரு பக்தர் கேலியாகக் கேட்க பட்டரும் அயராமல் அந்த இரண்டு சர்ப்பங்கள் சீறும்போது அவைகளின் செருக்கை அடக்க வானத்தில் பறக்கும் வைனதேயன் இருக்கிறான். நம்மால் ஆவதென்ன? என்று கூறி பெருமாளைப் பரவினார்.

ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்திலே கைசிக துவாதசி நாளில் கைசிக புராணத்தை பட்டர் உபன்யாசம் செய்த போது பெரியபெருமாள் மிகவுகந்து திருமாலை திருப்பரிவட்டம் திருவாபரணம் இவற்றை அருளியதோடு உமக்கு நாம் மேலை வீடு தந்தோம் என்றிட, மகா பிரசாதம் என்று பட்டர் அதனை ஏற்றுக் கொண்டார். பெரிய பெருமாளையும் எம்பெருமாளையும் சேவித்து நியமனம் பெற்று தம் திருமாளிகைக்கு எழுந்தருள தாயார் அரங்கனைச் சேவிக்க, அவரும் நலமந்தமில்லதோர் நாடு புகுவீர் என்று ஆசிர்வதிக்க பட்டர், யாம் வேண்டுவதும் அதுவே எனக் கூறி அமைந்தார். பட்டர் திருமாளிகைக்கு ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் கூடி அமுது செய்ய பெருந்திரளாகக் குழுமினர். பட்டர் திருநெடுந்தாண்டகத்துக்கு அர்த்தம் அருளிச் செய்தார். அஞ்சிறைப்புள்ள என்கிற பாசுரத்தை அனுசந்திக்கும்போது திருவேங்கட முடையான் கருடாரூடராய் வானில் காட்சியளித்தருள, பட்டரும் ஆனந்தப்பட்டார். பறவை ஏறும் பரம் புருடா என்கிற பாசுரத்தை இருமுறை அநுசந்தானம் செய்து சிரசின் மீது கைகூப்பிக் கபாலம் வெடித்து திருநாட்டிற்கு எழுந்தருளினார். தாயார் ஓடோடி வந்து அவரைத் தாங்கிப்பிடித்தார். நஞ்சீயரும் மற்றய சீடரும் வேரற்ற மரம் போல் சாய்ந்து கண்ணீர் பெருக்கினார். ஸ்ரீராமப்பிள்ளையக் கொண்டு சரமக்கிரியைகளை முறையாக நஞ்சீயர் செய்தார். பட்டர் அருளிச் செய்த கிரந்தங்கள், விஷ்ணு சகஸ்ரநாம பாஷ்யம், அஷ்டச்லோகி, ஸ்ரீகுணரத்ன கோசம், ஸ்ரீரங்கராஜஸ்தவம் முதலியன.
-----------------------------------------------
"ஸ்வஸ்தி வாசனம்"

|| ஸ்ரீ குருப்யோ நம: ||

ஸ்ரீ மஹாத்ரிபுரஸுந்தரி ஸமேத ஸ்ரீ சந்த்ரமௌளீச்வராய நம:

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்ரீசரணயோ: ப்ரணாமா:

ஸ்வஸ்தி ஸ்ரீமதகில பூமண்டலாலங்கார - த்ரயஸ் த்ரிம்சத்கோடி தேவதாஸேவித - ஸ்ரீகாமாக்ஷீ தேவீஸனாத - ஸ்ரீமதேகாம்ரநாத - ஸ்ரீமஹாதேவீ ஸநாத ஸ்ரீஹஸ்திகிரிநாத - ஸாக்ஷாத்கார - பரமாதிஷ்ட்டான - ஸத்யவ்ரத நாமாங்கித - காஞ்சீ திவ்யக்ஷேத்ரே - சாரதாமட ஸுஸ்த்திதாநாம் - அதுலித ஸுதாரஸ- மாதுர்ய கமலாஸன காமினீ தம்மில்ல ஸம்ப்புல்ல- மல்லிகாமாலிகா நிஷ்யந்த மஹரந்தஜ்ஜரீ - ஸௌவஸ்திக வாங்நிகும்ப்ப விஜ்ரும்ப்பணாநந்த - துந்துலித - மனீஷிமண்டலாநாம் அநவரதாத்வைத வித்யாவினோத ரஸிகாணாம் நிரந்தராலங்க்ருதீக்ருத - சாந்தி தாந்தி பூம்நாம் - ஸகல புவனசக்ர ப்ரதிஷ்ட்டாபக - ஸ்ரீசக்ர ப்ரதிஷ்ட்டா விக்க்யாத யசோலங்க்ருதாநாம் - நிகில பாஷண்ட ஷண்ட - கண்டகோத்காடநேந - விசதீக்ருத வேத வேதாந்த மார்க - ஷண்மத ப்ரதிஷ்ட்டாபகாசார்யாணாம்- ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய வர்ய - ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீமத் சங்கர பகவத்பாதாசார்யாணாம் அதிஷ்ட்டானே - ஸிம்ஹாஸனாபிஷிக்த ஸ்ரீமத் சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸம்யமீந்த்ராணாம் - அந்தேவாஸிவர்ய - ஸ்ரீமத் ஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீபாதாநாம் - ததந்தேவாஸிவர்ய - ஸ்ரீமத் சங்கரவிஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீபாதநாம் ச சரணநளினயோ: ஸ்ப்ரச்ரயம் ஸாஞ்சலிபந்த்தம் ச நமஸ்குர்ம:|

நம் காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்யர்களை இந்த ஸ்வஸ்தி வாசன ஸ்லோகம் பாராயணம் செய்து வணங்குதல் என்பது நம் பாரம்பரியம் என்கின்றனர் நம் பெரியோர்கள். வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மந்திரத்தைச் சொல்லி நம் ஆச்சார்யாளை வந்தனம் செய்தோமானால் கட்டாயம் குருவருள் நமக்குண்டு என்பது திண்ணம்.


-----------------------------------------------
காஞ்சி பீடத்தில் அமர்ந்த குருவாம் காமாக்ஷி தாயை பூஜிக்கும் குருவாம்.

காவல் தெய்வமாய் இருக்கும் குருவாம்.

காருண்ய மூர்த்தியாய் வந்த குருவாம்.

துவராடையை உடுத்தும் குருவாம்.
துரிதமாக வந்து காக்கும் குருவாம்.
துணையாக என்றும் இருக்கும் குருவாம்.

துவளா வண்ணம் காக்கும் குருவாம்.

அர்த்தநாரியாய் இருக்கும் குருவாம்.

அற்புதங்கள் பல செய்யும் குருவாம்.

அல்லும் பகலும் காக்கும் குருவாம்.
அழைத்தால் ஓடி வருகின்ற குருவாம்.

ஞானத்திலே உயர்வான குருவாம்.
மோனத்திலே மூழ்கிடும் குருவாம்.
கானம் கேட்டால் மகிழும் குருவாம்.
தானம் செய்திடும் தயாள குருவாம்.

ஊர் ஊராய் நடந்த குருவாம்.
பேர் புகழை விரும்பாத குருவாம்.
பார் முழுதும் போற்றும் குருவாம்.
பார்த்தசாரதியாய் காக்கும் குருவாம்.

குருவே சரணம்
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
காஞ்சி சங்கர காமகோடி சங்கர


அருள் மிகு வல்வில்ராமன் திருக்கோயில்
 
மூலவர்    :     வல்வில் ராமன், சக்கரவர்த்தி திருமகன்
தாயார்    :     பொற்றாமரையாள், ஹேமாம்புஜவல்லி
ஸ்தல விருட்சம்    :     புன்னை மரம்
தீர்த்தம்    :     ஜடாயு தீர்த்தம்
பழமை    :     2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :     பூதப்புரி
ஊர்    :     திருப்புள்ளம்பூதங்குடி
மாவட்டம்    :     தஞ்சாவூர்
மாநிலம்    :     தமிழ்நாடு
பாடியவர்கள் :     திருமங்கையாழ்வார்
             
மங்களாசாசனம் : அறிவதறியா னனைத்துலகும் உடையானென்னை யாளுடையான் குறிய மானி யுருவாய கூத்தன் மன்னி அமருமிடம் நறிய மலர்மேல் சுரும் பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாட பொறிகொள் சிறை வண்டிசை பாடும் புள்ளம் பூதங்குடி தானே.
திருமங்கையாழ்வார்.      
           
திறக்கும் நேரம் :     காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.    அருள் மிகு வல்வில்ராமன் திருக்கோயில், திருப்புள்ள பூதங்குடி- 612301, தஞ்சாவூர் மாவட்டம். போன் :    +91- 94435 25365
     
சிறப்பு :     பொதுவாக ராமர் நின்ற கோலத்தில் தான் அருள்பாலிப்பார். ஆனால் இத்தலத்தில் ராமர் சயன கோலத்தில் அருள் பாலிக்கிறார். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.      
             
தகவல் :     இத்தல பெருமாளை ராமன், ஜடாயு ஆகியோர் தரிசனம் செய்துள்ளனர். இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி புஜங்க சயனத்தில் சோபன விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.
     
ஸ்தல பெருமை :    ஜடாயுவாகிய புள்ளிற்கு ராமன் மோட்சம் கொடுத்து ஈமக்கிரியை செய்த நிகழ்வை குறிக்கும் தலமாதலால் இத்தலம் திருப்புள்ள பூதங்குடி ஆனது. வைணவ சம்பிராத யத்தில் வைணவர்களுக்கு இரண்டு பூதபுரிகள் உண்டு. ஒன்று காஞ்சிபுரம் அருகே ஸ்ரீபெரும்புதூர். ராமனுஜர் அவதரித்த இத்தலத்ததை ஆழ்வார்கள் சிறப்பித்தார்கள். மற்றொன்று தஞ்சாவூர் அருகே திருப்புள்ளபூதங்குடி. இதை ஆச்சாரியார்கள் சிறப்பித் தார்கள். ராமன் இத்தலத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளிப்பது விசேஷத்திலும் விசேஷம். திருமங்கையாழ்வார் இங்கு வந்த போது இக்கோயிலில் வேறு ஏதோ தெய்வம் இருப்பதாக கருதி கவனிக்காமல் சென்றார். அப்போது பெரிய ஒளி தோன்றி அதிலிருந்து சங்கு சக்ரதாரியாக ராமன் காட்சியளித்தார். இதைக்கண்ட திருமங்கை அறிய வேண்டியதை அறியாமல் சென்றேனே என 10 பாசுரம் பாடினார். தந்தை தசரதருக்கு செய்ய வேண்டிய இறுதி காரியத்தை செய்ய முடியா விட்டாலும் ஜடாயுவிற்கு செய்ததை நினைத்து மகிழ்ந்ததால் இத்தல ராமன் வல்வில் ராமன் என அழைக்கப்படுகிறார்.

ஸ்தல வரலாறு :    சீதையை ராவணன் கவர்ந்து சென்ற போது கழுகுகளின் அரசனான ஜடாயு அவனிடம் போரிட்டார். அப்போது ஜடாயுவை ராவணன் வாளால் வெட்டினான். ஜடாயு ராமா, ராமா என முனகியபடி குற்றுயிராக கிடந்தார். அந்த வழியே வந்த ராம, லட்சுமணர்கள் முனகல் சத்தத்தை கேட்டு அருகில் சென்று பார்த்தனர். ஜடாயு, ராவணன் சீதையை கவர்ந்து சென்ற விஷயத்தை கூறிவிட்டு உயிர் துறந்தார். இதைக்கண்டு வருந்திய ராமன் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்ய எண்ணினார். ஈமக்கிரியை செய்யும் போது மனைவியும் அருகில் இருக்க வேண்டும் என்பது விதி. சீதை இல்லை என்பதால் மானசீகமாக சீதையை மனதால் நினைத்தார். உடனே ராமனுக்கு உதவிபுரிவதற்காக சீதையின் மறு அம்சமாகிய பூமாதேவி காட்சியளித்தாள். அவளோடு இணைந்து ஜடாயுவிற்கு செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளை செய்து முடித்தார். இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இத்தலத்தில் கோயில் அமைக்கப்பட்டது.
ஓம் எனும் பொருளாய் விளங்கும் விநாயகா...

ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி

ஓம் பூமனும் பொருள்தொறும் பொலிவாய் போற்றி

ஓம் திங்கட் சடையோன் செல்வா போற்றி

ஓம் எங்கட் கருளும் இறைவா போற்றி

ஓம் அறுமுகச் செவ்வேட்கு அண்ணா போற்றி

ஓம் சிறுகண் களிற்றுத் திருமுக போற்றி

ஓம் மாலுக் கருளிய மதகிரி போற்றி

ஓம் பாலெனக் கடல்நீர் பருகினாய் போற்றி

ஓம் பாரதம் எழுதிய பரூஉக்கர போற்றி

ஓம் மாரதம் அச்சொடி மதவலி போற்றி

ஓம் உள்ளத் திருளை ஒழிப்பாய் போற்றி

ஓம் கள்ளப் புலனைக் கரைப்பாய் போற்றி

ஓம் நம்பியாண் டார்கருள் நல்லாய் போற்றி

ஓம் தம்பிக்கு வள்ளியை தந்தாய் போற்றி

ஓம் இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி

ஓம் கரிமுகத் தெந்தாய் காப்போய் போற்றி

ஓம் ஐந்துகை யுடைய ஐய போற்றி

ஓம் ஐந்தொழில் ஆற்றும் அமர போற்றி

ஓம் கயமுக அசுரனைக் காய்ந்தாய் போற்றி

ஓம் மயிலறும் இன்ப வாழ்வே போற்றி

ஓம் செல்வம் அருள்க தேவா போற்றி

ஓம் நல்லன எமக்கருள் நாயக போற்றி

ஓம் ஆக்கமும் ஊக்கமும் அருள்வாய் போற்றி

ஓம் காக்கஎங் களையுன் கழலினை போற்றியே!
-------------------------
கணபதி துதி

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம் பிறைபோலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்- கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீயெனக்கு
சங்கத் தமிழ் மூன்றுந் தா

அல்லல்போம் வல்லினைபோம்
அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத்துயரம் போம்- நல்ல
குணமதிகமா மருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது- பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பதம்
தப்பாமற் சார்வார் தமக்கு

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கருமம் இல்லையே.

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை
-------------------------
விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட்டால் என்ன பலன்!

விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என விநாயக புராணம் கூறுகிறது. மகப்பேறு பெறமருத இலை, எதிரிகள்  தரும் துன்பம் தொலைய அரசஇலை, இதர துன்பங்கள் நீங்க அகத்தி இலை, சுகமான வாழ்வு பெற வில்வ இலை. சவுபாக்கியமான வாழ்வு பெற  வெள்ளெருக்கு இலை, புகழ்பெற மாதுளை இலை, லட்சுமி கடாட்சம் பெற கண்டங்கத்திரி இலை ஆகியவற்றால் பூஜிக்க வேண்டும். அருகம்புல்,  செம்பருத்தி, எருக்கம்பூ, மாவிலை கொண்டும் அர்ச்சனை செய்தால் இவை எல்லாவற்றையும் ஒரு சேர அடையலாம்.
-------------------------
விநாயகர் சித்தி மந்திரம்!

ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
பிரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப
ஸாந்தயே.

விநாயகரைத் துதிக்க ஒரு மந்திரம்

ஓம் சுமுகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் நாயகாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் கணாத்பதியே நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் கணாத்ய க்ஷசாய நம
ஓம் பாலசந்த்ராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்ப கர்ணாய நம
ஓம் ஹேரம்பாய நம
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம

இந்த மந்திரத்தை தினந்தோறும் மனம் உருகச் சொல்லி விநாயகரை வழிபட்டு வந்தால் சகல சவுபாக்கியங்களோடு, சந்தோஷமான வாழ்வைப் பெறலாம்.
-------------------------
108 திவ்ய தேசங்கள் -43

அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில்
 
மூலவர்    :     தாமரையாள் கேள்வன், பார்த்தசாரதி
உற்சவர்     :     பார்த்தசாரதி
தாயார்    :     தாமரை நாயகி
தீர்த்தம்     :     கட்க புஷ்கரிணி
பழமை     :     1000 வருடங்களுக்கு முன்
ஊர்    :     பார்த்தன் பள்ளி
மாவட்டம்    :     நாகப்பட்டினம்
மாநிலம்    :     தமிழ்நாடு
பாடியவர்கள் : திருமங்கையாழ்வார்

கவள யானைக் கொம்பொசித்த கண்ணனென்றும் காமருசீர்க் குவளை மேக மன்ன மேனி கொண்ட கோனென் னானையென்றும் தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள் கேள்வன் என்றும் பவள வாயா ளென் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே. திருமங்கையாழ்வார்      
விழா :     வைகுண்ட ஏகாதசி, ராமநவமி, தைப்பூசத்தன்று தீர்த்தவாரி விசேஷம்.      
             
சிறப்பு :     108 திருப்பதிகளுள் ஒன்று பார்த்தன் பள்ளி. ராமர் யாககுண்டத்திலிருந்து காலைத்தூக்கி எழுந்து வருவது போல இரு தேவியருடன் காட்சிதருவது அதிசயத்திலும் அதிசயம்.      
             
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில், பார்த்தன் பள்ளி (திருநாங்கூர்)-609 106. நாகப்பட்டினம் மாவட்டம்,போன் :     
 +91- 4364-275 478.     
            
தகவல் :     இங்கு பெருமாள் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள விமானம் நாராயண விமானம் எனப்படுகிறது. அர்ஜுனனர், இந்திரன், பதினோரு ருத்திரர்கள் ஆகியோர் பெருமாளின் தரிசனம் கண்டுள்ளனர். மூன்றுநிலை ராஜகோபுரம் 75 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக உள்ளது.      
 
பெருமை :    உற்சவர் பார்த்தசாரதி பெருமாளின் கையில் கத்தி இருக்கும். அருகே கோலவல்லி ராமர் கையில் வில்லுடன் அருள்பாலிக்கிறார். இரண்டு தேவியருடன் ராமன், தசரதர் குழந்தை பாக்கியம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். அப்போது நாராயணன் ராமனாக தனக்கு குழந்தையாக அவதரிக்க போகிறார் என்பது இவருக்கு தெரிந்தது. தன் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள நாராயணனை அவர் வேண்டினார். அப்போது யாக குண்டத்திலிருந்து நாராயணன் தன் இரு தேவியருடன் தோன்றி தான் எப்படி இருப்பேன் என்பதை தசரதருக்கு காட்டினார். இருதேவியரும் ராமாவதார காலத்தில் அவருடன் வாழ முடியாது என்பதால், தங்கள் கண்குளிர ராமனை தரிசித்தனர். இந்தக் காட்சி சிலையாக வடிக்கப்பட்டு இத்தலத்தில் வைக்கப்பட்டுள்ளது. ராமர் யாககுண்டத்திலிருந்து காலைத்தூக்கி எழுந்து வருவது போல இரு தேவியருடன் காட்சிதருவது அதிசயத்திலும் அதிசயம். அர்ஜுனனுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது.

ஸ்தல வரலாறு :    கவுரவர்களிடம் நாடிழந்து, வனவாசம் சென்ற போது அர்ஜுனன் தாகத்திற்கு தண்ணீர் தேடி அலைந்தான். ஓரிடத்தில் அகத்தியர் கமண்டலத்தை அருகில் வைத்து தியானத்தில் இருப்பதை பார்த்தான். தியானம் முடிந்து கண்திறக்கும் வரை தன்னால் தாகத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என்பதால் அகத்தியரின் தியானத்தை கலைத்து தனக்கு தண்ணீர் தருமாறு கேட்டான். அவரது அனுமதியுடன் கமண்டலத்தை திறந்தான். அதில் ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்லை. கேள்விக்குறியுடன் அகத்தியரின் முகத்தை பார்த்த அர்ஜூனனிடம் அர்ஜுனா! நீ எப்போதும் எது வேண்டினாலும் கொடுக்கும் கடவுளான கிருஷ்ணனிடம் அல்லவா கேட்டிருக்க வேண்டும் என்றார். தன் தவறை உணர்ந்த அர்ஜுனன் கிருஷ்ணா! கிருஷ்ணா! என அழைத்தான். கிருஷ்ணனும் அர்ஜுனன் முன் தோன்றி தன்னிடமிருந்த கத்தியை அவனிடம் கொடுத்து இந்த கத்தியை வைத்து நீ எந்த இடத்தில் தோண்டினாலும் தண்ணீர் வரும் என்று கூறி மறைந்தார். அர்ஜுனனும் அந்த கத்தியால் தரையில் கீறி கங்கையை வரவழைத்து தன் தாகத்தை தணித்து கொண்டான். இந்நிகழ்ச்சி நடந்த இடம் பார்த்தன்பள்ளி என புராணம் கூறுகிறது.
-----------------------
108 திவ்ய தேசங்கள் - 42

அருள்மிகு அண்ணன் பெருமாள் திருக்கோயில்
 
மூலவர்    :     அண்ணன் பெருமாள், கண்ணன் நாராயணன்
உற்சவர்    :     சீனிவாசன், பூவார் திருமகள், பத்மாவதி
தாயார்    :     அலர்மேல் மங்கை
தல விருட்சம்    :     வில்வம், பரசு
தீர்த்தம்    :     வெள்ளக்குள தீர்த்தம்
பழமை    :     3000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :     திருவெள்ளக்குளம்
ஊர்    :     திருவெள்ளக்குளம்
மாவட்டம்    :     நாகப்பட்டினம்
மாநிலம்    :     தமிழ்நாடு
பாடியவர்கள் : திருமங்கையாழ்வார்

கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய் நண்ணார்முனை வென்றி கொள்வார் மன்னுநாங்கூர் திண்ணார் மதிள்சூழ் திருவெள்ளக்குளத்துள் அண்ணா! அடியேன் இடரைக் களையாயே.

விழா : திருப்பதியைப் போல் இத்தலத்திலும் புரட்டாசியில் பிரமோற்ஸவம். வைகாசி முதல் ஐந்து தேதிகளில் வசந்த உற்சவம். ஆடிமாதம் கடைசி வெள்ளி திருக்கல்யாணம்.      
           
திறக்கும் நேரம் :    காலை ஏழு மணி முதல் இரவு எட்டு மணி வரை நடை திறந்திருக்கும்.    அருள் மிகு சீனிவாசப்பெருமாள் (அண்ணன் பெருமாள்) திருக்கோயில், திருவெள்ளக்குளம் (திருநாங்கூர்)- 609 106 நாகப்பட்டினம் மாவட்டம், போன் :   
 +91- 4364 - 266 534.     
          
தகவல் :     பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. இத்தல இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் தத்வத் யோதக விமானம் எனப்படும். ருத்ரர், ஸ்வேதராஜன் ஆகியோர் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளனர்.      
 
பெருமை :    மணவாள மாமுனிகளுக்கு பெருமாள் காட்சி கொடுத்த தலம். 12 ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார் இரண்டு கோயில்களில் உள்ள பெருமாளைத்தான் "அண்ணா' என அழைத்து பாடியுள்ளார். ஒன்று திருப்பதியில் உள்ள பெருமாள். மற்றொன்று இத்தல பெருமாள். இதில் திருப்பதிக்கு முன்பே இத்தலத்து பெருமாளை "அண்ணா' என பாடியதால் இங்குள்ள பெருமாள் திருப்பதி ஏழுமலையானுக்கு "அண்ணன்' ஆகிவிடுகிறார். எனவே தான் இங்குள்ள சீனிவாசப்பெருமாளின் திருநாமம் "அண்ணன் பெருமாள்' என்றும் இத்தலம் "அண்ணன் கோயில்' என்றும் வழங்கப்படுகிறது. திருப்பதியைப் போன்றே இத்தலத்திலும் பெருமாளின் திருநாமம் "சீனிவாசன்', தாயாரின் திரு நாமம் "அலர்மேல்மங்கை'. திரு மங்கையாழ்வார் இத்தலத்தை பூலோக வைகுண்டம் என்று பாடியுள்ளார். ஆழ்வாராக மாற்றிய அம்மன்: இங்குள்ள குளத்தில் குமுத மலர்களை பறிக்க தேவ மாதர்கள் வருவது வழக்கம். அப்படி வந்த போது ஒரு மனிதனின் பார்வை பட்டு இவர்களில் குமுதவல்லி தேவ லோகம் செல்லும் சக்தியை இழக்கிறாள். இதனை கேள்விப்பட்ட நீலன் என்ற பெயரில் படைத்தளபதியாக விளங்கிய திருமங்கை இவளை திருமணம் செய்ய விரும்புகிறார். குமுதவல்லி தன்னை திருமணம் செய்ய பல நிபந்தனைகள் விதிக்கிறாள். இவரும் நிபந்தனைகளை எல்லாம் நிறைவேற்றினார். கடைசியில் வைணவ அடியார்களுக்கு அன்னம் பாலிக்கும் நற்செயலில் ஈடுபடச்செய்தார். இதனையறிந்த பெருமாள் மன்னனுக்கு காட்சி கொடுத்து "திரு' மந்திரத்தை உபதேசித்து ஆழ்வாராக மாற்றினார். ஒரு மங்கையினால் ஆழ்வாராக மாறியதால் "திருமங்கை ஆழ்வார்' என அழைக்கப்பட்டார். குமுதவல்லி நாச்சியார் தனி சன்னதியில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

ஸ்தல வரலாறு :    துந்துமாரன் என்ற அரசனுக்கு சுவேதன் என்ற மகன் இருந்தான். அவனுக்கு ஒன்பது வயதில் அகால மரணம் ஏற்படும் என வசிஷ்ட முனிவர் கூறினார். அரசன் தன் மகனை காப்பாற்ற முனிவரிடம் கேட்டார். அவர் திருநாங்கூரில் உள்ள பொய்கையில் நீராடி அங்குள் பெருமாளை வேண்டி தவம் இருந்தால் பலன் கிடைக்கும் என்றார். முனிவர் கூறியபடி சுவேதன் குளத்தில் நீராடி வசிஷ்டர் கூறிய நரசிம்ம மிருத்யஞ்சய மந்திரத்தை சீனிவாச பெருமாளின் முன்பாக ஒரு மாத காலம் கூறிவந்தான். மனமிறங்கிய பெருமாள் சுவேதா! நரசிம்ம மந்திரத்தை தொடர்ந்து கூறியதால் நீ சிரஞ்சீவி ஆனாய். அத்துடன் எவனொருவன் இத்தலத்தில் எட்டாயிரம் தடவை இம் மந்திரத்தை கூறுகிறானோ அவனுக்கு எம பயம் கிடையது'' என்று கூறினார். வைணவத்தலங்களில் எம பயம் நீக்கும் தலம் இது.
-----------------------
108 திவ்ய தேசங்கள் - 41

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்
 
மூலவர்    :     வரதராஜப்பெருமாள் ( கஜேந்திரவரதன், மணிக்கூட நாயகன்)
தாயார்    :     திருமாமகள் நாச்சியார்,(ஸ்ரீதேவி)
தீர்த்தம்    :     சந்திர புஷ்கரிணி
பழமை    :     2000 வருடங்களுக்கு முன்
ஊர்    :     திருமணிக்கூடம்
மாவட்டம்    :     நாகப்பட்டினம்
மாநிலம்    :     தமிழ்நாடு
பாடியவர்கள் : திருமங்கையாழ்வார்

கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் மரியும் மாவும் அண்டமும் சுடரும் அல்லா ஆற்றதுமாய எந்தை ஒண்டிறல் தென்ன னோட வடவர சோட்டங்கண்ட திண்டிற லாளர் நாங்கூர்த் திருமணிக் கூடத்தானே.
     
விழா : வைகுண்ட ஏகாதசி      
           
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.    அருள் மிகு வரதராஜப்பெருமாள் கோயில், திருமணிக்கூடம் - 609 106, திருநாங்கூர், நாகப்பட்டினம் மாவட்டம்.

தகவல் :     இத்தல இறைவன் கிழக்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் கனக விமானம் எனப்படுகிறது. இத்தல இறைவனை கருடாழ்வார், சந்திரன் ஆகியோர் தரிசித்துள்ளனர்.      
             
பெருமை :    பெருமாளின் 108 திருப்பதிகளில் இது 37வது தலம். தீராத நோய்கள் எல்லாம் திரு மணிக்கூடம் சென்றால் தீர்ந்து விடும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. உள்ளே நுழைந்ததும் பலிபீடமும், கருடாழ்வார் சன்னதியும் உள்ளது. மகா மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பகிரகம் மூலஸ்தானத்தில் வரதராஜர் கிழக்கு பார்த்து தாமரை பீடத்தின் மீது நின்ற கோலத்தில், பின் கைகளில் சங்கு, சக்கரமும் முன் கைகளில் அபய ஊரு முத்திரை காட்டியபடி சேவை சாதிக்கிறார். பெருமாளின் வலது புறத்தில் சதுர வடிவமான தாமரை பீடத்தின் மீது நின்ற படி இடது கரத்தில் தாமரை மலரும், வலது கரத்தினை தொங்க விட்ட படியும் ஸ்ரீ தேவி காட்சியளிக்கிறாள். இடது புறத்தில் பூமா தேவி வலது கரத்தில் தாமரை மொட்டும், இடது கரத்தை தொங்க விட்டபடியும் அருள் பாலிக்கிறாள். அருகி லேயே உற்சவமூர்த்திகள் உள்ளது. அர்த்த மண்டபத்தின் வட புறத்தில் நம்மாழ்வார் அமர்ந்த கோலத்தில் உள்ளார்.

ஸ்தல வரலாறு :    தக்கனுக்கு 27 மகள்கள். இவர்கள் அனைவரும் சந்திரனை திருமணம் செய்து கொண்டார்கள். 27 பெண்களிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதாக தக்கனிடம் சந்திரன் வாக்கு கொடுத்தான். ஆனால் ரோகிணியிடம் மட்டுமே மிகுந்த காதலுடன் இருந்தான். இதனால் மற்ற மனைவிகள் தங்களது தந்தையிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட தக்கன் உன் அழகும் ஒளியும் தினம் தினம் குறையட்டும் என சாபமிட்டான். சாபம் பலித்ததால், முழு சந்திரன் தேய தொடங்கினான். சாபம் தீர ஸ்ரீரங்கம், திரு இந்தளூர், தலைச்சங்காடு என ஒவ்வொரு கோயிலாக சென்று கடைசியில் திருமணிக்கூடத்திற்கு வந்தான். அங்கே அவனுக்கு பெருமாள் வரம் தந்து வரதராஜனாக காட்சி தந்தார். அவனது நோய் விலகியது. சாபவிமோசனம் கிடைத்தது.
-----------------------
சிதம்பர ரகசியம் பகுதி : 10

சிதம்பரம் கோவில் எப்போது கட்டப்பட்டது என்று அறுதியிட்டுக் கூற முடியாதெனினும் காலப் போக்கில் பல மன்னர்கள் இந்தக் கோயிலுக்குக் கட்டுமானப் பணிகளுக்கு மானியங்கள் விடுத்திருக்கிறார்கள். இந்தக் கோயில் இருந்த சமயம் தெரியாவிட்டாலும் முதலில் மூலநாதர் என்ற சிவலிங்கம் வழிபாட்டில் இருந்ததாய்த் தெரிய வருகிறது. சிவலிங்க வழிபாடு தான் சிவனை வழிபடுவோரின் முக்கிய வழிபாட்டுத் தெய்வமாகவும் இருந்து வந்தது. இந்த லிங்கத்தைத் தான் முதலில் வியாக்ரபாதர், பதஞ்சலி, உபமன்யு போன்றோரும் பின்னர் இந்தக் கோயிலுக்கு முதன் முதல் விஜயம் செய்த சூரிய வம்சத்தைச் சேர்ந்த வங்க நாட்டு கெளட அரசன் ஹிரண்யவர்மனும் வழி பட்டு வந்திருக்கிறார்கள். இந்த மன்னனின் திருப்பணிகள் பற்றிச் சிதம்பர மஹாத்மியம் புத்தகத்தில் காண முடிகிறது. இந்த மூலநாதர் கோயில் தற்போதைய சிதம்பரம் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ளது. கிழக்கே பார்த்து இருக்கும் மூலநாதரின் திருமேனி சுயம்புத் திருமேனி என்று சொல்லப் படுகிறது. பக்கத்திலேயே உமை அன்னையின் கோயிலும் தெற்குப் பார்த்து அமைந்துள்ளது. சிதம்பரத்தில் உள்ள மற்றக் கோயில்களில் உள்ள லிங்கத் திருமேனிகளை விட இந்த லிங்கத் திருமேனி மிகப் பழமை வாய்ந்ததாய்ச் சொல்லப் படுகிறது. இவ்வளவு பழமை வாய்ந்த மூலநாதரையும் உமை அன்னையையும் தரிசித்த பின் நாம் எங்கே செல்கிறோம் தெரியுமா? நேரே சித்சபைக்குத் தான். இங்கே கொஞ்சம் அதிக நேரம் செலவிடுவோம். தயாராய் இருக்கணும். இந்திரன் கேட்டுக் கொண்டதின் பேரில் விஸ்வகர்மா என்ற தேவசிற்பியால் எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருளின் ஆனந்தத் தாண்டவம் ஆட கட்டப்பட்டது இந்த சித்சபை என்னும் மூலஸ்தானம். சிதம்பரம் கோயிலின் நடுவில் உள்ளது இந்தச் சித்சபை. இதை ஹேம சபை, தாப்ர சபை என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். பக்தி இலக்கியத்தை வளர்த்த நம் நாயன்மார்களால் பொன்னம்பலம் என்று உருகி உருகிப் பாடப்பட்டது இது. முதலாம் பராந்தக சோழனால் பொற்கூரை வேயப்பட்டது. இந்தச் சித்சபை வேத காலத்தில் இருந்தே இருந்து வந்ததாய்க் கையால் எழுதப் பட்ட சில குறிப்புக்களில் இருந்து தெரிய வருகிறது. தெற்கே பார்த்து இருக்கும் இந்தச் சித்சபையில் தான் நடராஜர், சிவகாம சுந்தரியுடன் கோயில் கொண்டிருக்கிறார். "சித்" என்றால் "ஞானம்" என்றும் "அம்பரம்" என்றால் "ஆகாசம்" என்றும் பொருள். அந்தச் சிதம்பரத்தின் "சித்சபை" பற்றிய வர்ணனையைச் சற்றுப் பார்ப்போமா?

சிதம்பரத்திலேயே நடராஜர் தரிசனம் தான் முக்கியமானது. அந்த நடராஜர சிவகாம சுந்தரியுடன்  கோயில் கொண்டிருக்கும் சித்சபையை என்னால் முடிந்த வரை சொல்கிறேன். இந்தச் சபைக்குச் செல்ல ஐந்து வெள்ளியில் ஆன படிகள் இருக்கின்றன. இவை "நம சிவாய" என்னும் பஞ்சாட்சரத்தைக் குறிக்கும். சிவனின் ஐந்து விதத் தோற்றங்களைக் குறிக்கும் என்றும் சொல்கின்றனர். சிவனின் ஐந்து விதத் தோற்றங்கள். பிரம்ம பீடம், வி்ஷ்ணு பீடம், ருத்ர பீடம், மஹேஸ்வர பீடம், சதாசிவ பீடம். இந்த ஐந்து பீடங்களும் உள்ள இடங்கள் இனி வரிசையாய் வரும். படிக்கிற வசதிக்கும் புரிந்து கொள்ள வசதிக்கும் ஏற்றவாறு எழுதி வருகிறேன். புரியாத இடத்தில் சந்தேகத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும். இப்போ முதலில் பிரம்ம பீடம் என்று சொல்லப் படும் பகுதிக்குப் போகலாம்.

பிரம்ம பீடம் : இங்கே 28 மரத் தூண்கள் இருக்கின்றன. இவை 28 விதமான ஆகமங்களைக் குறிக்கிறது.

விஷ்ணு பீடம் : இங்கே உள்ள ஐந்து தூண்களும் ஆகாயம், பூமி, நீர், நெருப்பு, காற்று என்னும் பஞ்ச பூதங்களைக் குறிக்கும்.

ருத்ரபீடம் : இங்கே உள்ள 6 தூண்களும் ஆறுவிதமான சாஸ்திரங்களைக் குறிக்கும். தர்க்கம், வ்யாகரணம், வேதாந்தம், மீமாம்சம், ஜோதிடம், வைத்தியம் போன்றவை அவை.

மஹேஸ்வர பீடம் : கிழக்கே உள்ள இந்தப் பீடத்தில் சந்தங்கள், கல்பங்கள், ஜோதிஷம், நிருத்தம், வ்யாகர்ணம், சிக்ஷை, போன்ற ஆறும் ஸ்தம்பங்களாயும், வைசேசிகா, பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை, சாங்கியம், கெளடம் போன்ற தத்துவங்கள் தூண்களாயும் இருக்கின்றன. இதற்கு மேல் உள்ள பிரணவ பீடத்தில்தான் நடராஜர், சிவகாமியுடன் ஆடிக் கொண்டிருக்கிறார்.

சதாசிவ பீடம் : 4 வேதங்களும் 4 பொன்னாலாகிய தூண்களாய் உள்ளன இங்கு. இங்கே தான் "சிதம்பர ரகசியம்" தரிசனம் கிடைக்கும்.

மேலே உள்ளவை எல்லாம் தத்துவங்கள். சில பாடங்கள் பெயர் நாம் கேட்டிருப்போம். மற்றவை எல்லாம் தத்துவம் படிப்பவர்களுக்குப் புரியும். ஆகமங்கள் 28ம் பெயர் வேணாம்னு தான் எழுதலை. இம்மாதிரியான மொத்தம் 96 தத்துவங்களை உள்ளடக்கியது சித்சபை.

சித்சபையின் மேற்கூரையைப் பார்ப்போமா? சற்றே வெளியே வந்து சித்சபையின் மேல் கோபுரத்தைப் பார்த்தால் அங்கே ஒன்பது கலசங்கள் பார்க்கலாம். நவசக்தியும் ஒன்பது கலசங்களாய்ப் பிரதி்ஷ்டை செய்யப் பட்டிருக்கிறது. அவை வாம சக்தி, ஜ்யேஷ்ட சக்தி, ரெளத்ரி சக்தி, காளி, காலிவிகாரினி, பலி, பாலவிகரணி, பலப்ரமதனி, மனோன்மணி.

64 விதமான மரத்தாலான வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் "beam" என்று சொல்லப்படும் இவை 64 கலைகளைக் குறிக்கும்.

21,600 தங்க ஓடுகள் ஒரு மனிதன் ஒரு நாளில் விடும் 21,600 மூச்சுக் காற்றைக் குறிக்கும்.

72,000 ஆணிகள் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. நம் உடலில் உள்ள நாடி, நரம்புகளையும் நாடித்துடிப்பையும் குறிக்கும் அவை.

நாளை நடராஜர் ஆடும்போது பார்க்கலாமா?
திவ்ய தேசங்கள் அருள் மிகு சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில்

மூலவர் : நீலமேகப்பெருமாள்
உற்சவர் : சவுரிராஜப்பெருமாள்
தாயார் : கண்ணபுரநாயகி
தீர்த்தம் : நித்யபுஷ்கரிணி
ஆகமம்  : வைகானஸம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : கிருஷ்ணபுரம்
ஊர் : திருக்கண்ணபுரம்
மாவட்டம் : நாகப்பட்டினம்
பாடியவர்கள் : நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார்          

இல்லையலல் எனக்கேல் இனியென்குறை அல்லி மாத ரமரும் திரு மார்பினன் கல்லிலேயந்த மதில்சூழ் திருக்கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாரவே.நம்மாழ்வார்
 
விழா : வைகாசியில் 15 நாள், மாசியில் 15 நாள் பிரம்மோற்ஸவம்.  
      
சிறப்பு : இத்தலத்தில் உள்ள உற்சவர் "சவுரிராஜப் பெருமாள்' என்ற பெயருடன், தலையில் முடியுடன் இருக்கிறார். அமாவாசையன்று உலா செல்லும் போது மட்டுமே திரு முடி தரிசனம் காண முடியும். "சவுரி' என்ற சொல்லுக்கு "முடி' என்றும்"அழகு' என்றும் பொருள்கள் உண்டு.  
      
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  முகவரி : அருள்மிகு சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம் - 609 704. நாகப்பட்டினம் மாவட்டம்.  போன்: +91- 4366 - 270 557, 270 718, 99426 - 56580.
     
பெருமை : சவுரிராஜப் பெருமாள் ஒருசமயம் இக்கோயில் அர்ச்சகர் ஒருவர் சுவாமிக்கு சாத்திய மாலையை தன் காதலிக்கு சூடிவிட்டார். அந்த நேரத்தில் மன்னர் கோயிலுக்கு வந்து விடவே அவருக்கு மரியாதை செய்ய அர்ச்சகரிடம் மாலை இல்லை. எனவே தன் காதலிக்கு சூட்டிய மாலையையே மன்னருக்கு போட்டு விட்டார். அதில் பெண்ணின் கூந்தல் முடி இருந்ததைக்கண்ட மன்னர் மாலையில் முடி எப்படி வந்தது? என கேட்டார். அர்ச்சகர் பெருமாளின் தலையில் இருந்த முடிதான் அது என பொய் சொல்லிவிட்டார். மன்னனுக்கு சந்தேகம் வரவே, தான் பெருமாளின் திருமுடியை பார்க்க வேண்டும் என்றார். மறுநாள் கோயிலுக்கு வந்தால் முடியைக் காட்டுவதாக அர்ச்சகர் கூறினார். சுவாமிக்கு திருமுடி இல்லாத பட்சத்தில் தண்டனைக்கு ஆளாக வேண்டும் என எச்சரித்துவிட்டுச் சென்றார் மன்னர். கலங்கிய அர்ச்சகர் அன்றிரவில் சுவாமியை வணங்கி தன்னை காக்கும்படி வேண்டினார்.மறுநாள் மன்னர் கோயிலுக்கு வந்தார். அர்ச்சகர் பயந்து கொண்டே சுவாமியின் தலையை மன்னருக்கு காட்ட, திருமுடியுடனே காட்சி தந்தார் பெருமாள். எனவே "சவுரிராஜப் பெருமாள்' என்ற பெயரும் பெற்றார். இவர் இத்தலத்தில் உற்சவராக தலையில் முடியுடன் இருக்கிறார். அமாவாசையன்று உலா செல்லும்போது மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும். "சவுரி' என்ற சொல்லுக்கு "முடி' என்றும், "அழகு' என்றும் பொருள்கள் உண்டு.

சிறப்பு : இங்கு சுவாமி எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாக கையில் முழுவதும் திரும்பிய பிரயோகச் சக்கரத்துடன் அருளுகிறார். அருகிலேயே கருடன் வணங்கிய கோலத்தில் இருக்கிறார். வைகாசி பிரம்மோற்ஸவத்தின் போது சுவாமி அதிகாலையில் சிவன், மாலையில் பிரம்மா, இரவில் விஷ்ணு என மும்மூர்த்திகளாக காட்சி தருகிறார். விஷ்ணுவின் இந்த மும்மூர்த்தி தரிசனம் விசேஷ பலன்களைத் தரக்கூடியது. விபீஷ்ணனை தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமபிரான், அவனுக்கு இத்தலத்தில் பெருமாளாக நடந்து காட்சி தந்தார்.அமாவாசைதோறும் உச்சிகால பூஜையில் பெருமாள் விபீஷணனுக்கு நடந்து காட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. இத்தலத்தை நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் மங்களாசாஸனம் செய்துள்ளனர் கர்வம் அழிந்த கருடன் : தன் தாயை விடுவிப்பதற்காக பாற்கடலில் அமிர்தம் பெற்று திரும்பிக் கொண்டிருந்தார் கருடன். வழியில் யாருக்கும் கிடைக்காத அமிர்தத்தை தான் கொண்டு வருவதை எண்ணி அவர் மனம் கர்வம் கொண்டது. கர்வத்துடன் அவர் இத்தலத்திற்கு மேலே சென்றதால் தன் சக்தி இழந்து கடலில் வீழ்ந்தார். தவறை உணர்ந்த கருடன் மன்னிப்பு வேண்டி கடலினுள் இருந்த ஒரு மலையின் மீது சுவாமியை வேண்டி தவம் செய்தார். விஷ்ணு அவரை மன்னித்து வாகனமாகவும் ஏற்றுக்கொண்டார். மாசி பவுர்ணமியில் கடற்கரையில் கருடனுக்கு காட்சி தரும் விழா நடக்கிறது. இவ்விழாவின்போது பக்தர்கள் சுவாமியை "மாப்பிள்ளை!' என்று கோஷமிட்டு வித்தியாசமாக வரவேற்கின்றனர்.முனையதரையன் பொங்கல் : முன்னொரு காலத்தில் இப்பகுதியை முனையதரையன் என்றொரு குறுநில மன்னர் ஆட்சி செய்து வந்தார். தினசரி பெருமாளை வணங்கிவிட்டு உணவு உண்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். பெருமாள் சேவைக்காக பணத்தை எல்லாம் செலவழித்ததால் வறுமையில் வாடிய அவர் மன்னனுக்கும் வரி கட்டவில்லை. எனவே, மன்னன் அவரை சிறைப்பிடித்துச் சென்றார். அன்று மன்னரின் கனவில் தோன்றிய விஷ்ணு, அவரை விடுவிக்கும்படி சொல்லவே முனையதரையன் விடுவிக்கப்பட்டார். இரவில் வீடு திரும்பிய முனையதரையனுக்கு அரிசி, பருப்பு, உப்பு மட்டும் கலந்த பொங்கல் செய்து கொடுத்தாள் மனைவி. அவர் பெருமாளுக்கு மானசீகமாக (மனதில் நினைத்து) நைவேத்யம் படைத்து சாப்பிட்டார். மறுநாள் அர்ச்சகர் கோயிலுக்கு வந்தபோது கருவறையில் சுவாமியின் வாயில் பொங்கல் ஒட்டியிருந்ததைக் கண்டார். இத்தகவல் மன்னரிடம் தெரிவிக்கப்படவே அவர்கள் முனையதரையன் படைத்த பொங்கலை சுவாமி உண்டதை அறிந்து கொண்டனர். அன்றிலிருந்து இக்கோயிலில் இரவு பூஜையின்போது பொங்கல் படைக்கும் பழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இதனை "முனையதரையன் பொங்கல்' என்றே சொல்கின்றனர். இங்குள்ள தீர்த்தம் மிகவும் விசேஷமானது. உத்ராயணத்தின் போது மூன்று நாட்கள் இத்தீர்த்தத்தில் அனைத்து நதிகளும் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக் கொள்வதாக ஐதீகம். இதில் அமாவாசை தினத்தில் பித்ரு பூஜைகள் செய்கிறார்கள். தோஷத்தால் பாதிக்கப்பட்ட இந்திரன் இங்கு வந்து நவக்கிரக பிரதிஷ்டை செய்து சுவாமியை வணங்கி தோஷம் நீங்கப்பெற்றான். இந்திரன் பிரதிஷ்டை செய்த நவக்கிரகம் கோபுரத்திற்கு அடியில் மதிற்சுவரில் மேற்கு பார்த்தபடி இருக்கிறது. இந்த நவக்கிரகம் சுற்றிலும் 12 ராசிகளுடன் இருப்பது வித்தியாசமான அமைப்பாகும். இத்தலம் பூலோக வைகுண்டம் என கருதப்படுவதால் இங்கு சொர்க்கவாசல் இல்லை. திவ்யதேசங்களில் கீழை வீடாக இருக்கும் இத்தலம் பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. கருவறைக்கு மேல் உள்ள உத்பலாவதக விமானத்தில் விஷ்ணுவை வணங்கி முனிவர்கள் தவம் இருப்பதாக ஐதீகம். எனவே, இங்கு விமானத்தை தரிசனம் செய்ய முடியாதபடி சுற்றி மதில் எழுப்பப்பட்டுள்ளது.

திருநெற்றியில் தழும்பு : உற்சவ மூர்த்தியின் திருமேனியில் வலப்புருவத்திற்கு மேல் சிறு தழும்பும் இன்றும் காணலாம். முன் காலத்தில் அந்நியர் திருமதில்களை இடித்து வந்தபோது திருக்கண்ணபுரத்து அரையர், மனம் புழுங்கி, "பெருமானே பொருவரை முன்போர் தொலைத்த பொன்னழி மற்றொரு கை என்றது பொய்த்ததோ' என்று கையிலிருந்த தாளத்தை வீசி எறிந்தார். அது பெருமானது புருவத்தில் பட்டது. "தழும்பிருந்த பூங்கோரையாள் வெருவப் பொன்பெயரோன் மார்பிடந்த வீங்கோத வண்ணர் விரல்' என்ற பாசுரத்தில் போல இத்தழும்பை இன்றும் காட்டித் தமக்கு அடியாரிடம் கொண்ட பரிவைப் பெருமான் விளங்குகின்றார். (சந்தேகம்) "ஓம் நமோ நாராயணா' என்ற மந்திரத்தின் முடிவு நிகழ்ந்த இடம் இது. அஷ்டாச்சர சொரூபி மந்திர உபதேசம் பெற்ற தலம். இந்த ஊரில் கால் பட்டாலே வைகுந்தம் கிடைக்கும் என்பதால் இந்த பெருமாள் தலத்தில் சொர்க்க வாசல் கிடையாது. மற்ற தலங்களில் அபய காட்சியோடு பெருமாள் இருப்பார்.இங்குள்ள பெருமாள் தானம் வாங்கிக் கொள்தல் போல காட்சியில் இருப்பார். இதன் பொருள் நம் கஷ்டங்களை பெருமாள் வாங்கிக் கொள்ளுதல் போல ஐதீகம். இத்தலத்தில் பெருமாள் சக்கரம் பிரயோகச் சக்கரம் வதம் பண்ணுவதாய் உள்ளது. உற்சவ பெருமாளுக்கு சவுரி முடி வளர்ந்ததால் சவுரி ராஜ பெருமாள் என்று பெயர். சவுரிராஜப் பெருமாளிடம் திருமங்கை ஆழ்வார் மந்திர உபதேசம் பெற்ற தலம் இது. திருமங்கை ஆழ்வார் 100 பாசுரம் இத்தலம் குறித்து பாடியுள்ளார். குலசேகர ஆழ்வார் சவுரிராஜப் பெருமாளை இராமனாக நினைத்துக் கொண்டு தாலேலோ (ராத்திரி தூங்க வைக்கப் பாடும் பாசுரம்)பாடிய திவ்ய தேசம் திருக்கண்ணபுரம் மட்டுமே. நம்மாழ்வார் 11 பாசுரம் பாடியுள்ளார்.

கருட தண்டக மகரிஷிக்கு பெருமாள் காட்சி தந்த தலம்.

கிருஷ்ணாரண்ய ஷேத்திரம் என்று திருக்கண்ணபுரம் , திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி, கபிஸ்தலம், திருக்கோயிலூர் என்று இந்த ஐந்தும் கிருஷ்ணன் வாழ்ந்து உறைந்த இடம்.

திருப்புற்குழியில் வறுத்த பயிறு, திருப்பதியில் லட்டு, ஸ்ரீரங்கத்தில் அரவணை (பாயாசம்) கும்பகோணத்தில் தோசை (பால் பாயாசம்) அதுபோல் இங்கு முனியோதரன் பொங்கல் பிரசித்தம். 108 திவ்ய தேசங்களுள் சிறப்புடையதாக மேலை வீடு திருவரங்கம்,வடக்கு வீடு திருவேங்கடம் எனவும் தெற்கு வீடு திருமாலிருஞ் சோலை (அழகர் கோயில்) எனவும் அமைந்த வரிசையுள் கீழை வீடாக திருக்கண்ணபுரம் ஆகும்.
 
ஸ்தல வரலாறு : முன்னொரு காலத்தில் சில முனிவர்கள் இத்தலத்தில் பெருமாளை வேண்டி தவம் செய்து கொண்டிருந்தனர். சாப்பாடு, தூக்கம் என எதனையும் பொருட்படுத்தாமல் பெருமாளை மட்டும் எப்போதும் தியானித்து வணங்கி வந்ததால் அவர்கள் நெற்கதிர்கள் போன்று மிகவும் மெலிந்த தேகம் உடையவர்களாக இருந்தனர். மகாவிஷ்ணுவிடம் "அஷ்டாட்சர மந்திரம்' கற்றிருந்த உபரிசிரவசு எனும் மன்னன் ஒருசமயம் தன் படையுடன் இவ்வழியாக திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது வீரர்களுக்கு பசியெடுத்தது. எனவே இங்கு தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களை நெற்கதிர்கள் என நினைத்த வீரர்கள் அவர்களை வாளால் வெட்டினர். முனிவர்களின் நிலையைக் கண்ட விஷ்ணு, சிறுவன் வடிவில் வந்து உபரிசிரவசுவுடன் போர் புரிந்தார். மன்னனின் படையால் சிறுவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே, இறுதியாக மன்னன் தான் கற்றிருந்த அஷ்டாட்சர மந்திரத்தை சிறுவன் மீது ஏவினான். அம்மந்திரம் சிறுவனின் பாதத்தில் சரணடைந்தது. இதைக்கண்ட மன்னன் தன்னை எதிர்த்து நிற்பது மகாவிஷ்ணு எனத் தெரிந்து மன்னிப்பு கேட்டான். விஷ்ணு அவனை மன்னித்து நீலமேகப்பெருமாளாக காட்சி தந்தார். அவனது வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். பின் மன்னன் விஸ்வகர்மாவைக் கொண்டு இங்கு கோயில் எழுப்பினான்.